S. Ramakrishnan's Blog, page 76
October 22, 2022
October 18, 2022
ஞாபகக் கல்
புதிய சிறுகதை
அரூ இணைய இதழில் வெளியானது
•••
சிறிய அலுமினிய டப்பா ஒன்றினுள் ஒரு கல்லையும் மூன்று சொற்கள் கொண்ட ஒரு துண்டு சீட்டினையும் அம்மா விட்டுச் சென்றிருந்தாள்.

இந்தப் பெட்டி அவளது பட்டுப்புடவைகளுக்குள் மறைத்து வைக்கபட்டிருந்தது. அம்மா இறந்தபிறகு அவளது பொருட்களை அப்படியே பீரோவில் வைத்துப் பூட்டி அதன் சாவியை அப்பா வைத்திருந்தார். அதை நாங்கள் திறக்கவேயில்லை
கோடை விடுறைக்கு அமெரிக்காவிலிருந்து லீலா தனது பிள்ளைகளுடன் வந்திருந்த நாளில் அவள்தான் அப்பாவிடம் கேட்டு பீரோ சாவியை வாங்கினாள்.
ஒருவேளை அம்மாவின் புடவைகளை எடுத்துக்கொள்வதற்காகக் கேட்டிருக்கக் கூடும். எலுமிச்சை நிறப் பட்டுப்புடவை ஒன்றினுள் வைக்கபட்டிருந்த இந்தப் பெட்டியை அவள்தான் கண்டறிந்தாள். பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு வியப்புடன் என்னிடம் சொன்னாள்
“ரகு.. அம்மா எதையோ எழுதி வச்சிருக்கா பாரேன்”
நான் அந்த அலுமினிய டப்பாவைக் கையில் வாங்கித் திறந்தேன். உள்ளங்கையில் வைத்துக் கொள்வது போன்ற ஒரு கருங்கல். அத்தோடு ஒரு துண்டு சீட்டு.
அந்தத் துண்டு சீட்டில் நான் ஒரு விஞ்ஞானி என்று எழுதப்பட்டிருந்தது.
பெட்டியின் மேலே மிதக்கும் கல் என்று ஸ்கெட்ச் பேனாவால் எழுதியிருந்தாள்.
நான் அந்தக் கல்லை எடுத்து மேல்நோக்கி எறிந்தேன். அது காகிதக் கொக்கு காற்றில் பறப்பது போல மிதந்து கொண்டிருந்தது.
“லீலா இதைப் பாரேன்” என்று உரத்துச் சப்தமிட்டேன்
லீலாவால் நம்பமுடியவில்லை.
உயரமான கிளையிலுள்ள மலரைத் தாவிப் பறிப்பது போல அந்தக் கல்லைத் தனது கைவசமாக்கிய லீலா சொன்னாள்
“மிரகிள். எப்படி இந்தக் கல் காற்றில் மிதக்குது.”
“அம்மாவைத்தான் கேட்கணும்” என்றபடி “பீரோவுள்ளே வேற ஏதாவது டயரி இருக்கா பாரு” என்றேன்.
அம்மாவின் பீரோவிற்குள்ளிருந்து லீலா ஒரு கணக்கு நோட்டு ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தாள். இது லீலா ஏழாம் வகுப்பு படிக்கும்போது பயன்படுத்திய பழைய நோட்டு. பின்பக்கமிருந்த வெள்ளை பேப்பர்களில் அம்மா எதையோ கிறுக்கி வைத்திருக்கிறாள்.
வேகவேகமாக அதைப் புரட்டிய லீலா சொன்னாள்.
“எனக்கு ஒண்ணுமே புரியலை. நீயே படிச்சி பாரு.”
சிறுநீரகச் செயலிழப்புக் காரணமாக அம்மா தனது நாற்பத்திரெண்டாம் வயதில் இறந்து போனபோது நான் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். லீலா பத்தாம் வகுப்பில் இருந்தாள். அம்மா நீண்டகாலம் மருத்துவமனையிலே இருந்தாள். நிறைய முறை நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று அவளைப் பார்த்திருக்கிறோம். இரண்டு முறை நலமடைந்து வீடு திரும்பியிருக்கிறாள். அப்போதும் வெளிறிப்போன அவளது முகத்தில் வேதனை உறைந்து போயிருந்தது. திடீரென ஒரு நாள் இரவு அம்மா மயங்கி விழுந்தாள். மருத்துவமனையில் சேர்த்தபோது நினைவை இழந்திருந்தாள். பின்பு அவள் நினைவு கொள்ளவேயில்லை. எல்லோரையும் மறந்த நிலையிலே இறந்துபோய்விடுவது எவ்வளவு துயரமானது.
•••
“நான் ஒரு விஞ்ஞானி” என்ற அம்மாவின் மூன்று சொற்கள் என்னைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்தன.
அம்மாவின் இந்த அடையாளத்தைப் பற்றி அவள் உயிரோடு இருந்தவரை நாங்கள் அறிந்திருக்கவில்லை.
சில நாட்கள் அம்மா என் அக்கா லீலாவின் ரிக்கார்ட் நோட்டுகளுக்குப் படம் வரைந்து கொடுத்திருக்கிறாள். சில கணித சூத்திரங்களை விளக்கிச் சொல்லிக் கொடுத்திருக்கிறாள் என்பதைத் தாண்டி அவளது அறிவியல் ஆர்வம் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை.
அதற்குக் காரணம் அப்பா. அவருக்கு அம்மா எப்போதும் சமையல்கட்டிலே இருக்க வேண்டும். சில வேளைகளில் அவள் தோட்டத்துச் செடிகளின் இலைகளைச் சீராக்கிக் கொண்டிருக்கும்போது ”வெளியே என்ன செய்றே” என்று அப்பா கோபமாகக் கத்துவதைக் கேட்டிருக்கிறேன். அப்பா வீட்டில் இருக்கும்வரை அம்மா சமையலறையில் தானிருந்தாள். அதைப் பற்றி எதுவும் குறை சொன்னதாக நினைவில்லை. வீட்டிலிருக்கும் நேரத்தில் அப்பா நாலைந்து முறை தேநீர் அருந்துவது வழக்கம். அதற்காகக் கெட்டிலில் எப்போதும் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும்.
அப்பா ராபின்சன் எஸ்டேட்டில் மேலாளராக வேலை செய்து வந்தார். எஸ்டேட் குடியிருப்புகளில் ஒன்றில் நாங்கள் குடியிருந்தோம். அது மூன்று அறைகள் கொண்ட வீடு. வீட்டின் பின்புறம் நிறைய இடமிருந்தது. அதில் அம்மா தோட்டம் அமைத்திருந்தாள். நாங்கள் பள்ளிக்கும் அப்பா எஸ்டேட் அலுவலகத்திற்கும் சென்றபிறகு அம்மா வீட்டில் என்ன செய்தாள் என்று எங்களுக்குத் தெரியாது
அம்மாவிற்குத் தோழிகள் எவருமில்லை. பக்கத்துக் குடியிருப்பிலிருந்த மேரி என்ற மலையாளப் பெண்ணுடன் மார்க்கெட் போய் வருவாள். வீட்டிலிருக்கும்போது ரேடியோ கேட்கும் பழக்கம்கூட அம்மாவிடம் கிடையாது. அவளது பகல்பொழுதைப் பற்றி இப்போது நானாகக் கற்பனை செய்து கொள்கிறேன்.
எஸ்டேட்டிற்குள் விநோதமான ஒசையொன்று எப்போதும் இருந்து கொண்டிருக்கும். காற்றால் உருவான இலைகளின் ஒசை திடீரென அதிகமாகவும் திடீரென உறைந்து போவதுமாக இருக்கும். தூரத்தில் ஒலிக்கும் பறவைகளின் குரல். ஜீப் செல்லும் சப்தம். ஜன்னல் வழியே தெரியும் கடந்து செல்லும் மேகங்கள். சோம்பலுற்ற நாய்களின் நடமாட்டம். அணைக்காமல் விட்டுப் போன தாமோதரன் மாஸ்டர் வீட்டின் முகப்பு விளக்கு. ஜீப்பின் அவசர வேகத்தால். பாதி நசுங்கி வளராமல் போன செடிகள். யாரோ வீசி எறிந்துபோன காலி மதுப்போத்தல்கள். ஆரஞ்சு வண்ண ஸ்வைட்டர் அணிந்து சைக்கிளில் வரும் தபால்காரன், பீடி புகைத்தபடியே நடந்து செல்லும் இரவுக்காவலாளி. வீட்டுவாசலில் உள்ள கல்லில் ஒங்கியோங்கித் துணியை அடித்துத் துவைக்கும் லிசியின் கலைந்த கூந்தல். வெயிலைக் கொத்தி அலையும் கோழிகள் என எஸ்டேட்டின் பகல் விநோதமானது.
மலர்களைத் தனக்கு விருப்பமான முறையில் கோர்த்துக் கொள்வதைப் போல அம்மா தனக்காகப் பகலைத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். லீலாவின் பழைய கணக்கு நோட்டு ஒன்றில் அம்மா குறிப்புகள் போல எழுதியிருக்கிறாள். அந்தக் குறிப்புகளில் அவளது பரிசோதனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. எப்படி அவளுக்கு அறிவியலில் ஆர்வம் வந்தது என்றோ, எந்தக் கல்லூரியில் அம்மா படித்தாள் என்றோ தெரியவில்லை. அம்மா இருந்தவரை அதைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. அப்பாவிடம் இதைப் பற்றிக் கேட்கும் போதும்கூட அவர் தெளிவற்ற பதிலைத்தான் சொல்லயிருக்கிறார். ஒருவேளை அவருக்கும் தெரியாமலிருக்கக் கூடும். அல்லது அம்மா அதை மறைத்துச் சொல்லியிருக்கலாம்.
புதிர்கட்டங்களை ஒன்று சேர்ப்பது போலக் கணக்கு நோட்டிலிருந்த குறிப்புகளைக் கத்தரித்துத் தனியே ஒட்டி அம்மா என்னதான் செய்து கொண்டிருந்தாள் என்பதைக் கண்டறிய முயற்சித்தேன்.
இவை அம்மாவின் குறிப்புகள்
•••

நவம்பர் 7 திங்கள் கிழமை
ஒரு கல்லை மிதக்க வைப்பது எளிதானதில்லை. இன்று அதற்கான பரிசோதனைகளைச் செய்து பார்த்தேன். கல் பிடிவாதமானது. அதை எளிதில் கையாள முடியாது. சில வேளைகளில் நான்தான் கல்லாகவும் இருக்கிறேன் என்பது போலவே உணருகிறேன்.
இன்னொரு குறிப்பு இப்படித் துவங்குகிறது
அக்டோபர் 12 புதன் கிழமை
நீண்டகாலமாகத் தொடரும் மௌனம்தான் கல்லாகிவிடுகிறது. கல்லை விழிப்படையச் செய்வதற்காகத் தினமும் அதனுடன் பேசுகிறேன். கல் எடையற்றது என அதை நம்பச் செய்ய வேண்டும். நான் ஒரு அப்பாவி என்று நம்பவில்லையா. அது போல.
இன்றைக்குச் சேவியர் வாங்கிக் கொடுத்த கெமிக்கல்களைக் கலந்தபோது ஒரு துளி வலதுகை பெருவிரல் நகத்தில் பட்டுச் சிவப்பாகிவிட்டது. நிச்சயம் அவர் அதைக் கவனிக்கக் கூடும். சிவப்பு வண்ணமுள்ள நகம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவரது கோபத்திற்குப் பயந்து எல்லா விரல்களுக்கும் மருதாணி வைத்துக் கொள்ளப்போகிறேன்.
நவம்பர் 5 சனிக்கிழமை
இன்றைக்குக் கல் மேஜையிலிருந்து பறப்பது போல அரையடி உயரம் மேலே சென்றது. சந்தோஷமாக உணருகிறேன். லீலா நடக்கத் துவங்கிய முதல்நாள் இப்படித்தான் உணர்ந்தேன். இந்தக் கல்லும் எனது மகள்தான்.
சோர்வாக இருக்கிறது. இதை ஏன் செய்கிறேன் என்று ஆத்திரமாகவும் இருக்கிறது. என்னை நான் வெறுக்கிறேன்.
நவம்பர் 6 ஞாயிற்றுகிழமை
இன்று காலையிலிருந்து எதற்காகவோ ஏரிக்குப் போய் வர வேண்டும் என்று தோன்றியபடியே இருந்தது. நோயாளி சிறுவனைப் போல ஏரி மிகத் தாமதமாகவே விழித்துக்கொள்கிறது. நான் ஏரியின் கரையில் நின்றபடியே மீன்கொத்தி ஒன்றைப் பார்த்தேன். அது எனக்கு வணக்கம் வைப்பது போலப் பறந்து போனது. ஏரியின் கரையில் கிடந்த கல் ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்தேன். இதற்காகத்தான் ஏரிக்கு வந்தேனோ என்னவோ.
நான் ஒரு கனவு கண்டேன். அதைச் சொல்வதற்கு முடியவில்லை. ஆனால் அதை மறக்க விரும்புகிறேன். விரும்பாத கனவுகள் ஏன் பின்தொடர்கின்றன
ஜனவரி 1 இரவு 10.30
கல்லிற்கு ஞாபகம் கிடையாது. ஒவ்வொரு கல்லும் ஒரு மலரே.
இன்றைக்குக் கல் மிதக்கத் துவங்கியது. லீலாவைக் கருக் கொண்ட நாளில் இது போன்ற சந்தோஷத்தைத்தான் உணர்ந்தேன்.
சமையலறைக்குள் கல்லை மிதக்கவிட்டேன். அது சிறகில்லாத பறவையைப் போல அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.
ஜனவரி 3 திங்கள்கிழமை
இன்றைக்குத் தோட்டத்தில்லிருந்தபடி கல்லை வானை நோக்கி எறிந்தேன்.அது. தரைக்கு வர விருப்பமில்லாமல் வானில் சுழன்று கொண்டிருந்தது. வியப்புடன் அதை ஒரு வண்ணத்துப்பூச்சி கடந்து போனதைக் கண்டேன். கல்லிற்கு நான் விடுதலையை வழங்கியிருக்கிறேன்.
மார்ச் 11 வெள்ளிகிழமை
என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் . அவ்வளவுதான்
நான் ஒரு சிலந்தி. என்னைச் சுற்றி நானே வலை பின்னிக்கொள்கிறேன்.
எல்லாக் கற்களையும் மிதக்க வைக்க முடியாது என்பதைக் கண்டுகொண்டேன். வயதான மனிதர்களைப் போலக் கற்களும் இளமையைத் தொலைத்துவிடுகின்றன.
ஏப்ரல் 2 சனிக்கிழமை
பரிசோதனை வெற்றி. ஒரே நேரத்தில் ஆறேழு கற்கள் என்னைச் சுற்றி மிதந்து கொண்டிருந்தன. விஞ்ஞானம் எவ்வளவு ஆச்சரியமானது.
ஏப்ரல் 8 வியாழக்கிழமை
கிடந்துபோன கிணற்றின் சுவரில் ஒரு செடி முளைத்து வளர்ந்திருப்பதைக் கண்டேன். அது நான்தான் என உணர்ந்தேன்.
நான் ஒரு விஞ்ஞானி. எனக்கு நானே பலமுறை சொல்லிக்கொண்டேன்.
•••
அம்மா எதற்காகத் தனது பரிசோதனைகளை நிறுத்திக்கொண்டாள் என்று தெரியவில்லை. ஏன் அவற்றைச் செய்து பார்த்தாள் என்றும் தெரியவில்லை. ஒருவேளை அம்மா பகல்வேளையில் வேறு எங்காவது போயிருக்கக் கூடுமோ என்று தெரியவில்லை
•••
அப்பா சொன்னார்,
“எஸ்டேட் நூலகத்தில் வைத்து அவளை நாலைந்து முறை மனோஜ் பார்த்திருக்கிறான். ஒருமுறை அவள் வின்சென்ட் பாதிரியோடு பேசிக்கொண்டு நடந்து போவதை நானே கண்டிருக்கிறேன். சில விஷயங்களைக் கேட்காமல் விட்டுவிடுவது நல்லது என்பதே எனது அனுபவம். அவள் எதையோ ரகசியமாகச் செய்து கொண்டிருந்தாள் என்பது மட்டும் நிஜம்”
“அம்மா ஒரு கல்லை மிதக்க வைத்திருக்கிறாள்” என்றேன்.
“வீண்வேலை” என்றார் அப்பா.
“அவள் எதையோ பரிசோதனைகள் செய்து பார்த்திருக்கிறாள்.”
“இப்படிக் கிறுக்குத்தனமாக எதையாவது செய்வாள் என்று எனக்குத் தெரியும். கல்யாணத்திற்கு முன்பு அவள் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்திருக்கிறாள்.”
“எந்த ஸ்டுடியோ?”
அப்பா பதில் சொல்லவில்லை.
ஆனால் மூன்று நாட்களின் பின்பு நான் வின்சென்ட் பாதிரியைப் பார்த்தபோது அவர் சொன்னார்.
“உனது அம்மா பத்மலட்சுமி பெரிய அறிவாளி. அவளை அமெரிக்கா அனுப்பிப் படிக்க வைத்திருந்தால் பெரிய சயின்ஸ்டிஸ்ட் ஆகியிருப்பாள். விஞ்ஞானத்தில் அவ்வளவு ஆர்வம்.”
“உங்களுடன் அம்மா என்ன பேசுவாள்?”
இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் உன் அம்மாவிற்குச் சொல்வதற்கு விஷயங்கள் இருந்தன. நிறைய ஆச்சரியங்கள். நிறைய குழப்பங்கள். அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டோம்.”
“அம்மா விஞ்ஞானப் பரிசோதனைகள் செய்திருக்கிறாளா?”
“எங்கள் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலைக்குள்தான் அவள் எதையோ பரிசோதனை செய்து கொண்டிருந்தாள். அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொன்னதில்லை.”
“தினமும் அங்கே வருவாரா?”
“நினைத்தபோது வருவாள். அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். ஆனால் இங்கே வரும்போது அவள் சந்தோஷமாக இருந்தாள்.”
“அந்த அறையை நான் பார்க்க முடியுமா?”
“கேம்ப் ஆபீஸ் பின்பக்கம் இருக்கிறது. நீயே போய்ப் பார்க்கலாம்”
•••
அம்மா தனது பரிசோதனைகளைச் செய்து பார்த்த அறை மிகச்சிறியதாக இருந்தது. அறையின் ஒரு முக்காலியும் மரமேஜையும் இருந்தது. நீல நிற அங்கி ஒன்று ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தது. சுவரில் ஒரு இயேசுவின் படம். பாதி எரிந்த மெழுகுவர்த்தி ஒரு பக்கக் கதவு உடைந்த மர அலமாரி. அதற்குள் நிறைய கெமிக்கல்கள். சிறிய தராசு. கண்ணாடிக் குடுவைகள். உபகரணங்கள். மூத்திரவாடை போன்ற மணம்.
அந்த அறைக்குள் அம்மா நிற்பதைக் கற்பனை செய்துகொண்டேன். அது நான் அறிந்த அம்மாயில்லை. அவள் ஒரு சயின்ஸ்டிட். அவளை எனக்குத் தெரியாது
•••
சில நாட்களுக்குப் பிறகு நான் அம்மா வேலை செய்த ஸ்டுடியோ மேகவட்டம் என்ற ஊரில் இருப்பதைப் பற்றிஅறிந்து கொண்டேன். செல்வம் மாமாவிற்கு அதைப் பற்றித் தெரிந்திருந்தது.
மேகவட்டம் சிறியதொரு மலைக்கிராமம். அங்கே ரவுண்டாவை ஒட்டியிருந்த சலூன் கடை மாடியில் அந்த ஸ்டுடியோ இருந்தது. இப்போது அந்த ஸ்டுடியோவை யாரோ நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு அம்மாவைப் பற்றி எதுவும் தெரியவில்லை.
ஆனால் தாஸப்பன் நடத்தியபோது அவள் வேலை செய்து கொண்டிருக்கக் கூடும் என்றார்கள். தாஸப்பனின் வீட்டை தேடி அலைந்து சென்றபோது அவரது மகன் சொன்னார்
“எங்க அப்பா 1983ல் ஸ்டுடியோ ஆரம்பிச்சார். அப்போ எனக்கு ஆறு வயது. அப்போ உங்க அம்மாவை பார்த்து இருக்கேன். பத்மலட்சுமி தானே பேரு.. நான் லட்சுமியக்கானு கூப்பிடுவேன். நல்லா போட்டோ எடுப்பாங்க. ஸ்கூல் பசங்களைப் போட்டோ எடுக்க அவங்க கூடச் சைக்கிள்ல போயிருக்கேன். என்னைக் கூட நிறையப் போட்டோ எடுத்துருக்காங்க.”
அம்மா ஒரு போட்டோகிராபரா என வியப்புடன் யோசித்தேன். தாஸப்பனின் மகன் பழைய போட்டோ ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து காட்டினான். இரண்டு சிறுவர்கள் சைக்கிள் ஒன்றை வைத்தபடியே நின்றிருந்தார்கள்.
“இது நானும் நாராயணனும். அவன் இப்போ நார்வேல இருக்கான், அப்போ நான் எவ்வளவு அழகா இருந்திருக்கிறேன்” என ஏக்கத்துடன் சொன்னான்.
மிகவும் அழகாக எடுக்கப்பட்ட புகைப்படம். சைக்கிளின் நிழல் அத்தனை அழகாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்க்க பார்க்க அம்மாவின் திறமை வியப்பூட்டியது.
அவள் எங்களுடன் இருந்த நாட்கள் அவளது ஒரு பக்கம்தான் போலும். தனது சிறகை உதிர்த்துவிட்டுச் செல்லும் பறவையைப் போல அவள் கடந்தகாலத்தை உதறி முன்னோக்கிப் போயிருந்திருக்கிறாள்.
நாங்கள் அறிந்த அம்மாவிற்கும் நாங்கள் அறியாத பத்மலட்சுமிக்கும் இடையில்தான் எவ்வளவு இடைவெளி.
காலம் ஏன் பத்மலட்சுமியை வெறும் அம்மாவாக மட்டும் மாற்றியது.
•••
அப்பாவை விடவும் அம்மாவோடு நான் நெருக்கமாகயிருந்தேன். அப்பாவிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால்கூட அம்மாவிடம்தான் சொல்வேன். அம்மாவும் லீலாவும் அவ்வளவு நெருக்கமாக இருப்பார்கள். லீலாவைப் பார்த்தால் அம்மாவின் முகச்சாயல் அப்படியே இருக்கும். அம்மாவின் நடமாடும் நிழல்தான் லீலா.
அம்மாவோடு அவ்வளவு நெருக்கமாக இருந்தும் அவளது கனவுகளை நான் அறிந்திருக்கவேயில்லை. அவளது வேர்கள் ரகசியமாக இயங்கிக் கொண்டேயிருந்திருக்கின்றன.
அம்மாவின் மிதக்கும் கல்லை அலுமினியப் பெட்டியில் வைத்து என்னுடனே வைத்துக்கொண்டேன்.
அந்தக் கல்லை என்ன செய்வது? பொருட்களின் மீது நினைவு படிந்துவிடும் போது அதன் மதிப்பு மாறிவிடுகிறது. அம்மாவின் இந்தக் கல் பேரதியசமாக எனக்குத் தோன்றியது.
தனது ரகசியங்களை இந்தக் கல்லில் மறைத்துவிட்டுப் போயிருக்கிறாள் அம்மா. நாம் ஒவ்வொருவரும் நமக்கென ஒரு ரகசிய உலகைக் கொண்டிருக்கிறோம். அதற்குள் சஞ்சரிக்கிறோம். அந்த உலகை இன்னொருவர் புரிந்துகொள்ள முடியாது.
பறக்கும் கல்லை விடவும் அம்மாதான் விநோதமாக இருந்தாள். உலகின் ரகசியங்களை அறிந்துகொள்ளும் நாம் உடனிருப்பவர்களின் ரகசியங்களை அறிந்துகொள்வதில்லை.

சில நாட்கள் இரவில் அந்தக் கல்லை வெளியே எடுத்து மிதக்கவிட்டுப் பார்ப்பேன். அந்தக் கல் மிதக்கும்போது நானும் மிதப்பது போலவே இருக்கும். இதைத் தான் அம்மாவும் உணர்ந்திருப்பாளோ.
வீட்டின் கூரையைப் போல எங்களைப் பாதுகாப்பாகத் தாங்கிக் கொண்டிருந்த அம்மா தனக்குள் விரிந்த ஆகாசம் போல மர்மமாகவும் விசித்திரங்களை ஒளித்துக் கொண்டதுமாக வாழ்ந்திருக்கிறாள்.
அந்தக் கல் எனது சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கையைக் கேலி செய்கிறது. மிகவும் குற்றவுணர்வு கொள்ளச் செய்கிறது. அதனாலே அதைப் பெட்டியில் பூட்டி வைத்துக்கொள்கிறேன்.
மறந்துவிட்டவன் போலப் பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறேன்
அம்மாவின் கல்லிற்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் என்று விரும்பினேன். அந்தப் பெயரை உலகம் அறியாமல் எனக்குள்ளாக வைத்துக் கொள்ளவேண்டும என்று ஏனோ தோன்றியது.
இடக்கை நாடகம்
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஔவை மன்றத் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன்.

இந்நிகழ்வில் மாணவியர் எனது இடக்கை நாவலின் முக்கியப் பகுதியை நாடகமாக்கியிருந்தார்கள். மிகச்சிறப்பான நாடகமாக உருவாக்கபட்டிருந்தது.
குறிப்பாக ஔரங்கசீப்பாக நடித்துள்ள பெண் அபாரமாக நடித்தார். இடக்கை நாவலை ஆழ்ந்து படித்து உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்திருந்தார்கள். நாடகத்தை மானசி இயக்கியிருந்தார். நாடகத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டினைத் தெரிவித்தேன்.
அவர்கள் இந்த நாடகத்தை வெளி அரங்கில் நிகழ்த்தினால் இன்னும் அதிக கவனமும் பாராட்டும் பெறும் என்பது நிச்சயம்
ஔவை மன்ற துவக்கவிழாவில் யாழ் இசையைக் கேட்டேன்.

யாழ் இசைக்கருவியை மீட்டுருவாக்கம் செய்துள்ள தருண் சேகர் தனது URU குழுவோடு இசை நிகழ்ச்சியை நடத்தினார். மிக இனிமையான இசை. யாமம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இசை நிகழ்த்தினார்கள். தருண் மற்றும் அவரது குழுவினரை மனம் நிறைந்து பாராட்டினேன்.
பெட்னா நிகழ்வு
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணைய வழி இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
தலைப்பு :
எழுதப்படாத உண்மைகள்
நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 22
நேரம் : இந்திய நேரம் இரவு 9 மணி
அமெரிக்க நேரம் காலை 11 30 மணி
நேரலை – Zoom Live : https://tinyurl.com/FETNAIK2022
Zoom Meeting ID: 893 5830 7330
Passcode: 577073

October 14, 2022
பொள்ளாச்சியில்
16.10.22 ஞாயிறு காலை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 100 வது நிகழ்வில் கலந்து கொண்டு கவிதையும் கவிஞனும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்

ஆங்கில இதழில்
எனது புருவமில்லாத பொம்மைகள் சிறுகதை borderlessjournal இதழில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர்
டாக்டர் சந்திரமௌலி

இணைப்பு
The Browless Dollsதுகளின் பயணம்.
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் பட இயக்குநர் டுடோக் இயக்கிய குறும்படம் The Aroma of Tea (Michael Dudok de Wit.)2006

ஜப்பானிய சித்திர எழுத்து பாணியில் நேர்த்தியான இசையோடு அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்.
October 13, 2022
வளையத்திற்கு வெளியே
புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரனின் வீழ்ச்சியைப் பேசுகிறது Requiem for a Heavyweight (1962) திரைப்படம். பெலினியின் La Strada படத்தில் ஆன்டனி குயின் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். அதற்கு இணையான படமாகவே இதைச் சொல்வேன்.

பதினேழு வருடங்கள் ஹெவிவெயிட் சேம்பியனாகயிருந்த, நாற்பது வயதான மவுண்டன் ரிவேரா என்ற குத்துச்சண்டை வீரனாக ஆன்டனி குயின் நடித்திருக்கிறார். மிக நேர்த்தியான நடிப்பு.
அடிபட்டு வீங்கிய கண்ணுடன், எதிர்காலம் பற்றிய குழப்பங்களுடன், குடிபோதையில் அவர் நடந்து கொள்வதும். உதவி செய்ய முன்வரும் பெண்ணுடன் பழகும் போது ஏற்படும் தயக்கமும், தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு நட்பிற்காக விரும்பாத விஷயத்தைச் செய்வதும் என அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்
படம் மவுண்டன் ரிவேராவின் குத்துச்சண்டை போட்டியில் துவங்குகிறது. காசியஸ் க்ளேயின் என்ற வீரனுடன் மோதுகிறார். ஏழாவது சுற்றில் கண்ணில் அடிபட்டு பார்வை மங்கித் தடுமாறுகிறார், க்ளேயின் குத்து அவரை நிலை குலையச் செய்கிறது. போட்டியில் தோற்ற அவரை மருத்துவச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிறார்கள்.

மருத்துவர் அவரைப் பரிசோதனை செய்துவிட்டு இடது கண்ணில் பலமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மற்றொரு குத்து விழுந்தால் முற்றிலும் பார்வை இழப்பு ஏற்படும் அல்லது அல்லது நிரந்தர மூளைச் சேதத்திற்கு வழிவகுக்கும் ஆகவே இனிமேல் குத்துச்சண்டை போட்டிகள் எதிலும் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார்.

இதை மவுண்டனால் ஏற்க முடியவில்லை. குத்துச்சண்டை போட்டிகளைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது. உறவினர் என்று யாரும் கிடையாது. . அவரது மேலாளரும் பயிற்சியாளருமான மாஷ் மவுண்டனை வைத்துக் குத்துச்சண்டை போட்டியில் பந்தயம் கட்டியிருக்கிறார். மவுண்டன் தோற்றுவிடவே பணம் கேட்டு மோசடிகும்பல் அவரை மிரட்டுகிறார்கள்.
இனி தன்னுடைய பிழைப்பிற்கு என்ன செய்வது என மவுண்டனிற்குத் தெரியவில்லை. வேலை தேடி அலைகிறார்
அவருக்கு உற்றதுணையாக இருப்பது மவுண்டனின் உதவியாளராகவும் தந்தையைப் போல நேசிப்பவருமான ஆர்மி மட்டுமே. அவர் மாஷின் சுயநலத்தைப் புரிந்து கொண்டு கண்டிக்கிறார். ஆனால் பணக்கஷ்டத்தில் மாட்டிக் கொண்ட மாஷ் எப்படியாவது மவுண்டனை திரும்பப் போட்டிக்களத்திற்குக் கொண்டு வர முயலுகிறார்
ஆறாம்வகுப்பு மட்டுமே படித்துள்ள மவுண்டனிற்கு என்ன வேலை கேட்பது எனத் தெரியவில்லை. நடிக்கப் போவதாக இருந்தாலும் வேஷம் கிடைப்பதில்லை. இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றும் கிரேஸ் மில்லர் அவர் மீது பரிவு கொண்டு உதவி செய்ய முன்வருகிறாள்.

ஒரு நாள் கிரேஸ் மில்லர் குத்துசண்டைவீர்ர்கள் சந்திக்கும் மதுவிடுதிக்கு மவுண்டனைத் தேடி வருகிறாள். அது ஒரு அற்புதமான காட்சி. அவளுடன் பியர் அருந்தும் மவுண்டன் முதன்முறையாக இசை கேட்கிறார். தனது வாழ்க்கை முழுவதும் குத்துச்சண்டையிலே கழிந்துவிட்டது ஆகவே இனிமையான இசையைக் கேட்கும் வாய்ப்பே வரவில்லை என்கிறார். அந்தச் சந்திப்பில் மவுண்டன் தனது கடந்தகாலம் பற்றி ஆசையாகப் பேசுகிறார். இரவில் அவளுடன் வீதியில் நடந்து வரும் போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை மவுண்டன் காட்டிக் கொள்கிறான். அந்த இரவு அவரது வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இன்னொரு காட்சியில் மவுண்டனை தேடி அவரது அறைக்கே கிரேஸ் மில்லர் வருகிறாள். அவளை முத்தமிடும் மவுண்டன் தான் எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடும் என அவளை விடைகொடுத்து அனுப்பி வைப்பது சிறப்பான காட்சி.
சிறார் முகாம் ஒன்றில் மவுண்டன் கவுன்சிலராக வேலைக்குச் சேருவதற்குக் கிரேஸ் ஏற்பாடு செய்கிறாள். குறிப்பிட்ட நாளில் இதற்கான நேர்காணலுக்கு மவுண்டன் செல்ல வேண்டும். அதை அறிந்த மாஷ் வேண்டுமென்றே அவரைக் குடிக்க அழைத்துச் சென்று நேர்காணலைத் தடுத்துவிடுகிறான். ஆனால் உண்மை அறிந்த மவுண்டன் போதையுடன் நட்சத்திர விடுதிக்குச் செல்கிறார். எந்த அறை எனத் தெரியாமல் எல்லா அறைக்கதவுகளையும் தட்டுகிறார். குழப்பம் விளைவிக்கிறார். அவரது முரட்டுத்தனத்தால் அந்த வேலை பறிபோகிறது

இந்நிலையில் வேடிக்கையான ஒப்பனை அணிந்து கொண்டு நடக்கும் குத்துச்சண்டை போட்டி ஒன்றில் மவுண்டன் கலந்து கொண்டு அடிவாங்கித் தோற்றால் பணம் கிடைக்கும் என்று தெரியவருகிறது. மாஷ் அதற்கு ஏற்பாடு கொள்கிறான். ஆரம்பத்தில் இதற்குச் சம்மதித்த மவுண்டன் அது தனக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என உணர்ந்து விலகிப் போகிறார். இதனால் மாஷ் கொல்லப்படும் சூழல் உருவாகிறது. முடிவில் நட்பிற்காக மவுண்டன் தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கிறார்
நான்கே கதாபாத்திரங்கள். அதுவும் கிரேஸ் மில்லர் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். முக்கியக் கதாபாத்திரங்கள் மூவர் மட்டுமே. இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் யாவும் நிஜமாக இருக்கின்றன. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மவுண்டன் தன்னைப் பற்றிச் சொல்வதும் மதுவிடுதியில் தனது கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதும், வீட்டில் தன்னை மாஷ் ஏமாற்றியதை அறிந்து கோபம் கொள்வதும் மறக்கமுடியாத காட்சிகள்.
புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரனாக இருந்தாலும் மவுண்டன் தனக்கென எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை, அவன் சுரண்டப்படுகிறான் அவமானப்படுத்தப்படுகிறான். ஆனால் முடிவில் தன்னை ஏமாற்றியவனை மன்னித்து உதவி செய்கிறான்.
குத்துச்சண்டை போட்டியில் பந்தயம் கட்டி பணம் சம்பாதிக்க முயலும் மாஷ் ஏமாற்றுக்காரனில்லை. அவனுக்கும் எதிர்காலம் குறித்த பயமிருக்கிறது. பணத்தேவை இருக்கிறது. அதை ஒரு காட்சியில் வெளிப்படையாகவே தெரிவிக்கிறான். சூழ்நிலை தான் அவனைத் தவறுகளை நோக்கித் தள்ளுகிறது.
கதாபாத்திரங்களின் அகவுணர்வுகள் ஒளி மற்றும் நிழல் வழியே அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. தனியே இரவில் மவுண்டன் வீதியில் சுற்றியலையும் காட்சிகளும், மதுவிடுதி சூழலும், குத்துச்சண்டை போட்டியும் Arthur Ornitz யால் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மவுண்டனின் கடந்தகால வெற்றிகள் உலகிற்குப் பெரிய விஷயமில்லை. புதிய வீரன் உருவாகிவருவான். புதிய வெற்றிகளைப் பெறுவான். உலகம் கைதட்டி ஆரவாரம் செய்யும். இந்த முடிவற்ற பந்தயச்சுழல் மாறவே மாறாது. கைதட்டுகள் இல்லாத அரங்கின் அமைதி துயரமானது.
உருவத்தில் பலசாலியாக இருக்கும் மவுண்டன் உள்ளத்தில் சிறுவனைப் போலிருக்கிறான். ஓய்வு பெற்றபிறகே அவன் தன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறான். தனக்கான மனிதர்களில்லை என்பதை உணருகிறான். அந்த ஏக்கம் தான் கிரேஸின் அன்பைப் பெறும் போது அவனை உணர்ச்சிவசப்பட வைக்கிறது
கிரேஸின் கடந்தகாலம் படத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் முதற்சந்திப்பிலே அவன் மீது இரக்கம் காட்டும் அவள் எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறாள். தேடி வந்து அன்பு செலுத்துகிறாள். அவர்கள் உறவு Beauty and the Beastயை நினைவுபடுத்துகிறது
குத்துச்சண்டை போட்டிக்கென விதிகள் இருக்கின்றன. அதன்படி தான் சண்டையிட வேண்டும். ஆனால் அன்றாட வாழ்க்கையில் இப்படி எந்த விதியும் கிடையாது. எந்தக் குத்து உங்களை நிலைகுலைந்து விழச் செய்யும் என்று அறிய முடியாது. மவுண்டன் சந்திப்பதும் இதையே.
.
October 10, 2022
கசப்பான பாராட்டு
.பல்கேரிய திரைப்படம் Glory 2016ல் வெளியானது. நேர்மையான ஒரு மனிதன் சமூகத்தால் எப்படி நடத்தப்படுகிறான். புரிந்து கொள்ளப்படுகிறான் என்பதையே படம் பேசுகிறது.

ரயில்வே லைன்மேனாக வேலை செய்யும் சாங்கோ பெட்ரோவ் நடுத்தரவயதுடையவன். தனித்து வாழுகிறான். அவனது வீடு குப்பையும் தூசியும் அடைந்திருக்கிறது. அவனது தோற்றமும் சீராகயில்லை. தானே சமைத்துச் சாப்பிடுகிறான். ரயில்வே துறை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் சம்பளம் கிடைப்பதே போராட்டமாக இருக்கிறது.
ரயில் தண்டவாளத்தில் உள்ள போல்ட்களைச் சரிசெய்வதே அவனது அன்றாடப் பணி
ஒரு நாள் அவன் வேலைக்குச் செல்லும் வழியில் சில தொழிலாளர் ஒன்று கூடி ரயில்வேயின் எரிபொருளைத் திருடுவதைக் காணுகிறான். அவர்கள் பெட்ரோவை மிரட்டி அனுப்பி வைக்கிறார்கள்.
தண்டவாளத்தை ஆய்வு செய்யும் போது, 50 லேவா நோட்டைக் காணுகிறான்.. அதை ஆசையோடு எடுத்து வைத்துக் கொள்கிறான். சற்று தள்ளி, 100- லேவா நோட்டைக் காணுகிறான். வியப்பில் ஆராயும் போது மூட்டை மூட்டையாகப் பணம் கிடப்பதைக் காணுகிறான். இதைப்பற்றி உடனே உயரதிகாரிகளிடம் தெரிவிக்கிறான். உடனடியாகக் காவல்துறையினர் பணத்தைக் கைப்பற்றுகிறார்கள். பெட்ரோவிடம் விசாரணை நடைபெறுகிறது..இந்த செய்தி தொலைக்காட்சி. செய்தித்தாளில் வெளியாகிறது. சாங்கோ பலராலும் பாராட்டப்படுகிறான்.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் இந்த நிகழ்வை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. அமைச்சர் தன் மீதான முறைகேடு புகார்களைக் கடந்து செல்ல நல்ல வாய்ப்பாக நினைக்கிறார். ஆகவே சாங்கோவை பாராட்டுவதன் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி நல்லெண்ணம் பெற முடியும் எனக் கருதுகிறார்
அதன்படி பெட்ரோவிற்கு ரயில்வே அமைச்சகம் ஒரு பாராட்டுவிழா நடத்துகிறது. அதற்கான பொறுப்பை அமைச்சகத்தில் மக்கள் தொடர்பு பணி செய்யும் ஜூலியா ஏற்றுக் கொள்கிறாள்

விடுமுறை எடுத்துக் கொண்டு சாங்கோ நகரிற்குச் செல்கிறான். அவனது உடை சரியாகயில்லை. சாங்கோ எப்போதும் அவனது தந்தை பரிசாக அளித்த கடிகாரம் ஒன்றைக் கையில் கட்டிக் கொண்டிருக்கிறான்.
அவனுக்குப் புதிய உடை அணிவித்து விழா மேடைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்கிறார்கள். வேறு ஒருவனின் ஆடையைத் தற்காலிகமாகக் கழட்டி வாங்கி அவனுக்கு அணிவிக்கிறார்கள். புதிய கடிகாரம் ஒன்றை அமைச்சர் பரிசு தரப்போகிறார் என்பதால் பழைய கடிகாரத்தைக் கழட்டி வாங்கிக் கொள்கிறாள் ஜூலியா. அந்தக் கடிகாரம் பத்திரம் என்று எச்சரிக்கிறான் சாங்கோ. ஜூலியா அதைத் தனது பொறுப்பிலே வைத்துக் கொள்கிறாள்.
பாராட்டுவிழா நடக்கிறது, அமைச்சர் வருகிறார். தொழிலாளர் வர்க்க நாயகனாகப் பெட்ரோவ் கொண்டாடப்படுகிறான். அவனது நேர்மையைப் பாராட்டி புதிய டிஜிட்டல் கைக்கடிகாரம் பரிசாகத் தரப்படுகிறது. விழா மேடையிலே அமைச்சரிடம் எரிபொருள் திருட்டு நடப்பதைப்பற்றிச் சாங்கோ சொல்கிறான். அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை.
விழா முடிந்து விருந்து நடக்கிறது. அதில் பதற்றத்தோடு கலந்து கொள்கிறான் சாங்கோ

பழைய கடிகாரத்தை வைத்திருந்த ஜூலியா நிகழ்ச்சி முடிவதற்குக் கிளம்பிவிடுகிறாள். தனது பழைய கடிகாரத்தைப் பெறுவதற்காக இரவில் அவளுக்குப் போன் செய்கிறான். அவள் தொலைப்பேசியை எடுக்கவில்லை. ஆகவே அன்றிரவு அங்கேயே ஒரு விடுதியில் தங்குகிறான். ஒரே நாளில் அமைச்சர் கொடுத்த டிஜிட்டல் கடிகாரம் ஓடாமல் நின்றுவிடுகிறது.
மறுநாள் தனது பழைய கடிகாரத்தை மீட்க ஜூலியாவை தேடி அவளது அலுவலகம் செல்கிறான். அப்படி ஒரு கடிகாரம் தன்னிடம் தரப்படவேயில்லை என்று அவள் சாதிக்கிறாள். ஆனால் அவன் உறுதியாகச் சொல்லவே தேடி கண்டுபிடித்து அனுப்பி வைப்பதாகச் சொல்லி வேறு கடிகாரம் ஒன்றைத் தயார் செய்து அனுப்பி வைக்கிறாள். அது தன்னுடைய கடிகாரமில்லை என்று திருப்பி அனுப்பியதோடு ஜூலியாவை சந்தித்துத் தனது கடிகாரத்தைப் பெறப் பல்வேறுவிதங்களிலும் முயலுகிறான்.

இதனால் எரிச்சல் அடைந்த ஜூலியா அவனைச் சந்திக்க மறுக்கிறாள். ஜூலியாவின் கணவனைத் தொடர்பு கொள்ளும் சாங்கோ அவனது உதவியை நாடுகிறான். கணவன் ஜூலியாவை கண்டிக்கவே அவளது கோபம் மேலும் அதிகமாகிறது.
சாங்கோவை சந்திக்கும் தொலைக்காட்சி செய்தியாளர் இந்த உண்மையை அறிந்து கொண்டு அவனைத் தனது தொலைக்காட்சி நிலையத்திற்கு அழைத்துப் போய்ப் பேச வைக்கிறான். அதுவும் அமைச்சருக்கு எதிராகப் பேசவைக்கிறான்.
சாங்கோ ரயில்வே அமைச்சகத்தில் நிலவும் ஊழலையும் திருட்டையும், குற்றத்திற்கு அமைச்சரின் உடந்தையாக இருப்பதையும் அம்பலப்படுத்துகிறான்.. இதனால் அமைச்சரின் பெயர் கெடுகிறது. அவர் ஜூலியாவை அழைத்துக் கடுமையாகத் திட்டுகிறார். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஜூலியா கடுமையான வழிகளைக் கையாள ஆரம்பிக்கிறாள். செய்யாத குற்றத்திற்காகச் சாங்கோவை கைது செய்ய ஏற்பாடு செய்கிறாள் பின்னர்ச் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு ஈடாக, அவன் தனது முந்தைய குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்படுகிறான்
சாங்கோவின் வீடு புகுந்து ஆட்கள் தாக்குகிறார்கள். அடித்து உதைத்து அவனை அமைச்சருக்கு ஆதரவாகப் பேச வைத்து வீடியோ எடுக்கிறார்கள். தனக்குச் சொந்தமான பழைய கடிகாரத்தை மீட்க முயன்ற சாங்கோ முடிவில் குற்றவாளியாக மாற்றப்படுகிறான்.
சில வாரங்களின் பின்பு ஒரு ரயில்வே ஊழியர் தற்கொலை செய்துவிட்டதாகப் பேப்பரில் செய்தி படித்த ஜூலியா அது சாங்கோ என நினைத்து வருந்தி அவனது கடிகாரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறாள். அதை ஒப்படைப்பதற்காகப் சாங்கோவின் வீடு தேடி வருகிறாள். முடிவு என்னவாகிறது என்பதே படம்
படத்தில் கடிகாரம் ஒரு குறியீடு போலவே சித்தரிக்கப்படுகிறது. எதற்கும் ஆசைப்படாத சாங்கோ தந்தை தனக்கு அளித்த கடிகாரத்தை மட்டுமே சொத்தாக நினைக்கிறான். அதை இழந்து விட அவன் விரும்பவில்லை. அவனது போராட்டம் உண்மையானது. ஆனால் அரசாங்கம் இது போன்ற சின்ன விஷயங்களைக் கண்டுகொள்ளாது என்பதுடன் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் ஒரு போதும் பொறுப்பு ஏற்பதேயில்லை என்பதை படம் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது
ஒரு பக்கம் தனது கடிகாரத்தை மீட்கச் சாங்கோ செய்யும் வேடிக்கையான முயற்சிகள். மறுபக்கம் ஜூலியா செயற்கை கருத்தரித்தல் நிலையத்தில் பரிசோதனைக்காகக் காத்திருப்பது. மருத்துவ ஆலோசனை. சிகிட்சை, கணவனுடன் சண்டை என வேடிக்கையான காட்சிகள். அந்த சிரிப்பின் பின்னால் மறையாத வேதனை வெளிப்படுவது கவனிக்கத்தக்கது. இப்படம் ஆவணப்பட பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சாங்கோ ஒன்றும் அரிச்சந்திரனில்லை. அவன் ஐம்பது லேவா கிடைக்கும் போது அதை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்கிறான். வேறுஒரு காட்சியில் மதுவிடுதியில் சென்று குடிக்கிறான். விலைமாதுடன் உறவு கொள்கிறான். ஆனால் மூட்டை மூட்டையாக பணம் கிடைக்கும் போது அது ஆபத்தைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்திருக்கிறான். ஆகவே அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுகிறான். சாமானியர்களில் ஒருவனாகவே அவன் சித்தரிக்கப்படுகிறான்.
சாங்கோவின் வாழ்க்கை எளிமையானது. அவன் முயல் வளர்க்கிறான். பறவைகளை நேசிக்கிறான். திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பெண் உறவிற்கு ஏங்குகிறான். திக்கித்திக்கி பேசும் அவன் தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்கிறான். இயல்பான அவனது உலகம் ஒரே நாளில் தலைகீழாகிவிடுகிறது. முடிவில் அவனுடைய வாழ்க்கை ரயில் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட பொம்மை போலாகிவிடுகிறது.
Stefan Denolyubov சாங்கோவாக சிறப்பாக நடித்திருக்கிறார். பரிசு பெறச் செல்லும் போது ஏற்படும் குழப்பங்களை சந்திக்கும் விதமும், தனது கைக்கடிகாரத்தை மீட்க முயலும் போது உணர்ச்சிகளை காட்டும் விதமும் அபாரம். இது போலவே ஜுலியாவாக Margita Gosheva அருமையாக நடித்துள்ளார். Kristina Grozeva Petar Valchanov இணைந்து இயக்கியுள்ளார்கள்.
பழைய உலகம் எளிமையானது. அங்கே பகட்டிற்கு இடமில்லை. அதன் நீட்சியாகவே சாங்கோ இருக்கிறான். புதிய உலகில் கடிகாரம் மட்டுமில்லை அவர்களின் வாழ்க்கையும் போலியானதே. உலகெங்கும் சிறிய மனிதன் அதிகாரத்தால் இப்படிதான் நடத்தப்படுகிறான். வேட்டையாடப்படுகிறான். அதுதான் நம்மைப் படத்தோடு அதிகம் ஒன்றச் செய்கிறது
••
October 9, 2022
பொள்ளாச்சியில்
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நூறாவது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்
அக்டோபர் 16 ஞாயிறு காலை பொள்ளாச்சி என்,ஜி. எம் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
