S. Ramakrishnan's Blog, page 77
November 24, 2022
கனவு இல்லம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்லத் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

2022-2023ஆம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வண்ணதாசன்,ஜி. திலகவதி, எஸ் இராமகிருஷ்ணன், பொன். கோதண்டராமன், சு. வெங்கடேசன். ப. மருதநாயகம், இரா. கலைக்கோவன், கா. ராஜன், ஆர்.என்.ஜோ.டி. குருஸ், ஆகிய பத்துத் தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
நான் எழுத்தை மட்டுமே நம்பி வாழுகிறவன். இதே சென்னையில் தங்குவதற்குச் சிறிய அறை கூட இல்லாமல் பல ஆண்டுகள் சுற்றியலைந்திருக்கிறேன். நிராகரிப்பும் அவமானமுமாக வாழ்ந்த அந்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன. வேலை, சம்பாத்தியம் என எதுவுமில்லாமல் குடும்பத்துடன் சென்னை வந்த போது எத்தனை வாடகை வீடுகளில் வசித்திருக்கிறேன். எவ்வளவு துரத்தப்பட்டிருக்கிறேன் என்பதை நினைத்துக் கொள்கிறேன்.
வாசகர்களின் நிகரில்லாத அன்பும் அரவணைப்பும், பதிப்பகம், பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களின் உறுதுணையும், பல்வேறு இலக்கிய அமைப்புகள் மற்றும் அரசின் அங்கீகாரமுமே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது.
தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் தமிழக அரசின் கனவு இல்லத் திட்டம் முன்னோடியது. மிகுந்த பாராட்டிற்குரியது. இந்திய அளவில் எந்த அரசும் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுக்கவில்லை. தமிழ் எழுத்தாளர்கள் மீது தமிழக முதல்வர் கொண்டுள்ள பேரன்பின் அடையாளமாகவே இதைக் காணுகிறேன்.
கனவு இல்லத் திட்டத்தில் எனக்கு வீடு வழங்கியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
November 20, 2022
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில்
நாளை தூத்துக்குடி புத்தகத் திருவிழா துவங்குகிறது.
முதல்நாளின் மாலை நிகழ்வில் உரையாற்றுகிறேன். ( 22.11.22)


November 17, 2022
விருதுநகர் புத்தகத் திருவிழாவில்
நாளை (18.11.22 வெள்ளிகிழமை) மாலை விருதுநகர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன். விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
மதுரை ரோட்டிலுள்ள கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் புத்தகத்திருவிழா நடைபெறுகிறது.
பொதுநிகழ்ச்சி மாலை ஆறு மணிக்குத் துவங்குகிறது.
November 15, 2022
பௌத்த மேகம்
வியட்நாமைச் சேர்ந்த பௌத்த துறவி திக் நியட் ஹான் (Thich Nhat Hanh) ஒரு ஜென் மாஸ்டர். Order of Interbeing எனத் தனக்கென ஒரு பௌத்த நெறிமுறையை உருவாக்கிக் கொண்டவர். உலகச் சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடியவர். இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆவணப்படம். திக் நியட் ஹான்2022 இல் இறந்தார். அவரது Plum Village இதனை வெளியிட்டுள்ளது.
November 14, 2022
சித்திரப் பூ விழி வாசலிலே
சித்திரப் பூ விழி வாசலிலே வந்து யார் நின்றவரோ என்ற பாடலை நேற்றிரவு கேட்டுக் கொண்டிருந்தேன். பி.சுசிலாவும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடிய பாடல் இதயத்தில் நீ படத்தில் இடம்பெற்றது.

எழுதியவர் கவிஞர் மாயவநாதன். எத்தனை அழகாக எழுதியிருக்கிறார் என்று வியந்து மறுபடியும் கேட்டேன்.
தென்காசி மாவட்டத்தில் பூலாங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் மாயவநாதன். சிறந்த திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறார். 35 வயதில் அமரராகிப் போனவர் மாயவநாதன். 10 ஆண்டுகளில் 24 படங்களில் மொத்தம் 54 பாடல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார்.
இந்தப் பாடலைக் கேட்கும் பலரும் இது கண்ணதாசன் எழுதியது என்றே நினைக்கிறார்கள். மாயவநாதனுக்குக் கிடைக்க வேண்டிய புகழும் பெருமையும் முழுமையாகக் கிடைக்கவில்லை. அவரது மறைவிற்குப் பிறகு குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது என்கிறார்கள். பசியால் சாலையில் விழுந்து உயிர் துறந்தார் என்கிறார்கள். உண்மையா எனத்தெரியவில்லை. ஆனால் தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் பணத்தினைப் பெரிதாக நினைக்காமல் விரும்பிய படங்களில் மட்டுமே பாடல்கள் எழுதியிருக்கிறார்.
படித்தால் மட்டும் போதுமா, திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தண்ணிலவு தேனிறைக்கத் தாழை மரம் நீர் தெளிக்கக் கன்னி மகள் நடை பயின்று சென்றாள் இவரது முதற்பாடல்.
பந்தபாசம் படத்தில் இடம் பெற்ற நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு போன்ற பாடல்கள் காலத்தை வென்றவை.
சித்திரப் பூ விழி வாசலிலே பாடலில் தோழியின் கேலியும் தேவிகாவின் பதிலும் மிக அழகாகச் சந்தச்சுவையும், கற்பனைத் திறனும் கொண்டு வெளிப்படுகின்றன. சொற்களால் இருவரும் பந்தாடுகிறார்கள். இரண்டு குரல்களும் குழைந்தும் முதிர்ந்தும் நம்மை கட்டிப் போடுகின்றன.
கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ இந்த
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ
உன்னை மட்டும் அருகினில் வைத்து
தினம் தினம் சுற்றி வருபவரோ இனி கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் அறிந்தவரோ
காதல் மட்டும் தெரிந்தவரோ
வண்ணக் கருவிழி தன்னில் வரும் விழி
என்று அழைப்பதுவோ
பசும் பொன்னிற் புதியதை கண்ணன் எனப் பெயர்
சொல்லி துதிப்பதுவோ (2)
ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி
மன்னவன் என்பதுவோ இல்லை
தன்னைக் கொடுத்தனை தன்னில் மறைத்தவர்
வண்ணப் புது மலரே
அவர் நெஞ்சம் மலரில்லையே
மனம் எங்கும் நிறைந்தவரே
இன்று வழக்கொழிந்து போய்விட்ட பூவிழி வாசல் என்ற சொல் இந்த பாடலில் கேட்க எத்தனை புதியதாக இருக்கிறது. சங்க கவிதையின் சாயலில் எழுதப்பட்ட இந்த பாடல் பழந்தமிழ் பாடல்களின் நினைவு இழைகளோடு எழுதப்பட்டிருக்கிறது. அந்த இனிமை தான் காலத்தைக் கடந்து இதை ரசித்துக் கேட்க வைக்கிறது
‘
November 12, 2022
மாநில கல்விக்கொள்கை உருவாகிறது.
தமிழக அரசு உருவாக்கியுள்ள மாநில கல்விக்கொள்கைக்கான உயர்மட்டக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றுகிறேன். நீதியரசர் முருகேசன் தலைமையில் இந்தக் கல்விக்குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே இது போலக் கல்விக் கொள்கைக்கான குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக அரசின் சிறந்த முன்னெடுப்பு என்பேன்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள். மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள். பெற்றோர்கள், கல்வியியல் அறிஞர்கள், பொதுமக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்து கொண்டேன்.
இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டோம்.





இதுதவிர மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி சார் அமைப்புகள். சிறுபான்மை கல்வி அமைப்புகள். கிறிஸ்துவ, இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனைகள், சட்டப்பல்கலைகழகம், மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அளவிலான பல்வேறு கல்வியியல் அறிஞர்களின் பரிந்துரைகள் என்று தொடர்ந்து கருத்துக் கேட்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கருத்துக்கேட்பு கூட்டத்தின் மூலம் பொதுமக்களின் எதிர்பார்ப்பு மற்றும் இன்றைய தேவைகள். பிரச்சனைகளை அறிந்து கொள்ள முடிகிறது.
இந்தியாவில் இதுவரை வெளியாகியுள்ள பல்வேறு கல்விக்குழுவின் அறிக்கைகளையும் பரிந்துரைகளையும் வாசித்து ஆய்வு செய்து வருவதுடன், சர்வதேச அளவில் உள்ள கல்வி அறிக்கைகளையும் ஆழ்ந்து படித்துத் தேவையான விஷயங்களைத் தொகுத்து வருகிறேன்.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தனது துறையில் சிறந்து விளங்குபவர்கள். கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலைக் கொண்டவர்கள். மாற்றத்தை உருவாக்க நினைப்பவர்கள். அனைவரும் ஒன்றுகூடி புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம். நிச்சயம் மிகச்சிறந்த அறிக்கையாக அமையும் என நம்புகிறேன்.
November 11, 2022
கண்ணுக்குத் தெரியாத பாதை
இருவேறு காலங்களில் பயணிக்கிறது மிமோசாஸ் (Mimosas) திரைப்படம். இரண்டினையும் இணைப்பது வியப்பான நிலப்பரப்பு. வாழும் போது நிலத்தோடு ஒருவருக்குள்ள பிணைப்பிற்கு இணையாதே மரணத்தின் பின்பு தனது சொந்த நிலத்தில் புதைக்கபடவேண்டும் என்பதும்.

அந்த ஆசையை நிறைவேற்றுவற்காக இருவர் மேற்கொள்ளும் கடினமான மலைப்பயணத்தையே படம் விவரிக்கிறது. பாதைகள் இல்லாத பயணம் ஒரு தளத்திலும் பாலைவனத்தில் டாக்சி ஒட்டுகளின் அதிவேகப் பயணம் வேறு தளத்திலுமாகப் படம் விரிவடைகிறது.
வயதான ஷேக் தலைமையில் ஒரு சிறிய கேரவன் சிஜில்மாசா நகரத்தை நோக்கி பயணிக்கிறது. அவர் தனது குடும்பத்தை அடைய சிஜில்மாசாவுக்குச் செல்ல முற்படுகிறார், தனது மரணம் தனது அன்புக்குரியவர்களிடையே நடைபெற வேண்டும் என்பதே அவரது இறுதி ஆசை. கேரவனைக் கொள்ளையடிக்க இரண்டு திருடர்கள் உடன் வருகிறார்கள்
பயண நேரத்தைக் குறைக்க மலைப்பாதை வழியாகப் பயணம் செய்யவேண்டும் என ஷேக் வலியுறுத்துகிறார். மற்றவர்கள் மலையின் குறுக்கே கடந்து போவதை விரும்பவில்லை. ஆனால் அவரோ உறுதியாக மலைப்பாதையில் செல்வது எனத் தீர்மானிக்கிறார். மற்றவர்கள் விருப்பமின்றி அவரைப் பின்தொடருகிறார்கள்..

பாதிவழியில் ஷேக் இறந்துவிடவே அவரது உடலை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. அவர் விரும்பியது போலவே சிஜில்மாசாவில் அடக்கம் செய்யத் தாங்கள் உதவி செய்வதாகச் சயத் மற்றும் அஹ்மத் என்ற இரண்டு திருடர்கள் முன்வருகிறார்கள். இதற்குக் காரணம் அவரது பொருட்களை அபகரித்துக் கொள்ளலாம் என்பதே.
பாதை தெரியாமல் மலையின் ஊடே பயணம் செய்கிறார்கள். கழுதை ஒன்றில் ஷேக்கின் உடல் துணியால் சுற்றி ஏற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பயணத்தின் நடுவே ஷாகிப் என்ற இளைஞன் இணைந்து கொள்கிறான்.
மூவரும் செங்குத்தான மலைதொடரைக் கடந்து செல்ல முயலுகிறார்கள். ஒரு நாள் இரவு உடலை சுமந்து செல்லும் கழுதையை அஹ்மத் ரகசியமாக விடுவித்துப் பயணத்தைத் தவிர்க்கலாம் என்று திட்டமிடுகிறான் ஆனால் ஷாகிப் அதைக் கண்டுபிடித்ததாக வேண்டும் வலியுறுத்துகிறான்
முதியவர் முகமது மற்றும் அவரது ஊமை மகள் இக்ராம் உதவியால் உடல் மீட்கப்படுகிறது. அவர்களும் பயணத்தில் இணைந்து கொள்கிறார்கள்.
வழியில் ஆற்றைக் கடந்து செல்லும் போது கொள்ளையர்களின் தாக்குதலை எதிர்கொள்கிறார்கள்.
இறந்த மனிதனின் ஆசையை நிறைவேற்றச் செல்லும் சயத் மற்றும் அஹ்மத் தங்கள் நம்பிக்கை மற்றும் விருப்பத்திலிருந்து திசைமாறுகிறார்கள். இறை நம்பிக்கை நம்மை வழிநடத்துமா என்ற கேள்வியை எழுப்புகிறது திரைப்படம்.

படம் மூன்று பகுதிகளாக உருவாக்கபட்டிருக்கிறது. இதை ஆன்மாவின் பயணத்திற்கான குறீயீடாகக் கருதுகிறார்கள்.
ஹெர்சாக்கின் Aguirre, the Wrath of God படத்தினை நினைவுபடுத்தும் காட்சிகள். ஆனால் இது வேட்கையின் பயணமில்லை. மீட்சியின் பயணம். தொழில்முறை சாராத நடிகர்களைக் கொண்டு மலை உச்சியினுள் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். மௌரோ ஹெர்ஸ்ஸின் ஒளிப்பதிவு அபாரமானது. அதுவும் மலைப்பாதைகளில் குதிரைகளில் செல்லும் காட்சியும் விரிந்து பரந்த நிலவெளியும் இரவுக்காட்சிகளும் மிக அற்புதமாக உள்ளன
முட்டாள் போலத் தோற்றம் தரும் ஷாகிப் மெல்ல இறையுணர்வின் வழியே அதிசயங்களை உருவாக்க முயலுகிறான். மலையை எப்படிக் கழுதைகளால் கடக்க முடியும் என மற்றவர்கள் கேட்கும் போது அவன் பறந்து செல்லும் என்று பதில் தருகிறான். இது அர்த்தமற்றதாகத் தோன்றினாலும் அவனது ஆழமான இறை நம்பிக்கையின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்
சில தருணங்களில் ஷாகிப் ஞானியைப் போலவே நடந்து கொள்கிறான் உரையாடுகிறான். முழு நம்பிக்கையே வெல்லும் எனச் சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.
ஜான் போர்ட் படங்களைப் போலவே நிலக்காட்சியை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆலிவர் லாக்ஸ். இது அவரது இரண்டாவது படம்.
ஒரு காட்சியில் ஷாகிப் திருடன் அஹ்மத்தின் தோற்றத்தை ஷேக் போலிருப்பதாகச் சொல்கிறான். அதை ஏற்க மறுக்கும் அஹ்மத் தனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை என்கிறான். ஆனால் அவனும் இந்தப் பயணத்தின் வழியே புரிந்து கொள்ள முடியாத கடவுளின் செயல்களை உணர ஆரம்பிக்கிறான்.

வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இளம்பெண்ணும் பிணமும் மாட்டிக் கொள்வதைக் காணும் அஹ்மத் அவர்களைக் கைவிட்டு ஒளிந்து கொள்கிறான் ஆனால் ஷாகிப் அதை ஏற்கமறுத்து குரல் எழுப்புகிறான். அவனது வாயை அடைத்து உயிர்தப்புகிறான் அஹ்மத். முகமது கொல்லப்படுகிறார். அதன்பிறகு ஷாகிப் ஆத்திரம் தாங்க முடியாமல் நீ மனிதனே இல்லை என்று கூச்சலிடுகிறான் ஷாகிப். அஹ்மத் தன்னை அறியத் துவங்கும் புள்ளியது
வேடிக்கையான காட்சிகளும் வியப்பூட்டும் பயணமும் கொண்ட இப்படம் ஒரு உருவகக் கதை போலவே உருவாக்கபட்டிருக்கிறது. குற்றவுலகினை கொண்டாடும் சமகாலத் திரைப்படங்களுக்கு நடுவே ,வாழ்வின் நோக்கம் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுகிறது இப்படம் .இயற்கையை நெருங்கிச் செல்லும் போது மட்டுமே அதன் பிரம்மாண்டத்தையும் மூர்க்கத்தையும் மனிதன் உணருகிறான் என்கிறது இப்படம்.
சில இடங்களில் Meetings with Remarkable Men என்ற குர்ஜீ பற்றிய படத்தை நினைவுபடுத்தியது.
படத்தின் இறுதியில் கதை சமகாலத்திற்குத் திரும்புகிறது. அங்கே நாம் காண்பது வேறுவிதமான நிஜம். இதுவரை நாம் கண்டது அஹ்மத் கண்ட கனவு தானோ என்றும் தோன்றுகிறது. இந்த நிஜத்தில் ஷாகிப் இக்ராமை மீட்கும் பணிக்கு அஹ்மத்தை அழைத்துக் கொண்டு ஆவேசமாகப் புறப்படுகிறான்.
வெறுப்பும் வன்முறையும் கொண்ட இன்றைய உலகம். மீட்சியும் நம்பிக்கையும் கொண்ட அந்த உலகம் இரண்டுக்கும் நடுவே மனிதர்களின் ஆசைகளும் பெருமுயற்சிகளும் நடந்தேறுகின்றன.
In truth, being made aware of our own solitude can give us insight into the solitude of others. என்று Wind, Sand and Stars நூலில் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி குறிப்பிடுகிறார். இந்த உணர்வே படத்திலிருந்தும் நமக்குக் கிடைக்கிறது
••
விருதுநகர் புத்தகத் திருவிழாவில்
விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 17 துவங்கி 27 வரை நடைபெறுகிறது

விருதுநகர் மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் பொருட்காட்சி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது
இந்தப் புத்தகத்திருவிழாவில் நவம்பர் 18 மாலை உரையாற்றுகிறேன்
தலைப்பு : நினைவின் சித்திரங்கள்.
மணிபாரதி – அரவான்
எனது அரவான் நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி நடத்துகிறார். இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

பிஸியோதெரபிஸ்டான மணிபாரதி தொடந்து அழகம்மை அரங்கம் சார்பாக நவீன நாடகங்களை இயக்கி நடித்து வருகிறார். இதற்கு முன்னர் எனது “கொஞ்சம் இனிப்பு அதிகம்” என்ற சிறுகதையை நாடகமாக இயக்கியிருந்தார்.

ஞானராஜ சேகரன் ஐஏஎஸ் “ராமானுஜன்” திரைப்படத்தில் மணிபாரதியை கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள “ஐந்து உணர்வுகள்” திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் மணிபாரதி நடித்துள்ளார்
தற்போது இந்த வருடத்திற்கான Short+Sweet நாடக நிகழ்வில் எனது அரவான் நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி நிகழ்த்தவுள்ளார்.
நவம்பர் மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள அல்லையன்ஸ் ஃபிரான்சேஸ் அரங்கில் நிகழ்கிறது.
டிக்கெட் பெறுவதற்கு
https://in.bookmyshow.com/plays/week-3-short-sweet-south-india-theatre-festival/ET00343397
November 9, 2022
நெற்றியில் தேள் கொண்டவள்
ரஃபேல் வரைந்த எலிசபெத் கோன்சாகா உருவப்படத்தில் எலிசபெத்தின் நெற்றியில் ஒரு தேள் உருவம் காணப்படுகிறது. தேள் வடிவிலான தலைச்சுட்டி ஒன்றை எலிசபெத் அணிந்திருக்கிறார். இது அந்தக் காலத்தில் தீவினையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இளம்பெண்கள் அணிந்து கொள்ளக்கூடியது என்கிறார்கள். நிஜமாகவும் இருக்கலாம், எலிசபெத்தின் நெற்றியிலுள்ள தேள் அவளது சோகமான, எதையோ சொல்ல முயன்று தயங்குகின்ற முகத்திற்குக் கூடுதல் வசீகரம் தருகிறது. இந்த ஓவியம் 1504ல் வரையப்பட்டது

எலிசபெத் அர்பினோ டியூக்கின் மனைவி. கலை இலக்கியங்களில் தீவிர விருப்பம் கொண்டிருந்தவர். ஓவியத்தில் அவர் கறுப்பு உடையை அணிந்திருக்கிறார். அவரது உதடுகள் இன்னும் இளமையாக இருப்பதை உணர்த்துகின்றன
கழுத்தில் இரண்டு எளிய தங்கச் சங்கிலிகளை அணிந்துள்ளார். நெற்றியில் தேள் வடிவ நகை உள்ளது, அதில் ஒரு விலையுயர்ந்த கல் காணப்படுகிறது. இந்தத் தேள் வடிவத்தைக் காமத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். சிலர் இது விருச்சிக ராசியைக் குறிக்கிறது என்றும் சொல்கிறார்கள். இத்தோடு கருவுறுதலைக் குறிக்கவும் தேள் வடிவம் கொண்ட நகையை அணிவது வழக்கம் என்றும் கருதப்படுகிறது.

தனது கணவரின் மலட்டுத்தன்மை காரணமாகக் கருவுற இயலாமல் போனவர் எலிசபெத். அதைச் சுட்டிக்காட்டும்விதமாக இந்தத் தேள் வடிவ நகை அணியப்பட்டிருக்கலாம்.
ஓவியத்தின் பின்னணியில் அமைதியான, ஒளிரும் நிலப்பரப்புச் சித்தரிக்கப்படுகிறது. அதில் உயரமான மலை காணப்படுகிறது. எலிசபெத்திடம் வெளிப்படும் புன்னகை மர்மமானது. அவரது சற்றே தொங்கிய இடது கண்ணிமை, நீண்ட முகம், பெரிய நெற்றி, நேர் கொள்ளாத கண்கள் தனித்த வசீகரம் கொண்டிருக்கின்றன. இந்த ஓவியத்தில் எலிசபெத் ஏதோ பதற்றத்தை மறைக்க முயல்வதாகத் தோன்றுகிறது.

டியூக் கைடோபால்டோ மற்றும் அவரது மனைவி எலிசபெத் இருவரையும் ரஃபேல் வரைந்திருக்கிறார். ஆனால் டியூக் கைடோபால்டோ ஓவியம் இப்போது காணாமல் போய்விட்டது. 1497ல் போப்பாண்டவர் உத்தரவால் டியூக் கைடோபால்டோ சிறைபிடிக்கப்பட்டார். அந்தக் கால வழக்கப்படி அவரை விடுவிப்பதற்காகப் பணம் கோரப்பட்டது. குடும்ப நகைகளை விற்று எலிசபெத் பணத்தைத் திரட்டினார். ஆகவே தான் ஓவியத்தில் அவர் எளிமையாக இரண்டே தங்கச் சங்கிலிகள் அணிந்திருக்கிறார் என்கிறார்கள்.
எலிசபெத் அணிந்துள்ள தங்க ரேகை கொண்ட ஆடை திருமணப் பரிசாக அளிக்கப்பட்டது. எலிசபெத்திற்குக் குழந்தைகள் இல்லாததால் மிகவும் சோகமாக இருக்கிறாள். அதையே ரஃபேல் தனது ஓவியத்தில் துல்லியமாகச் சித்தரித்திருக்கிறார் என்கிறார்கள் கலைவிமர்சகர்கள்
ரஃபேலின் உருவப்படத்தில், எலிசபெத்தின் தலை சூரிய உதயத்தின் அடங்கிய ஒளிக்கு எதிராக நிமிர்ந்திருக்கிறது, . இது அவளது பார்வையைச் சூரியனுடன் இணைவு கொள்ளவைக்கிறது. சிறுவயதிலே தாயை இழந்தவர் என்பதால் தானோ என்னவோ அவரது பெண் உருவங்களில் கருணையும் சாந்தமும் அழுத்தமாக வெளிப்படுகிறது



ரஃபேலின் வரைந்த இருபதுக்கும் மேற்பட்ட மடோனாக்களில் நம்மைக் கவர்வது அவர்களின் கண்கள். ரஃபேல் போல முகபாவத்தையும் கண்களையும் வரைய முடியாது. குறிப்பாகத் துல்லியமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்த முகங்கள் அபாரமானவை.
டாவின்சி, மைக்கேலாஞ்சலோ என்ற இரு மேதைகளின் காலத்தில் உருவாகி அவர்களின் பாதிப்பில்லாத ஓவியராகச் சாதித்திருக்கிறார் ரஃபேல். ஓவியர் என்றாலே வறுமையும் நெருக்கடியும் கலகத்தன்மை கொண்ட வாழ்க்கை முறையே இருக்கும் என்பதிலிருந்து விலகி அமைதியான, வசதியான. பெயரும் புகழும் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் ரஃபேல். அவர் ஒரு அரசனைப் போல வாழ்ந்தார் என்கிறார் Lives of the Painters, Sculptors, and Architects என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதிய வசாரி.
ரஃபேல்லோ சான்சியோ ரஃபேல் 1483 – ல் மத்திய இத்தாலிய நகரமான அர்பினோ வில் பிறந்தவர். இவருடைய தந்தையும் ஒரு ஓவியர். அவரிடமே தனது ஆரம்பப் பாடங்களை ரஃபேல் கற்றுக் கொண்டார்.

ரஃபேலின் 11வது வயதில் அவரது தந்தை இறந்து போனார். தந்தையின் பூர்வீக சொத்துகள் அனைத்தும் அவரது மாமாவால் பாதுகாக்கப்பட்டன. இதில் பெரும்பகுதி ரபேலுக்குச் சொந்தமானது. தந்தையின் சொத்துகளில் பாதியை மாற்றாந்தாய் பெர்னார்டினா வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆகவே செல்வமும் செல்வாக்கும் கொண்ட இளமைக் காலத்தினை ரஃபேல் பெற்றார். நாடக அரங்கிற்கான திரைகள் மற்றும் அரங்க அமைப்பை உருவாக்குவதிலும் ரஃபேல் ஈடுபட்டிருக்கிறார். அத்துடன் அவர் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தெய்வீகத்தன்மை கொண்ட ஓவியராக அறியப்பட்ட ரபேலை லியோனார்டோ டாவின்சிக்குச் சமமாகக் கருதினார்கள். இதனால் பெரும் வணிகர்கள் மற்றும் உயர் தட்டுக் குடும்பங்களுக்கான ஓவியம் வரையும் பணி அவருக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டது.
1500- ஆம் ஆண்டில் அர்பினோவில் இருந்து பெர்கியா சென்று. புகழ்பெற்ற ஓவியரான பியட்லோ பெர்கினோ உடன் இணைந்து தேவாலயத்தில் புனிதர்களின் ஓவியம் மற்றும் பைபிள் காட்சிகளை வரையும் பணிகளை மேற்கொண்டார்.
21 வயதில் பிளாரன்சுக்கு ரஃபேல் சென்ற போது மைக்கேலாஞ்சலோ புகழின் உச்சத்திலிருந்தார். அவரது டேவிட் சிற்பம் அப்போது தான் உருவாக்கப்பட்டிருந்தது. இன்னொரு பக்கம் லியோர்னாடோ டாவின்சி, புகழ்பெற்ற ஒவியராகக் கொண்டாடப்பட்டு வந்தார். . டாவின்சியின் மோனாலிசா ஓவியத்தால் வசீகரிக்கப்பட்ட ரஃபேல் அதன் சாயலில் கன்னிமேரி ஓவியங்களை வரையத் துவங்கினார்.
1508 – ல் இரண்டாம் ஜூலியஸ் போப்பின் மாளிகையை அலங்கரிக்கும் பொறுப்பு ரஃபேலிடம் வழங்கப்பட்டது. அதைத் திறம்படச் செய்த காரணத்தால் போப்பின் நன்மதிப்பைப் பெற்றார். அதன் காரணமாக வாடிகன் அரண்மனை நான்காவது தளத்திலுள்ள நான்கு அறைகளுக்கு ஓவியம் வரையவும், புதிய கட்டிடங்களை உருவாக்கவும் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கே ரபேலும் அவரது குழுவினர்களும் அசாத்தியமான கலைப்படைப்புகளை உருவாக்கினார்கள். கலை வாழ்வின் உச்சத்திலிருந்த ரஃபேல் எரிநட்சத்திரம் போலத் தனது 37 வயதில் காய்ச்சல் காரணமாக இறந்து போனார்.

சிஸ்டைன் தேவாலயத்தின் சுவர்களில் ரஃபேல் வரைந்த அழகிய ஓவியங்கள் காலத்தைக் கடந்து இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. ‘லா ஃபோர்னாரினா’ என்ற பெண் உருவப்படமே அவர் கடைசியாக வரைந்தது., இந்தப்படத்திலிருப்பது அவரது காதலியும் மாடலுமான மார்கெரிட்டா என்கிறார்கள். ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

ரஃபேலின் கலை பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பகால நவ-லத்தீன் கவிதைகள் மற்றும் தொன்மங்களை ஆதாரமாகக் கொண்டது
அவர் ஆடைகளை வரைந்துள்ள விதமும் நிறத்தேர்வும் மிகவும் தனித்துவமானது. அவர் ஓவியத்திற்குள் உணர்ச்சிப்பூர்வமான நாடகம் ஒன்றை நிகழ்த்திக் காட்டுகிறார். குறிப்பாகப் பைபிள் காட்சிகளைச் சித்தரித்த விதத்தில் அதில் வரும் உணர்ச்சிகளின் தீவிரத்தை மேல் கீழாக உருவங்களைச் சித்தரிப்பதின் வழியே உணர்த்திவிடுகிறார். ரஃபேல் வரைந்த சிறகுள்ள குழந்தைகளை எப்படி மறக்கமுடியும். அவர்கள் வானுலகின் குழந்தைகள். அந்தக் குழந்தைகளின் முகத்தில் களங்கமின்மையும் ஆர்வமும் வெகு நேர்த்தியாக வெளிப்படுகின்றன
ரஃபேலின் கோடுகள் நடனமாடுகின்றன. அழுத்தமாகவும் பறத்தலுடனும் கோடுகளை வரைந்திருக்கிறார். அவரது கோட்டோவியங்களில் மனிதர்களின் உடல்கள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ இயக்கத்துடன் சித்தரிக்கப்படுகின்றன. அதில் வெளிப்படும் லயம் நிகரில்லாதது

ரஃபேலின் ஒவியம் பற்றிய இந்தக் கவிதை அவரது ஒவியத்தின் இயல்பையும் அவர் சித்தரித்த பெண்களின் அபூர்வத்தையும் அழகாக விவரிக்கிறது.
if i were a raphael painting
she would be unclothed
all her secrets laid out
in the late summer sun
streaming through the open window
she would face the painter
her almost-green-but-not-quite eyes
wide with a fear and a thrill
never felt until now
her rosebud lips twitch in a half smile
as though she is afraid
the happiness will be lost if she grins too wide
her chocolate brown hair
curls just above narrow shoulders
sprinkled with cinnamon freckles
the artist paints with a tender hand
capturing both innocence and allure
and when he is done the girl is dressed and gone
and so the painting is hidden and gathers dust
until a curious boy unveils it years later
and hangs it above the fireplace
where his greedy eyes can feast on the girl’s secrets
day and night, he will try to unravel them
but distraction comes in shape of a skin and bone lover
so the painting is suppressed again
until another prying hand wipes the dust away
– yellah girl- Jan 2016
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

