இரா. முருகன்'s Blog, page 20

February 15, 2024

வேலு நாயர் சாயா பீடிகைக்கு வந்த பணிமுடக்கு

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காம் புதினம்
எதுக்கு? நீ வெக்கமே துளிக்கூட இல்லாம சொளசொளன்னு எச்சலை வடிய விட்டுண்டு பார்க்கற போது நானும் ஏன் நோக்கணும்? எத்தனை பாத்து மனசு திருப்தி வரும் உனக்கு? ஒரு ஆயிரம்? பத்தாயிரம்? லட்சம்? கோடி மாரிடம்?

அகல்யா கேட்பாள்.

இந்த ஊரில் வேறே என்ன உண்டு கோவிலையும் பால் பாயசத்தையும் இதையும் தவிர?

படகு. பக்கத்தில் உட்கார்ந்து வருகிறவளின் கிறங்கடிக்கும் வியர்வை வாடை. வேலு நாயர் சாயாக்கடை. அங்கே சுவரிலே மாராப்பு இல்லாது ஒய்யாரமாக நிற்கும் மலையாள சுந்தரிகளின் கண்ணைக் குத்தும் சினிமா போஸ்டர். புட்டும் கடலையும். பாப்பச்சன் தையல் கடை. அங்கே சாயந்திரம் ரேடியோவில், மனம் உருகி உருகி சம்ஸ்கிருதம் கலந்து பாடும் சினிமா கானம். எல்லாம் உண்டே.

கடலில் மீன் பிடிக்கும் முக்குவனும் சமஸ்கிருதத்தில் பாடுகிற அபூர்வ பூமியா இது? அகல்யா மேலும் கேட்பாள். திலீபுக்குப் பதில் தெரியாத கேள்வி அதெல்லாம். பாட்டைக் கேட்டால் போதாதா? ஆராய்ச்சி எதுக்கு?

வேலு நாயர் கடை வாசலில் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. கூட்டமாக, பரபரப்பு தொற்றிக் கொள்ள எல்லோரும் எல்லாத் திசையிலும் ஓடி நடந்து கொண்டிருந்தார்கள். வேலு நாயர் என்ன இழவுக்காகவோ எலுமிச்சம்பழ மிட்டாய் அடைத்த பாட்டிலைத் தலை நிற்காத கைக்குழந்தை மாதிரி அணைத்துப் பிடித்துக் கொண்டு கடைக்கு உள்ளே ஒரு காலும் வெளியே மற்றதுமாக இருந்தான். வேலு நாயர் கடையே உலகின் சகல இயக்கங்களுக்கும் மையம் என்கிற மாதிரி சைக்கிள்களில் வந்து இறங்கி ஓடி வருகிறவர்களும், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடி, போகிற வாக்கில் ஏறி ஓட்டிப் போகிறவர்களுமாக திலீப் வயது இளைஞர்கள் அவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வேலை கிரமத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

ப்ராதல் கழிக்கான் பாடில்ல.

திலீபைப் பார்த்து ஏழெட்டுப் பேர் தன்மையாகவும், கண்டிப்பு மிகுந்தும், விளக்கம் கொடுக்கும் கருணையோடும் சொன்னார்கள். வேலு நாயர் அந்தக் கூட்டத்தில் இல்லை.

என்ன ஆச்சு? ஏதாவது ஜகடாவா?

காலை எட்டரை மணி லோனாவாலா கல்யாண் லோக்கல் பேட்டைத் தகராறு காரணம் நின்றுபோய் ஊரே முடங்கிப் போன சோகம் திலீபுக்கு அனுபவப்பட்டது. இங்கேயுமா அது போல கஷ்டம்? வீடு கூட இல்லாத இடத்தில் வெறும் வயிற்றோடு எப்படி வேலை செய்ய?

பணிமுடக்கு.

சந்தோஷமாக எல்லோரும் சொன்னார்கள். வேலாயுதன் நாயர் அதில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவன் முகத்திலும் அந்தக் கூட்டத்தின் பெருமிதமான களை ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் திலீப். இன்றைக்கு வேறே வேலை செய்ய வேண்டியதில்லை என்ற நிம்மதியாக இருக்கும் அது. ஊரை முடக்கி வீட்டில் முடங்க வைக்க மாதம் ஒரு நிகழ்ச்சியாவது வந்து விடுகிறது என்று வேலு நாயர் உடைந்த இந்தியில் திலீபிடம் சொன்னான். அதில் குறையேதும் அவனுக்கு இருப்பதாக திலீப் உணர்ந்து கொள்ளவில்லை.

என்ன காரணத்துக்காக ஸ்டிரைக், யாரெல்லாம் பணி முடக்குகிறார்கள், எப்போதிலிருந்து எப்போது வரை, இன்றைக்கு மட்டுமா நாளைக்கும் அதற்கு அப்பாலும் நீளுமா? போகிற போக்கில் மிக வேகமான மலையாளத்தில் ஏதோ சொல்லிப் போகிறார்கள் எல்லோரும்.

குட்டநாடு பஞ்சாயத்து எலக்‌ஷன் தகராறு காரணமாக ஸ்டிரைக், கேரள காங்கிரஸ் ஒரு பிரிவுக் காரர்கள் செய்கிறார்கள் என்று ஒரு வழியாக துண்டு துணுக்காகத் தெரிய வந்தபோது வேலு நாயர் சாயா பீடிகையை அடைத்துப் பூட்டி விட்டு ஒரு பீடி வலித்தபடி சைக்கிளில் வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2024 18:45

February 14, 2024

முழுக்கக் கோவிலையே சார்ந்து இருக்கும் ஊர். கோவிலில் ஒலிக்கிற சங்கும் தாள வாத்தியச் சத்தமும் தான் ஊரை விடிகாலையில் எழுப்புகிறது.

சின்னக் குளிரோடு விடியும் இன்னொரு பொழுது. திலீப் நேரம் பார்த்தான். ராத்திரியும் இல்லாத, அதிகாலையும் வந்து சேராத மூன்று மணி. பம்பாயை நோக்கி குட்ஸ் வண்டிகளில் லோனாவாலாவில் இருந்து எருமைகளும் பசுக்களும் பயணம் செய்யத் தொடங்கும் நேரம் இது. தாதர் யார்டு பக்கம் நிற்கும் விசாலமான ரயில் பெட்டிகளுக்குள் கட்டி வைத்தபடி அவற்றைக் கறந்து பால்காரர்கள் சைக்கிளில் தாதர் தெருக்களில் வலம் வருவதும், எலக்ட்ரிக் ரயிலில் கூட்டம் ஆரம்பிப்பதும் கிட்டத்தட்ட ஒரே நேரமாக இருக்கும்.

இந்த ஊர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அம்பலம் அம்பலம் என்று முழுக்கக் கோவிலையே சார்ந்து இருக்கும் ஊர். கோவிலில் ஒலிக்கிற சங்கும் தொடர்கிற தாள வாத்தியச் சத்தமும் தான் ஊரை விடிகாலையில் எழுப்புகிறது. அப்போது தாதர் பால் வியாபாரிகள் காலி பால் பாத்திரங்களோடும், கறந்த மாடுகளோடும் லோனாவாலா திரும்பத் தொடங்கியிருப்பார்கள்.

திலீப் கடைத் தெருவில் இந்நேரம் திறந்திருக்கக் கூடிய வேலு நாயர் சாயா பீடிகைக்கு நடந்து கொண்டிருந்தான். விடிகாலை தரக் கேடில்லாத சாயாவும், நல்ல பசி எடுத்து வேறு எதுவும் சாப்பிடக் கிடைக்காத பொழுதில் வேக வைத்த முட்டையும் வேலு நாயர் தயவால் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆபீசிலேயே தங்கி அங்கேயே ரெண்டு மேஜைகளை இழுத்து நீட்டிப் போட்டு உறங்கிப் பழகிப் போயிருக்கிறது.

ஆபீஸிலேயே குளிக்கவும் செய்யலாம் தான். ஆனால் அந்தத் தண்ணீர் தலைமுடியை ஒரே நாளில் சிக்குப் பிடிக்கச் செய்து விடுகிறது. சோப்பும் திட்டுத் திட்டாக உடம்பிலேயே தங்கி ஊரல் எடுக்கும். இந்தக் கஷ்டத்துக்காகத் தான் அம்பலக் குளத்தில் விடிகாலை பொழுதில் குளிக்கப் போவது.

அதில் இன்னொரு சந்தோஷமும் உண்டு. கிழங்கு கிழங்கான இளம் பெண்கள் குளிக்கப் போகும் நேரம் அது. அது என்னமோ இந்தப் பிரதேசத்துப் பெண்களுக்கு ஸ்தனபாரமாகவும் பின்பாரமாகவும் உதட்டிலும் கூடுதலாகச் சதை வைத்து அனுப்பி விடுகிறான் பிரம்மன். திலீபுக்கு அம்பலக் குளத்துக் கரையில் அதெல்லாம் உடுப்பு மறைக்காமல் கணிசமாகப் பார்க்கக் கிடைக்கிறது இப்படியான காலை நேரங்களில் தான். எத்தனை முகங்கள். எத்தனை ஸ்தனங்கள், பிருஷ்டங்கள். முகத்தைப் பார்த்து அடையாளம் காண்பதை விட மற்றதை வைத்துக் காண்பது திலீபுக்கு சுலபமாகப் போயிருக்கிறது. அந்தப் பருத்த உதடுகளும் வெகுவாக இஷ்டம்தான்.

இங்கே அவன் விதவிதமான முலைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அகல்யா குளித்து பருத்திப் புடவை உடுத்தி சின்ன டப்பாவில் அவல் உப்புமா அடைத்து எடுத்துக் கொண்டு வேலை பார்க்கும் இடத்துக்கு ரயில் பிடிக்க ஓடிக் கொண்டிருப்பாள். அவளை ஒரு நாளாவது இங்கே கூட்டி வ்ந்து எல்லாம் காட்டித் தர வேண்டும்.

எதுக்கு? நீ வெக்கமே துளிக்கூட இல்லாம சொளசொளன்னு எச்சலை வடிய விட்டுண்டு பார்க்கற போது நானும் ஏன் நோக்கணும்? எத்தனை பாத்து மனசு திருப்தி வரும் உனக்கு? ஒரு ஆயிரம்? பத்தாயிரம்? லட்சம்? கோடி முலை?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2024 19:55

February 13, 2024

அந்தக் காலத்தில் அர்ஜூன நிருத்தம் இல்லை, மயில்பீலி தூக்கம் தான் பழைய பெயர்

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து (வரிசை தப்பாமல்)

எல்லோரையும் ஒன்பது மணிக்கு வரச் சொல்லி இருக்கேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துலே இங்கே இருப்பாங்க.

நான் கூட அதுக்குத் தான் வந்தேன்.

துடைப்பத்தை உயர்த்திப் பிடித்தபடி முன்னால் வந்த சாமுவைப் பார்த்த பெரியம்மா கொஞ்சம் பின்வாங்கினாள். இவனுக்கும் அர்ஜுன் நிருத்தத்துக்க்கும் என்ன தொடர்பு?

அர்ஜுனன், சகாதேவன் எல்லாம் அப்புறமா வந்தது. இங்கே இதை மயில்பீலி தூக்கம்னு தான் சொல்றது. பகவதி கோவில் உற்சவத்திலே நான் ஆடுவேன்.

குடைக்கார சாமு சொன்னான். எங்கே ஆடு பார்க்கலாம் என்றார் சாஸ்திரி ஏப்பம் விட்டுக் கொண்டு.

பன்னி மாதிரி கண்டதையும் மேஞ்சுட்டு வந்த திமிர். திலீப் நினைத்தான்.

திலீப், நீ போய்ப் பசியாறிட்டு வா.

பெரியம்மா அனுப்பி வைத்தாள்.

‘இந்தா நூறு ரூபாயாத் தான் இருக்கு. சாப்பிட்டுட்டு பத்திரமா மீதி கொண்டு வந்துடு’

பாக்கெட்டில் இருந்து நிஜாம் பாக்கு வாசனையோடு பணம் எடுத்து நீட்டிய பிஸ்கட் சாஸ்திரியை ஒரு நாள் திலீப் சொறிநாய் பாதி தின்னத் தரையில் விழுந்த பிஸ்கட் எடுத்துத் தின்ன வைப்பான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2024 19:10

February 12, 2024

நாலு தடவை அடுக்கு தீபாராதனை மாதிரி தும்மல் போட வைத்த அர்ஜுன நிருத்தம்

வரலாமா? கேட்டபடி யாரோ படி ஏறி உள்ளே வந்தார்கள். நேற்று பகலில் இருந்து திலீப் இப்படி உள்ளே கடந்து வருகிறவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

தூக்கத்துக்கு ஆள் எடுக்கற யேஜென்சி தானே?

வந்தவன் கேட்க, மர ஸ்டூலில் உட்கார்ந்திருந்த வயசன் சிரிக்க ஆரம்பித்தான். திலீபுக்கும் சிரிப்பு வந்தது. வந்தவர்கள் இப்படித்தான் விசாரிக்கிறார்கள். பத்திரிகையில் விளம்பரம் பார்த்து விட்டு வருகிறவர்கள்.

அர்ஜுனன் களிக்கு தான் ஆள்கார் வேணும்னு கேட்டது. தூங்கி மரிக்க இல்லே கேட்டோ சாமு மாஸ்டரே.

வயசன் பதில் சொன்னான். வந்தவன் தோளில் ஒரு குடை ஆடியபடி இருந்தது.

அர்ஜுன நிருத்தம் ஆடக்கூடிய கலைஞர்கள் தேவை. இதுதான் மலையாளப் பத்திரிகைகளில் சிறு வரி விளம்பரமாக வெளிவரக் கொடுத்திருந்தது. இன்னும் நான்கு நாள் தொடர்ந்து வெளியாகும். பத்திரிகைப் பிரதிகள் இங்கே அனுப்பப் படுகின்றன.

காசு கொடுத்தா துங்கி மரிக்கவும் செய்யலாம்.

வந்தவன் விட்டத்தைப் பார்க்க, திலீப் உட்காரச் சொன்னான்.

ஆடணுமா அதோ பாடணுமோ?

அவன் விசாரிக்க, நல்லா சாயா உண்டாக்குவாராக்கும் சாமு மாஸ்டர் என்று நேரங்கெட்ட நேரத்தில் அவனுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தான் வயசன்.

இந்த வெடிக்காரனை என்னத்துக்கு கூட்டு சேர்த்திருக்கீங்க? வெளிநாட்டில் இருந்து யாராவது வந்தா சாமு எங்கேன்னு தான் கேட்பாங்க. வைத்தாஸ் கேட்டிருக்கீங்களா? ஆப்பிரிக்க நாட்டு பிரதமரோ யாரோ. இங்கே வந்து பரிசல் விட்டு இறங்கினதும் சாமு எங்கேன்னு தான் தேடுவார். நோட்டபுள்ளி.

அது என்ன வெடிக்காரன்? வயிறு சரியில்லாத மனுஷரா நீங்க?

திலீப் வயசனை விசாரிக்க, குடையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு விவரித்தான் சாமு.

மூன்று தலைமுறையாக வயசன் குடும்பம் அம்பல வெடிவழிபாட்டு சேவை நடத்திக் கொண்டிருப்பது. அம்பலம் தொழ வந்து காசு கொடுக்கிறவர்களுக்காக கந்தகத்தில் உருட்டிய வெடி வெடித்து கடவுள் காதில் கேட்க வைக்கிற காரியம் அது.

இந்த வயசனின் மூத்தச்சன் மேல் நக்னனான ஒரு வயோதிகன் பறந்து வந்து விழுந்து வெடித்த வெடியால் மூத்தச்சன் கால் விரல் போனது தொடங்கி சாங்கோபாங்கமாக எடுத்துச் சொன்னான் சாமு. ஊரிலே வௌவால் கூட்டமாக வந்ததும், வயசனின் கண்ணூர்ப் பயணமும், குறி கடியுண்டதும் அதே ஆர்வத்தோடு சொல்லப்பட, மெய்க்கீர்த்தி பாடிக் கேட்ட அரசன் மாதிரி மகிழ்ந்து பொக்கைவாய்ச் சிரிப்போடு உட்கார்ந்திருந்தான் வயசன்.

ஒரே தூசி துப்பட்டையா இருக்கே. பெருக்கலியா திலீப்?

சாஸ்திரி மாமி நாலு தடவை அடுக்கு தீபாரதனை மாதிரி தும்மல் போட்டு புகார்ப் படலத்தைத் தொடங்கி வைத்தபடி உள்ளே வந்தாள்.

ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கு. வந்துடுவாங்க. ஜாடு வாங்கி ரெடியா வச்சாச்சு

திலீப் கவர்மெண்ட் உத்தியோகஸ்தன் மாதிரி சொன்னது சாஸ்திரி மாமிக்குப் பிடிக்கவில்லையோ அல்லது தன்னை வேலைக்கு அஞ்ச மாட்டாள் என்று காட்டிக் கொள்ளவோ அவள் நேரே அறைக் கோடிக்குப் போய் அங்கே சார்த்தியிருந்த துடைப்பம் கொண்டு சரசரவென்று பெருக்க ஆரம்பித்தாள்.

திலீப் பதறி அவள் கையில் இருந்து துடைப்பத்தைப் பிடுங்கி விதிர்விதிர்த்து இனிமேல் இப்படி ஆகாமல் கவனித்துக் கொள்வேன் என்று வாக்குத்தத்தம் செய்து, அவனே பெருக்க ஆரம்பிப்பான் என்று எதிர்பார்த்தாள் போலும்.

எழவெடுத்தவன் உலக்கையை முழுங்கிச் சுக்குக் கஷாயம் சாப்பிட்டவனாக உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தான். அது மட்டுமில்லாமல் அவள் பெருக்க வாகாகக் காலைத் தூக்கி மேஜை மேலும் வைத்துக் கொண்டான் கிராதகன்.

நல்ல வேளையாக வயசன் அவளிடமிருந்து துடைப்பத்தை வாங்கி குடைக்கார சாமு மாஸ்டரிடம் ஒப்படைத்தான். அவனும் குடையை நாற்காலியில் வைத்து விட்டு மாப்பிளா பாட்டு ஒன்றை உரக்க முணுமுணுத்தபடி பெருக்க ஆரம்பித்தான்.

யாரெல்லாம் உத்தியோக பார்க்க வந்தது?

கேட்ட படிக்கு சியாமளா பெரியம்மா உள்ளே நுழைய தன்னை அறியாமல் எழுந்து நின்றான் திலீப்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 12, 2024 19:07

February 10, 2024

திலீப் லண்டனுக்குக் குடி பெயர்ந்து வெள்ளைக்காரனுக்கு அர்ஜுன நிருத்தம் பாடம் எடுப்பான்

ஆராய்ச்சிக் கட்டுரையைப் பெரியம்மா நின்றும் இருந்தும் நகர்ந்தும் வாய்விட்டும், முணுமுணுத்தும், அரை வார்த்தை சொல்லி மற்றது முழுங்கியும் டிக்டேட் செய்யச் செய்ய அதைக் கவனித்து சரியாக டைப் அடித்துத் திருத்தித் திருத்தி, திலீபுக்கும் அர்ஜுன நிருத்தம் பற்றித் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. சாஸ்திரி தம்பதிகளில் அம்மையாருக்குத் தெரிந்ததை விட அது பத்து மடங்கு அதிகம்; சாஸ்திரியை விடவும் தான் என்று அவன் நினைக்கிறான்.

இன்னும் சிரத்தையாக இதுவே வாழ்க்கை என்று திலீப் உட்கார்ந்தால், சியாமளா பெரியம்மாவுக்கும் சாஸ்திரிக்கும் அவன் அர்ஜுன் நிருத்தமும், களரியின் போர்க் கலாசார அடவுகளும் பற்றிப் பாடம் எடுப்பான்.

இந்த பிஸ்கட் கோஷ்டிக்கு எதற்காக செய்யணும்? வவுச்சரில் ரெவின்யூ ஸ்டம்ப் ஒட்டி கையெழுத்துப் போடச் சொல்லி நூற்று முப்பது ரூபாய் மூக்கால் அழும் கும்பல் இது. அவர்களின் ரெவின்யூ ஸ்டாம்ப்களை அவர்களே அவர்களின் பின்னஞ் சந்தில் இறுக்க ஒட்டிக் கொள்ளட்டும். திலீப் வெள்ளைக்காரனுக்கு லண்டனில் பாடம் எடுப்பான். அகல்யாவைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த வெள்ளைக்காரப் பட்டணத்திலோ வேறே எங்கேயோ குடிபெயர்ந்து விடுவான்.

பெரியம்மாவும் பிஸ்கட்களும் இன்றி இப்படி ஒரு குமாஸ்தா உத்தியோகமும் இதுவரை பார்த்தே இருக்காத ஆலப்புழை, அம்பலப்புழைக்குப் பயணமும் கிடைத்திருக்குமா? அகல்யா மனசில் விசாரிக்க, அதானே என்றான் திலீப்.

ஃபீல்ட் ஸ்டடி, சந்திப்பு, பாட்டு ஒலிப்பதிவு, கோவில் கோவிலாகப் போவது, அசாதரணமாக மயில் இறகிலிருந்து உடுப்பு சேர்த்துத் தருகிற தையல்காரர்களின் தொழில் ரகசியம் அறிவது என்று வேலை எல்லாம் ஒரு இடத்தில் இருந்து பார்க்க இடம் தேவைப்பட்டது. பெரியப்பா தில்லியில் இருந்து டெலிபோன் செய்து இங்கே யாரோ மந்திரி உதவி செய்ய இந்தப் பழைய கட்டிடம் கிடைத்தது. கல்யாண சமையல்காரர்களின் வீடாக இருந்து கிறிஸ்துவ இல்லமாகி அதுவும் கழிந்து சர்க்கார் ஆபீசாக இருபது வருஷம் இருந்து பூட்டி வைத்திருந்த ஒண்ணாம் தரம் கல்லுக் கட்டிடம்.

பெரியம்மாவோ சாஸ்திரி தமபதிகளில் ஒருத்தரோ வந்தாலே ஒழிய இந்த இடத்தை விட்டு இப்போது வெளியே போக முடியாது. ஏகப்பட்ட வேலை ஒரே நேரத்தில் ஆரம்பித்திருக்கிறது இங்கே. டைப்ரைட்டர், வெள்ளைக் காகிதம், டேப் ரிக்கார்டர், ஒலிப்பதிவு நாடா என்று எங்கும் நிரம்பி வழிகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 10, 2024 20:35

சாயங்கால நடையும் சந்தியா நடராஜனும்

ஒரு மாதமாகக் காலை ஒரு மணி நேர நடைப் பயிற்சியொடு மாலையில் இன்னொரு 45 நிமிடம் கூடுதல் நடையும் சேர்ந்ததால் ராத்திரி சீராக உறக்கம் வருகிறது.நோய்க்கூறு கண்டது தேய்ந்து மனதின் ஒரு மூலையில் பதுங்கிவிட்டது,

சாயந்திரம் நடையில் ஒரு கூடுதல் சுவாரசியம் உண்டு.வட்டம் கிறங்கிச் சுற்றிவரும் நடைப் பாதையில் நண்பர் சந்தியா பதிப்பக உரிமையாளர் நடராஜனை சந்திப்பது அவ்வப்போது நடக்கும். எப்போதும் உற்சாகமாக வரவேற்கும் நடராஜன் குறுந்தொகையிலிருந்து, சுந்தரர் தேவாரம், வள்ளலார் திருவருட்பா, பாரதி,கல்யாண்ஜி கவிதை வரை பேசியபடி இருப்பார். மாயவரம் என்ற மயிலாடுதுறைக்காரர் என்பதால் மாயூர மனுஷர்கள் ஒரு ஐநூறு சுவாரசியமானவர்கள் பற்றி அவர் நாவல் எழுதத் தொடங்கினாலே பத்து நூல்கள் வரும். அல்புனைவாக எழுதினால் அவ்வளவாக வேண்டி இருக்காது. மாயவரம் அவருடைய முதல் ’எங்கள் ஊர்’ ஷானர் அல்புனைவு, எத்தனை சுவாரசியமான மனிதர்கள் என்பதற்கு ஒரு உதாரணம்- அந்த காலத்தில் காலையில் கட்டைப் பஞ்சாயத்து செய்துவிட்டு சாயந்திரம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றி கல்லூரி பேராசிரியர்களோடு விவாதித்த அந்தக்காலப் பெரியவர்.

உங்க ஊர் பற்றிய அல்புனைவு எல்லாவற்றையும் சேர்த்து ஒரு புத்தகம் எழுதுங்களேன் என்றார் நண்பர் நடராஜன். நல்ல யோசனை எந்த வரிசைப் படுத்தலும் இல்லாத கலைடாஸ்கோப் நூலாக சுவையான ஆவணமாக இருக்கும்.

எழுத ஆரம்பித்து விலக்கிய நான்கு நாவல்களுக்கு அப்புறம் எழுதி முடித்தே தீர்வது என்று எழுத ஆரம்பித்த வாத்திமர் நாவலோடு என் ஊர் நூலும் எழுத வேண்டும்
=

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 10, 2024 06:00

February 9, 2024

எல்லா அடவுகளும் முத்திரைகளும் எதிரியை பயப்படுத்தி அகற்றி நிறுத்தவே ஏற்பட்டவை

அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரேயிலிருந்து= தொடர்ச்சியாக இங்கே

வந்தது முதற்கொண்டு சதா பேசியபடி இருக்கிறான் வயசன். இந்த வயசில் அவனுக்கு ஒருத்தர் வேலை போட்டுக் கொடுத்த பூரிப்போ சந்தோஷமோ வார்த்தையாய் வந்து விழுந்த மணியமாக இருக்கிறது.

எப்போதோ கண்ணூர் போன கதையை வயசன் திலீபுக்கு இது வரை ரெண்டு முறை சொல்லி விட்டான். அவன் சின்ன வயதில் பொண்ணு தோற்றுப் போகிற வனப்பில் இருப்பானாம். கையும் காலும் முகமும் தொடையும் வழுவழுவென்று மினுங்கிய பையன். கண்ணூர் ஓட்டலில் ராத்தங்கிய போது பரிசாரகன் கடித்து விட்டானாம். அது எங்கே என்று அவன் விஸ்தாரமாகச் சொல்ல, திலீபுக்கு அன்னத் திரேஷமாக இருந்தது. வடுப்பட்டு விட்டதாம், அவன் உடம்பே அவனுக்கு வித்தியாசமாகிப் போனதாம். திலீப் நம்பவில்லை என்றால், அதுக்கென்ன, அவிழ்த்துக் காட்டவும் தயாராக இருந்தான் வயசன்..

அகல்யா, வயசன்மாரோட நாறிப் பிடுங்கும் ப்ரத்யேக சமாசாரங்களைப் பார்வையிடவா நான் நாலு நாள் அரசாங்க விஜயமாக கேரளத்துக்கு வந்தேன்?

இங்கே இல்லாத அகல்யாவிடம் புலம்ப, திலீபுக்கு பசி மூண்டெழுந்து வ்ந்தது.

முந்தாநாள் ஆலப்புழையில் பஸ் ஏறுகிற வரை திலீபுக்கும் மற்றவர்களுக்கும் கேரளம் தெய்வங்களின் சொந்த நாடாகவே இருந்தது. மலையாளக் கரை பற்றிய மாதுங்கா மதிப்பீடுகளை அவற்றின் உச்சபட்ச மேன்மையான கற்பிதங்களோடு நம்பத் தயாராக வந்திருந்தார்கள் சியாமளா பெரியம்மாவும் சாஸ்திரி தம்பதிகளும்.

அவர்களுக்கு ஆசுவாசம் அளிக்கும் பூமி கதகளியும், சோபான சங்கீதமும், மயில் தோகையை இடுப்பில் செருகிக் கொண்டு ஆண்பிள்ளைகள் ராத்திரி முழுக்க ஆடும் அர்ஜுன நிருத்தமுமாக இருந்தது.

முக்கியமாக அர்ஜுன நிருத்தம். அதைத் தேடித்தான் மினிஸ்டர் மனைவியான சியாமளா பெரியம்மா இங்கே வந்தது.

பரத நாட்டியமும் கூடியாட்டமும் ஒடிசியும் கதக்கும் அர்ஜுன நிருத்ததில் இருந்து அபிநயங்களைக் கடன் வாங்கியவை என்று பெரியம்மாவின் ஆய்வுக் கட்டுரை சொல்லப் போகிறது. எல்லா நடனமும் யுத்தத்தோடு தொடர்புடையவை என்றும் அது பேசும். எல்லா அடவுகளும் முத்திரைகளும் எதிரியைப் பயப்படுத்தி அகற்றி நிறுத்தவே உண்டானவை எனவும் கூறும்.

களரியில் இருந்து அர்ஜுன நிருத்தம், அங்கே இருந்து பரதம் என்று போர் எல்லோரையும் எல்லாவற்றையும் எல்லாக் காலங்களிலும் கவ்விச் சூழ்கிறது என்று பிஸ்கட் சாஸ்திரி வழிகாட்டலில் பெரியம்மா செய்கிற ஆராய்ச்சியால் அர்ஜுன நிருத்தம் மேம்படுமோ என்னமோ அவளுக்கு டாக்டரேட் கட்டாயம் அடுத்த வருஷம் இந்த நாளில் கிட்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2024 20:00

February 8, 2024

இருமுடி கட்டி விட செண்டை மேளத்தோடு வந்த மாரார்களுமாக மாடுங்கா

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து

கேரளம் திலீப் நினைத்தது போல் இல்லை.

பம்பாய் மாடுங்கா சங்கர மட வைதீகர்களும், ஓணத்துக்கு வாழைக் குலை வாங்கக் குடும்பத்தோடு கும்பலில் புகுந்து புறப்படும் செண்ட்ரல் ரயில்வே டிவிஷனல் கிளார்க் நாயர்களும், ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதம் இருமுடி கட்டி விட செண்டை மேளத்தோடு வந்து சேரும் மாரார்களுமாக அவன் மனதில் எழுப்பியிருந்த உலகம் வேறு விதமாக இருந்தது.

அந்த நிலப் பிரதேசத்தில் விடிய ரெண்டு மணி நேரம் முன்னால் நம்பூதிரிகள் ஆறு, குளம் என்று பார்த்து முழுக்குப் போட்டு விட்டு முன்குடுமி முடிவார்கள். வாசல் திண்ணைகளிலும் கோயில் பிரகாரங்களிலும் உட்கார்ந்து இடைவிடாமல் மயேமயே என்று எல்லா வேதமும் நீட்டி முழக்கி ஓதுவார்கள். அகண்ட ஜபமாகக் கூடி உட்காந்து நாசியில் கை வைத்து ஜபித்துக் கொண்டிருப்பார்கள்.

வெள்ளைப் புடவையும் சந்தனப் பொட்டுமாக, லட்சணமான ஸ்தூல சரீர சுந்தரிகள் கால்களை அகட்டி வைத்து ஆடுவார்கள். கை கோர்த்து வட்ட வட்டமாக சுற்றி வந்து பாடுவார்கள். சதா கும்மியடித்துக் கொண்டிருப்பார்கள்.

உச்ச ஸ்தாயியில் செண்டையும் பெரிய சைஸ் தாளங்களுமாக பெருஞ் சத்தமாக வாசித்துக் கொண்டு மாரார் வகை ஆசாமிகள் சுற்றிச் சுற்றி வருவார்கள. அவர்களோடு, பட்டப்பகல் என்றாலும் கோல் விளக்கு ஏற்றிப் பிடித்துக் கொண்டு கோவில் ஊழியர்கள் அவசரமாக நடந்து போவார்கள்.

இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எல்லாரும் சட்டம் போட்டுக் கட்டாயமாக்கியது போல் தாடி வளர்த்து, சதா கண்ணில் அப்பிய சோகத்தோடு அலைவார்கள். மேலே லேசாகத் தொட்டால் ராக்கிளிகளும், படகுத் துறையில் தனித்து நிற்கும் பெண்களும், யாத்ரிகர்களும், பெருவழி அம்பலங்களும், கடந்து வரும் கீதங்களை ஊர் முழுக்க ஒலிக்கும் ஒரே ஆண் குரலில் துயரம் இழையோடப் பாடத் தொடங்குவார்கள்.

பலாப்பழமும், நேந்திரம்பழ வறுவலும், தேங்காய் துருவியதுமாக எல்லாப் பொழுதும் சாப்பிடக் கிடைக்கிற நிலம் அது. பிரகாரத்தில் வரிசையாக இலை போட்டு கோயில்களுக்கு வருகிறவர்களைக் கட்டாயப்படுத்தி சாப்பிடச் சொல்வார்கள். சோற்றை அள்ளி வீசி, மடி ஆசாரத்தோடு பரிமாறுவார்கள்

நடந்தது என்னமோ இதுதான்.

திலீப் உட்கார்ந்திருக்கும் பழைய கட்டடத்தின் முன்னறையில் குடிக்கத் தண்ணீர் பிடித்து வைத்த வயசன் திலீபைப் பார்த்துச் சொல்லிச் சிரிக்கிறான்.

சுவரில் சாய்ந்து நிற்கிற வயசன் அவன். ஆப்பீசு திறக்கறீங்க எடுபிடி காரியம் செய்ய ஆள்கார் வேணாமா என்று கேட்டு முதலில் படி ஏறி வந்தவன் அவன்.

இருந்துட்டுப் போகட்டும்., காப்பி வாங்கிண்டு வரவும் தண்ணி பிடிச்சு வைக்கவும் வேண்டி இருக்கு.

பிஸ்கட் சாஸ்திரி நியமித்த முதல் ஊழியன் அவன். வயசு எழுபதுக்கு மேல் என்றாலும் அறுபது ரூபாய் மாத சம்பளத்துக்கு மலிவாகக் கிட்டிய ஊழியம் இது என்பதை இங்கிலீஷில் குழுக்குறியாக எடுத்துச் சொல்லி திலீபின் சிரிப்பை யாசித்தார் சாஸ்திரி.

நீங்க சொன்னா அதுதான் சட்டம் என்று மினிஸ்டர் பெண்டாட்டி சியாமளா பெரியம்மா சாஸ்திரியை சிம்மாசனத்தில் வைத்தாள் அப்போது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2024 19:55

February 7, 2024

ஜான் ஹெர்ஸெ எழுதிய ‘ஹிரோஷிமா’ என்ற புத்தகம் தமிழில் வருமா?

எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று புத்தக வரலாறில் இதுவரை ஒரே ஒரு நூலுக்குத்தான் விளம்பரம் ஆனது. ஹிரோஷிமா என்ற அல்புனைவு இது. ஜான் ஹெர்ஸே எழுதியது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானில் பெருநகரமான ஹிரோஷிமா மேல் அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதைக் குறித்த இந்தப் புத்தகம் உலகில் பல மொழிகளில் மூன்று மில்லியன் பிரதிகள் மொத்தமாக விற்பனையாகியுள்ளது, இதைவிட அதிக விற்பனை, மாசேதுங்கின் சிவப்புப் புத்தகம் தான்.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் இறுதியில் லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய அணு ஆயுதத் தாக்குதலில் ஹிரோஷிமா நகரம் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. நகர மக்களில் குறைவானவர்கள் மட்டும் தப்பிப் பிழைத்தார்கள். இன்றைக்கு, இல்லாவிட்டால் நாளைக்கு, நாளை இல்லாவிட்டால் அடுத்த மாதம் என்று நீளும் சாவுப் பட்டியல்களில் இடம்பெறாத அதிர்ஷ்டசாலிகள் இவர்கள். அணுகுண்டு விழாத கால முழு ஆயுசு பெற்றவர்கள்.

அணு ஆயுதத் தாக்குதலுக்கு முந்திய இவர்களின் வாழ்க்கை, அணுகுண்டு விழுந்தபோது அவர்களின் தனிப்பட்ட அனுபவம், சமூக அனுபவம், போருக்கு அப்புறம் அவர்களின் வாழ்க்கைத் தொடர்ச்சி என்று ஆறுபேரின் வாழ்க்கை அல்புனைவுகள் இந்தப் புத்தகத்தில் சுவாரசியமாகக் கதைக்கப்படுகின்றன. தீர்க்கமான பச்சாதாபம், மனப் பக்குவம், பொறுமை என்று கலந்து ஜான் ஹெர்ஸே எழுதியது.

’சின்னப் பையன்’ என்று அமெரிக்க ராணுவம் பெயர் வைத்துச் சீராட்டிய அணுகுண்டு ஹிரோஷிமா நகர் மேல் விழுந்தபோது ஜப்பானிய அரசுக்கும், மக்களுக்கும், அறிவியலருக்கும் கூட அந்தத் தாக்குதலின் பிரம்மாண்டமான நசிவு சக்தி புலப்பட்டிருக்கவில்லை.

அசாதரணமான 6000 டிக்ரி செல்ஷியஸ் வெப்பத்தைக் கிளப்பி ’சின்னப் பையன்’ வெடிக்க, அருகே ஒரு வங்கிக் கட்டிடத்தின் வெளிச் சுவரை தெருவில் இருந்து பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தவர் பஸ்பமாக, சுவரில் அவருடைய வெப்ப நிழல் புகைப்படம் போல் பதிந்தது இன்னும் அங்கே உண்டு. இந்த அணுகுண்டின் கதிரியக்கத்தில் இருந்து தப்ப ஐம்பது இஞ்ச் விரிவுள்ள சுவர் எழுப்பி அதனைக் கடந்து அமர வேண்டும். யாருக்கும் அப்போது தெரியாது.

இதற்கப்புறம் சகலரும் தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தோடு நீரருந்த முனைய, ’மின்சார ருசி’யோடு (electric taste) குடிநீர் மாறியிருந்ததாம். குடித்தபிறகு வாயில் வயிறு மேலெழும்பி வந்ததுபோல் வயிற்றுப் பிரட்டல், குமட்டல். என்றாலும் நீர் வேட்கை, வேட்டை நின்ற பாடில்லை.

கூடவே குண்டு வெடிப்பில் தீப்பிடித்த கட்டடங்களில் இருந்து வெளிப்பட்டு ஓடுகிறவர்களின் கூட்டம். தாறுமாறாக ஓடிய மக்கள் சற்று நேரத்தில் அணுகுண்டு விழுந்த பிரதேசத்திலிருந்து விலகி ஓட ஆரம்பித்தார்கள். கொஞ்சம் போல் உணவு, அத்தியாவசியச் செலவுக்காக பணம் என்று எடுத்துப் போனவர்கள் நிறைய. அவர்களோடு, பிழைத்துக் கிடந்தால் உயிர் வாழ வருமானம் சிறிதாவது கிடைக்கச் செய்ய பழைய தையல் மெஷினை எடுத்துக்கொண்டு ஓடிய தையல்காரரின் விதவை மனைவியும் உண்டு. உருட்டிப் போக முடியாமல் அவள் அந்தத் தையல் மிஷினை தெருக் குழாய் மேடையில் விட்டுப் போனாள், யுத்தம், அணுகுண்டுத் தாக்குதல் எல்லாம் முடிந்து திரும்ப வந்தபோது அங்கேயே, அப்படியே இருந்தது. துரு ஏறியிருந்ததுதான் அதில் தொந்தரவு.

கையில் இப்படி இன்றியமையாததோ, நேசிக்கும் பொருளோ எடுத்துக் கொண்டு ஓடுகிறவர்களை வெறுங்கையோடு எதிர்ப்படுகிறவர்கள் கரம் கூப்பி வணங்கி ’மன்னியுங்கள் நான் வெறுங்கையோடு ஓடுகிறேன்’ என்று ஜப்பானிய கலாசாரப்படி வணங்கி ஆறுதலைச் சொல்லிக் கடந்து போனார்கள்.

தீப்பற்றி எரியும் கட்டடங்களின் உள்ளே சிக்கியவர்கள், ஜன்னல் வழியே பார்த்து ‘ஐயா, மன்னிக்கவும், ஏணி ஏதாவது இருந்தால் சார்த்துகிறீர்களா’ என்று வீதியில் ஓடியவர்களை மரியாதை விலகாமல் உதவி கேட்டார்கள். Incredible people, these Japanese …

ஓடிய வழியில் தோட்டத்தில் கொடியில் காய்த்த பூசணிக்காய், அணு வெப்பத்தில் பக்குவமாகச் சுடப்பட்டு (grilled) சாப்பிடத் தயாராக இருந்ததாம்.

குண்டு வெடிப்பை அருகில் இருந்து பார்த்தவர்களின் கண்கள் முகத்திலிருந்து வெளியே பிதுங்கி வந்து விழ, தீனமான கூக்குரல் எங்கும் கேட்டது.

திடீரென்று பெரிய கருப்புத் துளிகளாக மழை விழுந்தது. மழைத் துளியின் வித்தியாசத்தை கவனிக்கவோ, முழுக்க அபாயம் தெரிந்து பயப்படவோ யாரும் இல்லை.

தலை சிறுத்த, உடல் சூம்பிப்போன சிசுக்கள் பிறக்க, கருச் சேதம் ஏற்பட, இளைஞர்களின் ஆண்மை அழிய ‘சின்னப் பையன்’ விளைவித்த நாசத்தின் எல்லை விரிந்து கொண்டே போனது. அணுகுண்டுத் தாக்குதலைத் தப்பிப் பிழைத்தவர்களை மற்ற ஊர்,நகர ஜப்பானியர்கள் நித்திய சீக்காளிகளாகக் கருதி உதாசீனப்படுத்தினார்கள். வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஜான் ஹெர்ஸே விடாமல் இந்நூலுக்காகத் தொடர்ந்த ஜப்பானியரை அமெரிக்காவுக்கு விமானமேற்றி கூட்டிப் போனார் அவர்களை வழிநடத்தியவரும், ஆறில் ஒருவருமான தனிமோடா மதகுரு. அமெரிக்காவில் நகரம் நகரமாக இந்த ஹிரோஷிமா அணுகுண்டுக்குத் தப்பியவர்கள் பயணப்படுகிறார்கள். அவர்களுக்கு அனுதாபம் பெருக, அமெரிக்கர்கள் நன்கொடை மழை பொழிந்தார்கள்.

ஆனாலும் அமெரிக்கர்கள் ’ஜப்பான் மேல் குண்டு வீசியது சரியான செயல்தான், இதற்காக ஜப்பானிடம் மன்னிப்பு கேட்கவேண்டாம்’ என்று கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையாக இன்னும் சொல்கிறார்கள்.

தனிமோடா சுய விளம்பரத்துக்காக எல்லாம் செய்கிறார் என்று புகார் எழுந்தது. அணுகுண்டை விமானத்தில் ஏற்றி வந்து ஹிரோஷிமா நகரத்தின் மேல் வீசிய இணை விமான ஓட்டுநர் co-pilot தொலைக்காட்சி நேர்காணலில் வந்து அணுகுண்டு அழித்த லட்சக்கணக்கான ஜப்பானியர்களுக்காக தேம்பி அழுதார். ’தப்பு தான் நாங்க செய்தது’ என்று புலம்பிய அவர் வடித்தது முதலைக் கண்ணீர் என்றும், டெலிவிஷன் ஸ்டூடியோவில் நேர்காணலுக்கு வருவதற்கு முன் பக்கத்து மதுக்கடையில் சுருதியேற்றிக் கொண்டு வந்து சிறப்பாக நடித்துக் கொடுத்தார் என்றும் தெரிய வருகிறது.

ஷிண்டோ புத்தமதத்தினரான ஜப்பானியர்களை மதம் மாற்றும் செயல்பாடுகளும் இந்தக் கலவரமான நேரத்தில் நடந்தேறின. ஜான் ஹெர்ஸே ஒன்று விடாமல் பதிவு செய்கிறார்;.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஒரு நாள் வெளியான பத்திரிகையின் அத்தனை பக்கங்களிலும் ஜான் ஹெர்ஸே எழுதிய ஹிரோஷிமாவைப் பிரசுரித்துக் கவுரவப்படுத்தியது.

ஜான் ஹெர்ஸே வார்த்தையில் வடித்த அந்த ஆறு பேரின் வாழ்க்கையை கவனிக்கும்போது நமக்குப் புலப்படுவது, யுத்தமோ அணு ஆயுதத் தாக்குதலோ, ஊரோடு அழிவோ அல்லது போர் ஓய்ந்த அமைதிக் காலமோ, வாழ்வில் முன்னேறுகிறவர்கள் முன்னேறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அல்லாதவர்கள் இன்னும் பின்னடைவுதான் அனுபவிக்கிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2024 20:00

February 6, 2024

திரும்பி வந்த பைராகி சொன்னது – மீண்டும் வருவேன்

வாழ்ந்து போதீரே (அரசூர் நாவல் வரிசை -4ம் புதினம்)
பகவதியின் டயரி செப்டம்பர் 1859 தொடர்ச்சி

ஏன் இந்த வீட்டை, இவரை மறந்து போனேன்? எங்கே போயிட்டிருக்கேன்? அம்பலப்புழை வீட்டு இங்கே எப்படி வந்தது? அம்பலம் எங்கேயிருந்து இடம் பெயர்ந்து வந்தது?

வீட்டுக்குள்ளே வேகமாப் போனேன். அவரும் கதவை அடச்சு உள்ளே வந்தார். கட்டிப் பிடிச்சுண்டேன் ஆமா. கட்டிண்டு கரைஞ்சேன் ஒரு பாட்டம் அழுகை. வேண்டி இருந்தது எல்லாம்.

அவர் காப்பி டம்ப்ளர்லே இக்கிணி இக்கிணியா சீப்பிக் குடிச்சுண்டே சொல்றார் – சமயத்துலே போதம் கெட்டுப் போயிடும் தான். எல்லோருக்குமே அது நடக்கலாம். சரீரத்துலே பித்தம் அதிகமானா இப்படி நேரும்னு வைத்தியன்மார் சொல்றா. அது இருக்கவே இருக்கு. இனிமே நீ இருட்டு விலக முந்தி எங்கேயும் போக வேண்டாம்.

இல்லேன்னா. எங்கேயும் போகலே. அம்பலப்புழை அம்பலம். வீடு.

நான் சொல்லத் தெரியாத சொப்பனம் கண்ட சிசு மாதிரி புலம்பறேன்.

உனக்கு அதெல்லாம் ஆத்மாவிலே ஒட்டின விஷயம்கறாரு இவரானா. ராத்திரி சொப்பனத்துலே பைராகி வந்தான். சொல்றான் –

குழந்தே. பத்திரமா வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தியே அதுவே போதும்கறான்.

அடடா, உனக்கு சாதம் போடறேன்னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு வந்துட்டேனேன்னு வரு்த்தத்தோட சொல்றேன்.

சாரமில்லே குஞ்ஞே. நான் திரும்பி வருவேன். உன் வீட்டுலே தான் சாப்பிடுவேன். அப்போ மயில் ஆடும். எல்லாரும் செழிப்பா இருக்கட்டும்.

அவன் ஜல்ஜல்னு சதங்கையைக் கையிலே வச்சு சத்தப்படுத்திண்டே போகறான். இது சொப்பனம்னா, பைராகி பசின்னு அன்னம் யாசிச்சது? ஊருணிக் கரையிலே மயில் தொறத்தினது? நான் ஓடினது? பிரமையா?

அதுலே எல்லாம் மனசை ரொம்ப அலைபாய விடக்கூடாதுன்னுட்டார் இவர். பைராகி ஆசிர்வாதம் பண்ணினது தான் இதிலே எடுத்துக்க வேண்டியதுன்னுட்டார்.

திரும்பி வருவானாமே? வரட்டுமே. வந்தா உக்கார வைச்சு பத்து காய்கறி தித்திப்பு, காரம், புளி சேர்த்து அமர்க்களமா ஆக்கிப் போட்டுடுன்னார். நான் இருக்கறதுக்குள்ளே வருவானா?.தெரியலியே.

அது எப்படியோ போகட்டும். அம்பலப்புழையிலே ஒரு வீடு வாங்கச் சொல்லணும் இவரை. சின்னதா ஒரு குச்சுவீடா இருந்தாலும் சரிதான். அங்கே ஒரு வீடு வைக்கணும். மயில் அதைச் சொல்லத் தான் பின்னாலேயே வந்திருக்கும். அதைப் பார்த்து ஏன் பயப்பட்டேன்? சிங்கமா புலியா அது?

அப்புறம் வந்து, அது எம்பாவே இல்லையாம். எம்பாவாய்-னு சொல்லணுமாம். திருப்புழிச்சை இல்லையாம். திருப்பள்ளி எழுச்சியாம். இவர் இதைப் படிச்சுட்டுச் சொன்னார். நான் என்னத்தைக் கண்டேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2024 20:11

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.