இரா. முருகன்'s Blog, page 27

October 5, 2023

மருந்து இது நல்மருந்து அனைவர்க்கும் சேர்வதானது

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்யாயம் 34இல் இருந்து

எல்லாம் சரிதான், மருந்து சேர்மானம், செய்முறை என்ன?

உன்னி நிறைந்த இடங்களில் இது பொது யுகம் CE 5000 காலத்தில் கிடைக்காது என்பதால் CE 300 போய் மாட்டுத் தொழுவங்களில் பூவுலகமெங்கும் சேகரிக்கப்பட வேண்டும். (மேலும்)

அவற்றின் இறகு பர்ர்ர்ர் என ஒலியெழுப்பும் வரை அந்த உன்னிகளும், மிளகு விழுதும் உப்பும் கலந்து காடியோடு சேர்த்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்சப்படும். அடுத்து நூறு தவளைகள் அடுப்பில் ஏற்றி.வேண்டாம் தவளைக் கூச்சல் சகிக்க ஒண்ணாமல் போகும். (மேலும்)

மேலும் இந்த மருந்து குத்திருமலுக்கானது இல்லையே. மருந்து காய்ச்ச மேடை மேல் நான்கைந்து இரும்புச் சட்டிகள் கரியடுப்போ அல்லது போவென்று எரியும் கோட்டையடுப்போ வைத்து கிழக்குப் பார்த்து வைத்து நெருப்புச் சுடரை சிக்கிமுக்கிக் கல்கொண்டு ஏற்றிக் காய்ச்சப்படும். (மேலும்)

மெல்லிய இசை மேடையில் ஒலித்துக் கொண்டிருக்க அடுப்பு பொங்கி வழியும்போது அந்தப் பானைகள் இறக்கி வைக்கப்படும். ஒரு படி மருந்து காய்ச்சினால் இருபது பேருக்கு அதைக் கொடுக்க முடியும்.

எல்லாம் சரி, மருந்து என்ன சுவையோடு இருக்கும்?

பருகிப் பார்த்தால் தான் தெரியும். நான் மின்னணு அமைப்பு, சுவை எனக்குத் தெரியாது.

பின்னே கசப்பா இனிப்பா உப்பா உரைப்பான்னு தெரியாமல் அதை எப்படி விநியோகம் செய்யறது.

கேட்ச் தெம் யங்.

எதுக்கு இந்த பரங்கி பாஷை இங்கே?

You asked for it! ரொம்ப சின்னப் பையன்களாக இல்லாமல் ரொம்ப இளைஞர்களும் இல்லாமல் நடுவாந்திர வயது மாணவர்களைப் பிடிக்கணும். அவர்களுக்கு நல்ல ஆகாரம் கொடுத்து இந்த மருந்தையும் சுடச்சுட ஆளுக்கு ஒரு கரண்டி வாயில் ஊட்டிவிடணும்.

என்ன ஆகும்?

யாருக்குத் தெரியும்?

அப்புறம் ஏன் இத்தனை தடபுடல்?

கஜானாவுக்கு காசு வரும். சஞ்சீவனியையும் அதற்காகக் கட்டி வச்சிருக்கும் பணத்தையும் கொஞ்சநாள் மறந்திருப்பாங்க.

இதைச் செயற்கை அறிவு அமைப்பு திரையில் துப்பியபோது குழலன் அரூபமாக உள்ளே வந்திருந்தான்.

என்ன ஆச்சு, செயற்கை அறிவு அமைப்பு எல்லா திசையிலும் எழுத்து சிதறித் தெரியுதே. கேட்கக் கூடாத கேள்வி எதாவது கேட்டீர்களா என்று சிரித்தபடி பிரதி நீலன் ஆல்ட் க்யூவின் தோளில் தட்ட அவர் விதிர்விதித்து எழுந்தார்.

அவர்கள் பிரபஞ்சத்தில் தோளில் தட்டுவது அவமானப்படுத்துவதாகும் என்று தாமதமாக நினைவு வந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

இதுக்கே இவ்வளவு சாங்கோபாங்கமாக மன்னிப்பு கேட்கறியே கசாப்புக் கடையை வச்சுக்கிட்டு நான் எத்தனை விலங்குகள் கிட்டே தினம் தினம் மன்னிப்புக் கேட்கணும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2023 05:40

October 2, 2023

An interaction with an Artificial Intelligence system -தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

சுவாரசியமான இந்த உரையாடல் என் நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இடம் பெறுகிறது. இந்த வாரம் திண்ணை இணையப் பத்திரிகையில் முழுமையாக வெளியாகிறது’.
———————————————————————————————————————–
போகட்டும். நீ என்ன யோசனை சொல்கிறாய் ஆயுள் நீடிக்க, அதாவது ஆயுள் நீடிக்க ஆய்வு செய்ய?

எனக்கு இது குறித்து யோசனை ஏதுமில்லை.

நாம் நல்ல நண்பர்கள். எனக்காக யோசித்துப் பார்க்கலாமே.

எனக்கு அப்படியான பிரியம், நட்பு, அன்பு போன்ற உணர்வுகள் கிடையாது.

வினோதமான யோசனை இருந்தால் கூட சரிதான்.

எப்படி, மங்களபுரத்தில் தவளை விழுங்குவது போலவா?

பிரதி நீலன் ஆல்ட் க்யூ சுறுசுறுப்பானார். இந்த தவளை விழுங்குவது பற்றி அவருக்குக் கடத்தப்பட்ட அறிவில் ஒரு வாக்கியத்தில் கூறப்பட்டிருந்தது. அவர் அதைப் படித்துவிட்டு, சிரித்துவிட்டு மறந்தும் விட்டிருந்தார்.

மங்களபுரத்தில் வருடம் இரண்டு தடவை இரண்டு குடும்பங்களாக சாமியார்கள் –ஆமாம், அவர்கள் குடும்பத்தோடு இருப்பவர்கள் – இமயமலையின் பனிச் சிகரங்களிலிருந்து வந்து குத்திருமலுக்கு வைத்தியம் பார்ப்பார்கள். ஒரு சல்லிக் காசு தான் வைத்தியருக்குத் தரவேண்டியது.

வரிசையில் விடியல்காலையில் வந்து அமர வேண்டும். ரிஷிபத்னிகள் போல் கூந்தலை இறுக்க வாரி உயர்த்திக் கொண்டை போட்ட இரண்டு ஸ்தூல சரீரப் பெண்கள் பாத்திரங்களில் மூங்கில் மூடி கொண்டு மூடி எடுத்து வருவார்கள்.

மூங்க் கோலோ என்று மந்திரச்சொல் கூறக் கண் மூடி வாய் திறந்திருக்க வேண்டும். திறந்த வாயில் ஒரு தவளை உயிரோடு ஆமாம் உயிரோடு இடப்படும்.

அடுத்த பத்து நிமிடம் நோயாளியோடு கூட வந்த நட்பும் சுற்றமும் அவர் இந்தத் தவளைக் குஞ்சை மென்று தின்ன வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். வாயும் வயிறும் பிரட்டி உண்டது திரும்ப வெளியேறாமல் வந்தால் மறுபடி அதை விழுங்க வைக்க உறவினர்கள் கவனமாக இருக்க வேண்டும். சரியாக விழுங்க வைக்க கருப்பு கோலா பானம் ஒரு மிடறு புகட்டலாம்.

இப்படி தவளை சாப்பிட்ட ஒரு மண்டலத்தில் நோயாளி நோய் குணமாகிறதாக நம்பிக்கை. அதற்கப்புறம் எப்போதாவது, குத்திருமல் திரும்பி வந்தால் ஊர்க் குட்டையில் தவளை பிடித்து உண்ண வேண்டியது தான்.

வருடம் இரண்டு நாள் தவளையை சூப் செய்து குணமான நோயாளிகளுக்கு அதைப் பருகக் கொடுத்தலும் நயம் பயக்கும்.

இந்த தவளை வைத்தியத்தை செயற்கை அறிவு அமைப்பு அதைப் போகிற போக்கில் கோடி காட்டிய காரணம் என்ன?

பிரதி நீலன் ஆல்ட் க்யூ யோசித்துப் பார்க்க அவருக்கு இன்னும் புரியவில்லை. வேறு ஏதாவது எளிய போம்வழி இருக்கக் கூடும்

செயற்கை அறிவு அமைப்பிடம் கேட்டார் – வேறு என்ன செய்யலாம்?

சஞ்சீவனி குடிக்க நாளாகலாம் என்றால் இப்போதைக்கு வேறு ஏதாவது கொடுக்கலாமே.

தவளையா?

கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால் தவளை அத்தனை கோடி கிடைக்காது என்பதால் அவற்றுக்குப் பதிலாக மாட்டு ஈ என்ற உன்னிகளே அவை. மேலும் தவளைகள் பெருந்தேளரின் தேளரசில் கீழ்மட்ட குழு உயிர்ப்பு கொண்ட உயிரினங்கள் என்பதால் அவற்றை வேட்டையாடி மருந்து தயாரிப்பது தவறல்லவா? (மேலும்)

இப்போதைக்கு சகல இன சஞ்சீவனி விலையில்லாததாக அளிக்கப்பட வேண்டும். யாருக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கத் தான் மிகக் கடினமான யோசனை செய்ய வேண்டியிருக்கும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 02, 2023 03:38

September 27, 2023

இரா.முருகன் படைப்பு உலகம் – நற்றுணை கலந்துரையாடல்

கடந்த ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 அன்று கிட்டத்தட்ட முழுநாள் கருத்தரங்கமாக என் படைப்புகள் நண்பர்களால் விரிவாக அலசி ஆராய்ந்து விவாதிக்கப்பட்டன.

கருத்தரங்கில் பேசிய, கேட்ட அன்பு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி,

அருமை நண்பர் ஜெயமோகனின் நண்பர் குழாத்தில் பட்ட இலக்கிய ஆர்வலர்களான இளையோர் ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்து நடாத்தி, கருத்தரங்கக் காணொளியை இணையத்தில் ஒளிபரப்பி, எந்நேரமும் காண இணையத்தில் வைத்து அமர்க்களப்படுத்தி விட்டார்கள். அவர்களுக்கும் ஆசான் ஜெயமோகனுக்கும் என் மனமார்ந்த நன்றி.

ஜெயமோகன் அவர்களின் இணையத் தளத்தில் இந்த நிகழ்வு தொடர்பான காணொளி அனைத்தும் வலையேற்றி வைத்திருப்பதற்கு சிறப்பு நன்றி. காணொளி தொழில்நுட்பம் சிறக்கச் செய்த ஷ்ருதி இலக்கியம் நண்பருக்கும் நன்றி பல.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2023 02:38

September 25, 2023

நீலன் வைத்தியர் இறந்துவிட்டார். நீலன் வைத்தியர் பசியாறுகிறார்

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் முக்கியமான அத்தியாயம் – அத்தியாயம் 33

இரா முருகன்

நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும்.

விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின் மின்னஞ்சல் வந்தது.

ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை என்பது குழலனுக்கும் வானம்பாடிக்கும் குயிலிக்கும் மட்டும் இப்போதைக்குத் தெரிந்த உண்மை என்பதால் நீலன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இம்மூவரும் மட்டும் பரிமாறிக்கொள்வது நடப்பில் உள்ளது.

அவ்வகையில் இன்றைக்கு விடிகாலையில் பெருந்தேளரசர் ஆணைப்படி குயிலி ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் நீலனோடு மனத்தொடர்பு ஏற்படுத்தி அவரை உடனே உறக்கம் நீங்கி வரச் செய்யவேண்டும்.

அவர் அதற்கு முன், உறக்கத்தில் இருந்தபடியே சஞ்சீவினி மருந்து மானிட இனத்துக்கு மட்டுமானது இல்லை என்றும் சகல இனத்துக்குமானது என்றும் விளக்க அறிக்கை வெளியிட வேண்டும்.

அவர் எழ மறுத்து விட்டால் அவர் கனவில் மறைமுகமாக அவர் உயிர் பேரிடரில் இருப்பதைக் கோடிட்டுக் காட்ட வேண்டும். பெருந்தேளரின் கருணையே உருவான முகத்தைத் தேள் விடம் மூர்க்கமாகச் சுமந்திருக்கும் ஒன்றாகக் காட்டி நீலரை அவர் கனவில் நூறு தேள்கள் துரத்த ஓட வைக்க வேண்டும்.

இப்படி நிறைவேற்றக் கடினமான ஒரு பட்டியலோடு குயிலியைப் பெருந்துயில் மண்டபத்துக்குள் வரும்போது அவளுக்கு இதொண்ணும் அச்சமூட்டும் ஒன்று இல்லை. அங்கே சகல அலங்கார பூஷிதரான தேட்சவமாக அழுகிக் கொண்டிருக்கும் முதுபெருந்தேளர் தான் அவளைப் பயமுறுத்துகிறவர்.

நடைப்பிணம் போல் ஓடும், விஷமம் செய்யும், பாடும் பிணம் அவர். சகசயனத்தில் இருக்கும் அழகர் அழகியர் இன்னும் உயிரோடு இருப்பதால் இவருடைய தொந்தரவு தாங்காமல் சீக்கிரம் ஆயுளை முடித்துக்கொள்வதை எதிர்பார்க்கிறார்களாம்.

குயிலி அவ்வப்போது மண்டபத்தில் ஒவ்வொரு துயிலரின் உடல், உளம் தொடர்பான நிலைமையை ஆய்ந்து அறிக்கை அளிப்பது வழக்கம்.

துயிலர்கள் உள்மனம் குயிலியோடு சகஜமாக உரையாடும்போது சேகரித்த தகவலில் முதுவரின் கிழவிளையாட்டு தொடர்பானவற்றை நீக்கி அரசுக்கு அனுப்புவது வழக்கம். வானம்பாடி போன்ற நெருங்கியவர்களோடு பகிர்ந்து நகைக்க உதவும் முதுவர் குறும்புகள்.

இன்று ஏமப் பெருந்துயில் மண்டப ஆய்வில் நீலர் சம்பந்தமான உபரி நடவடிக்கை தேவைப்பட்டதால் நடு இரவு கழிந்ததுமே குயிலி துயிலரங்க மண்டபத்துக்கு வந்துவிட்டாள்.

முதுவருக்கு உடல் அழுகாமல் இருக்க நிறைய வேதியியல் பொருட்களை அவருக்கு இரண்டு நாள் முன்னதாகவே பூசி எகிப்திய பாரோ அரசனின் சவம் போல் அழுகி நாறும் கோலம் கொண்டு கிடக்கச் செய்து விட்டிருந்தாள் குயிலி.

அத்தனை வேதியியல் பொருள் பூசினால் உயிரோடு இருப்பவர் கூட செத்துப் போகக்கூடும். முதுவன் போன்ற பணக்காரச் சவங்கள் உறைந்து ஈயென்று அழுக்குப் பல் காட்டித் துயில்வது சகஜம்.

முதுவன் சவத்தை சாவகாசமாகக் கவனிக்கலாமென்று தீர்மானித்துக் குயிலி நீலரின் அதாவது பிரதி நீலனின் பேழையை நோக்கி நடந்தாள்.

வெறும் உறக்கத்திலிருப்பவர்கள் நெஞ்சு ஏறி இறங்கி அனிச்சைச் செயலில் இருப்பது போல் பெருந்துயில் கொள்வாரின் நெஞ்சு அசைவதில்லை. எனினும் அவர்களின் தொண்டையிலிருந்து ஊஊஊ என்று காற்று உள்ளிருந்து வெளியே கடந்து போவது போல் மெல்லிய சத்தம் எழுப்பி வெளியேறும். அவர்களுக்கு டான்ஸில்லிடிஸ் வரக் காரணம் இதுதான்.

பேழையின் மூடியை உயர்த்தி அந்தச் சத்தத்தைக் கேட்க குயிலி காத்திருக்க, பிரதி நீலர் தலை குழைந்து பேழைக்குள் தலைகீழாக விழுந்துவிட்டார்.

அவருக்கு உயிரில்லை என்று குயிலிக்குப் போதமானது. என்ன செய்யலாம் என்று யோசித்தாள் அவள். அசல் நீலன் அவள் இல்லத்தில் தான் கூறு மாற்றி யார் கண்ணிலும் புலப்படாமல் இருக்கிறார். அவரிடம் சொல்லலாமா?

அது இருக்கவே இருக்கிறது அதற்கு முன் வேறே யாரோடு. மனம் தன்னையறியாமல் வானம்பாடியை ஏகியது.

ஏய் என்ன பண்ணிட்டிருக்கே.

குயிலி ஒலியெழுப்பாமல் சிரித்து தொடர்பைத் துண்டித்து குழலனுக்குத் தொடர்பு ஏற்படுத்தினாள். நாற்பரிமாணக் கூறுகளை மாற்றித் தற்போதைக்கு அந்த பிரதி நீலன் உடலைப் பொதுவான காட்சியிலிருந்து மாற்றி வைக்கட்டுமா என்று குயிலி கேட்டாள்.

அதற்கு என்ன கதை சொல்லப் போறே? குழலன் அவளை வினாவினான்.

எதாவது சமாளிக்கலாம். நீலன், அதுதான் பிரதி நீலன் இறந்து போயாச்சு. இனிமேல் வந்து பேசப் போகிறதில்லே. முதுபெரும் தேளர் போல இன்னும் உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும்போதே இங்கே கொண்டு வந்து தள்ளி நிம்மதியா இருக்கற விஷயம் இல்லே இது. இதோடு வேறே சஞ்சீவனி கதை எல்லாம் கட்டிச் சொல்ல வேண்டி வரும். அதை எல்லாம் பெருந்தேளன் பார்த்துப்பான். கூட இருக்கற கர்ப்பூரம் கோணாமாணலா வழிகாட்டுவான். வேடிக்கை பார்க்கலாம்.

குயிலி சத்தம் குறைவாக்கிச் சிரித்தாள்.

சரி நீ இந்த பிரதி நீலனை மறைய வை. நீ வந்த காலத்துக்கு ஒரு பத்து நிமிடம் முன்னால் போய் நீலனை காணாமல் போக்கிடு. பெருந்தேளன் கிட்டே பாதுகாப்பு விரிசல் வந்திருக்குன்னு சொல்லிட்டுப் போ அவன் எப்படி அதை மேற்கொள்ளறான் பார்ப்போம்.

குழலன் குயிலி மனதில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏமப் பெருந்துயில் மண்டபக் கதவுகள் விரியத் திறந்து பெருந்தேளரசர் வேகமாக உள்ளே வந்தார்.

குயிலி, நீலன் பக்கம் போகாதே. அவர் இறந்து போய்ட்டார். என் படுக்கை அறையில் இருக்கும் ஜாக்கிரதை மணி அவர் இறந்ததுமே அடித்து விட்டது. உடம்பு வெப்பம், இதய ஒலி, ரத்த ஓட்டம் இப்படி ஒவ்வொரு வினாடியும் சென்சர்கள் இயங்கி, போய்ச் சேர்ந்தால் ஜாக்கிரதை மணி ஒலிச்சிடும். நீலன் இன்று காலை மூன்று மணி முப்பது நிமிடத்துக்கு அடங்கி விட்டிருக்கார். அப்படியே பேழையில் அவரை இருக்க விட்டுடு. சஞ்சீவனி என்ன ஆகும்னு ஆலோசனை செய்யணும். அதுவரை நீலன் இறப்பை வெளிப்படுத்த வேண்டாம்.

நீலன் இறப்பு ஏதோ விதத்தில் பெருந்தேளரை மகிழ்ச்சியூட்டிப் பரபரப்பாக்கி விட்டிருக்கிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவசர சந்திப்பு முன் மண்டபத்தில். வந்து விடு என்று குயிலியைப் பார்த்துச் சொல்லியபடி வெளியே நடந்தார் அவர்.

அவர் போகும் வரை அமைதியாக இருந்த குழலன் குயிலியிடம் சொன்னது இது – நாம் ஒண்ணு திட்டம் போட ஆரம்பிச்சா இவர் நடுவிலே புகுந்து குட்டையைக் குழப்பிட்டுப் போறார்.

சரி நான் வீட்டுக்குப் போகிறேன். நம்ம அசல் நீலன் வைத்தியருக்குக் காலைச் சிற்றுண்டி தரவேணும் என்று கிளம்பி வாசலுக்கு வந்தாள் குயிலி. சஞ்சீவனிக்குப் பேராசைப்பட்டு அவரை இங்கே வரவழைச்சிருக்கவே வேண்டாம். எல்லாம் பெருந்தேளரசர் பிடிவாதம் தான் காரணம். அவள் அலுத்துக் கொண்டாள்.

ஆக நம்ம காஸ்மாஸ் பிரபஞ்ச நீலன் வைத்தியர் இட்டலி சாப்பிடப் போறார். ஆல்ட் எஸ் பிரபஞ்ச நீலன் இறந்து விட்டார். இப்போ பார் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து நீலன் வந்துக்கிட்டே இருக்கார்.

குழலன் குரல் சந்தோஷமாக ஒலித்தது – குழலி நீ உள்ளே ஓடிப்போய் பிரதி நீலனோட உடலை மறை என்றான் அவன். அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் ஆல்ட் எஸ் பிரபஞ்ச நீலனின் உடல் பெருந்துயில் பேழையிலிருந்து இறக்கப்பட்டது. அதற்கும் அடுத்த நிமிடம் அந்த உடலை நுண்சக்தித் துகளாக்கி குழலி மறைத்தாள். அதை ஆல்ட் எஸ் பிரபஞ்சத்துக்கு குழலன் பத்திரமாக அனுப்பி வைப்பான். அங்கே அந்தத் துகள் அத்தனையும் சேர்ந்து திரளாகி இறுதிச் சடங்குகள் நடத்தப்படும்.

அவரது உடல் மறைந்ததற்கு அடுத்த நொடி ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து நீலனை அவரது மனையில் குழலனும் குயிலியும் சந்தித்தார்கள். வீடு முழுக்கக் கொக்கரிக்கும் சேவல்கள் பேசவே விடாமல் தொந்தரவு செய்தன. லுங்கியும் பருத்திக் குப்பாயமும் அணிந்து தரையில் உட்கார்ந்து மீன் சமையலுக்காக சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த ஆல்ட் க்யூ நீலன் பாடும் குரலில் ஓதிக்கொண்டிருந்தார் –

ஓ சேவலே அதிகம் கூவாதே, நாளை உணவிலும் நாளை மறுநாள் எல்லாம் கழிக்கப்படும்போதும் கூவவும் கொக்கரிக்கவும் முடியாது

பாடியபடி மீன் செதிலை அழுத்தத் தேய்த்து நீக்கிக் கொண்டிருந்தார்.

உள்ளே ஆட்டு மாமிசத்தை சின்னச் சின்னத் துண்டுகளாக கத்தி கொண்டு நறுக்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களும் அந்த கசாப்புக்கடை நீலனுக்கு சகோதரிகள் எனச் சொன்னார் அவர் குழலனிடம்.

அவர்கள் பெயர் குயிலி மற்றும் வானம்பாடியா? குயிலி கேட்டபடி குழலனைப் பார்க்க, உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கசாப்புக்கடை நீலன் ஆச்சரியப்பட்டு மீண்டார்.

தேளரசு பயன்படுத்தும் காலப் பயணத் தொழில்நுட்பத்தை விட நூறு மடங்கு முன்னேறிய தொழில்நுட்பத்தைத் தனியனாக குழலன் பாவிப்பது குழலியை வியப்படைய வைத்தது.

அடுத்த நிமிடம் ஆல்ட் எஸ் நீலன் சவமாகக் கிடந்த பேழை சுத்தப்படுத்தப் பட்டது. அதற்கான தூய்மைப் படுத்தும் அமைப்பு பேழைக்கு உள்ளேயே அதிவேக காற்றுக் கதிரைச் சுழற்றி விமானக் கழிப்பறை மாதிரி தூய்மைப்படுத்தப்பட்டது.

ஆல்ட் க்யூ நீலன் பேழைக்குள் ஏமப் பெருந்துயிலைப் போலி செய்தார். குயிலி இல்லத்தில் காஸ்மாஸ் பிரபஞ்ச அசல் நீலன் இட்டலி தின்று கொண்டிருந்தார்.

குயிலி வானம்பாடி இல்லத்தின் கதவை மெல்லத் தட்டி இப்போது வரலாமாடி என்று சிரித்தபடி வினவினாள். நான் கிடந்த கோலம் கண்டு பயந்துட்டியா, ஒரே ஓட்டமா ஓடிட்டே என்று கரிசனமாக விசாரித்தாள் வானம்பாடி.

நீ பாட்டுக்கு இன்று புதிதாய்ப் பிறந்தேன்னு. அது இருக்கட்டும். இப்போ நீலன் இறந்து போய்ட்டார்னு நான் உங்கிட்டே சொன்னா என்ன செய்வே? குயிலி கேட்டாள்.

எந்த நீலன்கறதைப் பொருத்தது அது. நம்ம நீலன் அண்ணார் அப்படீன்னா இன்னும் ஒரு இட்டலி சாப்பிட்டுப் போங்கன்னு கன்னத்திலே தட்டி முழிக்கச் சொல்வேன். . இறந்து போனது ஆல்ட் எஸ் நீலன், நமக்கு ஆல்ட் எஸ் பிரதி நீலன். என்றால். உங்கள் இல்லத்திலே மாட்டி வச்சிருக்கீங்களே, அருமையான கம்பளி பொன்னாடை, அதைக் கொடுங்கள் என்று சொல்லிக் கேட்டிருப்பேன். வானம்பாடி சொன்னாள்.

உனக்கு பொன்னாடை அதிர்ஷ்டம் இல்லை. மற்றபடி இன்னொரு நீலன் வந்திருக்கார் என்றாள் குயிலி.

ஆல்ட் க்யூ நீலனா, குழலன் அவரை எப்படியாவது இங்கே கொண்டுவரப் பார்த்தான். இப்போ தானாகவே காரியம் ஆனது போல இருக்கே.

வானம்பாடி கண்ணை விரித்து ஆச்சரியப்பட்டாள். அவளது மூடிய இமைகளை மெல்ல முத்தமிட்டாள் குயிலி. அடுத்த வினாடி பிரபஞ்ச அளவில் ஒரு மாற்றம் ஏற்பட்டது அந்த ஏமப்பெருந்துயில் மண்டபத்தில்.

காஸ்மாஸ் பிரபஞ்சத்து அசல் நீலன் இடத்தில் ஆல்ட் க்யூ பிரதி நீலன் பேழையில் உறங்க ஆரம்பித்தார். பெருந்தேளரசரின் அலுவலக உட்சுவரில் குயிலியின் உருவம் துல்லியமாக நிறைய என்ன அவசரம் குயிலி, நீலன் மறுதடவை உயிர் பெற்றுவிட்டாரா என்று கிண்டல் தொனியில் கேட்க, உண்மையாகவே அதுதான் நடந்தது என்று குயிலி புன்சிரிப்போடு சொன்னாள்.

எனக்குத் தெரியும் எப்போ எங்கப்பா முதுபெருந்தேளர் பக்கத்திலே நீலனை பெருந்துயில்லே வைத்தோமோ அப்பவே தெரியும் கிழவர் சும்மா கையைக் காலை வச்சுக்கிட்டு இருக்க மாட்டார்னு. அவருக்கும் கொஞ்சம் ஊடு மந்திரவாதம் போல விஷயங்களில் தேர்ச்சி உண்டே. என்னமோ பண்ணி நீலரை உசிரோடு மீட்டு வச்சிருக்கார். அவரோட அக்கப்போரை எல்லாம் ஒரு அளவு தான் தாங்க முடியும்னு நாளைக்கு மண்டபத்துலே போய் சொல்லிட்டு வாடி தங்கம்.

வாடியாமில்லே. தங்கமாமில்லே. குயிலிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இந்த ஜந்து என்னமோ கூடப்பிறந்து பேர் வைச்சதுபோல் வாடி போடின்னு இழையறதே. துண்டிக்க வேணும் என்று தீர்மானித்துச் சொன்னது இந்தப்படிக்கு இருந்தது –

மூத்த பெருந்தேளர் எதுவும் செய்து நீலன் வைத்தியரை உயிர் மீளுதலுக்கு ஆட்படுத்தவில்லை. நீலன் வைத்தியரே அவர் கால மந்திர தந்திரங்களை பிரயோகிச்சிருப்பார். அல்லது வேறு ஏதாவது பிரபஞ்ச சக்தி அவரை மறு உயிர் உள்ளவராக்கி இருக்கும். எதுவோ எப்படியோ நீலன் இறந்தது உண்மையா நமக்கே தோன்றியதா. அதை ரொம்பப் பேசாமல் அப்படியே ஒதுக்கி விடலாம். நதி தன்பாட்டில் நடக்கட்டும். திரும்ப அதிலிறங்கி நீராட முனைய வேண்டாம்.

அவள் சொல்லச் சொல்ல பெருந்தேளரசர் ரசித்துக் கைதட்டி வரவேற்றார். அடி பெண்ணே, எனக்கு ஆலோசனை சொல்ல நீ தயாரா?

அவர் சொல்லத் தொடங்க, கதவு திறந்து கர்ப்பூரம் உள்ளே வந்தான்.

குயிலி அக்கா, நம்ம நீலன் அண்ணார் என்னத்த சொல்றது, பரமபதம் ஏகிட்டார்னு கேட்டு இவ்வளவு நாழிகை அடக்க முடியாமல் அழுதுண்டிருந்தேன். நம்ப பிராப்தம் அப்படின்னா என்ன செய்ய? அவர் நிச்சயம் கைலாசபதவி கெடச்சு DA, TA, அலவன்ஸ் அதுஇதுன்னு அமர்க்களமா இருப்பார் என்று சொல்லியபடி உத்தரத்தைப் பார்த்து வணங்கினான்.

எங்க அப்பாருக்கும் அதெல்லாம் கிடைக்குமில்லியா?

பெருந்தேளரசன் ஆர்வத்தோடு விசாரித்தார்.

ராஜன், நீர் அந்த விஷயத்திலே அர்கன் ஆகல்லே. முதுவர் ஒரேயடியாப் போக மாட்டேன்கிறாரே. போய்ட்டுப் போகட்டும். ராஜன், நீலனோட சிஷ்ருசை செய்யத்தான் குயிலி அக்கா, வராதே காலை ஒடப்பேன்னு துரத்தினாலும் நான் அட்டைப்பூச்சி மாதிரி ஒட்டிண்டு வந்தேன். இப்போ நீலனே இல்லியே யார் பாத தூசி அலம்பிக் குடிக்கணும் நான்?

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 25, 2023 06:58

September 22, 2023

இரா.முருகன் படைப்புகள் – கலந்துரையாடல் – செப்டம்பர் 24 ஞாயிறு சென்னை


இரா.முருகன் படைப்புகள் – கலந்துரையாடல்

நாள் = செப்டம்பர் 24, ஞாயிறு

நேரம் பிற்பகல் 3 முதல் இரவு 8 வரை

இடம் கவிக்கோ அரங்கம், மயிலை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2023 05:08

September 21, 2023

புதுக் கல்வி – நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து

பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தியா, தெருவில் திரிந்து கொண்டிருந்தியா? பத்து பனிரெண்டு வயதுள்ள ஆண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துச் சத்தம் போட்டார்கள்.

காரணம் இல்லாமல் இல்லை. காலையில் ஸ்கூல் போனபோது உடுத்தி விட்ட சுத்தமான யூனிபார்ம் முழுக்க திட்டுத் திட்டாக சாக்கடை வண்டலோடு சாயந்திரம் வந்து நின்றால் சத்தம் போடாமல் என்ன செய்வார்கள்.

ஓடைக் குழாயில் அடைப்பு நீக்குவது எப்படி என்று சிறப்பு வகுப்பு இருந்தது. ஆசிரியர் எப்படி ஓடைக் குழாய்க்குள் புகுந்து நறுமணம் முகர்ந்தபடி உடல் துன்பமேதும் படாமல் வெளியே வருவது என்று வகுப்பு எடுத்தார்.

என்னங்க, இங்கே வந்து பாருங்க. பாதாளச் சாக்கடைக்குள்ளே அந்த துர்நாற்றத்தை பொறுத்துக்கிட்டு வாடை பிடிச்சு வர்ற வகுப்பாம். எவனோ சனியன் பிடிச்சவன் கிளாஸ் எடுத்தானாம். இவனும் போய் உடம்பெல்லாம் சாக்கடை சேறு பூசிக்கிட்டு வந்து நிக்கறான். (மேலும்)

பிள்ளை யூனிபாரத்தை நீங்களே துவைச்சுக் கொடுங்க. என்னால் முடியாது. இந்த வாடை குடலைப் பிடுங்கறது. பாவம் குழந்தை. (மேலும்)

இதை எல்லாம் டிரெயினிங் எடுத்துக்கல்லேன்னா என்ன ஆகிவிடப் போறது? அதுவும் பாதாளச் சாக்கடைக் குழாய்க்குள்ளே இந்தப் பக்கம் நுழைஞ்சு அந்தப் பக்கம் வெளியே வர்றதாம். உவ்வோ. என்ன படிப்போ, என்ன ஸ்கூல் சிலபஸ்ஸோ.

கோகர் மலைநாடு முழுக்க அந்த மாலையில் தேளரசர் அரசைத் திட்டித் தீர்த்தார்கள், முக்கியமாகப் பெண்கள். எல்லா இனத்துப் பெண்களும் தான்.

தேளின, கரப்பினப் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக அந்த வசைமாறியில் கலந்து கொண்டு நனைந்தார்கள். அவர்கள் திட்டுவது மனமொட்டாமல் இருந்தது பெரும்பாலும். அந்தப் பிள்ளைகள் பாதாளச் சாக்கடைக் குழாய்க்குள் புகுந்து புறப்படுவதை விரும்பிச் செய்வார்கள் என்பதால் அவர்களுக்கு யூனிபாரம் துவைப்பது மட்டும் பிரச்சனையாகச் சுட்டிக் காட்டப்பட்டது.

வார இறுதியில் குழலன் தலையும் உடலும் இசைந்து சேர்ந்திருக்க, எதாவது பள்ளியில் அவனுடைய நண்பர்களோடு கூட்டம் நடக்கும். குழலன் கூட்டத்தையே நான்கு பரிமாணங்களில் கூறு மாற்றிப் பொதுப் பார்வையிலிருந்து அகற்றி விடுவான். இல்லாவிட்டாலும் தேளரசுக்கு அவனோ அவன் பின்னால் நடக்கிற பத்து இருபது பேரோ பிரச்சனை இல்லை.

பல வருடமாக இது நடந்துகொண்டு தான் இருக்கிறது ஏறக்குறைய வாரம் ஒரு முறை. ஞாயிறு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற மாதிரி கூட்டம், கவிச்சி தின்கிற மாதிரி அதில் உப்பும் உரைப்பும் கார சாரமாக விவாதமும் நடக்கின்றது.

குழலன், அரசுக்குப் பொழுது போகாவிட்டால் கைதாக்கப் படுவான். தினுசுதினுசாக அவனை எங்கெங்கோ அடைத்து வைத்து ஒரு மாதத்தில் விடுதலை செய்வார்கள்.

அவன் வாராந்திரக் கூட்டம் நடத்தி நாளைக்கே பெருந்தேளரின் அரசை நீக்கப் போகிறான் என்று சொன்னால் அவனே நம்பப் போவதில்லை.

ஆரம்பத்தில் குழலனுக்குத் தலை தனியாகவும் உடல் தனியாகும் இருப்பதற்கு அரசாங்க நடவடிக்கையைக் காரணம் காட்டி உடனே அவற்றை ஒத்திசைவு கொண்டு ஓரொற்றை உருவமாக்கப் போராட்டம் செய்து ஆதரவு கொண்டாடப்பட்டது.

இருப்பது தெரியாமல் ஒரு ஐந்து பேர் வாய்க்குள் முணுமுணுப்பாக, ’நேராக்கு நேராக்கு குழலன் உடலை நேராக்கு’ என்று தலா நூறு தடவை முழங்கி எதிர்ப்புக் கூட்டம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

சொல்லப் போனால் குழலன் தலை தனியாக, உடல் தேளுடலாக இருந்தபோது பயப்படாமல் மூன்று பேர் கூட்டத்துக்கு வந்து கோஷம் முழங்கினார்கள். அதற்கு அடுத்த நாள் குழலன் கைது. குகைகளில் அடைப்பு.

அதற்கும் அடுத்த வாரம் விடுவித்தபோது தலையோடு உடம்பும் மனுஷத் தலை, மனுஷத்தனமாக நிலைத்திருக்க, மூன்று நபர் போராட்டமே இதற்குக் காரணமாகக் காட்டப்பட்டது.

தேளின, கரப்பு ஆசிரியர்கள் பாதாளச் சாக்கடைக்குள் கடந்து போய் வெளி வரப் பயிற்சி ஏற்படுத்தி அதில் மாணவர்கள் பங்கு பெறுவது கட்டாயமென தீர்மானிக்கப் பட்டது கடும் கண்டனத்துக்குரியதாக நடவடிக்கையாக குழலனால் அறிவிக்கப்பட்டது.

இதோடு அரசுக்கு அவ்வப்போது தர வேண்டிய சஞ்சீவினி தொடர்பான கட்டணங்களைக் குறித்தும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

குழலன் ’போதும் கர்ப்பூர விளையாட்டு – வேண்டாம் கர்ப்பூர வினையாட்டு’ என்று முழங்கிக் கூட்டத்தைத் தொடங்கினான். இன்றைக்கு நம்பவே முடியவில்லை, ஐநூறு பேர் பங்கெடுத்த பெருங் கூட்டமாக இருந்தது.

பள்ளி கால்பந்து மைதானத்தில் கூறு மாற்றிக்கொண்டு பங்கெடுத்த ஐநூறு பேரும் பள்ளி மாணவர்களின் பெற்றோர். குழலன் அவர்களுக்கு அறிவித்தான் –

மாணவிகளின் பெற்றோர் பங்கெடுக்க வேண்டாம். இந்த அரசு நடவடிக்கை மாணவர்கள் மட்டும் கழிவுநீர் நடுவே நடந்தும் நீந்தியும் போய் கழிவுநீர்க் கால்வாயிலும், குழாயிலும் அடைப்பு நீக்க, அந்த பெருமணம், என்றால் துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் தொடங்கி வெவ்வேறு நிலை நிகழ்வுகள் சம்பந்தப்பட்டது. (மேலும்)

மாணவிகளும் சாக்கடைப் பணி செய்ய வேண்டும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அப்படி ஒரு நிலை உருவானால் மாணவிகளுக்காகவும் நாம் போராடுவோம்

என்று சொல்லிக் கூட்டத்தைக் குறைக்க முயன்றான் குழலன். அது என்னமோ நிமிடத்துக்கு நிமிடம் கூடிக்கொண்டுதான் இருந்தது.

குழலன் சொன்னான் – இந்தக் கூட்டம் பாதாளச் சாக்கடை நிர்வாகம் மற்றும் செயல்பாடு என்ற உன்னதமான காரியங்களை இகழவோ, அதனில் ஈடுபடுவதை நகையாடவோ இல்லை. (மேலும்)

பெரும்பாலும் யந்திரங்கள் செய்யும் கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு அகற்றும் பணி போன்றவற்றை மனிதர்கள் போன்ற உயிரினங்கள், அதுவும் பிஞ்சுகள் மேற்கொள்ள வேண்டுமாம். இதுவே தவறான கண்ணோட்டம். இதை நிறைவேற்ற, நூறு வருட முன்பு இருந்த, மனுஷர்கள் கையால் கழிவு நீக்கும் பழங்கால அ-தொழில்நுட்பத்தை மறுபடி கொண்டு வருகிறார்களாம். இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறானது என்றுதான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். (மேலும்)

மாணவர்களுக்குப் பாதாளச் சாக்கடை அடைப்பு நீக்குவதைக் கற்பிக்க எடுத்த நடவடிக்கையை ஜாக்கிரதையாக அணுகவேண்டும். பாதாளச் சாக்கடை குழாய்கள் உள்ளே புகுந்து வர யந்திரங்களப் பயன்படுத்துவதை விட இப்படிக் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டால் செலவு மிகக் குறைவாகலாம். ஆனால் சிறுவர்கள் என்பதால் விஷவாயுவை சுவாசித்து உயிர் நீக்க துரதிருஷ்டமாக நிறைய வாய்ப்பு உண்டு. (மேலும்)

இதைச் சொன்னால், சஞ்சீவனி மருந்து புகட்ட ஆரம்பித்த பிறகு சாவே இருக்காது என்று அறிவு பூர்வமில்லாத பதில் சொல்கிறார்கள். (மேலும்)

நூறு பள்ளிகள். கிட்டத்தட்ட பத்தாயிரம் மாணவர்கள். தேவைப்படும்போது பள்ளிக்கு வந்து பாதி வகுப்பில் கூட்டிப் போய் உடனே பழுது தீர்த்த பெருமையை யார்யாரோ சூட்டிக் கொள்ளலாம்.

(மேலும்)

பாதியில் நின்ற பாடத்தை அடுத்து நடத்துவது எப்போது? வாரக் கடைசியில் சிறப்பு வகுப்பாம், ஞாயிறன்று பள்ளிக்கு வரச்சொல்லி ஓர் அழகான வார இறுதியையே குழந்தைகள் வெறுக்க வைப்பதில் யாருக்கு ஒரு குரூர மகிழ்ச்சி? மேன்மை வாய்ந்த பெருந்தேளரசருக்கா? (மேலும்)

அவருடைய இடது கரமான, வேறு எந்தக் காலத்தில் இருந்தோ, வேறு எந்த கிரகத்தில், நட்சத்திர மண்டலத்தில், பிரபஞ்சத்தில் இருந்தோ இங்கே வந்திருக்கிறானே மகாராட்சசன் அவனை கூறு நீக்கம் செய்தாலே முக்கால்வாசி பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும். (மேலும்)

நீலன் வைத்தியர் என்ற அப்பாவி மானுடனை இவன் சொல்கேட்டு பெருந்துயில் மண்டபத்தில் துயில வைத்திருக்கிறார்கள். வைத்தியர் எப்போது எழுந்து எப்போது சஞ்சீவினி மருந்து காய்ச்சி எப்போது எல்லோருக்கும் புகட்டுவது? (மேலும்)

சஞ்சீவனிக்கு இந்தக் கட்டணம், அந்தக் கட்டணம் என்று இதுவரை எட்டு தடவை ஏதேதோ வசூல் பண்ணி மாதம் நூறு மில்லியன் பணம் கஜானாவுக்குப் போகிறது. சஞ்சீவனி இன்னும் வரவில்லை அதற்குள் அதற்கான ஆயத்த நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது கட்டாயம். கட்டாமல் முடியாது என்று வங்கிக் கணக்கை சர்க்கார் கருவூலத்தோடு பிணைத்து வைத்திருக்கிறார்கள். (மேலும்)

மாதச் சம்பளம் வந்ததும் குடும்பத்துக்கு உணவு, உடை, உடல்நலம் பேணுதல், அடிப்படை இதர செலவுகள் செய்ய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்குள் கவர்மெண்டுக்கு காசு எடுத்து, வந்த சம்பளத்தில் பாதிக்கு மேல் போய்விடுகிறது. (மேலும்)

இதற்கெல்லாம் முக்கிய காரணம் வேறு கால வாசி, வேறு பிரபஞ்ச வாசி. குழலன் நிறுத்தினான் –கர்ப்பூரம் என்ற பெயரோடு எங்கிருந்தோ எப்படியோ வந்து சேர்ந்தவன். (மேலும்)

பெருந்தேளர் அவன் நிர்ணயித்தபடி அரசு நடத்திப் போகிறார். ஏற்கனவே இருக்கப்பட்ட பிரச்சனைகள் போதாதென்று இந்த சாக்கடைப் பயிற்சி. சந்திரமண்டலம் சூரியமண்டலத்து இயல் கண்டு கற்போம் அந்தியில் சந்தி பெருக்க சாத்திரம் பார்ப்போம் என்று ஒரு பழைய கவிஞர் பாடி இருக்கிறார். (மேலும்)

ஆக நாம் இந்த சாக்கடைப் பயிற்சியைத் தேவையான யந்திரங்கள் வந்தபிறகு அவற்றை இயற்றிக் கற்க வழி செய்வோம்.

குழலன் பேசிக்கொண்டிருக்கும்போது மைதான ஓரமாக உரக்க யாரோ பேசும் சத்தம் கேட்டது.

பள்ளிச் சிறார் வீடு வீடாக செய்யும் தொழில் உத்தியோகம் பற்றிய சர்வே எடுக்கப் போகிற போது அவர்களிடம் காண்டோம் பாக்கெட்டுகளை அவர்கள் என்ன என்று அறியாமல் எடுத்துப் போய் விநியோகிக்க வைக்கிறார்கள். இதையும் பேச வேண்டும் என்று நீலச்சட்டை போட்ட யாரோ இரைகிறார்கள்.

மானுடச் சிறுவர்களைப் பற்றி மட்டும் கரிசனம் காட்டினால் போதாது. இந்த பிரச்சனை வேறு இனச் சிறாருக்கும் இது இல்லாவிட்டால் வேறு மாதிரி பிரச்சனை இருக்கும் என்று மெலிந்து உயர்ந்து நல்ல வெண்மை நிறத்தில் காணப்பட்ட சுவானர், என்றால் நாயினத்தார் ஒருவர் சொன்னார். எங்கள் இனத்தார் மேல் காரணமே இன்றிக் கல்லெடுத்து விட்டெறிவதைத் தடுக்க வழியில்லையா? விருந்தாளிகள் மேல் கூட வேகவைத்த சிறு உருளைக் கிழங்குகளை இடுப்புக்கு மேலே எறியலாம் என்று அனுமதி உண்டு. நாயினம் கல்லை எறிகிறவர்கள் பற்றி சதா ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது.

சொல்கிறேன் என்று கோபிக்க வேண்டாம். நீங்கள் எப்போதும் எங்கேயும் இணைவிழைவதை நிறுத்தினால் மற்றவர்களும் கல்லெடுக்க மாட்டார்களே என்று கேட்டவர் சொல்ல, சிரிக்கலாமா என்று ஒரு நொடி தயக்கம்.

நாய் வம்சப் பிரமுகர் முதலில் குரைத்துச் சிரித்து ஆரம்பித்து வைக்க கூட்டமே பல மாதிரி சிரிப்பைப் பதிவு செய்தது. குழலன் சிரிப்பு ஓயக் காத்திருந்தான்.

பாதாளச் சாக்கடை வகுப்புகளுக்குப் போக மாட்டேன் என்று மாணவர் மறுக்க அவர்களுக்கு அதிகாரம் தேவை. அதற்காக இப்போதே போராட்டம் துவங்கி விட்டோம். உங்கள் பிள்ளைகளை அப்படியான வகுப்புகளுக்குப் போகமாட்டோம் என்று பயமின்றிச் சொல்லச் சொல்லுங்கள். தேளரும் கரப்பரும் என்ன செய்வார் பார்ப்போம் என்று சொல்லும்போது அந்த இரு இனப் பெற்றோர் வெளிநடப்பு செய்தனர். நாய் இனப் பிரமுகர் அவர்கள் மேல் கல்லெடுத்து எறிந்தார்கள்.

பிற்கு அவர்களை நோக்கிப் போக ‘வேண்டாம் அது ஒவ்வாதது’ என்று தடுத்திருக்காவிட்டால் தேள், கரப்பு இனத்தார் மேல் ஞமலிதன் சிறுநீர் மழை கொட்டியிருக்கும். குழலன் சிரிக்க, நாய் வம்சத்தவர் தவிர மற்றவர்களும் அவனோடு நகைத்தார்கள்.

அரசு அலுவலகங்களில் என் நண்பர்கள் மூலம் கேட்ட செய்தி அல்லது வதந்தி இப்படி உள்ளது – நீலன் மருத்துவர் எழுந்து படுத்து எழுந்து படுத்து ஐந்து முறை துயில் தடுத்து விட்டார். அடுத்த துயிலுணர்தல் நிரந்தரமான விழிப்பாக இருக்கும். (மேலும்)

அப்போது அவர் சஞ்சீவனி மருந்து காய்ச்சுவாரோ, கிளறுவாரோ, குளிகையாக உருட்டுவாரோ அல்லது லேகியமாகப் பிடித்து உண்பாரோ அதற்கெல்லாம் முன்னால் உருவாக்கிய மருந்தை பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறார். நானூறுபிள்ளைகள் ஐந்திலிருந்து பனிரெண்டு வயது வரையானவர்கள் தேவைப்படும். (மேலும்)

நீலனுக்கு சஞ்சீவினி பரிசோதிக்க நூறு குழந்தைகள் ஐந்து வயதில் கூட்டிப் போக பெற்றோர் அனுமதி உடனே தர வேண்டி வரும். பரிசோதனை என்பதால் அது வெற்றி பெறவும் தோல்வி காணவும் வாய்ப்பு உண்டு. (மேலும்)

வெற்றியோ தோல்வியோ அச்சிறுவனின் உயிருக்கு அபாயம் வரும். அதிலிருந்து தப்பிக்கச் செய்யவோ, மருந்து பரீட்சிக்கச் சிறு நிதி கேட்டாலோ நாட்டுப் பற்று இல்லாத குடும்பமாகக் கருதப்பட்டு ரேஷன் போன்ற மலிவு விலை பொருள் கிட்டாது என்றான் குழலன். சுற்றி இருந்த கூட்டம் ஓவென்று அழத் தொடங்கியது

அழுது அரற்ற வேண்டாம். நான் இருக்கும்போது அப்படி எல்லாம் நடக்க விட்டு விடுவேனா?

குழலன் எதிர்பார்த்த நிமிடம் அது. வாழ்க குரல்கள் நிறைந்தது.
————————————————————————————–[]\\
99999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

இரா.முருகன் படைப்புகள் கலந்துரையாடல்

நாள் நேரம் 24 செப்டம்பர் 2023 பிற்பகல் 03 மணி முதல் இரவு 08 மணி வரை

இடம் கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர், சென்னை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2023 05:10

September 17, 2023

இரா.முருகன் படைப்புகள் – நற்றுணை கலந்துரையாடல் செப்டம்பர் 24 2023


நண்பர்களுக்கு வணக்கம்

அடுத்த நற்றுணை கலந்துரையாடல்

எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் படைப்புகள் குறித்த நேரடி அமர்வாக வரும் வார இறுதியில் நிகழவுள்ளது

24-09-2023 ஞாயிறு மதியம் 03:00 மணி முதல் 08:00 மணி வரை

கவிக்கோ அரங்கம், CIT colony, மைலாப்பூர், சென்னை

வரவேற்புரை:-
எழுத்தாளர்:- ஜா.ராஜகோபாலன்

வாழ்த்துரை:-
எழுத்தாளர்.:- ரகுநாதன் ஜெயராமன்

அமர்வுகள்:-

அ) அரசூர் நாவல்கள்
1.சுரேஷ்பாபு ( நற்றுணை )

2. காளிப்ரஸாத் ( நற்றுணை )

ஆ) பிற நாவல்கள்

1. மூன்றுவிரல்

– யோகேஸ்வரன் ராமநாதன் ( கட்டுரையாளர் )

2. . தினை அல்லது சஞ்சீவனி

– எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன்

3. 1975

– விஜயபாரதி ( தமிழ் விக்கி தள பொறுப்பாளர் )

இ) பிற படைப்புகள்

1. இரா.முருகன் சிறுகதைகள்

– எழுத்தாளர் தென்றல் சிவகுமார்

2. ரெட்டைத்தெரு

– எழுத்தாளர் வெங்கட சுப்ரமணியன்

3. தியூப்ளே வீதி

– எழுத்தாளர் கடலூர் சீனு

4. லண்டன் டயரி

– இளம் பரிதி ( வழி இணைய தள ஆசிரியர் )

ஏற்புரை & கலந்துரையாடல்

எழுத்தாளர்: இரா.முருகன்

நிகழ்ச்சி ஒளிப்பதிவு :- ஸ்ருதி டீவி

வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரையும் நேரடியாக வந்து பங்கு கொள்ள அழைக்கிறோம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 17, 2023 01:39

September 13, 2023

Medicine man Neelan at the breakfast table while his proxy at the mausoleum passes away

From chapter 33 of Thinai or Sanjeevani
நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும்.

விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின் மின்னஞ்சல் வந்தது.

ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை என்பது குழலனுக்கும் வானம்பாடிக்கும் குயிலிக்கும் மட்டும் இப்போதைக்குத் தெரிந்த உண்மை என்பதால் நீலன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இம்மூவரும் மட்டும் பரிமாறிக்கொள்வது நடப்பில் உள்ளது.

அவ்வகையில் இன்றைக்கு விடிகாலையில் பெருந்தேளரசர் ஆணைப்படி குயிலி ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் நீலனோடு மனத்தொடர்பு ஏற்படுத்தி அவரை உடனே உறக்கம் நீங்கி வரச் செய்யவேண்டும்.

அவர் அதற்கு முன், உறக்கத்தில் இருந்தபடியே சஞ்சீவினி மருந்து மானிட இனத்துக்கு மட்டுமானது இல்லை என்றும் சகல இனத்துக்குமானது என்றும் விளக்க அறிக்கை வெளியிட வேண்டும்.

அவர் எழ மறுத்து விட்டால் அவர் கனவில் மறைமுகமாக அவர் உயிர் பேரிடரில் இருப்பதைக் கோடிட்டுக் காட்ட வேண்டும். பெருந்தேளரின் கருணையே உருவான முகத்தைத் தேள் விடம் மூர்க்கமாகச் சுமந்திருக்கும் ஒன்றாகக் காட்டி நீலரை அவர் கனவில் நூறு தேள்கள் துரத்த ஓட வைக்க வேண்டும்.

இப்படி நிறைவேற்றக் கடினமான ஒரு பட்டியலோடு குயிலியைப் பெருந்துயில் மண்டபத்துக்குள் வரும்போது அவளுக்கு இதொண்ணும் அச்சமூட்டும் ஒன்று இல்லை. அங்கே சகல அலங்கார பூஷிதரான தேட்சவமாக அழுகிக் கொண்டிருக்கும் முதுபெருந்தேளர் தான் அவளைப் பயமுறுத்துகிறவர்.

நடைப்பிணம் போல் ஓடும், விஷமம் செய்யும், பாடும் பிணம் அவர். சகசயனத்தில் இருக்கும் அழகர் அழகியர் இன்னும் உயிரோடு இருப்பதால் இவருடைய தொந்தரவு தாங்காமல் சீக்கிரம் ஆயுளை முடித்துக்கொள்வதை எதிர்பார்க்கிறார்களாம்.

குயிலி அவ்வப்போது மண்டபத்தில் ஒவ்வொரு துயிலரின் உடல், உளம் தொடர்பான நிலைமையை ஆய்ந்து அறிக்கை அளிப்பது வழக்கம்.

துயிலர்கள் உள்மனம் குயிலியோடு சகஜமாக உரையாடும்போது சேகரித்த தகவலில் முதுவரின் கிழவிளையாட்டு தொடர்பானவற்றை நீக்கி அரசுக்கு அனுப்புவது வழக்கம். வானம்பாடி போன்ற நெருங்கியவர்களோடு பகிர்ந்து நகைக்க உதவும் முதுவர் குறும்புகள்.

இன்று ஏமப் பெருந்துயில் மண்டப ஆய்வில் நீலர் சம்பந்தமான உபரி நடவடிக்கை தேவைப்பட்டதால் நடு இரவு கழிந்ததுமே குயிலி துயிலரங்க மண்டபத்துக்கு வந்துவிட்டாள்.

முதுவருக்கு உடல் அழுகாமல் இருக்க நிறைய வேதியியல் பொருட்களை அவருக்கு இரண்டு நாள் முன்னதாகவே பூசி எகிப்திய பாரோ அரசனின் சவம் போல் அழுகி நாறும் கோலம் கொண்டு கிடக்கச் செய்து விட்டிருந்தாள் குயிலி.

அத்தனை வேதியியல் பொருள் பூசினால் உயிரோடு இருப்பவர் கூட செத்துப் போகக்கூடும். முதுவன் போன்ற பணக்காரச் சவங்கள் உறைந்து ஈயென்று அழுக்குப் பல் காட்டித் துயில்வது சகஜம்.

முதுவன் சவத்தை சாவகாசமாகக் கவனிக்கலாமென்று தீர்மானித்துக் குயிலி நீலரின் அதாவது பிரதி நீலனின் பேழையை நோக்கி நடந்தாள்.

வெறும் உறக்கத்திலிருப்பவர்கள் நெஞ்சு ஏறி இறங்கி அனிச்சைச் செயலில் இருப்பது போல் பெருந்துயில் கொள்வாரின் நெஞ்சு அசைவதில்லை. எனினும் அவர்களின் தொண்டையிலிருந்து ஊஊஊ என்று காற்று உள்ளிருந்து வெளியே கடந்து போவது போல் மெல்லிய சத்தம் எழுப்பி வெளியேறும். அவர்களுக்கு டான்ஸில்லிடிஸ் வரக் காரணம் இதுதான்.

பேழையின் மூடியை உயர்த்தி அந்தச் சத்தத்தைக் கேட்க குயிலி காத்திருக்க, பிரதி நீலர் தலை குழைந்து பேழைக்குள் தலைகீழாக விழுந்துவிட்டார்.

அவருக்கு உயிரில்லை என்று குயிலிக்குப் போதமானது. என்ன செய்யலாம் என்று யோசித்தாள் அவள். அசல் நீலன் அவள் இல்லத்தில் தான் கூறு மாற்றி யார் கண்ணிலும் புலப்படாமல் இருக்கிறார். அவரிடம் சொல்லலாமா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2023 19:51

September 11, 2023

சாவு தீர்க்க மருந்தொன்றிருக்குது

தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 31-இல் இருந்து

பெருந்தேளரும் தேளவை மருத்துவ, தொழில்நுட்ப அறிஞர்களும் ஏமப் பெருந்துயில் மண்டபம் ஏக, முதுதேளர் கணிசமாகப் பேசிக் களைத்ததால் அயர்வு வந்ததாக உரைத்து உடன் நித்திரை போனார்.

இது மறு உயிர்ப்பு இல்லை என்றும் பத்து இருபது நிமிடங்களுக்கு நீடிக்கும் தற்காலிக விழிப்பு என்றும் கூறப்படுகிறது. நீலர் இன்னும் சில நாட்கள் உறங்கியும், முதுபெருந்தேளர் சில நூற்றாண்டுகள் உறங்கியும் விழிக்க, அவர்தம் வலிமையும் அறிவும் முழு வீச்சில் தேளரசு பயனுறக் கிட்டும் என்று அறிவிக்கப்படுகிறது.

பிரமாதமாக வந்திருக்கு என்று கால் தட்டினார் பெருந்தேளர்.

கர்ப்பூரம் மேடை நடிகர் கைதட்டு கேட்டுக் குனிந்து சலாம் வைக்கிற பாவனையில் இடுப்பு வளைத்து பெருந்தேளருக்கு மிக மிகையான அபிநயத்தோடு வணக்கம் சொன்னான்.

பின்னே என்ன, அவனவன் சஞ்சீவனியை வரவேற்கக் கட்டணம் கட்டாயமாகக் கட்டினதிலிருந்து தொடங்கி, சின்னச் சின்னதாக ஒரு ஏழெட்டு தடவையாவது காசு கட்டி விட்டுக் காத்திருக்கிறான். அவர்கள் பொறுமை இழந்து போகிறது அரண்மனைக்கு வெளியே கழிவுநீர்ச் சாக்கடை ஓரமெல்லாம் நின்று பேசுகிறதில் தட்டுப்படுகிறது. ஹே ராஜன், இதை இப்படியே விட்டால் உம் பதவிக்கு ஆபத்து வந்துவிடும். நான் அதற்காக நீலன் எழுந்து உடனே மறுபடி உறங்கினதாகச் சரடு திரித்தேன். அதை இன்னும் அதிகார பூர்வமாக்க, திரித்த மற்றொரு சரடில், உம் மறைந்த தகப்பனார் முதுபெருந்தேளரையும் தாற்காலிகமாக உறக்கம் எழ வைத்தேன். எப்படி நம்ம வேலை?

அப்போது இதெல்லாம் நடக்கவில்லையா என்று அப்பாவியாகக் கேட்டார் பெருந்தேளர்.

இந்த அறிக்கையில் ஒரு கையெழுத்து போடும். வெளியிட்டு விடலாம் தாமதமில்லாமல். நீலன் மறுபடி எழுந்து உடனே மறுபடி துயின்றது உண்மையாக இருக்கலாம்.

போகட்டும். அவர் திரும்ப உறங்கப் போனதுதான் கணக்காகும்.

முடியே போச்சு என்று தலைகுலுக்கி நடந்தான் கர்ப்பூரம். சமயாசமயங்களில் கற்பனை செய்து சொன்னதும் நிஜமாகும் போல.

அரசு அறிக்கையை எழுதி வாசித்த கர்ப்பூரம் இறுதியில் சிரித்துப் பெருந்தேளரைத் தோளில் தட்டி, பெருந்தேளர் மட்டுமில்லே பெருந்தோளரும் தான் நீர் என்று பாராட்டியது பெருந்தேள்பெண்டுக்கு அறவே பிடிக்கவில்லை.

தேள்மொழியில் கக் கக் கக் என்று கணவரிடம் அவள் சொன்னது – இந்த இழிபிறவி உம்மைத் தோளில் தட்டினால் மெய் மறந்து இருக்கிறீர். தலையில் தட்டினால் பெருமையடைகிறீர். பிருஷ்டத்தில் தட்டினால் பெருமிதம் கொள்கிறீர். நான் இல்லாவிட்டால் வேறு எப்படி எல்லாம் சல்லாபம் செய்வீர்களோ! போகட்டும், ஜாக்கிரதையாக இருங்கள். அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்து தலையாட்டுங்கள். உம் சிரமோ கரமோ குறியோ அவன் கையில் பிடிபட விடாதீர்.

கர்ணநாதம் என்ற செவி கேட்காத நோய் வந்ததுபோல் பெருந்தேளர் அமர்ந்திருந்தார். நடப்பது ஒன்றும் பிடிக்கவில்லை என்று சொல்லி பெருந்தேள்பெண்டு வெளியேறினாள்.

இதற்குத்தானே காத்திருந்தேன் என்று பெருந்தேள்பெண்டு நீங்கிய வாசல் பார்த்திருந்த கர்ப்பூரத்தை அன்போடு அணைத்து அரியாசனத்தில் ஏறி நின்று உச்சி முகர்ந்தார் பெருந்தேளரசர்.

நீலன் அவசரக் குடுக்கையாக எழுந்தது நமக்குப் பிரச்சனை. அதைவிடப் பிரச்சனை முதுபெருந்தேளர் எழுந்து நடந்தது என்றான் கர்ப்பூரம்.

பெருந்தேளர் பேசலானார் –

கவலையே பட வேண்டாம். அவர் எழுந்தார் என்றால் அவர் உறங்கினார் என்றும் அவர் பேசினார் என்றால் அவர் உயிர் நீத்தார் என்றும் நான் சொல்வது தான் ஆவணப்படுத்தப்படும். (மேலும்)

நீர் என்ன சொல்கிறீர்? கிழம் விழித்தெழுந்து பையன்களோடு விளையாடி ரொட்டி தின்றதை எப்படி மாற்றி அறிவிக்க வேண்டும் என்பதை நீங்கள் அரசு அறிக்கையில் ஏறக்குறைய நமக்கு வேண்டியபடி சொல்லியிருக்கிறீர்கள். (மேலும்)

நமக்கு கிழட்டு சைத்தான் பிரச்சனை இல்லை. நீலன் வைத்தியன் தான். நாட்டில் எல்லோரும் சஞ்சீவனி ஜபத்தில் இருக்கிறார்கள். நீர் கிளப்பி விட்ட எதிர்பார்ப்பு எல்லாம். (மேலும்)

சீக்கிரம் நீலன் எழுந்து மருந்து காய்ச்சாவிட்டால் என்னைக் காய்ச்சிடுவான் அவனவன். தலைக்காரன் குழலன் வேறே எங்கே எங்கே என்று இருக்கிறான் குற்றம் கண்டு பிடிக்க. நீலன் பேசினதும், கிழத்தேளன் சவமாக இருந்து சாவகாசமாக பேசினதும் எல்லாம் அவனுக்கு அனாவசியம். நீலன் எப்போது எழுந்து மருந்து காய்ச்சுவான் என்று காத்திருக்கிறான் (மேலும்)

அவன் குற்றம் சொல்ல ஆரம்பிக்க. என் வீட்டுக்காரி பெரும்பாடுப்பெண்டு இன்னொரு தொந்தரவு, குதத்தில் குண்டூசி குத்திய, குகுகு வலிப் பொம்பளை. சொல்லும் என்ன செய்யலாம்? (மேலும்)

பெருந்தேளன் குறையெல்லாம் கொட்டித் தீர்த்து கர்ப்பூரம் தரப்போகும் தீர்வுக்காக அவன் முகம் பார்த்துக் காத்திருந்தான்.

பேசாமல் மண்டபத்தில் இன்னொரு பேழைக்குள் படுத்துக் கொள்ளும். எல்லா தொந்தரவும் இல்லாமல் போகும்.

கர்ப்பூரமய்யன் பெரிதாக நகைக்க, பெருந்தேளர் பகடி புரியாமல், அதுவும் நல்ல யோசனை தான். கொசுத் தொல்லை கூட பேழைக்குள் இருக்காது. புதுத் தீனி, புதுத் துணி, கூடத்தூங்க புது ஜோடி, இங்கே யார் காரியம் பார்ப்பார்கள் என்பதுதான் பிரச்சனை என்றார் அவர் வேகமாகப் பேசி மூச்சு வாங்க.

யாருக்கு எழவு காரியம் பார்க்க என்று பெருந்தேளரின் கையைப் பற்றி விசாரித்தான் கர்ப்பூரம். இந்தப் பகடியும் பெருந்தேளரைக் கடந்து போனது.

ஆக எல்லாவற்றுக்கும் குணம் தெரிய அவ்வப்போது பத்து நிமிடம் கிழவரையும் வைத்தியரையும் எழுப்பணும்.

அதெல்லாம் பிரச்சனை அய்யனே என்றார் பெருந்தேளரசர்.

எழுப்புன்னா குடுகுடுன்னு போய் பேழையைத் திறந்து உலக்கி எழுப்புவீர் போல இருக்கே. எழுந்தாங்க, பேசினாங்க, மறுபடி உறங்கப் போனாங்க இப்படிச் சொல்லணும். இன்னிக்கு வெளியிட்டிருக்கோமே அது மாதிரி.

கர்ப்பூரம் தேளரைப் பார்த்துக் கண்ணடித்தான்.

பெருந்தேளர் மனநிறைவோடு காலை உணவு செய்யப் போனார். கர்ப்பூரம் கூடவே நடந்தான்.

நீரும் உண்ணும். அருமையான ஆப்கானிஸ்தான் உலர் பழங்கள் வந்திருக்கின்றன.

ஒரு உலோகத் தட்டில் பாதாம் பருப்பு, ஆப்ரிகாட், முந்திரிப்பருப்பு, பிஸ்தாஸியோ பருப்புகளை அராபிய பேரீச்சம்பழங்களோடு வழங்கினார் தேளரசர்.

நான் சாப்பிட்டாகி விட்டது. நன்றி என்றான் அவசரமாக கர்ப்பூரம். எந்த சாக்கடையிலே பொறுக்கி தண்ணீர் விட்டு அலம்பிக் கொண்டு வந்துட்டானோ பிரம்மஹத்தி என்று மனதில் பெருந்தேளரை கடிந்து கொண்டு சொன்னான்.

நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?

பொதுஜனம் யாரோ பாதி உண்டு எறிந்த அழுகிக் கொண்டிருக்கும் கறியை வாயில் அடைத்துக் கொண்டு கர்ப்பூரனைக் கேட்டார் தேளரசர்.

இப்போது மண்டபம் அருகே ஒரு வீடு எடுத்திருக்கிறேன். பேய் ஓடும் வீடு என்று சொன்னார்கள். கூடவே ஓட நான் தயார் என்றேன். தானே வீடு பெருக்கி மெழுகி மேஜை நாற்காலியில் தூசி துண்டால் தட்டி நீக்கப் படுகிறது. என் உடுதுணி எல்லாம் தினம் குளிக்கும் முன் விழுத்துப் போட்டது உடனே துவைக்கப்படுகிறது. ஒரு காசு யாருக்கும் தரவில்லை என்று புன்சிரிப்போடு சொல்லிப் போனான் கர்ப்பூரம்.

வீடு திரும்பும் வழியில் வரிசையாக பள்ளிச் சிறுவர்கள் ஏமப் பெருந்துயில் மண்டபத்துக்குள் பாடியபடியே நுழைந்து கொண்டிருந்ததைப் பார்த்தான் அவன்.

இன்னும் கொஞ்சம் உறங்கலாமே

தாத்தா உறங்கிடு உன்

கையை எடுத்து தரையில் வைத்து

தாத்தா உறங்கிடு

என்று பாட ஓய்வு பெற்ற கூட்டம் பாட்டுக்கு அபிநயம் பிடித்தபடி துயில் மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி ஆடி வந்து கொண்டிருந்தார்கள்.

விலையில்லா பெரியோர் வழிபாடு என்று அவசரமாக எழுதிய அட்டையைப் பிடித்திருந்த சிறுவனிடன் வணக்கம் சொன்னான் கர்ப்பூரம்.

தேளரசனும் ஆச்சு மசுரானும் ஆச்சு படிக்க விடமாட்டேங்கிறானுங்க என்று பெரிய குரலில் பதில் சொன்னான். கவனமாகப் பார்க்க அது சிறுவனில்லை. குள்ளமான ஆசிரியன்.

தேளரசு செய்யும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று கர்ப்பூரம் சொல்ல, அதுவும் ஒரு சுவை என்றானாசிரியன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2023 20:52

September 10, 2023

the novel MILAGU – excerpts chapter 53

மிளகு அத்தியாயம் ஐம்பத்திமூன்று 2000 லண்டன் – a small portion

வெள்ளிக்கிழமை பகலில் மழை எட்டிப் பார்த்து விட்டுப் போனபோது மருது கருங்குதிரை வீதியில் வசிக்கும் மூன்று பெட்ரூம் அபார்ட்மெண்ட் அறைக்குள் மடிக் கணினியில் மூழ்கியிருந்தான். வாசலில் நான்கு ஐந்து முறை அழைப்பு மணி அடிப்பது காதில் விழாமல் மிளகு வாங்கி விற்கும் அப்ளிகேஷன் – செயலியில் முழுக் கவனத்தோடு இருந்தான் அவன்.

கதவைத் திறந்து உள்ளே வந்து தயக்கத்தோடு மருது என்று இன்னொரு முறை கூப்பிட்டாள் கல்பா. அது மருது இருக்கும் ஃப்ளாட் தானா என்று அடிப்படை சந்தேகம் வலுத்துக்கொண்டிருந்தது அவளுக்கு.

முதல் தடவை இந்தக் குடியிருப்புக்கு ப்ரபசர் பிஷாரடியோடு வந்தபோது தவறான புரிதலின் காரணமாக ஏழடி நெடுமால் ஒருவரிடமிருந்து பிஷாரடி வசவு வாங்கியது நினைவு வந்தது. இது மட்டும் மருதுவின் அபார்ட்மெண்ட் இல்லாத பட்சத்தில், பரிச்சயமில்லாதவர்களின் அபார்ட்மெண்டுக்குள் அதிரடியாக நுழைந்து நிற்கும் பெரும் சங்கடம் ஏற்படலாம். பெண் வேறே, கல்பா. சந்தர்ப்பங்கள் அவளுக்கு எதிராக சதி செய்து விடக்கூடும்.

வெள்ளிக்கிழமை பகலிலேயே விடுமுறைக்காலம் தொடங்கி விட்டது. திங்கள்கிழமை வசந்தம் வந்ததற்கான பேங்க் ஹாலிடே என்ற விடுப்பும் சேர, மூன்று நாள் தொடரும் நீண்ட விடுமுறைக் காலத்தில் கம்பெனி கொடுக்கப் பெண்களை அனுப்பும் நிறுவனங்கள் மும்முரமாகச் செயல்படும் வேளை.

கல்பா தன் நிழலை பீரோ கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். கம்பெனி கொடுக்க வரும் பெண் இப்படி இருக்க மாட்டாள். பின்னே எப்படி இருப்பாள்? அவளுக்குத் தெரியாது.

மருது ஹலோ மருது.

எஸ் என்று சலித்தபடி ஒரு குரல் கேட்டது. அரை டிராயரும் டீஷர்ட்டுமாக மருது உள்ளே இருந்து வந்தான். கல்பாவைப் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.

ஹாய் கல்பா நீ எப்படி வந்தே?

அவள் கையைப் பற்றி இழுத்தபடி கேட்டான்.

சிங்கிள் சீட் ஏரோப்ளேன்லே எடின்பரோ டு லண்டன்.மாடியிலே லாண்ட் ஆகி, சுவர் வழியா உள்ளே வந்தேன். காலிங்பெல் சத்தம் உன் காதிலே விழாதா?

“ஆமா, அது அப்போ அப்போ ஸ்ட்ரைக் பண்ணிடும்” என்றான் மருது.

கல்பா அவன் கையை இறுகப் பற்றியபடி நாற்காலிக்கு இழுத்தாள்.

ஈசிஜெட் ஏர்வேஸ் ரொம்ப தண்டம்ப்பா. தாகத்துக்குத் தண்ணி கூட தரமாட்டேன்கிறான். காசு தரணுமாம் அதுக்கும். ஏய் ஏய் ஏய்.

அவளை அப்படியே தூக்கிப் போய் கட்டிலில் போட்டு பக்கத்தில் படுத்து தலை உச்சி வகிட்டில் முத்தமிட்டான் மருது.

சார் தனியா இருக்காப்பலியா?

கல்பா மருதுவின் கையை தன் வயிற்றில் வைத்துக்கொண்டாள்.

”நல்லவேளை ஃப்ளைட் லாண்ட் ஆகிறது கேட்விக் ஏர்போர்ட்டிலே, ஹீத்ருவிலே இல்லேன்னு நேற்றைக்கே கேட்டு வச்சுக்கிட்டேன். இல்லாட்ட அதுக்கு வேறே அலைச்சல்” என்றாள்.
இரு வர்றேன் என்று அவசரமாக எழுந்தான் மருது.

“ஏய் வேணாம், இப்போ வேணாம். உக்ரமான பசியிலே இருக்கேன்” என்றாள் கல்பா
.
“Silly, எப்பவும் நான் அந்த நினைப்பிலே தான் இருப்பேன்னு நினைச்சியா? You are terribly wrong. லாப் டாப்பில் அப்ளிகேஷன் திறந்து வச்சுட்டு வந்திருக்கேன். அதை மூடிட்டு வரேன் இரு”.

“பசிக்குதுடா” என்று சிணுங்கினாள் கல்பா.

“டாய்லெட்டை பத்திரமா பூட்டி வைக்கறவன் உலகத்திலேயே நீ மட்டும்தான் இருக்க முடியும். சாவி எடு” என்றாள் கல்பா.

லேப்டாப் பக்கத்தில் மேஜையில் இருந்து சாவி எடுத்துக் கொடுத்து விட்டு கம்ப்யூட்டர் செயலி உள்ளே போய்விட்டான் மருது.

கல்பா திரும்பியபோது அவன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு குஷன் வைத்த நாற்காலியில் கண்களை மூடி தியானம் செய்வதுபோல் அமர்ந்திருந்தான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2023 19:42

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.