S. Ramakrishnan's Blog, page 83

July 23, 2022

புத்தக வெளியீடு

கவிஞர் க.வை.பழனிசாமி எழுதியுள்ள கவிதையின் அந்தரங்கம் என்ற விமர்சன நூலின் வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்கிறேன்.

நாளை மாலை கோவை புத்தகக் கண்காட்சி அரங்கினுள் இந்த நிகழ்வு நடைபெறுகிறது

நவீன கவிதைகயை எப்படி புரிந்து கொள்வது, கவிதைக்குள்ளிருந்து ஒலிக்கும் கவிதைசொல்லி யார், கவிதையின் ஊடாக எதையெல்லாம் பெறுகிறோம், கவிதையின் ரகசியங்களாக எதைச் சொல்லலாம் எனப் பல்வேறு நிலைகளில் கவிதைகளை ஆராய்ந்திருக்கிறார் க.வை.பழனிசாமி

தமிழின் 14 முக்கிய கவிஞர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளை முன்வைத்து மாறுபட்ட கவித்துவப் பார்வையை உருவாக்கியுள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2022 01:11

July 22, 2022

கோவை புத்தகக் கண்காட்சி குறித்து

இன்றைய தி இந்து நாளிதழில் கோவை புத்தகக் கண்காட்சி குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அதில் நான் கலந்து கொண்டு உரையாற்றுவது குறித்துப் பேசியிருக்கிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2022 04:41

July 21, 2022

பார்ஸிகளின் வரலாறு.

Qissa-e-Parsi என்ற பார்ஸி இனம் குறித்த ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

பார்ஸிகளின் பூர்வீகம். அவர்களின் வாழ்க்கை முறை, வழிபாடு,  உணவு மற்றும் நகைச்சுவை உணர்வு. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த போது மேற்கொண்ட வணிகம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகான அவர்களின் மாற்றம். புகழ்பெற்ற பார்ஸி பிரபலங்கள், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்களிப்பு செய்த பார்ஸி இனத்தவர்கள் என விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்

உணவு மற்றும் நகைச்சுவை உணர்வை பற்றிய பகுதி தனித்துவமானது. மும்பையின் வளர்ச்சிக்கு பார்ஸிகள் செய்துள்ள பங்களிப்பு. ஆங்கிலேயர்கள் மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசம், மற்றும் திருமண விஷயத்தில் அவர்கள் காட்டும் தீவிரக்கட்டுபாடு என வெளிப்படையாக, நேர்மையாக செய்திகளை தொகுத்து தந்திருக்கிறாரகள்

இந்த ஆவணப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2022 05:19

July 20, 2022

ஜென் தேநீர்

செந்தூரம் ஜெகதீஷ் எழுதிய ஜென் தேநீர் வாசித்தேன். ஓஷோவின் ஜென் கவிதைகள் பற்றிய பார்வைகளை முன்வைத்து புகழ்பெற்ற ஜென் கவிஞர்களையும் கவிதைகளையும் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். கூடவே முக்கியமான கவிதைகளை மொழியாக்கமும் செய்திருக்கிறார்.

ஜென்னைப் புரிந்து கொள்வது குறித்தும் ஜென் கவிதைகளின் இயங்கும் தளம் மற்றும் அதன் வழியே அடையும் விழிப்புணர்வு குறித்தும் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பு மற்றும் புரிதலின் வழியே மட்டுமே இது சாத்தியம்.

ஒரு கட்டுரையில் ஜென் அனுபவத்தை இப்படி விளக்கியிருக்கிறார் ஜெகதீஷ்.

ரஷ்யாவின் நடனக் கலைஞர் நிஜினிஸ்க்கி ஒருமுறை கூறினார் “நான் நடனமாடும் போது நானே நடனமாகி விடுகிறேன்.“ இன்னொரு ஜென் கவிதை தேநீர் பருகுவதை ஏழு முறை தேநீர் பருகும்படி கூறி ஏழு படிநிலைகளாக விளக்குகிறது.

முதல் கோப்பை என் வறண்ட உதடுகளையும் தொண்டையையும் நனைக்கிறது.

இரண்டாவது கோப்பை என் தனிமையின் துயரமான சுவர்களைத் தகர்க்கிறது.

மூன்றாவது கோப்பை என் ஆன்மாவின் வறண்ட நீரோடைகளைத் தேடி ஐந்தாயிரம் கதைகளைத் தேடுகிறது.

நான்காவது கோப்பையால் கடந்த காலத் துயரங்கள் மறைந்து போகின்றன.

ஐந்தாவது கோப்பை என் எலும்புகளையும் நரம்புகளையும் புதுப்பிக்கின்றது.

ஆறாவது கோப்பை அருந்தும் போது நான் இறந்த ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

ஏழாவது இறுதிக் கோப்பை எனக்குத் தாங்க முடியாத பேரின்பத்தை வழங்குகிறது.

இப்படித் தேநீரின் வழியே அகம் கொள்ளும் விழிப்பின் நிலைகளை அழகாக விளக்கியிருக்கிறார்.

•••

செந்தூரம் ஜெகதீஷை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். வாழ்க்கை நெருக்கடிகளுக்குள் உழன்றபடியே இலக்கியத்தின் மீது தீவிர பற்று கொண்டவராகத் தொடர்ந்து இயங்கிவருகிறார். அவரிடம் காணப்படும் உற்சாகம் குறைவில்லாதது. வேலையின்மை, பொருளாதாரச் சிரமம் இவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாசிப்பது, எழுதுவது, இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பது என்று தீவிரமாக இயங்கிவருகிறார்.

அவரைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். மிகவும் பண்பானவர். இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். கிடங்குத் தெரு என்ற அவரது நாவல் தனித்துவமானது. செந்தூரம் என்ற சிறுபத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். பழைய புத்தகக் கடைகளைத் தேடிப்போய் நிறையப் புத்தகங்களை வாங்கக் கூடியவர். ஒஷோ மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஓஷோவின் சில நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.

தமிழின் முக்கியப் படைப்பாளிகள் பலரையும் செந்தூரம் ஜெகதீஷ் அறிவார். அவர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். பிரபஞ்சன் எப்போதும் ஜெகதீஷை வியந்து பாராட்டுவதைக் கேட்டிருக்கிறேன். சினிமாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாக நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கிறார்.

அவரது வாழ்க்கை அனுபவங்களை எழுதினால் மிகப்பெரிய நாவலாக விரிவு கொள்ளும். தொடர்ந்து கைப்பொருளை இழந்து தனது புத்தகங்களைப் பதிப்பித்து வருகிறார்.

இவரைப் போன்றவர்கள் அங்கீகாரமோ, விருதுகளோ எதைப் பற்றியும் கவலையின்றித் தொடர்ந்து இலக்கியத்தின் வழியாகவே தங்கள் வாழ்வை முன்னெடுத்துச் செல்கிறார்கள். பங்களிப்பு செய்கிறார்கள்.

ஜென் கவிதைகளையும் ஜென் கவிஞர்களின் தேடலையும் புரிந்து கொள்வதற்கு இந்நூலை அவசியம் வாசிக்க வேண்டும். செந்தூரம் ஜெகதீஷிற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2022 00:27

July 19, 2022

கோவை புத்தகக் கண்காட்சி

கோவை புத்தகக் கண்காட்சியில் ஜுலை 25 திங்கள்கிழமை மாலை ஆறுமணிக்கு உரையாற்றுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2022 22:51

கேள்வியின் நிழல்

புதிய சிறுகதை. ஜுலை 2022

கேமிரா ஓடிக்கொண்டிருந்தது.

ராம்பிரசாத் கேமிராவைப் பார்க்கவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டவரைப் போலிருந்தார்.

கேமிராவின் பின்புறமிருந்து திவ்யா சைகையால் அவரைப் பேசுமாறு சொன்னாள். அவர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை

பேராசிரியர் ராம்பிரசாத்திற்குக் கணிதத்திற்கான உயரிய விருது ஒன்றை ஜப்பானிய அரசு அறிவித்திருந்தது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற அந்த விருதைப் பெற்ற முதல் தமிழர் என்பதால் அவரை நேர்காணல் செய்து  தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்று நியூவிஷன் சேனல் முடிவு செய்திருந்தார்கள்.

விருது செய்தி கேள்விப்படும் வரை சரவணனுக்கு இப்படி ஒரு பேராசிரியர் இருக்கும் தகவல் கூடத் தெரியாது. எழுபத்தியெட்டு வயதான ராம்பிரசாத் தனது மகளின் வீட்டில் வசித்து வருகிறார் என்றும் ஆலந்தூர் சப்வேயிலிருந்து பிரியும் கிளை சாலையிலுள்ள சாய்பிளாசாவில் வசிக்கிறார் என்றும் விசாரித்து அறிந்து கொண்டு அவருக்குத் தொலைபேசி செய்தான்.

ராம் பிரசாத்தின் மகள் லாவண்யா தான் பேசினாள்

“அப்பாவிற்கு உடம்பு முடியலை. நேத்து அவார்ட் அறிவித்ததில் இருந்து நிறையப் போன்.. பேசிப்பேசி பிரஷர் ஜாஸ்தி ஆகிருச்சி..“

“பத்து நிமிஷம் இண்டர்வியூ மேடம்.. உங்கள் வீட்லயே வந்து எடுத்துக்கிடுறோம்“

“அப்பா கிட்ட கேட்டு சொல்றேன்.“

“எங்களாலே ஒரு தொல்லையும் இருக்காது. அவர் விரும்புகிறதைப் பேசினா போதும்.“

“இது தானே உங்க நம்பர் நானே கூப்பிடுறேன்“ எனப் போனை துண்டித்தாள் லாவண்யா

இரவு ஏழுமணி வரை லாவண்யாவிடமிருந்து பதில் வரவில்லை. ஆகவே சரவணன் நேரில் போயிருந்தான். வாசலில் நாலைந்து ஜோடி செருப்புகள் கிடந்தன. யாரோ வந்திருக்கிறார் போலும் என நினைத்தபடியே தயக்கத்துடன் காலிங்பெல் அடித்தான். கதவு திறந்து வெளியே வந்த லாவண்யாவிடம் நியூவிஷன் சேனல் என்று சொல்லிச் சிரித்தான் சரவணன்

“உள்ளே வாங்க“ என்றாள் லாவண்யா

பேராசிரியர் களைத்துப் போன முகத்துடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஓரம் கிழிந்து போன வெள்ளை பனியன், பழைய வேஷ்டி, மீசையில்லாத முகத்தில் பெரிய கண்ணாடி, ஏறு நெற்றி. நரைத்த கற்றை மயிர்கள். ஒடிசலான உருவம், சற்றே பெரிய காதுகள். மெல்லிய குரலில் கேட்டார்

“நீங்க டிவியா“

“ஆமாம் சார். நாளைக்கு உங்களை ஒரு பேட்டி எடுக்கலாமானு நினைக்கிறேன்“

“லாவண்யா சொன்னாள். நான் சொல்றதுக்கு என்ன இருக்கு“

“என்ன சார் இப்படிச் சொல்லீட்டீங்க. எவ்வளவு பெரிய அவார்ட் வாங்கியிருக்கீங்க. பிரைம் மினிஸ்டர்ல இருந்து சிஎம் வரைக்குப் பாராட்டி இருக்கிறார்கள். உங்க லைப் பற்றி நாங்க தெரிஞ்சிகிட வேணாமா“

“அப்படிச் சிறப்பா சொல்றதுக்கு ஒண்ணுமில்லே“

“பத்து நிமிஷம் பேசினா போதும்.. உங்களோட பழைய போட்டோஸ். வீடு, நீங்க புக் படிக்கிறது, இப்படி ஷாட்ஸ் கட் பண்ணி போட்டுகிடுவேன்“

“என்னாலே முடியுமானு தெரியலை. இப்பவே தலை கிர்னு இருக்கு“..

“எங்க சேனலோட மார்னிங் ஷோ ரொம்பப் பாப்புலர் சார். பெரிய ரீச் இருக்கும்“

“இனிமே நான் யாருக்கு ரீச் ஆகணும்.. எதுக்கு ரீச் ஆகணும்“ எனக்கேட்டார் ராம்பிரசாத்

“உங்க சாதனைகளை இளையதலைமுறை தெரிஞ்சிகிடணும்ல சார்“ என்று அவன் சொன்னது ஒரு நாடகவசனம் போலவே அவருக்குக் கேட்டது

“எத்தனை மணிக்கு இண்டர்வியூ“ எனக்கேட்டார்

“மார்னிங் எட்டு மணிக்கு வந்துடுறோம்.. செட் பண்ண இருபது நிமிஷம். இண்டர்வியூ பத்து நிமிஷம்.. எட்டரைக்கு முடிஞ்சிரும்“

“காலையில உடம்பு எப்படி இருக்கும்னு தெரியலை..பாக்குறேன்“

“நல்லா தூங்கி எந்திரிச்சா.. பிரஷ்ஷா இருப்பீங்க சார். இதெல்லாம் ஒரு அன்பு தொல்லை“ என்று சிரித்தான் சரவணன்

ஏன் அவன் இப்படி நாடகம் போலவே பேசுகிறான் என எரிச்சலாக உணர்ந்தபடியே அவர் கழிப்பறையை நோக்கி நடந்தார். சரவணன் லாவண்யாவிடம் பேசி சம்மதிக்க வைத்துவிட்டான்.

•••

காலை எட்டு மணிக்கு அவர்கள் ராம்பிரசாத் வீட்டிற்கு வந்தபோது அவர் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். இருபது தொட்டிச் செடிகள் இருந்தன. அதில் இரண்டு கள்ளிச்செடிகள்.

ஹாலில் இருந்த இளஞ்சிவப்பு நிற சோபாவை திருப்பிப் போட்டு கேமிராவை எங்க வைப்பது எனச் சரவணன் பரபரப்பாக இருந்த போது லாவண்யா அவர்களுக்குக் காபி கொடுத்தாள்.

“சார் டிபன் சாப்பிட்டாரா“ எனக்கேட்டான் சரவணன்

“இன்னும் குளிக்கக்கூட இல்லை“ என்றாள் லாவண்யா

“ரெடியாகச் சொல்லுங்கள். பத்து நிமிஷத்தில் நான் ரெடியாகிடுவேன்“

அவள் அப்பாவின் அருகில் போய்ச் சொன்னபோது அவர் வெளிறிப்போன செடியின் இலையைக் காட்டி எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்பாவை அவசரப்படுத்த முடியாது என அவளுக்கு நன்றாகத் தெரியும். அவர் ஹாலைக் கடந்து போகும்போது அங்கிருந்த எவரையும் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. நிழல் கடந்து போவது போல நடந்து சென்றார்.

அவர்கள் கேமிராவை தயார் செய்துவிட்டுக் காத்திருந்தார்கள். முக்கால் மணி நேரம் கழித்து ராம் பிரசாத் காதோரம் ஈரம் வழிய, நீலநிற கோடு போட்ட சட்டையும் கறுப்புப் பேண்ட் அணிந்து வந்தார்,

“நீங்க டிபன் சாப்பிட்டிருங்கப்பா“ என்றாள் லாவண்யா

“இப்போ வேணாம். பிறகு சாப்பிடுறேன்“

“அப்போ இன்னொரு கப் காபி தரவா“

“வேணாம். இண்டர்வியூ முடியட்டும்“ என்றார்.

அவருக்கு இது போன்ற தொலைக்காட்சி நேர்காணலில் விருப்பமில்லை என்பது முகத்திலே தெரிந்தது. நேற்றிலிருந்து தமிழ் ஆங்கிலம் இந்தி என வேறுவேறு ஊடகங்கள். செய்தியாளர்கள் அவரிடம் போனிலே கேள்வி கேட்டார்கள். வாழ்த்துச் சொன்னார்கள்.. ரேடியோ நிலையத்திலிருந்து கூட ஒருவர் தொடர்பு கொண்டார்,

எதற்காக இப்படி ஒரு விருதை அளித்துத் தன்னைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று ராம்பிரசாத்திற்கு எரிச்சலாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் நாற்காலியில் அமர்ந்தார். அவரது சட்டையில் மைக்கை மாட்டி டெஸ்ட் செய்தபோது குரல் மிகவும் மெலிதாக இருந்தது.

“ சார்..கொஞ்சம் சப்தமா பேசுங்க“ என்றாள் திவ்யா

“இவ்வளவு தான் என்னால முடியும்“

“அப்போ கொஞ்சம் வெந்நீர் குடிச்சிச்கோங்க. வாய்ஸ் கிளியரா வரும்“ என்றபடி அவளாக லாவண்யாவிடம் வெந்நீர் கொண்டுவரச் சொன்னாள். கேமிரா, ஒளிரும் விளக்குகள். சுற்றிலும் நிற்கும் ஆட்கள் அவருக்குள் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். திடீரென அது தன்னுடைய வீடில்லை என்பதைப் போல உணர்ந்தார். ஷோ கேஸில் இருந்த புத்தர் பொம்மை ஒன்றை ஒரு ஆள் வெளியே எடுத்து அவரது பின்பக்கமிருந்த ஸ்டாண்டின் மீது கொண்டு போய் வைத்தான்

புத்தரும் ஒரு செட் பிராபர்ட்டி தானா. எதற்காகத் தன் பின்னால் புத்தர் இருக்க வேண்டும் என அவருக்குப் புரியவில்லை.

“சார் நீங்க ரெடினா.. நாம போயிடலாம்“ என்றான் சரவணன்.

“நான் என்ன சொல்றது“

“உங்க லைப் பற்றிப் பேசுங்க. “

“அதுல மத்தவங்க தெரிஞ்சிகிட ஒண்ணுமில்லே“

“உங்க ஊரைப்பற்றி. ஸ்கூல் டேஸ், பிரண்ட்ஸ் பற்றிச் சொல்லுங்கள். எப்படி மேத்ஸ்ல ஆர்வம் வந்துச்சி.. எந்த டீச்சரை உங்களுக்குப் பிடிக்கும்.. இப்படிப் பேசுறதுக்கு நிறைய இருக்கும்லே“ என்று பொய்யாகச் சிரித்தான்.

“பாக்குறேன்“ என்றபடியே அவர் கண்களை மூடிக் கொண்டார். மனதில் என்றோ நடந்து முடிந்த அவமதிப்புகள். புறக்கணிப்பு. வருத்தங்கள் தான் தோன்றின. அவருக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒரு நபர் நினைவில் வந்து போனார். மனம் நாம் விரும்புவதை நினைவு கொள்வதில்லையே.

சரவணன் கேமிராவின் மானிடர் வழியாக அவரது முகத்தைப் பார்த்தான். சரிவரத் தூக்கமில்லாது போன கண்கள். உலர்ந்து வெடித்த உதடுகள். பிடிவாதமான கிழவர் என்று உணர்ந்தவன் போல அவரை ஏறிட்டு பார்த்துச் சொன்னான்.

“சார்.. நான் ஸ்டார்ட்சொன்னதும் நீங்க பேச ஆரம்பிச்சிடுங்க.. நான் இடையில எதுவும் கேட்க மாட்டேன். நீங்க பேசிகிட்டே இருக்கலாம். “

ராம்பிரசாத் லேசாகத் தலையாட்டிக் கொண்டார்.

சமையலறை ஒரமாக நின்றபடியே லாவண்யா அப்பாவை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பாவிடமிருந்து வார்த்தைகளை வெளியே கொண்டுவருவது எளிதான என்ன. இத்தனை வருஷத்தில் அவளுக்கே அவரது கல்லூரியில் என்ன நடந்த்து. எதற்காக அவர் திடீரென வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார் என்பது தெரியாதே. அப்பா எதையும் அளந்து பேசக்கூடியவர் என்பதை அவள் அறிவாள்.

ராம்பிரசாத்தின் உதடுகள் லேசாக அசைந்தன.. நெற்றியைச் சுருக்கிக் கொண்டார். எதையோ சொல்ல முற்படுகிறவர் போல முகபாவனைத் தோன்றியது. கேமிரா ஒடிக்கொண்டிருந்தது. ராம்பிரசாத் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. கேமிராவை வெறித்துப் பார்த்தபடியே இருந்தார்

கட் சொல்லிவிடலாமா என நினைத்தபடியே குழப்பத்துடன் ராம்பிரசாத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன்

எதிரே கேமிரா ஒடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வே அவரிடமில்லை

“புரொபசர்.. பேசுங்க“ எனச் சப்தமாகவே சொன்னான்.

அவரிடம் எந்தச் சலனமும் இல்லை. ஏதோ பழைய நினைவில் உறைந்து விட்டவரைப் போலிருந்தார். கேமிராவிற்குக் கட் சொல்லிவிட்டு சரவணன் தனது எரிச்சலை மறைத்தபடியே அவரது அருகில் சென்று கேட்டான்

“என்ன சார் எதுவும் பேசலை. டயர்டா இருக்கா“

“பழைய விஷயங்களை நினைச்சா. வருத்தமா இருக்கு. பேச முடியலை“

“ரொம்ப சீரியஸா யோசிக்காதீங்க சார். ஜாலியா ஏதாவது பேசுங்க உங்க பிரண்ட்ஸ்.. சின்னவயசில கிரிக்கெட் ஆடுனது இப்படி.. சந்தோஷமா பேச ஆரம்பிங்க.. முன்னே பின்னே எடிட் பண்ணிகிடலாம். “

“லைப்ல நான் அதிகம் சந்தோஷப்பட்டதில்லை. அது தேவையாவும் இல்லை. நான் கற்பனையிலே வாழ்ந்துகிட்டு இருக்கிறவன். இந்த ரியாலிட்டியோட என்னாலே ஒத்து போக முடியலை. “

“நான் வேணும்னா கேள்வி கேட்கவா. அதுக்குப் பதில் சொல்லுறீங்களா“

“என்ன கேட்கப்போறீங்க“

“உங்க அப்பா அம்மாவை பற்றி முதல்ல சொல்லுங்க. அதை ரிக்கார்ட் பண்ணிகிடுறேன்“.

“அம்மா பற்றிச் சொன்னா எமோஷனல் ஆகிடுவேன்.  அப்பா பற்றிச் சொல்றதுன்னா.. எதைச் சொல்றதுனு தெரியலை. “

“உங்க அப்பா ஸ்கூல் டீச்சரா“

“அவரும் மேத்ஸ் டீச்சர். ரொம்பக் கோபம் வரும்.. பசங்களைக் கண்ணு மண்ணு தெரியாமல் அடிப்பாரு.. ஸ்கூல்ல அவரைப் பாக்க எனக்கே பயமா இருக்கும். நான் ஸ்கூல்ல ஆவரேஜ் ஸ்டுடண்ட். நிறைய எக்ஸாம்ல பெயில் ஆகியிருக்கேன். அப்போ அவர் அடிச்ச அடி, இன்னும் மனசுல வலிக்குது. அதை எல்லாம் இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது. ஒரு ஆள் இறந்து போனாலும் அவர் செய்த தவறுகள் இறந்து போறதில்லை. இப்போவும் ஏதாவது ஒரு நாள் கனவுல அவர் கிட்ட அடிவாங்கிட்டு தான் இருக்கேன். “

“உங்களுக்கு டிவி பாக்குற பழக்கம் இருக்கா. எங்க மார்னிங் ஷோ பாத்து இருக்கீங்களா“

“நான் டிவில டென்னிஸ் மேட்ச் மட்டும் தான் பார்ப்பேன். எப்போவாது அனிமேஷன் பார்ப்பேன். உங்க சேனலை பார்த்தது கிடையாது. நிறையப் புக்ஸ் படிப்பேன். “

“நாலே நாலு கேள்விக்கு ஜாலியா பதில் சொல்லுங்க. அது போதும்“

“நாலுங்க நம்பர் ரொம்ப விசேசமானது தெரியுமா. “.

“கேமிராவை ஆன் பண்ணுறேன். அதைப்பற்றிச் சொல்லுங்க“

“சும்மா ஜோக்குக்குச் சொன்னேன். நான் மேத்ஸ் வச்சி வித்தை காட்டமாட்டேன்“.

“அப்போ உங்க சொந்த ஊரைப் பற்றிச் சொல்லுங்க“

“காலையில் இருந்து என் மனசில் நாங்க குடியிருந்த வீதி மட்டும் தோணிக்கிட்டே இருக்கு, ஊருக்கு போயி முப்பது வருஷமிருக்கும். “

“உங்க வீதியில அப்படி என்ன விசேசம்“

“எங்க வீதி ரொம்ப சின்னது. ஆனா அதுக்குள்ளே நிறைய சின்னசின்னதா வீடுகள்.. நாங்க குடியிருந்தது ஒரு வாடகை வீட்ல. அந்த வீட்டுவாசல்ல பெரிய வேப்பமரமிருக்கும். எங்க வீதியில பாம்பு சட்டை மாதிரி ஒரு மினுமினுப்புல வெயில் அடிக்கும். மழை பெய்றப்போ வீதி ரொம்ப அழகா இருக்கும். என் சைக்கிள் மழையில நனையுறதை பார்த்துகிட்டே இருப்பேன். எதிர்வீட்ல ஒரு பூனை இருக்கும். அதுவும் என்னை மாதிரியே மழையை வேடிக்கை பார்க்கும். அந்தப் பூனை ஒரு நாள் கிணத்துல செத்துகிடந்தது. யார் கொன்னாங்கன்னு தெரியலை. சின்னவயசில பூனை பின்னாடியே சுற்றிகிட்டு இருந்திருக்கேன். “

“உங்களுக்கு மேத்ஸ்ல எப்படி ஆர்வம் வந்துச்சி. அதைச் சொல்லுங்க“

“எனக்கே தெரியலை.. நம்பர்ஸ் எல்லாம் எனக்கு விளையாட்டு சாமான் மாதிரி தான், அதை வச்சி விளையாடிகிட்டே இருப்பேன். எனக்கு நிறையப் பிரண்ட்ஸ் கிடையாது. வீட்ல அப்பா ரொம்பக் கண்டிப்பு. சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும் நல்லா படிப்பாங்க. . பள்ளிக்கூடம் பரிட்சை ரிசல்ட்ங்கிற உலகத்துல இருந்து எஸ்கேப் ஆகுறதுக்குத் தான் மேத்ஸ் உள்ளே நுழைஞ்சேன். அது ரொம்ப ரகசியமான உலகம். அதைச் சொல்லிப் புரிய வைக்கமுடியாது“

“பிரண்ட்ஷிப். லவ் மாதிரி சுவாரஸ்மான விஷயம் ஏதாவது சொல்லுங்க. கேமிராவை ஆன் பண்ணிகிடுறேன்“ என்றான் சரவணன்

“உங்க கேமிராவை பார்த்தா எனக்குப் பேச்சு வரமாட்டேங்குது. அது கூச்சமில்லை. உலகத்துக்கு எதுக்கு என்னைப் பற்றித் தெரியணும்ங்கிற கோபம். யாராவது பாராட்டுவாங்கன்னு நினைச்சி வானத்துல நட்சத்திரம் ஒளிருதா என்ன. “

“என்கிட்ட பேசுறதா நினைச்சிட்டு நீங்க இப்படியே பேசிகிட்டே இருங்க. ரிக்கார்ட் பண்ணிகிடுறேன். “

“என்னை நானே ஏமாத்திகிட சொல்றீங்களா. அது ரொம்பக் கஷ்டம்“

சரவணனுக்கு அவரை எப்படிக் கையாளுவது எனத் தெரியவில்லை. அவரே ஒரு சிக்கலான கணிதப்புதிர் போலிருந்தார்.

“சார் நீங்க வேணும்னா.. டிபன் சாப்பிட்டு வாங்களேன். பசியா இருந்தாலும் கோர்வையா பேச முடியாது“

“எனக்கு நடந்த பல விஷயங்கள் யாருக்கோ நடந்தமாதிரி இருக்கு. படிப்பு, வேலை. வாழ்க்கை எல்லாத்துலயும் நிறையச் சிரமப்பட்டு இருக்கேன். ரெண்டு தடவை என் வேலை பறி போயிருக்கு. காலேஜ் மேல கேஸ் போட்டேன். பனிரெண்டு வருஷம் நடந்துச்சி. தோத்துட்டேன். இப்படி நிறைய சிரமங்கள். அதனாலே மனசுல எதையும் வச்சிகிடக்கூடாதுனு வைராக்கியமா இருந்துட்டேன்.. இப்போ எதுவும் நினைவில் இல்லை “

“இந்த விருதை வாங்க எப்போ ஜப்பானுக்குப் போறீங்க. “

“ நிஜமா நான் போக விரும்பலை“.

“நீங்க போகாமல் எப்படி சார். “

“டிராவல் பண்ணுறதை நினைச்சா.. பயமா இருக்கு.. எனக்குச் சின்னசின்னதா நிறையப் பயம் இருக்கும். அதை வயசாகியும் என்னாலே விட முடியலை. மேடை விருது வெளிச்சம் இதெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. விருப்பமும் இல்லை“

“அவார்ட் வாங்கிட்டு ஜாலியா ஜப்பானை சுற்றிபாத்துட்டு வரலாம்லே“

“  பெரிய பெரிய கட்டிடங்களை, மனுசங்களை வேடிக்கை பாக்குறதுல என்ன இருக்கு. ஜன்னல் அளவில் வானம் தெரிந்தால் எனக்குப் போதும்  “

“ரொம்ப சலிப்பா பேசுறீங்க“

“சலிப்பு இல்லை. உண்மை… எனக்கு இந்த வீடு. மகள். பேரன் பேத்திங்கிற சின்ன உலகம் போதும். இந்த அவார்ட் கொடுக்காட்டி நீங்க என்னைத் தேடி வந்தே இருக்கமாட்டீங்க. இந்தத் திடீர் புகழ். திடீர் வெளிச்சம்… நிர்வாணமான நிக்குற மாதிரி கூச்சமா இருக்கு. “  

“இதைச் சந்தோஷமா அனுபவிக்க வேண்டியது தானே“

“அப்படி இருக்க என்னால முடியலை. Momentary happiness is worse than permanent misery. “

“இப்போ என்ன செய்யலாம்“ எனக்கேட்டான் சரவணன்

“நீங்களும் என் கூட டிபன் சாப்பிடலாம்“ என்றபடியே எழுந்து சமையல் அறையை நோக்கிச் சென்றார் ராம்பிரசாத்.

••

காலையிலே வேண்டாத வெட்டிவேலை என நினைத்தபடியே சரவணன் பேக்கப் என்றான். அவர்கள் கேமிராவை எடுத்து வைத்துவிட்டு சோபாவை பழைய இடத்திற்கு நகர்த்திக் கொண்டிருந்தார்கள். பிரகாச விளக்குகள் அணைக்கபட்டதும் ஹால் தன் இயல்பிற்குத் திரும்பியது.

லாவண்யா தனது அப்பாவை உள்ளே அழைத்து ஒரு தட்டில் இட்லி வைத்து சட்னி, எள்ளுபொடியுடன் சாப்பிடக் கொடுத்தாள். அவர் நின்றபடியே சாப்பிடும் காட்சி தெரிந்தது. கேமிரா உதவியாளர்கள் தங்கள் பொருட்களை வெளியே எடுத்துக் கொண்டு போனார்கள். வாசலில் நின்றபடியே ஷுவை காலில் மாட்டிக் கொண்டு சரவணன் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.

“சுத்த லூசு சார் இந்தக் கிழவன்.. மறை கழண்ட கேஸ்.. இவனுக்கு எல்லாம் அவார்ட் கொடுத்து நம்ம உசிரை எடுக்குறாங்க.   நான் அப்படியே ஏர்போர்ட் போயிடுறேன். மினிஸ்டர் ஷுட் இருக்கு.  “

சரவணன் பேசியது வீட்டிற்குள் இருந்தபடியே ராம் பிரசாத்திற்குக் கேட்டது அவர் மகளை பார்த்து மெல்லிய சிரிப்புடன் சொன்னார்

“மறை கழண்ட கேஸ்.. கேட்கவே நல்லா இருக்குல்லே“

லாவண்யா தானும்  சிரித்தபடி அப்பாவிடம் கேட்டாள்

“இந்த அவார்ட் கிடைச்சதுல உங்களுக்குச் சந்தோஷமே இல்லையாப்பா“

“ஒரு சந்தோஷமும் இல்லை. முப்பது வயசில கிடைச்சிருந்தா ஒருவேளை சந்தோஷப்பட்டிருப்பேன். இப்போ இந்த விருது எதுக்கு. நானும் இருக்கேனு காட்டிகிடவா. கரப்பான்பூச்சி மேல டார்ச் அடிச்ச மாதிரி தொந்தரவாக உணருறேன். வயசானவனுக்கு ரொம்பச் சந்தோஷம் எல்லாம் தேவையில்லைம்மா. கேமிரா முன்னாடி கடந்த காலத்தில நடந்ததை எல்லாம் சொல்ல சொல்றாங்க. அது என்ன கிணற்றுல வாளியை போட்டு தண்ணி இறைக்கிறது மாதிரியா. சந்தோஷம் எல்லாம் புகை மாதிரி கடந்து போயிருச்சி. கஷ்டங்கள் மட்டும் கறை மாதிரி மனசை விட்டு போகவேயில்லை.  இந்த அவார்டாலே உங்களுக்குத் தான் தொந்தரவு“

“ஒரு நாள் தானேப்பா“ என்று சிரித்தாள்

“ஒரு நாள் தான்“ என்று அவரும் சொல்லிக் கொண்டார். அப்படிச் சொல்லும் போது அவரது குரலில் ஆழமான வருத்தம் வெளிப்பட்டது.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2022 02:00

ஜாக் லண்டன் நாவல்

ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலை டாக்டர் சந்திரமௌலி தமிழாக்கம் செய்திருக்கிறார். தேசாந்திரி பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது

ஜுலை 24 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு கோவை புத்தகக் கண்காட்சியின் தேசாந்திரி அரங்கில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.

புதுமைப்பித்தன் மொழியாக்கம் செய்த அலெக்சாண்டர் குப்ரினின் யாமா நாவலையும், ஹெஸ்ஸேயின் சித்தார்த்த நாவலையும் தேசாந்திரி பதிப்பகம் பதிப்பித்துள்ளது.

எனது சினிமா கட்டுரைகளின் தொகுப்பான சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் மறுபதிப்பினை தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

[image error]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2022 00:10

July 18, 2022

இலக்கிய மாமணி விருது

தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது கோணங்கிக்கு அறிவிக்கப்பட்டிருபக்கிறது.

அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2022 01:48

July 17, 2022

அஜந்தா கண்ணாடி.

புதிய சிறுகதை. ஜுலை 2022

அவன் கண்ணாடியை உடைத்தபோது மணி நான்கு இருபது.

பள்ளிவிட்டுத் திரும்பியதும் எதற்காக முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தான் என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் அலமாரியின் நடுத்தட்டில் சாய்த்து வைக்கப்பட்ட கண்ணாடி கைதவறி விழுந்து சில்லுசில்லாகச் சிதறியதைக் கண்டதும் பயத்துடன் குனிந்து எடுத்து ஒட்டவைக்க முயன்றான்.

உடைந்த சில்லுகளில் துண்டுதுண்டாக அவனது உருவம் காட்சியளித்தது விநோதமாக இருந்தது.

அம்மா வருவதற்குள் கண்ணாடியை ஒட்ட வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அடி வாங்கி முடியாது.

அம்மா மிளகாய் வத்தல் பொடி தயாரிக்கும் பேக்டரி ஒன்றில் வேலை செய்கிறாள். ஆறு மணிக்கு வேலைவிடுவார்கள். அவள் சேலை முழுவதும் வத்தல் நெடியிருக்கும். கிட்டப்போனால் தும்மல் வந்துவிடும். வத்தல் காரத்துல உடம்பு எரியுது என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள்.

வெறும் கண்ணாடி என்று அம்மா ஒருபோதும் சொல்லமாட்டாள். அஜந்தா கண்ணாடி என்றே சொல்லுவாள். அஜந்தா என்ற பெயர் கண்ணாடியின் பின்னால் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

காலை நேரம் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொள்ளும் போது மட்டுமே அம்மாவின் முகத்தில் சாந்தமிருக்கும். மற்ற நேரங்களில் சிடுசிடுப்பும் எரிச்சலும் ஆத்திரமுமாகவே இருப்பாள். கோபம் அதிகமாகிவிட்டால் தோசைக்கரண்டியாலே அடிப்பாள். இன்றைக்கு எதில் அடிக்கப்போகிறாளோ என்று பயமாக இருந்தது

காகிதத்தை ஒட்ட வைக்கப் பசை இருப்பதைப் போல எதை வைத்து கண்ணாடியை ஒட்டவைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அப்பா சைக்கிள் பஞ்சர் ஒட்டுவதற்காக வைத்திருந்த பசை ஒன்றைத் தேடிப்பிடித்து அதைக் கண்ணாடி சில்லில் தடவி ஒட்டவைத்துப் பார்த்தான். கண்ணாடி ஒட்டிக் கொள்ளவில்லை

இந்தக் கண்ணாடிக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் என்று எரிச்சலாக வந்தது. ஏதாவது மந்திரம் போட்டால் கண்ணாடி ஒட்டிக் கொள்ளும் என்று தோன்றியது. என்ன மந்திரம் போடுவது. வாய்க்கு வந்தபடி ஏதோ சொன்னான். உதடு சுழித்து அவன் மந்திரம் போடுவது ஒரு உடைந்த கண்ணாடி சில்லில் தெரிந்தது

கண்ணாடி ஒட்டிக் கொள்ளவில்லை.

ஒரு புறம் கோபமும் மறுபுறம் அடிவாங்கப்போகும் பயமும் ஒன்று சேர்ந்து கொண்டது. வீட்டின் பின்புறமிருந்த முருங்கை மரத்திலிருந்து ஒரு மைனா அவனைக் கேலி செய்வது போலச் சப்தமிட்டுக் கொண்டிருந்தது எரிச்சலை அதிகப்படுத்தியது.

இன்றைக்கு ஏன் பள்ளி மூன்று நாற்பதிற்கே விட்டது. ஏன் விளையாடப் போகாமல் நேராக வீடு திரும்பி வந்தோம் என்று பள்ளியின் மீதும் கோபமாக வந்தது.

எத்தனையோ நாள் கண்ணாடியை இப்படிக் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறோம் அப்போதெல்லாம் நழுவி உடையவில்லையே. இன்றைக்கு என்ன கேடு வந்துவிட்டது என்று ஆத்திரமாக இருந்தது.

உடைந்த கண்ணாடி துண்டுகளைப் பார்த்து எச்சில் துப்பினான். கண்ணாடி சில்லில் எச்சில் வழிந்தோடுவது அழகாக இருந்தது

அம்மா வருவதற்குள் கண்ணாடியை ஒட்டவைக்க முடியாது. பேசாமல் புதுக்கண்ணாடி ஒன்றை வாங்கி வந்து வைத்துவிட்டால் நல்லது என்ற யோசனை உருவானது

அஜந்தா கண்ணாடி என்ன விலையிருக்கும். காசிற்கு எங்கே போவது. அம்மா பருப்பு டப்பாவில் ரூபாயை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டிருக்கிறான். அதில் தேடினால் நிச்சயம் ரூபாய் கிடைக்கக் கூடும். ஒருவேளை அம்மா கண்டுபிடித்துவிட்டால் ஸ்கூலில் டிராயிங் நோட் வாங்கச் சொன்னார்கள் என்று பொய் சொல்லிவிடலாம் என்று நினைத்துக் கொண்டான்.

பருப்பு டப்பாவில் பத்து ரூபாய்த் தாள் ஒன்று கசங்கிய நிலையிலிருந்தது. அதை முகர்ந்து பார்த்தபோது பருப்பு வாசனை அடித்தது.

அவசரமாக வெளியே புறப்பட்டான், அவனது தங்கை பள்ளிவிட்டு வருவதற்குள் திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் பதைபதைப்பாக இருந்தது. உடைந்த கண்ணாடி சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டு போய் வேலிப்புதர்களுக்குள் வீசி எறிந்தான். வேலிப்புதரில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கோழி கண்ணாடி சில்லில் முகம் பார்த்தது

கதவைச் சாத்தி வெறுமனே தாழ்பாள் போட்டுவிட்டு பஜாரை நோக்கி நடந்த போது யாரோ தன் பின்னால் வருவது போலவே தோன்றியது. தவறு செய்யும் போதெல்லாம் உடல் கனமாகிவிடுவது அவனுக்கு மட்டும் தானா என்று குழப்பமாகயிருந்தது.

பஜாருக்குப் போகும்வழியில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாத வீடு ஏதாவது இருக்குமா என்று நினைத்துக் கொண்டான். அந்த நினைப்பு கண்ணாடி பார்க்காத ஆள் யாராவது இருப்பார்களா என்றும் மாறியது. ஒரு ஊரில் மொத்தம் எவ்வளவு கண்ணாடிகள் இருக்கும். இதுவரை எவ்வளவு கண்ணாடிகளை உடைத்திருப்பார்கள். இப்படிக் குழப்பமான யோசனைகளுடன் அவன் நடந்து கொண்டிருந்தான்.

ஜெசிந்தா டீச்சர் வீட்டில் அவர்கள் வளர்க்கும் கறுப்புப் பூனை ஒரு நாள் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறான். பூனை ஏன் முகம் பார்த்துக் கொள்கிறது எனப் புரியவில்லை

அவனது வகுப்பிற்கு வரும் நிர்மலா டீச்சர் தனது ஹேண்ட்பேக்கில் தங்கநிற மடக்கு கண்ணாடி வைத்திருப்பாள். வகுப்பு முடிந்து வெளியே போகும் போது அதில் தன்னைப் பார்த்துக் கொள்வாள்.

அதைப் பற்றி ஒரு நாள் எல்.ராணியும் திவ்யாவும் பேசிக் கொண்டிருந்ததை அவன் ஒட்டுக் கேட்டிருக்கிறான். டீச்சர் ரொம்ப ஸ்டைல் பண்றா என்று திட்டிக் கொண்டிருந்தார்கள். நிர்மலா டீச்சரை விடவும் ஜெசிந்தா டீச்சர் தான் அழகு என்றார்கள். அவனுக்கு என்னவோ இருவரையும் விடத் தங்க புஷ்பம் டீச்சர் தான் அழகியாகத் தோன்றினாள். பெண்கள் கண்ணுக்கு அழகு வேறாகத் தெரியும் போலும்.

எப்போது கண்ணாடி பார்த்தாலும் அவன் முகம் அவனுக்குப் பிடிக்காது. உர்னு கடுவான் மாதிரி இருக்கே என்பாள் தங்கை.

அம்மா தங்கைக்குத் தலை சீவி விடும்போது அவள் கையிலே கண்ணாடியைக் கொடுத்துவிட்டு அசையாமல் உட்காரு என்பாள். ஆனால் தங்கையால் அப்படியிருக்க முடியாது. அசைந்தபடியே இருப்பாள். இதற்காக அவளது தலையில் கொட்டு விழும். கன்னத்தில் குழி விழுகிறதா என்று தங்கை அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக் கொண்டேயிருப்பாள். சில நேரம் கண்ணாடியை கன்னத்தோடு ஒட்டவைத்துக் கொண்டு ரகசியம் போல ஏதோ பேசிக் கொண்டிருப்பதையும் கண்டிருக்கிறான்.

அவன் தலைசீவி விட்டு திருநீறு பூசிக் கொள்ளும் போது மட்டும் தான் கண்ணாடி பார்க்க அம்மா தருவாள். மற்ற நேரங்களில் ஆம்பளை புள்ளைக்கு எதுக்குக் கண்ணாடி என்று திட்டுவாள். இதெல்லாம் அவனுக்குக் குழப்பமான விஷயமாக இருந்தது.

மாலை நேரத்தின் சோம்பல் பஜாரின் மீதும் படிந்திருந்தது. கடந்து செல்லும் போது ஒரு கடையில் கல்லாவிற்கு எதிரே படுக்கை வசமாகக் கண்ணாடி மாட்டி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். இன்னொரு கடையில் தலையாட்டி பொம்மை முன்பாகக் கண்ணாடி இருந்தது. என்னைப் பார் சிரி என்ற கழுதைப்படமும் கண்ணாடி ஒன்றும் சோமன் கடையில் தென்பட்டது. எல்லாக் கடைகளிலும் எதற்காகக் கண்ணாடி வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. கோவில் பிரகாரத்தில் கூட ஆள் உயரக் கண்ணாடி வைத்திருக்கிறார்கள். சாமி கூடக் கண்ணாடி பார்த்துக் கொள்கிறது.

மேற்கு பஜாரிலிருந்த நவாப் கடையில் கண்ணாடி விற்பதைக் கண்டிருக்கிறான். அந்தக் கடையில் தான் பபிள்கம், சாக்லேட், அன்ரூல்டு நோட், கண்ணாடி ஸ்கேல் எல்லாம் வாங்கியிருக்கிறான்.

அப்போது வட்டக்கண்ணாடி, மடக்கு கண்ணாடி போன்றவை ஒரு அலமாரியில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறான்.

அந்தக் கடையில் ஒரு முறை அருணாவின் மாமா சந்தனப்பவுடர் வாங்குவதைக் கண்டிருக்கிறான். அவர் பவுடர் டப்பாவின் மூடியை திருகி அவனது உள்ளங்கையில் பவுடரை தெளித்து முகர்ந்து பார்க்கச் சொன்னார். அந்த நறுமணத்தை மறக்கமுடியவேயில்லை. எப்போது நவாப் கடைக்குப் போனாலும் சந்தனப்பவுடர் நினைவிற்கு வந்துவிடும்

அன்றைக்கு அவன் நவாப் கடைக்குப் போன போது ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. அதை நவாப் கேட்கிறாரோ இல்லையோ கடை மூடும்வரை ஒடிக் கொண்டேயிருக்கும். ஆள் துணைக்கு ரேடியோவை வைத்திருக்கிறார் என்பான் முத்து.

நவாப் கடை சற்றே உயரமானது. பலகையில் ஏறி நின்று எக்கினால் தான் அவர் தெரிவார். அழுக்கடைந்த பனியன். சாயம் போன வேஷ்டி. வழுக்கைத் தலை. பெரிய உதடுகள். உப்பிய கன்னம். அவர் உருவத்திற்கும் குரலுக்கும் பொருத்தமே இருக்காது

அவன் எக்கி நின்று “நவாப்“ என்று சப்தமாகக் கூப்பிட்டான்.

ஏதோ நினைப்பில் நவாப் அக்குளைச் சொறிந்து கொண்டிருந்தார். அவனைக் கண்டதும் கையை நீட்டி “சாக்லேட்டா“ என்று கேட்டார்.

“இல்லை முகம் பார்க்குற கண்ணாடி வேணும்“ என்றான்.

“உடைச்சிட்டயா“ என்று கேட்டார் நவாப்

தனது முகத்திலே கண்ணாடியை உடைத்தவன் என்று எழுதியிருக்கிறதா. எப்படிப் பார்த்தவுடனே கண்டுபிடித்துவிட்டார் என்பது போல நினைத்தபடி பொய் சொன்னான்

“பூனை தள்ளிவிட்ருச்சி.. அதான் எங்கம்மா புதுக் கண்ணாடி வரச் சொல்லுச்சி“

நவாப் எழுந்து ஒரு கண்ணாடியை எடுத்து அவனிடம் நீட்டினார்

அதைத் திறந்து முகத்தைப் பார்த்தான். இறுக்கமான முகம். அவனுக்கே அவனைப் பார்க்க பிடிக்கவில்லை

“இது பெரிசா இருக்கு.. எனக்குச் சின்னதா வேணும்“

“இதுக்கும் சின்னது இல்லை. பாக்கெட் சைஸ் தரவா“

“அது வேணாம். அஜந்தா கண்ணாடி வேணும்.“

“நம்மகிட்ட கிடையாது.. சுப்ரமணிய சாமி கோவில் கிட்ட இருக்கிற வளையல்கடையில் கேளு“

அவரது பதிலை முழுவதும் கேட்பதற்குள் அவன் கோவில் கடைகளை நோக்கி நடக்கத் துவங்கியிருந்தான். கண்ணாடி விலை அதிகமாக இருந்தால் என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. சாலையில் சில நேரம் சில்லறை காசுகளைக் கண்டெடுத்திருக்கிறான். அப்படி ஒரு கண்ணாடி கண்டெடுக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

மிட்டாய்கடையில் ஆள் உயரத்திற்குக் கருப்பட்டி மிட்டாய்களை அடுக்கி வைத்திருந்தார்கள். கடைக்கண்ணாடியில் மிட்டாய் தெரிந்த்து. லட்டு மிக்சர் கூடக் கண்ணாடி பார்த்துக் கொள்கிறதே என நினைத்தபடியே நடந்தான்.

அம்மாவோடு சில தடவை வளையல் கடைகளுக்குப் போயிருக்கிறான். எப்போதும் அம்மா பிளாஸ்டிக் வளையல்களைத் தான் வாங்குவாள். ஏன் தன்னைப் போன்ற பையன்கள் போட்டுக் கொள்ள வளையல் விற்பதில்லை என்று ஒருமுறை கடைக்காரனிடம் கேட்டிருக்கிறான். அப்படிக் கேட்டதற்காக அம்மா கடையில் வைத்தே அடித்தாள்

“அது ஒண்ணு தான் குறைச்சல். வளையல் போட்டு பூ வச்சிக்கோ ரொம்ப லட்சணமா இருக்கும்.“

அவனைப் போன்ற பையன்கள் அணிந்து கொள்வதற்கு ஒன்றுமே இல்லையா என்று ஆதங்கப்பட்டிருக்கிறான்.

அதைப்பற்றிப் பள்ளியில் பேசிக் கொண்டிருந்த போது சிக்ஸ்த் பி படிக்கும் சேகர் கூலிங்கிளாஸ் பசங்கள் மட்டும் தான் போடுவார்கள் என்று சொன்னான். கறுப்புக் கூலிங்கிளாஸ் ஒன்றை உடனே வாங்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அப்பாவிடம் கேட்டால் அதற்கும் அடிப்பார். ஆகவே அந்த ஆசையும் பறிபோய்விட்டது.

சுப்ரமணியசாமி கோவிலை ஒட்டி வரிசையாக நாலைந்து வளையல்கடைகள் இருந்தன. ஒரு கடைக்குள் போய் நின்று அஜந்தா கண்ணாடி இருக்கா என்று கேட்டான்

பச்சை சேலை கட்டிய மெலிந்த உருவம் கொண்ட ஒரு அக்கா நின்றிருந்தாள். அவள் நெற்றியில் கறுப்பாக ஒரு மச்சமிருந்தது. அவள் சலிப்பான குரலில் கேட்டாள்

“சின்னதா.. பெரிசா“..

பெரிய ஆள் போலச் சொன்னான்

“காட்டுங்க பார்க்கிறேன்“

அவள் ஒரு கண்ணாடியை எடுத்துக் காட்டினாள்

“கிழே போட்டா உடையாத கண்ணாடி வேணும்“ என்றான்

சிறிய புன்னகையோடு “கண்ணாடியை உடைச்சிட்டயா“ என்று கேட்டாள் அந்த அக்கா. அவளிடம் பொய் சொல்ல விரும்பாதவன் போலச் சொன்னான்

“கைதவறி கிழே விழுந்துருச்சி.“

“எல்லாக் கண்ணாடியும் கிழே விழுந்தா உடையத்தான் செய்யும்“ என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பு ஆறுதல் தருவதாக இருந்தது.

“இது அஜந்தா கண்ணாடியாக்கா“

“அதெல்லாம் இப்போ வர்றதில்லை. இது மணிமார்க் கண்ணாடி“

“எனக்கு அஜந்தா கண்ணாடி தான் வேணும்“

“இதுல முகம் பார்த்தா தெரியாதா“.

“அஜந்தா கண்ணாடி இல்லேன்னா.. நான் வேற கடையில பாத்துகிடுறேன்“ என்று பொய் கோபத்துடன் சொன்னான்

அவனது கோபத்தை ரசித்தவள் போலச் சொன்னாள்

“நாலாவது கடையில் கேட்டுப்பாரு“

அந்தக் கடையிலும் அஜந்தா கண்ணாடி கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் கடைக்காரரிடம் கேட்டான்.

“உடைஞ்ச கண்ணாடியை ஒட்ட வைக்க முடியுமா“

“கண்ணாடி உடைஞ்சா வீட்டுக்கு ஆகாது.. அதைக் குப்பைல தான் போடணும்“ என்றார்.

அதைக்கேட்டதும் அவனது பயம் மேலும் அதிகமானது. கண்ணாடி ஏன் இவ்வளவு மர்மமாக இருக்கிறது.

“பழைய கண்ணாடி எங்கேயாவது கிடைக்குமா“

“அதெல்லாம் யாரும் விலைக்குத் தரமாட்டாங்க“

“அப்போ நான் என்ன செய்றது“

“தேரடியை ஒட்டி பழைய சாமான் கடை இருக்கு,. அங்கே வேணும்னா கேளு “என்றார்

தேரடியை நோக்கி வேகமாக நடந்தான். நேரம் எவ்வளவு ஆகிறது என்று தெரியவில்லை. தங்கை வீடு வந்திருந்தால் இந்நேரம் கண்டுபிடித்திருப்பாள். எப்படி அவளுக்கு மட்டும் தான் செய்யும் எல்லாத் தவறுகளும் தெரிந்து விடுகிறதோ

அவன் அம்மாவிடம் அடி வாங்கும் போது அவள் சிரிக்க வேறு செய்வாள். ஆனால் அம்மா இல்லாத நேரங்களில் யண்ணே யண்ணே என்று உருகுவாள்.

ஜவகர் மைதானத்தைத் தாண்டும் போது அவனது பள்ளியில் படிக்கும் முகுந்தனும் பாஸ்கரும் கையில் ஒரு வயர்கூடையுடன் நின்றிருந்தார்கள்

“எங்கப்பா பாண்டிகடையில் பஜ்ஜி வாங்கிட்டு வரச்சொன்னார்“ என்றான் முகுந்தன்

பாஸ்கர் தான் ஏதோ பெரிய விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டவன் போலச் சொன்னான்

“கோவிலுக்குப் புது யானை வந்துருக்கு. பார்த்தியா.. “

எதையும் கேட்காதவன் போல நடந்து கொண்டிருந்தான். பாஸ்கரும் முகுந்தனும் வீட்டிற்குள் போவதற்குள் வாங்கிய பஜ்ஜியின் ஒரங்களை ரகசியமாகப் பிய்த்துத் தின்றுவிடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

பழைய சாமான் விற்கும் கடையின் முன்பு பிரம்பு நாற்காலி ஒன்றில் கிழவர் உட்கார்ந்திருந்தார். சட்டை அணிந்திருக்கவில்லை. டிராயர் மட்டுமே அணிந்திருந்தார். புருவங்கள் கூட அவருக்கு நரைத்திருந்தன. காவி படிந்த பற்கள். மயிர் அடர்ந்த நீண்ட கைகள்.

கடையில் கால் உடைந்த நாற்காலிகள். அழுக்கேறிய கதவுகள். நிறமிழந்த மரக்குதிரை பிளாஸ்டிக் பொம்மைகள். மாட்டின் கழுத்துமணிகள். ரிப்பேராகிப் போன ரேடியோ, உடைந்த டெலிபோன். நசுங்கிய சமையற் பாத்திரங்கள். பழைய பேண்ட். சட்டைகள்.. பழைய புத்தகங்கள். பீங்கான் கோப்பைகள். ஓடாத கடிகாரங்கள், என ஏதேதோ பொருட்கள் இருந்தன

“அஜந்தா கண்ணாடி இருக்கா“ என்று கடைக்காரரை நோக்கிக் கேட்டான்

“முகம் பார்க்கிற கண்ணாடியா“ என்று கேட்டார் கிழவர்

“ஆமாம்“ எனத் தலையசைத்தான்

“நான் கண்ணாடி பார்த்தே வருஷமாகுது. அந்தா.. அந்த மரப்பலகை பின்னாடி கண்ணாடி இருக்குதானு பாரு.. “

உள்ளே நடந்து மரப்பலகையை விலக்கி பார்த்தான். ஆள் உயரக் கண்ணாடி ஒன்று இருந்தது. ரசம் போன அந்தக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் போது வெட்கப்பட்டான்.

“ஐம்பது ரூபா குடுத்துட்டு கண்ணாடியை எடுத்துக் கோ “என்றார் கிழவர்

“எனக்கு அஜந்தா கண்ணாடி தான் வேணும்“

அதுக்கு நான் எங்க போறது. எந்தப் பொம்பளையும் முகம் பார்க்கிற கண்ணாடியை விக்கமாட்டா“ என்றார் கிழவர்

இனி என்ன செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை. இது போன்ற நேரத்தில் யாரும் உதவிக்கு வர மாட்டார்கள். வழிகாட்டமாட்டார்கள் என்பது அவனுக்கு வேதனையை அதிகப்படுத்தியது.

இப்படியே ஏதாவது ஒரு ஊருக்கு ஓடிப்போய்விட்டால் என்ன என்று கூடத் தோணியது.

சாலையில் போகிறவருகிறவர்கள் எல்லோர் மீதும் கோபம் அதிகமானது. இவர்கள் அத்தனை பேரும் கண்ணாடியில் முகம் பார்க்கிறவர்கள். வீட்டில் கண்ணாடி வைத்திருப்பவர்கள்.

என்ன செய்வது எனத் தெரியாமல் ஜவகர் மைதானத்தில் நின்று கொண்டிருந்தான். சற்று தள்ளி ஆட்டுக்கால் சூப் விற்பவன் கடையைத் தயார் செய்து கொண்டிருந்தான். கொய்யாப்பழம் விற்கும் தள்ளுவண்டி ஆள் சோர்வாக முக்காலியில் அமர்ந்திருந்தார். எச்சில் இலை ஒன்றை இழுத்துக் கொண்டு தெருநாய் ஒடிக் கொண்டிருந்தது. காலேஜ் பஸ் வந்து நின்று இளம்பெண் சோர்வாக இறங்கி நடந்து சென்றார்கள்.

வீட்டிற்குத் திரும்பப் போகப் பயமாக இருந்தது. கண்ணாடி தன்னைப் பழிவாங்கிவிட்டதோ என்று கூட நினைத்தான். தபால் அலுவலகச் சுவரில் ஒரு புறா தனியே அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது

கையில் இருக்கிற காசிற்குப் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குப் போய் அடி வாங்கிக் கொள்ள வேண்டியது தான் என்று திடீரெனத் தோணியது.

அப்படி நினைத்த மாத்திரம் பஜ்ஜியின் வாசனை மூக்கில் அடிப்பது போலிருந்தது. பாண்டி கடையில் மட்டும் பஜ்ஜிக்கு இரண்டு வகைச் சட்னி தருவார்கள். எவ்வளவு ருசியான பஜ்ஜி.

கண்ணாடி உடைந்ததற்காக மட்டுமில்லை. வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய்ப் பஜ்ஜி வாங்கித் தின்றதற்காகவும் அம்மா நிச்சயம் அடிப்பாள். வெறுமனே அடிவாங்குவதை விடவும் இப்படி ஆசைப்பட்டதை வாங்கித் தின்றுவிட்டு அடிவாங்கலாம் தானே

அவன் பாண்டி கடைக்குப் போனபோது எண்ணெய்ச் சட்டியில் பஜ்ஜிகள் மிதந்து கொண்டிருந்தன. அவை கண்சிமிட்டி அவனை அழைப்பது போலிருந்தது. சூடாக, இரண்டு பஜ்ஜிகள் வாழை இலையில் வைத்து வாங்கினான். அவனாகவே சட்னியை அள்ளி அள்ளி போட்டுக் கொண்டான். பின்பு சூட்டோடு பிய்த்துச் சாப்பிட்டான்

இரண்டு பஜ்ஜிகளை இவ்வளவு வேகமாக யாராலும் சாப்பிட முடியுமா என்று தெரியவில்லை. இன்னும் பத்துப் பஜ்ஜிகள் தின்றாலும் ஆசை தீராது. டவுசர் பையிலிருந்த பத்துரூபாயை எடுத்துக் கொடுத்து இன்னும் ரெண்டு பஜ்ஜி வேணும் என்றான். கடைஆள் ஒரு பஜ்ஜி மூணு ரூபாய் என்று சொல்லியபடியே ஒரு பஜ்ஜியை அவன் இலையில் வைத்துவிட்டு உதிர்ந்து கிடந்த பஜ்ஜி தூள்களை அள்ளி இலையில் போட்டார். எவ்வளவு பெருந்தன்மை என்று பட்டது.

இந்தப் பஜ்ஜியை மெதுவாகச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தபடியே ஒரு கடி கடித்தபோது அவனது அய்யா யாரோ ஒரு ஆளின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்து இறங்குவது கண்ணில் பட்டது. அப்படியே பஜ்ஜியை தூர எறிந்துவிட்டு அவரது கண்ணில் படாமல் வீட்டை நோக்கி ஓடினான்.

அவனது வீடு இருந்த தெருவிற்கு வந்தபோது அடிவாங்கப் போவதை நினைத்துக் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. நத்தை ஊர்ந்து செல்வது போல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வீட்டை நோக்கி நடந்தான்

கதவு திறந்து கிடந்தது.

உள்ளே இருந்து விளக்குமாற்றுடன் வெளியே வந்த தங்கை அவனை முறைத்தபடியே வெளியே சென்றாள்

அம்மா பாயில் சுருண்டு படுத்திருந்தாள். அருகில் சென்றபோது அவள் எதையோ நினைத்து விம்மி விம்மி அழுது கொண்டிருப்பது தெரிந்தது. எதற்காக அழுகிறாள். பேக்டரியில் ஏதாவது பிரச்சனையா. உடம்புக்கு முடியவில்லையா. அய்யாவோடு சண்டையா. எதுவும் புரியவில்லை. கன்னத்தில் கண்ணீர் வழியக் கலைந்த தலையுடன் சேலை நழுவிக்கிடக்க அம்மா சோர்ந்து கிடந்தாள்.

அவள் கண்ணில் படாமல் நடந்துபோய்ப் பையிலிருந்த ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சுவரோரமாக உட்கார்ந்து படிப்பது போல நடித்தான்

“யம்மா.. அண்ணன் வந்துட்டான்“ என்று தங்கை சப்தம் கொடுத்தாள்

புரண்டு படுத்த அம்மா வேதனையான குரலில் சொன்னாள்.

“தலைவலி தாங்க முடியலை.. முக்குகடையில் போய் டீ வாங்கிட்டு வா“

அவன் தலையாட்டினான். அம்மா சேலையில் முடிந்து வைத்திருந்த பணத்திலிருந்து பத்து ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அவசரமாக அவன் முக்கு கடையை நோக்கி நடந்தான்

தூக்குவாளியில் டீ வாங்கிக் கொண்டு வந்தபோது அம்மா எழுந்து உட்கார்ந்திருந்தாள். முகம் வீங்கியிருப்பது போலிருந்தது. மூக்கின் மீது ஒரு தலைமயிர் விழுந்துகிடந்தது.

அம்மா ஒரு டம்ளரில் பாதி டீயை ஊற்றிக்குடித்துவிட்டு மீதமிருந்ததை அவர்களுக்காகக் கொடுத்தாள். இருவரும் மீதமான டீயைக் குடித்தார்கள்.

டீ வாங்கிய தூக்குவாளியை கழுவுவதற்காகத் தங்கை எடுத்துச் சென்றாள். அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் சொன்னான்

“முகம் பாக்குற கண்ணாடியை உடைச்சிட்டேன். “

“போகுதுவிடு. அதுல பாத்து தான் நிறையப் போகுதாக்கும்“ என்றாள் அம்மா.

அவனால் நம்பமுடியவில்லை

“கைதவறி கிழே விழுந்து உடைஞ்சி போச்சு“ என்று விளக்கமாகச் சொன்னான்

“எல்லாம் நம்ம நேரம் “என்று அம்மா சலித்துக் கொண்டாள்.

இவ்வளவு தானா. இதற்குப் போயா இவ்வளவு பயந்தோம். வீட்டில் எதற்கு அடிப்பார்கள். எதை மன்னித்துவிடுவார்கள் என்று புரிந்து கொள்ள முடியவேயில்லை. ஒருவேளை அம்மா நாளைக்கு அடிப்பாளோ. அப்படித் திருவிழாவில் துப்பாக்கி வேண்டும் என்று கேட்டதற்கு என்றைக்கோ அடி கிடைத்ததே. அப்படிக் கிடைக்கக் கூடுமா.

ஆனால் அம்மா நடந்த்தை மன்னித்துவிட்டவளைப் போல எழுந்து சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு சமையல் செய்வதற்காகக் கூடையிலிருந்த வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தாள்.

நாளைக்கு அம்மா எதில் முகம் பார்ப்பாள் என்று கவலையாக இருந்தது.

அவனது தங்கை மட்டும் அருகில் வந்து கோபத்துடன் கேட்டாள்

“கண்ணாடியை உடைச்சிட்டா நான் எதைப் பார்த்து ஜடை பின்னுறது“

“சுவரைப் பார்த்து“ என்று கேலியாகச் சொன்னான்

“அதுல உன் முகரை தான் தெரியும்“ என்றாள் தங்கை

முகரை என்று அவள் சொன்னதை நினைத்து அவனும் சிரித்துக் கொண்டான்

••••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2022 23:55

சிரிக்கும் வகுப்பறையின் மாணவன்

ஜி.கோபி

உலக இலக்கியத்தில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய டேவிட் காப்பர் பீல்டு, ஆலிசின் அற்புத உலகம், டோட்டோ சானின் ஜன்னலில் ஒரு சிறுமி, எக்சூபெரி எழுதிய குட்டி இளவரசன் போன்ற புத்தகங்கள் குழந்தைகளின் வாழ்வியலை பதிவு செய்ததில் முக்கியமானவை. அது போன்று தமிழில் எழுதப்பட்ட தேனி சீருடையானின் நிறங்களின் உலகம் புத்தகம் பள்ளி மாணவனின் வறுமையான வாழ்க்கை மற்றும் உளவியலை பேசக் கூடியது . அது போன்ற வரிசையில் வைத்து கொண்டாட வேண்டிய புத்தகம்தான் எழுத்தாளர். எஸ்.ரா எழுதிய ” சிரிக்கும் வகுப்பறை ” என்கிற சிறார்களுக்கான நாவல் .

தமிழ் இலக்கியத்தில் இது முக்கியமான பங்களிப்பாக இதைக் கருதுகிறேன். ரஷ்ய, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க இலக்கியத்தில் குழந்தைகளின் உலகைப் பற்றிப் புத்தகங்கள் எழுதப் பட்டிருப்பதை வாசித்த போது தமிழில் இது போன்ற சிறுவர்களது உளவியல் சிக்கல்களை பற்றிப் பேசுகிற படைப்புகள் வராதா என்றும் யோசித்துள்ளேன். ஆனால் சிரிக்கும் வகுப்பறை அந்தக் கேள்விக்குப் பதில் தருகிறது.

சிறுவர்கள் குளோப்ஜாமூன் சாப்பிடுவதைப் போல மிக எளிதாகச் சாப்பிட்டு விடலாம் என்கிற தொனியில் எழுதப் பட்டிருக்கிறது. முதலில் இது சிறுவர்களுக்கு மட்டுமேயான புத்தகமா? என்றால் நிச்சயம் இல்லை குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், ஏன் தீவிர இலக்கிய வாசகர்கள், பேராசிரியர்கள் எனப் பல துறையினர் வாசிக்கும் சுவாரஸ்யமான புத்தகம்.

இன்றைய கல்வி முறையும் குடும்பமும் புறச் சூழலும் சமூகமும் பள்ளிமாணவர்களை அதிலும் குறிப்பாகச் சிறுவர்களுக்கு அதிகமான சுமையாகவும் பாடப் புத்தகத்தின் மீது வெறுப்பையும் உண்டாக்கியிருக்கின்றன. சுதந்திரமாகச் செயல்படவும் விருப்பமான பாடங்களை அல்லது துறைகளைத் தேர்வு செய்து படிப்பதற்குக் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மதிப்பெண் என்கிற அசுரன் அனைத்துப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையே சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் மீது கல்வி என்கிற பெயரில் ஏவப்படும் தண்டனைகளும் வன்முறைகளும் ஏராளம்.

லோம்போ மற்றும் லாம்லாக் போன்றோர்கள் ஒவ்வொருமுறை மாணவர்களைத் தண்டிக்கும் போது கதையின் வழியே எழுத்தாளர் இந்த அவலத்தைக் கோடிட்டுக் காட்டிக் கொண்டே இருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் சிந்திக்கிற கற்பனை செய்கிற குழந்தைகளை ஏன் குடும்பமும் பள்ளியும் சமூகமும் புரிந்து கொள்ள மறுக்கிறது? வித்தியாசமாகச் சிந்திப்பது பல்வேறு கோணங்களில் வாழ்க்கையைப் பார்க்கும் சிந்தனையும் வாழ்க்கைக்குத் தேவைதான். அதையே குழந்தைகள் செய்யும் போது ஏன் பெரியவர்கள் தடை செய்கிறார்கள் அவர்களுக்கு ஏன் இந்த வன்மம்? கேள்வி கேட்கிற குழந்தைகளை ஏன் யாருக்கும் பிடிப்பதில்லை. போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது இந்தப் புத்தகம்.

மேலும் மற்றொரு சிறப்பம்சம் குழந்தைகளுக்கான மாயப் புனைவான இந்தப் புத்தகத்தில் இந்திய வரலாற்றையும் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ரா. பௌத்தம் கல்விக்கு ஆற்றிய பங்கும் மானுட வளர்ச்சிக்கு வித்திட்டதையும் கதையின் வழியாக விவரிக்கிறார். நிர்பயா என்பது புத்தரின் குறியீடு. இந்தியாவில் ஏற்பட்ட சமூக மற்றும் அரசியல் மாற்றங்களாலும் மத ஆக்கிரமிப்புகளாலும் பௌத்தம் எப்படி இந்தியாவை விட்டு புறக்கணிக்கப்பட்டதையும் தீவிரமாகக் குழந்தைகளின் மொழியில் பதிவு செய்திருப்பது நுட்பமான செயல்.

வேட்டைக்காரனைப் போல லோம்போவின் தாத்தா எப்படி அக்ரா பள்ளிக்குள் நுழைந்தார் எப்படி வணிகத் தந்திரங்களால் நிர்பயா போன்ற பொறுப்பான ஆசிரியர்களை விரட்டியடித்து ஆக்கிரமிப்புச் செய்தார். லாபம் மற்றும் வணிக நோக்கத்திற்காக அக்ரா போன்ற பள்ளிக்கூடத்தை மாபெரும் சிறைக்கூடமாக மாற்றினார் என்பது வரலாற்று பின்னணி கொண்டதுதான். இப்படியான வணிக நோக்கத்திற்காக இந்தியாவைக் கொள்ளையடிக்க வந்தவர்கள்தான் பிரிட்டிஷ் அதிகாரிகள். இந்தியாவை அடிமையாக்கி மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தார்கள். நமது பண்பாட்டு மற்றும் கல்வி அமைப்புகளை எப்படி மாற்றியமைத்தார்கள் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு எழுத்தாளராக வாசகர்களுக்கும், குழந்தைகளுக்கும் உண்மையான வரலாற்றையும் கதையையும் வாழ்க்கையையும் சொல்லித் தர வேண்டும். அந்தப் பணியைப் பொறுப்பான முறையில் புத்தகமாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

சிறுவர்களும், குழந்தைகளும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமென்றாலும் இளைஞர்களும் தங்களுக்கான வாழ்வியலை பொருத்திப் பார்க்கக் கூடியதாகவுமுள்ளது இப்புத்தகம். இதிலுள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், அக்ரா பள்ளி, நிர்பயா போன்ற கதாபாத்திரங்களுக்குப் பதிலாக நாம் எந்தவொரு கோட்பாட்டையோ அல்லது சிந்தனை வாதத்தையோ பொருத்தி பார்த்தால் நாம் அடையும் புரிதல் சுதந்திரம் தான். கல்விதான் சமூக வளர்ச்சியின் அடிப்படை கோட்பாடு. அதுவே தண்டனைக் கூடமாகவும் சிறைச்சாலையாகவும் மாறிவருவது அபாயம். மேலும் கல்வி பயிலும் மாணவர்கள் அடிமைத்தனத்திலேயே உழல நேரிடும்.

குழந்தைகளின் கல்வி குறித்து மிகச் சிறப்பான புத்தகத்தை எழுதியது எழுத்தாளரின் இன்றியமையாத பணி. அந்த வகையில் சிறப்பான வாசிப்பனுவத்தைத் தந்த எழுத்தாளர் எஸ். ரா அவர்களுக்கு மனமார்ந்த அன்பும் நன்றியும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2022 23:09

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.