S. Ramakrishnan's Blog, page 80
October 9, 2022
விழித்திருப்பவனின் இரவு
பெயரிலி
The idiot என்ற வலைப்பதிவில் அமெரிக்காவில் வசிக்கும் பெயர் அறியாத வாசகர் எழுதியுள்ள குறிப்பு. ஆழ்ந்த வாசிப்பிலிருந்து உருவான பதிவு என்பதால் இதனைப் பகிர்ந்து கொள்கிறேன்
•••

இரவில் விழித்திருந்து வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு. என் மேசை அருகே ஒரு ஜன்னலுண்டு. ஜன்னல் வெளியே ஒரு மரமுண்டு. மரங்களில் எப்போதும் பறவைகள் வந்து அமர்வதுண்டு. இரவில் நான் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு எழுத்தாளரும் அம்மரத்தில் அமர்ந்து எனக்காக பாடும் அல்லிசைப் புள் என எனக்கு தோன்றj
விழித்திருப்பவனின் இரவு புத்தகம். வாசிக்க ஆரம்பித்தபோது எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் புத்தகம் என கையில் ஏந்தினேன். வாசிப்பும் அப்படித்தான் ஆரம்பித்தது.வாசிக்க வாசிக்க மனதில் பல கேள்விகள். எனக்கு புத்தகங்கள் பதிலளிப்பவையாக என்றைக்குமே இருந்ததில்லை. கேள்விகள் தான். ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி விசைக்கொண்டு பறந்தெழ வைக்கும் கேள்விகள். புத்தகத்தின் வாயிலாக கேள்விகளை மட்டுமே பெற்றுக்கொள்கிறேன். பின் அக்கேள்விகளுக்கான பதில்களை தேடி பயணம். அறிவின் மூலம், அனுபவத்தின் மூலம் , சக மனிதர்கள் மூலம் பதில்கள் கண்டடைய முயற்சிக்கிறேன்.சில வெற்றிகள் பல கற்றல்கள். பதிலே இல்லை என்று தெளிவாக தெரிந்த கேள்விகளைக்கூட அது அளிக்கும் பயணத்திற்காக மட்டுமே சுமந்தலைந்திருக்கிறேன்.
எழுத்தாளர்களை எளிமையாக அறிமுகப்படுத்தும் புத்தகங்கள் ஒரு பதினைந்து வருடங்களுக்குமுன் கையில் கிடைத்திருந்தால் அப்போது மகிழ்ந்து இன்று வெறுத்திருப்பேன். நல்லவேளை எனக்கு இதுபோன்ற புத்தகங்கள் அன்று கையில் கிடைக்காதது நல்லம் என்று தோன்றுகிறது. இன்று எனக்கு தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரும் சிறிது சிறிதாக ஓர் எறும்பு தன் உணவை சேமிப்பதுபோல் நானே கண்டடைந்தவர்கள்.
பெங்களூரில் நான்கு வருடம் வேலைப் பார்த்த காலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் கொண்டாட்டம் ஞாயிறு மதியம்தான் முடிவடையும். பலதிசைகளிலிருந்து பறந்து வரும் பறவைகள் போல் நண்பர்கள் வெள்ளிக்கிழமை இரவுகளில் எங்கள் அறையில் கூடுவார்கள். ஞாயிறு மதியம் அனைவரும் தத்தம் அறைகளுக்குக் கிளம்பியபின் எனக்கான நேரம்.என் ஞாயிறு மதியங்கள் அனைத்தும் பெங்களூர் forum mall-ல் இருந்த லாண்ட்மார்க் புத்தகக்கடையில் கழியும். ஒன்று அல்லது இரண்டு புது எழுத்தாளர்களையோ, அல்லது திரைப்பட இயக்குனர்களையோ பெயர் குறிப்பெடுத்துக்கொண்டு பல வாரங்கள் அவர்களைப்பற்றியும் அவர்கள் புத்தகங்களையும், திரைப்படங்களையும் வாசித்தும் பார்த்தும் குறிப்பெடுப்பேன். ஒருகட்டத்தில் லாண்ட்மார்க் சலிப்படைய, பழைய புத்தகக்கடை நோக்கி திரும்பினேன்.நன்றாக நினைவிருக்கிறது , ஒரு மழை கொட்டிய மாலை வேளையில் பெங்களூர் டிராப்பிக்கில் வால்வோ பஸ்ஸில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து நகரின் மையத்திலிருந்த ஒரு பழைய புத்தகக்கடையில் எனக்காக காத்திருந்த Alejandra pizzarnik, Julio Cortazar, Emily Dickinson, John Keats உடனெல்லாம் கை குலுக்கினேன். விழித்திருப்பவனின் இரவு புத்தகம் அன்று கையில் கிடைத்திருந்தால் ஒரு அறையில் அமர்ந்து இவர்களைப்போன்ற பல எழுத்தாளர்களைக் கண்டடைந்திருப்பேன். ஆனால் எழுத்தாளர்களைத் தேடி என் பயணத்தால் பெற்ற அனுபவத்தை இழந்திருப்பேன். எப்போது ஒன்று மறுக்கப்பட்டாலும் அதைவிட சிறந்த ஒன்றை நோக்கியே தள்ளப்படுவேன் என்ற என் நம்பிக்கைக்கு இதுவும் ஓர் உதாரணம்.
இப்புத்தக வாசிப்பின்போது எழுந்த கேள்விகள் மற்றும் நான் அடைந்த பதில்கள் பல. எந்த கேள்விக்கும் சரி தவறு என்ற பதிலில்லை. சொல்லப்போனால் எந்த கேள்விக்கும் பதிலில்லை, கோணங்கள் மட்டுமே உண்டெனவும் எண்ணத்தோன்றுகிறது. இக்கேள்விகள் மற்றும் பதில்கள் அனைத்தும் ஒரு வாசகன் என்ற கோணத்தில் சிந்தித்தவை.
வாசகர்கள் எழுத்தாளரை அறிந்துக் கொள்ள வேண்டுமா? எழுத்தாளரின் படைப்பு மட்டும் வாசகர்க்கு போதாதா?
வாசகர்கள் கண்டிப்பாக எழுத்தாளரை அறிந்துக்கொள்ள வேண்டும். வாசிக்க ஆரம்பித்து ஓரளவு வாசித்தபின் எவருக்கும் ஒரு தேடல் பிறக்கும். அத்தேடலின் முதல்படி தன்சுற்றத்திடமிருந்து அந்நியப்படுவது. வாழ்வின் பொருளென்ன? வாழ்வு நிலையற்றது என தெரிந்தும் மக்கள் இவ்வளவு வன்மத்தோடும், பொறாமையோடும் , மற்றவர்களை வெற்றிக்கொள்ள வேண்டும் என்ற வேகத்தோடும் ஏன் ஓடுகிறார்கள். புற்றீசல் வாழ்க்கை என எல்லாம் தோன்றும். இப்பெரும் கூட்டத்தின் சிறுதுளி நானல்ல என விலகி, மனிதர்களை எல்லாம் பெரிய வட்டத்தில் அடைத்து , அருகில் சிறுவட்டம் அமைத்து ஞானம் அடைந்து விட்டதாகவும் அல்லது ஞானத்தின் தேடலில் உள்ளதாகவும் தன்பால் சிந்தித்து தன்னையே ஏமாற்றி அமரும் வாய்ப்புகள் அதிகம். தவறில்லை. அது ஒரு பருவம். மனமெனும் மாய இசைக்கருவியின் ஒரு தந்தி, ஒரு துளை. அப்படி ஒரு பருவம் எனக்குமிருந்தது.
‘The brothers karamazov’ நாவல். உலகின் முதல் மூன்று சிறந்த நாவல் எதுவென்று என்னிடம் கேட்டால் முதல் மூன்று இடமும் ‘The brothers karamazov’ தான். அதில் ஒரு பள்ளி சிறுவன். அவனை சக நண்பர்கள் கற்களால் அடிக்கிறார்கள். நாவலின் நாயகன் அல்யோசா அவனைக் காப்பாற்றுகிறான். பின்பு அச்சிறுவன் இறக்கும் தருணம். அத்தருணத்தில் நாவலின் நாயகனுடன் சிறுவனின் தந்தை பேசும் இடம், மகனை இழந்த தாய் ஒரு பாதிரியாரிடம் பேசும் இடம், நான்கு மகன்கள் இருந்தும் அவர்களிடம் பாசம் காட்டாத தந்தை, நாவல் முழுவதும் வரும் உரையாடல்கள் என வாசித்து இன்றும் மனதில் தங்கிய நாவல்.
தஸ்தாவஸ்கியை 2008 ஆம் வருடம் கண்டடைந்த பின்பு இரண்டு வருடம் அம்மனிதனை ஒருநாள் தவறாமல் வாசித்தேன்.பின்பு Joseph Frank எழுதிய தஸ்தாவஸ்கியின் biography வாசித்தேன். பின்பு தெரிந்தது அவனுக்கு அல்யோசா என்ற மகன் இருந்திருக்கிறான், அவன் நான்கு வயதில் இறந்திருக்கிறான், மகனின் இறப்பை தாளமுடியாமல் தஸ்தாவஸ்கி துன்புற்றிருக்கிறான். தஸ்தாவஸ்கிக்கு முதல் மனைவின் மகன் மேலும் பாசம் ஆனால் அம்மகன் அதை புரிந்துக்கொள்ளவில்லை. சாவின் விளிம்பிலிருந்து திரும்பி சமூகத்திற்குள் நுழைந்திருக்கிறான்.தஸ்தாவஸ்கியைப்பற்றி இத்தனை தெரிந்துக்கொண்டபின்பு அவன் எழுத்தை மறுவாசிப்பு செய்தால் புரிகிறது , மனிதர்களை சபித்து அந்நியப்பட்டு தனிவட்டத்திற்குள் அமர அனைத்து வாய்ப்பும் காரணமும் இருந்த மகத்தான எழுத்தாளன் தஸ்தாவஸ்கியே மனிதர்களுடன் உறவாடி அவர்களுக்காக அவர்களுடன் வாழ்ந்து அவர்கள்பால் பேரன்பு கொண்டு மகத்தான எழுத்தை அளித்திருக்கிறான் என்று. இது புரிந்த கணத்தில் மனதில் இருந்த ஆணவமும் அந்நியப்படுதலும் அறியாமையும் குழந்தைகள் அடுக்கிய தீப்பெட்டி வீடு சரிவதுபோல் சரிந்து காலுக்கடியில் விழுந்தது. வாழ்வின் பெருவட்டத்திற்குள் இருந்தே ஆழமான அர்த்தமான வாழ்வை வாழமுடியும் என்று தஸ்தாவஸ்கி என் கைபிடித்து இழுத்து வந்திருக்கிறான். என் வாழ்வை மாற்றிய சில முக்கிய தருணங்களில் இதுவும் ஒன்று. தாஸ்தாவஸ்கியைப் பற்றி தெரிந்துக்கொள்ளவில்லை என்றால் இதை இழந்திருப்பேன்.
ஏன் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல எழுத்தாளர்கள் தற்கொலை முடிவை எடுத்தார்கள்?
சிக்கலான கேள்விகளை மனம் எழுப்பும் போதெல்லாம் அனைத்தையும் மூடி வைத்து உறங்கச்சென்றுவிடுவது வழக்கம். ஓன்று கேள்வியின் வீரியம் குறையுமென்றும், இரண்டு கனவில் உறக்கத்தில் ஏதேனும் விடை கிடைக்குமென்றும் உள்ள அசட்டு நம்பிக்கை. இக்கேள்வி மனதில் தோன்றிய போதெல்லாம் நன்றாக உறங்கினாலும் இக்கேள்விக்கு பதில் காண இயலவில்லை. ஆனால் புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். எழுத்தாளர்களும் சாதாரண மனிதர்கள்தானே. Hemingway குடும்பத்தில் தற்கொலைகள் அதிகம், அவருக்கு ‘hemochromatosis’ என்ற genetic disease இருந்திருக்கிறது. இறப்பதற்கு சில வருடங்கள்முன் இரண்டு விமான விபத்தில் சிக்கி அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். எதுவும் அவர் முடிவுக்கு நியாயம் கற்பிப்பதல்ல. கிழவனும் கடலும் வாசிக்கும் அனைவரும் கிழவன் Santiago வாக Hemingway வை பார்ப்பதுதான் வழக்கம். எனக்கு அவர் தூண்டிலில் சிக்கிய பெரிய மீனாக தன்னையும், Santiagoவாக தன் துன்பங்களையும் எண்ணி அப்புத்தகத்தை ஏன் எழுதியிருக்கக்கூடாது என தோன்றுகிறது. பெரும் போராட்டத்திற்குபின் அம்முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கலாமோ எனவும் தோன்றுகிறது. இக்கோணத்தில் வாசித்தால் கிழவனும் கடலும் வேறொரு புத்தகமாகவும் Hemingway வேறொரு மனிதனாகவும் தெரிகிறார்.
சில்வியா பிளாத் மரணம் இன்னும் சிக்கல். அவரின் மரணம் புரிந்துக்கொள்ள முடியாதது. சில்வியா என்றால் அவரின் மரணம்தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் எனக்கு சில்வியா என்றால் அவரின் வாழ்வுதான், கவிதைதான். அவரின் கடிதங்கள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அதை வாசித்தால் சில்வியாவை சிறிது புரிந்துக்கொள்ளலாம், ஆனால் அதில் உள்ள சில்வியாகூட, சில்வியா என்ற ஆழியின் சிறுதுளி .
மிஷிமாவின் தற்கொலை தீவிர உச்ச மனநிலையின் வெளிப்பாடு. மிஷிமாவை வாசிக்க மிக அதிர்வாகயிருந்தது. மிஷிமாவைவிட என் விருப்பத்திற்குரிய ஜப்பானிய எழுத்தாளர் ‘Yasunari Kawabata’. அவரும் தற்கொலை செய்துக்கொண்டார்.நான் வாசித்த வரையில் கவபாதாவின் snow country நாவல் கொடுத்த மனவெழுச்சிக்கு இணையாக எந்த ஜப்பானிய எழுத்தும் அளித்ததில்லை. இந்நாவலை வாசித்தபின்பே கவபாதாவின் முடிவை அறிந்தேன். கவபாதா மிஷிமாவின் நண்பன். நண்பனின் இறப்பை தாளமுடியாமல் அவர் தக்கொலைச் செய்துக் கொண்டதாக ஒரு செய்தியும் உண்டு.
இறுதியில், இவர்கள் கண்களிலெல்லாம் காசர்கோடு ரயில் தண்டவாளத்தில் ஜெயமோகன் கண்களில்பட்ட ‘இலையின் நுனியில் உடல்முழுதும் கதிரவனின் ஒளியாக மாறிய புழு’ விழவில்லையே என்ற ஆதங்கமும் துயரமும் மட்டுமே எஞ்சுகிறது.
வாசகன் எழுத்தாளரிடமும் எழுத்திலும் அறத்தை எதிர்பார்க்க வேண்டுமா?
Ethics is not absolute but relative என்பது என் சிறுபுரிதல். இக்கேள்வியை சிந்தித்துக் கொண்டிருந்தபோது முதலில் அறம் என்றால் என்ன என வரையறுக்க முயன்றேன். தோல்வி. ஏனென்றால் அறம் என்பது சுற்றம், சூழ்நிலை, காலம், மரபு, அறிவியல், தன்னறிவு, சமுகத்தின் கூட்டு நம்பிக்கை என பலவற்றால் வரையறுக்கப்படுவது. மாறக் கூடியது.
என் அனுபவத்தில் சமீபத்திய உதாரணம் டால்ஸ்டாய்.என் கோணத்தில் எனக்கு அறமென கற்பிக்கப்பட்ட அளவுகோல் வைத்து அவரை அளந்திருக்கிறேன். சிறு கோப்பையால் கடலை அளந்துவிடலாம் என்ற அறியாமை. டால்ஸ்டாயுடன் இனிப்பும் கசப்பும் கலந்த உறவே எனக்கிருந்திருக்கிறது. அவர் எழுத்தை வாசித்ததால் அவரை கட்டியணைத்தும், அவர் மரணப்படுக்கையில் அவர் மனைவி சோபியாவை பார்க்கவில்லை என்பதால் அவர்மேல் வெறுப்பும் இருந்தது.எனக்கு டால்ஸ்டாய் ஒரு யானை. இருக்கும்போது தன் இருப்பை முழுமையாக உணர்த்தவும், இல்லாதபோது தன் இல்லாமையை அதனினும் முழுமையாக உணரச்செய்வதும் யானையின் குணம். டால்ஸ்டாயும் அப்படியே. சரி முழுமையாக அவரை வெறுத்துவிடுவோம் என துணிந்து ‘Cathy porter’ மொழிபெயர்த்த ‘The diaries of Sophia Tolstoy’ புத்தகத்தை ஒரு பழைய புத்தகக்கடையில் கண்டெடுத்தேன். வாசிக்க வாசிக்க புரிந்தது நான் எவ்வளவு பெரிய ‘hypocritic’ சிந்தனையுடன் டால்ஸ்டாயை அணுகியுள்ளேனென்று. இன்று எந்த கணவனும் மனைவியின் டைரியில் அவனைக் குறித்து என்ன எழுதியிருக்கிறார்கள் என அறிய முயன்றால் அது சோபியாவின் டைரியைவிட ஆச்சரியங்கள் நிறைந்தாகயிருக்கவே வாய்ப்புகள் அதிகம். என் மனைவியின் டைரி உட்பட. ‘மண்டியிடுங்கள் தந்தையே’ புத்தகமும் டால்ஸ்டாயை அணைத்துக்கொள்ள இன்னொரு காரணம்.
இவ்விஷயத்தில் எனக்கு புரிதலை அளித்தவன் Charles Bukowski. The damn old dirty Charles fucking Bukowski. Bukowski வாசித்தபின்பே எழுத்தில், எழுத்தாளரிடத்தில் நான் கொண்ட என் அறத்தின் அளவுகோல்கள் அனைத்தும் உடைந்து தூள்தூளாக நொறுங்கி வீழ்ந்தது.
எழுத்தாளர் என்பவர் முழுவதும் அவர் எழுதும் எழுத்து அல்ல. எழுத்து என்பது எழுத்தாளருக்கு அத்தருணத்தில் நிகழும் உச்ச மனநிலை. நினைத்த நேரத்தில் அந்த மனநிலைக்குள் செல்ல எழுத்தாளராலே முடியுமா என்றும் தெரியவில்லை. அப்படியிருக்க எழுத்தாளர் புத்தனாகயிருக்க வேண்டிய அவசியமில்லை என்ற புரிதலுடன் கடப்பது நன்று. படைப்பையும் படைப்பாளியையும் பிரித்தணுக எனக்கு இந்த அளவுகோல் உதவுகிறது.
வாசிப்பும், இத்தனை எழுத்தாளர்களும் வாசகனை ஆட்கொள்கிறார்களே! வாசகன் ஒருவன் எழுத்தாளனுக்கு அல்லது படைப்பிற்கு எவ்வளவு அருகில் செல்லலாம் அல்லது வாழ்வில் எந்த அளவிற்கு இடமளிக்கலாம்?
ஆசை துன்பத்தின் ஆதி என்கிறது புத்தம். பற்றற்று இருப்பதே துறவு என்கிறது சில மத நம்பிக்கைகள். ஆனால் ஆசைக் கொள்வதும் , ஆசைக் கொண்டவற்றின்மேல் பற்றுக்கொண்டிருப்பதும் தான் மனித வாழ்க்கை. பற்றுக்கொண்டவற்றிடமிருந்து நினைத்த கணத்தில் ஒரு நொடியில் வெளியேறிவிட முடியுமென்றால் அதுவே ஞானம், துறவு, எவ்வமருக்கும் ஏகம். புத்தகமும் , வாசிப்பும் அதன்படியே அமைத்துக்கொள்வது சிறப்பு என நினைக்கிறேன். எவ்வளவு ஆழம் ஒரு புத்தகத்திற்குள் சென்றாலும் , மனம்போதும் என்றுணர்ந்த நொடியில் வெளியேறிவிட வேண்டும்.மனதை அவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும். அவ்வளவு இடம் ஒரு புத்தகத்திற்கு அளிப்பதே நன்று என தோன்றுகிறது.
இன்னும் எழுத்தாளன் அரசியல் பேச வேண்டுமா?, இலக்கியத்தில் அரசியல் தேவையா?, ஒவ்வொரு எழுத்தாளர்களையும் கண்டடைந்த என் பயணம் மூலம் அடைந்த அனுபவமும் நினைவுகளும், எழுத்தைத் தாண்டி இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் கொண்ட ஆவல்கள், அது அவர்கள் எழுத்தில் செலுத்திய தாக்கம், லத்தீன் அமெரிக்க இலக்கியம், ஜப்பானிய இலக்கியம்,ஐரோப்பிய மற்றும் அமெரிக்க இலக்கியம் என இன்னும் பல கேள்விகளையும், புதிய மன பயணங்களுக்கான பாதையும் இப்புத்தகம் உருவாக்கியுள்ளது. ஒரு புத்தகம் சிந்திக்க இத்தனை சாத்தியக்கூறுகளை அளித்திருக்கிறது என்றால், வாசிப்பவரின் மனதிற்கேற்ப சாத்தியங்களை உருவாக்குகிறதென்றால் அது தங்கப்புத்தகம், என் பல தங்கப்புத்தகங்களில் இதுவும் ஒரு தங்கப்புத்தகம்.
Thanks
October 7, 2022
இஸ்மாயில் கவிதைகள்
மலையாள, கன்னட இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்குத் தெலுங்கு இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமாகவில்லை. ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கும் சில தெலுங்கு நாவல்களையும் சிறுகதைகளையும் வாசித்த போதும் அதிகம் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் சமீபமாகக் கவிஞர் இஸ்மாயில் கவிதைகளை வாசித்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. அவர் தெலுங்கு நவீன கவிதையின் முக்கியமான கவிஞர் என்பதை உணர்ந்தேன். ஒரு கவிதையில் பறந்து செல்லும் காகத்தின் நிழலைக் கறுப்பு மௌனம் என்று இவர் குறிப்பிட்டிருப்பது கூடுதல் ஈர்ப்பை உருவாக்கியது

தத்துவப் பேராசிரியராக இருந்த முகமது இஸ்மாயில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அவரது எழுத்தோ ஜென் கவிதைகளின் பாணியில் உள்ளது. குரலை உயர்த்தாமல் சொல்ல வேண்டியதை அழகாகச் சொல்லும் கவிதைகளை எழுதியிருக்கிறார்.
ஆறு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைப் புத்தகங்கள் மற்றும் பிற மொழிகளிலிருந்து ஆறு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்.
தாகூரின் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்த இஸ்மாயில் அவரது Stray birds தொகுப்பின் பாதிப்பில் அது போன்ற கவிதைகளை எழுதியிருக்கிறார்.

அன்றாட அனுபவங்கள், சிறிய தருணங்கள் மற்றும், இயற்கையின் விநோதங்களைத் தனது கவிதைகளில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.
ஹைக்கூவைத் தெலுங்கு இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது இவர் தான் என்கிறார்கள். அது போலவே போல் இந்தப் புத்தகம் “Tanka” வடிவத்திலும் கவிதைகள் எழுதியிருக்கிறார்
இவரது கவிதைகளில் ஜன்னல் ஒரு முக்கியப் படிமமாக இடம்பெற்றுள்ளது. ஜன்னல் மூடப்படுவதற்கானதில்லை. அது எப்போதும் காண்பதற்கானதே என்று கவிதையில் ஒரு வரியை எழுதியிருக்கிறார். ஜன்னல் வழியே தெரியும் உலகம் வேறுவிதமானது. அது நம்மை மறைத்துக் கொண்டு உலகை அறியச் செய்கிறது.

1928 இல் பிறந்த இஸ்மாயில் காக்கிநாடா PR. கல்லூரியில் தத்துவ விரிவுரையாளராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார் அவரது மறைவு பற்றிச் செய்தி கூட எவ்வளவு அழகாக எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்
நவம்பர் 25, 2003 அன்று அவர் நித்திய மௌனத்தில் மூழ்கினார்
*




GODAVARI AT BALUSUTIPPA
Endless is the river
Endless is the sky
Which is the river
And which is the sky?
The lone fisherman’s oar
Divides the sky by a river
Leaving as a remainder
A zero, the size of a universe
•••
AFTER BURYING THE SUN
Having buried the sun
Taking a bathe in the canal
Departs dusk
Returning home
Lighting chulha
My wife wakes up the sun.
Having slept all night
Warmly in my stomach
The next day the Sun rises
Resplendent in the East.
••
Window
Opening the window
While dusting the cobwebs,
I saw
A beautiful face
Flashing a twinkle.
Hereafter this window shall not be closed.
Windows are for vision
Not for keeping shut.
•••
Little girl’s smile
Returning from play in dust
This little girl is laughing
She is dust-smeared
Not her smile.
•••
Tree – My Ideal
Like the arrow
That leaves the tree’s bow
Wonders the little bird
Trying to open the earth’s secret
Like the screw in the cork
The insect
Half insect, half the little bird
Entering earth opening it
Holds the branches, the tree
••••
Our Old House in the Village
People underwent a change
Only the mud did not
After walls collapsed
Trees sprouted embracing them
Only the creeper held on
My grandpa’s soul
•••
Wearing footwear
Stood the bag in water
In both the faces, joy
•••
For whom do the clouds rain
If not for children
Is it for those who save themselves without umbrellas?
•••
If the little one is kept to
Drive away the birds away
She is making friendship with crows
•••
October 5, 2022
தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்
எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் எழுதியுள்ள தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூலின் வெளியீட்டுவிழா அக்டோபர் 8 மாலை சென்னை தேனாம்பேட்டையில் பாரதி புத்தகாலயம் துவங்கியுள்ள புதிய கடையினுள் நடைபெறுகிறது

900 பக்கங்கள் கொண்ட பெரிய நூல். தமிழ் சிறுகதையுலகினை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.
நூலை நான் வெளியிடுகிறேன். பாராளுமன்ற உறுப்பினர், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பெற்றுக் கொள்கிறார்.
அண்ணன் தமிழ்செல்வனின் நூலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவரது நிழலில் கோணங்கியோடு சேர்ந்து வளர்ந்தவன் என்பதால் அந்தப் பசுமையான நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன.
அன்பு வந்தது
சுடரும் சூறாவளியும் படத்தில் இடம்பெற்ற அன்பு வந்தது என்னை ஆள வந்தது பாடல் எனக்கு பிடித்தமானது. இந்த பாடல் இருமுறை படத்தில் இடம்பெறுகிறது.தாயினை இழந்த பிள்ளைகளை தந்தை ஆறுதல்படுத்திப் பாடும் பாடல்
ஜெமினி நடித்த இப்படத்தின் இசை எம்.எஸ்.வி பாடலை எழுதியவர் கண்ணதாசன். எஸ்பிபி பாடிய அன்பு வந்தது பாடலை எப்போது கேட்டாலும் மனது கரைந்துவிடுகிறது. அருமையான பாடல். எஸ்பிபியின் குரல் அமிர்தமாக இனிக்கிறது.
கண் இரண்டில் கலக்கம் இன்றி
அமைதி காணலாம்
காலம் வெல்லும் வெல்லும் என்று
உறுதி கொள்ளலாம் உறவு கொள்ளலாம்
தாயில்லாத பிள்ளை தன்னை
நான் விடமாட்டேன்
நானில்லாத போது
தேவன் கைவிட மாட்டான்
என்ற வரிகளை ஏனோ திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். இதில் தேவன் என்ற சொல்லைப் பயன்படுத்தியது தான் கவியரசரின் தனித்துவம்.
பாடலில் வரும் சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்பு இதே பாடல் டி.எம்.சௌந்தரராஜன் – எஸ்.ஜானகி குரல்களில் திரும்ப ஒலிக்கிறது
அதில்
ஆற்று வெள்ளம் போன பின்பு
ஆற்று மண்ணிலே
வரும் ஊற்று வெள்ளம் போல் இருந்து
உறவு கொள்ளுவேன் பரிவு கொள்ளுவேன்
தெய்வம் பார்த்த பிள்ளை போலே
தங்கையை பார்ப்பேன்
செல்வம் பார்த்த ஏழை போல
நிம்மதி காண்பேன்
என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. படத்தின் கதைக்குப் பொருத்தமான அந்த வரிகள் படத்தைத் தாண்டி நமக்கான வரிகளாக மாறி நெருக்கம் கொள்வதே இதன் சிறப்பு.
=
October 3, 2022
ஒரு நாள் கருத்தரங்கம்
பெங்களூரில் அமைந்துள்ள கிருஸ்து நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் எனது படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

நவம்பர் 11 ம் தேதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
எனது நண்பரும் ஆங்கிலத்துறை பேராசிரியருமான அபிலாஷ் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர் சரளா இருவரும் இணைந்து இந்த நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்.
இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். விருப்பமான படைப்பாளிகள். கல்விப்புல ஆய்வாளர்கள், வாசகர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
••••

பொழில் மன்றம் பெங்களூரில் அமைந்துள்ள கிருஸ்து நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் திறன் மேம்பாட்டுக்காகவும் அமைக்கப்பட்டுள்ள மாணவர் மன்றமாகும். இதன் துவக்க விழா நவம்பர் 11, 2022 அன்று தமிழின் மகத்தான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகம் குறித்த தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்குடன் நடக்கிறது
••

எஸ் . ராமகிருஷ்ணனின் படைப்புலகம் : ஒருநாள் கருத்தரங்கம் குறு நாடகம் மற்றும் குறும்படப் போட்டிகள்
தமிழின் மிகச்சிறந்த விமர்சகர்கள், எழுத்தாளர்கள், ஆளுமைகள் நேரிலும், இணையம் வழியாகவும் பங்கேற்று எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் குறித்து விவாதிக்கிறார்கள், கட்டுரை வாசிக்கிறார்கள், கருத்துகளைப் பகிர்கிறார்கள். கூடவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறிஞர்களும், ஆய்வு மாணவர்களும் தமது ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்கிறார்கள்.
இந்த உரைகளும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு டிசம்பர் 2022இல் ஒரு நூலாக (ISBN எண்ணுடன்) பதிப்பிக்கப்படும்.

கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க ஆய்வு மாணவர்கள், இளங்கலை, முதுகலை மாணவர்கள், கல்விப்புல ஆய்வாளர்களும் தற்சார்பு ஆய்வாளர்களும் பள்ளி / கல்லூரி ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கீழ்வரும் தலைப்புகளில் ஒன்றை ஒட்டி எழுதப்பட்ட தமது கட்டுரையின் பொழிப்புரு / சுருக்கத்தை 80-100 சொற்களுக்குள் எழுதி abilashchandran.r@christuniversity மற்றும் sarala.v@christuniversity.in எனும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு நீளக்கட்டுப்பாடு இல்லை. கட்டுரைகள் தமிழில் மட்டுமே எழுதப்படலாம். அவை ஆய்வுக் கட்டுரைகளாகவோ, கோட்பாட்டு வாசிப்புக் கட்டுரைகளாகவோ, ரசனைக் குறிப்புகளாகவோ வாசிப்பனுபவ பகிர்வுகளாகவோ இருக்கலாம். இதுவரை வேறெங்கும் பிரசுரமாகாததாக இருக்க வேண்டும்.
பொழிப்புருவை அனுப்புவதற்காகக் கடைசி நாள்: அக்டோபர் 20, 2022. கட்டுரை அனுப்புவதற்கான இறுதி நாள் நவம்பர் 5, 2022.
எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புலகம் பற்றிக் கீழ்வரும் தலைப்புகளிலோ அவற்றை ஒட்டியோ உங்கள் கட்டுரையையும் பொழிப்புருவையும் எழுதி அனுப்பவும்:
எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புகளில் விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட மக்கள்
மாந்திரிக எதார்த்த எழுத்தும் எஸ்.ராமகிருஷ்ணனும்
எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகில் பின்காலனிய ஊடுபாவல்கள்
எஸ்.ராமகிருஷ்ணனின் மொழிநடையும் அழகியலும்
எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகளில் காலமும் வெளியும்
எஸ். ராமகிருஷ்ணனின் புனைவில் வெளிப்படும் வரலாற்றுக் கதையாடல்கள்
எஸ். ராமகிருஷ்ணனின் கதைகளில் தோன்றும் பெண்களின் உலகம்
எஸ். ராமகிருஷ்ணனின் புனைவுகளில் ஊனமும் நோய்மையும்
•••
எஸ் . ராமகிருஷ்ணனின் கதைகள் / நாவல்களில் ஒன்றைச் சார்ந்து குறுநாடகப் போட்டி மற்றும் குறும்படப் போட்டி கருத்தரங்கு அன்று நடக்கின்றன . குறும்படமோ குறுநாடகமோ 10-15 நிமிட கால அளவுக்குள் இருக்க வேண்டும் . அதில் பங்கேற்க விரும்பும் நாடக மற்றும் குறும்படக் குழுக்கள் abilashchandran.r@christuniversity மற்றும் sarala.v@christuniversity.in ஆகிய மின்னஞ்சல்களுக்குத் தகவல் தெரிவிக்கவும் . குறுநாடகங்கள் கருத்தரங்கன்று நிகழ்த்தப்படும் . குறும்படங்கள் காட்டப்படும் . முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்படும் குறுநாடகம் மற்றும் குறும்படத்திற்குப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும் .
•••
பதிவுக் கட்டண விபரம்
கருத்தரங்கில் நேரடியாகக் கலந்து கொள்ள விரும்புவோர் அரங்கில் ஆய்வு மாணவர்கள், இளங்கலை, முதுகலை மாணவர்கள், சான்றோர், ஆய்வாளர்கள் முன்னிலையில் கட்டுரை வாசிக்கலாம், விவாதங்களிலும் கலந்து கொள்ளலாம். அவர்களுக்கு மதிய உணவும் காலை, மாலையில் தேநீரும் வழங்கப்படும். அவர்கள் 600 ரூபாய் இணையம் வழி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
கருத்தரங்கில் இணையம் வழி கலந்து கொள்ள விரும்புவோர் கட்டணமாக ரூ 300ஐ செலுத்தலாம்.
அதே போலக் கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க விரும்பும் பள்ளி / கல்லூரி ஆசிரியர்கள் இணையம் வழி எனில் ரூ 400உம், நேரில் எனில் ரூ 700உம் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்துவதற்கான இணைப்பு விரைவில் பதிவேற்றப்படும்!
October 1, 2022
ஒரு நாள் நிபந்தனை
இரண்டாம் உலகப் போரின் போது ரோமில் வசித்த யூதர்களை நாடு கடத்தாமல் இருப்பதற்காக ஆல்பர்ட் கெஸ்ஸெல்ரிங் தலைமையில் செயல்பட்ட நாஜி ராணுவம் ஒரு நிபந்தனையை விதிக்கிறது.

அதன்படி ஒரு நாளைக்குள் அவர்கள் ஐம்பது கிலோ தங்கத்தை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் நகரைவிட்டு வெளியேறி சிறை முகாமிற்குச் செல்ல நேரிடும்.

இந்த நிபந்தனையை யூதர்கள் ஏற்கத் தயங்கினார்கள். குறிப்பாக இளைஞர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். ஆனால் யூத சமூகத்தின் மிக உயர்ந்த வணிகர்களோ தங்கத்தைக் கொடுத்து நாஜி ராணுவம் சமாதானமாகிவிட்டால் ரோமிலே வாழலாமே என்று வாதிட்டார்கள்.
24 மணி நேரத்திற்குள் எப்படி அவர்கள் தங்கத்தைத் திரட்டினார்கள் என்பதையே”The Gold of Rome” திரைப்படம் விவரிக்கிறது.
1961ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் கார்லோ லிசானி. நாஜி எதிர்ப்பில் தீவிரம் காட்டிய இவர் உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்
யூதர்கள் வசமிருந்த தங்கம், கலைப்பொருட்களை நாஜி ராணுவம் கொள்ளையடித்த நிகழ்ச்சிகளை வரலாற்றில் காணமுடிகிறது. இது உயிர்தப்புவதற்காக அவர்களே ராணுவம் வசம் தாங்கள் அணிந்திருந்த நகைகள். சேமிப்பில் இருந்த தங்க நாணயங்களை ஒப்படைத்த கதையைச் சொல்கிறது.
ஐம்பது கிலோ தங்கத்தை ஒரு நாளில் சேகரிப்பது எளிதானதில்லை. அதற்கு மக்களை முதலில் சம்மதிக்க வைக்க வேண்டும். அதற்காக நடைபெறும் கூட்டமும் அங்கே நடக்கும் விவாதங்களும் நிஜமாக சித்தரிக்கபட்டுள்ளன.

இது நாஜி ராணுவத்தின் ஏமாற்றுவேலை. தங்கத்தைப் பறித்துக் கொண்டு நம்மை முகாமில் அடைக்கக் கொண்டு போய்விடுவார்கள் என்று இளைஞர்கள் குரல் எழுப்புகிறார்கள். படத்தில் அவர்களின் கோபம் அழுத்தமாக வெளிப்படுகிறது
படத்தின் பெரும்பகுதி தங்கத்தினைச் சேகரித்து ராணுவ அதிகாரியிடம் ஒப்படைப்பதைப் பற்றியது. இதற்குள் எத்தனை உணர்ச்சிபூர்வ நிகழ்வுகள்,
டேவிட் என்ற இளைஞன் ஆயுதமேந்திய எதிர்ப்பைத் தேர்வு செய்கிறான், யூதர்களில் பெரும்பாலோர் பணிவுடன் நடந்து கொள்கிறார்கள். ஒரு பிரச்சனையை இருவேறு தலைமுறை எப்படி கையாளுகிறார்கள் என்பதும் படத்தில் சித்தரிக்கபடுகிறது.
உணவகத்தில் யூதர் ஒருவர் அவமானப்படுத்தப்படும் காட்சியும், விட்டுக் கொடுப்பதே சரியான வழி எனப் போதகர் சொல்வதும் சிறப்பான காட்சிகள்
யூத கமிட்டி மக்கள் ஒப்படைக்கும் தங்க நகைகளுக்கு முறையாக ரசீது தருகிறார்கள். அந்தத் தங்கத்தை எடைபோட்டுச் சேமிப்பில் சேர்கிறார்கள். நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து தங்கத்தைத் தருகிறார்கள். உயிர்வாழ்வது தான் முக்கியம் என ஒரு பெண் குறிப்பிடுகிறார்.

நாஜி ராணுவத்திட்ம் சிக்கி மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்தார்கள். எத்தனை பேரின் கனவுகள் கலைந்து போனது. என்பதை உணர்ச்சிப்பூர்வ நாடகமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இத்தாலிய கறுப்பு வெள்ளை படங்களுக்கே உரித்தான அழகான ஒளிப்பதிவும் இசையும் நடிப்பும் படத்தைத் தனிச்சிறப்ப கொண்டதாக்குகிறது
September 28, 2022
புத்தகங்களின் நடுவே
கடந்த ஐந்து நாட்களாகப் பயணத்திலிருந்தேன். இன்று தான் சென்னை திரும்பினேன்.


திருச்சி மற்றும் மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டேன். திருச்சியில் புத்தகத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்ட நிர்வாகமும் தேசிய புத்தக நிறுவனமும் இணைந்து கண்காட்சியை சிறப்பாக உருவாக்கியிருந்தார்கள். களம் அமைப்பின் சார்பில் உரையாற்ற வருகிறவர்களை வரவேற்று வசதியான தங்குமிடம், ருசியான உணவு கொடுத்துக் கவனித்துக் கொண்டார்கள்.

24 சனிக்கிழமை மாலையில் நான் வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம்.


மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தனது குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சியைக் கேட்டது மகிழ்ச்சி அளித்தது.
தேசாந்திரி அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன். புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

என்னைச் சந்திப்பதற்காகவே திண்டுக்கல், சேலம், கரூர், தஞ்சை என வேறுவேறு ஊர்களிலிருந்து வந்திருந்த வாசகர்களின் நேசத்திற்கு எப்படி நன்றி சொல்வது. அவர்களின் அன்பும் ஆசியுமே என்னைத் தொடர்ந்து எழுதவைக்கிறது.
வெள்ளிக்கிழமை மாலை கண்காட்சி அரங்கில் நண்பர் திருப்புகழ் ஐஏஎஸ் ஆற்றிய சிறப்புரையைக் கேட்டேன். பயணம் பற்றி விரிவான உரையை நிகழ்த்தினார். ஜப்பானியத் துறவிகளின் ஒட்டம் பற்றிய தகவல்கள் வியப்பளித்தது.
புத்தகத் திருவிழாவிற்குப் பள்ளி கல்லூரி மாணவர்கள் திரளாக வந்திருந்து கை நிறையப் புத்தகங்களை வாங்கிச் சென்றது வேறு எங்கும் காணாத அதிசயம்.
திருச்சியில் நண்பர் துளசிதாசன், கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் நந்தலாலா, சந்திரகாந்த், ரமேஷ்பாபு என நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது

மதுரை புத்தகத் திருவிழா இந்த முறை பிரம்மாண்டமான புதிய அரங்கினுள் நடைபெற்றது. தமுக்கம் மைதானத்தில் உருவாக்கபட்டுள்ள குளிரூட்டப்பட்ட அரங்கு. இருநூறுக்கும் மேற்பட்ட கடைகள் அமைத்திருந்தார்கள். ஞாயிற்றுகிழமை கண்காட்சியில் பெருந்திரளான கூட்டம். நின்று கையெழுத்துப் போட அரங்கில் இடமில்லை. தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த சலூன் நூலகம் மாரியப்பன் எனக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

25 ஞாயிறு மாலை புத்தகத் திருவிழாவில் உலகம் பற்றிய கனவு என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

எனது நெருங்கிய நண்பரும் மதுரை பாராளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது சந்தோஷம் அளித்தது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே மேடையில் பேசினோம். தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு, மதுரைக்கான சிறப்புத் திட்டங்கள் சார்ந்து பாராளுமன்றத்தில் சு.வெங்கடேசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதைப் பாராட்டினேன். வேள் பாரி திரைப்படமாகப் போவதற்கு வாழ்த்துத் தெரிவித்தேன். கீழடி ஆய்வுகளிலும் மதுரையின் பண்பாட்டுச் சிறப்புகளை முன்னெடுப்பதிலும் அவர் காட்டும் அக்கறையும் ஈடுபாடும் நிகரில்லாதது.





மதுரைப் புத்தகத் திருவிழாவில் மண்ணின் மைந்தர்களான படைப்பாளிகளும். புதிதாக எழுதத் துவங்கியுள்ள இளம்படைப்பாளிகளும் கௌரவிக்கப்பட்டது பாராட்டிற்குரியது. படைப்பூக்க அரங்கம். சிறார்களுக்கான அரங்கம், வரலாற்றுக்கண்காட்சி எனச் சிறந்த முன்னெடுப்புகளை மதுரையில் காண முடிந்தது


தமிழக அரசு இப்படி மாவட்டம் தோறும் புத்தகத்திருவிழாவை நடத்திவருவது மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்காகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இருவரும் புத்தகத் திருவிழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.
நண்பர் சு. வெங்கடேசன். பேசத்துவங்கிய ஐந்து நிமிஷங்களில் சூறைக்காற்றோடு பலத்த மழை. அந்த மழைக்கு நடுவிலும் அவர் மதுரை எழுத்தின் தலைநகராக எப்படி விளங்கியது என்பதைச் சிறப்பாக எடுத்துப் பேசினார். அபூர்வமான தகவல்கள், உண்மைகள். காற்றின் வேகமும் மழையின் சீற்றமும் அதிகமானதால் அரங்கினுள் தண்ணீர் புகுந்துவிட்டது. வாசகர்கள் பலரும் மேடைக்கே வந்து புத்தகங்களில் கையெழுத்து வாங்கினார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
நண்பர் முத்துகிருஷ்ணன் பசுமை நடையின் மூலம் மதுரையின் தொன்மையைத் தொடர்ந்து அடையாளப்படுத்திவருவதுடன் மதுரையின் வரலாற்றைப் பற்றித் தூங்காநகர நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அபூர்வமான தகவல்களும் புகைப்படங்களும் கொண்ட புத்தகமது.
அவரும் பசுமை நடை நண்பர்களும் இந்தப் புத்தகத்திருவிழாவிற்குப் பல்வேறுவிதங்களில் உறுதுணை செய்திருக்கிறார்கள். முத்துகிருஷ்ணனுக்கும் பசுமை நடை நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் முறையாக என்னைத் தொடர்பு கொண்டு வரவேற்றுத் தங்கவைத்துச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எனது நன்றி.
•••
புத்தகத் திருவிழாவிற்கான எனது பரிந்துரைகள்
1) மின்னூல்கள்(Ebooks) மற்றும் மின்னூலகங்கள் பற்றிய அறிமுகம் மற்றும் உரைகள் அவசியம் தேவை.
2) தமிழக வரலாறு குறித்து ஒரு நாள் தனியே அமர்வு அல்லது கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
3) சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் சார்ந்த நூல்களுக்கான அறிமுக உரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
4) அரிய நூல்கள், கையெழுத்துப்பிரதிகள், முதற்பதிப்புகள், சிற்றிதழ்கள், நிகண்டு, அகராதிகள் மற்றும் தற்போது அச்சில் இல்லாத நூல்களுக்கான சிறப்புக் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்ய வேண்டும்
5) புத்தகத் தயாரிப்பு, புதிய தொழில்நுட்பம், வடிவமைப்பு. குறித்த உரைகள், பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்
6) கல்வி குறித்த நூல்கள். சிறப்புரைகளுக்கெனத் தனியே ஒரு அமர்வு
7) தமிழ் காமிக்ஸ் மற்றும் சிறார் கதைப்புத்தகங்களுக்கான ஓவியம் வரைவது, உருவாக்குவது தொடர்பாக ஓவியர்கள் படைப்பாளிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி
8) கண்காட்சி வளாகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.
புகைப்படங்கள் :
நன்றி
திரு லெனின், ஸ்ருதி டிவி கபிலன். தங்கம் மூர்த்தி
டாக்டர் வெங்கடாசலம்
September 22, 2022
மன்னிக்கப்படும் குற்றம்
புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றில் காபிக்கடை முதலாளி கடவுளிடமே ஒரு கள்ளநோட்டினைத் தள்ளிவிடுகிறார். கடவுள் அந்த நோட்டினை தனியே எடுத்துக் கிழித்துப் போட்டுவிடுகிறார். துக்ளக் காலம் துவங்கி இன்றுவரை கள்ளநோட்டுப் புழக்கம் இல்லாத காலமேயில்லை. அதுவும் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகமாகும் போது உடனே கள்ளநோட்டுகள் தயாராகிவிடுகின்றன. இன்றைக்கு நாம் எந்தக் கடைக்குப் போய்ப் பணம் கொடுத்தாலும் அது ஒரிஜினல் தானா என்று பரிசோதித்துப் பார்க்கிறார்கள். நூற்றில் ஒரு கள்ளநோட்டு எப்படியோ கலந்துகிடக்கிறது.

கள்ளநோட்டு கும்பலைப் பற்றி எத்தனையோ படங்கள் வெளியாகியுள்ளன. இதில் The Counterfeiters of Paris -1961 Seven Times Seven -1969 The Counterfeiters (2007) போன்றவை முக்கியமானவை . ஹாலிவுட்டின் கறுப்பு வெள்ளை யுகத்தில் குற்றப்பின்புலம் கொண்ட படங்களில் Mister 880 போலச் சில அபூர்வமான படங்கள் வெளியாகியுள்ளன.
கோடிக்கணக்கில் கள்ளநோட்டு அச்சிட்டு மாட்டிக் கொள்ளும் குற்றவாளிகளை போலின்றி ஒரு டாலர் நோட்டினை மட்டுமே அச்சிட்டு அதுவும் அந்தப் பணத்தைத் தனக்கெனப் பயன்படுத்திக் கொள்ளாத ஒரு குற்றவாளியின் கதையைத் தான் படம் விவரிக்கிறது

1950களில் அமெரிக்காவில் கள்ளநோட்டுப் புழக்கம் அதிகமானதால் காவல்துறை இதற்கெனச் சிறப்புப் பிரிவினை உருவாக்குகிறது. அவர்கள் நாடுமுழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி கள்ளநோட்டு கும்பலைக் கைது செய்கிறார்கள். இந்தத் தேடுதலில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத வழக்காக இருப்பது ஒரு டாலர் மோசடி.
பழைய, கிழிந்து போன நோட்டு போலக் காணப்படும் கள்ளநோட்டு அச்சு அசலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நோட்டினை அடித்தவர் யார். எங்கிருந்து செயல்படுகிறார் என்பதைக் கண்டறியவே முடியவில்லை. 20 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத வழக்கு என்பதால் இதைக் கண்டுபிடிக்கப் புலனாய்வாளர் ஸ்டீவ் புக்கனன் நியமிக்கப்படுகிறார். அவர் பிடிபடாத குற்றவாளியை அடையாளப்படுத்தும் விதமாக Mister 880 எனப் பெயரிடுகிறார்.
இப்படம் எமெரிச் ஜூட்னர் என்ற ஆஸ்திரியரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு டாலர் நோட்டு அச்சடித்த குற்றத்திற்காகச் சிறை சென்ற ஜூட்னர் இந்தப் படத்தின் கதைக்காகப் பெற்ற பணம் அவர் அடித்த கள்ளநோட்டுகளைப் போலப் பலநூறுமடங்கு அதிகம் என்கிறார்கள்.

ஒரு டாலர் நோட்டினைத் தேடும் ஸ்டீவ் புக்கனன் ஏஜென்ட் மேக்குடன் நியூயார்க்கிற்கு வந்து சேருகிறார். அங்கே விசாரிக்கத் தொடங்கும் போது கள்ள நோட்டைக் கைமாற்றிய ஒரு பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறார். ஐ.நா.சபையில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வேலை செய்யும் ஆன் வின்ஸ்லோவிடம் விசாரணை நடத்திய போது அது கடையில் கிடைத்த சில்லறை என்கிறாள். அந்தக் கடைக்கு எப்படி வந்தது. ஒரு டாலர் அச்சிடும் ஆள் எங்கேயிருக்கிறான் என்று தேட ஆரம்பிக்கிறார்கள்
இதற்கிடையில் பழைய பொருட்களை விற்கும் வயதான வில்லியம் முல்லர் ஆன் வின்ஸ்லோ வசிக்கும் அதே குடியிருப்பில் வசிக்கிறார். அவரை அக்குடியிருப்பில் அனைவரும் நேசிக்கிறார்கள்.

முல்லர் தனது வீட்டின் அருகிலே சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து ஒரு டாலர் அச்சிடுகிறார். அதுவும் மிகக்குறைவான அளவு மட்டுமே அச்சிடுகிறார். அதையும் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தவே செலவு செய்கிறார். சில நேரம் வீட்டுவாடகை கொடுக்கப் பணம் அடிக்கிறார். மற்றபடி கள்ளநோட்டு அச்சிட்டு எந்த முறைகேடான வேலையிலும் ஈடுபடவில்லை.
முல்லர் ஒரு நாள் ஸ்பின்னிங் வீல் ஒன்றை ஆனியிடம் விற்கிறார். இதற்காக மூன்று டாலர் பணம் கேட்கிறார். அவள் ஐந்து டாலர் தரவே மீதமுள்ள இரண்டு டாலருக்குத் தனது கள்ளநோட்டினை அவளது பர்ஸினுள் வைத்துவிடுகிறார். இது தெரியாமல் ஆனி அந்தப் பணத்தை மாற்றும் போது கள்ளப்பணம் எனப்பிடிபடுகிறாள்.
போலீஸ் கள்ளநோட்டுக்காரனைக் கைது செய்வதற்காகக் கோனி தீவில் ஒரு திட்டத்தை உருவாக்குகிறார்கள்.. அதில் நிச்சயம் மாட்டிக் கொள்வார் எனக் காத்திருக்கிறார்கள். ஆனால் தப்பிவிடுகிறார். ஆனின் மீது காதல் வசப்படும் ஸ்டீவ் அவளைச் சந்திக்க வரும் போது முல்லரை அறிமுகம் செய்து கொள்கிறார். அவர் தான் குற்றவாளி என அப்போது தெரியவில்லை.
அக்கம்பக்கத்தில் உள்ள வணிகர்களுக்குக் கள்ளநோட்டாக உள்ள ஒரு டாலரை எப்படிக் கண்டறிவது என்பதைக் காட்டும் அட்டைகள் தரப்படுகின்றன. தன்னைப் போலீஸ் தேடுவதை அறிந்த முல்லர் தனது அச்சு இயந்திரத்தை ரகசியமான இடத்தில் புதைத்துவிடுகிறார். அங்கிருந்து தப்பிச் செல்ல திட்டமிடுகிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக மாட்டிக் கொள்கிறார். போலீஸ் அவரைக் கைது செய்கிறது. முல்லர் தான் குற்றவாளி என அவளால் நம்பமுடியவில்லை.
நீதிமன்ற விசாரணையின் போது முல்லர் தனது குற்றத்தை ஒத்துக் கொள்கிறார் அத்தோடு எதற்காகக் கள்ளநோட்டு அச்சிட்டார் என்ற தனது தரப்பு நியாயத்தையும் சொல்கிறார். அது ஏற்றுக் கொள்ளதக்கதாகவே இருக்கிறது. ஆனாலும் அரசை தவிர வேறு எவரும் நோட்டு அச்சிடக்கூடாது என்பதால் அவரது குற்றத்தை நீதிபதி தண்டிக்கிறார். ஒரு வருடம் மற்றும் ஒரு நாளாகத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்துடன் ஒரு டாலர் அபராதமும் விதிக்கப்படுகிறது. அந்த டாலர் நல்ல நோட்டாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சிரிக்கிறார் நீதிபதி. ஆனால் முல்லரிடம் உள்ள பணம் முழுவதும் போலியானது. ஆகவே அவருக்கான ஆன் பணம் செலுத்துகிறாள்.

தான் செய்தது குற்றமில்லை என்றே முல்லர் நினைக்கிறார். வணிகர்கள் எளிதாக ஒரு டாலர் விலையை அதிகம் சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஒரு டாலரை இழப்பதைப் பொதுமக்களும் பெரிதாக நினைப்பதில்லை. ஆகவே தனது வாழ்க்கை நெருக்கடிகளைச் சமாளிக்க இப்படிச் செய்தேன் என்கிறார். அதுவும் தனது மாமா ஹென்றி பணம் தருவதாகச் சொல்லியே கள்ளநோட்டு அச்சிடுகிறார்.
குற்றம் செய்யும் முல்லரிடமும் சில நியதிகள் இருக்கின்றன. அவர் ஒருவரிடம் ஒரு டாலர் தான் ஏமாற்றுகிறார். அவர் இரண்டு டாலர்களை ஏமாற்றிய ஆன் மூலமே கடைசியில் பிடிபடுகிறார். அவரைக் காட்டிக் கொடுத்தது அவரது இச்சிறுசெயலே.
September 21, 2022
மதுரை புத்தகத் திருவிழா
மதுரை புத்தகத்திருவிழா செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறுகிறது
இடம் : தமுக்கம் மைதானம்
இந்தப் புத்தகத்திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.
செப்டம்பர் 25 ஞாயிறு மாலை புத்தகத்திருவிழா அரங்கில் உரையாற்றுகிறேன்

September 20, 2022
பழைய மதராஸ்
பிதியா மேரி க்ரோக்கர் எனப்படும் பி.எம்.க்ரோக்கர் பிரிட்டனைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் 14 ஆண்டுகள் வசித்திருக்கிறார். இதில் சில காலம் வெலிங்டனில் வாழ்ந்திருக்கிறார். 1882 ஆம் ஆண்டுத் தனது 33 வயதில் எழுதத் துவங்கிய க்ரோக்கர் 1919 வரையுள்ள 37 ஆண்டுகளில் 44 நாவல்கள் மற்றும் ஆறு சிறுகதைகளின் தொகுதிகளை எழுதியிருக்கிறார்.
இவரது நாவல்கள் இங்கிலாந்தில் விரும்பி வாசிக்கபட்டன. சில நாவல்கள் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன.

இதில் In Old Madras என்ற நாவல் சென்னையை மையமாகக் கொண்டது.
இந்தியாவில் ராணுவத்தில் பணிபுரிந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது மாமாவைத் தேடி இங்கிலாந்திலிருந்து மதராஸிற்கு வருகிறார் ஜெஃப்ரி மாலண்டர்

ஒரு நாள் கேப்டன் மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகள் பெங்களூரிலிருந்து வேட்டைக்குச் செல்கிறார்கள். அந்தப் பயணத்தில் அவர்கள் மைசூர் வழியாகக் கூர்க் வரை செல்கிறார்கள். மறு நாள் காலை கேப்டன் கூடாரம் காலியாக இருப்பது கண்டறியப்படுகிறது, அவருடைய உடைமைகள் சிதறிக்கிடக்கின்றன, அவரைக் கண்டறிய முடியவில்லை. அவர் காவிரி ஆற்றில் மூழ்கிவிட்டார், அவரது உடல் மீட்கப்படவில்லை என்று ராணுவம் தெரிவிக்கிறது.
ஆனால் கேப்டன் இறந்துவிட்டதாகக் கூறப்படும் ஒரு வருடத்திற்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. ஆகவே அவர் ஆற்றில் மூழ்கிச்சாகவில்லை எங்கோ ஒளிந்து வாழுகிறார் என்ற சந்தேகம் உருவாகிறது.
உயிருடன் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் அவரைத்தேடி மதராஸிற்கு வருகிறார் ஜெஃப்ரி. ஆனால் மாமாவைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை.
தனது உறவினர் ஃப்ரெடி மற்றும் அவரது மனைவி ஃபேனி ஆகியோருடன் ஜெஃப்ரி தங்குகிறார். அவரைத் தங்கள் சொந்த மகனைப் போலவே நடத்துகிறார்கள்.
ஜெஃப்ரி மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது என்று ஃப்ரெடியும் ஃபேனியும் நினைக்கிறார்கள், அதனால் அவரைத் திசைதிருப்ப முயலுகிறார்கள். ஆனால் ஜெஃப்ரி தனது தேடுதலை நிறுத்தவில்லை அவரது சாகசங்களை விவரிக்கிறது இந்நாவல்.. அன்றைய சென்னையின் வாழ்க்கை மற்றும் பிரிட்டிஷ் குடும்பங்களின் இயல்பு பற்றி க்ரோக்கர் நுட்பமாக எழுதியிருக்கிறார்.
ஊட்டியில் வசித்த அவரது நினைவுகளையே நாவலிலும் க்ரோக்கர் எழுதியிருக்கிறார்
After a short stay in Madras, a bungalow in the Neilgherries was Fanny’s first home. It was at Ooty that she engaged her Indian retinue, unpacked her glass and china, and set up her own dog. Her husband’s friends, so well known by name, had unanimously offered her a hearty welcome; these were mostly military people, with easy, agreeable manners. Her garden was fragrant with roses and violets, the view from the verandah of Cranford Hall was unsurpassed, and how the sun shone! Caught into a whirl of congenial society, Frances Ann found herself in another world.
இவை அன்றைய சென்னைக் காட்சிகள்
It had been one o’clock when Mallender left the Fort—at an hour when all Madras was under the spell of noonday quiet; servants were “eating rice,” animals resting, the very crows and hawks temporarily suppressed—but now the city was awake; the Gorah bazaar, and Georgetown, were humming like bee-hives, heavily laden trams, crammed with passengers, clanged and rumbled up and down the Mount Road, the old established “Europe” shops, such as Orr’s, Spencer’s, and Oak’s, were brilliantly alight and filled with customers; motors and bicycles skimmed hither and thither—luxurious carriages drawn by steppers rolled by, whilst picturesque foot-passengers, Jutkas, and leisurely bullock-carts gave a touch of local colour to the scene.
Such was the traffic, that it was a considerable time before Colonel Tallboys’ Napier could extricate itself and thread its smooth way by Royàpetta towards Egmore. As the car turned sharply through an entrance gate and up the long drive to Hooper’s Gardens, Mallender was both impressed and surprised. Here was no mere bungalow, but the lofty stately dwelling of a one-time merchant prince—reared in an age when space, and rupees, were amply available.
“Hooper’s Gardens” stood surrounded by fifty acres of short, coarse grass, a white, two-storied mansion with pillared verandahs, a flat roof, and imposing portico. Against a dense background of palms and shrubberies were pitched a group of tents.
“We are a bit on the outside skirts of fashion,” explained Colonel Tallboys, “but it’s a noble, spacious old house—built in spacious times. One or two wealthy natives live hereabouts in others of the same class. My neighbour is a Prince of the family of Gulberga. His premises are a jungle, the whole place is disgracefully kept, full of horses, mountebanks, and squalid retainers. The fellow is a terrible drawback, I must confess. Well, here we are,” he added as the car stopped; “I expect we shall find Fanny in the drawing-room.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

