இரா. முருகன்'s Blog, page 26
November 8, 2023
வந்த பைசாசங்களும் இருந்த பைசாசங்களும்
என் நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து
மசகு போல் அடர்த்தியான களிம்பு ஏதோ அடையடையாக அப்பிய கிழிந்த பிடவை உடுத்திய இரண்டும் அந்தச் சேலையையே மேலே தலைப்பு உயர்த்தி மார்பை மூடியிருந்தன. அவை பெருத்த முலைகள் என்று கர்ப்பூரத்துக்குத் தோன்றியது.
கழுதைக்குப் பேர் கர்ப்பூரமா, எழுந்திருடா என்று அவன் தலைக்கு வெகு அருகே தலை குனிந்து ஒன்று கிரீச்சிட குமட்டி வாந்தி எடுத்தபடி கிடந்தான் அவன்.
மிகுந்த சிரமத்துடன் கண் திறந்து பார்க்க, தலையில் மயிர் இல்லாமல் முண்டனம் செய்ததாக இரு பைசாசங்களும் தோன்றின. கபாலத்தில் திட்டுத் திட்டாக ஏதோ ஒட்டி அதன் போக்கில் இன்னொரு துர்வாடையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.
கர்ப்பூரம் எழுந்திருடா என்ன தூக்கம் வேண்டியிருக்கு என்று மறுபடி இரண்டு அலாதியான ரூபங்களும் அவன் படுக்கைக்கு அரை அடி மேலே சுற்றிப் பறந்தன.
என்னை நினவு இருக்காடா? முடைநாற்றம் கையிடுக்கிலிருந்தும் கொங்கைகளிலிருந்தும் கசிய கர்ப்பூரனை மிக நெருங்கிப் பறந்த பைசாசம் நாலு வரிசைப் பல்லும் வெளியே தெரியச் சிரித்தது.
இன்னொரு முறை கர்ப்பூரனுக்கு வயிறு எக்களித்து வாயில் வந்தது. சுற்றிவர வாந்தி சால் கட்டி நிற்க நடுவே மல்லாந்து படுத்திருந்தான்.
என்னை விட நீதாண்டா நாறிப் பிடுங்கறே என்று சிரித்தபடி அறை உத்தரத்தில் முதுகால் தட்டிவிட்டு அப்படியே கீழே வந்து கர்ப்பூரனை அணைத்துக் கொண்டு அவன் வாயில் முத்தமிட்டது அந்தப் பைசாசம். அந்த அண்மையும் ஸ்பரிசமும் வாடையும் அவனுக்கு ஏனோ வேண்டியிருந்தன.
அவனுக்கு இதெல்லாம் பழக்கமானதாகத் தெரிந்தது. யார், பூரணாவா? அவன் நம்ப முடியாமல் கேட்டான். இரண்டு பிசாசுகளும் அவனுக்கு நேர்மேலே மிதந்தபடி ஊவென்று ஒலி எழுப்பின.
ஆமாடா, நான் பூரணா அவள் யாருன்னு உனக்குத் தெரியுமே என்று கேட்ட பிசாசு பூரணா என்று நம்ப மனம் மறுத்தது, ஆனால் அந்த வியர்வை வாடையும், உடல் வாடையும் அவள் தான் என்றன.
பக்கத்தில் வந்து வாயில் காட்டிய நான்கு ஒழுங்கில்லாத வரிசைப் பற்கள் மஞ்சள் பற்காரை கெட்டித்து பார்க்கக் கொடூரமாக இருந்தது. அந்த களிம்பு துடைத்த புடைவைக்குள் முழுப் பெண் உடல் இருக்குமா என்று அவனுக்கு ஒரு வினாடி சந்தேகம்.
ஏன், இருந்தால் இப்படியே கலவி செய்வாயா? அந்தப் பிசாசு கூட வந்தது கோபத்தோடு சொன்னது.
கர்ப்பூரன் கபி கபி கபிதாவா என்று நம்ப முடியாமல் கேட்டான். வாய் கோணி மேலே செருக தொண்டையில் ஏதோ அடைத்த மாதிரி பேசவிடாமல் தடுத்தது.
ஆமா கபிதா தான் அதுக்கு இப்போ என்ன பண்ணனும்கறே. அந்தப் பைசாசம் உச்சத்தில் சிரித்தபடி அறைச் சுவரில் முட்டிக்கொள்ளாமல் பறந்தது.
எப்படி எப்படி நீங்க ரெண்டு பேரும் எப்படி திரும்ப. அவன் மிகுந்த சிரமப்பட்டுக் கேள்வியை முடிக்காமல் அந்தரத்தில் விட, இரண்டு பைசாசங்களில் ஒன்று எப்படி மறுபடியும் உயிரோடு இருக்க முடியும்னு கேட்கறியா? அதெல்லாம் உனக்கு எதுக்கு சொல்லணும்?
கதவு காற்றில் திறந்து சத்தத்தோடு மூடிக் கொண்டது. இன்னும் இரண்டு பெண் பைசாசங்கள் உள்ளே பறந்து வந்திருந்தன.
சாரி, நாங்க இங்கே நீண்டநாள் தங்கின பிசாசுகள். நீங்க – உள்ளே வந்தவை இருந்த இரண்டைக் கேட்டன.

November 6, 2023
கர்ப்பூரனைச் சந்திக்க வந்த இரண்டு பைசாசங்கள்
திண்ணை டாட் காம் இணையத் தளத்தில் நாவல் தினை அல்லது சஞ்சீவனியிலிருந்து
கர்ப்பூரம் நடுராத்திரிக்கு இரண்டு பிசாசுகளைக் கண்டான். அவன் படுக்கையில் அவன் தலைமாட்டில் ஒன்றும் கால்மாட்டில் இன்னொன்றுமாக துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தன அவை.
அவற்றின் கண்கள் குழிந்திருந்தன. பாதி திறந்த இமைகளில் பீழை கனமாக ஒட்டியிருந்தது. வாய் தான் முழு துர்நாற்றத்துக்கும் காரணம் என்று தெரிய வாய் திறந்து வாச்சி வாச்சியாக நான்கு வரிசை மஞ்சள் பல் காட்டி ஏன்யா என்று ஒரு பிசாசு சத்தம் தாழ்த்தி அழைத்தது.
கர்ப்பூரம் பின்னால் இருக்கிற யாரையோ கூப்பிடுகிறது என்று நினைத்து பின்னால் திரும்பிப் பார்த்தான். உன்னைத் தான்யா என்று கூட வந்த பிசாசு வாயைத் திறந்து இன்னொரு மாதிரி துர்வாடை கிளப்பிக் கொண்டு சத்தம் போட்டது.
மசகு போல் அடர்த்தியான களிம்பு ஏதோ அடையடையாக அப்பிய கிழிந்த பிடவை உடுத்திய இரண்டும் அந்தச் சேலையையே மேலே தலைப்பு உயர்த்தி மார்பை மூடியிருந்தன. அவை பெருத்த முலைகள் என்று கர்ப்பூரத்துக்குத் தோன்றியது.
கழுதைக்குப் பேர் கர்ப்பூரமா, எழுந்திருடா என்று அவன் தலைக்கு வெகு அருகே தலை குனிந்து ஒன்று கிரீச்சிட குமட்டி வாந்தி எடுத்தபடி கிடந்தான் அவன்.
மிகுந்த சிரமத்துடன் கண் திறந்து பார்க்க, தலையில் மயிர் இல்லாமல் முண்டனம் செய்ததாக இரு பைசாசங்களும் தோன்றின. கபாலத்தில் திட்டுத் திட்டாக ஏதோ ஒட்டி அதன் போக்கில் இன்னொரு துர்வாடையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.
கர்ப்பூரம் எழுந்திருடா என்ன தூக்கம் வேண்டியிருக்கு என்று மறுபடி இரண்டு அலாதியான ரூபங்களும் அவன் படுக்கைக்கு அரை அடி மேலே சுற்றிப் பறந்தன.
என்னை நினவு இருக்காடா? முடைநாற்றம் கையிடுக்கிலிருந்தும் கொங்கைகளிலிருந்தும் கசிய கர்ப்பூரனை மிக நெருங்கிப் பறந்த பைசாசம் நாலு வரிசைப் பல்லும் வெளியே தெரியச் சிரித்தது.
இன்னொரு முறை கர்ப்பூரனுக்கு வயிறு எக்களித்து வாயில் வந்தது. சுற்றிவர வாந்தி சால் கட்டி நிற்க நடுவே மல்லாந்து படுத்திருந்தான்.
என்னை விட நீதாண்டா நாறிப் பிடுங்கறே என்று சிரித்தபடி அறை உத்தரத்தில் முதுகால் தட்டிவிட்டு அப்படியே கீழே வந்து கர்ப்பூரனை அணைத்துக் கொண்டு அவன் வாயில் முத்தமிட்டது அந்தப் பைசாசம். அந்த அண்மையும் ஸ்பரிசமும் வாடையும் அவனுக்கு ஏனோ வேண்டியிருந்தன.
அவனுக்கு இதெல்லாம் பழக்கமானதாகத் தெரிந்தது. யார், பூரணாவா? அவன் நம்ப முடியாமல் கேட்டான். இரண்டு பிசாசுகளும் அவனுக்கு நேர்மேலே மிதந்தபடி ஊவென்று ஒலி எழுப்பின.
November 4, 2023
இசையோடு அரசாளும் நேரம்
மிளகு பெருநாவல் அத்தியாயம் 56-இல் இருந்து
உளிகள் விடிந்ததிலிருந்து ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன.
தனி உளி எழுப்புவது ஒலி இல்லை. பூவில் தேன் அருந்தப் போய் அமரும் தேனியின் மெல்லிய இறகுச் சிலிர்ப்பு போன்றது அது.
பத்து உளிகள் சேர்ந்தால் எழும் ஓசை, காதலனொருவன் அன்புக் காதலிக்கு அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாகக் கன்னத்தில் தரும் முத்தத்தின் சத்தம் போன்றது.
சென்னா செவிமடுத்தது, கடல் அலை தனக்குள் பாடியபடி கரைக்கு வந்து, திரும்பப் போய், மறுபடியும் வந்து, திரும்ப போய், சலிக்காமல் அந்த ஒரே பாட்டைப் பாடுவது போன்ற இரைச்சல். நூறு இருநூறு சிற்பிகள் சிற்பம் செதுக்கும் கூட்டு ஒலி.
பட்கல்லிலும், கோகர்ணத்திலும், கெருஸோப்பாவிலும், ஹொன்னாவரிலும். உள்ளாலிலும், உடுப்பியிலும், மால்பேயிலும், கார்வாரிலும், புட்டிகேயிலும் அச்சு அசலாக ஒரே மூலத்தின் பன்முகத்தன்மையிலமைந்த சதுர்முக பஸதிகள் ஒரே நேரத்தில் எழுந்து வருகின்றன.
இவற்றில் சில சென்னபைரதேவியின் அரசாட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் அமைவதில்லை. அந்தந்த குறுநிலங்களின் மன்னர்கள், சென்னா பஸதி கட்டுவதை பார்த்து, நல்ல பெயர் வாங்க அவர்களும் கட்டத் தொடங்கினார்கள்.
கருங்கல் பாளங்களை எடுத்துக் கிடைமட்டமாக நிறுத்திக் கூரையாக்கி, கருங்கல்லைத் தரையாக்கி, கருங்கல்லைச் சுவராக்கி, ஒவ்வொரு பஸதியும் மற்றொன்றிலிருந்து வேறுபடுத்த இயலாதபடி கல்லில் செதுக்கிய ஒற்றைக் கவிதையின் பிரதிகள் போல இருக்கும்.
பஸதிகளின் சுவர்களிலும் கூரையிலும் சின்னச் சின்னதாகப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்படும். இந்துஸ்தானம் முழுவதிலும் இருந்து வந்த சிற்பிகள் காட்சி வைக்கும் விரல் திறமையும், உளிகொண்டு செதுக்கும் சிற்ப மேன்மையும் அதிசயமானது.
சென்னா பஸதிகளை உளியின் ஒலிகொண்டு தான் நினைவு கொள்வாள். அவை ஒலித்துக் கொண்டிருக்கும் வரை இந்த மிளகுக் கிழவிக்கு உற்சாகமும் ஊக்கமும் இருந்துகொண்டே இருக்கும்.
சயன கிருஹத்துக்கு வெளியே சென்னா வந்தபோது ஓரமாக உட்கார்ந்திருந்த நாகசுவர இசைக் குழு மிக இனிமையாகக் காலையில் இசைக்கத் தகுந்த ராகமான மலையமாருதத்தை இசைக்கத் தொடங்கியது. நேற்று பூபாளம் வாசித்த குழு அது. அதன் முந்திய தினம் பௌளி என்ற இந்துஸ்தானி ராகம். தினசரி மங்கல இசையோடு துயில் உணர்ந்து, இரவு உறங்கும் முன் ஒரு மணி நேரமாவது இசையில் அமிழ்ந்து கண்மலர்கிறாள் சென்னா. நேற்றிரவு புல்லாங்குழல் மென்மையாக தாலாட்ட பஹாடி ராகத்தின் இனிமையோடு பனி மூடிய மலைச் சிகரங்களையும், பசும்புல் பரந்த மலையடிவாரங்களையும் சென்னா சுற்றிவந்தாள்.
“இசையோடு எழுந்து இசையோடு துயின்று வாழ்க்கை இசைமயமாகட்டும். தினம்தினம் ஏற்படும் அழுத்தத்துக்கும் இறுக்கத்துக்கும் ஒவ்வொரு எலும்பும், நரம்பும் பாதிப்பு ஏற்றுப் பிணங்கி நிற்காமல் அவை இரவில் அமைதியாக ஓய்வுகொள்ளட்டும். துயில் எழுந்து சாந்தமாக நாள் முழுக்க இயங்கட்டும். இசை எப்போதும் மனதில் உங்களோடு லயிக்கட்டும்” –
பிரதானி நஞ்சுண்டய்யா வாழ்த்தி ஏற்படுத்தியது இந்த இசைச் சேவை. ஏற்பாட்டின் படி சென்னாவின் நாட்கள் சில மணி நேரமாவது இசையில் உடலும் மனமும் ஈடுபடக் கடந்து போகின்றன. நாள் முழுக்க நிதானமும் சாந்தமும் கூட இருந்தபடி சென்னா ஆட்சி செய்து வலம் வருகிறாள்.
November 1, 2023
தமிழ்க் குறுநாவலும் Breakfast at Tiffany-யும்
என் குறுநாவல் தொகுப்பு இரா.முருகன் குறுநாவல்கள் – வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய ஒன்பது குறுநாவல்களின் தொகுப்பு என் அன்புக்குரிய பதிப்பாளர் ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் நிறுவனத்தால் நேற்று மறுபதிப்பு கண்டிருக்கிறது. 1990-களில் எழுதிய முதல் குறுநாவல்கள் விஷம், விஷ்ணுபுரம் தேர்தல் முதல் கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் எழுதிய பசுவன் வரை இத்தொகுப்பில் உண்டு. முன்னுரை இங்கே
===================================================================================================================
முன்னுரை இரா.முருகன்
குறுநாவலுக்கு என்ன இலக்கணம் என்று தெரிந்து கொள்ளாமல் நான் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இங்கே குறுநாவல் எழுதிய எல்லோருமே அப்படித்தான் என்று சொல்லலாம்.
1990-களில் தமிழ் இலக்கியச் சூழல் இன்றைக்கு இருப்பதை விடச் சற்றே மாறுபட்டு இருந்தது. எப்போதும் போல் கவிதை நிறைய உண்டு. கணிசமாகச் சிறுகதைகளும் வந்து கொண்டிருந்தன. நாவல் அத்தி பூத்தாற்போல் வரும். ஒரு நாவல் எழுதினால் அது அல்டிமேட் சாதனை. அடுத்த பத்து வருடம் ஓய்வெடுத்து விட்டு அடுத்ததை யோசிக்கலாம். இந்த சூழலில் தான் தமிழுக்குப் புது இலக்கிய வடிவமாக, ஆனால் பரபரப்பின்றிக் குறுநாவல் வந்து சேர்ந்தது. மேற்கில் இருந்து வந்த ’நல்லனவெல்லாம்’ பட்டியலில் குறுநாவலைக் காணலாம்.
இடைக்காலத்தில் இருந்தே ஐரோப்பிய மொழிகளில் குறுநாவல் உண்டாம். பதினான்காம் நூற்றாண்டில் பொகாசியோ எழுதிய டெக்கமரான் கதைகள் நூலில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒரு குறுநாவலாம். இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜெர்மன், பிரஞ்சு இலக்கியத்தில் குறுநாவலுக்குத் தனியானதோர் இடம் அளிக்கப் பட்டதாக அறிகிறோம். இருபதாம் நூற்றாண்டு, ஆங்கில இலக்கியத்தில் குறுநாவல் செழித்த காலம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
’உமக்குத் தெரிந்த ஆங்கிலக் குறுநாவல் வகை சார்ந்த இலக்கியப் படைப்பு ஒன்றைப் பெயர் குறிப்பிடுக’ என்று அரை மரியாதையோடு யாராவது கேட்டு எனக்கும் சொல்ல இஷ்டம் இருந்தால், நான் உடனே சொல்வேன் – ட்ரூமன் கபோட் எழுதிய ப்ரேக்ஃபாஸ்ட் அட் டிப்பனி (Breakfast at Tiffany’s by Truman Capote). ஆட்ரி ஹெப்பன் நடித்து 1960-களின் சூழலில் நிகழும் சினிமாத்தனம் சற்றே கூடிய திரைப்படமாகத் தான் முதலில் இந்தப் புனைவு மனதில் படிந்திருந்தது. ட்ரூமன் கபோட் பற்றிப் பின் கேள்விப்பட்டு முதலில் நான் வாசித்த, 1940-களின் சூழலில் இயல்பாக நடைபெறும் குறுநாவல் இது.
காஃப்காவின் ‘வளர்சிதை மாற்றம்’, கார்சியா மார்க்வெஸின் ‘கர்னலுக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை’, ‘அறியாப் பெண் ஆந்த்ரியா’, எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் ‘கடலும் கிழவனும்’, யாசுநாரி கவாபாத்தாவின் ‘உறங்கும் கன்னியர் வீடு’, ப்ரிமோ லெவியின் ‘நிக்கல்’, சார்லஸ் டிக்கன்ஸின் ‘கிறிஸ்துமஸ் கரோல்’, ஜியார்ஜ் ஆர்வெலின் ‘விலங்குப் பண்ணை’, ஆஸ்கார் ஒயில்டின் ‘காண்டர்வில்லி பிசாசு’ இதெல்லாம் என் மனம் கவர்ந்த மற்ற குறுநாவல்கள். பஷீரின் ‘பால்ய கால சகி’ கூட என் ப்ரிய குறுநாவல் தான்.
உலகின் முதல் குறுநாவல் எது? எந்த மொழியில் எழுதப்பட்டது?
தெரியாது. அடுத்த கேள்வி.
தமிழ்ல் எழுதப்பட்ட முதல் குறுநாவல் எது?
தெரியாது. அடுத்த கேள்வி? கேள்விகள் ஏதும் இல்லை. நன்றி.
இதெல்லாம் தெரியாமல் போனது போலவே தான் குறுநாவல் இலக்கணமும்.
குறுநாவலுக்குப் பக்க அளவு கிடையாது. சிறுகதையை விடக் கொஞ்சம் பெரிசு. நாவலை விடச் சிறியது. இப்படி ஒரு விளக்கம் இணையப் பெருவெளியில் காணக் கிடைக்கிறது. இதன் மற்றொரு எல்லையில், பெரிய குறுநாவலை நாவல் என்றே அழைக்கலாம் என்ற அபத்தமாகத் தோன்றக் கூடிய, தீர யோசித்தால் பொருள் விளங்கும் இன்னொரு விளக்கமும் உண்டு!
இந்தக் குறுநாவல் இலக்கணம் மட்டும் தமிழில் குறுநாவல் எழுத வந்தவர்களுக்குக் காணாப் பாடம் படிக்காமல் அடிப்படையில் தானே படிந்து வந்தது.
சிறுகதையை விட இன்னும் கொஞ்சம் பரந்த அளவில் யோசித்து எழுதக் கை கொடுத்த இலக்கிய வடிவம் குறுநாவல் என்பதால் குறுநாவல் எழுதித்தான் பார்ப்போமே என்று இதைக் கையாண்டவர்கள் 90-களில் சற்றே அதிகம்.
குறுநாவல் வடிவம் மட்டுமில்லை, அதைப் பற்றிய இன்னொரு நிதர்சனமும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்டாயிற்று. குறுநாவல்கள் கண்டிப்பாக இலக்கியப் பத்திரிகைகளுக்கு, அதாவது சிற்றிதழ்களுக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டியவை. வெகுஜனப் பத்திரிகைகள் இப்படி ஒரு இனம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல், அல்லது தெரிந்தும், இப்ப என்னங்கிறே என்கிற அலட்சியத்தோடு சிறுகதையை மட்டும் கலர்ப் படங்களோடு பிரசுரித்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்குக் கதை சொல்லும் கடமையாற்றிக் கொண்டிருந்தன. அது தமிழ்ச் சிறுகதையின் பொற்காலம் என்று சொல்லலாமா? தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்.
குறுநாவல் இலக்கணமாகப் பயின்று வரும் மற்றக் கூறுகள் யாவை? சொல்வோம்.
குறுநாவலுக்குப் பரபரப்பான முடிவு இருக்க வேண்டும். ஒரே ஒரு ஒற்றை இழையாகத் தான் கதை ஓட வேண்டும். சப் ப்ளாட் என்று கதைக்குள்ளே கதையாகக் குறுக்குச் சால் போட அனுமதி இல்லை. அத்தியாயங்களாகப் பிரித்து நம்பர் போட்டு எழுதக் கூடாது. போனால் போகிறது, இரண்டு அடுத்தடுத்த பகுதிகள் இடையே போதிய இடைவெளி கொடுத்துப் பிரிவினையை ஊக்குவிக்கலாம்.
இதெல்லாம் தெரியாததால் எல்லா இலக்கணத்தையும் மீறிக் குறுநாவ்ல எழுதப் போனோம். அத்தியாயங்களுக்கு நம்பர் போடுவதை மட்டும் பத்திரிகை கம்பாசிட்டர்களும் உதவி ஆசிரியர்களும் கவனித்துக் கொண்டார்கள்.
எல்லா இலக்கியப் பத்திரிகைகளும் குறுநாவல்களைக் கேட்டு வாங்கிப் பெற்று மகிழ்ந்து பிரசுரம் செய்தன என்று சொல்ல முடியாது. முப்பத்திரெண்டு பக்கமுள்ள பத்திரிகையில் குறுநாவல் முப்பது பக்கத்தை அடைத்துக் கொண்டு விட்டால், சந்தா அனுப்புங்கள் கோரிக்கையும் ’போன மாதம் வந்த எந்தக் கவிதையும் நன்றாக இல்லை’ என்ற வாசகர் கடிதமும் பிரசுரிக்க மீதி ரெண்டு பக்கம் மட்டும் இருக்கும்.. அபூர்வமாக கோல்ட் கவரிங் விளம்பரம் கிடைக்கும் பத்திரிகையாக இருந்தால் இந்த ஏற்பாடும் அலங்கோலமாகி விடக் கூடும்.
தமிழ் இலக்கிய இதழ்களில் குறுநாவலை மிகத் தீவிரமாக ஆதரித்து வந்த பத்திரிகைகளில் கணையாழிக்கு முக்கிய இடம் உண்டு. 1990-களில் ஆண்டு தவறாமல் குறுநாவல் போட்டி நடத்தித் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்த கணையாழியும் கஸ்தூரிரங்கன் சாரும் இல்லாமல் இருந்திருந்தால் நான் முதல் குறுநாவலான ‘விஷம்’ எழுதி இந்த இலக்கியப் பகுப்பில் அடியெடுத்து வைத்திருப்பேனா என்று சந்தேகம் தான்.
அந்தக் காலகட்டத்தில் என்னோடு ஆண்டு தோறும் கணையாழிப் போட்டிக்கு எழுதிய நண்பர்களான ஜெயமோகன், பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் நானும் நாவலுக்குப் போய்விட்டோம் அழகியசிங்கர் விருட்ச நிழலில் அமர்ந்திருக்கிறார். மற்றவர்களும் குறுநாவலுக்குத் திரும்பும் உத்தேசத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
குமுதத்துக்கு சுஜாதா ஆசிரியராக இருந்த ஆண்டில் அவர் அந்த லட்சச் சுழற்சி வெகுஜன இதழில் புகுத்திய மாற்றங்களில் குறுநாவலும் உண்டு. அந்த அத்தி அவருக்குப் பின் பூக்கவில்லை.
இனியும் ஒரு முறை நீராட முடியாத நதியாகக் குறுநாவல் தோன்றுகிறது. என் இந்தக் குறுநாவல்களை பாசத்தோடு பார்க்கிறேன். மறு வாசிப்பிலும் இவை எனக்கு நல்ல வாசக அனுபவத்தையே தருகின்றன. முதல் வாசகனான எழுத்தாளனுக்குக் கிடைத்த அதே அனுபவம் இவற்றை நூல் வடிவில் இப்போது படிக்கும் வாசகர்களுக்கும் கிட்ட விழைகிறேன்.
இந்தத் தொகுப்பில் இடம் பெறும் குறுநாவல்களில், தகவல்காரர் ‘முன்றில்’ பத்திரிகையிலும், ‘மனை’, ‘முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்’ ஆகியவை புதிய பார்வையிலும், ‘பகல் பத்து ராப்பத்து’ குமுதத்திலும் பிரசுரமானவை. மற்றவை கணையாழியில் வெளிவந்தவை. இந்தப் பத்திரிகைகளுக்கு என் நன்றி.
குறுநாவலுக்குக் கறாரான இலக்கணம் இல்லை என்பதையும் நான் கறாரான இலக்கியவாதி அல்லன் என்பதையும் இதன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குச் சாற்றுகிறேன். 
October 30, 2023
மருந்துப் பூப்பூத்த கோகர் மலை – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் சகல இன சஞ்சீவனி பெருமருந்து தயாரிக்க மூலிகை தேடியலைந்த கதையிலிருந்து இங்கே கொஞ்சம் போல.
அப்போது சட்டென்று அவருடைய நாற்பரிமாணக் கூறுகளைச் சற்றே மாற்றி அரூபனாக்கி அவரை பேழையிலிருந்து இறக்கினான் குழலன். பிரதி நீலன் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்து நீலனைக் கண்ணிமைக்கும் முன் பேழையில் இட்டதும் அவன் தான்.
பாவம் அந்தப் பிரதி நீலன். இவர் போல இருப்பதால் இங்கே அழைத்து வரப்பட்டு உயிரும் நீத்தார் அந்த அப்பாவி மனிதர். இப்போது சுகவாசம் அனுபவிக்கும் பிரதி நீலன் ஆல்ட் க்யூ நீலன் கசாப்புக்கடை நீலன் சஞ்சீவனிக்கு இளைய மருந்து என்று ஈ எறும்பைஎல்லாம் இட்டு ஏதோ கலவையைக் காய்ச்சித் தருகிறானாம். குயிலி தான் சொன்னாள். அது காமத்தை அபாரமாகத் தூண்டும் வீரியம் கூட்டும் மருந்து என்று பிரபஞ்சமே கொண்டாடுகிறதாம்.
குயிலியும் வானம்பாடியும் தான் அசல் நீலனுக்கு இரண்டு கண்களாகச் செயல்பட்டார்கள்
சஞ்சீவனி 500 மூலிகை பூக்கத் தொடங்கி விட்டது. தினம் கோகர்மலை அடிவாரத்தில் மலைச் சாரலில் அதிகாலையும் பின்மாலைப் பொழுதிலும் நடை பயின்று வரப் போவது காலாற நடக்க மட்டுமில்லை, மூலிகைச் செடிகள் பூத்தனவா என்று பார்த்து அறியவும் தான்.
அண்ணார் வாசலிலேயே அமர்ந்த காரணம் என்ன? சாற்றுவீர் சற்றே.
குயிலி செம்மொழிப் பேச்சில் ஈடுபட்டிருந்தால் என்றால், மகிழ்ச்சியான மனத்தோடு இருக்கிறாள் என்பதாகும். அசல் நீலன் படிக்கட்டில் இருந்து எழுந்து குயிலியோடு கை குலுக்கினார். ஐயாயிரம் வருடம் கிட்டத்தட்ட உயிர்த்ததின் பலன் அவரெங்கே உயிர்த்தார். காலக்கோட்டை மாற்றி வரைந்து அவரை பொ யு 300இல் இருந்து பொ யு 5000க்கு அவள் தானே கூட்டி வந்தாள்.
அந்த ஊர் சுற்றி எங்கே? கண்களில் குறும்பு மின்ன குயிலியைக் கேட்டாள்.
அந்தக் குட்டியா, ஏதோ அபூர்வமான நூல் வேணுமாம். குழலனின் நூல் நிலையத்தில் தேடிவிட்டு வருகிறாளாம்.
என்ன புத்தகம் அது? புத்தகத்தைச் சுட்டுப் போடு என்று என் குரு புலிப்பாணியார் எழுதிப் போந்தது நினைவு வருகிறது. சொல்லியபடி கதவு திறந்து உள்ளே போகும் குயிலிக்குப் பின் அரூபனாக உள்ளே போனார் அவர்.
மத்திய உத்தராங்கம் 3
மலையடிவாரத்தில் இரவு இறங்கி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. குளிர் கவிந்ததாலோ என்னமோ மலைப் பளிங்கரோ மற்றவரோ இறங்கி வரவில்லை. ஏறிப் போகவுமில்லை.
குயிலியும் அசல் நீலனும் அரூபர்களாகக் கூறுகள் சற்று மாற்றி மெல்ல நடந்து கொண்டிருக்கிறார்கள். சட்டென்று ஏதோ வாடை மூக்கைக் குத்துகிறது. ஒரு வினாடி மல்லிகை மணக்கிறது. அடுத்து சகிக்க முடியாமல் துர்கந்தமாக நரகலும் நல்ல மணமுமாக மாறிமாறி வருகின்றன.
யாரோ அசுத்தம் செய்து வைத்திருக்கிறார்கக் அண்ணரே. திரும்பிப் போகலாம். மிதித்து விட்டால் குளித்துச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.
குயிலி சொல்லிக் கொண்டிருந்தபோதே அசல் நீலன் குனிந்து மண் தரையில் அமர்கிறார்.
அண்ணாரே வேணாம் கை எல்லாம் நாற்றமடிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து குரல் –
கை எல்லாம் என்றால் எத்தனை கை தேளர் மாதிரி காலும் கொடுக்கும் வேறே வேண்டுமே.
வானம்பாடி இருட்டில் சிரித்தபோது யட்சி மாதிரித் தெரிந்தாள். வாழ்த்துகள் அண்ணாரே என்றபடி குயிலி கையைப் பற்றினாள்.
அண்ணார் எதுக்கு அம்மா வாழ்த்தெல்லாம் என்று கேட்டார். சஞ்சீவனி 500 மூலிகை அரும்ப ஆரம்பித்து விட்டது போலிருகே என்றபடி மூக்கை உறிஞ்சினாள்.
சரியாகச் சொன்னே என்றபடி எழுந்த நீலன் ஒரு மெல்லிய ஈரிலைத் தாவரத்தை அகழ்ந்தெடுத்து குயிலியிடம் கொடுத்தார். சஞ்சீவனிக்கு உயிரிது, அவர் சொன்னபோது அந்தச் செடி சகிக்க முடியாமல் கெட்டவாடை வீசியது.
குயிலி சட்டென்று தூர எறிய வானம்பாடி ஓடிப்போய் எடுத்து வந்தாள். செண்பகப்பூ வாடை இரவுக்கு அணிகலன் போட்டிருந்தது.
October 27, 2023
கரப்பு அதிகாரிகள் தூங்கி வழிந்த கூட்டம்
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து
அத்தியாயம் 36இல் இருந்து
==========================================================================================

நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் சொன்னார்.
கர்ப்பூரம் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்து ஒரு வினாடி அதிக மௌனத்தில் இருந்து அடுத்து உரக்க ஒரு தடவை கூறினான் – நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் உரைத்தார். அடுத்து வேகம் கூட்டி ஒரு முறை சொன்னார் அதையே. அவை நிறைந்திருந்தது.
நீலன் வைத்தியர் கிட்டத்தட்ட 4700 ஆண்டுகள் அவர் காலத்தைக் கடந்து நம் காலம் பொது யுகம் 5000க்கு வந்திருக்கிறார். பெருந்தேளார் விருப்பப்படி சகல நோயும் போக்கி அனைத்து இனத்தாருக்கும் நல்ல உடல்நலம் அளிக்கும் சஞ்சீவினிக்கு அடுத்த சகல இன சஞ்சீவினி உருவாக்கக் கேட்டுக் கொண்டோம்.
ஈ எறும்பு தொல்லையும் இல்லாமல் இருக்கவும் வேண்டினோம் என்று யாரோ சொல்ல அவர் பறக்கும் செந்தேளர் ஜுனியர் அதிகாரி என்று உடனே கண்டுபிடித்து வெளியே அனுப்பப் பட்டார். கர்ப்பூரம் தன் உரையைத் தொடர்ந்தார்.
வேறே யாரும் வெளியே போக விரும்புகிறார்களா என்று பெருந்தேளர் கேட்க கர்ப்பூரம் கடைசி வரிசை ஆசனங்களில் நான்கு கரப்பர் அதிகாரிகள் ஒத்துசேர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அவர்கள் உறங்கட்டும். அப்போதுதான் ஆலோசனைக் கூட்டம் களைகட்டும் என்று பெருந்தேளரிடம் பார்வையில் சொன்னான் கர்ப்பூரம்.
வாயைத் திறக்காமல் மனுஷர்களைப்போல் புன்சிரிக்க முற்பட்டு தோற்றார் பெருந்தேளர். வழக்கம்போல் வாசலில் கதவுக்கு அந்தப் பக்கம் இரண்டு பழைய மர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. குயிலியும் வானம்பாடியும் அவற்றில் மிகக் கவனமாக கர்ப்பூரத்தின் பேச்சைக் கேட்பதாகப் பாவனை செய்து மனதில் அங்கே இருந்த எல்லோரையும் கிண்டல் செய்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.
கர்ப்பூரன் சொல்லிக்கொண்டே போனார் –
போன வாரம் இதே புதன் கிழமை. இதே காலை நேரத்தில் நம் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பெருந்தேளரின் பெருந்துணையோடு துயிலரங்கத்தில் நீலன் வைத்தியர் துயில்நீங்கி விழித்தார்.
அட மடையா அவன் கசாப்புக்கடை நீலன் டா என்றாள் குயிலி.
போன வாரம் புதன்கிழமை விழித்தெழுந்து வியாழன் ஓய்வெடுத்துவிட்டு, வெள்ளியன்று சகல இன சஞ்சீவனி உருவாக்கி வெற்றி கண்டார் நம் பெருமதிப்புக்கு உரிய நீலன். மருந்தை சனிக்கிழமை தேர்ந்தெடுத்த மையங்களில் மாலை ஆறு மணிக்கு விநியோகிக்க ஆரம்பித்தோம்.
விநியோகம். எங்கே இருந்துதான் இப்படி க்ளீஷே கெல்லி எடுத்து பேச்சு நெடுக்கத் தூவி செர்வ் பண்றானோ இடியட் என்றாள் வானம்பாடி.
நாம் எதிர்பார்த்ததற்கு மேலே பெரும்வெற்றி.
எழுந்து நின்று கைநீட்டி எங்கும் ஆரவாரம்.
கையா நீண்டுது?குயிலி மனதில் சொல்ல இரண்டு தோழியரும் மனதில் சிரித்து ஓய்ந்தார்கள். சனி, ஞாயிறு, திங்கள் நாட்டில் வேறேதும் நடக்கவில்லை.
பெரிய நகைப்பு மண்டபத்தில் எழுந்தது. பின்வரிசை கரப்பின அதிகாரிகள் சட்டென்று எழுப்பி விடப்பட்ட அதிர்வோடு கூட்டத்தைக் கவனிக்க எல்லோரும் நகைப்பது கண்டு அவர்கள் சிரிக்க, கர்ப்பூரன் அப்போது பெருந்தேளரசரின் அறிவும் தொழில் நுட்ப அறிவும் வாழ்த்தப்பட வேண்டியது என்று அடுத்த உரைக் கண்ணிக்குக் கடந்திருந்தான்.
கரப்பு அதிகாரிகளை எரித்துவிடுவதுபோல் முந்திய வரிசையில் அமர்ந்து திரும்பிப் பார்த்த செந்தேளர் அமைதியை நிலைநாட்டிய வெற்றியோடு முன்னே பார்த்தார்.
அந்த மூன்று நாளும் நல்ல வேளையாக பாலியல் குற்றங்கள் அதிகரிக்காமல் பெருந்தேளரசு காவல்படையினர் கண்காணித்தார்கள். அவர்கள் பணியைப் பாராட்டி ஊக்கத்தொகை தருவதோடு இந்த வாரம் இரண்டு நாள் சிறப்பு விடுமுறையும் கொடுக்கக் கோருகிறேன்.
கூட்டத்தினர் எழுந்து நின்று கரம்தட்டி உற்சாகமாக ஒலித்தனர். பிரச்சனை நேற்று செவ்வாயன்று தான் உக்கிரமடைந்தது என்பதைப்பதிவு செய்ய முற்படுகிறேன். உடல்பசி எழுந்து தீர்ந்து மறுபடி எத்தனையோ முறை எழுந்து தீர்ந்து வயிற்றுப்பசி மற்றும் உடல் சோர்வு மிகுந்து அவரவர் வசிப்பிடத்திலும் வந்து சேர்ந்து உறங்கிய இடத்திலும் கிடந்துறங்கினதாகத் தெரிகிறது. எழுந்ததும் எல்லா இனங்களுக்கும் என்றென்றும் விலையில்லா உணவு கோரிக்கை கவனமில்லாமல் கையாளப்பட்டதாகத் தெரிகிறது.
அடபாவி அந்தப் பெருந்தேள் கடங்காரன் இலவச உணவு அறிவிப்பை இந்தக் கடங்காரன் சொல்லித்தானே செய்தான் என்று வானம்பாடி அகலமாகக் கண்விரித்து ஆச்சரியப்பட குயிலி அவளுக்கு மனமுத்தமொன்று அனுப்பினாள்.
October 22, 2023
என் புது குறுநாவல் ‘சிவிங்கி’யிலிருந்து ‘பின்னே ஓடும் ஆமைகள்’
சொல்வனம் இலக்கிய இணைய 305ஆம் இதழில் இப்போது முழுமையாகப் பிரசுரமாகியுள்ள இரண்டாம் அத்தியாயம் – சிவிங்கி குறுநாவலில் இருந்து
குகைச் சிறப்பு
மெழுகு திரிகள் பிரார்த்தனை நிலையம் போல் எரிந்து ஒளியைப் பரப்பும் குகை அது. பழையதாக சுவரெல்லாம் தண்ணீர் கசிந்து உப்புப் பூத்து பச்சையாக பாசி பிடித்த, கூடுதல் வசிப்பிடத் தேவைக்காகக் கொஞ்சம்போல் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை இருப்பிடம்.
இரண்டு நூறுகோடி மனித இனத்தோரும், மற்றபடி மொத்தமாக ஒன்றரை மில்லியன் மற்று உயிரினங்களும் சுவாசித்திருக்கும் உள்வெளி இந்தக் குகை. அடுக்கக வசதி நிறைந்த குடவரைக் குடியிருப்புகளில் தகுதி நோக்கி பலதரப்பட்ட உயிரினங்கள் வசிக்குமிடம் விநியோகிக்கப் பட்டிருகிறது.
குகை வாசிகள்
முதல் மாடி கடைசி இரண்டு குடியிருப்புகள் குரங்கினக் குடும்பங்கள் சுக வாழ்வு வாழ ஒதுக்கப்பட்டவை. அந்த வசிப்பிடத்துக்கு முன்பு, சூரியனை முன்னிட்ட கிரகத் தொகுதியில், செவ்வாய்க் கிரகத்து இனத்தினர் வாழுமிடம்.
அதற்கு முந்திய மனை பாரம்பரியம் மிக்க கரடிக் குடும்பம் வசிப்பது. ஆறு தலைமுறையாக பாரம்பரிய இசை ஆசிரியர் மற்றும் இசை வல்லுநராக சமூகக் கடமை ஆற்றும் குடும்பம் அது.
சகவாழ்வு வாழும் தரை ஆமைக் குடும்பம் அடுத்து வசிப்பது. கதவு திறந்தே இருக்கும் வசிப்பிடம் இது. வாசலில் மணி ஒலித்துக் கதவு திறக்கக் கிளம்பி வந்தால் அடுத்த நாள் காலை அநேகமாக வாசலுக்குப் போய்ச் சேர முடியும்.
மரபணு மறுசீரமைப்பு
ஆமைகளின் இயக்கத்தை வேகமாக்க மரபணு மாற்றம் செய்ய கரடி வைத்தியக் குடும்பம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இளம் ஆமைகள் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப் படவில்லை.
நூற்றுப்பத்து வயதான முதிய ஆமைகள் முழு ஒத்துழைப்பு நல்கிட அவற்றில் மரபணு மறுசீரமைப்பு நடத்திய பிறகு அவ்விரு ஆமைகள் வேகம் கணிசமாகக் கொண்டன.
எனில் அவை பின் நோக்கி வேகமாகப் போகத் தலைப்பட்டன. அவற்றின் பசி கணிசமாகக் குறைந்து, பின்நோக்கிப் போகும் அவ்வாமைகள் குகைப் பொழுதுபோக்கு மையத்தில் ஆடிப்பாடி, பின்னால் ஓடிக் குழந்தைகளுக்கு நகைச்சுவையான நேரம் நல்குகின்றன.
பாரவிப் பெண் பொம்மைகள் இயல்பும் திறனும்
முடிந்தது, இன்று போய் நாளை வா
October 20, 2023
வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து ஒரு நினைவின் ஊர்வலம்
வாழ்ந்து போதீரே அரசூர் நாவல்களின் வரிசையில் நான்காவதாகும். அதிலிருந்து ஒரு சிறு பகுதி
இறக்கி விட்டுக் காத்திருந்த பஸ் கண்டக்டரைப் போகச் சொல்லிக் கையசைத்தபடி வலது புறமாகத் திரும்பி நடந்தான் அவன்.
வீட்டு வாசல் இருட்டில் இருந்தது. உள்ளே மங்கின வெளிச்சத்தில் அம்மா குரல் நவ்ய நவ்ய கத்யா என்று லாவணிப் பாட்டாக மேலெழுந்து வந்தது.
சாதத்தை முழுங்கிட்டுப் பாடேண்டீ. பாட்டு எங்கே ஓடியா போகும்? அவன் தான் போய்ட்டான். ஓடினானோ நொண்டிக் காலாலே கெந்திக் கெந்தி நடந்தானோ ஒரேயடியாப் போய்ச் சேர்ந்தாச்சு. உனக்கு ஒண்ணாவது தெரியறதா? பரப்பிரம்மம்டீ நீ. எங்க அவர் மாதிரி, அதாண்டி, உன் மாமனார். ஆக்காட்டுடி லண்டி முண்டை. சோறாவது ஒழுங்காத் தின்னத் தெரியறதா?
கற்பகம் பாட்டி தன் மருமகளைக் கொஞ்சுகிற நேர்த்தி அந்த லண்டி முண்டையில் நிரம்பி வழியும் வாத்சல்யத்தில் தெரியும்.
இருட்டிலேயே நின்று கொண்டிருந்தான் திலீப். அம்மா மராத்தியில், சோறு வேணாம், பரமா எஜ்மானைக் கூட்டி வா கிழவி என்று யார் என்ன என்ற போதமின்றி கற்பகம் பாட்டியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்பாவை அதிக மரியாதையோடு அப்படித்தான் கூப்பிடுவாள் அவள்.
குளிக்க மாட்டேன்னு அப்படி என்ன அடம்? தலை மயிர் சிக்கு பிடிச்சு எட்டு ஊருக்கு நாறறது. இங்கே என்ன பட்டணம் மாதிரியா, தண்ணிக் கஷ்டமா ஒண்ணா? குழாயைத் தெறந்தா கங்கா ஸ்நானம். உங்க மாமனாருக்கு குளிக்கறதுன்னா அப்படி ஒரு இஷ்டம். செயலா இருந்தப்போ ரொம்பவே செயலா இருப்பார். நீயும் வாடி கல்ப்பு, சேர்ந்தே இதை எல்லாம் முடிச்சுடுவோம்பார். என்னோட கூட ஜலக்ரீடை பண்ணனுமாம் கிழத்துக்கு. எப்போ? ரிடையர் ஆனதுக்கு முந்தின வருஷம். தீபாவளியன்னிக்கு. கருமம் கருமம்.
பாட்டி சிரிப்பில் நாணம் கலந்து இருந்ததை திலீப் உணர்ந்தான். நீலகண்டன் தாத்தா நாய் மாதிரி லோல்பட்ட கடைசி ஐந்து வருஷத்தைக் கழித்துப் பார்த்தால் ராஜபோகமாகத் தான் மூச்சு விட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்.
இன்னும் கொஞ்சம் தயிர்சாதம் எடுத்துக்கோடி தங்கமே. முருங்கைக்காய் சாம்பார் பிடிச்சிருக்கா? ஊற ஊறத்தான் ருஜி. காலம்பற வைக்கற முருங்கை சாம்பாரை ராத்திரி தான் இவர் ஒரு பிடி பிடிப்பார். அன்னிக்கு நாலு தடவை.
பாட்டி, ஏன் இருட்டிலே உக்காந்திருக்கீங்க ரெண்டு பேரும்
திலீப் உள்ளே நுழையும்போது உற்சாகமாக உணர்ந்தான்.


October 18, 2023
இரவில் இயங்கிப் பகலில் உறங்கும் பிரபஞ்சம் – புது குறுநாவல் ’சிவிங்கி’யில் இருந்து
சொல்வனம் இணைய இலக்கிய இதழில் சிவிங்கி குறுநாவல் முழு வடிவில் பிரசுரமாகிறது
தேள்கள் ஆயிரம் ஆண்டு முன்பு வரை இந்தக் காஸ்மாஸ் பிரபஞ்சத்தை ஆட்சி செய்து வந்தன. பொது ஆண்டு 5867இல் அணு ஆயுதப் பிரபஞ்சப் போரில் அவை அழித்தொழிக்கப்பட்டன.
விதிவிலக்கான உயிரினம்
தேளினத்தோடு கூட்டணி அமைத்திருந்த கரப்புகள் அணு ஆயுதப் போரில் தப்பிப் பிழைத்து அடுத்த பல ஆண்டுகள் தலைமறைவாயிருந்தன. பொது ஆண்டு 6000-வகை காலத்தில் அவை ஆரோக்கியமும், எதிர்ப்பட்டதை எல்லாம் தகர்க்கும் வெறியுமாக குகை எங்கும் படை எடுத்துச் சூழ்ந்தன.
எல்லா உயிரினங்கள் மேலும் பறந்து போய்ப் பாய்ந்து ஒட்டிக்கொண்டு கத்தி போன்ற கால்கள் கொண்டு முகம், தலை, பிரத்தியோக உறுப்பு என்று தேடித்தேடி ஊர்ந்து ஆழமான காயங்களை அவை உண்டாக்கின.
ஐக்கிய உயிரினக் கூட்டமைப்பு என்ற அனைத்துக் குகைகளயும் ஆட்சி செய்யும் அரசமைப்பு கரப்பினத்தை முழுக்க அழித்தது. .
கிழக்கு திசையில் ஏற்பட்டிருந்த நீளம் மிகுந்த குகையில் கரப்புகளின் அழிபடாத இன மிகுதி இன்னும் உயிர்த்திருப்பதாகவும், அவை வேண்டிய காலத்தில் வெளிவரும் என்றும் தொடுமொழிக் கதையாடல் சொல்லும்.
கரப்பு அழிப்பு ஐக்கிய உயிரினக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிகழ்வாக, கரப்பினத்துக்கு சைகை மொழி, தொடுமொழி என்ற இரண்டு வலிமையான ஆயுதங்கள் கிட்டாமல் போனது காரணம் என்று பொதுவாகக் கூறப்பட்டது.
நெகிழி, அசுத்த ஜட வஸ்து, ஜல வஸ்து, கழிவுநீர், போன்ற உணவும், அவற்றை உண்ணும்போது சூழ்ந்திருக்க புழுத்த வாடையோடு அபான வாயுவும் கிட்டாமல் கரப்புகள் இறந்து பட்டன.
காஸ்மோஸ் பிரபஞ்சம் குகை தோறும் ஓய்வாக இயங்கும் விடுமுறை தின இரவுப் பொழுது இது. குறைந்த பட்ச நடமாட்ட இரவு.
இரவில் இயங்கிப் பகலில் உறங்கும் பிரபஞ்சம் இது என்று ஏற்கனவே குறிப்பிட்டு நாமும் கதையைத் தொடங்கினோம். இந்நானிலம் எங்கணும் நல்லிருளில், நல்லின்பத்தில் வாழ்க. யாமியற்றிய இந்நூல்

October 14, 2023
என் புது குறுநாவல் ‘சிவிங்கி’யின் தொடக்கத்தில் இருந்து
சொல்வனம் இணைய இதழில் தொடங்கியிருக்கும் என் புது குறுநாவல் சிவிங்கியில் இருந்து
முன்னுரை
குறுநாவல் என்ற இலக்கிய வகை அருகி வருவதாகவும் எதெல்லாமோ குறுநாவலாக எழுந்து வருவதாகவும் தகைசால் சான்றோர் சதா அங்கலாய்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததே. இக்குறை சென்றொழிய சிவிங்கி என்ற பெயரிட்டு ஒரு நீண்ட கதை எழுதலானோம். வியாசம் போல வடிவெடுத்த இதனை ஆன்றோரும் சான்றோரும் இளையோரும் நீட்புனைகதையாக வாசித்து மனநிறைவடைவது திண்ணம்.
காவல் தெய்வ வழிபாடு
தும்பிக்கை கணபதி திருப்பாதமே கதி. எண்ணமும் எழுத்தும் சிறக்க சரசுவதி அருள் வேண்டுகிறோம். கூடவே பிரம்மனும், சிவனும், விட்டுணுவும் எழுதி முடித்திட ஆசியருளட்டும். நல்ல வண்ணம் பிரசுரமாக அன்னை பராசக்தியும், செல்வம் பெருகத் திருமகளும் நல்லாசி அருளட்டும். வேணும் பைரவநாதர் மற்றும் புலியேறிய பெருமான், வராகியம்மை கடாட்சம்.
எடுப்பு
உலகெலாம் உயிர்த்த நாள் காலை இது. அடுத்து இரவு, தொடர்ந்து பிற்பகல், அதன் பின் உடனே அதிகாலை, அது கடந்து மறுபடி இன்னொரு பகல் என்று தறி கெட்டு ஓடும் பொழுதுகள் இந்தப் பிரபஞ்சத்தை பொது ஆண்டு ஆறாயிரத்துப் பதினேழு முதல் பீடித்து, நீங்காது சூழ்ந்துள்ளன.
சூரியன் பலவீனமடைந்து ஒளி குன்றி மரித்து கருந்துளையாக மாறிச் சூரிய மண்டலத்து கிரகங்கள் அனைத்தும் உயிரினங்களோடு உயிர்ப்பு நிற்க, காலம் என்ற பரிமாணம், மற்ற மூன்று கனபரிமாணத்தில் ஒன்றிரண்டு மட்டும் சேரச் செயல்படப் போகிறது.
அடுத்த நூறு ஆண்டுகளில் ஆதவன் இறப்பு எப்போது வேண்டுமெனிலும் நிகழலாம். சூரிய உதயமும் அந்தி சாய்தலும் எந்த ஒழுங்குமின்றி வந்துபோவது பலவீனமான சூரியனின் அடையாளம் எனக் கருதலாம்.
காலம் இடம் பொருள் நிறுவுதல்
இப்போது நடப்பில் உள்ள பொது ஆண்டு 6120.
குகைகள் நிரம்பி வழிய, எஞ்சிய மானுடமும், மற்ற விலங்கியங்களும் குகை இருட்டின், குகைப் பாறைப் பரப்பின் பாதுகாப்பிலிருந்து விலகி வெளியேற மனமின்றி சுருண்டு ஈரம் அப்பிய குகைத் தரையில் நின்றும், அமர்ந்தும், நகர்ந்தும், ஓடியும், பறந்தும் சுவாசித்திருக்கின்றன.
உறக்கம் கண்ணிமை அழுத்த நிலத்தில் தலைசாய்த்து அங்கங்கே வசிப்பிடங்களில் உயிரினங்கள் சயனித்திருக்கின்றன. பிரபஞ்சம் முழுவதும் குகைகள் என்பதால் குடியேற இன்னும் குகையுண்டு.
நடந்த சரிதம்
அணுசக்தி ஆயுதங்கள் நிலமழித்ததும், கருநீலமாக மின்னும் ஆலங்கட்டிப் படிகங்களாகச் செரிந்து கதிரியக்க மழை தொடங்கியது. கருத்த அப்பெருமழை பெய்யும் பகலாக நூறாண்டு தொடர்ந்தது. அந்த நீண்ட பகல் பொழுது ஓய, அடுத்த நூறாண்டு இரவாகத் தொடர்ந்தது. இருட்டைத் தின்று இருட்டைப் பிறப்பித்த நீண்ட இரவு முடிய, அணுவிளைவு சென்று தணிந்தது.
அது ஓய்ந்து எங்கணும் குகைகள் புதியதாக முளைவிட்டன. இருளில் விளையும் பயிர்கள் செழித்தோங்கியிருந்த நிலங்களில் வந்த குகைகள். பழைய பெருஞ்சாலைகளைப் போர்த்தி முளைத்த குகைகள். கடற்கரைக் குகைகள். கடலுக்குள் எழுந்த குகைகள். அருவி, ஆறு, வாய்க்கால் எனச் சகல இடத்திலும் காளான் குடை விரித்ததுபோல் எழுந்து வந்த குகைகள்.
குகைகளின் மாண்பு
அவை அறிவு மிகுந்த குகைகள். எந்த திசை நோக்கி இருக்க வேண்டும், எத்தனை வளைவுகள் இருக்க வேண்டும், நீள, அகலங்கள் சுற்றுச் சூழலைப் பொறுத்து எவ்வளவு இருக்க வேண்டும் என்று தானே விதித்துக் கொண்ட கணிதச் சமன்பாட்டின்படி எழுப்பிக்கப்படுகிற குகைகள் அவை.
உயரம் மட்டும் பிரபஞ்சம் முழுக்க ஒரே அளவு, அதாவது எட்டடி தான் இருக்கும், எங்கும்.
குகை மனிதர் சிறப்பு
குகை மனிதர்களுக்குப் பேச, கேட்க, அதன்படி நடக்க மட்டும் தேவையான அறிவு பிறவியிலேயே சிறுமூளை முகுளத்தில் பதிந்திருக்கும்.
அந்த அடிப்படை அறிவு, சைகை மற்றும் தொடுமொழி வழியாக பரஸ்பரம் தொடர்பு கொள்ளப் பயனாகும். பார்வை குறைந்த, அற்ற மாற்றுத் திறனாளிகளோடு தொடர்பு கொள்ள தொடுமொழி மட்டும் பயன்படும் என்பதால் அப்படியானவர்கள் குறைந்த அளவே பிறப்பிக்கப் படுவார்கள்.
சைகை மற்றும் தொடுமொழி, மானுடர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள மட்டுமானவை அல்ல. சகல விலங்கினம், பறவையினங்களோடும் சகஜமாகத் தொடர்பு கொள்ளப் பயனாகிறவை. இவை தவிர வேறு எந்த மொழியும் புழக்கத்தில் இல்லாமல் போனது. திட்டமிட்டு அவை ஒவ்வொன்றாக அழிக்கப் பட்டன. பேச்சும் எழுத்தும் முழுவதும் இறந்துபட அடுத்த அடுத்த தலைமுறைகளில் மரபணு மூலம் கடத்தப்பட்ட குறைந்தபட்ச மொழி இல்லாமல் போனது. மொழி அழிப்பு முழு வெற்றி பெற்றது.
ஆசிரியர் குறிப்பு
(மொழி அழிப்பு, மொழி புகுதல் குறித்துப் பேச இது இடமும் தருணமுமல்ல.)
இயற்கை எய்திய வீண் உயிர்கள்
இந்த ஏற்பாடு சரிப்பட்டு வராததால் இப்பிரபஞ்சத்து ஊர்வனவான எல்லா இனப் பூச்சிகளும் மற்றும் சற்றே எழும்பிப் பறக்கும் பாம்புகளும் பிரபஞ்சம் முழுக்க இயற்கை எய்தச் செய்யப்பட்டன. மண்ணுளிப் பாம்புகள் விதிவிலக்கு பெற அவற்றின் நிலப் பாதுகாப்பு தொண்டு காரணமானது.
முழுவதும் படிக்க சொல்வனம் இணைய தளத்தில்
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

