இரா. முருகன்'s Blog, page 30
July 11, 2023
எலிசபெத் விண்ட்ஸர் என்றொரு முதுபெண்
துளுவ அரசி சென்னபைராதேவியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து ’மிளகு’ பெருநாவல் எழுதிய போது அடிக்கடி நினைவில் வந்தவர், சென்னா போல் நீண்ட காலம் இங்கிலாந்து மகாராணியாக இருந்த, அண்மையில் காலம் சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணி.
சென்னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது. நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள் ஆக (5 seasons, 10 episodes each) ஒளிபரப்பாகிறது. இன்னும் ஒரு பருவம் பாக்கி இருக்கிறது. மொத்தம் அறுபது மணி நேரம் சாவதானமாக நீட்சி அடைந்து உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்கள் ஆர்வத்தோடு விரும்பிப் பார்க்கிற வெப் சீரியலாக The Crown தி க்ரவுன் எல்லா அர்த்தத்திலும் வரலாறு படைக்கிறது.
கிட்டத்தட்ட எலிசபெத்தின் அறுபதாண்டு மகாராணி வாழ்க்கையைச் சித்தரிக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.
இது இங்கிலாந்து மகாராணி சரித்திரம் மட்டுமில்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு அப்புறமான பிரிட்டீஷ் அரசைத் தழுவிச் செல்லும் நீண்ட கதையாடல் இது, பீட்டர் மார்கன் எழுதியிருக்கும் திரைக்கதை தெளிவாகவும், சுவாரசியமாகவும் மிளிர்கிறது.
எலிசபெத் சந்தித்து, ஆணையிட்டு, இடைகலந்து பழகிய பிரிட்டீஷ் பிரதம மந்திரிகளின் நீண்ட வரிசையை நோக்கினாலே இந்தப் பிரம்மாண்டம் மனதில் படும். வின்ஸ்டன் சர்ச்சில், ஹெரால்ட் மாக்மில்லன், மார்கரெட் தாட்சர், ஹெரால்ட் வில்சன், ஜான் மேஜர், எட்வர்ட் ஹீத், டேவிட் காமரூன், டோனி ப்ளேர் என்று மாறிமாறி கன்சர்வேடிவ் கட்சியும் தொழில் கட்சியும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய இந்தப் பிரதமர்களில் சிலர் எலிசபெத்தின் தாத்தா வயதானவர்கள். அவர்களில் மகாராணியின் தந்தை வயதானவர்கள், கணவர் வயதானவர்கள், சகோதரி சகோதரர் வயதானவர்கள், மகன் வயது இளைஞர்கள் என்று சகல வயதினரும் இந்தத் தொலைக்காட்சித் தொடரில் பாத்திரப் படைப்பாகிறார்கள். மகாராணி இன்னும் கொஞ்சம் நாள் ஆயுளோடு இருந்திருந்தால் தற்போதைய இந்திய வம்சாவளி பிரிட்டீஷ் பிரதமர் ரிஷி சுனாக்கும் கதாபாத்திரமாகி இருப்பார்.
எலிசபெத் குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் சலனங்களை, மகாராணியின் மருமகளான டயானாவை, எலிசபெத் கணவர் பிலிப் இளவரசரை, மகன் சார்லஸ் இளவரசரை, சகோதரி மார்கரெட்டை எலிசபெத்தோடு சூழ்ந்து நிறுத்தி நிகழ்கிறது த க்ரௌன். சர்வதேச அரசியல், பொருளாதார மாற்றங்களை, நாடுகள் சிதறுண்டு போவதை, புதிதாக எழுவதை எலிசபெத் வாழ்க்கைச் சித்தரிப்பின் விளிம்புகளிலிருந்து காட்சிப் படுத்தப்படுகிறது. உலகப் பொருளாதாரத் தலைமையை அமெரிக்கா ஏற்க, பிரிட்டீஷ் பொருளாதாரம் அதல பாதாளம் தொட்டு, ராணி எதுக்கு நமக்கு, தண்டச் செலவு என்று பிரிட்டீஷ் பிரஜைகள் அங்கலாய்பதும் கடந்து போகிற காட்சிகளாகிறது.
பெரும் வரலாற்றோடு குறுஞ் சரித்திரமும் கதையாகிறபோது பார்க்க சுவாரசியமாக இருக்கிறது. 1952 டிசம்பரில் ஐந்து நாட்கள் லண்டன் மாநகரம் மாபெரும் மூடுபனிப் படலத்தால் சூழப்பட்டு சகல விதமான இயக்கமும் நின்று போனது. இரண்டாம் முறை பிரதமாராக வந்த வின்ஸ்டன் சர்ச்சில், ’மூடுபனி எல்லாம் கடவுளின் விளையாட்டு, பெருமழை மாதிரி. ஒன்றும் செய்ய முடியாது. தானே அது நீங்கும்வரை பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்’ என்று சொல்லி விட்டார். எதிர்க் கட்சிகள் மட்டுமில்லை, எலிசபெத் மகாராணியும் உறையூர் சுருட்டு பிடிக்கும் அந்தக் கிழவனாரின் பிடிவாதத்தால் எரிச்சலடைகிறார்கள். கிட்டத்தட்ட சர்ச்சிலை பதவி விலகச் சொல்லும் இக்கட்டான நிலைக்குத் துரத்தப்படுகிறார் எலிசபெத்.
ஆனால் முதியோரின் தெய்வம் உண்டே, ஐந்தாம் நாள் பனி, சர்ச்சில் சொன்ன மாதிரி தானே விலகி பிரகாசமான சூர்யோதயம்!
இன்னொரு micro history நிகழ்வு. மார்கரெட் தாட்சர் பிரதமரானதும் எலிசபெத் மகாராணியும் அரச குடும்பமும் அவர்கள் வார இறுதி ஓய்வு எடுக்கும் ஸ்காட்லாண்ட் பல்மோரல் கோட்டைக்கு அவரை அழைத்து ராகிங் செய்கிறார்கள். காலியாகக் கிடந்த நாற்காலியில் தாட்சர் உட்கார்ந்ததும், எலிசபெத் ராணியின் சகோதரி மார்கரெட் ”என்ன தைரியம் இருந்தால் விக்டோரியா மகாராணி உட்கார்ந்த நாற்காலியில் உட்காருவீங்க. நாங்களே அதிலே உட்கார மாட்டோம். அவ்வளவு மரியாதைக்குரிய மர நாற்காலி இது. உட்கார்ற முன் யார் கிட்டேயும் கேட்க மாட்டீங்களா” என்று நாட்டின் பிரதமரைத் திட்டித் தீர்க்கிறது அவசியம் பார்க்க வேண்டியது.
இளம் வயது எலிசபெத், நடுவயதில் அவர், மற்றும் முதுபெண்ணாக எலிசபெத் என்று அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப, மூன்று நடிகையர் எலிசபெத்தாக நடிப்பது புதுமைதான். மகாராணி மட்டுமில்லை, அவர் குடும்பத்து முக்கிய உறுப்பினர்களும் காலகட்டத்தைப் பொறுத்து வெவ்வேறு நடிக நடிகையரால் நடிப்பிக்கப் படுவது சிறப்பு.
எலிசபெத் மகாராணியாக நடிக்கும் க்ளையர் ஃபய், ஒலிவிய கால்மன், இமல்டா ஸ்டண்டன் மூன்று பேரும் அற்புதமான நடிகையர் என்றாலும், முதிய எலிசபெத் இமல்டா ஒரு மாற்று அதிகம் நல்ல நடிப்பு. வின்ஸ்டன் சர்ச்சிலாக வரும் அமெரிக்க நடிகர் ஜான் லித்கவ், மார்கரெட் தாட்சராகத் தோன்றும் ஜில்லியன் ஆண்டர்சன் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.
இவர்களோடு பிரகாசிக்கும் இன்னொருத்தர் – பக்கிங்ஹாம் அரண்மனையின் கட்டுக்காவலை எல்லாம் மீறிச் சுவரேறிக் குதித்து உள்ளே நுழைந்து, எலிசபெத் மகாராணியின் படுக்கை அறையில் புகுந்து, அவர் விழித்தெழும்போது கட்டிலுக்கு அருகே இருந்து, ’மார்கரெட் தாட்சர் ஆட்சியில் விலைவாசி ஏறிடுச்சு, அரசாங்கம் ஏழைபாழை பக்கம் இல்லை’ என்று நடுராத்திரி ராஜ உரையாடலில் ஈடுபட்ட Michael Fagan மைக்கேல் ஃபேகன் என்ற சாமானிய பிரிட்டீஷ் குடிமகனாக வரும் நடிகர் பெயரை எப்படி மறந்தேன்!
July 10, 2023
மகாராணியின் செலவுக் கணக்கு
பெருநாவல் மிளகு அத்தியாயம் பகுதி – சொல்வனம் இலக்கிய இதழ் வழியே
”சதுர்முக பசதி. நான்கு வாயில் கோவில். பன்முக மெய்யின் உருவகம். உண்மை என்பது ஆன்ம லயிப்பாக இருக்கலாம். உண்மை என்பது மனதில் நான் யார் என்று சதா கேட்டுத் தேடியடைவதாக இருக்கலாம். உண்மை என்பது உறவுகளின் நதிமூலம் தெளிவதாக இருக்கலாம். உண்மை என்பது, நட்பும் காதலும் காமமும் பாசமும் சென்றடையும் இறுதி நிலையாக இருக்கலாம். தேடிப்போய்த் திரும்ப வந்தடைந்த தொடக்கமாக இருக்கலாம். உண்மை என்பது எண்ணங்கள் உருவாக்கிய இலக்கியமும், ஓவியமும், சிற்பமும், கடவுளும் ஆக இருக்கலாம். உண்மையை அடைய நான்கில் எந்த வாயிலும் கடந்து சதுர்முக பசதிக்குள் போகலாம்”.
நிர்மல முனிவரின் ஆன்மீகச் சொற்பொழிவுக்கு ஜெரஸோப்பாவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஜெரஸோப்பாவில் சென்னபைரதேவி ஒரு சமண சதுர்முக பசதியைக் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார். மிகப் பெரியதுமில்லை. ஆகச் சிறியதும் இல்லை. நான்கு பக்கமும் உள்ளே திறக்கும் வாசல் கதவுகள் அந்தக் கோவிலின் பிரார்த்தனை மண்டபத்துக்கு யாரையும் வரவேற்கும்.
கோவில் என்பதால் சிற்பமும், ஓவியமும், கட்டிடக்கலையின் உன்னதம் தொட்ட மண்டபங்களும், உயர்ந்த கோபுரங்களும், திருக்குளங்களும் இல்லை. தீர்த்தங்கரர்களான அறநாத், மல்லிநாத், முனீஸ்வரநாத் ஆகியோரின் திரு உருவச் சிலைகளும், வேலைப்பாடு அமைந்த விதானமும், கல்பாளம் மேவிய தரையுமாக மலர்ந்து நிற்பது சதுர்முக பசதி. திரிலோக ஜீன சில்பாலயா என்று பெயர் சூட்டப்படும் பசதிக்கு. மூன்று உலகத்துக்கும் நெற்றித் திலகம் போன்ற, சமண சிற்பங்களின் ஆலயம் என்று அந்தப் பெயர் பொருள் கொள்கிறது.
ஜெரஸோப்பாவில் மட்டும் சதுர்முக பசதியா? ஹொன்னாவரிலும் கட்டினால் என்ன? இரண்டாவது தலைநகரம் இல்லையோ இந்த நகரம் என்று ஊர்ப் பிரமுகர்கள் சென்னாவைச் சந்தித்து உரிமையோடு முறையிட்டதுமே சரி என்று சொல்லி விட்டாள் சென்னபைரதேவி மிளகு மகாராணி.
ரதவீதிக்குப் பின்னால், சரியாகச் சொல்லப்போனால் ரதவீதிக்கு இணைகோடாக, அதன் மேற்கே விரிந்திருக்கும் தறிக்காரர் வீதியில் ஏற்படுத்தப்படும் பிரார்த்தனைக் கூடம் அமைந்த கோவில் அது. ரதவீதியில் பெத்ரோ மாளிகைக்கு நேர் பின்னால் சதுர்முக பசதி எழுந்து நிற்கிறது.
அடுத்த மாதம் கட்டுமான வேலைகள் எல்லாம் முடிந்து, தரையைக் கட்டிடவேலை எழுப்பிய தூசி போக சுத்தம் செய்து, சுவருக்கு அடிப்படை வண்ணமும், மேலே ஆகாய நீலமும் சீராகப் பூசி, வழிபடப் பசதியின் கதவுகள் திறந்திருக்கும். வேலை சீரான வேகத்தில் நடந்தேறுகிறது.
இன்னுமோர் ஆயிரம் வராகனுக்குச் செலவுக் கணக்கு நீள வாய்ப்பு இருக்கிறது. சென்னபைரதேவி மகாராணியிடம் சொல்லியாகி விட்டது. இந்த வாரம் இறுதிக்குள் அளிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஜெரஸோப்பாவிலும், கோகர்ணத்திலும், பட்கல்லிலும் ஜீன சில்பாலயம், சிவன் கோவில், துர்க்கை கோவில் இப்படி ஒரே நேரத்தில் வழிபாட்டு ஸ்தலங்கள் எழுந்து கொண்டிருப்பதால், மிளகு ஏற்றுமதி ஆகி வரும் வருமானம் பெரும்பாலும் இந்த இனம் செலவுக்குப் போகிறது.
ஏற்றுமதி வருமான வரியாக, தொழில் வரியாக என்றெல்லாம் விதித்த பணம் கருவூலத்துக்கு வந்து சேர்வதில் ஏற்பட்ட சிறு தாமதமும் அரசாங்கச் செயல்பாட்டை எங்காவது பாதிக்கிறது. வரி கொடுக்கச் சொல்லிக் கேட்டால் குடிமக்களுக்குப் பிடிப்பதில்லை.
ஜெரஸோப்பா துறைமுகத்தில் அலைகளின் சீற்றம், பாறைக்கல்லால் கட்டப்பட்ட சுவர்களை அங்கங்கே வீழ்த்தியிருப்பதைச் சரியாக்க உடனடி மராமத்து வேலைகள் தேவைப்படுகின்றன. கோகர்ணம் நகரத் தெருக்கள் குண்டும் குழியுமாக அவற்றில் பயணம் செல்வதை அசௌகரியமான செயலாக்குகின்றன. ஹொன்னாவரில் புது சாக்கடை அமைப்பு இன்னும் பாதி நிறைவேறாமல் தெருவை ஒட்டி வெளியே சிதறியபடிதான் சாக்கடை ஓடுகிறது. அடுத்த மாதம் முதல் வாரம் எல்லா மிளகு ஏற்றுமதி வருமானமும் வந்து செலவு கையைச் சுடாமல் செல்லும். ஹொன்னாவர் சதுர்முக பஸதி கட்டுவதும் நிறைவடையும் அப்போது. வேலை நடக்கிறது.
அரசவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
July 7, 2023
தேள் மொழியில் புகுந்த cerebral venom, induction oven, parley
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து, சொல்வனம் வழி ஒரு சிறு பகுதி
காலப்படகு காலத்தில் முன்னும் பின்னும் பத்து நாள் போகுமளவு பழுது திருத்தியிருந்தது. முழுக்க முன்னே, பின்னே நூற்றாண்டுகள் போய்வர இன்னும் நிறையச் செய்ய வேண்டியது உண்டு.
வேறு கால ஓடத்தை அனுப்பி வைத்து நம்மை இந்த இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து மீட்டுப் போனால் என்ன? வானம்பாடி குயிலியைக் கேட்டாள். செய்யலாம் தான். ஆனால் வருஷம் – மாதம் – வாரம் –நாள் –மணி-நிமிடம் – நொடி- இடம் என்று அத்தனையும் துல்லியமாக நம்முடையதாக இருக்க வேண்டும். கொஞ்சம் முன்னால் பின்னால் இருந்தால் நம் பிரதிகள் உருவாகி விடுவார்கள்.
நீலன் வைத்தியருக்கு இதொன்றும் புரியவில்லை. வீடு போய்ச் சேர இன்னும் நேரம் பிடிக்கும் என்பது மட்டும் புரிந்தது.
நான்கு பரிமாண வெளியில் நான்கையும் தற்காலிகமாகக் கூறுகளைச் சற்றே திருத்தி குயிலியும், வானம்பாடியும், நீலன் வைத்தியரும் கர்ப்பூரமய்யன் இல்லத்தில் நிகழ்வதை எல்லாம் அவனுடைய மற்றும் கபிதாளின், மற்றும் வேறு யாருடைய பார்வையிலும் படாமல், சத்தம் கேட்காமல் கவனித்தபடி இருக்கிறார்கள். காலப்படகும் அதேபடி தான். இருப்பது தெரிவதில்லை. சத்தம் கேட்பதில்லை. பிரபஞ்சத்துக்குள் ஒரு சிறு பிரபஞ்ச வெளி அது.
கபிதாளின், மற்றும் கர்ப்பூரமய்யனின் அந்தரங்க வாழ்வில் இது ஓரளவு குறுக்கீடுதான். எனினும் நிர்ணயிக்கப்பட்ட சமூக அத்துகளைக் கடந்து இந்த ‘அடுத்தவர்கள் வீட்டில் எட்டிப் பார்ப்பது’ நடக்காது. படுக்கை அறை, கழிவறை ஆகிய பிரதேசங்களில் இந்தக் காட்சியமைப்பு செயல்படாது.
கர்ப்பூரமய்யன் கபிதாளைச் சமையல்கட்டில் ஆலிங்கனம் செய்ய முற்பட்டாலோ? வானம்பாடி குயிலியின் காதில் கிசுகிசுத்தாள். அப்போது நாம் தான் அந்தக் காட்சியை மேலும் காணாமல் வெளிவரணும். குயிலி அவள் காதைத் திருகியபடி சொன்னாள்.
பல்லக்கு கர்ப்பூரமய்யன் வீட்டுக் கூடத்தில் இறக்கி வைத்திருப்பது பார்க்க ஒரு மாதிரி இருந்தது நீலன் மருத்துவருக்கு.
அய்யன் மனைவியைப் படுக்கையில் விட்டுப் பல்லக்கை வெளியே வைத்துவிடலாமே என்று குயிலியைக் கேட்டார் அவர்.
குயிலி பல்லக்குப் பக்கம் போய் கபிதாள் உறக்கம் தீர்ந்திருக்கிறாளா என்று பார்க்க முற்பட்டபோது உள்ளே அ-மனிதர் பேசும் ஒலி கேட்டு ஒரு வினாடி நின்றாள். இது அவளுக்குப் பழக்கமான ஒலி. அதிகாரம் செய்தும், அன்பு காட்டுவதாக அபிநயித்தும், கோகர் மலையிலும் மலை சார்ந்த மண்ணிலும் நீரிலும் ஆட்சி செய்யும் செந்தேள் வர்க்கத்தின் மொழி.
மனித மொழி போல்தான் அந்த மொழியும். முப்பது நூற்றாண்டு முன் இருந்தது போல் அது இப்போது இல்லை. Electric oven, loft, cerebral venom என்றெல்லாம் மனித மொழியைப் பகர்த்தெடுத்து தேள் மொழியாகியபோது புதுச் சொல்லாடல்கள் தேள்பேச்சில் புகுந்தன.
அவை ஒரு சில இருக்க, கூடவே எம்டன், ரிக்கார்ட் போன்ற சொற்கள் இந்தப் பல்லக்குத் தேள்களின் மொழியில் புகுந்துள்ளதையும் கவனித்தாள் குயிலி. உள்ளே எத்தனை பேர் உண்டு என்று முணுமுணுப்பாகத் தேள்மொழியில் அவள் கேட்க உள்ளே தேள்பேச்சு நின்று போனது.
ஒரு மனுஷப் பெண் தங்கள் மொழியில் பேசுவது கேட்டு திகைப்பும் பயமும் தோன்ற ஜோடித் தேள்கள் அசையாமல் நின்றன. சிறிய செந்தேள்கள். இப்போதைய தேளரசு தேள்கள் இவை போல் ஐநூறு சதவிகிதம் பெரியவை. சிறிய என்றாலும் பயமும், பணிவும் கண்களில் காட்டி அவை நின்றன.
அந்த மனுஷப் பெண்ணுக்கு உபத்திரவம் இல்லாமல் வெளியே வாருங்கள் எனக் கட்டளையிட்டாள் குயிலி. பெண்டாட்டி தேள் கொடுக்கை மரியாதையோடு ஆட்டி வெளியே வந்தது. பின்னாலேயே ஆண் தேள்.
குயிலி பல்லக்கு உள்ளே எட்டிப் பார்த்தாள். அங்கே கபிதாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். நேரம் காட்டும் வீட்டுக் கடிகாரம் பனிரெண்டு முறை அடித்து ஓய்ந்தது, குயிலிக்கு இந்த சூழல் அபத்தமாகத் தோன்றியது. வெவ்வேறு காலங்களைச் சேர்ந்த மனுஷர்களும், தேள்களும் நாடகம் நிகழ்த்துவதுபோல் கூடும் இரவு.. குயிலி வேறே தேள் வர்க்கத்தவர் பல்லக்கின் உள்ளே உண்டா என்று கேட்க இரண்டு தேள்களும் பதட்டத்தோடு இல்லை என்றன.
எனில் நீவிர் இருக்கும் வளை எங்குள்ளதோ?
ஒழுங்கையின் ஓட்டுக்கூரைக்கு உள்ளே, சகோதரி என்றது நடுங்கியபடி ஆண் தேள். வலிந்து உறவு சொல்லி விளித்தல் தவிர்க்கவும் என்று புன்னகையோடு கூறினாள் குயிலி. அவள் திரும்பும்போது இரண்டு தேள்களும் ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கு நிமிர்த்தாமல் நிற்பதை ஓரக்கண்ணால் கண்டு புன்னகை புரிந்தாள்.
என்ன நான் சொன்னது புரிந்ததா? அமைதியான குரலில் குயிலி கேட்டாள். அவை நடுநடுங்கி புரிந்தது என்றன. தேளரசர் வாழ்க என்றும் இன்னும் பலதுமாகக் கோஷம் எழுப்பாமல் கூ கூ என்று மட்டும் பயப்பட்டு ஒலி எழுப்பி அவை போமிடம் சென்றடைந்தன.
தேளரசு, பெருந்தேளன் என்றெல்லாம் இந்த இழிபிறவிகளை மரியாதையோடு விளித்து, அவற்றின் சொற்படி ஆடும் ஆட்டம் அலுத்துப் போனது. ஒரு மாறுதலுக்கு, தேள்கள் எமக்கு அஞ்சட்டும். ஆரம்பத்திலிருந்து அப்படித்தானே இருந்தது?
July 4, 2023
ஒரு மடக்கு பால் பாயசம்
பெருநாவல் மிளகு-வில் இருந்து சொல்வனம் வழியாக ஒரு மடக்கு அம்பலப்புழை பால் பாயசம்
அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அதிகாலை ஐந்து மணிக்குச் சுறுசுறுப்பாக தரிசனம் அளித்துக் கொண்டிருந்தான்.
ஐந்து மணி காலை எல்லாம் ஒன்றுமே இல்லை இவனுக்கு. உறங்கினால் தானே புதுசாக விழிக்க. விடிகாலை அல்லது நடுராத்திரி கழிந்த மூன்று மணிக்கு மேல்சாந்தியையும், தந்த்ரியையும் எழுப்பி விடுவான் இவன்.
இந்த பூஜாரிமார் கோவில் தெப்பக்குளத்தில் ஒரு சம்பிரதாயத்துக்காக நீராடி, கோவில் பரப்பில் அருவி போல் மிதமான சூட்டோடு வெந்நீர் பிரவகிக்கும் நவீனமான குளிமுறியில், என்றால் குளியலறையில், கால்கேட் பற்பசையால் தந்தசுத்தி செய்து மைசூர் சந்தன சோப் தேய்த்து நீராடுவார்கள்.
சில சமயம் நன்றாக மழை பெய்யும்போது அல்லது கோடை காலத்தில் குளம் வற்றி பாசி மிதக்கத் தண்ணீர் கொஞ்சம் போல சிறுக்கும்போது, இன்னும் நுண்ணிய சம்பிரதாயபூர்வம் குளத்து நீரை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்து வந்து அதைச் சிரசில் ஊற்றிக்கொண்டு அடுத்து இவர்கள் குளிமுறி ஸ்நானம் செய்வது வழக்கம்.
இவனுக்கு திருக்குளத்து நீரைக் குடங்களில் துணி சுற்றி வடிகட்டி வைத்து நாள் முழுவதும் திருமஞ்சனம் செய்விப்பது வழக்கமாகப் போனது. இவனுக்கு கோல்கேட் பற்பசையும், ஷவரில் வெந்நீரும் விலக்கி வைக்கப்பட்டவை.
குளித்து முடித்ததும் காலை மூன்றரை மணிக்கு சூடும் சுவையுமான காப்பி பானம் செய்ய இவனுக்குக் கிட்டாது. காலை ஐந்து மணிக்கு துளசி இலையும், கற்பூரமும், ஏலக்காயும் ஊறிய குளிர்ந்த நீரில் ஸ்நானம் முடித்து பாலும் சோறும் நெய்யும் ஆராதனையாக இவனுக்கு அளிக்கிறார்கள்.
நடுப்பகல் வரை இவனுக்கு அவ்வப்போது சிறு கிண்டியில் பால் தரப்படுகிறது. குடிக்க இல்லை, குளிக்க.
அப்புறம் சற்று நேரம் ஸ்ரீகிருஷ்ணன் அதிகாரம்தான். தினசரி நடுப்பகலுக்கு அம்பலப்புழை பால்பாயசம் இவனுக்கு நைவேத்தியம் ஆகிறது. பொன் நிறத்தில் பாலும் நெய்யும் சர்க்கரையும் தேங்காயும் கலந்து மர அடுப்பில் காய்ச்சப்படும் பாயசம் நாள் தவறாமல் இவனுக்கு உணவு.
”பகல் வரைக்கும் இங்கே இருந்தால் தான் பால் பாயசம் கிடைக்குமா?” வசந்தி தெரிசாவைக் கேட்டாள்.
“இதுக்காகன்னு கோவில் வாசல்லே காத்துண்டிருக்க முடியுமா?”
திலீப் ராவ்ஜி சிரித்தார். ”என் அத்யந்த சிநேகிதன் கஜானன் மோதக்குன்னு ஒரு மராட்டிக்காரர் இந்த அம்பலப்புழை பால் பாயசத்துக்கு சொத்தையே எழுதி வைப்பார், இருந்தால். ஆனாலும் என்ன, வருஷம் ஒரு தடவை பம்பாய்லே இருந்து வந்து என்னையும் ஸ்ரீகிருஷ்ணனையும் பார்த்து குசலம் விசாரிச்சு ரெண்டு நாள் என்னோடு தங்கி இருப்பார். லிட்டர் கணக்கா அம்பலப்புழை பால் பாயசம் வாங்கி இந்த ரெண்டு நாளில் அவரும் குடிச்சுண்டே இருக்கறதோடு எனக்கும் அகல்யா இருந்தபோது அவளுக்கும் வாய் நிறைய வயறு நிறையச் சாப்பிடக் கொடுப்பார். இப்போ கூட போன மாசம் வந்திருந்தார். நானும் அவரும் தான்”. திலீப் ராவ்ஜி மௌனமானார்.
கோவில் கிழக்கு வாசல் கடைகள் ஐந்து மணிக்கே திறந்து சுறுசுறுப்பாக ஆராதனைப் பொருட்களை பிரம்புத் தட்டுகளில் வைத்து விற்றுக் கொண்டிருந்தன. திலீப் ஹோட்டல் பணியாளர்கள் நான்கு பேரை அந்த நேரத்திலேயே குளித்து மடி வஸ்திரம் அணிந்து சந்தனக் கீற்று நெற்றியில் துலங்க நிறுத்தி வைத்திருந்தார். அர்ச்சனைப் பொருள், பால், பழம், புஷ்பாஞ்சலிக்கு பூக்கள், என்று எல்லாம் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்ய அவர்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டார்கள்.
அம்பலப்புழை வந்துட்டு பாயசம் சாப்பிடாமலா என்று தில்லியில் அக்கம் பக்கத்து மலையாளிகள் கேட்டுப் புச்சமாகப் பார்ப்பதைத் தவிர்க்க அந்த அமிர்தத்தை ஒரு மடக்காவது எப்பாடு பட்டாவது வாங்கி அருந்திப் போக வசந்தி தீர்மானித்திருந்தாள் போல திலீப்புக்குத் தோன்றியது.
எழுதிச் சொல்லித் தந்த என் ஆசான் -எழுதச் சொல்லித் தந்த என் ஆசான்
என் ஆசிரியர் திரு ருத்ர துளசிதாஸ் அவர்கள் அகவை 90-இல் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு என் வணக்கம்.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு அவர் மொழிபெயர்த்த எத்தனையோ நூல்களுக்காக அவரை வாழ்த்துகிறேன். தெலுங்கில் இருந்து மொழிபெயர்த்த நூல்களுக்காகவும் தான்.
நான் முதல் முறையாக அவர் எழுதிப் படித்தது 1969-ல். அவர் என் வேதியியல் பேராசிரியர் -புகுமுக வகுப்பில். அவர் கரும்பலகையில் எழுத நான் வாசித்தேன் –
Cu + H2SO4 → CuSO4
July 1, 2023
கடலரசனைக் காண வந்த பரங்கி – மிளகு பெருநாவலில் இருந்து
பெருநாவல் மிளகு – ஸாமுரினை போர்த்துகீஸ் தூதர் சந்திப்பது
இருட்டுவதற்குள் கொட்டாரத்துக்கு, என்றால் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்து ஸாமுரின் அரசரோடு சந்திப்பு நிகழ்த்த பெத்ரோவுக்கு வாய்த்தது.
ஸாமுரின் என்று கேட்டுக் கேட்டு அவருக்கு ஒரு முகம் மற்றும் ஆளுமை அடையாளத்தைக் கற்பனை செய்திருந்தார் பெத்ரோ. முன்பல் விழுந்த, வயதான சிரியன் கத்தோலிக்க பிஷப்பாக, சதை பிடித்து, முழு அங்கி தரித்து, தலை முக்கால் பகுதி வழுக்கை விழுந்து, குரல் தழதழத்துக் கழுத்தறுக்கக் கத்தி தீட்ட வைக்கிறதான நைச்சியமாகப் பேசும் வைதீகனாக பெத்ரோ கற்பனை செய்த ஸாமுரின் இருந்தார்.
இங்கே வந்து பார்த்தாலோ, முப்பது வயதுக்கு ஒரு நாள் கூட அதிகம் சொல்ல முடியாத இளைஞராக இருந்தார் ஸாமுரின். நெடுநெடுவென்று நல்ல உயரம். ஆறடி இருப்பார். போர்த்துகல் – எஸ்பானியப் பேரரசுகளின் மாமன்னரான விவேகமுள்ள பிலிப் என்ற ஒன்றாம் பிலிப் மன்னரை விட ஒரு பிடி அதிகம் உயரம். கறுத்த உடல். ஆப்பிரிக்கர்கள் போல் அரைத்துக் குழைத்துப் பூசியது போல கருப்பு விழுது விழுதாக பூசி வைத்த உடல் இல்லை. சற்றே மங்கிய கறுப்பு, கண்கள் நெருப்புத் துண்டுகளாக ஒளி விடுகின்றன.
பெத்ரோ ஆணாக இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் ஸாமுரினை மோகித்திருப்பார். கஸாண்ட்ரா இடத்தில் வெகுவான காமத்தோடு வைக்காவிட்டாலும் வனப்பு கண்டு காதலுற்று இருப்பார்.
கஸாண்ட்ராவோடு, இவன், இவர், முயங்கினாலோ. அபத்தம். கற்பனை செய்வது மகா குற்றம். பெத்ரோ வேகமாகப் புன்நினைவு களைந்தார்.
ஸாமுரின் இடுப்பில் அவசரமாக உடுத்தியதுபோல் ஒரு பட்டுத் துணியை இறுக்கக் கட்டி இருக்கிறார். அதற்கு மேல் உடை ஏதும் அணியவில்லை.
பரந்த மார்பும் கரளை கரளையாகக் கையும் காலும் வாய்த்து இரு பக்க கை அமரும் இடங்களிலும் சிங்க உருவங்கள் வடித்து நிறுத்திய அரியணையில் அமர்ந்திருக்கிறார் ஸாமுரின்.
மேலுடம்பில் துணி மறைத்துப் போர்த்தாததைக் குறையாக்காமல் கழுத்திலிருந்து இடுப்பு வரை நீளமான, குறைந்த நீளத்தில், மத்திய நீளமாக முத்துமுத்தாகப் பதித்த மாலைகளும் காசுமாலைகளும் அழகான ஆபரணங்களாக அவர் நெஞ்சில் தவழ்கின்றன.
தோள்களிலும் இறுகக் கவ்விப்பிடித்த ஆபரணங்களை ஸாமுரின் அணிந்திருக்கிறார். இடுப்பில் ஒரு குத்துவாளைச் செருகியிருக்கிறார். தலையில் பெரியதோர் ஆபரணமாக மணிமுடி தரித்திருக்கிறார். அதற்குள் இடைவெளியை அழகான மயில் அல்லது வேறு ஏதோ வண்ணமயமான பறவை இறகுகள் மறைத்துள்ளன.
தலைமுடியை முன்குடுமி கட்டியிருப்பது அவர் அரியணையில் இருக்கும்போது குனிந்து ஏதாவது தேடினால் அன்றி கண்ணில் படுவதில்லை.
காலில் செருப்புகளோடு கணுக்கால் பிடிக்கும் ஆபரணங்களையும் அணிந்திருக்கிறார் ஸாமுரின். சில மாலைகளைத் தவிர எந்த ஆபரணமும் பொன்னாக ஒளி வீசவில்லை. வெள்ளியில் செய்தமைத்தவையாக இருக்கக்கூடும் என்று பெத்ரோவுக்குத் தோன்றியது. செம்போ வெங்கலமோவாக இருக்காது தான்.
அரியணை கூட சிங்கம், வளைவுகள், சிறு இலை, கொடி வேலைப்பாடுகளோடு வெள்ளியில் செய்ததாக இருக்கக் கூடும். தரைக்கு மேலே அரையடி உயரத்தில் ஒரு படி வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது அது.
ஸாமுரின் செருப்பணிந்த ஒரு காலை படியில் ஊன்றி, மற்றதை இருக்கையில் மடித்து வைத்து அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பின் நீல நிறத்தில் சாட்டின் துணித் தலையணை உறை போட்ட திண்டு ஒன்று ஸாமுரின் அரியணையில் சாய்ந்து சௌகரியமாக அமர வகை செய்கிறது.
முரட்டுச் செருப்புகளும், காதில் பெரிய வளையங்களும், அணிந்து, தலைப்பாகை வைத்த வீரர்கள் நான்கு பேர், வலது கரத்தில் ஓங்கிப் பிடித்த வாளோடு அரியணைக்கு அருகே, நாலு பக்கமும் நிற்கிறார்கள். இன்னொரு வீரன், தரையில், அரியணை பக்கம் ஜாக்கிரதையாக அமர்ந்திருக்கிறான்.
அரசவையில் ஸாமரினுக்குத் தொட்டு விடும் தூரத்தில் முப்புரிநூல் தரித்த முதிய ஆலோசகர் நின்றபடி இருக்கிறார். பெத்ரோ போர்த்துகீஸ் மொழியில் சொல்வதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதும், ஸாமுரின் மலையாளத்தில் உரைப்பதை போர்த்துகீஸ் மொழிக்கு மாற்றுவதும் ஆலோசகரின் பணிபோல. வெகுவேகமாக மொழியாக்குவதால் வார்த்தைக்கு வார்த்தை சரிதானா என்று சோதிக்க முடியவில்லை. சென்னபைரதேவி அரசவையில் பிரதானி நஞ்சுண்டையா நிதானமாக எல்லோருக்கும் எல்லாம் விளங்கும்படி மொழிபெயர்ப்பார். இந்த ஆலோசகர் எதற்கோ ஓட்டஓட்டமாக ஓடுகிறார்.
அப்புறம் ஒன்று, இந்த மலையாள பூமியில், எல்லோரும், எப்போதும் வேகமாகத்தான் பேசுகிறார்கள்.
பலாப்பழ சுளைகளும், வாழைப்பழத்தையும் வாழைக்காயையும் சிறு சக்கரங்களாகத் துண்டுபடுத்தி தேங்காய் எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொறித்தெடுத்து மிளகுப்பொடியும் உப்பும் தூவிய வறுவலும், தென்னை இளநீரும், உரையாடலுக்கு இடையே, ஸாமுரினுக்கும் பெத்ரோவுக்கும் வழங்கப்படுகின்றன. கையில் பிடித்த உணவுத் தட்டுகளோடு அரசியல் பேச்சுவார்த்தை நடத்த பெத்ரோவுக்குச் சற்றே சிரமமாக இருந்தாலும், பொருட்படுத்தாமல் பேசியபடி இருக்கிறார்.
அவரிடம் மிளகு விலை நிர்ணயம் பற்றிய முதல் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று போர்த்துகல் பேரரசர் பிலிப்பு தீவிரமாக இருப்பதை பெத்ரோ சொல்லிப் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டியுள்ளது.
ஒரு பக்கம் மிளகு அரசி ஜெர்ஸோப்பா மகாராணி சென்னபைரதேவியோடு மொத்த மிளகுக் கொள்முதல் பற்றி உடன்படிக்கைக்கு வழி செய்தபடி, மற்றொரு பக்கம், கோழிக்கோடு ஸாமரினோடு மலபார், தலைச்சேரி இன மிளகுக்குத் தனி வணிக ஒப்பந்தம் ஏற்படுத்துவது பற்றிப் பேச பெத்ரோவுக்குச் சற்றும் பிடிக்கவில்லை.
என்ன செய்ய, போர்த்துகல் மன்னர் தீவிரமாக இந்தப் பேச்சு வார்த்தைக்கு முனைந்திருக்கும்போது அவருடைய பணிவான ஊழியர் பெத்ரோ என்ன செய்யமுடியும். அதை நோக்கி பேச்சை நகர்த்த ஒரு சரியான தருணத்தை எதிர்பார்த்து இளநீர் பருகிக் கொண்டிருந்தார் பெத்ரோ. இனிப்பும் உப்புமாக இந்தத் தென்னை இளநீரும் தனிச் சுவையாக இருந்தது.
அரசியலை விட மதம் சம்பந்தமான பிரச்சனைகள் ஸாமுரின் மன்னர் கவனத்தை அதிகம் கவர்ந்திருப்பதாகத் தெரிந்தது அவருக்கு.
June 28, 2023
ஹிரோஷிமா என்றோர் திறந்த புத்தகம்
வாதவூரான் பரிகள் என்னும் என் பத்தியில் சென்ற ஆண்டு புரவி கலை இலக்கிய இதழில் பிரசுரமானது
எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று புத்தக வரலாறில் இதுவரை ஒரே ஒரு நூலுக்குத்தான் விளம்பரம் ஆனது. ஹிரோஷிமா என்ற அல்புனைவு இது. ஜான் ஹெர்ஸே எழுதியது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானில் பெருநகரமான ஹிரோஷிமா மேல் அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதைக் குறித்த இந்தப் புத்தகம் உலகில் பல மொழிகளில் மூன்று மில்லியன் பிரதிகள் மொத்தமாக விற்பனையாகியுள்ளது, இதைவிட அதிக விற்பனை, மாசேதுங்கின் சிவப்புப் புத்தகம் தான்.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் இறுதியில் லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய அணு ஆயுதத் தாக்குதலில் ஹிரோஷிமா நகரம் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. நகர மக்களில் குறைவானவர்கள் மட்டும் தப்பிப் பிழைத்தார்கள். இன்றைக்கு, இல்லாவிட்டால் நாளைக்கு, நாளை இல்லாவிட்டால் அடுத்த மாதம் என்று நீளும் சாவுப் பட்டியல்களில் இடம்பெறாத அதிர்ஷ்டசாலிகள் இவர்கள். அணுகுண்டு விழாத கால முழு ஆயுசு பெற்றவர்கள்.
அணு ஆயுதத் தாக்குதலுக்கு முந்திய இவர்களின் வாழ்க்கை, அணுகுண்டு விழுந்தபோது அவர்களின் தனிப்பட்ட அனுபவம், சமூக அனுபவம், போருக்கு அப்புறம் அவர்களின் வாழ்க்கைத் தொடர்ச்சி என்று ஆறுபேரின் வாழ்க்கை அல்புனைவுகள் இந்தப் புத்தகத்தில் சுவாரசியமாகக் கதைக்கப்படுகின்றன. தீர்க்கமான பச்சாதாபம், மனப் பக்குவம், பொறுமை என்று கலந்து ஜான் ஹெர்ஸே எழுதியது.
’சின்னப் பையன்’ என்று அமெரிக்க ராணுவம் பெயர் வைத்துச் சீராட்டிய அணுகுண்டு ஹிரோஷிமா நகர் மேல் விழுந்தபோது ஜப்பானிய அரசுக்கும், மக்களுக்கும், அறிவியலருக்கும் கூட அந்தத் தாக்குதலின் பிரம்மாண்டமான நசிவு சக்தி புலப்பட்டிருக்கவில்லை.
அசாதரணமான 6000 டிக்ரி செல்ஷியஸ் வெப்பத்தைக் கிளப்பி ’சின்னப் பையன்’ வெடிக்க, அருகே ஒரு வங்கிக் கட்டிடத்தின் வெளிச் சுவரை தெருவில் இருந்து பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தவர் பஸ்பமாக, சுவரில் அவருடைய வெப்ப நிழல் புகைப்படம் போல் பதிந்தது இன்னும் அங்கே உண்டு. இந்த அணுகுண்டின் கதிரியக்கத்தில் இருந்து தப்ப ஐம்பது இஞ்ச் விரிவுள்ள சுவர் எழுப்பி அதனைக் கடந்து அமர வேண்டும். யாருக்கும் அப்போது தெரியாது.
இதற்கப்புறம் சகலரும் தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தோடு நீரருந்த முனைய, ’மின்சார ருசி’யோடு (electric taste) குடிநீர் மாறியிருந்ததாம். குடித்தபிறகு வாயில் வயிறு மேலெழும்பி வந்ததுபோல் வயிற்றுப் பிரட்டல், குமட்டல். என்றாலும் நீர் வேட்கை, வேட்டை நின்ற பாடில்லை.
கூடவே குண்டு வெடிப்பில் தீப்பிடித்த கட்டடங்களில் இருந்து வெளிப்பட்டு ஓடுகிறவர்களின் கூட்டம். தாறுமாறாக ஓடிய மக்கள் சற்று நேரத்தில் அணுகுண்டு விழுந்த பிரதேசத்திலிருந்து விலகி ஓட ஆரம்பித்தார்கள். கொஞ்சம் போல் உணவு, அத்தியாவசியச் செலவுக்காக பணம் என்று எடுத்துப் போனவர்கள் நிறைய. அவர்களோடு, பிழைத்துக் கிடந்தால் உயிர் வாழ வருமானம் சிறிதாவது கிடைக்கச் செய்ய பழைய தையல் மெஷினை எடுத்துக்கொண்டு ஓடிய தையல்காரரின் விதவை மனைவியும் உண்டு. உருட்டிப் போக முடியாமல் அவள் அந்தத் தையல் மிஷினை தெருக் குழாய் மேடையில் விட்டுப் போனாள், யுத்தம், அணுகுண்டுத் தாக்குதல் எல்லாம் முடிந்து திரும்ப வந்தபோது அங்கேயே, அப்படியே இருந்தது. துரு ஏறியிருந்ததுதான் அதில் தொந்தரவு.
கையில் இப்படி இன்றியமையாததோ, நேசிக்கும் பொருளோ எடுத்துக் கொண்டு ஓடுகிறவர்களை வெறுங்கையோடு எதிர்ப்படுகிறவர்கள் கரம் கூப்பி வணங்கி ’மன்னியுங்கள் நான் வெறுங்கையோடு ஓடுகிறேன்’ என்று ஜப்பானிய கலாசாரப்படி வணங்கி ஆறுதலைச் சொல்லிக் கடந்து போனார்கள்.
தீப்பற்றி எரியும் கட்டடங்களின் உள்ளே சிக்கியவர்கள், ஜன்னல் வழியே பார்த்து ‘ஐயா, மன்னிக்கவும், ஏணி ஏதாவது இருந்தால் சார்த்துகிறீர்களா’ என்று வீதியில் ஓடியவர்களை மரியாதை விலகாமல் உதவி கேட்டார்கள். Incredible people, these Japanese …
ஓடிய வழியில் தோட்டத்தில் கொடியில் காய்த்த பூசணிக்காய், அணு வெப்பத்தில் பக்குவமாகச் சுடப்பட்டு (grilled) சாப்பிடத் தயாராக இருந்ததாம்.
குண்டு வெடிப்பை அருகில் இருந்து பார்த்தவர்களின் கண்கள் முகத்திலிருந்து வெளியே பிதுங்கி வந்து விழ, தீனமான கூக்குரல் எங்கும் கேட்டது.
திடீரென்று பெரிய கருப்புத் துளிகளாக மழை விழுந்தது. மழைத் துளியின் வித்தியாசத்தை கவனிக்கவோ, முழுக்க அபாயம் தெரிந்து பயப்படவோ யாரும் இல்லை.
தலை சிறுத்த, உடல் சூம்பிப்போன சிசுக்கள் பிறக்க, கருச் சேதம் ஏற்பட, இளைஞர்களின் ஆண்மை அழிய ‘சின்னப் பையன்’ விளைவித்த நாசத்தின் எல்லை விரிந்து கொண்டே போனது. அணுகுண்டுத் தாக்குதலைத் தப்பிப் பிழைத்தவர்களை மற்ற ஊர்,நகர ஜப்பானியர்கள் நித்திய சீக்காளிகளாகக் கருதி உதாசீனப்படுத்தினார்கள். வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஜான் ஹெர்ஸே விடாமல் இந்நூலுக்காகத் தொடர்ந்த ஜப்பானியரை அமெரிக்காவுக்கு விமானமேற்றி கூட்டிப் போனார் அவர்களை வழிநடத்தியவரும், ஆறில் ஒருவருமான தனிமோடா மதகுரு. அமெரிக்காவில் நகரம் நகரமாக இந்த ஹிரோஷிமா அணுகுண்டுக்குத் தப்பியவர்கள் பயணப்படுகிறார்கள். அவர்களுக்கு அனுதாபம் பெருக, அமெரிக்கர்கள் நன்கொடை மழை பொழிந்தார்கள்.
ஆனாலும் அமெரிக்கர்கள் ’ஜப்பான் மேல் குண்டு வீசியது சரியான செயல்தான், இதற்காக ஜப்பானிடம் மன்னிப்பு கேட்கவேண்டாம்’ என்று கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையாக இன்னும் சொல்கிறார்கள்.
தனிமோடா சுய விளம்பரத்துக்காக எல்லாம் செய்கிறார் என்று புகார் எழுந்தது. அணுகுண்டை விமானத்தில் ஏற்றி வந்து ஹிரோஷிமா நகரத்தின் மேல் வீசிய இணை விமான ஓட்டுநர் co-pilot தொலைக்காட்சி நேர்காணலில் வந்து அணுகுண்டு அழித்த லட்சக்கணக்கான ஜப்பானியர்களுக்காக தேம்பி அழுதார். ’தப்பு தான் நாங்க செய்தது’ என்று புலம்பிய அவர் வடித்தது முதலைக் கண்ணீர் என்றும், டெலிவிஷன் ஸ்டூடியோவில் நேர்காணலுக்கு வருவதற்கு முன் பக்கத்து மதுக்கடையில் சுருதியேற்றிக் கொண்டு வந்து சிறப்பாக நடித்துக் கொடுத்தார் என்றும் தெரிய வருகிறது.
ஷிண்டோ புத்தமதத்தினரான ஜப்பானியர்களை மதம் மாற்றும் செயல்பாடுகளும் இந்தக் கலவரமான நேரத்தில் நடந்தேறின. ஜான் ஹெர்ஸே ஒன்று விடாமல் பதிவு செய்கிறார்;.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஒரு நாள் வெளியான பத்திரிகையின் அத்தனை பக்கங்களிலும் ஜான் ஹெர்ஸே எழுதிய ஹிரோஷிமாவைப் பிரசுரித்துக் கவுரவப்படுத்தியது.
ஜான் ஹெர்ஸே வார்த்தையில் வடித்த அந்த ஆறு பேரின் வாழ்க்கையை கவனிக்கும்போது நமக்குப் புலப்படுவது, யுத்தமோ அணு ஆயுதத் தாக்குதலோ, ஊரோடு அழிவோ அல்லது போர் ஓய்ந்த அமைதிக் காலமோ, வாழ்வில் முன்னேறுகிறவர்கள் முன்னேறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அல்லாதவர்கள் இன்னும் பின்னடைவுதான் அனுபவிக்கிறார்கள்.
8
June 26, 2023
கபிதாளும் கருந்தேள்களும் கர்ப்பூரமும் சுவாசித்திருந்த காலம்
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து
கபிதாள்.
கர்ப்பூரய்யனின் இல்லத்தி பெயர் அது. கபிதா என்று பகு பிரியத்தோடு கர்ப்பூரய்யன் கூப்பிடுவான். கவிதா என்ற பெயரை வங்காளி உச்சரிப்பில் கொபிதா என அழைக்க ஆசை அவனுக்கு. கொபிதாளே!
பௌர்ணமி, அமாவாசை ராத்திரிகளில் எல்லாம் சேர்ந்து வந்தால் இரண்டு பேரும் ராத்திரி தந்த சுத்தி செய்து, குளித்து வாசனை திரவியங்களை தாராளமாக உடம்பில் வாரியெடுத்துப் பூசி மெல்லிய கருத்த ஆடை தரித்து கதவடைத்துக் கட்டிலுக்கு பரஸ்பர அணைப்பில் விரைவார்கள்.
அது இரண்டு வருஷத்துக்கு முன். அப்போது கல்யாணம் ஆன புதிது. எதைப் பார்த்தாலும், எதைத் தொட்டாலும், எதை அனுபவித்தாலும் புதுசாக இருந்ததால் கர்ப்பூரய்யன் தம்பதியினர் அமாவாசை, பௌர்ணமி தவிர மற்ற நாட்களிலும், இரவோடு கூடப் பகலிலும் உடல்சுகம் தேடி படுக்கை அறையே கதியெனக் கிடந்தார்கள்.
அவர்களின் கட்டில் விளையாட்டு தொடங்கியபோதுதான் வெளி வாசல் நடைக்குப் போகும் ஒழுங்கையில் செந்தேள் காலனி ஒன்று ஏற்பட்டு மெல்லப் பெருக ஆரம்பித்தது.
கல்யாணம் திருத்தணிகையில் நடந்தது. மழைநாள் திருமணம். ஈரம் பூத்த குன்றுப்பாதையில் தோள் சுமக்கும் தவிலோடும் நாகசுவரத்தோடும் வாத்திய கோஷ்டி விரைந்தபோது மழை பெய்ய ஆரம்பித்து வாத்தியக்காரர்கள் சொட்டச் சொட்ட நனைந்து போயிருந்தனர்.
நாகசுவரத்தின் உள்ளே மழைநீர் புகுந்து சீவாளி பொருத்தும் போது கீழ்வழியாக நீர் கசியத் தொடங்கியது. தவிலும் நனைந்துவிட்டது.
மேளத்தை சிறு நெருப்பில் காட்டிச் சுழற்றி வார்களை மறுபடியும் எடுத்து முடுக்கி அந்த மிழவைக் கோல்கொண்டு மெல்லத் தட்ட சுநாதமாக அது பேசுமாம்.
நெருப்பெல்லாம் மூட்டிக் காயவைக்க வேண்டாம். நேரம் இல்லை. கல்யாணத்துக்கு முகூர்த்தம் தட்டிவிடும், வந்தவரைக்கும் வாசித்தால் போதும் என்று கூடவே வந்த புரோகிதர்கள் பொறுமை இழந்து பரபரத்தார்கள்.
கபியும் கர்ப்பூரய்யனும் திருமணம் கொள்ள கோவில் மண்டபத்தின் கூரை பாதி வானம் பார்க்கத் திறந்திருக்க, அடுத்த மழையில் எல்லோரும் இன்னொரு தடவை நனைந்து போனார்கள்.
நாகசுவரம் தேம்பித் தேம்பித் தண்ணீரோடு இசைக்க, தவில் தோல் தளர்ந்து ஊம் ஊம் என்று ஏக்கம் கொண்டு சத்தம் எழுப்பி இதோ இதோ இதோ என்று விசும்பியது. ஜால்ரா தாளம் கூட ஈரமாகி, ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டது,
கோயில் வெளிமண்டபத்தில் தாலி கட்டித் தம்பதிகளாக இருவரும் ஆசீர்வாதம் வாங்கியபோது புரோகிதரின் தொடையில் விழுந்து ஓடியது கரப்பு என்று மனசறிந்து பொய் சொன்னான் கல்கத்தாவிலிருந்து கல்யாணத்துக்கு வந்திருந்த கபிதாளின் தாய்மாமன். எந்த சாக்கு சொல்லியும் கல்யாணம் நின்று போகக் கூடாது என்று ஜாக்கிரதை அவருக்கு.
ஆனால் கர்ப்பூரமய்யன் தேளைப் பார்த்திருந்தான். அமைதியாக அவன் இருந்ததற்கும் கல்யாணம் சீராக நடக்க வேண்டியிருந்ததே காரணம்.
அன்று இரவு கபிக்கு வீட்டுவிலக்கு சீக்கிரமே வந்துவிட கர்ப்பூரய்யன் ரொம்ப சரி என்று கல்யாணத்துக்காக கோவில் மடைப்பள்ளியில் வாங்கிய அதிரசமும் முறுக்கும் தேங்காய் பர்ஃபியும் மற்றபடி நைவேத்தியம் ஆன எண்ணெய் முழுக்காட்டிய தோசையும் புளியஞ்சாதமும் வாங்கி வந்ததைக் கிரமமாகச் சாப்பிட்டு விட்டு கட்டிலில் ஒருத்தரும் தரையில் மற்றொருவருமாக உறங்கப் போனார்கள்.
தரையிலிருந்து கட்டிலுக்கும் கட்டிலிலிருந்து தரைக்கும் தம்பதிகளாக வெறும் ஆலிங்கனத்தோடு இடம்மாற, ராத்திரி அந்தப்படிக்குப் போனது. பிரஷ்டையான ஸ்திரியும் அவள் புருஷனும் தீட்டு நீக்க நடுராத்திரி வெந்நீர் போட்டுக் குளித்து உறங்கப் போனார்கள்.
அந்த ராத்திரியில் படுக்கை அறைக்குச் செல்லும் ஒழுங்கையின் ஓட்டுக் கூரையில் இரண்டு தேள்கள் புருஷன் பெண்சாதி அவை அங்கே வந்து மழைச் சாரலுக்கு விலகி இருந்தன. கலவியிலும் ஈடுபட்டன. கபிதாளின் கனவில் அவை வந்தன. கனவுத் தேள் நேரில் வருமா என்று கபிதாள் கர்ப்பூரமய்யனை அணைத்துக்கொண்டு கேட்டாள். வராது என்று சொன்ன கர்ப்பூரமய்யன் உறங்கவே இல்லை.
June 25, 2023
’இருபதம்சத் திட்டம் அது இந்தியாவின் சட்டம், நம் இந்தியர்க்கு மட்டும், இனி இன்ப வாழ்வு கிட்டும்’
1975 – எமர்ஜென்சி காலத்தில் நிகழும் நாவல் 1975-இல் இருந்து
நாங்கள் வாசல் முன்னறை நாற்காலிகளில் உட்கார்ந்ததுமே ஏதோ கடிக்க உணர்ந்து துள்ளினோம். கேளு நாயர் மற்ற உயிரினங்களோடு, மூட்டைப் பூச்சியும் சிறு அளவில் வளர்த்து வருவதாகத் தெரிந்தது.
“அது போன மாசம் நிறைய இருந்து மருந்து அடிச்சுக் கொலை செஞ்சாச்சு. இன்னும் கொஞ்சம் இருக்கு. அதுவும் இன்னிக்கு ராத்திரி போய் ஒழிஞ்சுடும்”.
தலை கலைத்து வாராமல் விட்ட யட்சிக் களையோடு பாருகுட்டி – பாருக்குட்டி இல்லை, பாருகுட்டி தான் – சொல்ல, “இன்னிக்கா பௌர்ணமி?” என்று திடீரென்று சந்தேகம் கேட்டார் கேஷியர்.
நான் அமாவாசை, பவுர்ணமி எல்லாம் இருபத்தைஞ்சு அம்சத் திட்டத்துக்குக் கிடையாது என்று சொல்ல, பாருகுட்டி சிவந்த நாக்கைத் துருத்திக் காட்டினாள். இன்னும் ஒரு மணி நேரம் அவளுடைய சார்ம் அஃபென்ஸிவ் ஆன அழகுத் தாக்குதலுக்கு ஆட்பட்டால் என்னை அவள் தலைமுடிக்குள் பிடித்துப் போட்டு, ஈரோடும் பேனோடும் இருட்டுச் சிறை பிடித்துவிடுவாள்.
”எதுக்கு லோன் அப்ளை பண்ணியிருக்கீங்க?”
கேஷியர் கேட்க, பாருகுட்டி தொண்டையைக் கனைத்துக் கொண்டு சும்மாதான் என்றாள். சும்மா எல்லாம் பேங்க் கடன் கிடைக்காது என்று அவர் சொல்ல, திட்டப்படியான லோன் என்றாள் அவள்.
என்ன திட்டம் என்று கேஷியர் விடாமல் பிடித்தார். சளைக்காமல், ரேடியோ நாள் முழுக்கப் பாடும் பாடலைப் பாடத் தொடங்கினாள் பாருகுட்டி :
’இருபதம்சத் திட்டம் அது இந்தியாவின் சட்டம், நம் இந்தியர்க்கு மட்டும், இனி இன்ப வாழ்வு கிட்டும்’
இவ்வளவு அபத்தமாக ஒர் அரசு விளம்பரம் எப்போதுமே வெளியானதில்லை. பாருகுட்டியின் பாட்டை பாதியில் நிறுத்தினேன்.
“தேனீ வளர்ப்புக் கடன் தொகையை என்ன செய்வீங்கன்னு கேட்கறார்”, விளக்கினேன்.
“செலவு செய்வேன்” என்று கச்சிதமாகப் பதில் சொன்னாள் பாருகுட்டி.
(இன்று எமர்ஜென்ஸி பிரகடனமான தினத்தின் 49-வது ஆண்டு தொடக்கம் 25 ஜூன் 1975. அந்தக் காலகட்டத்தில் நிகழும் நாவல் ‘1975’-ல் இருந்து ஒரு சிறிய பகுதி இது)
June 22, 2023
சீர்காழி கோவிந்தராஜனும் லூசியானோ பாவரொட்டியும்; கூடவே உம்ம் கல்தூம்
எங்கள் ஊர் காந்தி வீதியில் புது புரோட்டா ஸ்டால் தொடங்கும்போதோ, தெருமுனை வீட்டுப் பெண் பெரியவளாகி சடங்கு சுற்றும் சுபநிகழ்ச்சி என்றாலோ, வெகுவாகக் கவனத்தைக் கவர ஐம்பது வருடம் முன் ஏற்பாடான நிகழ்வு சவுண்ட் சர்வீஸ் ஒலிபரப்பு. ’விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’ என்று சீர்காழி கோவிந்தராஜன் கணீரென்று பாடி ஒலிபரப்பைத் தொடங்கி வைத்தால், காதும் மனசும் அவரிடம் ஓடிவிட, விழா களைகட்டிவிடும். அசரீரி பாடும் சினிமா பாட்டா, பக்திப் பாடலா, தத்துவப் பாடலா, ஹை பிட்சில் பாடுவதில் அவரை அடித்துக்கொள்ள யாருமில்லை.
இந்தியில் சற்று மிருதுவான குரல்தான் பெரும்பாலும் பாடகர்களுக்கு. பாபி படம் வந்து நரேந்திர சஞ்சல் ’பேஷாக் மந்திர் மஜ்ஜித் தோடோ’ என்று உச்ச ஸ்தாயியில் பாடி அறிமுகமானார். இன்னொரு வெங்கலக் குரல் பாடகர் ’ரஸியா சுல்தான்’ படத்தில் ’ஆயே ஸன்ஸீர் கி ஜம்கார்’ என்று உச்சம் தொட்ட கப்பன் மிர்ஸா. கொஞ்சம் போல் சி.எஸ்.ஜெயராமன் குரலின் சாயல்.
ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பீம்சன் ஜோஷி குரல் கம்பீரமும் கார்வையுமாக சத்தம் கூட்டி ஒலிக்கும். மாஜெ மாஹரு பண்டரி என்று ஜோஷி மராத்தி பக்திப் பாடல் (அபங்க்) பாடினால் அடுத்து ரெண்டு நாள் காதுக்குள் அந்தப் பாடல்தான் ஒலித்துக் கொண்டிருக்கும். அவர் வாரிசாக சங்கர் மகாதேவன் உரக்கப் பாடும் பந்ததியை ஏற்றெடுத்துக் கொண்டிருக்கிறார்.
கர்னாடக சங்கீதத்தில், ’என்ன பாட்டு பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை’ என்று நீலமணி ராகத்தில் உச்ச ஸ்தாயியில் உரக்கப் பாடி ரசிகர்களை ஈர்த்த மதுரை சோமு ’மருதமலை மாமணியே முருகையா’ என்று தர்பாரி கனடாவில் உருக்கமும் குரலெடுப்புமாக இசைபாடி சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார்.
கர்னாடக சங்கீதத்தில் மிகப் பிரபலமான பாடகரான சஞ்சய் சுப்ரமணியன் ஒரு பத்திரிகை நேர்காணலில் சொன்னது நினைவு வருகிறது – ’மைக் புழக்கத்துக்கு வரும் முன்னால் நல்ல சத்தமாகப் பாடினால் தான் கடைசி வரிசை ரசிகருக்குக் கேட்கும் என்று இசைக் கலைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். சத்தமாகப் பாட வரலியா, நீ பாட லாயக்கில்லே, வாத்தியம் வாசிக்கக் கத்துக்கோ’ என்று சீனியர்கள் கைகாட்டினார்கள். மதுரை மணி ஐயர் சொன்னார் – ’கீழே (கீழ் ஸ்தாயியில்) பாடினா பண்டிதர்களுக்குப் பிடிக்கும். மேலே பாடினா பாமரர்களுக்குப் பிடிக்கும்’.
சத்தம் போட்டுப் பாடி நிறைய கைதட்டு வாங்கி எப்போதும் அப்படியே பாட எதிர்பார்க்கப்பட்ட சில அற்புதமான மேதமையுள்ள இசைக்கலைஞர்கள் தொண்டையைக் கிழித்துக்கொண்டு (நிஜமாகவே vocal chord rupture ஆகி) பாடவே முடியாமல் போனதும் இங்கே நடந்திருக்கிறது.
நமக்குத்தான் உச்ச ஸ்தாயியில் பாடுவதில் மயக்கம் என்றில்லை. எகிப்திய இசையரசியான உம் குல்தும் Umm Kulthum 2-வது ஆக்டேவில் இருந்து (கீழுக்கும் கீழுமான ஸ்தாயி அது) 8-வது ஆக்டேவ் வரை (எட்டுக்கட்டை விட்டெறிந்து) பாடிப் புகழ் பெற்றவர். ’ஒரு வினாடிக்கு 14000 தடவை’ தொண்டை அதிரப் பாடியவர் அவர் என்று எகிப்தியர்கள் சொல்வார்கள். அந்தளவு vocal vibration ஆகும்போது மைக் பக்கத்தில் இருந்தால் அது எகிறி ரிப்பேராகி விடும் என்பதால் இரண்டு மீட்டருக்கு அப்பால் மைக்கை நிறுத்திப் பாட வைத்துக் கடலென ஆர்பரித்துக் கைதட்டி ரசித்தார்களாம்.
புச்சினி (Puccini) எழுதி இசையமைத்த இத்தாலிய ஓபராவில் பாடி நடித்துப் பிரபலமான இத்தாலிய டெனர் (மேல் ஸ்தாயி இசைக்கலைஞர்) லூசியானோ பாவரொட்டி (Luciano Pavarotti) கீழே C#3-யிலிருந்து மேலே F8 உச்சஸ்தாயி வரை பாடுவதை யுடியூபில் பார்த்தால் நமக்குத் தொண்டை வலிக்கும். Nessen Dorma தூக்கமில்லை என்று தொடங்கும் ஓபரா பாடல் அது. இதை உச்ச ஸ்தாயியில் பாவரொட்டி மட்டும் இல்லை, இன்னும் இரண்டு டெனர்கள் சேர்ந்து பாடியதைக் கேட்பதும் மற்றொரு மேலான, நேற்று ராத்திரி தூக்கம் போச்சு அனுபவம் தான். பாவரொட்டியும், உம் குல்துமும் இப்போது இல்லை. யூடியூபில் உண்டு.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

