இரா. முருகன்'s Blog, page 9

August 16, 2024

மரப்பலகை ஆசன ரயிலில் ப்ராட்ஃபோர்டிலிருந்து லண்டனுக்கு ஒரு பயணம்

ஹதிம் தாய்னா என்ன அச்சன்?

 

முசாபர் கேட்டபடியே எதிர் இருக்கையில் உட்கார்ந்து, மேலே போட்டிருந்த ஓவர்கோட்டைக் கழற்றி அடுத்த இருக்கையில் வீசினான்.

 

சின்ன வயசிலே நான் பார்த்த சினிமா.

 

இதை மட்டும் சொல்லி விஷயத்தைக் கடந்து போவதில் அவசரம் காட்டினார் அமேயர் பாதிரியார்.  பேச்சை மாற்றவோ என்னமோ, முசாபர் கால்டர்டேல் தாண்டி இந்த ரயிலில், அதுவும் அவர் இருக்கும் ரயில் பெட்டியில் ஏறி நொடியில் தலை காட்டிய மாய வினோதத்தைப் பற்றி ஆர்வத்தோடு விசாரித்தார் அவர்.

 

சினிமா போன்ற போதைப் பொருட்களை விலக்கச் சொல்லி அவர் வாரந் தோறும் ஞாயிறன்று காலைப் பிரார்த்தனை நேரத்தில் குரிசுப்பள்ளிக்கு வந்த விசுவாசிகள் கவனமாகக் கேட்டு அதன்படி நடந்து, தீர்க்க காலம் ஆசீர்வதிக்கப்பட பிரசங்கம் செய்தவர். அது போன வாரம் வரை நடந்த விஷயம்.

 

உங்களை எப்படி தனியா லண்டன் போக விட்டுட்டு நான் வேலையைப்  பார்த்துட்டு இருக்கறது அச்சா? இங்கே  பிராட்போர்டில் ஒரு சிநேகிதன் கொச்சு தெரிசாவின் மீனும் வறுவலும் விற்கும் கடையை எடுத்து நடத்த விருப்பம்னு சொன்னான். பிராட்போர்ட் காஜியாரை உங்களுக்குத் தெரியுமே. அவரோட இளைய சகோதரன் தான். சச்சரவும் சங்கடமும் தராத பேர்வழி.

 

முசாபர் மனசுக்குத் திருப்தியான காரியம் செய்த களிப்பில் கண்கள் பளபளக்கச் சொன்னான். அவனைப் பார்க்க அமேயர் பாதிரியாருக்கு ஏனோ அனுதாபமும், பிரியமும் சேர்ந்து எழுந்து வந்தன. நேற்று சாயந்திரம் வழியில் வைத்துப் பார்த்தபோது லண்டன் பயணம் பற்றிச் சொன்னதை நினைவு வைத்து வந்திருக்கிறான் பாவம்.

 

மந்தையில் இல்லாத ஆட்டுக் குட்டியானால் என்ன, நேசம் வைக்க மனசு மட்டும் போதுமே. நல்ல சிந்தனை கொடுத்த கர்த்தர் வாழ்த்தப்படட்டும்.

 

பாதிரியார் குரிசு வரைந்தபடி முசாபரைப் பார்த்துச் சிரித்தார்.

 

ஆமா, நான் என்ன வேலையா அங்கே போறேன், எத்தனை நாள் தங்குவேன் இதெல்லாம் தெரியாமல் நீயும் பயணம் வச்சது என்ன, முசாபரே?

 

அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை அச்சா. பாருங்க, நான் துணிமணி கூட எடுத்து வரலே. எல்லாம் அங்கே சமாளிச்சுப்பேன். நண்பர்கள் எதுக்கு இருக்காங்க? கொச்சு தெரிசா இல்லாம போறதுதான் ஒரே குறை. அவ லண்டனை எவ்வளவு அணு அணுவா ரசிப்பா தெரியுமா? நீங்கதான் விசா வாங்க நாம் போனபோது பார்த்தீங்களே. கொச்சு தெரிசாவுக்கு உங்களைப் பிடிக்கும். உங்களுக்கு ஒரு உதவின்னா அவள் செய்யணும். இல்லே நான் செய்யணும். செய்யறேனே.

 

முசாபர் மிக எளிதாக இந்த உறவுச் சமன்பாட்டை விளக்கிவிட்டு ரயில் ஜன்னல் வழியே பராக்குப் பார்க்கத் தொடங்கினான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2024 05:13

August 14, 2024

அமேயர் அச்சன் சிறு பிராயத்தில் பார்த்த ஹதிம் தாய் திரைப்படமும் அற்ப சங்கையும்

வாழ்ந்து போதீரே        அத்தியாயம்   முப்பத்திநாலு    

          

கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் ஒரு மணி நேரப் பயணம். அங்கே இருந்து லண்டன். அது இன்னொரு மூணு மணி நேரம்.  ரெண்டும் ரெண்டு கம்பெனி ரயில்களில்.

 

கால்டர்டேலில் ஏறி உட்காரும் ரயில் ரொம்பப் பழையது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் போன நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறுபது வருடம் அங்கே சகலமான பிரஜைகளும் நெருங்கி அடித்து உட்கார்ந்து மரப் பலகை ஆசனங்களைத் தேய்த்து, அப்புறம் திரும்ப இங்கிலாந்துக்கு மறு ஏற்றுமதி ஆன ரயில் கம்பார்ட்மெண்ட்கள் கொண்டது. அப்படித்தான் சொல்கிறார்கள். வேடிக்கையாகவோ, உண்மையோ, தெரியாது. ஒரு மணி நேரம், அரை மணி நேரம் பயணத்தில் யாருக்கும் கழிவறையைப் பயன்படுத்த வேண்டியிருக்காது என்று கருதியோ என்னமோ டாய்லெட் என்ற பகுதி சீராக இல்லாத ரயில் அது.

 

பிற்பகல் ரெண்டரை மணிக்கு கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் செல்லும் ரயிலின் மர இருக்கையில் ஏறி உட்கார்ந்ததுமே அமேயர் பாதிரியாருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற நினைவு மெல்லத் தலை காட்டியது.

 

வந்திருக்காது தான். பயணத்தில் படிக்க என்று கையில் சுருட்டிப் பிடித்துக் கொண்டு வந்திருந்த தினசரிப் பத்திரிகையில் ஒரு கட்டுரை.  அது நாலு பக்க இணைப்பாக வந்திருந்த சிறப்பிதழில் அச்சடித்து வந்த ஒன்று.

 

வீட்டில் தூசியை உறிஞ்சிக் குப்பையை எடுத்து சுத்தமாக்க ஹூவர், துணி துவைக்க வாஷிங் மெஷின், துவைத்து உலர்த்திய உடுப்பை சுருக்கம் இல்லாமல் நேர்த்தியாக்க எலக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ், ரொட்டி சுட டோஸ்டர் என்று வாங்கத் தூண்டும் பொருட்கள், அவை சரசமான விலையில் கிடைக்கும் இடங்கள் என்று விளம்பரங்களுக்கே ஆன சிறப்பிதழ் அது. அந்த நூதனமாக கருவிகளில் எதுவும் அமேயர் பாதிரியாருக்குத் தேவை இல்லை.

 

சிறப்பிதழில் வந்திருக்கும் கட்டுரை தான் அவரைப் படிக்கச் சொல்லித் தூண்டியது. கழிப்பறை கிட்டாமல் அடக்க வேண்டிய நேரங்களில் மூத்திரம் பெய்யாமல் இருப்பதற்கான வழிகள் என்று அந்தரங்கமான தலைப்பில் வந்திருக்கும் கட்டுரை அது. படம் கூடப் போட்டு, ஒன்று, இரண்டு என்று பனிரெண்டு அறிவுரைகள்.

 

கால் மாற்றி நிற்கவும், உட்காரவும், மறுபடி நிற்கவும். தண்ணீர், அருவி, மழை, பனிக்கட்டி, பனி பெய்த தெரு, ஈரக் குடை பற்றி நினைக்காமல் இருக்கவும். வயிற்றில் வாயு இருந்தால் மெல்ல வெளியேற்றவும். கம்பளியைப் போர்த்திக் கொள்ளவும். உடல் குலுங்காது பார்த்துக்கொள்ளவும். காமம் நிறைந்த கற்பனையில் மனதைச் செலுத்தவும். நகைச்சுவையாக எதைப் பற்றியும் நினைத்துக் கொள்ளாமல், நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லாமல், சிரிக்காமல் இருக்கவும்.  தொடர்ந்து மூன்று மணி நேரம், நான்கு, ஐந்து, ஆறு மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் இருக்கும் நேரத்தை அதிகரித்துப் பழகவும்.

 

எதுவுமே பாதிரியார்களுக்கு ஆனதில்லை. முக்கியமாக காமம் நிறைந்த கற்பனையில் மனதைச் செலுத்தச் சொல்லும் ஆலோசனை.  மனுஷனை திரும்பவும் சகதியில் தள்ளுகிற, அதிலேயே கிடந்து இன்பம் கண்டு, ஆவியை கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்காமல் போகிற தீச்செயலில் ஈடுபடுத்தும் சாத்தான் அது. நடு நாயகமாக அதற்குப் போட்டிருக்கும் கோட்டு ஓவியமும் பத்திரிகையில் வெளிவரத் தகுந்ததில்லை. அணைத்துக் கொண்டு கையே ஆடையாக ஒருவரை ஒருவர் மறைத்து இருக்கிற ஆணும் பெண்ணும் மனதில் இன்னொரு பெண்ணையும் இன்னொரு ஆணையும் நினைத்தபடி கிடக்கிற வண்ணப் படம் அது. அந்தப் பக்கத்தில் கண் போகாமல் திட சித்தத்தோடு தவிர்த்தபோது டாய்லெட் போகணும் என்று வயிறு முணுமுணுக்க ஆரம்பித்தது.

 

ரயில் நிற்கிற மாதிரி தோன்றி அது முழுசாக மனதில் பதியும் முன்னால் திரும்ப நகர்ந்து மெல்ல வேகம் கொண்டது.

 

ஸ்தோத்ரம் அச்சன்.

 

கொஞ்சம் விதிர்விதிர்த்து அமேயர் பாதிரியார் நிமிர்ந்து பார்க்க, முசாபர் முன்னால் நின்றான்.

 

அவருக்கு சந்தோஷம் மனசில் நிறைவாச்சு.

 

இதென்ன ஹதிம் தாய் சினிமா படம் போல, நினைக்கிறதுக்கு முன்னால் வந்து குதிக்கிறாய் முசாபரே.

 

கேட்டபடி சுற்று முற்றும் பார்த்தார் அவர்.  ரயில் பெட்டியில் அவரையும், பக்கத்தில் நிற்கிற முசாபரையும் வாசல் பக்கத்து இருக்கையில் குடையும், புராடஸ்டண்ட் மதப் பிரசுரங்களோடு இருந்த, கத்தரிப்பூ வர்ணப் பாவாடை அணிந்த சோனியான ஆப்பிரிக்கப் பெண்மணியும் தவிர வேறே யாரும் இல்லை.

 

ஆப்பிரிக்கப் பெண் இருக்கும் இடத்துக்கு வெகு அருகே, நேர் எதிரில் ஒடுக்கமான டாய்லெட் உண்டு. அங்கே அற்ப சங்கை தீர்க்கப் போனால் அவளுக்கோ தனக்கோ ரெண்டு பேருக்குமோ சங்கோசம் ஏற்படலாம்

 

வேண்டாம், சிறுநீர் கழிப்பது பற்றிய எந்த விதமான சிந்தனைக்கும் இப்போது இடம் இல்லை. லண்டன் போய்த் தான் அந்த உபாதை தீர்த்து வைக்கப்படும்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2024 04:39

அமேயர் அச்சன் சிறு பிராயத்தில் பார்த்த ஹதிம் தாய் திரைப்படமும் அற்ப சங்கையும்

வாழ்ந்து போதீரே        அத்தியாயம்   முப்பத்திநாலு    

          

கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் ஒரு மணி நேரப் பயணம். அங்கே இருந்து லண்டன். அது இன்னொரு மூணு மணி நேரம்.  ரெண்டும் ரெண்டு கம்பெனி ரயில்களில்.

 

கால்டர்டேலில் ஏறி உட்காரும் ரயில் ரொம்பப் பழையது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் போன நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறுபது வருடம் அங்கே சகலமான பிரஜைகளும் நெருங்கி அடித்து உட்கார்ந்து மரப் பலகை ஆசனங்களைத் தேய்த்து, அப்புறம் திரும்ப இங்கிலாந்துக்கு மறு ஏற்றுமதி ஆன ரயில் கம்பார்ட்மெண்ட்கள் கொண்டது. அப்படித்தான் சொல்கிறார்கள். வேடிக்கையாகவோ, உண்மையோ, தெரியாது. ஒரு மணி நேரம், அரை மணி நேரம் பயணத்தில் யாருக்கும் கழிவறையைப் பயன்படுத்த வேண்டியிருக்காது என்று கருதியோ என்னமோ டாய்லெட் என்ற பகுதி சீராக இல்லாத ரயில் அது.

 

பிற்பகல் ரெண்டரை மணிக்கு கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் செல்லும் ரயிலின் மர இருக்கையில் ஏறி உட்கார்ந்ததுமே அமேயர் பாதிரியாருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற நினைவு மெல்லத் தலை காட்டியது.

 

வந்திருக்காது தான். பயணத்தில் படிக்க என்று கையில் சுருட்டிப் பிடித்துக் கொண்டு வந்திருந்த தினசரிப் பத்திரிகையில் ஒரு கட்டுரை.  அது நாலு பக்க இணைப்பாக வந்திருந்த சிறப்பிதழில் அச்சடித்து வந்த ஒன்று.

 

வீட்டில் தூசியை உறிஞ்சிக் குப்பையை எடுத்து சுத்தமாக்க ஹூவர், துணி துவைக்க வாஷிங் மெஷின், துவைத்து உலர்த்திய உடுப்பை சுருக்கம் இல்லாமல் நேர்த்தியாக்க எலக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ், ரொட்டி சுட டோஸ்டர் என்று வாங்கத் தூண்டும் பொருட்கள், அவை சரசமான விலையில் கிடைக்கும் இடங்கள் என்று விளம்பரங்களுக்கே ஆன சிறப்பிதழ் அது. அந்த நூதனமாக கருவிகளில் எதுவும் அமேயர் பாதிரியாருக்குத் தேவை இல்லை.

 

சிறப்பிதழில் வந்திருக்கும் கட்டுரை தான் அவரைப் படிக்கச் சொல்லித் தூண்டியது. கழிப்பறை கிட்டாமல் அடக்க வேண்டிய நேரங்களில் மூத்திரம் பெய்யாமல் இருப்பதற்கான வழிகள் என்று அந்தரங்கமான தலைப்பில் வந்திருக்கும் கட்டுரை அது. படம் கூடப் போட்டு, ஒன்று, இரண்டு என்று பனிரெண்டு அறிவுரைகள்.

 

கால் மாற்றி நிற்கவும், உட்காரவும், மறுபடி நிற்கவும். தண்ணீர், அருவி, மழை, பனிக்கட்டி, பனி பெய்த தெரு, ஈரக் குடை பற்றி நினைக்காமல் இருக்கவும். வயிற்றில் வாயு இருந்தால் மெல்ல வெளியேற்றவும். கம்பளியைப் போர்த்திக் கொள்ளவும். உடல் குலுங்காது பார்த்துக்கொள்ளவும். காமம் நிறைந்த கற்பனையில் மனதைச் செலுத்தவும். நகைச்சுவையாக எதைப் பற்றியும் நினைத்துக் கொள்ளாமல், நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லாமல், சிரிக்காமல் இருக்கவும்.  தொடர்ந்து மூன்று மணி நேரம், நான்கு, ஐந்து, ஆறு மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் இருக்கும் நேரத்தை அதிகரித்துப் பழகவும்.

 

எதுவுமே பாதிரியார்களுக்கு ஆனதில்லை. முக்கியமாக காமம் நிறைந்த கற்பனையில் மனதைச் செலுத்தச் சொல்லும் ஆலோசனை.  மனுஷனை திரும்பவும் சகதியில் தள்ளுகிற, அதிலேயே கிடந்து இன்பம் கண்டு, ஆவியை கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்காமல் போகிற தீச்செயலில் ஈடுபடுத்தும் சாத்தான் அது. நடு நாயகமாக அதற்குப் போட்டிருக்கும் கோட்டு ஓவியமும் பத்திரிகையில் வெளிவரத் தகுந்ததில்லை. அணைத்துக் கொண்டு கையே ஆடையாக ஒருவரை ஒருவர் மறைத்து இருக்கிற ஆணும் பெண்ணும் மனதில் இன்னொரு பெண்ணையும் இன்னொரு ஆணையும் நினைத்தபடி கிடக்கிற வண்ணப் படம் அது. அந்தப் பக்கத்தில் கண் போகாமல் திட சித்தத்தோடு தவிர்த்தபோது டாய்லெட் போகணும் என்று வயிறு முணுமுணுக்க ஆரம்பித்தது.

 

ரயில் நிற்கிற மாதிரி தோன்றி அது முழுசாக மனதில் பதியும் முன்னால் திரும்ப நகர்ந்து மெல்ல வேகம் கொண்டது.

 

ஸ்தோத்ரம் அச்சன்.

 

கொஞ்சம் விதிர்விதிர்த்து அமேயர் பாதிரியார் நிமிர்ந்து பார்க்க, முசாபர் முன்னால் நின்றான்.

 

அவருக்கு சந்தோஷம் மனசில் நிறைவாச்சு.

 

இதென்ன ஹதிம் தாய் சினிமா படம் போல, நினைக்கிறதுக்கு முன்னால் வந்து குதிக்கிறாய் முசாபரே.

 

கேட்டபடி சுற்று முற்றும் பார்த்தார் அவர்.  ரயில் பெட்டியில் அவரையும், பக்கத்தில் நிற்கிற முசாபரையும் வாசல் பக்கத்து இருக்கையில் குடையும், புராடஸ்டண்ட் மதப் பிரசுரங்களோடு இருந்த, கத்தரிப்பூ வர்ணப் பாவாடை அணிந்த சோனியான ஆப்பிரிக்கப் பெண்மணியும் தவிர வேறே யாரும் இல்லை.

 

ஆப்பிரிக்கப் பெண் இருக்கும் இடத்துக்கு வெகு அருகே, நேர் எதிரில் ஒடுக்கமான டாய்லெட் உண்டு. அங்கே அற்ப சங்கை தீர்க்கப் போனால் அவளுக்கோ தனக்கோ ரெண்டு பேருக்குமோ சங்கோசம் ஏற்படலாம்

 

வேண்டாம், சிறுநீர் கழிப்பது பற்றிய எந்த விதமான சிந்தனைக்கும் இப்போது இடம் இல்லை. லண்டன் போய்த் தான் அந்த உபாதை தீர்த்து வைக்கப்படும்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2024 04:39

August 13, 2024

கரும்புத் தோட்டத்திலே சிசுவுக்குப் பாலூட்ட விடாமல் அடிக்கும் கங்காணி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல் -அடுத்த சிறு பகுதி

நந்தினி அவன் தோளை ஆதரவாகத் தழுவி அவனையும் கட்டிலுக்கு இழுத்தாள். டெலிபோன் டைரக்டரியில் கடைசியாகப் படித்த பெயரை நினைவுக்குக் கொண்டு வர முயன்றபடி வைத்தாஸ் அவளோடு சரிந்தான்.

 

எமிலி நாலு நாளாக பழைய காலத்தைக் கனவாகக் காண்கின்றாளாம். அவள் இருந்திராத காலம். அவளுக்கு ஏற்பட்டிருக்காத அனுபவங்கள் அதெல்லாம்.

 

அவன் அணைப்பில் இருந்தபடி நந்தினி சொன்னாள். அணைக்காத ஒற்றை விளக்கில் அவள் கண்கள் வெற்றிடத்தில் நிலை கொண்டிருப்பதை வைத்தாஸ் கண்டான்.

 

நந்தினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் குரலும் மொழியும் மாறி விட்டிருந்தது. அது ஆண் குரல்.  இந்திய மொழிகள் சேர்ந்து நந்தினியின் குரலாக எழுந்து வர, ஒற்றை விளக்கும் அணைந்து, பொதியாக அழுத்தும் இருட்டு.

 

கரும்புத் தோட்டத்தில் இந்த நாள் காலை நடந்தது இது. கேட்டு கொள்ளணும்.

 

நான் ஆஜர் பட்டியல் சரி பார்க்க நடந்து போனேனா, என் பக்கத்தில் ஏதோ நொய்நொய் என்று சத்தம். என்னடா என்று திரும்பிப் பார்க்க ஒரு சிசு அழுது கொண்டிருந்தது. ஓரமாக நிழலில் ஒரு சாணிச் சுருணையை விரித்து அதைக் கிடத்தி விட்டு அதைப் பெற்றுப் போட்டவள் பிடுங்கின கரும்பை தோகை வெட்டிக் கொண்டிருந்தாள். கரும்பு யந்திரத்தில் போட வாகாக இதைச் சதா செய்யாவிட்டால் யந்திரம் ஓய்ந்து போய்விடும். மேனேஜர் துரை கத்துவான்.

 

பிறந்து நாலைந்தே மாசம் ஆன அந்த சவலைக் குழந்தை குரலைக் கேட்டதும் அந்தப் பெண்பிள்ளை கையில் எடுத்த தோகையையும் அரிவாளையும் அந்தப்படிக்கே தரையில் வைத்துவிட்டு நிழலுக்கு ஓடி வந்து குழந்தையை வாரி எடுத்தாள். முலையை எடுத்து அதுக்குக் கொடுக்க ஆரம்பிக்கிற வரைக்கும் பார்த்துக் கொண்டு ஒரு ஓரமாக நின்றேன் நான்.

 

அப்புறம் ஓங்கி அந்தப் பிரம்பால் அவள் முலை மேலேயே ஓங்கி அடித்தேன்.

 

திருட்டு முண்டே. வேலை நேரத்தில் என்ன சீராட்டிக் கொண்டு கிடக்கே? வரும்போதே இதையெல்லாம் முடிச்சிருக்கலாமில்லையா வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல்?

 

நான் சத்தம் போட அவள் என் காலில் விழுந்து குழந்தையையும் கிடத்தினாள்.

 

சாமி பால் பத்தாம அழுகிறான் பிள்ளை. பசி நேரம். நொய்க் கஞ்சி கொடுத்தா வாந்தி பேதியாவுது. வேறே வழி இல்லாம லயத்துலே இருக்கப்பட்ட காப்பிரிச்சி கிட்டே எல்லாம் கையேந்தி பால் பிச்சை வாங்கிட்டு இருக்கேன். இன்னிக்கு யாரும் தானம் தரலை. பிள்ளை உசிரு போகுது.

 

திரும்பக் குழந்தையை வாரியெடுத்த அவளை முடிக்க விடாமல் திரும்ப மார்க் காம்பிலேயே பிரம்பால் அடித்தேன். குழந்தை பிடிவாதமாகப் பிடித்த காம்பை விட்டு விட்டு வீரிடும்படி அதன் உதட்டிலும் அடி விழுந்திருக்க வேண்டும்.

 

அந்தப் பக்கம் தலையில் கரும்பு சுமந்து போன ஒரு கிழட்டு காப்பிரிச்சியைக் கூப்பிட்டு குழந்தையைப் பறித்து எறியச் சொன்னேன். அவள் நான் சொன்னது புரியாத பாவனையோடு அந்தச் சிசுவை வாரியெடுத்து ஓரமாக வைத்துவிட்டு அங்கே இன்னொரு காப்பிரிச்சிக்குக் கண்காட்டியபடிக்கு திரும்ப வந்தாள்.

 

தேவிடிச்சி போய் வேலையைப் பாருடி நாயே என்று நான் சத்தமாகச் சொல்லியபடி அடிவாங்கின பொம்பிளையை முறைக்க, அவள் எனக்குப் பின்னால் பார்த்து ரெண்டு கையையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டாள். நான் என்ன விஷயம் என்று பின்னால் நோக்கினேன்.

 

அங்கே இளம் வயசில் இன்னொரு காப்பிரிச்சி அந்தக் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதுக்குப் பால் புகட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே கண் நிறைந்து போனது.

 

அந்தக் கரகரப்பான ஆண் குரல் தேய்ந்து மறைய வைத்தாஸ் நந்தினியின் கையை இறுகப் பற்றிக் கொண்டான். உடலெங்கும் நடுங்கியது அவனுக்கு.

 

மங்கலாக விளக்கு மறுபடி எரிந்தது. மின்சார ஜெனரேட்டர் இயங்கும் ஒலி.

 

நாலு நாளாக கனவிலே வர்ற கரும்புத் தோட்டத்தைப் பற்றித்தான் பேசிட்டிருந்தா எமிலி. தமிழச்சி குழந்தைக்குப் பாலூட்டிய அந்த ஆப்பிரிக்கப் பெண் அவளுடைய பாட்டிக்குப் பாட்டி என்று தெரியுமாம். முலையில் அடிச்ச, இதயமே இல்லாத அந்த அரக்கன் தான் யாருன்னு தெரியலையாம். தினசரி கனவில் வந்து தொந்தரவு கொடுக்கும் அவனுடைய தலைமுறையே நசிக்க மந்திரம் போடலாமான்னு கேட்கிறாள்.

 

வைத்தாஸுக்கு அந்தக் கங்காணியைத் தெரியும். தமிழும் தெலுங்கும் சரளமாகப் பேசிய அந்தக் கொடூரனின் அசுர வித்து அவன்.

 

வைத்தாஸ் பதில் சொல்ல நினைத்தான்.  மக்கள் தலைவருக்கு அந்தத் தகவல் தேவைப்படலாம். கடவுளின் சகோதரிக்கு அது நியாயம் வழங்கத் துணை செய்யும் விவரமாக இருக்கலாம். இந்த வினாடி நந்தினிக்கு அது வேண்டாம்.

 

அவன் தழுவிய வேகத்தில் நந்தினி நிலைகுலைந்தாள். ஆதி மனிதன் அடுத்து வந்த பெண்ணோடு முதல் முறை ஆவேசத்தோடு இணை சேர்ந்த நேரமாக அந்த இரவு ஊர்ந்தது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2024 00:19

August 9, 2024

விழுந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத திரையை யார் கிழித்து வீச வேணுமெனத் தெரியாத பொழுதுகள்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி

——————————————————————————————————————————————

பக்கத்தில் அடிக்கடி கதவு திறந்து மூட மேலும் கீழும் போய்வர இயங்கும் லிப்டின் கதவுகள் மூடிய நுழைவு வாசல் இருந்தாலும், எந்த லிப்டும் நந்தினி இருக்கும் தளத்துக்கு வராததால் இங்கே இவர்களைத் தவிர யாரும் இல்லை.

 

நட்பு நாட்டு அதிபருக்கும் தூதுவருக்கும் இந்த நாட்டரசு அளிக்கும் அதிக பட்ச மரியாதையும் பாதுகாப்பும் அழுத்தமாகத் தெரியும் சூழல். மாடிப் படிகளை ஒட்டி சங்கடம் விளைவிக்காமல் துப்பாக்கிகளை ஓங்கிப் பிடித்தபடி நிற்கும் காவலர்களும், ஒரு சிறு குழுவாக பிரதேச ராணுவ வீரர்களும் சத்தம் எழுப்பாமல் படி வளைந்து இறங்கும் இடத்தில் நின்றதை  நந்தினி கவனிக்கத் தவறவில்லை.

 

எமிலி கிட்டே தானே பேசிக்கிட்டிருந்தேன். ஏன் வெளியிலேயே உட்கார்ந்துட்டே?

 

அப்போ, வேறே யார் கூடவாவது நீ பேசினா நான் வெளியிலே இருக்கணுமா?

 

நாக்கு நுனி வரை வந்த கேள்வியை அடக்கியபடி நந்தினியோடு உள்ளே போனான் வைத்தாஸ்.

 

வேண்டாம், இந்த ராத்திரி விலகி இருக்க, அதற்கு நியாயம் கற்பிக்க இருண்டிருக்கும் பொழுதல்ல. படர்ந்து வரும் கருமை, காமமாக, காதலாக அலையடித்து அமிழ்த்தி பழைய பொழுதுகளை மறுபடி சில்லுச் சில்லாக, உடல் ஸ்பரிசமாக, வாடையாக உருவாக்கிக் கிடந்து சுகிக்கச் சொல்கிறது.

 

நந்தினி படுக்கையில் கால் நீட்டி, சுவரில் சாய்ந்தபடி, நாற்காலியை சுவரை ஒட்டி இறக்கி வைக்கும் வைத்தாஸைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

விழுந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத திரையை யார் கிழித்து வீச வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை.

 

திரைக்கு இந்தப் பக்கத்தில் எழும்பி நிற்கும் மதிப்பும் மரியாதையும் கட்டமைத்த அதிகாரமும் அன்பும் சகல வல்லமையும் சேர்ந்த பிம்பமும் பல்லக்குத் தூக்கிகளின் பணிவும், இரைஞ்சுதலும் எல்லாம் அவளுக்கு வேண்டியிருக்கிறது. அது அலுக்கும் போது திரையைக் கடந்து வைத்தாஸிடம் அவள் வருவாள். இனி வரும் நிமிடங்கள் திரையைக் கடக்கும் கணங்களாகலாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2024 21:26

August 7, 2024

நந்தினி மகிழ்வோடு சொன்னாள் – என் மகள் பூப்படைந்திருக்கிறாள்

வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நாவல் வரிசையில் நான்காம் நாவல் இது. அடுத்த சிறு பகுதி இங்கே பதிப்பாகிறது இதோ –

வைத்தாஸ் சிரித்தபடியே நந்தினியின் மார்பில் கையளைந்த படி கேட்டான். அந்தக் கரங்களை அவள் விலக்கவில்லை. ஆனாலும் அடுத்த தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி நகர்ந்தவள் படுக்கையில் அமர்ந்து இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாள்.

 

எமிலி பேசணுமா? என்ன இருக்கு அந்தக் குட்டிப் பொண்ணுக்கு என்கிட்டே பேச?

 

கேட்டு விட்டு இந்த நாளில் முதல் தடவையாக நந்தினி சிரிக்கிறாள்.

 

கையில் டெலிபோன் டைரக்டரியை விரித்து வைத்து பெயர்களைப் பாராயணம் செய்கிற கவனத்தோடு ஒவ்வொன்றாக முணுமுணுத்தபடி இருக்கிறான் வைத்தாஸ். கடவுளின் சகோதரியோடு கடவுளே பேச வந்தாலும் அவனுக்கு விரோதமில்லை. பரபரப்பும் எதிர்பார்ப்பும் கூட இல்லை.

 

சின்னக் குழந்தைகளோடு டெலிபோன் பேசுகிற, இயல்புக்கு அதிகமான செல்லம் கொஞ்சுதலும், அன்பு நிரம்பியதுமான குரலில் எமிலி என் குட்டிப் பெண்ணே என்று விளித்து நந்தினி தொலைபேச ஆரம்பிக்க, டெலிபோன் டைரக்டரியோடு அறைக்கு வெளியே வந்தான் வைத்தாஸ்.

 

நந்தினி வெவ்வேறு பேரோடு தொலைபேசி முடிப்பதற்குள் அந்த டைரக்டரியை முதலில் இருந்து இறுதி வரை படித்து விடுவான் அவன். அவனுடைய நாவல்களை விட அது சுவாரசியமாக இருக்கும் என்று அடுத்த பத்திரிகைப் பத்தியில் அவன் எழுதப் போகிறான்.

 

தன்னையே பரிகசித்துக் கொள்ளும் எழுத்துக்காரர்கள், வாசகர்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஆகிறார்கள். படிக்கிறவர்கள் ஒரு கள்ளச் சிரிப்போடு சொல்லவும் எழுதி வைக்கவும் விரும்புவதை எந்தக் குற்ற உணர்ச்சியும் அவர்கள் கொள்ளாமல் அவர்களுக்கு அனுபவப்படுத்த அவன் தன்னையே கிண்டல் செய்து கொள்வான். எழுத்துக்காரனே விரும்பித் தன்னைக் கோமாளியாக்கிக் கொள்ளும்போது அவர்கள் அதிகமாகச் சிரித்து இன்னும் தீவிரமாகக் களிமண் உருட்டி மேலே எரியும் ஆபத்தில்லாத, உறவு சொல்லி அழைத்துச் சகலரையும் மகிழ்விக்கக் கூடிய சொல் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அந்தச் சூழலில், அடுத்த நாவல் இன்னும் நன்றாக விற்பனையாகிறது.

 

உடனே இதை எல்லாம் தட்டச்சு செய்ய வைத்தாஸுக்கு ஆர்வம் மிகுந்து வந்தாலும், உள்ளே நந்தினி பேசிக் கொண்டிருக்கும் போது அதைச் செய்தால் பேச்சுக்கு சிரமமாக இருக்கக் கூடும் என்று அவன் மனதில் பட்டது.

 

டெலிபோன் டைரக்டரியின் பக்கங்களை இன்னும் கொஞ்சம் வாசித்தால் தட்டச்சு செய்யச் சிந்தனைகள் அதிகமாகக் கிடைக்கலாம். இல்லாவிட்டாலும் இந்தப் பொழுதும் அடுத்து வருவதும் அவன் வேறென்ன செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது? இதை எழுத மாட்டான் தான் வைத்தாஸ்.

 

உள்ளே இருந்து ஒரு நாற்காலியை எடுத்து வந்தால் வராந்தாவில் விளக்கடியில் உட்கார்ந்தபடிக்கு ஓய்வாகப் படித்துக் கொண்டிருக்கலாம்.

 

ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்து, சிறு இடைவெளியில் உடம்பைக் குறுக்கிக் கொண்டு வைத்தாஸ் நந்தினியின் ஐந்து நட்சத்திர ஓட்டல் அறைக்கு உள்ளே நுழையும்போது தலைமுறை தலைமுறையாக அனுபவித்து மரபணுவில் சேர்ந்திருக்கக் கூடிய அடிமைத்தனம் ஒரு வினாடி பரந்து உருவெடுத்துச் சூழ்ந்தது.

 

இது வைத்தாஸுக்கு அப்பனான வரதராஜ ரெட்டிக்கு அனுபவப்பட்டதல்ல. வைத்தாஸின் தாய்வழிப் பாட்டியும் அவளுக்குப் பாட்டியும் பட்டுணர்ந்தவை.

 

என் மகள் பூப்படைந்திருக்கிறாள்.

 

உள்ளே நுழைந்த வைத்தாஸிடம் உரக்கச் சொல்லிச் சிரித்தாள் நந்தினி. அவன் என்ன மாதிரி எதிர்வினை செய்வது என்ற நிச்சயமில்லாமல் நாற்காலியைப் பற்றியபடி நின்றான்.

 

நந்தினி வைத்தாஸை அருகே வரச் சொன்னாள். அந்தப் பக்கம் பேசும் சிறுமியை நல்வாக்கு கூறச் சொன்னாள். வைத்தாஸும் அவளை வாழ்த்த வேணும். அவன்   காது மடலில் பட டெலிபோன் ரிசீவரை வைத்தாள்.

 

வைத்தாஸ் கவனித்துக் கேட்க, அந்தப் பக்கம் ஒரு சிறுமி மேரியின் ஆட்டுக்குட்டி என்ற குழந்தைகள் பாடலை சிரத்தையாகப் பாடியது கேட்டது.

 

எமிலி பாடி முடித்ததும், அவள் உடல் நலத்தையும் கல்வியையும் பற்றி வைத்தாஸ் ஆப்ரிகான்ஸ் மொழியில் விசாரிக்க அந்த முனையில் மௌனம்.

 

இல்லை, அவளுக்கு ஆப்ரிகான்ஸ் தெரியாது. தென் பிராந்தியத்தில் இருந்து வந்தவள். நான் பேசுகிறேன்.

 

மிகச் சரளமாகத் தென் பிராந்திய மொழியில் நந்தினி தொடர, நாற்காலியோடு வெளியே வந்தான். ஒரு மணி நேரம் கழித்து நந்தினி வாசல் கதவை விரியத் திறந்து வைத்தாஸை நெருங்கி வந்தாள். ஆளரவம் ஓய்ந்த தாழ்வாரம் அது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2024 21:38

August 6, 2024

மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புது நகர் வந்த உலுலூ அதிபர் டாக்டர் நந்தினி

சென்ற வாரம் குடியரசாகப் பிரகடனப்படுத்தப் பட்ட  ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான டாக்டர் நந்தினி, மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புதுதில்லி வந்து சேர்ந்தார். பாலம் விமான நிலையத்தில் அவரை வரவேற்ற வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரி.

 

வைத்தாஸ் ரேடியோவை அணைத்தான்.

 

நந்தினி தொலைபேசியில் சத்தம் கூடுதலாகவே பேசிக் கொண்டிருந்தாள். பெரிய மூன்று தேசங்களுக்கு நடுவே தென்கிழக்காகக் குறுகி கிழக்கே நீண்டு வடக்கில் சற்றே விரியும் சுடுமணல் பரந்த நாட்டின் மக்கள் தலைவரிடம்,  அங்கே ஆட்சிக்கும் ராணுவத்திற்கும் தலைமை வகிக்கும் நிர்வாகத் தலைவர் கடலும், மலையும், பாலைவனங்களும் தாண்டி இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

 

நந்தினி பொறுமையாகவும், சில வாக்கியங்களை மெல்ல ஒரு முறைக்கு இரு முறையாகச் சொல்லியும் தன் முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறாள்.  அவளுடைய இங்க்லீஷ், மூக்கால் ஒலிக்கும் இந்திய மலையாள உச்சரிப்பை முற்றும் துறந்து ஏற்ற இறக்கத்திலும், சொற்களை வலிமைப்படுத்துவதிலும், மென்மையாக்குவதிலும் ஆப்பிரிக்கச் சாயலை முழுக்கப் பிரதிபலிக்கிறது.

 

வைத்தாஸின் சொந்த மொழி இந்த ஆப்ரிக்க ஆங்கிலம்.  அவன் முற்றிலும் பிரிட்டீஷ் இங்கிலீஷுக்கு மாறியிருக்க, நந்தினி அவன் உரித்த மொழிச் சட்டையை அணிந்திருக்கிறாள். அவளுக்குப் பாந்தமான உடை தான் அது.

 

நந்தினி முன்னால் நின்று டெலிஃபோனைப் பிடுங்குவது போல் பாவனை செய்தான் வைத்தாஸ். அவளுடைய கவனத்தைக் கவர நக்னனாக, அறையில் விரித்த ரத்தினக் கம்பளத்தில் உருண்டு கரணம் அடிக்கக் கூடத் தயார் தான் அவன்.

 

அரசாங்கத் தூதர் பிம்பத்தை இறக்கி வைத்து நந்தினிக்கு ஒரு முத்தம் கொடுத்துக் கட்டியணைத்துக் கலவி செய்யக் காத்திருக்கிறான் வைத்தாஸ். நந்தினி இன்னும், அண்மையில் குடியரசாகப் பிரகடனப்படுத்தப் பட்ட  ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில், மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புதுதில்லி வந்து சேர்ந்த டாக்டர் நந்தினியாகவே இருக்கிறாள்.

 

சின்னக் குழந்தையைப் பேசாதே, நெருப்புப் பக்கம் போகாதே என்று எச்சரிப்பது போல் வாய்க்குக் குறுக்கே விரல் வைத்து அச்சுறுத்தியபடி தொலைபேசியில் தொடர்ந்தாள் நந்தினி.

 

குழந்தையோடு நேசத்தைச் சொல்லும் குறும்பு மிளிரும் கண் பார்வை இல்லை அவளிடம். குரலும், உறுதியாகச் சுழலும் கையும், அதிகாரத்தோடு அசையும் தலையும் அவள் தலைமை வகிக்கிறவள், அவளோடு இருக்கிறவர்களும் தொலைபேசியில் அழைப்பவர்களும் அந்த அதிகாரத்தை அங்கீகரித்துக் கீழ்ப் படிந்து அடங்கி ஆட்டுவிக்கப் படுகிறவர்கள் என்றும் நந்தினியின் காத்திரமான இருப்பை வலியுறுத்துகிறது. பத்திரிகைப் புகைப்படத்துக்கான, தொலைநோக்கு வாய்ந்த தலைவர்களின் இருப்பு இது. கருணையும், அன்பும், கண்டிப்புமான மக்கள் தலைவர் நந்தினி. கடவுளின் மூத்த சகோதரி.

 

இன்னும் ஐந்தே நிமிடம்.

 

அவள் பேசியபடி கையைக் குவித்து விரித்துக் காட்ட, வைத்தாஸ் தன் கரம் உயர்த்திக் குறும்பாக அதே சைகை செய்ய உத்தேசித்ததை ஒத்திப் போட்டான்.

 

சற்று முன்பு, அவளைப் பின்னால் இருந்து அணைத்துப்  பற்றிய போது நந்தினி அவசரமாகச் சொன்னது –

 

விடலைத்தனமாக நடக்காதே. நம்மை உலகம் பார்க்கிறது. வயதும் இன்னும் இருபதில்லை. தெய்வங்களும் தலைவர்களும் தடவி விளையாடுவதில்லை..

 

என்றால், அவர்கள் கருப்பினத் தீவிரவாதத்தின் போக்குகள் குறித்தோ, மூன்றாம் உலக நாடுகளின் புதிய அதிகாரக் கட்டமைப்புகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்கள் பற்றியோ ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும் கருத்துகளைப் பகிர்ந்து விவாதிக்க வேணுமா?

 

வைத்தாஸ் சிரித்தபடியே  கேட்டான். அந்தக் கரங்களை அவள் விலக்கவில்லை. ஆனாலும் அடுத்த தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி நகர்ந்தவள் படுக்கையில் அமர்ந்து இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2024 20:43

August 4, 2024

எமிலி மந்திரவாதம் மூலம் கேக்குகளை வரவழைத்துத் தின்னக் கொடுத்தபோது

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது – நூலிலிருந்து அடுத்த சிறு பகுதி இங்கே

நேற்றைய நிகழ்ச்சிகளில் ஒரு சிறு தவறு.

 

பெண் அதிகாரி  எமிலியைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னாள்.

 

நேற்றைக்கு முதல் நிகழ்ச்சியில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் கடவுளின் மூத்த சகோதரியுடைய பிரதிநிதியான எமிலியைச் சந்திக்க வந்திருந்தார்கள். இந்த சந்திப்புக்காக அதிகாலையில் புறப்பட்டு வந்ததால் வீட்டுப் பாடங்களை எழுத முடியாமல் போனதென்று அந்தப் பிள்ளைகள் சொன்னார்கள்.

 

எமிலியின் மந்திரவாதத்தால் வீட்டுக் கணக்குகளையும், ஆங்கிலப் பாடப் பயிற்சியையும் எழுதித் தர முடியுமா என்று அவர்கள் கேட்டார்கள். அது தன்னால் முடியாது என்று வருத்தத்துடன் சொன்னாள் எமிலி.

 

அச்சு மை வாடை அடிக்கும் பாடப் புத்தகங்களும், கிடை மட்டத்தில் நான்கு வரிகளாகக் கோடுகள் இட்ட ஆங்கிலப் பயிற்சி நோட்டுகளும், செங்குத்தான, கண்டிப்பு நிறைந்த மூன்று கோடுகளோடு  வரும் கணிதப் பயிற்சிப் புத்தகமும், பாட்டுகளும், மனனம் செய்த சிறு கவிதைகளை ஒப்பிப்பதுமாக இருக்கும் பள்ளிக்கூட உலகத்துக்கு அவள் திரும்பப் போக ஆசைப்பட்டாள்.

 

வீட்டுக் கணக்கு செய்யாமல் போய் மைதானத்தைச் சுற்றி ஓடி வரத் தண்டனை விதிக்கப்படும் மகிழ்ச்சி அவளுக்கு வேண்டி இருந்தது.

 

நேற்று அந்தப் பிள்ளைகளின் சிநேகிதியாக எமிலி முனைப்போடு இருந்து கைகளைப் படகு ஓட்டுவது போல் வீசி வீசி அசைத்து வெட்டவெளியில் இருந்து வரவழைத்த ரொட்டித் துண்டுகளையும் கேக்குகளையும் ஆர்வமும் கூச்சலுமாக அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்களோடு சேர்ந்து எமிலியும் அவற்றை ரசித்து உண்டாள்.

 

அங்கே தான் தவறு.

 

பெண் அதிகாரி கனிவு பொங்கச் சொன்னாள். அவள் தொடர்ந்தாள் –

 

நாட்டில் பசியும் பட்டினியும் இல்லாமல் செய்வது அல்லது இருப்பதைக் கொண்டு மன நிறைவடைய வழிப்படுத்துவது என்பதெல்லாம் அரசாங்கத்தின் பொறுப்பு. கேக்குகளையும் ரொட்டித் துண்டுகளையும் எமிலியின் மந்திரவாதம் உருவாக்கிக் கொடுப்பது சர்க்காரின் நடைமுறையில் குறுக்கிடுவதாகும். புரியவில்லையா? ஆகாரம் எதுவும் இனி மந்திரவாதத்தால் வரவழைக்காதே.

 

சரி என்று தலையசைத்துக் கேட்டுக் கொண்டாள் எமிலி.

 

அடுத்து, இது உன் மாமனைப் பற்றியது. கிராமத்தில் வற்புறுத்தி கோழிகளைக் காணிக்கையாகத் தரச் சொல்கிறாராம். தராமல் போனால், அவர்களை ஆடும் பறவை சபிக்கும் என்றும் மிரட்டுவதாக அறிகிறோம்.

 

இதற்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் எமிலி பார்த்தாள்.  அவரை ரத்தம் உறிஞ்சிக் கொல்லும் செடிகளுக்கு நடுவே விட்டிருக்கிறார்கள் என்று ஏனோ தோன்ற அவள் பார்வையில் மருட்சி தெரிந்தது.

 

கவலைப்பட வேணாம். உன் தாய்மாமனை எச்சரித்தாகி விட்டது. இன்று கடவுளின் சகோதரியோடு உரையாடும்போது அவர்கள் கேட்டால் சொல்லவே இந்தத் தகவல்.

 

அதிகாரி அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டி விட்டு வெளியே நடக்க, அம்மா என்று அழைத்தாள் எமிலி. திரும்பி நின்றபடி அவள் எமிலியை நோக்கினாள்.

 

நான் வீட்டுக்கு போகணும். எமிலி முறையிட்டாள்.

 

எதிர்பார்த்தது தான்.  அந்தப் பெண் அதிகாரி விறைப்பாக நின்றாள்.

 

கடவுளின் சகோதரி வந்து சேர்ந்ததும் நீ வீடு திரும்பலாம்.

 

இல்லை, நேற்று இரவில் இருந்து எனக்கு உடம்பு சுகமில்லை.

 

எமிலியின் குரலில் அவசரமும் பிடிவாதமும் தென்படத் தொடங்கியிருந்தன.

 

டாக்டரை வரச் சொல்கிறேன். நாளைக்கு முழுக்க ஓய்வெடுக்கலாம். ஞாயிறு.

 

நைச்சியமாகச் சொன்னாள் பெண் அதிகாரி.

 

இல்லை, வயிறு வலிக்கிறது. இப்போதும் கூட.

 

எமிலி அவசரமாகக் குளியல் அறைக்குள் போனாள். சற்று நேரத்தில் அங்கே இருந்து அம்மா என்று விளிக்கும் சத்தம்.

 

பெண் அதிகாரி அங்கே நடந்தாள்.  அட்டையில் செருகிய காகிதங்கள் மறுபடி கீழே சரிந்தன. சாவகாசமாக அவற்றை அடுக்கிக் கொள்ளலாம்.

 

ஐந்தே நிமிடத்தில் எமிலியைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து கட்டிலில் அமர்த்திய அதிகாரி, தொலைபேசியில் எண்களைச் சுழற்றிப் பேசியது –

 

இந்தப் பெண் குழந்தை பூப்படைந்தாள்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2024 05:56

August 2, 2024

எமிலி அந்த்ரோசா நிகழ்த்திக் காட்ட வேண்டி அங்கீகரிக்கப்பட்ட மந்திர நிகழ்வுகள்

முதல் நிகழ்ச்சியில் சிறு பட்டாம்பூச்சி பொம்மைகளைக் கையசைத்து உருவாக்கிக் கோழிப்பண்ணை சங்க நிர்வாகிகளில் வந்து வணங்கும் முதல் மூவருக்கு அன்பளிப்பாகத் தருவாள் எமிலி. இது அங்கீகரிக்கப் பட்டுள்ளது என்றாள் பெண் அதிகாரி.

அடுத்து, ஊசிகளைப் பூப்போட்ட சிறு பட்டுத் துணியில் அழகாகச் செருகி அன்பளிப்பாக ஆப்பிரிக்க உடுப்பு ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகளுக்கு வழங்கலாம் என்றாள் அதிகாரி. அது கையசைத்து வரவழைத்துத் தரச் சற்றே கடினமானது என்றாள் எமிலி.

 

இதற்கு மந்திரவாதம் செய்ய வேண்டாம், இந்த ஊசிகள் செருகிய பட்டுத் துணிகளை நேற்று நேசமான வல்லரசு நாட்டில் இருந்து அன்பளிப்பாகப் பெற்று பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது என்றாள் அதிகாரி.

 

அங்கீகரிக்கப் பட்டது என்று குரல் உயர்த்திச் சொன்னாள் எமிலி. எனக்கும் அந்தப் பட்டுத்துணி ஒன்று வேணும் என்று அவள் கூட்டிச் சேர்க்க, அதிகாரி உதட்டில் கை வைத்து புன்னகையோடு அவளைச் சும்மா இருக்கச் சொன்னாள்.

 

என் ராஜாத்தி, உனக்கு இல்லாத ஊசிகளா?

 

கருணையோடு சொன்ன பெண் அதிகாரியின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள் எமிலி.

 

ரோஜாப் பூக்களை வரவழைத்து மற்ற நிகழ்ச்சிகளில் ஒரு சில பேருக்கு வழங்கலாம் என்று அதிகாரி சொன்ன யோசனையை உடனடியாக அங்கீகரித்தாள் எமிலி. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் கையசைத்து ரோஜாப்பூவைக் கொண்டு வந்து விடுவாள் அவள். மெனக்கெடவே தேவையில்லை.

 

எல்லா நிகழ்ச்சிகளிலும் எமிலி புதிய அரசாங்கத்தின் வலிமை பற்றியும், நாடு வேகமாக முன்னேறி வருவது குறித்தும் விளக்கி, எதிரிகள் எறும்புப் புற்றிலும் ஆள்கொல்லிச் சிலந்தி வலைகளிலும் சிக்குண்டு இறக்கப் போவதாக எச்சரித்து  அரசு ஆதரவு உறுதிமொழி எடுக்கச் செய்வாள்.

 

அதற்கான சிற்றுரையை அவள் மனப்பாடமாக்கிக் கொண்டிருக்கிறாள். இருந்தாலும் மறந்து விடக்கூடாதென்று அந்தப் பெண் அதிகாரி இன்னொரு காகிதத்தை அடுக்கில் இருந்து மேலே எடுத்து அந்த உரையை உரக்கப் படிக்க, எமிலி ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

உறுதிமொழிக்கு மாறாக அவர்கள் யாராவது நடந்து கொண்டால்,  ஆடும் பறவை அகவி வெளியிடும் சாபங்களில் அவர்கள் குலம் நசிக்கும். எல்லோரும் நடுநடுங்கும், அவரவர் எதிரிக்கும் வர வேண்டாத நிலை இது.

 

அதிகாரி எமிலிக்கு அருகே இன்னும் நெருங்கி அமர்ந்தாள். ரகசியமாகச் சேதி சொல்கிற பொறுப்பும் அன்பும் கண்டிப்பும் அவள் பார்வையில் இருந்தது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 02, 2024 04:19

July 31, 2024

எமிலி அந்த்ரோசா இன்று நிகழ்த்தப் போகும் மந்திரவாதச் செயல்களின் பட்டியல்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி

கைக்குட்டையை மரியாதை விலகாமல் காக்கிச் சட்டைப்பையில் இட்டு புன்னகையோடு நின்ற அதிகாரியை எதிரே இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாள் எமிலி. அவள் இதற்காகவே காத்திருந்தது போல் அந்த நாற்காலியில் உட்கார்ந்து, கையில் பிடித்திருந்த கிளிப் செருகிய அட்டையில் மேலாக இருந்த காகிதத்தை அவசரமாகப் படிக்கத் தொடங்கினாள்.

 

இரவு நன்றாக உறங்கினீர்களா என்பதில் தொடங்கி, காலை உணவு, தேநீரின் சுவை வரை கேள்வியாக்கப்பட்டுக் கேட்டு உறுதி செய்யப்படும் தகவல் தொகுப்பு அது. நந்தினியிடம் நேரம் எடுத்து அக்கறையோடு கேட்டு அவள் தலையசைக்க நீண்டு முடியும் இந்தச் சடங்கு எமிலிக்குக் காகிதத்தில் தட்டச்சு செய்து அதை சைக்ளோஸ்டைல் செய்து எடுத்த கேள்வித் தொகுப்பாகியது.

 

அவசர அவசரமாக ஒவ்வொரு கேள்வியாக அதிகாரி கேட்க, பள்ளிக்கூடத்தில் அட்டண்டென்ஸ் எடுக்கும்போது உள்ளேன் ஐயா என்று பதில் சொல்வது போல் ஒவ்வொரு கேள்விக்கும் ஆம் என்று பதில் சொன்னாள் எமிலி.  எழுந்து நிற்கவில்லை என்பது தான் வேற்றுமை.

 

கேள்விகள் முடிந்ததும், இன்றைய நிகழ்ச்சிகளின் விவரம் படிக்கப் பட்டது.

 

காலை ஒன்பது மணிக்கு, அதாவது இன்னும் ஒரு மணி நேரத்தில்,  கோழிப் பண்ணை வைத்திருப்போர் சங்க நிர்வாகிகளோடு சந்திப்பு. பதினோரு மணிக்கு, ஆப்பிரிக்க உடுப்புகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு உரையாடல், நடுப்பகல் விருந்து நாட்டுப்புற இசைக் கலைஞர்களோடு, பிற்பகல் மூன்று மணிக்கு கடவுளின் மூத்த சகோதரியோடு மின்குழாய்த் தொடர்பு மூலம் உரையாடுதல், மாலை ஐந்து மணிக்கு, ஜப்பானிய முரசுகள் முழக்கும் இசை நிகழ்ச்சி, எட்டரை மணிக்கு இரவு உணவு. உறக்கம்.

 

இந்த நிகழ்ச்சிகளின் உங்கள் பங்களிப்பு என்ன?

 

கேள்வி புரியவில்லை என்றாள் எமிலி.

 

விளக்குகிறேன் என்று சொல்லிப் பெண் அதிகாரி எழுந்திருந்தாள். அவளுடைய கையில் பிடித்திருந்த அட்டையில் செருகிய க்ளிப் நெகிழ்ந்து, காகிதங்கள் அறையெங்கும் பறந்தன.

 

இது உங்கள் வேலை தானே?

 

கண்டிப்பான ஆசிரியை போல், ஆனால் முகத்தில் சிரிப்பு மாறாமல் கேட்டாள் அதிகாரி. இல்லை என்று அவசரமாக மறுத்தாள் எமிலி. போனால் போகட்டும் என்ற முக பாவத்தோடு அதிகாரியை ஏறிட்ட அவள் தரையில் கிடந்த காகிதங்களைப் பார்க்க, அவை சற்றே எழும்பிப் பறந்து அதிகாரி கையில் பிடித்த அட்டையில் மறுபடி ஒட்டியபடி நின்றன.

 

நன்றி. ஆனால் நான் வைத்திருந்த ஒழுங்கு அமைப்பு குலைந்து போய்விட்டது.

 

அதிகாரி புகார் செய்யும் குரலில் சொன்னாள். காகிதங்களை மறுபடி அட்டையில் செருகத்தான் எமிலியால் முடியும். முன்னால் இருந்த வரிசையில் அடுக்குவது கடவுளின் சகோதரியால் ஒருவேளை செய்ய முடியுமாக இருக்கலாம். அதற்கான மந்திரவாதம் படித்துத் தேர்ச்சி அடைவதற்குள் எமிலி வயதான மூதாட்டி ஆகி விடக் கூடும். கைகளிலும் கால்களிலும் நடுக்கம் ஏற்பட, முகத்தில் தோல் சுருங்கிய கிழவி.

 

எமிலி எதிரே இருந்த நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டபோது அங்கே அழகான ஓர் இளம்பெண் தென்பட்டாள். சே, இவள் நானில்லை என்றாள் அவசரமாக எமிலி. ஆனாலும் மனதில் மகிழ்ச்சி ஊற்றாகப் பெருகி இருந்தது. இதை லட்சியமே செய்யாமல் காகிதங்களை அடுக்கிய பெண் அதிகாரி, சற்று எம்பி, கட்டிலில் எமிலி அருகே அமர்ந்தாள். கடைசியில் இருந்த காகிதத்தை முன்னால் வைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.

 

இன்றைய நிகழ்ச்சிகளில் நீ செய்யப் போகும் சிறு மந்திரவாத நற்செயல்கள் என்னவாக இருக்கும்?

 

அவள் சிரித்தபடி கேட்க, எமிலி அவள் கையை அன்போடு பற்றி முத்தமிட்டாள். பெண் அதிகாரி இறுக்கம் தளர்ந்து, மெல்ல எமிலியின் தலையில் வருடினாள். அந்தக் கணத்தில் அம்மாவும் பெண்ணுமாக அவர்கள் ஆன அந்த மந்திரவாதத்தை எமிலி செய்யவில்லை தான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2024 18:33

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.