இரா. முருகன்'s Blog, page 10

July 30, 2024

கடவுளின் மூத்த சகோதரி விடுப்பு எடுத்துக்கொண்ட போது

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி

———————————————————————————————————————————

 

பறவை ஆடும் முன்றிலில் யாரும் இருக்க அனுமதி இல்லை. அவர்கள் அந்தக் காட்சியின் உக்கிரத்தால் இதயம் வெடித்து இறந்து போகலாம்.

 

எமிலி இந்த ஒரு வாரமாக வினோதமான இந்த இடத்தில் இருக்கவும் உறங்கவும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறாள். நந்தினியின் படுக்கை அறைக்குக் கொண்டு விடும் முன் நடை அது. கடவுளின் சகோதரியாக எப்போதும் நிறைந்திருக்கும் நந்தினியின் படுக்கை அறை கவனமாகப் பூட்டப்பட்டிருக்கிறது. முன் நடையில் ஒரு கட்டிலும், ஓரமாக பெரிய நிலைக் கண்ணாடியும், சுவரில் பதித்த அலமாரியில் ஒன்றிரண்டு கார்ட்டூன் புத்தகங்களுமாக எமிலிக்கு இருப்பிடம் அமைக்கப் பட்டிருக்கிறது.

 

அவள் சாப்பிடவும், குளிக்கவும், கழிப்பறையைப் பயன்படுத்தவும் மட்டும் இந்த இடத்தை விட்டுப் பத்து அடி கிழக்கிலோ மேற்கிலோ அந்தந்த அறையை நோக்கி நடக்க வேண்டும்.

 

இரவானாலும் படுக்கை அறை தவிர மற்ற அறைகள் எல்லாவற்றிலும் விளக்கு எரிகிறது. எமிலியின் வரவை எதிர்பார்த்து யாராவது ஊழியர் தூங்கி வழிந்தபடி நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

 

நந்தினி இருக்கும் போது இங்கே இருபத்து நாலு மணி நேரமும் ராணுவம் காவல் செய்து கொண்டிருக்கும். கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்ட நேரம் இது.

 

நந்தினி ஆடும் பறவைகளின் நாட்டுக்கு அரசாங்க விருந்தினராகப் போயிருக்கிறாள். அவள் பிறந்த புண்ணிய பூமியுமாகும் அது. இரு வாரப் பயணம். வரும் திங்களன்று திரும்பி விடுவாள். அதுவரை எமிலி தான் அவளுடைய பிரதிநிதி.

 

உள்ளே வரலாமா?

 

எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்த பெண் அதிகாரியை எமிலிக்குப் பழக்கமில்லை. என்றாலும் அவளுடைய சிநேகிதமான சிரிப்பு எமிலிக்குப் பிடித்திருக்கிறது. எல்லாப் பெண் ராணுவ அதிகாரிகளும் எமிலியைப் பாரததும் நேசமாகச் சிரிக்கிறார்கள். அவர்களுக்கு அதற்கான பயிற்சி கொடுக்கப் பட்டிருக்கிறது என்று எமிலி நம்புகிறாள். அவள் இங்கே, கடவுளின் மூத்த சகோதரியின் திருமாளிகைக்கு இருக்குமிடத்தை மாற்றிக் கொண்டபோது, முதலில் அவளைச் சந்தித்தவர்கள் உயரமும், கனமும், காக்கி உடுப்பும், கண்டிப்புமான ஆண் அதிகாரிகள். எமிலி மிரண்டு அழுத தருணமது.

 

அப்புறம் தான் முழுக்கப் பெண் அதிகாரிகளே கடவுளின் சகோதரியுடைய சிறு விரலான எமிலியோடு தொடர்பு கொள்ள அனுப்பப் பட்டார்கள். இன்றைக்கு வந்திருக்கிறவள் போல, மூத்த, அம்மா, அத்தை, மாமி பிம்பங்களை எழுப்பும் பெண்மணிகள் அவர்கள் எல்லோரும்.  அத்தை உள்ளே வந்தாள்.

 

படுக்கையில் உட்கார்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த எமிலி, அந்தப் பெண் அதிகாரி வரும் போது நறுமணம் மிகுந்த வெளிர் நீலத்தில் பெண்கள் கைக்குட்டை ஒன்றை இடது கரத்தைச் சற்றே அசைத்து உருவாக்கினாள். வெள்ளை நிறத்தில் அது இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் நேர்த்தியான கைக்குட்டை தான் அது.

 

பெண் அதிகாரி சற்றே குனிந்து உடனே நிமிர்ந்து எமிலி கையில் இருந்து கைக்குட்டையை வாங்கிக் கொண்டு இடது கண்ணோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு வணக்கமும் நன்றியும் சொன்னாள்.

 

அதிகாரிகள் தரையில் மண்டியிட்டு வணங்கிப் பேசுவது நந்தினிக்கு மரியாதை காட்ட மட்டும். என்றாலும், வீட்டில் இருக்கும் மூத்த பணிப்பெண்ணான சிஞ்சுவா அப்பனெ எமிலிக்கும் மண்டியிட்டு வணங்குகிறாள். இந்த வீட்டில் கட்டிலிலும் நாற்காலியிலும் அமரும் எல்லாத் தெய்வங்களுக்கும் மண்டியிட்டு வணங்கி ஊழியம் செய்ய அமர்த்தப் பட்டேன் என்றாள் சிஞ்சுவா, எமிலியிடம்.

 

எமிலி அந்தக் கிழவிக்காகக் கையைத் தட்டி வரவழைத்த சாக்லெட் துண்டுகளை அவள் நன்றியோடு வாங்கிக் கொண்டாள் தான். ஆனால் தனக்கு இனிப்பு அண்டக் கூடாது என்று டாக்டர் சொல்லி விட்டார் என்றும், பேரக் குழந்தைகளுக்கே இந்த சாக்லெட்கள் என்றும் சொல்லி எடுத்துப் போனாள்.

 

அது நேற்று நடந்தது. சிஞ்சுவா எடுத்துப் போன சாக்லெட் பொட்டலத்தை தெருக் கோடி குப்பைத் தொட்டியில் அவசரமாக வீசுவது எமிலி நேற்று ராத்திரிச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தபோது  அவள் மனதில் காட்சியாக வந்தது. எமிலிக்குக் கோபம் ஏதுமில்லை. மந்திரவாதம் செய்த இனிப்புகளை வீட்டுக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம் என்ற ஜாக்கிரதை உணர்ச்சி கிழவிக்கு இருக்கலாம். எமிலிக்கு அது புரியும். இந்த அதிகாரிகளையும் அவள் அறிவாள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2024 06:10

July 27, 2024

எமிலி ஆந்த்ரோசா என்ற சிறுமியும் மாந்த்ரீக நிகழ்வுகளும்

வாழ்ந்து போதீரே -அரசூர் நான்கு நாவல் வரிசையில் இறுதி நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி

================================================================================

திலீப் துள்ளி எழுந்து விழித்துக் கொண்டான். கனவு ஏதும் இல்லை. டெலிபோன்.

 

டெலிபோன் ஓசை மட்டும் நிஜம். இருட்டில் சத்தம் வழி காட்ட, ஓடிப் போய் எடுத்தான்.

 

திலீப் மோரே கிட்டே பேச முடியுமா?

 

அகல்யா குரல்.

 

ஏய் அகல், நான் தான். என்ன ஆச்சு? இப்போ இப்போ நீ இப்போ.

 

அவனுக்குக் குரல் பதற்றத்தில் சீராக எழும்பவில்லை.

 

நீங்க வரணும், கேட்டேளா. உங்க அம்மா உடம்பு நிலைமை கொஞ்சம் கவலைப்படற மாதிரி.

 

அவ போயிட்டாளா?

 

திலீப் கேட்டான். பதில் இல்லை. திரும்பவும் கேட்டான்.

 

அம்மா போய்ட்டாளா?

 

அகல்யா குரல் ஒரு வினாடி விம்மலோடு தீனமாக ஒலித்து, தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது.

—————————எமிலி ஆந்த்ரோசா என்ற சிறுமியும் மாந்திரீக நிகழ்வுகளும்

எமிலி ஆந்த்ரோசா அழ ஆரம்பித்தாள். குளிர்ச்சியான அறை. நடுவிலே, மிக உயரமான கட்டில். அதில் தான் அவள் படுத்திருக்கிறாள். பழைய கட்டிலை அகற்றி விட்டு இந்தக் கட்டிலை அறையில்  சேர்த்தார்கள். இரவு சிறு ஏணியைக் கட்டிலில் சார்த்தி வைத்துத்தான் அவளைக் கட்டிலில் ஏறிப் படுக்கச் செய்தார்கள்.

 

இவ்வளவு உயரமாக இருந்தால் நடுராத்திரி நான் மூத்திரம் போக எப்படி இறங்குவது? குளிர் அதிகம் என்பதால் அடிக்கடி போக வேண்டியிருக்கு. என்ன செய்யணும் நான்?

 

எமிலி கேட்டபோது ராணுவ அதிகாரிகள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் பெண் அதிகாரிகள்.

 

சிறுநீரை எல்லாம் பூவாக்கி கட்டில்லே போட்டு வச்சா?

 

பெரிய பெரிய எறும்புகள் வரும். என்னை அரிச்சு முழுக்க கடிச்சு தின்னுடும்.

 

எறும்புகள் நகராம இருக்க நீ மந்திரம் செய்வியே.

 

எறும்புகள் என் கனவில் வந்து மிரட்ட, நான் படுக்கையை நனைச்சுடுவேனே.

 

ஒண்ணுக்குப் போகாமலே இருக்க மந்திரம் செய்ய முடியாதா?

 

அவர்கள் எல்லோரும் ஒரே கணத்தில் கேட்கத் தலையைப் பலமாக ஆட்டி மறுத்தாள் எமிலி ஆந்த்ரோசா.

 

வயத்த வலிக்கும். சின்னப் பொண்ணு தானே நானு?

 

அவளைப் பத்து வயதுச் சிறுமியென அதிகாரம் செய்யவும் முடியவில்லை. ஆயிரம் வருடம் சேர்ந்து செழித்த தெய்வத் தன்மை சிலநாள் குடியேறிய, கடவுளின் சகோதரியுடைய சுண்டுவிரலாக, பொழுது தோறும் மகிமைப் படுத்தவும் முடியவில்லை. ரொம்ப வற்புறுத்தினால் அழுகிறாள். சிறுமி தானே.

 

அவள் படுக்கையை உயரம் தணிக்கவும் குளிர்சாதனத்தை அவ்வப்போது நிறுத்தி வைத்து மீண்டும் இயக்கி தூக்கம் கெடாமல் பார்த்துக் கொள்ளவும், இன்னும் கனமான கம்பளிப் போர்வை போர்த்தி விடவும் ஒரு பெண் உதவியாளரை உடனடியாக நியமிக்க முடிவானது. இது போன ஞாயிறன்று நடந்தது.

 

ஆடும் பறவை நிறைந்திருக்கும் கடவுளின் சகோதரியுடைய வீட்டு முகப்பில் இந்தப் பெண் உறங்க முடியுமானால், எந்தத் தொந்தரவும் எட்டிப் பார்க்காது

 

அந்த இடத்தைக் கடக்கவே எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆடும் புனிதமான பறவை தீமையை இனம் கண்டு சர்வ நாசம் விளைவித்து ஒழிக்க மாபெரும் வல்லமை கொண்டது என்று குக்கிராமங்களிலும் நம்பிக்கை வந்திருக்கிறது.

 

ஊரூராகப் போய் ஊர்ப் பொதுவில் இருந்து கானம் பாடி, உணவும் உடுப்பும் வாங்கிப் போகும் நாடோடிப் பாடகர்கள், ஆடும் புனிதமான பறவை பற்றிப் புனைந்த பாடல்கள் எங்கும் மக்களால்  விரும்பிக் கேட்கப் படுகின்றன.

 

அழகும் கால் நகங்கள் குத்திக் கிழித்து இருதயத்தைக் கீறி எடுத்து முறித்துப் போடும்  வலிமையும் கொண்ட பறவை எங்கும் உபாசிக்கப் படுகிறது.

 

கடவுளின் மூத்த சகோதரியும், அவள் தன் சுண்டு விரலளவு மேன்மையும் சக்தியும் தற்காலிகமாகக் குடியேற்றக் கிள்ளிக் கொடுத்த சிறுபெண் எமிலியும் வழிபடப் பட வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

July 28 2024

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2024 23:29

July 25, 2024

சந்திக்காமலே இறந்த மத்தாயு மாப்பிள்ளையும் ட்யூஷன் போகும் இளைய தலைமுறையும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது- அடுத்த  சிறு பகுதி இங்கே

நீ வா ராஜா. ஒண்ணும் தரவேணாம். அம்பலப்புழையிலே இறக்கி விடறேன்.

 

நடாஷா இறங்க, திலீப் மனதில் ஏனோ பயம். இந்த டிரைவர் கூட்டிப் போய்க் கழுத்தை நெறித்து விட்டால்? அல்லது பாலியல் ரீதியாக அவனைப் பலாத்காரம் செய்து விட்டால்? இருக்காது, அப்படிப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் சொந்தக் கதை சொல்லிக் கொண்டு துக்கத்தைப் பகிர்ந்திருக்க மாட்டார்.

 

அம்பலப்புழையிலும் எங்கே போக வேண்டும் என்று கேட்காமல், நேரே மயில்பிலி தூக்க ஆப்பீஸ் என்று அறியப்பட்ட  திலீப்பின் தங்குமிடமும் பணி செய்யும்  இடமுமான பழைய வீட்டருகே டாக்சி நின்றது.

 

ஆபீஸ் வாசலில் கோணலாகப் படுத்துக் கொண்டிருந்த வெடிவழிபாட்டுக் குறூப் எழுந்து உட்கார்ந்து திலீப்பை வாசல் பூட்டைத் திறக்க வேண்டாம் என்றான்.

 

உள்ளே சமையல் நடந்துட்டிருக்கு. நான் சொல்வேனே, கோவில் கொடிமரம் பக்கம் பறந்து போய் மூத்ரம் ஒழிச்ச வயசன், அவன் பறந்து பறந்து சுத்தி வந்துட்டிருக்கான். உம் மேல்  ஒழிச்சு வைக்கப் போறான். உ ள்ளே போகாதே.

 

குறூப், ஆபீஸ் இல்லேன்னு வயறு முட்டக் குடிச்சாச்சு போல.

 

சொல்லியபடி, திலீப் திறந்து உள்ளே போய்க் கதவைச் சார்த்திக் கொண்டான்.

 

மிக விரைவாக நித்திரை போனான் அவன். அலைச்சலின் அயர்வும், படித்தது, எழுதியது, போட்டோ எடுத்தது என்று உடம்பு வணங்கி வேலை பார்த்த அசதியும் கண்ணை மூட வைத்தது. சந்திக்காமலே மரணமடைந்த மத்தாயு மாப்பிள்ளையும், சேறு படிந்த பலகை மேலேறி டியூஷன் வகுப்பு போகும் அழகான இளம் பெண்களும், அகல்யாவும், அவன் மேல் பின்னிப் பிணைந்து கிடக்கும் நடாஷாவுமாக நிலை குழம்பி நினைவும் கனவும் இழைந்து நீண்டன.

 

வீட்டில் நடமாட்டம் இருப்பது போல் பிரமை. எழுந்து போக முடியாமல் காலை, கையைக் கட்டிப் போட்ட உறக்கம். சமையல் செய்யும் வாடையும், பெண்கள் சண்டை போடும் ஒலியுமாகக் கிடக்கும் வீடு. அது ஓய்ந்து முயங்கும் ஒலிகள். பக்கத்தில் எங்கேயோ. சணல் சாக்கில் கொட்டைப் புளி அடைத்து வைத்த வாடையும், போக வாடையும் மேலேறுகின்றன.  லகரியில் மெல்லக் கூவும் பெண். மூச்சு வாங்க இயங்கும் ஆண். ஒரு வயசன் கண் மூடிப் பறந்தபடி வருகிறான்.  சணல் மூட்டை மேல், உடம்பு மெலிந்த, பல் நீண்ட பழைய கால உடுப்பு களைந்த ஸ்திரியை சாய்த்து வைத்து போகம் செய்கிறவனின் பிருஷ்டத்தில் இடித்து மேலே உயர்ந்து போகிறான் வயசன்.  அவனுடைய கண் மூடியே இருக்கிறது.

 

டெலிபோன் மணி அடிக்கும் ஓசை. நிமிஷத்து நிமிஷம் அது வலுவடைகிறது. நின்று போய் உடனே தொடர்கிறது. திரும்ப நிற்கிறது. மேலும் வலுக்கிறது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2024 22:19

July 23, 2024

சைபீரியாவுக்கு அனுப்பப்பட்ட செர்யோஷாவுக்காக ஆலப்புழையில் ஒருத்தி துக்கம் காத்து

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -அடுத்த சிறு பகுதி

டிரைவர் இல்லாமல் இருட்டில் நிறுத்தி இருந்த ஆட்டோ ரிக்‌ஷாக்களையும்,   விளக்குக் கம்பத்தின் அடியில் உறங்கும் தெரு நாய்களையும், சகலரும் குத்த வைத்து எழ, மூத்திர ஈரம் விரியத் தொடங்கிய முடுக்குச் சந்துகளையும் நின்று நின்று பார்த்து அரை மணி நேரம் கழித்து அம்பாசடர் டாக்சி ஒன்று வந்தது. நம்பிக்கை இல்லாமல் திலீப் நிறுத்தச் சொல்லிக் கையசைத்தான். வண்டி சற்று தூரம் கடந்து போய் நின்றது.

 

சவாரி வரச் சம்மதம் சொன்னார் அந்த ஓட்டுனர்.  சிவப்போ அல்லது மற்றச் சிந்தனைகளோ இல்லாத அந்த வண்டியோட்டி மொத்தமாக முப்பது ரூபாய் தேவை என்றும் அதில் பத்து ரூபாயை இப்போதே தர வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார்.

 

மிகப் பெரிய கொம்பன் மீசை வைத்த, தலை கலைந்த ஓட்டுநர் அவர்.  குரலில் முரட்டுத் தனம் வழிந்தது. இருக்கட்டும், ரெண்டு பேர் உண்டே, என்ன செய்து விட முடியும்? அதுவும் ஆஜானுபாகுவான சோவியத் வீராங்கனை இவன் கூடவே உண்டு.  போகலாம் என்றான் திலீப். ஏறிக் கொண்டார்கள்.

 

இருட்டான ஏதேதோ தெருக்களில் வண்டி ஊர்ந்து போக, திலீப் கையை இறுகப் பற்றிக் கொண்டாள் நடாஷா. பயமா இருக்கு என்று காதில் சொன்னாள். எதிரே கடந்து போன லாரி ஹெட் லைட் வெளிச்சத்தில் அவள் உரித்த வெள்ளைப் பூண்டு போல் அழகாகத் தெரிந்தாள்.

 

பிடி விடாத கைகள் இன்னும் இறுகி இருக்க, வண்டி நின்றது.

 

இருங்க, வீட்டுக்காரி கிட்டே பணத்தை கொடுத்துட்டு வந்துடறேன்.

 

பத்து நிமிடத்தில் இடுப்பில் குழந்தையும் பின்னால் டிரவுசர் வாரைத் தூக்கிப் பிடித்தபடி ஓடி வரும் சட்டை இடாத சின்னப் பையனும் பின் தொடர டிரைவர் வந்தார். அவர் வீட்டுக்காரி ஒரேயடியாக புகார் சொல்லும் குரலில் அதிவேகமாக மலையாளத்தில் சொல்லியபடி திலீப்பையும் நடாஷாவையும் ஆதரவு கோருவது போல் பார்த்தாள். போ, வரேன் என்று கையசைத்து வண்டியைக் கிளப்பிய டிரைவர் மேல் பயம் விலகிப் போக, திலீப்   பேசத் தொடங்கினான். நாளை யாரையெல்லாம், எங்கே போய்ச் சந்திக்க வேண்டும் என்று விசாரித்தான் நடாஷாவை.  கார் டிரைவர் இல்லாமல் இருந்தால் வேறு ஏதும் பேசியிருப்பான். அப்படித்தான் அவன் நினைத்தான். வேண்டித் தான் இருந்தது இதுவும் கூட.

 

செர்யோஷாவை உளவாளி எனக் குற்றம் சாட்டி, தேசத் துரோகத்துக்கான உச்ச பட்ச தண்டனை கொடுத்து சைபீரியாவுக்குக் கொண்டு போய்விட்டார்கள் என்று மட்டும், தகவல் சொன்ன நடாஷா அதற்கப்புறம் அழவில்லை.

 

ஆலப்புழையில் நடாஷா தங்கியிருக்கும் விடுதி எது என்று சொல்லாலமேயே சரியாக அங்கே போய்ச் சேர்ந்து விட்டது டாக்சி.

 

நீ அம்பலப்புழை எப்படிப் போவே? நடாஷா கேட்டாள்.

 

அலைச்சல் தான். லாரியாவது கிடைக்காதான்னு நம்பிக்கை.

 

இங்கேயே ஓட்டல் ரூம்லே இருந்து காலையிலே போகறியா?

 

வேறே வினையே வேணாம். இவர்கள் எல்லாம் ஏற்கனவே திலீப் நடாஷாவோடு தினம் பத்து நிமிடம் அவசரமான சிருங்காரச் செய்கைகளில் ஈடுபடுவதாக நினைக்கிறவர்கள்.  ஐரோப்பிய மதாம்மாவும் கறுத்த இந்திய உதவியாளனும் ஒருவரை ஒருவர் ஈர்க்கத் தொடங்கி இருக்கும் நேரம் இது.

 

கற்பனை செய்ய மாட்டான் திலீப். நிறையச் செய்தாகி விட்டது. விட்டுப் போனால் அகல்யா அழுவாள். இந்தித் திரைப்படங்களில் காதல், கல்யாணம், ஏமாற்றம், தியாகம், சோகம் எல்லாம் பாட்டுகள் மூலம் உணர்த்தப்படும். திலீப்புக்கு அவற்றை ரக வாரியாகப் பட்டியலிடப் பிடிக்கும் ஆனால் இன்றைக்கு அதைச் செய்ய மாட்டான். அசதி கண் இமை வரை தளும்பி நிற்கிறது.

 

நான் எப்படியாவது பார்த்துக்கறேன். போயே ஆகணும்.

 

திலீப் இறங்க முற்பட, அவன் மடியை இறுகப் பற்றி உட்கார்த்தினாள் நடாஷா.

 

நீ பஸ் பிடிக்க அலைஞ்சு கஷ்டப்பட வேணாம். டாக்சியிலேயே போயிடு. நான் இன்னும் பத்து ரூபா அதிகமாப் போட்டுத் தந்துடறேன்.

 

டிரைவரிடம் சின்ன இங்கிலீஷ் வாக்கியங்களாக அவள் பேச, அவர் ஏனோ தலையாட்டி முடியாது என மறுத்தார்.  நடாஷா லட்சியம் செய்யவில்லை.  இது அதிக பட்ச கட்டணம், இதற்கு மேல் இந்த ராத்திரி இவர் சம்பாதிக்க முடியாது என்று அவள் அறிவாள். அவள் பேசிக் கொண்டே போனாள்.

 

பாக்கி இருபது ரூபா தரணும் தானே, கூட பத்து ரூபாய் சேர்த்து முப்பதாகக் கொடுத்திடறேன்.

 

நடாஷா அவளுடைய கைப்பையில் தேட, வேண்டாம் என்று கையமர்த்தினார் அந்த டிரைவர்.

 

அடுத்து அவர் செய்தது  நம்ப முடியாததாகப் போனது திலீப்புக்கும் நடாஷாவுக்கும்.

 

மன்னிக்க வேணும். உங்க கிட்டே அதிகப் பிரசங்கித் தனமா முப்பது ரூபா கேட்டுட்டேன். பதினைந்து ரூபாயே அதிகம். வீட்டுக்காரி திட்டறா. இப்படி சம்பாதிக்கறது உடம்புலே ஒட்டாதாம். அதான் சின்னப் பையன் சட்டை போட முடியாம இருக்கு. போட்டா அஞ்சு நிமிஷத்துலே தோல் பொசுங்கிப் போவுது.

 

அவர் நிறுத்தி, திலீப்பைப் பார்த்தார்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2024 23:51

July 22, 2024

தனக்குத் தெரிந்த ஒரே விவிலிய வாக்கியம் சொல்லி மௌனமாக நின்ற நேரம்

வெளியே இறங்கிய நிமிடத்திலிருந்து பசி பசி என்று ஜபிக்கத் தொடங்கி விட்டாள் நடாஷா.  இன்னும் பனிரெண்டே மணி நேரம். காலையிலே பசியாறிக்கலாம். பொறுத்துக்க முடியாதா?

 

திலீப் அவள் முன்பு சொன்னதைப் பத்திரமாக வைத்திருந்து மகிழ்ச்சியோடு திருப்பிக் கொடுக்க, அவனை இடுப்பில் கை வளைத்துத் தூக்கி ஒரு தடவை தட்டாமாலை சுற்றி, நூலகத்தின் புல் தரையில் போட்டாள்  நடாஷா. சைக்கிள்களில் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நூலகரும் மற்ற ஊழியர்களும் பலமாகக் கைதட்டி ஆர்பரித்து இந்திய சோவியத் கூட்டுறவை வாழ்த்தி, சைக்கிள் மணி ஒலித்துப் போக, திலீப் அவளைப் பார்த்த பார்வையில் முதல் முறையாக ஆசை தெரிந்தது. வேண்டி இருந்தது இதுவும் அவனுக்கு.

 

மகாத்மா காந்தி பெயரைச் சூட்டிக் கொண்ட மெயின் ரோடு தூங்கப் போய்க் கொண்டிருந்ததால் வீதியை ஓரமாகக் கீறிப் பிளந்து செல்லும் சிறு சந்துகள் ஒன்றில் புகுந்தான் திலீப்.  அவன் ஏமாற்றமே அடையத் தேவை இல்லாமல் ஊணு ரெடி என்ற பெயர்ப்பலகை வைத்த சாப்பாட்டுக் கடை திறந்திருந்தது.

 

என்பதால் தனித் தனியாகத்தான் சாப்பிடும் வழக்கம்.

 

கடை உள்ளே நுழையும் போது சுவரில் குத்துச் சண்டைக்காரர்கள் இருவர் பொருதும் பெரிய புகைப்படம். தெய்வ உருவங்களை மட்டுமே  கண்ணாடியும் மரச் சட்டமும் இட்டுச் சிறைப் பிடித்துச் சுவரில் மாட்டியிருக்கும் உணவு விடுதிகளில் ஒரு மாறுதலுக்காக வைத்த இந்தக் குத்துச் சண்டைப் படத்தை ரசித்தான் திலீப்.

 

இங்கே வேணாம், வேறே எங்காவது போகலாம் என்றாள் நடாஷா.

 

ஏன், நீதானே பசி பசின்னு கத்திட்டிருந்தே? திலீப் பொறுமை இழந்து கேட்டான்.

 

ஓங்கி அடிச்சு படத்திலே வலது பக்கம் நின்னு குத்துச் சண்டை போடறானே அது பார்க்க வேணாம்

 

ஏன் அவனைப் பிடிக்கலேன்னா இன்னொருத்தனைப் பாரு. இல்லே என்னப் பார்த்துக்கிட்டு சாப்பிடு.

 

திலீப் அவள் மறுபடி அவனை நெருங்கி ஆக்கிரமிப்பாள் என்று ஆசை பொங்கி வரக் காத்திருக்க நடாஷா குனிந்து அவன் காதில் அவசரமாகச் சொன்னாள் –

 

அவன் செர்யோஷா. என் பாய் ப்ரண்ட். விட்டுட்டுப் போயிட்டான் ராஸ்கல்.

 

சாப்பிடுவதாகப் பெயர் பண்ணிவிட்டு எழுந்தாள் நடாஷா. அவளுக்காக திலீப் போடச் சொல்லிக் கேட்டு வாங்கிய முட்டை தோசையைக் கூட விள்ளல் விள்ளலாக எடுத்துக் கொறித்து விட்டு அப்படியே வைத்து விட்டாள் அவள்.  தொடர்ந்து கண்ணீர் பெருக்கியபடி இருந்தவளை நேசமாகத் தோளில் தட்டி தனக்குத் தெரிந்த ஒரே பைபிள் வாசகத்தைச் சொன்னான் திலீப் –

 

இதுவும் கடந்து போகும்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2024 04:32

July 19, 2024

அவிசுவாசிகள் படிக்கத் தரவேண்டாம் மற்றபடி இலவச விநியோகத்துக்கு

வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி

அந்தக் கடிதம் கையெழுத்தில் இல்லாமல், அச்சு யந்திரத்தில் எழுத்துக் கோர்த்து அச்சடித்திருந்தது நடாஷாவுக்கு சந்தோஷத்தை உளவாக்கியது. நல்ல ஆங்கிலத்திலும் தொடர்ந்து மலையாளத்திலும் இருந்த அந்தக் காகிதத்தில் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நேரத்தில் குரிசுப் பள்ளியில் சங்கீர்த்தனமாகப் பாடும் பதினேழு ஏசுசபைக் கானங்களும் திருவசனங்களும் அச்சாகி இருந்தன.

 

விரும்பிக் கேட்டவர்களுக்கு விநியோகிக்க என்று தலைப்பில் அச்சடித்திருந்ததால் அது இலவசமாகப் பலருக்கும் வழங்கப் பட்டது என்றும் நடாஷா திலீப்பிடம் சொன்னாள். அவிசுவாசிகளுக்குத் தருவதைத் தவிர்க்கவும் என்று கீழே அச்சிட்டிருந்ததால், தனிச் சுற்றுக்கு மட்டும் என்பதும் புலப்பட்டது. அந்தச் சிறு வெளியீட்டைப் பக்கம் பக்கமாகப் புகைப்படம் எடுத்ததோடு, சில ஓலைச் சுவடிகளையும் நடாஷாவின் விருப்பப்படி நூலகர் அனுமதியோடு திலீப் படம் எடுத்துக் கொடுத்தான்.

 

ஏழு மணிக்கு நூலகரும் உதவியாளரும் மரியாதையோடு அறிவித்தனர் – இன்றைக்கு நேரம் முடிந்து கொண்டிருக்கிறது. நாளை வரலாமே.

 

நாளைக்கு வேறே பணி இருப்பதாகத் திலீப் சொல்ல, நூலகர் கோரிக்கை தரும் குரலில் சொன்னது –

 

ஒரு ஐந்து நிமிடம் எனக்காக, எங்களுக்காக ஒதுக்க முடியுமா?

 

அதைவிட மகிழ்ச்சியான எதுவும் எனக்கு இல்லை என அறிவித்தாள் நடாஷா.

 

நூலகர்  நூல் நிலையத் தோட்டத்துக்கு ஒரு மெழுகுவர்த்தி ஏந்திப் பிடித்தபடி அவர்களை இட்டுப் போனார்.

 

இவை சேரமான் பெருமான் காலமோ அதற்கும் முந்தியோ ஏற்படுத்திய சிற்பங்கள். இந்த இடம் கோவிலோ, துறவு பூண்ட புத்த மதத்து அடியார்கள் தங்கி இருந்த மடமோ ஆக இருந்திருக்கும். சர்க்கார் இதைச் செப்பனிடப் பணம் தரும் நிலையில் இல்லை. நீங்கள் படம் பிடித்துப் போய் உங்கள் நாட்டுப் பத்திரிகைகளில் எழுதி, சோவியத் உதவி கிட்டினால் நன்றாக இருக்கும்.

 

நடாஷாவின் புகைப்படங்களும் கட்டுரைகளும் சோவியத் தேசம் முழுதும் சிரத்தையோடு வாசிக்கப்படும் என்பதில் அவர் வைத்திருந்த நம்பிக்கை அவளுக்குப் பிடித்துப் போனது. அடுத்த ஒரு மணி நேரம் அந்தக் கட்டடத்தில் இன்னும் பல புகைப்படங்களை எடுக்க வேண்டி வந்தது திலீப்புக்கு. நூறு வருஷம் முற்பட்டது என்று நூலகர் காட்டிய பழைய நாற்காலியும், கிழிந்து தொங்கிய பங்காவும் இவற்றில் அடக்கம்.

 

சோவியத் அரசு, நட்பு நாட்டுக்கான உதவி செய்யும் என்பது உறுதி. அதற்கான முயற்சிகள் எடுப்பேன் என நடாஷா வாக்குத் தர, எல்லோருக்கும் பெருமகிழ்ச்சி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2024 05:57

July 16, 2024

வேதத்தில் ஏறிய ஃப்ரான்சிஸ் தாணுவுக்குக் கிடைத்த புதையல்

பிரான்சிலிருந்து அந்தக் காலத்தை அடுத்து வந்த யாரோ நூல் நிலையத்துக்குக் கொடுத்திருக்கலாம் என்று கருத்துச் சொன்னாள் நடாஷா.  கதவு திறந்து சாயாவும் பரிப்பு வடைகளும் இன்னொரு முறை அன்போடு பரிமாறப்பட்டன.

 

அவர்களைக் கனிவுடன் பார்த்தபடி, முதலிரவுக்குப் புதுமணத் தம்பதியரை அனுப்பி வைத்து வெளியே கதவு அடைக்கும் அன்பான சுற்றமும் நட்பும் போல நூலக ஊழியர்கள் சாந்தமும் புன்சிரிப்புமாக வெளியேறினார்கள்.

 

திலீப் எழுந்து ஏதோ தேடினான். என்ன வேணும் என்றாள் நடாஷா. டாய்லெட் போகணும்.

 

இன்னும் ரெண்டு மூணு மணி நேரம் பொறுத்துக்க முடியாதா?

 

அவனுடைய சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்து உயர்த்தி தலையைக் கரகரவென்று நகர்த்தி அவளைப் பார்க்க வைத்தபடி மூச்சில் பூண்டு மணக்கக் கேட்டாள். திலீப்புக்கு இப்போது பூண்டு பிடிக்கும். அதுவும் வேண்டி இருக்கிறது.

 

புண்ணியமாப் போறது. பிராணன் நின்னுடுத்து. என்னை விட்டுடு.

 

திலீப் அவள் கண்ணைக் கூர்ந்து பார்த்துப் போலி அச்சத்தோடு சொன்னான். வேண்டி இருந்தது. இன்னும் வரட்டும்.

 

அந்தப் பழைய கட்டிடத்தின் உள்ளடுக்குகளில் நம்பிக்கையோடு அரையிருட்டில் திலீப் தேடிப் போனது வீணாகவில்லை. நல்ல முறையில் பராமரிக்கப்  பட்ட ஒரு காற்றோட்டமான கழிப்பறையை அங்குக் கண்டான்.

 

திலீப் திரும்ப வந்தபோது இரண்டாம் பெட்டியில் இருந்து எடுத்த ஒரு அடுக்கு பனையோலை ஏடுகளையும் அவற்றைப் பொதிந்திருந்த சிவப்புப் பட்டுத் துணியில் ஏடுகளோடு கூட இருந்த பழுப்பேறிய கெட்டிக் காகிதத்தையும் சுவாரசியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் நடாஷா.

 

அவள் திலீப்புக்காகப் படித்துக் காட்டியது இந்தத் தோதில் இருந்தது.

 

கொல்லம் வருஷம் 1052  இங்கிலீஷ் வருஷம் 1877-ல் சாவக்காட்டு பிரான்சிஸ் ஸ்தாணுநாதன் என்ற, வேதத்தில் ஏறிய 67-வயது நபருக்குப் புதையல் கிட்டியது. அது நாலு நாழி அரிசி வடிக்கிற அளவிலே பழைய உலோகப் பானையில் தங்க நாணயங்களும், ஒரு குப்பியில் தைலமும், இந்த ஓலைச் சுவடிகளுமாக இருந்ததாம். சுவடிகள் தமிழ்ச் செய்யுளாக இருந்தபடியால் பாண்டிப் பிரதேசத்துப் பண்டிதர் ஒருவரிடம் கொடுத்து அவை பரீட்சிக்கப் பட்டன. அது சேரமான் பெருமாள் கைலாயம் போக விமானம் கட்டியது பற்றிய விளக்கமாகவோ அல்லாத பட்சத்தில் வஞ்சி என்ற பேரூரில் கழிவுநீர்ச் சாக்கடை அமைப்பு நிறுவியது குறித்தோ இருக்கும் என்று தெரிந்ததாம். அவற்றை அச்சுப் போட காலம் கனியாத காரணத்தால் இப்படிப் பெட்டியில் பத்திரமாக வைக்க சாவக்காட்டு பிரான்சிஸும், அரண்மனை உத்தியோகஸ்தர்களும்,  பாதிரியார் எஸ்தப்பன் மண்ணார்க்காடும்  சம்மதித்து அதேபடி இங்கே வைக்கப் பட்டதாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2024 04:37

July 15, 2024

வாடர்லூ போன நெப்போலியன் – போனி வெண்ட்டூ வாடர்லூ வெ அய் யாஆ

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவதான வாழ்ந்து போதிரேயில் இருந்து அடுத்த  ஈடு

 

அப்பாவித்தனத்தை வெளிச்சம் போடும் அவனுடைய முகபாவத்தை நடாஷா ரொம்பவும் ரசித்துப் புன்னகை செய்தபடி இருந்தாள்.

 

நூலகரும், அலமாரிகளும் இல்லாவிட்டால் அவள் வேறு விதமாகச் செயல்பட்டிருப்பாள் என்று திலீப் செய்ய முற்பட்ட  கற்பனை அகல்யாவை பாந்த்ராவில் சகலரும் பார்க்க அவன் நிதானமாக முத்தமிடுவதில் நீட்சி பெற, பிஸ்கட் சாஸ்திரியைப் புட்டத்தில் உதைத்துத் தள்ளி முடித்து வைத்தான் அவன்.

 

வெறுப்பும் வேட்கையுமாக அவனுக்குள்ளே விநோதமான மிருகம் ஒன்று உட்புகுந்திருந்தது அந்தப் புழுக்கமான பகல் வேளையில். புத்தகங்களைக் கையில் வாங்கிப் பத்திரமாக, துணி விரித்த தன் மடியில் வைத்துப் புரட்ட ஆரம்பித்தாள் நடாஷா.

 

பெட்டிகளுக்குள் இருந்து முதலில் எடுக்கப்பட்ட புத்தகம் ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதில், பிரான்ஸ் நாட்டில் மார்செயில்ஸ் நகரில் அச்சுப் போடப்பட்ட குழந்தைகள் கதைத் தொகுப்பாக இருந்தது. கையில் வாங்கிப் பார்த்த நூலகர், எத்தனை அபூர்வமான நூல் பாருங்கள், முக்கியமாக இந்தக் குழந்தைப் பாடல்கள். எனக்கு மிகப் பிரியமானவை இவை.

 

அவர் சொல்லி விட்டுப் பாட ஆரம்பித்தார் –

 

Bonny was a warrior | Way-ay-ah                 போனி ஒரு படைவீரன் வேஐ ஆ

Boney went to Waterloo| Way-ay-ah,           போனி வாடர்லூ போனான் வேஐ ஆ

Boney was defeated | Way-ay-ah,                 போனி தோற்று ஓடினான் வேஐ ஆ

 

நெப்போலியன் இங்கிலாந்தோடு செய்த யுத்தத்தில் தோற்றது குறித்து மனதை உருக்கும் பாடல் இது, கேட்டிருப்பீர்களே?

 

நூலகர் வினவ, ஆம் என்றாள் நடாஷா.

 

அப்போது, நீங்களும் சேர்ந்து பாடுங்களேன்.

 

நூலகர் வற்புறுத்தினார். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. ஏற்று வாங்கிப் பாடிய துணை நூலகரும் குரல் கம்ம, அழத் தொடங்கினார்.

 

நீங்கள் புத்தகங்களைப் பாருங்கள், இந்தச் சூழலில் நான் அழுது அழுதே, துக்கத்தில் கழுத்து வெடித்து இறந்து விடுவேன் போல இருக்கிறது.

 

நூலகரும் துணைவரும் தனித்தனியாகச் சொல்லி வெளியே போக, மற்ற ஊழியர்களும் வெளியே கதவைப் பகுதி மூடி, இன்று உலகத் துக்க தினமாவதால் நூலகம் பிற்பகலில் இயங்காது என்று சொல்லி மற்றவர்களை அனுப்பி விட்டு, வாசற்படிகளில் காத்திருந்தார்கள். அவர்கள் அத்தரும் புனுகும் ஏலமும் மணக்கும் புத்தகங்கள் பற்றி ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

பிரான்சில் 1900-களில் பள்ளி வகுப்புகளுக்கான அறிவியல், வரலாறு, கணிதம், புவியியல் என்று ஏகப்பட்ட பிரஞ்சு மொழிப் பாடப் புத்தகங்கள் அந்தப் பெட்டியில் இருந்தாலும் அவற்றை கேரளத்தோடு தொடர்பு படுத்தும் விதமாக எதுவும் கிடைக்கவில்லை.

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2024 05:31

July 13, 2024

ஆரோமல் உண்ணி தன் சொந்தம் கொட்டாரத்தில் காகிதத்தில் எழுதி ராஜ்ஜியம் பரித்தபோது

பரிப்பு வடையா, பருப்பு வடையா?

 

திலீப் குழப்பமாகக் கேட்டான்.

 

ஹெ, இந்தத் தரங்கெட்ட பாண்டிகள், என்றால் மதராஸ் மாகாணத் தமிழர்கள், ஒரு வார்த்தையையும் சரியாகப் பேசுவதில்லை. பருப்பு என்று பிழையாகச் சொல்வது அவர்களின் பரம்பரைக் கெட்ட பழக்கம் என்று புன்னகையோடு திலீப்பின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முனைந்தார் ஞானம் ஒளிர்ந்த நூலகர்.

 

புத்தறிவுத் தெளிவோடு அவனும் நடாஷாவும் இன்னொரு தடவை இன்னும் புராதனமான புத்தகங்கள் பற்றிக் கேட்க, அவருக்கு நினைவு வந்திருந்தது. பரிப்பு வடை ஞாபக சக்தி வலுவடைய உதவும் என்று சொன்ன நூலகர் தன்  மரமேஜைக்குள் இருந்து ஒரு பழைய இரும்புச் சாவியை எடுத்து ஊழியரிடம் கொடுத்து உள்ளே கழிப்பறைக்கு முந்திய அறையில் உள்ள அலமாரிகளைத் திறந்து அவற்றில் என்ன உண்டு என்று பார்க்கக் கட்டளையிட்டார். கழிப்பறைக் கதவைத் திறக்க வேணாம், அங்கே பார்க்கத் தகுந்த பொருள் ஏதுமில்லை என்று நகைச்சுவை ததும்பப் பேசிய அவர் நடாஷாவைச் சிரிப்பில் இணைத்தார்.

 

பதினைந்து நிமிடம் கழித்து இரண்டு மாபெரும் கள்ளியம்பெட்டிகளை ஏழெட்டுப் பேர் சத்தமெழ நூலக மண்டபத்துக்குள் தள்ளிக் கொண்டு வந்தார்கள். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முன்னால் வந்த துணை நூலகரின் பார்வையிலும் நடையிலும் தீரச் செயல் செய்யும் மிடுக்கு இருந்தது.

 

இதெல்லாம் மிகப் பழைய புத்தகங்கள். சேரமான் பெருமாள் காலத்தில் வந்ததாக இருக்கலாம். அதற்கு முன்னும் ஆகலாம். கவனமாகப் பார்க்கவும்

 

அவர் பொறுப்பும் நிதானமுமாகச் சொல்ல, திலீப் அடக்க முடியாமல் கேட்டான் –

 

சேரர் காலத்தில் ஏது அச்சு யந்திரம்?

 

என்றால் ஓலையில் எழுதி வைத்தது. அதைப் பார்த்து அப்புறம் எழுதியானது. அவர்களுக்கு பின்னே ஆரோமல் உண்ணி தன் சொந்தம் கொட்டாரத்தில் இருந்து காகிதத்தில்  எழுதிப் படிக்கச் செய்துவித்து ராஜ்ஜியம் பரித்தபோது.

 

மோட்சம் அளிக்கும் மதச் சடங்குகளில் ஓதும் பனிதச் சொற்கள் போல் நீட்டி இழுத்து அந்த இணை நூலகர் சொல்லியபோது காற்றும் நின்று போயிருந்தது.

 

இது எங்கே நீளும் என்று விளங்காததால் திலீப் உடனே நிறுத்திக் கொண்டு, கேட்க மட்டும் பிறப்பெடுத்த மராத்தி இளைஞனின் பிம்பத்தை அணிந்தான்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2024 22:00

July 11, 2024

பரிப்பு வட-யா பருப்பு வடையா? வெள்ளிமீன் பூச்சிகள் ஊரும் அலமாரி முன் விவாதம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது- அடுத்த சிறு பகுதி

வாழ்ந்து போதீரே   அத்தியாயம்   முப்பத்தொன்று     

          

ராத்திரி ஏழரை மணிக்கு நகரம் உறங்கப் போயிருந்தது. எண் எழுதிய கதவுப் பலகைகளைச் சரியாக எடுத்து வைத்துக் கடைகளை அடைக்கும் வேலை தெருவெங்கும் மும்முரமாக நடக்க, வீதிக் கோடி நூலகத்தின் அறைகள் ஒவ்வொன்றாக இருள் அணிந்தன.  தொடர்ந்து நூலகத்தின், மணிகள் அலங்கரிக்கும் பெரிய வாசல் கதவுகளும் அடைபட்டுக் கொண்டிருக்க, ஓரத்துப் படிகள் வழியே இறங்கிய கடைசி இரண்டு பேர் நடாஷாவும் திலீபும் தான்.

 

ஆறரை மணிக்கு அடச்சுடுவோம். புரட்சியை நிகழ்த்திக் காட்டிய சித்தாந்தம் ஜெயிச்சு உலகை ஆளும் சோவியத் பூமியில் இருந்து வந்திருக்கீங்க. அதான் ஏழு மணி வரை உங்களுக்காக திறந்து வைக்கறோம்.

 

உள்ளே போய் நடாஷா தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டபோது பெருமையும் பாசமுமாகச் சொன்னார் நூலகர்.

 

நூறு வருஷம் அதுக்கும் முந்திய பழைய புத்தகங்கள் இருந்தால், பார்க்கலாமா?

 

நடாஷா கேட்டபோது அப்படி எதுவுமே இல்லை என்று கடவுள் மேலோ கட்சித் தலைமை மீதோ சத்தியம் செய்யத் தயாராக இருந்தார் அவர்.  இந்தப் பதவி கட்சி அளித்த கருணைக் கொடை என்று சொல்லி, சுவரைப் பார்க்க நின்று, உடுத்த வேட்டியை மறுபடி இடுப்பில் இறுக்கிக் கட்டுவது அவருக்கு உகந்த செயலாக அப்போது இருந்தது.

 

பிற்பகல் இரண்டு மணிக்கு நடாஷாவும் திலீபும் நூலகத்துக்குள் போனது தொடங்கி அடுத்த சில மணி நேரத்தில் ஒரு நூறு தடவையாவது அவருடைய கைகள் சலிப்பில்லாமல் உடுதுணியை அவிழ்க்கவும் கட்டவுமாகச் செயல்பட்டன.  பின்னால் சுவர் இல்லாத இடங்களிலும் அது நடந்தேறியது.

 

அவருடைய கால்கள் தீக்குச்சி போல மெலிந்திருக்க, கைகள் தசை புடைத்து நல்ல வலிமையோடு காணப்பட இந்த உடற்பயிற்சியே காரணமாக இருக்கலாம்.

 

நடாஷா திலீப்பிடம்  நூலகத்தில் இருந்து புறப்படும் போது சொன்னாள்.

 

அணிவகுப்பு மரியாதை போல அப்போது நூலகரும், உதவி நூலகரும், இன்னும் இருந்த இரண்டு ஊழியர்களும் சூழ்ந்திருந்து, ஒரே நேரத்தில் சாவி முடுக்கிய பொம்மைகளாக, இடுப்பு வேட்டியைத் திருத்தி அணிந்தபடி நடாஷாவுக்குப் பிரிவுபசாரம் சொன்னார்கள். நூலகர் மட்டும் அன்னிபெசண்ட் அம்மையாரின் படம் மாட்டிய சுவரைப் பார்க்கத் திரும்ப நின்றிருந்தார் அப்போது.

 

நடாஷா உள்ளே இருந்த ஐந்தரை மணி நேரத்தில். இங்க்லிஷ், பிரஞ்சு, தமிழ், சயாமிய மொழி, மலையாளக் காவியங்கள், நாவல்கள், வைத்திய சாஸ்திரம் என்று நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட நூல்கள் எல்லாவற்றையும் பொறுமையாகவும் கவனமாகவும்   அவர்கள் நடாஷாவுக்குக் காட்டினார்கள்.

 

அவள், புராதன நூல்கள் என்று எழுதியிருந்த அறையில், ஒட்டடையும் தூசியுமாக மூக்கில் பட்டுத் தும்மிக் கொண்டு ஒரு பழைய நாற்காலியில் உட்கார்ந்திருக்க, திலீப்பும் மற்றவர்களும் அலமாரிகளில் சரிந்து கிடந்த புத்தகங்களைத் தடி கொண்டு தாக்கி உள்ளே இருந்த பாச்சைகளையும் வெள்ளிமீன் பூச்சிகளையும் விரட்டி, தூசி துடைத்த பிரதிகளை நடாஷாவுக்குப் படிக்கக் கொடுத்தனர். எனினும் அவை எல்லாம் 1940-க்குப் பிறகு பிரசுரமானவையாகவே இருந்தன.

 

நடாஷாவுக்குச் சாயாவும் பருப்பு வடையும் அன்போடு அளித்தார் நூலகர். மாஸ்கோ நகரில் இருந்து வரும் சிவப்புச் சிந்தனையாளர் குடும்பத்துப் பெண் அவள். ஒரே கொடியில் பூத்த சிவந்த மலர்கள் அவர்கள் எல்லாரும். மராத்திக்காரன் என்றாலும் திலீபும் புரட்சியாளனே. அந்த மண்ணில் போன தலைமுறை வரை முற்போக்கான சிந்தாகதி ஆழமாகச் சால் விட்டுப் போனது. மறுபடியும் அது அங்கே வரும். அதுவரை ஒரே கூட்டுப் பறவைகள் மின்விசிறிகள் கீழ் அமர்ந்து சாயாவும் பரிப்பு வடையும் கழித்திருக்கலாம் என்றார் நூலகர்.  ஒரே கூட்டுப் பறவைகள் மின்விசிறிக்குக் கீழே இருந்து பரிப்பு வடையும் சாயாவும் சாப்பிடும் அந்த உருவகம், அவசரமாகப் பிடித்ததால் சரியாக உருவாகாமல் போனதை உணர்ந்த அவர், வேட்டியை மறுபடி இடுப்பில் அவிழ்த்து அணிந்தபடி, ஒரே மனம் கொண்ட பல இனத்தவர் என மாற்றினார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 11, 2024 05:13

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.