அவிசுவாசிகள் படிக்கத் தரவேண்டாம் மற்றபடி இலவச விநியோகத்துக்கு

வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி

அந்தக் கடிதம் கையெழுத்தில் இல்லாமல், அச்சு யந்திரத்தில் எழுத்துக் கோர்த்து அச்சடித்திருந்தது நடாஷாவுக்கு சந்தோஷத்தை உளவாக்கியது. நல்ல ஆங்கிலத்திலும் தொடர்ந்து மலையாளத்திலும் இருந்த அந்தக் காகிதத்தில் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நேரத்தில் குரிசுப் பள்ளியில் சங்கீர்த்தனமாகப் பாடும் பதினேழு ஏசுசபைக் கானங்களும் திருவசனங்களும் அச்சாகி இருந்தன.

 

விரும்பிக் கேட்டவர்களுக்கு விநியோகிக்க என்று தலைப்பில் அச்சடித்திருந்ததால் அது இலவசமாகப் பலருக்கும் வழங்கப் பட்டது என்றும் நடாஷா திலீப்பிடம் சொன்னாள். அவிசுவாசிகளுக்குத் தருவதைத் தவிர்க்கவும் என்று கீழே அச்சிட்டிருந்ததால், தனிச் சுற்றுக்கு மட்டும் என்பதும் புலப்பட்டது. அந்தச் சிறு வெளியீட்டைப் பக்கம் பக்கமாகப் புகைப்படம் எடுத்ததோடு, சில ஓலைச் சுவடிகளையும் நடாஷாவின் விருப்பப்படி நூலகர் அனுமதியோடு திலீப் படம் எடுத்துக் கொடுத்தான்.

 

ஏழு மணிக்கு நூலகரும் உதவியாளரும் மரியாதையோடு அறிவித்தனர் – இன்றைக்கு நேரம் முடிந்து கொண்டிருக்கிறது. நாளை வரலாமே.

 

நாளைக்கு வேறே பணி இருப்பதாகத் திலீப் சொல்ல, நூலகர் கோரிக்கை தரும் குரலில் சொன்னது –

 

ஒரு ஐந்து நிமிடம் எனக்காக, எங்களுக்காக ஒதுக்க முடியுமா?

 

அதைவிட மகிழ்ச்சியான எதுவும் எனக்கு இல்லை என அறிவித்தாள் நடாஷா.

 

நூலகர்  நூல் நிலையத் தோட்டத்துக்கு ஒரு மெழுகுவர்த்தி ஏந்திப் பிடித்தபடி அவர்களை இட்டுப் போனார்.

 

இவை சேரமான் பெருமான் காலமோ அதற்கும் முந்தியோ ஏற்படுத்திய சிற்பங்கள். இந்த இடம் கோவிலோ, துறவு பூண்ட புத்த மதத்து அடியார்கள் தங்கி இருந்த மடமோ ஆக இருந்திருக்கும். சர்க்கார் இதைச் செப்பனிடப் பணம் தரும் நிலையில் இல்லை. நீங்கள் படம் பிடித்துப் போய் உங்கள் நாட்டுப் பத்திரிகைகளில் எழுதி, சோவியத் உதவி கிட்டினால் நன்றாக இருக்கும்.

 

நடாஷாவின் புகைப்படங்களும் கட்டுரைகளும் சோவியத் தேசம் முழுதும் சிரத்தையோடு வாசிக்கப்படும் என்பதில் அவர் வைத்திருந்த நம்பிக்கை அவளுக்குப் பிடித்துப் போனது. அடுத்த ஒரு மணி நேரம் அந்தக் கட்டடத்தில் இன்னும் பல புகைப்படங்களை எடுக்க வேண்டி வந்தது திலீப்புக்கு. நூறு வருஷம் முற்பட்டது என்று நூலகர் காட்டிய பழைய நாற்காலியும், கிழிந்து தொங்கிய பங்காவும் இவற்றில் அடக்கம்.

 

சோவியத் அரசு, நட்பு நாட்டுக்கான உதவி செய்யும் என்பது உறுதி. அதற்கான முயற்சிகள் எடுப்பேன் என நடாஷா வாக்குத் தர, எல்லோருக்கும் பெருமகிழ்ச்சி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2024 05:57
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.