இரா. முருகன்'s Blog, page 35

March 19, 2023

என் புது நாவல் ‘தினை’ – இந்த வாரம் திண்ணையில் அத்தியாயம் 6 – சில பகுதிகள்

என் புது நாவல் தினை அத்தியாயம் 6 திண்ணை இணைய இதழில் பிரசுரமாகிறது. அதிலிருந்து –

இந்தப் பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்ததும் வானம்பாடி அதுவரை தங்கி இருந்த அரசு குடியிருப்பில் இருந்து குயிலியின் பெரிய இருப்பிடத்துக்கு வந்து விட்டாள். அரசுக் குடியிருப்பில் கரப்புத் தொல்லை அதிகம் என்று ஒரு தடவை அவசரமாகச் சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டாள் வானம்பாடி.

இரண்டு விதமாகப் பெரிய கரப்புகள் மானுடப் பெண்டிரைத் தொந்தரவு செய்வதுண்டு. அவர்கள் வீதியில் போகும்போது உருவம் சுருக்கி பறந்து அந்த பெண்ணின் மார்பகத்தின் மேல் அமரவும் உள்ளே ஓடவுமாக அவை விளையாடும். கால்களுக்கு நடுவே ஊரவும் அவை முனையும். கரப்புத் தொல்லை குறித்து பயப்பட்டு அலறி அழுவதும் உயிர் அபாயம் என்பதுபோல் ஓடுவதும் பண்பாட்டுக்கு எதிரான செயல்கள். ஆகவே அந்தப் பெண்கள் ஒன்றும் பேசாமல் தொல்லை பொறுக்க வேண்டும்.

இன்னொரு தொல்லை ஆகச் சிறுத்த உடலோடு அவை மானுட வீட்டு சமையலறை வாஷ் பேசினில் உறங்கி ஓய்வெடுக்க வருவது. வந்தால் விரட்டக் கூடாது என்பதும் எதிர் பண்பாடு தொடர்பான சமூக நாகரிகமாகும்.

தேளர் சமுதாயம் வலிமை மிக்கது என்று வரையறுக்கப் பட்டதால், வலிமை கொண்டு பிற இனங்களைப் பாதுகாப்பது அவர்களின் பொறுப்பாகும்.

போர்ச் சூழல் தவிர மற்ற சூழ்நிலைகளில் பிற இனங்கள், குறிப்பாக மனிதர்கள் வசிக்கும் இடங்களில் தேளர் இனம் தலைகாட்டக் கூடாது, தவறி வந்தால், மானுடர் யாரும் சொன்னால் உடனே அங்கிருந்து திரும்ப வேண்டும்.

கரப்பர்கள் தேளர்களை உபசரிப்பது அந்த இரு இனங்களுக்குப் பொதுவான விழுமியங்களைப் போற்றுவதில் தொடங்குவது.

”வானி.. அடி உன்னைத் தானடி வானம்பாடி. வாங்கினது போதும். நாம் காலத்தில் பின்னால் தான் போகிறோம். முந்திய ஜன்மத்துக்குப் போகலை”.

புது நாவல் தினை அத்தியாயம் 6

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2023 21:02

March 17, 2023

கவிதை எழுதுவதைவிட அது இலக்கணப்படி இருக்கிறதா என்று சோதிப்பதுதான் கடினமான பணி

திண்ணை இதழில் பிரசுரமாகத் தொடங்கி இருக்கும் என் புதிய நாவல் ‘தினை’யிலிருந்து ஒரு சிறு பகுதி

——————————————————————————————–ஆம் ஆம் என்றாள் குயிலி. அவள் சுனையில் நீராடும்போது இடுப்புக்குக் கீழ் நெகிழ்த்திய சீலை இன்னும் நெகிழக் காடன் காத்திருந்ததைச் சொல்லலாமா என்று யோசித்தாள்.

வேணாம், மனுஷப் பிறவிகளின் மேம்பட்ட அறிவும், உழைப்பும், அனுபவமும் இந்த அரசாங்கத்துக்கு வேண்டும். புகார் சொன்னால், அவர்களை சிறு மீறல்களுக்கு எல்லாம் வெறுக்கத் தக்க வண்ணம் சித்தரித்து விடுவார்கள் தேளர்கள்.

”மலைபடு கிழவோனாக வந்தவன் கடைச்சங்கப் பெரும் புலவன் நக்கீரன். பாட்டு எழுதாத நேரத்தில் அங்கம் பழுதுபட அரிவாளை நெய்பூசி பங்கம் பட இரண்டு கால் பரப்பி சங்கதனை கீறுகீறென்று அறுக்க வைத்திருந்தேன். அது சமூக நோக்கில் சரியானதன்று என்று பிற்கால சமூக விமர்சகர் பொது யுகம் 2024இல் திண்ணை.காம் இணைய இலக்கிய இதழில் சொன்னதால் நீக்கம் செய்து விட்டேன். உங்கள் மானுட இனத்தின் பிரச்சனைகள் ஒன்றும் புரிபடுவதே இல்லை.” பெருந்தேளர் அலுத்துக் கொண்டார்.

வேறு என்ன சிறப்புச் செய்தி? செந்தேளர் அடுத்துக் கேட்டார்.

குயிலி சொன்னாள் –

“நான் கவிதையின் மூலத்தை அறியத் தனிப்படப் பேசியபோது புலவரும் அன்போடு பேசினார். எப்படி கவிதை உருவாகிறது என்பதை அவர் எழுதுவது கொண்டு நேரடியாக அறிய நேர்த்தியாக இருந்தது. அவர் பாடல் அகநானூறில் ஒன்றாகவோ கொஞ்சம் மாற்றி புறநானூறில் ஒன்றாகவோ தொகுக்கப் பட இருக்கிறதாகச் சொன்னார். புரியாமல் எழுதிவைத்தால் இரண்டிலுமே வருமா என்ற என் கேள்விக்கு மறுமொழி சொல்லவில்லை. அவருக்குக் கவிதை எழுதுவதைவிட அது இலக்கணப்படி இருக்கிறதா என்று சோதிப்பதுதான் கடினமான பணி என்றார்.”.

என் புது நாவல் ‘தினை’ அத்தியாயம் 5

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2023 19:42

March 15, 2023

நல்ல உணவு தன்னைத்தானே சமைத்துக் கொள்ளும், நல்ல மது…

திண்ணை டாட் காம் இணைய இதழில் வெளியாகும் என் புது நாவல் தினை – ஒரு சிறு பகுதி

புது நாவல் தினை – நல்ல உணவு தன்னைத் தானே சமைத்துக்கொள்ளும்

”மகா ப்ரபு, சங்க காலம் யார் போனது? அந்தக் காலத்தைப் பகுதி வனைந்த நிகர்மெய் வெளியில் அல்லவோ எங்களை அனுப்பி வைத்தீர்கள்”.

குயிலி சிரித்தபடி அமர்ந்தாள். பெருந்தேளர் சிரிக்க அவையே நகைத்தது.

“சுனையும், மலையும், கூத்துப் பரம்பும் பகுதி உண்மை. மற்றபடி அங்கே இருந்தவர்கள் சிலர் உண்மை மனிதர்கள். மற்ற சிலர் செயற்கையாக வனைந்து ஊடாட அனுப்பப்பட்டவர்கள். எல்லாமே புது அனுபவம்”. வானம்பாடி பெருந்தேளரை நோக்கிக் கூறினாள்.

நீங்கள் பறந்தது? பெருந்தேளர் அவளை உற்று நோக்கியபடி கேட்டார்.

தற்காலிகமாக எங்களுக்குக் கிட்டிய கொடை.

கண்கள் நனையப் பார்த்தாள் குயிலி.

அந்தக் குழல்களோ?

எங்களுக்கான இசையை, கலையை, இலக்கியத்தை நீங்கள் எப்போதும் மதிப்பீர்கள் என்பதற்கான அழுத்தமான அடையாளம். கூடவே தொழில்நுட்பத்தையும். அவை காலம், வெளி கடந்து ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பகுதி நேரத்தில் தொடர்பு ஏற்படுத்தித் தரும் அற்புதமான ட்ரான்ஸீவர்களன்றோ.

அதேதான். குழலில் மேலும் என்ன புதுமை கண்டீர் சிறுமியரே?

அவை தம்மைத் தாமே இசைத்துக்கொண்டன, நல்ல இலக்கியம் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பது போல்.

வானம்பாடி சொல்ல குயிலி மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் – இது இன்னும் எவ்வளவு காலம் சொல்லிப் போக வேண்டும்? நல்ல சிற்பம் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும். நல்ல ஓவியம் தன்னைத்தானே வரைந்து கொள்ளும். நல்ல உணவு தன்னைத்தானே சமைத்துக் கொள்ளும். நல்ல மது தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும். நல்ல கலவி தன்னைத்தானே புணர்ந்து கொள்ளும்..

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2023 19:59

March 14, 2023

என் புது நாவல் ‘தினை’ – மனிதர்களுக்கு மேலான தேளர்களும் கரப்பர்களும் வாழும் கோகர் மலைநாடு The country of the Scorpions and the Roaches

என் புது நாவல் தினை, இணைய இதழ் திண்ணையில் வாராவாரம் வெளியாகிறது. இந்த வாரம் வெளியாகி இருக்கும் அத்தியாயம் -5 சில பகுதிகள்

பெருந்தேளர். ஒப்பற்ற, பிரம்மாண்டமான, அனைத்து அதிகாரத்துக்கும் ஊற்றுக்கண்ணான பெருந்தேளர். சகல வல்லமையும் கொண்ட, அறிவின் ஏக உறைவிடமான மகத்தான ஆளுமை பெருந்தேளர். ஊரும், நடக்கும், ஓடும், நீந்தும், பறக்கும் சகல உயிரினங்களுக்கும், கர்ப்பத்திலிருக்கும் சிசு முதல் காடேகக் காத்திருக்கும் விருத்தர் வரை அன்போடு எந்நேரமும் வழிநடத்தலும், வழிகாட்டுதலும் செய்த, செய்யும், என்றும் செய்யக் காத்திருக்கும் பேராசான் பெருந்தேளர். கோகர் மலைநாட்டின் என்றென்றைக்குமான, மாபெரும் தலைவர் பெருந்தேளர். பெருந்தேளர். பெருந்தேளர். பெருந்தேளர்.

குயிலியும் வானம்பாடியும் தேளசைவு போல் வலது கையை உயர்த்தி மடக்கி மரியாதை செலுத்தி, உக் உக் உக் என்று அரசு மொழியான தேள்மொழியில் பெருந்தேளரிடம் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அரசுமொழியான தேள்மொழியில்தான் அரசு நடவடிக்கைகள் நடத்தப்படும். அரசுமொழியைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

உள்ளே வாருங்கள். இந்தக் கதவை ஒரு தடவை திறந்தால் எத்தனை கஷ்டப்பட்டாலும் அடுத்த பத்து நிமிடம் மூடாது என்பது தெரியும்தானே.

தடித்த முன் காலை அன்போடு குயிலிக்கு முன் உயர்த்தினார் பெருந்தேளர். சொல்லி வைத்தாற்போல் அந்தப் பெண்கள் மானுடச் சிரிப்பைக் கலகலவென்று உதிர்த்தார்கள்.

தான் சொன்ன நகைச்சுவைத் துணுக்கு அவர்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி அடைந்த பெருந்தேளர் கதவு திறந்ததும் ’ஏமப் பெருந்துயில் நிகழ்வும் நிர்வாகமும்’ பகுதிக்குள் நுழைந்தார்.

இது தேள்களின் மேட்டிமை துலங்கித் தெரியும் அலுவலகப் பகுதி என்பதால் பொறுப்பில் இருக்கும் தேளர்கள் எல்லோரையும் கண்டதுமே குயிலியும் வானம்பாடியும் மரியாதை செலுத்த பதிலுக்கு அமுக்கமாக ஒரு தலையாட்டு மட்டும் செய்து அவர்கள் உள்ளே வெளியே போய்க் கொண்டிருந்தார்கள்.

மிடுக்காக உடையணிந்த காவல் கரப்புகள் முதல் தடவையாகக் கண்ணில் பட்டன. சராசரி மூன்றடி உயரமும், ஐந்து அடி நீளமும், இரண்டடி அகலமுமான அந்தக் கரப்புகளின் பலம் வாய்ந்த இறக்கைகள் இரண்டரை அடி உடலின் இரண்டு பக்கத்திலும் பறக்கத் தயாராக வெளியே துருத்திக் கொண்டிருந்தன.

தேளர்களைத் தவிர வேறு எவருக்கும் தலை வணங்காத கரப்பர்கள் தங்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச மரியாதையில் திருப்தி அடைந்திருந்தனர். உரிமை, அதிகாரம், அந்தஸ்து எல்லாம் கிடைத்த சந்தோஷம் கரப்பர்களுக்கு. மானுடர்களைவிட மேலான இடம் கிடைத்த சமூக அமைப்பில் உயிர்த்திருப்பதில் பெருமை கொண்டவை கரப்பர்கள். அடுத்து இன்னும் மேலான விருதுகளும் உரிமைகளும் கிடைக்கப் போவதை எதிர்பார்த்துப் பரபரவென்று நகர்ந்து கொண்டிருந்தன அவை.

குயிலி வாயில் காவலர் கரப்பருக்கும் தலைக்கு மேல் வலது கையை உயர்த்தி மடக்கி மரியாதை செய்ய அது லட்சியமே செய்யவில்லை.

அங்கங்கே அறிவிப்புப் பலகைகள் வெண்மை நிறத்தில் ‘மேலதிகப் பாதுகாப்பு வெளி. வரவு தடை செய்யப்பட்டுள்ளது’ என்று எச்சரித்தன.

மனிதர் உலகில் சிவப்பு எச்சரிக்கும் நிறம் என்றால் தேளுலகில் வெண்மை அப்படி அச்சப்படுத்துவதாகும். இன்னும் ஆறு மாதத்தில் மாற்றுப் பிரபஞ்சம் மேல் மட்டத்தில் ஆட்சி மாறி, அடுத்த ஆறு மாதம் தொடங்கும்போது அதுவும் மாறக் கூடும். ஆட்சி மாற்றம் அறிவிக்கப்படாது. பழக்க வழக்கங்களில் நுண்ணிய வித்தியாசங்கள் எதிர்ப்படுவதை வைத்துத்தான் அது ஊகித்தறியப் படுகிறது.

பெருந்தேளருக்குக் கீழ்ப்பட்ட, ராணுவ உடுப்பணிந்த, ஆத்திர அவசரத்துக்குப் பறக்க இறகு கொண்ட செந்தேளர் ஒருவரும் அவரை மரியாதைக்குரிய இடைவெளியில் தொடர்கின்ற கீழ்ப்பட்ட நிலை அதிகாரர்களும், அவர்களின் பின்னால், மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படும் கரப்பு அதிகாரிகளும் வந்து சேர, மேடையில் பதினைந்து பேரும், அரங்கில் முப்பது பேருமாக மண்டபம் நிரம்பி வழிந்தது.

அறைக்கு வெளியே இரட்டைக் கதவுகளுக்கு சிறு தொலைவில் இரண்டு சாதாரண இருக்கைகள் போட்டுக் குயிலியும் வானம்பாடியும் அமர்ந்திருந்தனர். அந்த அமைப்பிலேயே மனுஷப் பிராணிகள் அவர்கள் இருவர் மட்டும்தான்.

ஒவ்வொரு தலைமுறை மனுஷ ஜாதியிலும், பதிமூன்று விழுக்காடு பேர், உயர் மனிதர் என்ற மேட்டிமை சொல்லும் தோளில் அணியும் பட்டி மூலம் அடையாளம் கண்டு அதிக சலுகைகளோடு ஆதரிக்கப் படுகிறார்கள்.

குயிலி, வானம்பாடி இருவருமே உயர் மனிதர்கள் என்பதால் அவர்களுக்கு அரசு ஓருரு அமைப்பில் பணி நிரந்தரமாக்கப் பட்டிருக்கிறது.

பின் வரிசையில் நின்ற இரு கரப்பு அதிகாரிகள் உரக்கச் சொன்னது இப்படியாக இருந்தது –மரியாதைக்குரிய பெருந்தேளர் உலகப் பெருந்தலைவரின் அவை தொடங்குகிறது. எல்லோரும் வணக்கம் செய்ய உத்தரவாகியுள்ளது.

தேளர்கள் நின்று சேர்ந்து கைதட்டி மரியாதை செலுத்தினர். கரப்பர்களோ இடுப்பு வளையக் குனிந்து வணங்கினார்கள். மரியாதை செலுத்துதலுக்கு பத்து நிமிடம் சென்றது. அடுத்து கூட்டத்தைக் கூட்ட வேண்டிய காரணத்தை ஓர் உயர் தேளதிகாரி விளக்கினார். அதன் மானுட மொழி வடிவம் இப்படி இருந்தது –

நாவல் தினை அத்தியாயம் ஐந்து

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2023 06:01

March 12, 2023

என் புது நாவல் ‘தினை’யிலிருந்து – குயிலியும் வானம்பாடியும் அவசரமாக நடந்த ’ஏமப் பெருந்துயில்’ Cryostasis என்று எழுதி இருந்த ஒழுங்கை

என் புது நாவல் ‘தினை’ அத்தியாயம் 5 இன்று பதிப்பான திண்ணை டாட் காம் இணைய இதழில் பிரசுரமாகி உள்ளது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி –

குயிலியும் வானம்பாடியும் அவசரமாக நடந்த ’ஏமப் பெருந்துயில்’ Cryostasis என்று எழுதி இருந்த ஒழுங்கை, இருட்டும், அமைதியுமாக நீண்டு போனது.

ஒரே போல ஐந்தடி உயரமும், ஆறடி நீளமும், இரண்டு அடி அகலமுமான தேள்கள் அங்கே நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பழுக்கக் காய்ச்சிய சம்மட்டி போன்ற பெரிய கொடுக்குகள் எந்த வினாடியிலும் தாக்குதலை எதிர்பார்த்து, பயமுறுத்தும்படி உயர்ந்து நின்றன.

குயிலியும் வானம்பாடியும் ஓரமாக ஒதுங்கி வணக்கத்துக்குரிய ஒரு செந்தேளர், எனில் பெரும் பதவி வகிக்கும் செந்தேள் நகர்ந்துபோக வழி செய்தனர். செந்தேளர் 2345 என்று பெயர் எழுதிய உடல், போன ஏதோ நூற்றாண்டு விமான சேவை நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட விமானம் போல் பிரமிப்பும் அச்சமுமூட்டியது.

கொடுக்கையும் பிருஷ்டத்தையும் மரியாதை நிமித்தம் பின்னால் இழுத்துக்கொண்டு குயிலிக்கும் வானம்பாடிக்கும் வரவேற்பு நல்கும் விதமாகத் தலையைக் குனிந்து நிமிர்த்தி பெருந்தேளர், துயிலரங்கின் பிரம்மாண்டமான கதவுகளுக்கு நேரே நின்றது, எனில் நின்றார்.

பெருந்தேளர். ஒப்பற்ற, பிரம்மாண்டமான, அனைத்து அதிகாரத்துக்கும் ஊற்றுக்கண்ணான பெருந்தேளர். சகல வல்லமையும் கொண்ட, அறிவின் ஏக உறைவிடமான மகத்தான ஆளுமை பெருந்தேளர். ஊரும், நடக்கும், ஓடும், நீந்தும், பறக்கும் சகல உயிரினங்களுக்கும், கர்ப்பத்திலிருக்கும் சிசு முதல் காடேகக் காத்திருக்கும் விருத்தர் வரை அன்போடு எந்நேரமும் வழிநடத்தலும், வழிகாட்டுதலும் செய்த, செய்யும், என்றும் செய்யக் காத்திருக்கும் பேராசான் பெருந்தேளர். கோகர் மலைநாட்டின் என்றென்றைக்குமான, மாபெரும் தலைவர் பெருந்தேளர். பெருந்தேளர். பெருந்தேளர். பெருந்தேளர்.

குயிலியும் வானம்பாடியும் தேளசைவு போல் வலது கையை உயர்த்தி மடக்கி மரியாதை செலுத்தி, உக் உக் உக் என்று அரசு மொழியான தேள்மொழியில் பெருந்தேளரிடம் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அரசுமொழியான தேள்மொழியில்தான் அரசு நடவடிக்கைகள் நடத்தப்படும். அரசுமொழியைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

உள்ளே வாருங்கள். இந்தக் கதவை ஒரு தடவை திறந்தால் எத்தனை கஷ்டப்பட்டாலும் அடுத்த பத்து நிமிடம் மூடாது என்பது தெரியும்தானே.

தடித்த முன் காலை அன்போடு குயிலிக்கு முன் உயர்த்தினார் பெருந்தேளர். சொல்லி வைத்தாற்போல் அந்தப் பெண்கள் மானுடச் சிரிப்பைக் கலகலவென்று உதிர்த்தார்கள்.

தான் சொன்ன நகைச்சுவைத் துணுக்கு அவர்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி அடைந்த பெருந்தேளர் கதவு திறந்ததும் ’ஏமப் பெருந்துயில் நிகழ்வும் நிர்வாகமும்’ பகுதிக்குள் நுழைந்தார்.

இது தேள்களின் மேட்டிமை துலங்கித் தெரியும் அலுவலகப் பகுதி என்பதால் பொறுப்பில் இருக்கும் தேளர்கள் எல்லோரையும் கண்டதுமே குயிலியும் வானம்பாடியும் மரியாதை செலுத்த பதிலுக்கு அமுக்கமாக ஒரு தலையாட்டு மட்டும் செய்து அவர்கள் உள்ளே வெளியே போய்க் கொண்டிருந்தார்கள்.

மிடுக்காக உடையணிந்த காவல் கரப்புகள் முதல் தடவையாகக் கண்ணில் பட்டன. சராசரி மூன்றடி உயரமும், ஐந்து அடி நீளமும், இரண்டடி அகலமுமான அந்தக் கரப்புகளின் பலம் வாய்ந்த இறக்கைகள் இரண்டரை அடி உடலின் இரண்டு பக்கத்திலும் பறக்கத் தயாராக வெளியே துருத்திக் கொண்டிருந்தன.

தேளர்களைத் தவிர வேறு எவருக்கும் தலை வணங்காத கரப்பர்கள்

இரா.முருகன் புது நாவல் தினை – அத்தியாயம் 5

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2023 20:00

March 11, 2023

தியூப்ளே வீதி திரும்பத் திரும்பப் பார்த்த விசிலடிச்சான் குஞ்சுகளா பாடல்

என் பயோ பிக்‌ஷன் நாவல் தியூப்ளே வீதி இப்போது ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியாடாக வந்துள்ளது. நாவலில் இருந்து-

———————————————————————————

மொத்தமே இருபது பேருக்கு நடைபெறும் வகுப்பு என்பதால், பின் வரிசையை ஒட்டி இருக்கும் ஒருக்களித்த கதவைத் திறந்து இஷ்டம் போல வெளியே நழுவ முடியாது. உள்ளே திரும்பி வந்து, கும்பலில் ஒருத்தனாக உட்கார்ந்து, ரஃப் நோட்டில் பால் பாயிண்ட் பேனாவால், முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் அம்புஜவல்லியையோ, உமாராணியையோ, புஷ்பகலாவையோ கோட்டுச் சித்திரமாக வரைய முடியாது. லெய்பினிஸ் தியரம் மூலம் சக்ஸஸிவ் டிஃபரன்சிஷேயன் நிறைவேறும் உலக மகா அதிசயத்தை கணக்கு புரபசர் ராமநாதனோடு சேர்ந்து மெச்ச வேண்டும்.

நான் அவசரமாக லெச்சு பக்கம் திரும்பி, வர்றதுக்கு இல்லை என்று தோளைக் குலுக்கினேன். இந்த ஊருக்கு வந்து கப்பென்று பிடித்துக் கொண்ட சைகை வழக்கம்.

லெச்சு ‘என்ன?’ என்று அபிநயித்தான். அவன் நிற்கிற கட்டட இடுக்கிலிருந்து நாட்டியமே ஆடலாம். நான் இருக்கப்பட்ட இடம் அப்படியா?

திரும்பத் தோளைக் குலுக்கினேன்.

‘சுளுக்கிக்கப் போவுது. பார்த்து’.

லெய்பினிஸ் தியரத்துக்கு மொத்தக் குத்தகைக் காரர் தான். நின்ற இடத்தில் இருந்து டிபரன்சியேஷனுக்கு ஓய்வு கொடுத்து என்னைக் கிண்டலடிக்கிறார். அதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அம்புஜவல்லியும், உமாராணியும், புஷ்பகலாவும் கெக்கெக்கெக்கென்று சிரித்ததை எப்படிப் பொறுக்க?

‘ஐ யாம் சாரி’.

மிடுக்காகச் சொல்லி வெளியே வர நினைத்தாலும், பதற்றத்தில் பாதி வார்த்தை தொண்டையில் நின்று ஐ ஐ ஐ என்றபோது நல்ல வேளையாக மணி அடித்து முழு வகுப்புமே வெளியேறியது.

மண்டபத்து மறைவிடத்தில் இருந்து பிரத்யட்சம் ஆனான் லெச்சு.

‘முக்கியமான வேலை இருக்குன்னா, வர மாட்டேங்கறியே’ .

அவன் அலுத்துக் கொண்டான்.

‘நீ எலக்ஷனுக்கு வேலை செய்வேன்னு பார்த்தா, நழுவிட்டுப் போறே. உடனொடத்தவன் எல்லாம் என்னமா உழைக்கறான். கமலஹாசன் மாதிரி தலைமுடி வச்சுக்கிட்டா மட்டும் பத்தாதுடா. கமல்ஹாசன் மாதிரி உழைப்பு தேவை. புரியுதா?’.

லெச்சு முழங்கினான். எனக்குப் புரிந்தது. ஆனால் லெச்சு மெச்சும் விதத்தில் கமல்ஹாசன் என்ன மாதிரி உழைத்தார் என்பது தான் புரியவில்லை.

‘மாணவன்’ என்று சமீபத்தில் ஒரு வெள்ளிக்கிழமை சாயந்திரம் சினிமா பார்த்தோம். பார்த்தோம் என்றால், எங்கள் கடைசி வரிசை கோஷ்டிதான்.

என்னோடு ரெட்டைத் தெரு பிராயத்தில் இருந்து, ரெட்டைத் தெருவுக்கும் வந்து, கூட நின்று கிரிக்கெட் ஆடாமல் போனவர் கமல்ஹாசன். அவர் தியூப்ளே தெரு வயசுக்கு இப்போது என்னோடு வந்திருந்தார்.

‘மாணவன்’ படத்தில் கமல், குட்டி பத்மினியோடு ஆடிய ‘விசிலடிச்சான் குஞ்சுகளா’ பாடல் லெச்சுவுக்கு விவித்பாரதி போர்ன்விட்டா ஜிங்கிள் போல, எப்போதும் புத்துணர்ச்சி தருவது. மதராஸ் ரேடியோ ஸ்டேஷன் விவித்பாரதிக்கு போஸ்ட் கார்ட் போட்டு தினசரி ஒலிபரப்ப வைத்த கீதமாகிப் போனது அந்தப் பாட்டு. ‘மாணவன்’ படம் மெஜந்தா தியேட்டருக்கு வந்து மூணு வாரம் ஓடிக் காணாமல் போகும் வரை தினசரி சாயந்திரம் காட்சியில் லெச்சு ஆஜர். கமல் ஆடி முடிப்பது மட்டும் பார்த்துத் திருப்தியோடு தினம் வெளியே வந்தவன் அவன்.

‘என்ன டான்ஸ் என்ன டான்ஸ், மச்சான் பிச்சு உதர்றாண்டா’ என்று உடனடியாக கமலஹாசனை உறவாக்கிக் கொள்கிற ஆனந்தத்தை என்னிடமும் எதிர்பார்க்கிறானோ என்னமோ.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2023 04:08

March 9, 2023

தாசி நறும்வல்லியைச் சந்தித்து வந்த ஷாங்காய் நகரச் சீனப் பயணி

முதுபெரும்கிழவன் சொல்லி முடிக்கும்போது சீனர் மந்திலிருந்து கால் தாங்கித் தாங்கி வந்தார். குறிஞ்சி குடிலுக்கு வந்து கொண்டிருந்த சீனரின் மொழிபெயர்ப்பாளன் நடந்தபடிக்கே பின் தலையைச் சற்றே திறந்து எதையோ அழுத்திக் கபாலத்தை மறுபடி மூடிக்கொண்டான். ஒரு வினாடி இந்த நிகழ்வைப் பார்த்தவள் ராக்கி முதுகிழவி. வயதானதால் மனமும் கண்ணும் குறக்களி காட்டுவதாக இருக்குமோ என்று நினைத்ததைச் சொல்லியபடி போனாள் அவள்.

கீழே மலை ஏறத் தொடங்கி இருக்கும் இரண்டு பேர் தலையில் சுமந்திருப்பது சீனப் பிரப்பம் பெட்டி என்று மேலிருந்தே தெரிந்தது. அது சீனப் பயணியினது ஆக இருக்கக் கூடும். சீனன் தங்கிய விடுதி, அவன் மதுவருந்திய கள்ளுக்கடை, உண்டுபோன யாத்திரிகர் சத்திரம் எங்கும் சீனரின் பெட்டி கிடைக்காமல் போனாலும், நடுவயதுத் தாசி நறும்வல்லி வீட்டுப் படுக்கை அறையில் அவனது லங்கோடு கிட்டியது எனவும் தாசியின் உள்ளாடையை சீனன் அணிந்து போயிருக்கிறான் எனவும், அவளுடைய அந்தப் பட்டு உள்ளாடை ராசியானது என்பதால் சீனனின் இடுப்பிலிருந்து அதைக் களைந்து எடுத்து வந்து கொடுத்தால் நூறு பொற்காசு தாசி நறும்வல்லி பரிசு அளிப்பாள் என்பதை மலைமுது கிழவோனுக்கான செய்தியாகக் கொண்டு வந்தார்கள் வந்தவர்கள். பெரும் அலையாக நகைப்பு எழுந்தது உடனே.

சீனப் பயணி அதைக் கேட்டு ஒரு சுக்கும் புரியாமல் மொழிபெயர்ப்பாளனை உதவி கேட்பது போல் பார்க்க, அவன் தனக்குத்தானே முணுமுணுப்பதாக முடியாது போ என்று சொல்லி வாயை மூடிக்கொண்டான்.

சீனப் பயணிக்கு மொழிபெயர்ப்பாளன் வாய் அசைவு தெரிந்தது. என்றால் அவன் என்ன சொல்லியிருப்பான் என்று அறியாவிட்டால் அதனால் இடர் ஏற்படும் சந்தர்ப்பம் உண்டாகலாம். அவன் இந்த சீனனை சாக்கடைக்குள் அமிழ்த்துவோம் வாருங்கள் என்றோ அவனுடைய கையிடுக்கில் சந்தனம் பூசுவோம் வர விருப்பம் உள்ளவர்கள் வரிசையில் நின்று சந்தனம் எடுத்துக் கொள்ளலாம் என்றோ அறிவிக்கலாம்.

சீனருக்கு சந்தனமும் நரகலும் பார்க்கவும் முகரவும் ஒரே மாதிரித்தான் வாடை என்பதால் முன் சொன்ன இரண்டு விதமும் அவரை இம்சிக்க ஏற்படுத்தும் துன்பங்களாக இருக்க வேண்டும் என்று பட்டது.

சீனர் பின்னால் திரும்பிப் பார்த்துக் குனிந்து வணங்கி மொழிபெயர்ப்பாளனிடம் இதைச் சொல்ல அவன் கரகரவென்று வித்தியாசமான குரலில் இதை மொழிபெயர்க்க இயலாது மன்னிக்கவும் என்றான்.

சீன விருந்தாளி முகம் சுளித்து அசங்கிய வார்த்தைப் பிரவாகமாக என்று ஊகிக்கக் கூடிய விதத்தில் மொழிபெயர்ப்பாளன் காதில் ஏதோ சொல்லச் சிறியதாக வெடிச் சத்தம்.

மொழிபெயர்ப்பாளன் காதிலும் வாயிலிருந்தும் இளம் மஞ்சள் நிறத்தில் புகை வர அவன் உலோகத்தால் முடுக்கிக் கட்டி நிறுத்திய அமைப்பு சரிந்ததுபோல் கீழே சரிந்தான்.

”உலோகம் வைத்துச் செய்த யந்திரம் தான். மனுஷன் இல்லை”.

கிழவோன் சொல்லப் பெண்கள் எல்லோரும் அவனைச் சுற்றி வந்து ஊ ஊ ஊ என்று சத்தமிட்டு ஆடியபடி போனார்கள்.

நறும்வல்லி வந்த நாவல் தினை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 09, 2023 05:41

March 7, 2023

புது நாவல் ‘தினை’யில் இருந்து – சீனன் கடித்த நுண்காழ் எஃகத்து வேல்

என் புது நாவல் தினை, இணைய இலக்கியப் பத்திரிகை திண்ணையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் வெளிவந்திருக்கும் அத்தியாயம் நான்கு – சிறுபகுதி இங்கே
———————————————————————————–
வெளியே ஏதோ பெருஞ்சத்தமாகக் கேட்டது. சமவெளியில் இறங்கி, கரும்புத் தோட்டத்துக்குள் யானைகள் உண்டு மகிழ வராமல் அச்சுறுத்தி விரட்ட ஓவென்று கூட்டமாக ஆர்ப்பரித்து அல்லது சீனவெடி வெடித்து ஓட்டுவது வழக்கம் தான். காற்று நிலைத்த மாலை நேரங்களில் அந்தச் சத்தம் மலையேறி ஒலிப்பதுமுண்டு. எனில், பகல் நேரத்தில் யானை எங்கே வந்தது?

காடனும், தொடர்ந்து குறிஞ்சியும் சத்தம் கேட்ட கூட்டவெளிக்கு ஓடினார்கள்.

”குயிலி கதவை சார்த்தி வச்சுக்க, நான் வந்து திறக்கும்போது நீ வெளியே வந்தால் போதும்” என்று சொல்லியபடி ஓடினாள் குறிஞ்சி.

அந்தப் பெண்களும் அதைச் செய்ய மறுத்து உணவு உண்ட ஈரக் கையோடு வெளியே விரைந்தார்கள்.

”இங்கே நிறைய நேரம் கடத்த வேண்டாம் பெருந்தேளர் அலுவலக அழைப்பு எனக்கும் வந்தது” என்று வானம்பாடியிடம் சொல்லியபடி குழலை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டு குயிலி வெளியே ஜாக்கிரதையாக வந்தாள். பின்னால் வானம்பாடி,

மந்தில், என்றால் குன்று பெரும் மேடையில் மரத் தண்டில் அமர்ந்திருந்த சீனர் கீழே விழுந்து கிடந்தார். அவருடைய வாய் கோணிக் கோணி வலித்து இழுத்துக் கொண்டிருந்தது. கைகள் சுட்டி இழுக்கக் கால்கள் தரையை மிதித்து உயர்ந்து தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்தன. வாயில் நுரை தள்ளிக்கொண்டிருந்தது.

அவருக்கு வலிப்பு கண்டிருக்கு, எஃகம் எஃகம் என்று எல்லோரும் சொல்ல முதுகிழவோன் வெறியாட்டத்துக்காக மேடைப் பின்னணியாக மண் குவித்து நட்டு வைத்திருந்த வேலை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான்.

சீனருக்கு அதை எச்சிலாக்கக் கொடுத்து விடக்கூடாது என்பதால் தன் மேல்துணியை வேலைச் சுற்றிப் பொதிந்து சீனர் வாயில் இட்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக சீனர் அமைதியானார். அவர் எழுந்து அமர்ந்து தயவு செய்து என் சிறு பேழையை எனக்குத் தரமுடியுமா, அதில் தான் என் வலிப்புக்கான மருந்தும் நாக்கைக் கடித்துக் கொள்ளத் தடையாக பயனாகும் இரும்புச் சாவியும் இருக்கிறது என்று கேட்டவர், ஓ அதை மாநகரிலேயே மறந்து வைத்துவிட்டேனே என்று தலையைக் கையால் தாங்கியபடி நின்றார்.

”ஒன்றும் கவலை இல்லை, நாளை காடனோ மாடனோ சமவெளி போகும்போது போய் எடுத்து வரச்சொல்றேன். மாநகரில் களவு அரிதிலும் அரிது. பெட்டியை எங்கே வைத்தீர்கள் என்று நினைவு உண்டல்லவா” எனக் கேட்டான் முதுபெருங் கிழவன்.

”அது நினைவு இல்லையே, நேற்று எங்கெங்கோ சுற்றினேன் எங்கே பெட்டியை இறுதியாகக் கொண்டுபோனேன் என்று நினைவில்லையே” என்று கையைப் பிசைந்தார் சீனர்.

முதுகிழவோன் சிரித்தபடி சொன்னான்=

”நான் பரவாயில்லை போலிருக்கு. என் குடில் என்று அடுத்த குடிலுக்குள் போய் முண்டை அவிழ்த்துவிட்டு நிற்கும்போது அங்கே சிங்கச்சிக் கிழவி வந்து என்ன சத்தம் போட்டாள் தெரியுமோ. அவளைக் காமுற்று அவளது அந்தரங்கம் காண வந்தேன் என்று எண்ணம். நான் வீடு மறந்த மாதிரி குன்றேற மலைப் பாதையும் மறந்து விட்டது ஓரிரண்டு முறை”.

தன் வரலாற்றை சாவதானமாகச் சொல்ல ஆரம்பிக்க, கேள்மின் எனச் சொல்லவோ செவிமடுப்பீர் என ஆணையிடவோ யாருமில்லாததால் மலைமுது கிழவனின் சிங்கார நினைவுகள் காற்றோடு போயின.

புது நாவல் தினை – அத்தியாயம் 4

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2023 19:31

March 5, 2023

தானே வாசிக்கும் குழலான ட்ரான்சீவர் – பொது யுகம் 5000

கலகலவென்று சத்தம். குறிஞ்சியின் குடிலுக்கு வெளியே குயிலியும் வானம்பாடியும் அவரவர் கையில் எடுத்த புல்லாங்குழலோடு அந்தரத்தில் நின்றிருந்தார்கள்.

குறிஞ்சி அவர்களை ’நீங்கள் இப்படி நிற்கும்போது பார்க்க யட்சி போல் இருக்கிறீர்கள். கீழே வந்தால் காடன் என்னை மறந்து விடுவான்’ என்று பகடி பேச அவர்கள் திரும்ப நகைத்தார்கள். என்னையும் தான் என்றாள் மாடத்தி. மறுபடி சிரிப்பு.

”நாங்கள் அவசரமாக எங்கள் காலத்துக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது. போய் விரைவில் திரும்ப வருகிறோம்”. குயிலி சொன்னாள்.

”ஏ பொண்ணுங்களா, மருதையிலே வட்டுக் கருப்பட்டியும் கருவாடும் வரும்போது வாங்கிட்டு வாங்க. கையைப் பிடிச்சுக்கிட்டுப் பத்திரமாகப் பறந்து போங்க. மழை வந்துச்சுன்னா மரத்தடியிலோ மரக் கிளையிலோ தங்கிக்குங்க” என்று சரம்சரமாகப் புத்திமதி வழங்கினாள் குறிஞ்சி.

”ஒண்ணும் கவலைப்படாதே குறிஞ்சி. எவ்வளவு வேகமாக வரமுடியுமோ அவ்வளவு வேகமாகத் திரும்பி வருகிறேன்
என்றபடி குயிலியும் தொடர்ந்து வானம்பாடியும் விண்ணேறிச் சிறு பொட்டுகளாகத் தோன்றும் வரை பார்த்திருந்தபடி குடிலுக்குள் வந்தாள் குறிஞ்சி.

நண்பர்களே. போய் வாருங்கள். நீங்கள் வரும்போது புதுக் கூத்து உங்களுக்காக உருவாக்குகிறோம் என்றான் முதுகிழவோன் வானம் பார்த்து. அந்தப் பெண்கள் ஒரு வினாடியில் காணாமல் போனார்கள்.

வாசலில் பராக்கு பார்த்தப்டி நின்ற சீனர் பறப்பதாகப் போலி செய்து கூவெனக் கூச்சலிட்டு குழந்தை போல் ஓடினார். அந்தச் சாவியும் மருந்தும் இல்லாமல் போனால் என்ன செய்வீர்கள் என்று சீனரிடம் முதுபெருங்கிழவன் வம்பு விசாரித்தான். உங்களிடையில் மருத்துவன் இல்லையா, மருந்து இல்லையா என்று அவர் பதிலுக்கு மொழிபெயர்ப்பாளன் வழி விசாரிக்க, ஓ உண்டே என்றான் காடன்.

குழலான ட்ரான்சீவர் – நாவல் : தினை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2023 20:09

March 4, 2023

கப்பல் கட்டினாலும் பணம், கப்பல் உடைத்தாலும் பெரும்பணம்

பெருநாவல் மிளகு-வில் இருந்து ஒரு குறுமிளகு

நேமிநாதன் இருந்தபடிக்கே வணக்கம் சொன்னான். போன வாரம் ஆவிகளோடு பேச வந்த இரண்டு போர்த்துகீசியர்களும் வணக்கம் என்று இருகை கூப்பி நின்றிருந்தார்கள்.

”இவர் ஜோஸ் கார்லோஸ். லிஸ்பனில் வர்த்தகர்”. ரோகிணி அறிமுகப்படுத்தும் நேசமான குரலில் சொன்னாள். நேமிநாதன் ஜோஸ் கார்லோஸை ஒரு கீற்றுப் புன்னகையால் வரவேற்றான்.

”இவர் தோமஸ் அகஸ்டின்ஹோ. குடும்பத் தொழிலைக் கவனிக்கிறார்” என்றாள் ரோகிணி. கொஞ்சம் அலட்சியத்தோடு தலையாட்டுகிறான் நேமி.

நேமிநாதன் ரோகிணியை மங்கிய அறை வெளிச்சத்தில் ரசிக்கிறான். போர்ச்சுகீஸ், இங்க்லீஷ், பிரஞ்ச், கிரேக்கக் கலவையான அழகுத் தேவதை அவள். வனப்பின் ஐரோப்பியத் தன்மை மேலெழுந்து சூழ்ந்திருக்க மெல்லிய ஒப்பனை புனைந்திருக்கிறாள். ஐரோப்பிய பாவாடையும், நெஞ்சைக் கவ்வும் மேல்சட்டையும், மின்னும் காலணிகளும் அணிந்த தேவதைக்கு எந்த நிமிடமும் இறகு முளைத்துப் பறந்து போய்விடக் கூடும் .

நேமிநாதன் இரண்டு துரைகளையும் உற்று நோக்குகிறான். பளபளப்பான கால்சராயும், அதே பளபளப்பில் பொத்தான் வைத்த மேல் குப்பாயமுமாக மெல்லிய உதடுகளும் சொத்தைப் பல்லுமாக வெள்ளைத்தோல் துரைகள்.

துரைகள் என்பதால் நேமிநாதன் மதிக்கிறான். ரதவீதி கடைக்காரர்கள் போல் லிஸ்பன் நகரச் சிறு வியாபாரிகள். அவ்வளவுதான் அசல் மதிப்பு.

சக்கரத்தில் கழுத்தை நுழைத்த மாதிரி கழுத்தில் பாதி வளைந்த கழுத்துப் பட்டி அணிந்திருக்கிறார்கள் இருவரும். நேமிநாதன் வயது தான் இருப்பார்கள். எல்லா நாட்டுக்காரர்களும் செய்வது போல் ரோகிணியையும். கஸாண்ட்ராவையும் பார்த்துக் கண்ணில் ஜாக்கிரதையாக மறைக்கப்பட்ட காமத்தோடு நெருங்கி இழைந்து அபத்தமான பேச்சுக்கெல்லாம் சிரித்து, வாய்ப்பு கிடைக்குமா என்று முயங்கக் காத்திருக்கிறார்கள்.

அவ்வளவு சீக்கிரம் நேமிநாதன் ரோகிணியை விட்டுக் கொடுத்து விடுவானா? பெத்ரோ தான் கஸாண்ட்ராவை கைநழுவி, தற்சமயத்துக்கு மட்டும் என்றாலும் கொடுத்து விடுவாரா? என்றாலும் வர்த்தகம் பேசப்பட வேண்டும். பேச அமர்ந்திருக்கிறார்கள்.

பெத்ரோ துரை கிறிஸ்துமஸுக்காக ஒரு வாரம் முன்பு மனைவி வீட்டுக்கு கோழிக்கோட்டுக்குப் பயணம் வைத்திருக்கிறார். போன வாரமே போனவர் அடுத்த வாரம் திரும்புவார் என்பதால் அவர் வீட்டில் நடமாட்டம் வேலைக்காரர்கள் மட்டும், அதுவும் சில அறைகளுக்குள் மட்டும். எனவே குரல் ஒரேயடியாகத் தாழ்த்திப் பேச வேண்டியதில்லை என்கிறாள் ரோகிணி. சரிதான் என்று தலையசைக்கிறார் அகஸ்டினோ.

முழு அத்தியாயம் மிளகு 37 படிக்க சொடக்குக

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2023 19:01

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.