இரா. முருகன்'s Blog, page 18

March 11, 2024

அப்ஸரா ஆளி இந்தர்புரி துன் காலி – இந்திரபுரியிலிருந்து வந்த தேவதை

வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் தொகுதியின் நான்காம் நாவலில் இருந்து

அவள் ஈர்க்குச்சி போலிருந்த கைகளால் அகல்யாவின் கன்னத்தில் வருடியபடி பாட ஆரம்பித்தாள் –

 

அப்ஸரா ஆளி இந்த்ரபுரி துன் காலி

 

அகல்யா ஷாலினியை மெதுவாக அணைத்துக் கொண்டாள். ஷாலினி பாட்டிலேயே மூழ்கி,சட்டென்று விலகி நின்றாள். லாவணி தொடர, ஒரு கால் இழுத்திருக்க மற்றதை மட்டும் ஊன்றி திரும்பத் திரும்ப இந்திரபுரி விட்டு அப்சரஸ் வந்த அதிசயத்தைப் பாடிக் கொண்டிருந்தாள்.

 

சரி, அப்சரஸுக்கு வழி விடு அம்மா.

 

திலீப் ஷாலினித்தாய் தோளில் அன்போடு அணைத்தபடி சொல்லி விட்டு அகல்யாவைப் பார்த்தான்.

 

அகல்யா அவன் கையை இறுகப் பற்றிக் கண் காட்டினாள். இருவரும் மாடிப்படி வளைவு ஈரத்தில் ஷாலினியின் கால் தொட்டு வணங்கினார்கள்.

 

நமஸ்காரம் பண்ணனும். இங்கே எடம் இல்லே. உள்ளே வரட்டும்

 

அகல்யா திலீப்பிடம் சொல்லிக் கொண்டிருக்க, படிகளில் தாய் தாய் என்று யாரோ விளித்தபடி இறங்கி வரும் ஓசை. அகல்யா நிமிர்ந்து பார்த்து உங்க பாட்டித் தள்ளையா என்றாள்.

 

அம்மாவை கவனிச்சுக்க நான் போட்டு வச்சிருக்கற நர்சிங் ஆர்டர்லி. ரேணுகாம்மா.

 

ரேணுகா, ஏண்டி ரேணுகா

 

ஸ்தூல சரீரத்தோடு மத்திய வயசு ஸ்திரி ரேணுகா இறங்கும்போதே அவளை அழைத்தபடி மேலே இருந்து வந்த குரல் யாரென்று அகல்யாவுக்குத் தெரிந்தது. திலீப் அடிக்கடி பெருமையோடும் வருத்தத்தோடும் சொல்கிற கற்பகம் பாட்டியம்மா. பெரிய மனுஷியாக வாழ்க்கை பூரா வாழ்ந்து கற்பூரமாக எரிந்து போனபடி கடைசித் துளியிலும் பிரகாசிக்கும் மகா மனுஷி என்று திலீப் அடிக்கடி சொல்வான்.

 

நிமிர்ந்து பார்த்தபோதே அவளுடைய கம்பீரமும் இந்த வயதிலும் உடம்பில் பிடிவாதமாகத் தங்கி இருக்கும் சௌந்தர்யமும் மனதை ஈர்க்க, மழைச் சாரல்  புகையாகப் படிந்து இறங்கும் ஒடுங்கிய படிகளில் ஊறும் நத்தைகளை ஜாக்கிரதையாக விலக்கி மெல்லப் படி ஏறினாள் அகல்யா.

 

சுமந்து வந்த கான்வாஸ் பையும் லெதர் பேக்கும் அவள் நடைக்குத் தடை சொல்லவில்லை. பின்னாலேயே ஷாலினியைத் தாங்கிப் பிடித்தபடி திலீப் வந்து கொண்டிருக்க, ரேணுகா உரக்கக் கேட்டாள் –

 

திலீப் தம்பி, கல்யாணம் ஆயிடுச்சா? எப்போ?

 

தடதடவென்று கட்டிடத்தில் சகல குடித்தனங்களிலும் மழைக்காகவும், ஞாயிறு விடுமுறைக்குக் கிடந்து உறங்கி ஓய்வெடுக்கவும் அடைத்திருந்த கதவுகள் எல்லாம் திறந்தன.  சந்தோஷமாக வரவேற்கிற குரல்கள் முன்னால் வர, ஆணும் பெண்ணுமாக அடுத்து அடுத்து வந்ததைப் பார்க்க அகல்யாவுக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி. அவள் இருப்பிடத்திலும் இப்படி நடந்திருக்குமா என்று தெரியவில்லை அவளுக்கு. அப்பா அவளை நுழைய விட்டிருப்பாரா?

 

அப்பா காலையில் கோவிலுக்கு வந்திருந்தார். படபடப்பு இல்லாமல் கையில் வைத்திருந்த வாழைப்பழச் சீப்பை அவளிடம் கொடுத்து விட்டுத் தரையில் உட்கார்ந்து கொஞ்சம் அழுதார். அவர் இந்த வருடக் கடைசியில் ரிடையர் ஆவதால், அகல்யா இல்லாமல் வீடு எப்படி இயங்கும் என்று கேட்டார்.

 

ஆர்ய சமாஜ்னு தப்பாச் சொல்லிட்டா. அங்கே போய் தேடிப் பார்த்துட்டு இங்கே வர நேரமாயிடுச்சு. செம்பூர்லே கோவில் இருக்குன்னே ரொம்பப் பேருக்குத் தெரியாது.

 

இந்தக் கடைசி வாக்கியத்தை கழுத்தில் மாலையோடு வந்த திலீப்பிடம் ஒரு தகவல் சொல்கிற குரலில் சொன்னார். சட்டையைப் பிடித்து இழுத்துக் கூச்சல் போட்டு சண்டை பிடிக்கும் ஒரு முதியவரைக் கற்பனை செய்து வந்திருந்த திலீப்புக்கு அந்த சாத்வீகமான மனிதர் பெரிய சங்கடத்தை அளித்தார். அவரையும் அகல்யாவின் அம்மாவையும் இரண்டு தம்பிகளையும் அவளுடைய மாதம் ஐநூறு ரூபாய் வருமானத்தில் இருந்து பிரித்து நிர்க்கதியாக நிற்க வைத்ததாகத் தன் மேலேயே கோபம் வந்தது அவனுக்கு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2024 20:00

March 10, 2024

மும்பையின் அதிகாரபூர்வ தென்மொழி பாலக்காட்டுத் தமிழ் என்றபடி

வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் நான்காவது= சிறு பகுதி வரிசையாக வருவது தினம்

ஐயோ, கஷ்டம். ஆத்துக்குக் கூட்டிண்டு வர பொண்டாட்டி கையை எடுத்து ரொம்பக் காரியமா யாராவது கஷ்கத்திலே திணிச்சுப்பாளா? எட்டு ஊருக்கு திவ்விய வாசனையா இருக்கு. குளிச்சேளோ இன்னிக்கு?

 

அவள் சிரித்ததைப் பார்த்து அவனுக்கும் சிரிப்பு குமிழிட்டு வந்தது. திலீப்புக்கு இரண்டு விஷயங்கள் மனசிலானது. முதலாவதாக, இன்று காலை எந்தத் தடங்கலும் இல்லாமல் நடந்த கல்யாணமோ, அது முடிந்த நிச்சயத்தால் அவன் மேல் வந்து சேர்ந்த உரிமையோ அவளை சுபாவமாகச் சிடுசிடுக்கவும் கண்டிக்கவும் வைக்கிறது. ரெண்டாவது, அவள் பேசுகிற தமிழில் டோம்பிவிலி பிராமணக் கொச்சை  ஏறியிருக்கிறது.  உரிமை இன்னும் கொஞ்சம் நாளில் அவனை இடுப்பில் முடிந்து கொள்கிற சுவாதீனமாக மாறுமோ என்னமோ, அந்தக் கொச்சை அரைகுரை மலையாளம் வண்டலாகப் படிந்த பாலக்காட்டு பாஷையாக அடுத்த வினாயக சதுர்த்திக்குள் முழுசாக மாறிவிடும் என்று திலீப் அறிவான்.

 

இதானே நம்ம ஆ’ம்?

 

அகல்யா லெதர் பேக்கை தோளை உயர்த்திப் பின்னால் தள்ளியபடி திலீப்பைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள். ஆமா என்று அவள் கை விரல்களை இறுக்கிய அவன் கை சொன்னது.

 

சர்வ மங்கள் சாலில், பழைய தினசரிப் பத்திரிகைப் பக்கமும், வாழைப் பழத் தோலும், வாழைச் சருகும், முட்டை ஓடும் மிதக்க, மழைத் தண்ணீர் கலங்கிச் சூழ்ந்த இரண்டாவது கட்டிடம். அங்கே முதல் மாடி. பால்கனியில் வைத்த  டால்டா டப்பாவில் ஓங்கி உயரமாக ஏதோ செடி. அகல்யா அந்தக் குடியிருப்பில் எதிர்பார்த்த மெல்லிய ஆர்மோனியச் சத்தம் தான் கேட்கவில்லை.

 

படி இங்கே இருக்கு.

 

தண்ணீர் வழிந்து கொண்டிருந்த குறுகிய படிக்கட்டைக் காட்டினான் திலீப். அங்கே பெரிய நத்தை ஒன்று படிகளுக்கு இடையே  ஊர்ந்து கொண்டிருந்தது. கீழே இன்னும் இரு சிறு நத்தைகள் தரையோடு ஒட்டியபடி கிடந்தன. மாடிப் படி ஏறும் வளைவு இருட்டில் இருந்து மராட்டியில் ஒரு குரல் குதூகலமாக வந்தது.

 

திலீப் மயிலோடு வந்துட்டான்.

 

அகல்யா திரும்பித் திலீப்பைப் பார்த்தாள். ஆமாம் என்று தலையசைத்தான். அம்மா தான்.

 

அவன் குடையை மடக்குவதற்குள் குனிந்து உள்ளே புகுந்து அகல்யாவின் கண்ணுக்கு மிக அருகே தன் சோர்ந்த கண்கள் நிலை குத்தி நிற்க, ஷாலினி சத்தமாக அறிவித்தாள் –

 

இந்த மயில் தான் இத்தனை நேரம் ஆடிட்டு இருந்தது இங்கே. மழை, ஈரம் எதுவும் பொருட்டில்லே இதுக்கு. எனக்காக ஆடறதுக்கே வந்திருக்காம். போய்ட்டு அப்புறம் வா தூங்கணும்னேன். பாரு, கேக்காம உன்னோட வந்துடுத்து.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2024 20:32

March 8, 2024

பொத்தல் குடைக்குள் இருவராக நடந்து வந்த மழைநாள் திருமணம்

வாழ்ந்து போதீரே நாவல் = அரசூர் நாவல் வரிசை 4 = அடுத்த அத்தியாயத்தில் இருந்து

கொட்டும் மழையில் டாக்சியை விட்டு இறங்கி பாண்டுப் சர்வமங்கள் சால் இருக்கும் குறுகலான தெருவில் அகல்யா நுழைந்தாள்.

 

தேங்கி இருந்த மழைத் தண்ணீரையும் பின்னால் ஒடுங்கிக் கிடந்த தெருவையும் பார்த்து, உள்ளே வந்தால் திருப்பிப் போக சிரமம் என்று தெரு முனையிலேயே நிறுத்தி விட்டார் டாக்சி டிரைவர்.

 

ஆனாலும் ரெக்சின் பை, லெதர் பேக், பூ மாலை, செண்டு இதையெல்லாம் இறக்கவும், குடையை விரித்துப் பிடித்து திலீப்பிடம் தரவும் அவர் தவறவில்லை. வண்டியைக் கிளம்பும் முன் அவருடைய வாழ்த்தும் தார்வாட் பகுதி மராத்தியில் வந்ததைத் திலீப் கவனித்தான்.

 

ரொம்ப தூரம் நடக்கணுமா?

 

அகல்யா கேட்டாள். மழை சீரான சத்தம் எழுப்பிப் பாதையை நீர்த் திரையிட்டு மறைத்து முன்னால் ஓடியது. அகல்யா குடைக்குள், திலீப்புக்கு இன்னும் அருகில் வந்தாள். அவ்வளவு அருகில் திலீப்பின் வாயில் மட்டிப்பால் ஊதுபத்தி வாசனை எழுந்து வருவதாக அவள் நினைத்தாள். அது தானா அல்லது அவன் பல் கூடத் துலக்க நேரம் கிட்டாமல், அவளை அவசரமாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கோவிலுக்கு ஓடி வந்தானா? எதுவோ, அந்த வாடை அவளுக்கு வேண்டி இருந்தது. ஆம்பிளை வாடை. அவளுடையவன்.

 

லெதர் பேக் என்கிட்டே கொடு. ஜிப் சரி இல்லே. உள்ளே தண்ணி போயிடும்.

 

குடையை இன்னும் தாழப் பிடித்தபடி கனமான அந்தப் பைக்காகக் கை நீட்டினான் திலீப். குடைக்கு வெளியே சத்தம் எழுப்பி விழுந்த மழை, குடையின் சுற்றுவெளி மேலிருந்து சன்னமான  தாரையாக வழிந்தது.

 

தலை குளித்து ஒரு முழம் கனகாம்பரப் பூ சூடி இருந்த அகல்யாவின் உச்சந்தலையில் இருந்து சீயக்காய்த் தூள் நெடியும், நெற்றியில் கோவில் குங்குமம் எழுப்பும் இனம் தெரியாத பாதுகாப்பான மஞ்சள் வாசனையும், கரைந்து கண்ணைச் சுற்றித் தடமிட்டுப் பூசிய கண்மையில் டிங்சர் அயோடின் கலந்த மெல்லிய வாடையும் சேர்ந்து எழுந்து திலீப்பின் நாசியை நிறைந்தன.

 

ஈரமும் அண்மையுமாக அவள் உடல் நெடி திலீப்பை பெரிய சாதனை முடித்து விருது வாங்கி வரும் மகிழ்ச்சியை அடைய வைத்திருந்தது. அது மயக்கமடைய வைப்பது. முயங்கிக் களித்துக் கிடக்கக் கட்டியம் கூறுவது.

 

பேக் இருக்கட்டும். உங்க வேஷ்டியைக் கவனியுங்கோ. விழுந்து வைக்கப் போறது..

 

ஈரமான பூமாலையில் இருந்து பூக்கள் கலவையாக மழை நீருக்கு மணம் ஏற்றி நெடி தரப் புது வேட்டி முனை ஈரத்தில் புரளாமல் உயர்த்திப் பிடித்தபடி திலீப்  நிச்சயமற்று ஒரு வினாடி நின்றான்.

 

லெதர் பேக்கை தோளில் உள்ளொடுக்கி மாட்டியபடி ரெக்சின் பையை வலம் மாற்றினாள் அகல்யா. இரண்டு சுமைகளின் கனத்தால் பக்கவாட்டில் உடல் வளைய பிடிவாதமாக அடியெடுத்து வைத்து வந்து கொண்டிருந்த அவள் திரும்பிப் பார்த்தாள்.

 

வேஷ்டி தாறுமாறா அவுந்து வழியறது. விழுந்து வைக்கப் போறது. பிடியுங்கோன்னா கேட்க மாட்டேளா?

 

நீண்ட அவள் கை மழையில் நனைந்து அவன் இடுப்பில் துணியைப் பிடித்து நிறுத்தியது. அவன் குடையைத் தோளில் சரித்தபடி அந்தக் கையைத் தன் கக்கத்தில் செருகிக் கொண்டு வேஷ்டியைச் சரியாகக் கட்டிக் கொண்டான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2024 19:08

March 7, 2024

செம்பு நீரில் ஆகாசவாணியாக இழைந்து வரும் குரல்கள்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கு= தொகுதி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க்ஸ் வெளியீடு – அடுத்த சிறுபகுதி

 

மாதம் ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்கும், வட்ட டிபன் பாக்ஸில் அவல் உப்புமா எடுத்துப் போய் மத்தியான சாப்பாடு முடிக்கும் டைப்பிஸ்டுப் பெண்கள் மழைக் காலத்துக்குச் சற்றே முந்திய தூறல் சாயங்காலங்களில் அப்சரஸ் ஆவார்கள் என்று திலீப் நினைத்தான். அவன் கரம் பிடித்து வருகிற இவள் அவர்களில் கிரேட் ஒன்  நிலை அப்சரஸ். நிமிஷத்துக்கு இருபது வார்த்தை சுருக்கெழுத்தும், பத்து வார்த்தை தட்டச்சும் செய்யும் இந்தத் தேவதை திலீப்புக்கு வசப்பட்டவள். காலில் ரப்பர் செருப்பு தவிர மற்றப்படி யட்சி போல வசீகரிக்கும் அணங்கே தான் அகல்யா.

 

வழியை விட்டு விலகிச் சற்றே நடந்து ஈரம் பூரித்துக் கிடந்த மணலில் அமர்ந்தார்கள்.

 

அரசூர்லே முப்பது வருஷமா ராமாயணம் சொன்ன ஒருத்தர் பரலோகம் போனாலும் கதை சொல்றதை விடலியாம். செம்புத் தண்ணியிலே அவரை ஆவாஹனம் செஞ்சு வச்சதும், விட்ட இடத்திலே இருந்து கதையை ஆரம்பிச்சு தொடர்ந்து போயிட்டிருக்காம்.

 

அம்புலிமாமா கதை சொல்லும் சுவாரசியத்தோடு தொடங்கினாள் அகல்யா.

 

எங்கே விட்டுப் போனாராம்? திலீப் கேட்டான்.

 

காட்டுக்குப் போற ராமன் எல்லோர் கிட்டேயும் சொல்லிட்டுப் போற இடம். இந்த மூணு மாசத்திலே ராமன் உள் தெருவெல்லாம் சொல்லி, கோட்டை மதிலுக்குப் பக்கத்துத் தெருவுக்கு வந்தாச்சாம்.

 

ரொம்ப வேகமாகத் தான் கதை நகர்றது.

 

திலீப் சிரிக்க, வேணாம் கிண்டல் எல்லாம் செய்யக் கூடாது என்று கண்டித்தாள் அகல்யா.

 

கதை சொல்ற போது பாத்திரத் தண்ணிக்குள்ளே வந்த அந்த ஆகாச வாணிக்குப் பக்கமா யாரெல்லாம் உண்டாம்?

 

திலீப் சுவாரசியம் தட்டுப்படாமல் மீண்டும் கேட்டான். ஆனாலும் இது சுவாரசியமானதுதான்.

 

பாகவதரோட சிஷ்யகோடிகள் தான். தினசரி அவருக்கு மாலை மரியாதைன்னு செம்புக்கு சூட்டறதாம். தட்சணையை முன்னாடி பட்டுத் துணியிலே எல்லோரும் போட்டு அப்புறமா குவிச்சு எடுத்துக்கறதாம்.

 

அகல்யா அதிசயம் கேட்ட குரலில், குரல் கீச்சிட, கைக்குட்டையால் வாயை அவ்வப்போது பொத்தியபடி கதை சொன்னாள்.

 

செம்பாவது, குரல் வரதாவது. எல்லாம் ப்ராட். பக்கத்துலே இருக்கப்பட்ட சிஷ்யகோடி ஏதாவது வெண்ட்ரிலோகிஸ்டா இருப்பான். வாயைத் திறக்காம பேசற கலை அது.

 

திலீப் சொல்ல நிறுத்தச் சொல்லிச் சைகை காட்டித் தொடர்ந்தாள் அகல்யா.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2024 18:42

March 6, 2024

இரானி ஹோட்டல் சிறு சமோசாவும் குடையுமாக வந்த மும்பாய் மழைக்காலம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவலில் இருந்து = ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு

=============================================================================

அரசூர் தெரியுமா? அகிலா கேட்டாள்.

 

சிறிய சமோசாவைக் கடித்துக் கொண்டு தலையை இல்லை என்று ஆட்டினான் திலீப். இரானி ஹோட்டலில் மழைக்காக ஒதுங்க வருகிறவர்களின் கூட்டம் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது.

 

மழை தொடங்கப் போகிறது என்று பூஜை செய்த பிள்ளையாரைச் சதுர்த்தி முடிந்து விசர்ஜன் நேரத்தில் கடலில் இடும்போதே எல்லோருக்கும் தெரியும்.  கணபதியைக் கரைத்ததும் மேகம் திரண்டு தென்மேற்குப் பருவ மழை ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கையில் கையில் குடையோடு கணபதி பப்பா மோரியா பாடிக் கொண்டு வரும் சில வயதான மராட்டிய ஆண்களை, ஏன் பெண்களையும் கூடத் திலீப் பார்த்திருக்கிறான். அவர்களுக்காகவே ஏற்படுத்தியது போல சில சமயம் மழையும் பொழிந்து நின்றிருக்கிறது.

 

அரசூரா?

 

திலீப் அசிரத்தையாகக் கேட்டான்.

 

மெட்ராஸில் இருந்து ராமேஸ்வரம் போகிற ரயில் இருக்காம். போட் மெயில்னு அழகான பெயர் அதுக்கு. அந்த ரயில் போற பாதையில் இருக்கப் பட்ட ஊர் அப்படீன்னு கேட்டேன். அங்கே ஒரு விசேஷம், தெரியுமா?

 

அகல்யா தரையில் விழுந்த கைக்குட்டையை எடுத்து உதறி இடுப்பில் செருகியபடி சொன்னாள்.

 

மழைக்காக ஒதுங்கிய எல்லோரும் சின்ன சமோசாவும், டீயும் சாப்பிட்டுப் போக உடனடியாக உத்தேசித்தவர்களாகவே இருந்தார்கள். டீ தவிர ஓவல்டின், கோக்கோ மால்ட் போன்ற பானங்களும், இறுக்கமாக மூடிய உயரமான கண்ணாடி ஜாடிகளில் மைதா மாவு பிஸ்கட்டுகளும் விற்பனைக்கு இருந்தாலும், ஒற்றை விருப்பமாக டீயும் சமோசாவும் தான் விற்றாகிறது.

 

இவர்களில் ஆண்கள் எல்லோரும், வியர்வைக் கசகசப்பும் மழைத் தூறலும் நனைத்த முழுக்கைச் சட்டையைத் தோள்பட்டைக்கு ஏற்றி மடித்து விட்டபடி, சபர்பன் ரயிலில் தொங்கிக் கொண்டு, அவரவர் குடித்தனத்துக்குப் போனதும் மர ஸ்டூலைத் தேடுவார்கள். பரணில் போட்டு வைத்த மழைக் கோட்டும், குடைகளும், கம் பூட்ஸ்களும் தொப் தொப்பென்று தூசியோடு தரையில் விழ  துடைத்துப் போட்டு மழைக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராவார்கள்.

 

மழையை முன் வைத்தே இனி மூன்று மாதம் எங்கே போனாலும் வந்தாலும் பேச்சு இருக்கும் என்பது திலீப்புக்கு நிம்மதியான விஷயமாகப் பட்டது. நிறைய யோசித்துத் தினமும் எத்தனையோ தடவை பேசப் புதிதாக எதையும் கண்டெடுக்க வேண்டிய கவலை தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

 

நான் ஒரு விசேஷம் பத்தி பேச ஆரம்பிச்சு அஞ்சு  நிமிஷமாச்சு. ஊம் கொட்டவாவது செய்யலாமில்லே. மனசெல்லாம் எங்கே? பெரிசு பெரிசா மலையாளப் பாச்சிக்கு நடுவிலே போய் உக்கார்ந்துடுத்தா?

 

அகல்யா அவன் தோளில் அடித்தாள்.

 

உஸ் அந்த ஆளுக்குத் தமிழ் அர்த்தமாகும்.

 

ஜாக்கிரதையாகக் கோப்பையை ஏந்தி அதை விட சர்வ கவனத்தோடும் டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு ஆறடி சர்தார்ஜியைக் கண்ணால் காட்டிச் சொன்னான் திலீப்.

 

அவனுக்குத் தமிழ் தெரிந்திருந்தால் தான் என்ன போச்சு?

 

அகல்யா மென்மையாகச் சிரித்தபோது அவளுடைய புது மூக்குத்திப் பொட்டு ஒளிர்ந்ததைப் பார்த்த திலீப் மெல்ல நாசி முனையில் வருடினான்.

 

வேணாம் கை எடுக்கலாம். இல்லாட்ட தாறுமாறா கீழே இறங்கிடும்

 

அவள் குற்றப்படுத்தினாலும் அதில் எதிர்பார்ப்பும் தெரிந்ததைச் சிரிப்போடு கவனித்தான் திலீப்.

 

என்ன கேட்டே?

 

கேள்வியை மறந்த மாதிரி கேட்டான். அவள் வாயால் மலையாள சௌந்தர்யம் திரும்ப நினைவு கூரப்பட அவனுக்கு இஷ்டம்தான்.

 

அரசூர் தெரியுமான்னு கேட்டேன்.

 

அகல்யா ஆதி கேள்விக்குப் போயிருந்தாள். அவளுக்கு கேரள வனப்பு தேவையில்லாத விஷயம். திலீப்புக்கும் அதே படி. ஆனால் அகல்யா இல்லாத நேரத்தில் அது தவிர யோசிக்க உருப்படியாக ஏதும் இல்லைதான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2024 18:18

March 5, 2024

அகல்யா தாய் என வாஞ்சையோடு அழைத்தவரும் சென்னைப் பெண்ணும்

 

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி

நூல் வெளியீடு – ஸீரோ டிகிரி பப்ளிஷிங்

==============================================================

அகல்யா தாய்

 

அகல்யா எழுந்து நின்று கை கூப்பினாள். சிரிப்பு குமிழிட்டு வரச் சொன்னாள் –

 

சார், நான் உங்க பெண்ணு வயசு. தாய்ன்னு கூப்பிட்டா எங்க அம்மாவைக் கூப்பிடற மாதிரி இருக்கு.

 

அவர் வாஞ்சையோடு அவளை நோக்கினார்.

 

நீ என் அம்மாவுக்கே அம்மா என் மகளுக்கு மகள், குழந்தே. மதராஸி ஆனா என்ன, மராட்டி ஆனா என்ன? பெண்ணை மதிக்கற சமூகம் ரெண்டுமே.

 

பரிசு வாங்குவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஏதோ திரைப்படத்தில், கிளைமாக்ஸுக்கு முந்திய காட்சியைச் சாம்பிராணிப் புகைக்கு நடுவே இருந்து பார்ப்பது போல் கண்ணைக் கட்டியது திலீப்புக்கு. திரையரங்கில் கதவு திறந்து சாதரோடு நுழைந்த முதிய முகம்மதியர், உனக்குத் தான் வெற்றி என்று சொல்லியபடி நகர்ந்தார்.

 

பெரியவர் திலீப்பைக் கூர்ந்து பார்த்தார் –

 

அகல்யாம்மா, உன் சிநேகிதர் விவரம் எல்லாம் ஓகே. அவர் முழு. மதராஸின்னாலும் பிரச்சனை இல்லே. மாடுங்காவிலேயோ, முலுண்ட்லேயோ நிக்க வச்சுடுவேன். இல்லேன்னா கல்யாண் முனிசிபாலிடி எலக்‌ஷன் ஏப்ரல்லே இருக்கு. மதராஸின்னாத்தான் ஓட்டு விழும் அங்கே. நிச்சயம் ஜெயிப்பார்.

 

அகல்யா சட்டென்று குனிந்து அவர் பாதத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள, திலீப்பும் அப்படியே செய்தான். அவனுக்கும் அகல்யாவுக்கும் கல்யாணம் முடிந்து அவர் ஆசியைப் பெறுவதுபோல் இருந்தது.

 

ஜீத்தே ரஹோ.

 

வாழ்த்திய பெரியவர் மெதுவான குரலில் தொடர்ந்தார்.

 

மற்ற கட்சி எல்லாம் பெரிசு. ரொம்பவே பெரிசு. ஒவ்வொரு கேண்டிடேட்டுக்கும் கட்சி நிதி எலக்‌ஷனுக்கு செலவழிக்கக் கிடைக்கும். இங்கே பணம் இல்லே. நீங்க தான் தரணும். நன்கொடை இல்லே. பேங்குலே டிபாசிட் மாதிரி. தேர்தல் வேலைக்கும், கட்சியில் பொதுவாக தேர்தல் நிதியாகவும் ஒரு தொகை ஒவ்வொரு வேட்பாளர் கிட்டேயும் வாங்கிக்கறோம். அப்புறம் பத்து வருஷத்துலே நிதி நிலைமை சீரானதும் நிச்சயம் திருப்பிக் கொடுத்திடுவோம். நான் இறந்து போனாலும், இவங்க எல்லாம்.

 

அவர் சின்னவரையும் மற்றவர்களையும் சுண்டிக் கைகாட்டி ஜன்னல் மாடத்தில் இருந்து புகைக் குழாயை எடுத்துக் கொள்ள, எல்லோரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து, முறையிட்டார்கள் –

 

நீங்க நூறு வயசு இருப்பீங்க. இது என்ன பேச்சு.

 

திலீப்பும் மனப் பூர்வமாக அவர்களோடு சேர்ந்து கொண்டான். அவனுடைய அப்பா, அவனுக்காக எதுவும் செய்யாவிட்டாலும், எங்கே போனார் என்று தெரியாவிட்டாலும், அவரும் நூறு வருஷம் சௌக்கியமாக இருக்கட்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2024 21:29

March 4, 2024

மாலை கொண்டுவர மறந்து பெரிய சிரிப்பை முகத்தில் ஒட்டி வந்தவன்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்குநாவல் தொகுதியில் நான்காவதில் இருந்து ஒரு சிறு பகுதி

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

 

மாலை கொண்டு வராததற்காகத் தன்னையே சபித்துக் கொண்டாலும் கதவில் முட்டுகிறது போல் உள்ளே போனபோது திலீப் முகத்தில் மிகப் பெரிய சிரிப்பு ஒன்று ஒட்டி இருந்தது.

 

கதவு பக்கம் போட்டு வைத்திருந்த ஸ்டீல் மேஜையில் காகிதங்களைப் பரத்திக் கொண்டு அகல்யா உட்கார்ந்திருந்தாள். இவனைப் பார்த்ததும் மராத்தியில் கேட்டாள்

 

என்ன தேவ் ஆனந்த், லோக்சபா எலக்‌ஷனுக்கு சீட்டா? போய்ட்டு அடுத்த வருஷம் வாங்க.

 

அவள் டென்ஷன் எதுவும் இல்லாமல் வேலையில் இருப்பதை அனுபவித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க திலீப்புக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அவளுக்குப் பின்னால் நாலு கட்சி முக்கியஸ்தர்கள் நிற்க, அறையின் அந்தக் கோடியில் சின்னவர் மட்டுமில்லை, பைப் புகைத்தபடி பெரியவரும் நின்று கொண்டிருந்தார்.

 

‘நம்ம கோட்டையிலே இப்போ மதராஸிக் கொடி தான் பறக்குது’

 

பெரியவர் சொல்ல, மற்றவர்கள் என்ன மாதிரி எதிர்வினை செய்வது என்று புரியாமல் நின்றார்கள். சின்னவர் ஆரம்பித்து வைக்க ஒரு பெரிய சிரிப்பு அறை முழுக்கச் சூழ்ந்தது. பைப்பை விலக்கிப் பிடித்தபடி பெரியவரும் புன்னகைத்தார்.

 

மாநகராட்சித் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் காரியத்தின் இறுக்கம் சற்றும் இல்லாத அந்தச் சூழலைத் திலீப்  சந்தேகத்தோடு எதிர்கொண்டான்.

 

இது அவனுக்காக நடத்தப்படுகிற நாடகமா? அகல்யாவும் நடிக்கிறாளா? அவளை அவர்கள் விலைக்கு வாங்கி இருப்பார்களோ? எதைக் கொடுத்து?

 

உங்க தகப்பனார் காணாமல் போனது பற்றி மனப் பூர்வமா வருந்தறேன் தம்பி. ரொம்ப படிச்ச மார்க்சிஸ்ட்னு சொன்னாங்க. என் நண்பர்கள் எல்லோரும் மார்க்சிஸ்ட் தான். நான் மட்டும் பத்திரிகைக்குப் போகாட்ட, தாடி வளர்த்துட்டு, ரணதிவே, ரங்கனேக்கர் பின்னாடி தான் செங்கொடி பிடிச்சுட்டு சுத்திட்டு இருப்பேன். உங்கப்பாவை பரிசயம் ஆகியிருக்கும்னு மனசு சொல்லுது. ஆனா, அவர் இல்லையே, நான் சொல்றதைக் கேட்டு ஆமா, இல்லேன்னு சொல்ல.

 

பெரியவர் பேசி நிறுத்த, மற்றவர்கள் மௌனமாக அவனையே பார்த்தார்கள். அகல்யா ஒரு காகிதத்தை சின்னவரிடம் மரியாதையோடு கொடுத்தாள்.

 

வேட்பாளர் மனு. போன மாசமே கொடுத்திருக்கார்.

 

அவள் சொல்லும்போது திலீப்பைப் பார்த்து அழகாகச் சிரித்தாள். கூப்சூரத் மத்ராசி சோக்ரி. அவளே திலீப் சார்பில் தயாரித்து அவன் கையெழுத்தையும் அவன் ஒப்புதலோடு ஆபத்துக்குப் பாவமில்லை என்று போட்டு வைத்திருக்கிறாள்.

 

திலீப்புக்கு அவளை மேஜை கடந்து போய்க் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. பெரியவர் சம்மதிக்காவிட்டாலும் சின்னவர் கோபப்பட்டாலும் பரிவார தேவதைகள் முகம் சுளித்தாலும் அவளை உதட்டிலும் தாடையிலும் முத்தமிட வேண்டும்.

 

இந்தக் காதல் சாஸ்வதமானது என்று முகம்மது  ரஃபி குரலில் சோகம் இழையோடப் பாடுகிறவனாகத் தன்னைக் கற்பித்துக் கொண்டான். அப்பா ரசித்த அதிபயங்கர அழுகை ராகமான சிவரஞ்சனியில் அல்லது அதன் தாயாதி, பங்காளி ராகமான நீலமணியிலோ , விஜயநாகரியிலோ பாடுகிறவன்.

 

சின்னவர் கையில் வாங்கிய வேட்பு மனுவைப் படித்துக் கூடப் பார்க்காமல் பெரியவரிடம் கொடுத்தார். அடர்ந்த ஹவானா புகையிலை மூக்கில் குத்தும் கறாரான வாடையோடு புகைக்கும் குழாய் வெடித்துச் சிரித்ததுபோல் மேகத் தொகுதியாகச் சாம்பல் நிறப் புகையை வெளியேற்ற, பெரியவர் கண்ணாடி அணியாத கண்ணைச் சிறுத்து சில வினாடிகளில் அந்த மனுவைப் படித்து முடித்து விட்டார்.

 

திலீப் ஆவலாக அவர் என்ன சொல்ல்ப் போகிறார் என்று காத்திருக்க, பெரியவர் அவன் பக்கம் கூடத் திரும்பவில்லை. அவர் பைப்பை ஜன்னல் மாடத்தில் வைத்து விட்டு, நேரே அகல்யாவின் நாற்காலிக்கு அருகே வந்தார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2024 18:17

March 3, 2024

பிடிப் பிடியா புஜியாவைத் தின்னு ரெண்டே நாள்லே நாலு கிலோ காயப் – காணாமல் போச்சு

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்குநாவல் தொகுதியில் நான்காவது நாவலில் இருந்து

=======================================================================

முதல் அறையைக் கடக்கும் போதே அவனைப் பெயர் சொல்லி யாரோ அழைக்கிற சத்தம். உள்ளே இருந்து வேகமாக வந்து அவன் கையை அன்போடு பற்றிக் கொண்டார் மிட்டாய் ஸ்டால் பாலகிருஷ்ண கதம்.

 

பெங்களூர் போனா திரும்பி வரவே முடியாதும்பா என் மகள். நீ அங்கே போய் ஒரேயடியா செட்டில் ஆயிட்டே போலே. உடம்பெல்லாம் தகதகன்னு சிவாஜி மகாராஜ் மாதிரி மின்னுது. நல்லா இருக்கே தானே?

 

கதம் ஜி, நான் கேரளம் போயிருந்தேன். பெங்களூரிலே இருந்து கிட்டத்தட்ட ஐநூறு கிலோமீட்டர் தூரம்.

 

அப்படியா, ஏதோ போ. நல்ல வேளை சரியான நேரத்துக்கு வந்தே. லிஸ்ட் முடிக்கற நேரம்.

 

கதம் முகத்தில் அலாதி மகிழ்ச்சியைக் கண்டான் திலீப். ஆக, மிட்டாய்க்கடை கவுன்சிலர் தான் திலீப் வார்டுக்கு இனி வாய்க்கப் போகிறதாக்கும்.

 

ஏய், நான் கவுன்சில் எலக்‌ஷன் நிக்கலே. இன்னும் ஒரு வருஷத்துலே அசம்பிளி எலக்‌ஷன் வருதே. நேரே எம்.எல்.ஏ தான். என் வயசுக்கு கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ளே குஸ்திச் சண்டை, தள்ளு முள்ளுன்னு தரையிலே கட்டிப் பிடித்து உருண்டு உதச்சு மெனக்கெட முடியாது.

 

ரொம்பப் பெருந்தன்மையாக அறிவித்தார் கதம். அவர் இல்லாவிட்டால்?

 

உன் பெயர் லிஸ்ட்லே இருக்கு. நம்ம வார்டுக்கு மூணு பேர் உண்டு.. உன்னைத் தவிர, ஸ்கூல் டீச்சர் ரகுநாத் காலே அப்புறம் ஒருத்தர்.

 

யார் நம்ம கணபத் மோதக் தானே?

 

அவனா, சோம்பேறி. பொறுக்கி மேஞ்சு சுத்திட்டிருப்பான். என் கடையிலே வேலை போட்டுக் கொடுத்தேன். பிடிப் பிடியா புஜியாவைத் தின்னு ரெண்டே நாள்லே நாலு கிலோ காயப். உடனே ஓட்டி விட்டுட்டேன் பன்னியை.

 

அவர் சிரித்தார். ஆனாலும் கவுன்சிலர் தேர்தலுக்கு வார்டில் டிக்கெட் கேட்கும் இன்னொருத்தர் யாரென்று சொல்லவில்லை.

 

உள்ளே போய் நமஸ்தே சொல்லிட்டு வர்லாமா? ஏன் வரல்லேன்னு அப்புறம் திட்டு கிடைக்கும்.

 

திலீப் கேட்டான். அங்கே யார் இருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியாது. என்றாலும் பாலகிருஷ்ண கதம் அவனுக்கும் இங்கே ஒரு பிடிமானம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லாக் கிரகமும் கூடி வந்து இவனுக்கும் கவுன்சிலர் பதவி கிடைத்து அவரும் எம்.எல்.ஏவோ மினிஸ்டரோ ஆனால், திலீப் மோரே என்ற பின்னணியில் ஆள் பலம், தலைமை ஆதரவு உள்ள கவுன்சிலர் அவருக்கு வலது கையாகச் சதா செயல் படுவான் என்பதை உணர வேண்டும்.

 

உள்ளே சின்னவர் தான் இருக்கார். போய் உடனே வந்துடு. பெரிய கூட்டம் காத்து நிக்குது உள்ளே போகறதுக்காக. மூட் வேறே சரியில்லே தலைமைக்கு. கட்சி ஆரம்பிச்சு வர்ற முதல் எலக்‌ஷன். அதான்.

 

கதம் காதில் சொல்லி அனுப்பி வைத்தார்.

 

கையில் கதம் கடையில் வாங்காத புத்தம்புது தூத்பேடாவோ, சரிகை மாலையோ கொண்டு வந்திருக்கலாம். மடுங்கா சங்கர மடம் வாசல் பூக்கடையில் ஜம்மென்று மல்லிகைப்பூ மாலை கூடப் புதிதாகக் கட்டியது கிடைக்கிறது. ஈரத்தோடு கொண்டு வந்து கழுத்தில் போட்டால் தெருவே மணக்கும்.

 

வேண்டாம். மதராஸித் தனத்தைக் கொஞ்சம் போலக் கூட வெளிப்படுத்தும் எந்த அடையாளத்தையும் இங்கே சுமந்து போகக் கூடாது.  சரிகை மாலையும், வாசனை இல்லாத பூ நிறைய இடைவெளி விட்டுக் கட்டிய, நிற்கிற, நடக்கிற, மூச்சடங்கிக் கிடக்கிற யாருக்கும் பேதாபேதம் இல்லாமல் சூட்டி மகிழ்கிற உள்ளூர் ஆசாரத்துக்குப் பொருந்திய துலுக்கஜவந்திப் பூமாலையும் எதேஷ்டமாகக் கிடைக்கும். அதில் ஒண்ணு ரெண்டாவது.

 

பார்த்துட்டு சீக்கிரம் வந்துடுங்க. இன்னும் பத்து நிமிஷத்துலே சித்திவினாயக் கோவில் போயிட்டிருக்கார் சின்னவர். மகனுக்குப் பிறந்த நாள்.

 

யாரோ சொல்லியபடி அவனை முன்னால் செலுத்தினார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2024 18:42

March 2, 2024

ஓங்கி அடித்ததும் நடுநடுங்கி வால் பதுக்கிய நாயானவன்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசை 4 – சிறிய பகுதி

————————————————————————————–

மூன்று மாதத்தில் பம்பாய் மாறியதோ என்னமோ, கட்சியின் தலைமைக் காரியாலயம் ஏகத்துக்கு மாறி இருந்தது. வரப் போகும் மாநகராட்சித் தேர்தலில் கட்சி பெரும் வெற்றி அடையும் என்று பரவலாக, எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் கூட எதிர்பார்க்கப் படுவதாலோ என்னமோ அங்கே தாதர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் போலப் பரப்ரப்பான சூழ்நிலை.

 

திலீப் உள்ளே நுழைந்த போது காக்கிச் சட்டைக் காவலன் குறுக்கே விழுந்து தடுத்து நிறுத்தினான்.

 

ஜா நை சக்தா. பாஸ் திகாவ் நை தோ, ஹடாவ்

 

போடா நாயே பாஸ் இடுப்பிலே தொங்குது. அவுத்துக் காட்டறேன்.. நாத்த பிருஷ்டத்தை ஓரமா நகர்த்துடா பொணமே என்று அந்த நேபாளிக்குப் புரியாத தமிழில் சொல்ல ஆரம்பித்து, அவசரமாக நிறுத்திக் கொண்டான் திலீப்.

 

இங்கே தமிழில் பேசுவது அனர்த்தம். இந்தத் தடியனின் அரைகுறை இந்தி கூட வரவேற்கப்படுவதில்லை. மராத்தி, அது மட்டுமே செல்லுபடியாகிற நிலம் இது. நாளை மாநிலம் முழுக்க அப்படியே ஆகலாம்.

 

அதை விடப் பயங்கரம், இந்த வாசல் காக்கும் சேவகன், அகல்யா மாதிரி, திலீப் மாதிரி சரளமான வடக்கத்தியான் வேடம் கட்டிய உள்ளூர் பிரகிருதியாக இருக்கக் கூடும். அவனுக்கும் தமிழ் புரியுமாக இருக்கலாம்.

 

புரிந்தாலும் திருடனுக்குத் தேள் கொட்டிய அவஸ்தை தான் அவனுக்குக் கிடைக்கும். வசவையும் சாபத்தையும் வெளியே சொல்ல மாட்டான். உனக்கு எப்படி மதராஸி பாஷை தெரியும் என்று கொக்கிப் பிடி போட்டுக்  கொட்டையை நெரிப்பார்கள். அவனுக்கு வேண்டிய உபசாரம் தான் அது.

 

ஆனால், ஏன் காவல்காரனின் விரோதத்தைச் சம்பாதித்து, கட்சி எலக்‌ஷன் டிக்கெட்டை யாசிக்க உள்ளே கடந்து போக வேண்டும்?

 

திரை விலகி உள்ளே இருந்து அதிகாரத் தோரணையோடு பேசிக் கொண்டு யாரோ வந்தார்கள். திலீப் நம்ப முடியாத ஆச்சரியத்தோடு பார்த்தான்.

 

கணபதி மோதக்.

 

மூணு மாசத்தில் மாற்றமாக, அவன் கட்சி ஆபீசில் கொஞ்சம் போல் முக்கியஸ்தனாக ஆகி இருந்ததாக அவன் பார்வையில் தெரிய வந்தது.

 

அட, மோதகமே, மதராசி ஹோட்டலை முற்றுகையிட்டு சாம்பார் வடை கவர்ந்து போய்ப் பெண்டாட்டிக்குச் சமர்ப்பிக்கத் தூக்குப் பாத்திரத்தோடு நீ வந்தது எந்த ஜன்மத்தில்? இன்னும் அந்த மாதிரிக் கைங்கர்யம் செய்கிறாயா?

 

என்ன பண்றே?

 

மோதக் ஆச்சரியப்பட்டு நின்றான். கூட நிற்கிறவர்கள் அவன் மேல் வைத்த ம்ரியாதையைக் குறைக்கிற நக்னமான கேள்வி.

 

திலீப் மோரே. மூன்று மாதம் முன்னால் திலீப் அண்ணா. இப்போது அவனுக்கு இங்கே செல்வாக்கு இல்லை. எதற்கு வந்து நிற்கிறான் என்று ஏளனமாகப் பார்த்தான்.

 

என்ன திலீப், ஆள் அடையாளமே காணோம். மெட்றாஸ்லே கட்சி பிராஞ்ச் ஆரம்பிச்சுட்டியா?

 

மோதக் அதிகாரியாக நின்று கேட்க திலீப் தலைக்குக் கோபம் ஏறியது.

 

சாம்பார் குடிக்கப் பாத்திரத்தோடு அலைந்த பயல், அண்ணா, அண்ணா என்று ஏங்கி, மூஞ்சூறு போல கெட்ட வாடையோடு நின்று முறையிடுகிறவன்  இப்போது பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறான். செருப்பாலே அடி தேவடியாப் பையனை. இவனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்.

 

மனதுக்குள் தூபம் கொளுத்திக் கல்லறை வளாகத்துக்கு பூவேலைப்பாடு அமைந்த சால்வை கொண்டு போகும் பெரியவர்கள் தலை நிமிர்ந்து திலீப்பைப் பார்த்துச் சொன்னார்கள் – திலீப்பே, கண்பத் மோதக் எப்போதும் உன் உற்ற தோழனாக இருப்பான்.

 

திலீப்புக்கு அதொண்ணும் தெ ரியாது. கோபம் தான் எழுந்து வந்தது இப்போது.

 

என்னடா மோதக்கே, உன் பெண்டாட்டி சாம்பார் செய்யக் கத்துக்கிட்டாளா இல்லே நீயே ஆக்கி வச்சுப் போடறியா? தூக்குப் பாத்திரம் அதே தானே இல்லே இன்னும் பெரிசா வாங்கி வச்சுக்கிட்டியா? சாம்பார் குடிச்சுக் குடிச்சு சாலா மதராஸி ஆயிடுவே. பின்னாலே பிடுங்கிக்கும். ஜாக்கிரதை.

 

ஓங்கி அடித்ததும் நடுநடுங்கி, புட்டத்தில் வால் பதுக்கிய நாயானான் மோதக். அவனுக்கே நாலு பேர் பின்னால் சுற்ற இருந்தால் திலீப்புக்கு எத்தனை பேர் இருப்பார்கள் மூன்று மாதம் வெளியில் போயிருந்து விட்டு வந்தால் என்ன, திலீப் அடையாளம் இல்லாத வெற்று ஆளாகப் போய் விடுவானா என்ன?

 

அடடே திலீப் அண்ணா சும்மா தலைவர் குரல்லே பேசிப் பார்த்தேன்.

 

அவன் ஜரூராகப் பின்வாங்கிப் பணிய அதை அங்கீகரித்தபடி உள்ளே நடந்தான் திலீப். செக்யூரிட்டி சேவகன் ஒரு வார்த்தை சொல்லவில்லை.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 02, 2024 21:08

சிஞ்ச்போக்லியில் சின்னதாக ஒரு பேக்கரி ஆரம்பிக்க உத்தேசம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது- நூலில் இருந்து

எதிரே மோத வந்த மோட்டார் சைக்கிளைத் தவிர்த்து பிளாட்பாரத்தில் ஏறி நடந்தான் திலீப். வீட்டுக் கதவு திறந்து தலையில் சீப்போடு வந்த பெண் தெருவில் எறிந்த முடிக் கற்றை அவன் காலைச் சுற்றி விலகிப் போனது.  அவள் கதவில் ஒயிலாகச் சாய்ந்து, நான் குளிச்சுட்டு ஃப்ரஷ்ஷா வரேன் உள்ளே வந்து இரு என்றாள் திலீப்பிடம் ரொம்ப நாள் பழகியது போல் அந்நியோன்யமாக. புத்த பூர்ணிமா தினத்தில் நடுப் பகல் நேரம் தான் சுகம் தேடுவதில்லை என்று பதில் சொல்லியபடி திலீப் நடந்தான்.

 

வாக்கேஷ்வர் சாலை வழியாக மலபார் ஹில் போகும் டவுண் பஸ், நிறுத்தத்தில் அவனுக்காகக் காத்திருந்தது. பெரியப்பாவை அவன் சந்திக்க எல்லாம் கூடி வந்திருக்கிறது. சண்டை போட வேண்டாம். சும்மா பேசினால் போதும்.

 

அவன் பெரியப்பாவிடம் சுமுகமாக, வம்சத்துச் சொத்து பற்றி விசாரிப்பான். அதோடு தொடர்பு இல்லாமல் கல்யாணம், சின்னதாக சிஞ்ச்போக்லியில் ஒரு பேக்கரி ஆரம்பிக்க உத்தேசம், செட்டில் ஆக அவசரம், அம்மாவின் உடல்நிலை என்று தகவல் பகிர்வான். பெரியப்பா பணம் கொடுத்தால், அது கூடக் குறைய இருந்தாலும் பரவாயில்லை, அவன் வாழ்க்கை முழுக்க அவரை நினைத்துத் தொழுவதாக வாக்குத் தத்தம் செய்வான். ஏற்கனவே மாசாந்திரச் சம்பளத்துக்கு வழி செய்த பெரியம்மாவைத் தினம் மனதில் நெற்றி அம்பலப்புழை தூசி படிந்த தரையில் பட நமஸ்கரித்து எழுவதாகச் சொல்வான். பிஸ்கட் சாஸ்திரிக்கும் பெரியப்பா சொன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்காரமோ, வாய், மெய் உபச்சாரமோ செய்யத் தயாராக இருப்பதாகவும் அறிவிப்பான் அப்போது.

 

பெரியப்பாவின் மினிஸ்டர் மாளிகை.

 

வாசலில் வழக்கம் போல் பாரா சேவகன் யாரையும் காணோம். புத்த பூர்ணிமா. ஊரோடு விருந்துச் சாப்பாடு முடித்துப் பகல் தூக்கத்தில் இருக்கும் நேரம். மலபார் ஹில் மட்டும் விதிவிலக்கா என்ன?

 

படியேறி உள்ளே போகும் போது வாசல் அறையில் பெரியப்பா குரல் காதில் விழுந்தது –

 

நேரு பற்றிய நினைவுகளை நெஞ்சின் உள்ளறைகளில் இருந்து பிரியத்தோடு கெல்லி எடுக்கச் சலிப்பதே இல்லை.

 

அடுத்து அதைப் பிரதி செய்தபடி ஒரு பெண் குரல், சலிப்பதே இல்லை என்றது, டைப்ரைட்டர் ஒலிக்கு நடுவே.

 

அப்புறம் சத்தமே இல்லை.

 

திலீப் கதவை மெல்லத் தள்ள, சோபாவில் பெரியப்பாவின் காரியதரிசியான கொங்கணிப் பெண்மணி கையிரண்டையும் உயர்த்தியபடி மலர்ந்து கிடப்பது கண்ணில் பட்டது. எதிரே தரையில் மண்டியிட்டு அமர்ந்து, பெரியப்பா அவளுடைய நெஞ்சின் உள்ளறையில் இருந்து நேரு நினைவுகளைப் பிரியத்தோடு கெல்லி எடுத்துக் கொண்டிருந்தார்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 02, 2024 02:55

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.