இரா. முருகன்'s Blog, page 14

April 28, 2024

வயசாக வயசாக யாராவது காலில் விழுந்து கும்பிட்டால் நல்லாத்தான் இருக்கு

வாழ்ந்து போதீரே ] அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவதிலிருந்து அடுத்த பகுதி

ஊரோடு வெள்ளை உடுத்தியிருக்கிறார்கள். ஒண்ணு, இங்கே சாயக்காரன் எல்லாரும் அஸ்தமித்துப் போயிருக்கணும். இல்லையோ, சாயம் துணியில் ஏறாமல் போய் அவன்களை ஊருக்கு வெளியே வேலிக்காத்தான் மண்டிய தரிசு பூமி நெடுக, உடுப்பைப் பிடுங்கிக் கொண்டு முண்டக் கட்டையாக ஓட ஓட விரட்டியிருக்கணும். அப்புறம், சாயமுமாச்சு, சாராயமுமாச்சு, இருக்கவே இருக்கு  வெளுப்பு என்று வைராக்கியமாக உடுத்த ஆரம்பித்து இப்போது வெள்ளைப் பட்டியாகிப் போயிருக்கலாமோ இங்கே வந்து சேர்ந்த பிரதேசம்?

 

ராஜா தீவிரமாக யோசித்தபடி, இந்த ஊருக்கு என்ன பெயர் என்று பனியன் சகோதரர்களை விசாரித்தார். அதிலே குட்டையன் மிகமிஞ்சிய மரியாதையோடு விரை தரையில் மோதத் தாழ்ந்து உடம்பு வளைத்து வணங்கி முறையிடுகிற குரலில் சொன்னான் –

 

அம்பலப்புழை, மகாராஜா.

 

இதுக்கு அவன் நின்னபடிக்கே சொல்லி காலில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்திருக்கலாம். வயசாக வயசாக, யாராவது காலில் விழுந்து வணங்கினால் ரொம்ப இஷ்டமாகப் போகிறது. ஒரு நாள் முழுக்க ஊர்க்காரன் எல்லோரும் வரிசையில் நின்று காலில் விழுந்து கும்பிட்டுப் போனால் ராஜா சோறு தண்ணியில்லாமல் சுவாரசியமாக வேடிக்கை பார்த்து அருள் பாலித்துக் கொண்டிருப்பார். சேடிப் பெண் போன்ற சின்னஞ்சிறிசுகள், என்னத்தை சின்னஞ்சிறிசு, நாப்பது வயசாவது ஆகியிருக்கும் சிறுக்கி மகளுக்கு, ஆனால் என்ன, உருண்ட தோளை இறுகப் பற்றி, காலில் விழுந்தவளை எழுப்பி நிறுத்த ராஜாவுக்கு கை தினவெடுத்தது.

 

கிடக்கட்டும் சேடிப் பெண்ணும் மற்ற பெண்களும். வந்த இடத்திலும் அந்நிய ஸ்திரியை இச்சிப்பதிலேயே சகதியில் எருமையாக நினைப்பை நிறுத்துவது என்ன நியாயம்?

 

மனசு இடிக்க, ராஜா சரியென்று சொல்லி, கண்ணில் பட்டதை எல்லாம் சுவாரசியமாகக் கவனிக்க ஆரம்பித்தார். அவர் காலத்துக்கு அப்புறம் நூறு வருஷமாவது கடந்து வருகிற காட்சி இதெல்லாம். நூதன வாகனக் களவாணிகளான பனியன் சகோதரர்கள் அவரை எல்லா விதத்திலும் ஆசை காட்டி இப்படி காலம் விட்டுக் காலம் கூட்டி வந்து நிறுத்தி விட்டார்கள். அவர்களுக்கு ராஜா கொடுத்த கும்பினியார் தங்கக் காசு மேல் வெகு இஷ்டம். ராஜாவுக்கோ ஊர் உலக நிலவரம் அறிந்து வைத்துக் கொள்ள மகா இஷ்டம்.

 

ராணிக்குத் தெரியாமல், வேறு யாருக்கும் தெரியாமல் நூதன வாகனத்தில் அந்தக் களவாணிகளோடு கிளம்பி வந்தாகி விட்டது. போகிற வழியில் இவன்கள் காதை அறுத்துக் கடுக்கனை எடுத்துக் கொள்வார்கள என்று முன்னோர்கள் பயமுறுத்த, அதை மட்டும் கழற்றி இடுப்புச் சோமனில் முடிந்து வைத்திருக்கிறார் மகாராஜா. அதாவது வேட்டி மடிப்பில்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2024 04:38

April 25, 2024

ஆடத் தெரியாத தேவதைக்கு இங்கே இடம் இல்லை

வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவதிலிருந்து அடுத்த சிறு பகுதி

=============================================================================

வைத்தாஸ் திருமேனி என்று யாரோ விளிக்கிற சத்தம். குடைக்கார சாமு.

 

ஒரு மழைக் காலத்தில் வைத்தாஸ் ஊருக்கு முதலில் வந்தது முதல் தனக்கு சிநேகிதமான சரித்திரத்தை வாய் நிறைய புட்டையும் கடலையும் அடைத்து மென்றபடி சாமு சொன்னபோது சுவரில் சார்த்தி வைத்திருந்த அவனுடைய குடையும் சுவாரசியமாகக் கேட்டது.

 

வைத்தாஸ் அடுத்த பெஞ்சில் உட்கார்ந்து பொதுவாகப் பார்த்துச் சிரித்தான்.

 

வைத்தாஸ் தொரே, இந்தச் செக்கன் நம்ம வெடிக் குறூப் போல மயில்பீலி தூக்க ஆப்பிஸிலே ஜோலி நோக்கறவன் தான்.

 

கெச்சலாக  ஓர் இளைஞனும் அவனோடு கூட ஆறடி உயரமும் பெண் டார்ஜான் போல ஆகிருதியுமாக  ஒரு ஐரோப்பிய இளம் பெண்ணும்  அங்கே இருந்தார்கள்.

 

அவன் திலீப் மோரே என்று பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு கை அலம்ப எழுந்தான். வைத்தாஸுக்கு முன் வானத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்த அந்த ஐரோப்பியப் பெண் தன் பெயராகச் சொன்னது கேட்க முடியாமல் வாசலில் கிழவி வேறு யாருக்கோ வசவு உதிர்க்க ஆரம்பித்தாள்.

 

நடாஷா வாசிலிவ்ஸ்கி.

 

வசவு மழை ஓயும் வரை எச்சில் கை உலர நின்ற அவள் வைத்தாஸிடம் திரும்பப் பெயர் சொல்ல, அவள் எடுத்துக் கொண்ட சிரமத்துக்குப் பரிகாரமாகவோ என்னவோ எழுந்து நின்று வணங்கினான் வைத்தாஸ்.

 

வைத்தாஸ் இக்வனொ ரெட்டி.

 

உங்கள் நாவல்களைப் படித்திருக்கிறேன்.

 

அந்தப் பெண் தேவதூதனைச் சந்தித்த பிரமிப்போடு சொல்லி நகர, வைத்தாஸூக்கு இது நல்ல படியாக விடிந்த ஒரு தினம் என்று தோன்றியது.

 

புட்டு, கடலை. புழுக்கின பழம். ஆகாரத்தைக் கொண்டு வந்தவன் வைத்து விட்டு அப்பால் போனான். பான் அப்பித்தி. மனசில் நந்தினி குரல் ஒலித்தது.

 

நாளைக்கு மாநாட்டில் நிகழ்கலைகள் பற்றி இப்படிப் பேசுவான் வைத்தாஸ் –

 

தெய்வத்தின் உற்றாரும் உறவினரும், மயில்களும், மயில் பீலி அணிந்த, கஷ்கத்தில் வியர்வை வடியும் ஆண்களும் சந்திக்கும் இடம் ஆட்டக் களம்.  புதியதாக உருவாக்கி, தோத்திரப் பாடல்களைக் கோர்த்து மாலை அணிவித்திருந்தாலும், ஆடத் தெரியாத கடவுளுக்கு அங்கே இடம் இல்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2024 20:49

April 24, 2024

வழக்கு முத்தச்சி வர்த்தமானங்கள்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் அடுத்த சிறு பகுதி இங்கே

 

வருகிறாள்.

 

நந்தினி வருகிறாள்

 

அது போதும். வைத்தாஸ் மனம் முழுக்க நிம்மதி நிறைந்திருக்க, டாக்சி வந்து விட்டது என்று யாரோ வந்து சொன்னார்கள். ஆலப்புழையில் போய் ஒரு முழுக்கை ஜிப்பாவும் வேஷ்டியும் எடுக்க வேண்டும். இன்னும் இரண்டு நாள் இங்கே நிகழ்கலை மாநாட்டுக்காக இருக்க வேண்டி இருக்கிறது. கால் சராய் போக முடியாத இடங்களிலும் மடித்துக் கட்டிய வேட்டி நுழையும்.

 

டாக்சிக்காரரைக் கொஞ்சம் இருக்கச் சொல்லியும் அவருக்கு ஒரு சாயா உண்டாக்கித் தரும்படியும் வைத்தாஸ் ஆங்கில பாணியில் சொன்ன மலையாள வார்த்தைகளுக்காக ஹோட்டல் நிர்வாகத்தாலும் தொலைபேசி இயக்கும் பெண்ணாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டான் வைத்தாஸ். அவன் சொற்கள் உடனே நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.

 

நன்றி சொல்லித் தனக்குக் காலை உணவாக ஆம்லெட் உண்டாக்கித் தர முடியுமா என்று வினயமாக விசாரித்தான் அவன்.

 

சார் க்‌ஷமிக்கணும். ப்ராதல் இன்னு வைகும்.

 

ஏன் தாமதமாகும் என்று விசாரிக்க, டெம்போ வேன் ஸ்ட்ரைக் என்று தெரிந்தது. அதனால்? கோழி முட்டை வராது. பக்கத்தில் யாரும் கோழி வளர்க்கிறார்களா? வளர்க்கிறார்கள், அவர்களிடம் வாங்கி ஆம்லெட் உண்டாக்கலாமே? இல்லை, அவர்கள் நூறு கிலோமீட்டர் தூரம் உள்ள நகரத்தில் தான் லாரியில் கொண்டு போய் அவற்றை விற்க வேண்டும். பஸ் கட்டணம் கொடுத்து ஆளனுப்பி, அங்கே போய் வாங்கி வர வேண்டும். டெம்போ ஸ்ட்ரைக்.

 

கோழிக்குப் பறக்க முடிந்தால் நூறு கிலோமீட்டர் தாண்டிப் பறந்து போய் முட்டை போட்டிருக்கும் என்று அவன் சொல்ல அவர்களில் யாரும் சிரிக்காமல் அனுதாபத்தோடு பார்த்தார்கள்.

 

வைத்தாஸ் சிரிப்பை அடக்கிக் கொண்டு டாக்சியில் ஏறினான்.

 

ஒரு நிமிஷம் என்று ஒற்றை விரல் காட்டி அடுத்திருந்த சாயாக் கடையில் நின்றிருந்த டாக்சி டிரைவரிடம் ஒப்புதலாகத்  தலையசைத்துக் காத்திருந்தான் வைத்தாஸ். அவன் ஓடி வந்ததும் பரபரப்பாக வண்டியை கிளப்பியதும் வைத்தாஸின் மனதுக்கு இஷ்டமாக இருந்தது. இந்த மாநிலத்தில் இப்படியான மரியாதை அபூர்வம் என்று தோன்றியது.

 

பக்கத்தில், இட்லியும் காப்பியும் கிடைக்கும் கடை ஏதாவது உண்டா என்று டிரைவரைக் கேட்க, சந்தனம் மணக்க இருந்த அந்த தாடிக்காரன், கல்யாணம், பிள்ளை பிறப்பு போன்ற அபூர்வமான சந்தர்ப்பங்களுக்காகச் சேமித்து வைத்திருந்த தன் சிரிப்பில் இருந்து ஒரு கண்ணி கிள்ளியெடுத்து வைத்தாஸுக்குக் கொடுத்தான்.

 

அசல் குட்டநாடன் சாப்பாட்டுக் கடை உண்டு. போகலாம் சாரே.

 

ஆலப்புழை போகிற வழியில் அவன் நிறுத்திய இடத்தில் நாலு பெஞ்சுகளையும் மர ஸ்டூல்களையும் பரத்திப் போட்டு ஒரு விடுதி. ஓரமாகத் தூங்கிய நாய்களையும், வாசலில் கட்டி வைத்த செம்மறி ஆட்டையும், பீடி புகைத்தபடி ஓட்டல் வாசல் படிகளில் உட்கார்ந்திருந்த கைலி அணிந்த பெரியவர்களையும் எல்லா ஓட்டல்களிலும் தான் பார்க்க முடியும். ஆனால் வாசலில் நட்ட நடுவே கால் பரப்பி மண் தரையில் அமர்ந்து இருக்கும் ஸ்தூல சரீரப் பெண்மணி?

 

ஓ, அவளா, வழக்கு முத்தச்சி. டாக்சி டிரைவர் சொன்னான்.

 

என்றால்? வைத்தாஸ் குழப்பமாகப் பார்த்தபடி காரை விட்டு இறங்க, அந்தப் பெண் இரைய ஆரம்பித்தாள். அவள் சொல்லுகிறதெல்லாம் ஆண்கள் கூடப் பேச யோசிக்கும் தெறிகள், என்றால் வசவுகள் என்று சொன்னான் டாக்சி டிரைவர் சிரித்தபடி.

 

யாரையாவது வாய்ச் சொல்லால் துன்பப் படுத்த வேணும் என்றால், அவர்கள் எங்கே இருந்தாலும் சரிதான், முத்தச்சிக்குக் காசு கொடுத்தால் இங்கே இருந்தே சரமாரியாக வசவு வீசி அவர்களை முட்டுக் குத்தச் செய்து விடுவாள் இவள்.

 

இங்கிருந்து திட்டினால் வேற்றூரில் எப்படி அது போய்ச் சேரும்?

 

அது என்னவென்று தெரியாது. ஆனால் இங்கே திட்டியதும் அங்கே போய் சேர்ந்த உடனே சம்பந்தப் பட்டவர்களுக்குப் பேதியாவதும், நாக்குழறி, வியர்த்துப் போய் சுருண்டு விழுவதும் கிரமமாக நடக்கிறதே.

 

டாக்சி டிரைவர் சொன்னபடி எட்டணா நாணயத்தை அந்தக் கிழவிக்கு முன்னால் போட்டு விவரம் சொன்னான் – மகம்மை பஞ்சாயத்து தெக்கே பரம்பில் சங்குண்யார். என்னு பறஞ்சால் காணாதுண்ணி சங்கு.

 

அவன் விலாசம் விவரம் சொல்லும்போதே புன்னகைக்க, வைத்தாஸ் என்ன விஷயம் என்று கேட்டபடித் தானும் சிரித்து வைத்தான்.

 

என் மாமனார் தான். யாரும் பார்க்காமல் ஒளிந்திருந்து சாப்பிடுகிறவன் என்று பட்டப் பெயர். எனக்கும் காசு தரமாட்டேன் என்கிறான் வயசன்.

 

அவன் பின்னும்  வெகு சத்தமாகச் சிரிக்க, கிழவி வைய ஆரம்பித்தாள். காற்றும் அபானவாயுவாக நாறிப் போனதாக யாரோ சொல்லி அந்தக் கிழவியின் அண்டையில் நின்று இன்னும் ஒருமுறை வசவைத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள்.

 

கடல் சிலந்தி புணரட்டும் என்கிறாள் கிழவி. ஆக்டோபஸ் பற்றி எங்கே தெரிந்து கொண்டாள்? வியப்போடு வேறே யாரோ சொன்னார்கள். அந்தப் பெண்பிள்ளை இந்த வயதிலும் புதுசு புதுசாக அறிந்து வைத்துக் கொள்வது வெகுவாகப் பாராட்டப் பட்டது.

 

காணாதுண்ணிக்கு  அரையில் புழுப் புழுத்து வீங்கி குறி அறுந்து விழச் சொல்லித் திட்டு என்று சொல்லியபடி டிரைவர் படியேற அதுக்குத் தனியாகத் தரணும் என்றாள் கிழவி.

 

துரெ, ஒரு ரூபாய் காசோ நோட்டொ இருந்தா தள்ளைக்குக் கொடு. பின்னாலே அட்ஜெஸ்ட் ஆக்கித் தரும்.

 

யாருக்கோ குறி புழு வைத்து அழுகி அறுந்து விழத் தானும் ஒத்தாசை செய்கிற குற்ற போதத்தோடு உள்ளே நுழைந்தான் வைத்தாஸ்.

 

வாசலை ஒட்டிப் போட்டிருந்த பெஞ்சில் இருந்து கிழவி சத்தத்தை மீறிய பெருங் கூச்சலாக யாரோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். மூக்குக் கண்ணாடி அணிந்த, முழங்கையில் மடித்து விட்ட சந்தன நிறச் சட்டை போட்ட கட்டை மீசை நடு வயதுக்காரன் அவன். கேட்டவர்களும் சந்தன நிற டெரிலின் சட்டைதான் போட்டிருந்தார்கள்.  மீசை வைக்காதவர்கள் அவர்கள்.

 

டாக்சி டிரைவரிடம் என்ன விஷயம் என்று விசாரித்தான் வைத்தாஸ். அவன் சுமாராக மொழிபெயர்த்தான் –

 

தோத்திரப் பாட்டுகளும் இலக்கியம் தான். எல்லாத் தெய்வங்களுக்கும் அவை உருவாக்கப் பட்டு விட்டன. ஆனாலும் தாழ்வில்லை. சகல விநோதங்களோடும் புதியவர்களை உருவாக்குவோம். புதிய இலக்கியங்களைப் பிறப்பிப்போம். இது இலக்கியம் இல்லை என்று சொல்கிறவர்களுக்கும் குறி அறுந்து விழப் புது வசவுகளை உருவாக்குவோம்.

 

டெரிலின் சட்டைகளைப் பார்க்க வைத்தாஸுக்கு வாத்சல்யமாகப் போனது. இவர்களும் இங்கிலீஷில் எழுதுகிறவர்களாக இருக்க முடியாது என்று தோன்றியது. இந்த உரையாடலை இனி வரும் அவனுடைய எந்தப் புத்தகத்திலும் புகுத்தி விட முடியும். மேடைப் பேச்சிலும் குறிப்பிடலாம்.

 

வைத்தாஸ் திருமேனி என்று யாரோ விளிக்கிற சத்தம். குடைக்கார சாமு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2024 21:10

April 23, 2024

உலகின் ஏதோ மூலையிலிருந்து நாரை போல் சன்னமாக ஒலிக்கும் குரல் – நந்தினி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி இங்கே

 

நேற்றுக் காலையில் கோவிலுக்கு அடுத்த தெருவில் போய்ப் பார்த்த புராதன வீட்டிலும் அர்ஜுன நிருத்த ஆபீஸ் தான் இயங்கிக் கொண்டிருந்தது. அப்படித்தான் சொன்னார் குறூப். பம்பாயிலிருந்து வந்த அமைச்சரின் மனைவியாம் அங்கே நிர்வாகம் செய்து வரும் மதராஸ் பெண்மணி.

 

எம்பிராந்திரியின் வீட்டுக்காரியான முதுபெண் சோழி உருட்டிப் பார்த்துச் சொல்லித் தான் அந்த வீட்டைப் பார்க்கப் போயிருந்தான் வைத்தாஸ். அந்தப் புராதன வீட்டை வாங்கச் சொல்லி ஆலோசனை கொடுத்த எம்ப்ராந்திரி மனைவி இன்னும் மூணு பேருக்கும் அதே ஆலோசனையைச் சொல்ல வேண்டி போனதாக அவள் சொன்னாள்.

 

என் மகன் பத்ம சங்கர எம்ப்ராந்திரி லண்டனில் இருந்து கொண்டு கடிதம் எழுதியிருக்கிறான். சோழியும் பிரசன்னமும் உன் வயதுக்கும் ஆக்ருதிக்கும் கூடி வரவில்லை. அதுவும் நாலும் ஒரே போல என்றால் பிரச்னம் இல்லை அது. பிரச்சனை. இதெல்லாம் ஓரம் கட்டிவிடு என்கிறான். பத்மன் தெரியும் தானே?

 

முதுபெண் வசீகரமாகச் சிரித்தது மனதில் பூவாகச் சிதறியது. அர்ஜுன நிருத்தம் போல் அழகான சிரிப்பு அது.

 

பத்மன் எம்ப்ராந்தரியைத் தான் லண்டனில் சந்திக்க முடியாமல் போனதை அவளிடம் சொல்லலாம் என்று வைத்தாஸுக்குத் தோன்றியது அப்போது.

 

கிடக்கட்டும், இந்த மாநாடு முடிந்து நாடு திரும்ப வழியைப் பார்க்க வேண்டும். நந்தினி இன்னும் எத்தனை நாள் தனியாகக் கஷ்டப்படுவாள்?

 

அறையில் இருந்த கருத்த டெலிபோன் மணி அடித்தது. கீழ்த் தளத்தில் இருந்து ரிசப்சனிஷ்ட் பெண் பேசினாள். கவனித்துக் கேட்டாலே அர்த்தமாகும் மலையாள இங்கிலீஷ்.

 

நீங்கள் கேட்ட வெளிநாட்டு தொலைபேசி இணைப்பு கிடைத்திருக்கிறது. பேசுகிறீர்களா?

 

வைத்தாஸ் பரபரப்போடு ஹலோ சொன்னான். அந்தப் பக்கம் ஏழு கடலும் ஏழு மலையும் தாண்டிப் பறக்கும் சிறிய நாரையின் குரலாக ஹலோ.

 

நந்தினி.

 

அடுத்த வாரம் நான் அங்கே..

 

சொல்லும்போதே அவனுக்குக் குரல் நடுங்கியது. அழ ஆரம்பித்தான்.

 

வேணாம். நானே வந்து.

 

நந்தினி சொல்லிக் கொண்டே இருக்க டெலிபோன் தொடர்பு அறுந்து போனது. அப்புறம் அரை மணி நேரம் காத்திருந்தும் நந்தினி கிடைக்கவில்லை.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2024 22:22

பெண்கள் இல்லாத நடனத்தை ரசிக்கும் மக்கள் கூட்டங்களும் அர்ஜுன நிருத்தமும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காம் நாவல்- அடுத்த சிறு பகுதி இங்கே

விநோதமான ஊர் இது. நெற்றியில் சந்தனம் பூசாமல் யாரும் வெளியே இறங்குவதில்லை போலிருக்கிறது. யாரை அடுத்துப் போனாலும் சந்தன வாசம் தான் மூக்கில் குத்துகிறது. கிறிஸ்தியானிகளும் இதரரும் கூட வீட்டுக்குள் இருக்கும்போது மணக்க மணக்கப் பூசி இருந்து, வெளியே இறங்கும்போது மனசே இல்லாமல் அழித்துத் துடைத்து விட்டு, ரோமக்கால்களில் இறங்கிய மிச்ச சொச்ச வாடையோடு தான் நடமாடுகிறதாகத் தோன்றுகிறது. அப்புறம் ஒன்று. இது ஆண்கள் பற்றிய கணிப்பு. பெண்களும் அதே தோதில் இருக்கலாம். நந்தினி போல.

 

நந்தினியின் மார்புக் குவட்டு வியர்வையில் கசியும் சந்தன வாடையை மனதில் அனுபவித்து நாசி விடர்த்த, வைத்தாஸின் கண் நிறைந்து போனது.

 

என் நந்தினி. இப்படி உன்னைப் பிரிந்து, கழிசடை நினைப்பும், எழுதி எழுதி இச்சை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யும் கேடுகெட்ட தனமும், அரசியல் என்றும் கலாசார உறவு என்றும் கடவுளின் மூத்த சகோதரி என்றும் புழுத்த பன்றி மாமிசமாக, புளிப்பு முற்றிப் பூசனம் பிடித்துக் களைய வேண்டிய காடியாக, ஆயிரம் தடைகள் உன்னோடு உறவாட முடியாமல் ஒரு சேர என் வழியை அடைக்க, இன்னும் ஒரு வாரம், இதோ அடுத்த மாதம், இதுவும் கடந்து போகட்டும், விரைவில் உன் அணைப்பின் கதகதப்பில் உயிர் கலந்து இருப்பேன் என்று காலத்தைக் கடத்தி வருவது என்ன மாதிரி வாழ்க்கையில் சேர்த்தி? என் எழுத்தும் என் பதவியும் என் வயதும் என் அனுபவமும் குப்பைக்குப் போகட்டும். எந்தத் தடையும் இடுப்புக்குக் கீழ் பிடித்துக் கட்டி நிறுத்தாமல் உன்னை நான் கலக்கும் நாள் என்றைக்கோ.

 

வைத்தாஸ் கண்களில் இன்னும் நடனம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அர்ஜுன நிருத்தம் என்று பெயர் சொல்கிறார் குறூப். கோவிலில் வெடி வெடித்து வழிபாடு நடத்தித் தரும் குடும்பமாம். அர்ஜுன நிருத்தம் ஆடுவாராம். ஆடி ஓய்ந்த கால் என்றாலும் நேற்று ராத்திரி ஆட்டக் காரர்களோடு சளைக்காமல், அசராமல் சேர்ந்து ஆடி அமர்க்களப் படுத்தி விட்டார் அவர். இவ்வளவுக்கும் அவருக்கு எழுபது வயது கடந்திருந்தது. அவர் சொல்லித்தான் அது தெரியும்.

 

அந்த ஆட்டமும் பாட்டும் வைத்தாஸ் நினைவில் இன்னும் சுழன்று கொண்டே இருந்தன. ஒரே வரியை கிட்டத்தட்ட நூறு முறை ஒவ்வொரு தடவையும் ஒரு சிறு மாற்றத்தை குரலின் கனத்திலும், ஒலித் துணுக்கைக் குறுக்கியும் விரித்தும் ஒலித்தும், இரங்கல், பரிவு, வற்புறுத்துதல், உரிமையோடு முழங்குவது என்று குரலில் வித்தியாசம் காண்பித்தும் ராத்திரி முழுக்கச் சளைக்காமல் ஆடினார்கள் அந்த ஆட்டக் காரர்கள். மயில் தோகையை இடுப்பைச் சுற்றி கம்பீரமாக அணிந்து ஆடிய அவர்கள் எல்லோரும் ஆண்கள்.

 

பெண்கள் இல்லாமல் நளினத்தை ஆடிக் காட்டும் நடனங்களில் இந்தப் பகுதி மக்கள் ஏன் அபார உற்சாகம் காட்டுகிறார்கள் என்று வைத்தாஸுக்குப் புரியவில்லை. இவ்வளவுக்கும் உருட்டி விட்ட வெங்கலச் சிலை போலத் திமிறும் அழகோடு நடமாடும் கருத்த சுந்தரிகளின் பூமி இது. நந்தினி என்ற தேவதையும் இங்கே இருந்து போன குடும்பத்தில் வந்தவள் தானே. என்ன தான்  இன்று கடவுளின் தமக்கை ஆகியிருந்தாலும் மயிலும் நிருத்தமும் அவளுக்குள்ளும் நிறைந்தவைதானே. ஆனாலும் அர்ஜுன நிருத்தத்தைப் பற்றி அவள் சொல்லியதாக நினைவு இல்லை.

 

வைத்தாஸ் ஷவரில் குளிக்க நின்றபோது நாளைக்கு மகாநாட்டில் அவன் எதை எல்லாம் குறித்துப் பேச வேண்டும் என்று துண்டு துணுக்காகத் தோன்றிப் போனது.

 

எப்படி ரசிக்கிறார்கள் இங்கே. தூக்கம், தூக்கம், மயில்பீலித் தூக்கம் என்று பதறியடித்துக் கொண்டு ஆணும் பெண்ணுமாக ஓடி வந்த உற்சாகம் அவன் நாட்டுக் கிராமங்களில் இரவு நேர ஆட்ட முரசு கேட்டதும் ஓடி வந்து குவியும் பெருங்கூட்டத்துக்கு இணையாக இருந்தது.

 

எல்லோருக்கும், எங்கும், கொட்டும், குரவையும், தாளத்தை இயல்பாக உள்வாங்கி  எல்லா வேகத்திலும் நடனமாடுவதும் உயிரணுக்களில் கடந்து வந்து அழியாத அடிப்படை ரசனையாக நிற்கிற அனுபவத்தை நினைக்க அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. ஆடத் தெரியாத யாரும் உலகில் இல்லை. ஆடாதவர் உண்டு. அவ்வளவே.

 

கந்தகம் கொளுத்தியது போல சகலரின் கம்புக் கூட்டுக்குள்ளும் இருந்து பிரவகித்த வியர்வை மூக்கில் குத்தும் வாடை அவன் மேல் இன்னும் பூசி இருந்தது. ஆட்டம் ஆரம்பித்த நிமிடங்களில் அசௌகரியமாக இருந்தாலும், நடனத்திலும் ஓங்கி ஒலிக்கும் பாட்டிலும் மனம் லயித்தபோது அந்த வாடை பிரக்ஞையில் இருந்து விலகி, அப்புறம் ஒரு கட்டத்தில் பாட்டு வரிகளில் கனமாகப் படிந்து திரும்ப வந்து சேர்ந்தது. இனி எப்போதும் வைத்தாஸ் மனதில் சந்தனத்தோடு சேர்ந்து எழுந்த, கூட்டமான வியர்வை மணமாகவே  அர்ஜுன நிருத்தம் நிற்கும்.

 

அது மட்டுமில்லை. இலுப்பை எண்ணெய் ஊற்றிய தீபங்களின் மஞ்சள் சுடர்கள் புழுக்கமான இரவில் நிறைக்கும் நெடியும் சந்தனத்தோடும் வியர்வையோடும் கலந்து பாட்டும் ஆட்டமும் ஆன ரசவாதம் அது.

 

ஆட்டக்காரிகள் எப்போ வருவார்கள்? வைத்தாஸ் விசாரித்தான்.

 

இது கதகளி போல ஆண்களே ஆடும் ஆட்டம். என்ன குறைச்சல் அதனால்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2024 01:03

April 20, 2024

வாடிக்கையாளர் இல்லாத நாவலாசிரியரும் சிறாரில்லாத வாடிக்கையாளரும்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் நான்கில் அடுத்த சிறு பகுதி

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

இந்தப் புத்தகங்களில் ஒரு புதுமை இருக்கிறதே, கவனித்தீர்களா என்று கேட்டார் பக்கத்து இருக்கை தாடிக்கார பப்ளிஷர்.

 

பக்கங்கள் கொஞ்சம் கூடுதல் கனத்தோடு இருக்கின்றன. படங்கள் அடர்த்தியான வர்ண மசியில் அச்சடிக்கப் பட்டு இன்னும் அக்ரலிக் வாடை பலமாக மூக்கில் முட்டிக் கொண்டிருக்கிறது. சற்று பிசுபிசுப்பும் படத்தில் உண்டு. மற்றப்படி வேறுபட்டு எதுவும் இல்லையே?

 

நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள், தெரியுமே.

 

தொலைந்து போன பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கும் குழந்தை போலச் சொன்னார் பப்ளிஷர். அவர் வைத்தாஸின் கையில் இருந்த குழந்தைப் பாட்டுகள் அச்சடித்த புத்தகத்தைப் பிடுங்கிப் புரட்டி, கேலண்டர் படம் போட்டிருந்த பக்கத்தின் நடுவில் கை வைத்து அழுத்தினார்.

 

புத்தகத்தில் இருந்து குயில் கூவும் சத்தம் எழுந்தது. செப்டம்பர், ஏப்ரல், ஜூன், நவம்பர் மாதங்களில் முப்பது நாட்கள் உண்டு என்ற அரிய உண்மையைத் தெரிவிக்கும் பாடலின் முதல் அடியைச் சற்றே நகல் எடுத்த குயில் குரல்.

 

இந்தப் பாட்டுகளோடு ஓவியங்களையும் பார்த்தபடி எழுத்தைக் கவனமாகப் படிக்கும் குழந்தைகள் விரைவில் மாதங்களின் பெயரையும் நாள் கணக்கையும் தெரிந்து மனதில் இருத்திக் கொள்வார்கள். அது தானே?

 

சுவாரசியமின்றி தனக்குள் முனகினான் வைத்தாஸ்.

 

எங்கிருந்து தான் இப்படியான ஆட்கள் கிளம்பி உலகைச் சித்தரவதைப் படுத்த வருகிறார்கள் என்று வைத்தாஸுக்கு வியப்பாக இருந்தது. அவன் வாழ்நாளில் முதல் முறையாக இப்படி நர்சரி பாட்டுப் புத்தகங்களைப் பற்றி ஆர ஆமரக் கலந்து பேசி மிகையாக, வெகு மிகையாகப் பாராட்ட வேண்டி வந்திருக்கிறது. மூச்சுக் காற்றில் சந்தனமும், மற்றதும் மணக்கும் பப்ளிஷர் இந்த நிமிடம் மூச்சை நிறுத்திக் கொண்டால் கர்த்தருக்கு தோத்திரம் பல.

 

குழந்தைப் பாடல்கள் பற்றி ஒரு குழந்தையிடம் மகிழ்ச்சியோடு நிகழ்த்த வேண்டிய உரையாடலை, சித்தம் தடுமாறிய முதியவரோடு அன்பும் நட்பும் செயற்கையாகக் காட்டித் தொடர வேண்டிப் போனது துரதிருஷ்டம்.  அந்நிய நாட்டின் நல்லெண்ணத் தூதரான தன்னால் கடைப்பிடிக்க வேண்டிய கடமை அது. நினைவுகூர, வைத்தாஸை மரக்கட்டையாகப் பாவித்துக் கடந்து போன விமானப் பணிப்பெண் அவனை அலட்சியமாகப் பார்த்துச் சொன்னாள் –

 

(அந்தச் சிறுக்கியை எழுப்பி உட்கார்த்தடா கழுவேறி. இன்னும் பத்து நிமிடத்தில் சுவையான உணவு பரிமாறப்பட இருக்கிறது. நாய் மாதிரி தின்னுட்டு அபான வாயு விட்டபடி இங்கேயே புரளு. )

 

அசைவ உணவு தானே உங்களுக்கு? நினைவில் வைத்திருக்கிறேன் ஐயா.

 

(நாலு மணிநேரம்  ஈரத் துணியில்  புரட்டிய கோழி மாமிசத்தை நீ ரசித்துச் சாப்பிட எடுத்து வருகிறேன். உண்டு தூங்கி இறங்கு.)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2024 23:20

வாடிக்கையாளர் இல்லாத நாவலாசிரியரும் சிறோரில்லாத வாடிக்கையாளரும்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் நான்கில் அடுத்த சிறு பகுதி

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

இந்தப் புத்தகங்களில் ஒரு புதுமை இருக்கிறதே, கவனித்தீர்களா என்று கேட்டார் பக்கத்து இருக்கை தாடிக்கார பப்ளிஷர்.

 

பக்கங்கள் கொஞ்சம் கூடுதல் கனத்தோடு இருக்கின்றன. படங்கள் அடர்த்தியான வர்ண மசியில் அச்சடிக்கப் பட்டு இன்னும் அக்ரலிக் வாடை பலமாக மூக்கில் முட்டிக் கொண்டிருக்கிறது. சற்று பிசுபிசுப்பும் படத்தில் உண்டு. மற்றப்படி வேறுபட்டு எதுவும் இல்லையே?

 

நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள், தெரியுமே.

 

தொலைந்து போன பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கும் குழந்தை போலச் சொன்னார் பப்ளிஷர். அவர் வைத்தாஸின் கையில் இருந்த குழந்தைப் பாட்டுகள் அச்சடித்த புத்தகத்தைப் பிடுங்கிப் புரட்டி, கேலண்டர் படம் போட்டிருந்த பக்கத்தின் நடுவில் கை வைத்து அழுத்தினார்.

 

புத்தகத்தில் இருந்து குயில் கூவும் சத்தம் எழுந்தது. செப்டம்பர், ஏப்ரல், ஜூன், நவம்பர் மாதங்களில் முப்பது நாட்கள் உண்டு என்ற அரிய உண்மையைத் தெரிவிக்கும் பாடலின் முதல் அடியைச் சற்றே நகல் எடுத்த குயில் குரல்.

 

இந்தப் பாட்டுகளோடு ஓவியங்களையும் பார்த்தபடி எழுத்தைக் கவனமாகப் படிக்கும் குழந்தைகள் விரைவில் மாதங்களின் பெயரையும் நாள் கணக்கையும் தெரிந்து மனதில் இருத்திக் கொள்வார்கள். அது தானே?

 

சுவாரசியமின்றி தனக்குள் முனகினான் வைத்தாஸ்.

 

எங்கிருந்து தான் இப்படியான ஆட்கள் கிளம்பி உலகைச் சித்தரவதைப் படுத்த வருகிறார்கள் என்று வைத்தாஸுக்கு வியப்பாக இருந்தது. அவன் வாழ்நாளில் முதல் முறையாக இப்படி நர்சரி பாட்டுப் புத்தகங்களைப் பற்றி ஆர ஆமரக் கலந்து பேசி மிகையாக, வெகு மிகையாகப் பாராட்ட வேண்டி வந்திருக்கிறது. மூச்சுக் காற்றில் சந்தனமும், மற்றதும் மணக்கும் பப்ளிஷர் இந்த நிமிடம் மூச்சை நிறுத்திக் கொண்டால் கர்த்தருக்கு தோத்திரம் பல.

 

குழந்தைப் பாடல்கள் பற்றி ஒரு குழந்தையிடம் மகிழ்ச்சியோடு நிகழ்த்த வேண்டிய உரையாடலை, சித்தம் தடுமாறிய முதியவரோடு அன்பும் நட்பும் செயற்கையாகக் காட்டித் தொடர வேண்டிப் போனது துரதிருஷ்டம்.  அந்நிய நாட்டின் நல்லெண்ணத் தூதரான தன்னால் கடைப்பிடிக்க வேண்டிய கடமை அது. நினைவுகூர, வைத்தாஸை மரக்கட்டையாகப் பாவித்துக் கடந்து போன விமானப் பணிப்பெண் அவனை அலட்சியமாகப் பார்த்துச் சொன்னாள் –

 

(அந்தச் சிறுக்கியை எழுப்பி உட்கார்த்தடா கழுவேறி. இன்னும் பத்து நிமிடத்தில் சுவையான உணவு பரிமாறப்பட இருக்கிறது. நாய் மாதிரி தின்னுட்டு அபான வாயு விட்டபடி இங்கேயே புரளு. )

 

அசைவ உணவு தானே உங்களுக்கு? நினைவில் வைத்திருக்கிறேன் ஐயா.

 

(நாலு மணிநேரம்  ஈரத் துணியில்  புரட்டிய கோழி மாமிசத்தை நீ ரசித்துச் சாப்பிட எடுத்து வருகிறேன். உண்டு தூங்கி இறங்கு.)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2024 23:20

April 18, 2024

நர்சரி பாடல்களின் பயன்பாடு யாது எனச் சிற்றுரை ஆற்றுக

வாழ்ந்து போதீரே- அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி

 

நான் இங்கே உட்காரலாமா?

 

சந்தனமும் மற்றும் ஏதுமோ மணக்கும் குரல். அளவாக நறுக்கிச் சீராக்கிய நரைத் தாடி வைத்த மனுஷர் ஒருத்தர் வைத்தாஸின் இருக்கைக்கு அருகே எதிர்பார்ப்போடு இடுப்பு வளைத்து நின்று நைச்சியமாக அவனைக் கேட்டார்.

 

தாராளமாக உட்காரலாம்.

 

விமானப் பணிப் பெண் ஒழித்துப் போன இருக்கையில் அமர்ந்தவர் இரு கண்ணும் மூடி ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தார். உடனே கண் திறந்து திருவனந்தபுரம் தானே போகிறீர்கள் என்று வைத்தாஸை விசாரித்தார்.

 

தில்லியில் புறப்பட்ட விமானம் நாக்பூரில் இறங்கிப் புறப்படும் என்பது நினைவுக்கு வந்த வைத்தாஸ் திருவனந்தபுரம் போவதாகச் சொன்னான்.

 

வந்து அமர்ந்தவரை வீராவாலி புது மிரட்சியோடு பார்த்தாள். விமானப் பயணம் அசௌகரியமானதும் பயத்தை உண்டாக்குவதுமாக அவளுக்கு அமைந்து போனது. யாரைக் கண்டாலும், புதிதாக யார் குரலைக் கேட்டாலும் படபடப்பும் பயமுமாக அவள் இருந்தாள்.

 

நான் இருந்த இருக்கைக்கு அடுத்து ஒரு மலேயாக்காரி நடு வயசுப் பெண் இருந்து கொண்டு, கூடவே வந்த சீனப் பெண் பிசாசுகளோடு பேசுகிறாள். அதுகளும் கெக்கெக்கென்று சிரித்துக் களேபரமாகக் கும்மாளம் போடுவதால் நான் தொழில் அபிவிருத்தியைப் பற்றி யோசிக்க ஒட்டாமல் போனது. விமானத்தில் வருவதே எல்லாத் தொந்தரவும் ஒருசேரக் களையத் தானே?

 

வந்தவர் நேசமாக வினவ, ஆதரித்துச் சிரித்தான் வைத்தாஸ். ரோகியான யாசகனுக்குக் கடமை கருதி முகம் சுளித்துத் தருவது போல் தேநீரும் காப்பியும் எல்லோருக்கும் விளம்பி விட்டு விமானப் பணிப்பெண் போனாள். சாயா குடித்து முடிக்கும் வரை பேச்சு எழாமல் நிசப்தமாக இருந்தது விமானம்.

 

அருகருகே அமர்ந்து தேநீர் பருகியது இறுக்கம் தளர்விக்க முகங்கள் புன்னகை அணிந்தன. கூடப் பறக்கும் போது அரும்பும் நேசம் குரல்களானது

 

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்ற தாடிக்காரரின் கேள்விக்கு வெளிநாட்டு அரசாங்கத் தூதர் என்று சொல்லலாமா என்று யோசித்து, வேண்டாம் என்று ஒதுக்கி, நான் இங்கிலாந்தில் இருந்து வரும் ஒரு எழுத்தாளன், ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதுகிறேன் என்று தெரிவித்தான்.

 

அற்புதம், நானும் எழுத்து சம்பந்தமான தொழிலில் தான் உள்ளேன்.

 

அவர் உற்சாகமாகத் தெரிவித்தார். புத்தகங்களைப் பதிப்பிக்கும் உன்னதமாக பணியில் ஈடுபட்டிருப்பதாக அவர் அறிவித்தபடி விமானத்தைச் சுற்றிப் பார்வையை ஓட விட, பெரிய பிளாஸ்டிக் தட்டோடு வந்த விமானப் பணிப் பெண் மரியாதையோடு சிரித்து, நழுவும் முந்தானையை பெருமையோடு நகர்த்திக் கொண்டு அவர் முன்னால் குனிந்து இனிமையாகக் கேட்டாள்.

 

உங்களுக்கு மேலே வைத்த உங்கள் ட்ரங்க் பெட்டியில் இருந்து ஏதும் எடுத்துத் தர வேணுமா? (இவ்வளவு அசிங்கமான மூஞ்சியோடு தானா நீ புத்தகம் விற்பதும் படுத்துச் சுகிப்பதும்?) குளிர்ந்த துவாலை தரட்டுமா? (உனக்குப் பிறந்ததெல்லாம் மலவாடை அடிக்கிறவைகள் தானே?) ஐயா, நீங்கள் தேநீர் குடித்து முடித்திருந்தால், குவளையைத் தருகிறீர்களா? (சாக்கடைப் பன்றியின் கழிவு உண்ணும் புழு நீ) .  சௌகரியமாகச் சாய்ந்து உட்கார்ந்து இளைப்பாறுங்கள்.

 

அவள் போகும் போது வீராவாலியை ஒரு வினாடி நோக்கிப் போனாள்.  கலவி உச்சத்தில் வீராவாலி மயில் போல் அகவுவது அவளுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது என்று வைத்தாஸ் நம்பினான். வீராவாலி ஆங்கிலத்தில் காதலும் பிரஞ்சு மொழியில் காமமும் பரிமாறுவாள் என்று விமானப் பணிப்பெண் நினைத்தால் நன்றாக இருக்கும். பெய்ஸ ஃப்ரான்ஸெ எ ஆங்க்லே பெய்ஸே.

 

நேற்று வீராவாலியைத் தேடி அலைய வேண்டியில்லாமல், பழைய தில்லித் தெருவில் வைத்தாஸ் காலடி எடுத்து வைத்ததுமே கிடைத்தாள். சாந்தினிசௌக் கண்டேவாலா மிட்டாய்க் கடையை அடுத்து நீண்ட வீதியில் கழைக் கூத்து நடந்து கொண்டிருந்த சாயங்கால நேரம் அது. கூட்டம் விலக்கி நடந்து மிட்டாய்க்கடை வாசலில் வேடிக்கை பார்த்தபடி தோளில் குரங்குக் குட்டியோடு வீராவாலி வைத்தாஸுக்குத் தட்டுப்பட்ட இனிய பொழுது.

 

அவனை எதிர்பார்த்திருந்தாள். எப்படியோ அவன் வருகை தெரிந்திருந்தது. விலகி நின்றிருந்ததே விட்டு விலகி வெகு தூரம் போக ஆயத்தமாகத் தான்.

 

போகலாமா என்று அவள் காதில் கிசுகிசுத்தான் வைத்தாஸ். மெழுகு நாறும் அழகான காது. அவன் காமத்தில் அந்த வாடைக்கும் இடம் உண்டு. மிட்டாய்க் கடை இனிப்புகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதாலோ என்னமோ அவளுடைய உமிழ்நீர் பெருகி அவன்  தோளில் படிய, வைத்தாஸ் கைக்குட்டை எடுத்து அவள் வாயைத் துடைத்து விட்டான். யாரும் பார்க்கவில்லை. மற்றவர்கள் ஏதும் பார்க்காமல் ஏதும் கேட்காமல் ஏதும் பேசாமல் சூழலை உருவாக்கித் தத்தம் போக்கில் உறைந்து நிற்கப் பணிக்கப் பட்டவர்கள்.

 

வைத்தாஸ் வாங்கி வந்த ஒரு இனிப்பைக் கவ்வி எடுத்துக் கொண்டு குரங்குக் குட்டி வீராவாலியின் தோளில் இருந்து குதித்து ஓட, ஒரு சுமை விலகிய நிம்மதி வைத்தாஸ் முகத்தில்.

 

(குழந்தையோடு வந்தவளைக் காமுற்று அந்த சிசுவை விலக்கி அவளைக் கவர்ந்து வந்து மடியில் முகம் நோக்கிக் கிடத்தி  சதா சுகிக்கும் கழிசடை தானே நீ?)

 

யாருக்கோ குவளையில் குளிர்ந்த நீர் எடுத்துப் போன விமானப் பணிப்பெண் கேட்டபடி போனாள்.

 

(ஆமா, அதுக்கென்ன என்று வெட்கமே இல்லாமல் சொன்னான் வைத்தாஸ்).

 

அவன் தோளில் வாடை உயர்த்திக் கோழை புரளும் கட்டி தட்டிய எச்சில் வழிய வீராவாலி தூங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் மெல்லக் கனைக்கும் ஒலி. அடுத்த உரையாடலுக்கு ஆயத்தம் அது.

 

அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவர் வைத்தாஸிடம் ஏமாற்றம் தொனிக்கும் குரலில் சொன்னார் – என்ன மாதிரியான புத்தகங்களை நான் பதிப்பிக்கிறேன் என்று கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன்.

 

அவன் பதிலுக்குக் காத்திராமல் எழுந்து நின்று மேலே வைத்திருந்த டிரங்குப் பெட்டியைத் திறக்க உள்ளே அடைத்து வைத்திருந்த புத்தகங்கள் வைத்தாஸ் தலையில் ஒன்றிரண்டாக விழுந்தன. குயில் சத்தமும் குருவிகள்  பொறுக்கும் போது அமர்த்திய குரலில் விவாதிக்கும் ஒலியுமாக நிறைந்தது.

 

ஒரு புத்தகத்தைத் தரையில் விழும் முன் தாங்கிப் பிடித்து வைத்தாஸ் புரட்டிப் பார்த்தான். கெட்டித் தாளில் நர்ஸரி ரைம்கள் ஆன குழந்தைப் பாட்டுகள் அச்சடித்துப் பிள்ளைகளுக்கான ஓவியங்களும் பளிச்சிட்ட புத்தகங்கள் அவை. குதித்தாடுகிற குழந்தைகளும் மிருகங்களும் சிரித்தன.

 

ஏனோ வைத்தாஸுக்கு ஏமாற்றமாகப் போனது. அவன் எதிர்பார்த்தது குழந்தைகளை இல்லை. என்றாலும் மரியாதைக்காக அந்தப் புத்தகங்களின் விற்பனை பற்றிக் கேட்டு வைத்தான். விமானத்தில் போகிற பப்ளிஷர். நிச்சயம் நன்றாகத் தான் விற்கும். வீடு வீடாக, பள்ளிக் கூடத்தில் வாங்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தி, சினிமா நட்சத்திரங்கள் கையில் பிடித்துக் கொண்டு பத்திரிகையில் புகைப்படம் போட்டு., ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் இலவசம் என்று அறிவித்து, குலுக்கல் நடத்தி பரிசு கொடுத்து. எப்படியோ இந்தப் புத்தகங்கள் விற்பனையில் பிய்த்துக் கொண்டு போகும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2024 22:15

April 17, 2024

இந்த விமான சேவையைப் பயன்படுத்திக் கொள்க அல்லது நரகத்துக்குச் செல்க

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காம் நாவலின் அடுத்த சிறு பகுதி

[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

 

          

வைத்தாஸ்  எழுதும் நாவலில் இருந்து

 

ஆர்க்கிட் விமான நிறுவனம் உங்களை வரவேற்கிறது. உங்களைப் பயணியாகப் பெற்றுள்ளதில் இந்த ஆர்க்கிட் விமானத்தின் விமான ஓட்டியர் மற்றும் உதவி விமான ஓட்டியர், உபசரிணியர் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

இந்த விமானம் இன்னும் ஐந்து நிமிடத்தில் வானில் ஏறும்.

 

(அதற்கப்புறம் நீங்கள் to The Hell போகலாம்).

 

இப்போது நிற்கவோ, நடக்கவோ யத்தனிக்க வேண்டாம். தயை கூர்ந்து இருக்கையில் அமர்ந்திருங்கள்.

 

(என் மார்பு வளப்பத்தை முன்னால் உட்கார்ந்து கண் கொட்டாமல் ரசிக்கிற சகல ஆண்களுக்கும் குறி அழுகிச் சொட்டி இற்று வீழட்டும். வாழ்வில் இதுவரை முலை பார்த்திராத ஜன்மங்களா நீங்கள்? எந்தக் காட்டில் இருந்து பிடித்து வரப்பட்ட விலங்குகள்?. சந்தர்ப்பம் கிடைத்தால் என் இடுப்புக்குக் கீழே பிய்த்தும் தின்பீர்கள்).

 

உங்கள் இருக்கையின் பட்டைகளை இறுக்கமாகப் பூட்டி வசதியாக அமருங்கள்.

 

(டாய்லெட்டில் இருந்து வரும்போது கால்சராயை நேராக்காமல் வந்து, சிறுநீர் ஊறிய உள்ளுடுப்பைக் காட்டிக் குமட்ட வைக்க வேண்டாம்.)

 

உங்கள் பயணம் மகிழ்ச்சியும், பாதுகாப்பும், சுகமானதும் ஆகட்டும்.

 

(அதன்பின் நாட்பட்ட மலக்குழியில் நீங்கள் தலை குப்புற விழுந்தாலும் நன்றே).

 

உங்களுக்கு சேவை செய்யவே பணி புரிகிறோம்.

 

(உங்கள் வாய் போல மனமும் நாறுகிறது).

 

நன்றி.

 

(செத்துப் போங்கள்).

 

விமான உபசரிணிப் பெண் புன்னகையோடு பயணிகளுக்கு அன்பும் ஆதரவுமான வார்த்தை சொல்லி வைத்தாஸும் வீராவாலியும் இருந்த இருக்கைகளுக்கு அருகே அமர்ந்தாள். சற்றே முன்னால் நகர்ந்து பட்டையை முடிந்து கொண்டாள். அவளுடைய மார்புக்கு வெகு அருகே தலை இருந்த வைத்தாஸ் கண்களைத் தாழ்த்திக் கொண்டதை அவள் ரசிக்கவில்லை என்பதை அவளுடைய கிண்டலான புன்னகை வைத்தாஸுக்குச் சொன்னது.

 

(எக்சிக்யூட்டிவ் இருக்கையில் இருப்பதால் என் மேல் அக்கறை இல்லையென்று காட்டுகிறாயா நபும்சகனே? அல்லது பக்கத்தில் அழகும் திடமுமான பெண் இருப்பதால் பயந்து ஆசையை மறைத்துக் கொண்டாயா?)

 

உங்களுடைய கைத்தறிப் புடவை மிக நேர்த்தியானது.

 

அவள் வீராவாலியைப் பார்த்து நட்பாகச் சிரித்தபடி நல்ல ஆங்கிலத்தில் சொல்ல வீராவாலி இடியோசை கேட்ட நாகமோ, மின்னலைக் கண்ட மானோ, இன்னும் வடமொழி இலக்கியத்தில் வைத்தாஸ் படித்த வேறேதோ உபமானம் போலவோ மிரண்டு வைத்தாஸின் தோளை அவசரமாகப் பற்றிப் படர்ந்து விமானப் பணிப் பெண்ணைக் கூர்ந்து நோக்கினாள்.

 

விமானப் பணிப்பெண்ணின் விரோதமான பார்வை சொன்னது –

 

(உருண்ட தோளும் சிறுத்த இடுப்புமாக, ஈரத் தரையில் உருண்டு கலவி விற்றுக் காசாக்குகிற, கஷ்கம் நாறும் தேவடியாளே, என் உடலின் வாடையை அனுபவிக்க இவனை நான் அனுமதித்தால் உன்னைப் பின் சீண்டுவானோ?)

 

மன்னிக்கவும், என் காதலிக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. அன் ஃப்ரான்ஸே.

 

ஓ, அருமை. (மூத்திரத்தில் பிரஞ்சு நாறிக்  கசியும் தட்டுவாணியை எங்கேயடா பிடித்தாய்?)

 

அவள் சிரித்தபடி விமான ஓட்டிகளின் குகைக்குப் போனாள். தொடர்ந்து வைத்தாஸிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. பதட்டமான ஆண் குரல்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2024 20:54

April 16, 2024

ஆப்பிரிக்க மந்திரவாதம், மலையாள மாந்த்ரீகம், சீன மந்திரம் இன்ன பிற

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலின் அடுத்த சிறு பகுதி

 

உங்கள் நாட்டில் இருந்து ஒரு நாட்டியக் குழு உடனே வர முடியுமா?

 

அமைச்சர் ஆவலோடு விசாரித்தார்.

 

கடந்த இரண்டு ஆண்டு காலமாக அரசியலில் நிச்சயமற்ற நிலை காரணமாக வைத்தாஸின் நாட்டில் இலக்கியமும் கலையும் கலை வெளிப்பாடும் சீர்குலைந்த நிலையில் தற்போது உள்ளதை வருத்தத்தோடு தெரிவித்தான் வைத்தாஸ். அடுத்த ஆண்டு நிலைமை சீரடைந்து விடும். அப்போது சகல கலைஞர்களையும் கூடவே அழைத்து வருவதாக வாக்குத் தத்தம் செய்தான்.

 

அமைச்சர் தங்கள் நாட்டுக்கு விரைவில் வருவார் என்று நம்பிக்கையும் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டான் வைத்தாஸ்.

 

அழைப்புக்கு நன்றி, அவசியம் வருகிறேன்.

 

அமைச்சர் உற்சாகமாக அறிவித்தார்.

 

வைத்தாஸுக்குக் கதவு திறந்து விட அவரே அறை வாசல் வரை அதிகாரி சகிதம் வந்தார். ஒரு வினாடி கதவைப் பிடித்துக் கொண்டு நின்று குரல் தாழ்த்தித் தரன்னன்ன இசையோடு இழைந்து சொன்னார் –

 

உங்கள் நாட்டு மந்திரவாதிகளையும் எங்கள் பக்கத்து மந்திரக்காரர்களையும் கூடிப் பேச விடலாமே. அங்கேயும் வைத்தியர்கள் மந்திரவாதம் செய்வார்களாமே.

 

அமைச்சர் திடீரென்று கேட்க அதிகாரியும் வைத்தாஸோடு சேர்ந்து ஆச்சரியம் காட்டினான்.

 

நாள் முழுக்க கலவியில் ஈடுபட மூலிகை மருந்துகளையும் மந்திர உச்சாடனங்களையும் ஆக்கித் தரக்கூடிய உங்கள் ஊர் மந்திரவாதிகளை நான் அங்கே வரும்போது சந்திக்க ஆசை. அது மட்டுமில்லை. கள்ளக் கலவியில் ஈடுபடும் ஆணை பெண்ணுக்கு உள்ளேயே சிறைப் பிடித்து வைக்க மந்திரம் செய்வார்களாமே உங்கள் நாட்டில். அப்படி ஒரு நிகழ்வையும் பார்க்க ஆசை.

 

அவர் குரலை திடீரென்று சற்றே உயர்த்தி, விரல்களைக் கத்தரிக்கோல் போல்  அசைத்து அபிநயித்துக் கள்ளச் சிரிப்போடு தொடர்ந்தார் –

 

மந்திரம் போட்டு யாராவது உதிரச் செய்து விடுவார்கள். எதற்கும்.  உபரியாக இரண்டு குறிகளைக் கைப்பையில் பத்திரமாக வைத்து எடுத்து வர உத்தேசம்.

 

அமைச்சரின் சிரிப்பு வைத்தாஸ் லிஃப்டில் நுழையும் வரை கேட்டது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2024 20:37

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.