இரா. முருகன்'s Blog, page 13
May 9, 2024
அதென்ன பரிபாடி? கூட்டமாகச் சேர்ந்து பாடுவதா?
வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி
ரொம்ப மழை எல்லாம் இல்லே. ரெண்டு நிமிஷம் சாஸ்திரத்துக்குப் பெஞ்சுட்டு ஓஞ்சுடும்.
ஜோசியக்கார அய்யர் நைச்சியமாகச் சொன்னார்.
டெல்லி ஆபீசரைக் கேக்கணும். மத்திய சர்க்கார் பரிபாடி. ராஜ்யத்துக்கு இதிலே ஒண்ணும் தால்பர்யமில்லே.
அதிகாரி தீர்மானமாக அறிவிக்க, உள்ளே இருந்து அந்த அரசூர் அதிகாரி திரும்ப வந்தார். எல்லாத் தரத்திலும் மனுஷர்களை இன்று சந்திக்கும் பேறு பெற்ற சந்தோஷத்தோடு சரி வைச்சுக்கலாம், அரை மணி மட்டும் என்று சொல்லி அவர் போகிற போக்கில் ராஜா இன்னொரு ஆசிர்வாதத்தை ஊதிவிட ஏற்று வாங்கிப் போனார்.
அய்யர் ஏதோ காகிதத்தில் கையெழுத்துப் போட அவரிடம் ஒரு சாவி கொடுக்கப் பட்டது.
இந்த முறியிலே நீங்க தங்கி இருந்து சிரம பரிகாரம் செஞ்சு பின்னே பரிபாடிக்கு வந்தா மதி.
ரொம்ப நல்லதாப் போச்சு. அய்யருக்கு ரூம் போட்டாச்சு. சமூகமும் அவிடத்திலேயே குளிச்சு தெளிச்சு பரிபாடி போகலாம்.
குட்டை பனியன் சொல்ல, ராஜா பளிச்சென்று கேட்டார் – அது என்ன பரிபாடி? எல்லோரும் சேர்ந்து பாடற சம்பிரதாயமா?
வைபவம் என்றான் கிழவன். நிகழ்ச்சி என்றான் நெட்டை பனியன். அது பிடித்துப் போனதாக அங்கீகரித்த ராஜா ரூம் போடறது என்ன மாதிரியான விஷயம் என்று கேட்கும் முன்னர் ஸ்ரீ கிருஷ்ணா லோட்ஜ் என்று பலகை மாட்டிய இடத்தின் முன் இருந்தார். பக்கத்தில் தான் அது.
ஆனந்தமாக மேலே இருந்து வென்னீர் பூ மாதிரிப் பொழிய ராஜா சின்னக் குழந்தை போல கூகூவென்று சத்தமிட்டுக் கொண்டு வெகுநேரம் குளித்து வெளியே வந்தபோது உலகமே சந்தோஷ பூர்வமாக அவருக்குத் தோன்றியது.
May 10 2024
May 8, 2024
காற்றில் றெக்கை சுழன்று வெப்பக் காற்றைப் பரத்தும் யந்திரம்
வாழ்ந்து போதீரே -அரசூர் நாலு தொகுதி நாவல்களில் நான்காவது – அடுத்த சிறு பகுதி
பகவதியம்மா பேரனா கொக்கா. என்ன மாதிரியான யந்திரங்கள் சகிதம் வந்திருக்கான். ஜோசியக்கார அய்யரும் இருக்காரே, யந்திரம் ஸ்தாபிக்கணும், கணக்கு போடணும்னு அலைஞ்சுக்கிட்டு. அதில் ஒரு யந்திரமாவது இப்படிச் சத்தம் போட்டுச் சுழன்று வெக்கைக் காற்றைப் பரத்தியிருக்கா?
அய்யர் கிடக்கட்டும். அவர் இல்லாவிட்டால் புஸ்தி மீசைக் கிழவ்ன சாவுக்கு சகலமான கிரியைகளும் செய்து அவனை மேலே அனுப்பியிருக்க முடியாதுதான் என்று ராஜாவுக்குப் பட, யார் மேலும் விரோதமில்லை என்ற பாவனையோடு நரை மீசையை நீவியபடி பெருந்தன்மையாகச் சிரித்தார்.
யப்ளிகேஷன் எழுதணுமோ?
யாரோ மூச்சுக் காற்றில் தேங்காயெண்ணெய் மணக்க ராஜாவை நெருங்கி நின்று அவர் கையில் பிடித்திருந்த காகிதத்தைக் காட்டிக் கேட்டார்கள். ராஜா அது இங்கே வந்து தங்க அனுமதி கேட்டு சர்க்காருக்குத் தர வேண்டிய கடுதாசு என்று நினைத்ததோடு அல்லாமல் கேட்டவன் அதியுன்னதமான சர்க்கார் உத்தியோகஸ்தன் என்றும் தீர்மானித்து ஆமாமென்றார். தொடர்ந்து மனுவில் எழுதத் தன் பெயரை எல்லா விருதுகளோடும் சொல்லத் தொடங்க, குறுக்கே விழுந்து நிறுத்திப் போட்டான் குட்டை பனியன்.
அவர் நாடகக் காரர் இல்லே. மகாராஜா என்றான் குட்டையன், யாரை என்று இல்லாமல் முறைத்துக் கொண்டு.
அதெல்லாம் சரி, பரிபாடியிலே இருக்கணும்னா யப்ளிகேஷன் தேவை.
உறுதியாகச் சொன்னான் வந்தவன்.
வேடிக்கை பார்த்துப் போகத்தான் வந்தோம். அதுக்கெதுக்கு அனுமதி எழவு?
ராஜா குரல் உயர்த்திச் சொல்வதைக் கேட்டு உள்ளே போகத் தொடங்கிய பகவதி அம்மாளின் பேரனான அதிகாரி திரும்பினான். ராஜாவைப் பார்த்து அவன் சிரித்த மாதிரி இருந்தது.
பக்கத்திலே வந்து தமிழா என்று அவன் கேட்க, கண் நிறைந்து போன ராஜா, சகல நலனும் பெற்று நல்லா இருப்பா என்று வாய் நிறைய வாழ்த்தினார்.
பகவதி அம்மாளின் பேரன் தன் தில்லி சர்க்கார் அதிகாரி தோரணையை ஒரு வினாடி கழற்றி வைத்து விட்டு ராஜாவின் கரத்தைப் பற்றி மரியாதையோடு பெரியவா எந்த ஊர்லே இருந்து வராப்பலே என்று கேட்டான்.
அரசூர் என்றான் புஸ்தி மீசைக் கிழவன். அதிகாரி ஆச்சரியத்தை முகக் குறிப்பில் காட்டி, நானும் தான் என்று சொல்லி உள்ளே போனார்.
தெரியுமே என்று ராஜா முழங்கியது அவர் காதில் விழுந்திருக்காது தான்.
வெளியே ஏதோ ஆரவாரம். என்ன சங்கதி என்று ராஜா நோக்கினார். ஜோசியக்கார அய்யர் கெத்தாக நடந்து வர, சவரக் கத்தி என்ற ஒன்றே இருப்பது தெரியாத தாடி மண்டிய முகத்தோடு நாலைந்து வெள்ளை வேட்டிக்காரர்கள் அட்டையில் செருகிய காகிதங்கள் சகிதம் அய்யரைச் சுற்றி ஆதரவாக நடந்து வந்தார்கள். அவர்கள் பார்வையில் பரபரப்பு தெரிந்தது.
இந்த அறிஞர் ஷட்கோண மற்றும் எண்கோண யந்திரங்களை அர்ஜுன நிருத்தம் நடக்கும் இடத்தில் நிறுவுவது குறித்துக் கணக்குகள் போட்டு வைத்திருக்கிறார். அந்த யந்திரங்கள் மயில்களை அழைத்து மேகங்களையும் கொண்டு வந்து நிறுத்தி வேண்டிய அளவு மழை பெய்விக்குமாம்.
அய்யர் கூட வந்த இளைஞன் சொல்ல, மரமேஜை உத்தியோகஸ்தன் தலையைக் குலுக்கிக் கொண்டு அபிப்பிராயப்பட்டது இந்தத் தோதில் –
அப்படி எனில் அது எதுவும் இங்கே வேண்டாம். மழை பெய்து நாலு நாள் பரிபாடி அஸ்தமிச்சா, பிரச்ச னை ஆகிடும். பணப் பட்டுவாடா முடங்கும்
May 9 2024
ல்
May 7, 2024
எல்லாத் திசையும் இழுபட்டுக் கன்று போல கொண்டு செலுத்தப்படும் மகாராஜா
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -அடுத்த சிறு பகுதி\
மகாராஜா இங்கே வர உத்தரவாகணும்.
பனியன் சகோதரர்கள் அவசரமாக விளிக்க, அவர்களைப் புறக்கணித்து ஒய்யாரமாக உள்ளே நடந்தார் ராஜா. சந்தோஷமாக கருப்புச் சால்வை போர்த்திக் கொண்டு கிழவனும் போனான். அவசரமாக வேடமணிந்து ஆட வந்த தெருக்கூத்துக் கலைஞர்கள் போல ரெண்டு பேரும் தெரிந்தார்கள்.
நாடகக் காரங்க தானே? அந்த வரிசை.
வாசலில் நின்று கைக்குட்டையில் புதைத்துப் பிடித்து பீடி புகைத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடிக்காரர் ராஜாவை நிறுத்திச் சொன்னார். அவர் பார்வை ராஜா பின்னால் நின்ற கிழவன் மேலும் பட்டுப் படர்ந்தது.
என்ன மொழி?
அவர் கேட்க, கிழவன் உற்சாகமாகத் தமிழ் என்று சொல்ல உத்தேசித்த போது, வாசலில் ஏதோ வண்டி வந்து நின்றது. ராஜா வந்த நூதன வாகனம் போல ஆனால் மேலே கூரை இல்லாமல் பச்சைப் பசேல் என்று இருந்த ஊர்தி அது. அந்த வர்ணம் ராஜாவுக்கு சண்டை சச்சரவு, யுத்தம், ஆள் சேதம் என்று சம்பந்தமே இல்லாமல் கெட்ட நினைப்பை மனசில் விதைத்தது.
பூர்த்தி செஞ்சு கொடுங்க.
உத்தியோகஸ்தன் ராஜா கையில் காகிதத்தைத் திணிக்க, பின்னால் இருந்து யாரோ மரியாதையே இல்லாமல் அவருடைய தோளைப் பிடித்து ஓரமாக இழுத்து நிறுத்தி வேறே யாரோ உள்ளே போக வழியமைத்துக் கொடுத்தார்கள். நூதன வாகனத்தில் வந்து இறங்கியவர்களுக்காக அந்த வழி.
வெள்ளை வேட்டி அணிந்து ஓங்கு தாங்காக ஒருத்தன் கோட்டையூர், செட்டிநாடு, புலியடிதம்மம், சக்கந்தி முகக் களையோடு உள்ளே நடக்க, திருமய்யம் பையன்னு நினைக்கறேன் என்றான் ராஜா காதுக்குள் கிழவன்.
பனியன் சகோதர்கள் அதற்குள் ராஜா பக்கம் நெருங்கியிருந்தார்கள்.
மினிஸ்டர் போறார். ராஜா காதில் கிசுகிசுத்தான் பனியன் குட்டையன். ராஜா புரியாமல் பார்க்க, இன்னொருத்தன் சமாதானமாகச் சொன்னான் – நீங்க வந்திருக்கற இந்தக் காலத்திலே இவங்க தான் ராஜா, சக்கரவர்த்தி எல்லாம்.
யாரு இந்தக் கருத்த பயலா?
ராஜா சத்தமாகக் கேட்க, அவமரியாதை என்றாலும் அவர் வாயைத் தன் நாற்றமடிக்கும் கையால் பொத்தி ஓரமாக அவரைத் தள்ளிப் போனான் நெட்டையன் பனியன்காரன். சமூகம் மன்னிக்கணும் என்று கெஞ்சல் வேறே.
கன்று போலக் கொண்டு செலுத்திய படிக்கு இழுபட்ட ராஜா அவனை எல்லா கெட்ட வார்த்தையும் பிரயோகித்து தாழ்ந்த குரலில் வசைபாட, மினிஸ்டனோடு வந்த ஒரு சின்ன வயசு அய்யன் அங்கே என்ன சத்தம் என்று இந்தியிலும் தொடர்ந்து இங்கிலீஷிலும், கூடவே தமிழிலும் கேட்டான்.
அவனையும் தன்னுடைய வசவு வளையத்தில் சேர்க்கும் முஸ்தீபோடு ராஜா தொண்டையைச் செரும, ரெண்டு பனியன்களும் ஆளுக்கொரு காதாக அவரிடம் அவசரமாகச் சேதி சொன்னார்கள் –
மகாராஜா அவர் பகவதி அம்மா பெயரன். சின்னச் சங்கரன். தில்லியிலே பெரிய அதிகாரி. மினிஸ்டரே அவர் சொல் கேட்டுத்தான் நடந்துப்பார். இதெல்லாம் நீங்க இருக்கப்பட்ட காலத்துக்கு நூறு வருஷம் அப்பாலே.
சட்டென்று ராஜாவின் மனநிலை மாறிப் போனது. இன்னும் இன்னும் என்று மனதில் ஊறி வந்து வாத்சல்யம் பொங்கித் ததும்பியது. உள் வாசல் நிலையைக் கையால் பற்றி நின்று பேசும் பகவதி அம்மாளின் பெயரனுக்குத் தான் இருந்த இடத்தில் இருந்தே ராஜா ஆசிர்வாதங்களைப் பார்வையால் கடத்தினார். கிழவனும் அவன் பங்குக்கு ஏதோ சீன மொழி மாதிரியான பாஷையில் கடகடவென்று வாழ்த்துச் சொன்னான். என்ன எல்லாம் கற்று வைத்திருக்கிறான் வங்காப்பயல் விளங்காமூதி இந்தக் கேடுகெட்ட கிழவன்!
அந்த அதிகாரிப் பையன் வாசலில் மரமேஜை போட்டு உட்கார்ந்திருந்த உத்தியோகஸ்தர்களிடம் ஏதோ சொல்ல, ஒருத்தன் உள்ளே ஓடி ஒரு மாணப் பெரிய உலோக விசிறியைக் கொண்டு வந்து வைத்துக் கருப்புக் கயறு இழுத்து எங்கோ எதையோ செருக, அது பெருஞ்சத்தத்தோடு சுழல ஆரம்பித்ததை ராஜா ஆச்சரியத்தோடும் அபிமானத்தோடும் பார்த்தார்.
May 7 2024
May 5, 2024
என்ன ஏது என்று தெரியாமலே கொட்டகைக்குள் புகுந்து புறப்பட்ட அரசூரார்
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி
அவர் பார்வை பனியன் சகோதரர்களைத் தீய்க்க அவசரமாகத் தேடத் தெரு வளைந்து வலது வசம் திரும்பி மேற்கு திசையில் நீளும் வீதியில், வாசலில் கூரைக் கொட்டகை போட்ட கட்டிட வாசலில் அவர்கள் நின்றிருந்தார்கள்.
மரமேஜை போட்டு அங்கே நாலைந்து பேர் உட்கார்ந்து காகிதங்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னால், ஒருத்தன் பிருஷ்டத்தை ஒட்டி அடுத்தவன் என்ற கணக்கில் சர்ப்பமாக வளைந்து மனுஷர்கள் வரிசையாக நின்றார்கள். கும்பினி உத்தியோகஸ்தர்கள் வரி வாங்கவோ புதுச்சேரியில் பிரஞ்சுக் காரர்களோடு யுத்தம் செய்ய ஆள் எடுத்து அனுப்பவோ ஏற்படுத்திய இடம் என்று ராஜாவுக்குத் தோன்றியது. பக்கத்திலே கெந்தி நடந்து வந்த புஸ்தி மீசைக் கிழவன் இல்லையெனத் திடமாக மறுத்தான். நடக்க வேணாம், தரையை ஒட்டிப் பிருஷ்டம் படப் பறந்து செல்லடா கொசுவே என கேட்டுக் கொண்டால் வெகு இஷ்டமாகச் செய்வான்.
இவங்க எல்லாம் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள். வெள்ளைக்காரன் சர்க்கார் இல்லே இப்போ நடக்கிறது. நம்மாளுங்க தான். ஆட்ட பாட்டமா நாலு நாள் வைபோகம் நடத்தி வெள்ளைக்காரனும் அபீசினியக் கருப்பனும் வந்து பார்த்து சந்தோஷப்பட ஏற்பாடு. இங்கே நிக்கறவன் எல்லாம் ஆடவும் பாடவும் வந்தவனுங்க. நேரம் ஒதுக்கச் சொல்லி காகிதத்துலே மனு கொடுக்கறாங்க.
என்ன தான் இளக்காரம் செய்தாலும் புஸ்தி மீசையானுக்கு இருக்கும் கற்பூர புத்தி தனக்கு இல்லை என்பதை ராஜா மனசார அங்கீகரித்தார். அது கிழவன் மேல் நொடி நேர அபிமானமாக மலர்ந்தது. அதுக்குக் காசா பணமா செலவு?
மாமா, எல்லாம் சரிதான். நம்ம களவாணிப் பயலுக அங்கே என்னத்துக்கு நிக்கறாங்க? உங்களையும் என்னையும் சப்ஜாடா ஒரு வெலை பேசி இங்கே சர்க்காருக்கு வித்துட்டுப் போகலாம்னு யோசிக்கறானுங்களோ?
செஞ்சாலும் செய்வானுக மாப்ளே. சூதானமா நடந்துக்கறது நல்லது. உனக்கு உடம்பு வேறே இப்போ சொடுக்கெடுத்து விட்டுட்டான் . இவனுகளோட போனா, ம ச்சி காட்டறேன் மத்ததைக் காட்டறேன்னு பெரிசா கருங்குழியிலே உன் தலையை நுழைச்சு விட்டுடுவானுங்க. அவமானம் எல்லாம் உனக்குத்தான் அப்புறம். உஷார்.
தான் கொஞ்சம் தாழ்ந்தாலும் உலகை ரட்சிக்க வந்த அவதாரம் போல உதடு வீங்கி நான்நான் என்று நிற்கிற கிழவனை போடா பருப்பே என்று மனதில் திட்டியபடி ராஜா அந்தக் கொட்டகைக்குள் நுழைந்தார்.
May 4, 2024
வேட்டி தார்பாய்ச்சிக் கட்டிய மல்லர்கள் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்திய போது
உடம்பு சொடுக்கெடுத்து விட்டது போல் இருந்தது. ராஜாவுக்கு நடக்க நடக்கக் கம்பீரம் கூடிக் கொண்டு வந்ததேயல்லாமல் இம்மியும் அது இறங்கவில்லை. மணக்க மணக்க எல்லாத் தைலத்தையும் சுடச் சுடக் கலந்து உடம்பெங்கும் நீவி நாலைந்து ராட்சதர்கள் மரியாதையோடு உடம்பு பிடித்து விட்டு எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் புரட்டிப் போட்டு முதுகில் ஏறி நின்று திம்திம்மென்று குதித்துக் கும்மாளமிட்டு இறங்கிப் போக எழுந்து உட்கார்ந்தது முதல் உடம்பில் ஒரு வலி, நோவு, பலகீனம் எதுவுமில்லாமல் போனது.
அபீசீனியாவில் இருந்து வந்த ஒரு உடம்பு பிடிக்காரனும் அவனோடு வந்த பொம்பிளையும் அரண்மனைக்கே வந்து இப்படி மணிக் கணக்காக உடம்பு பிடித்து விட்டார்கள். ராணி தாய்வீடு போயிருந்த நேரம் அது. அபீசீனியாக்காரிப் பொம்பளை மட்டும் ராஜாவோடு இருந்து கள்ளுத் தண்ணி போல போதையேற்றிச் சிரிக்க, ராஜா சமர்த்தாக உறங்கிப் போனார் அன்று.
இங்கே பெண் வாசனையே கிடையாது. ஆவி பறக்க, மலையாளத்தில் பேசியபடி காய்ச்சிய எண்ணெயை அறை வாசலில் வைத்து விட்டு வேஷ்டி கட்டிய இளம்பெண்கள் நகர, மல்லர்கள் தான் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தியது. ரெண்டு பொற்காசுகளை ராஜா ஆயுர்வேத வைத்தியனுக்கும், பிரித்துக் கொள்ளச் சொல்லி இன்னுமொரு காசை இந்த மல்லர்களுக்கும் தர, அவர்கள் காட்டிய சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை.
ஒரு பெரிய சீனப் போத்தல் நிறைய இன்னும் ஒரு வருஷம் ராஜா பூசிக் கொள்ள மூலிகை எண்ணெய் அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். நாசித் துவாரத்திலும் ஆசனத் துவாரத்திலும் தினம் ஒரு துளி தொட்டு வைத்தால் ஒரு சுகக்கேடு அண்டாதாம். அரைக்குக் கீழே முன்னாலும் வைத்துக் கொண்டால் சகல சுகமும் சித்திக்குமாம். என்ன, நாள் முழுக்க அங்கே எரிச்சல் கொஞ்சம் போல் இருக்கலாம். அது எதுக்கு இழவு.
புஸ்தி மீசைக் கிழவன் வைத்தியசாலையைச் சுற்றிப் பறந்தபடி ராஜா இதை சேடிப்பெண்ணுக்கு எங்கெல்லாம் தடவலாம் என ஆலோசனை சொன்னான். போடா வக்காளி என்று ராஜா மிதமாக அவனைக் கடிந்து கொள்ள, என் மசுரே போச்சு என்று சிரித்துக் கிழவன் கோலாகலமாக மிதந்தான்.
வைத்தியசாலை வாசலில் அரண்மனை ஜோசியர் தரையில் பரத்திய மண்ணில் வேப்ப மரக் குச்சி கொண்டு ஷட்கோண யந்திரம் நிறுத்துவதன் நுட்பங்கள் குறித்துப் பேச சுற்றி ஏழெட்டுப் பேர் நின்று சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஜோசியர் அறிவுஜீவியாகக் காட்சி அளிப்பது மனதில் பட, ராஜா மனதில் தேவையில்லாத அசூயை எழுந்தது.
கேணையன் நாமக்கார அய்யன் சோழியை உருட்டிப் போட்டுக் காசு பார்க்கக் கிளம்பிட்டான். நம்ம மீசையான் வேறே ஒய்யாரமா அங்கே இங்கே சாடறான். இவனுகளோட என்ன எழவுக்குடா நான் கூட வரணும்?
May 3, 2024
வாசலில் ஜிலேபி பிழிந்ததுபோல் எழுதி வைத்திருந்தது தான் பிழிச்சலா?
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவதில் இருந்து அடுத்த சிறு பகுதி
கூம்பு கூம்பாகப் பிடித்துக் கூரை வைத்த இந்த மரக் கட்டிடம் தான் இந்த பூமியிலே கோவில்னு கூட எனக்குத் தெரியாமப் போச்சே என்று ராஜா உள்ளுக்குள் மருகினார்.
அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அம்பலம்
எப்போதும் அரண்மனையிலேயே சுக்குத் தட்டிப் போட்டு வெந்நீர் குடித்துப் பிருஷ்டத்தில் தட்டித் தட்டி வயிற்றில் இருந்து வாயு இறங்கிக் கிரமமாகக் கழிக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டு, முன்னோர்களுக்கு சாராயமும் கோழிக் கறியும் கொண்டு போய்ச் சேர்க்க ஜோசியக்கார அய்யரின் யந்திரங்கள் மூலம் முயற்சி செய்து கொண்டு, கும்பினி துரை கிடுக்கிப் பிடி போட்டு வரி கொடுக்கச் சொல்லும் பொழுதில், அதைக் கொடுக்க ராஜ்ஜியத்தில் வழியற்றுப் போனதால் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்து காரியஸ்தனைக் கொண்டு லிகிதம் எழுதிக் கொண்டு, ராணியோடு அருகில் படுத்து சும்மா சகசயனமாக உறங்கிக் கொண்டு, அபூர்வமாகக் கிட்டும் பகல் நேரங்களில் சேடிப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்து அவள் வாயில் அடிக்கும் கருவாட்டு வாடையில் லகரி ஏற அவள் காலைப் பிடித்து மடியில் போட்டுப் பிடித்து விட்டுக் கொண்டு ஒரு ஜீவிதம் எப்போ முடிய என்று முன்னால் அவசரமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கோவிலையும், குளத்தையும், பாயசத்தையும் அவரெங்கே அறிவார்.
மகாராஜா, பிழிச்சல் எடுத்துக் கொண்டு போகலாமா? சமூகம் ரொம்பவே தேகம் தளர்ந்த மாதிரி இல்லையோ தோணுது.
பனியன் சகோதரர்கள் மரியாதையோடு ராஜவிடம் விசாரிக்க, முன்குடுமிக் காரர்கள் நாலைந்து பேர் செடியும், கொடியுமாகக் கையில் சேர்த்துப் பிடித்துக் கொண்டு வெகு மும்முரமாகப் படிகளில் ஏறி, இறங்கி அலைந்து கொண்டிருந்த மூன்று நிலை பங்களா ஒன்று எதிர்ப்பட்டது. வாசலில் ஜிலேபி பிழிந்து எழுதி வைத்திருந்தது என்ன என்று தெரியவில்லை ராஜாவுக்கு. களவாணிகள் சொல்கிற பிழிச்சலா அது?
ஆயுர்வேத வைத்தியசாலை மாப்ளே. வாங்க. உடம்பு நேராக்கிட்டு வருவோம்.
துள்ளிக் குதித்துச் சற்றே மிதந்து, உள்ளே வேட்டி உடுத்து நின்ற பெண்டிரை ஆசையோடு பார்த்தபடி போகிற கிழவனையே பார்த்தபடி நின்றார் ராஜா.
இவன் மலையாளம் எங்கே படித்தான்? தினப்படிக்குப் பால் பாயசம் அருள்கிற கடவுள் தான் இந்தப் பெண்களை இவனிடம் இருந்து காப்பாத்தி ரட்சிக்கணும்.
May 2, 2024
மிதக்காமல், கௌரவமான தோரணைகளோடு பாதிரியார் நடை நடந்து போனவர்
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காம் நாவல்
ராஜா பரிவாக கிழவனைப் பார்த்துப் புன்சிரிக்க, அவன் கழுத்தைச் சுற்றி லேஞ்சி ஒன்றை சாவகாசமாகக் கட்டிக் கொண்டு நம்மூர் மேளம் வந்திருக்கு, பாத்தியா மாப்பிள்ளே என்று உற்சாகமாக ராஜாவை விசாரித்தான்.
அது சாவு மேளமாச்சே மாமா, உங்க சாவுக்கு அடிச்சு முழக்கினது தானே?
சாவா? எனக்கேது அதெல்லாம்?
கிழவன் வீம்பாகக் கேட்டு மிதக்க ஆரம்பித்து, இங்கே காலை வீசிப் போட்டு நடப்பதே சாலச் சிறந்தது என்றுபட, கௌரவமான தோரணைகளோடு பாதிரியார் நடை நடந்து முன்னால் போனான்.
அவனைப் பின் தொடர்ந்து ராஜா. அவருக்கும் பின்னால் நூல் பிடித்தது போல் அரண்மனை ஜோசியரும் அவருக்கும் சற்றுப் பின்னே, பனியன் சகோதரர்களும் நடந்து போனார்கள். ராணியைப் பெண் கேட்டு உறவும், குடிபடைகளும் சகிதம் எந்தக் காலத்திலேயோ இப்படி ஊர்வலமாகப் போனது ராஜாவுக்கு நினைவு வந்தது. அப்போதும் பின்னால் அரண்மனை ஜோசியர். ரொம்ப இளையவராக இருந்தார் ஜோசியர். களவாணிகளின் சிநேகம் அந்தக் காலத்தில் கிட்டியிருக்கவில்லை. வெகு பின்னால் தான் அதெல்லாம் ஆனது.
ராஜா ஒரு வினாடி நின்றார். கூட்டம் அலையடித்துக் கொண்டு ஒரு பரந்தவெளி. பக்கத்தில் மரத்தில் கூரை போட்டு மரத்தால் சுவரும் கதவும் வைத்து ஒரு கட்டிடம். சுற்றியிருந்த வெளியில் நின்று முட்டி மோதுகிற எல்லோரும் கையில் கிண்ணியோ, வெங்கலப் பானையோ, வெள்ளி அல்லது தாமிர கூஜாவோ பிடித்திருந்தார்கள். பெருஞ்சத்தமாக எல்லோரும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டிருந்ததும் அங்கே நடந்தது.
இதென்ன இங்கே ஜனம் ஏகத்துக்குக் கூடி இருக்கு? அவனவன் ஏனத்தைத் தூக்கிக் கொண்டு என்னதுக்காக இப்படி இரைகிறான்?
ராஜா பனியன் காரர்களை விசாரித்தார்.
அதை ஏன் கேக்கறீங்க மாப்பிள்ளே. இது கோவில். பால் பாயசம் காச்சித் தருவாங்களாம். அதை வாங்கிக் குடிக்கத் தான் ஒரே முட்டா ஜனம். அவங்க சம்பிரதாயப்படி நடுப்பகலுக்குக் காய்ச்சி படைச்சுட்டு விக்கறது தான் செய்யணும். வெளியூர்க் கூட்டம் அலைமோதுதா, விடிஞ்சதுமே கோவில் அய்யருங்க அண்டா முழுக்க பாயசம் காச்சி வச்சுடுவானுங்க. பிறகு ராத்திரி வரைக்கும் பாயசம் விக்கறதும் வாங்கறதும் தான் மும்முரமா நடக்கும். மூணு வேளையும் இதைக் குடிச்சுட்டு வெத்தலை பாக்கு மென்னுக்கிட்டு, அவனவன் நடந்து போகற பவிஷை பாக்கணுமே.
கிழவன் உற்சாகமாக அறிவித்தான். ராஜாவுக்குத் தெரியாத ஒரு தகவல் தனக்குத் தெரிந்த கர்வம் அவனுக்கு. அந்நிய மனுஷர்கள் அங்கே நடமாடாமல் இருந்திருந்தால், அவனுடைய வழக்கப்படி தரைக்கு முக்கால் அடி உயரத்தில் மிதந்தபடி வந்திருப்பான் அவன்.
விஷயம் தெரிந்தது மட்டுமில்லை, புதுசு புதுசாக இந்த வயசில் கற்றுக் கொண்டு வார்த்தையைச் சரியான இடத்தில் விடுகிறானே எழவெடுப்பான் என்று ராஜாவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அது என்ன கண்றாவியோ பீடி, சீரெட்டு. இருக்கட்டும். நல்ல இருக்கட்டும்.
May 1, 2024
ஆவி போனாலும் ஆசை போகாத காலப் பயணி ஒருவர் அலைந்த கதை
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது
அதிலிருந்து அடுத்த சிறு பகுதி
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
ராஜா முந்திக் கொண்டு தான் ஏன் அங்கே இருக்கிறேன் என்பதற்கு யாரும் கேட்காமலேயே காரணம் சொன்னார். கிழவன் எதுக்கு வந்திருப்பான் என்று அவருக்குத் தெரியும். கூட்டத்தில் கலந்து இருக்கப்பட்ட நடுவாந்திர வயசுப் பெண்டுகளிடம் சில்மிஷம் செய்ய இல்லாமல் வேறே எதுக்கு? அவன் உயிரோடு இருந்த காலத்தில் ரெண்டு பேரும் அபூர்வமாக உட்கார்ந்து சீமைச் சாராயம் மாந்திக் கொண்டிருந்த ஒரு சாயங்காலத்தில் கிழவன் பெருமையோடு சொன்னது நினைவு வந்தது ராஜாவுக்கு –
மாப்பிள்ளே, வயசாகிட்டு இருக்கில்லே. மனசும் அதுக்கு ஏத்த மாதிரி தானே மாறிக்கும் பாத்துக்குங்க. முன்பெல்லாம் வடிவா ஒரு சின்னக் குட்டிப் பொண்ணும் கூடவே மத்திய வயசுக்காரி அவ ஆத்தாளும் சேர்ந்து வந்தா, கண்ணும் மனசும் சின்னஞ்சிறிசு மேலே தான் விழும். இப்போ? கொப்பும் கொழையுமா நடு வயசுலே நிக்கறாளே அம்மாக்காரி, மாசாந்தர தீண்டல் நின்னா வர்ற சௌந்தரியம் அது. அதுலே தான் மனசு போய் தலை குப்புற விழுது. தனி வாசனை அந்த உடம்புக்கு, கேட்டுக்குங்க. அனுபவப்பட்டா, சேடிப் பொண்ணு எல்லாம் என்ன பிரமாதம்னு தோணும், போக வாசனை.
சேடிப் பெண்ணோடு ராஜாவின் பிற்பகல் விளையாட்டு விவரங்கள் தெரிந்த திமிரில் முறுவல் பூத்துக் கொண்டு கிழவன் அப்போது சொன்னான். அவன் அதே சேடியை வாய் உபச்சாரம் செய்யச் சொல்லி வற்புறுத்தியது பின்னால் தான் அந்தப் பெண் மூலமாக ராஜாவுக்குத் தெரிய வந்து கிழவனை ஜமீன் அரண்மனையில் இருந்து உடனே புறத்தாக்கினான் அப்போது.
கிழவன் இங்கே எந்த வயசில் பெண் தேடி வந்தானோ. யாராக இருந்தாலும் அவன் காலத்துக்கு நூறு, நூற்றைம்பது வருஷம் அடுத்து வந்தவர்களாக இருக்கும். அந்த விஷயம் புரியாமல் ஏதாவது திரிசமன் செய்து வைத்தால்?
அவனுடைய சாவைக் கோலாகலமாகக் கொண்டாடி நாற்றம் பிடித்த கிழட்டு தேகத்தைப் புதைக்க எடுத்துப் போக என்று கழிந்த நேரம் ராஜா நினைப்பில் உடனடியாக வந்து நின்றது, கிழவனின் சடலத்தைப் படம் எடுக்கிறேன் என்று நூதன வாகனக் களவாணிகள் அப்போது கிளம்பியபோது, நட்டுக் குத்தலாக உட்கார வைத்த பிணமாக சேடிப் பெண்ணின் மடியில் விழுந்து மாரில் கையளைந்தவனாச்சே இந்தப் பொல்லாத கிழவன். ஆவி போனாலும் ஆசை போகாதவன் அல்லவோ இவன். கையைக் காலை வைத்துக் கொண்டு இந்த மலையாள பூமியில் சும்மா இருப்பானோ.
எதுக்கு பழங்கதை எல்லாம்? வந்தோமா, வந்த இடத்துலே வேடிக்கை பார்த்துட்டுப் போனோமா என்று இருக்காமல் எதற்கு வம்பு வலிக்கணும்?
April 30, 2024
யந்திரம் நிறுத்த வந்ததாக சோசியக்காரர் சொன்ன படிக்கு
வாழ்ந்து போதீரே = அரசூர் வம்ச நான்கு நாவல் தொகுதியில் நான்காவது – அதிலிருந்து அடுத்த சிறு பகுதி
அங்கே, நம்ம ஊரில், ஜோசியக்கார அய்யர் யந்திரம் நிறுத்தறேன், தேவதையை பிரதிஷ்டை செய்யறேன் என்று ஊர் சௌக்கியப்பட ஏதோ செய்கிறதாக வராகன் தட்சிணை வாங்கினால், இங்கே அதே தரத்தில் இருக்கப்பட்ட மனுஷர்கள் பாயசம் விற்றுக் காசு பார்க்கிறார்கள் போல. அதை வசூலிக்கிற வகையில் இந்த குட்டையனும் நெட்டையனுமான பனியன் சகோதரர்களும் கூடுதல் வருமானம் தேடுகிறார்களோ. நடக்கட்டும்.
குப்பாயத்தில் இருந்து ஒரு வெள்ளிக் காசை தாராளமாக எடுத்துப் போட்டார் ராஜா. இன்னொரு வராகனோ நாலைந்து தங்கக் காசுகளோ அவர்களுக்கு தரலாம் தான். வந்ததும், வினோதமெல்லாம் கண்டதும் நல்லபடி முடிந்தால் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பு. அவர் மனதை சிரமமின்றிப் படித்த பனியன் சகோதரர்கள் ஏதோ நிச்சயம் செய்த மாதிரி ஒரே நேரத்தில் தலையைக் குலுக்கிக் கொண்டார்கள். காணாது கண்ட சந்தோஷச் சிரிப்பும் பொங்கி வழிந்தது அவர்கள் முகத்தில்.
யந்திரம் நிறுத்த சிலாக்கியமான இடம்.
பின்னால் குரல் கேட்டுத் திரும்பினார் ராஜா. அரண்மனை ஜோசியர்.
இந்த அய்யரையும் கூட்டி வந்தாகி விட்டதா? என்ன கண்றாவிக்கு? எப்படிக் கூட்டி வந்தார்கள்? எப்போது?
மகாராஜா மன்னிக்க வேணும். சமூகம் வண்டியில் ஏறினதுமே அசதியில் உறங்கியாச்சு. அதான் கேட்க முடியலே. முன்னாடி நிறைய இடம் சும்மா தானே கிடக்கு, நானும் வரேனேன்னு கேட்டார் சோசியர் அய்யர்.
அவரும் காசு கொடுத்துத்தான் நூதன வண்டியில் தொத்திக் கொண்டு வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குப் புரிந்த போது இன்னொரு குரல் –
நானும் தான் வந்திருக்கேன். உன் பக்கத்துலேயே தான் உக்கார்ந்து வந்தேன்.
ஆச்சரியத்தோடு ராஜா நிமிர்ந்து பார்க்க, மாமனாரான புஸ்தி மீசைக் கிழவன் வழுவழுவென்று ஏதோ பச்சையும் மஞ்சளுமான துணியில் தைத்த பாதிரி உடுப்பும், முன்னால் வளைந்த அழகான பிரஞ்சு தேசச் சப்பாத்துமாக நரை மீசையைத் தடவிக் கொண்டு குதித்துக் குதித்து நடந்து வந்தான்.
மாமா, நீங்க எப்ப வந்தாப்பலே?
உபசாரத்துக்காகக் கேட்டார் ராஜா.
வங்காப்பய, நாம எங்கே போனாலும் பிடரியிலே மோந்துக்கிட்டு பின்னாடியே வந்துடறான் என்றது மனது. இந்த நூதன வாகனக் களவாணிகள் தான் கிழவனையும் சொகுசாக வண்டியில் உட்கார வைத்தோ, மேலே தாம்புக் கயிற்றால் கட்டிக் கிடத்தியோ இட்டு வந்தார்களா?
உருட்டி விழித்து பனியன் சகோதரர்களை ராஜா பார்க்க, அவர்கள் எங்களுக்கும் இவர் வந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உடனடியாகப் பார்வையால் வெளிப்படுத்தினார்கள். கிழவன் திடுமென்று தாண்டிக் குதித்துப் பிரவேசம் செய்ததில் அவர்களுக்கே ஆச்சரியம் என்றும் அந்தப் பார்வை சொன்னது.
கூத்து நடக்குன்னு சொன்னாப்பல. அதான் செத்த நேரம் இருந்துட்டுப் போகலாமேன்னு கிளம்பி வந்தேன்.
April 29, 2024
எலுமிச்சம்பழத்தை கொடுத்துத் திருப்பி வாங்கும் அரசூர் மரியாதை
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி
சின்ன சரிகை தலைப்பாக வழியும் வெள்ளைச் சேலையில் சகலமான வயதுப் பெண்களும். பெண் குழந்தைகள் கூட வெள்ளைப் பாவாடையோடு தான் வளைய வருகிறார்கள். ஆண்களோ, தழையத் தழைய வேட்டி உடுத்தி, ஒண்ணு, இடது பக்கம் கணுக்காலில் இருந்து வேட்டி நுனியைத் தூக்கிப் பிடித்தோ, அல்லது சரி பாதியாக மடித்து முழங்காலுக்கு மேலே பட்டையாகக் கட்டியோ எந்தப் பரபரப்பும் இல்லாமல் சாவதானமாக நடக்கிறார்கள். கக்கத்தில் குடை வேறே.
வெள்ளைக்காரன் ஊரும் இதே படிக்குத் தான் இருக்குமோ? அங்கே சராய் உடுத்த வெள்ளையப்பன்கள் தானா ஊர் முச்சூடும் திரிவார்கள்?
ராஜா இன்னும் அந்த விசித்திரத்தை அனுபவிக்கிற தோதில் குண்டு குழியாகக் கிடக்கிற தெருவைப் பார்க்காமல் நடந்து வந்தார். பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக பனியன் சகோதரர்கள்.
சமூகம் பாதையிலே ஒரு கண்ணு வைக்க பிரார்த்திக்கிறோம். தடுக்கி விழுந்தால் அடி பட்டுடும். எங்களுக்கு சகிக்க ஒண்ணாத துன்பம் ஏற்படலாம்.
குழந்தைக்கு சொல்கிறது போல ராஜாவுக்கே யோசனை சொல்கிறான்கள்.
குண்டலினி மாதிரி கபால நடுவே ஜிவ்வென்று பற்றிக் கூராக ஏறிப் படர்ந்த கோபத்தை அடக்கிக் கொண்டு பனியன் சகோதரர்களை அவர் நோக்க, எதுவுமே நடக்காதது போல் அவர்கள் கள்ளச் சிரிப்பும் சகஜ பாவனையுமாக எலுமிச்சம் பழத்தையும் காகிதக் கட்டையும் நீட்டினார்கள். எதுக்காக அந்த அதீத உபசாரமெல்லாம்? அதுவும் எலுமிச்சம்பழம்? தாசி வீட்டுக்கா பயணம்?
மகாராஜாவும் ராணியம்மாவும் நல்ல சேமமாய் இருக்க, ஊர் செழிக்க, பயிர் பச்சை விளைய, மழை தவறாமல் பெய்ய, இங்கத்திய பகவான் கிருசுணசாமியை நேர்ந்துக்கிட்டோம். காணிக்கையோடு போய் நம்பூதிரிக்கு தட்சணை தரணும். பிரசாதமாகப் பால் பாயசம் சமூகத்துக்கு வந்து சேரணும்.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

