இரா. முருகன்'s Blog, page 11

July 8, 2024

தோட்ட வீட்டில் நீத்தார் நினவஞ்சலி அச்சடிக்கும் மத்தாயு மாப்பிள்ள

அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -வாழ்ந்து போதீரேயில் இருந்து அடுத்த சிறு பத்தி –

என்ன யோசனை?

 

அவன் சொல்லி முடிப்பதற்குள் சிரித்தபடி குளியலறைக் கதவு அடைத்துத் திரும்ப உள்ளே போனாள். அவனுக்கு வேண்டித்தான் இருந்தது.

 

அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது மழை சிறிதும் இல்லாத, சூரியன் மித வெப்பமாகப் படியும் காலை ஒன்பது மணி. நாலு வழி சந்திப்பில் பஸ்ஸும், லாரியும், ஒன்றிரண்டு கார்களும், ரிக்‌ஷா வண்டிகளும் இடத்தை அடைக்க, போக வழி தெரியாமல் நின்றான் திலீப்.

 

அவனை கிட்டத்தட்ட பாதுகாப்பாக நெருக்கி அணைத்துக் குழந்தை போல செலுத்திக் கொண்டு திடமாக அடியெடுத்து வைத்துப் போனாள் நடாஷா.

 

எரணாகுளம் லோக்கல் வரும் நேரம். ரயிலிலேயே போகலாமா?

 

June 21 2024

 

திலீப் கேட்டான்.

 

அவள் பஸ் ஏறுவதில் ஆர்வம் காட்டினாள்.

 

ரயிலில் போனால் பாதை முழுக்க பச்சைப் பசேல் என்று செடியும் கொடியும் தூரத்தில் காயலும் கடலுமாக இருக்கும்.

 

அவள் தோளில் மாட்டியிருந்த காமிராவைப் பார்த்தபடியே திலீப் சொன்னான்.

 

நடாஷா சம்மதித்தாள். ஆனாலும் பஸ்ஸில் தொங்கிக் கொண்டு போகிற கூட்டத்தில் கலக்க அவள் முகத்தில் ஆவல் இன்னும் இருந்தது.

 

இந்த மொழி மட்டும் புரிந்தால் நானும் படியில் நின்று சந்தோஷமாக திருவனந்தபுரம் கூட நாள் முழுக்கப் பயணம் போவேன் என்றாள் அவள்.

 

ரயில் பிரயாணமாக, ஏகத்துக்கு சோவியத் யூனியலில் போயிருக்கிறாளாம். நாலு நாள் தொடர்ந்து போகும் மாஸ்கோ – விளாடிவெஸ்டாக் டிரான்ஸ் சைபீரியன் ரயிலில் வருடம் நாலு தடவையாவது போய், ஒவ்வொரு பயணத்திலும் இருநூறு பக்கம் கவிதை எழுதி மாஸ்கோ திரும்பியதும் கொளுத்தி விடுவது தனக்கு வழக்கம் என்றாள் நடாஷா.

 

அரசாங்க விரோதக் கவிதையாக இருக்கலாம் அதெல்லாம் என்று நினைத்தான் திலீப். அல்லது லட்சணமான வாலிபனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு காமமுறும் பெண் பற்றி.  இறக்கியே விடாத யட்சி. மிக வலுவானவள்.

 

ரயில் ஓட்டுகிறவரையும் பின்னால் கடைசிப் பெட்டியில் மலையாள தினப் பத்திரிகை படித்தபடி உட்கார்ந்திருந்த கார்டையும் தவிர ஆள் கூட்டம் இல்லாமல் ரயில் வந்து நின்றது.  முந்திய ரயில் நிலையங்களில் கூட்டமெல்லாம் இறங்கி இருக்கக் கூடும் என்றான் திலீப். கூட்டமில்லாத ரயிலில் நடாஷாவைக் கூட்டிப் போகத் தான் முன்கூட்டியே திட்டம் ஏதும் போடவில்லை என்று அவளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் விளக்கத் தோன்றியது அவனுக்கு.

 

போன வாரம் உனக்குக் கொடுத்த நூற்றம்பது ரூபிளுக்குக் கணக்கு சொல்லு.

 

வண்டியில் ஏறி அமர்ந்ததும், நடாஷா கேட்க, திலீப் ரூபிள் எதுவும் தன்னிடம் இல்லை என்றான்.

 

சரி, ரூபாய்க் கணக்கு?

 

நீ கொடுத்த பணத்தில் வெடிக்கார குறூப் வயிற்றுப் போக்கில் படுத்து சிகிச்சை செய்யக் கொடுத்த வகையில் இருபது ரூபாயும், காயலில் இந்த ஒரு வாரத்தில் நாலு தடவை படகில் போன வகையில் எண்பது ரூபாயும் செலவாக, மீதம் இருக்கும் ஐம்பது இன்றைய செலவுக்கு வைத்துக் கொள்ளப்பட்டது.

 

எரணாகுளத்தில் வருஷம் 1880-களில் அச்சு யந்திரம் வைத்து தோத்திரப் பாடல்களும், நம்பூதிரிகள் பற்றிய நகைச்சுவைக் கதைகளையும் பிரசுரித்த குடும்பத்தில், இரண்டு பெரியவர்களைச் சந்திக்கிற திட்டத்தில் இருப்பதாக நடாஷா சொன்னாள்.

 

அவர்களிடம் அபூர்வமான பழைய புத்தகங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றைப் பத்திரமாகப் புகைப்படம் எடுக்கவும், மதியச் சாப்பாட்டுக்கும் பணம் தர வேண்டியிருக்கும் என்றாள்.

 

அந்தப் பழைய அச்சு யந்திரம் கல்லுக் குண்டாட்டம் அங்கே இருந்து அதை விற்கவும் தயார் என்று பெரியவர்கள் சம்மதித்தால் எவ்வளவு செலவாகும் என்று கேட்டாள் அவள்.

 

உனக்கென்ன ப்ராந்தா என்று திருப்பிக் கேட்டான் திலீப். அவனை   முதுகில் ஓங்கித் தட்டிச் சிரித்தாள் நடாஷா.

 

இந்தப் பேய்க்கு வாழ்க்கைப்பட்டது வேண்டித் தான் இருக்கிறது. அதுவும் அகல்யாவோடு இன்னும் இன்னும் என்று இழைந்துச் சேர்ந்து தேடி உணர்ந்து சுகம் கொண்டாடி, அது கிட்டாது காய்ந்திருக்கும் போது.

 

எரணாகுளத்தில் நடாஷா சந்திக்க வேண்டிய இரண்டு முதியவர்களும் மாமன், மைத்துனன் உறவில் வந்த சிரியன் கிறிஸ்துவர்கள் என்பதும் உள்ளூர் மற்றும் மாவட்ட அளவு கிறிஸ்தியானி சமூக அமைப்பில் செல்வாக்குள்ள இல்லத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பரம்பரை வீடு ரயில் நிலையத்துக்கு அடுத்துத் தான் என்பதும் நடாஷாவுக்கு மகிழ்ச்சி அளித்தது.

 

அலைச்சல் இல்லாமல் மிச்சமாகும் நேரத்தை உருப்படியான பேச்சுகளில் செலவழிக்கலாம். திலீப்புக்கு இதில் எல்லாம் சிரத்தை இருக்குமா தெரியவில்லை. அவனும் குறிப்பெடுக்க, கேள்வி கேட்க ஒத்தாசை செய்தால் நிறையத் தகவல் சேகரிக்கவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இவர்கள் வழி காட்டுதலில் செயல் திட்டம் வகுக்கவும் முடியும்.

 

இரண்டு முதியவர்களும் மாப்பிள்ளை என்று முடியும் குலப் பெயரோடு இருந்தார்கள். வெர்கீஸ் மாப்பிள்ளையை மட்டும் தான் சந்திக்க முடிந்தது. அவருக்கு மைத்துனன் உறவான மத்தாயு மாப்பிள்ளை சாயந்திரம் ஒரு மணி நேரம் மட்டும் விழித்திருந்து மற்றப் பொழுதுகளில் உறக்கத்தில் இருப்பவர் என்று தெரிந்தது.  மாலை ஆறு மணிக்கு அவர் எழுந்ததும் அவரிடம் உபரி தகவல் பெற்றுக் கொள்ளலாம் என்றார் வெர்கீஸ்.

 

தின்ணென்று நீண்ட நடாஷாவின் செழுமையான கைகள் திலீப் கண்ணை மயக்க,  அகல்யா அகல்யா என்று பிடிவாதமாக உதடு அசைய, நடாஷாவின் அண்மை தொடர்ந்து வசீகரித்துக் கொண்டிருந்தது.

 

போய்ச் சேர எட்டு மணி ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் திலீப். அகல்யா என்ன செய்து கொண்டிருப்பாள்?

 

காலை பத்து மணிக்கு ஆபீஸில் மராத்தியும் இங்கிலீஷுமாக அறிக்கை, பத்திரிகைக் குறிப்பு, விளக்கம், பத்திரிகைத் தலையங்கம் என்று மாய்ந்து மாய்ந்து டைப் அடித்துக் கொண்டிருப்பாள்.

 

திலீப் போல அவள் மனமும் சஞ்சலப்படுமோ? சஞ்சலப்படுத்த, யாரெல்லாம் அங்கே உண்டு? என்ன உயரம் இருப்பார்கள் அவர்கள்?

 

சாயா, பிஸ்கட் உபசாரம் முடிந்து, வெர்கீஸ் மாப்பிள்ளை பேசத் தொடங்கினார் –

 

ஆயிரத்து எண்ணூத்து முப்பதில் மலையாளம் அச்சு யந்திரத்துக்கு ஏறியது. அப்போதெல்லாம் சதுர எழுத்து தான். முப்பதே வருஷத்தில் அது வட்டெழுத்து ஆகி, எழுத்துச் சீர்திருத்தமும் வந்தாகி விட்டது. சதுர எழுத்து அச்சுக்களை வடிவமைக்க நாங்களே பவுண்டரி நடத்தினோம். என் பாட்டனார் காலத்து அச்சுகளும் யந்திரமும் இன்னும் பத்திரமாக இந்த வீட்டில் உள்ளன.

 

வெர்கீஸ் மாப்பிள்ளை தன் பேச்சை தானே அனுபவித்துச் சொல்லிப் போனார்.

 

அதோ அங்கே தோட்ட வீட்டில் அந்தப் பழைய அச்சு யந்திரத்தை  வைத்திருக்கிறோம். 1874-ல் ஜெர்மனியில் வாங்கிக் கப்பலில் வந்தது. போட்டோ வேணாமே. நீங்கள் பார்த்து, வேணுமென்றால் ஓவியம் வரைந்து கொள்ளலாம்.

 

சடசடவென்று இறகடிக்கும் சத்தம்.

 

கூட்டமாகப் பறந்து வந்த மயில்கள். அவை வெர்கீஸ் மாப்பிள்ளை வீட்டுத் தோட்டத்தில் ஒருசேர இறங்கின. ஆடாமல், அகவிச் சத்தம் எழுப்பாமல் அவை எதற்கோ காத்திருப்பது போல, மண்ணில் கால் பதித்து நின்றபடி  இருந்தன.

 

நடாஷா கேமராவில் அவற்றைப் பகர்த்த நினைத்து தோளில் இருந்து காமராவை எடுத்தபடி திலீப்பைப் பார்க்க அவன் கண் மூடி இருந்தான். முன்னால் நகர்ந்த மயில்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.

 

சாவு வரும் நேரம். இவை சாவின் அடையாளம். இறப்பின் பிரதிநிதிகள்.

 

வெர்கீஸ் மாப்பிள்ளை மயில்களைச் சுட்டிய படிக்குத் தனக்குத் தெரிந்த ரகசியத்தைப் பகிரும் எக்காளத்தோடு சொல்ல உள்ளே இருந்து நடுவயதுப் பெண் ஒருத்தி ஓட்டமும் நடையுமாக வந்தாள்.

 

மேலே உயர்ந்து நடுங்கும் குரலில் அவள் அறிவித்தது –

 

மத்தாயு அச்சன் கண் நிலைகுத்தி சுவாசம் நின்று போனது.

 

ஆணோ?

 

அப்படியா என்ற அர்த்தத்தில் வெர்கீஸ் மாப்பிள்ளை ஆதரவாகக் கேட்டார். நான் சொன்னது சரியாப் போச்சா என்று திருப்தி தெரிவிக்கும் முகக் குறிப்பு. அதில் சந்தோஷம் கீறியிருந்தது.

 

வந்த பெண் இன்னும் சொல்ல விஷயம் உண்டு என்பது போல் நின்றாள்.

 

அப்புறம் என்ன?

 

வெர்கீஸ் மாப்பிள்ளை விசாரித்தார்.

 

தோட்ட வீட்டுக்குள் பழைய அச்சு யந்திரத்தில் இருந்து சத்தம் வந்து கொண்டிருக்கிறது. நிற்க மாட்டேன் என்கிறது.

 

மத்தாயு தனக்கான நீத்தார் அறிவிப்பு அடிச்சுக்கிட்டிருக்கான். சரம பத்ரம்.

 

அவர் சொல்லி விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார்.

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2024 04:16

June 28, 2024

உள்ளிப்பூண்டு மணக்கும் ஓர் ஊர்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் நான்காவது. அதிலிருந்து அடுத்த  சிறுபகுதி

 

 

 

 

 

 

சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை.  டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர் அவர். ஐரோப்பிய அரிவாளும்  ரஷ்ய சுத்தியலும் சிகப்பில் எழுதிய சீனப்பட்டுத் துணிக் கொடியில் பறக்கும் பூமி அது. கேரளா போல.

 

பெரியம்மா ஆப்பிரிக்கப் பயணம் போக, இங்கே வந்த தூதுவர் வைத்தாஸ் ரெட்டி மூலம் அழைப்பு வந்திருக்கிறதாக திலீப்புக்குத் தெரியும். அப்படியே ஐரோப்பாவிலும் பயணப்பட, தில்லியில் மினிஸ்டர் கணவர் மூலம் அவள் முயற்சி எடுப்பதும் தெரியும். கொங்கணிப் பெண் சரச விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளப் பெரியப்பா அவளை ஐரோப்பா அனுப்ப மும்முரமாக முயற்சி செய்வார் என்பது கூடத் திலீப்புக்குத் தெரியும்.

 

பத்து நாள் என்றால் பத்து நாள். பெரியம்மா உலகம் சுற்ற, பெரியப்பா நேரு நினைவுகளை கொங்கணி வாசனை மணக்க மணக்க அந்தச் சிவத்த ரெட்டை நாடிப் பெண்ணின் தேகத்தில் இருந்து ரசனையோடு அகழ்ந்தெடுப்பார். நடாஷா தயவில் சோவியத் பயணமும் பெரியம்மாவுக்கு வாய்த்தால், கொங்கணி மாமிக்கு அவர்  ஒரு நல்ல நாளில் கர்ப்ப தானமும் செய்யக் கூடும். திலீபுக்கு எல்லாம் தெரியுமாக்கும். ஜனனியிடம் சொன்னால் சிரிப்பாள்.

 

யாரும் எங்கேயும் போகட்டும். யாரோடும் கூடிக் குலாவட்டும். அவனுக்குச் செய்ய வேலை இருக்கிறது. நடாஷாவை எரணாகுளம் கூட்டிப் போகணும்.

 

மழை நேரத்து ஆட்டோ கிடைக்க வழக்கம் போல் சிரமமாக இருந்தது. ஆனால் இங்கே ஒரு நல்ல விஷயம் – ஆட்டோ டிரைவருக்கு நல்ல மனது இருந்து, சவாரி போகலாம் என்று முடிவு செய்தால், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது பற்றி விவாதமே இல்லாத இடம். சரியான தொகைக்கு மேல் ஒரு காசு கூடக் கேட்க மாட்டார்கள் யாரும். அரிவாளும் சுத்தியலும் கற்றுக் கொடுத்த சத்திய வழி என்று பெருமிதத்தோடு போன வாரம் ஒரு வண்டியோட்டி சொன்னார். ஆனால் பாதி வழியில் அவருடைய ஆட்டோ ரிக்‌ஷா நின்று போனது.

 

ஆலப்புழை போகணும். ஆட்டோ வருமா?

 

கண்ணில் பட்ட வாகனத்தை நிறுத்த, ஓட்டி வந்தவன் எதிர்க் கேள்வி கேட்டான் –

 

சேட்டன் அங்கே ஓட்டலில் தங்கியிருக்கற மதாம்மாவைக் கூட்டிட்டு இங்கே வந்து மயில்பீலி தூக்கம் படிப்பிக்கணும். அதானே? அலைச்சல் இல்லாம மதாம்மா இங்கேயே ஜாகை ஏற்படுத்திக்கலாமே? பெட்ரோல் மிச்சம் கூட.

 

அது சரி, ஆனால் இன்னிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகணும்.

 

திலீப் கர்ம சிரத்தையாக விளக்கம் சொன்னான்.

 

ரயில்வே ஸ்டேஷனா, அதுவும் பக்கம் தான். டிரைவர் உற்சாகமாகக் கூறினான்.

 

ஆனா நான் போய்க் கூட்டிப் போகணுமே.

 

விடாது, திலீப் மேலும் விளக்கினான்.

 

நல்ல வேளை, பஸ்ஸில் ஆலப்புழை போய் அங்கே ஓட்டலில் இருந்து பொடி நடையாக நடாஷாவை ரயில் ஏறக் கூட்டிப் போகலாமே என்று கேட்காமல் ஆட்டோ திலீப்பை ஏற்றிக் கொண்டு ஆலப்புழை கிளம்பியது.

 

நடாஷா இருந்த ஆலப்புழை ஓட்டலுக்கு முன் சேறும் சகதியுமாகக் கிடந்தது.  அங்கங்கே மரப் பலகையைத் தரையில் இட்டு வைத்திருந்தது கண்ணில் பட்டது. அதன் மேல் ஜாக்கிரதையாகக் கால் வைத்த, தலை குளித்த பெண்கள் நோட்டுப் புத்தகம் சுமந்து பக்கத்தில் காலேஜுக்கோ,  தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சிக்கோ போய்க் கொண்டிருந்தார்கள். மழையும் வெள்ளமும் சகதியும் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கும் அவர்களுக்கு.

 

திலீப்பும் மழை சுழன்றடிக்கும் பிரதேசத்தில் இருந்து வருகிறவன் தான். மராத்தியர்கள் ஒவ்வொரு வருஷமும் மழையை வரவேற்பது சகல கவனமும் எடுத்து. திலீப்புக்கு அதில்  அசாத்தியப் பெருமை. மழைக்காலத்தில் பம்பாய் எலக்ட்ரிக் ரயிலில் போவதை விடவா இதெல்லாம் பெரிய விஷயம்?

 

இல்லல்லோ என்று எதுக்கோ சொல்லி தங்களுக்குள் சிரித்துப் போன பெண்களைத் தொடர்ந்து திலீப் மரப் பலகையில் கால் வைக்க, வழுக்கி சேற்றில் இரண்டு காலும் அழுத்த நின்றான்.

 

நல்ல வேளை. ஓட்டல் மேனேஜர் அவனைப் பார்த்திருந்தார். மதாம்மா அகத்து உண்டு என்று எதிர்பார்ப்புகளோடு தினம் செய்தி அளிப்பதை அவர் கடமையாக ஆற்றுகிறவர். இவன் நடாஷா இருந்த அறைக்குள் போய் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு அப்புறம் அவளோடு வெளியே போகும் போது எதற்காகக் கூர்ந்து பார்க்கிறார்,  எங்கே பார்க்கிறார் என்று திலீபுக்குத் தெரியும். அவரைப் போய்க் கேட்கவா முடியும்? அதுக்கெல்லாம் பத்து நிமிஷம் போதாதா என்று பதிலுக்குக் கேட்கக் கூடியவர். போதும் தான்.

 

 

மாடிப் படிக்கட்டில் விரித்த எத்தனையோ வருஷம் பழையதான கம்பளத்தில் ஈரக் கால்களை மணலோடு ஒற்றி ஒற்றிக் கடந்து, அவன் இரண்டாம் மாடியில் நடாஷா இருந்த அறைக்கு முன் நின்றான்.

 

ஆகக் குறைந்த உடுப்பில் கதவைத் திறந்தாள் அவள். அந்த அறையே உள்ளிப் பூண்டு வாடை சூழ்ந்து இருந்ததாக திலீப் நம்பத் தொடங்கி இருந்தான்.

 

உட்காரு, குளிச்சுட்டு வந்துடறேன்.

 

நடாஷா உள்ளே போனாள்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2024 22:20

June 25, 2024

ஜூன் 25, 1975 என்ற பெயரில் காலண்டர் தேதி இல்லை

என் நாவல் 1975 -எமர்ஜென்சி காலம் பற்றிய நாவல் சிறு பகுதி

சமர்ப்பணம்

 

பெருந்தலைவர் காமராஜருக்கு

 

                         

 

 

                  சாற்றுகவி வெண்பா

 

 

 

”துயிலேறும் மாலும், மயிலேறும் வேலும்

கயிலையின் சூலமும் காப்பு  – ஒயிலான

கற்பகமும் சேர்ந்துமை காத்திடுவார், உம்கதையை

நற்பொருள் நாவல் சிறப்பு’’….!

                                                           கிரேஸி மோகன்

 

 

 

 


 

 

முன்னுரை

 

தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்‌ஷன் நெம்பர் 40, ரெட்டைத்தெரு, தியூப்ளே வீதி என்ற இரு நாவல்களாக வெளிவந்ததும் அந்த உத்தியை இன்னும் சற்று நீட்சி அடைய வைத்து, புனைவின் சுதந்திரமும்,  நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி காட்டும் வரலாற்றின் தகவல் துல்லியமும், ஒருங்கமைதியும், செறிவுமாக ஒரு படைப்பு எழுதிப் பார்க்கத் தோன்றியது.

 

வழக்கம் போல் சிறுகதைப் பொறியைக் கற்பனை ஊதிப் பற்ற வைக்க அது, படர்ந்து பரவிய நாவல் நெருப்பானது. 1970-களில் நடந்து, என்னோடு சென்னை மேன்ஷனிலிருந்த நண்பர்கள் நினைவு  வைத்திருக்கும் நிகழ்ச்சி அது. பெருந்தலைவர் காமராஜர் மறைந்த தினத்தில் நிகழ்ந்தது. மேன்ஷன் அறைக்கு எங்கள் யாருக்கும் பரிச்சயமில்லாத ஒரு இளம் பெண் வந்து, வெளியே போகமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

 

அந்த வினோதமான அல்லது அபத்தமான சூழலை, நான்கு அரசூர் நாவல்கள் எழுதித் தீர்த்தபின் சாவகாசமாக ஒரு சிறுகதையாக எழுத உத்தேசித்தபோது மனதில் தோன்றிய சிந்தனை, அந்தக் காலத்தில் தானே எமர்ஜென்சி நடப்புக்கு வந்தது? எமர்ஜென்சி காலத்தில் நடப்பதாக ஒரு நாவல் எழுதினால் என்ன? 1975 நாவலின் எழுத்து மூலம் இதுதான்.

 

இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு இல்லை. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. எமர்ஜென்சி இல்லாமல் இருந்தாலும் இந்த நிகழ்வுகளில் பல நிகழ்ந்திருக்கும். ஆனால் அவற்றின் போக்கும் முடிவும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

 

வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். இறுதி அத்தியாயத்திலும் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். திடுமென்று வந்து திடுமெனக் காணாது போகிற இவர்கள் எல்லோரும் கதைப் போக்கை நகர்த்த ஒரு கை கொடுத்துத் தேர் இழுக்கிறார்களா என்றால் இல்லை. தன்னைச் சுற்றிச் சுழலும் உலகத்தில் இன்னார் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றோ, இயக்கம் எல்லாம் தன்னையே மையமாகக் கொண்டு நிகழ வேண்டும் என்றோ விதி செய்யப் போத்தியால் முடியாது. ஆடுவாரும், ஆடி முடித்து அள்ளிச் செல்லாமல் ஒதுங்குவாரும், ஆட வந்தவர்களுமாகக் கதை விரிவதிலும் ஒரு ரசம் உண்டு.

 

Character Arc என்ற கதாபாத்திரத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ தட்டுப்படாதவர்கள் போத்தியும் மற்றவர்களும். கதைவெளியில் எமர்ஜென்சி தான் உருவாகி, வளர்ந்து, கலைந்து போகிறது.

 

எமர்ஜென்சி 1975-ஆம் வருடம் ஜூன் 25-ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்டது. 1977-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி விலக்கிக்கொள்ளப்பட்டது. இடைப்பட்ட இருபத்தோரு மாதங்களில் நிகழும் இந்த நாவலின் அத்தியாயங்களும் இருபத்தொன்றுதான்.

 

நாவலின் முதல் நான்கு அத்தியாயங்கள் சென்னையிலும், அடுத்த பனிரெண்டு அத்தியாயங்கள் தமிழகத்தில் ஒரு சிறு நகரத்திலும், இறுதி ஐந்து அத்தியாயங்கள் தில்லியிலும் நிகழ்கின்றன.  தில்லியிலும், சென்னையிலும், நான் பிறந்த சிறு நகரத்திலும் வாழ்ந்து பெற்ற என் வாழ்வனுபவங்கள் நாவலில் கலந்திருக்கின்றன.  வாழ்வனுபவத்தின் பின்பலம் இல்லாமல், வெளிநாடோ, உள்நாடோ, எந்த நிலப்பரப்பும் என் படைப்புகளில் இடம்பெற வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

 

பெருங்கதையாடல் இந்த நாவல் போக்கில் அயர்வு சேர்க்கக் கூடும் என்பதால் சிதறுண்ட கதையாடலாகக் கூறப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளின் நிகழ்ச்சித் தொகுப்பு நாவலாகிறது. எமர்ஜென்சியும் போத்தியும் இவை எல்லாவற்றையும்  ஒன்றிணைக்கும் சரடுகள்.

 

என் ஆருயிர் நண்பர் கிரேசி மோகன் வழக்கம் போல் நாவலின் முதல் பி.டி.எஃப் பிரதியைப் படித்து முதல் விமர்சகராக தினசரி தொலைபேசி, கருத்தும், மேம்படுத்த யோசனையும், பாராட்டும், கறாரான விமர்சனமும் அளித்தார். அவருக்கு என் நன்றி.

 

இந்தமுறை இன்னும் சில நண்பர்களும் நாவலின் சில பகுதிகளுக்கு நடைபெற்ற எடிட்டிங்கில் மகிழ்ச்சியோடு பங்குபெற்றார்கள். தகவல் ஒருங்கு இணக்கம் சரிபார்ப்பதில் இவர்களின் பங்கு சிறப்பானது. நாற்பது வருடத்துக்கு முற்பட்ட எமர்ஜென்சி கால வாழ்வு அனுபவமும், பணி இட அனுபவமும், இந்தக் கதை நிகழும் இடங்களில் வசித்த அனுபவமும், நல்ல வாசிப்பனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள்.

 

திருமிகு  அனுராதா கிருஷ்ணஸ்வாமி, ஸ்ரீவத்ஸ் நடராஜன், பரத்குமார் பாலசுப்பிரமணியன் ஆகிய இந்நண்பர்களுக்கு என் நன்றி. நண்பர் ரமேஷ் வெங்கட்ராமனுக்கும் என் நன்றி.

 

நாவலுக்குச் சாற்றுகவி வெண்பா அளித்த நண்பர் கிரேசி மோகனுக்கு மீண்டும் நன்றி.

 

என் அன்புக்குரிய வாசக நண்பர்களுக்கு என் வாழ்த்துகள். இனி நாவல் உங்களோடு பேச, நான் மௌனமாகிறேன்.

 

இரா.முருகன்

ஏப்ரல்  2018

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

                                                                  மதராஸ்

                      அத்தியாயம் 1                      ஜூன் 1975  

 

 

  நான் போத்தி. திருப்பணித்துறை சிவசங்கரன் போத்தி. திருப்பணித்துறையிலிருந்து தெற்குத் தமிழ்நாட்டுக்கு சாப்பாட்டுக்கடை நடத்த வந்த குடும்பம் எங்களது.   அது நடந்தது 1900-களில். சாப்பாட்டுக் கடை பற்றி இல்லை இங்கே எழுதப் போவது. 1975-ல் மெட்ராஸில் தொடங்கி அடுத்த இரண்டு வருடம் நடந்தது இது. போத்தியின் கதை மட்டுமில்லை. உங்களுடையதும் தான்.   

 

ஓராண்டு முன்பு எனக்கு சென்னை வங்கி ஒன்றில் இன்னும் பணி நிரந்தரமாக்கப்படாத இளநிலை மேலாளர் பணி கிட்டியது.

 

1975-ல் பெரும்பாலும் நிலவிய தமிழில் சொன்னால் – ஒரு வருடம் முன்னால் எனக்கு மெட்ராஸில் பேங்க் ஒன்றில் ஜூனியர் ஆபீசர் வேலை கிடைத்தது. புரபேஷனரி ஆபீசர்.

 

கிளார்க்குகளுக்கு எல்லாம் கீழ்ப்பட்ட குமாஸ்தா – அந்தச் சொல் 1975-லேயே பெரும்பாலும் வழக்கொழிந்து போனது. மேலும், நான் கடைநிலை ஊழியர்கள் எல்லோருக்கும் கடைப்பட்ட ஊழியன்.

 

மேனேஜர், அக்கவுண்டண்ட் போன்ற சிறு தெய்வங்கள் கிளார்க்குகளையும், கடைநிலை ஊழியர்களையும் வேலை வாங்க முடியாத கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டிப் பிரயோகிக்க, எல்லாத் திசையிலும் உதைபடும் பந்து.

 

வால்டாக்ஸ் ரோடோடு போனால் தட்டுப்படும் யானைக்கவுனி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கிழக்கே வங்கிக் கிளை. சுற்று வட்டாரத்தில் வேறே பேங்க் இல்லை என்பதாலோ என்னமோ, சிறு வர்த்தகர்கள் எல்லோரும் அங்கே கணக்கு துவக்கி, பொழுது விடிந்து பொழுது போக வசூலான தொகையாக செக், டிராப்டைக் கொண்டு வந்து கணக்கில் வரவு வைக்கக் கொட்டுவார்கள்.

 

தினசரி ஆயிரம் ரெண்டாயிரம் செக்குகளின் விவரத்தைப் பேரேட்டில் டீ குடித்தபடி எழுத வேண்டும். அவற்றை கிளியரிங்கில் ரிசர்வ் பேங்குக்கு அனுப்ப பேங்க் வாரியாக, டீ மேலே கொட்டாமல் குடித்துக் கொண்டே பிரித்து அடுக்க வேண்டும்.  நீள பட்டாவில் நம்பர் போட்டு விவரம் எழுதி, டீ குடித்துக் கொண்டே கூட்டிப் போட வேண்டும். அப்புறம் பட்டாவை எல்லாம் கூட்டினால், பேரேட்டில் பதிந்ததற்கு அடித்த தொகையோடு ஒத்துப் போக வேண்டும். உடனே ஆகாது. ஆச்சு என்றால் அப்புறம் என்ன வேலை இருக்கும்?

 

டீ குடித்துக் கொண்டே கணக்கை நேர் செய்ய வேண்டும்.  டீ குடித்தபடி அடுத்த கோப்பை டீயைப் பத்திரமாக மேஜையில் நகர்த்தி வைக்க வேண்டும். வால்டாக்ஸ் ரோடு கோல்டன் கஃபே டீ இருந்தால் வாழ்க்கை இனிது, இனிது. புரபேஷனரி ஆபீசராக இருந்தால் கூட அப்படித்தான்.

 

1975 ஜூன் 25 புதன்கிழமை மற்ற வேலை நாட்களோடு வித்தியாசம் இல்லாமல்,  கிளியரிங் பட்டாவில் பதினெட்டு பைசா வித்தியாசத்தோடு நகர்ந்து கொண்டிருந்தது.

 

”பதினெட்டு. ஒண்ணு. எட்டு. ரெண்டையும் கூட்டினா ஒன்பது. நிச்சயம் யாரோ ஏதோ செக்கை லெட்ஜரிலே பதியும்போது பைசாவில் உல்டா பண்ணியிருக்காங்க. முப்பத்தைஞ்சு பைசாவை ஐம்பத்து மூணு பைசாவா பதிஞ்ச மாதிரி. செக்கை வச்சுக்கிட்டு ஒண்ணொண்ணா பாத்துடலாம்”.

 

நான் நம்பிக்கையோடு சொன்னேன். காலை நேரத்துக்கான பரபரப்பு நிறைந்து வழியும் பேங்க் கவுண்டர்.

 

”நேத்து சுப்ரீம் கோர்ட் வெகேஷன் ஜட்ஜ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ன பண்ணினார் தெரியுமோ? இந்திராவை டிஸ்க்வாலிஃபை பண்ணின அலஹாபாத் ஹைகோர்ட் ஜட்ஜ்மெண்ட் இருக்கே, அதை முழுக்க ஸ்டே பண்ணமாட்டேனுட்டார். She is no more the Prime Minister, let alone a M.P”.

 

கரீம் அண்ட் ஹாத்திம் எண்டர்ப்ரைசஸ் கம்பெனி நிர்வாகி ஆராவமுதன், அப்துல் அஸீஸிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

 

அப்துல் அஸீஸ்,    ஐயங்கார் அண்ட் ஐயங்கார் தோல் பதனிடும் தொழிற்கூடத்தின் நிர்வாகி. இரண்டு நிறுவனங்களும் எங்கள் பேங்க் கிளையின் பெரிய கஸ்டமர்கள்.

 

காலையில் ஷட்டரை மேலே ஏற்றி ஆபீஸ் திறக்கும்போதே முதல், இரண்டாவதாக நுழையும் வாடிக்கையாளர்களாக நின்று கணக்கு வழக்கு சரிபார்த்துப் போவது இரண்டு பேருக்கும் வழக்கம்.

 

‘இங்கே அரசியல் பேசுவது கூடாது’ என்று எழுதிய பலகைக்குக் கீழே உட்கார்ந்து இரண்டு பேரும் தினமும் பேசுவது அரசியல் என்றாலும் யாரும் எதுவும் சொல்வதில்லை காரணம் அவர்கள் பேசுவது சர்வதேச நாட்டுநடப்பு.

 

அமெரிக்க ஜனாதிபதி ஜெரால்ட்  ஃபோர்ட் எகிப்து நாட்டுக்குப் போய் விமானத்திலிருந்து இறங்கும்போது விழுந்து அடிபட்டது பற்றியோ, பிரிட்டீஷ் பிரதமர் ஹெரால்ட் வில்சன் சோவியத் யூனியனின் ஒற்றரா என்பது பற்றியோ அவர்கள் விரிவாக அலச, அவர்களைச் சுற்றி சேவிங்க்ஸ், கரண்ட் அகவுண்ட், டோக்கன் நம்பர் எட்டு என்று அதுபாட்டுக்கு பேங்க் உலகம் சுழன்று கொண்டிருக்கும்.

 

இன்றைக்கு ஒரு மாறுதலுக்கு இந்திய அரசியல் பேசுகிறார்கள் போல என்று நினைத்தபடி பதினெட்டு பைசா வித்தியாசத்தில் மூழ்கியிருந்தேன்.

 

“கிளியரிங் செக் எல்லாத்தையும் அனுப்பி வைக்கற நேரம் வந்தாச்சு. சஸ்பென்ஸ் டெபிட் பண்ணி பதினெட்டு பைசாவை இப்போதைக்கு சரிக்கட்டுங்க. க்ளியரிங்க்லே வேறே ஏதாவது பேங்குக்கு இதே தொகை உதைக்கும். அப்போ பிடிச்சுடலாம்” என்றார் சீனியர் ஆபீசர் கணேசன்.

 

இதுபோல் டென்ஷன் ஆக்கக் கூடிய பல சந்தர்ப்பங்களைச் சந்தித்த அவர் இதைச் சொல்லி விட்டு, கவுண்டருக்கு அந்தப் பக்கம் போய், பெரிசுகளோடு பேச ஆரம்பித்தார்.

 

”ஹைகோர்ட் பிரதமரை பதவி நீக்கம் செஞ்சு, இன்னிக்கு கவர்மெண்டே இல்லாத நிலைமை சார். மிலிட்டரி டேக் ஓவர் செஞ்சா கூட ஆச்சரியப்பட மாட்டேன்”.

 

கணேசன் அரசியல் பேசிக் கேட்பது இதுதான் முதல் தடவை. ஆபீஸ் விஷயம் பற்றி இல்லாமல் மற்றதைப் பேசிக் கேட்பதும் முதல் முறைதான்.

 

பகல் நேரத்தில் லஞ்ச் டேபிளில் கணேசனிடம் நான் கேட்டேன்,

 

“சார், காலையிலே சொல்லிட்டிருந்தீங்களே, பிரதமரை ஹைகோர்ட் பதவி நீக்கம் செய்திருக்குன்னு, அதாலே நமக்கு என்ன பிரச்சனை? இந்திராவுக்கு பதவி இல்லேன்னா சஞ்சய் காந்தி பிரதமர் ஆகிடுவார் இல்லே? அவர் தானே லைன்லே அடுத்தது?”

 

கணேசன் ஏதும் சொல்லாமல் என்னைப் பார்த்துப் புன்னகையோடு தலையை ஆட்டியபடி ஒரு பப்படத்தை ஆசையோடு நொறுக்கி வாயில் போட்டுக் கொண்டார்.

 

நாலடுக்கு டிபன் செட் அவருடையது. அதில் மூன்று அடுக்கில், பொறித்த அப்பளமும் பப்படமும் அடைத்து வரும். மற்றதில் தயிர் சாதம். ஒரு பாட்டில் நிறைய சாம்பார். பப்படத்துக்குத் தொட்டுக் கொள்ள அது.

 

”போத்தி, இது ஜனநாயக நாடு. மன்னராட்சி இல்லே. அம்மா போனா, மகன் அரியணை ஏற முடியாது. அது இல்லே இப்போ விஷயம். டெக்னிகலா பார்த்தா இன்னிக்கு இந்திய அரசாங்கமே இல்லை. பிரதமரை பதவி நீக்கம் செய்ததாலே நாட்டுக்குத் தலைவரும் கிடையாது. மற்ற பல நாடுகளிலே இப்படி நிலைமை வந்தால், ராணுவம் ஆட்சிக்கு வந்துடும். இங்கே இதுவரைக்கும் இல்லை. இனிமேல் எப்படியோ”.

 

கணேசன் ஏதும் சொல்லாமல் என்னைப் பார்த்துப் புன்னகையோடு தலையை ஆட்டியபடி பப்படத்தை விண்டு மென்றார்.

 

“எப்போ வேணுமின்னாலும் எதுவும் நடக்கலாம். அதுவும் இன்னிக்கே”.

 

கணேசன் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டு சாம்பார் குடிக்கலானார்.

 

அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த யாரும் ஒரு சத்தமும் எழுப்பவில்லை. ஏதோ ஒரு கூட்டுப் பயம் பாதித்திருந்தது எல்லோரையும்.

 

என் மனதில் ராணுவம் கோல்டன் கஃபே வாசலில் துப்பாக்கியுடன் நின்று டீ குடிக்கப் போகும் என்னைச் சுடுவதற்கு இலக்கு நோக்குவதாகக் கற்பனை செய்து ஒரு வினாடி நடுங்கினேன்.

 

பிற்பகல் மூணு மணிக்கு பதினெட்டு பைசா புதிர் தீர்ந்து தவறுதலாகப் பதியப்பட்ட செக் கண்டுபிடிக்கப்பட்டு, எண்ட்ரி திருத்தப்பட எல்லாம் சுபம்.

 

திடீரென்று ரகோத்தமன் நினைவு வந்தது. தில்லியில் இருந்து வந்திருக்கும் நண்பன். அங்கே ஆகாசவாணி ரேடியோ ஸ்டேஷனில் உத்தியோகம்.  ஒலிபரப்பு பக்கம் போகாமல், மேஜை நாற்காலி போட்டு உட்கார்ந்து கிளார்க் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் போனவன்.

 

ரகோத்தமன் ஒரு வாரம் சொந்த ஊர் திருப்புல்லாணி போய் வந்து திரும்பும் நாள் இது. சென்ட்ரலுக்கு வெய்யில் தாழ ஒரு ஐந்து மணி சுமாருக்கு வந்தால், கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் 7 மணிக்குக் கிளம்பும் வரை அரட்டை அடிக்கலாம் என்று அவன் போஸ்ட் கார்ட் போட்டிருந்தான்.

 

ஐந்து மணிக்கு நான் சென்ட்ரல் போக ரெடி.

 

வால்டாக்ஸ் ரோடு வட்டாரத்தில் தான் ஆபீஸ் என்பதால் ஒரு பத்து நிமிடம் நடந்தாலே சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் போய் விடலாம்.

 

கோல்டன் கஃபேயில் இன்னொரு பால் டீ சாப்பிட்டு விட்டு நடக்க ஆரம்பித்தேன். ஆறுதலான கடல் காற்று கூடவே வந்தது. கணேசன் பேச்சில் கடந்து வந்து என்னை ஒரேயடியாகப் பயமுறுத்திய ராணுவத்தினர்  வால்டாக்ஸ் ரோடு நெரிசலில் காணாமல் போனார்கள்.

 

ரயில் கிளம்பும் வரை, ரகோத்தமனுடன் நாஸ்டால்ஜியா அரட்டை தொடர்ந்தது. கணேசன் சொன்னது நடக்குமா என்று மத்திய அரசு ஊழியனான அவனிடம் கேட்டேன். அவனுக்கு கிருஷ்ண ஐயர் யாரென்றே தெரியவில்லை. அவர் பள்ளிக்கூட ஹெட்மாஸ்டரா என்று கேட்டான். நான் ஒன்றும் செய்யத் தோன்றாமல் அவனைப் பார்த்தேன்.

 

“ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஏன் கவர்மெண்ட் சர்வெண்டை வெளியே போகச் சொல்லணும்?”

 

அடிப்படைக் கேள்வியைக் கேட்டு என்னை நிசப்தனாக்கினான். அதற்கு அப்புறம் ராயர் கடையில் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்ட பத்து வயது அனுபவத்துக்கு மேற்பட்ட எதையும் அவனோடு பேசவில்லை.

 

எந்த ஜென்மத்தில், எந்த ஊரில் எங்கே காண்போமோ என்று கண்ணில் நீர் மல்க, கட்டிப் பிடித்துக் கொண்டு ரகோத்தமனுக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு ஜெனரல் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்பில் பதினொன்றாம் நம்பர் பஸ் பிடித்து ஜி.என்.செட்டி ரோடு வழியாக உஸ்மான் தெரு வந்து சேர்ந்தேன்.

 

சிவா விஷ்ணு கோவில் எதிரே விரியும் தெருவில் எங்கள் மேன்ஷன். உஸ்மான் வீதியில் கூட்டமும் நெரிசலும் குறையவில்லை. காப்பிப்பொடி புதுசாக அரைத்து வாங்கவும், கோன் ஐஸ் சாப்பிடவும், சாத்துக்குடி ஜூஸ் குடிக்கவும், லிஃப்கோவில் இங்கிலீஷ் தமிழ் டிக்ஷனரி வாங்கிப் போகவும், மாம்பல ரயில்வே ஸ்டேஷன் அருகே ரங்கநாதன் தெருவில் காய்கறி வாங்கவும், நல்லியில் முகூர்த்தப் புடவை வாங்கவுமாக ராத்திரி நகரம் வாங்கி, தின்று, குடித்து இயங்கிக் கொண்டிருந்தது.

 

நாதன்ஸ் கஃபே ஃபுல் மீல்ஸ் பிரிவில் காகித டோக்கனை எச்சில் இலைப் பக்கம் வைத்துக் காத்திருக்க வேண்டியில்லாமல் போனதுமே இடம் கிடைத்தது.

 

வத்தல் குழம்பும், ரெண்டு சுட்ட அப்பளமும் போனசாகக் கிடைக்க, இந்தியாவை, பப்படம் கணேசனை, பதினெட்டு பைசா வித்தியாசத்தை மறந்து, அவரைக்காய் சாம்பாரும், தக்காளி ரசமும் கலந்து சூடான சாதம் வயிற்றில் நிறைய, எங்கே எங்கே என்று அசதியும் தூக்கமும் எட்டிப் பார்த்த நேரம். இரையெடுத்த பாம்பாக ஊர்ந்து நான் தங்கியிருக்கும் மேன்ஷன் வந்தாயிற்று.

 

மாடிப்படி ஏறி நடையில் திரும்ப, முதல், இரண்டாம் அறை கன்னட நண்பர்கள் பெல்காவியும் குல்கர்னியும் பெல்காவி அறை வாசலிலேயே டிரான்சிஸ்டருடன் நின்று கொண்டிருந்தார்கள்.

 

என்ன விஷயம்? ராணுவ ஆட்சியா?

 

“இன்னும் இல்லே. இந்திராம்மா அமைச்சர்களோடு ஆலோசனை செய்து ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதை சந்திக்க ராஷ்ட்ரபதி பவன் போயிருக்காங்களாம். அதுவும் ஆகாசவாணி ந்யூஸ் இல்லை. பி.பி.சி லண்டன் செய்தி. வாய்ஸ் ஆப் அமெரிக்காவும் அதே தான் சொல்றது”,

 

மர்ஃபி டிரான்சிஸ்டர் ரேடியோ குமிழியைத் திருகிக் கொண்டு சொன்னார் பெல்காவி. அவர் எனக்கு பிரியமான நண்பர். பெல்காவி என்பது கர்னாடகாவில் ஊர்ப் பெயரான பெல்காம் அடிப்படையில் வருவதாம்.

 

குல்கர்னி மூத்தவர். நகத்தைக் கடிக்காதே, தலை வாரிட்டு வா, வீபுதி எட்டுக்கோ என்கிற மாதிரி அண்ணா அவதாரம் அடிக்கடி எடுப்பார். அவரைத் தவிர நாங்கள் இங்கே அறைகளில் இருக்கப்பட்ட எல்லா பிரம்மசாரிகளும் இருபத்தைந்து வயதுக்குக் கண்டிப்பாகக் கீழ்ப்பட்டவர்கள் என்பதால் ஹள்ளிய அண்ணா எனப்படும் இந்தக் கிராமத்து அண்ணன் குல்கர்னியின் சொல் மதிப்புக்குரியது.

 

அறைக்கு நடந்தேன். உள்ளே போய்ப் படுத்தால் உலகோடு ஒரு தொடர்பும் இல்லாமல் அடுத்த எட்டு மணி நேரம் போகும். பூமியே புரண்டாலும் தான் என்ன?

 

பேண்ட் பாக்கெட்டில் ரூம் சாவிக்குக் கை விட்டேன். அது அங்கே இல்லை.

 

இரண்டு பாக்கெட், கைப்பை, இருக்க முடியாது என்று தெரிந்தாலும் சட்டைப் பை. பரபரப்பாகத் தேட அறைச் சாவியை எங்கேயும் காணவே காணோம்.

 

பூட்டு எதுவும் இல்லை. கதவிலேயே பதிந்த பூட்டு, கதவைச் சாத்தினால் பூட்டிக் கொண்டு விடும். சாவி போட்டால் திறக்கும் ஏற்பாடு.

 

காலையில் ஆபீஸ் போகிற அவசரத்தில் சாவியை எடுத்துக் கொள்ளாமல் வெளியே வந்து சாத்தி விட்டுக் கிளம்பியிருக்கிறேன். இனிமேல் கதவு திறக்க கோவிந்தன் தான் வரவேண்டும்.

 

கோவிந்தன் இந்த மேன்ஷனின் உரிமையாளர். எல்லா சாவிக்கும் பொதுவான, ஒரு மாஸ்டர் சாவி அவரிடம் இருக்கிறதாகக் கர்ணபரம்பரைக் கதைகளாக வதந்தி உலவுகிறது. அதில் நம்பிக்கை இனிமேலாவது வைத்தாக வேண்டும். கதவு திறக்காவிட்டால் எங்கே போய் உறங்க? நாளை எப்படி நான் ஆபீஸ் போக?

 

ஜன்னல் வழியே ஏக்கத்தோடு ரூமுக்குள் பார்த்தேன். என் பின்னால் கொரகொரவென்று பிபிசியோ வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவோ வேறே எதுவோ இந்த நாட்டு நிலைமையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

 

இந்திரா என்ன ஆனார்? என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். எங்கேயும் போகட்டும். நான் எப்படி அறைக்குள் மீண்டும் போகப் போகிறேன்?

 

“பக்ருதீன் அலி அகம்மது அவசரச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டுட்டாராம். நாட்டில் நெருக்கடி நிலைமை பிரகடமாகி இருக்காம். எமர்ஜென்ஸி”.

 

பெல்காவி டிரான்சிஸ்டரை உரக்க வைக்க,  எமர்ஜென்சி வந்ததைப் பரபரப்போடு மதராஸ் வானொலி நிலையத்தில் பத்மநாபன் சிறப்புச் செய்தி அறிக்கையாகச் சொல்கிற ஒலி.

 

பத்மநாபன் செய்தி சொல்லி முடித்து வீட்டுக்குப் போவார். தட்டியதும் கதவு திறக்கும். ஓய்வெடுத்துக் கொண்டு, குளித்து, சாப்பிட்டு வந்து நாளைக்கு இந்திரா காந்தி புகழ் பரப்பும் அடுத்த செய்தி சொல்வார்.

 

நான் ஆபீஸ் போக முடியாமல், அழுக்கு உடுப்போடு அறைக்கு வெளியே கையைப் பிசைந்து கொண்டு நிற்பேன்.

 

“என்ன ஆச்சு போத்தி, வாசல்லே நின்னு முழிச்சிட்டு இருக்கே?’

 

என் அறைக்குத் தெற்கே அடுத்த ரூம்காரரான நாராயணசாமி ஸ்கிப்பிங் கயிறில் தாண்டிக் குதித்துக்கொண்டு தன் அறைக்குள் இருந்தபடிக்கே விசாரித்தார்.

 

காலை ஏழு மணிக்கு எண்ணூரில் வேலைக்குப் போய் இரவு ஏழுக்கு வருகிறதால் ராத்திரி படுக்கும் முன் ஸ்கிப்பிங்க் ஆடுகிற உடல் பயிற்சி அவருக்கு விதிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்.  ராத்திரியில் ஸ்கிப்பிங் ஆடி ஆடி அவர் நடக்கும்போதே குதித்துக் குதித்துப் போவதாகத் தான் தோன்றும். என்ன சாப்பிட்டாலும் சதையே போடாத பூஞ்சை உடம்பு அவருடையது. மூக்கு இந்திரா காந்தி மாதிரி நீளம். பழைய எகிப்து ஜனாதிபதி நாசர் கூட நீண்ட மூக்கர் தான். ஆனால் அவரை யாரும் பதவி நீக்கவில்லை. நாசர் சாவியைத் தொலைத்திருக்க மாட்டார். நாராயணசாமியும்.

 

“நாராயணசாமி சார், சாவியை ரூம் உள்ளே விட்டுட்டேன். என்ன பண்றது?”

 

பெல்காவி டிரான்சிஸ்டரைக் கட்டிச் சுமந்தபடி என் அறைக்குள் ஜன்னல் வழியே பார்க்க, குல்கர்னி பின்னாலேயே வந்து உள்ளே டார்ச் அடித்தார்.

 

“எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று அமெரிக்காவோ, பிரிட்டனோ உற்சாகமாகச் செய்தி சொல்ல, நான் குழப்பத்தோடு அறைக்குள் பார்த்தேன். கதவு ஓரமாக சின்ன மேஜையில் சாவி பத்திரமாக இருக்கிறது.

 

நாராயணசாமி வந்து ஜன்னல் கம்பிகளுக்குள் கையை நீட்ட குட்டி மேஜைக்கு நாலு அங்குல உயரத்தில் அவர் விரல் அலை பாய்கிறது. பழைய எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் மூக்கு போல் விரல் கொஞ்சம் நீளமாக இருந்தால் சாவியைக் கைப்பற்றி இருக்கலாம்.

 

நாராயணசாமியும் ஸ்கிப்பிங்க் கயிறை ஓரமாகப் போட்டு விட்டு அவருடைய டிரான்சிஸ்டர் ரேடியோவில் பிபிசி போடுகிறார்.

 

“மொரார்ஜி தேசாய் போயாச்சு”.

 

அவர் சொன்னதைக் கேட்க நடுக்கம் வருகிறது. அதுவும் அனாதையாக அறைக்கு வெளியே நின்று மொரார்ஜியை நினைக்கும் சோகம். சுட்டுட்டாங்களா அவரை? கொலையும் செய்வார் அந்தம்மாவா?

 

“எழுபத்தேழு வயசு. அவரை ஜெயில்லே போட்டுட்டாங்க. அநியாயம்”,

 

குல்கர்னி குரலில் ஆத்திரம் புலப்பட்டது. ரொம்ப சாந்தமான மனிதர் அவர்.

 

கோவிந்தனுக்கு ஃபோன் செய்து பார்க்கலாமா? நாராயணசாமி தன் பர்சில் தேடி ஒவ்வொன்றாக அவர் அறையில் தரையில் போட்ட பொருட்கள் – தினசரி காலண்டர் காகிதத்தில் மடித்த கோவில் வீபுதி.  எழும்பூர் ரயில்வே ஜங்க்‌ஷன் பிளாட்பாரம் டிக்கட்.  மின்சார ரயில் சீசன் டிக்கெட்.  கோளறு திருப்பதிகம் ஒன்றும் பின்னால் பனியன், ஜட்டி விளம்பரமுமாக சிறு அட்டை.  மடாதிபதி படம். நுணுக்கி அச்சடித்த புகையிலைக் கம்பெனி கேலண்டர். பஸ் டிக்கட். சின்ன, மினிக்கும் மினியாக பாக்கெட் சைஸ் நோட்புக்.

 

அதுதான் என்றார் நாராயணசாமி. எடுத்துப் பிரித்து கோவிந்தனை அழைக்க, அவருடைய டெலிபோன் அவுட் ஆப் ஆர்டர். நாசமாகப் போகட்டும் அதுவும் அவரும்.

 

“வாஜ்பாய் அரெஸ்டெட். அத்வானியும் உள்ளே தான்”. பெல்காவி சொன்னார்.

 

“கலைஞர் கருணாநிதி?”

 

அந்தக் குழப்பமான நேரத்திலும் எனக்குக் கேட்கத் தோன்றிய பெயர் அதுதான்.

 

“இன்னும் இல்லை” என்றார் நாராயணசாமி. அந்தப் பதில் மற்ற எதையும் விட மிரட்டலாக கதிகலக்க வைத்தது.

 

அது இருக்கட்டும். அறைக்குள் எப்படிப் போக? நாளைக்கு எப்படியாவது சமாளித்து, கோவிந்தன் வீட்டுக்குப் போய், எந்த அட்ரஸோ தெரியாது,  அவரைக் கெஞ்சிக் கூத்தாடிக் கூட்டி வந்தால் கதவு திறக்குமா? என் ஒரு வருடம் சம்பளம் முழுக்க அவருக்கு அபராதமாகத் தர வேண்டி வருமா? பாண்டி பஜாரில் ட்யூப்ளிகேட் சாவி பண்ணுகிறவர் கீதா கபே அருகே மரத்தடியில் உட்கார்ந்திருப்பாரே. அவரைக் கூப்பிட்டால் செய்து கொடுப்பாரா? பூட்டு இருந்தால் சாவி போடுவார். கதவிலேயே பதிந்த பூட்டுக்கு?  தப்புக் காரியமா அப்படி சாவி போடச் சொல்வது?

 

“ஆகாசவாணி. ஒரு முக்கிய அறிவிப்பு. நாளை, ஜூன் 26-ந்தேதி, வியாழக்கிழமை, காலை ஏழு மணிக்கு இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். ஆகாசவாணியின் அனைத்து நிலையங்களும் இந்த உரையை அஞ்சல் செய்யும். அடுத்த நிகழ்ச்சி, வாத்திய கோஷ்டி”.

 

நான் கதவில் சாய்ந்து கொண்டு நடையில் காலை நீட்டி ஓய்ந்து போய் உட்கார்ந்தேன். எமெர்ஜென்சி என்றால் இருப்பிடத்துக்குள் போக முடியாமல் தவிக்கிற ராத்திரி. இப்படித்தான் என் அகராதியில் எழுதப் படும்.

 

திடீரென்று ராத்திரியின் அமைதியைக் குலைத்துக் கொண்டு, தன் அறைக்கு உள்ளே இருந்து நாற்காலியைத் தூக்கிப் போட்டுச் சுவரில் அடித்து ஓவென்று அலறினார் குல்கர்னி. ”பாவி, மகா பாவி” தெரு வரைக்கும் அந்தத் தீனமான அலறல் எதிரொலித்தது. இந்திரா புகைப்படம் அட்டையில் போட்ட ஒரு கன்னட வாரப் பத்திரிகை உள்ளே இருந்து தரையில் வந்து விழுந்தது. அதை உக்ரமாகக் காலால் மிதித்தபடி அரைத்துத் தேய்த்து நசித்தார் குல்கர்னி.

 

“இட்ஸ் ஆல் ரைட், இட்ஸ் ஆல் ரைட்”, பின்னாலேயே பெல்காவி குரல் ஆதரவாக ஒலித்தது.

 

”ஜெயப்பிரகாஷ் நாராயண் உடல் நலம் சரியில்லை என்பதால் ஆஸ்பத்திரியில் காவலில் வைக்கப் படலாம்”. பெல்காவி எங்களுக்குச் சொல்லியபடி குல்கர்னி தோளில் தட்டி சமாதானப் படுத்தினார்.

 

நேரம் கெட்ட நேரத்தில் நிலைய வித்வான் தில்ரூபா வாசித்துக் கொண்டிருந்தார் ஏதோ ஸ்டேஷனில். மற்றப்படி எல்லா அலைவரிசையிலும் கொரகொரவென்று ஒரு சத்தம் வார்த்தையின்றி  பயமுறுத்தி எமெர்ஜென்சித் தகவல் கொடுத்தது.  அந்த ராத்திரி தொடங்கி பிபிசி, இந்தியாவின் பொய் சொல்லாத வானொலி ஆனது.

 

”போத்தி, உள்ளே வந்து படுங்க, காலையிலே பார்க்கலாம். உங்க ரூமுக்குள்ளே போக வழி பிறந்துடும். அது நிச்சயம். ஆனால், நாளைக்கு தேசம் என்ன ஆகுமோ, அது தெரியாது”.

 

நாராயணசாமி இன்னொரு முறை டிரான்சிஸ்டரின் குமிழைத் திருப்ப,  சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்கள் அசோக் மேத்தா, மது தந்த்வாதே அரஸ்ட் ஆனார்கள்.

 

“ஒவ்வொரு தடவை ரேடியோ வைக்கறபோதும் புதுசா யாராவது தலைவர் கைதான செய்தி. இனிமேல் நான் கேட்கப் போறதில்லே. விடிஞ்சுதான்”, என்றார் சலிப்போடு நாராயணசாமி.

 

நான் தூக்கம் பிடிக்காமல் அடுத்த சில மணி நேரங்கள் நாராயணசாமி சார் அறையில் வெறும் தரையில் புரண்டபடி கிடந்தேன்.  நாளைக்குக் காலை மாடிப்படி நிறைத்து, தெருவிலும் உஸ்மான் ரோடிலும் பஸ் ஸ்டாண்டிலும் ரங்கநாதன் தெருவிலும், மேற்கு மாம்பலத்திலும் அகஸ்தியர் கோவிலிலும் இந்தி பிரசார சபைக் கட்டடத்துக்குள்ளும், எதிரே லக்‌ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் இயங்கிய தீரர் சத்தியமூர்த்தியில் சுந்தரா மாளிகையிலும் ராணுவம் நிற்கும். நான் ஆபீஸ் போக ஸ்கூட்டருக்குப் போட பெட்ரோல் கிடைக்காது. பஸ் கிடைக்காமல் ராணுவம் அவற்றில் நிறைந்து வெங்கட்நாராயணா வீதியில் வீறிட்டு ஓடும். நடந்தே ஆபீஸ் போவேன். பச்சைச் சீருடை உடுத்திய சிப்பாய்கள் கத்தி பொருத்திய துப்பாக்கிகளைக் காட்டி வழியில் போக விடாமல் தடை செய்வார்கள். காமராஜர், மொரார்ஜி தேசாய், ஜெயப்ரகாஷ் நாராயணன் என்று முதியவர்களை விலங்கிட்டுத் தெருவில் இழுத்துப் போவார்கள்.

 

புரண்டு படுத்தேன். இடுப்பில் துண்டும் இளைத்த உடம்புமாக அறைக்கு வெளியே நிற்பது யார்? காந்தியா? தாடி வைத்த காந்தி. எல்லைக் காந்தியா? நாடே ஒழுங்கைக் கடைப்பிடிக்க நேரம் வந்து விட்டது என்கிறார் அவர். எழுந்து நிற்கச் சொல்கிறார் என்னை. எழுந்து நிற்க முயற்சி செய்கிறேன். முடியவில்லை. சோம்பலாக இருக்கிறது. தளர்ச்சியாக இருக்கிறது. பயமாக இருக்கிறது. விடியப் போகிறது என்று பல குரல்கள் சேர்ந்து ஒலிக்கின்றன.  அப்புறம் அதையே கூட்டமாகச் சேர்ந்து பாடுகின்றன. இருட்டில் புறாவின் இறகுச் சிலிர்ப்புகள். கைகளின் ஓரம் கழுகின் நகங்கள். அந்த நகங்களிடம் இருந்து தப்ப இன்னும் புரண்டு படுக்கிறேன். உடன் அனலாகக் கொதிக்கிறது.

 

நான் எழுந்தபோது விடிந்து வெகு நேரமாகி இருந்தது. மெல்ல அறைக்கு நடந்து கதவைத் தள்ளினேன்.

 

திறந்து கொண்டது.

 

நேற்று அதை யாரும் முயற்சி செய்யவில்லை. சாவி தேடுவதில் நேரம் தொலைந்து போனது. எமர்ஜென்சி பயத்திலும் என் நேரம் கடந்து போயிருந்தது. பயத்தைக் கொன்று போடு, எந்தக் கதவும் தடுத்து அடைத்து இருக்காது. தள்ளினால் திறக்கும் அதெல்லாம். நம்பிக்கை எழுந்து வந்தது.

 

”ஜெயப்ரகாஷ் நாராயணை இன்னிக்கு காலையிலே ரெண்டு மணிக்கு அரஸ்ட் பண்ணி தில்லி பார்லிமெண்ட் வீதி போலீஸ் ஸ்டேஷன்லே வச்சிருக்காங்களாம். வினாச காலே விபரீத புத்தி. நான் சொல்லலே. அவர் தான் சொன்னதா பிபிசி நியூஸ்”, குல்கர்னி படி இறங்கிப் போனார்.

 

வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த காலை ஏழு மணி. உள்ளே போய் டிரான்சிஸ்டரை ஆன் செய்தேன்.

 

“இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியவர்கள் இப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்”.

 

கேட்கத் தொடங்கினேன்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 25, 2024 04:54

June 20, 2024

ஜன்னலுக்கு வெளியே தட்டிக் கேட்கும் காற்றுக்கு சொல்ல அவர்கள் இருவருக்கும் பதில் இல்லை

அரசூர் நாவல் நான்காவது – வாழ்ந்து போதீரே. அடுத்த சிறு பகுதி நாவலில் இருந்து

 

ஜன்னலில் தட்டித் தட்டி மழை கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல அவர்கள் இருவருக்கும் நேரம் இல்லை.

 

சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை.  டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர் அவர். ஐரோப்பிய அரிவாளும்  ரஷ்ய சுத்தியலும் சிகப்பில் எழுதிய சீனப்பட்டுத் துணிக் கொடியில் பறக்கும் பூமி அது. கேரளா போல.

 

பெரியம்மா ஆப்பிரிக்கப் பயணம் போக, இங்கே வந்த தூதுவர் வைத்தாஸ் ரெட்டி மூலம் அழைப்பு வந்திருக்கிறதாக திலீப்புக்குத் தெரியும். அப்படியே ஐரோப்பாவிலும் பயணப்பட, தில்லியில் மினிஸ்டர் கணவர் மூலம் அவள் முயற்சி எடுப்பதும் தெரியும். கொங்கணிப் பெண் சரச விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளப் பெரியப்பா அவளை ஐரோப்பா அனுப்ப மும்முரமாக முயற்சி செய்வார் என்பது கூடத் திலீப்புக்குத் தெரியும்.

 

பத்து நாள் என்றால் பத்து நாள். பெரியம்மா உலகம் சுற்ற, பெரியப்பா நேரு நினைவுகளை கொங்கணி வாசனை மணக்க மணக்க அந்தச் சிவத்த ரெட்டை நாடிப் பெண்ணின் தேகத்தில் இருந்து ரசனையோடு அகழ்ந்தெடுப்பார். நடாஷா தயவில் சோவியத் பயணமும் பெரியம்மாவுக்கு வாய்த்தால், கொங்கணி மாமிக்கு அவர்  ஒரு நல்ல நாளில் கர்ப்ப தானமும் செய்யக் கூடும். திலீபுக்கு எல்லாம் தெரியுமாக்கும். ஜனனியிடம் சொன்னால் சிரிப்பாள்.

 

யாரும் எங்கேயும் போகட்டும். யாரோடும் கூடிக் குலாவட்டும். அவனுக்குச் செய்ய வேலை இருக்கிறது. நடாஷாவை எரணாகுளம் கூட்டிப் போகணும்.

 

மழை நேரத்து ஆட்டோ கிடைக்க வழக்கம் போல் சிரமமாக இருந்தது. ஆனால் இங்கே ஒரு நல்ல விஷயம் – ஆட்டோ டிரைவருக்கு நல்ல மனது இருந்து, சவாரி போகலாம் என்று முடிவு செய்தால், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது பற்றி விவாதமே இல்லாத இடம். சரியான தொகைக்கு மேல் ஒரு காசு கூடக் கேட்க மாட்டார்கள் யாரும். அரிவாளும் சுத்தியலும் கற்றுக் கொடுத்த சத்திய வழி என்று பெருமிதத்தோடு போன வாரம் ஒரு வண்டியோட்டி சொன்னார். ஆனால் பாதி வழியில் அவருடைய ஆட்டோ ரிக்‌ஷா நின்று போனது.

 

ஆலப்புழை போகணும். ஆட்டோ வருமா?

 

கண்ணில் பட்ட வாகனத்தை நிறுத்த, ஓட்டி வந்தவன் எதிர்க் கேள்வி கேட்டான் –

 

சேட்டன் அங்கே ஓட்டலில் தங்கியிருக்கற மதாம்மாவைக் கூட்டிட்டு இங்கே வந்து மயில்பீலி தூக்கம் படிப்பிக்கணும். அதானே? அலைச்சல் இல்லாம மதாம்மா இங்கேயே ஜாகை ஏற்படுத்திக்கலாமே? பெட்ரோல் மிச்சம் கூட.

 

அது சரி, ஆனால் இன்னிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகணும்.

 

திலீப் கர்ம சிரத்தையாக விளக்கம் சொன்னான்.

 

ரயில்வே ஸ்டேஷனா, அதுவும் பக்கம் தான். டிரைவர் உற்சாகமாகக் கூறினான்.

 

ஆனா நான் போய்க் கூட்டிப் போகணுமே.

 

விடாது, திலீப் மேலும் விளக்கினான்.

 

நல்ல வேளை, பஸ்ஸில் ஆலப்புழை போய் அங்கே ஓட்டலில் இருந்து பொடி நடையாக நடாஷாவை ரயில் ஏறக் கூட்டிப் போகலாமே என்று கேட்காமல் ஆட்டோ திலீப்பை ஏற்றிக் கொண்டு ஆலப்புழை கிளம்பியது.

 

நடாஷா இருந்த ஆலப்புழை ஓட்டலுக்கு முன் சேறும் சகதியுமாகக் கிடந்தது.  அங்கங்கே மரப் பலகையைத் தரையில் இட்டு வைத்திருந்தது கண்ணில் பட்டது. அதன் மேல் ஜாக்கிரதையாகக் கால் வைத்த, தலை குளித்த பெண்கள் நோட்டுப் புத்தகம் சுமந்து பக்கத்தில் காலேஜுக்கோ,  தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சிக்கோ போய்க் கொண்டிருந்தார்கள். மழையும் வெள்ளமும் சகதியும் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கும் அவர்களுக்கு.

 

திலீப்பும் மழை சுழன்றடிக்கும் பிரதேசத்தில் இருந்து வருகிறவன் தான். மராத்தியர்கள் ஒவ்வொரு வருஷமும் மழையை வரவேற்பது சகல கவனமும் எடுத்து. திலீப்புக்கு அதில்  அசாத்தியப் பெருமை. மழைக்காலத்தில் பம்பாய் எலக்ட்ரிக் ரயிலில் போவதை விடவா இதெல்லாம் பெரிய விஷயம்?

 

இல்லல்லோ என்று எதுக்கோ சொல்லி தங்களுக்குள் சிரித்துப் போன பெண்களைத் தொடர்ந்து திலீப் மரப் பலகையில் கால் வைக்க, வழுக்கி சேற்றில் இரண்டு காலும் அழுத்த நின்றான்.

 

நல்ல வேளை. ஓட்டல் மேனேஜர் அவனைப் பார்த்திருந்தார். மதாம்மா அகத்து உண்டு என்று எதிர்பார்ப்புகளோடு தினம் செய்தி அளிப்பதை அவர் கடமையாக ஆற்றுகிறவர். இவன் நடாஷா இருந்த அறைக்குள் போய் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு அப்புறம் அவளோடு வெளியே போகும் போது எதற்காகக் கூர்ந்து பார்க்கிறார்,  எங்கே பார்க்கிறார் என்று திலீபுக்குத் தெரியும். அவரைப் போய்க் கேட்கவா முடியும்? அதுக்கெல்லாம் பத்து நிமிஷம் போதாதா என்று பதிலுக்குக் கேட்கக் கூடியவர். போதும் தான்.

 

யங் மேன், கொஞ்சம் நில்லு. ஆபீஸ் பாய் வெள்ளம் ஒழிப்பான்.

 

அவர் அவனை வாசலிலேயே நிறுத்தி விட்டார். சகதிக் காலோடு நடாஷாவை இவன் கட்டிலில் கிடத்திக் கலந்தால் படுக்கை விரிப்பும் தலையணையும் ஏன் அறையுமே சேறும் சகதியுமாகி விடாதா என்ற கரிசனம் திலீப்புக்குப் புரிந்தது.

 

மாடிப் படிக்கட்டில் விரித்த எத்தனையோ வருஷம் பழையதான கம்பளத்தில் ஈரக் கால்களை மணலோடு ஒற்றி ஒற்றிக் கடந்து, அவன் இரண்டாம் மாடியில் நடாஷா இருந்த அறைக்கு முன் நின்றான்.

 

ஆகக் குறைந்த உடுப்பில் கதவைத் திறந்தாள் அவள். அந்த அறையே உள்ளிப் பூண்டு வாடை சூழ்ந்து இருந்ததாக திலீப் நம்பத் தொடங்கி இருந்தான்.

 

உட்காரு, குளிச்சுட்டு வந்துடறேன்.

 

நடாஷா உள்ளே போனாள்.

 

ஒற்றை நாற்காலியில் மார்க் கச்சு தொங்கிக் கொண்டிருந்தது. விரித்து வைத்திருந்த ஈரமான பெரிய ஸ்கர்ட் பாதிக் கட்டிலை அடைத்துத் தரையில் வழிந்தது.  ஈரத் துணி வாடையையும் சேர்த்து மேலே சீலிங் ஃபேன் பரத்திக் கொண்டிருந்தது. மீதிக் கட்டிலில் அரையில் உடுத்தும் பெண்கள் உள்ளாடை, கறுப்பு நிறத்தில். அதைத் தொட்டபடி, பாதி சாப்பிட்ட ரொட்டியும் ஆம்லெட்டுமாகப் பீங்கான் தட்டு. ஓரமாக காலி தேநீர்க் கோப்பை, எந்த நிமிஷமும் தரைக்குக் கவிழக் கூடும் என்ற நிலையில். எங்கே உட்கார?

 

யோசித்து ஏதோ குறுகுறுப்போடு நாற்காலி நுனியில் தொடுக்கினாற்போல் அமர்ந்தான். ஒரு வினாடி தான். சுற்று முற்றும் பார்த்து விட்டு நன்றாகப் பின்னால் சாய்ந்தான். இரண்டு தோளையும் தழுவிப் படர்ந்த, உடுத்து விழுத்துப் போட்ட மார்க்கச்சையின் ஒச்சை வாடை அவனுக்கு வேண்டி இருந்தது.

 

அகல் செல்லம் அகல் கண்ணம்மா

 

அவன் அந்த மார்க்கச்சையைப் பின்னால் இருந்து எடுத்து ஆவேசமாக முகம் புதைத்துக் கொண்டான். வேண்டி இருந்தது. இன்னும் கூட.

 

பதுங்கிப் பதுங்கி, முன்னால் ரெண்டு அடி வைத்து கறுப்பு உள்ளாடையை ஆசையாகப் பற்றி எடுக்கும் போது குளியலறைக் கதவின் இறுகிக் கிடந்த தாழ் திறக்க முயற்சி செய்வதின்  ஓசை. எடுத்ததை அப்படியே போட்டு விட்டு திலீப் அசதியோடு நாற்காலியில் உட்கார்ந்தான். சந்தன சோப்பும் பூண்டும் மணக்க நடாஷா,  ஒரு டர்க்கி டவல் உடுத்து, மேலே சன்னமான துண்டு போர்த்தி, குளியலறைக்கு உள்ளே இருந்தபடிக்கு அவனைக் கை சுண்டி அழைத்தாள்.

 

என்னடி ஆம்பளைப் பிசாசே?

 

அவன் தமிழில் கேட்டதால் தப்பித்தான். தரையில் கிடக்கும் மார்க் கச்சையை எடுத்துக் கொண்டு வந்து தரும்படி கேட்டாள் நடாஷா. அப்படியே கட்டிலில் கிடக்கும் உள்ளாடையும் வேணுமாம்.

 

வெட்கமே இல்லியாடி முண்டே?

 

திலீப் சற்றே கை நடுங்க அந்த உடுப்புகளை எடுக்கும்போது திரும்ப உடலில் கிளர்ச்சியும் அகல்யா நினைப்பும் பரவியது.  கல்யாணம் முடிந்து ரெண்டே நாள் அவளோடு சுகித்திருந்தபோது கிளர்ந்தெழுந்து, அவள் தேகம் வியர்ப்பில் துப்பிக் கிறுகிறுக்க வைத்த கறிவேப்பிலை மணமும்.

 

குளிரக் குளிர நின்ற நடாஷா இரண்டு துணியையும் வாங்கிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

 

என்ன யோசனை?

 

அவன் சொல்லி முடிப்பதற்குள் சிரித்தபடி குளியலறைக் கதவு அடைத்துத் திரும்ப உள்ளே போனாள். அவனுக்கு வேண்டித்தான் இருந்தது.

 

அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது மழை சிறிதும் இல்லாத, சூரியன் மித வெப்பமாகப் படியும் காலை ஒன்பது மணி. நாலு வழி சந்திப்பில் பஸ்ஸும், லாரியும், ஒன்றிரண்டு கார்களும், ரிக்‌ஷா வண்டிகளும் இடத்தை அடைக்க, போக வழி தெரியாமல் நின்றான் திலீப்.

 

அவனை கிட்டத்தட்ட பாதுகாப்பாக நெருக்கி அணைத்துக் குழந்தை போல செலுத்திக் கொண்டு திடமாக அடியெடுத்து வைத்துப் போனாள் நடாஷா.

 

எரணாகுளம் லோக்கல் வரும் நேரம். ரயிலிலேயே போகலாமா?

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2024 16:42

June 19, 2024

ஃபூக்கோவின் ஊஞ்சல் சொல்லிய புதுக் கதைகள்

வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி இங்கே

போ வரேன்.

 

அவள் அலமாரிப் பக்கம் நடந்தாள். அங்கே பெட்டியில் இருந்து எடுத்ததை அவன் பார்க்க, வெட்கத்தோடு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் கொச்சு தெரிசா.

 

நல்லதாப் போச்சு என்று மட்டும் சொன்னான் சங்கரன்.  முசாபர் கொண்டு வந்திருந்த ஆணுறைகளில் மிச்சம் இருந்தவை அவை.

 

மழை ஈரமும் இருட்டும் நிலையாகத் தங்கி இருந்த அறையில் கொச்சு தெரிசாவின் கண்ணுக்குள் விரிந்த பழைய வீட்டை அடையாளம் காண அவள் சிரமப்படவில்லை. அரசூரில் அவள் பார்த்தது. பூட்டி வைத்திருந்தது. உள்ளே வாசல் திண்ணையில் ஒரு கிழவி உட்கார்ந்து கனாக் கண்டேன் கனாக் கண்டேன் என்று பாடிக் கொண்டிருந்த வீடு. அது சங்கரனின் வீடு என்று தெரியும் அவளுக்கு.

 

கட்டிலில் அவளோடு அடுத்திருந்த சங்கரன் பார்வை அவனும் அங்கே இருப்பதைச் சொன்னது. இரண்டு பேரும் வாசலில் நிற்கத் திறந்து கொள்ளும் பூட்டுகள்.  உள்ளே நுழைகிறார்கள். உள்ளே புழுதி நெடியும் பறந்து தாழ இறங்குவது போல் போக்குக் காட்டி மேலே உயரும் வௌவால்களின் துர்க்கந்தமும் மூக்கில் பட, கொச்சு தெரிசா நடுநடுங்கி அவன் தோளைப் பற்றி இறுக்கிக் கொள்கிறாள். க்ரீச் என்று ஒலியெழுப்பி வீட்டுக் கூடத்தில் ஊஞ்சல் மெதுவாக மழைக் காற்றில் அசைகிறது. சங்கரன் கருத்துச் செழித்த தாடியும், பிடரிக்கு வழிந்து குடுமி கட்டிய தலையுமாக ஊஞ்சலில் இருந்தபடி கொச்சு தெரிசாவைத் தன்னருகில் இழுக்கிறான். அவள் தரைக்கு மேலே சற்றே உயர்ந்து பறந்து ஊஞ்சலைச் சுற்றி வர, பின்னாலேயே அவள் இடுப்பில் கை வைத்து அணைத்தபடி மறுபடி இழுக்கிறான் சங்கரன்.

 

குருக்கள் பொண்ணே, வாடி. வார்த்தை சொல்லிண்டிருப்போம்.

 

நீ எனக்கு நாலு தலைமுறை இளையவண்டா அயோக்கியா. ஏன் இப்படி அலைக்கழிக்கறே அறியாப் பொண்ணை? இதெல்லாம் போதும், ஆமா சொல்லிட்டேன். வேணாம். முடியலே. சொன்னாக் கேளு.  போதும். வேணாம். ஏய்.

 

கொச்சு தெரிசா வேறு யாரோவாக அவளுக்குப் பரிச்சயம் இல்லாத மொழியில் லகரி கொண்டு பிதற்றி மோகம் தலைக்கேறச் சிரிக்கிறாள்.

 

படுடீ.

 

மாட்டேன் போடா, சாமிநாதா.

 

வா

 

சாமா, என்னை விட்டுடு. நான் இனி வரலே.

 

ஏண்டி மாட்டேங்கறே? இனிமேல் கூப்பிடலே, இப்போ வா. செல்லமில்லையோ.

 

மாட்டேன் போடா, நூறு வருஷம் உனக்கு மூத்தவ நான். ஆவி வேறே.  உனக்கு உடம்பு இருக்கு. எனக்கு?

 

திரும்பவும் யாரோ பேச வேண்டியதை, பேசியதை கொச்சு தெரிசா பேசுகிறாள். யார் கேள்வியையோ அவள் கேட்கிறாள். யாரிடமோ.

 

உடம்பா? இதோ பாரு, இது மட்டும் நான். இதோ, இது மட்டும் நீ.

 

சாமிநாதன், சாமா என்று கொச்சு தெரிசா அழைத்த சங்கரன் விரல் சுண்டிக் காட்டுவது அவளை நாணம் கொள்ளச் செய்கிறது. பார்க்க மாட்டேன் என்று கண்ணை இறுக மூடி இருக்க சாமிநாதன் தெரசாவாகவும்,  ஆவி ரூபத்தில் வந்த பெண் சங்கரனாகவும் மாறும் கணங்களில் இருவரும் கலந்து கரையத் தொடங்குகிறார்கள்.

 

மழைச் சாரலின் ஈரம் நனைந்த தலையணைகளும், இரண்டு நாளாக மாற்றப்படாத மெத்தை விரிப்புகளும், சதா காற்றில் அடித்துத் திறந்து கொள்ளும் கழிப்பறையிலிருந்து புறப்பட்டு எங்கும் சூழ்ந்திருக்கும் மெல்லிய பினாயில் வாடையும் அடர்ந்த சூழலில் அவர்கள் முயங்கிக் கிடந்தார்கள்.

 

கதை என்றாலும் கைகொட்டி நகைத்து, இப்படியும் நடக்குமா என்று எக்காளம் மேலேறிச் சிரிக்க வைக்கும் சூழல் மெய்ம்மைப்பட, இரண்டே நாள் இடைகலந்து பழகிய இருவர் காலமெல்லாம் பிணைந்து கிடந்தது போல் கலவி செய்தார்கள்.

 

நேற்றைய நினைவுகளைக் காலம் உள்வளைந்து உருப் பெருக்கி நீட்டிய வெளியில் நாளையும் மறுநாளும் இனி எப்போதும் இது மட்டுமே நிலைக்கும் எனும் நிச்சயம் மேலிழைந்து இறுகப் போர்த்த, வியர்த்து உறவு கொண்டார்கள்.

 

 

இந்தக் கணத்தை இறுகப் பிடித்து நிறுத்தும் முயற்சியில் சங்கரன் தோற்றான். கொச்சு தெரிசாவின் கால் விரல் நகங்கள் கோடு கிழித்த விலாவில் இனிய வலி மூண்டது. காமம் உயிர்த்து, இணையைத் தேடியடைந்த விலங்காக, பறவையாக, இழிந்து சுவரில் ஊறும் நத்தையாக ஒருமித்துச் சுருண்டு ஒன்றிப் புணர்தலே  இயக்கம், போகமே மூச்சு எனச் செயல்பட்டான் அவன்.  சங்கரனை இறுக அணைத்துக் கிடந்த கொச்சு தெரிசா அழத் தொடங்கினாள். அவளால் அப்படித்தான் மடையுடைத்துப் பெருகிய உணர்வு நதியோடு போக இயலும்.

 

பற்றிப் படர்ந்து மேலெழும் எல்லாப் புனைவுக்கும் தோற்றங்களுக்கும் சாட்சியாக அந்த ஊஞ்சல் அசைந்தபடி இருக்கிறது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 19, 2024 16:30

June 15, 2024

என் புனைவிலக்கியம் ஓரிடத்தில்

நான் எழுதியிருக்கும் புனைவிலக்கியம் கிட்டத்தட்ட முழுமையாகத் தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது.ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடுகள் இவை.1) மூன்று விரல் – நாவல்2) அரசூர் வம்சம் – நாவல்3) விஸ்வரூபம் – நாவல்4) அச்சுதம் கேசவம் – நாவல்5) வாழ்ந்து போதிரே – நாவல்6) 40, ரெட்டைத் தெரு7) தியூப்ளே நாவல்8) 1975] நாவல்9)பீரங்கிப் பாடல்கள் ( மலையாளத்தில் இருந்து கல்ட் க்ளாசிக் மொழிபெயர்ப்பு-லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்)10) ராமோஜியம் – நாவல்11) மிளகு – பெருநாவல்12) சஞ்சீவனி நாவல்13) இரா.முருகன் கதைகள்14) இரா.முருகன் குறுநாவல்கள்15) மயில் மார்க் குடைகள் – மற்ற சிறுகதைத் தொகுப்பு16) Ghosts of Arasur -Novel Arasur translation
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2024 23:21

June 13, 2024

பயணம் முடிந்து திரும்புவதற்குள் அடுத்தது தொடங்கியது

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி

 

இங்கிலாந்தில் இருந்து வந்திருப்பதால் தூதரகம் அனுமதிக்காமல் எங்கும் கையெழுத்திடத் தனக்கு இயலாது என்று கொச்சு தெரிசா சொன்னதும் உடனே சரியென்று பின்வாங்கி அவர்கள் போனார்கள்.

 

ஏனோதானோ என்று ஆக்கி வைத்த ஊண் அது. பரிமாறவும் மிகச் சாவதானமாகவே வந்தார்கள். கடனே என்று இலையில் வட்டித்த சோறு சரியாக வேகாததால் காய்கறிகளை புளிக்காடியில் அமிழ்த்தி மெல்ல வேண்டிய கட்டாயம். எதிரும் புதிருமாக் உட்கார்ந்து ஒருவர் கண்ணில் மற்றவர் ஆழ்ந்து நோக்கியபடியான பேச்சு மும்முரத்தில் உணவும் பானமும் கவனத்தில் கொள்ளப்படாமல் நழுவிப் போக, அவர்களின் முணுமுணுத்த குரலும் அடிக்கடி எழும் சிரிப்பும் அந்த அறையில் சுற்றி வந்து கொண்டிருந்தது.

 

சங்கரன் முசாபர் அலியையும், மெட்காஃபையும் அவனுடைய விநோதமான காரையும்  பரிச்சயம் செய்து கொண்டபோது, கார்ட்டூன் சித்திரங்களாக கொச்சு தெரிசா வசந்தியையும், பகவதிப் பாட்டியையும், பகவதிக் குட்டியையும், பிடார் ஜெயம்மாவையும் அறிமுகப் படுத்திக் கொண்ட பகல் உணவு நேரம் அது.

 

கொச்சு தெரிசா இனி என்றும் பிரிட்டன் திரும்பிப் போகும் உத்தேசத்தில் தான் இல்லை என்றாள்.  இந்த மண்ணுக்குத் தன்னை இழுத்த சக்தி, காலச் சக்கரத்தின் சுழற்சியில், புறப்பட்ட இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்க உத்தேசித்திருக்கிறது என்று அவள் நம்பத் தொடங்கி இருந்தாள் என்பது சங்கரனுக்கு வியப்பான செய்தியாக இருந்தது. அன்று புறப்பட்டவள் அவள் இல்லை தான். இன்று திரும்புகிறவளும் அவள் இல்லை என்று மனதில் படுவதாகச் சிரித்தபடி விளக்கினாள் கொச்சு தெரிசா.

 

தேடி வந்து யார்க்‌ஷயர் பகுதி கால்டர்டேலுக்கு வந்து அவள் வீட்டு முகப்பில் ஆடிய மயிலும், சாவக்காட்டு வயசனின் பாழடைந்த வீட்டில் கட்டி இருந்த பசுவும், ராத்தூக்கத்தில் இருந்து எழுப்பி அவளையும் கலந்து கொள்ளச் சொல்லிக் கேட்ட  மூங்கில் குரிசு ஊர்வலமும், அச்சில் கொண்டு வர வேண்டிய வலிய முத்தச்சன் ஆன ஜான் கிட்டாவய்யனின் கீர்த்தனங்களும், இந்த ஊர் அம்பலக் குளக்கரை மனதில் நிறைந்து கவிந்து சதா நீர்வாடை மூக்கில் படுவதும் இன்னும் எதெல்லாமோ அவளை இங்கேயே இருக்கும்படி  வேண்டியும் கட்டாயப்படுத்தியும் மன்றாடியும் கேட்டுக் கொண்டிருப்பவை.  அது கொச்சு தெரிசாவுக்கு அர்த்தமாகும்.

 

இங்கே இருக்கச் செலவுக்குத் தாராளமாகத் தன்னிடம் பணம் இருக்கிறது என்றாள் கொச்சு தெரிசா. தேவை என்றால் கால்டர்டெல்லில் மீனும்-வறுவலும் விற்கும் கடையையும் அங்கே ரெண்டு தலைமுறையாக இருக்கும் வீட்டையும் விற்றுப் பணம் அனுப்ப முசாபர் வழி செய்வான். சில லட்சங்கள் இந்திய ரூபாயில் அது இருக்கும். இங்கே பெரிய பங்களா, அம்பாசிடர் கார் என்று சொகுசாக நாலு தலைமுறை உட்கார்ந்து சாப்பிட அது வழி செய்யும். சிக்கனமாகச் செலவழித்தால், அதற்கு மேலும் நீடிக்கும்.

 

இந்தத் தீர்மானம் எல்லாம் தன்னைத் தெரிசா சந்திக்கும் முன்னே எடுத்திருந்தாள் என்பதில் சங்கரனுக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. அவள் பயணப்பட்ட பாதை தன் வழியில் இணைவது தவிர்க்க முடியாதது என்றாகி இருந்தது அவனுக்கு வியப்பையும் சற்று பயத்தையும் உண்டாக்கியது.

 

கொச்சு தெரிசா அரசூர் போயிருக்கிறாள்.  சின்னச் சங்கரனின் பூர்வீக வீட்டை வாசலில் இருந்து பார்த்திருக்கிறாள். உள்ளே வரச் சொல்லி யாரோ முது பெண் தன்னை அழைத்ததாக நம்புகிறாள். சங்கரனின் ஆருயிர் நண்பன் தியாகராஜ சாஸ்திரி தன்னிச்சையாக அரசூரில் கொச்சு தெரிசாவுக்கு எல்லா உதவியும் செய்திருக்கிறார். அது மட்டுமில்லை, கொச்சு தெரிசாவின் மூத்த பாட்டன் எழுதிய கிறிஸ்துவ கீர்த்தனைகளைப் புத்தகமாகக் கொண்டு வரத் தகுந்தவர்களை மதுரையில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதெல்லாம் சங்கரன் செய்ய வேண்டிய காரியங்களாச்சே.

 

அரசூர் பற்றி மட்டுமில்லை, அம்பலப்புழையில் பரம்பரை வீட்டை வாங்கும்படியும் மேல்சாந்தியின் மனைவி கொச்சு தெரிசாவுக்குச் சொல்லியிருக்கிறாள்.  சங்கரனிடமும் வசந்தியிடமும் சொன்னது தான் அது. பகவதிக் குட்டி வழித் தோன்றலாகத் தன்னையும், பகவதியின் சகோதரன் ஜான் கிட்டாவய்யனின் பரம்பரையாக கொச்சு தெரிசாவையும் அடையாளம் கண்டவள் அவள்.  இன்னும் ஏதோ தன்னையும் கொச்சு தெரிசாவையும் ஒரு கோட்டில் இணைக்க உண்டு. அது என்ன?

 

என்ன பலமான யோசனை?

 

பகல் உணவு முடித்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது கொச்சு தெரிசா கேட்டாள்.

 

நாளை அரசூர் போகணும். அங்கேயிருந்து மதராஸ், பிறகு டெல்லி. வீடு. ஆபீஸ்.

 

சங்கரன் சொன்னபடி தன் அறைக்கு முன் நின்றான். ஒரு வினாடி அவனைப் பார்த்து விட்டு கொச்சு தெரிசா அடுத்த அறைக்கு நடந்தாள்.

 

இந்த உறவு பகல் சாப்பாட்டோடு முடிகிறது. இனியும் என்னைத் தொந்தரவு செய்யாதே என்று அவன் சொன்னதாக அவளுக்கு அர்த்தமாகியது.

 

அவள் நாளைக்கு இந்த அறையைக் காலி செய்ய வேண்டும். இந்த ஊரிலோ பக்கத்திலோ மாத வாடகைக்கு வீடு பார்க்க வேண்டும்.  மூத்த பாட்டனின் புத்தகம் தயாராகிக் கொண்டிருப்பதாக மதுரைத் தமிழ்ப் பண்டிதர் எழுதியிருந்தார். மதுரைக்கு ஒரு தடவை போய் வரணும். பரம்பரை வீட்டை வாங்க  முன்னேற்பாடாக அங்கே இயங்குகிற நாட்டுப்புறக் கலை ஆராய்ச்சி மையத்தை வெளியே அனுப்ப வேண்டும். நடக்கிற காரியமா அது?

 

அந்த வீட்டை வாங்க, மேல்சாந்தியின் மனைவி சொல்லியபடி நான்கு பேர் தயாராக இருக்கிறார்கள். அவளும், சங்கரனும் தவிர ரெண்டு பேர். முதலாவதாக, அங்கே மயிலாட்ட ஆபீஸ் வைத்திருக்கும் மினிஸ்டர் மனைவி சியாமளா. அடுத்து, நேற்று விழாவில் பேசிவிட்டுப் போன ஆப்பிரிக்க நாட்டுத் தூதர் வைத்தாஸ் ரெட்டி.  இரண்டு பேரிடமும் கொச்சு தெரிசா பேசிவிட்டாள். வைத்தாஸ் என்கிற நடு வயதை எட்டிய அந்த கனவான் கொச்சு தெரிசா அந்த வீட்டையோ, அம்பலப்புழையில் வேறு வீட்டையோ, இல்லை அந்த ஊர் முழுவதையுமோ வளைத்துப் பிடித்து வாங்குவதில் ஒரு ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்து விட்டார். நேற்றைக்குக் காலையில் அவரை இதே ஓட்டலில், கீழே முதல் மாடியில் இருந்த அறையில் ஐந்து நிமிடம் சந்தித்தபோது அவர் கொச்சு தெரிசாவுக்கு இப்படி கண்ணியமும் கருணையுமாக வழிவிட்டு விலகினார்.

 

ஆனால் சியாமளா கிருஷ்ணன் என்ற மினிஸ்டர் மனைவி அப்படியானவள் இல்லை. போன வாரம் மதராஸ் போகும் முன் போய்ச் சந்தித்தபோது, உன்னோடு பேசி வீணாக்க எனக்கு நேரமில்லை என்று துரத்திவிட்டாள்.  ஐரோப்பியச் சாயலில் ஆறடி உயரத்தில் அவள் எதிரே ஒரு இளம்பெண் உட்கார்ந்து திகைத்தபடி பார்க்க, சியாமளா இரக்கமே இல்லாமல் விரல் சுட்டி வாசலைக் காட்டி கொச்சு தெரிசாவை வெளியே அனுப்பினாள் அப்போது. இன்னும் அது மனதில் வலித்தாலும் மேல்சாந்தி மனைவி நல்வாக்கு சொன்னபடி நல்லதே நடக்கப் போகிறது என்று திடமாக நம்புகிறாள் கொச்சு தெரிசா.

 

சோழி உருட்டிப் பார்த்துத்தான் இப்படி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது என்று சொல்லியிருக்கிறாள் அந்த முதுபெண். அவள் இன்னொன்றும் சொன்னாள். அதுவும் நடக்கக் காத்திருக்கிறாள் கொச்சு தெரிசா.

 

அரையுறக்கத்தில் பொழுது நழுவ, கைக்கடியாரத்தில் மணி பார்த்தாள். பிற்பகல் ரெண்டே முக்கால் மணி. மழையில் வெளியேயும் போகமுடியாது. சும்மா நாற்காலி போட்டு உட்கார்ந்து சுவரைப் பார்த்தபடி இருக்கவும் முடியாது. சுகமாகப் படுத்து உறங்கினாலோ?

 

சுவருக்கு நடுவே மர பீரோவை அடுத்துத் திரை போட்டு வைத்திருந்த இடத்தில் பார்வை நிலைத்தது. அங்கே காற்றில் திரை விலக, மரக் கதவு தட்டுப்பட்டு திரும்பவும் அது திரை மறைவில் ஆனது.

 

இந்த அறை அடுத்த அறையோடு சேர்ந்த கூட்டு அறை என்ற accompanying room எகாம்பனியிங் ரூம் என்று அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது. குழந்தை குட்டியோடு வரும் பெரிய குடும்பங்களில் குழந்தைகளை இங்கேயும் அடுத்த அறையில் பெரியவர்களையும் தங்க வைத்துச் சிறியவர்கள் மேல் கவனமும் கட்டுப்பாடுமாக இருக்கவும் வழி செய்யும் இந்த மாதிரி அறைகள் இங்கிலாந்து தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதி என்றாலும் இங்கே அப்படி ஒரு அமைப்பைப் பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. குழந்தை தங்கும் அறையில் நான். அடுத்த அறையில் என்னைக் கண்காணிக்கும் பெரியவர்?

 

அந்தக் கதவைத் திறந்து பார்க்க, கட்டிலில் சிரசாசனம் செய்தபடி இருந்த சங்கரன் கண்ணில் பட்டான். முழங்கால் வரை வரும் உடுதுணியோடு, மேலே சட்டையில்லாமலும் மேல்கூரைக்குக் கால் உயர்த்தியும் நின்ற அவனைப் பார்த்ததும் சிரிப்பும் வெட்கமும் ஏற்படக் கதவை அவசரமாகத் திரும்ப அடைத்தாள் அவள்.

 

தாழ்ப்பாளைப் போடுவதற்குள் அந்தக் கதவு மறுபடி திறந்தது. சங்கரன் தான். கால்களுக்கு இடையே தார் பாய்ச்சி இறுகக் கட்டிய உடுப்பில் பதிந்த கண்ணை விலக்கி அவனைப் பார்த்துச் சிரிப்பில் என்ன விஷயம் என்று கேட்டாள் கொச்சு தெரிசா. அவன் இன்னும் நெருங்கி வந்து நின்றான். சங்கரன் மார்பிலிருந்து உருளும் வியர்வைத் துளியை விரல் மேல் வாங்கி உள்ளங்கையில் வைத்தபடி அவள் வசீகரமாகச் சிரித்தாள்.

 

கொச்சு தெரிசாவை அணைத்தபடி அங்கேயே நின்றான் சங்கரன். அவள் விலகினாள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2024 22:28

June 2, 2024

சோறு தின்ன முடியாமல் கையைப் பிடித்துக் கையெழுத்து வாங்கும் விசுவாசமான டவாலி சேவகர்கள்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – அடுத்த சிறு பகுதி

இதெல்லாம் சரிதானா? இல்லாவிட்டால் தான் என்ன? வசந்தி அவன் நினைப்பில் ஒரு வினாடி எழுந்து, அடர்ந்து நெய்த மழைத் திரிகளில் கரைந்து போனாள்.

 

சங்கரன் கொச்சு தெரிசாவை அணைத்துக் கொண்டான்.

 

காயலும் வானமும் நீர்த் திரையால் இணைய அடர்ந்த மேகங்கள் நின்று சுரக்க, மழை சீராகப் பெய்த வண்ணம் இருந்தது.

 

 

 

வாழ்ந்து போதீரே   அத்தியாயம் இருபத்தொன்பது     

          

எல்லாம், மழை வலுத்து வரும் காயலில் இருந்து படகு திரும்பத் துறைக்கு வந்ததோடு தொடங்கியது.

 

இருண்டு ஆர்பரிக்கும் கடல். அது தொட்டு விடும் தூரத்தில் என்றாலும் படகை எல்லாத் திசையிலும் சுழல வைக்கும் நீர்ப் பெருக்கும், மழையோடு கலந்த காற்றுப் பெருக்கும் கடலோடு செல்லாமல் திரும்பச் சொல்லி வற்புறுத்த, படகுத் துறைக்குத் திரும்பியபோது சங்கரனுக்கும் கொச்சு தெரிசாவுக்கும் பகல் நேர வயிற்றுப் பசியாக இந்தப் பொழுது தலையெடுத்தது.

 

புறப்பட்டுப் போன மற்றப் படகுகள் அருகே தீவில் ஒதுங்கியிருப்பதாகவும், அவை வந்து சேர மாலை ஐந்து ஆகி விடலாம் என்றும் படகுத்துறை ஊழியர் சங்கரனிடம் தகவல் தெரிவித்தார். பசி உச்சத்தில் அதைப் புறம் தள்ளினான் அவன்.

 

நாலு நாள் மாநாடு அமைச்சர் முடிவுரை நிகழ்த்தாவிட்டாலும் முடிந்துதான் போகும்.  ஆப்பிரிக்க நாட்டுத் தூதுவரும், இங்கிலீஷ் எழுத்தாளருமான வைத்தாஸ் இக்வனோ ரெட்டிக்கு யானைத் தந்தத்தில் செய்த கதகளி ஆட்டக் குழு ஆடி நிற்கும் சிற்பத்தை முதலமைச்சர் அன்பளித்து, மாலை அணிவித்து நாலு வார்த்தை உபசாரமாக மலையாளத்திலும் இங்கிலீஷிலும் சொல்லா விட்டால் என்ன? தூதருக்கு, அவர் இன்னும் இங்கே இருக்கும் பட்சத்தில் சிற்பத்தை ஓட்டல் அறையிலேயே மழைக்கு நடுவே கொடுத்து விடலாம்.  இன்று விடிகாலையில் அவர் திருவனந்தபுரம் போய் அங்கிருந்து இன்னேரம் தில்லி திரும்பியிருந்தால், சிறப்பு அலுவலர் மூலம் தில்லிக்குச் சிலையை அனுப்பலாம்.

 

தூதர் வைத்தாஸின் மனைவி அவருடைய நாட்டின் அதிபராம். அவளும் இங்கே வர வேண்டும் என நேற்றுக் காலை தில்லிக் காரியாலயத்தில் இருந்து இரைச்சலுக்கு நடுவே தேய்ந்து ஒலிக்கும் தொலைபேசி அழைப்பும், ஸ்டாப் என்று அங்கங்கே போட்டு பத்து வரியில் வந்த தந்தியும் சொன்னதாம்.  சங்கரன் தொழுது நிற்கும் அமைச்சர் அவனிடம் நேற்று விழாப் பந்தலில் விளக்கினார்.

 

அது மட்டுமில்லை, அந்த அமைச்சர், ஜரூராக இன்னொரு காரியமும் செய்திருந்தார்.

 

மலையாளக் கரை முழுக்க இப்போது மும்முரமாக மழை பெய்கிறது. அறிவிக்காமல் முன் கூட்டியே வந்த தென்மேற்குப் பருவ மழை இது. இன்னும் ஒரு மாதம் மழை நீடிக்கும். ஆப்பிரிக்க தூதர் வைத்தாஸ் ரெட்டி பங்கு பெறும் விழாவும் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இந்தச் சிறிய ஊருக்கு ஆப்பிரிக்கத் தலைவர் வந்தால் அந்த அம்மையாருக்குப் பாதுகாப்பு அளிப்பது சிரமமாக இருக்கும். இங்கே அவரைத் தங்க வைக்கவும் அவருடைய தகுதிக்குப் பொருத்தமான, நம் நட்பு நாட்டின் மிகச் சிறந்த விருந்தாளிகளுக்குத் தர வேண்டிய உபசரிப்பை அளிக்க இயலாமல் போகலாம். எனவே, அந்த மேன்மைக்குரிய அம்மையார் தில்லியில் இருப்பதே நல்லது. அவருடைய அன்புக் கணவர் தூதர் வைத்தாஸ், விழா இனிதே முடிந்து இன்று தில்லி வருவார்.

 

சங்கரன் கொச்சு தெரிசாவோடு ஓட்டலுக்குத் திரும்பிய போது அமைச்சர் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.  உற்சவத்தில் எழுந்தருளிய திருச்சூர் சிவபெருமான் வடக்கும்நாதனுக்குப் பிடித்த மாதிரி ஆகப் பெரிய வண்ணக் குடையோடு அவரை நடத்திப் போய்க் கொண்டிருந்தார்கள். செண்டை மேளம் மட்டும் இருந்தால், முன்னால் நிற்க யானையும் இருந்தால், உற்சவர் என்ன, கருவறைக் கடவுளாகவே ஆகியிருப்பார் உயரம் கூடிக் கருத்து மெலிந்த அந்த அமைச்சர்.

 

ஊருக்குப் போய்ட்டிருக்கேன். தொகுதியிலே ஒரு அவசர வேலை வந்திருக்கு.

 

அவர் பார்வை சங்கரனோடு நெருக்கமாக நகர்ந்து வந்த கொச்சு தெரிசாவின் மீது பதிந்தது. அடுத்த வினாடி சங்கரனைப் பார்த்துச் சிரிப்போடு கேட்டார் –

 

மேடம்  தங்கி இருக்க இடம் கிடைச்சுதா? புகார் எதுவும் இப்போ இல்லையே?

 

அந்தச் சிரிப்பு வேறே மாதிரி சங்கரனுக்கு அர்த்தம் சொன்னது. போகிறது, நல்ல மனுஷர். கூட ஒரு அழகான பெண் இருந்தால்  பார்த்தவர்களுக்கு எப்படி எல்லாமோ பேசத் தோன்றும்.  அதுவும், பூசியது போல் வனப்பாக சற்றே உடல் பெருத்த, மேற்கத்திய உடை அணிந்த, கருவிழிகள் கொண்ட கறுத்த பெண். நல்ல குரலில் அழகாக இங்க்லீஷ் பேசுகிறாள். விந்திய மலைச்சாரலுக்குத் தெற்கே அழகு இதுதான்.

 

அமைச்சர் பொறாமைப் பட்டாலும் சரி, இன்றைக்கு சங்கரனின் நாள். தில்லியில் அவரைப் பார்க்கும் போது இதையெல்லாம் மறந்து போகட்டும்.

 

நீங்களும் வர்றீங்களா?  கார்லேயே மதுரை போகிறோம். உங்க ஊர் கூட அங்கே தானே.

 

இல்லே சார், நான் இப்படியே தில்லிக்குப் போய்க்கறேன். வீட்டிலேயும் ஆபிசிலும் முடிக்க வேண்டிய வேலை ஒருபாடு இருக்கு.

 

அது என்ன ஒருபாடு? மலையாள பூமி உங்களையும் மாத்திடுச்சா?

 

இக்கு வைத்து மறுபடி பேசியபடி அமைச்சர் புறப்பட்டுப் போக கொச்சு தெரிசாவோடு பகல் உணவுக்காகப் போனான் சங்கரன்.

 

பெருமழை, புயல் சின்னம், சூறாவளி சுழன்றடிக்க வாய்ப்பு என்ற காரணங்களைச் சுட்டிக் காட்டி நாட்டுப்புறக் கலை விழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கும் சுற்றறிக்கையை டவாலி அணிந்த சேவகர்கள், எதிர்ப்பட்டவர்கள்  அனைவருக்கும் காட்டிக் கையொப்பம் வாங்கிக் கொண்டு போனார்கள்.

 

சோற்றைப் பிசைந்து சாப்பிட இருந்த நிலையில் சங்கரனும் அவர்களால் கையெழுத்து இடும்படி கோரப்பட்டான். கொச்சு தெரிசா சார்பிலும் கணவர் என்று எழுதிக் கையொப்பமிடச் சொல்லிக் கேட்டார்கள்.  கையில் எடுத்த முள்கரண்டியும் கத்தியுமாகச் சாப்பிட உட்கார்ந்த அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

 

June 2 2024

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2024 03:12

May 30, 2024

காயலில் பறந்த ஒற்றைப் பட்சியோடு காதலும் சூழ்ந்த தருணம்

வாழ்ந்து போதீரே -நான்கு நாவல் அரசூர் தொகுப்பில் நான்காம் நாவலிலிருந்து அடுத்த ஒன்று\

 

 

 

 

 

அவன் சொல்லிப் பதினைந்து நிமிடம் சென்று அழகான நெட்டி, மற்றும் சன்னமான மர வேலைப்பாட்டோடு ஒரு படகு வீடு கம்பீரமாக மிதந்து வந்து படகுத் துறைப் பலகைக்கு அடுத்து நின்றது.

 

ஏறிக் கொண்டார்கள். அடுத்த மழை ஆர்ப்பாட்டமாக நானும் வருகிறேன் என்று சேர்ந்து கொண்டது.

 

படகு புறப்பட்டபோது படகுக்காரன் சங்கரனையும் கொச்சு தெரிசாவையும், கூரை இறக்கி வேய்ந்த படகின் அமரத்தில் இட்டு வைத்திருந்த நாற்காலிகளில் ஓய்வாக உட்காரச் சொன்னான்.

 

மழை அடர்ந்த காயலையும், காயல் நிறம் பகர்த்திய மழையையும் எந்தக் குறுக்கீடும் இன்றி பார்த்துக் கொண்டே பொழுதைக் கரைக்க அந்தப் படகு முனை தவிர வேறே இடம் இருக்க முடியாது.

 

இந்த நாள், இந்த நிமிடம், இந்த நொடி ஏற்கனவே நிச்சயப்படுத்தியபடி உருவாகிக் கடந்து போகிறது.

 

கொச்சு தெரிசா தனக்குள் சொல்லிக் கொண்டாள். யார் நிச்சயித்தபடி என்று தெரியாது. கயிற்றில் ஆடும் தோல்பொம்மைகளாக இயங்குவது தவிர அவளுக்கும் சின்னச் சங்கரனுக்கும் இப்போது வேறே காரியம் ஏதும் இல்லை.

 

அவள் மனதை எதிரொலிப்பது போல் பார்த்த சங்கரன் அவள் அருகே நெருங்கி அமர்ந்து கையைப் பற்றிக் கொண்டான். அவனுடைய வெப்ப மூச்சு அவளுக்குப் பரிச்சயமாகி இருந்தது.

 

இதெல்லாம் சரிதானா? இல்லாவிட்டால் தான் என்ன? கொச்சு தெரிசா சங்கரனையே பார்த்தபடி இருந்தாள். முசாபர் ஒரு வினாடி அவள் நினைப்பில் எழுந்து காயல் அலைகளில் கலந்து காணாமல் போனான்.

 

காயல்லே மழை காலத்தில் படகு விட்டுப் போகிறது பற்றி எங்க தீபஜோதிப் பாட்டி சொல்லியிருக்காங்க.

 

அவள் உற்சாகமாகச் சொன்னாள்.  சங்கரன் அவளையே பார்த்தபடி இருந்தான். நீர்த் தாவரம் எதுவோ படகோடு வருவதைப் பார்த்து விட்டு மறுபடியும் தலை உயர்த்தினாள் கொச்சு தெரிசா.

 

தீபஜோதி பாட்டித் தள்ளை, எங்க கிரான்மா. இவங்க தான்.

 

ஃபேம்லி ட்ரீ படத்தைக் கைப்பையில் இருந்து எடுத்து அவன் விரல்களோடு பிணைந்திருந்த தன் கை கொண்டு படத்தில் சுட்டினாள் கொச்சு தெரிசா. அந்த எழுத்துகளில் தோல் சுருங்கி மூத்த தீபஜோதியைக் கண்டிருந்தாள் அவள்.

 

பாட்டித் தள்ளை அவங்க அப்பா கண்ணூர் புரபசர் வேதையன், அம்மா பரிபூரணத்தம்மா, வீட்டிலேயே இருந்த உறவுக்காரர் துர்க்கா பட்டன் அம்மாவன். தீபஜோதி முத்தச்சி எல்லோரையும் பற்றி நிறையச் சொல்லி இருக்கா. அந்தப் பழைய வீடு பற்றியும்.

 

அவளுக்கு பாட்டியின் வார்த்தைகள் முழுக்க நினைவு இருந்தன. அந்த மொழியும் இப்போது சட்டென்று மனதிற்குள் திரும்ப வந்திருந்தது.

 

அவள் குழந்தை தீபஜோதியானாள். சங்கரனின் தோளில் தலை சாய்த்து, மழை ஆதரவாகத் தாளம் கொட்டச் சொல்லத் தொடங்கினாள் –

 

ரெண்டு பக்கமும் காய்த்துக் குலை தள்ளி இருந்த வாழை மரங்களுக்கு நடுவே துர்க்கா பட்டன் தவழ்ந்து கொண்டிருந்தான்.

 

ஆன, ஆன, கொம்பன் ஆன. வேகம் போ ஆன. திருசூர் பூரம் போ ஆன.

 

இது பேசுகிற ஆனை. குழந்தை கூடச் சேர்ந்து கொம்மாளி கொட்டிச் சிரிக்கிற ஆனை.

 

வேதையனின் பெண் குழந்தை தீபஜோதி அவன் முதுகில் உட்கார்ந்து பூக்குடலையைக் கவிழ்த்த மாதிரிச் சிரித்தது. அவன் வயிற்றில் சின்னக் காலால் மிதித்தது. ஆனையைத் தோட்டத்து வடக்கு மதில் சுவர் பக்கம் நகர்ந்து போகும்படி அடம் பிடித்துக் கொண்டிருந்தது அது.

 

வேதையன் வீட்டுத் தோட்டத்தில் வாழை மரங்களின் வரிசை முடிந்து இனி தென்னை, பலா, மா அப்புறம் பூச்செடிகள். ஆனை போக முடியாத ஒற்றையடிப் பாதையை அடுத்து சின்ன வாய்க்காலாக கிணற்றுத் தண்ணீர் பொசிந்து கொண்டிருந்தது. கடைகால் கடைகாலாக கிணற்றில் இருந்து நீர் சேந்தி அந்தச் சாலில் செலுத்திய படிக்கு வீட்டுப் பணிக்காரன் ஒருத்தன் தோட்ட வேலையில் கருத்தும் காரியமுமாக இருந்தான்.

 

பட்டரே, குஞ்ஞம்மையைக் குப்புறத் தள்ளிடாதேயும். தென்னை நட வெட்டி வச்ச குழி உண்டு அங்கே. பின்னே நீரும் கூடி அதிலே விழுந்து வைக்கப் போறீர். கண்ணு தொறந்து ஆனை நடக்கட்டும்.

 

பணிக்காரன் தண்ணீர் இறைப்பதை நிறுத்திச் சொன்னான். பட்டன் முதுகில் உட்கார்ந்து ஆனையை முன்னால் செலுத்திக் கொண்டிருந்த மூணு வயசுப் பெண் குழந்தை தீப ஜோதி மழலையில் அவனை அதட்டியது.

 

சும்மா போ தோமச்சா.

 

எண்டெ பொன்னு குஞ்ஞம்மே. தோமச்சன் சும்மாவும் போகும். சுகமாயிட்டு பாரம் சுமந்தும் போகும். விதிச்சது தீர்ந்தால் பின்னே குரிசுப்பள்ளி உண்டல்லே கிடக்க.

 

அவன் முடிப்பதற்குள் துர்க்கா பட்டன் குழந்தையை லாகவமாக இடுப்பில் இருந்து இறக்கி தோளில் சுமந்தபடி எழுந்து நின்றான்.

 

தோமச்சா. குஞ்ஞுக் குட்டியோடு சம்சாரிக்க வேறே விஷயம் ஒண்ணும் கெடக்கலியா உனக்கு?

 

அவன் குழந்தை நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைக் கீற்றைத் தன் மேல் முண்டால் பதமாகத் துடைத்தான். குழந்தை நெற்றியில் மெலிசாக முத்தம் இட்டபோது அது அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு திரும்ப கூச்சலிட்டது.

 

அம்மாவா, ஆன, ஆன.

 

அம்மாவனு வல்லாத்த ஷீணம் குஞ்ஞே. ஒரு கவளம் சோறு கழிச்சு வந்நு ஆனக் கொம்பன்  திருச்சூர் பூரம் காணான் இறங்கும். சரியா.

 

ஞானும் வயும்.  மன்னி, பூயம். பூயம்.

 

குழந்தை ஓட்ட ஓட்டமாக அம்மாவிடம் அனுமதி வாங்க ஓடியது.

 

கொச்சு தெரிசா பூயம் என்றாள். அவள் பிடரியில் முகம் புதைத்து முத்தியபடி சங்கரன் பூரம் என்றான்.

 

கொச்சு தெரிசாவின் வரியோடிய உதடுகளைத் தன் இதழ் கொண்டு மூடித் திறந்தான்.

 

அவளுடைய நாவைப் பரிசித்துச் சொன்னான் –

 

நமுக்கு பூரம் காணான் பூவாம்.

 

அவளுக்குள் இருந்து எழுந்து வாயின் மேலன்னத்தில் மோதி எதிரொலித்து வந்த குரலாக இருந்தது அது. கொச்சு தெரிசா உடல் சிலிர்க்க முதுகு குறுக்கி அவனோடு ஒட்டிக் கொண்டாள்.

 

இதெல்லாம் சரிதானா? சரியில்லை என்றால் என்ன போச்சு? புண்ணியம், பாவம், நல்லது, கெட்டது கூட்டிக் கழித்து யாரிடமும் கணக்கு ஒப்பிக்க வேண்டியதில்லை.

 

அவள் அந்தக் கணத்தில் கரைந்தாள்.

 

படகுக் காரன் சாயாக் கோப்பைகளை முக்காலியில் வைத்துவிட்டு ஒன்றும் பார்க்காத, எதையும் கேளாத பாவனையில் உள்ளே போனான்.

 

கண்ணூர் வீட்டுக்கு நான் போயிருக்கேன்.

 

சங்கரன் சொன்னான்.

 

மாமா படிச்சிட்டிருக்கார். முன்வசம் போகாதேன்னு ஒரு ஸ்தூல சரீரப் பெண், சொல்றது நினைவு வருது. அவளை வல்யம்மாவின்னு கூப்பிடுவோம்.

 

கொச்சு தெரிசாவின் உதடுகளில் திரும்ப முத்தமிட்டுச் சொன்னான் சின்னச் சங்கரன்.

 

 

 

 

 

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2024 04:52

May 25, 2024

யந்திரம் என்ன ஆச்சு தெரியலியே என்றபடி ஜோசியர் காலத்துக்குள் ஓடினார்

வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி

கொச்சு தெரிசா மேல் இருந்து வந்த மெல்லிய யுதிகோலன் வாடை சங்கரனுக்குப் பிடித்திருந்தது. இங்கிலாந்தில் மீன் பஜ்ஜி விற்கிற பெண். அழகானவள். அவனுக்கு உறவு வேறு. அவனை ஈர்க்கிறவள். அவனால் ஈர்க்கப்படுகிறவள்.  தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட மோகம் அது. தானே வந்து கவிவது. பற்றிப் பிடிக்கக் காத்திருந்த மாதிரி மழை நாளில் மேலோங்கி எழுகிறது. அவனுக்கு வேண்டியிருக்கிறது. அவளுக்கும்.

 

இங்கே இருந்து, கடலோரமாகப் படகில் போகலாம் என்று சொன்னார்களே. யாரையும் காணோமே.

 

கொச்சு தெரிசா விசாரிக்க, சங்கரன் சிரித்தான். உறங்கிக் கிடந்த போது எல்லோரும் எழுந்து, குளித்துப் பசியாறிப் படகுத் துறைக்குப் போயாகி விட்டது. திரும்பப் படகு வந்து அழைத்துப் போகாது.

 

படகு இங்கே வராவிட்டால், நாம் அதைத் தேடிப் போனால் என்ன?

 

தீர்வு கண்ட நிம்மதியோடு கொச்சு தெரிசா சங்கரனிடம் கேட்டாள்.

 

இங்கே சும்மா மோட்டுவளையையும், மழையையும் பார்த்துக் கொண்டு இருப்பதைவிடப் படகு தேடிப் போவது சுவாரசியமானதாகவே இருக்கும் என்று சங்கரனுக்குப் பட்டது. ஆயுசில் எத்தனை தடவை இப்படிப் படகையும் ஓடத்தையும் தேடி, ஓர் அழகான கருத்த பெண் கூட வர நடக்கக் கொடுத்து வைத்திருக்கிறது?

 

வரு பூவாம் என்றான் சுமாரான மலையாளத்தில். அவளை மரியாதை விலக்கி  உரிமையோடு ஒருமையில் விளித்து, அதைச் சந்தோஷமாகத் தெரியப்படுத்திச் செயல்படுவது இந்த வினாடியில் அவனுக்கு உகந்த செயலாக  இருந்தது.

 

கோவிலைக் கடந்து கொஞ்ச தூரம் போனால் படகுத்துறை வரும் என்று யாரோ எப்போதோ சொன்னது சங்கரன் நினைவில் உண்டு. அது கொஞ்ச தூரமாக இல்லாவிட்டாலும் சரிதான். இவளோடு நடக்கவும், பேசவும் நேரம் கிடைக்கிறதே.

 

தூறல் சிறுமழையாக அடர்ந்து கொண்டு வந்தது. கொச்சு தெரிசா கையில் எடுத்து வந்திருந்த பூப்போட்ட குடையை விரித்தாள். சங்கரன் குடைக் கம்பி மேலே படாமல் விலகி நடக்க, மழை இன்னும் வலுத்தது.

 

கொச்சு தெரிசா குடையை சங்கரனிடம் கொடுத்து விட்டு அவனுக்கு இன்னும் அருகில், குடைக்குக் கீழ் நடக்கத் தொடங்கினாள். சங்கரனுக்கு இது போதும் இப்போது.

 

போட் ஜெட்டி என்று இங்கிலீஷிலும், கீழே படி பொண்டன் என்று பிரஞ்சிலும் அதன் கீழ் மலையாளத்திலும் எழுதிய பலகை வைத்த இடம். வலது புறம் காட்டும் கை இங்கிலீஷிலும், இடது வசம் சுட்டும் கை பிரஞ்சிலும் வரைந்திருந்தது. மலையாளத்தில் கைக்கு இடமில்லை.

 

இங்கிலீஷோடு போவோம் என்று கொச்சு தெரிசாவிடம் சொன்னான் சங்கரன்.  அவன் நினைத்தபடி அந்தப் பாதை காயலோரமாக, படகுத் துறையில் முடிந்தது.

 

எல்லாப் படகும் காயலோடு போயிருக்க, வெறுமையாகக் கிடந்த துறையில் சங்கரனும் கொச்சு தெரிசாவும் நின்றபோது மழை விடை பெற்றுப் போயிருந்தது. படகுத் துறைக்காரன் இவர்களைப் பார்த்து நின்றான்.

 

சங்கணாச்சேரி படகுக்கு வந்தீங்களா?

 

மரியாதை விலகாமல் சங்கரனைக் கேட்க அவன் இல்லை என்றான்.

 

காயலில் கொஞ்ச நேரம் போய் விட்டு வரலாம்னு நினைச்சேன்.

 

அதுக்கென்ன? போகலாமே என்று படகுத்துறைக்காரன் சிரித்தான்.

 

போகலாம்னா, தண்ணீரிலே நடந்தா போகணும்?

 

கொச்சு தெரிசா கற்றுக் கொண்டிருந்த மலையாளத்தில் கேட்க, அதெதுக்கு என்றான் படகுத்துறைக்காரன்.

 

வர்க்கீஸேட்டன் படகு வர ரெடியா இருக்கு. இன்னிக்கு காயல்லே போக வேணாம்னு காலையிலே சொன்னான். ஒரு மணி நேரத்துலே முடிவை மாத்திக்கிட்டான்.  குடிக்க காசு குறையுதாம். வாங்க. புண்ணியமாகும்.

 

பெருக்கெடுத்து ஓடும் காயலின் கரையில் நின்று அவன் குரல் கொடுத்தான். கூவென்று கூவும் குரலாக வர்க்கியேட்டனுக்குப் போகும் அழைப்பு. கொதும்பு வள்ளம் என்ற சிறு ஓடமும், சரக்கு கொண்டு போகும் படகு ஓட்டுகிறவனும், வலை காயப் போட்ட மீனவனும் ஏற்று வாங்கி எதிரொலிக்க, அது நாலைந்து முறை துறை முழுக்க எதிரொலித்துக் கடந்தது.

 

அப்புறம் குருவி சலசலக்கும் ஓசையும் மரங்கொத்தியின் இடைவிடாத கூச்சலும் ஒலிக்க, அவற்றோடு சேர்ந்து தொலைவில் இருந்து தேய்ந்து ஒலிக்கும் குரல் ஒன்று.

 

வரும் ஒலியை மகிழ்ச்சியோடு செவிகொடுத்தவன் தலையசைத்துச் சொன்னான் –

 

வந்துக்கிட்டிருக்கான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2024 20:11

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.