இரா. முருகன்'s Blog, page 23

January 11, 2024

விருச்சிக மாதப் புலரியில் திலீபன் வந்திறங்கிய அம்பலப்புழையும் பகவதி இருந்த அம்பலப்புழையும் வேறுவேறு

அரசூர் நாவல்கள் நான்கில் நாலாவது வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப்பதிப்பாக அண்மையில் வெளியீடு கண்டது. அதிலிருந்து-

விருச்சிக மாதப் பிறப்பு தினத்தில் பகவதி தில்லியில் சின்னச் சங்கரன் வீட்டுக்கு வந்தாள். மென்மையாகத் தில்லி குளிர்காலம் தொடங்கி இருந்த விடிகாலை நேரம் அது.

உன் பேரன் சின்னச் சங்கரன் உறங்கிண்டிருப்பான் என் பொன்னு பகவதி. பெத்துப் பொழச்ச குட்டிப் பொண்ணு, சின்னச் சங்கரன் பாரியாள் வசந்தியும் தான். அவளுக்கு பிறந்த சிசுவும் நல்ல உறக்கத்திலே இருக்கும். நமக்கு இப்ப போயே பற்றுமா?

தயக்கத்தோடு கேட்டபடி கூட வந்தாள் விசாலம் மன்னி. அவளால் யாருக்கும் ஈர்க்குச்சி அளவு கூட, ரணம் ஊறிச் சிவந்த காயம் உண்டாக்கவோ நுள்ளி நோவிக்கவோ, என்றால் கிள்ளி உபத்திரவப் படுத்தவோ முடியாது என்பதை பகவதி அறிவாள். அங்கே இங்கே அலைவதிலும் ஈர்ப்பு இல்லை அவளுக்கு. என்றாலும் வந்தே தீர வேண்டியதாகி விட்டிருந்தது.

போய்ட்டு சீக்கிரம் திரும்பிடலாம்.

ஆவி ரூபத்தில் பகவதி கூப்பிட்டாள். ஆவியாக விசாலம் மன்னி புறப்பட்டாள்.

உதயத்துக்கு முன் இப்படி ஒரு வந்து சேருதல் இன்றைக்கு நடக்கிறது.

பாட்டி, சித்தெ இரேன்.

தாழச் சடை பின்னி, நீளமாக குச்சிப் பின்னல் போட்ட சிறுமி பின்னால் இருந்து குரல் கொடுக்க, விசாலம் மன்னி நிற்கிறாள்.

நீ போய் களிச்சுண்டு இரு குஞ்ஞம்மிணி. அப்புறமா உன்னைக் கூட்டிண்டு வரேன்.

விசாலம் மன்னி அவசரமாக அவளைத் தடுக்கக் கை நீட்ட சின்னப் பெண் பகவதியின் பாதுகாப்பான கை வளையத்துக்குள் புகுந்து கொள்கிறாள்.

பகவதி அத்தை, நான் சமத்தா வருவேன். விசாரம் ஏதும் வேணாம். நம்ம மூணு பேருக்குமே உடம்பு இல்லையே. இருந்தாத் தானே மத்தவாளுக்கு கஷ்டம் தர?

குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டுக் கை பிடித்து அழைத்துப் போகிறாள் பகவதி.

இதெல்லாம் என்ன? அக்னியை உருளை உருளையாப் பிடிச்சு இப்படி வீட்டுக்குள்ளே அடுக்கி வச்சிருக்கே?

குஞ்ஞம்மிணி கேட்கிறாள்.

இது குளிர் போக்கறதுக்கு கரண்ட்லே வேலை செய்யற கணப்பு, குஞ்ஞே.

பகவதி பிரியமாகப் பகர்ந்து தருகிறாள். ஆயுள் முடிந்து போனாலும் புதுசு புதுசாகத் தெரிந்து கொண்டுதான் இருக்கிறாள் அவள்.

குஞ்ஞம்மிணி சித்தாடையை இடுப்பு நழுவ விடாமல் பிடித்துக் கொண்டு வேகவேகமாக பகவதி பின்னாலேயே ஓடி வருகிறாள். அவளுக்கு இந்த இடமே புதுசாக, உள்ளே நடந்து திரிந்து சுற்ற உற்சாகமான இடமாக இருக்கிறது.

எய் அது பஞ்சசார டப்பா. துறக்கண்டா.

விசாலம் சொல்வதற்குள் அம்மிணி சர்க்கரை டப்பாவைக் குதிகாலில் எழும்பி எடுக்கிறாள். சமையல் அறைத் தரை முழுக்க வெள்ளைத் துணி விசிறிப் போட்டது போல சர்க்கரை படியும் நேரத்தில் அம்மிணி கை காட்டி நிறுத்த எல்லாம் வழக்கம் போல் பழையபடி. குஞ்ஞம்மிணி ரசித்துச் சிரிக்கிறாள்.

குறும்பையும் மத்ததையும் வேறே ஒரு பொழுதுக்கு மாற்றி வச்சுக்கோ குஞ்ஞம்மிணி. குழந்தை பொறந்திருக்கற நேரம். அதன் பிருஷ்டத்துலே எறும்பு மொய்க்கப் போறது. கஷ்டம். கடிச்சா இத்திரி நோகும் கேட்டியா. உன்னாலே தானாக்கும் அதெல்லாம்னு ஆயிடும்.

விசாலம் கண்டிப்பதாக குஞ்ஞம்மிணியைப் பார்த்துச் சொன்னதில் சிரிப்பு மட்டும் தான் இழைத்துச் சேர்த்திருக்கிறது. பகவதி தலையை வெளியே எக்கி சின்னச் சங்கரனைத் தேடுகிறாள்.

நான் இங்கேயே இருந்து ஆசீர்வாதம் பண்றேன்.

விசாலம் மன்னி அம்மிணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்.

பாட்டியும் பேத்தியும் சர்க்கரை டப்பாவை வச்சு விளையாடிண்டு இருங்கோ. நான் இதோ வரேன்.

தில்ஷித் கவுரைத் தன் நெஞ்சில் அவள் வெற்று முதுகு படர இறுக அணைத்து பின்னாலிருந்து உருட்டிப் பிடித்து விளையாடும் கற்பனையில் அரைத் தூக்கமும் பிரக்ஞையுமாகப் புரண்டு படுக்கிற சின்னச் சங்கரனைப் படுக்கை அறையில் நுழைந்ததும் பார்க்கிறாள் பகவதி.

அட படவா, தாத்தா பேரை உனக்கு வச்சபோதே நினைச்சேன். சில்லுண்டி ஆட்டம் எல்லாம் ஆடுவேன்னு. சரியாப் போச்சு பாரு. அந்த ஸ்திரி அவளோட குஞ்ஞுக்கு ஊட்ட ஒண்ணுக்கு ரெண்டா அவளுக்கு மொல மாணப் பெரிசா, சக்க பருமன்லே எழும்பியிருக்கு. உனக்கு சொப்பனத்திலும் விஸ்தாரமாக் கையாளவா பகவான் அதுகளைப் பெருக்கி வச்சு அனுப்பியிருக்கான்?

சங்கரன் வாசல் வழியாக மிதந்து உள்ளே வருகிறான். இவன் பெரிய சங்கரன். அரசூர்ப் புகையிலைக் கடைக்காரன். பகவதி என்ற சுந்தரிக் குட்டியை அம்பலப்புழையில் கல்யாணம் கழித்து அரசூர் வம்சம் தழைக்கக் கூட்டி வந்தவன்.

என் பகவதி கண்ணம்மா. பேரனை பெட்ரூமிலே வந்து பார்க்கறது தப்புடீ செல்லம். என்னமோ உருண்டிண்டிருக்கானே?

சும்மா இருக்கேளா. அதென்ன பெட்ரூம்? புருஷனும் பொண்டாடியும் கட்டிண்டு படுத்துக்கற உள்ளு தானே? அன்னிய ஸ்திரியை அங்கே எதுக்கு கூப்பிட்டு வச்சு அவளோட கம்பளி ஸ்வெட்டரை அவுக்கணும்? ஊர்லே இல்லாத ஸ்தனமா அவளுக்கு வாய்ச்சது?

என்னைக் கேட்டா?

பெரிய சங்கரன் சிரிக்கிறான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2024 20:09

January 10, 2024

திலீப் காத்திருக்காமல் தேடி வந்த மலையாள பூமி உத்தியோகம்

அரசூர் நாவல் வரிசையில் நான்காவதான வாழ்ந்து போதீரே ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப் பதிப்பாக அண்மையில் வெளியானது. நாவலில் இருந்து

பெரியப்பா எங்கே, டூர்லேயா?

மரியாதைக்கு விசாரித்தான். அவர் எங்கே இருந்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. பெரியம்மா கரிசனத்திலாவது நாலு காசு வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது.

பெரியப்பா ராத்திரி முழுக்க அவர் புத்தகத்துக்கு ப்ரூஃப் பாத்துட்டு இப்போ தூங்கிண்டிருக்கார்.

என்ன புத்தகம் பெரியம்மா?

ஆர்வத்தோடு கேட்டான். குடும்பத்திலேயே ஒரே ஒரு எழுத்தாளர் காணாமல் போய் அவர் புத்தகங்களும் எடைக்குப் போட்டு இருநூறு ரூபாய் வாங்கிக் கதையை முடித்தாயிற்று. இன்னொரு எழுத்தாளரை எப்படி எதிர்க் கொள்வது என்று திலீப்புக்குப் புரியவில்லை.

நேரு பிறந்தநாளை ஒட்டி பெரியப்பாவோட ஜன்ம தினமும் வருது. அறுபது வயசு ஆரம்பிக்கறதே.

கன்கிராட்ஸ் என்று வாழ்த்துச் சொன்னதை மினிஸ்டர் தூக்கத்தில் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.

பிறந்தநாள் அன்னிக்கு உங்க பெரியப்பா புத்தகம் ரிலீஸ் ஆகலாம். நேருவும் நானும்.

திலீப்புக்கு டிராயிங் ரூமில் பெரிய புகைப்படமாக நேரு சுவரில் இருப்பது நினைவு வந்தது. போன வருஷம் காலமான அவரை வருஷத் திவசம் வரைக்குமாவது மினிஸ்டர் வகையறாக்கள் நினைவு வைத்திருப்பதோடு அவசர அவசரமாகப் புத்தகமும் எழுதி அதை ரூபாய் பைசாவாக மாற்றி விடுவார்கள் என்று தோன்றியது.

மிச்ச சொச்ச நேரு நினைவு எல்லாம் எழுதித் தர, கோஸ்ட் ரைட்டராகத் திலீப்பைக் கூட்டி வரச் சொல்லியிருப்பாரோ பெரியப்பா?

அதெல்லாம் இல்லை என்றாள் பெரியம்மா. அவரே வாராவாரம் கொங்கணிப் பெண் ஒருத்தியைக் கூப்பிட்டு டிக்டேட் செய்து அத்தியாயம் அத்தியாயமாக முடித்துக் கொண்டிருக்கிறதாகத் தெரிவித்தாள் அவள்.

அந்த லேடி லட்சணமா வேறே இருக்காளா. நேரு நினைவு இப்போதைக்கு முடியும்னு தோணலை. பாகம் பாகமா இன்னும் பத்து வருஷம் வரலாம்.

பெரியம்மாவோடு சேர்ந்து திலீப்பும் சிரித்தான். காப்பி உபசாரத்துக்கு இடையில், ஜனனி விடிகாலையிலேயே லண்டன் பயணத்துக்காக ஏற்பாடு ஏதோ செய்யப் புறப்பட்டுப் போனதாகச் சொன்னாள் பெரியம்மா,

ஏதாவது டைப் செய்யணுமா பெரியம்மா? திலீப் காப்பி தம்ளரை மோரியில் போட்டு விட்டுக் கேட்டான்.

இல்லேடா. உனக்கு கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்காவது நீட்டிச்சுப் போகக் கூடிய ஒரு வேலை திகைஞ்சிருக்கு. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.

தாங்க்ஸ் பெரியம்மா. அவன் பெரியம்மாவின் காலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு சொன்னான். பெரியம்மாவை ப்ரீதிப் படுத்தும் விஷயங்களில் இது முக்கியமானது. இப்படியான சந்தோஷ சமாசாரம் சொல்லும் தருணத்தில் அவளை விழுந்து கும்பிடவும் அவனுக்கு இஷ்டமே.

கல்கத்தாவிலே தானே? அந்த பிஸ்கட் கம்பெனி டைரக்டர் ராமேந்திர சர்மாவோ யாரோ அன்னிக்கு இண்ட்ரட்யூஸ் செஞ்சீங்களே.

ராம சாஸ்திரிகள் சொல்லி வச்சுக் கிடைச்சது இல்லேடா. நான் சொல்லி வாங்கினது. சுபஸ்ய சீக்ரம்னு உடனே ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.

பெரியம்மா சொல்லச் சொல்ல உற்சாகமானான் திலீப்.

ஒரு பிரயாணம். கேரளா போகணும். நாளை மறுநாள் சாயந்திரம் கிளம்பறோம்.

பாட்டியையும் ஓரகத்தியான திலீப்பின் அம்மாவையும் தினம் ஒரு தடவை போய்ப் பார்த்துக் கொள்ள மினிஸ்டர் பங்களா சேவகத்தில் இருக்கும் நாலு பேரைக் கை காட்டி வைத்திருக்கிறாராம் மினிஸ்டர். திலீப் விடிகாலையிலேயே வராமல் நேற்றைக்கே வந்திருந்தால் பெரியப்பா வாய் வார்த்தையாகவே இந்த நல்ல நியூஸ் எல்லாம் கேட்கக் கொடுத்து வைத்திருக்குமாம்.

ஆனாலும் அவர் சதா சூழ்ந்து இருக்கும் நேரு நினைவில், இன்னொரு முக்கியமான காரியத்தை அனேகமாக மறந்திருப்பார். உடனடி செலவுக்காக திலீப்பிடம் இருநூறோ முன்னூறோ கொடுத்து அனுப்புவது அது.

பெரியம்மா வள்ளிசாக ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுக்க திலீப் கண் கலங்கி விட்டது. எல்லாம் நல்ல படியாகத் தொடங்கி நல்ல விதமாகவே முடிந்தால் அகல்யாவை செம்பூர்க் கோவிலில் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து ஜோடியாக பெரியம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விடலாம்.

விக்டோரியா டெர்மினஸில் ரயிலேற வந்தபோது முதல் வகுப்பு கம்பார்ட்மெண்டில் பெரியம்மாவும், பிஸ்கட் ராமா சாஸ்திரிகளும், அவர் வீட்டுக்காரியும் இருப்பதைப் பார்த்தான் திலீப். அவனும் அந்தப் பெட்டியில் ஏற, சாஸ்திரிகள் அவனிடம் கோழிக் கிறுக்கலாக செண்ட்ரல் ரயில்வே காகிதத்தில் எழுதிய அனுமதி பாஸை எடுத்து நீட்டினார்.

அம்பி, உனக்கு அம்சமா ரிசர்வ்ட் சீட். ஜனதா க்ளாஸ்லே இஞ்சின்லே இருந்து ரெண்டாம் கம்பார்ட்மெண்ட். வழியிலே சாப்பாட்டுக்கு நீ எதுவும் வாங்கிடாதே. இங்கே இருந்து ரயில் ஊழியக்காரா மூலமா மெத்துனு இட்லியும், நல்லெண்ணெயோட கன் பவுடரும் அனுப்பி வச்சுடறோம். இதை பத்திரமா பாஸோடு வச்சுக்கோ. உன் நியமன உத்தரவு. நீ உடனே ஜாயின் பண்ணனும் கேட்டியா? அண்டர்வேர் மாதிரி அவசியமானதை மட்டும் எடுத்துக்கோ. ஒரு மாசம் கழிச்சு வந்து மத்ததெல்லாம் கொண்டு போகலாம்.

திலீப் காகிதத்தை வாங்கிப் பார்த்தான். ஏதோ போக் ஆர்ட் பவுண்டேஷன் ட்ரஸ்ட் Folk Art Foundation Trust என்று போட்டு அவன் பெயருக்கு எழுதிய வேலை நியமனக் கடிதம்.

அர்ஜுன நிருத்தம் ஆராய்ச்சி செய்யும் குழுவினருக்கு ஊழியம் செய்யும் சிப்பந்தியாக அவன் நியமனம் ஆகி இருந்தான். தாற்காலிக குமாஸ்தா, டைப்பிஸ்ட் மற்றும் ஃபைலிங் கிளார்க். மற்றும், யாவருக்கும் அடிப்படை சௌகரியங்களை உறுதி செய்கிற மேஸ்திரி.

வண்டி கிளம்பப் போறது. உன் கம்பார்ட்மெண்டிலே போய் ஏறிக்கோ.

பெரியம்மா சொல்ல, திலீப் ட்ரங்க் பெட்டியோடு மூணாம் கிளாஸில் ஓடிப் போய் ஏறினான்.

அடுத்த மாதம் வரும்போது வேலை கிடைத்திருப்பதை அகல்யாவிடம் பகிர்ந்து கொண்டு கசோடியும், குலோப்ஜாமுனும், பிளாட்பாரத்தில் வாங்கிய ஸ்டிக்கர் கோலமுமாக அவளை சந்தோஷப் படுத்த வேண்டும். கல்யாணம் பற்றி வீட்டில் மெல்லப் பேச்சை நகர்த்தச் சொல்லவும் வேண்டும். தேவைப் பட்டால் ஒரு நடை அகல்யா வீட்டுக்குப் போய்.

என்ன வேலையில் இருக்கே?

அகல்யாவோ அவள் வீட்டிலோ கேட்டால்?

மினிஸ்டரின் பெண்டாட்டியான சொந்தம் பெரியம்மாவுக்கும் மித்ரர்களான பிஸ்கட் தம்பதிகளுக்கும் அனுசரணையான வே லைக்காரன். நேரத்துக்கு சாப்பாடு விளம்பி, எச்சில் தட்டு அலம்பி, வென்னீர் வைத்துக் கொடுத்து, கால் ஆணிக்கு சைபால் களிம்பு தடவி விட்டு, வெற்றிலை பாக்கு வாங்கி வந்து சிற்றூழியம் செய்கிறவன். டைப்பும் அடிப்பான். ஃபைல் கட்டில் காகிதம் வைப்பான். பினாயில் கலந்து கக்கூஸ் கழுவி விடுவான். மேஜை துடைப்பான்.

திருப்தியாகச் சிரித்துக் கொண்டான் திலீப்.

சல்தா ஹை.

கரி தின்னும் ரயில் எஞ்சின் ஆமோதித்துக் கூவிச் சத்தம் உயர்த்த, மெயில் நகர்ந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2024 19:32

January 8, 2024

சிகஸ்ததுவும் துரஸ்துவும் வந்த பத்திரிகைச் செய்தி

புரவி கலை இலக்கிய இதழில் இடம் பெற்ற என் பத்தி வாதவூரான் பரிகள் பகுதி

இந்தக் கட்டடம் அதிக சிகஸ்ததாய்விட்டபடியால் துரஸ்து செய்துகொண்டு வருகிறார்கள்

1903-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் தினப் பத்திரிகைக் கட்டுரையில் வந்துள்ள வாக்கியம் இது. காசு கொடுத்து வாங்கிய பத்திரிகையை நேரம் செலவழித்துப் படித்து அது என்ன சொல்கிறது என்று புரிய பல மொழி அகராதியும் அந்தக் காலத்தில் தேவையாக இருந்திருக்கும். வேறே ஒண்ணுமில்லை, கட்டுரை ஆசிரியர் சொல்ல உத்தேசித்தது இதுதான் – இந்தக் கட்டிடம் அதிகமாகப் பழுதடைந்திருப்பதால் அதைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நூறு, நூற்றைம்பது வருடம் முந்தைய எழுத்துத் தமிழே இப்படி வினோதமாகத்தான் இருக்கும் என்று ஒட்டுமொத்தமாகக் கழித்துக்கட்ட முடியாது. கருப்பன் செட்டியார் என்ற திரு ஏ.கே செட்டியார் அந்தக் காலத் தமிழை இன்றைய மொழிநடையை விட எளிமையாக, சுவாரசியமானதாகக் கையாண்டு எழுதிக் காட்டியிருக்கிறார். அப்படி எழுதியவர்களின் எழுத்துக்கான உதாரணங்களைத் தொகுத்து வழங்கியும் இருக்கிறார். ‘தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்’ என்ற அவரது நூல் (சந்தியா பதிப்பக வெளியீடு) இந்த வகையில் முன்னோடி.

சுதேசமித்திரன் கட்டுரை ஒன்று இப்படி இருந்தால் இன்னும் பத்து அதே இதழில் நல்ல மொழிநடையோடு எளிய தமிழில் வந்திருப்பதைப் பார்க்கலாம்.

பழநி பயணக் கட்டுரை அதே சுதேசமித்திரனில் 1903-இல் வந்திருக்கிறது. பழநி முருகன் கோவிலில் பக்தர்கள் பட்ட கஷ்டத்தைச் சொல்வது இப்படி=

ஒரு பிரார்த்தனைக்காரர் அபிஷேகம் செய்யும் காலத்திலேயே வேறு ஒருவருடைய அபிஷேகமும் செய்யப்படுகிறது. ஒரு குருக்கள் விபூதி அபிஷேகம் செய்து முடிப்பதற்குள்ளாகவே வேறொரு குருக்கள் பஞ்சாமிருதத்தை அபிஷேகம் செய்கிறார். அது முடிவதற்கு முந்தியே மற்றொருவர் பாலைக் கொண்டுவந்து சாய்க்கிறார். இன்னொருவர் சந்தனக் குழம்பை ஊட்டுகிறார். மற்றொருவர் அர்ச்சனை செய்கிறார்.

1875-இல் ஜனவிநோதினி பத்திரிகையில் வெளியான செஞ்சிப் பட்டண யாத்திரைக் கட்டுரை கவிதையும் கூடியது –
வாசயோக்கியமான அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கிற அம்மண்டபங்களில் எப்பொழுதும் கடுங்காற்று வீசுகின்றது. மண்டபங்களின் மேல் ஏறிச் சுற்றிலும் பார்த்தாலும் பூமி அதலப் பாதாளத்தில் அழிந்து விட்டாற் போலவும், நான் ஆகாயத்தில் பறக்கிறது போலவும் தோன்றியதல்லாமல் சற்று நேரத்தில் (Fascination of the precipice) கிறுகிறுப்பான மயக்கமும் உண்டாயிற்று.

1910-ஆம் ஆண்டு சென்னையில் பறந்த விமானம் பற்றிக் குறிப்பிடுவது இப்படி –
சில நாளைக்கு முன் கல்கத்தாவில் ஒரு விமானம் செய்யப்பட்டு ஆகாயத்தில் பறந்ததாகத் தெரிவித்திருந்தோம். இப்பொழுது மற்றொன்று சென்னையில் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஆங்கில வண்டிப் பட்டறையாகிய ஸிம்ப்ஸன் கம்பெனியால் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மவுண்ட்ரோடில் பெயர்போன ஓட்டல் வைத்திருக்கும் டாஞ்சலிஸ் (டி ஆஞ்சலிஸ் என்றும் சொல்வதும் உண்டு) என்னும் பிரெஞ்சுக்காரரால் கண்டு பிடிக்கப்பட்டு, தமிழ் வேலைக்காரர்களால் செய்யப்படுகிறது. ஸிம்ப்ஸன் கம்பெனி மானேஜர் மேற்பார்வையின்கீழ் வேலை நடந்து வருகிறது. இப்போது 12 குதிரை சக்தியுள்ள எஞ்சினால் நடத்திப் பார்த்தார்கள். சென்னைக்கு அருகில் நடத்தினபொழுது திருப்திகரமாகவே இருந்ததாம். மறுபடியும் 25 குதிரை சக்தியுள்ள ஒரு எஞ்சினைச் சேர்த்து விடும்பொழுது எல்லா ஜனங்களுக்கும் காட்டப்படும். இந்த விமானத்தின் மொத்தபளு, எஞ்சின், ஆளோடு சேர்த்து எழுநூறு ராத்தல்தான். இந்தச் சமயத்திற்கு 20 குதிரை சக்தியுள்ள ஒரு எஞ்சினை இந்த விமானத்திற்கு முடுக்கிவிட்டுப் பறக்க வைக்க யத்தனித்து வருகிறார்கள். இம்மாதிரியான விஷயங்களில் கூடிய சீக்கிரத்தில் நம் இந்தியர்களும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்

இந்தக் கட்டுரை பிரசுரமான வார இதழ் இந்தியா. எழுதியவர் பாரதியார்

குறிப்பு – இந்தக் கட்டுரையில் கண்டுபிடிப்பு என்ற சொல்லை invention என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பாகப் பயன்படுத்துகிறார் மகாகவி. கண்டுபிடிப்பு discovery இல்லையோ.
888888

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2024 19:23

January 7, 2024

ரானடே ரோட் நடைபாதைக் கடை அடுக்கு ஜாடிகளும் ஆவக்காயும்

அரசூர் நாவல்களில் நான்காவது, வாழ்ந்து போதீரே = ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நாவலில் இருந்து –

கவலையே படாதே. நாளைக்கு சாயந்திரம் மடுங்காவிலே மாங்கா வாங்கி அரிஞ்சு எடுத்துண்டு வந்துடறேன். உப்பு, மொளகா, எண்ணெய் எல்லாம் கூடவே வந்துடும். யூ ஸ்டார்ட் தி மியூசிக் யங் லேடி.

திலீப் அபயம் அளித்தான். இன்றைக்கு இந்த விஷயம் நினைவு வராமல் போய்விட்டது. வந்திருந்தால், அகல்யாவை வைத்து இந்த ஊறுகாய்க் கொள்முதலை முடித்திருக்கலாம்.

அட சே, நேசம் வைத்த பெண்ணை கையைப் பிடித்து வெளியே கூட்டிப் போய் ஆவக்காய் ஊறுகாய்க்கான சாமக்கிரியைகள் வாங்கச் சொல்வது என்ன மாதிரி காதலில் சேர்த்தி?

திலீப் திலீப்பு

அம்மா சுவரைப் பிடித்தபடி நடந்து உள்ளே வந்தாள். கை நீட்டி திலீப்பைப் பார்த்துக் கெஞ்சலாகவும் பிடிவாதமாகவும் சொன்னாள்.

திலீப் கண்ணு, சீக்கிரம் சாப்பிட்டு வா. நான் ஆடப் போகணும். காத்துட்டிருக்காங்க. நேரு வந்திருக்காராம்.

நேரு மேலே போய்ச் சேர்ந்தாச்சு ஆயி.

திலீப் சொல்ல சோறு மென்றபடி இருந்த அவன் வாயை அவசரமாகப் பொத்தினாள் அம்மா. புரையேறியது திலீப்புக்கு. நேரு இருந்து விட்டுப் போகட்டும். அவர் கொஞ்ச நேரம் பக்கத்தில் திரும்பி யஷ்வந்த்ராவ் சவாணோடும் கிருஷ்ண மேனனோடும் அரட்டை அடிக்கட்டும்.

நான் மோருஞ் சாதம் சாப்பிட்டு முடித்து எச்சில் தாம்பாளம் அலம்பி வைத்துவிட்டுத்தான் வேறு காரியம் பார்க்க முடியும். அதுவரை நீ உறங்கிக்கோ அம்மா. வந்து எழுப்பறேன்.

திலீப் சொல்லிக் கொண்டிருக்க, ஒரமாகப் பத்தமடைப் பாயை விரித்து மெழுகு சீலைத் தலையணையைப் போட்டாள் கற்பகம்.

படுடீ. படுத்தாமப் படு. தாலாட்டு வேணும்னா பாடறேன். மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே. மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவளே.

ராமாயணத்தில் கோசலைக்கு ஒரு பெண் குழந்தையையும் சிரமமில்லாமல் உண்டாக்கிக் கொடுத்து கற்பகம் பாட்டி தாலாட்டு பாட, திலீப் கை அலம்பி வரும்போது அம்மா தூங்கி இருந்தாள்.

பாட்டி புடவை முந்தானையில் கை துடைத்துக் கொள்ளும்போது அவள் பேரனின் தலை தடவி கொழந்தே என்று கரைந்தாள்.

மதராசில் இருந்த கற்பகம் பாட்டி தான் இவள். இவளைக் கூட்டி வர மதராசுக்குப் போன திலீப் தான் சாப்பிட்டு முடித்துக் கை துடைத்தவன்.

கற்பகம் பாட்டி பேரனிடம் சொன்னாள் –

உன் பெரியம்மா அவசரமாப் பாக்கணும்னாளாம். ஜனனி வந்திருந்தாடா கூட்டிண்டு போறதுக்கு. உன்னைத் தான் பகல் பூரா காணோமே.

பெரியம்மா கூப்பிட்டு விட்டால் வேலை ஏதாவது இருக்கும். மொழி பெயர்க்க, நாலு கார்பன் காப்பி வைத்து அழுத்தி எழுதி நகல் எடுக்க, டைப் அடிக்க, ஒன்றும் இல்லாவிட்டால் பைண்ட் பண்ணித் தர என்று வேலை. காசும் வாங்கிக் கொடுத்து விடுவாள். சாப்பாடு, காப்பி எல்லாம் மினிஸ்டர் பெரியப்பா செலவு. ஏர்கண்டிஷன் அறையில் உட்கார்ந்து வேலை பார்க்கக் கொடுத்து வைத்திருந்தால் சாயந்திரம் எலக்ட்ரிக் ரெயிலில் வீட்டுக்குத் திரும்பின பிறகு கூட உடம்பில் சில்லென்று உஷ்ணம் கம்மியாக இருக்கும்.

ஜனனி ஞாயித்துக்கிழமை அன்னிக்கு லண்டன் போறாளாம். உங்கிட்டே அதையும் சொல்ல வந்திருந்தா. போனா திரும்பி வர ஒரு வருஷம் ஆகும்.

தெரியும் என்றான் திலீப். தங்கை. ஒன்று விட்ட சகோதரியோ ரெண்டு விட்ட சகோதரியோ. மனசுக்கு இதமான, அருமையான் தோழியாகப் பிரியமும் கரிசனமும் உள்ள சின்னப் பெண். மேல் படிப்புக்குப் போகிறாள். அண்ணாவாக, நல்ல சகாவாக மனசார வாழ்த்த மட்டும் தான் முடியும் திலீப்புக்கு இப்போதைக்கு. நேசம் காட்டும் உறவு எல்லாம் உதிர, மனுஷ சிநேகிதம் மேலும் குறைந்த முழு யந்திரத்தனமான வாழ்க்கைக்கு திலீப் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இயந்திரமாகத் தூங்கினான். இயந்திரமாகவே கண் விழித்தான். ஒரு பக்கம் விடிகிற போதே சப் அர்பன் எலக்ட்ரிக் டிரெயின் பிடித்துக் கிளம்பினான்.

இங்கேல்லாம் நிக்கக் கூடாது. மந்திரி சாப் வீடு. ஹட் ஜா.

மினிஸ்டர் பெரியப்பாவின் மலபார் ஹில்ஸ் மந்திரி பங்களா வாசலில் துப்பாக்கி ஊன்றி நின்ற போலீஸ் சேவகன் வழக்கம் போல் தடுத்தான். தோளில் கை வைத்து ஓரமாகத் தள்ளுவான் என்று எதிர்பார்த்தான் திலீப்.

அதற்குத் தயாராக நின்று, உள்ளே இருக்கப்பட்டவர்களோடான உறவு முறையைச் சொல்ல ஆரம்பிக்க, உள்ளே இருந்து பெரியம்மாவே வந்தாள்.

கோசாயிகள் மாதிரி, சுவேதாம்பர ஜெயின் சாமியாரிணிகள் போல நீள அங்கி உடுத்தி இருந்த பெரியம்மா இரைந்து உள்ளே வாடா என்று திலீப்பைக் கூப்பிட்டாள். சேவகன் நடுநடுங்கி அவனை உள்ளே தள்ளாத குறையாக அனுப்பி வைக்க திலீப் பெரியம்மாவைத் தொடர்ந்து டிராயிங் ரூமில் நுழைந்தான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2024 18:11

January 6, 2024

அந்தரத்தில் முடியும் மாடிப் படிகளும், மயிலின் உடல் சுமந்து படி ஏறும் கழைக் கூத்தாடிப் பெண்ணும்

நான்காவது அரசூர் நாவல் வாழ்ந்து போதீரே என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அண்மையில் மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது. நாவலில் இருந்து

வேலைக்கு நிற்கிற பெண் கதவைத் தட்டி விட்டு எட்டிப் பார்த்தாள். உதடு அசையாமல் ஜாக்கிரதையாக வாயை இழுத்து மூடிக் கொண்டு நந்தினி அவளை நோக்கினாள். உள்ளே ஓடி வந்து, தரையில் உருண்டிருந்த ஆப்பிள் பழத்தை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டுத் திருமப வெளியே ஓடி வாசல் கதவைத் தட்டினாள் அந்தப் பெண்.

நந்தினி சிறு புன்னகையோடு அவளை உள்ளே அழைப்பதற்கு முன் பொதியாக இருட்டு மேலே விழுந்து கவிந்ததாக ஒரு பிரமை. ஆசுவாசமாக இருந்தது. இந்த வினாடி உறங்கி எல்லாத் துயரும் களையலாம் என்று தோன்றியது. இருட்டில் நடந்து கடக்க முடியாமல் போகும் பாதை முன்னே நீண்டு பயமுறுத்தியது. அந்தப் பாதையின் தொடக்கத்தில் பெரிய வீடு ஒன்று. மின்சாரம் போன ராத்திரி நேரத்தில் படிகளில் இயக்கம் மிகுந்து சப்த ரூபமாக விரியும் மிகப் பழைய இருப்பிடம் அது. அரிக்கேன் விளக்கொளியும் மெழுகுவர்த்திகளின் வெளிச்சமும் இருளைப் பெருக்கிக் காட்டும் சூழல். தோளில் செத்த மயிலைச் சுமந்து போகிற வாளிப்பான பெண்ணின் கண்கள் காம மயக்கத்தில் லகரி ஏறிக் கிடக்கின்றன. அவளுடைய வெப்ப மூச்சு நந்தினியைத் தகிக்கிறது.

வீராவாலி தானே நீ?

நந்தினி கேட்க மௌனமாகத் தலையசைக்கிறாள். அவளுக்குப் பின்னால் வைத்தாஸ் இப்போது வருவான்.

உறுதியான தோல் செருப்புகள் தரையில் அழுந்தப் பதிந்து ஒலிக்கும் காலடிச் சத்தம். வைத்தாஸ் தான். இவன் எழுத்தில் இருந்து வருகிறவன். வைத்தாஸ் இவனை எழுதியபடி, காமம் மீதேறித் திரிகிறவன். என்றென்றைக்கும்.

வீராவாலியை இணை விழைந்து குறி விரைத்து வரும் மிருகம் இவன். தனக்கு முன்னால் படிக்கட்டுகளில் காமம் அடர்ந்து செறிந்து ஏறிப் போகும் அவளுடைய வடிவான பின்புறத்தில் பார்வை நிலைக்க, முன்னேறி நடக்கிறவன். அந்த வைத்தாஸை வழி மறிக்கிறாள் நந்தினி.

நான் இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கணும்? நந்தினி கேட்கிறாள்.

அவன் முன்னால் ஊர்ந்து வீராவாலியின் தேகம் பரத்தும் ஒச்சை வாடை பிடித்துப் போவதில் மும்முரமாக இருக்கிறான். .

நான் இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கணும்?

மறுபடி கேட்டபடி அவன் தோளை உலுக்குகிறாள் நந்தினி. அவன் நகர்கிறான். நந்தினி பிடி தளரப் படிக்கட்டில் சரிகிறாள்.

நான் வைத்தாஸ் இல்லை. அவன் எழுதுகிற நாவலில் இருந்து இறங்கியவன். வீராவாலியைப் புணர்வதல்லாமல் எனக்கு வேறேதும் அனுபவப்பட என்னை எழுதிப் போகிறவன் அனுமதிக்கவில்லை.

அவன் முணுமுணுக்க, வீராவாலி நின்று திரும்பிப் பார்த்து நாம் இடம் மாற்றிக் கொள்ளலாமா என்று நந்தினியைக் கேட்கிறாள். அப்படி என்றால்?

நீ செத்த மயிலைச் சுமந்து இந்த வைத்தாஸோடு போகம் செய்யப் படி ஏறி நட. நான் நீயாக, ஆடும் மயிலின் ஓவியத்தோடு, புனிதம் சுமந்து உன் இடத்தில் வந்து விடுகிறேன். எனக்கு இந்த உபசாரங்கள், மரியாதைகள் எல்லாம் வேண்டும். போகம் அலுத்துப் போய் விட்டது.

நந்தினியாவதில் உனக்கென்னடி சந்தோஷம்? வீராவாலியின் கன்னத்தில் கிள்ளி விசாரிக்கிறாள் நந்தினி.

நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? நேற்று இரவு உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்? நல்ல முறையில் சீரணமானதா? நீர் பிரிந்ததா? இரவு நல்ல உறக்கம் கிடைத்ததா? விடியலில் பறவைகள் ஜன்னலில் வந்து பாடினவா? தேத்தண்ணீர் செய்து கொடுக்கும் பெண் ஊழியர் குறித்த நேரத்தில் வந்தாரா? புதியதாகக் கறந்த பசும்பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்தார்களா?

அவள் நிறுத்தி நிதானமாகச் சொல்ல, பதறிப் போய்க் கைகாட்டி நிறுத்தினாள் நந்தினி. அடுத்த ராணுவத் தலைவர் ஆட்சியைப் பிடிக்க, வீராவாலியை நந்தினி இடத்தில் வைத்துத் தொழத் தொடங்குவார்கள். நந்தினி தப்பி ஓடி, வீராவாலியாக மயிலின் சவம் சுமந்து, வைத்தாஸ் பின்னால் தொடர்ந்து வந்து தன்னைக் கூடுவான் என்று எதிர்பார்த்து நடக்கிற மாடிப்படிகள் அந்தரத்தில் நிற்கக் கூடும். இந்த வைத்தாஸும் எழுந்து வந்த புத்தகத்துக்குள் போய்த் திரும்ப மறைவான். அவனை எழுதியவன் மீண்டும் அவனை மிருகமாகக் கலவி செய்ய விதிப்பான். இன்னொரு வீராவாலி அவனுக்குக் கிடைப்பாள். நந்தினியைத் தெருவில் உருட்டித் தள்ளுவார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2024 20:08

January 5, 2024

பதினைந்து புத்தகங்களும் பத்து நண்பர்கள்


நேற்று மாலை ஸ்நேகா பதிப்பக ஸ்டாலில் தயங்கித் தயங்கி அரசூர் வம்சம் நாவல் பற்றி வாசிப்பனுபவம் பகிர்ந்து கொண்ட இளைஞர்…

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஸ்டாலில் [

அருண் கொலட்கர் கவிதை ஈர்ப்பு மூலம் நண்பரான சொல்வனம் நம்பி..

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்ட விழாவில் நண்பரான மீனாட்சிசுந்தரம் முரளி…

என் ஒவ்வொரு நூலும்ஒரு பிரதி வாங்கி கையெழுத்துப் போட வைத்த மதராஸ் யூத் காயர் – ஐ ஒ பி சக அதிகாரி நண்பர் ஸ்ரீவத்ஸா

விஷ்ணுபுரம் விழாவில் அருமையான இலக்கிய க்விஸ் நடத்தும் நண்பர் செந்தில்

ஆர்வமுள்ள இன்னும் 5 வாசக நண்பர்கள் ..

தோழமை என்று கரம் நீட்டிய பத்து பேரைச் சந்தித்த மனநிறைவோடு கார் பார்க்கிங் நோக்கி நடந்தேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2024 20:20

January 4, 2024

சென்னை புத்தகக் காட்சியில் இன்று நானிருப்பேன், வருக சந்திக்கலாம்

இன்று (ஜனவரி 5, வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி – இரவு 7:30 வரை சென்னை புத்தகக் காட்சியில் நானிருப்பேன். என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஸ்டாலில் என்னைச் சந்திக்கலாம்.

ஒரு சொல், ஒரு புன்சிரிப்பு, நீங்கள் பேச நான் கேட்பது என்று ஒரு நிமிடத்தில் நேயம் பாராட்டிக் கடந்து போகலாம்.

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்டுள்ள / மறுவெளியீடு செய்துள்ள என் படைப்புகள் =

1) மயில் மார்க் குடைகள் – சிறுகதைத் தொகுப்பு

2) பெருநாவல் மிளகு

3) தமிழின் முதல் fantasy நாவல் -தினை அல்லது சஞ்சீவனி

மறுபதிப்பு காணும் படைப்புகள்

1) அரசூர் நாவல் வரிசை

அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே

2) பயோ பிக்‌ஷன்
நெம்பர் 40, ரெட்டைத் தெரு, தியூப்ளெக்ஸ் வீதி

3) நெருக்கடி காலச் சூழலைச் சொல்லும் நாவல்- 1975

4) 75 வருடப் பின்னணியில் நாவல் – ராமோஜியம்

5) மலையாள iconic novel மொழிபெயர்ப்பு – பீரங்கிப் பாடல்கள்

6) இரா.முருகன் குறுநாவல்கள் (புதிய படைப்புகள் சேர்க்கப் பட்ட நூல்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2024 18:55

January 3, 2024

கடவுளின் சகோதரியும் வரவேற்பறையில் ஆடும் மயிலும்

வாழ்ந்து போதீரே, அரசூர் நாவல்களில் நான்காவது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக வந்திருக்கிறது. நூலில் அத்தியாயம் 4இல் இருந்து

மிகவும் சாதாரணமான விஷயங்களைப் பற்றிக் கரிசனம் மேலிடக் கேட்கப் போகிறீர்கள் என்று பகடியாக அவள் கோர்த்துச் சொன்னதை வானொலியில் ஒலிபரப்புவார்களாம். நல்ல கூத்து இது.

வைத்தாஸ் இருக்கும் இடத்தில் அந்த ஒலிபரப்பு போய்ச் சேரலாம். மற்ற நாடுகளில் இது ஒற்றர்களாலும், அரசாங்கப் பிரதிநிதிகளாலும், அமைச்சர், நிர்வாக அதிகாரிகளாலும் மறைபொருள் தேடிக் கவனமாகக் கேட்கப் படலாம். இந்த நாட்டின் தற்போதைய நிலை பற்றிய கவலைகளோ, மகிழ்ச்சியோ பரவலாக எழுந்திருக்கலாம். நந்தினி பேசி அதெல்லாம் ஏற்பட வேணுமா?

நேரே விஷயத்துக்கு வந்து விட்டாள் நந்தினி.

நான் போக வேண்டி இருக்கிறது. இனியும் இங்கே தங்கியிருக்க விரும்பவில்லை. வைத்தாஸோடு இருக்க, என் குடும்பத்தோடு இருக்க. எனக்கு உடனே புறப்பட வேணும். எல்லையில் விட்டால் நானே போய் விடுவேன். ஒரு துணையும் வேண்டாம். காசு பணமும் மற்றதும் வேண்டாம்.

அதிகாரி நம்ப முடியாத சொற்களைக் கேட்க நேர்ந்தவரின் முக பாவத்தையும் பதறும் உடல் மொழியையும் கொண்டவராக ஒரு வினாடி தலை குனிந்து நின்றார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கியது மூன்று முறையும் மேலே நகராமலேயே நின்று விட்டது.

இன்னும் கடுமையாகச் சொல்லலாமா என்று நினைத்தாள் நந்தினி. வேண்டாம். உயிருக்கும் மானத்துக்கும் இங்கே பாதுகாப்பு கிடைக்கிறது. இருக்க இடமும் தின்னச் சோறும் சகல வித மரியாதையோடு கிடைக்கிறது. உடுதுணி புதிதாக வேண்டும் என்று கழிப்பறைச் சுவருக்கு முன் நின்று முணுமுணுத்தாலும் இருபத்து நாலு மணி நேரத்தில் நாட்டுத் தலைவர் தன் முக்கியமான அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கிறார். மாறி மாறி வரும் அரசாங்கத் தலைமையை மனதில் கொள்ளாமல் எல்லாமும், எல்லோரும், எல்லா ஆட்சியும், அதனால் சுகப்படுகிறவர்களும், துக்கப் படுகிறவர்களும் ஒன்றே தான் என்றும், தானே கடவுளின் சகோதரி என்றும், தன் சகோதரனே கடவுள் என்றும் பார்க்கப் பழகி விட்டால் இந்த வாழ்க்கையும் இனியதாகவே இறுதிவரை போய் ஓயலாம். நாளடைவில், இடுப்புக்குக் கீழே மரத்துப் போய், வெளியே நடக்க முடியாமல், கட்டைக் கால்களோடு, இருப்பிடத்திலேயே சுவரைப் பிடித்தபடி நகர்ந்து அருள் பாலிக்கும் முது பெண்மணியாவாள் அவள். வைத்தாஸ் இல்லாத உலகம் அதன் நியதிகளோடும் எதிர்பார்ப்புகளோடும் இயங்கும். இதைக் கடந்து பழைய அனுபவங்களின் ஆசுவாசத்தை நோக்கித் திரும்பிப் போக முற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். தானே அதை வருவித்துக் கொள்ள வேண்டுமா?

நந்தினி கண் மூடி இருந்த நிலை மாற்றி மெல்ல எழுந்து நின்றாள்.

கவலை வேண்டாம். மயில் ஆடிக் கொண்டிருக்கும் வரை நான் இங்கே இருப்பேன். எனக்கான விதிப்பு அது என்பதை அறிவேன். நட்டாற்றில் விட்டு விட்டுப் போக மாட்டேன். ஆயாசம் சற்றே ஏற்படும்போது இதை எல்லாம் விலக்கி நடந்து விடலாமா என்று தோன்றுகிறது. நொடி நேரம் தான். மனம் மறுபடி தெளிவு பெறுகிறது. இப்போது என் மனதில் அந்தப் பறவை ஆடுகிறது.

வரவழைத்துக் கொண்ட குளிர்ந்த குரலில் அவள் அலுப்பை மறைத்தபடி சொன்னாள்.

நந்தினியின் காலடிகளை நோக்கி நீட்டிய கைகளைத் தன் இரு கண்ணிலும் வைத்துக் கொண்டார் தலைவர். இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று முன் அறையில் இருந்தவர்களோடு சொல்லியபடி கார் ஏறிப் போனார்.

அவ்ர் போய் வெகு நேரம் சென்றும் அவரிடம் கேட்க நினைத்ததும் பொங்கிப் பொங்கி வந்து அடங்கும் ஆத்திரமும் மனதிலேயே தங்கி அலையடித்து இருக்க படுக்கையில் உட்கார்ந்திருந்தாள் நந்தினி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2024 18:27

January 2, 2024

வெண்மை குறைந்த சீனி சேர்த்த, பால் அதிகம் கலக்காத தேநீர் தங்களுக்கு வந்து சேர்ந்ததா?

வாழ்ந்து போதீரே நான்காவது அரசூர் நாவலாகும். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. நாவலின் மூன்றாம் அத்தியாயத்திலிருந்து =

நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? நேற்று இரவு உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்? நல்ல முறையில் சீரணமானதா? இரவு நல்ல உறக்கம் கிடைத்ததா? விடியலில் பறவைகள் ஜன்னலில் வந்து பாடினவா? தேத்தண்ணீர் கலந்து கொடுக்கும் உதவியாளர் குறித்த நேரத்தில் வந்தாரா? புதியதாகக் கறந்த பசும்பாலை அரசு பண்ணையின் தலைவர், மூத்த ஊழியர்கள் மூலமாகக் கொடுத்து அனுப்பியிருந்தாரா? அது நேரத்துக்கு வந்ததா? தேயிலையைப் பாலில் கொதிக்க வைத்து நீங்கள் விதித்த வெப்ப அளவுக்குக் காய்ச்சப் பட்டதா? நீங்கள் விரும்பியபடி வெண்மை குறைந்த சர்க்கரை சரியான அளவில் சேர்க்கப் பட்டுத் தேநீர் அருந்தக் கிடைத்ததா?

நந்தினி பேசி நிறுத்தினாள். மூச்சு வாங்கியது. கோப்பை கழுவுவதைப் பற்றி விட்டுப் போனதே என்று ஒரு எண்ணம் வந்து நழுவியது. இன்னொரு தடவை அதையும் சேர்த்து முழுவதுமாகச் சொல்லி விசாரிக்கலாமா?

புதிய ராணுவத் தலைவர் எல்லா மரியாதையும் தொனிக்க, சற்றே முன் சாய்ந்து நந்தினி தொடுத்த கேள்விச் சரங்களைச் செவிப்படுத்தி, கைகளை விரைப்பாக வைத்து நின்று கொண்டிருந்தார். கேள்விகளின் மழை ஓய்ந்ததும் அதே மரியாதையோடு அவர் பதில் சொல்வார் என்று நந்தினிக்குத் தெரியும்.

கடவுளின் சகோதரி மகிழ்ச்சியாக இருப்பதையும் நகைச்சுவையாகப் பேசுவதையும் எங்களின் பாக்கியமாகக் கருதுகிறோம். இந்த மகிழ்ச்சி நாடு முழுவதும் இப்போது எதிரொலிக்கும். ஆடும் பறவைகள் முன்னறையில் சிறகு விரித்து ஆடி வாழ்த்தும் வீட்டில் ஒலிக்கும் உங்களுடைய புனிதமான குரலைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன். நாட்டு வானொலியில் இன்று ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் அது ஒலிபரப்பாக உத்தரவு செய்கிறேன். இந்த ஒலிபரப்பைக் கேட்பது எல்லோருக்கும் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. பள்ளிகளிலும் ரேடியோக்கள் கொடுத்திருப்பதால் உங்கள் குரல் கேட்ட பிஞ்சு நெஞ்சங்களில் நல்ல சிந்தனைகள் மேலெழுந்து வரும். சர்க்கரைத் தொழிற்சாலைகளிலும், உணவு விடுதிகளிலும், மின்சார மயானங்களிலும், போக்குவரத்து வாகனங்களிலும், இரும்புத் தளவாடங்கள் உருவாக்கும் தொழில் நிறுவனங்களிலும், கசாப்புக் கடைகளிலும் இந்த நல்ல அதிர்வுகள் பரவி சகலமானவர்களின் நினைப்பும் செயலும் மேம்படட்டும்.

உடல் வளைந்து நின்று பேசும்போது தொப்பி கீழே விழாமல் ஜாக்கிரதையாக ஒரு கையால் பற்றியபடி ராணுவத் தலைவர் பேச, நந்தினிக்கு முதல் தடவையாகச் சிரிப்பு வந்தது.

இந்த மாதிரித் தானே மிகவும் சாதாரணமான விஷயங்களைப் பற்றிக் கரிசனம் மேலிடக் கேட்கப் போகிறீர்கள் என்று பகடியாக அவள் கோர்த்துச் சொன்னதை வானொலியில் ஒலிபரப்புவார்களாம். நல்ல கூத்து இது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2024 19:24

January 1, 2024

நனவிடை தோய்தல். உணவிடை வாழ்தல்

அரசூர் நாவல் வரிசையில் 4வது புதினம் வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நூலில் இருந்து

நிறுத்து நிறுத்து நிறுத்து.

நடுரோட்டில் தூறல் வலுத்த ஈரத்துக்கு இடையே போய்க் கொண்டிருக்கும் பஸ்ஸின் உள்ளே இருந்து எட்டிப் பார்த்துக் கூச்சல் போட்டான் திலீப். எதேதோ யோசித்தபடி வழக்கம் போல் ஸ்டாப்பைத் தவற விட்டாச்சு.

மதராஸிகள் அதிகம் குடியிருக்கும் பிரதேசங்களில் மராத்தி இளைஞர்கள் ஊரே எனக்கு சொந்தம் என்ற மமதையோடு போகிற மாதிரிப் பார்த்துக் கொண்டு திலீப் நிதானமாக நடந்து முன்னால் போனான். அவனுக்கு முன்பாகக் கூட்டமாக நிற்கும் எல்லோரையும் விலகும்படி அசல் விதர்பா மராத்தியில் கேட்டுக் கொண்டு அவன் முன்னேற, கண்டக்டர் அவசரமாக விசில் ஒலித்து வண்டியை நடுத் தெருவில் உடனடியாக நிறுத்தச் செய்தான். சேனைக் காரன். நாளைக்கே மளமளவென்று விரார் கி சோக்ராக்களும் பாந்த்ரா கா லட்காக்களும் மேலே வந்து எலக்ஷனில் ஜெயித்து மந்திராலயத்தில் மினிஸ்டராக உட்காரலாம். யாரென்று பார்க்காமல் மரியாதை தருவது நல்லது என்ற முன்னேற்பாடு கண்டக்டரின் கண்களில் மின்னியதைக் கண்டு திலீப் திருப்திப் பட்டான்.

இறக்கி விட்டுக் காத்திருந்த பஸ் கண்டக்டரைப் போகச் சொல்லிக் கையசைத்தபடி வலது புறமாகத் திரும்பி நடந்தான் அவன்.

வீட்டு வாசல் இருட்டில் இருந்தது. உள்ளே மங்கின வெளிச்சத்தில் அம்மா குரல் நவ்ய நவ்ய கத்யா என்று லாவணிப் பாட்டாக மேலெழுந்து வந்தது.

சாதத்தை முழுங்கிட்டுப் பாடேண்டீ. பாட்டு எங்கே ஓடியா போகும்? அவன் தான் போய்ட்டான். ஓடினானோ நொண்டிக் காலாலே கெந்திக் கெந்தி நடந்தானோ ஒரேயடியாப் போய்ச் சேர்ந்தாச்சு. உனக்கு ஒண்ணாவது தெரியறதா? பரப்பிரம்மம்டீ நீ. எங்க அவர் மாதிரி, அதாண்டி, உன் மாமனார். ஆக்காட்டுடி லண்டி முண்டை. சோறாவது ஒழுங்காத் தின்னத் தெரியறதா?

கற்பகம் பாட்டி தன் மருமகளைக் கொஞ்சுகிற நேர்த்தி அந்த லண்டி முண்டையில் நிரம்பி வழியும் வாத்சல்யத்தில் தெரியும்.

இருட்டிலேயே நின்று கொண்டிருந்தான் திலீப். அம்மா மராத்தியில், சோறு வேணாம், பரமா எஜ்மானைக் கூட்டி வா கிழவி என்று யார் என்ன என்ற போதமின்றி கற்பகம் பாட்டியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்பாவை அதிக மரியாதையோடு அப்படித்தான் கூப்பிடுவாள் அவள்.

குளிக்க மாட்டேன்னு அப்படி என்ன அடம்? தலை மயிர் சிக்கு பிடிச்சு எட்டு ஊருக்கு நாறறது. இங்கே என்ன பட்டணம் மாதிரியா, தண்ணிக் கஷ்டமா ஒண்ணா? குழாயைத் தெறந்தா கங்கா ஸ்நானம். உங்க மாமனாருக்கு குளிக்கறதுன்னா அப்படி ஒரு இஷ்டம். செயலா இருந்தப்போ ரொம்பவே செயலா இருப்பார். நீயும் வாடி கல்ப்பு, சேர்ந்தே இதை எல்லாம் முடிச்சுடுவோம்பார். என்னோட கூட ஜலக்ரீடை பண்ணனுமாம் கிழத்துக்கு. எப்போ? ரிடையர் ஆனதுக்கு முந்தின வருஷம். தீபாவளியன்னிக்கு. கருமம் கருமம்.

பாட்டி சிரிப்பில் நாணம் கலந்து இருந்ததை திலீப் உணர்ந்தான். நீலகண்டன் தாத்தா நாய் மாதிரி லோல்பட்ட கடைசி ஐந்து வருஷத்தைக் கழித்துப் பார்த்தால் ராஜபோகமாகத் தான் மூச்சு விட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்.

இன்னும் கொஞ்சம் தயிர்சாதம் எடுத்துக்கோடி தங்கமே. முருங்கைக்காய் சாம்பார் பிடிச்சிருக்கா? ஊற ஊறத்தான் ருஜி. காலம்பற வைக்கற முருங்கை சாம்பாரை ராத்திரி தான் இவர் ஒரு பிடி பிடிப்பார். அன்னிக்கு நாலு தடவை.

பாட்டி, ஏன் இருட்டிலே உக்காந்திருக்கீங்க ரெண்டு பேரும்

திலீப் உள்ளே நுழையும்போது உற்சாகமாக உணர்ந்தான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2024 20:02

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.