இரா. முருகன்'s Blog, page 15

April 15, 2024

நல்ல செய்திகளை அனைவரும் வரவேற்கிறார்கள். அவை இல்லாத பட்சத்தில் உருவாக்கப்படுகின்றன

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவல் அடுத்த சிறு பகுதி

வைத்தாஸ் கை சுட்டிக் காட்டும் முன் ததரினனா என்ற சத்தம் நின்று போய்த் திரும்ப ஆரம்பத்தில் இருந்து மெல்லிய தம்பூரா மீட்டுதலோடு இசை தொடங்கியது.  உயர்வு நவிற்சியோடு சொன்னான் –

 

இதயம் தைக்கும் இந்த இசையோடு, எங்கள் நாட்டு முரசு வாசிக்கும் கானகம் சார்ந்த கலைஞர்களைச் சேர்ந்து இசைக்கச் சொல்லி சர்வதேச சங்கீதம் உருவாக்கலாம்.  உலகம் முழுக்க ஒற்றுமையும், அன்பும், சகோதரத்துவமும், அமைதியும், ஆதிக்க எதிர்ப்பும் நிலவ இம்மாதிரி சார்பு தவிர்த்த உலக இசை உதவி செய்யக் கூடும்.

 

அவன் பேசியது அவனுக்கே பிடித்துப் போனது. அடுத்த மாதம் தூதரகம் வெளியிடும் மாதப் பத்திரிகையில் முதல் பக்கக் கட்டுரை எழுத இதுவே கருப்பொருள். இந்தப் பேச்சு அமைச்சரையும் அதிகாரி சின்னச் சங்கரனையும் கூடப் பாதித்திருப்பதாக அவன் நம்பினான். அதிகாரி அவன் பேசியதைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதைக் கவனிக்கத் தவறவில்லை வைத்தாஸ். பாட்டைத் தொடர்ந்து ஒலிப்பதிவு நாடாவிலேயே வைத்தாஸின் குரலை அதிகாரி சின்னச் சங்கரன் அடக்கிக் காட்டியிருந்தால் வைத்தாஸுக்கு அவன் மேல் மேலதிக வாத்சல்யமும் மரியாதையும் ஏற்பட்டிருக்கும். இப்போதும் தாழ்வில்லை. நேச நாட்டு அமைச்சருக்குப் பிரியமான அதிகாரிகள் தூதரகமும் தேசமும் காட்டும் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களே.

 

அமைச்சர் அதிகாரியைப் பார்த்து, சொல்லு என்று கண் காட்ட சின்னச் சங்கரன் வைத்தாஸிடம் சகல மரியாதையோடும் சொன்னது இது –

 

கலாசார அமைச்சகத்தின் ஆதரவில் அடுத்த மாதம் கேரள மாநிலம் அம்பலப்புழையில் பாரம்பரிய இந்திய இசையும் நடனமும் என்ற கருத்தரங்கு நடக்க இருக்கிறது. பல காரணங்களால் நான்கு முறை தள்ளிப் போட்டு ஒரு வழியாக இப்போது நடக்க இருக்கிறது. ஒரு வல்லரசு நாட்டின் தூதர் கௌரவ விருந்தாளியாக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இருந்தார். அவரைப் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பைத் தொடர்ந்து திருப்பி அவருடைய நாட்டுக்கே அனுப்ப வேண்டிப் போனது. கலை ஈடுபாடு உள்ள அறிஞரான வெளிநாட்டவர் வேறு யாரையும் உடனே தேடிப் போக முடியாத சூழலில், உதவி செய்யும்படி நட்போடும் உரிமையோடும் உங்களிடம் கேட்கலாம் என்று அமைச்சர் யோசனை சொன்னார். நீங்கள் பெரிய எழுத்தாளர் என்றும் நுண்கலைகளின் மகா ரசிகர்  என்றும் அவர் தான் எங்களுக்குத் தெரியப் படுத்தினார்..

 

அனைத்தும் அவனருள் என்று அதிகாரி மெய்மறந்து அமைச்சரைத் துதிக்க, எல்லாப் பெருமையையும் உணவு செரிமானமாகும் மிதமான ஒலியோடு அமைச்சர் வெளிப்படுத்தி, மேஜை உள்ளே இருந்து வெற்றிலைகள் ஒன்றிரண்டை எடுத்து மடித்து வாயில் திணித்துக் கொண்டார்.

 

தான் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பி ஒரு மாதம் விடுமுறையில் மனைவியோடு வெகு காலம் கழித்துக் கூடி இருக்க உத்தேசித்ததைத் தெரிவிக்கலாமா என்று யோசித்தான் வைத்தாஸ்.

 

அது வேண்டாம், இந்த அழைப்பை ஏற்பதே இரண்டு நாடுகளுக்கு இடையே நல்லுறவு வலுப்பட உதவக் கூடியது என்று அவனுக்கு நம்பிக்கை வந்தது.

 

நந்தினியை இங்கே வரச் சொல்லலாம். கடவுளின் மூத்த சகோதரி முதல் பயணமாக ஆடும் பறவைகளின் நட்பு நாட்டுக்கு வருகிறார் என்று உள்நாட்டில் தகவல் பரவட்டும். நல்ல செய்திகளை அனைவரும் வரவேற்கிறார்கள். அவை இல்லாத பட்சத்தில் உருவாக்கப் படுகின்றன.

 

வைத்தாஸ் அம்பலப்புழை மாநாட்டில் பங்கு பெற ஒத்துக் கொண்டான். அர்ஜுன நிருத்தம் என்ற நடனம் பற்றி அவன் பேச வேண்டும் என்று அழைப்பு. ஆண்கள் மயில் தோகை அணிந்து ஆடும் ஆட்டமாம் அது. அவன் நாட்டிலும் பறவை இறக்கை அணிந்து ஆடும் ஆட்டம் ஒன்று உண்டு. இரண்டையும் ஒப்பிட்டுப் பேச அவனுக்கு முடியும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2024 19:54

April 13, 2024

ஒரு ராத்திரியில் ட்ரிக்னோமெட்ரி கற்றுத் திறமை காட்டும் பொருளாதர நிபுணர்களில் உலகம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவல் அடுத்த சிறு பகுதி

இது தென்னிந்தியாவுக்கே உரிய பாரம்பரிய இசை தானே?

 

எங்கே சுட்ட வேண்டும் என்ற இலக்கு இல்லாமல், மேஜையில் தாழ்வான பகுதியில் சுழன்று கொண்டிருந்த ஒலி நாடாவில் இருந்து வரும் இசையைக் குத்துமதிப்பாக அவதானித்துக் கேட்டான் அவன். அது கேட்க நன்றாகத் தான் இருந்தது. ஆனால் ஏதோ பிடிவாதத்தோடு சில வார்த்தைகளையும் சொற்கட்டுகளையும் திரும்பத் திரும்ப உச்சரிப்பதில் அடம் தெரிந்தது. வார்த்தைகள் நிறுத்தாமல் வாதாடுவதை அட்சரம் பிசகாமல், இழுத்துக் கட்டிய தந்திகளின் மேல் சன்னமான அம்பு படர்ந்து சப்தித்துப் போலி செய்து, மேற்கத்திய இசைக் கருவியான வயலின், பாடும் குரலைத் தொடர்ந்து கொண்டிருந்தது. குரல் மேலோங்கிப் போனாலும் ஒரு வினாடி அதை அபிநயித்து விட்டுத் தாழும் வயலின் ஐரோப்பியக் கலாச்சாரத் தன்மையை முழுக்க இழந்து, புருஷனுக்கு சதா கீழ்ப்படிதலுள்ள இந்திய மனைவி போல பதவிசாகக் கூடவே வந்தது வைத்தாஸுக்குப் புதுமையாக இருந்தது. மேலும், ஓங்கி ஒலிக்க வேண்டிய முரசு அதிராது, எல்லா நேரத்திலும் பாடும் குரலுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதும், ஒடுங்கி ஒலிப்பதும் விசித்திரமாக இருந்தது அவனுக்கு. ஒற்றை முரசு தொம்மெனப் புடைத்துத் தொடங்கி வைக்க, கூட்டமாக மற்ற முரசுகள் ஒலிக்க, முரசுகளின் தொகுதி நீட்டி முழங்கி அதிர, அதற்கு இசைந்து குழுவாகச் சத்தம் உயர்த்தி வாய் விட்டுப் பாடும் பாட்டும், கூடவே, அனைவரும் ஒற்றுமையாகக் கலந்து எல்லா இறுக்கமும் உதிர்த்து கால் வீசிக் குதித்தாடும் ஆடும்  ஆட்டமும் நிகழும் கலாச்சாரச் சூழலில் இருந்து வந்தவனுக்கு இந்த இசையில் இனிமை புலப்பட்டாலும் அதன் சமூகக் கட்டுமானம் புரியவில்லை.

 

உங்கள் நாட்டு இசை கொஞ்சம் பலமாக ஒலிக்கும் இல்லையோ?

 

அமைச்சர் கேட்டார். அவருக்கு நாடு வாரியாக கலையையும் கலாச்சாரத்தையும் ரசிக்கத் தேர்ச்சி இருக்கும் என்று வைத்தாஸ் நம்பவில்லை. ஆனாலும் இந்திய அரசுத் துறை அதிகாரிகள் இருக்கிறார்களே. அபூர்வப் பிறவிகள். அவர்கள் மனது வைத்தால், முழு மூடர்களான நிர்வாகிகளுக்கு ஒரு ராத்திரியில் சிக்கலான ட்ரிக்னாமெட்ரி கணிதமோ, லத்தீன் இலக்கணமோ, எகிப்திய வாத்திய இசையோ கற்பித்து அறிவு செறிந்தவர்களாக ஆக்க முடியும் என்று வைத்தாஸ் படித்திருக்கிறான். அதுவும் தென்னிந்திய அதிகாரிக்கு அவருடைய மொழி பேசும் அதிகாரி செய்யக் கூடிய ஊழியம் இன்னும் கூடுதலாகும் போல்

 

அது எப்படியோ, அமைச்சரின் இந்தக் கேள்விக்குத் தான் வைத்தாஸ் காத்திருந்தான். அமைச்சரை வைத்தாஸின் நாட்டுக்கு நல்லெண்ண வருகையாக ஒரு வாரம் எழுந்தருள அழைப்பதற்கான தருணம் இது.

 

உடனே செயல்பட்டான் வைத்தாஸ்.

 

உங்கள் வருகையால் எங்களுக்கு மிகப் பெரிய பெருமை சேர்வதோடு, வல்லரசுகளின் மதிப்பீட்டில் எம்மைப் பற்றிய கணிப்பு மேன்மையுறும்.

 

புன்னகையோடு நல்ல ஆங்கிலத்தில் இதமாகக் கூட்டிச் சேர்த்தான் அவன்.

 

தழையத் தழைய பருத்தித் துணி உடுத்து, சாம்பல் பூசி, சந்தன மணம் கமழ வைத்தாஸின் நாட்டில் இவர் வந்து இறங்கியதும் உலகமே அதை ஆச்சரியத்தோடு கவனிக்கும் என்று நம்ப வைப்பதே தனக்கான பணி என்று தீவிரமாக மிகைப்படுத்திய விழைவுகளைச் சரம் சரமாக வைத்தாஸ் அடுக்க, உள்ளம் குளிர்ந்த அமைச்சரும், அதிகாரியும் கருணை செய்யும் முகமொழியும் உடல் மொழியுமாக அவனைப் பார்வையால் ஆதரித்தார்கள்.

 

உங்க நாட்டில் இந்தியக் கலாசார விழா நடத்தலாமே?

 

யோசனை தெரிவித்தார் அமைச்சர்.

 

 

திரைப் படங்களைத் திரையிடுவதோடு, அவற்றில் நடித்த நடிகைகளையும், விமானத்தில் இடம் இருக்கும் பட்சத்தில் நடிகர்கள் ஒன்றிரண்டு பேரையும் தன்னோடு வைத்தாஸின் நாட்டுக்குக் கூட்டிப் போவதில் சிரத்தை காட்டினார் அவர். அவருக்கு முன்னால் இருந்த அமைச்சர் வைத்தாஸின் நாட்டு சினிமா நடிகைகளைக் காணாமலே காமுற்றதை விட இது உசிதமானதென வைத்தாஸ் நினைத்தான்.

 

நிச்சயம் நடத்தலாம். மேலும் இந்த மாதிரியான பாடகர்களையும் அவர்களுடைய குழுக்களோடு எங்கள் நாட்டுக்கு வருகை புரிய வைக்கலாம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2024 19:38

April 12, 2024

பெண்மைச் சாயலைப் பூசிய பொன்னாடை போர்த்த, ஆர்பாட்டமில்லா முரசு முழங்கி வரவேற்பு

வாழ்ந்து போதீரா நாவலின் அடுத்த சிறு பகுதி

 

இனிஷியல்கள் மட்டும் வைத்துக் குறிப்பிடுவது இங்கே வழக்கம் இல்லையோ?

 

ஆமாம். இனிஷியல்கள் மட்டும் போதும் என்றால் என்னைக் கழுதை என்று அழைக்கலாம்.

 

சங்கரன் சொல்லி விட்டுச் சிரிக்க அமைச்சரும் கலந்துகொண்டார்.

 

வைத்தாஸ் தான் ஏதும் தவறாகப் பேசிவிட்டோமோ என்று உள்ளார்ந்த பயத்தோடு மன்னிப்பு கேட்கும் தோரணையில் மறுபடி சங்கரனை வணங்கினான். இப்படி வணக்கமும் மறு வணக்கமுமாக இந்தச் சந்திப்பு முடிந்து விடும் என்று அவனுக்குத் தோன்றத் தொடங்கியது.

 

அரசூர் சுவாமிநாதன் சங்கரன் என்பதை ஏ எஸ் எஸ் என்று சுருக்கி, சூப்ரண்டெண்ட் ஏ எஸ் எஸ் கவனத்துக்கு என்று எனக்கு முன்பெல்லாம் குறிப்புகள் வரும்.

 

இன்னொரு அலை சிரிப்பு உயர்ந்து அடங்கி உட்கார்ந்த பிறகு தான் வைத்தாஸுக்கு நினைவு வந்தது. கையில் எடுத்து வந்த சரிகை ஆடையை அமைச்சருக்குப் போர்த்த மறந்து விட்டது. அவன் நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு அருகே பூக்கடையில் தென்னிந்தியப் பாணியில் அடர்த்தியாக ஜவந்திப் பூக்களை வைத்துத் தொடுத்த மலர் மாலைதான் வாங்கி எடுத்து வருவதாக இருந்தான். ஆனால் தூதரக உதவி அதிகாரிகள் தற்போதைய மோஸ்தரில் கதர் நூல் மாலையோ, சரிகைத் துண்டோ தான் கவுரவப் படுத்தத் தேவையெனத் தெரிவித்து சரிகைத் துண்டு வாங்கி வந்திருந்தார்கள்.

 

பொன்னாடையை அமைச்சருக்குப் போர்த்தி மரியாதை தெரிவித்ததும் சின்னச் சங்கரன் அதைத் திரும்ப வாங்க அமைச்சரிடம் கைநீட்டினான். இருக்கட்டும் என்று தடுத்த அமைச்சர் அதைப் போர்த்திய படிக்கே புன்சிரித்தார். பெண்மைச் சாயலைச் சற்றே பூசிய சரிகைத் துண்டு அது.

 

தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ் பேசும் மதராஸ் மாகாணத்தில் எங்கே போனாலும் சந்தன வாடைதான், சவ்வாது வாடை தான், உயர்ந்த சங்கீத வாடை தான். வாழ்க்கையில் உன்னத விஷயங்களை நேசிப்பவர்கள் நாங்கள்.

 

அமைச்சர் பெருமையோடு பொன்னாடையைத் தோள்களுக்கு மேல் இழுத்து விட்டுக் கொண்டு சொல்ல, சின்னச் சங்கரன் ஒரு சிரிப்போடு ஆமோதித்ததைக் கவனித்தான் வைத்தாஸ். அது மறுபடியும் சங்கடத்தோடு கூடிய சிரிப்பாக இருந்ததையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.

 

மரியாதை கருதி, இரண்டு கைகளையும் நாடக பாணியில் உயர்த்தி, தமிழ் பேசும் உங்கள் மாநிலம் பற்றி உலகமே அறிந்திருக்க உங்கள் மொழியும் கலாச்சாரமும் உயர்ந்த ரசனையுமன்றோ காரணம் என்று அரைக் கண் மூடிச் சொன்னான் வைத்தாஸ். அமைச்சருக்கு இந்தத் தூதனைப் பிடித்துப் போனது.

 

உங்கள் அறை இதமான இந்திய வாசம் பூண்டுள்ளது குறித்து வாழ்த்துகள் என்றான் வைத்தாஸ். ஒரு நாளைக்கு இருபத்துநாலு மணி நேரமும் சந்தனம் மணக்க, இந்த சங்கீதத்தைக் கேட்டபடி தான் தென்னிந்தியாவில் காலம் போகிறது என்று அவனுக்கு நம்பக் கடினமாக இருந்தாலும், அதில் ஈடுபட்டு, கொஞ்சம் பொறாமையும் கொண்டவனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே தற்போது செய்ய வேண்டியது என்று உணர்ந்தான் வைத்தாஸ்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2024 20:54

April 11, 2024

நேசமான மனைவி கணவனைப் பின் தொடர்வது போல் வாய்ப்பாட்டை வார்த்தை விடாமல் சொல்லிப் போகும் வயலின்

வாழ்ந்து போதீர் – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவதிலிருந்து

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

வாழ்ந்து போதீரே  அத்தியாயம்  இருபத்திரெண்டு –   

          

வைத்தாஸ் அறைக்குள் நுழைந்தபோது அங்கே சந்தன மணம் தூக்கலாக  வந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். கொத்தாகக் கொளுத்தி ஜன்னல் பக்கம் வைத்த ஊதுபத்திகளின் ஒட்டு மொத்த நறுமணம் அது. கூடவே, மேஜை மேல் வைத்த டேப் ரிக்கார்டரில் இருந்து தரன்னன்னா என்று நிறுத்தி நிதானமாக ஆனால் வார்த்தைகள் தெளிவில்லாமல் பாடும் ஓர் ஆண் குரல் ஒலித்தபடி இருந்தது. சுழலும் ஒலி நாடாவோடு அந்தக் குரலும் சுற்றி வளைத்து உயர்ந்து ஊதுபத்தி வாடையோடு சூழ்ந்து கொண்டிருந்தது. நெற்றியில் பட்டையாக வெண்பொடி தரித்த, தட்டுச் சுற்றாக வேட்டி அணிந்த அமைச்சர் முன், வைத்தாஸ் போல சூட் உடுத்த அதிகாரி ஒருவர் நாற்காலியில் தொடுக்கியது போல் உட்கார்ந்திருந்ததும் வைத்தாஸ் கண்ணில் பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, அறை நல்ல வெளிச்சமாக இருந்தது. இந்திய அமைச்சகங்களில் அமைச்சரின் அறைக்குள் முழுக்க இருள் பரத்திக் கொண்டு மடிப்பு மடிப்பாகத் தொங்கிக் கொண்டிருக்கும் துணித் திரைகள் பலவும் காணாமல் போயிருந்தன.

 

வைத்தாஸ் இந்த அறைக்குள் வந்திருக்கிறான். அது பதினெட்டு மாதங்களுக்கு முன் நடந்தது.. அதற்கு அப்புறம் தான் இங்கே ஒரே ஒரு முறை அமைச்சர் மாற்றமும், அவனுடைய சொந்த நாட்டில் பதினோரு தடவை அரசாங்க மாற்றமும் நடந்து விட்டிருந்தது. திரும்பவும் அதிகாரபூர்வமான தூதராகப் பதவியேற்று இங்கே இப்போது தான் வருகிறான். மாறித்தான் இருக்கிறது எல்லாம்.

 

அறையில் சந்தன மணமும் மற்றதும் தவிர, அமைச்சரின் மேஜையும் முன்னால் இருந்த திசைக்கு நேர் எதிரே பார்த்துப் போடப் பட்டிருந்தது. இந்தி எழுத்துக்கள் நிறைந்த கேலண்டரும், சுவரில் ஜவஹர்லால் நேரு படம் போட்டு இந்தியில் எழுதிய வாசகமும் காணோம். தென்னிந்தியக் கோவில் கோபுரம், இறகு விரித்து ஆடும் பறவை, அதை அணைத்துச் சாய்ந்திருக்கும், கையில் வேல் பிடித்த கடவுள் படம் என்று முழுக்க மாற்றம் தெரிந்தது. வட இந்தியாவில் இருந்து தெற்கு திசைக்கு நகர்ந்திருக்கிறது அந்த அறை.

 

வைத்தாஸ் நுழைந்ததும் அமைச்சர் எழுந்து நின்று கை கூப்பி வரவேற்றார். ஆறு அல்லது ஆறரை அடி உயரம் அவர். வைத்தாஸை விட ஒரு குத்து அதிகமாகவே நெட்டையாக வளர்ந்தவர். அவனை விட இளையவர். நெற்றி நிறையப் பூசி இருந்த வெண்பொடி மேல் அவசரமாக இட்ட கீற்றாகச் சிவந்த சிந்தூரம். அவர் மேஜையில் வாடிய வெற்றிலை நறுக்கில் அதுவே இருந்தது.

 

வருக, வருக என்று அன்போடு சிரித்தார் அமைச்சர். கூடவே எழுந்து நின்ற அதிகாரியும் வைத்தாஸைப் பார்த்துக் கை குவித்து வணங்கினார்.

 

வெளிநாட்டு தூதர்களை அமைச்சர்கள் சந்திக்கும்போது மூத்த அதிகாரிகளோடு சேர்ந்து அதை நிகழ்த்துவதை வைத்தாஸ் இங்கே கவனித்திருக்கிறான். அவர்கள் எல்லாருமே தலை நரைத்த அல்லது முழுக்க வழுக்கை விழுந்தவர்கள். ரிடையர் ஆகப் போகிறதை முகத்தின் சுருக்கங்கள் சொல்லும் வட இந்திய முதியவர்கள். கருத்த இந்த அதிகாரி நடுவயதில் அடியெடுத்து வைத்திருப்பான். வட இந்தியச் சாயல் இல்லாத அதிகாரிகள் இங்கே அபூர்வம் என்பதை வைத்தாஸ் அறிவான். நெற்றியில் தாராளமாக வெண்பொடி மூன்று பட்டைகளாகத் தரித்த அமைச்சரும், அதைச் சிறு கீற்றாகப் பூசியிருந்த மூத்த அதிகாரியும் தெற்கிலிருந்து வந்தவர்கள் என்பது வைத்தாஸுக்கு ஆச்சரியகரமான விஷயம். இவர்களுக்கு இந்தி தெரியுமா?

 

அறிமுகச் சடங்கு முடிந்த பிறகு அந்த அதிகாரி மறுமுறையும் எழுந்து நின்றார். வாடிய இலை நறுக்கை மேஜையில் இருந்து எடுத்து வைத்தாஸ் முன் நீட்டினார். வைத்தாஸ் அதில் இருந்து வெண்பொடியை எடுத்து நெற்றியில் அணிந்து கொள்ள எதிர்பார்ப்பு இருந்ததை உணர்ந்து கொண்டான்.

 

பழனி கோவில் சந்தனாதி வீபுதி. முருகன் கோவில் அது. உங்க ஊர்லேயும் முருகன் கோவில் இருக்குமே. மொரிஷியஸ்லே இருக்கு. போயிருக்கேன்.

 

அமைச்சர் ஏற்கனவே அறிந்ததை உறுதிப் படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு சொன்னார். ஒரு வினாடி வைத்தாஸ் தயங்க, முன்னால் நின்ற அந்த அதிகாரி மன்னிப்புக் கேட்கும் தோரணையில் சங்கடமாகச் சிரித்தார். சங்கரன் என்ற பெயருள்ளவர் அந்த அதிகாரி என்றும், அமைச்சகத்தில் சங்கரன் என்ற பெயருள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதால் இவர் சின்னச் சங்கரன் என்று அழைக்கப் படுகிறார் என்றும் அறிமுகமாகும் போது தகவல் சொல்லியிருந்தார் அமைச்சர்.

 

சின்னச் சங்கரனை மேலும் சங்கடமடையச் செய்ய வேண்டாம் என்று நினைத்த வைத்தாஸ் சங்கரன் போல் சிறு கீற்றாக அணிந்து கொண்டான்.

 

சரியாக வைத்துக் கொண்டிருக்கிறேனா திரு சின்ன சின்ன

 

அவனுக்கு அதிகாரியின் பெயர் அதற்குள் பாதி மறந்து போயிருந்தது. பெயரைத் தப்பாக உச்சரிக்கும் கெட்ட பழக்கம் வைத்தாஸின் நாட்டில் சபிக்கப்படுவதாகும். ஒவ்வொரு முறை அப்படித் தவறாக உச்சரிக்கப் படும்போதும், ஏற்படுத்தப்பட்ட மொத்த வாழ்நாளில் ஒரு நாள் குறைக்கப்படும் என்ற நம்பிக்கை வலுவாக அமைந்த நாடு அது. கடவுளின் மூத்த சகோதரி, வீட்டு முன்னறையில் ஆடும் பறவை போன்ற சமீபத்திய படிமங்கள் போல் இல்லாமல் வழிவழியாக வருகிற நம்பிக்கை இது. கடவுளின் மூத்த சகோதரி நந்தினியும், கடவுளின் மைத்துனனான வைத்தாஸும் நிகழ்கலையிலும் பாரம்பரிய ஓவிய முறையிலும் அற்புதம் கலந்த பிம்பங்களோடு காலக்கிரமத்தில் நிரந்தரப் படுத்தப்படலாம்.

 

உங்களை நான் எப்படி அழைக்க?

 

மரியாதையோடு வைத்தாஸ் கேட்க, சின்னச் சங்கரன் உதவிக்கு உடனே வந்தான்.

 

சங்கரன் என்றே கூப்பிடலாம்..

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2024 20:18

சிறிய அளவில் புதுமைகள் நிகழ்த்திக் காட்ட எமிலி காத்திருந்தாள்

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து (நான்காம் நாவல் – அரசூர் நாவல் வரிசை)

எமிலி பிறந்த ஒரு வருடத்திலேயே சிறு சிறு அற்புதங்கள் நிகழ்த்த வல்லமை படைத்தவளாக இருந்து வருகிறாள். பள்ளியில் படிப்பதிலும், எறிபந்து விளையாட்டிலும் கூட ஆற்றல் மிகுந்தவள். பள்ளி நாட்களில் அற்புதம் நிகழ்த்தாமல் விடுமுறை தினங்களில் மட்டும் நடைபெற வைப்பதால் அவளுக்குக் கல்வியிலும் விளையாட்டிலும் இருக்கும் ஈர்ப்பும் அவற்றின் மேல் வைத்திருக்கும் மதிப்பும் புலனாகும்.

 

நினைத்த மாத்திரத்தில் கையில் இருந்து பூ இதழ்களை உதிர்ப்பது, சிறு நிலப்பரப்பில், அது சில சதுர அடிகள் பரப்பளவு கொண்டதாக இருந்தாலும் சரி, அந்த இடத்தில் மட்டும் மழை பொழிய வைப்பது, மழைக்கு நடுவே ஒரு சிறு இடத்தில் மட்டும் மழை இன்றி வைப்பது, நடக்கும் போது செவ்வெறும்புகள் குறுக்கிட்டால் அவை அனைத்தும் அப்புறம் போய் வரிசையாக அசையாமல் நின்று மரியாதை செலுத்தச் செய்வது போன்ற அற்புதங்களை எமிலி நிகழ்த்தி வருகிறாள். புற்றில் இருந்து ஈசல்களை வெளி வரச் செய்யும், பரவலாகக் கோரிக்கை வைக்கப்பட்டு நிகழ்த்தும் மற்றொரு அற்புதம் அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிவந்த ஈசல்களை அரிசி கலந்து வறுத்துத் தின்பதால் ஈசல் இல்லாத நாட்கள் வரும் என்பதாலேயே அந்தத் தடை. ஈசல் இல்லாத மழைக்காலங்கள் குறைந்த அதிர்ஷ்டம் தரக் கூடியவை அன்றோ.

 

வாசல் கதவு மறுபடி திறக்க, வெளியே நின்று கருத்து வடிவாகத் தடித்த வனப்புள்ள ஓர்  இளம் பெண் அதிகாரி நந்தினியை வணங்கினாள்.

 

நீங்கள் கேட்ட சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்க வந்திருக்கிறார் என்று ஆண் அதிகாரி சொன்னார். என்ன சந்தேகம் என்று நந்தினிக்கு மறந்துவிட்டது. இந்தச் சிறுமியின் பெரிய தகப்பனார் பற்றி என்று அடியெடுத்துக் கொடுத்தபடி அவர் புதிதாக வந்த பெண் அதிகாரியைப் பார்க்க அவள் தலையைக் குனிந்து மீண்டும் வணங்கி உள்ளே வந்தாள்.

 

உள்ளறையில் பெண் அதிகாரி கண்கள் தரையை நோக்கி இருக்க மெல்லிய குரலில் நந்தினியிடம் கூறியது –

 

ஆணும் பெண்ணும் இணை விழைந்து ஈடுபட்டு முடிந்ததும் அவனால் வெளியேற முடியாமல் அவளுக்குள்ளேயே சிறை வைக்கச் செய்யும் மந்திரவாதத்தில் இந்தச் சிறுமியின் பெரிய தகப்பனார் வல்லவர்.  திருமணம் மீறிய உறவுகள் அதிகமாக இருக்கும் சூழலில், வேலி தாண்டி வெளியே போன ஆண்களை உடனே பிடித்து, மிக வலுவான தடயத்தின் அடிப்படையில் தண்டிக்க இதுவே சிறந்த வழி என்று நாட்டில் பலரும் எண்ணுகிறார்கள். அறுவை சிகிச்சை நடத்திக் கூட அவனைப்  பிரித்து வெளியே எடுக்க முடியாது.

 

அந்தப் பெண் அதிகாரியை வாஞ்சையாகத் தோளில் தட்டி விடை கொடுத்தாள் நந்தினி. எழுந்த போது கண் இருண்டு வர, சுவரில் கை வைத்து அழுத்தியபடி. அங்கேயே நின்றாள்.

 

நந்தினியைச் சுற்றி இருளும் ஒளியும் கலந்து நிகழும் ஓவியமாகக் காட்சி விரிந்து கொண்டிருந்தது.

 

வைத்தாஸே, அடே வைத்தாஸே. ஜூஜூ மந்திரவாதம் செய்யப் போறேன்.  நீ வந்ததும் சிறைப் பிடிக்க வேணும். உடனே வந்து சேர். உள்ளே வந்த பின்னாடி நானாக விடுவிக்கும் வரை நீ திரும்பிப் போகவே முடியாது.  அனுபவிக்கணும் வாடா கழிசடையே என் காது மடலைச் சுவைத்துக் காதல் செய்ய வா.  உடல் சூட்டில்  காட்டெறும்புப் புற்று  சாம்பலாகட்டும்.

 

புகையோடு எழும் மாடிப்படி வளைவில் தோளில் குரங்குக் குட்டியோடு நின்றிருந்த பெண் நந்தினியைத் திரும்பிப் பார்க்கிறாள்.  பக்கத்தில் வைத்தாஸ் அந்தப் பெண்ணைக் காமம் நனைந்த குரலில் விளிக்கிறான் –

 

வீராவாலி வா. என் ரதியே,  நான் மூழ்கிக் கரைய வா.

 

வீராவாலி என்ற அந்தப் பெண் மோகம் தலைக்கேறச் சிரிக்கிறாள். இருகை கொண்டு அவளைத் தூக்கி இடுப்போடு அணைத்து, அவளுடைய உடலின் வியர்வை மணத்தை ஆசையோடு முகர்கிறான் வைத்தாஸ்.

 

வைத்தாஸே திருடா, அந்த அழுக்குச் சிறுக்கி உனக்கு ரதியா?  சீக்குப் பிடிச்சு நீ அழுகி உதிர்ந்து போகப் போறே.

 

வைத்தாஸ் சிரிக்கிறான். அவன் வீராவாலியின் மார்பகங்களை ஆசையோடு வருடியபடி சொல்கிறான் –

 

மன்னிக்கணும். நான் வைத்தாஸ் எழுதும் நாவலில் வரும் வைத்தாஸ். இவளோடு சுகித்துக் கிடப்பது தவிர, என்னைப் படைச்ச வைத்தாஸ் எனக்கு வேறு எந்த வேலையையும் தரலே.

 

அவன் சொல்லியபடி நிதானமாக,  இருளில் கிடந்த மாடிப்படி ஏறுகிறான். மேல் படியில் நின்று திரும்பப் பார்க்கிறான். இறங்கி வருகிறான்.

 

குரங்குக் குட்டியை விட்டுட்டு வா.

 

வைத்தாஸ் படைத்த வைத்தாஸ் வீராவாலியின் தோளில் இருந்து குரங்குக் குட்டியை இறக்கி விட்டு அவள் இடையைத் தழுவிக் கொள்கிறான். குரங்குக் குட்டி அறைக்கு வெளியே ஓடுகிறது.

 

வைத்தாஸின் வைத்தாஸும் வீராவாலியும் நந்தினியின் கட்டிலில் சரிகிறார்கள்.

 

பின்னால் ரெட்டைக் கட்டிலில் ஆதி மனிதனும் மனுஷியும் வெறியோடு கலக்கும் வாடை அறையெங்கும் நிறைய, முன்னறைக்கு மெல்ல வந்தாள் நந்தினி. ராணுவ அதிகாரி மயக்கமடைந்து சோபாவில் கிடந்தார். ஒரு சதுர அடிப் பரப்பில் ரோஜாப் பூ வாசனையோடு அடர்த்தியான தூறல் விழுந்து கொண்டிருக்க, காத்திருந்த சிறுமி குரங்குக் குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.

காப்பி சாப்பிடலாம் வா.

 

நந்தினி அந்தப் சிறுமியை அருகில் அழைத்தபோது சுவரில் மாட்டியிருந்த ஓவியத்தில் இருந்த மயில் ஆட ஆரம்பித்திருந்தது

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2024 01:46

April 9, 2024

தலைக்கு மேல் மட்டும் மழை பெய்திட ஆப்பிரிக்க ஜோஜோ மாந்திரீகம்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி

வைத்தாஸ் அடுத்த வாரம் இங்கே இருப்பான். தில்லியில் தூதரகம் புனரமைக்கிற, நட்புறவை மறு கட்டமைப்பு செய்கிற முக்கியமான பணி அவன் தான் செய்தாக வேண்டியிருக்கிறது. தேசியக் கடமை.

 

நந்தினி மக்களவை அதிபராக அடுத்த வாரம் பதவியேற்பாள். தேர்தல் அறிவிப்பதும், நட்பான வல்லரசு நாடு இங்கே தொடங்க இருக்கும் மோட்டார் கார் தொழிற்சாலைக்கு அஸ்திவாரம் இடுவதும் மக்கள் அதிபராக அவள் செய்ய வேண்டிய முதல் செயல்களில் அடக்கம்.

 

இல்லை, இன்னும் நாட்டின் பொருளாதார நிலைமை முன்னேறவில்லை. ஆயிரம் பேருக்கு ஒரு கார் என்ற நிலை தான் இன்னும். வல்லரசின் கார்த்  தொழிற்சாலையில் கனரக ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு நட்பு நாடுகளுக்கு மற்றவர்களோடு நட்பு வளர்க்க ஏற்றுமதி செய்யப்படும். நட்பு வளர்ப்பதில் நட்போடு கூடிய படையெடுப்பும் அன்போடு ஆக்கிரமித்தலும் அடங்கும்.

 

நந்தினி நாட்டு அதிபராக நட்பான வல்லரசு நாடுகளுக்கு இரண்டு வார நல்லெண்ணப் பயணம் இந்த மாத இறுதியில் போக வேண்டி வரும். அந்த நாடுகளுக்குப் போகும் போது அவளுடைய மாந்திரீகம் கலந்த ஆளுமை வெளிப்படுத்தப்படாது. இந்திய முறை நாட்டியத் தேர்ச்சியும், ஆங்கிலப் புலமையும், நிர்வாக அறிவின் முதிர்ச்சியும் வெளித் தெரியும் படி அவள் நடக்க வேண்டி வரும். வைத்தாஸ் அவளோடு அநேகமாகப் பயணத்தில் வருவான்.

 

மாந்திரீக ஆளுமை என்பது வீட்டு முன்னறை ஓவியத்தில் இருந்து இறங்கி மயில் ஆடி மரியாதை செய்த ஒன்று. அந்த மயில் இனியும் ஆடும் என்று நட்பு வல்லரசு நாடுகளில் சந்திப்பின் போது எதிர்பார்க்கப் படலாம். பறவையும் அதன் நடனமும் வளத்தோடு தொடர்புடையதாக உணர்ந்து கொள்ள வேண்டிய தொன்மம் சார்ந்த அழுத்தமான படிமங்கள் மட்டுமே என்றோ மற்றப்படி உசிதமாகவோ நந்தினி பேசலாம். அதன் பிறகு, அவர்கள் பறவைகள் இடம் பெறும் வேறு ஓவியங்களைக் காட்டி  அவற்றில் சிறைப்பட்ட பறவைகளை ஆடவும் அகவவுமாக அற்புதம் நிகழ்த்தச் சொல்லிக் கேட்க மாட்டார்கள் என்பது உறுதி.

 

உள்நாட்டில் நந்தினிக்கு இருக்கும் பிம்பம் முழுக்க மாந்திரீகம் மற்றும் காருண்யம் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டது. அவள் பிரார்த்தனை செய்தால் தானியங்கள் ஆகாயத்தில் இருந்து சொரியும். அவள் கடுமையாகப் பார்த்தால் எதிரிகள் அடுத்த ஒன்பது மணி நேரத்துக்குள் குழைந்து விழுந்து உடல் சுருங்கி இறப்பார்கள். அவள் அன்போடு கை குலுக்கினால் தீராத நோய்கள் குணமாகும் என்று விரியும் அந்த மாந்திரீகப் புனைவை நந்தினி இனி பெரும்பாலும் இறக்கி வைக்கலாம். இந்தச் சிறப்புகளை அவளிடமிருந்து பெற்று, சிறு சிறு அற்புதங்களை அவள் சார்பில் நிகழ்த்தத் தக்க விதத்தில் மரபுத் தொடர்ச்சி ஏற்படுத்தித் தரப்படும். அதைப் பற்றி உரையாடவே இந்தச் சந்திப்பு.

 

கடவுளுக்கு மூத்த சகோதரியின் அற்புதங்கள் நிகழ்த்தும் புனித ஆளுமையைக் கைமாற்ற பத்து வயதுக்கு மேற்படாத சிறுமி அல்லது சிறுவன் தேர்ந்தெடுக்கப் படலாம் என்று முந்தாநாள் முடிவானது.

 

ஜோஜோ அல்லது வூடூ மந்திரவாதம் செய்யும் பரமபரைக் குடும்பங்களில் தேடி அது அமையாத் பட்சத்தில் வெளியில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது. வூடூ முழுக்கத் தீமை வருத்தும் என்பதால் நன்மை வருத்தும் ஜோஜோ பிரிவு மாந்திரீகத்தைக் குலத்தொழிலாகச் செய்யும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

 

அதிகாரி பேசிக் கொண்டு போக, காப்பி பிளாஸ்கோடு உள்ளே வந்தாள் பணிப்பெண். கதவுக்கு வெளியே முன்னறையில் கருத்து மெலிந்த ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தது நந்தினி கண்ணில் பட்டது. சிறுமி கையை உயர்த்த ரோஜாப்பூ இதழ்கள் தரையைப் பார்த்துக் கவிழ்ந்த அவளுடைய வெற்று உள்ளங்கைகளில் இருந்து  மெல்லத் தரையில் உதிர்ந்தன.

 

நந்தினியின் பார்வை போன இடத்தைத் தொடர்ந்து ராணுவ அதிகாரியும் பார்த்து விட்டு அவசரமாக நந்தினியை வணங்கினார்.

 

கையை அசைத்துப் பூ வரவழைத்துப் போகிற இடமெல்லாம் குப்பை போடக் கூடாது என்று எச்சரித்துத்தான் கூட்டி வந்தேன். மன்னிக்க வேண்டும் அம்மா. இதோ அவளை மேலும் எச்சரித்து விட்டு வருகிறேன்.

 

அவர் கிளம்ப, வேண்டாம் என்று நந்தினி கை காட்டி நிறுத்தினாள்.

 

அந்தப் பெண் தானா அற்புதங்களை என் சார்பில் நிகழ்த்தப் போவது?

 

அவர் மகிழ்ச்சியோடு தலையாட்டினார்.

 

அவள் பெயர் என்ன?

 

எமிலி ஆந்த்ரோசா. வடக்குப் பகுதியில் இருந்து வருகிறவள்.. நான்கு தலைமுறையாக ஜோஜோ நல்ல விஷயங்களுக்காகப் பிரயோகிப்பதைக் குலத் தொழிலாகக் கொண்ட குடும்பம். காதல் கைகூட, பிரிந்த கணவன் திரும்பி வரவும், இருப்பவன் போகாமல் இருக்கவும் உதவும் தாயத்து தயாரித்து விற்பனை, தொழில் அபிவிருத்திக்கான மாந்திரீகப் பிரயோகங்கள் நடத்துதல் இப்படியான செயல்களை இவள் அப்பா செய்து வருகிறார். இவருடைய பெரியப்பா இன்னும் பிரபலமானவர். அவர் தற்போது உயிரோடு இல்லை.

 

என்ன மாதிரியான அற்புதங்கள் செய்த மனிதர் அந்த இறந்த மந்திரவாதி? நந்தினி கேட்டாள்.

 

அதிகாரி கொஞ்சம் தயங்கினார். ஒரு பெண் அதிகாரி வந்து கொண்டிருக்கிறார் அம்மா. அவர் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுவார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2024 19:33

April 8, 2024

சிறு ரோகங்களோடும், மெனோபாஸ் கோபங்களோடும், தலைமுடிக்கான சாயத்தோடும் வயோதிகத்தில் அடியெடுத்து வைத்தவள்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி இங்கே

அரசூர் நாவல்கள்

1.அரசூர் வம்சம்

2. விஸ்வரூபம்

3. அச்சுதம் கேசவம்

4.வாழ்ந்து போதீரே

 

= ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு

=========================================================================

ஒன்பது மணிக்கு வந்தவர் இரண்டாம் கட்ட ராணுவத் தலைவர். ஓங்கு தாங்காக வளர்ந்த கெச்சலான இளையவர். இன்னும் விடலைப் பருவம் நீங்காமல் முகம் முழுக்கப் பருக்களாக வெடித்து வாரிக் கிடந்தது. இந்த வயதில் ராணுவத்தில் தொடக்க நிலை உத்தியோகங்கள் தான் தரப்படுவது வாடிக்கை. இவன் செயற்கரிய செயல் ஏதாவது செய்து இந்தப் பதவி உயர்வு கிட்டியிருக்கலாம்.

கைகளை விறைப்பாக வைத்து அசையாமல் சிலை போல நின்றபடி இருந்தவனை உட்காரச் சொன்னாள் நந்தினி. பெயர் கேட்டாள், தன் சரித்திரத்தை இரண்டு நிமிடத்தில் மரியாதை விலகாத குரலில் ஒப்பித்தான் வந்தவன். அவன் சோபா நுனியில் விழுவது போல் உட்கார்ந்திருந்தான்.

 

இன்னும் பத்து வருடம் இந்த அமைதி நிலைத்திருக்கும் என்பது உண்மைதானா?

 

நந்தினி அவனிடம் விசாரித்தாள். அரசு ஆரூடக்காரர்கள் உறுதியாகச் சொன்னாலும் அவள் இன்னும் முழுக்க நம்பாத செய்தி அது.

 

பத்து வருடம் தான் அம்மா. பெரிய காலவெளி அது. பத்து வருடத்தில் என்னென்னவோ கடவுளின் சகோதரியின் அருளால் நடந்தேறுமல்லவா?

 

வந்தவன் கேட்டு விட்டு நந்தினியைப் பார்த்து மரியாதை விலகாது சிரித்தான். சொல்வதைக் கருணையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற யாசித்தல் அவன் பார்வையில் தட்டுப்பட, நந்தினி ஆமாம் என்கிறதாகத் தலையாட்டினாள்.

 

இந்த ஆப்பிரிக்க அரசு தாக்குப் பிடித்து இன்னொரு பத்து வருடம் ஆட்சியைத் தொடரலாம். பத்து வருடத்தில் அந்த நாடே உலக வரைபடத்தில் காணாமல் போகலாம். பத்து வருடத்தில், யார் கண்டது இங்கே இந்தக் கண்டம் முழுவதும் உண்மையான ஜனநாயகம் கூட ஏற்பட்டு விடலாம். நந்தினிக்கு இன்னும் பத்து வயது கூடி ஐம்பதுக்களில் சிறு ரோகங்களோடும், மெனோபாஸ் கோபங்களோடும், தலைமுடிக்கான சாயத்தோடும் அவள் வயோதிகத்தில் அடியெடுத்து வைப்பாள். அது நிச்சயமானது.

 

உன் பிரார்த்தனைகளைக் கூறு.

 

கடவுளின் மூத்த சகோதரி கீழ்ப்பட்டவர்களை விரிவாகப் பேசக் கோரும் மரபுப்படி கேட்டாள் நந்தினி.

 

அவன் பேசிக் கொண்டே போனான். கேட்பது தவிர குறுக்குக் கேள்விக்கு இடம் இல்லாத பேச்சு அது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2024 23:05

April 7, 2024

செம்மறி ஆட்டின் பக்குவமாக சமைக்கப்பட்ட கல்லீரல் போல் வலிமை தருகிறவர்

வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவல் பகிரப்படுகிறது, வாசித்து மகிழ்க

 

குனிந்து வளைந்து காப்பி ப்ளாஸ்கை சிறிய மேஜையில் வைத்துப் போனாள் பணிப்பெண். இந்தப் பானம் பரிசோதிக்கப்பட்டது என்று அறிவித்தபடி பின்னோக்கி நடந்து வணங்கிப் போன பரிசோதனை அதிகாரியைத் தொடர்ந்து வந்த ஊழியர் பானம் அருந்த நல்ல நேரம் என்று அறிவித்துப் போனார். நந்தினி காப்பியைக் குவளையில் சரித்து அருந்த  ஆரம்பித்தாள்.

 

அறை வாசலில் மரியாதையோடு நின்ற வீட்டு நிர்வாக ராணுவ அதிகாரி அவள் பார்வை தன்மேல் படப் பொறுமையாகக் காத்திருந்தார்.  என்ன என்ற கேள்வியை நந்தினி பார்வையில் கேட்க அவர் சொன்னார் –

 

எங்கள் அன்பு அன்னையும் நாங்கள் விசுவாசிக்கும் மதங்கள் கடந்த கடவுளின் மரியாதைக்குரிய மூத்த சகோதரியும், ஆயிரம் ஆண்டு நிறைவாழ்வு வாழ்ந்த பெருமைக்குரியவரும், இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து அருள வந்தவரும், இந்தியப் பறவை பாடி ஆடும் முகப்பு கொண்ட மாளிகையில் வசிப்பவரும்,  எதிரிகளுக்குக் காட்டு எறும்புகளின் புற்று போலப் பயமூட்டக் கூடியவரும், அடியவர்களுக்கு செம்மறியாட்டின் கல்லீரலைப் பக்குவமாகச் சமைத்த உணவு போல் ஆனந்தமும் வலிமையும் அளிப்பவருமான நாட்டின் உன்னதத் தலைவர் இதைக் கேட்க மனம் கொண்டு செவி தர வேணும்.

 

சொல்லு என்பது போலக் கையைக் காட்டினாள் நந்தினி. இந்த மெய்க்கீர்த்தி இவர்களுக்கு கரதலப் பாடமாகச் சொல்லத் தெரிந்த பிறகு தான் நந்தினி வசிக்குமிடத்தில் இவர்களுக்குப் பணி ஒதுக்கப் படுகிறது. மாதம் ஒரு முறை இந்த வரிகள் அங்கங்கே மாற்றப்பட்டு, புது வரிகள் சேர்க்கப்பட்டு, பழையவை நீக்கப் பட்டு ராகத்தோடு சொல்ல இவர்களுக்குப் பயிற்சி தர அரசு ஊழியர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் காலையில் வாத்திய இசையோடு பள்ளி எழுப்பவும் வருகிறவர்கள், நந்தினிக்கு எல்லாம் தெரியும்.

 

எனில் கேட்டருளுக. ஒன்பது மணிக்கு ராணுவத் தலைவர் உங்களைச் சந்திக்க வருகிறார். நேரம் உசிதமல்லாத பட்சத்தில் கருணை கூர்ந்து அறிவிக்க வேண்டும்.

 

வரச் சொல்லு என்று சலிப்போடு கை காட்டி அவள் குளிக்கக் கிளம்பினாள். எல்லா தினமும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன? ஞாயிறன்று மொத்தம் ஐந்து பேர் மட்டுமே காவலுக்கு இருப்பார்கள்.

 

வழக்கம் போல் பதினைந்து இல்லை. ஏற்கனவே செய்து வைத்த உணவையோ, உணவு விடுதியில் அதிகாரிகளின் நேர் பார்வையின் கீழ் சமைத்த உணவையோ உண்ண அவளுக்கு இயலும். அதாவது அவள் விருப்பப் பட்டால் காலடியில் வைத்து வணங்கிப் படைக்கப்படும். அந்த உணவும் எச்சில் செய்யப்பட்டதாக இருக்கும். உணவுப் பரிசோதனை அதிகாரி வீட்டுக்கு உணவை எடுத்துப் போய் அக்கறையோடு செய்யப் படும் சோதனை அது. ஞாயிற்றுக் கிழமைக்கான அதிகாரி கடமைகளில் தட்டிக் கழிக்க முடியாத ஒன்று.

 

எல்லாத் தடியன்களோட எச்சிலையும் தினம் தின்னுட்டிருக்கேனண்டா வைத்தாஸ் திருட்டு மகனே, வாடா நாள்பட்ட காட்டெறும்புப் புற்றே. என் அரைக்கட்டில் தகிக்கும் நெருப்பணைக்க வராத உனக்கு அதுதான் குறைந்த பட்சத் தண்டனை. நிலையான அரசியல் மாற்றம் ஏற்பட்டு ஒரு வாரம் நாளையோடு ஆகிறது. நீ என்னைப் பார்க்க, என்னோடு கூடி அனுபவிக்க ஓடி வந்திருக்க வேணாமோ? உள்ளே வா உள்ளே வா என்று நான் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் நீயாக வரவும், நீ எதிர்பார்ப்போடு என்னைக் கேட்கச் சொல்லி, நான் கேட்டு, மறுபடி மறுபடி எனக்குள் வரவுமாக உடல் கலக்க ஓடோடி வராமல் எந்த நாடோடிப் பெண்ணின்  வியர்வை வாடையைத் தீர்க்கமாக முகர்ந்து கொண்டு அவளுக்குத் துணி துவைத்துக் கொண்டிருக்கிறாயடா அயோக்கியா?

 

நந்தினி குளித்து உடுத்து வரும்போது ஒன்பது மணி அறிவிக்கப் பட்டது. சந்திக்கவும் பேசவும் நல்ல நேரம் என்றும் கூறப்பட்டது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2024 19:31

April 6, 2024

ஓபோவும் குழல்களும். வயலின்களும் இசைக்க கடவுளின் சகோதரி துயிலுணர்ந்தது

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவல் அடுத்த பகுதி இங்கே

வாழ்ந்து போதீரே  அத்தியாயம்  இருபத்தொன்று –   

          

வாசலில் ஒருமித்து இசைக்கப்பட்ட வாத்திய இசை நந்தினியை எழுப்பியது. நாலு வயலின்கள் கூட்டாக மெல்ல உயர்ந்து சஞ்சரிக்க, ஓபோவும் குழல்களும், தரையில் நிறுத்தி வைத்து வாசிக்கும் ஒரு பிரம்மாண்டமான செல்லோவும் இசைப் பூத்தூவியபடி தொடர, முரசு ஒன்று ஓங்கி ஒலித்து அதிர்ந்து காலை ஏழு மணி என்றது.

 

மேல் தளத்தின் ஜன்னல் வழியாக நந்தினி வெளியே பார்க்க, ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக ஒரு சிறிய கூட்டம் தரையில் மண்டியிட்டு வணங்கி நின்றது.  துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்துக் காவலுக்கு நின்ற ராணுவ வீரர்கள் சத்தமெழக் காலணிகளைத் தரையில் அறைந்து கூடவே வணங்கினார்கள்.

 

தினசரி நடக்கிறது தான் இதெல்லாம். குழந்தைகள் நீங்கலாக, இவர்கள் எல்லோரும், அரசாங்கத்தால் பணியமர்த்தப் பட்டவர்கள். குழந்தைகள் பெற்றோரோடு வருகிறவர்கள். அவர்களுக்கான தொகையோடு காலை உணவையும் அரசாங்கம் வழங்குகிறது. பெரியவர்களுக்கு காப்பி மட்டும் வழங்கப்படுகிறது. வாசலுக்குப் போன ஒரு அபூர்வ சந்தர்ப்பத்தில் நந்தினி இந்தத் தகவல்களைக் கேட்டுச் சேகரித்து வந்தாள்.

 

தொடர்ந்து மாறி மாறி வந்த பதினேழு அரசுகளின் ஆட்சியின் போது கடவுளின் மூத்த சகோதரி என்று நந்தினியை மரியாதை செய்து உயர்ந்த இடத்தில் வைத்திருந்தது மட்டும் நிலையாகத் தொடர்ந்தது. அவளுடைய அற்புதச் செயலாகச் சிறிதும் பெரிதுமான நிகழ்வுகள் ரேடியோ மூலமும், பத்திரிகை மூலமும் நாட்டு மக்களை அடைந்த வண்ணம் இருந்தன. அந்த நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட அடியார்கள் அவளுக்கு நாடு முழுக்க உண்டு என்பதும் அவர்கள் அரசுப் பணியில் இல்லாமலேயே அவள் வீட்டு வாசலில் நின்று அவளை வாழ்த்தி வணங்க ஒடி வருவார்கள் என்பதும் உண்மையே.

 

ஆனால், அவர்கள் யாரும், வார நாட்களில் காலை நேரத்தில் இப்படிக் காத்து நின்று வாழ்த்த முடியாத நிலையில் இருக்கப்பட்டவர்கள். செய்கிற வேலை காரணமாக அல்லது குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டியிருப்பது கருதி அவர்கள் வார நாட்களைத் தவிர்த்து, வார இறுதியில் பங்குபெற  முன்வருவார்கள் என்று பத்து நாள் மட்டும் நிகழ்ந்த ஓர் ஆட்சியின் போது அதன் ராணுவத் தலைவர் சொன்னார்.

 

ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த மரியாதை செலுத்துதல் கிடையாது. கடவுளின் சகோதரி என்றாலும் ஞாயிறு ஞாயிறு தானே? உறங்கி ஓய்வெடுக்கவும், எந்தப் பரபரப்பும் இல்லாமல் மெத்தனமாகச் செயல்படவுமான அந்தத் தினத்தில் ஆராதகர்களை அழைப்பது முறையாக இருக்காது என்று கருத்துச் சொன்ன அந்த ராணுவத் தலைவர் மறுநாள் காலை வீட்டுக் கழிவறைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கழிவறையைப் பயன்படுத்திய பிறகு அதைச் செய்து, அவர் மனநிறைவோடு இறக்க மனிதாபிமானத்தோடு வழி செய்த காரணத்தால், அடுத்து வந்த ஆட்சியில் அந்தத் துப்பாக்கிக்காரன் மன்னிக்கப் பட்டு விடுதலையானான். .

 

எனில், தற்போது, கடந்த ஒரு மாதமாக நாட்டின் அரசியலில் ஒரு வலுவான மாற்றம் உண்டாகி இருக்கிறது. வல்லரசுகள் இங்கே நிலையான ஆட்சிக்குத் துணை நிற்பதாக உறுதி சொல்வதோடு பாதுகாப்புக்காகப் படைகளையும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த ஏற்பாடு இன்னும் பத்து வருடமாவது நிலைக்கும் என்று மந்திரவாதம் செய்ய நியமிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். அவர்களுடைய தொழிற்சங்கத்தை அங்கீகரித்தால் இன்னும் தெளிவாக இதைச் சொல்ல முடியும் என்று நந்தினியைப் நேற்றுச் சந்தித்தபோது அவர்கள் தெரியப் படுத்தினார்கள். அவள் செய்ய வேண்டியவற்றில் இந்த அங்கீகாரமும் ஒன்று. பத்து வருடத்துக்குப் பதிலாக இருபது வருடம் இங்கே நிலையான ஆட்சி இருக்கும் என்று தெரிந்தால் நந்தினிக்குச் சொந்த எதிர்காலத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக, ஆழமும் அகலமுமாகத் திட்டமிட முடியும்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2024 22:43

April 5, 2024

சடாரி என்னும் ஜப்பானிய ஞான அனுபவமும் எட்டாம் கிளாஸ் கையேடும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி – சடாரியும் நோட்ஸும்

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

யாரோ எதையோ பாடமாக எழுதினாலும் அதையெல்லாம் படித்து மாணவர்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். நான் எழுதும் கையேடுகளைப் படித்தாலே போதும் மூலத்தையும் அதன் மூத்த தலைமுறை ஆதிமூலத்தையும் பொருளோடு அறிந்த ஞானம் கிட்டும் என்றார். ஜப்பானிய மொழியில் அதற்கு சடாரி என்று ஒரு சொல் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஞான அனுபவம் என்றும் அதற்கு மேலும் பொருள் தரும் ஒன்று அந்தச் சொல் என்றார். அவர் வீட்டின் பெரும் வசிப்பிடத்தை அச்சடித்து வந்து கட்டுக் கட்டாக, சிப்பம் சிப்பமாகப் பரத்தியிருந்த விதம் விதமான  கையேட்டுப் பிரதிகளை மலைப்போடு முசாபர் பார்த்தான். இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் இருந்து முதுகலை தமிழ் வரை தான் எந்த பேதமும் பார்க்காது கையேடு எழுதி அச்சுப் போட்டு விற்பனைக்கு வெளியிடுவதாக அவர் பெருமையோடு அறிவித்தார்.

 

சுறுசுறுப்பாக அந்தக் கையேடுகளை வண்டியில் ஏற்றி யார்யாரோ வெளியே எடுத்துப் போக, இன்னொரு திசையில் இருந்து மலேயா கல்லூரிகளுக்கான பட்ட வகுப்பு தமிழ்க் கையேடுகள் குதிரை வண்டிகளில் வந்து இறங்கி வீட்டு முகப்பை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. கூடவே எகிப்தில் குழந்தைகளுக்கு உதவி செய்யும் மூன்றாம் வகுப்பு தமிழ் உரைநடை கையேடுகளும் தலைச்சுமையாக வந்து இறங்கிப் புதுப் புத்தக, அச்சு மை வாடையோடு வெளியை நிறைத்தன.  சீக்கிரம் வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பிப் போகாவிட்டால் கையேடுகளின் கோட்டையில் சிறைப்பிடிக்கப் படுவோம் என்று மேலெழுந்த பயத்தைத் கொச்சு தெரிசா அடக்கிக் கொண்டாள்

 

தன்னைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி, தன் வேர்களைத் தேடி அம்பலப்புழை வந்ததையும் அங்கே ஒரு வாரம் தங்க முடியாமல் சர்க்கார் இடைஞ்சல் செய்ததால் அரசூர் வந்ததையும் அவள் சொல்ல, ஆதினமிளகி இரு கையும் உயர்த்தி அந்த இரு ஊர்ப் பெயரையும் முணுமுணுப்பாகச் சொல்லிக் கண்கள் மூடி இருந்தார். அவர் கண் திறந்து கனிவோடு கொச்சு தெரிசாவைப் பார்த்தபடி சொன்னார் –

 

என் கொள்ளுத் தாத்தனார் தினம் விடிகாலையில் வளர்ப்புப் பசுக்கள் நான்கைந்தை வீதி வீதியாக அழைத்துப் போய்க் கறந்து பால் விற்றாராம். ஒரு காலை நேரத்தில் அந்தணர் ஒருத்தரைச் சந்தித்தாராம். அவர் அம்பலப்புழையில் நடக்கவிருந்த திருமணத்துக்காக அரசூரில் இருந்து பயணப் பட்டவர். அந்த அந்தணர் தன் வீட்டு நவராத்திரி கொலு பொம்மைகளில் அச்சு அசலாக என் கொள்ளுத் தாத்தனார் போல் பச்சை முண்டாசோடு மாடு கறக்கும் ஆணின் சிறு களிமண் சிற்பம் உண்டென்றாராம். அந்தச் சிலையே நினைவாக அன்று முதல் அவர் பச்சை முண்டாசு கட்டத் தொடங்க, அதே அந்தணர் கனவில் வந்து பசுவைப் போற்றச் சொல்லியும், எள்ளுருண்டை படைத்து வணங்கிப் பகிர்ந்து கொள்ளச் சொல்லியும் உரிமையோடு கட்டளை இட்டார். சகலருக்கும் சகாயம் செய்கிற புத்தகங்கள் எழுதிப் பிழைக்கச் சொல்லியும் அன்போடு சொன்னாராம். அவர் சொன்னபடி வாரம் ஒரு பிடி அருகம்புல் கொடுக்க வீட்டுப் பின்புறத்தில் பசுவும், வாசல் நிலைப்படியில் பதித்த பசுவின் உருவமும், எழுத இப்படியான கையேடுகளும் உண்டு என்றார் வித்துவான் ஆதினமிளகி. எள்ளுருண்டை விடயமோ, அது மங்கலச் செயல் இன்மையால் வீட்டுப் பெண்கள் பலமாக எதிர்க்க, நின்று போய்விட்டது என்றார். வெள்ளை எள்ளை நெய்யும் வெல்லமும் தேங்காய்த் துருவலும் கலந்து பிடித்த சுவையான எள்ளுண்டைகள் தேவதைகளுக்கு உரியவை தான் என்றார் ஏக்கத்தோடு.

 

மற்றப்படி, இதெல்லாம் மூத்தோர் கொடை.

 

அவர் ஐயமறச் சொல்லி மறுபடி அம்பலப்புழை, அரசூர் என்று பெயர் விளித்து, பக்கத்தில் கையேட்டுக் குவியலைக் காட்டி வணங்க, கொச்சு தெரிசா ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கக் கோரப்பட்ட பாவத்தோடு சாந்தமும் மன்றாடலும் கருணையும் முகத்தில் தெரிய இருந்து, தானும் அத்திசை நோக்கி வணங்கி, மெல்லத் தன் கைப்பையைத் திறந்தாள்.

 

கொச்சு தெரிசா அவரிடம் அளித்த பழைய காகிதங்களைப் பார்வையிட்டார் வித்துவான். ஜான் கிட்டாவய்யன் எழுதிய தமிழ்க் கீர்த்தனங்கள் ஆங்கில மற்றும் மலையாள எழுத்து வடிவில் இருந்த காகிதங்கள் அவை.

 

இந்தப் பாடல்களை எழுதிய உங்கள் முன்னோர் மிக நல்லவர். ஆனால் அவருடைய தமிழ்ப் புலமை சங்கடமடைய வைக்கிறது. உதாரணத்துக்கு கிறித்துமசு பாட்டு எழுதும் போது ஏசுவைச் சிசுபாலனே என்று விளிக்கிறார். சிசுபாலன் புராணத்தில் கண்ணனுக்கு எதிரியாக வந்து அவனால் அழிக்கப்படும் அரக்கன். ஏசுவுக்கு இந்தப் பெயர் ஒட்டாதது மட்டுமில்லை அபத்தமானதும் கூட. கல்வாரிக் கற்கள் மகிழக் கர்த்தார் பிறந்தார் என்று  எழுதியிருக்கிறார். கல்வாரி என்பது ஏசுவைச் சிலுவையில் அறைந்த இடம். பிறந்த குழந்தையிடம், நீ சாகப் போகும் இடத்தில் இருக்கும் கல் நீ பிறந்ததைக் கொண்டாடுகிறது என்று சொல்வது மகா அபத்தம், அதுவும் ஏசுபிரானிடம்.

 

அவர் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டு போக முசாபர் தூங்கியிருந்தான்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2024 18:39

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.