மருந்துப் பூப்பூத்த கோகர் மலை – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் சகல இன சஞ்சீவனி பெருமருந்து தயாரிக்க மூலிகை தேடியலைந்த கதையிலிருந்து இங்கே கொஞ்சம் போல.

அப்போது சட்டென்று அவருடைய நாற்பரிமாணக் கூறுகளைச் சற்றே மாற்றி அரூபனாக்கி அவரை பேழையிலிருந்து இறக்கினான் குழலன். பிரதி நீலன் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்து நீலனைக் கண்ணிமைக்கும் முன் பேழையில் இட்டதும் அவன் தான்.

பாவம் அந்தப் பிரதி நீலன். இவர் போல இருப்பதால் இங்கே அழைத்து வரப்பட்டு உயிரும் நீத்தார் அந்த அப்பாவி மனிதர். இப்போது சுகவாசம் அனுபவிக்கும் பிரதி நீலன் ஆல்ட் க்யூ நீலன் கசாப்புக்கடை நீலன் சஞ்சீவனிக்கு இளைய மருந்து என்று ஈ எறும்பைஎல்லாம் இட்டு ஏதோ கலவையைக் காய்ச்சித் தருகிறானாம். குயிலி தான் சொன்னாள். அது காமத்தை அபாரமாகத் தூண்டும் வீரியம் கூட்டும் மருந்து என்று பிரபஞ்சமே கொண்டாடுகிறதாம்.

குயிலியும் வானம்பாடியும் தான் அசல் நீலனுக்கு இரண்டு கண்களாகச் செயல்பட்டார்கள்

சஞ்சீவனி 500 மூலிகை பூக்கத் தொடங்கி விட்டது. தினம் கோகர்மலை அடிவாரத்தில் மலைச் சாரலில் அதிகாலையும் பின்மாலைப் பொழுதிலும் நடை பயின்று வரப் போவது காலாற நடக்க மட்டுமில்லை, மூலிகைச் செடிகள் பூத்தனவா என்று பார்த்து அறியவும் தான்.

அண்ணார் வாசலிலேயே அமர்ந்த காரணம் என்ன? சாற்றுவீர் சற்றே.

குயிலி செம்மொழிப் பேச்சில் ஈடுபட்டிருந்தால் என்றால், மகிழ்ச்சியான மனத்தோடு இருக்கிறாள் என்பதாகும். அசல் நீலன் படிக்கட்டில் இருந்து எழுந்து குயிலியோடு கை குலுக்கினார். ஐயாயிரம் வருடம் கிட்டத்தட்ட உயிர்த்ததின் பலன் அவரெங்கே உயிர்த்தார். காலக்கோட்டை மாற்றி வரைந்து அவரை பொ யு 300இல் இருந்து பொ யு 5000க்கு அவள் தானே கூட்டி வந்தாள்.
அந்த ஊர் சுற்றி எங்கே? கண்களில் குறும்பு மின்ன குயிலியைக் கேட்டாள்.

அந்தக் குட்டியா, ஏதோ அபூர்வமான நூல் வேணுமாம். குழலனின் நூல் நிலையத்தில் தேடிவிட்டு வருகிறாளாம்.

என்ன புத்தகம் அது? புத்தகத்தைச் சுட்டுப் போடு என்று என் குரு புலிப்பாணியார் எழுதிப் போந்தது நினைவு வருகிறது. சொல்லியபடி கதவு திறந்து உள்ளே போகும் குயிலிக்குப் பின் அரூபனாக உள்ளே போனார் அவர்.

மத்திய உத்தராங்கம் 3

மலையடிவாரத்தில் இரவு இறங்கி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. குளிர் கவிந்ததாலோ என்னமோ மலைப் பளிங்கரோ மற்றவரோ இறங்கி வரவில்லை. ஏறிப் போகவுமில்லை.

குயிலியும் அசல் நீலனும் அரூபர்களாகக் கூறுகள் சற்று மாற்றி மெல்ல நடந்து கொண்டிருக்கிறார்கள். சட்டென்று ஏதோ வாடை மூக்கைக் குத்துகிறது. ஒரு வினாடி மல்லிகை மணக்கிறது. அடுத்து சகிக்க முடியாமல் துர்கந்தமாக நரகலும் நல்ல மணமுமாக மாறிமாறி வருகின்றன.

யாரோ அசுத்தம் செய்து வைத்திருக்கிறார்கக் அண்ணரே. திரும்பிப் போகலாம். மிதித்து விட்டால் குளித்துச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.

குயிலி சொல்லிக் கொண்டிருந்தபோதே அசல் நீலன் குனிந்து மண் தரையில் அமர்கிறார்.

அண்ணாரே வேணாம் கை எல்லாம் நாற்றமடிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து குரல் –

கை எல்லாம் என்றால் எத்தனை கை தேளர் மாதிரி காலும் கொடுக்கும் வேறே வேண்டுமே.

வானம்பாடி இருட்டில் சிரித்தபோது யட்சி மாதிரித் தெரிந்தாள். வாழ்த்துகள் அண்ணாரே என்றபடி குயிலி கையைப் பற்றினாள்.

அண்ணார் எதுக்கு அம்மா வாழ்த்தெல்லாம் என்று கேட்டார். சஞ்சீவனி 500 மூலிகை அரும்ப ஆரம்பித்து விட்டது போலிருகே என்றபடி மூக்கை உறிஞ்சினாள்.

சரியாகச் சொன்னே என்றபடி எழுந்த நீலன் ஒரு மெல்லிய ஈரிலைத் தாவரத்தை அகழ்ந்தெடுத்து குயிலியிடம் கொடுத்தார். சஞ்சீவனிக்கு உயிரிது, அவர் சொன்னபோது அந்தச் செடி சகிக்க முடியாமல் கெட்டவாடை வீசியது.

குயிலி சட்டென்று தூர எறிய வானம்பாடி ஓடிப்போய் எடுத்து வந்தாள். செண்பகப்பூ வாடை இரவுக்கு அணிகலன் போட்டிருந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2023 05:05
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.