இரா. முருகன்'s Blog, page 6

October 19, 2024

அரசூரை அசையாமல் நிறுத்திய கொழும்பு வல்லிகள் மூணுபேர்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

கிட்டாண்ணா குரல்லே இந்த காளையார்கோவில் ஓதுவார் தேவாரம் பாடினது மனசுக்கு இதமா இருந்தது. இது சாமி சந்நிதியில் சாயரட்சை தீபாராதனை நேரத்துலே ஒரு அஞ்சு நிமிஷம் பாடறது இல்லே. பிரகாரத்திலே ஓரமா, நந்திக்குப் பக்கம் உட்கார்ந்து கையிலே சின்னதா தாளம் வச்சுத் தட்டியபடிக்கு மனசு விட்டுப் பாடறது.

 

நேத்து சாயரட்சை தீபாராதனை முடிஞ்சு, துணி விரிச்சு உட்கார்ந்து, கையிலே தாளம் தட்டிண்டு அவர் பாடினார் –

 

எல்லா பிறப்பும் பிறந்து இளைச்சுப் போனேன் எம்பெருமானே

 

கேட்டு கண்ணுலே ஜலம் வராம யாராவது இருந்தா அவாவா காது கேட்காமப் போனவான்னு தீர்மானம்.

 

அடுத்தாப்பலே, அவர் பித்தா, பெருமானே, அத்தான்னு பாடிண்டிருந்த நேரத்திலே சுகுணவல்லி கெக்கென்னு சிரிச்சுட்டா.  அதான் அந்தக் கொழும்புக்காரிப் பெண்குட்டி. கறுப்பா, தலை நிறைய தலைமயிரோட என்ன அழகா இருக்கா. இன்னிக்கு இருந்தா பதினைஞ்சு வயசு இருக்குமா?

 

ஆறு மாசம் முந்தி அவளும் அவ அம்மா அமிர்தவல்லியும் இங்கே வந்து சேர்ந்த கோலாகலத்தை தீபாவளி நேரத்திலே ஒரு நாள் எழுதியாச்சு. அமிர்தவல்லி இங்கே நம்ம மோகனவல்லிக்கு ஒண்ணு விட்ட அக்கா உறவாம். சொந்த அக்கான்னு முந்தி எழுதினது பிசகு. மோகனவல்லி, அதான் ஊரோடு வாஞ்சையா சொல்றாளே, கொட்டகுடித் தாசி. அவளுக்கு மூத்த அக்கா உறவு கொழும்பி. அவளோட அகத்துக்காரர் யார்னு யாரும் கேட்கலே. நானும் தான்.

 

பகவான் இந்த வல்லிகளுக்கு வஞ்சனை இல்லாம வனப்பைக் குழைச்சு உடம்பிலே பூசி அனுப்பியிருக்கான். ஊர் ஆம்பளைகள் எல்லோரும் கள்ளுக் குடிச்ச குரங்கு மாதிரி ராப்பகலா இதே மோகத்தோட சுத்தியாறது. யார் பேரழகின்னு சர்ச்சை எங்கே பார்த்தாலும் நடக்கறதாம். ஜோஸ்யர் மாமி தான் இப்படியான உருப்படி இல்லாத வம்பெல்லாம் கொண்டு வந்து கொட்டிட்டுப் போவா.

 

ஆமா, யார் அழகு? உள்ளூர் மோகினி மோகனவல்லி அழகுக்கு என்ன குறைச்சல்? வந்து சேர்ந்த அந்த அமிர்தவல்லி தான் பங்கரையா என்ன? அவ பொண்ணு? கண்ணும் மூக்கும் உதடும் என்ன அழகா அந்த சுகுணவல்லி.

 

இவா மூணு பேரையும் சேர்த்துப் பார்க்கற போது சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மாதிரி இருக்கேன்னு நான் சொன்னதுக்கு, ஜோசியர் மாமி கோவிச்சுண்டு போய்ட்டா. எதை எதுக்கு நேர்னு சொல்றதுன்னு விவஸ்தை இல்லையான்னா என் கிட்டே அடுத்த நாள் வாசல்லே கோலம் போடறச்சே சண்டை.

 

அதை இவர் கிட்டே சொன்னா, நீ சொன்னது ரொம்பவும் பிழையாச்சேன்னு கோவிச்சுண்டார் இவரும். மன்னிச்சுக்கச் சொன்னேன் உடனே. நமக்குத் தெரிஞ்சது அதானே. அவரானா கண்ணையும் சிமிட்டிண்டு காதைப் பிடிச்சுத் திருகிச் சொன்னார் –

 

அவா மூணு பேரும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி இல்லை. ரம்பா, ஊர்வசி, திலோத்தமையாக்கும்.

 

புகையிலைக் கடைக்காரரே,  வண்டி வண்டியா, தேகம் முழுக்க, கொழுப்பு  உமக்குன்னேன்.

 

கொழும்புக்காரி அழகா இருக்கறதுலே என்ன ஆச்சரியம். கொழும்புத் தேங்காயெண்ணெய் தான் தினம் உடம்பிலே பூசிண்டு குளிக்க.  தாளிச்சுக் கொட்ட. கறி பண்ண. அத்தனை தேங்காயெண்ணெயும் என்ன ஆகும்? உடம்புலே தான் கசியும் பாத்துக்கோ. அதுவும் அந்த அம்மாக்காரி அமிர்தவல்லி நிகுநிகுன்னு என்னமா இடுப்பு அவளுக்கு.

 

அவர் ஆரம்பிச்சார். நான் கோபத்தோட முதுகிலே அடிச்சு குளிக்கப் போகச் சொன்னேன். அது பொய்க் கோபம். அப்புறம் இப்போ வந்தது தான் ரௌத்ரம். வந்து என்னையே முடக்கிப் போட்டுடுத்து அந்தப் பிசாசு. இதுக்கும்  வல்லிக் குடும்பம் தான் காரணம்.

 

Oct 19 2024

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 19, 2024 00:41

October 17, 2024

சிவன் கோவிலில் கொடியேற்றம், எழுநள்ளிப்பு பற்றி கூட்டெழுத்தில் எழுதிய லிகிதம்

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து (அர சூ ர்      நாவல் – 4)

இவர் சிரிக்கறது அந்த சோடா குப்பி திறந்த மாதிரித் தான் இருக்கும். சண்டை போட்டா என்ன? மனுஷர் நயத்துக்கும் என்ன குறைச்சல். ஆம்படையான், பொண்டாட்டின்னா மனஸ்தாபமும், மனம் விட்டுப் பேசறதும் சகஜமாச்சே. இல்லாமலா,  சரி இது எதுக்கு. கருத்தான் ராவுத்தர் கதை இருக்கு பாதியிலே விட்டுட்டேனே.

 

இவர் சிரிச்சபடிக்கு கருத்தான் ராவுத்தர் போட்ட லெட்டரைக் கொடுத்து என்னையும் படிக்கச் சொன்னார். என்னத்தைப் படிக்க?  பெட்டி வண்டி வரிசையாப் போகிற மாதிரி கூட்டெழுத்தா இருக்கு எல்லாம். அதைப் படிச்சுப் புரிஞ்சுக்க கஷ்டப் படறதை விட இவர் கூடச் சேர்ந்து சிரிச்சுட்டுப் போகலாம்.  அதுவும் பத்து நாள் உம்முனு உத்தரத்தைப் பாத்துண்டு பிரமை பிடிச்ச மாதிரி உக்காந்துட்டு. அர்த்தமே இல்லே. ஆனா தப்பு கிடையாது.

 

ராவுத்தரை பத்தி என்னத்தைச் சொல்லிச் சிரிக்க. பாவம் அந்தப் பொம்மனாட்டி எப்படி துடிச்சிருப்பான்னு கேட்டேன். இவரானா அதெல்லாம் இல்லைங்கறார். கருத்தான் ராவுத்தரோட பீவி பட்டணத்துப் பொண்ணு தானாம். கல்யாணம் முடிஞ்சுதான் பெங்களூர்லே புக்காத்துக்குப் போனாளாம். ஒரு மணி நேரத்திலே சமுத்ரக் கரையிலே இருந்து தைரியமா, தன்னந்தனியா ஜட்கா பிடிச்சு வந்து சேர்ந்துட்டாளாம். மிடுமிடுக்கியாக்கும் அந்தப் பொண்ணு. பார்க்கணும் அவளை.

 

சரி, கோவில்லே உல்சவக் கொடி ஏத்தினது எழுதியாச்சு. அதுக்கு முந்தி, போன வாரம் எழுத விட்டுப் போன ஒரு விஷயம் இருக்கு.

 

இங்கே சிவன் கோவில்லே ஓதுவார் ஒருத்தர், காளையார்கோவில்லே இருந்து வந்தார்னு சொன்னா எல்லோரும். ஊர்ப் பெயரே காளையார்கோவில். அங்கே கோவில். அதை எப்படிப் பிசகு நேராம சொல்றதுன்னு இவரைக் கேட்டேன். காளையார்கோவில் கோவில்லே இருந்த ஓதுவார்னு சொல்லணுமாம்.  சரி அந்த மாதிரி ஓதுவார். என்னாக்க,  தேவாரம் பாடி சுவாமியை பரவசப்படுத்தறவர், இங்கே கோவில்லே இருந்து ஊழியம் பண்ணச் சொல்லி எல்லோரும் கேட்டுண்டு காளையார்கோவிலை விட இன்னும் ரெண்டு ரூபா மாசாமாசம் கூடுதலாகவே தரலாம்னு சொல்லி அவரை இங்கே வரவழைச்சு சேர்த்தானது.

 

கருத்து மெலிஞ்ச மனுஷர். ஒரு ஜாடைக்கு எங்க கிட்டாவய்யன் அண்ணா மாதிரி இருக்காராக்கும். கிட்டா அண்ணா மாதிரி கணீர்னு குரல். முன்னே எல்லாம் விருச்சிக மாசம் பிறக்கும் போது மூணு அண்ணாவும் சபரிமலைக்கு விரதம் இருக்க மாலை போடறபோது கிட்டா அண்ணா இப்படித் தான் குரலை உச்சாணிக் கொப்புக்கு உசத்தி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பான்னு ராகமா சரணம் விளிப்பார். கேட்டு அப்படியே கரைஞ்சு போய் நிப்போம். நானும் நாணிக் குட்டியும் தான். கிட்டா அண்ணா குரிசைப் பிடிச்சுண்டு கண்ணூர்லே சாப்பாட்டுக்  கடை போட்டு வேறே என்னமோ பாடிண்டிருக்கார். நாணி பெருந்தன்கோட்டுக்கு கல்யாணம் கழிச்சுப் போனவள் போனவள் தான்.

Oct 18 2024

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 17, 2024 22:35

October 16, 2024

பஞ்சாபி, இந்தி, காஷ்மீரி என்று எல்லா மொழியிலும் ப்ரியம் வைக்க ஜோடா-கலர்

வாழ்ந்து போதீரே   அத்தியாயம்   முப்பத்தெட்டு         

          

(பகவதியின் நாட்குறிப்பில் இருந்து)

2 ஏப்ரல்  1901 –   பங்குனி 20 செவ்வாய்க்கிழமை

 

யாரோடயும் விரோதம் பாராட்டாமல்,  பிரியத்தோடு எல்லாரையும் அரவணைச்சு இனி இருக்கப் போகிற காலம் எல்லாம் கழியட்டும். பத்து நாளாக நான் டயரி எழுதலே. பேனாவைப் பிடிக்க கை நடுங்கறது. பத்து நாள் கழிச்சு இன்னிக்குத்தான் சாதாரணமா சாப்பிட்டேன். கொஞ்சமா பேசினேன். எழுதறேன்.

 

தேர்த் திருவிழா நடக்கப் போகிற நேரம் இது. பேசாம, யாருக்கோ எங்கேயோ ஏதோ நடக்கறதுன்னு நான் ஓரமாப் போய் பதினஞ்சாவது உட்காரலாமா? நான் இங்கே வந்து பார்த்தாகிற தேராக்கும் இது.  காலம் தான் எப்படி இந்த மேனிக்கு விரசா ஓடறது. புடவை கூட சரியாகக் கட்டத் தெரியாம மரப்பாச்சிக்குத் துணி சுத்தின மாதிரி தத்துப்பித்துன்னு சுத்திண்டு இவர் கையைப் பிடிச்சுண்டு இங்கே வந்து இத்தனை வருஷம் ஓடியே போனது.

 

லண்டன்லே சக்ரவர்த்தினி விக்தோரியாம்மை இந்த வருஷம் பிறந்ததுமே ஸ்வர்க்கத்துக்குப் புறப்பட்டுப் போயாச்சு. அது ஒரு பெரிய விசனம் என்கிறதாலே இந்த வருஷம் சகல உல்சவமும், பண்டிகையும் அளவோட குதிச்சுக் கூத்தாடிக் கொண்டாடணும்னு எல்லாரும் சொன்னாலும், மகராணி போனது கல்யாணச் சாவு ஆச்சே,  அம்பதா அறுபதா,  சொளையா தொண்ணூறு வயசு இல்லையோ அவளுக்கு.

 

என்னிட்டு, எந்தக் கொண்டாட்டத்திலே பாக்கி வச்சாலும் அவளுக்கு அவமரியாதை செய்யறது ஆகும்னு ஒரு கட்சி. இவர் எல்லாம் அந்தப் படியானவர் தான். நானும் தான். சோபானம் சோபானம்னு பாடி பரவசமாகணும். அப்படியான மனுஷி. என்னமா வச்சிண்டிருந்தா ஜனங்களை. இன்னும் கொஞ்சம் நாள் இருந்தா நம்மோட இந்த பாரத தேசத்துக்கும் நல்லது பண்ணியிருப்பாளா இருக்கும்.

 

ஆக, புறப்பட்டுப் போன விக்டோரியாம்மைக்கு ஸ்வர்க்கம் என்னென்னிக்கும் சித்தியாக மனசோட தொழுது, உல்சவக் கொடி ஏத்தியாச்சு. இங்கேயானா, அதை துவஜஸ்தம்பத்திலே சாமி கொடி பறக்க விடறதுங்கறா. ஒவ்வொரு பிரதேசத்திலேயும் ஒரு பேர்.

 

எல்லாப் பண்டிகை நேரத்திலேயும், எட்வர்ட் துரை அடுத்த சக்ரவர்த்தியானதையும் சேர்த்துக் கொண்டாடணும்னு சிலபேர் சொன்னாலும், ராணியம்மா பேரும் புகழும் இவருக்கு வர, இன்னும் நாற்பது வருஷமாகலாம்.  அதுவரை நான் இருப்பேனோ என்னமோ.  அப்புறம், தேர் சுப்பிரமணிய சுவாமிக்கா? ஏழாமன் எட்வர்ட் துரைக்கா?

 

ஏழாமன்னு சொன்னா, ஏழாவது. எட்வர்ட் தானே அவர்? துரை பெயர் தப்பா எழுதிட்டேனோ. போகட்டும், ஒரு வெள்ளைக்காரர். விக்டோரியா அம்மைக்கு புத்ரன். அது போதும். மத்த ஓர்மைப் பிசகெல்லாம் மறந்து போயிடட்டும்.

 

எழுதணும்னு உக்காந்ததும்  கருத்த சாயபுவோட கூத்து தான் அதி முக்கியமா ஓடோடி நினைவிலே வருது.  கருத்த சாயபுன்னு கடையிலே  ஊழியம் பண்றவா சொல்லிக் கேட்டுக் கேட்டு பெயர் அப்படித்தான் படிஞ்சிருக்கு மனசுலே.

 

பெயர் எல்லாம் சரியாச் சொல்லணும்னு இவர் சொல்வார். புகையிலைக் கடை பாகஸ்தர் சுலைமான் ராவுத்தர், கருத்தான் ராவுத்தர்னு ரெண்டு பேர், அதிலே கருத்தான் எனப்பட்டவருக்கு அவர் பெயரே சமயத்துலே மனசிலே நிக்காதாம்.  பெயரை மாற்றி வேறே சொல்லிடுவாராம் சமயத்துலே. அவர் போன வாரம் பெண்டாட்டி நூருஜகன் பீவியைப் பட்டணம் பார்க்க ரயில்லே கூட்டி வந்துட்டு சமுத்திரக் கரையிலே உட்கார வச்சுட்டு கடைக்குப் புறப்பட்டு வந்துட்டாராம். மிட்டாய் வாங்கிண்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்பியவர். மிட்டாய்க்கடை வாசல்லே யாரோ சிநேகிதனைப் பார்த்து வந்த காரியம் மறந்து பேசிட்டே இருந்துட்டாராம். அவர் கூட அவரோட சாரட்லேயே கடைக்கும் போயாச்சாம் மனுஷர். பாவம் அந்தப் பொம்மனாட்டி இனியும் புருஷனோட கோவிலைக் காணணும் குளத்தைக் காணணும்னு இறங்குவான்னு தோணலை.

 

கருத்த ராவுத்தர் இதை எல்லாம் ஒண்ணு விடாமல் எழுதி இவருக்குக் கடிதாசு போட்டிருந்தார்.  இவர் படிச்சுட்டு ஓன்னு சோடா பாட்டில் உடைச்ச மாதிரி சிரிச்சார். ஆமா, அதை ஏன் கேக்கணும், இங்கே போன மாசம் சோடான்னு ஒரு திரவத்தை கண்ணாடி குப்பியிலே அடைச்சு, தக்கை வச்சு மூடி, அதை கடையிலே எல்லாம் விக்க ஆரம்பிச்சு ஏக பிரபலம். புகையிலைக் கடையிலே கூட அந்த பாட்டிலை எல்லாம் நெட்டக்குத்தலா நிறுத்தி வச்சு, ரெண்டு சல்லிக்கு விற்க ஆரம்பிச்சிருக்கு. குடிச்சு முடிச்சு பொறையேறிண்டே குப்பியைத் திருப்பிக் கொடுத்துடணும்.

 

குண்டு குண்டா ரெண்டு ராயர்கள் வேலாயுதஸ்வாமி கோவில் தெருவிலே ஒரு வீடு பிடிச்சு இதுக்குன்னு யந்திரத்தை பிரதிஷ்டை பண்ணி ராப்பகலா கிணத்துத் தண்ணியை எறச்சு, அதிலே உப்பு, சக்கரை, சாயம்னு ஏதெல்லாமோ போட்டு வாயுவை நிரப்பி ஓஹோன்னு விக்கறா. எனக்கு ஒண்ணு கடை எடுத்து வச்சுட்டு வரும்போது கொண்டு வந்து கொடுத்தார்.   என்னமோ நறுவுசு வேலை பண்ணி திறந்தும் கொடுத்தார். புறங்கையிலே சாயமும் சக்கரையும் ஒட்ட நானும் கொஞ்சம் பானம் பண்ணினேன். சத்தம் இருக்கற அளவுக்கு சரக்கு நயம் இல்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 16, 2024 23:22

October 14, 2024

நூதன் நூதன் என ஸ்மரிக்கும் ஜனக் கடல் பிளந்து வழிவிட அன்னம் போல் நூதன் மிதந்து வந்தபோது

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல். அதிலிருந்து அடுத்த சிற்றஞ்சிறு மொழிச் சிதறல் –

அவனைப் பாராட்டுகிற தொனியில், நல்லது நீ இப்போ தான் நல்ல பிள்ளை, காயத்ரி ஜபி என்றார் அவர்.

 

சார், எல்லா பெயரும் வாங்கிட்டேன். அகல்யா வயசு என்ன ?

 

பத்திரிகைக்காரன் குறுக்கே புகுந்து கேட்க, அப்புறம் என்று கை காட்டினார் புரோகிதர்.

 

இன்னும் அரை மணி நேரத்துலே எடுத்தாகணும்.  அவங்கவங்க குளிச்சுட்டு சாப்பிடணுமே, ஆபீஸ், ஸ்கூல்ன்னு போகணுமே.

 

அவர் தன் சமூக அக்கறையைப் பங்கு வைக்கத் தவறவில்லை என்பது திலீப்புக்கு பிடித்தது.

 

இந்த நெய்யை மாவிலையாலே எடுத்து விடுங்கோ.

 

புரோகிதர் ஒரு தகர டப்பாவில் டால்டாவை எடுத்துப்  போட்டு, நான்கு சுள்ளிகளைக் கொளுத்தி எரிய வைத்த சிறு அக்னியில் அழுக்குத் துணியால் பிடித்துக் காட்டி உருக்கிக் கொண்டிருந்ததைக் கீழே வைத்தார். அவர் மடித்துக் கொடுத்தது மாவிலை இல்லை என்று திலீபுக்குத் தெரியும்.

 

நூதன் நூதன் நூதன்

 

ஒன்றிரண்டாக எழுந்து நூறு குரல்கள் ஒன்று சேர, அந்தத் தெருவே வாசல்களுக்கு வந்து நூதன் என்று திரும்பத் திரும்ப ஒரு சேர முழங்கியது.

 

கடலில் மிதந்து வருகிற வலைத் தோணி போல கருப்புப் புடவையும் வெள்ளை ரவிக்கையும் உடுத்து நூதன் நடந்து வந்தார். திலீப் பார்த்துக் கொண்டிருக்க, மோசேக்கு வழி விட்ட கடல் போல திரண்டு நின்ற ஜனக்கூட்டம் ரெண்டாகப் பிரிந்து நூதன் போக வழி விட்டது. இலையும் தழையும் பூவுமாகப் பெரியதாகச் சுற்றிய ஒரு மலர் வளையத்தை இருகையாலும் பிடித்தபடி, நூதன் பின்னாள் ஒரு சோனியான பெண்ணும் வந்து கொண்டிருந்தாள்.   பணிப்பெண்ணாக இருக்கலாம்.

 

வரும்போது குறுக்கே நின்று புன்னகைத்த மினிஸ்டர் பெரியப்பாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டு நிமிர்ந்துரெண்டு வார்த்தை பேசி விட்டு முன்னால் நடந்தார் நூதன். பெரியப்பா முகத்தில் திருப்தி தெரிந்தது.

 

வீட்டு வாசலில் நூதன். அகல்யா ஓடோடியும் வந்து எதிர்கொண்டாள் நூதனை. அவள் முகத்தில் பெருமையும் கம்பீரமும் ஒரு நிமிடம் படந்து விலகியதாக திலீப் நினைத்தான்.

 

அகல்யா அவனைக் கண்ணால் தேடிப் பக்கத்தில் வரச் சொன்னாள். புரோகிதரிடம் சொல்லிக் கொண்டு ஓடலாம் என்று திலீப் பார்வையை உயர்த்த மராத்தியப் புரோகிதர் அங்கே இல்லை. அகல்யா பின்னால், நூதனுக்கு வெகு அருகே எல்லாப் பிரார்த்தனையும் பலித்த எக்களிப்பும் பரவசமுமாக அவர் நின்று கொண்டிருந்தார்.

 

ஷாலினிதாய் அவங்களோட ஒரே மகன். நான் மருமகள்.

 

சுருக்கமாக அறிமுகம் செய்தாள் அகல்யா.

 

நூதன் வினாடிப் பார்வையில் முழுமையான சோகத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்தி திலீப்பிடம் வலது கையை நீட்டினாள். நெஞ்சு படபடக்க, அகல்யாவைப் பார்த்து விட்டு, அந்த நீண்ட விரல்களைத் தொட்டான் அவன்.

 

அங்கீகரித்துச் சோகமாகப் புன்னகைத்து, அடுத்த வினாடி புடவைத் தலைப்பில் கையை மறைத்துக் கொண்டு, மெதுவான குரலில் கூறினார் நூதன் –

 

எவ்வளவு உன்னதமான கலைஞர் அவங்க, ஏக்தம் நல்ல கதிக்குத் தான் போயிருப்பாங்க.

 

நூதன் சொல்லிக் கொள்ளாமல் காருக்கு நடக்க ஆரம்பிக்க, மக்கள் வெள்ளம் திலீப்பை உந்தித் தள்ளியது. ஒரு சுழலில் அகப்பட்ட அவனை ஒரு வினாடி நிறுத்தியவன், அகல்யா வயசு ப்ளீஸ், ரிப்போர்ட்டுக்கு வேணும் என்றான். பதில் சொல்லும் முன் வாசலுக்கு வெகு தூரத்தில் தெருவில் நின்றான் திலீப்.

 

பக்கத்தில் அவன் கட்சியின் பேட்டை பிரமுகர் ஸ்வீட் ஸ்டால்கார பாலகிருஷ்ண கதம் ஜவந்தி மாலையோடு நின்றார்.

 

தலைவர் புணேயிலே ஒரு கல்யாணத்துக்கு .

 

கதம் ஆரம்பிக்க, புரோகிதர் திலீப்பை உரக்க அழைத்தார். அவர் வா என்றால் வரணும். திலீப் ஓடினான்.

 

நேரமாச்சுன்னு சொன்னேனே. நீங்க வரல்லேன்னா நான் போய்ட்டே இருப்பேன்.

 

எங்கே, நூதன் பின்னாடியா?

 

நினைத்தபடி அவரோடு சவ வண்டிப் பக்கம் போய் நின்றான் திலீப். உள்ளே இருந்து ஷாலினிதாய் உடலைச் சுமந்து வந்தவர்கள் வண்டியின் பின் கதவு திறந்து உள்ளே தரையில் இட, எல்லோருடைய அசைவுக்கும் கீழ்ப் பணிந்து ஷாலினிதாயின் தளர்ந்த சரீரம் சமாதானம் சொல்லி ஆடிக் கொண்டிருந்தது.

 

அழு. அழுடா. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. கிராதகா, அழுடா.

 

திலீப் தலையை ஆட்டிக்  கொண்டான். இல்லை, அழுகை வரவே இல்லை.

 

திலீப் தீயை உரியில் வைத்துத் தூக்கியபடி முன் இருக்கையில் அமர, ஸ்டீரிங்கில் இருந்த மராட்டிப் புரோகிதன் சொன்னான் –

 

என் பிருஷ்டத்துலே தீ வச்சு ராக்கெட் மாதிரி கிளப்பற ஐடியாவா.  சரிப்படாது. பின்னாலே வச்சுட்டு நீ மட்டும் ஏறு.

 

திலீப் மறுபடி சவ ஊர்தியின் முகப்பில் ஏறினான். வண்டி கிளம்பியது.

 

சார், அகல்யா, வயசு?

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2024 04:11

October 13, 2024

டால்டாவோ வனஸ்பதியோ நெய்ப்பந்தமாக எரிந்து வழிகாட்ட ஷாலினிதாய் சுவர்க்கத்துக்குப் புறப்பட்டாள்

நேத்து பார்த்தேனே. நானும் சாகரிகாவும் கை காட்டினோம். அம்மா சாகரிகா கையைப் பிடிச்சுக்கிட்டு நர்சரி ரைம் பாடினாளே.

 

குழந்தை ஹம்ப்டி டம்ப்டி ஸாட் ஆன் த வால் என்று பாட ஆரம்பித்தது.

 

வேண்டாம் என்று அடக்கினாள் அதன் அம்மா.

 

குழந்தையை எல்லாம் ஏன் கூட்டி வரணும்? உடம்பு கிடக்கிற இடமாச்சே. குழந்தைகளுக்கு சட்டுனு பிடிச்சுடுமே ஏதாவது சரியில்லேன்னா.

 

மனதில் நினைத்ததை அகல்யாவிடம் சொல்லத் திரும்ப, அவளை அங்கே காணோம்.

 

அம்மாவை இப்போதே நோய் அண்டிக் குவியும் வெற்று சடலமாக நினைக்க ஆரம்பித்தாகி விட்டது.  பிரியமும், பாசமும், அடிப்படைக் கனிவும் எல்லாம் போன இடம் எங்கே?

 

முகம் பார்க்கும் கண்ணாடி மாட்டிய சுவரில் தன் முகம் பார்க்கத் திரும்பினான் அவன்.  யாரோ சாவு வீட்டுக் கண்ணாடியைக் கழற்றி வைத்திருந்தார்கள்.

 

குளித்துக் கொண்டிருக்கும்போது நான்கைந்து பேர் கதவைத் தட்டி அவசரம் என்றார்கள். அகல்யா குரலும் கேட்க, அவன் ஒரு காகிதம் உள்ளே போகும் அளவு கதவைத் திறந்து என்ன என்று அகல்யாவைக் கண்ணில் சோப்பு நுரையோடு  உத்தேசமாகப் பார்த்துக் கேட்க, நூதன் வரா என்றாள்.

 

யாரு நடிகையா?

 

ஆமா.

 

இன்னும் ஒரு தடவை சோப்பைத் தீற்றி முகம் அலம்பினான்.

 

அம்மா, நீ ஏன் கஷ்டப்படணும். நாட்டுப் பொண்ணு தான் போயாச்சே. என்னோடு வந்துடு.

 

மினிஸ்டர் பெரியப்பா குரலை உயர்த்திச் சொல்லுவது கேட்டது திலீப் உடம்பு துவட்டிக் கொண்டிருந்தபோது. அவனுக்கும் கேட்க வேண்டும் என்று சொல்வதாக இருக்கலாம்.

 

போகட்டும், நூதன் வரப் போகிறாள்.

 

குளிச்சு வர இவ்வளவு நேரமா, பாத்ரூம்லே வேறே ஏதாவது செஞ்சிட்டிருந்தியா?

 

மராட்டி புரோகிதன் மணியடிக்கிறது போல் கையாட்டிச் சிரிக்க எடுபிடிகள் ஒரு வினாடி சிரித்து, இன்றைக்குப் படியளக்கப் போகிற மகாராஜன் இவனாச்சே என்று நினைவில் பட,  நிறுத்தி எல்லாத் திசையிலும் பார்த்தார்கள்.

 

புரோகிதன் தன் தலைமையை மீண்டும் நிலை நாட்டிய கர்வம் தெரிய,  ஓங்கி மந்திரம் சொன்னான்.

 

ஜீப் நிற்கும் சத்தம். குதித்து வெளியேறும் அதிகாரிகள். சைரன் பொருந்திய கார். அப்புறம் பெரிய கருப்பு அம்பாசடர். இன்னொரு மந்திரி.

 

இவர் மாநில அரசு அமைச்சர் என்று திலீப்புக்குத் தெரியும். பிராணி நலனோ,  மீன் வளத்துறையோ நிர்வகிக்கிறவர்.  கூடவே போட்டோ கிராபரும் உண்டு.

 

ரெண்டு கையையும் விரித்தபடி வந்த அந்த ஸ்தூல சரீர மனுஷர், செண்ட்ரல் மினிஸ்டர் பெரியப்பாவின் பாதம் தொட்டு வணங்கியபின் சிரமப்பட்டு நிமிர்ந்து நின்று, அவரை அணைத்துக் கொண்டார். ஃபோட்டோகிராபர் இல்லையென்று தலையாட்ட, திரும்பப் பெரியப்பாவை அணைக்க முற்பட பெரியப்பா, மழையில் நனைந்த வைக்கோல் பொம்மை போல நின்றார்.

 

ரொம்ப வருத்தப்படறேன். முதலமைச்சர் சோவியத் யூனியன் போயிருக்கறதாலே. காலையிலே எனக்கு ஓவர்சீஸ் கால் போட்டு.

 

 

அவர் கையைப் பற்றியபடி துக்கம் பரிமாறி விட்டு, கண்ணால் அவசரம் அவசரம் என்று ஜாடை காட்டிக் கொண்டிருந்த மராட்டிப் புரோகிதர் முன் உட்கார்ந்தான் திலீப்.

 

Oct 13 2024

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2024 05:10

October 12, 2024

சந்தனம் அதிகம் மணக்காமல் சோப்பு போட்டுக் குளித்தவிட்டு உடனே வரணும்

அரசூர் நாவல் தொகுதியின் நான்காம் நாவல் – சிறு பகுதி – இது

அவள் சொல்லும் போதே, கீழ் வீட்டுப் பெண், கத்தரி கலர் ஃப்ராக் போட்ட நாலு வயதுப் பெண் குழந்தையின் கையைப் பிடித்தபடி வந்தாள்.

நேத்து பார்த்தேனே. நானும் சாகரிகாவும் கை காட்டினோம். அம்மா சாகரிகா கையைப் பிடிச்சுக்கிட்டு நர்சரி ரைம் பாடினாளே.

 

குழந்தை ஹம்ப்டி டம்ப்டி ஸாட் ஆன் த வால் என்று பாட ஆரம்பித்தது.

 

வேண்டாம் என்று அடக்கினாள் அதன் அம்மா.

 

குழந்தையை எல்லாம் ஏன் கூட்டி வரணும்? உடம்பு கிடக்கிற இடமாச்சே. குழந்தைகளுக்கு சட்டுனு பிடிச்சுடுமே ஏதாவது சரியில்லேன்னா.

 

மனதில் நினைத்ததை அகல்யாவிடம் சொல்லத் திரும்ப, அவளை அங்கே காணோம்.

 

அம்மாவை இப்போதே நோய் அண்டிக் குவியும் வெற்று சடலமாக நினைக்க ஆரம்பித்தாகி விட்டது.  பிரியமும், பாசமும், அடிப்படைக் கனிவும் எல்லாம் போன இடம் எங்கே?

 

முகம் பார்க்கும் கண்ணாடி மாட்டிய சுவரில் தன் முகம் பார்க்கத் திரும்பினான் அவன்.  யாரோ சாவு வீட்டுக் கண்ணாடியைக் கழற்றி வைத்திருந்தார்கள்.

 

குளித்துக் கொண்டிருக்கும்போது நான்கைந்து பேர் கதவைத் தட்டி அவசரம் என்றார்கள். அகல்யா குரலும் கேட்க, அவன் ஒரு காகிதம் உள்ளே போகும் அளவு கதவைத் திறந்து என்ன என்று அகல்யாவைக் கண்ணில் சோப்பு நுரையோடு  உத்தேசமாகப் பார்த்துக் கேட்க, நூதன் வரா என்றாள்.

 

யாரு நடிகையா?

 

ஆமா.

 

இன்னும் ஒரு தடவை சோப்பைத் தீற்றி முகம் அலம்பினான்.

 

அம்மா, நீ ஏன் கஷ்டப்படணும். நாட்டுப் பொண்ணு தான் போயாச்சே. என்னோடு வந்துடு.

 

மினிஸ்டர் பெரியப்பா குரலை உயர்த்திச் சொல்லுவது கேட்டது திலீப் உடம்பு துவட்டிக் கொண்டிருந்தபோது. அவனுக்கும் கேட்க வேண்டும் என்று சொல்வதாக இருக்கலாம்.

 

போகட்டும், நூதன் வரப் போகிறாள்.

 

குளிச்சு வர இவ்வளவு நேரமா, பாத்ரூம்லே வேறே ஏதாவது செஞ்சிட்டிருந்தியா?

 

மராட்டி புரோகிதன் மணியடிக்கிறது போல் கையாட்டிச் சிரிக்க எடுபிடிகள் ஒரு வினாடி சிரித்து, இன்றைக்குப் படியளக்கப் போகிற மகாராஜன் இவனாச்சே என்று நினைவில் பட,  நிறுத்தி எல்லாத் திசையிலும் பார்த்தார்கள்.

 

புரோகிதன் தன் தலைமையை மீண்டும் நிலை நாட்டிய கர்வம் தெரிய,  ஓங்கி மந்திரம் சொன்னான்.

 

ஜீப் நிற்கும் சத்தம். குதித்து வெளியேறும் அதிகாரிகள். சைரன் பொருந்திய கார். அப்புறம் பெரிய கருப்பு அம்பாசடர். இன்னொரு மந்திரி.

 

இவர் மாநில அரசு அமைச்சர் என்று திலீப்புக்குத் தெரியும். பிராணி நலனோ,  மீன் வளத்துறையோ நிர்வகிக்கிறவர்.  கூடவே போட்டோ கிராபரும் உண்டு.

 

ரெண்டு கையையும் விரித்தபடி வந்த அந்த ஸ்தூல சரீர மனுஷர், செண்ட்ரல் மினிஸ்டர் பெரியப்பாவின் பாதம் தொட்டு வணங்கியபின் சிரமப்பட்டு நிமிர்ந்து நின்று, அவரை அணைத்துக் கொண்டார். ஃபோட்டோகிராபர் இல்லையென்று தலையாட்ட, திரும்பப் பெரியப்பாவை அணைக்க முற்பட பெரியப்பா, மழையில் நனைந்த வைக்கோல் பொம்மை போல நின்றார்.

 

ரொம்ப வருத்தப்படறேன். முதலமைச்சர் சோவியத் யூனியன் போயிருக்கறதாலே. காலையிலே எனக்கு ஓவர்சீஸ் கால் போட்டு.

 

அவர் கையைப் பற்றியபடி துக்கம் பரிமாறி விட்டு, கண்ணால் அவசரம் அவசரம் என்று ஜாடை காட்டிக் கொண்டிருந்த மராட்டிப் புரோகிதர் முன் உட்கார்ந்தான் திலீப்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 12, 2024 22:04

October 11, 2024

நூதன் வந்து கொண்டிருக்கிறார் – ஆகாரச் செய்தியும் ஆதாரச் செய்தியும் முன்னால் வர

ஒரு பழைய மோட்டார் சைக்கிள் ஓரமாக நின்றது. மினிஸ்டர் பெரியப்பாவின் காவலர்கள் ஓட்டி வந்தவனை நரகத்துக்கு உடனடியாகப் போகச் சொல்லிக் கழுத்தில் கை வைக்க, அவன் சட்டைப் பையில் இருந்து எடுத்த அட்டையைக் காட்டினான். அட்டியின்றி வழி கிடைத்தது. பிரஸ், பிரஸ் என்று ஜபித்தபடி அந்த மனுஷன் முன்னேறி வந்து கொண்டிருந்தான்.

 

பெரியப்பா, தனக்கு மூத்திரம் போக அழைப்பு விடுத்த ஆபீசரைக் கூப்பிட்டார்.

 

இவங்க கிட்டே ஒரு மனு வாங்கி எனக்கு நோட் போட்டு வைக்கணும்.

 

சடசடவென்று கையில் பிடித்த ரெக்சின் பைகளில் இருந்து, ஒவ்வொரு லாவணிக் கலைஞரும் எழுதித் தயாராக வைத்திருக்கும் பெட்டிஷனை அந்த அதிகாரியிடம் கொடுக்க, வனஸ்பதிப் புகை கிளப்பிக் கொண்டு ஒரு தீப்பந்தம் எரிய ஆரம்பித்தது. ஷாலினி தாய்க்கு சொர்க்கத்துக்கு வழி காட்ட நெய்த் தீபச் சுடர் அது என்று மராத்தி புரோகிதன் திலீப்பிடம் விளக்கினான்.

 

அம்மாவுக்கு சகோதரன், அவங்க குடும்பம்?

 

மோட்டார் சைக்கிளில் வந்தவன் உத்தேசமாகக் கூட்டத்தில் பார்த்துக் கேள்வியை எறிந்தான்.

 

ஒருத்தரும் இல்லே. தனி மனுஷி தான் சாகற வரைக்கும்.

 

லாவணிக் கலைஞர்களில் ஒருவர் மனுவை நீட்டியபடி சொன்னார்.

 

சும்மா இருப்பா. ஷாலினிதாய்க்கு ஒரே மகன் இந்தப் பையன் திலீப்.

 

இருமலுக்கு நடுவே ஒரு முதிய பெண்மணி சொன்னார்.

 

கேட்ட உடனே எப்படி மனு கொடுக்கறீங்க எல்லோரும்?

 

ஆபீசர் சிறு சிரிப்போடு விசாரித்தார்.

 

எஜமான், நாளைக்கே நாங்களும் செத்து நரகம் போனாலும் மனுவோடு தான் போவோம்.  வராத பென்ஷன் பாக்கி குடும்பத்துக்காவது போக ஏற்பாடு செய்யச் சொல்லி மனு இதெல்லாம். என் பேரனுக்காவது கிடைக்கட்டும்.

 

மோட்டார் சைக்கிள்காரர் ஓரமாக நின்று திலீப்பை ஏகத்துக்குச் சைகை செய்து அழைத்தார். திலீப்பை மராட்டிய புரோகிதன் உடனே குளித்து வரச் சொன்னான். இந்தோ வரேன் என்று புரோகிதனுக்குக் கையைக் காட்டி மோட்டார் சைக்கிள் காரனிடம் போனான் திலீப்.

 

சொன்ன பேச்சு கேட்க மாட்டியா? நேரமாகுது. நான் அந்தரத்திலே விட்டு போனா அழுகிச் சாக வேண்டி வரும்.

 

புரோகிதன் தன் தலைமை ஸ்தானத்தை உறுதி செய்யும் குரலில் திலீப்பை மிரட்ட, திலீப் பெரியப்பாவை புகல் தேடி நோக்கினான். இந்த வெத்துவேட்டு புரோகிதனிடன் நம் செல்வாக்கு உப்புக்குக் கூட செல்லுபடியாகாது என்று கண்டு கொண்ட பெரியப்பா அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தார்.

 

பாட்டி மறுபடி ஜன்னலில் எட்டிப் பார்த்து விட்டு, மினிஸ்டர் மகன் உள்ளே வருவதைப் பார்த்தோ என்னவோ திரும்பப் போனாள்.

 

அவளுக்கு என்னத்துக்கு இந்தக் கஷ்டம் எல்லாம்.  எட்டு ஊருக்கு விட்டெறியும் அதிகாரத்தோடு இருக்கப்பட்ட மந்திரி மகன் வீட்டில் மிச்ச ஆயுசு முழுவதும் இளைப்பாறாலாமே.

 

திலீப் நினைத்தபடி குளிக்கக் கிளம்ப, மோட்டார் சைக்கிள் காரன் அவன் பாதையில் குறுக்கே விழுந்தான். பிரஸ், பிரஸ் என்று திரும்ப உச்சரித்த அவன் கண்கள் பாதி மூடி இருந்தன. அதிகாரம் மறைமுகமாவது அச்சு யந்திரத்தின் மூலம் இவனுக்கும் பாய்கிறதால் ஏற்பட்ட அந்தஸ்தோ என்னமோ. திலீப் இவனைப் பகைத்துக் கொள்ள மாட்டான்.

 

ஒரு மராத்திப் பத்திரிகைப் பெயரைச் சொல்லிக் கேட்டான் –

 

படிக்கிறீங்களா, ரொம்ப அபூர்வமான ஒண்ணு.

 

அவன் சொல்லும்போது திலீப்பின் சின்ன மாமனார் நினைவு வந்தார்.

 

பதிர்பேணியிலே ஒரு லோட்டா பால் விட்டுண்டு, உள்ளே ஒரு குஞ்சாலாடையும் உதிர்த்துப் போட்டுட்டு சாப்பிட்டா, அடடா, தேவாமிர்தம்.

 

அவர் பத்திரிகை நிருபர் போலத் தான் வாயைக் குவித்து ஆகாரச் செய்தி சொல்லி மகிழ்வார்.  அவர் காமத் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு வந்து இந்தக் கூட்டத்தில் ஒரு ஓரமாக இருப்பார் என்று திலீப்புக்குத் தெரியும்.

 

எனக்கு எல்லோரோட பெயர், வயசு, இறந்து போனவங்களுக்கு உறவு இதெல்லாம் வேணும். சரியான தகவல் தேவை. பத்திரிகையில் போடணுமே.

 

மராட்டியப் பத்திரிகைக்காரன் முறையிட்டான்.

 

பிழையான தகவல்களாலான சாவுச் செய்தி மராட்டிய மண்ணெங்கும் சொல்லொணா துன்பத்தை விதைக்க வல்லது என்று பொறுப்பு உணர்ந்த குரலில் திரும்பவும் அவன், எல்லோருடைய பெயர், வயது, உறவு என்று சொல்ல, மறுபடி மராட்டிய புரோகிதன் நரகம் பக்கத்தில் தான் என்று வார்த்தை அருளியது காதில் கேட்கவில்லை என்ற பாவத்தில் திலீப் குளிக்கப் போனான்.

 

நான் சொல்றேன் எழுதிக்குங்க.

 

, அகல்யா அசதி முகத்தில் தெரிய அவன் பக்கமாக வந்தாள். நேற்று ராத்திரி முழுக்க அவளுக்குத்தான் அலைச்சல்.

 

பாத்ரூம்லே வெதுவெதுன்னு வென்னீர் விளாவி வச்சிருக்கேன். அவ்வளவு தான் ரேகா வீட்டு அடுப்பிலே சூடு படுத்த முடிஞ்சுது. கெரசின் அங்கேயும் காலி. போய்க் குளிச்சிட்டு சடுதியிலே வாங்கோ.

 

அகல்யா டர்க்கி டவலையும் புது மைசூர் சாண்டல் சோப்பையும் கொடுத்தாள்.

 

ரொம்ப கமகமன்னு வர வேணாம். சூழ்நிலையை பார்த்து செய்யுங்கோ.

 

அவள் சொல்லும் போதே, கீழ் வீட்டுப் பெண், கத்தரி கலர் ஃப்ராக் போட்ட நாலு வயதுப் பெண் குழந்தையின் கையைப் பிடித்தபடி வந்தாள்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2024 18:24

October 7, 2024

ஆடி ஓய்ந்த கால்கள் ஓரமாக நிற்க கைகள் வயிற்றைத் தொட்டுப் பசி என்று காட்டின

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவலில் இருந்து இது –

புதுப் புடவை, புதுப் புடவை.

 

இன்னும் பாட்டுகள் தொடர வாசலுக்கு வந்த அகல்யா, யாரோ நீட்டிய புதுப் புடவையை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். பூம் பூம் பூம். சங்கு ஊதியவன் நிறுத்தி தொடர்ந்து இருமிக் கோழையைச் சுவரில் துப்பி நூதனை நனைத்து விட்டுத் திரும்பச் சங்கூத ஆரம்பித்தான்.

 

ஆர்டிஸ்ட் பென்ஷன் ரொம்ப குறைவா இருக்கு, மகாராஜ். பாதி மாசம் தான் வருது. அப்போ அதை வச்சு கோதுமையோ அரிசியோ வாங்கறோம். அப்புறம் ஒரு வாரம் சோளம். அதுக்கு அடுத்து கஞ்சி. மாசக் கடைசியிலே விட்டோபா கோவில் வாசல்லே கை ஏந்தறேன். பரிதாபப்பட்டு, உள்ளே வந்து தானம் கேட்கச் சொன்னார் பூசாரி.

 

நான் சாயாக் கடை வச்சுத்தான் பிழைக்கறேன் மகராஜ். லாவணியில் டோலக் வாசிச்சு பாடி, ஷாலினிதாய் கூடவே முப்பது வருஷம் நடிச்சிருக்கேன். பென்ஷன் முப்பது ரூபா வருது. போஸ்ட்மேன் அஞ்சு ரூபா எடுத்துப்பான்.

 

ஷாலினிதாய் நிறைசூலியா ஆடினபோது நான் தான் திரை போட்டு பிரசவம் பார்த்தேன். இந்தப் பையன் மேடைக்குப் பின்னாடி பிறந்தவன் தான்.  அதுக்கு பென்ஷன் வேண்டாம். ஆடின காலுக்கு மூட்டுவலிக் களிம்பு வாங்கவாவது.

 

குரல்கள். கோரிக்கைகள். மன்றாடல். துயரம் பகிர்தல். எல்லாமும் ஆனார்கள் அந்த லாவணிக் கலைஞர்கள்.

 

சால் குடித்தனக்கார ஆண்களும் வீட்டுப் பெண்களும் சிறு பூமாலைகள் சகிதம் வாசல் கதவுக்கு வெளியே பொறுமையாக நின்றார்கள். மினிஸ்டர் பெரியப்பாவும் திலீப்பும் லாவணிக் கலைஞர்களும் நின்ற இடத்தைச் சுற்றி நீண்டது அந்த வரிசை.

 

ஜன்னலில் பாட்டி தலை தெரிந்தது. வாடிப் போயிருந்தாள். குழி விழுந்த கண்கள் பாசமும் ஆவலுமாகத் தன் ஒரே மகனைப் பார்த்துக் கொண்டே இருந்தன.

 

பாட்டி பார்க்கறா பெரியப்பா.

 

அவர் காதில் சொன்னான் திலீப்.

 

அவர் ஆமா என்று சொல்லி, எலக்‌ஷன் பிரச்சாரத்தில் ஓட்டுக் கேட்டுக் கை ஆட்டுகிற மாதிரி ரெண்டு கையும் ஆட்டினார். இதோ வரேன் என்று அவர் முனகியது அவருக்கே கேட்டிருக்காது.

 

பெரியப்பா, மெட்றாஸ் வீட்டிலே அப்பா பங்கை வச்சு எனக்கு ஒரு ஒரு ரெண்டு லட்சம் தர முடியுமா? நான் தொழில் பார்த்துப் பிழைச்சுக்கறேன்.

 

தைரியத்தை எல்லாம் திரட்டி ஒரு வழியாகக் கேட்டு விட்டான் திலீப்.

 

ஏண்டா இந்த வேலைக்கு என்ன? சம்பளம் தரான் தானே பிஸ்கட் சாஸ்திரி.

 

அவன் கேட்டதை எதிர்பார்க்காத மினிஸ்டர் பெரியப்பா கூட்டச் சத்தத்தில் கரைந்து போன குரல் மீண்டும் எழுந்து கம்மக் கேட்டார்.

 

தரார் பெரியப்பா.

 

திலீப் அவசரம் கூட்டிப் பதில் சொன்னான்.

 

மெட்ராஸ் வீடு பத்தி மெல்ல பார்க்கலாம். உனக்குப் பணம் வேணும்னா நான் தரேன். வீடு இருக்கட்டும். நல்ல விலை வரட்டும்.

 

யாரோ மரியாதை தரும் இடைவெளி விட்டு அவர் பார்வைக்குக் காத்திருந்ததை திலீப் ஓரக் கண்ணால் பார்த்தான்.

 

சரி பெரியப்பா என்றான். அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள அவனையறியாமல் மீண்டும் அவசரம் எழுந்தது. அவன் பழகியிருந்தது அப்படித்தான்.

 

உங்கப்பன் விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கான் தெரியுமில்லையோ. அடிக்கடி ஆயிரம் ரெண்டாயிரம்னு வாங்கிண்டு போவான்.

 

பெரியப்பா சொல்லியபடி கையைக் காட்ட, பக்கத்தில் வந்தார் ஒரு அதிகாரி.

 

சார், ப்ளாஸ்க் எடுத்து வரட்டா? பில்டர் காபி.

 

அவர் திரும்ப வாய் பொத்திக் கேட்க, துண்டால் முகம் துடைத்தபடி பெரியப்பா வேண்டாம் என்றார்.

 

ஐயா, பென்ஷன் பற்றி.

 

லாவணிக் கலைஞர்கள் ஏங்கின குழந்தைகளாக பசி என்று வயிற்றைக் காட்டி யாசிக்கும் தோதில் குரலெடுத்து மன்றாடினார்கள். ஷாலினிதாய் இறந்த துக்கத்தில் இதுவும் ஒரு அங்கம் என்று அவர்கள் கருதி இருக்கலாம். எல்லோரும் கஜ்ஜை கட்டி ஆடியவர்கள் தானே. எல்லோரும் கால் ஓய்ந்து, குரல் ஓய்ந்து போனவர்கள் தானே? ஷாலினிதாய்க்கு சித்த சுவாதீனம் இருந்தது என்றால் இவர்களில் எத்தனை பேருக்கு மனமும் உடலும் உபாதை இல்லாமல் உள்ளது?

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2024 02:54

October 5, 2024

அற்ப சங்கைக்கு ஒதுங்க அம்பாசிடர் கார் கொண்டு வந்த போது

வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது- அதிலிருந்து ஒரு சிறு பகுதி

மூணு மாசமா ஆர்ட்டிஸ்ட் பென்ஷன் வரலே சாப்.

 

லாவணிக் கலைஞர்கள் பெரியப்பாவை சூழ்ந்து கொண்டு முறையிட்டார்கள். ஷாலினி தாயை விட முதியவளான ஒரு பழைய ஆட்டக்காரி தன் வயதையும் இருப்பையும் பொருட்படுத்தாது மினிஸ்டர் பெரியப்பா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். அவர் அதிர்ச்சியோடு விலகி செக்யூரிட்டி ஆட்களைப் பார்த்த பார்வையில் என்ன புடுங்கிட்டு இருக்கீங்க என்ற கேள்வி தெரிந்தது.

 

சோபானத்துக்கு, அகல் விளக்கும் பூவுமாகப் புது மணப்பெண்ணைத் தோழிகள் அழைத்துப் போகும் தருணத்தில் பாடுகிற, மங்கலமானதும், குறும்பு நிறைந்ததுமான பாடலை அண்டை அயல் மூத்த பெண்கள் எல்லாக் குரலிலும் பாட, ஷாலினி தாயின் உடலை ஆண்கள் பார்க்காமல் குளிப்பித்தார்கள்.

 

திலீப் தயக்கத்தோடு பெரியப்பாவைப் பார்த்தான்.

 

என்னடா, வேலைக்குப் போறே தானே.

 

ஆமா பெரியப்பா. காலையிலே தான் இங்கே வந்தேன்.

 

பத்தாம் நாள் அங்கேயே செஞ்சுடலாமே. கோவிலும் குளமுமா இருக்கே.

 

செய்யலாம் அம்மா அங்கே வந்ததே இல்லையே.

 

அவன் சொல்லவில்லை. சே என்று போனது திலீப்புக்கு.

 

என்ன மனுஷர். அடுத்தவருடைய துக்கத்தில் கூட அதிகார முகத்தை நுழைக்கப் பார்க்கிறார்.

 

ஆலப்புழையோ கோலப்புழையோ உத்தியோகம் கிடைச்சிருக்கு. தக்க வச்சுக்கறது உன் சாமர்த்தியம்.

 

பெரியப்பா சத்தமின்றி, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.

 

அரசு அதிகாரி ஒருத்தர் அவசரமாக ஃபைலோடு ஓடி வந்து மினிஸ்டர் காதில் கிசுகிசுத்தது திலீப்புக்கும் கேட்டது –

 

சார், மூத்திரம் ஒழிச்சு வர, கார் ரெடியா தெருக் கோடியிலே வச்சிருக்கு.

 

காருக்குள்ளேயா என்கிற மாதிரி சந்தேகத்தோடு அவன் பார்க்க, அடுத்த தெருவிலே கட்சி பிரமுகர் வீடு என்று விளக்கிச் சிரித்தார் பெரியப்பா. கூடவே, தன் அந்தஸ்துக்கு இவனோடு அபத்தமான நகைச்சுவைக்கெல்லாம் சிரிப்பது சரிப்படாது என்று தோன்றவோ என்னமோ, மூஞ்சியை உம்மென்று வைத்துக் கொண்டு எதிரே நூதன் சினிமாப்பட போஸ்டர் ஒட்டியிருந்த சுவரைக் கூர்ந்து பார்த்தார். கொங்கணி மாமியா முலையைக் காட்டி அங்கே நிற்கிறாள்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2024 03:18

October 3, 2024

கட்டுக்கழுத்தியாய் போனவளுக்கு கலர் புடவையென்று ஆடுக லாவணி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவல். அதிலிருந்து ஒரு சிறு பகுதி

===================================================================================

புதுப் புடவை வந்தாச்சா? மராத்தி புரோகிதன் விசாரித்தான்.

 

வாங்க ஆள் போயிருக்கு.  யாரோ சொன்னார்கள்.

 

என்ன நிறம்? சோனியாக நின்ற ஒரு பெண் கேட்டாள். அண்டை வீடு.

 

வெள்ளை.

 

எதுக்கு வெள்ளைப் புடவை?  சுமங்கலியாப் போயிருக்கா. சிவப்புப் புடவை தான் உகந்தது.

 

பக்கத்து, எதிர் குடித்தனப் பெண்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

 

திலீப் அப்பாவை நினைத்துக் கொண்டான். அவர்கள் அவர் இன்னும் எங்கோ ஜீவித்திருப்பதாக திடமாக நம்புகிறார்கள்.  அகல்யா கூடத்தான். அதை மறுக்க எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. ஷாலினிதாய் மஞ்சளும் குங்குமமுமாகத் தான் சிதை ஏறுவாள்.

 

திலீப் மனசைத் திடப்படுத்திக்கோ. நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்.

 

பெரியப்பா அவன் கையைப் பிடித்தபடி சொன்னார். என்னமோ தோன்ற அவர் தோளில் முகம் புதைத்துக்கொண்டான் திலீப். மெதுவாகத் தட்டியபடி, கம்போஸ் யுவர்செல்ப் என்று இரண்டு தடவை சொன்னார் பெரியப்பா.

 

உன் ஆத்துக்காரி எங்கே?

 

அகல்யா வந்து காலைத் தொட்டு வணங்க முற்பட, வேண்டாம் என்று விலக்கினார்.

 

அகல்யாவின் அப்பா எல்லோரையும் இடித்துக் கொண்டு முன்னால் வந்து பெரிதாக வணங்கி, கஷ்டப் படாம போனாளே அதுவே நிம்மதி என்று பெரியப்பாவிடம் சொல்ல அவர் யோசனையோடு பார்த்தார். எங்கப்பா என்றாள் அகல்யா.

 

குளிப்பாட்டிடலாமா?

 

யாரோ கேட்டார்கள்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2024 06:06

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.