இரா. முருகன்'s Blog, page 34
April 4, 2023
பெருந்தேளரசரின் ஹோலோகிராமும் காலப் படகும்
என் 14-வது நாவல் தினை அல்லது சஞ்சீவனி வெளிவர இருக்கிறது. நாவல் பகுதி ஒன்று – திண்ணை காம் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகிறது. அதிலிருந்து-
ஊ ஊ என்று சன்னமாகக் காற்று போல் சீழ்க்கை ஒலி தொடர்ந்து வர ஒரு அணு கூட நகராமல் காலப் படகு பின்னோக்கிக் காலத்தில் பயணமாகிக் கொண்டிருக்கிறது. ஜம்புத் தீவு பிரகடனமும் துரைசாமியும் கால வெள்ளத்தில் குறுந் திவலையாகி மறைந்து போகப் பயணம் நீள்கிறது;
காற்றைப் போன்ற ஒலி நின்றது. குயிலி நிறுத்துவதற்கான உத்தரவு பிறப்பித்தல்ல. தன் போக்கில் நிலைத்த இயக்கம். உள்ளே கவிந்த சுவர்த் திரையில் ஆறு வளைந்து திரும்பும் நீர்நிறை வாய்க்கால் ஓரம் ஆள் வராத முடுக்கில் காலப்படகு கண் மறைவாக நிற்பது தெரிகிறது.
குயிலியும் வானியும் வெட்டவெளியில் கால் வைக்காமல் காலப் படகில் இருந்தபடிக்கே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
காலப் படகு, பால் வீதி பிரபஞ்சத்தில், சூரிய மண்டல கிரகத் தொகுதியில், பூமி கிரகத்தில் மட்டும் சஞ்சரிக்கும் ஊர்தி. பூமியில் நிகழும் காலத்தின் பின்னும் முன்னுமாக முப்பது நூற்றாண்டுகள் பயணம் செய்யும் ஊர்தி. சக்கரங்களோ இறக்கைகளோ இல்லாதது. அதன் இயக்கமும் எரிபொருள், அ-எரிபொருள் தேவையும் பற்றிப் பின்னொருநாள் விரிவாகப் பேசலாம். இப்போது குயிலி காத்திருக்கிறாள். வானம்பாடியும் நீலரும் கூட.
புதியதாகத் தொடங்கிய எதற்கான துறை என்று யாருக்கும் சரியான புரிதல் இல்லாத அலுவலகத்தில் யாரோ பணிக்குச் சேர்வதை எதிர்பார்த்துக் கட்டி வைத்த அமைப்பாக காலப் படகு தட்டுப்படும்.
ஏமப் பெருந்துயில் கட்டிடத்தின் ஈசான மூலையில் இரும்பு மற்றும் மின்காந்தத் தடுப்புக் கதவுகள் தடுத்து இளம் நீலம் மற்றும் இளம் பச்சையில் விளக்கு எரிய திரைகளுக்குப் பின்னே காலப் படகு இருக்கும். அது பயணம் போகும்போது விளக்குகள் எரியாது.
அரசுத் தலைவர் பெருந்தேளர் தவிர யாரும் ஹோலோகிராமாகவோ சக்தித் துணுக்குத் தொகுதிகளாகவோ ஊர்தியில் பிரவேசிக்க முடியாது. பெருந்தேளருக்கான சம்பிரதாயபூர்வமான மரியாதையை மேம்போக்காக மட்டும் கடைப்பிடித்து ஊர்திப் பயணிகள் காலப் படகின் நகர்விலும் நிலைத்தலிலும் கவனம் செலுத்த அனுமதி உண்டு.
எந்த நூற்றாண்டில் எந்த இடத்தில் ஊர்தி சென்றடைந்து கதவு திறக்க வேண்டும் என்றாலும் பெருந்தேளர் அல்லது இனி வருமாயிருக்கும் அவருக்கடுத்தவர் ஊர்திக்கு உள்ளே இருக்கும்போது பயணிகள் வெளியேற முடியாது. இப்போது 1565-ஆம் ஆண்டில் நிற்கும் முன் பெருந்தேளரின் ஹோலோகிராம் மறைந்தது .
வானி இருக்கையில் இருந்து எழுந்து வந்து குயிலியை அணைத்துக் கொண்டாள். நல்ல உணவு கிடைக்கும் இடத்துக்கு வந்திருக்கிறோம் என்றாள் குயிலி. விஜய நகரத்தில் வழக்கம் போல் விழாக் கொண்டாட்டம் என்று கூவியபடி வானி என்ற வானம்பாடி, ஊர்திக் கதவுகள் திறந்து வழிவிட வெளியே வந்தாள். அடுத்து குயிலி.
April 3, 2023
வெளிவர இருக்கும் புதுநாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ யில் இருந்து ஒரு சிறு பகுதி
ஏப்ரல் 3 2023 திண்ணை டாட் காம் இணைய இதழில் அத்தியாயம் 8 பிரசுரமானது
ஒன்றும் செய்ய முடியாது. நிகழ்ந்து முடிந்த வரலாறு. மாற்றி நிகழ்த்த, அதுவும் பல நூற்றாண்டுகள் உருண்டோடப் பின்னால் வந்த குயிலி பார்க்க வேண்டுமானால் சும்மா பார்த்துவிட்டுப் போகலாம்.
திரும்ப வேண்டிய நேரம் இது, தள்ளுவண்டியில் வைத்து இழுத்துப் போன தார்க் கலவை வழியெல்லாம் சிதறிக் கொண்டு போக, ஒரு குத்து சூடான தார் குயிலி கால்மேல் விழுவதாக சிதறி வந்தது.
அது அவள் பாதத்தை அடைவதற்குள் மறுபடி மேலே போக, அந்த வெளி பரந்து விரிந்த ஆள் நடமாட்டம் இல்லாத பெரிய பொட்டலாக ஆனது.
இல்லை, குயிலி வேறு எந்தக் காலத்தையும் நின்று நிதானித்து அதில் அமிழ்ந்து பார்க்கப் போவதில்லை. நேரம் இல்லை. வானம்பாடி வேறு அவசரப்படுத்துகிறாள்.
பெருந்தேளர் ஹோலோகிராமாகச் சந்திக்க இருக்கிறார் என்று காலப் படகின் சுவர்த் திரை அவசரமாக அறிவித்தது. குயிலியும் வானம்பாடியும் அடுத்தடுத்து அமர்ந்து நேர்காணலை எதிர்பார்த்திருந்தனர்.
அலுவலகத் தொழில்நுட்ப அவை உருவாக்கிய லேசர் ஹொலோகிராமாக , பெருந்தேளர் ஊர்ந்து முன்னால் வருகிறார்.
குயிலி, வானி, இன்னும் 1820இல் தான் இருக்கீங்களா? ஒற்றைச் சாட்டமாக இருபது முப்பது நூற்றாண்டைக் கடக்கும் முன்னே, சின்னச் சின்னப் பயணம் போய்வந்து தயார்ப்படுத்திக்கறது நல்லதுதான். அதற்காகத் தேர்ந்தெடுத்த காலங்களுக்கான அண்மைக்கால வரலாற்றிலே இவ்வளவு அமிழ வேண்டாம். அடுத்து?
ஐயா, வணங்கறேன் என்று பெருந்தேளரின் ஹோலோகிராம் முன்னால் மண்டியிட்டு நான்கு முறை தலை தரையில் பட வணங்கி எழுந்து நின்றாள் குயிலி.
வானம்பாடியும் அந்த வெகுவாக சம்பிரதாயமான வணங்குதலை நடத்த பெருந்தேளர் முகத்தில் கண்கள் பிரகாசித்தன. விஷம் நிறைந்த கொடுக்கு – அன்பர்களுக்கு அல்லல் நீக்கும் கவசமும் அன்பிலாருக்கு உயிர் பறிக்கும் விடமுமான அவர்தம் வல்லுறுப்பு அது. அதன் சிறப்பு குறித்து ஐந்தாம் நூற்றாண்டு பொது சகாப்தப் புலவரை நியமித்து தூதுவும், உலாவும் பிரபந்தமும் எழுத வைத்து சிருங்கார ரசம் போதாது என்று இன்னொரு புலவரை, இவர் எட்டாம் நூற்றாண்டுக்கவி- மதிப்பீடு செய்ய வைத்தார்கள். புலவருக்கு ஆயிரம் பிரபஞ்ச நிதி சொல்லியிருந்ததற்குப்பதில் தொள்ளாயிரத்தைம்பது காசுத் துணுக்குப் பொதி மட்டும் கொடுத்து ஒரு நூற்றாண்டு பின்னால் அவரை இறக்கி விட்டது வேறு கதை. இன்னும் அவர் வீடு சேரவில்லை.
எட்டாம் நூற்றாண்டு புலவரே கால்வாசி நிதி மதிப்புக்கு, அதிமதுர சிருங்காரக் கண்ணி என்ற நீள்செய்யுளை எழுதி வந்து விருது பெற்றுச் சென்றார். தேளர் கொடுக்கு வனப்பு ஐம்பது அடி நீண்டு போக கொடுக்கு இரண்டாம் குறி, நீள்குறி இரண்டாம் கொடுக்கு என மோகாவேசத்தோடு வர்ணித்து அவர் எழுதிய கண்ணி அது. வாசித்தும், சொல்லக் கேட்டும், நடனமாக ஆடியும், நாடகமாக மேடையில் பேசி உலவியும், கலவி இன்பம் பகிர்ந்தமை கண்டு பழகி, புலவரைப் பார்த்தாலே கலவி இன்பம் துய்க்கும் சுகம் ஏற்பட்டது பலர்க்கும்.
இது வழக்கமானதாக, அவரை எட்டாம் நூற்றாண்டுக்கே திருப்பி அனுப்பிவிட முடிவு செய்தபோது வயதான பெரிய தேளர்களும் கரப்பர்களும் தங்களுக்கும் இன்பம் நுகர இதுவே வழியாக இருக்க, கவிஞரை என்றால் புலவரைக் கண்ணில் படாமல் செய்து விட்டால் சரிப்படாது என்று எடுத்துச் சொல்லப்பட்டது.
பெருந்தேளரும் நிர்வாக அவையும் கலந்தாலோசனை செய்து ஏற்றுக்கொண்டு, நடக்கும் ஐம்பதாவது நூற்றாண்டிலேயே புலவரை இருத்திக் கொள்ள நிச்சயமானது.
அவரை வைத்து பெருந்தேள் காமாயிரம், கரப்பு திகம்பர அந்தாதி என்று புதிதாகப் பாடவும் செய்தனர் அவர்கள். இருநூற்றிருபது அன்பளிப்பு செய்தால் அன்பளித்தவர் நாயகனாக வரும் சிற்றிலக்கியங்களைப் புலவர் எழுதித் தள்ளி விடுவார். குறிக்கும் கொடுக்குக்கும் வேறுபாடு தெரியாமல் எழுதுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தாலும், அது அவர் சித்தரிக்கும் அதீத காமத்தின் தரிசன வெளிப்பாடு எனக் கருத வேண்டும் என்று அரசாணை மூலம் கவிதை அனுபவ மதிப்பீடு கற்றுத்தரப்பட்டது.
மின்னணு உருவில் சேமித்து வைத்தது தவிர கட்டாயமாக நியூரோன்கள் மூலம் தகவல் களஞ்சியத்தில் உடனடி இணைப்பு வழியே இந்த சாகாவரம் பெற்ற படைப்புகளை மனித மூளையில் சேமித்து வைக்க, கட்டாயத்தின் பேரில் அடிமை வம்ச மனிதப் பரம்பரையில் பத்து பேரைத் தகவலர்களாக நியமித்துமிருக்கிறது. அவர்கள் இறக்கும்போது வேறு தகவலர்களுக்கு இவர்கள் படித்து அனுபவித்துக் கிட்டிய இந்த ரசனை, மனனம் செய்த சிருங்காரச் செய்யுள்கள், அவை போல் காமம் சொட்டும் செய்யுள் இயற்றக் கைகொள்ள வேண்டிய திறமையெல்லாம் கடத்தப்படும்.
மதுவும் போதைப் பொருளும் மாந்திமாந்தி சதா போதையில் இருப்பவர்கள் போல், தகவல் பரப்பில் தனக்குத் தேவையில்லாத சிங்காரக் காட்சிகளை எப்போதும் உணர்ந்து அதில் அமிழ்ந்தபடி இருக்கும் அந்தப் பரிதாபத்துக்குரியவர்கள் உண்ண உடுக்கக் கூட பிரக்ஞை இன்றி படுத்தே கிடக்கிறார்கள்.
தகவல் மனிதர்கள் வினாடியின் பதினெட்டாயிரம் பங்கில் சேர்த்து வைத்த தகவலைத் தேடி எடுத்து வரவேண்டும். மாமைக்கும் பசலைக்கும் வேறுபாடு என்ன என்று தேளர் யாரும் கேட்டால் உடனே தகவல் தர வேண்டும். தாமதம் இருந்தால் நியூரல்
வெளிவரவிருக்கும் என் புதுநாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ சிறு பகுதி
March 30, 2023
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டனர் – புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ முன்னுரை
முன்னுரை – நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’
ஒரு நாவலில் அல்லது சிறுகதை, குறுநாவலில் ஒருவர் கழுகு மாதிரிப் பறந்தால் அது புராணம். புராணம் பற்றிக் கேள்வி எழுப்ப முடியாது.
அந்த மனுஷர் வானத்திலேறிப் பறக்காமல், மசாலா குளித்து எண்ணெய்ச் சட்டியில் பொறிபட முன்பு உயிர்த்திருந்த கோழி போலத் தரைக்கு ஐந்தடி உயரே பறக்க, அப்படிப் பறக்கும் மனிதனை லட்சியம் செய்யாமல் கூட நடக்கிறவன் போல் பாவித்து மற்றவர்கள் அவனோடு உரையாடிப் போனால் அது மேஜிக்கல் ரியலிசம்.
மற்றவர்கள் பார்த்திருக்க அவனது ஒரு சிறகு வெய்யில் நேர மின்னலில் முறிய, வாதனை அடுத்தவர்களுக்கு முழுமையாகப் புரிய அவன் ஒற்றைச் சிறகுள்ள குருவியாக மழையில் பறந்தால் அது சர்ரியலிசம்.
ஒரு கதையிலே எல்லோரும் பறந்தால் ஒன்று அது பறவைகள் பற்றிய, குழந்தைகளுக்கான கதை அல்லது பெரியவர்களுக்கான ஃபேண்ட்டஸி என்ற முழுக் கற்பனைக் கதையாக இருக்கக் கூடும்.
ஃபேண்ட்டஸியில் மெய் மிகுந்த கதையாடல் பயின்று வருவதில்லை. கதாபாத்திரங்கள், கதை நிகழுமிடம், கதை நடக்கும் காலம் என்று சகலமானதுக்கும் ’இது இப்படி இருப்பது சாத்தியமில்லை’ என்ற புரிதலோடு வாசிப்பை வேண்டுபவை, வாசிக்க வைப்பவை ஃபேண்ட்டஸி புதினங்கள்.
இதெல்லாம் நம் சௌகரியத்துக்காக ஏற்படுத்திக் கொண்ட புனைவுக் கூறுகள். அலகிட்டுப் பார்த்தால் இவற்றின் போதாமை புலப்படும்.
மகாபாரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சீரான பெருங்கதையாடல். வியாசன் நிறுத்தாமல் சொல்லிவர விநாயகன் கொம்பை ஒடித்து எழுத்தாணியாக்கி எழுதி வருகிறான். கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதையாக எல்லாத் தளத்திலும் பாரதக்கதை நடக்கிறது.
இதில் இரண்டு அன்னையருக்கு ஆளுக்குப் பாதிக் குழந்தையாகப் பிறந்த சிசுவைக் குப்பையில் போடுகிறார்கள். ராத்திரியில் குப்பைத்தொட்டிகளில் ஏதாவது உண்ணக் கிடைக்குமா என்று தேடி வரும் ராட்சசி ஜரா இந்த இரண்டு குழந்தைத் துண்டுகளை எடுத்து ஒன்றாகச் சேர்த்து உயர்த்திப் பிடிக்க இரண்டும் ஒட்டிக்கொண்டு ஒரே குழந்தையாகிறது. ஜரா ஒட்டிக்கொடுத்த அந்தப் பிள்ளை, ஜராசந்தன் ஆகிறான். கொஞ்சம் குறைந்த சக்தியோடு, முழுக்கக் கிழிபட்டாலும் உடனே ஒட்டிக் கொள்ளும் ஆற்றலும் அவனுக்குக் கைவருகிறது. அவன் பெரிய வீரனாக பீமனோடு மல்யுத்தம் செய்கிறான். கண்ணன் நடுவராக நிற்கும் மல்யுத்தப் போர். ஜராசந்தனை இரண்டாக வகுத்தால் தான் இறப்பான் என்று கண்ணன் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிழித்து ஜாடை காட்டுகிறான் பீமனுக்கு. ஜராசந்தனை இரண்டாக வகுந்து வெற்றிக் கூச்சல் போடும் பீமன் பார்த்துக் கொண்டிருக்க அவன் மறுபடி ஒட்டிக் கொள்கிறான். கண்ணன் கொஞ்சம் யோசித்து இரண்டு மனிதத் துண்டங்களையும் தலைமாடு கால்மாடு மாற்றிப் போட கிழித்த தர்ப்பைப் புல்லை மாற்றிப் போட்டு சமிக்ஞை செய்ய, பீமன் அப்படியே நடத்த, ஜராசந்தன் மரணமடைகிறான்.
இது புராணமா, மேஜிக்கல் ரியலிசமா, சர்ரியலிசமா, ஃபேண்ட்டஸியா? எல்லாம் தான். கனமான சமூக அரசியல் கொண்ட பகுதி அது.
திருப்பங்கள் அத்தனையும் கடந்து கம்ப்யூட்டர் புரகிராமில் subroutine போல ஜராசந்தன் கதை நிகழ்ந்து முடிந்து கதையாடல் திரும்ப பாண்டவர்களுக்கும் அவர்களின் ராஜஸூய யக்ஞத்துக்கும் குருஷேத்ரத்துக்கும் main routine ஆன பெருங்கதையாடலாகப் போகிறது. ஒரு பிசிறு இல்லை. ஒரு சுருதிபேதம் இல்லை. ஒரு முன்பின் முரணில்லை. கதை தன்பாட்டுக்கு சீராக முன்னேறுகிறது.
வியாசன் போல் நான் கதை சொல்ல முடியாது. எழுதித்தர கணேசனுமில்லை. எனில் மடிக் கணினியில் என் கதைகளை நான் எழுதும்போது உருவிலும் உத்தியிலும் கருவிலும் சதா புதுமை வருத்த முயன்றபடி இருக்கிறேன்.
கவிதையிலிருந்து எண்பதுகளில் சிறுகதை, குறுநாவல் எழுத வந்தவன் நான். ஒரு பத்தாண்டு காலம் சிறுகதையும் அல்புனைவும் எழுதி இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில் மெய்ம்மையும் துள்ளிச்சாடும் நடையுமாக முதல் நாவல் எழுதினேன்.
அந்த நடையும் கதையாடலும் கடந்து உடனடியாக மேஜிக்கல் ரியலிச நாவல் புனைவுக்கு செம்புலப் பெயல்நீர் போல் இழுக்கப்பட்டு அடுத்த நான்கு அரசூர் நாவல்களை மாந்த்ரீக யதார்த்தம் கொண்டு கட்டிச் சமைத்தேன்.
அதற்கடுத்த இரண்டு நாவல்கள் பயோ பிக்ஷன் எனில் அதற்கடுத்த 1975 பயோபிக்ஷன் விரவிய சிதறுண்ட கதையாடல். சிதறிய கதையாடலோடு அண்மைக்கால மக்கள் வரலாறான குறுவரலாற்றைச் சொல்ல முயன்றது 1930-1940களில் நிகழும் ராமோஜியம் என்ற அடுத்த நாவலில்.
அதற்கடுத்து 2022இல் பதினாறாம் நூற்றாண்டு வரலாறும் மாற்றுப் பிரபஞ்சமும் பின்னிப் பிணைந்து வர பெருநாவல் மிளகு எழுதினேன். இப்போது, 2023-ஆம் ஆண்டு இதோ இந்த ‘தினை அல்லது சஞ்சீவனி’ முழுக்கற்பனை சார்ந்த ஃபேண்ட்டஸி.
ஏமப் பெருந்துயிலும், அனைவருக்கும் தீர்க்கமானதாக ஆயுள் நீட்சி கொள்ள மூலிகை மருந்து தேடுவதும், அசல் பிரபஞ்சமும் மாற்று பிரபஞ்சங்களும், அவற்றினூடே வளைய வரும் ஒன்று பலவான பாத்திரங்களும், மரபணு வளர்சிதை மாற்றங்களும், திருத்தலும் இன்ன பிறவும், இந்நாவலின் புனைவுக்குப் பின்புலம் சேர்த்துள்ளன.
குயிலியும், வானம்பாடியும் கபிதாளும் பூரணியுமோ மெய்போல் தெரிந்தாலோ, குழலனோ, பெருந்தேளரசரோ, கர்ப்பூரமோ, நீலன் அசல், நீலன் பிரதிகளுமோ சமூக, கலாச்சார, கலை, இலக்கிய, அரசியல் வெளியில் யார்யாரோ போல் இருந்தாலோ, வாசிப்பை ஒரு நிமிடம் நிறுத்தி ஒரு காப்பி பருகுங்கள். இதெல்லாம் முழுக் கற்பனை, ஃபேண்ட்டஸி என்று மூன்று முறை கண்ணை மூடிக்கொண்டு சொல்லுங்கள். விட்ட இடத்துக்கு ஒரு பத்தி தள்ளி வாசிப்பைத் தொடருங்கள். எல்லாமே கற்பனையாகத் தெரியும்.
வழக்கம்போல் சுவாரசியமான வாசிப்புக்கு உறுதி தருகிறேன்.
அன்புடன்
இரா.முருகன்
30 மார்ச் 2023
March 29, 2023
புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ தமிழ்ப் புத்தாண்டு 2023 வெளியீடாக ..
புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 2023 வெளியீடாக இருக்கக் கூடும்
நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி
பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது. ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை.
ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள் பத்தரை மணி ஆகியும் புறப்படவில்லை. பயண அலுவலகத்தின் புறப்பாடு பகுதியில் ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்குப் பயணம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறவை இந்த விளக்குகள்.
குயிலியின் உள்ளங்கையில் டிஜிட்டல் திரை ஒளிர்ந்தது. பொருள் வயின் பயணம் என்று எழுதிய அறிவிப்புப் பலகை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவர் இதே பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு சூரிய மண்டலத்தில் வரும் ஏதோ கிரகத்து வாசி என்று முகம் சொன்னது. காதுகள் குமடு வரை நீண்டு கூர்த்திருக்க சாய்ந்து அமர்ந்தபடி நோக்கினார் அவர்.
“குயிலி சற்றுப் பொறுங்கள். காசுகள் வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன”.
மனிதர் மொழியில் சரளமாக அறிவித்த அவர் குரல் வெளிவர முகத்தில் தீற்றி வைத்தாற்போல் இருந்த வாய் போதாது. காதில் அணிந்த சிறு யந்திரம் அந்தச் செயலைச் செய்வது மின்னி மின்னி நடத்தும் இயக்கத்தில் தெரிந்தது.
வார்த்து முடித்து அரசு இலச்சினை போட்ட பொதியில், ஒரு வினாடி பிரத்யட்சமான தங்கசாலை ஊழியர் ஒருவரால் அவை எடுத்து வரப்பட்டன. அவர் குயிலி காசுகளை ஒரு முறைக்கு இரண்டாக இருநூறு என்று எண்ணி முடிப்பது வரை நின்றிருந்தார்.
என்ன என்று பார்வையால் கேட்டாள் குயிலி. ஒரு காசு கொடுங்க என்று அவர் ஈயென்று இரப்பது பரிதாபமாக இருக்க குயிலி தன் கைப்பையை திறந்து நாணயப் பொதியை வைத்தபடி உள்ளே வேறு காசு உண்டா எனத் தேட, சென்ற வாரம் குறிஞ்சி நிலம் காணப் போய் வந்தது நினைவு வந்தது.
மெய்யும் பொய்யும் கலந்து காட்சி சமைந்த அந்தப் பயணம் ஒரு செலவும் இல்லாமல் நடந்த ஒன்று என்பதில் அவளுக்கு மகிழ்ச்சிதான். அப்போது கொடுத்த ஐந்து பாண்டியன் காசுகளில் ஒன்று தட்டுப்பட அதை காசுசாலை ஊழியரிடம் கொடுத்தாள்.
மிக்க நன்றி, என் மகன் காலந்தோறும் காசுகள் என்ற தலைப்பில் காட்சி நடத்த பல்வேறு காலக் காசுகள், உடை, புழங்கு பொருட்கள் என்று சேகரிக்கிறான். அவனுக்குத்தான் இது என்று சொல்லி வணங்கிப் போனார் ஊழியர்.
வாருங்கள் நேரமாகி விட்டது. என் தரப்பில் தான் தாமதமாகி விட்டது. மன்னியுங்கள் என்றபடி உயரம் கூடிய தலை முடி நரைத்துப் போன ஒரு அதிகாரி புன்முறுவலோடு குயிலியையும், வானம்பாடியையும் புறப்பாடு என்று எழுதிய வழியின் ஊடாக நடத்திக் கூட்டிப் போனார்.
காலப் பயணப்படும் ஊர்தி அந்த ஒழுங்கையின் அற்றத்தில் வெய்யிலில் காய்ந்தபடி, பயன் ஓய்ந்த பழைய பயிற்சி விமானம் போல், யார் கவனத்தையும் ஈர்க்காமல் நின்று கொண்டிருந்தது.
வானம்பாடி கண்ணை மூடியபடி அவளுக்கான இருக்கையைப் படுக்கையாக நீட்டிச் சாய்ந்து படுத்துக்கொண்டாள்.
பயணம் தொடங்கியது.
நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 7
March 27, 2023
பெருநாவல் மிளகு – சட்டகக் கவி ஒன்று – பாட்டுடைத் தலைவியர் இரண்டு
மிளகு பெருநாவலில் இருந்து – சொல்வனம் இணைய இதழில் மார்ச் 26 2023 பிரசுரமானதன் ஒரு சிறு பகுதி
——————————————————————————————–
சென்னா அப்பக்கா அரசியாகிய பிரதேசமான உள்ளாலுக்கும் புட்டிகே-க்கும் சுய விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தது இருபது வருடம் முன்பு. மங்கலாபுரமும் கொல்லூரும் சென்று தொழுது உள்ளால் நகரம் வந்தாள் சென்னா அப்போது. இப்போது தளர்ச்சி காரணம் மிர்ஜான் கோட்டையிலிருந்து உள்ளாலுக்கு நேரே வந்துவிடுவாள் என்று அப்பக்கா மகாராணிக்குத் தோன்றியது.
போன தடவை வந்தபோது சிரித்து மாளவில்லை ரெண்டு பேருக்கும். ஒரு கவிராயர் தெலுங்கில் துளுவ ராஜ்யகுமாரி என்று அப்பக்காவை விளித்து நாட்டியமாடத் தோதாகப் பாட்டு எழுதிக்கொண்டு வந்து பாடியும், அடவு கற்பித்து நாலைந்து கணிகையரைக் கொண்டு ஆடச் செய்தும் அப்பக்காவுக்கு பாட்டும் ஆட்டமும் காட்சி வைத்தார்.
அப்பக்கா மகாராணியே நீ உலகாளுகிறாய். உன் கேசம் மணம் வாய்ந்தது, மேகம் போல் இருண்டிருப்பது. உன் கண்கள் கரியவை. ஒளி மிகுந்தவை. உன் தனங்கள் மாம்பழங்கள் போல் மிருதுவானவை. மிகப் பெரியவை. உருண்டு திரண்டவை. கனமானவை. இடுப்பு இல்லாதது போல் மிகச் சிறியது. பெண்குறி தேர் போல் பரந்துபட்டது. பிருஷ்டம் மலைகள் போன்றது. நீ வாழ்க துளுவ ராஜ்யரஜினியே நீடூழி வாழ்க என்று எழுதிப் பாடி ஆடி அப்பக்காவிடமிருந்து ஐந்து வராகன் பெற்றுப் போனான்,
அந்தப் பாட்டை உற்சாகமாகத் தன் ஆருயிர்த் தோழி சென்னபைரதேவியிடம் அவள் பாடிக் காட்டினாள்.
“என்ன ஆச்சரியம், பட்கல் கவிஞனா அது? போன வாரம் தான் இந்த வருணனைகள் எல்லாம் இட்டு, நடுநடுவே மிளகு என்று வருமாறு வைத்து சாளுவ ராஜ்யரஜினி என்று விளிக்கும் பாட்டை கணிகையர் தெருப் பெண்களைக் கொண்டு பாடி ஆடி நூறு வராகன் வாங்கிப் போனான் அதே கவிராயன்” என்றாள் சென்னா ஆச்சர்யத்தோடு.
”அடியே சாளுவச்சி, ’உன் பிருஷ்டம் இமயமலை, உன் அது தேர்ன்னு என்னைச் சொன்ன பொய்யை அஞ்சே வராகன் கொடுத்து வாங்கிட்டேன். உன் மாம்பழத்துக்கும், இமயமலைக்கும், தேருக்கும் ரொம்ப அதிகமாக கொடுத்திட்டியேடி” என்றாள் அப்பக்கா.
சென்னாவின் முகத்தைக் கையில் ஏந்தி. ’என்ன இருந்தாலும் இந்தத் துளுவச்சி சாமர்த்தியம் சாளுவச்சிக்கு வருமோ’ என்று பாட்டாகப் பாடி ஆடவும் செய்தாள். கூடவே சென்னாவையும் ஆடவைத்தாள். அந்த மகிழ்ச்சிகரமான பொழுதுகள் இப்போதும் வருமோ என்று ஏங்கி இருந்தாள் அப்பக்கா.
மிளகு பெருநாவலில் ஒரு அத்தியாயம்
March 26, 2023
காலப் பயணத்தில் சந்தித்த இரண்டு வயது உத்தமதான புரம் சாமிநாதய்யர் – பொது யுகம் 1854
மார்ச் 26 2023 திண்ணை இணைய இதழில் வெளியாகியிருக்கும் நாவல் – தினை அல்லது சஞ்சீவனி- ஒரு சிறு பகுதி
காலப் படகின் நாற்பரிமாணக் கூறுகளை சற்றே கணினி கொண்டு திருத்தி தன்னை எல்லோரும் பார்க்கக் கூடியபடி அலகுகளை மாற்றியமைத்தாள்.
பத்து வினாடியில், அவள் அணிந்திருந்த உடுப்பு கால்சராய், மேல்சட்டையிலிருந்து புடவை, ரவிக்கை ஆனது. தலைமுடியைக் கைப்பையிலிருந்து எடுத்த சீப்பால் வாரி, புடவைத் தலைப்பை நேராக்கிக் கொண்டு நடந்தாள். வாயில் மென்றிருந்த சூயிங் கம்மை எதிர்ப்பட்ட வீட்டு வாசல் ஓரமாகத் துப்பினாள்.
அவள் பார்த்துப் போக வேண்டியது பிறந்த குழந்தையை இல்லை. குழந்தை பிறந்த வீட்டுக்கு மேற்கே இரண்டு வயது சாமிநாதரைப் பார்த்துப் பேசிப் போக வேண்டும். குயிலிக்கு சாமிநாதய்யரைத் தெரியும். . பக்கத்து வீட்டுக் குழந்தையைத் தெரியாது. அவளுக்கு முன்னால் கால ஊர்தியில் யாரோ ஆண்டு ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தேழு போயிருக்கிறார்கள். சாமிநாதய்யர் அவதரித்தது ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தைந்தாம் வருடம்.
அந்தப் பழைய பயண சமாசாரங்களை நீக்காமல் குயிலியின் பயண விவரணைகள் அதற்கு மேலே படிந்திருக்கும்படி அமைத்திருக்கிறார்கள். காரணமாகத்தான், தவறாக ஏதும் இல்லை. போனவனுக்கோ போனவளுக்கோ சாமிநாதய்யர் அவதரித்த தினத்தில் இங்கே வந்து அவரைப் பிறந்ததும் பூஜித்துப் போக வேண்டும் என்று விருப்பம். அது 1855ஆ 1857ஆ என்று கவலையில்லை.
ஆக, அவர் தவறுதலாக அந்தக் குழந்தை பிறந்த வீட்டுக்கு அடுத்த வீட்டு விசேஷத்தைக் கொண்டாடிப் போயிருக்கிறார், அங்கேயும் கர்ப்பிணிப் பெண், அங்கேயும் ஆண் குழந்தை, குழந்தை குழந்தைதானே, எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன, அவர் கொண்டு வந்த பரிசை எல்லாம் சாமிநாதய்யருக்கு இரண்டு வயது இளைய பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு அளித்து விட்டு வண்டியேறி இருக்கிறார்.
அந்தப் பயண அனுபவத்தை வேறு யாரும் மொழி அன்பர்கள் இருந்தால் அவர்களோடு பகிர்ந்து கொள்ள ஊர்தியின் நினைவு அமைப்போடு விளையாட்டாக இணைத்து வைத்துப் போயிருக்கிறார்.
அவர் செய்த தவறு அப்புறம் தெரிய வந்திருக்கிறது. அவர் கொஞ்சி விளையாடிப் பொம்மை வாங்கிப் போய் சாமிநாதய்யருக்கு என்று தவறுதலாக அடுத்த வீட்டுக் குழந்தைக்கு கொடுத்தது லைப் ஆஃப் ப்ரைன் மாண்டி பைதான் Life of Brian (Monty Python) நகைச்சுவைப் படம் போல் ஆகிப் போனது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் போய்க் கொண்டாடிய அடுத்த வீட்டுக் குழந்தை, ஆறு மாதத்தில் குடும்பம் அரசூருக்குக் குடிபெயர, அங்கே நாளடைவில் சுந்தர கனபாடிகள் என்றானதாம்.
தவறான குழந்தை என்று கொடுத்த பரிசை எல்லாம் பிடுங்கிக்கொண்டு போகவில்லை, அதுவரை க்ஷேமம். குயிலிக்கு சாமிநாதய்யரைப் பையனாகச் சந்திக்க ஆசை.
நளினமாக 1857,8,9 என்று மூன்று வருடம் காலப் படகை முன் எடுத்துப் போய், இதோ வீட்டுத் திண்ணையில் கோமணம் தரித்த சாமிநாதச் சிறுவன். துயில் கலைந்து எழுகிறான். பக்கத்தில் பாய் மேல் ஒரு செப்புக்கிண்ணம். அதை மூடி ஒரு செப்புத் தட்டு. கூடவே ஒரு கரண்டி.
குயிலி சாமிநாதய்யரின் இந்தக் குழந்தை வழக்கத்தைப் பற்றிப் படித்திருக்கிறாள்.
எழுந்ததும் சாமிநாதக் குழந்தைப் பையன் கண்ணை மூடியபடியே கிண்ணத்தின் மேல்தட்டைக் கீழே வைத்து கரண்டியால் கிண்ணத்துக்குள் ந்ங் என்று தட்டுவான். தட்டினார். கிண்ணத்தின் உள்ளே இருந்து சின்னச் சின்னதாக அப்பம் எடுத்து சந்தோஷமாகச் சாப்பிட்டு விட்டு எழுந்திருப்பதே தினசரி முதல் வேலை.
கிண்ணத்தில் இருந்து அப்பம் எடுக்கும்முன் குயிலி பாய்ந்து நாலு அப்பத்தில் ஒன்றை எடுத்து வாயில் போட்டு மெல்லுகிறாள். சாமிநாதக் குழந்தை கண் திறந்து கிண்ணத்தைப் பார்க்க, அடுத்து குயிலியைப் பார்க்க, நீ எடுத்து சாப்பிட்டுட்டியா என்று கேட்கிறார். குயிலி இல்லவே இல்லை என்று சிரித்தபடி தலையாட்டுகிறாள். ரெண்டு வயசுக்கு நல்ல உயரமான குழந்தை.
என் புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இருந்து
March 24, 2023
புதுப் பதிப்பு காணும், என்றும் புதிய நாவல் ’1975’ –
என் இன்னொரு நாவல் 1975 ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாகப் புதுப் பதிப்பு கண்டிருக்கிறது.
நாவலில் இருந்து, முன்னுரை
———————————————————————————————–
தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்ஷன் நெம்பர் 40, ரெட்டைத்தெரு, தியூப்ளே வீதி என்ற இரு நாவல்களாக வெளிவந்ததும் அந்த உத்தியை இன்னும் சற்று நீட்சி அடைய வைத்து, புனைவின் சுதந்திரமும், நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி காட்டும் வரலாற்றின் தகவல் துல்லியமும், ஒருங்கமைதியும், செறிவுமாக ஒரு படைப்பு எழுதிப் பார்க்கத் தோன்றியது.
வழக்கம் போல் சிறுகதைப் பொறியைக் கற்பனை ஊதிப் பற்ற வைக்க அது, படர்ந்து பரவிய நாவல் நெருப்பானது. 1970-களில் நடந்து, என்னோடு சென்னை மேன்ஷனிலிருந்த நண்பர்கள் நினைவு வைத்திருக்கும் நிகழ்ச்சி அது. பெருந்தலைவர் காமராஜர் மறைந்த தினத்தில் நிகழ்ந்தது. மேன்ஷன் அறைக்கு எங்கள் யாருக்கும் பரிச்சயமில்லாத ஒரு இளம் பெண் வந்து, வெளியே போகமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.
அந்த வினோதமான அல்லது அபத்தமான சூழலை, நான்கு அரசூர் நாவல்கள் எழுதித் தீர்த்தபின் சாவகாசமாக ஒரு சிறுகதையாக எழுத உத்தேசித்தபோது மனதில் தோன்றிய சிந்தனை, அந்தக் காலத்தில் தானே எமர்ஜென்சி நடப்புக்கு வந்தது? எமர்ஜென்சி காலத்தில் நடப்பதாக ஒரு நாவல் எழுதினால் என்ன? 1975 நாவலின் எழுத்து மூலம் இதுதான்.
இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு இல்லை. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. எமர்ஜென்சி இல்லாமல் இருந்தாலும் இந்த நிகழ்வுகளில் பல நிகழ்ந்திருக்கும். ஆனால் அவற்றின் போக்கும் முடிவும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். இறுதி அத்தியாயத்திலும் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். திடுமென்று வந்து திடுமெனக் காணாது போகிற இவர்கள் எல்லோரும் கதைப் போக்கை நகர்த்த ஒரு கை கொடுத்துத் தேர் இழுக்கிறார்களா என்றால் இல்லை. தன்னைச் சுற்றிச் சுழலும் உலகத்தில் இன்னார் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றோ, இயக்கம் எல்லாம் தன்னையே மையமாகக் கொண்டு நிகழ வேண்டும் என்றோ விதி செய்யப் போத்தியால் முடியாது. ஆடுவாரும், ஆடி முடித்து அள்ளிச் செல்லாமல் ஒதுங்குவாரும், ஆட வந்தவர்களுமாகக் கதை விரிவதிலும் ஒரு ரசம் உண்டு.
Character Arc என்ற கதாபாத்திரத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ தட்டுப்படாதவர்கள் போத்தியும் மற்றவர்களும். கதைவெளியில் எமர்ஜென்சி தான் உருவாகி, வளர்ந்து, கலைந்து போகிறது.
எமர்ஜென்சி 1975-ஆம் வருடம் ஜூன் 25-ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்டது. 1977-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி விலக்கிக்கொள்ளப்பட்டது. இடைப்பட்ட இருபத்தோரு மாதங்களில் நிகழும் இந்த நாவலின் அத்தியாயங்களும் இருபத்தொன்றுதான்.
நாவலின் முதல் நான்கு அத்தியாயங்கள் சென்னையிலும், அடுத்த பனிரெண்டு அத்தியாயங்கள் தமிழகத்தில் ஒரு சிறு நகரத்திலும், இறுதி ஐந்து அத்தியாயங்கள் தில்லியிலும் நிகழ்கின்றன. தில்லியிலும், சென்னையிலும், நான் பிறந்த சிறு நகரத்திலும் வாழ்ந்து பெற்ற என் வாழ்வனுபவங்கள் நாவலில் கலந்திருக்கின்றன. வாழ்வனுபவத்தின் பின்பலம் இல்லாமல், வெளிநாடோ, உள்நாடோ, எந்த நிலப்பரப்பும் என் படைப்புகளில் இடம்பெற வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
பெருங்கதையாடல் இந்த நாவல் போக்கில் அயர்வு சேர்க்கக் கூடும் என்பதால் சிதறுண்ட கதையாடலாகக் கூறப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளின் நிகழ்ச்சித் தொகுப்பு நாவலாகிறது. எமர்ஜென்சியும் போத்தியும் இவை எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் சரடுகள்.
என் ஆருயிர் நண்பர் கிரேசி மோகன் வழக்கம் போல் நாவலின் முதல் பி.டி.எஃப் பிரதியைப் படித்து முதல் விமர்சகராக தினசரி தொலைபேசி, கருத்தும், மேம்படுத்த யோசனையும், பாராட்டும், கறாரான விமர்சனமும் அளித்தார். அவருக்கு என் நன்றி.
இந்தமுறை இன்னும் சில நண்பர்களும் நாவலின் சில பகுதிகளுக்கு நடைபெற்ற எடிட்டிங்கில் மகிழ்ச்சியோடு பங்குபெற்றார்கள். தகவல் ஒருங்கு இணக்கம் சரிபார்ப்பதில் இவர்களின் பங்கு சிறப்பானது. நாற்பது வருடத்துக்கு முற்பட்ட எமர்ஜென்சி கால வாழ்வு அனுபவமும், பணி இட அனுபவமும், இந்தக் கதை நிகழும் இடங்களில் வசித்த அனுபவமும், நல்ல வாசிப்பனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள்.
திருமிகு அனுராதா கிருஷ்ணஸ்வாமி, ஸ்ரீவத்ஸ் நடராஜன், பரத்குமார் பாலசுப்பிரமணியன் ஆகிய இந்நண்பர்களுக்கு என் நன்றி. நண்பர் ரமேஷ் வெங்கட்ராமனுக்கும் என் நன்றி.
நாவலுக்குச் சாற்றுகவி வெண்பா அளித்த நண்பர் கிரேசி மோகனுக்கு மீண்டும் நன்றி.
என் அன்புக்குரிய வாசக நண்பர்களுக்கு என் வாழ்த்துகள். இனி நாவல் உங்களோடு பேச, நான் மௌனமாகிறேன்.
இரா.முருகன்
அவசர அர்ச்சனை, நைவேத்தியம் – 1963 மார்கழி காலை
புதுப் பதிப்பு காணும் என் நூல்கள் வரிசையில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் புது வெளியீடாக இந்த ஆண்டு வந்த நாவல்கள் –
அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரோ, தியூப்ளே வீதி
இப்போது புதுப் பதிப்பு கண்ட பயோ பிக்ஷனல் நாவல் – நெம்பர் 40, ரெட்டைத் தெரு
நெம்பர் 40, ரெட்டைத்தெரு நாவலில் இருந்து
————————————————————————————————-
மார்கழி விடிகாலையில் தலையில் அந்தப் பட்டுத் துணியைத் தோளில் வழிகிற கம்பீரமான முண்டாசாகக் கட்டிக்கொண்டு மீசை இல்லாத பாரதியார் மாதிரி வெங்கடேசன் சிவன் கோவில் சந்நிதானத்துக்கு முன்னால் நிற்பார். திருப்பள்ளி எழுச்சியும், திருவெம்பாவையும் ஒவ்வொரு பாட்டாகப் பாடி நிறுத்த, சுந்தரேசக் குருக்கள் பின்னால் வளைந்த காலை உந்தி திருவாச்சி விளக்கில் தீபாராதனை கொளுத்தி சிவனுக்குக் காட்டுவார். மடைப்பள்ளியில் வெண்பொங்கல் தயாராகிற வாடை சுகமாகக் காற்றில் மிதந்து வர, நாங்கள் திருவெம்பாவை கவுண்ட்-டவுனில் கவனமாகக் கன்னத்தில் போட்டுக்கொண்டு காத்திருப்போம். விடியற்காலம் சீக்கிரம் கிளம்ப வேண்டியிருப்பதால், சிலநாள் குளிக்காமல் பிரசாதம் வாங்கப்போன குற்றத்துக்காகவும் இப்படிக் கன்னத்தில் போட்டுக்கொள்வது உண்டு.
“போற்றி எல்லா உயிர்க்கும்” வெங்கடேசன் கடைசி திருவெம்பாவை பாடி முடிப்பார். உத்தரீயத்தை அவிழ்த்து ஜாக்கிரதையாக மடித்து அஞ்சால் அலுப்பு மருந்து பெயர் எழுதிய துணிப்பையில் அடைத்துக் கொண்டிருக்கும்போது கோவில் மடைப்பள்ளி சுயம்பாகி மாதேசுவரன் ஒரு வெங்கலப் பாத்திரத்தில் ஆவி பறக்க வெண்பொங்கலை, மேலே ஒரு செம்புத் தட்டால் மூடி எடுத்து வருவான். பிளாஷ் போட்டோ எடுக்கிறதுபோல் அரைவினாடிக்கும் குறைவாக அந்தத் தட்டைத் தூக்கிப் பிடித்து சிவனுக்கு உள்ளே இருக்கிற நைவேத்தியத்தைக் காட்டி டப்பென்று உடனே மூடிவிடுவான் மாது. உள்ளே இருந்தபடிக்கே கையை நீட்டிச் சிவனோ, குருக்களோ, முண்டாசை அவிழ்த்த திருவெம்பாவை குமாஸ்தாவோ தட்டோடு பிடுங்கிக்கொண்டு போய்விடலாம் என்ற பயம் காரணமாக இருக்குமோ என்னமோ.
உபயதார்களுக்கு ஆளுக்கு இரண்டு கட்டி பொங்கல், காளாஞ்சியாக வெற்றிலை, பாக்கு, ரொம்பவே கனிந்த இத்தணூண்டு பூவன் பழம், தினசரிப் பத்திரிகையை நீளவாக்கில் கிழித்து மடித்த பொட்டலத்தில் வீபுதி, குங்குமம், பூமாலையில் நறுக்கிய நாலு ஜவந்திப்பூ எல்லாம் வழங்கும்வரை பொறுமையாகக் காத்திருப்போம். இலை நறுக்கில் வைத்து மாது எங்கள் கையில் தொப்பென்று போடுகிற அந்தப் பொங்கலின் ருசி வாழ்க்கையில் அப்புறம் வேறு எந்தப் பொங்கலிலும் கிடைத்தது இல்லை.
மார்கழி மாதம் பஜனைக் கோஷ்டிகளின் மாதம். முதல் பஜனை, கோவில் தாற்காலிக நிர்வாகி கந்தன் ஃபான்ஸி ஸ்டோர் ராமநாதன் வகையறாக்கள் கோவில் வாசலில் இருந்து தொடங்கி ஊர் முழுக்கச் சுற்றி வலம் வருவது. சிரஸ்தார் சேஷன், ரிடையரான வாத்தியார் சிவராமன், ஸ்டாம்ப் வெண்டர் தாத்தா போன்ற ‘அறுபது பிளஸ்’ ஆத்மாக்களின் இந்த கோஷ்டியில் யாராவது ஒருத்தரே கையில் ஜால்ராவோடு லாகவமாக பிடியரிசிப் பெட்டியையும் வயிற்றோடு கட்டித் தூக்கிக்கொண்டு நடப்பார். ஒவ்வொருத்தரும் இழுக்கும் ராகம் ஒவ்வொரு திசைக்குமாகப் பறக்க, வேற்றுமையில் ஒற்றுமையாக ‘நாதன் நாமத்தை நான் மறவேனே, மறவேனே’ என்று இந்த கோஷ்டி ஒரு தேவாரத்தை உண்டு இல்லை என்றாக்கி முடித்து அடுத்த பயமுறுத்தலுக்குத் தயாராகும். பாதிப் பாட்டில் ராமநாதன் தனி சுருதியில் ‘ஹரி ஹரி’ என்று சத்தமாகச் சொல்வார். யார் வீட்டு வாசலிலோ அரிசி போடத் தயாராக யாரோ நிற்கிறதாக அர்த்தம். பிடியரிசிப் பெட்டிக்காரர் நாதன் நாமத்தில் மூழ்கி இருந்தால், அடுத்த வேண்டுகோள் ‘ஹரிசி-வா, ஹரிசி-வா’ என்று இன்னும் இரைச்சலாக வரும். இந்த இரைச்சல் இல்லாவிட்டால் தினசரி திருவெம்பாவை பாடிமுடித்ததும் கையில் வந்து விழும் பொங்கல் அளவு கம்மியாகிவிடலாம்.
‘அரிசி’ பஜனைக்கு அடுத்தது ராஜுத்தெரு பஜனை. இந்தத் தெருவில் சகலரும் சதா தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருப்பார்கள்.. காரம் மணம் குணம் நிறைந்த பட்டணம் பொடி, பெப்ஸ் என்ற இருமல் மாத்திரை வில்லை, கோரோஜனை (அப்படி என்றால் என்ன?) என்று கலந்து கட்டியாக விற்கும் கங்காராஜ் அண்ட் கோ கடைக்காரர், எந்தக் காலத்திலேயோ பிரிண்டிங்க் பிரஸ் நடத்திய ஹிட்லர் மீசைப் பெரியவர், பம்புசெட் மோட்டார் ரிப்பேர்கடை முதலாளி என்று சங்கீதத்தோடு எந்த விதத்திலும் தொடர்பு படுத்திப் பார்க்க முடியாத பெரிசுகள் மார்கழி வந்தால் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு, நெற்றி முழுக்க நாமத்தைப் பரக்கப் போட்டுக் கொண்டு படு குஷியாகக் கிளம்பிவிடுவார்கள். நாலு ஆர்மோனியம், சிப்ளாக்கட்டை, அப்புறம் பிரம்மாண்டமாக ராமர் பட்டாபிஷேகப் படம். அதன் மேல் சன்னமான பட்டுத்துணி – திருவெம்பாவை குமாஸ்தா முண்டாசு மாதிரி கிழிசல் இல்லாதது – அலங்காரமாக வழிந்தபடி இருக்கும். அழகான தெலுங்கில் அற்புதமாகப் பாடியபடி இந்த ராஜுத் தெரு மனிதர்கள் நாலுவீதி சுற்றி முடிக்க நடுப்பகல் ஆகிவிடும்.
இந்தத் தன்னார்வக் குழுக்களோடு போட்டி போட தாசில்தார் பஜனை கோஷ்டி வந்து சேர்ந்தது. ஆர்.டி.ஓ ஆபீசில் எங்கேயோ இருந்து ஒரு தாசில்தாரை ஊருக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள். குழந்தை குட்டி இல்லாத அந்த மனுஷர் ஆபீசில் சிவப்பு நாடா சுற்றிய •பைல்களை அப்படியும் இப்படியும் நகர்த்திய நேரம் போக, மிச்சப் பொழுதெல்லாம் பாடுவதிலேயே குறியாக இருந்தார். ‘பரிபாலித முதுகுந்தா, வேணும் தயை, நந்த நந்தன நந்தன முடிதன, அருள்வாய்’ என்று தமிழா, இல்லை பாலி, சுமத்ரா பாஷையா என்று முடிவாகச் சொல்ல முடியாத மொழியில் கீச்சுக் குரலில் பாடியபடி ஆபீஸ் விடுமுறையான ஞாயிற்றுக்கிழமைகளில் தாளத்தைத் தட்டிக்கொண்டு நகர்வலம் வருவார் இவர். தனியாக வந்தால் பிரச்சனை இல்லை. தாசில்தார் என்பதால் அவர் ஆபீசில் டவாலி சேவகர் தொடங்கி, லோயர், அப்பர் டிவிஷன் குமாஸ்தாக்கள், டென்-ஏ-ஒன் என்ற டெம்பரவரி கிளார்க்குகளில் பலபேரும் தாசில்தாருக்குப் பின்னால் மரியாதையான இடைவெளி கொடுத்துக் கூடவே நடந்து வருவார்கள். ‘மூன்றாவது சம்பளக் கமிஷன் தீர்ப்பை நடப்பாக்கு’ என்று அரசாங்கத்திடம் முறையிடும் என்.ஜி.ஓ ஊர்வலம் மாதிரி இருக்கும் இது.
தாசில்தார் பதவி மாறிப் போகும்போது ரயில்வே ஸ்டேஷன் கொள்ளாத கூட்டம். இனிமேல் அவர் திரும்பி வரமாட்டார் என்று தீர்மானப்படுத்திக்கொண்ட என்.ஜி.ஓக்கள் ‘நந்த நந்தன நந்தன முனிதன’ என்று கையைத் தட்டிப் பாடியபடி திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
March 22, 2023
My new novel தினை அல்லது சஞ்சீவனி first cut version reaches the publishers
எடிட்டிங் ஒருவாறு பூர்த்தியாக்கி என் அடுத்த நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ பதிப்பாளர்களுக்கு first cut version ஆக அனுப்பப் பட்டுள்ளது
நாவல் அமைப்பு –
பூர்வாங்கம்
அத்தியாயம் 1 – 15
மத்தியாங்கம்
அத்தியாயம் 16- 25
பூர்வ உத்தராங்கம்
அத்தியாயம் 26 -40
உத்தராங்கம்
அத்தியாயம் 41-44
பூர்த்தி
முக்கிய கதாபாத்திரங்கள்
குயிலி, வானம்பாடி பொது யுகம் 5000
பெருந்தேளர் பொது யுகம் 5000
குழலன் பொது யுகம் 5200
கர்ப்பூரம் பொது யுகம் 1900
கபிதா, பூரணி பொது யுகம் 1900
character arcs as
time travellers
multi universe travellers
alternate universe players
shape shifters
genetic mutants
genetically engineered
under cryostasis
botanists
March 21, 2023
என் புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ – உணவு விடுதிகள் – தேளர், கரப்பர், மானுடர் உணவு
எல்லா அலுவலக, சமூக இடையாடலுக்கான நுகர்வோர் பொருள் விற்கும் கடைகள், உணவு விடுதிகள் என்று பல நிறுவனங்களில் தேளர், கரப்பர், மானுடர் என்ற இந்த மூன்று இனங்களின் தனிவெளியில் அவரவர் இனம் தாண்டாமல் வேண்டிய அளவு மட்டும் ஊடாடி வாழ்கிறார்கள்.
உணவைப் பொறுத்து மானுட இன உணவின் சுவைகளை மற்றவர்களும் வரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் அழுகிக் கெட்டுப்போன உணவை பாகம் செய்து கரப்பர்களுக்கு மனதுக்கு உகந்த உணவாக உண்ணத் தருவது நீடிக்கிறது.
அந்த உணவு உருவாக்குமிடங்கள் மனுஷர்களுக்கான உணவு விடுதிகளிலிருந்து வெகுவாக அகன்றே அமைகின்றன. உணவு விஷயத்தில் கரப்பர்களோடு தேளர்களும் ஒரே நேர்கோட்டில் வருகின்றனர்.
புதுச்சிறப்பு கரப்பர் உணவு விடுதி ஒன்றை அரசு தொடங்கியபோது தேளர்கள் அங்கே அதிகமாகத் தட்டுப்பட்டார்கள். பன்றிகளுக்கு தவிட்டில் கலந்த மனிதக் கழிவை உண்ணத் தந்து பன்றிக் கழிச்சலை அவ்வப்போது கழியக் கழியக் கரப்பர்களுக்கு உண்ணத் தரும் உணவகம் அது.
கரப்பர்களைவிடத் தேளர்கள் அதிகம் உணவுண்டு வரும் விடுதி அது. இந்த இனங்கள் இரண்டும் எதை வேண்டுமானாலும் உண்ணட்டும், உண்ட பிறகு வாய் வாடை இன்றி இருக்க கிருமிநாசனி கொண்டு கொப்பளித்து பொது வெளியில் வரவேண்டும் என்று கட்டுப்பாடு உண்டு.
எனில், மனிதர்கள் வாய் கழுவாமல் வந்து எழுப்பும் வாய் துர்நாற்றம் கரப்பர்களை மயக்கும் நல்ல வாடை என்பதால் மற்றோர்க்கு இன்பம் கருதி மனித இனத்தின் வாய் நறுமணம் பேணுதல் கட்டாயம் இல்லை.
சிறப்பு உணவுக் கூடங்கள் ஊருக்கு வெளியே எந்த அறிவிப்புப் பலகையோ மின்னணுச் சுவர் அறிவிப்புகளோ இன்றிக் காணப்படும். பன்றிகள் உண்ணத் தவிடும் மனிதக் கழிவும் கலந்து தர சிப்பந்திகள் மற்றும் அதிகாரிகள் நல்ல ஊதியத்தில் நியமிக்கப் பட்டவர்கள்.
புது நாவல் தினை அல்லது சஞ்சீவனி – ஒரு பகுதி
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

