இரா. முருகன்'s Blog, page 16
April 4, 2024
மறந்தும் புறந்தொழாத மாசி வீதி ஆதினமிளகி வகையறாவினர்
வாழ்ந்து போதீரே = அரசூர் நான்காம் நாவல் — அடுத்த சிறு பகுதி
குதிரை வண்டியைக் கூப்பிடுங்க. மாரட் தெருவுக்குப் போயிடலாம். வழியிலே பத்து நிமிஷம் நிறுத்தினா காலைச் சாப்பாடும் முடிச்சுக்கலாம்.
கொச்சு தெரிசா விருப்பப்படி, வரிசையாக நின்ற வண்டிகளில் முதலாவது இவர்கள் ஏற நகர்ந்தது.
வண்டிக் கூலியும், பேசிப் பழக மொழியும் இசைந்து வந்ததில் குதிரை வண்டிக்காரனுக்கு சந்தோஷமோ என்னமோ, வண்டியில் பூட்டியிருந்த கருப்புத் தோல் போர்த்த குதிரை துள்ளி ஓடியது.
மேலமாசி வீதியில் சுமாரான சுகாதாரத்தோடு இருந்த ஒரு கடையில் மெத்தென்ற இட்டலிகளும், புதினா அரைத்த துவையலும், காப்பியும் வயிற்றுக்காக்கி விட்டு அவர்கள் வித்துவான் ஆதினமிளகியைச் சந்திக்க மாரட் தெருவுக்கு வந்தார்கள். தியாகராஜ சாஸ்திரிகள் அறிமுகக் கடிதம் கொடுத்து விட்டிருந்தார் ஆதீனமிளகி வித்துவானுக்கு. தங்கள் குடும்பமும் வித்துவான் குடும்பமும் நாலு தலைமுறை சிநேகிதர்கள் என்று கொச்சு தெரிசாவிடம் சொன்னார் தியாகராஜன். எப்படி அது வாய்த்தது என்று குடும்ப மரம் வரைந்து பார்த்தால் புலப்படலாம் என்றார் அவர். உலகில் விடை காண முடியாத சிக்கல்கள் சிலவாவது குடும்ப மரங்கள் மூலம் தீர்ந்து விடும் என்று அவர் நம்பத் தொடங்கி இருந்தார். அவர் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது –
இந்தக் கடிதம் கொண்டு வரும் சௌபாக்கியவதி கொச்சு தெரிசா என்ற ஸ்ரீமான் முசாபர் சாகிப் அவர்களின் தர்மபத்தினி லண்டன் பட்டணத்தில் இருந்து தம் பிதாமகருடைய புஸ்தகத்தை அச்சுப் போட வந்திருக்கிறாள். மலையாள லிபியும் தமிழ் கீதமுமாக இருக்கும் அந்த கிரந்தத்தைப் பரிசோதித்து தேவரீர் கருத்துச் சொல்ல வேணும் என பிரார்த்திக்கிறேன். அச்சுப் போடவும் உதவி தேவை. பணம் பற்றிக் கவலை வேணாம். இடுப்பில் முடிந்த வராகன், தங்கக் காசோடு தான் வந்திருக்காள் அம்மாளும் புருஷனும். இவாள் டில்லி சர்க்கார் ஆபீஸ் மேலதிகாரி சங்கரய்யர் என்ற, உங்களைப் போல் என் உற்ற சிநேகிதரான அரசூர்க் காரருக்கு தாயார்வழி உறவு என்று அறிகிறேன். வேணும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கிருபை.
அன்போடு வரவேற்ற வித்துவான் பச்சைத் தலைப்பாகையும், காதில் துளசியும் மூலக்கச்ச வேட்டியுமாக இருந்தார். அறுபது வயசென்றார். அறுபதிலும் ஒரு நாள் கூட மீனாட்சி கோவிலுக்குப் போனதில்லை என்றார். பெருமாள் கோவிலைத் தேடிப் போய்த் தொழுதேத்தும் பரம்பரை என்றார். பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராக இருந்த போதும் ஓய்வு பெற தற்போதும் எழுதுவதே தன்னை வாழ வைக்கிறதென்று நல்ல இங்கிலீஷில், உச்சரிப்பு சுத்தத்தோடு, ஆணித் தரமாகச் சொன்னார்.
April 3, 2024
மாநகர் மதுரை 1960 – அரசூர் நான்காம் நாவல் சித்தரிப்பு
வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் தொகுதியின் நான்காம் நாவல் அத்தியாயத்திலிருந்து
ஒன்றும் இரண்டுமாக வாழைத் தாரும் இலையும் வாழைப் பூவும் ஏற்றி வருகிற டெம்போ வேன்களும், கருவாடு ஏற்றிப் போகும் காளைமாட்டு வண்டிகளும் கப்பி ரோடுகளில் தட்டுப்பட ஆரம்பித்த நேரம். பூவந்தி பூவந்தி என்று சொல்லியபடி பஸ் ஏஜண்டுகள் இடுப்பில் அழுந்தச் சொறிந்து கொண்டு சுற்றி வர, கசங்கிய காக்கி உடுப்பு அணிந்த க்ரூ கட் தலைமுடி டிரைவர்கள் டீக்கடைகளில் அரைச் செம்பு தண்ணீரில் வாய் கொப்பளித்து, சூடான டீக்காகக் காத்திருக்கிறார்கள். அம்பாசடர் கார்களில் எர்ஸ்கின் பொது மருத்துவ மனையில் வந்து இறங்கும் டாக்டர்கள் பில்டர் காப்பி வாங்க ஆர்டர்லிகளைத் துரத்தியபடி ஆஸ்பத்திரி மாடிப் படி ஏறுகிறார்கள். அவசரமாகக் கண் விழித்து ஆஸ்பத்திரி மாடி வளைவில் ஓடிக் குதிக்கும் குரங்குக் குட்டியை பாதுகாப்பான இடத்துக்குக் கை சுண்டி விரட்டியபடி பதனீர் வியாபாரிகள் சத்தமிடுகிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து குதிரை வண்டிகளிலும் சைக்கிள் ரிக்ஷாக்களிலும் வெளிவரும் வடக்கத்திய யாத்திரீகர்கள் உரக்க இந்தி பேசினால் சகலருக்கும் புரியும் என்ற நினைப்பில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். மாசி வீதிகளில் தங்கும் இடம் தேடி அவர்களைச் சுமந்து போகும் வண்டிகள் நகர்கின்றன. சௌராஷ்டிர பக்த ஜன சபை என்று பதாகை உயர்த்திப் பிடித்து கெச்சலான, சி்வந்த இரண்டு நபர்கள் முன்னால் நடக்க, மிருதங்கத்தை ஓங்கித் தட்டியபடி ஒரு பெண்ணும், கைத்தாளம் போட்டபடி சிவத்த இன்னும் பல ஆண்கள், பெண்களும் வேகமாக நடந்தபடி திருப்புகழ் சந்தம் அலைஅலையாக உயரப் பாடிப் போகிறார்கள்.
அமுதம் ஊறு சொலாகிய தோகையர்
பொருளுளாரை எனாணையுனா ணையென
இந்துஸ்தானி சங்கீதம் போல் இல்லாமல் இங்கிலீஷ் நோட் போல விரசாக வார்த்தைக்கு வார்த்தை ஏறி இறங்கிக் குதித்துப் போகிற சங்கீதம் கொச்சு தெரிசாவின் மனதைக் கௌவி இழுக்கிறது. இது என்ன மொழி? இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்? எப்படி இதை இயற்றினார்கள்? எப்படி இந்தப் பாடலைப் பிழையில்லாமல் பாடக் கற்றுக் கொண்டார்கள்?
கொச்சு தெரிசா மெய்மறந்து பார்த்து நிற்க அவர்கள் பதாகையும், குதித்து வரும் தாளமும் கைத்தட்டும் ஓங்கிய குரல்களுமாகக் கடந்து போனார்கள்.
முசாபர் கிழக்கு வாசல் பட்டமார் தெரு முனையில் காப்பிக் கடையில் யோசனையோடு நின்றான். காப்பி குடித்து முடித்து கொச்சு தெரிசாவோடு கோயிலுக்குள் போகலாமா அல்லது இங்கேயே நின்று தெரு வேடிக்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாமா என்ற யோசனை அது.
தெரு எங்கும் ஓடிப் போகாது. இவ்வளவு முக்கியமான இடத்துக்கு இனிமேல் திரும்ப வர முடியாது. வா என்று கொச்சு தெரிசா அவனைக் குத்திக் கிளப்புகிறாள். அம்பலப்புழையில் வாங்கிய வெள்ளை வேட்டியும் அரைக்கைச் சட்டையுமாக அவன் குழப்பமான மலையாளியாக அங்கே இருந்து புறப்பட்டான்.
உள்ளே போய் வந்து பிரகாரம் சுற்றும் நேரத்தில் பொலபொலவென்று பொழுது புலர்ந்திருந்தது. மேற்குக் கோபுர வாசலுக்கு அருகே தாம்புக் கயற்றில் கட்டியிருந்த நரியைப் பார்த்துச் சற்றே நின்றார்கள் அவர்கள்.
ஒரு நரியை இவ்வளவு அருகே பார்த்தது இங்கே தான் என்றாள் கொச்சு தெரிசா. கால்டர்டேலில் திடிரென்று குன்றுப் பிரதேசத்தில் இருந்து கிளம்பி வந்து, கடைத்தெருவில் குறுக்கே ஓடி அங்காடிக்குள் புகுந்து பிக்விக் சாப்பாட்டுக் கடை வாசலோடு வெளியேறும் நரி எங்கே போய் மறையும் என்று யாருக்கும் தெரியாது. அதில் சிரத்தை எடுத்துக் கொள்வதும் இல்லை.
இந்தத் தேடுதலும் நரிப் பாய்ச்சலாகப் போய்விடுமோ? முசாபர் சொல்கிறபடி, எதற்காகத் தேட வேணும்? எதைத் தேட வேணும்? ஏன்?
கொச்சு தெரிசாவுக்குத் தெரியவில்லை. ஆனால் மனதுக்குள் ஏதோ, யாரோ, ஒன்று பலவானவர்களாக ஆணும் பெண்ணுமாக அவ்வப்போது குரலாக, காட்சியாக வெளிப்பட்டு அவளை இங்கே சுற்றிவர வைக்கிற ஒரு சிறு கூட்டமோ, கனவில் பிரம்மாண்டமாக வெளிப்பட்டு ஓலைச் சிலுவைகளை உயர்த்திப் பிடித்தபடி கல்லறைத் திருநாளுக்குப் போகிற ஊர்வலமோ, மேல்தோல் சிவத்த இந்தப் பாட்டுக் குழுவின் உயிரை உருக்கும் சங்கீதமோ ஏதோ ஒன்று அல்லது எல்லாமும் அவளைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.
நரி முகத்தில் முழிச்சா நாள் நல்லா இருக்கும்.
பக்கத்தில் வந்த வயதான ஒருவர் சுத்தமான இந்தியில் கொச்சு தெரிசாவிடம் சொல்லிக் கடந்து போனார். அப்படியானால் அந்த விலங்கை விலைக்கு வாங்கிப் போக முடியுமா என்று முசாபர் ஆர்வத்தோடு விசாரிக்க, அவர் ஓங்கிச் சிரித்துச் சொன்னார் –
இன்னிக்கு நரியைப் பரியாக்கிய உற்சவம். முடிஞ்சதும் காட்டுலே கொண்டு போய் விட்டுடுவாங்க. இதை வாங்கி வீட்டுலே கட்டறதும், ஓணானைத் தூக்கி அரைக்கட்டுலே விட்டுக்கறதும் ஒண்ணு.
அவர் சொன்னது புரியாவிட்டாலும் சொல்லிச் சிரித்தது கொச்சு தெரிசாவுக்குப் பிடித்திருந்தது. .
April 1, 2024
வேர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் தேவையற்ற செயல்
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி
என்றாலும் இன்றைக்கு அதிகாலை நாலு மணிக்கு மதுரைக்குப் போவதற்காக எழுந்ததும் கொச்சு தெரிசாவிடம் அழுத்தமான குரலில் சொன்னான் முசாபர்
–
இங்கே நீ எதுக்காக வந்திருக்கேன்னே மறந்துட்டிருக்கே. இங்கிலாந்து பிரஜை நீ. இங்கே வீடு வாங்கறது கஷ்டம். அப்படியே கிடைச்சாலும் வீட்டுச் சொந்தக்காரனை மீனும் வறுவலும் விற்றுச் சேர்த்த உன் பணத்தாலே அடிச்சு வாங்கினதாத்தான் இருக்கும். அவனோட சோகம் உன்னைச் சும்மா விடுமா என்ன. சரி, எல்லாம் சரியா அமைஞ்சாலும், எதுக்கு இங்கே வீடு உனக்கு? ஊருக்குப் போற எண்ணமே இல்லையா? அமேயர் பாதிரியார் இதோட ஒரு முழு மாசம் நம்ம கடையையும் வீட்டையும் ஆள் அம்பு விட்டு நிர்வாகம் செஞ்சுக்கிட்டிருக்கார். அவர் வாடிக்கனுக்குப் போனதும் அதுக்கெல்லாம் ஆள் இருக்காது தெரியுமில்லே. நம்ம விசாவும் முடிஞ்சுட்டிருக்கு. ஊர் பார்த்தது போதும். வா, கிளம்பலாம். மயில் பறக்கட்டும். இறங்கட்டும். நிக்கட்டும். ஆடட்டும்.. அது இங்கே ஆடட்டும். இஷ்டப்பட்டால் கால்டர்டேலுக்குப் பறந்து போய் நம்ம வீட்டு வாசலில் தோகை விரிச்சு ஆடட்டும். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ஒரு நிமிஷம் நிற்போம். அப்புறம் மார்க்கெட்டுக்கு மொத்த கொள்முதலாக மீன் வாங்கவும் வறுவல் வாங்கவும் நடப்போம். மயில் ஏன் ஆடினதுன்னு தெக்கே பரம்பில் பாதிரியார் சொல்லற அறிவுத் தேடல் எல்லாம் நமக்கு எதுக்கு? தொடர்புகளை ஏன் இங்கே உன் வம்சத்தோட வரலாற்றிலே தேடிக் காலத்தை வீணாக்கணும்? உன்னோட வேர் அம்பலப்புழையிலேயும் இந்த அரசூரிலும் இருக்கலாம். அதைத் தேடிப் பிடித்து என்ன சாதிக்கப் போறே? அந்தத் தகவல் இல்லாமலேயே நாம் இத்தனை வருஷம் மூச்சு விட்டாச்சு. இனியும் அதுக்குத் தேவை கிடையாது. தேடிட்டுத் தான் இருப்பேன்னா உன் இஷ்டம். நான் குறுக்கே வரமாட்டேன்.
இவ்வளவு பேசியதற்காக சிரம பரிகாரம் செய்து கொள்ளவோ என்னமோ சரியான நேரத்தில் முசாபரி பங்களா சிப்பந்தி இடுப்பில் குறுக்கே டவாலி என்ற அலங்காரப் பட்டை அணிந்து ஒரு சிறிய பித்தளை அண்டாவில் தேநீர் எடுத்து வந்து முசாபரிடம் கொடுத்தான். அவன் கையில் வைத்திருந்த பிரம்மாண்டமான பித்தளைத் தாம்பாளத்தில் இருந்து இன்னொரு கொதிகலன் தேநீரை கொச்சு தெரிசாவுக்கும் நீட்டி விட்டு அவளைப் பணிவோடு கேட்டான் –
கலெக்டர் அம்மா, பசியாற என்ன எடுத்தாரட்டும்?
அவளைக் கலெக்டர் என்று தானும் சொல்லி முசாபர் அப்போது சிரிக்க ஆரம்பித்ததை மதுரை வந்து சேரும் வரை நிறுத்தவில்லை.
March 30, 2024
மீனும் வறுவலும் விற்ற பணத்தை ஊஞ்சலில் அமர்ந்து செலவு திட்டமிடுதல்
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நூலில் இருந்து அடுத்த சிறிய பகுதி
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
சாப்பிட்டு விட்டு முசாபரி பங்களாவுக்கு நிலவொளியில் நடக்கும் போது தியாகராஜன் சைக்கிளை உருட்டிக் கொண்டே எங்கோ பூத்துச் சொரிந்த மகிழம்பூ மணத்தைத் தீர்க்கமாக நாசியில் முகர்ந்து கொண்டு வந்தார்.
பௌர்ணமி ராத்திரி மாதிரி இருக்கு. இது அதுக்கு அடுத்த ரெண்டாம் நாள்.
சொல்லியபடி தியாகராஜன் தெருவில் பூட்டிக் கிடந்த ஒரு வீட்டு முகப்பில் நின்றார். சத்தம் எப்போதோ ஓய்ந்து உறங்கிக் கொண்டிருந்த பெரிய இரண்டு கட்டு வீடு அது. அது கொச்சு தெரிசாவை வா வா என்று அழைத்தது.
உள்ளே வந்து ஒரு நிமிஷம் இருந்து போகச் சொல்லி அங்கே இருந்த பெண்கள் கூப்பிட்டார்கள். எல்லோரும் புடவை உடுத்தியிருந்த விதம் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் கொச்சு தெரிசாவுக்குப் பட்டது. ஒரு தொண்டு கிழவி வாசல் திண்ணையில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்ததும் அவளுக்குப் பார்க்கக் கிடைத்தது. கனாக் கண்டேன் கனாக் கண்டேன் என்று அந்த முதியவளின் குரல் பாசமும் பரிவுமாக அவளை உள்ளே அழைத்தது.
இந்த வீட்டுக்குள் எப்படிப் போவது?
கொச்சு தெரிசா கேட்க, மௌனமாகத் தலையைக் குலுக்கினார் தியாகராஜன். அப்போது. நிலவொளியில் அந்த மூத்த பெண்ணின் குரலாகத் தன்னை வரவேற்று நிற்கும் வீட்டைக் கடந்து போகவே கொச்சு தெரிசாவுக்கு மனம் இல்லை.
சின்னச் சங்கரன் டெல்லியிலே இருக்கான். பக்கத்துலே ஒக்கூர்லே அவங்க நிலத்திலே சாகுபடி செஞ்ச அம்பலகாரர் குடும்பத்திலே இந்த வீட்டுக்கு ஒரு சாவியும் சங்கரன் கிட்டேயே இன்னொண்ணும் இருக்கு,
ஒரு கார் வாடகைக்கு எடுத்துப் போய் அந்த ஆம்பல்காரைப் பார்த்து.
கொச்சு தெரிசா முடிக்கும் முன்னால் தியாகராஜன் சொன்னார் –
அம்பலகாரர் மகன் கூப்பிட்டானேன்னு போன வாரம் தான் கோலாலம்பூர் போயிருக்கார்.
முசாபர் நிம்மதியைச் சொல்லும் முகத்தோடு தியாகராஜனைப் பார்த்தான். கொச்சு தெரிசா ஏதோ ஈர்ப்பு செயல்பட அந்த வீட்டுக்கு இன்னும் நெருக்கமாகப் போய் நின்றாள்.
உள்ளே போய் இருந்து அந்த வீட்டை சாவகாசமாகப் பார்த்த்தும் புழங்கியும் அனுபவிக்க வேண்டும். முடிந்தால் அதை விலைக்கு வாங்க வேண்டும் என்று நேற்று இரவு முசாபரி பங்களாவின் பெரிய மரக் கட்டிலில் கொச்சு தெரிசா முசாபருக்குக் காதில் சொன்னாள். அவன் தூங்கத் தொடங்கி இருந்தான்
.
March 28, 2024
போகாத ஊருக்கு வழி காட்டும் காகித வரைபடங்களும் குண்டுராயல் உடுப்பி ஓட்டலும்
வாழ்ந்து போதீரே 0 அரசூர் நான்காம் நாவல் வரிசையில் – அடுத்த சிறு பகுதி
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
விடியலின் ஈர வாடையும், சுட்ட சாம்பலைப் பொடி செய்து பன்னீரும் வாசனை திரவியமும் கலக்காமல் பூசும் வைராக்கியமான வீபுதி வாசனையும், குத்தாக அள்ளி ஏற்றி வைத்த மட்டிப்பால் ஊதுபத்தி மணமும், யாரிடம் இருந்து என்று குறிப்பிட முடியாதபடி நகர்கிற, நிற்கிற, உறங்கிக் கிடக்கிற ஜனத் திரளில் இருந்து எழுந்து பொதுவாகக் கவிந்த வியர்வை உலர்ந்த நெடியும், பறித்ததும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரும் செழித்த காய்கறிகளின் பச்சை மணமும், காற்றில் அடர்த்தியாகக் கலந்த, இன்னும் தொடுக்கப்படாத ஜவ்வந்திப் பூக்களின் குளிர்ந்த நறுமணமும், ஒற்றைக் கெட்டாகப் பிடித்து உயர்த்திக் குளிர்ந்த தண்ணீர் தெளித்துத் தாழ வைக்கும் கொடிக்கால் வெற்றிலையின் கல்யாண வைபவ மணமும், பூக்கூடைகளில் இருந்து எடுக்கப்படக் காத்திருக்கும் கரும்பச்சை மரிக்கொழுந்து வாசனையும், குதிரை வண்டிகளில் விரித்த துணிக்குக் கீழே சன்னமாகப் பரத்திய காய்ந்த புல்லின் கூர்மையான வாடையும், குதிரைச் சாணம் தெறித்துச் சிதறி உலர்ந்த தெருக்களின் புதுத் தார் வாடையும், புழுதி அடங்கக் குளிரக் குளிர நீர் தெளித்துத் தூசி அடங்கும் வீட்டு வாசல் மண்ணின் நெகிழ வைக்கும் கந்தமுமாகக் காலை நேர மதுரை கொச்சு தெரிசாவையும் முசாபரையும் வரவேற்றது.
காலையில் முதல் பஸ் ஐந்து மணிக்கு தொண்டியில் இருந்து, புதிதாகப் பிடித்த மீன் நிறைத்த கூடைகளோடு புறப்படுகிறது. அரசூர் வழியாக மதுரை போகிற, பயணிகளின் நெருக்கமும் கூச்சலும் இல்லாத அந்த பஸ்ஸில் தியாகராஜ சாஸ்திரிகள் கொச்சு தெரிசாவையும் முசாபரையும் பிரியத்தோடு ஏற்றி வழியனுப்பி வைத்தார்.
ராத்திரி முசாபரி பங்களாவில் அவர் சாட்சிக் கையெழுத்துப் போட்டுத் தங்க இடம் கிடைத்தது. அதற்கு முன்னால் குண்டுராயர் ஓட்டலில் ராத்திரிக்குச் சாப்பாடாக இட்லி தின்னக் கூட்டிப் போனது தியாகராஜன் தான்.
கல்லுக் கல்லா இருந்தாலும் உடம்புக்குக் கெடுதல் எதுவும் வராது. இதை முப்பது வருஷம் தினம் சாப்பிட்டுத்தான் கல்லு மாதிரி இருந்தார் எங்க புரபசர் மருதையன்.
தியாகராஜன் குண்டுராயர் ஓட்டலில் கொச்சு தெரிசாவோடும் முசாபரோடும் இருந்து இட்லி தின்னாவிட்டாலும், அடுத்த மேஜைக்கு முன் வென்னீர் குடித்தபடி உட்கார்ந்து கொச்சு தெரிசா அவருக்குக் கைப்பையில் இருந்து எடுத்துக் கொடுத்த குடும்ப மரப் படங்களை சுவாரசியமாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
அவருக்கு எடுத்த எடுப்பில் இந்தச் செவ்வகங்களையும் இணைப்புக் கோடுகளையும் ஒவ்வொரு செவ்வகத்துக்குள்ளும் எழுதிய பெயர்களையும் ஒருசேரப் பார்த்துப் புரிந்து கொள்ளக் கஷ்டமாக இருந்தது. வரைபடத்தை வைத்து இதுவரை போயிருக்காத ஊருக்கு வழி கண்டு பிடித்துப் போகிறது போல இந்தப் படங்கள் முன்னோர்களிடம் கொண்டு போய் விடுமோ என்று கூட ஒரு முறை நினைத்தார். அதெல்லாம் திவசம் பண்ணி வைக்கிற தன் போன்ற புரோகிதர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட உத்தியோக வெளி இல்லையோ. இந்த இங்கிலீஷ் காரி அங்கே என்ன செய்கிறாள் என்று சஞ்சலம் உண்டானது அப்போது. இட்லி வரக் காத்திருக்கும் போது கொச்சு தெரிசா அவருக்கு அந்தக் காகித வரைபட மரங்களை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள். அம்பலப்புழை குடும்பம் என்று ஆரம்பித்துக் கிட்டாவய்யன் வழியாகத் கொச்சு தெரிசாவில் வம்சம் இப்போது நிற்பதை அவள் எடுத்துக் காட்ட, தியாகராஜனுக்கு அதெல்லாம் மிகச் சுளுவாகப் புரிந்தது.
March 27, 2024
வரலாற்றை எளிமையாக்க அதைப் பெரும்பாலும் இல்லாமல் செய்தல்
வாழ்ந்து போதீரே -அரசூர் நான்கு நாவல் வரிசையில் நாலாவது = அடுத்த சிறு பகுதி அதிலிருந்து
==================================================================================
மேல்சாந்தி மகாராஜா இங்கே வந்து ச்ரொதிகளை மரியாதை செஞ்சுட்டுப் போனதாக பெரியவங்க சொல்லி இருக்காங்க.
சிஷ்யன் தன்னை முக்கியமானவனாகக் காட்டிக் கொள்ளும் ஆவலில் கைகட்டிக் கம்பீரமாக நிற்க முயற்சி செய்தபடி சொல்ல, தியாகராஜன் எகிறினார் –
ஓய், மேல்சாந்தி ஒரு புரோகிதர். அம்புட்டுத்தான். மகாராஜா எல்லாம் இல்லை. அம்பலப்புழை ஒரு காலத்திலே செம்பகச்சேரி மகாராஜா ஆட்சியிலே இருந்தது. அது அப்புறம் திருவாங்கூர் மகாராஜா கிட்டே போனது
சொன்ன வரைக்கும் தப்பு எதுவும் இல்லை என்று தியாகராஜ சாஸ்திரிக்குத் தெரியும். அந்த நேருவுக்கு ப்ரீதியான ஒரு வரலாற்று ஆசிரியன் எழுதியது தான் அவருக்குப் படிக்கக் கிடைத்திருந்தது. போகிறது, நம்பித்தான் ஆகணும்.
அப்படி இல்லை.
சிஷ்யை வீணை வாசிக்க உட்கார்ந்தது போல் பாய் போட்டு சபை நிறைந்து அமர்ந்திருந்தாள். அவள் பார்வைக்கு ரொம்ப அழகாக இருந்தாள். இப்படியான பெண்கள் பெரிய குடும்பத்தை நிர்வாகம் செய்கிறவர்களாக, கலெக்டர் போன்ற பெரும் பதவிகளில் மலேரியா ஒழிக்கும் தீவிரத்தோடு ஜீப்பில் சதா பயணப்படுகிறவர்களாக இருப்பார்கள் என்று இங்கே படிக்கக் கிடைத்த பத்திரிகைச் செய்திகளிலும், இந்த இரண்டு மாதத்தில் நாலு மலையாள, இந்தி சினிமாக்களிலும் பார்க்கக் கிடைத்ததன் அடிப்படையிலும் முசாபர் நினைத்தான், மின்சார விசிறி கூட இல்லாத கட்டடத்தில் அந்தப் பெண் வியர்ப்பின் சுவடே இல்லாமல் இருந்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை.
மேல்சாந்தி உலக ஷேமத்துக்காக, சாந்தியும் சந்துஷ்டியும் நிலவப் பகவானை அனுதினம் பிரார்த்திக்கிற சாது ஜீவன். மகாராஜா செய்ய வேண்டிய இந்தக் கடமைகளை அவர் நிறைவேற்றுவதால் ராஜா போல தான். அதுக்கும் மேல்.
அவள் வேற்று மொழியில் பாட்டு மாதிரிச் சொல்லி நிறுத்தாமல் போய்க் கொண்டிருக்க, தியாகராஜ சாஸ்திரி வெளியே நடந்தார். கொச்சு தெரிசா அந்தப் பெண் நிறுத்தும் வரை காத்திருந்து பொதுவாக நமஸ்காரம் சொல்லி வெளியே வந்தாள்.
உன் வம்சம் பற்றி இந்தக் குடும்ப மரங்கள் சொல்வதை விட நிறைய உண்டு. சோழிகள் அதில் கொஞ்சம் தான் சொல்லும். அரசூரில் கதாபிரசங்கக் காரருக்கு ஒருவேளை அதற்கு மேலேயும் தெரிந்திருக்கலாம். அல்லது அங்கே இதெல்லாம் அறிந்த வேறு யாராவது பழக்கமாகலாம். அது சின்ன ஊர்தான்.
சோழி உருட்டிப் பார்த்த மேல்சாந்தி மனைவி இப்படிச் சொல்லி இருந்தாள். அவள் நாசுக்காகக் குறிப்பிட்ட, நான்கு தலைமுறைக்கு முந்தி ஆவி போகம் அனுபவித்த அரசூர்க்காரனைப் பற்றிய செய்தி போன்ற எதையும் செம்புத் தண்ணீர்க் குரலும், சிஷ்யகோடிகளும், இல்லாத வீணை வாசிக்கும் சிஷ்யையும் தருவார்கள் என்று கொச்சு தெரிசாவுக்குத் தோன்றவில்லை.
சைக்கிள் ஓட்டி விழுந்து எழுந்து வந்த சிநேகிதமான புரோகிதர் மூலம் ஏதும் கிடைக்குமானால் சரி, இல்லாவிட்டால் வந்த படிக்கு ஊரைப் பார்த்து விட்டு மதுரைக்குப் போவாள் கொச்சு தெரிசா. அவளுடைய வேர்களோடு தொடர்பு உடைய ஊர் அல்லவா அரசூர்.
அரசூர் மட்டுமில்லை, இந்தப் பூமி முழுவதுமே அவளோடு சம்பந்தப்பட்டது தான்.
March 26, 2024
கும்பளங்காய் மகாத்மியம் நூலைத் தேடி எடுத்தவரே எழுதியவருமாவார்
வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் வரிசை நான்கில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி
நாலைந்து பித்தளைத் தாம்பாளங்களை ஒருசேர உயர்த்திப் பிடித்து செப்புக் கரண்டிகளால் தட்டி ஒலி எழுப்ப, நாளைக்கு நேரத்துக்கு வரணும் என்று சொல்லி சிஷ்யர்கள் சும்மா வேடிக்கை பார்க்க வந்த வெளியூர் டூரிஸ்டுகளை வெளியே அனுப்பினார்கள். குண்டுராயர் ஓட்டலில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்ற தகவலும் அவர்களிடம் சொல்லப்பட்டது. ஓட்டல் உரிமையாளார் அதற்காக மாதாமாதம் தனியாக ஒரு தொகையை உபகாணிக்கையாக அவர்களுக்குத் தருவது தர்ம காரியமாகத் தினசரிக் கதையில் சொல்லப்படுவதைத் தியாகராஜன் அறிவார்.
நொடி நேரம் பிரார்த்தனையில் இருந்த கொச்சு தெரிசா கண் திறந்து பார்க்க, சிஷ்யகோடிகளிடம் ஏதோ சொன்ன தியாகராஜன் வெளியே பார்த்து முசாபரையும் உள்ளே வரச்சொல்லிக் கைகாட்டினார்.
படமாக மாட்டியிருந்த தெய்வங்களோடு கடைசி வரிசையில் வைத்திருந்த நேரு, காந்தி படங்களை சிஷ்யை அகற்றி அவற்றை அரிசிக் காணிக்கைப் பானைக்குள் வைத்ததை சாஸ்திரிகள் திருப்தியோடு பார்த்தார்
கொச்சு தெரிசா பொதுவாக நோக்கிச் சொன்னாள் –
நான் என் குடும்ப வேர்களைத் தேடி அம்பலப்புழை போனேன். அங்கே அம்பலத்துலே மேல்சாந்தி உண்டு. அவரோட மனைவி என் கிட்டே இருந்த தகவல்களைப் பார்த்து, என்னை அரசூர் போ, இன்னும் நிறையத் தகவல் கிட்டும்னு சொன்னாங்க. அம்பலப்புழையிலே ஏதோ சர்க்கார் மகாநாடு நடக்கறதாம். மினிஸ்டர்கள் எல்லாம் வர்றதாலே அங்கே எதிரி நாட்டுக் காரங்க யாரும் தங்கக் கூடாதாம். இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கே வராதேன்னு எங்களைத் துரத்தி விட்டுட்டாங்க
சிஷ்யர் பட்டாளம் எல்லா விதமாகவும் பரிதாபத்தையும் பச்சாதாபத்தையும் வெளிப்படுத்த, தியாகராஜன் கொச்சு தெரிசாவைக் கேட்டார் –
நீங்க இங்கிலாந்திலே இருந்துதானே வர்றீங்க. அது எதிரி தேசம்ன்னு கோட்டுலே ரோஜாப்பூ செருகிண்ட கபோதி சொல்லிட்டானா என்ன?
ரோஜாப்பூ சூடியவர்களை எனக்குத் தெரியாது, போகச் சொன்னவர்களைத்தான் தெரியும். என் புருஷன் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய குடும்பத்தில் வந்தவன். அவன் ஒரு வேளை எதிரியாக இருக்கலாம்.
முசாபர் மேலே பெரிதாக வழிந்த ஜிப்பாவில் கை விட்டு ஒரு பத்து பவுண்ட் கரன்சி நோட்டை எடுத்துக் காணிக்கை வட்டிலில் வைத்துக் குனிந்து சலாம் செய்தான்.
என் தரப்பில் இருந்து இந்தச் சிறு காணிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அவன் நேர்த்தியான ஆங்கிலத்தில் சொன்னதை அங்கே எல்லோரும் பிரியத்தோடு அங்கீகரித்தார்கள். மற்ற எல்லாவற்றையும் விட இந்த மிலேச்ச பாஷை இங்கே சகலரையும் சேர்த்து வைக்க வல்லமை படைத்தது என்று மனதில் தோன்றியதை வலுக்கட்டாயமாகச் சொல்லாமல் மறைத்துப் புன்னகை பூத்தான் முசாபர். அவனுடைய அத்தர் வாசம் எங்கும் நிறைந்தது.
உள்ளே இருந்து வந்த ஒரு சிஷ்யன் ஏதோ புத்தகத்தின் பிரதிகளை கொச்சு தெரிசாவிடமும் முசாபரிடமும் கொடுத்தான்.
கும்பளங்காய் மகாத்மியம்னு உன்னத நூல். சிரௌதிகள் எழுதியதை அமெரிக்காவிலே ஒரு ப்ரபசர் இங்கிலீஷ் பண்ணினது.
அவன் விளக்க, தியாகராஜன், அந்தப் புத்தகம் இருநூறு வருஷம் முந்தி எழுதின நகைச்சுவைப் பாட்டு ஆச்சே. சிரௌதிகள் எங்கே இதிலே வந்தார் என்று விசாரித்தார்.
பழைய புத்தகமாகவே இருக்கட்டும். அண்ணா அதை ஏடு தேடி எடுத்துச் செப்பம் பண்ணி புஸ்தகமாக்கினதாலே அது அவர் எழுதியது தான்
அந்த சிஷ்யன் மூக்கு விடைக்கச் சொல்லி தியாகராஜனைத் துச்சமாகப் பார்த்தான். இந்த மனுஷன் இங்கே ஏன் வந்து எழவு கூட்டுகிறான் என்று அதற்கு அர்த்தம் என்று தியாகராஜனுக்குத் தெரியும்.
மேல்சாந்தி மகாராஜா இங்கே வந்து ச்ரொதிகளை மரியாதை செஞ்சுட்டுப் போனதாக பெரியவங்க சொல்லி இருக்காங்க.
March 25, 2024
நேபாள மகாராஜா ராஜா மரியாதை செய்தால் நமக்கென்ன நோப்பாளம்
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் நாலாவது -அடுத்த சிறு பகுதி
அவரும் தன்னால் இயன்ற வரைக்கும் நேருவைப் பற்றி தனக்கு உசிதமான தகவல்களைப் பேப்பரில் படித்ததாகவும், புத்தகத்தில் படித்ததாகவும் சொல்லிப் பரப்ப முயற்சி செய்து வருகிறார். அவர் படிக்கிற புத்தகங்கள் காந்தி, நேரு, அந்த மனுஷனுடைய தகப்பன் மோதிலால் நேரு, விபின் சந்த்ர பால், தாங்குதூரி பிரகாசம் என்று நிறையப் பேரைச் சகல கெட்ட குணங்களுக்கும் துர்நடவடிக்கைகளுக்கும் ஊற்றுக்கண்ணாகவும் உறைவிடமாக விவரித்தாலும், மற்ற துஷ்டர்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், நேருவை முதலில் உண்டு இல்லை என்று ஆக்கி விடலாம் என்று தியாகராஜ சாஸ்த்ரிகள் சதா யோசித்தபடி இருப்பார். சமீபத்தில் செத்த கிராதகன் என்பார் அவர் ஜவஹரை.
புதுசாக நேரு விரோதத் தகவல் ஏதும் ஒரு மாதத்துக்கு வராவிட்டால் அவரே விடிகாலை எழுந்து காலைக் கடன் முடித்து, குளிக்கக் கிளம்பும் முன்னால் மேற்கு நோக்கி உட்கார்ந்து நேருவும் கவர்னர் ஜெனரல் சம்சாரமும் சிநேகிதமாக இருந்தது, கட்டிப் பிடித்தபடி ஃபோட்டோ எடுத்துக் கொண்டது, நேருவும் இன்னொரு பெண்பிள்ளையும் கை கோர்த்தபடி நடந்தது, வேறோடு பெண்ணோடு ஒரே சிகரெட்டை மாற்றி மாற்றிப் புகைவிட்டது என்று அதீத கிளர்ச்சி உண்டாக்கும் கதைகளை உண்டாக்கி விட்டு உடனே உடல் அசுத்தம் நீங்கக் குளித்து விடுவார். அந்த மாதிரி ஒரு ஐம்பது கதைகளைப் பரப்பி அதில் நான்கைந்து அவர் தேடி வாசிக்கும் புத்தகங்களில் கூட அச்சடித்து வந்ததில் தியாகராஜ சாஸ்திரிக்கு அலாதிப் பெருமை.
என்றாலும் இந்த நேரு லீலைக் கதைகளை உற்பத்தி செய்ய நிறையப் பெண்களை அந்த மனுஷரோடு பந்தப்பட்டவர்களாகக் கொண்டு வந்து நிறுத்த வேண்டியிருந்தது. இந்தி சினிமா நடிகைகள் பெயர்களைத் தெரிந்து மனதில் இருத்திக் கொள்ள லைபிரரியில் அபூர்வமாகத் தட்டுப்படும் ஆங்கில சினிமா பத்திரிகைகளைக் கருத்தோடு படிக்க வேண்டி இருந்தது. தமிழ் சினிமா நடிகைகள் பற்றிக் கற்பனை செய்யலாம் தான். ஆனால் இவ்வளவு தேக புஷ்டியுள்ள பெண்கள் நேருவுக்குப் பிடித்திருக்கும் என்று தியாகராஜ சாஸ்திரிகளுக்குத் தோன்றவில்லை. என்னதான் கதை என்றாலும் கதாபாத்திரத்துக்கு உகந்தது இல்லாததை அதுவும் ரதிக் கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் வலிந்து புகுத்துவது தவறாச்சே.
இந்தக் கதாநாயகிகள் பற்றிய விவரம் சேகரிப்பது தவிர, இந்த மாதிரி கேளிக்கைக் கதைகளைக் கட்டியமைக்கும்போது ஏற்படும் கிளர்ச்சி எவ்வளவு நேரம் வென்னீரில் குளித்தாலும் மனதை விட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தது. பச்சைத் தண்ணீரில் குளித்தால் போய்விடும் என்று தோன்றினாலும், அது பீனிசத்திலும் ஒற்றைத் தலைவலியிலும் கொண்டு போய் விடும் அபாயத்துக்கு, கிளர்ச்சி எவ்வளவோ தேவலை. சைக்கிளில் போகும் போதும் திவச வீட்டில் நுழையும் போதும் அது மனதில் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள பதிமூன்றாம் வாய்ப்பாடை முழுக்க மனதில் சொல்வதை அவர் சீலமாகக் கொண்டிருந்தார்.
சிருங்கார நேரு வேண்டாம் என்று வலுக்கட்டாயமாக மனதில் ஒதுக்கி வைத்துக் கொலைகாரனும் சதிகாரனுமான நேருவைக் கற்பிக்கக் கொஞ்சம் எளிதாக இருந்தது. காந்தியில் தொடங்கி, ஏன் அவருக்கு முன்பே கோபால கிருஷ்ண கோகலேயில் ஆரம்பித்து எத்தனையோ தேசியத் தலைவர்களை ஒழித்துக் கட்ட நேரு சதி செய்ததாக அவ்வப்போது புத்தகத்தில் வந்த தகவல் என்று எடுத்து விடுவது சமயத்தில் அபாயகரமாகக் குடை சாய்ந்ததும் உண்டு.
வினோபா பாவேயை நேரு கொன்றாரா, வினோபா இன்னும் இருக்காரே என்று கேட்டுப் பேய்முழி முழித்த டிஸ்ட்ரிக்ட் கோர்ட் அமீனா ஒருத்தனிடம் வாய்சாலகமாகச் சமாதானம் சொல்ல வேண்டிப் போனது –
இவ்வளவு சதி நடந்தாலும் அந்த மனுஷர் வினோபா சப்தரிஷி ஆசிர்வாதத்தால் பூர்ண ஆயுளோடு இன்னும் ஆரோக்கியமாக இருக்கார் போல. நேருக் கடன்காரனுக்கு சாவு பிஸ்டுலா வந்தாம், மகா அடைப்பு அது பின்னாடி பிருஷ்டத்துலே. வயறு வீங்கித்தான் போய்ச் சேர்ந்தது. உமக்குத் தெரியுமோ?
ஸ்வாமி என் மூலக் கடுப்பே வேஷ்டியில் ரத்தமாகக் கசிந்து கஷ்டப்படுத்துகிறது. நேருவுக்கும் எலிசபெத் மகாராணி புருஷனுக்கும் வேறே தீத்தாராண்டிக்கும் எங்கே எது வந்தால் எனக்கென்ன உமக்கென்ன என்று அங்கலாய்த்தபடி அந்தாண்டை போனான் அந்த அமீனா. ஆனாலும், யார் பெயரையும் நேருவுக்கு எதிர் வரிசையில் நிறுத்த கொலைச் சதிக் கட்டமைப்பு பயன்பட்டது. கதைகளைக் காற்றில் தூவி விடும் தியாகராஜ சாஸ்திரிகள் அதற்கான உத்தியைப் பற்றி மூச்சு விடுவதில்லை.
அது கிடக்கட்டும். என்ன தான் நேருப் பைத்தியமாக இருந்தாலும் புரபசர் மருதையன் நல்ல மனுஷன். கைலாச பதவி அடைந்து வருஷம் கழித்தும் அவர் தியாகராஜ சாஸ்திரிகளின் கண்ணைக் கட்டுகிற மாதிரி இன்னும் அரசூர்த் தெருவிலும் வீட்டிலும் தட்டுப் பட்டால் அவர் சாஸ்திரி மேல் வைத்திருக்கிற பேரன்பு புலனாகும். அப்படி வந்து அவர், இந்தப் பெண்ணுக்கு உதவி செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டபோது தியாகராஜ சாஸ்திரியால் தட்ட முடியவில்லை.
அவருக்கும் தியாகராஜனுக்கும் ஒரே ஒரு விஷயத்தில் ஒரே அபிப்ராயம் – செம்பு நீருக்குள் இருந்து நடத்துவதாகச் சொல்லப்படும் இந்த பஞ்சாபகேச சிரௌதிகளின் தினசரி கதைப் பிரசங்கம் தான் உண்டாக்கிய, நேருவும் யாரோ பெண்ணும் பங்கு பெறும் கதைகள் போல, அதைவிட நீளமாக முடியாமல் நீளும் விஷயம் என்று தியாகராஜ சாஸ்திரிகள் நினைப்பதுண்டு.
புரபசருக்கு அந்தக் கதையாடலைக் கூடச் சகித்துக் கொள்ள முடியும். சிஷ்ய கோடிகளின் பிரதாபங்கள் தான் அவரை எரிச்சல் படுத்தியவை.
நேபாளத்திலே இருந்து மகாராஜாவே பத்து வருஷம் முந்தி இங்கே நம்ம சிரௌதிகள் அண்ணாவைத் தேடி வந்துட்டா. ஆயிரத்தொண்ணு ஸ்வர்ண புஷ்பமும் ஐயாயிரம் ரஜத புஷ்பமும் காணிக்கை வச்சு, அண்ணா காலைப் பாலும் தேனும் ஊத்தி அலம்பி ரோஜாப்பூ க்ரீடம் வச்சு அவருக்கு கதாபிரசங்க சக்ரவர்த்தின்னு பட்டம் கொடுத்துட்டுத் தான் வேறே வேலை பார்க்க நகர்வேன்னு அவர் ஒரே பிடிவாதம் பிடிச்சார் பாருங்கோ அண்ணா பட்டம் எல்லாம் வேணாம்னுட்டார். பட்டம் கொடுத்தா கதை சொல்றதுலே சிக்கல் வந்து கதையோட பீமனும் கடோத்கஜனும் உள்ளே வந்துடலாம்னு அபிப்ராயப்பட்டார். அதுக்கு என்ன போச்சு, ரெண்டு கதையையும் ஜாயின் பண்ணிக்க ரெண்டு மூணு ஷண்டிங் பாயிண்ட் இருக்கேன்னு மகாராஜா கேட்டார். அதெல்லாம் ஆதிகவிக்கும் மத்தவங்களுக்கும் ப்ரீதி ஏற்படுத்தாத விஷயம்னுட்டார் ஸ்ரௌதிகள். .
இப்படி ஒரு பிரகிருதி எடுத்து விட, புரபசர் கடுப்பாகி அவனோடு மல்லுக்கட்டியதைச் சொன்னது தியாகராஜனுக்கு நினைவு வந்தது.
ஓய் நேபாள மகாராஜா வந்ததை நீர் பார்த்தீரா என்று புரபசர் அவன் வாய் நாற்றத்தையும் சகித்துக் கொண்டு சட்டையைப் பிடித்து உலுக்குகிற நெருக்கத்தில் நிற்க அந்த சோழப் பிரம்மஹத்தி ஸ்வரம் இறங்கி வளைத்து உருட்டி வார்த்தையால் ஜிலேபி பிழிந்தான் –
நேபாள மகாராஜான்னா மகாராஜா தானா? வடக்குலே இருந்து வர்ற முக்கியஸ்தர். மகாராஜாங்கறது ஒரு சீலம் தானே. வடக்குலே தெற்கை விட எல்லா சீலமும் கிரமமா அனுஷ்டிக்கறதாலே நேபாள மகாராஜாவே மரியாதை செய்யறவங்க யாரோ அவங்க மகாராஜாவுக்கு நேர் தானே.
மடியில் நாலு ஓட்டைக் காலணாவை முடிந்து கொண்டு வந்த யாராவது பேர்வழி கதையைச் சீக்கிரம் முடிக்கச் சொல்லி பட்டம் சூட்டுங்கய்யா என்று குரல் கொடுத்ததாகக் கேள்வி. அது தான் ஏகத்துக்குத் திரிந்து நேபாள மகாராஜா கதையாச்சு என்பார் புரபசர். அதுக்கு நமக்கென்ன நோப்பாளம் என்று நினைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தார் தியாகராஜ சாஸ்திரிகள்.
March 24, 2024
சொரிய முடியாத இடத்தில் அரிப்பு தோன்றுவது போல் சின்ன அசௌகர்யம்
வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவல்-அடுத்த சிறு பகுதி
கொச்சு தெரிசாவுக்கு மட்டும் கேட்கிற மாதிரி தமிழ் கலந்த ஓட்டை இங்கிலீஷில் மெதுவாகச் சொல்லியபடி அவர் பின்னால் உட்கார்ந்தார்.
இந்த ஊருக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தாள் கொச்சு தெரிசா. ஒரு வேளை அந்தப் பெயரோடு இங்கே யாராவது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ. அப்புறம், கட்லே போவன் என்றால்? போர்ச்சுகீஸ்காரர்கள் இங்கே யாரும் அந்தப் பெயரோடு உண்டா?
தியாகராஜ சாஸ்திரிகள் சொந்த சகோதரியை, மகளைப் பார்க்கும் பிரியத்தோடு கொச்சு தெரிசாவை நோக்கினார். இதெல்லாம் முன்பே திட்டமிடப்பட்டவை. அவருக்கு நடப்பது இப்படித்தான் என்று தெரியும்.
இந்தப் பெண்ணுக்குத் தன்னாலான உதவியைச் செய்ய வேண்டுமென்று அவருக்கு மனதில் பட்டது முதல் தடவை இல்லை என்று நிச்சயமாக நம்பினார் தியாகராஜ சாஸ்திரிகள். மூன்று நாள் முன்பே, நடுப் பகலில் திவசச் சாப்பாடு சாப்பிட்டு விட்டுத் தூங்கியபோது இந்தப் பெண்ணில் முகம், இவள் நிறையப் படி உள்ள மண்டபத்தினுள், படைக்கிற வெய்யிலில் படி ஏறி வருவதாகப் படிந்து இருந்தது.
தியாகராஜனின் அருமைச் சிநேகிதன் சின்னச் சங்கரனின் பிரியமான புரபசர் மருதையன் மாமா நேற்றுத் தியாகராஜன் அரசூர் குடும்ப வீட்டைக் கடந்து சைக்கிளில் போனபோது வாசலில் நின்றிருந்தார். அவர் இறந்து ரெண்டு வருஷம் ஆனாலும் சைக்கிளில் தியாகராஜன் அந்தப் பக்கம் போகும்போது வாசலில் உட்கார்ந்து செய்தித் தாள் படித்த படியோ, தெரு முனையில் இருந்து பச்சைப் பசேல் என்று சாளூர்க் காய்கறி வாங்கி வந்து கொண்டிருப்பவராகவும் அவர் தியாகராஜ சாஸ்திரிக்குக் கண்ணில் படுகிறார்.
சொரிய முடியாத இடத்தில் வந்த வேர்க்கூறு போல தியாகராஜனுக்கு எரிச்சல் தர வைக்கிற ஒரே பிரச்சனை என்ன என்றால், புரபசருக்கு நேரு என்ற பெயர் நாகப்பட்டணம் மிட்டாய்க் கடை நெய் ஜாங்கிரி சாப்பிடுகிறது போல் அவ்வளவு பிரியமானது. அந்தக் குல்லாக் கடன்காரனைத் துதித்துப் பரவசப்படும் கும்பலைக் கண்டாலே தியாகராஜ சாஸ்திரிகளுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. ஒரு பொக்கைவாய்க் கிழவனைப் பரவசத்தோடு துதிப்பதைக் கூட அவர் சகித்துக் கொள்வார். ஆனால் வழுக்கைத் தலையில் தொப்பி தரித்த காஷ்மீரப் பண்டிதரை அவரால் சுபாவமாகவே சற்றும் பொறுக்க முடியாது போனது.
March 23, 2024
காலண்டரைத் தொலைத்து விட்டுத் தினசரி பண்டிகை கொண்டாடும் வீடு
வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல்களில் நான்காவதில் இருந்து அடுத்த சிறு பகுதி
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
கும்பளங்காய் மகாத்மியம் என்ற அபூர்வமான ஹாஸ்ய கிரந்தம்.
அந்த கிரந்தம் பற்றிப் பிற்பாடு விசாரித்துக் கொள்ளலாம் என்று முசாபர் பின்னால் இருந்து துரைமார்களின் தோரணையோடு கூடிய ஆங்கிலத்தில் சொல்ல, சாஸ்திரிகள் ஒரு வினாடி திகைத்து நின்றார். தன் ஆங்கிலம் தன் ஆகிருதிக்கு ஒத்து வராமல் லுங்கி கட்டிய துரை பிம்பத்தை உருவாக்குவதை எப்போதும் ரசிக்கத் தவறாத முசாபர், கொச்சு தெரிசாவிடம் கூறியது –
இந்த வீடாகத்தான் இருக்கும். இருட்டுகிற முன்பு உள்ளே போய்ப் பார்த்துட்டு வா. இங்கே தங்கியிருக்க விடுதி இருக்குமான்னு வேறே தேடணும்.
காலியாகிக் கொண்டிருந்த பந்தலில் ஓரமாக ஒரு மர நாற்காலியை இழுத்துப் போட்டு முசாபர் அமர, கொச்சு தெரிசா சற்றுத் தயக்கத்துடன் பந்தலை ஒட்டி இருந்த கட்டடத்துக்குள் போனாள். வட இந்தியப் பெண் போல பைஜாமா தரித்து, மேல் துணியால் தலையில் பதவிசாக முக்காடு போட்டிருந்த அவள் உள்ளே போகும்போதே வாசலில் மரப் பரணியில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்தபடி நடந்தாள். முசாபர் அதைக் கவனித்திருந்தாலும் ஒன்றும் சொல்லியிருக்கப் போவதில்லை தான்.
தினசரி பண்டிகை கொண்டாடுகிற, காலண்டரைத் தொலைத்த வீடு போல அந்த இடம் இருந்தது. கூடை நிறைத்து இருந்த பூக்களின் வாசமும், சின்னதும் பெரிதுமான பாத்திரத்தில் பாலும், வைத்தியன் சொல்லி அனுப்பியபடி வாங்கி வைத்தது போல் தேனும், தட்டு நிறைய சர்க்கரை, இனிப்புப் பதார்த்தங்களும் பண்டிகைச் சூழலை அதிகப்படுத்தியது.
பனை ஓலைத் தடுக்குகளில் உட்கார்ந்திருந்த பஞ்சாபகேச சிரௌதிகளின் சிஷ்ய கோடிகள் உண்டியலில் சேர்ந்த சொற்பக் காசையும், பொருளாக வந்த காணிக்கையையும் கணக்கிட்டுப் புத்தகங்களில் கவனமாகப் பதிந்து கொண்டிருந்தார்கள். ராத்திரி ஒன்பது மணி அடிக்க இன்னும் முப்பது நிமிடம் இருக்கிறது, இருபத்தெட்டு நிமிடம் இருக்கிறது என்று ஒருவர் சிரத்தையாக அறிவித்துக் கொண்டிருந்தார். ஒன்பது மணிக்கு இங்கே ஏதோ அற்புதம் நிகழப் போவதாக இருக்கும் என்று கொச்சு தெரிசாவுக்குத் தோன்றியது.
கொச்சு தெரிசா கைப்பையில் இருந்து நூறு ரூபாய் நோட்டையும், ஒரு பிரிட்டீஷ் பவுண்ட் நாணயத்தையும் காணிக்கை வட்டிலில் போடப் பக்கத்தில் இருந்த பெண் சிஷ்யை எழுந்து நின்று என்ன மொழி என்று புலனாகாத கோரிக்கையாகவோ பிரார்த்தனையாகவோ ஓங்கிய குரலில் சொல்லி, இன்னொரு தடுக்கை அவளருகில் பரத்தி கொச்சு தெரிசாவை இருக்கச் சொன்னாள்.
கதை சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாரா?
கொச்சு தெரிசா கேள்விக்கு ஒரு சிரிப்பே பதிலாக வந்தது. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு வாசலில் விட்டு விட்டு உள்ளே வந்த தியாகராஜ சாஸ்திரிகளை, உள்ளே இருந்தவர்கள் தன்னை வரவேற்றது போல் முகத்தில் மகிழ்ச்சியும் சிரிப்புமாக வரவேற்கவில்லை என்பதை கொச்சு தெரிசா கவனித்தாள்.
காலட்சேபக் காரர் போய்ச் சேர்ந்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆச்சே. போன மாசம் தான் ஊரோடு உக்காந்து எள்ளும் தண்ணியும் ஊத்தி பிண்டம் பிடிச்சு வச்சானது. அப்புறமா செம்புலே வரார், பைப்பிலே வரார்னு இவா ஏதோ சொல்லிண்டு இருக்கா.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

