இரா. முருகன்'s Blog, page 21
February 5, 2024
விடிகாலை பனிமூட்டத்தில் பழஞ்சோறும் மாவடுவும் யாசித்து வந்த பைராகி
அரசூர் வம்சம் 4 நாவல் வரிசை நான்காம் நாவல் வாழ்ந்து போதீரே -பகவதியின் டயரி தொடர்ச்சி செப்டம்பர் 1896
நான் ஓட ஆரம்பிச்சேன். அதுவும் என் பின்னாலே ஓடி வந்துண்டு இருக்கு. மயில் ஆடினா கண்ணுக்கு நிறைவா இருக்கும். ஓடினா என்னமோ தத்தக்கா புத்தக்கான்னு கோணலா இருக்கு. தோகை பாரம் இல்லாட்ட இன்னும் வேகமா ஓடுமோ என்னமோ. அதுவும் நல்லதுக்குத் தான். என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாம அது தெருக் கோடியில் நிக்க்றது. சரி அப்படியே போயிடும்னு ஆசுவாசம்.
இது என்ன தெரு? அரசூர் மாதிரி தெரியலியேன்னு கவனிச்சுப் பார்க்கறேன். அட, இதெல்லாம் நம்ம அம்பலப்புழை ஆச்சே. இங்கே எப்படி வந்தது? கனவு ஏதாவது காணறேனா?
நின்னு யோசிக்கற போது ஜிவ்வுனு அந்த மயில் பறந்து வர்றது தெரிஞ்சது. வெலவெலத்துப் போய் எதிர் வசத்திலெ தெரிஞ்ச பாதையிலே ஓடறேன். அது அம்பலக் குளக்கரை. செண்டை மேளம் சத்தம் கேக்கறது. எங்க அம்பலப்புழ கிருஷ்ணன் அம்பலம் தான். இந்த மாரார் குரல் எத்தனையோ காலம் கேட்டுப் பழக்கமானது ஆச்சே.
வந்தே முகுந்த ஹரே ஜெய ஷவ்ரே
அம்பலப்புழை கிருஷ்ணன் அம்பலம் ஆச்சே இது. மனசுக்கு ஆசுவாசமா இருக்கு. குளக்கரையிலே யாரோ உக்கார்ந்திருக்கார்.
அம்மா பசி உசுரு போறது. புண்ணியமாப் போறது. அன்னபூரணி. சாப்பிட ஏதாவது கொடு.
பைராகின்னா அது. நட்ட நடுத் தலையிலே திரிசூலம் மாதிரி சூடு போட்டுண்ட சித்தன். அன்னிக்கு என்னோட பேசி நல்ல வார்த்தை சொன்னவன் ஆச்சே. அவனா பசின்னு ஆகாரம் யாசிக்கறது?
பைராகிகள் பசிச்சாலும் அல்பமான சம்சாரிகள் சமைச்சதைச் சாப்பிடுவாங்களோ? நான் புரியாமல் அவனைப் பார்த்தேன்.
காலம் மாறிவரும் போது நாங்களும் மாறித்தான் போகணும் குஞ்ஞே. வீட்டுக்குப் போய் பழைய சாதம் இருந்தாலும் சரி, ஒரு குத்து தயிர் விட்டு ஒரு விழுது மாங்காய் உப்பிட்டது சேர்த்து எடுத்து வா.
பைராகி பெத்தவா மாதிரி பிரியமான குரல்லே சொல்ல மனசு கரைஞ்சு போனது எனக்கு.
இதோ வந்தாச்சுன்னு சொல்லி, இடுப்பிலே வச்ச குடத்தோடு விரசா நடக்கிறேன். குப்புசாமி அண்ணா, விசாலம் மன்னி. வந்துட்டேன். பழைய சாதத்தை களைய வேண்டாம். கேட்டேளா. பைராகி கேட்கறார்.
வீடு எங்கே? எந்தத் தெருவிலே இருக்கு? இருட்டு இன்னும் ஏன் விலகலே?
நான் பதைபதைச்சு நடக்கறேன்.
ஏய் பகவதி, எங்கே நீ பாட்டுக்கு போறே?
எங்க அவர், புகையிலைக் கடைக்காரர் குரல். அரசூர் வீட்டு வாசல் இது. நான் போட்டுட்டுப் போன கோலத்தை ரசிச்சபடி நின்னுண்டு கூப்பிடறார். ஒண்ணும் புரியாம திரும்பறேன்.
February 4, 2024
நீல இறக்கை செம்மண்ணில் புரண்டு மின்ன, துரத்தி வந்த மயில்
அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. புத்தகத்திலிருந்து
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு
பகவதியின் டயரி தொடர்ச்சி
1896 செப்டம்பர் அரசூர்
இன்னிக்குக் காலம்பற இப்படித்தான் தெம்பா காப்பி உபசாரம் எனக்கு நானே நடத்திண்டு, கோலம் போட்டு முடிச்சுட்டு உடனே குளிச்சேன். சரி இவ்வளவு பண்ணியாச்சு, மார்கழி ஆச்சே, கோவிலுக்குப் போகலாம்னு கிளம்பிட்டேன். கோவில் பக்கத்திலே ஊருணியிலே ஜில்லுனு வெள்ளம் கோரியெடுத்து குடத்துலே நிறைச்சு வரலாம்னு கூட பரிபாடி. சட்டுனு வார்த்தை வர மாட்டேங்கறது. பரிபாடின்னா, திட்டம்னு சொல்றதா?
நிறைகுடத்தோட கோயிலுக்குள்ளே போகலாம் தான். ஆனா கொண்டு போனதை அபிஷேகத்துக்குத் தந்துடறது தான் மரியாதை. காலிக் கொடம்னா வாசல்லே வச்சுட்டு உள்ளே போகணும். சமயத்திலே காணாமப் போயிடும்.
பரவாயில்லேன்னு காலிக் கொடத்தை வெளியிலே சண்டிகேசுவரர் சந்நிதிக்குப் பின்னாடி வச்சுட்டு நிர்மால்ய தரிசனத்துக்காக உள்ளே போனேன். வக்கீல் குமஸ்தா பெயர் சொல்லாதவர் திருவெம்பாவைன்னு ராகத்தோடு படிச்சுண்டிருந்தது கண்ணுலே பட்டது. பெயர் சொல்லாதவர் ஏன்னு கேட்டா, எங்க அவர், அதான் புகையிலைக் கடைக்காரர் பெயர் தான் குமஸ்தருக்கும்.
அவருக்கு பரிவட்டம் கட்டி ஒவ்வொரு பாட்டாகப் பாடி எம்பாவே எம்பாவேன்னு முடிக்க முடிக்க அடுக்கு தீபாராதனை காட்டினதைக் கொஞ்ச நேரம் கண் குளிரப் பார்த்துட்டு வெளியிலே வந்தேன்.
சின்னக் குருக்கள், புகையிலைக் கடை மாமி, பொங்கல் பிரசாதம் இந்தாங்கோன்னு நீட்டினார். கண்ணிலே ஒத்திண்டு வாங்கிண்டேன்.
நம்ம வகை சேவை என்னிக்குன்னு கேட்டேன். புகையிலைக் கடைக்காரர் மார்கழி பத்துலே இருந்து இருபது வரை சேவை நடத்தறதாச் சொல்ல ஒரே சந்தோஷம். இன்னிக்கானா வக்கீல் ராவ்ஜி திருப்புழிச்சை உபயதாரராம். யார் கொடுத்தா என்ன, கோவில் பொங்கல் ருஜியே தனிதான்.
ஒரு ஆறு மணி இருக்கறச்சே ஊருணியிலே தண்ணி எடுத்துண்டு ஜாக்கிரதையாப் படி ஏறிண்டு இருந்தேனா. இருட்டு இன்னும் விலகலே. படியிலே மசமசன்னு எதுவோ இருக்கற மாதிரி தட்டுப்பட்டது. ஊருணிக்குள்ளே போகற போதும் இருந்ததான்னு கேட்டா எனக்குச் சரியாத் தெரியலே. இருந்திருக்கலாம். நான் பார்த்திருக்க மாட்டேனா இருக்கும். அது ஒரு மிருகமோ பட்சியோ தான். மனுஷர் இல்லே.
ஜிவ்வுனு றெக்கையை விரிச்சு அந்தப் பட்சி தத்தித் தத்தி என் முன்னாலே ஓடினது. நான் அப்படியே நின்னேன். இவ்வளவு பிரம்மாண்டமா றெக்கை வச்சுண்டு என்னவாக்கும் இது. மயில் தானே? அது ஏன் விடிகாலை இருட்டுலே வந்தது? எங்கே இருந்து வந்தது?
சரி அதுக்கும் மார்கழிக் குளிர் வேணும் போல இருக்கு. யாருக்கும் உபத்ரவம் பண்ணாம ஊருணிக் கரையிலே ஆடிட்டு சுப்ரமணிய சுவாமியைத் தொழுதுட்டு பறந்து போகட்டும்னு நான் ஒரு ஓரமாப் படி ஏறினேன்.
ஊருணிக் கரையிலே நடந்துண்டு இருக்கற போது தான் பின்னால் ஏதோ சலசலன்னு சத்தம். என்னவா இருக்கும்னு பார்த்தா, என்னத்தைச் சொல்ல? அந்த மயில் என் பின்னாலேயே தொரத்திண்டு வந்துண்டிருந்தது.
இன்னும் இருட்டு விலகலேன்னாலும் மயிலோட கண்ணு எனக்கு ரொம்ப திவ்யமாத் தெரிஞ்சது. அதுலே விரோதம் இல்லே. ஏதோ சொல்ல வர மாதிரி தோணல். தோணல் மாத்திரம். கேட்கலேன்னா உனக்குக் கஷ்டம்னு சொல்லாமச் சொல்ற கண்ணு அது. மிரட்டல் இல்லே. பிடிவாதம். அலகு வேறே ரொம்ப குரூரமா நீட்டிண்டு பின்னால் றெக்கை எல்லாம் செம்மண்ணுலே புரள அது என் பின்னாலேயே வருது. எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிப் போனது.
நான் ஒரு நிமிஷம் செய்யறது அறியாம, ஆதித்ய ஹிருதயமும் அப்புறம் ஞாபகம் வந்த வரைக்கும் ஹனுமான் சாலிசாவும் சொன்னபடிக்கு முன்னாடி போக மயிலானா விடாமே திட சித்தத்தோடு பின்னாலேயே வருது.
February 3, 2024
நாடகாந்தம் கவித்வம் – கேரள இலக்கிய விழா 2024
கேரள இலக்கிய விழா 2024-ல் மலையாளத்தின் முக்கிய எழுத்தாளர்களான எம்.முகுந்தனும், என்.எஸ்.மாதவனும் நாடகம் பற்றி ‘நாடகாந்தம் கவித்துவம்’ என்ற தலைப்பில் உரையாடியதைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது.
தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் -[
நாடகம் என்ற நிகழ்கலை அமைப்பிலும், உள்ளடக்கத்திலும் நிறைய மாற்றமடைந்திருக்கிறது
50 வருடம் முன்பு நாடக ரசிகராக இருந்த ஒருவர் அன்றைய பிரபல நாடகமான ‘நிங்கள் என்னெ கம்யூனிஸ்ட் ஆக்கி’ பார்க்கப் போன அதே எதிர்பார்ப்புகளோடு இன்றைய நவீன நாடகம் பார்க்கப் போனால் ஏமாற்றமே அடைவார்
முகுந்தன் ‘ஸ்வப்னம் போலொரு புழ’ (கனவு போலொரு நதி) என்று தொடங்கும் ஒரு நாடக எழுத்துப் பிரதியை சிலாகித்தார். நதியை ஓசை ரூபமாகவோ நகரும் ஒளிப்படமாகவோ சித்தரித்து இந்த நாடகப் பிரதி தொடங்கியிருந்தால் இயக்குநருக்குக் காட்சியமைப்பு கட்டுப்பாடு ஏற்படுத்தியிருக்கலாம். ஸ்வப்னம் போலொரு புழ காட்சிப்படுத்த ஒரு புதுக் கதவையே திறந்து வைக்கிறது
நாடகத்தில் நாவலை, நாடகத்தில் கவிதையை, நாடகத்தில் சிறுகதையைக் கொண்டு வர நாடகம் வளர்ந்து செழித்து வரும் நாடுகளில் புதுப்புது முயற்சிகள் செய்யப்படுகின்றன.
பிரஞ்சு நாடகம் ஒன்று ஒரு ஓவியத்தை மேடையில் கொண்டு வருவதில் தொடங்குகிறது. இரண்டு விமர்சகர்கள் அந்த ஓவியத்தைப் பற்றி விவாதிப்பதும் விமர்சிப்பதும் தான் நாடகமாக நிகழ்கிறது
ஜெர்மானிய ஷேக்ஷ்பியர் என்று விதந்தோதப்படும் ஷில்லரின் ஒரு நாடகத்தில் இறுதிக் காட்சியில் ஒரு நகரம் பற்றி எரிவது காட்சிப்படுத்தப் படுகிறது
இருண்ட அரங்கில் பார்வையாளர்களின் செவியில் கதாபாத்திரங்கள் வசனத்தைச் சொல்வதாக ஒரு நவீன நாடக முயற்சி மேற்கொள்ளப்பட்டது;
கேரளத்தில் புது நாடக முயற்சியாக மேடையில் நாடகம் நிகழும்போது மத்தி (மீன்) பொறித்து கதாபாத்திரங்களுக்கு உண்ணத் தரப்பட, அரங்கில் பொறித்த மீன்வாடை நீக்கமறப் பரவுகிறது.
இன்னொரு நாடகத்தில் சிற்றுண்டி கதாபாத்திரங்களுக்கு விநியோகமாகிறது
நாடகம் நிகழும் போது ஒரு கதாபாத்திரம் ‘இதோ வரேன்’ என்று சொல்லிக் கழிப்பறை போக, உள்ளே அவர் சிறுநீர் கழிக்கும் ஓசையும், ஃப்ளஷ் இயக்கிய ஓசையும் அரங்கில் கேட்கிறது.
நாடகத்தில் நாடகத்தைக் கொண்டு வர முயற்சிகள் குறித்து விவாதங்களை எதிர்பார்க்கலாம்
February 2, 2024
1896 மார்கழி அதிகாலையில் துரத்தி வந்த மயில்-பகவதியின் டயரியிலிருந்து
அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. இந்நாவல்கள் அனைத்தும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் நேர்த்தியான அச்சுப் பதிப்புகளாக வெளிவந்துள்ளன= வாழ்ந்து போதேரே நாவலில் வரிசைப்படியான அடுத்த பகுதி தொடர்ச்சி இது
செப்டம்பர் 1896 பகவதியின் டயரிக் குறிப்பு தொடர்ச்சி
இன்னிக்குக் காலம்பற இப்படித்தான் தெம்பா காப்பி உபசாரம் எனக்கு நானே நடத்திண்டு, கோலம் போட்டு முடிச்சுட்டு உடனே குளிச்சேன். சரி இவ்வளவு பண்ணியாச்சு, மார்கழி ஆச்சே, கோவிலுக்குப் போகலாம்னு கிளம்பிட்டேன். கோவில் பக்கத்திலே ஊருணியிலே ஜில்லுனு வெள்ளம் கோரியெடுத்து குடத்துலே நிறைச்சு வரலாம்னு கூட பரிபாடி. சட்டுனு வார்த்தை வர மாட்டேங்கறது. பரிபாடின்னா, திட்டம்னு சொல்றதா?
நிறைகுடத்தோட கோயிலுக்குள்ளே போகலாம் தான். ஆனா கொண்டு போனதை அபிஷேகத்துக்குத் தந்துடறது தான் மரியாதை. காலிக் கொடம்னா வாசல்லே வச்சுட்டு உள்ளே போகணும். சமயத்திலே காணாமப் போயிடும்.
பரவாயில்லேன்னு காலிக் கொடத்தை வெளியிலே சண்டிகேசுவரர் சந்நிதிக்குப் பின்னாடி வச்சுட்டு நிர்மால்ய தரிசனத்துக்காக உள்ளே போனேன். வக்கீல் குமஸ்தா பெயர் சொல்லாதவர் திருவெம்பாவைன்னு ராகத்தோடு படிச்சுண்டிருந்தது கண்ணுலே பட்டது. பெயர் சொல்லாதவர் ஏன்னு கேட்டா, எங்க அவர், அதான் புகையிலைக் கடைக்காரர் பெயர் தான் குமஸ்தருக்கும்.
அவருக்கு பரிவட்டம் கட்டி ஒவ்வொரு பாட்டாகப் பாடி எம்பாவே எம்பாவேன்னு முடிக்க முடிக்க அடுக்கு தீபாராதனை காட்டினதைக் கொஞ்ச நேரம் கண் குளிரப் பார்த்துட்டு வெளியிலே வந்தேன்.
சின்னக் குருக்கள், புகையிலைக் கடை மாமி, பொங்கல் பிரசாதம் இந்தாங்கோன்னு நீட்டினார். கண்ணிலே ஒத்திண்டு வாங்கிண்டேன்.
நம்ம வகை சேவை என்னிக்குன்னு கேட்டேன். புகையிலைக் கடைக்காரர் மார்கழி பத்துலே இருந்து இருபது வரை சேவை நடத்தறதாச் சொல்ல ஒரே சந்தோஷம். இன்னிக்கானா வக்கீல் ராவ்ஜி திருப்புழிச்சை உபயதாரராம். யார் கொடுத்தா என்ன, கோவில் பொங்கல் ருஜியே தனிதான்.
ஒரு ஆறு மணி இருக்கறச்சே ஊருணியிலே தண்ணி எடுத்துண்டு ஜாக்கிரதையாப் படி ஏறிண்டு இருந்தேனா. இருட்டு இன்னும் விலகலே. படியிலே மசமசன்னு எதுவோ இருக்கற மாதிரி தட்டுப்பட்டது. ஊருணிக்குள்ளே போகற போதும் இருந்ததான்னு கேட்டா எனக்குச் சரியாத் தெரியலே. இருந்திருக்கலாம். நான் பார்த்திருக்க மாட்டேனா இருக்கும். அது ஒரு மிருகமோ பட்சியோ தான். மனுஷர் இல்லே.
ஜிவ்வுனு றெக்கையை விரிச்சு அந்தப் பட்சி தத்தித் தத்தி என் முன்னாலே ஓடினது. நான் அப்படியே நின்னேன். இவ்வளவு பிரம்மாண்டமா றெக்கை வச்சுண்டு என்னவாக்கும் இது. மயில் தானே? அது ஏன் விடிகாலை இருட்டுலே வந்தது? எங்கே இருந்து வந்தது?
சரி அதுக்கும் மார்கழிக் குளிர் வேணும் போல இருக்கு. யாருக்கும் உபத்ரவம் பண்ணாம ஊருணிக் கரையிலே ஆடிட்டு சுப்ரமணிய சுவாமியைத் தொழுதுட்டு பறந்து போகட்டும்னு நான் ஒரு ஓரமாப் படி ஏறினேன்.
ஊருணிக் கரையிலே நடந்துண்டு இருக்கற போது தான் பின்னால் ஏதோ சலசலன்னு சத்தம். என்னவா இருக்கும்னு பார்த்தா, என்னத்தைச் சொல்ல? அந்த மயில் என் பின்னாலேயே தொரத்திண்டு வந்துண்டிருந்தது.
February 1, 2024
காப்பி உபசாரமும், பக்த விஜயமும், புள்ளிவரிசை தப்பாத மார்கழிக் கோலமும்
அரசூர் வம்சம் தொடங்கி, விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் வழியே நான்காவது அரசூர் நாவல் வாழ்ந்து போதீரே. நாவலில் இருந்து – ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு
(பகவதியின் டயரியில் இருந்து)
1896 செப்டம்பர் 23 புதன்கிழமை
விடிகாலையில் குளிக்கறது நல்ல பழக்கம் தான். இங்கே அரசூர்லே, எல்லார் வீட்டுப் பெண்களும் அதேபடிக்குத் தான் செய்யற வழக்கம். முக்கியமா செவ்வாய், வெள்ளிக் கிழமை. அதோடு கூட, மாசாந்திரம் விலகி இருக்கறது கழிஞ்சு. அப்புறம் மார்கழி மாசம் முப்பது நாளும்.
மார்கழி கொண்டாடறது எனக்கு அரசூர் வந்த பிற்பாடு தான் சீலமாச்சு.
முதல்லே மார்கழின்னு பேரே புதுசா இருந்தது. மலையாளத்திலே தனு மாசம்னு கேட்டுத் தான் பழக்கம். அது இங்கே மார்கழி.
தனு மாசத்துக்கு முந்தி வரும் சிங்க மாசம் இங்கே ஆவணி. கன்னி மாசம் புரட்டாசி. துலாம் மாசம் ஐப்பசி. விருச்சிகமோ கார்த்திகை ஆயிடும். இப்படி மாசம் பந்த்ரெண்டும் இங்கே முழுக்க மாறி வரும்.
மார்கழி மாசம் இருக்கே. அது தனி அனுபவமாக்கும். வெறும் நாளிலே உதயத்துக்கு முந்தி ஒரு அஞ்சரை மணிக்கு எழுந்து வாசல் தெளிக்கக் கிளம்பறது வழக்கம் என்னாக்க, மார்கழி மாசத்திலே அலாரம் கடியாரத்தைத் தலைமாட்டுலே வச்சுண்டு நாலு மணிக்கு முழிப்புத் தட்டினதுக்கு அப்புறம் விடாம மணி அடிக்க எழுந்திருக்கறேன். அலாரம் நான் தான் வைக்கறது. லண்டன் கடிகாரம். ரொம்ப காசு அடச்சு பட்டணத்துலே இருந்து வாங்கிண்டு வந்தார். ஒரு தடவை எப்படின்னு செஞ்சு காட்டி விளக்கிச் சொன்னார். புரிஞ்சுண்டேன். நல்ல விஷயம் புதுசா தெரிஞ்சுக்கற சந்தோஷமாக்கும் அது.
ராத்திரி எடுத்து வச்ச பால் குளிர் காலங்கறதாலே திரியாம, கெட்டுப் போகாமல் அப்படியே திடமா இருக்கும். என்ன, எருமைப் பால் எடுத்து வச்சா அவ்வளவு நிச்சயமாச் சொல்ல முடியாது. ரொம்ப கொழுத்து நாள் முழுக்க நாக்கிலே சுத்திண்டே இருக்கும். வயத்துலேயும் சமயத்திலே குடுகுடுன்னு ஓடி ரகளைப் படுத்திடும் எருமைப் பால். பசும்பால் தான் சரியானது. பசு மாதிரியே ரொம்ப சாத்வீகம் அது.
பால் இந்தக் கதைன்னா, காப்பிப் பொடி இன்னொரு மாதிரி. அதை சித்த முன்னாடியே திரிச்சு வச்சுக்கணும். அப்போ அப்போ அரைக்க வீட்டுலே கையாலே சுத்தற மிஷின் இருக்கு தான். ஆனாலும் காலம்பற மூணு மணிக்கு கரகரன்னு அதுலே பிடிப்பிடியாப் போட்டு சுத்தி அந்த சத்தத்திலே ஊர் முழுக்க எழுந்து உட்கார வைக்க மனசு இல்லே எனக்கு. இவரானா ரெண்டு நாளைக்கு ஒரு தடவை பீப்ரியும் ரொபஸ்டாவும் ஒரு ரகசியமான விகிதத்துலே கலந்து ஐயங்கார் கடையிலே புதுசா அரைச்ச பொடி வாங்கிண்டு வந்து வச்சுடுவார். சளைக்காமல் காப்பிப் பொடி வாங்குவார் இப்படி சிராங்காய்க்கு ரெண்டு முட்டைக் கரண்டி அதிகமா. ரெண்டு நாளைக்கு மேலே அதோட வாசனை போயிடுமாம். சுல்தான் கெட்டார், புகையிலைக்கடை ஐயர்வாள் காப்பி ருசி அப்படி.
குமுட்டி அடுப்பு பத்த வச்சு வென்னீர் போட்டு, ரெண்டு கரண்டி வழிய வழிய காப்பிப் பொடியை பில்டர்லே போட வேண்டியது. வென்னீரைக் கொதிக்கக் கொதிக்க விட்டு, ராஜாவுக்கு மரியாதைக்குக் குடை பிடிக்கற மாதிரி சில்வர் குடையை மேலே வச்சு அடச்சுட்டு தந்தசுத்தி. நம்பூத்ரி சூரணத்தை தீத்தி பல் தேய்க்கப் போய்ட்டு வந்தா, கமகமன்னு காப்பி டீகாஷன் இறங்கி இருக்கும்.
எனக்குத் தானாக்கும் முதல் காப்பி. புகையிலைக் கடைக்காரர் எழுந்திருந்தா அவருக்குத் தான் முதல்லே. தூங்கற மனுஷனை என்னத்துக்கு எழுப்பி காப்பி கலந்து தர்றதாம்? அகத்துக்காரர்னானும் சரிதான். ஊர், உலக நடப்பு இது. காப்பி மரியாதை இது.
வாசல்லே போய் ஒரு மரக்கால் முழுக்க அரிசி மாவும் கோல மாவும் கலந்து எடுத்துப் போனதை வச்சு இருபது புள்ளி இருபது வரிசை கோலம் போட உக்கார்ந்தா, நேரம் போறதே தெரியாது. கோலம் சீரா வந்து எங்கேயும் சிக்காமல் அம்சமா முடிய அஞ்சரை மணி ஆகிடும். . அதுக்குள்ளே அண்டை அயல்லே இருக்கப்பட்ட பெண்டுகளும் அவரவரோட வாசல்லே கோலம் போட வந்து எல்லாருமா கை பேசப் பேச வாயும் கூடவே கலகலன்னு சேர்ந்து பேசறது நடக்கும்.
மார்கழி மாசம்னோ என்னமோ யாரும் வம்பு பேசறதில்லே. ஹரிகதையிலே கேட்டது, வீட்டிலே கர்ண பரம்பரையா வந்த தகவல் இப்படிச் சொல்லிக் கேட்டு கோலம் போடற சிரமமே தெரியாமப் போயிடும். நான் இவர் வாங்கி வந்து கொடுக்கற அறுபத்து மூவர் கதை, பக்த விஜயம் இப்படி புஸ்தகம் படிச்சு அதிலே வர்றதை எல்லாம் சொல்றதாலே என் பக்கம் எல்லோரோட காதும் திரும்பி இருக்கும். கதை சொல்லிண்டே கோலம் தப்பு இல்லாம போட பழக்கம் வேணும். எனக்கு ரெண்டு மார்கழி ஆச்சு அது மனசிலே படிய. இப்போ கண்ணை மூடிண்டு கூடக் கோலம் போடுவேனாக்கும்.
January 31, 2024
மேல்மாடி பஞ்சாபி பெண்கள் குங்குமம் வாங்கிப் போக அமைதியாகக் கிடந்தது வீடு
அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே-யிலிருந்து
நான் சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கறேன். அப்புறம் மயிலைப் பாரு. அது உனக்காகக் காத்திருக்கும்.
திரும்ப அவன் ஜெயம்மாவை வணங்க, அவள் திருப்தியாக அரட்டையைத் தொடர்வதற்காகத் திரும்ப உள்ளே போனாள். பெண்களுக்கே ஆன பேச்சு என்று சங்கரன் ஊகிக்க, அவனை விலக்கி வைத்திருந்தார்கள்.
மீரட் கத்தரிக்கோல் என்று வசந்தி உச்சக் குரலில் சிரித்தபடி சொல்ல, ஜெயம்மா ஏற்று வாங்கி இன்னும் கொஞ்சம் சுருதி சேர்த்தாள் அவுட்டுச் சிரிப்புக்கு. இந்தியா முழுக்க மீரட்டுனா வேறே ஞாபகமே வராது என்றாள் ஜெயம்மா அடுத்த சிரிப்புக்கு ஆயத்தம் செய்தபடி. அது என்ன என்று சங்கரனுக்குத் தெரியும் என்றாலும் அவன் சிரிக்க முடியாது.
பைராகி திருப்தியாகச் சாப்பிட்டு முடித்து பாயசமும், மோரும் ஒரு சொம்பு தண்ணீரும் வாங்கிக் குடித்துக் கொஞ்சம் வெற்றிலை கேட்டு வாங்கினான். ஐந்தே நிமிஷத்தில் சிரம பரிகாரம் முடிந்து அவன் கிளம்பும் முன்னால், வசந்திக்கும் அவள் குழந்தைக்கும் சகல விதமான சுகமும் அதிர்ஷ்டமும் வர பிரார்த்தனை சொன்னான். அவன் போனதும் தோட்டத்தில் மயில் ஆட ஆரம்பித்தது.
ஆடி முடியும் வரை அதைப் பார்த்தபடி இருந்தார்கள். பிடார் ஜெயம்மா எல்லோரிடமும் பிரியத்தோடு சொல்லிக் கொண்டு இன்னும் கொஞ்சம் ஊர்க் கதை பேசி, இன்னும் ஒரு டோஸ் புது டீகாக்ஷன் காப்பி சாப்பிட்டு ரெண்டு தரப்பிலும் பிரிய மனசே இல்லாமல் புறப்பட்ட போது பிற்பகல் மூணு மணியாகி விட்டிருந்தது.
அதற்குள், சங்கரனும் வசந்தியும் வேணாம் வேணாம் என்று மறுக்க, அசத்துகளே, சித்த சும்மா இருக்கணும் என்று அவர்களைக் கடிந்து கொண்டு ஜெயம்மா குழந்தை கழுத்தில் ரெண்டு பவுனுக்கு ஒரு புது சங்கிலி போட்டிருந்தாள். சிங்கப்பூர் போயிருந்த போது வாங்கியது என்று பளபளவென்று ராஜாக்களின் வஸ்திரம் போல மின்னித் திளங்கிக் கொண்டு ஜரிகையில் புட்டா புட்டாவாகப் போட்டு ஒரு புடவை வேறே கொடுத்தாள்.
சங்கரனுக்கு ஏது வாங்கித் தருவது என்று புரியாததால், கன்னாட் ப்ளேஸில் மதராஸ் பேங்குக்குப் போய் கிப்ட் செக் இருநூறு ரூபாய்க்கு வாங்கியிருந்தாள்
பிரம்மஹத்திகள், டாய்லெட் போற வழியிலே கூரையிலே சொருகி வச்ச பழைய பேப்பர்லே நாலு பூப் போட்டா கிப்ட் செக்காம். சரி அந்தக் கந்தல் காகிதத்துலே எழுதற போது பார்த்து எழுத வேணாமோ? இன்னும் பத்து வருஷம் கழிச்சு இருக்கற தேதியைப் போட்டுக் கொடுத்துடுத்துகள். வாங்கிப் பார்த்துட்டு சண்டைக்குப் போனா, அதனாலே என்னன்னு முழ நீளத்துக்குக் கீழேயே கோழிக் கிறுக்கலாக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுத்து அந்த ஏஜண்ட் பிரம்மஹத்தி. நீ முதல்லே நாளைக்கு அந்த கிப்ட் செக்கை என்கேஷ் பண்ணு.
வசந்தியின் அப்பா ஜெயம்மாவின் தாராள குணத்தாலும் தன் மகளிடம் அவள் காட்டும் வாத்சல்யத்தாலும் பரவசமடைந்து சங்கரனிடம் சொன்னார் –
மாப்ளே, இந்த காஷ்மீர் லேஞ்சியை நீங்க பதில் மரியாதையாக் கொடுத்தா நிறைஞ்சு இருக்கும்.
சங்கரன் அவர் கையில் பிடித்திருந்த நீள வாட்டில் மடித்த துணியைச் சிரத்தையின்றிப் பார்த்தான். அதில் பத்து நிமிஷம் முன் அவனுடைய மைத்துனன் மூக்குத் துடைத்த ஞாபகம்.
பதில் மரியாதையாக அப்புறம் ரூபாய் முன்னூற்றொண்ணு பழுக்காத் தட்டில் வெற்றிலை பாக்கு புஷ்பத்தோடு வைத்து ஜெயம்மாவிடம் வசந்தி தர, அவள் ஒரு ரூபாய்க் காசையும் புஷ்பத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டாள்.
அவர் எப்போவாது வெத்திலை போடுவார். பல்லு சரியில்லேன்னு டெண்டிஸ்ட் அதுக்கும் தடை போட்டிருக்கார். எனக்கானா இதெல்லாமே அலர்ஜி. நீயே உங்கப்பாவுக்கு நான் கொடுத்ததா கொடுத்திடு வசந்தி.
ஜெயம்மா சொல்ல, சங்கரன் இடைவெட்டினான் – எதுக்கு, அவர் திரும்ப தன் கடையிலே கொண்டு போய் விக்கறதுக்கா?
நீ இன்னொரு சோழ பிரம்மஹத்தி.
ஜெயம்மா அவனுக்குப் பழிப்பு காட்டி விட்டு வாசலுக்கும் உள்ளுக்குமாக நின்றாள். அடுத்து ஏதாவது பேச யாராவது விஷயத்தை எடுத்தால் அவள் திரும்ப உள்ளே வந்து அதையும் பேசி முடித்துத் தான் போவாள் என்று தோன்றியது.
வசந்தி பழைய இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் சுற்றி எடுத்து வந்த இலையில் நாலு லட்டும், தேங்காய்ப் பருப்புத் தேங்காயில் பாதியும் இருப்பதாகச் சொன்னாள். வீட்டுக்குப் போனதும் ஓவல்டின் டப்பாவில் எடுத்து வைக்க மறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள் அவள்.
ஓவல்டின் சப்ளை இல்லே இப்போ என்றார் வசந்தியின் அப்பா. கூடவே கரோல்பாக் தமிழ்க் கடைக் காரராகப் பொறுப்போடு யோசித்துச் சொன்னார் –
அதுக்கு பதிலா, மெட்ராஸில் இருந்து ஆல்விட்டோன்னு ஒரு புது பானம் வந்திருக்கு. நன்னா இருக்குன்னு எல்லோரும் சொல்றா.
அது வாயிலே ஒட்டிக்கறதே. ரெண்டு வாய் குடிச்சா உதடு கப்புனு ஒட்டி பேச்சே எழும்ப மாட்டேங்கறது என்றாள் புதுசாகப் பேசக் கிடைத்த ஜெயம்மா.
அடுத்த பத்து நிமிஷம் வேறே பேச்சே எழாமல், அவள் காரில் ஏறிக் கைகாட்டிக் கொண்டு புறப்பட்டுப் போக மழை பெய்து ஓய்ந்த அமைதி அங்கே. சங்கரன் ஒரு பத்து நிமிஷம் தூக்கம் போடலாம் என்று மெழுகு சீலைத் தலகாணியைத் தேட, வசந்தி உள்ளே இருந்து சத்தம் போட்டாள் –
இப்போ தூங்கினா ரெண்டுங் கெட்டானா ராத்திரி ஏழு மணிக்குத்தான் எழுந்திருப்பீங்க. அப்புறம் ராத்திரி முழுக்க
அவள் பாதியிலே விட்டதும் அதற்கு மேலும் அர்த்தமாக, தான் பிரசவம் கழிந்துப் பத்தே நாள் ஆன மனைவியை சரீர ரீதியாகச் சுகம் கொடுக்க கஷ்டப்படுத்துகிறவன் இல்லை என்பதை எப்படியாவது அவளுக்குச் சொல்லத் துடித்தான். மேல் மாடி பஞ்சாபிப் பெண்கள் போனால் அதைச் சொல்லலாம்.
சாயந்திரம் வரைக்கும் பொழுது உருப்படியாகப் போக பகவதியின் டயரியைப் படிக்கலாம் என்று முடிவு செய்து உள்ளே இருந்து அந்தப் பழைய ஹோ அண்ட் கோ வெளியிட்ட கருப்பு தோல் போர்த்திய டயரியை எடுத்து வந்தான். வசந்தியின் உறவுக் காரர்களும் மேல் மாடி பஞ்சாபிப் பெண்களும் குங்குமம் வாங்கிக் கொண்டு போக, அமைதியாகக் கிடந்த வீடு.
கதவை அடைத்து விட்டு வந்து படிக்க உட்கார்ந்தான் சின்னச் சங்கரன்.
January 30, 2024
மயிலாடும் போது அன்னபூரணி என விளித்து சோறு கேட்டு வந்த பைராகி
அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே இவை நான்கும் சேர்ந்து அரசூர் நாவல் தொகுதியாக கிட்டத்தட்ட 2000 பக்கங்களில் விரியும் கதை. அபூர்வமான தமிழ்ப் புத்திலக்கியத் தொகுதி இது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு.
வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து அடுத்த சிறுபகுதி.
சத்சங்கும் அகண்ட நாம பஜனையும் தில்லி முழுக்கக் கொடி கட்டிப் பறக்கிறது. தெற்கத்தி மனுஷர்கள், வடக்கர்கள், மீன் வாசனையோடு கிழக்கில் இருந்து வந்த முக்கோபாத்தியாயா, சட்டோபாத்தியாயா வகையறாக்கள், இன்னும் மேற்கில் இருந்து நாசுக்காக வந்து சேர்ந்த காசு கனத்த தேஷ்பாண்டே, அப்யங்கர், கினி, தந்த்வாடேக்கள் என்று எல்லோரும் பங்கு பெறும் ஆராதனை இது.
வீடு வீடாக ராத்திரியில் ராமர் பட்டாபிஷேகப் படத்துக்கு ஜவந்திப்பூ மாலை போட்டு இருத்தி, விளக்கேற்றி வைத்து, ராம் ஏக் ராம் தோ ராம் தீன் என்று ஒவ்வொரு ராம் சொல்லும்போதும் கணக்கை ஏற்றி பதினாயிரம் ராம் வந்ததும் நீர்க்கப் பானகம் கரைத்துக் கொண்டாடுகிற ஆராதனைகள் அமர்க்களமாக அரங்கேறுகின்றன.
கோல்ஃப் லிங்க்ஸிலும், லோதி காலனியிலும் வீடு தவறாமல் இது நடக்க, தெருக் கோடியில் பிளாட்பாரத்தில் சட்டமாக உட்கார்ந்து, கட்டிடத் தொழிலுக்காக வந்த பீகாரிகளும் உத்தரப் பிரதேச பையாக்களும் இதே படிக்கு ராத்திரி தோறும் ராம் ஏக் ராம் தோ கணக்கோடு சாமான்ய ராம பஜனை செய்கிறார்கள். அது காடாவிளக்கு பஜனை என்பது தவிர வித்தியாசமில்லை.
பஜனையா? நான் வர முடியாதே. கேரளா போறேன்.
சின்னச் சங்கரன் குறைப்பட்டதாகத் தொனித்துச் சொல்ல பிடார் ஜெயம்மா அவனை ஒரு கைத் தள்ளலில் ஒதுக்கினாள்.
இவன் ஒருத்தன். என்னடி சுப்பின்னா எட்டு மணிக்கு தயார்னு இங்கே வேறே எதுவும் குப்பை பொறுக்க இல்லாட்ட கேரளத்துக்கு ஓட வேண்டியது. வசந்தி, இவனை கொஞ்சம் நோட் பண்ணி வை. அங்கே டட்டடாண் பின் அப் பொண்ணுகள், கறுப்பும் செகப்புமா நிறைய ஓமனக்குட்டிகள் உண்டு. உனக்குத் தான் தெரியுமே. எப்படித்தான் தலைமுடி தரை வரைக்கும் வருமோ, ரதிகள்.
வசந்தி உள்ள படிக்கே பயந்து போனாள். எதுக்கு இப்போ கேரளாவும் மண்ணாங்கட்டியும். வீட்டோட இருக்கணும் என்று கல்சுரல் மினிஸ்டிரி அண்டர் செக்ரட்டரியை மிரட்ட அவன் பூனையாகிக் கூழைக் கும்பிடு போட்டு குப்தாவை ஆதரவுக்காகப் பார்த்தான்.
அந்தப் பேர்வழியோ வழிச்சு வார்த்த வடையையும் விடாமல் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு வசந்தியிடம் சொன்னது – பெஹன் ஜீ, இவன் செய்யக் கூடியவன் தான். ஜெயம்மாவும் நானும் இங்கே வேலி தப்பாம பார்த்துப்போம். கேரளுக்கு யார் இவன் கூடக் கழுதை மேய்க்கப் போறது?
அடே, தர்ப்பையை வறுத்து நாக்குலே போட்டுப் பொசுக்க. அது கேரள் இல்லே. கேரளம். இப்படித் தப்புத் தப்பா எழுதியே பெரிய பத்திரிகைக்காரன் ஆயிட்டே.
ஜெயம்மா செல்லமாகக் குப்தாவின் கையை எடுத்து வைத்துக் கொண்டு சொல்லி பாவம்டா சங்கரன், விட்டுடுவோம் அவனை என்றாள்.
கேரளத்துலே என்ன தலை போகிற வேலை? குப்தா விசாரித்தான். அதானே என்றாள் வசந்தி சந்தேகம் குறையாமல்.
எங்க மினிஸ்டர் அங்கே கான்பரன்ஸ் தொடங்கி வைக்கிறார். நாம் போனோமே அம்பலப் புழை. அங்கே தான். நாட்டுப்புறக் கலைகள் விழா.
நைச்சியமாக வசந்தியைப் பார்த்துக் கொண்டு சொல்ல உள்ளே குழந்தை அழும் சத்தம். ஃபீடிங் டைம் என்று வசந்தி உள்ளே போனாள்.
இவனுக்கும் வேல இல்லே இவனோட மினிஸ்டர் அந்தத் தீவட்டித் தடியனுக்கும் தான்.
ஜெயம்மா சொல்லி விட்டுச் சிரித்தாள்.
ஒரு தடவை அந்தப் பீடைக்கு கேரளா வாசனை காட்டிட்டி வந்தாச்சு. மாசா மாசம் ஏதாவது சாக்கை வச்சுண்டு டூர் அடிக்கறான். ஒட்டடைக் குச்சிக்கு கையும் காலும் மொளச்ச மாதிரி இருந்துண்டு ஆகிருதியான மலையாள ஸ்திரியைத் தேடி எச்சல் வடிச்சபடி போனா, அவ ராபணான்னு இடுப்பிலே தூக்கிண்டு போய் சமுத்திரத்திலே வீசி எறிஞ்சிடுவா, போடா போய்க்கோன்னு.
பயமுறுத்தும் குரலில் சொன்னாள் ஜெயம்மா. சரிதான் என்றபடி குப்தா வாசலுக்கு நடந்தான்.
வாசலில் யாரோ கூப்பிடுகிற சத்தம். கோசாயி உடுப்பும் முகத்தில் மண்டிய தாடியுமாக ஒர் பைராகி. அப்படித்தான் தெரிந்தது சின்னச் சங்கரனுக்கு. பகவதிப் பாட்டி அரசூரில் சந்தித்த பைராகிகளின் மூணாம் தலைமுறையாக இருக்கும். சாமியாருக்கு ஏது தலைமுறை? அவனுக்குச் சிரிப்பு வந்தது.
வசந்தியின் அப்பா வாசலுக்குப் போய்ப் பார்த்து விட்டுத் தன் இந்தியைப் பரிசோதிக்க வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் பைராகியிடம் கேட்டார் –
விசேஷம் நடக்கற வீடுன்னு கண்டுபிடிச்சு சாப்பாட்டைக் கொண்டான்னு வந்திருக்கியே? எல்லாம் தீர்ந்து போச்சு. போய்க்கோ.
பைராகி முறைத்ததில் சப்தநாடியும் ஒடுங்கிப் போனார் அவர். சங்கரன் வெளியே வர, பைராகி முறையிட்டான் –
உங்க வீட்டுலே தான் பிக்ஷை ஏத்துக்கச் சொல்லி உத்தரவு. போடறதுன்னா போடு. இல்லேன்னா ஜலமும் வாயுவும் எதேஷ்டமா இருக்கு. போறேன்.
அதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் இரு.
பிடார் ஜெயம்மா பைராகியை நிற்கச் சொல்லி விட்டு சமையல் அறைக்கு வந்தாள். சாதம், உருளை ரோஸ்ட், பரங்கிக் காய்ப் பால் கூட்டு, திரட்டுப் பால், தேங்காய் அரைத்து விட்ட பூஷணிக்காய் சாம்பார், எரிசேரி, அவியல், எலுமிச்சை ரசம், கட்டித் தயிர் என்று கிண்ணம் கிண்ணமாக ஒரு பெரிய தட்டில் எடுத்துப் போய் பைராகியிடம் நீட்டி, அங்கே உக்காந்து சாப்பிட்டுப் போ என்றாள் கருணையோடு.
அன்னபூரணி என்று ஓங்கி விளித்து அவளை பைராகி கும்பிட்டு வாசலில் ஓரமாகக் குந்தி இருந்து சாப்பிடும்போது, தோட்டத்தில் சத்தம்.
சங்கரன் திரும்பிப் பார்க்க மயில் மறுபடி பறந்து வந்து சேர்ந்திருந்தது. பைராகி சங்கரனைப் பார்த்துச் சிரித்தான்.

January 29, 2024
சோழ பிரஹ்மஹத்தி, மதறாஸி சாம்பார் குடிக்கறதுக்கே வந்து சேர்ந்தியே
அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது வாழ்ந்து போதீரே நூலில் இருந்து
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு
வேறே என்ன விசேஷம் உங்க ஊர்லே என்று இலைக்கு முன்னால் கொஞ்சம் சிரமத்தோடு இருந்து தயிர் சாதத்தை ரசித்துக் கொண்டிருந்த ஜெயம்மாவும் கேட்டாள்.
அங்கே இப்போ மனுஷர்கள் எல்லாம் விதி முடிஞ்சு சாகறது திரும்ப நடக்கறது ஆனா, மிருகங்கள் ஆயுசு நீண்டு போயிருக்காம். சீரியஸா ஒரு தோஸ்த், தியாகராஜன்னு பேரு, எனக்கு போஸ்ட் கார்ட் போட்டிருக்கான். அங்கே சீனியர்மோஸ்ட் சாஸ்திரிகளாக்கும்.
உங்க ஊர்லே எல்லோருக்கும் தரைக்கு அரை அடி மேலே கோழி, கரப்பான் பூச்சி மாதிரி பறக்கற வழக்கம் உண்டோ?
குப்தா சிரிக்காமல் கேட்க, ஜெயம்மாவுக்குப் புரை ஏறி விட்டது.
அரசூர்லே பறக்காட்ட என்ன, அம்பலப்புழையிலே உண்டே. எங்க சிநேகா மன்னி அப்பா ஆலப்பாட்டு வயசர். கோயில் கொடி மரத்தை நனைச்சுண்டு திந்தோம்னு பறந்தாரே. அதை இந்த மனுஷருக்கு யாராவது சொல்லணும் என்றாள் யாருக்கும் கேட்காத குரலில், பகவதி.
உள்ளே குட்டி பகவதி அசந்து தொட்டிலில் உறங்க குஞ்ஞம்மிணி சீராக ஆட்டிக் கொண்டிருந்தாள்.
காத்துலே என்ன அழகா தொட்டில் ஆடறது பாருங்கோ.
வசந்தியின் தம்பி வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்ள வந்த மேல் ப்ளாட் பஞ்சாபிப் பேரிளம் பெண்ணை வெறித்தபடி சங்கரனிடம் சொன்னான். நல்ல வேளையாக அவள் இடுப்பு சற்றும் தெரியாத படிக்கு சூடிதாரில் வந்திருந்தாள்.
வம்பும் வாய்க்கு ருசியான சாப்பாடுமாகக் கடந்து போன பகல் அது.
அடுத்த வாரம் குப்தா வீட்டுலே சத்சங்க் ஆரம்பம்.
ஜெயம்மா பேசப் புதிதாக விஷயம் கிடைத்த சந்தோஷத்தில் அறிவித்தாள்.
ஒரு மாசம் நடக்குமே? ராத்திரி பன்ரெண்டு மணி போல ஆகிடும். டோலக்கும் கஞ்சிராவுமா அத்தனை பேர் சேந்து ராம நாமம் சொல்றது குளிருக்கும் மனசுக்கும் இதமா இருக்கும்.
வசந்தி சொன்னாள். சங்கரனும் அவளும் போன வருஷம் தினசரி கலந்து கொண்டு விட்டு ஸ்கூட்டரில் பத்திரமாக வந்து சேர்ந்து இஞ்சி தட்டிப் போட்ட சாயா குடித்துத் தான் உறங்கப் போகிற நியமம். இந்த வருஷம் குட்டி பகவதி பிறந்து அதையெல்லாம் ரத்து செய்து விட்டாள்.
ஆமா, வாய் உலர கத்திக் கத்திப் பாடினா, நீர்க்கக் கரைச்சு வச்சு பானகம் கொடுப்பான். பிரசாதம்னு தொன்னை தொன்னையா கொண்டக்கடலை சுண்டலை கொடுத்து அனுப்பிடுவான் கழுதை விட்டை கை நிறையன்னு.
ஜெயம்மாவுக்குப் பிடிக்கும் தான் அந்த அகண்டநாம பஜனையும் கூட்டாக இருந்து பாடுவதும், சுடச்சுட ரொட்டியும் ஆலு சப்ஜியும் சாப்பிடுவதும். இருந்தாலும் குப்தாவை எதற்காவது கிண்டல் செய்ய வேண்டும்.
அவசரமான மொழிபெயர்ப்பையும் குப்தாவுக்கு அவளே செய்தாள். லட்சம் பிரதி வட மாநிலங்களில் தினம் விற்று ஊர் உலக நிலவரம் அறிவிக்கும் தினசரிப் பத்திரிகையின் ஆசிரியரான அவன் கொஞ்சமும் கோபமோ சங்கடமோ இல்லாமல் ஜெயம்மாவின் கிண்டலை சகஜமாக ஏற்றுக் கொண்டது மட்டுமில்லை, ரசித்துச் சிரிக்கவும் செய்தான். குப்தா சொன்னது-
பகவான் பிரசாதத்தை கழுதை விட்டைன்னு சொன்னா அடுத்த ஜன்மத்திலே ஜெயா தீதீ கர்த்தபமாத்தான் பிறக்க வேண்டி வரும். ரொம்ப ஒண்ணும் பெரிசா வித்தியாசம் இருக்காது தான்.
அட சோழ பிரம்மஹத்தி. சாம்பார் குடிக்கறதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கியே.
ஜெயம்மா அவனை அவனுடைய பத்திரிகையை மடக்கிக் கொண்டு முதுகில் அடித்து, இன்னும் கொஞ்சம் சாம்பாரும் ஓரம் கருகிய ரெண்டு வடையும் சுவாதீனமாகச் சமையல் கட்டில் போய் எடுத்து வந்து அவனுக்குக் படைத்தாள்.
January 27, 2024
அந்த ஊரில் யாரும் நடப்பதே இல்லை
அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல் = வாழ்ந்து போதீரே. அதில் அத்தியாயம் 6இல் இருந்து
வசந்தியின் அப்பா சுந்தர வாத்தியார் பேசிய வினோத இந்தி புரியாமல் காப்பரசி மகத்துவமறியாது அதையும் தொட்டிலில் விட உத்தேசித்த அண்டை அயல் குழந்தைகளுக்காக ஜெயம்மா ஒரு பாக்கெட்டை பிரித்து ரெண்டு பிடியாக உள்ளே இருந்து எடுத்துச் சாப்பிட்டு, அதன் சேர்மானம் சொல்லி அதுகளையும் சாப்பிடவும், இலை போட்டபின் பந்திக்கு உட்காரவும் வைத்தாள்.
பந்தியில் பாயசம் பரிமாறிக் கொண்டிருந்தபோது கார் வந்து நிற்கும் சத்தம். சங்கரன் எட்டிப் பார்த்தான். ஏகமாக அம்பாசடரும், அடுத்த படியாக பியட் காரும் நிறைந்த தில்லியில் விசேஷமான இந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் கார் கொஞ்சம் தான் உண்டு. சங்கரனின் சிநேகிதனும் ஜாக்ரன் பத்திரிகை ஆசிரியருமான சந்தோஷிலால் குப்தா அதில் ஒருத்தன்
குப்தாக் கடன்காரனையும் வரச் சொல்லிக் கூப்பிட்டியா, பேஷ்.
வடையைக் கடித்துக் கொண்டே ஜெயம்மா சிலாகிக்க, ஞாயிற்றுக்கிழமை பகல் கானாவுக்கு அப்புறம் எப்பவாவது இப்படி குப்தா வருவது வாடிக்கை தான் என்றான் சங்கரன்.
சாப்பிட்டியாடா பிரம்மஹத்தி?
ஜெயம்மா குறையாத அன்போடு குப்தாவை விசாரிக்க, கழிச்சு கழிஞ்சு என்று விசித்திரமாக மூக்கை சுருக்கிக் கொண்டு பதில் சொன்னான் குப்தா.
அட பீடை, அது மலையாளம். எனக்கு அர்த்தமாகாது. நீ இந்தியிலேயே பேசு என்றபடி பரிமாறுகிற பெண்ணிடம் ஒரு இலை நறுக்கில் ரெண்டு வடையும் பால் திரட்டுப் பால் ஒரு குத்தும் வைத்து குப்தா உட்கார்ந்த அப்புறம் கொடுக்கச் சொன்னாள் ஜெயம்மா.
பாயசமும் கொண்டு போய் வை, தாராளமா குடிச்சுட்டு கழிஞ்சுண்டு கிடக்கட்டும்.
பந்திக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஹால் ஓரமாகக் குரிச்சி போட்டு குப்தாவை உட்கார வைத்தான் சங்கரனின் மைத்துனன்.
சாம்பார் குடிக்கறானான்னு கேளு முதல்லே. அப்புறம் வடையும் திரட்டுப்பாலும் தின்னுட்டு பாயசம் குடிக்கட்டும்.
ஜெயம்மா கேட்டதுக்காகக் காத்திருந்த மாதிரி எல்லாத்துக்கும் சரி என்றான் குப்தா.
ஒரு பெரிய கும்பா நிறைய முருங்கைக்காய் சாம்பாரும் வெள்ளிக் கிண்ணம், ஸ்டெயின்லெஸ் தட்டில் மற்றதும் ஸ்டூல் போட்டு வைக்கப்பட குப்தா ஆசையாக வடையைக் கடித்து அரசூர் நியூஸ் சொல்லு என்றான் சங்கரனிடம்.
எச்சக் கையோடு என்னத்தைச் சொல்ல?
சங்கரன் கை அலம்பி விட்டு ஒரு வெற்றிலையை சர்க்கரை உள்ளே வைத்துப் போட்டுக் கொண்டு, குப்தா எதிரே, கதை சொல்கிற சுவாரசியத்தோடு வந்து உட்கார்ந்தான். அப்படியான மதராஸி பானும் வேண்டுமென்ற குப்தாவின் கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டது.
தினசரி ஒரு நாள் விடாமல் ராமாயணம் பிரசங்கம் செஞ்சு முப்பது வருஷத்துலே முடிக்க திட்டம் போட்டிருந்த பஞ்சாபகேச சாஸ்திரிகள்கற பண்டிதர் அரசூர்லே இருந்தார். ராமர் காட்டுக்குப் போகும் முன்பா ஒவ்வொருத்தராச் சொல்லிண்டு போற இடத்திலே ரொம்ப நாள் சிக்கி பரலோகம் போயிட்டார். இப்போ தினம் அவர் கதை சொல்ற நேரத்திலே ஒரு குடத்திலே தண்ணியைக் கொண்டு வந்து சபையிலே நடுவிலே வச்சுட்டா அதிலே ஆவாஹனமாகி கதையைத் தொடரறாராம். என்ன, குரல் கொஞ்சம் சன்னமா இருக்கு, அதோடு தண்ணியிலே வர்றதாலே அடிக்கடி தொண்டை கட்டிப் போயிடறதாம்.
இதை அடுத்த ஞாயிறு சப்ளிமெண்டுக்கு ஊர் பேர் போடாம கதையா எழுதிட சொல்றேன். ரெண்டு வடையை மிதக்க விட்டு இன்னும் கொஞ்சம் சாம்பார் கொடு.
குப்தா வாயும் காதுமே உடம்பாக இருந்து மீதிக் கதை கேட்க ஆயத்தமானான்.
January 26, 2024
ஆறடியை மூன்றடியாக வாமனக் குறுக்கம் செய்து நின்ற நட்பும் காப்பரிசியும்
அரசூர் நாவல் வரிசையில் நான்காவது வாழ்ந்து போதீரே. அதிலிருந்து
குழந்தை அழுகை நின்று போன வீட்டில் மந்திரங்களின் ஒலி மட்டும் இருந்தது
அண்டர் செக்ரட்டரி சார் மந்திரம் சொல்லலாமோன்னோ.
சங்கரன் ஹோம அக்னியில் பார்த்த மூன்று பெண்டுகளையும் காலையில் உறக்கமா விழிப்பா என்று விளங்காமல் கிடந்த நேரத்தில் பார்த்த நினைவு வந்தது. ஒன்று பகவதிப் பாட்டி, மற்ற இருவர்?
அவாள்ளாம் யாரு?
சங்கரன் சாஸ்திரிகளிடம் கேட்க, யாரெல்லாம் என்று எதிர்க் கேள்வி கேட்டார் அவர்.
அதற்கெல்லாம் நேரமே கொடுக்காமல் உள்ளே இருந்து மாவிலை, ஜிகினாக் காகிதம், பட்டு ரிப்பன் என்று அலங்காரம் செய்த ஆகி வந்த மகா பழைய தொட்டிலும் வசந்தி அம்மா ஜாக்கிரதையாகத் தலைக்குப் பின்னால் அணைத்துப் பிடித்த குழந்தையும் வந்தானது. அந்தத் தொட்டில் ஜெயம்மா வீட்டில் மூணு தலைமுறையாக வம்சம் வளர்ப்பது.
கொழந்தையை தோப்பனார் மடியிலே வச்சுக்க வேண்டியது.
சாஸ்திரிகள் அறிவிக்க, ஜெயம்மா கவுண்டர் போட்டாள்.
இவன் மடியிலேயா? வசந்தியைப் போட்டுண்டாலே ஒழுங்காப் பிடிச்சுக்கத் தெரியாது. இன்னும் தலை நிக்காத குழந்தை அவனோட சிசு. இருங்கோ. பின்னாலே நின்னு நான் பிடிச்சுக்கறேன்.
ஆறடியை நாலடியாக வாமனக் குறுக்கம் செய்து பின்னால் இருந்து குழந்தையை ஏந்தியபடி ஜெயம்மா நிற்க, சங்கரனுக்கு மனசு நிறைந்து போனது.
சிநேகிதம்னா இப்படி இருக்கணும் என்றாள் குஞ்ஞம்மிணியின் கண்ணீரைத் துடைத்தபடி பகவதி. இந்தக் காலத்திலும் இப்படி ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையாக இருக்கப்பட்ட சிநேகிதத்தை விசாலம் கை அசைத்து ஆசீர்வதித்தாள்.
அக்னியிலே யாரோ ஒரு மாமி ஆசிர்வாதம் பண்ற மாதிரி இருக்கு
வசந்தி சொல்ல, சாஸ்திரிகள் எல்லாம் புரிந்த திருப்திச் சிரிப்பு சிரித்தார்.
ரொம்ப நல்லது அண்டர் செக்ரட்டரி மாமி. இதை நான் நாலு ஆத்திலே சொன்னா, எனக்கும் வைதீகம் விருத்தியாகும்.
அந்தக் கதம்ப பாஷையையும் அதன் உள்ளுறை பொருளையும் ஜெயம்மா தவிர வேறு யாரும் புரிந்து கொண்டு சிலாகித்ததாகத் தெரியவில்லை. என்றாலும், ஜெயம்மாவின் அங்கீகாரத்தை ஏற்று வாங்கி, ஏமாற்றத்தை ஒதுக்கிவைத்தார் சீனியர் சாஸ்திரிகள்.
தொட்டில் போட்டு சீதா கல்யாண வைபோகமே பாடுவதையும் ஜெயம்மாவே எடுத்துக்கொண்டாள். வசந்தி வீட்டுக்காரர்களில் பாடத் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. அவளுடைய அப்பா ஒரு வினாடி கூட யோசிக்கவில்லை.
கொழந்தே, நீ வசந்திக்கு உடன் பொறக்காத அக்கா. முகத்திலே ஜாடை கூட ஒரே மாதிரி இருக்கு, நீயே பாடு.
ரெண்டு குடும்பத்துக்கும் தீராத களங்கமாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக நல்வாக்கு சொன்னார் அவர். நற்சொல் என்பதால் அதற்குள் ரொம்ப ஆழமாக இறங்காமல் மேலோட்டமாகக் கால் நனைத்து அனுபவிக்க மட்டுமாக எல்லோரும் அதை எடுத்துக் கொண்டார்கள்.
தொட்டில் போட்டபோது பக்கத்தில், எதிரில் இருக்கும் சர்தார், வங்காளிக் குடும்பக் குழந்தைகள் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு குழந்தையை விட்ட தொட்டிலை மெல்ல ஆட்டி வசந்தி அம்மா சின்னச் சின்னதாக இந்துஸ்தான் டைம்ஸ் நியூஸ்பேப்பரில் கட்டி வைத்த காப்பரிசி வாங்கிக் கொண்டார்கள்.
காப்பரிசி. தொட்டில் போட்டா இதான் ஸ்வீட் என்றாள் வசந்தியின் அம்மா.
காப்பர் சி-யா? மேல் மாடிக் குடித்தன வங்காளிப் பெண் கேட்டாள்.
காப்பர்-டி வச்சுண்டா காப்பர்-சி வராது.
சங்கரன் மெதுவாக வசந்தியிடம் சொல்ல அவள் முறைத்தாள். வசந்தியின் தம்பி, ஜ்யோத்ஸ்னா நினைப்பில் இடுப்பு இடுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்ததை சங்கரன் தவிர வேறு யாரும் கவனிக்கவில்லை.
காப்பரிசியை அப்படியே சாப்பிட்டுட வேண்டியதுதான். அரிசி, வெல்லம், தேங்காய்க் கீத்து, வெள்ளை எள்ளு எல்லாம் போட்டது. நடுவிலேயே இருபது பைசாக் காசு வச்சிருக்கும். அதை முழுங்காம எடுத்துண்டு போய் அம்மா அப்பா கிட்டே கொடுங்கோ.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

