இரா. முருகன்'s Blog, page 31
June 20, 2023
கதர்க்கொடி கப்பல் காணுதே பாட மாட்டாளாம் – வெள்ளைக்காரன் மேலே பிரேமை
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து
சுவர் மீண்டும் ஒளிர்ந்தது. நீங்கள் ஒதுங்கி இருப்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில். பெருந்தேளர் அரசாளும் காலத்திலிருந்து முப்பது நூற்றாண்டு பின்னால் கடந்து சேர்ந்த காலம் அது. பேசிய சுவர் இருளடைந்தது.
காலப் படகில் புதியதாக நீட்டப்பட்ட குசினிக்குள் இருந்து வானம்பாடி ஒரு வெள்ளித் தட்டில் தினை உருண்டைகளும், அரிசிப்பொரி உருண்டைகளும் வாழைப் பழங்களுமாக வைத்து எடுத்து வந்து மருத்துவரிடம் அளித்தாள். வேகவைத்த நிலக்கடலை இரண்டு குவளை நிறையத் தட்டில் இருந்தது.
படகில் நெருக்கடி நிலைமை அறிவிக்கும் விளக்கு எரிய மருத்துவரும் குயிலியும் வானம்பாடியும் மங்கலான விளக்கொளியில் சற்றே உருவம் தெளிவின்றிக் காட்சியளித்தார்கள்.
குயிலி படகின் கூறுகளைச் சற்றே மாற்றியமைக்கும் விசை வேலை செய்கிறதா என்று நோக்க, செய்கிறது என்று சுவர் அறிவிப்பு கூறியது. குயிலி காலப் படகின் இருப்பு தொடர்பான கூறுகளைச் சற்றே மாற்ற, படகு வெளியுலகுக்குக் காணாமல் போனது.
படகுக்குப் பக்கத்தில் சமசமவென்று சத்தம். மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். உரத்த குரலில் பேசுகிறார்கள்.
இன்னிக்கு கிட்டப்பா பாடின மேயாத கானகத்தே இந்த வருஷம் ஒற்றைவாடை கொட்டகையிலே பாடினதை விட அருமை போங்கப்பா.
நாரதர் அந்தப் பொண்ணு சரியாகப் பாடலே. நாரதர் குரல் இப்படியா கீச்சுனு இருக்கும்?
கதர்க்கொடி கப்பல் காணுதே பாடமாட்டேனுட்டா போ. வெள்ளைக்காரன் மேலே அப்படி பயமோ பிரேமையோ. வெள்ளையா இருந்தாப் பிடிக்குமா?
சாயவேட்டியை இடுப்பைச் சுற்றிக்கொண்டு காயாத கானகத்தே பாட்டை சகிக்க முடியாமல் பாடினானொருத்தன். அப்போது மறுபடி சுவர் அறிவிப்பு ஒளிர்ந்தது,
எம்டன்.
June 17, 2023
பிரபஞ்ச வெளியில் சங்கை தீர்க்க, உலகளாவிய நீர் பிரிதல் வேண்டா
நாவல் தினை அல்லது சஞ்சீவனி – ஒரு சிறு பகுதி
எங்கே வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. இருட்டு மூடியிருந்தாலும் பகலா இரவா என்ற அடுத்த கேள்விக்கும் குயிலியிடம் பதில் இல்லை. ஒரு சௌகரியத்துக்காகக் கற்பித்துக்கொண்ட காலக் கணக்கு எங்கோ நின்று இயக்கம் நிலைத்து விட்டது. இறங்க வேண்டாம்
காலப் படகு பழுது நோக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சுவர் சற்று வெளிச்சத்தோடு அறிவித்து அதே தகவலை இயந்திரக் குரலில் சகஜமான குரலில் பரத்துகின்றது.
இருட்டில் மருத்துவர் நீலர் ஏ பெண்களா என்னை விட்டுவிடுங்கள், நான் போகிறேன் என்று படுக்கையிலிருந்து இறங்கப் பார்த்து கால் சரிவர எழாமல் குழைந்து நிற்கிறார்.
அண்ணாரே இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். நாம் இதோ உணவையும், ஓய்வையும் நோக்கிப் போகும் நம் பயணத்தைத் தொடரப் போகிறோம்.
குரலில் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்தோடு குயிலி சொல்கிறாள்.
நீலரா மசிவார்? தேவலோக அமிர்தமென்றாலும் இப்போது அவர் அஃதொன்றும் நாடார். ஓய்வெடுக்க வீடு போனால் போதும். இந்த நூதன வாகனம் உணவுக்கும் ஓய்வுக்கும் எங்கே கொண்டுபோகிறதோ. அல்லது நான் தான் உணவோ? யாருக்கு?
இந்தப் பெண்கள் குருதி உறிஞ்சிக் குடிக்க வந்த யட்சிகள் தானோ. யட்சிகள் கூட்டு சேர்த்துக்கொண்டு ரத்த வேட்டை ஆடுவதாகக் கேட்டதுமில்லை படித்ததுமில்லையே.
மருத்துவரின் கழுத்திலும் செவி மடலிலும் அட்டைப்பூச்சி அப்பி குருதி உறிஞ்சிய தடம் உண்டு எனில், யட்சி கடித்து குருதி உறிஞ்சிய தடம் ஏதுமில்லையே. மேலும், ஒரு பெருங்காலம் நைஷ்டிக ப்ரம்மச்சாரியாக இருந்த பேரிளையவர்களை யட்சியர் பின் தொடர்வது அலாதியன்றோ .
அவருக்கு மீண்டும் அற்ப சங்கை தீர்க்காமல் வயிறு வலித்தது. அண்ணான் அக்கச்சியரிடம் சிறுநீர் கழிப்பதைப் பற்றிப் பேசுவது சீலமன்று என்று இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லைதானே.
அவர் தொண்டையைச் செருமிக்கொண்டு கூறியது – என்ன பயணமோ சேருமிடமும் தெரியாது போகும் வழியும் புலப்படாது அந்தகாரத்தில் அமர்ந்தபடி அற்பசங்கை தீர்த்துக்கொள்ள யாரோ உதவிடக் காத்திருக்கிறேன்.
ஓ குயிலி உன் உண்மையான பெயர் அதுவோ வேறே எதுவோ அடி வானம்பாடி இப்படியுமா பெயர் வைத்துக்கொண்டு பத்து கிரகம் சூரிய சந்திரன் போய்வரும் பரபரப்போடு சதா அலைந்து கொண்டிருக்கும் சிறுமியே, சங்கை தீர எங்கே போகணும்? இருட்டில் கிழக்கு மேற்கு தெரியவில்லை.
அண்ணாரே பின்னால் பாரும் என்று வானம்பாடி குரல் அவர் காதருகே ஒலிக்கத் திரும்பிப் பார்த்தார். கழிவறைத் தொகுதி அங்கே வந்திருந்தது. அவர் எழுந்து தள்ளாடி அதை நோக்கி நடந்து போக அவசரமாக அவரிடம் குயிலி சொன்னாள்.
அங்கே போன காரியம் மட்டும் முடித்து வந்தால் போதும்; வேறு கதவுகளோ பலகணியோ தட்டுப்பட்டால் அவற்றை இயக்கிப் பார்க்க வேண்டாம். கருந்துளை பின்னால் இருக்கலாம் காலமும் தூரமும் இல்லாப் பெருவெளியில் உறிஞ்சப் படலாம்.
அவள் தெளிவான கூடவே அன்பான குரலில் சொல்ல மருத்துவர் தன் படுக்கையில் அமர்ந்தார். அற்ப சங்கை சூரிய மண்டலத்தில் சுக்கிரனையோ செவ்வாயையோ நோக்கி என்னைச் செலுத்தி பிரபஞ்சவெளியில் சங்கை தீர்க்க வழி சொல்லுமோ? அத்தனை உலகளாவிய நீர்பிரிதல் எனக்கு வேண்டாம்
June 12, 2023
சரவணன் மாணிக்கவாசகம் மதிப்பீடு – தினை அல்லது சஞ்சீவனி நாவல்
திரு சரவணன் மாணிக்கவாசகம் நாவல் தினை அல்லது சஞ்சீவனிக்கு எழுதிய மதிப்புரை
———————————————————————————–
முழுநீள Fantasy நாவல்கள் தமிழில் வந்திருக்கிறதா தெரியவில்லை. ஆங்கிலத்தில் Fantasy genre மட்டுமே படிக்கும் வாசகர்கள் உண்டு. ஆறு தலைகள், ஆயிரம் கைகள், சூரிய பகவானின் ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்ற Fantasyகளைக் கேட்டு வளர்ந்தவர்கள் தான் நாமும். புனைவில் Fantasy அம்சம் கலக்கையில் லாஜிக் என்பது இல்லாது போய் எதுவும் சாத்தியம் என்றாகி விடுகிறது. இவருடைய முந்தைய நாவலான மிளகு கூட Fantasy கலந்ததே, ஆனால் அதில் வரலாறு தான் முக்கிய பங்கு வகிக்கும்.
காலப்பயணம் என்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டில் H G Wellsல் இருந்து யாரேனும் தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருக்கிறார்கள். இந்த நாவலில் ஐம்பதாம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்கு, பின் அங்கிருந்து இருபதாம் நூற்றாண்டிற்கு, பின் மீண்டும் ஐம்பதாம் நூற்றாண்டுக்கு. மூன்றாம் நூற்றாண்டுவாசியைத் தூக்கிக் கொண்டு வரும் பயணத்தில் எதிர்பாராமல் இருபதாம் நூற்றாண்டு மனிதனையும் ஏற்றிக் கொண்டு வர வேண்டியதாகிறது.
மனிதர்கள் பலருக்கு இருக்கும் நிறைவேறா ஆசைகள் பறப்பது, முடிவடையா போகம், சாகா வரம். இந்த மூன்று ஆசைகளுமே இந்த நாவலில் நிறைவேறுகின்றன. எழுத்தாளர்களின் ஆழ்மனதில் ஏதோ ஒன்று பதிந்திருந்து அவர்கள் அறியாது வெளிப்படும். இந்த நாவலிலும் எம்டன் குண்டு வீசும் சம்பவம் நிகழ்கிறது. ஒரு வயதுக்கு மேல் இருபது, முப்பதுவயதுப் பெண்கள் பெரும்பாலும் ஈர்ப்பதில்லை. நாவலில் அடிக்கடி நாற்பத்தைந்து வயதுப் பெண்களுடன் சேர்வது வருகிறது.
Cloning technologyஐ ஐம்பதாம் நூற்றாண்டில் சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். மனிதர்களிடமிருந்து அதிகாரத்தை, தேள்களும், கரப்புகளும் கைப்பற்றிக் கொள்கிறார்கள், மூன்றாம், நான்காம் உலகப்போர்களைத் தாண்டியும் வாழ்ந்ததால். Banana Republicல் பெருந்தேளார் சர்வாதிகாரியாகிறார். இருவர் மனதுக்குள் பேசும் advanced telepathy வருகின்றது. Queer relationship இருபெண்களிடையே நடக்கிறது. பல விஷயங்களும் அடக்கப்பட்ட பெட்டி இந்த நாவல்.
ஏராளமான சம்பவங்கள் நடந்தும் முன்னுக்குப்பின் முரணாணவை எதுவுமே இந்த நாவலில் இல்லை. இரண்டாவது Fantasyஐ மட்டும் நம்பாது Scientifical factsம் நாவலில் கலந்திருக்கின்றன.
———————————————————————————-
முழு மதிப்புரை வாசிக்க இங்கே சொடுக்கவும்
நாவல் மதிப்புரை – தினை அல்லது சஞ்சீவனி
நன்றி திரு சரவணன்
June 11, 2023
கோழிக்கோட்டு சாமுத்ரியும் குறுமிளகும் – பெருநாவல் மிளகு சிறு பகுதி
பெருநாவல் மிளகு – சொல்வனம் இணைய இலக்கிய இதழில் இந்த வாரம்
இம்மானுவல் பெத்ரோவை இந்துஸ்தானத்துக்கு போர்த்துகல் தேசத்தின் தலைமை அரசப் பிரதிநிதியாக நியமித்து அரசராணை வந்து சேர்ந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அது சம்பந்தமான பரபரப்பு ஓய்ந்தபடியாக இல்லை.
அவரை சந்தித்துப் பேச, இந்துஸ்தானத்துக்கு போர்த்துகல்லில் இருந்து பல தரத்தில் உத்தியோக நிமித்தம் வந்திருக்கும் பிரமுகர்கள் நிறையப்பேர் ஹொன்னாவருக்கு வந்து போகிறார்கள்.
தில்லியில் முகல்-எ-ஆஸம் மொகலாய சக்கரவர்த்தி அக்பர் அரசவைக்கு போர்த்துகல் பிரதிநிதியாக உள்ள பால்தஸார் ட சில்வா முதல் திருவிதாங்கூர் அரச அவையில் லிஸ்பனிலிருந்து பங்குபெறும் ராஜ்ய பிரதிநிதி ஜோஸ் பிலிப்போஸ், கொச்சி பிரதிநிதி ஜியார்ஜ் புன்னோஸ் வரை வந்து காத்திருந்து சந்தித்து மரியாதை செய்து திரும்பப் போகிறார்கள்.
ஒவ்வொருவரும் இரண்டு வாரம், மூன்று வாரம் என்று நீண்ட நெடும்பயணமாக வந்து, உத்தர கன்னடப் பிரதேசத்தில் பெத்ரோவைக் சந்தித்து விட்டு, அரபிக்கடல் இந்தியப் பெருங்கடலோடும், வங்காள விரிகுடா சமுத்திரத்தோடும் ஒன்று கலக்கும் குமரித்துறை வந்து சேர்கிறார்கள். அங்கிருந்து புறப்பட்டு மதுரையும் ராமேஸ்வரமும் பார்த்து விட்டு
ஊர் திரும்புகிற திட்டத்தில் வந்து போகிறார்கள்.
தென்னிந்தியாவில் போர்த்துகீசியர்களின் இருப்பு வட இந்தியாவில் இருப்பதைவிட அதிகம்தான் என்பதால் இங்கே அவர்களுடைய சிநேகிதர்கள், உறவில் பட்டவர்கள் இப்படியானவர்களைச் சந்தித்துப் போகவும் இந்தப் பயணத்தை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துகிறார்கள்.
பெத்ரோ வீட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் கொண்டு வந்து அன்பளிப்பாக பெத்ரோவுக்குத் தரப்பட்ட இனிப்புகளும், கலைப் பொருட்களும், உடுக்கவும், போர்த்திக் கொள்ளவுமான ஜரிகை சேர்த்த, பட்டும் பருத்தியும், சீன வெல்வெட்டுத் துணிகளுமாக நிறைந்திருக்கின்றன.
பெத்ரோவின் மனைவி மரியா போன மாதமே தாய் வீட்டிலிருந்து ஹொன்னாவர் திரும்பி வந்திருக்க வேண்டியது தாமதமாகி, வரும் மாதம் தான் வர இருக்கிறாள். பிறந்த குழந்தை அவளுடைய ஆரோக்கியத்தை சார்ந்திருப்பது தீவிரமாகத் தேவைப்படுவதால் தாயும் சேயும் இன்னும் மருத்துவர் கண்காணிப்பில் தான்.
ஈதிப்படி இருக்க, பதவி உயர்வு கிடைத்ததும் பெத்ரோ துரை மாதாகோவிலுக்குக் கூட வழிபடப் போகவில்லை. மிர்ஜான் கோட்டைக்குச் சென்று மிளகு ராணி சென்னபைரதேவியவர்களிடம் செய்தி பகிர்ந்து, மகாராணியின் வாழ்த்துகளைப் பெற்றுத் திரும்பினார். ஆனைத் தந்தத்தில் செய்த நீளமான படகும் படகோட்டிகளுமாக அற்புதமான சிற்பத்தை மிளகு ராணி அன்பளிப்பாக அளித்தது தன் மீது அவருடைய தனிப்பட்ட அன்பைக் காட்டியதாக நினைத்து நினைத்துப் பேருவகை அடைந்தார் பெத்ரோ.
”இந்துஸ்தானம் முழுமைக்குமான போர்த்துகீஸிய அரசப் பிரதிநிதி என்பது நல்ல பதவி தான்” சந்திப்பின் போது மகாராணி கூறினார். “இந்துஸ்தான் முழுவதும் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள் சென்னா அடுத்து. அப்போது தான் இந்துஸ்தானை அறியப் பயணம் செய்ய பெத்ரோ திட்டமிட்டார்.
இந்திய நாடு முழுவதும் சிறிது சிறிதாகப் பயணம் போய் அங்கங்கே பேரரசர்களையும், சிற்றரசர்களையும் கண்டு பழகி நன்னம்பிக்கையும் நல்லிணக்கமும் தேடி வர முனைப்பாக இருக்கிறார் அவர்.
June 8, 2023
வடக்கிருக்க இருட்குகை புகுந்த மருத்துவர் – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி
குகை. குகைக்குள் இருந்து இடமும் வலமும் பாதை பிரிந்து இன்னும் இரண்டு குகைகள். அவற்றில் ஒன்றில் பிரவேசிக்க தண்ணீர் குகையின் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இந்தக் குகையைக் கடந்தால் அந்தகாரம் தான்.
இருள் பிரபஞ்ச இருள்பொதியோடு இணைந்து பிசையப்பட்டுத் தனிமை இழக்கக் கூடும். இடது பக்கம் பாதை பிரியும் குகைக்கு மேலே சிறு பாறை நகர்வு வழியே மறையும் சூரிய வெளிச்சம் ஒரு கம்பித் தாரையாக உள்நுழைந்து கீழே கசிந்து திடமாக நிற்கிறது,
மருத்துவர் அந்த கிரணத்தை ஆவலோடு பிடித்து மேலேறப் பார்க்கிறார். கை மீது ஒளி பூசி நிற்கிறவரின் தலைக்கு மேல் அந்த ஒளி படிந்து மேலே எழுகிறது. அவர் திரும்பிப் பார்க்கிறார்.
ஒன்றிலிருந்து ஒன்றாக எத்தனை குகை கடந்து, எந்தக் குகையில் தொடங்கினேன் என்பதே நினைவின்றி, ஓரத்துக் காற்றும் சின்னஞ்சிறு வெளிச்சமும், படிகம் போல் சுத்தமாகக் கசிந்து வடியும் நீரும் அவரிடம் சொல்கின்றது போல் உணர்கிறார் –நாங்கள் உன்னோடு இல்லை. நீ எங்களோடு இருக்கிறாய் .
தோளில் மாட்டிய சஞ்சியில் கொண்டு வந்த சேமச் செப்பு கூட வைத்திருந்த வெங்கல நடராஜர் உள்ளங்கையகலச் சிறு சிற்பத்தோடு மோதி நலம் விசாரித்து ஓரம் நகர்கிறது. நலமான நடராஜர் ஆடிக்கொண்டிருக்கிறார்.
சஞ்சியில் கை நுழைத்து, எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வந்த இரட்டை கதலிப் பழங்களை வெறுமனே தடவிப் பார்க்கிறார்.
பசித்தால் உண்ணலாம். எத்தனை தடவை? பசி எப்படி வரும்? வைராக்கியம் கொண்டு தானே பசியும், பெயரும், புகழும், ஆரோக்கியமும், பொன்னும் பொருளும் துறந்து வந்தது.
இனியும் உணவு எதற்கு? இருக்கட்டும். எனக்கு வேண்டாவிட்டால் வேறு யாருக்காவது பயன்படாது போகாது. இந்தக் குகைச் சிக்கலில் யார் வரப் போகிறார்கள்? எப்படி வந்து எப்படி எங்கே போகப் போகிறார்கள்?
எல்லாம் வெறுத்து என்னைப் போல் யார் இங்கே வருவர் என மருத்துவர் யோசிக்க, மனதின் மூலையில் ஆயுசு நீட்டிப்பு மருந்து சஞ்சீவனி வைத்த சம்புடம் உருள்கிறது.
ஊருக்கெல்லாம் ஆயுள் வளர மருந்து கொடுத்தாயே உனக்குக் கொஞ்சம் வாயிலிட்டு விழுங்கினாயா? முன்னோர்கள் சொன்ன சொல் பொய்யாக இருக்க முடியாது. ஆயுள் நீட்டும் மருந்தென்றால் நீட்டாமல் இருக்காது. அறிவியலை சுக்கைத் தட்டிப் போட்டுக்கொண்டவுடன் குதத்தைத் தொட்டு நரகல் வந்துவிட்டதா எனச் சோதிப்பது நடக்குமா?
நடக்காது தான். ஆனால் உடலில் சின்னஞ்சிறு மாறுதலைக் கூட, அதுவும் தன்னுடலில் மாற்றம் வந்தால் உணர முடியாமல் போகுமா?
June 6, 2023
ஏமப் பெருந்துயில் மண்டப வருகையாளர்களும் செயல்பாடும்
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி
ஏமப் பெருந்துயில் மையத்தைச் சுற்றிச் சிறு புகைப்பட கேமிராக்கள் கொண்டு துயர் களைதலை இருபத்துநாலு மணி நேரமும் கண்டு குறிப்பெழுத ஊழியருண்டு. இவற்றில் மிகச் சிறப்பானவை அதிக ஊதிய உயர்வைப் பெற்றுத் தர வல்லவை.
அஞ்சலி செலுத்த வராமல் போனாலோ, வந்து, கடனே என்று அஞ்சலி செலுத்திப் போனாலோ, கண்காணிப்பு ஊழியர்கள் அரசுக்கு உடனே தகவல் அனுப்பிவிடுவார்கள். அப்புறம் எதுவும் நடக்கலாம். அடுத்த ஆண்டு அஞ்சலி செலுத்த வராமல் போவதும் அவற்றில் ஒரு நடப்பு.
இன்றைய அஞ்சலி என்ற பெயரில் அரசு தொலைக்காட்சியில் தினம் ஒரு மணி நேரம் அன்றைக்கு நிகழ்ந்த அஞ்சலிகளில் நேர்த்தியானவை ஒளிபரப்பாகும்.
போன வாரம் கையில் கத்தி எடுத்து ஹரகிரி என்னும் ஜப்பானிய முறையில் தன்னுயிர் போக்க முற்பட்டு உடனே தடுக்கப்பட்ட அறுபத்தெட்டு வயது முதியவரின் அரச விசுவாசம் காட்டப்பட்டு நாடு முழுவதும் பாராட்டப்பட்டுள்ளது.
சிரத்தில் ஷவரம் செய்து மயிரை ஒரு தேள் படுத்திருப்பதுபோல் வழித்தெடுத்து அஞ்சலி செலுத்த வந்த ஒரு முப்பது வயதுக்காரன் எல்லோராலும் கைதட்டலோடும் பொன் காசுகளை அன்பளித்தும் கொண்டாடப் பட்டான். இன்னொருத்தன் இரண்டு தேள்கள் கலவி செய்வதாக தலைமயிர் மழித்து வந்ததற்கு என்ன பரிசு கிடைத்தது என்று இன்னும் தெரியவில்லை.
முகச் சவர பிளேட்களை வரிசையாக விழுங்கி அரசே நானும் உம்மோடு உமக்கு மறு உலகில் பணி செய்ய வருகிறேன் என்று கூவி உயிர் களைய முற்பட்ட நடுவயது குடிமகனின் விசுவாசம் சமூக வலைத் தளங்களில் அவரை ப்ளேட் அங்கிள் என்று செல்லமாகக் கூப்பிடப்படும் அளவு பிரபலமானது. அந்த ப்ளேட் கம்பெனி நிகழ்ச்சி வழங்குகிறவராக blade uncle-க்கு நிதியளிக்க அடுத்து முன்வந்தது.
கலவி செய்யும் தேள்களாக மயிரைச் சிரைத்து வந்தவனுக்கு பத்து மானிட ஆண்களுக்கு சர்வாங்க சவரம் செய்துவிடத் தண்டனை வழங்கப்பட்டது.
அடுத்த ஏமப் பெருந்துயில் அறை தண்டனை வழங்கப்பட்டு தற்காலிகமாக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தப்படுகிறவர்களுக்கானது. போன வாரம் தொலைக்காட்சிச் செய்தியாளினி பெருந்தேளரசு என்று அறிக்கையில் இருந்ததை பெருந்தோலரசு என்று தவறாக உச்சரிக்க, அவளை மூன்று நாள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தி அவள் உறங்கும்போது இரு செவியருகிலும் பலமான தாளங்களைத் தொடர்ந்து முழக்கினர்.
தொலைக்காட்சி செய்தியாளினி கிட்டத்தட்ட சவ்வு கிழிந்த காதுகளைப் பொத்திக்கொண்டே மூன்று நாள் சென்று எழுந்தார். ஒரு வாரம் அடுத்து அவள் முழு குணம் அடைய ஆனது. இனி அவள் கனவிலும் தேளரசரைத் தவறாகப் பலுக்க மாட்டாள், எனில், உச்சரிக்க மாட்டாள். தண்டோரா முரசுச் சத்தம் இல்லாமல் உறங்க அவளால் இனி முடியாமல் போனதும் குறிப்பிடப்பட வேண்டியது.
அடுத்த மூன்று ஏமப் பெருந்துயில் அறைகளில் மகா மகா சக்கரவர்த்திகளின் பார்வையில் பட்டு, அவர் கண்டதும் காமுற்ற ஆண்களும் பெண்களும், அவரின் ஆண், பெண் ஆசை நாயக நாயகியர்களும் ஆழ் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் அங்கே துயில்வது, அரசருக்கு அவர்களோடு இணை விழைவு ஏற்படும்போது அதை நிறைவேற்றித்தரவாகும்.
இந்த சேவை, சக்கரவர்த்திகள் இந்த அழகன் அல்லது அழகியோடு இன்று இரவு கூட வேண்டும் என்று உத்தரவு அளித்த ஒரு மணி நேரத்தில் அந்த ஆசை நாயகி அல்லது நாயகன் அரச உறவை எதிர்பார்த்து இருக்கும் படியாக விரைவுப் பணியாகும்.
June 4, 2023
ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறைவோரும் மற்றோரும்
நாவல் தினை அல்லது சஞ்சீவனி-யில் இருந்து
ஏமப் பெருந்துயில் மையத்தில் மொத்தம் எட்டு பேழைகள் மின்சாரக் குளிரை உயிர்த் தேனாகக் கொண்டு கிட்டத்தட்ட இறப்பு நீக்கி உறைந்து கிடந்தன. எட்டில் ஒன்று மட்டும் பாதி தேளுடல் கொண்ட மாற்றுடல் பெண்.
இடுப்புக்கு மேல் மனுஷி உடல் வனப்பாக மலர்ந்திருந்தது. கீழே சிவப்பு உக்ரமாக உயிர் பறிக்கும் செந்தேளுடலோடு கால்கள் சிறு மயிர் பூத்து மூடித் தளர்ந்து கிடந்தன.
கண்ணாடியும் தேறலியமுமாக*** நீண்டிருந்த பெட்டிக்குள் தேள்ப்பெண் உடலின் உறுப்புகள் ஓய்வெடுத்தபடி அவசியமான அளவு மட்டும் இயங்கின. துர்வாடை உடலின் சகல துவாரங்களில் இருந்தும் மெழுகு போல் சொட்டியது. பேழைக்குள்ளிருந்து நீளமாக வெளியேகும் சன்னமான குழாய்கள் காற்றழுத்தம் மிகுத்துத் தள்ள சுமந்து வந்த கழிவைப் பேழையை ஒட்டி வெளியே பிரிந்தன.
ஏமப் பெருந்துயில் ஆய்வு என்று அடுத்த ஆய்வுக்கான தேதி பேழைக்குப் பக்கவாட்டில் பொறித்திருந்தது. அந்தத் தேதி ஒரு மாதம் சென்று ஏற்படும் என்று பொறித்த தகவல் சொன்னது.
வாசலுக்கு அருகே அமைந்த நோய்த் தடுப்பு மிகுந்த இந்த ஆழ்வுறக்க அறைக்கு அடுத்து உள்நோக்கிக் கதவு திறக்கும் அறையில் கை, கால், காதுகள், குறிகள் என்ற பிறப்புறுப்புகள் என்று அவயவங்கள் கண்ணாடிச் சுவருக்கு அப்புறம் வெற்றிடம் இடைபட ரகவாரியாகக் குவிக்கப் பட்டிருந்தன.
அந்தக் குவியல்களை இயங்க வைக்கும் மின்னுயிர் காந்த ஈர்ப்பு அலை சுற்றிச் சுழன்று வரும்போது, சிறிதுபோல் அழுத்தம் அதிகரிக்க, கைகளும், கால்களும் துள்ளி எழுந்து ஆடி அடங்குவதை ஏமப் பெருந்துயில் குறித்து அறியாதவர்கள் குழு நாட்டிய நிகழ்வாகக் கருதி மயங்குதல் இயல்பாகும்.
அதற்கு அடுத்த ஏமப் பெருந்துயில் அறையில் தற்போதைய பெருந்தேளர் மகா சக்கரவர்த்திகளின் தந்தையாரின் உடல் மின்னுயிர் கொண்டு சீராகப் பேணப்பட்டு வருகிறது. இந்தக் காலத்துக்கு அடுத்து வரும் காலம் எதிலும் இறந்தவர்கள் உயிர்க்க வழி கண்டால் பழைய அரசரின் உடல் உயிர்பெற்று மறுபடி ஆள வருவார் என்ற நம்பிக்கைதான் இதற்கு அடிப்படை.
*** தேறலியம் Polyvinyl material
அந்த அறைக்கு மட்டும் சிறு தேளரும் கரப்பரும் பள்ளியிலிருந்து வந்து பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிப் போவது தவறாது நடக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் ஆண்டிலொரு முறை அஞ்சலி செலுத்துவது கட்டாயமானது.
அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே நடைபாதையில் புரண்டு தலையைக் கல்லில் மோதி ஓவென்று அலறி மண்டியிட்டுப் பழைய அரசர் நேற்றுத்தான் இறந்தது போல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து துயர் களைவது எவ்வளவு அதிகம் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் இடமாற்றலும் நிச்சயமாகும்.
June 2, 2023
மருத்துவர் ஆயுள் மருந்தை உருவாக்குவது பக்கத்து கிராமம் சிறு நகரம் என எங்கும் பரவியது. அது பல வடிவாகத் திரிந்தது.
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து
தினை மத்தியாங்கம் ஆ
சிறு நகரக் கற்கோட்டையில் சாவைக் குணமாக்க மருந்து கண்டுபிடித்து விட்டார்கள். அதைப் பரிசோதிக்க பத்து பேரை, ஆளுக்கு நூறு பொன் கூலிக் காசு கொடுத்து, ஆயுசும் ஐநூறு வருடம் நீடிக்கப்படுகிறார்கள்.
பிரசவ ஆஸ்பத்திரி தாதிகளில் இருந்து சுடலையில் பிணம் சுடும் வெட்டியான் வரை வேறேதும் பேச்சு இல்லை. வீட்டில் வளர்க்கும் கிளிகளும் மருந்து மருந்து என்று மந்திரமாக உச்சரிக்கின்றன. கோட்டைக் கதவுகள் அடைத்து மூடப்பட்டன.
மருத்துவர் ஆயுள் மருந்தை உருவாக்குவது பக்கத்து கிராமம் சிறு நகரம் என எங்கும் பரவியது. அது பல வடிவாகத் திரிந்தது. ஒரு திரிபு உடலின்றி உயிர் மட்டும் நீடிக்க மருந்து வந்ததாகச் சொன்னது.
மற்றொன்று குரங்குகளின் உயிரை மனுஷர்களுக்கு மாற்றி வைத்து அவர்களை மார்க்கண்டேயர்களாக்கினதாக எக்காளம் முழக்கியது.
வேறொன்றோ மருந்து உண்ண ஆயுள் நீடிக்கும், எனில், உடல் சுருங்கி சிட்டுக்குருவி ஆகிவிடும் என்று பயமுறுத்தியது. அது வந்த சுவட்டிலேயே அடுத்த வதந்தி மருந்து உண்ண உடலும் பூரிக்கும் என்று எதிர்காலத்தில் எல்லோரும் சிறு குன்றுகளாக நகர்வர் எனக் கூறின.
உடல் குரங்காக ஆயுள் ஐநூறாண்டாவதை இன்னொரு திரிபு சொல்லியது. மருந்து உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் என்ற வதந்தியை நூறு பேராவது நம்பினார்கள்.
எது எப்படியோ, வெளியூரார் வராமல் இருக்கக் கோட்டைக் கதவுகள் அறைந்து சாத்தப்பட்டன. அவர்களும் நம்மவர்கள் தானே என்று வெளிமதில் பக்கம் சூழ்ந்து நின்றவர்களைப் பற்றிப் பரிதாபம் காட்டிய மனிதாபிமானிகள் இருந்தார்கள். அவர்களை இழுத்துப்போய்க் கோட்டை வாசலுக்கு அந்தப்பக்கம் தள்ளிவிட்டுப் பிரச்சனை தீர்ந்ததாக அரசு தரப்பில் மனநிறைவு தெரிவிக்கப்பட்டது.
இது வெளிவட்ட நிகழ்வுகளின் தொகுப்பு என்றால், நகருக்குள் நிலைமை வேறு மாதிரி இருந்தது.
மருந்து காய்ச்சி முடித்தவுடன் வியர்வையும் கையில் பிசுக்காக மருந்து ஒட்டியிருந்ததையும் களைய ஆற்றுக் கரையில் ஊற்று போட்டு அதில் இறங்கி ஒரு மணி நேரம் குளித்தார் மருத்துவர்.
பகல் சாப்பாட்டையும் ராத்திரி சிற்றுண்டித் தீனியையும் ஒரே இருப்பில் உண்ணப் போகிறேன் என்று அடுத்து மனைவியிடம் கூறியபோது அவள் இன்னொரு தடவை ஆச்சரியப்பட்டாள்.
ஓலைச் சுவடி படித்துப் படித்து தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு குளிகத் தனமாக ஏதாவது செய்ய முனைந்திருக்கிறீர்கள். ரெண்டு வேளை சாப்பாட்டை ஒரே தடவை எப்படி உண்ண முடியும்? அவள் கேட்டாள்.
அரசரைச் சந்திக்கப் போகிறேன். அவர் பேச ஆரம்பித்தால் மணிக் கணக்காகப் பேசுவது மட்டுமில்லை, சாப்பிட ஒரு கை அவல் பொரி கூடக் கொடுக்க மாட்டார். குடிக்கத் தண்ணீர் மட்டும் போனால் போகிறது என்று கொடுக்கச் சொல்வார். இப்படி நிலைமை இருக்க, எளிதாக காலையில் பேச ஆரம்பித்து சாயந்திரம் வரை பிடுங்கி எடுத்து விடுவார் என்பதால் பசிக்காமல் இருக்கச் சாப்பிட்டுப் போவேன் என்று மருத்துவர் விளக்கம் செய்து உண்டு போனார்.
அரசர் மருத்துவர் வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு முகமன் கூறிப் பாராட்டியது இந்த வகையில் இருந்தது –
ஆயுள் அதிகம் ஏற்படுத்த மூலிகைகள் பயிரிட வேண்டும் தானே? மைதானத்தில் பயிரிட்டுக் கொள்ளுங்கள் அங்கே காலைக்கடன் கழிக்க யாரும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
அரசர் தாராளம் காட்டினார். மிக்க நன்றி என்று ஒரு தடவை சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து எழுந்து, இன்னும் சில கோரிக்கைகளும் உண்டு. சமூகம் அனுமதித்தால் சுருக்கமாகாச் சொல்வேன் என்றார் மருந்துவர்.
அதென்ன சுருக்கி உரைத்தல்? உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதெல்லாம் விவரித்துச் சொல்லுக என கம்பீரம் காட்டிய அரசர் மருத்துவன் ஐநூற்றுக் குறிஞ்சி என்று சொல்லி வரும்போது உறங்கி விட்டார்.
எல்லோருக்கும் பெருமாள் கோவில் துளசி தீர்த்தம் போல் கொடுங்கள்.
அவர் சொல்லியது எழுந்தபோது தான்.
இந்த அபூர்வ மருந்தை இன்றைக்கே வீடு வீடாகப் போய்க் குடிக்கத் தரலாம் தான். ஒரு சிறு பிழை இருந்தாலும் கூட மருந்து வேலை செய்யாது. அது மட்டுமில்லை, வேறு ஏதாவது விளைவை ஏற்படுத்தலாம். ஆகவே ஒரு பத்து பேரைப் பயன்படுத்தி தீர சோதனை செய்து பார்த்து விடுவது நல்லது என்றார் மருத்துவர்.
அதிலென்ன சிரமம்? அரசர் போகட்டும் போகட்டும் என்று கையை வைத்து அபிநயம் பிடித்தார். அந்தப் பத்துப் பேர் என்று ராகம் இழுத்தார் மருத்துவர். யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் என்று அனுமதி கொடுத்தார் அடுத்து தாராள மனதோடு.
இப்படி மக்கள் தொகைப் பட்டியலில் சகட்டுமேனிக்குப் பெயர் தேர்ந்தெடுத்தால் அவர்கள் வருவார்களா?
சந்தையில் கத்தரிக்காய் வாங்குவது போல் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்ல, அரசர் சீறினார்.
ஆயுசு கூட்டும் மருந்து உண்டாக்க கத்தரிக்காயும் வேண்டுமென்றால் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே. அது இல்லாமல் புனுகுபூனைக்குக் குதத்தில் கசிந்து வராது என்று ஏதோ பேசிக்கொண்டு போகிறீர்.
அப்படியில்லை அரசே, மருந்தை ஐயம் திரிபற சோதிக்க ஒரு பத்து பேர் பத்து பேர் மட்டும், மருத்துவர் சொல்லி முடிக்கும்முன் யார் வேண்டும் உமக்கு? அரசி, அமைச்சர்,காரியக்காரர்கள், வாத்தியம் வாசிக்கிறவர்கள் யார் வேண்டுமானாலும் சோதனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் மீண்டு வந்தாலும் சரி, குரங்காக மாறினாலும் சரி. விளைவு தான் முக்கியம் என்று ஆள் இல்லாத உள்வீட்டில் ராஜபார்வை பார்த்தார் அரசர்.
May 30, 2023
தினை அல்லது சஞ்சீவனி – ஆழிப் பேரலை அடித்துப் போன பெருவெளியில் மூலிகை தேடும் படலம்
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

மருத்துவர் பகடு பூட்டிய ரதம் செலுத்தி, என்றால், எருது பூட்டிய வில்வண்டி ஏறி புறநகர் வந்து சேர்ந்தபோது குற்றுச் செடிகள் முளைத்த தரிசு முழுக்கக் குதங்கள் உயர்ந்திருக்கக் கண்டாரேயன்றி மூலிகை ஏதும் முளைத்திருக்கப் பார்த்திருந்தாரில்லை.
ஆயுள் நீட்டிக்கும் மருந்து உண்டாக்கத் தேவையான ஐந்து மூலிகைகளில் இரண்டு, மழை பெய்த ராத்திரிகளில் மலர்ந்து விடியலில் உதிர்ந்து போகும் வகையானவை. மீதி மூன்றில் இரண்டு, சகஜமாகக் கிட்டும் நாயுருவியும் நெல்பரணியும். ஏகமாகக் கிடைக்கும், தேடிப் போகும்போது தான் காணாமல் போகும்.
அப்புறம் அந்த ஐந்தாவது மூலிகை, அதன் பெயரைக்கூட சத்தம் போட்டுச் சொல்லக் கூடாது. அபூர்வமான மூலிகை அது. எவ்வளவு அபூர்வம் என்றால் ஐநூறு வருடத்துக்கு ஒரு முறை தான் பூப்பூத்து முளைவிடும்.
ஆக அந்த ஐநூறு வருடக் குறிஞ்சி பூத்து இலைவிட்டுச் செழிக்கும் காலத்தில் தான் ஆயுள் நீட்டிக்கும் மருந்து காய்ச்சப்படும். எல்லாமே விரைவாக நடந்து விட வேண்டியது. இல்லையோ, குட்டிச்சுவராகப் போய்விடும் எடுத்த முயற்சி எல்லாம்.
இன்னொன்று அந்த ஐநூறு வருடக் குறிஞ்சியைச் சித்திரத்தில் கூட யாரும், மருத்துவர் அடக்கம், பார்த்ததில்லை. இலை நீலம், அகலம் கையளவு, நீளம் விசும்பளவு என்று சித்தரித்த வெண்பாவில் அடையாளம் ஓரளவு தெரியும். எனில் விசும்பளவு நீளம் என்றால் ஆகாயம் வரை நீண்டிருக்குமா?
மருத்துவர் மனதில் மருகினார். அப்போது தான் நினைவு வந்தது விசும்பு தேவலோகமும் தான் என்று. வானம் பார்த்து மல்லாக்க மலர்ந்திருக்கும் மூலிகை. அந்த அடையாளம் மட்டும் போதாதே.
பின், விசும்பென்றால் இதுவும் தான். சன்னமான அழுகை. கண்ணீர் பெருக்கி சத்தமின்றி அழுவது. அந்த மூலிகை இலையைத் தொட்டால் கண்ணில் நீர் வரும்.
போதும் இந்த அடையாளங்களோடு அடையாளம் கண்டுவிடலாம். மலையடிவாரத்திலும், தேவைப்பட்டால் மலையும் ஏறி மூலிகைகளைத் தேடுவதை உடனே தொடங்கினார் மருத்துவர்.
அவருடைய தகப்பனார் பச்சையப்ப மருத்துவரும், அவருக்கு அவர் தந்தை வெள்ளைச்சாமி மருத்துவரும் சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று ஐநூறாண்டு காலங்கள், அதாவது ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக இந்த ஆயுசு நீட்டிப்பு மருந்து பயன்படுத்தவே படவில்லை.
மருந்து உருவாக்கியதே அதற்கும் ஐநூறு ஆண்டு முன்பு சரியாகச் சொன்னால் முதற்சங்க காலத்து லெமூரியா கண்டத்தைக் கடல் கொண்டு போன ஆழிப் பேரலை காலத்தில் தான்.
அதன்பின் கோகர் மலையில் உயிர்கள் இறைவன் அருள் கொண்டு மீண்டும் உயிர்த்தன. அவற்றில் மானுட ஆயுளை நீட்டிக்கும் மருந்தை இடைச்சங்க காலச் சான்றோர் உருவாக்கினர்.
அந்த நாகரிகத்தையும், கலாசாரத்தையும், மலைவாழ் உயிர்களையும் அடுத்த சுனாமி ஆழிப் பேரலை அடித்துப் போக, முதல் சங்க நகரும் பள்ளியும் கிராமமும் கடல் திருப்பித் தந்து போனது.
உயிர் நீட்டிக்கும் மருந்து இடைச்சங்க கால உருவாக்கம் என்றாலும் வாய்மொழி விவரங்கள் தவிர எழுதிய ஓலை ஏதும் இல்லை அது குறித்து. அது இப்போது கடைச்சங்க காலத்தில் இடைச்சங்க காலத்துக்கு ஐநூறு வருடம் அடுத்து வாய்மொழியாக நீலன் மருத்துவரிடம் அடைந்தது.
சாரதி, இங்கே பல தரத்தில் குதம் தானுண்டு. மூலிகை பார்க்க பின்னொரு நாள் வரலாம். இப்போது மலைநோக்கிப் பகடு செலுத்து.
மருத்துவர் ரதமேறி அமர பகடுகள் ஜல்ஜல்லெனச் சதங்கை ஒலித்து ஓடத் தொடங்கின
———————————————————–
மலைச் சுவட்டில் புதியதாகக் கொத்திய படிகள் ஏறி மருத்துவர் மலை ஏகினார். மலையோரக் குறுநிலத்தில் கொடுந்தமிழ் உரைவீச்சு நடத்துவோர் மலை சவிட்டி எனக் கூறும் வழக்கம் ஓர்த்தார் எனில் நினைவு கூர்ந்தார்.
May 28, 2023
ஈரமான உட்சுவர் கொண்ட குகைகளில் அலைந்து திரியும் வைத்தியர்கள்
போன வாரம் வெளியாகியுள்ள என் நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இருந்து
குகை. குகைக்குள் இருந்து இடமும் வலமும் பாதை பிரிந்து இன்னும் இரண்டு குகைகள். அவற்றில் ஒன்றில் பிரவேசிக்க தண்ணீர் குகையின் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இந்தக் குகையைக் கடந்தால் அந்தகாரம் தான்.
இருள் பிரபஞ்ச இருள்பொதியோடு இணைந்து பிசையப்பட்டுத் தனிமை இழக்கக் கூடும். இடது பக்கம் பாதை பிரியும் குகைக்கு மேலே சிறு பாறை நகர்வு வழியே மறையும் சூரிய வெளிச்சம் ஒரு கம்பித் தாரையாக உள்நுழைந்து கீழே கசிந்து திடமாக நிற்கிறது,
மருத்துவர் அந்த கிரணத்தை ஆவலோடு பிடித்து மேலேறப் பார்க்கிறார். கை மீது ஒளி பூசி நிற்கிறவரின் தலைக்கு மேல் அந்த ஒளி படிந்து மேலே எழுகிறது. அவர் திரும்பிப் பார்க்கிறார்.
ஒன்றிலிருந்து ஒன்றாக எத்தனை குகை கடந்து, எந்தக் குகையில் தொடங்கினேன் என்பதே நினைவின்றி, ஓரத்துக் காற்றும் சின்னஞ்சிறு வெளிச்சமும், படிகம் போல் சுத்தமாகக் கசிந்து வடியும் நீரும் அவரிடம் சொல்கின்றது போல் உணர்கிறார் –நாங்கள் உன்னோடு இல்லை. நீ எங்களோடு இருக்கிறாய் .
தோளில் மாட்டிய சஞ்சியில் கொண்டு வந்த சேமச் செப்பு கூட வைத்திருந்த வெங்கல நடராஜர் உள்ளங்கையகலச் சிறு சிற்பத்தோடு மோதி நலம் விசாரித்து ஓரம் நகர்கிறது. நலமான நடராஜர் ஆடிக்கொண்டிருக்கிறார்.
சஞ்சியில் கை நுழைத்து, எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வந்த இரட்டை கதலிப் பழங்களை வெறுமனே தடவிப் பார்க்கிறார்.
பசித்தால் உண்ணலாம். எத்தனை தடவை? பசி எப்படி வரும்? வைராக்கியம் கொண்டு தானே பசியும், பெயரும், புகழும், ஆரோக்கியமும், பொன்னும் பொருளும் துறந்து வந்தது.
இனியும் உணவு எதற்கு? இருக்கட்டும். எனக்கு வேண்டாவிட்டால் வேறு யாருக்காவது பயன்படாது போகாது. இந்தக் குகைச் சிக்கலில் யார் வரப் போகிறார்கள்? எப்படி வந்து எப்படி எங்கே போகப் போகிறார்கள்?
எல்லாம் வெறுத்து என்னைப் போல் யார் இங்கே வருவர் என மருத்துவர் யோசிக்க, மனதின் மூலையில் ஆயுசு நீட்டிப்பு மருந்து சஞ்சீவனி வைத்த சம்புடம் உருள்கிறது.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

