இரா. முருகன்'s Blog, page 61
December 20, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – A royal breakfast to plan a power lunch
An excerpt from my forthcoming novel MILAGU
லிஸ்பன் பணக்காரங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து வாஸ்கோ ட காமாவுக்கு நூறு வருஷம் முந்தி பண உதவி செஞ்சமாதிரி இவனுக்கு, நேமிநாதனுக்கு உதவறதா சொல்லியிருக்காங்களாம்.
பில்கி அரசர் திம்மராஜு சிரித்தபடி சொன்னார்
அது சரிப்பா அங்கே இருந்து இவன் கேட்டதும் வந்து சேர்ந்துடுமா என்ன? ஒரு மாசமாவது ஆகுமே ஓலைக்கு பதிலெழுத. கேலடி வெங்கடப்பர் வெற்றிலைக்காக அடைப்பக்காரனிடம் கை நீட்டியபடி சொன்னார்.
அப்போ தான் அவனோட வைப்பு மிட்டாய்க்காரி திம்முனு இருப்பாளே அவ இவனுக்கு நிதி உதவி செஞ்சு.
ஓரமாக எச்சிலை துப்ப இடம் பார்த்தபடி சொன்னார் பில்கி திம்மராஜு. வெங்கடப்பர் யாரங்கே என்று குரல்விட, வெற்றிலைத் தட்டும், படிக்கமும், சீவல், புகையிலையுமாக அடைப்பக்காரன் ஒருத்தன் உள்ளே இருந்து ஓடி வந்தான். இவன் மேலே துப்பு மாப்ளே என்றார் வெங்கடப்பர். வேண்டாம் மாம முழுங்கிட்டேன் என்றார் பில்கி திம்மராஜு. உப்புசம் ஏன் வராதுன்னேன். சளியை துப்பாம எப்பவும் முழுங்கக் கூடாது ஞாபகம் வச்சுக்குங்க என்று மருத்துவப பாடம் எடுத்தார் வெங்கடப்பர்.
வேணாம் மாப்ளே அதை பேச ஆரம்பிச்சா எச்சி வடிய ஆரம்பிச்சுடும் எனக்கே. என்ன சித்தினி ஜாதி பொம்பளைடா பத்மினி கொஞ்சம் கலப்பு தோள் உருண்டு. வேணாம் மாப்ளே என்றார் கேலடி அதிபதி.
அவ இவனுக்கு இப்போ நிதி உதவி செஞ்சு அப்புறமா லிஸ்பன் காரன் கிட்டே வாங்கிக்கறதா ஏற்பாடு இருக்கும். சொல்ல வந்ததைச் சொல்லி நிறுத்தினார் பில்கி அரசர்.
இருக்கும் இருக்கும், வாப்பா பசியாறிக்கிட்டே பேசலாம். குழிப்பணியாரம் போடச் சொல்லியிருந்தேன் போட்டு காரமா மிளகு அரைச்சுவிட்ட தேங்காய்த் துவையல் வைக்கச் சொல்லியிருக்கேன்.
அவர் விடாப்பிடியாக பில்கி அரசர் திம்மராஜுவைக் கையைப்பிடித்து இழுத்தபடி மண்டபத்தில் நுழைந்தார்.
அவசர அழைப்பு என்றாலும் பசியாற கேலடி அதிபர் பரிமாறி உபசரித்த உணவு சுவையும் புதியதும் சூடு பறக்கச் சமைத்து இறக்கியதுமாக இருந்தது. இட்டலியும் கறிக்குழம்பும் ஒன்றை ஒன்று சுவையில் விஞ்சி இருக்க, திம்மராஜு மெதுவாக மென்றபடி மாமனாருக்கு எழுதின லிகிதத்திலே வேறே ஏதாவது சொல்லியிருக்கானா பிள்ளையாண்டான் என்று கேட்டார்.
உம்ம மனசுக்குள்ளே குறளி தடதடன்னு ஓடிட்டு இருக்கும் மாப்பிள்ளே என்றார் வெங்கடப்ப நாயக்கர். அதைத்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன்.
எதைப் பற்றின்னு தெரிஞ்சுக்கலாமா மாமனாரே?
ஆவலோடு ஓரக்கண்ணால் வெங்கடப்பரை நோக்கியபடி கறிக் குழம்பை தோசையில் புரட்டி வாயில் இட்டுக்கொண்டார் திம்மராஜு.
அது ஒண்ணும் பெரிசா இல்லே, எவ்வளவு பேர் குறைந்த பட்சம் வேணும், என்ன மாதிரி ஆட்கள் இதை அவன் சார்பிலே என்னையே தேர்ந்தெடுக்கச் சொல்லியிருக்கான். இதென்ன சந்தையிலே போய் பிஞ்சு வெண்டிக்காய் வாங்கற சமாசாரமா? அதுவும் அடுத்த வீட்டுக்காரனுக்கு வாங்கித் தர்றணும்
பில்கி திம்மராஜு புன்முறுவல் பூத்தார்.
உண்டு முடித்து எழுந்த போது இன்னும் செய்ய வேண்டிய வழிமுறை பற்றிப் பேசவே இல்லையே என்று திம்மராஜுவுக்கு மனதில் பட, அவர் வெங்கடப்ப நாயக்கருக்கு முன்னால் போஜன சாலை முகப்பிற்கு நடந்து அமர்ந்தார்.
pic medieval breakfast European
December 17, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – Bite the bullet and break a leg
An excerpt from my forthcoming novel MILAGU
வேறே சிறந்த வைத்தியரைத் தேடி நாலு திசையிலும் அலைந்து கொண்டிருக்கிறார் பில்கி அரசர் திம்மராஜு. அவர் பார்க்கப் போன வைத்தியர்கள் எல்லாம் தெரிந்த ஆனால் அனுபவம் போதாதவர்களாகவோ, அரைகுறை வைத்திய அனுபவசாலிகளாகவோ அமைந்து போகிறார்கள். அனுபவமும் அறிவும் மிகுந்தவர் என்றால் கைராசி துளியும் இல்லாதவராக இருக்கிறார்கள்.
உடுப்பியில் ஐரோப்பிய மருத்துவர் புதுசாக வந்து இறங்கியிருக்கிறார். பெயர் விளங்காத மருந்து ஏதேதோ கொடுத்து ஜலதோஷத்திலிருந்து, லிங்கம் சிதைக்கும் பொம்பளை சீக்கு வரை குணமாக்கி விடுகிறார் என்று கேள்வி.
அவர் கூட்டமாக வியாதிஸ்தர்கள் வந்தாலும் எல்லோருக்கும் மருத்துவ சிகிச்சை தருவதில்லையாம். வருகிறவரின் நிதி நிலைமை, உடம்பு ஸ்திதி, உத்தியோக ஸ்திதி என்று பார்த்துத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்கிறாராம்.
திம்மராஜு வயிற்று உப்புசத்தோடு அவரிடம் போனால் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டால் பில்கி அரசருக்கும் பில்கி தேசத்துக்குமே பெரிய அவமானம் ஆகிவிடும்.
இன்னொன்று வயிற்றில் வாயுவோடு அரண்மனையில் உட்கார்ந்து அபானவாயு விட்டுக்கொண்டு நாட்டு மருந்து தின்பது வேறு. ஐரோப்பிய மருத்துவர் முன்னால் பர்ர்ர் என்று ஸ்வரம் பாடிக்கொண்டு உட்கார்ந்திருப்பது வேறு மாதிரி.
அதனால் ஐரோப்பிய மருத்துவரை இப்போதைக்கு தவிர்த்து விட்டார் திம்மராஜு. கேலடியில் ஒரு இஸ்லாமிய மவுல்வி யுனானி மருத்துவம் சிறப்பாகப் பார்ப்பதாகக் கேட்டார் அவர். என்ன, எல்லோரும் இடமிருந்து வலம் எழுதினால், இவர் வலமிருந்து இடம் எழுதுகிறாராம். அவருக்கு அவரே சிகிச்சை கொடுத்துக்கொண்டால் அந்த சுகவீனம் சீக்கிரம் குணமாகிவிடலாம்.
உப்புசத்துக்கு எப்படி எழுதினால் என்ன, மருந்து கொடுத்தால் சரியாக வேணும். அவ்வளவுதான்.
ஆக பில்கி மகாராஜா திம்மராஜுவின் வயிறு பிரஸ்தாபிக்க முழு உடலும் மனதும் ஆமோதிக்க, கேலடிக்கு பயணம் மேற்கொண்டார் அவர்.
இவ்வளவு தூரம் வந்துவிட்டு பிரியமான மாமனார் வெங்கடப்ப நாயக்கரைப் பார்க்காமல் நல்லாயிருக்குமா? வருடக் கணக்கான மாப்பிள்ளை மாமனார் உறவு அது.
அதான் ஒழுக்கமா வந்து சேர்ந்திட்டேன் மாமா. திம்மராஜு கூறினார்.
முழுக்க கேட்டு பர்ர்ர் என்று முழங்கிச் சிரித்தார் வெங்கடப்பர்.
மாப்ளே குசு விஷயமாவா பில்கியிலே இருந்து லொண்டா லொண்டான்னு கேலடி வருவீர்? சொல்றீர். நம்பிட்டேன் என்றார் ஆர்ப்பாட்டமாக கேலடி ராஜா திம்மராஜு முதுகில் தட்டியபடி.
குனிந்து அவர் காதில் கேட்டார் – எவ்வளவு பேரை அனுப்ப உத்தேசம்?
திம்மராஜு உரக்கச் சிரித்தார். மாமனாரே உமக்கு காது அங்கே இங்கே எங்கேயும் இருக்குது. அதுவும் இருநூறு கல் தொலைவிலே நான் பிலகியிலே இருந்து எனக்கு நானே முணுமுணுத்துக்கிட்டா இங்கே கேலடியிலே மாமனார் காதுலே வந்து உக்கார்ந்துடுச்சு போங்க என்றார் வெங்கடப்ப நாயக்கர் கையைப் பிடித்தபடி.
pic African medicine man
ack welcome collection
பெரு நாவல் ‘மிளகு’ – The Emperor of Bilgi in search of a medicine man
An excerpt from my forthcoming novel MILAGU
பில்கி குறுநில மன்னர் திம்மராஜு பயணம் போவதை அவ்வளவாக விரும்பாதவர். கையிலே ஆயிரம் வேலை வந்து உக்கார்ந்திருக்கு கால்லே சக்கரத்தை மாட்டிக்கிட்டு ஊர் சுற்றக் கிளம்பிட்டா எப்போ முடிக்கறது?
அவரானால் இப்போது இந்த கார்த்திகை மாதம் பிறந்ததும் சுறுசுறுப்பாக எல்லா திசையிலும் பயணம் போய்க் கொண்டிருக்கிறார். ஒற்றை சாரட் போதவில்லை. குதிரைகள் களைப்படைந்து விடுவதால் இரண்டு நாட்களுக்கு மேல் அவற்றை மாற்றி வேறு ஜதைகளைப் பூட்ட வேண்டியுள்ளது.
சாலைகள் விஜயநகர பராமரிப்பும், சிறு மாநில பராமரிப்பும் சரிவர நடத்த வேண்டிய பணமின்றி குண்டும் குழியுமாக வண்டியின் அச்சைக் கடகடக்க வைத்தோ, இன்னும் மோசம், அச்சு முறிய வைப்பதால் சாரட்டையும் மூன்று நாளுக்கு ஒருதடவை மாற்ற வேண்டியிருக்கிறது.
இந்தத் தொல்லைக்குத்தான் உச்சிப் பிள்ளையாராக எங்கேயும் போகாமல் இருக்கப்பட்ட இடத்தில் செய்யவேண்டிய வேலையைப் பார்த்திருப்பார் அவர். ஆனால் இப்போது கிளம்பித்தான் ஆக வேண்டிய சூழ்நிலை.
எல்லாம் வைத்தியர் காரணமாகத்தான். ஜெருஸுப்பா மாநில அரசு வைத்தியர் பைத்தியநாத் ஜெருஸுப்பா அருகே அமைந்த உள்ளால் பிரதேசத்தின் மகாராணி அப்பக்கா, பட்கல் அரசர், பில்கி மாநில அரசர் திம்மராஜு, பர்கூர் ராஜா, அங்கோலா ராஜமாதா, பைந்தூர் முக்ய பிரதானி இப்படி ராஜ வம்ச அரசியல் பிரபலங்களுக்கு எல்லாம் ஆஸ்தான வைத்தியர். உத்தர கன்னட பிரதேசத்தின் மருத்துவர்களில் அதிமுக்கியமானவராகக் குறிப்பிடப்படுகிறவர் அவர்.
‘மற்றவர்கள் இரண்டு வாரத்தில் குணப்படுத்தினால் பைத்யநாத வைத்தியர் வெறும் பதினாலு நாளில் குணப்படுத்துவார்’ என்று கேலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் கூட அரசவை கூட்டத்தில் கண்சிமிட்டியபடி குறிப்பிட்டதாக செய்தி.
வைத்தியர் சுய ப்ரக்ஞையோடு எப்போதும் வைத்தியம் செய்யும்போது யாருக்கும் எதுவும் தாறுமாறாகப் போகாது. ஆருயிர் மனைவி மிங்கு இறந்தபிறகு வைத்தியர் துயரத்தைத் தாங்க முடியாமல் சதா குமைகிறார்.
அவருடை திடமான மன-நினைவு அமைப்பு ஒரு பக்கத்தில் அந்த இழப்பை சுமந்து பழகிக் கொள்ள அவரைத் தயார்ப்படுத்தியது. இன்னொரு பக்கம், ராணி சென்னபைரதேவி மேல் அடங்காத கோபம் வளர்த்துக் கொண்டிருந்தது.
அடுத்த பக்கம் இப்படி- சென்னபைரதேவி மகாராணி இல்லாவிட்டால் நான் ஏது எனக்குக் கிடைத்த பேர் ஏது, மிங்கு இறந்ததற்கு மறைமுகமாகக் கூட மிளகு ராணி காரணம் இல்லை, இப்போது ரத்த அழுத்தமும், ஒற்றைத் தலைவலியும், குடல் புண்ணுமாக அநாதையாக ஒவ்வொரு நாளும் கல்லறையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாள் பாவம்.
வைத்தியர் நேமிநாதனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது முதல் நிலை குலைந்து போயிருக்கிறாள். எல்லாவற்றுக்கும் யார் காரணம்? இதை வைத்தியரின் உள்மனது அடிக்கடி சிந்திக்கிறது.
உள் மனதின் இன்னொரு பக்கம் வைத்தியனுக்கும் வாத்தியானுக்கும் ஆட்டக்காரனுக்கும் மல்லனுக்கும், சித்திரக்காரனுக்கும் பாட்டுக்காரிக்கும் அரசியல் வேணுமா என்று விரிவாக அலசிக் கொண்டிருக்கிறது.
இப்படி ஏகப்பட்ட பக்கத்தில் வைத்தியரின் மனம் மாறி மாறி சஞ்சரிப்பதால் அவருடைய சுயபிரக்ஞை அவ்வப்போது தவறிக் கொண்டிருக்கிறது.
விளைவு போனவாரம் பில்கி அரசர் திம்மராஜுவுக்கு ஏற்பட்டது. வயிறு உப்புசம் பாரித்து திம்மென்று ஊதிப் போனது திம்மராஜு காருவுக்கு.
பைத்யநாத் வைத்யுதுனி பிலவு.
அழைத்து வந்தார்கள். வந்த சாயந்திரம் மகாராஜா உடலை சீராக பரிசோதித்து நாடி பார்த்து நாசியில் மூச்சு வந்து திரும்பும் நிலை எல்லாம் மனதிலாக்கினார் வைத்தியர். மேல் வயிற்றில் புரட்ட தைலம், சாப்பாட்டுக்கு முன் ஒரு மடக்கு குடிக்க வேண்டிய கஷாயம், சாப்பாட்டுக்கு அப்புறம் விழுங்க வேண்டிய குளிகை என்று கிரமமாகத் தயாரித்தார்.
இதெல்லாம் வைத்தியர்கள் கையோடு கொண்டு வந்து தேவைக்கு ஏற்றது போல் விநியோகிக்கும் சராசரி மருந்துகள். ஆனால் ராஜாவுக்கு மதுமேகம் அதிகமாகி அந்த நீரிழிவால் ரத்தத்தில் சர்க்கரைச் சத்து அளவுக்கு மீற, அவருக்காக மருந்துகளில் மூலப்பொருள் சேர்மான விகிதங்களை மாற்றினார் வைத்தியர்.
அதுவும் சரிதான். ஆனால் அப்புறம்? மருந்து உண்டாக்கும்போது அவரே கொண்டுவந்த சிறு குமுட்டி அடுப்பில் விறகுக் கரி கொளுத்தி எதையோ காய்ச்சும்போது ரெண்டு தடவை மிங்கு அடி மிங்கு என்று மனசின் ஆழத்திலிருந்து குரல் எடுத்து அழைத்ததை பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் அரண்மனை சமையல்கட்டில் கேட்டார்கள்.
பரபரவென்று அடுப்பை வெறித்துக்கொண்டு பைத்யநாத வைத்தியர் அடுத்து பில்கி மகாராஜாவுக்குத் தயாரித்துக் கொடுத்த களிம்பை உடம்பில் பூசினால் பிசுபிசுவென்று ஒட்டிக்கொள்கிறது. கஷாயத்தை முழுங்கினால் குமட்டிக்கொண்டு வருகிறது. குளிகை வாயில் போட்டால் கரையாமல் அப்படியே கசந்து வழிகிறது.
வேறொன்றுமில்லை. தடவ வேண்டியதைக் குடிக்கவும் குடிக்க வேண்டியதைத் தடவவும் குளிகையை அடுப்பில் வறுத்தும் ஏதோ செய்துகொண்டு மிங்கு நினைப்பில் மனம் தடுமாறிப் போன வைத்தியரைப் பார்த்து பில்கி அரசர் திம்மராஜுவுக்கே துயரமாகிப் போனது.
ஆனால் துயரம் வயிற்று உப்புசத்தை சரிபண்ணிப் போடாதே.
PIC Medieval Medicine Man at work
Ack historycollection.com
December 16, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – on Rauvolfia tetraphylla (Devil Pepper)
An excerpt from my forthcoming novel MILAGU
ஒரு நிலத்தில் அல்லது வீட்டு முகப்பில் காலை ஆறு மணிக்கு ஒரு சிறு துணுக்கு, வேர் இருந்தால் சரிதான், இல்லையென்றாலும் சரிதான், அங்கே போட்டுவிட்டுப் போனால் சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டு முகப்பை அடைத்துக்கொண்டு பேய் மிளகு வளர்ந்து உள்ளே போக ஆரம்பித்திருக்குமாம்.
மனுஷர்களை காலைக் கட்டி இறுக்குவது மூலம் கொல்லக் கூடிய பேய் மிளகை குழந்தைகள் தொட்டால் விரலை இறுக்கி இற்று விழ வைத்து விடும்.
அவ்வளவு பயங்கரமான இந்தப் பேய் மிளகுக்கொடியை விருதுபட்டி சனியனை விலைகொடுத்து வாங்கிவந்த மாதிரி தேசமே அங்கே இங்கே என்று எங்கும் பரவ விட்டுக்கொண்டு கிடக்கிறது. ஒரு விதத்தில் பேய் மிளகு நல்ல விஷயம் தான். வீட்டை எல்லாம் இடித்து வைத்து விட்டு நகர் நீங்கும்போது இடிபாடுகள் மேல் பேய் மிளகை இட்டுப் போனால், நாளைக்கு ஜெயித்து வரும் படை உள்ளே நுழைய யோசிக்கும் என்பதை தொண்டு கிழவிகள் கூடச் சொல்வார்கள்.
பேய் மிளகு ஆட்கொல்லியாக மாறினாலும் அது காவல் இருக்கப் போகும் சிதிலமான கட்டிடங்களில் தரைக்குக் கீழே கூடுதல் பாதுகாப்போடு புதையல் இருக்கும். முழு விவரம் தெரிந்தவர் வெல்லுவர். என்னைப் போல.
யார் வெற்றி பெறுவர்? சென்னாவுக்கு போர்த்துகல் ஆதரவு கிடைக்கலாம். அப்பக்காவின் உள்ளால் அரசு ஆதரவு தரலாம். நேமிக்கு கூட பில்ஜி படையும். கெலாடி அரசுப் படையும் நிற்கும். கெலாடி படையிடம் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் உண்டு.
ஜெருஸோப்பாவின் மிளகு வளத்தைப் பார்த்து நேமி வென்றாலும் தோற்றாலும் பில்ஜியும் கெலாடியும் இங்கே அரசுரிமையைப் பறித்துக் கொள்ள முனையலாம். ஜெயித்தாலும் தோற்கும் வினோத நிலைமை அது.
ஆக மாற்றுத் திட்டத்தை யுத்தம் வந்து அன்றைய தினமே நடப்பாக்க பெரிய சாரட்டை தயார் நிலையில் வைத்து மாலை மங்கிய பிறகு தங்கத்தை வண்டிக்கு ஒரு பகுதியாக ஏற்றி உடுப்பி, தமிழ் பூமி போய்விட வேண்டும். போன பௌர்ணமிக்கு பெரிய சாரட் செய்து வாங்கியது இதை உத்தேசித்துத்தான்.
எப்படியும் யுத்தம் வர படைகள் நடந்து வந்து முற்றுகை இட ஏற்பாடு செய்து இரண்டு நாளாவது ஆகலாம். அதற்குள் சாரட், சாரதிகள், எடுத்துப் போக தங்கம் என்று தயார் செய்து விடலாம். புதைத்து வைக்கவும் கொத்தரை அழைத்து தயாராக இருக்கச் சொல்லலாம்.
ஹொன்னாவரிலும், ஜெருஸோப்பாவிலும் கடை சிப்பந்திகளுக்கு ஓர் ஆண்டு சம்பளமும் கொஞ்சம் வெள்ளியும் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். இரண்டு நாளில் அதை எப்போது தரலாம் என்று முடிவு செய்துவிடலாம்.
மஞ்சுநாதனை என்ன பண்ணுவது? என் குழந்தை தான். ஆனால் என் பிரம்மாண்டமான திட்டத்தை நிறைவேற்றுவதில் இடையூறாவானோ. அவனை இங்கே கொஞ்சம் உணவும், பணமுமாக உறங்க வைத்து தப்பி விடலாம் என்று கார்டெல் யோசனை சொன்னது. மனது கேட்க மாட்டேன் என்கிறது. கிறுக்கன் பரமன் இருந்தால் அவனிடம் குழந்தையை ஒப்படைத்து விடலாம். பரமனை இனிமேல் கொலை செய்து என்ன சாதிக்கப் போகிறேன்?
மஞ்சுநாத்தை என்னோடு கூட்டிப் போனால் என்ன சிக்கல்? எப்படியும் கூடிய சீக்கிரம் சொத்தை மாற்றி எடுத்த தங்கத்தோடு லிஸ்பன் போக வேண்டியது தான். மால்பெ துறைமுகத்தில் இருந்து புறப்படுவது சரியாக இருக்கும். அங்கிருந்து கோவா பஞ்சிம். அங்கிருந்து லிஸ்பன் போகும் பயணிக்கப்பல். கிட்டத்தட்ட ஒரு மாதம் கடல் காற்றை சுவாசித்து, கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டு. கடல் நாரைகளின் வினோத சத்தம் பழகிப் போய் போலி செய்து லிஸ்பன் போனதும் எதாவது செய்து மஞ்சுவுக்குக் குடியுரிமை வாங்க வேண்டும்.
பதினைந்து வருடம் கழித்து அவன் லிஸ்பன்னில் சிறந்த வர்த்தகனாக இருக்கும்போது அதற்காக நான் செய்யத் தயாராக இருக்கிற கீழ்மைச் செயலை யாரும் அவனிடம் சொல்லவோ நினைவுபடுத்தவோ போவதில்லை. நான் சீக்கு பிடித்து கிடந்தாலும், இருப்பேன்.
ஆமாம், இவ்வளவு நாள் உறுதுணையாக இருந்து யுத்தத்தில் கொண்டு விட்டுவிட்டு நாடு நீங்கிப் போனால் என்ன நினைப்பான் நேமி? என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். அதைச் சொல்ல அவன் உயிரோடு இருப்பானா?
பரமன் என்ன செய்வான்? கடையும் இல்லை. சமணக்கோவில் பிரசாதமும் யுத்தகாலத்தில் கிடைக்காது. எப்படியாவது சமாளித்து விடுவான். இத்தனை வருஷம் இருந்தவனுக்கு வாழ்க்கை ஒரு நேர்செய்யப்பட்ட நாட்டிய நிகழ்ச்சிதானே. அவனுக்கும் ஓராண்டு சம்பளமும் கொஞ்சம் பொன்னும் கொடுத்து தீர்க்கலாமா? காசுக்கு வாங்கிய கணவனாகட்டும் கிழவன். அல்லது அவன் நாக்பூருக்கும் தில்லிக்கும் அப்புறம் எங்கே ஆமாம், பம்பாய்க்கும் திரும்ப போய்விட்டிருப்பான். ஜயவிஜயிபவ.
December 15, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – Le soliloque de Rohini qui coule tumultueuse -Rohini’s soliloquy as it flows tumultuously
An excerpt from my forthcoming novel MiLAGU
சென்னபைரதேவி மகாராணி மேல், கோவிலும் பசதியுமாகக் கட்ட வாரி இறைத்து கஜானாவை காலியாக்குகிறதாக வெகுஜனக் கோபம் இருக்கிறது. அது நேமிநாதனுக்கு ஆதரவாக மாறவில்லை என்பதே உண்மை. இதைச் சொன்னால் கார்டெல் சும்பன்கள் கவனிக்காமல் என் கையிடுக்கு வியர்வை ஈரத்தில் ஒற்றி முத்தமிட காமம் மிகுந்து உதடு சுழிக்கிறார்கள். அல்வாரீஸ் தடியன், நேமி நாசக்காரன் பார்க்காதபோது, என் முலைகளைக் கசக்குவேன் என்று கண்ணடித்து சைகை காட்டுகிறான். காமத்தில் சுழலும் உலகம் இது. போர்த்துகீஸோ இந்துஸ்தானியோ உடம்பு பசித்தவர்கள் எல்லா ஆண்களும்.
என் கொங்கைகள் மதர்த்து இருக்கட்டும். என் சொந்தக் கொள்கை வழிமாறியதா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்வேன். இல்லை என்றும் புகல்வேன். இது அரசியல். சரித்திரம் நிகழும்போதே திருத்தப்படுகிறது.
மிளகு ராணி வம்சத்தை நிர்மூலப்படுத்த மனதில் வரிந்தபோது அந்த வம்சம் இனி இல்லாமல் செய்வேனென சூளுரை செய்தது நிஜம். வம்சம் என்றால் நேமிநாதனும் அடக்கம். அவனை அடக்கம் பண்ண வழி தேடாமல் அவன் பிருஷ்டம் சிம்மாசனம் ஏற அண்டக் கொடுத்துத் தாங்குவதும் என்கைதான்.
அது மட்டுமில்லை, அவன் விரல் சுண்டிய பொழுதெல்லாம் உடுப்பு களைந்து முயங்கிக் கிடந்ததும், கிடந்ததும் என்ன, கிடப்பதும் நான் தான். அதற்காக என்ன எல்லாம் செய்கிறேன்.
சென்னாக் கிழவி உறங்கும்போது அவளுடைய முடிக்கற்றை ஒன்றையோ நகத்துணுக்கை வெட்டியோ கொண்டு வந்தால் சீன மந்திரவாதம் செய்து அவள் சீக்கிரம் செத்தொழிய வழிசெய்கிறேன் என்றான் ஆப்பிரிக்க மந்திரவாதி வெகுமுன்பு. மயிருக்காக ராத்திரி கோட்டைச் சுவரேறிக் குதிக்க ஆளைப் போட்டு காசு கொடுத்து கோட்டைக்குள் அனுப்பினோம். மயிர் பெறாத வேலை அது. கிழவி தூங்காமல் எழுந்து உட்கார்ந்து கெடுத்தாள். ஆப்பிரிக்க ஆண்குறிகள் கள்ளத்தனமாக ஊடுருவும் பெண்குறிகளுக்குள் அப்படியே அவற்றை இறுகிப் பிடித்துச் சிறை வைக்க மந்திரம் போடும் அந்த மந்திரவாதி மூதாட்டி தலைமுடியை பிடுங்க முடியாமல் திரும்பிப் போனான்.
நேமிநாதனுக்கு ஆலிங்கனத்துக்கு நடுவே அரசாட்சி பற்றியும், கலவிக்கு அப்புறம் கல்வியாக அடிப்படைப் பொருளாதாரமும் கற்றுக் கொடுக்க முயற்சி செய்வது முடிவடைவதாகத் தெரியவில்லை. நான் சொன்னபடி பேசி நடந்து, பில்ஜி அரசன் திம்மராஜுவிடமும், கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கரிடமும் சென்னாவுக்கு எதிரான நிலை எடுக்க ஆதரவு வாங்கி வந்தான் நேமி. என் தலையணை மந்திர உபதேசம் எல்லாவற்றுக்கும் காரணம்.
ஒரு பகல் முழுவதும் அடங்கிக் கீழிருந்து கூடி அவன் மனதில் துணிச்சலை உருவாக்கி, சென்னாவிடம் பாதி மாநிலம் அரசாளக் கேட்க ஆள் அனுப்ப வைத்தேன். கிழவி கொடுப்பாள் என்று நம்பிக்கை இல்லை என்றாலும் நேமியை ஒரு சுக்கும் மதிப்பில்லாத சாதுப் பிராணியான பாச்சைப் பூச்சியாகக் காலால் புறந்தள்ள முடியாது இனி.
அந்தக் கோரிக்கையோடு நடந்த நேமியின் பிரதிநிதியான உப பிரதானி வகுளாபரணன் சென்னாவின் பிடிவாதத்தால் வெறுப்புற்று யுத்தம் வரும், ஆட்சி மாறும் என்று பிரகடனப்படுத்தி வந்தது நான் எதிர்பார்த்தபடிதான்.
யுத்தத்தில் ஜெயித்தால் நேமிநாதன் என்னை அரசியாக்குவதாக ஆரம்பத்திலேயே வாக்குறுதி செய்திருக்கிறான். தோற்றாலோ, இருக்கவே இருக்கிறது என் மாற்றுத் திட்டம் –
ஜெருஸூப்பா மாநிலத்துக்கு நான் தொழில் முதலாகக் கொண்டு வந்த, அது பல்கிப் பெருகி பெருந்தனமான ஸ்தாவர ஜங்கம சொத்துகள் எல்லாவற்றையும், அல்லது கூடிய மட்டும் எல்லாவற்றையும், இங்கிருந்து எடுத்துக் கொண்டு வெளியேறுவது நிறைய யோசித்து உருவாக்கிய மாற்றுதிட்டம். அந்த சொத்துக்களை பசும்பொன் ஆக மாற்றி எடுத்துப் போவதே உத்தேசம்.
பொன்னாக மாற்ற முடியாத வெள்ளிப் பாத்திரங்கள், செம்பு, வெங்கலம், கடைசி நேரத்தில் பொன்னாக்கி எடுத்துப் போக முடியாத தங்கம் எல்லாம் பின்னொருநாள் மீண்டும் வரும்போது மீட்டெடுக்க இங்கே ஜாக்கிரதையாகப் புதைத்து வைத்து விட்டுப் போவதும் திட்டத்தில் அடக்கம். ஆழக்குழி தோண்டி உள்ளே இட்டுப் புதைத்த வெள்ளியை, வெங்கலத்தை, கொஞ்சம் போல் தங்கத்தை பூடகமான வரைபடங்கள் மூலம் மறுபடி தோண்டி எடுக்கலாம். அதாவது நேமியின் படையினர் வெற்றி பெறாவிட்டால் ஏழெட்டு வருடம் சென்று அமளிதுமளி முடிந்தபிறகு , புதைத்ததை மறுபடி அகழ்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
சொத்துக்களை விற்றுத் தங்கம் வாங்கிச் சேகரிப்பது செய்ய வேண்டிய காரியமாக நாடு முழுவதும் பரவியதும் ஜனங்கள் அவரவர் ஆஸ்தியை தங்கமாக்கப் பரபரத்து ஜெருஸோப்பாவின் நிதிநிலைமை ஆட்டம் கண்டது உண்மை. நான் எதிர்பார்க்காது கார்டெலுக்கும் எனக்கும் கிடைத்த வெற்றி.
ஜெர்ஸோப்பாவில் வீடுகளை இடித்து வெள்ளி, வெங்கலம், செம்பு, கொஞ்சம் தங்கம் புதைத்து பேய் மிளகு விதைப்பதை நிறைவேற்ற கிட்டத்தட்ட முழுநகரமுமே காத்திருக்கிறது. யுத்தம் வரட்டும்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் கூடிய சீக்கிரம் மாற்றுத் திட்டத்தை நடப்பாக வேண்டியிருக்கலாம். தங்கமாக்குதல் கிட்டத்தட்ட நடந்திருக்கிறது.
இயற்கையே என் மாற்றுத் திட்டத்துக்கு ஆதரவு தருகிறது என்று தோன்றுகிறது. கிறுக்கு பிடித்த, ஓய்வு பெற்ற போர்த்துகல் தூதரும், ஓய்வு பெற்ற அரைக் கிறுக்கன் விக்ஞானியும் மிளகுக் கொடி திருடி நலுங்காமல் குலுங்காமல் போர்த்துகல் கொண்டு போய் அங்கே பதியன் போட்டு வளர்க்கிறேன் பேர்வழி என்று கிளம்பினார்கள். எங்கேயோ தூக்கத்தில் யுகக் கணக்காக காட்டுத் தாவரமாக, பாறைச் செடியாக மறைந்து அசந்து கிடந்த பேய் மிளகுக் கொடியை நாட்டுக்குள் வரவழைத்து விட்டார்கள்.
pic medieval black magicians
ack nationalgeographic.co.uk
December 11, 2021
பெரு நாவல் – Thus spake Rohini, the scheming confectioner as the curtains are about to come down
Excerpt from my forthcoming novel MiLAGU
நான் ரோகிணி. இன்னும் இருக்கிறேன். இருப்பேன். ஜெருஸூப்பா அழிந்து போகும். ஆனால் நான் இருப்பேன். சென்னபைரதேவி மண்ணுக்குள் மண்ணாவாள். நான் இருப்பேன். அவளுடைய மிர்ஜான் கோட்டை காலத்தின் வேகத்தில் சிதைந்து போகும். நான் இருப்பேன். சென்னா மகாராணி என்ற மிளகு ராணியின் நாட்டில் மிளகு விளையாமல் போகும். ஆனால் நான் இருப்பேன். அவளுடைய வளர்ப்பு மகன், என் ஆசை நாயகன் நேமிநாதன் செதில் செதிலாகச் சிதைந்து அழுகி மண்ணில் புதைந்து காணாமல் போவான். நான் இன்னும் இன்னும் இன்னும் இருப்பேன். இருக்கிறேன்.
இருப்பை நிலைநிறுத்த நான் எடுத்த நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பலன் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. அஜீரணம் ஏற்பட்டு வயிறு வலிக்க, சுக்கைத் தட்டிப் போட்டு மென்று உடனே பிருஷ்டத்தைப் ஸ்பரிசித்து வாயு பிரிகிறதா என்று சோதிக்கிற அவசரம் எனக்கு இல்லை. நிதிக்குழு என்ற கார்டெலின் நடவடிக்கையைத்தான் கூறுகிறேன்.
நிதிக்குழு அமைந்து லிஸ்பன் மாநகரப் பெரும் வணிகர்கள் நிதி முதலீடு செய்து பங்களிப்பு ஏற்பட்டபோது ஒரே குறிக்கோள் இது. இந்துஸ்தானத்தில் இருந்து, இன்னும் குறிப்பாகச் சொன்னால், ஜெருஸூப்பா மாநிலத்தில் இருந்து மிகத் தரமான மிளகு இறக்குமதி செய்ய ஏகப்பட்ட தங்கம் கைமாற்றுகிறோம். இந்தச் செலவின் நான்கில் ஒரு பகுதி மதிப்பில் நமக்கு இனி மிளகு கிடைக்கவேண்டும்.
குறிக்கோள் சிறந்ததுதான். அதற்கான தீர்வாகக் கைகாட்டியதும் சரியானதுதான் – மிளகு மகாராணி என்ற சென்னபைரதேவியின் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து நம் சொல் கேட்கக் கூடிய அவளுடைய வளர்ப்பு மகன் நேமிநாதனை அரசனாக்க வேண்டும்.
இந்தத் தீர்வுக்கான வழிமுறையாக எடுத்துப் போனது தான் அரைகுறையாக வெற்றி பெற்று இன்னும் நேமிநாதன் அரியணை ஏற முடியவில்லை.
நிதிக்குழு முடக்கிய பணத்தைக் கொண்டு வைதீக மதக் கோவில்களையும், சமண மத ஆலயங்களான பஸதிகளையும் குறிவைத்து தாக்கி மதக் கலவரத்தை உருவாக்கி சென்னா மகாராணி மேல் வெகுஜன வெறுப்பும் கோபமும் ஏற்படுத்தி அவளைப் பதவி துறக்கச் சொல்லலாம் என்ற யோசனை பாதி பலித்தது.
சென்னா மகாராணி அந்த வெகுஜனக் கோபத்தைத் திசை திருப்ப புதியதாகக் கோவில்களையும் பஸதிகளையும் கட்டுவேன் என்று செலவுக் கணக்கு தொடங்கியது யாரும் எதிர்பாராதது.
pic medieval confectioner’s ware
ack en.wikipedia.org
December 10, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – “The most tragic thing in this world is a sick doctor”
An excerpt from my forthcoming novel MILAGU
அவன் தொடர்ந்தான்.
மேலும் போர்த்துகல்லோடு மட்டுமின்றி மற்ற ஐரோப்பிய நாடுகளோடும் மிளகு கொள்முதல் விற்பனை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும்.
எப்படி கையெழுத்து இடப் போகிறீர் வகுளரே? நான் போட்டால் தான் கையெழுத்து. இல்லை என்றால் என் விரலை வெட்டி வைத்துத்தான் துணியில் தொக்கிப் பிடித்து அழுத்தி கட்டைவிரல் ரேகை வைக்க வேண்டும். செய்தாலும் செய்வீர்.
வன்மையாகக் கண்டிக்கிறேன். மகாராணியார் இதைக் கையாளும் விதம் தவறானது. உப பிரதானி செயலுக்கு உள்நோக்கம் கற்பித்து அவரை அற்பமானவராகப் பார்க்கிறார். சரியில்லை அது என்கிறார் இன்னொரு பிரதானி.
வாயைப் பொத்திக்கிட்டு போடா என்று இதுவரை இப்படி பேசி யாரும் பார்த்திருக்காத தொனியும் ஊடாடும் சொற்கடுமையுமாக நஞ்சுண்டய்யா பிரதானி ஏசுகிறார்.
வேறெங்கே யுத்தம் வருகிறதோ என்னமோ, அங்கே வாக்கு யுத்தம். குதிரை லாயத்துக் குதிரைகள் ஆர்வமின்றிப் பார்த்திருக்கும்.
இன்னும் ஒருவாரம் அவகாசம் தருகிறோம். ராணி சென்னபைரதேவி உடன்பட்டு ஒத்துழைக்காவிட்டால் யுத்தம் துவங்கும். ஆட்சி மாறும்.
வகுளாபரணன் ராணிக்கு முதுகு காட்டி நடக்க, சந்த்ரப்பிரபு பிரதானி அவன் கன்னத்தில் சுரீர் என்று அடிக்கிறார். நாயும் பன்றியுமாக அந்த அரசவை அறிஞர்கள் உரத்த குரல் வசவுகளில் மறு அடையாளம் காணப்படுகிறார்கள்.
நஞ்சுண்டய்யாவின் குல்லாவை ஒரு உப பிரதானி தரைக்குத் தட்டி விட்டு அதன்மேல் உமிழ்கிறார். குதிரைகள் ஏதோ கலவரம் என்று உணர்ந்து ஒருசேர கனைக்கின்றன. குதிரை லாய தீவட்டிகள் பாதிக்கு மேல் அணைந்துவிட்டன.
வீரு தளவாய் இடுப்பில் இருந்து குறுவாளை எடுத்து வகுளாபரணன் முதுகுப்பக்கம் அதைப் பாய்ச்ச ஓடுகிறார். திரும்பிப் பார்த்த வகுளன் தப்பி ஓடுகிறான். தரையில் விழுந்து எழுகிறான். வீரு தளவாய் காலால் அவனை உதைக்கிறார்.
வீரு, கத்தியை மடக்கு. அவரைப் போகவிடு. நேமிநாதன் ஆப்பிரிக்க மந்திரவாதி மூலமாக எனக்கு சூனியம் வைக்கப் பார்த்தான். படுக்கையறையிலே என் தலைமுடி பிடுங்கி எடுக்க ராத்திரியிலே ஆளனுப்பினான். ஒற்றாக வந்த செய்தி இது. விழிப்பாக இருந்து ரட்சைப்பட்டேன். நேமிநாதனும் இந்த வகுளாபரணன் போன்ற அவன் சிநேகிதர்களும் என்மேல் கத்தி செலுத்தி என்னை முடிக்கத் திட்டமிட்டு, குறி தவறி என் தாதி மிங்குவைக் கொன்றார்கள். இன்னொரு சாவு விழவேண்டாம்.
எழுந்து நின்று சொல்கிறாள் சென்னபைரதேவி. சொல்லியபடி நெஞ்சைப் பிடித்தபடி நாற்காலியில் மறுபடி தடுமாறி உட்கார்கிறாள்.
அம்மா என்ன பண்ணுது என்றபடி வைத்தியர் அவள் பக்கம் ஓடி வருகிறார். அவர் குனிந்து அவள் கையைப் பற்றி நாடி பார்க்கும்முன் கையை உதறியபடி சென்னா அங்கிருந்து அகன்று போயிருந்தாள்.
pic medieval apothecary
ack en.wikipedia.org
December 9, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – Partition of the kingdom to result in a moth eaten Gerusoppa
An excerpt from my forthcoming novel MILAGU
இவர்கள் கோரிக்கைதான் என்ன? பின்வரிசை பிரதானி ஒருவர், வேங்கடபட்டர் என்ற பெயர், குரல் கீச்சிட சொல்கிறார். மற்ற குரல்கள் தேய்ந்து மறைய, வகுளர் என்ன சொல்கிறார் கேட்போம் என்கிறாள் மகாராணி.
அப்படியானால், கேட்க நேரமும் மனமும் இருந்தால் அன்போடு ராணியிடம் வைக்கும் கோரிக்கை
வகுளன் ஆரம்பித்து ஒரு நொடி தாமதித்துத் தொடர்கிறான் – அரசாளும் பூமியில் ஒரு பகுதி நேமிநாதருக்குக் கைமாற்ற வேண்டும். ஜெருஸூப்பாவும், கோகர்ணமும் அரசியார் தொடர்ந்து ஆட்சி செய்ய, அவருக்கு உட்பட்டு ஹொன்னாவர் நேமிநாதரின் கவனிப்புக்கு வரும். மிர்ஜான் கோட்டை இருவரின் கூட்டாட்சியில் வரும்.
நிச்சயமாக முடியாது. கருங்கல் கருங்கல்லாக நான் பார்த்துப் பார்த்துக் கட்டியது மிர்ஜான் கோட்டை. ஒவ்வொரு சுவருக்கும் ஒவ்வொரு கதவுக்கும் கோட்டை புல்தரைக்கும் என்னைத் தெரியும். எங்கே பயணம் போனாலும் ராத்தங்க கூடு நோக்கிப் போகும் பறவை போல் மிர்ஜான் கோட்டைக்கு ஓடி வருகிறவள் நான். மிர்ஜானை கூட்டாட்சி செய்ய என்ன அவசியம் இப்போது? ஹொன்னாவரும் ஜெருஸூப்பாவும் மாநிலத்தின் முக்கிய துறைமுகங்கள். அதைத் துறந்து நான் என்ன ஆட்சி செய்ய வேண்டியிருக்கு?
சரி இப்படி வைத்துக்கொள்ளலாமா? வகுளன் நைச்சியமாகக் கூறினான். ஜெருஸொப்பாவும் கோகர்ணமும் நேமிநாதரின் கண்காணிப்புக்கும் நிர்வாகத்துக்கும் வரட்டும். மற்ற பிரதேசங்கள் ராணியம்மாள் ஆட்சியில் தொடரட்டும். கோட்டை கூட்டாட்சியில் வரட்டும்.
நிச்சயமாக உடன்பட முடியாது. நீங்கள் போகலாம். அவை கலைகிறது.
ராணி சென்னபைரதேவி உறுதியாகக் கூறத் தொடங்கி குரல் நடுங்க முடித்தாள்.
கோரிக்கையைச் சொன்ன மாத்திரத்திலேயே இத்தனை படபடப்பும் அவசரமுமாக எதுவும் தர முடியாது என்று மறுப்பது வேடிக்கையாக உள்ளது. அதுவும் முழுக் கோரிக்கையையும் என்ன என்று கேட்கப் பொறுமை இன்றி
வகுளன் சிரித்தபடி சொன்னான்.
வகுளரே வேறு என்ன கேட்கிறீர் கேளுங்கள் நியாயமானது என்றால் ஆவன செய்ய்யப்படும் என்றார் நஞ்சுண்டய்யா பிரதானி.
பட்டர் பிரதானி முன்னால் வந்து கிரீச்சிட்டார் – வகுளர் கிருஷ்ண பரமாத்மா இல்லை. நேமிநாதன் பாண்டவர் இல்லை.
அவர் முடிப்பதற்குள் அடிபட்ட வேங்கையாக சென்னபைரதேவி சீறினாள்.
ஆம், நான் தான் துரியோதனன். கொடுமைக்கார துச்சாதனன். நூற்றுவரில் இதரரும் நான் தான். போகட்டும். வேறு என்ன கேட்கிறீர்?
தொடங்கி நடந்து கொண்டிருக்கும், தொடங்க நாள் குறிக்கப்பட்ட மத வழிபாட்டு இடங்களான பசதிகள், கோவில்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு இன்னும் செலவு பிடிக்கும் எவ்வளவு வேலை பாக்கி உண்டு என்று கணக்குப் பார்த்து நிதிநிலைமையை கருத்தில் கொண்டு ஒன்று ரத்து செய்யப்பட வேண்டும்.
அரசி உதடு துடிக்க அவனைப் பார்க்க, வகுளன் தொடர்ந்தான் – அல்லது ஒரே வருடத்தில் கட்டி முடிப்பதற்குப் பதிலாக ஏழெட்டு வருடத்தில் கட்டம் கட்டமாக நிறைவேற பகுதி பகுதியாக நிதி அளிக்கப்பட வேண்டும்.
முடியாது என்று தலை குலுக்கினாள் சென்னா. கையில் பிடித்த ரோஜா அத்தர் நனைத்த துணியை முகத்தில் அழுத்தமாக வைத்துப் பிடித்தபடி இரண்டு நிமிடம் இருந்தாள். மெல்லத் துணியைக் கையால் முகத்தில் ஒற்றிக் கொண்டு வகுளனை இகழ்ச்சி தொனிக்கப் பார்த்தாள்.
pic An Unani medicine man
ack en.wikipedia.org
December 8, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – The General Administrative Council runs with the hares and hunts with the hounds
An excerpt from my forthcoming novel MILAGU
“என்றால், நேமிநாதனிடம் சொல்லுங்கள்- அவர் வந்து கலந்து கொள்ளாமல் இந்த பேராயம் பாதி கிழித்த பட்டுத்துணியாகத்தான் தென்படுகிறதென்று. இனிவரும் கூட்டத்தில், அப்படி ஒன்று இருந்தால், அவர் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நான் அதற்குள் இறந்துவிட மாட்டேன் என்று நம்புகிறேன்”.
மிளகுராணி வாழ்க என்று அவை முழுக்க முழங்கியது. அம்மா நீங்கள் ஒரு நூறும் இன்னொரு நூறும் காண்பீர்கள். சற்று ஓய்வெடுத்துக் கொண்டால் போதும். அரசாட்சி வேலைப் பளுவைக் குறைத்துக் கொள்ளுங்கள் என வேண்டிக் கேட்கிறேன். வகுளன் அன்பு தென்படும் குரலில் சொன்னான்.
விழித்துக் கொண்டே உறங்கி, பணி புரிந்துகொண்டே ஓய்வெடுத்துப் பழகியவள் நான். என் உடல்நலத்தில் உங்கள் உண்மையான அக்கறைக்கு நான் நன்றி சொல்கிறேன். வெளிப்படையாக ஓய்வு எடுக்க தருணம் தோன்றும்போது நானும் கிடந்து எழுவேன்.
சென்னா சொல்லிக்கொண்டு போக, வைத்தியர் இடை மறித்தார். நான் ஜெருஸூப்பாவின் அடிப்படைக் குடிமகனாக, அரசு அதிகாரியாக, அரசி அவர்களின் நெடுங்காலம் நலம் பேணும் வைத்தியனாகக் கண்டதை ஓரளவாவது நாட்டு நலன் முன்வைத்து இங்கே இந்த பேராயம் அவையில் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
வேண்டாம் என்று கை உயர்த்தினாள் சென்னபைரதேவி. வைத்தியர் கூட்டத்தில் நடுவில் நடந்து போய் நின்றார். மகாராணி வருத்தம் தொனிக்கும் குரலில் பிரலாபித்தாள் – சொன்னால் கேட்காத பிள்ளைகள் நீங்கள் என்று இன்னொரு முறை நிரூபணமாகிறது; நடக்கட்டும் என்றாள்.
வைத்தியர் குரலைத் தாழ்த்திப் பேசத் தொடங்கினார் -இது அரசியாருக்கு அந்தரங்கமானது என்றாலும், மருத்துவத் தொழில் அந்தரங்கப் பகிர்வு தவிர்த்தல் நெறிமுறையோடு ஒத்து சேராமல் போனாலும், தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதால் இந்த அவையில் பகிர வேண்டிப் போனது. அரசியாரின் ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருக்கிறது. மற்றும் வயிற்று நோய் அவரைப் படாத பாடு படுத்துகிறது. அவருக்கு உடனே தீர்க்கமான ஓய்வு கிட்டாவிட்டால் நாம் நம் அன்புக்குரிய மகாராணியை. சரியான வார்த்தை தேடித் தோற்று பாதியில் நிறுத்தினார்.
வகுளாபரணன் வணங்கிச் சொன்னான் – அப்படி இருக்க ஓய்வு எடுக்க மாட்டேன் என்று ஏன் இந்தப் பிடிவாதம்?
இதுவரை வாய் திறக்காமல் இருந்த நஞ்சுண்டய்யா பிரதானி மகாராணியை வணங்கிச் சொன்னார் – கொஞ்சம்போல் களைத்து, மற்றபடி சுறுசுறுப்பாக ஓடியாடுகிறவரை உடனே படுத்து நித்திரை போகச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறது போல் இருக்கிறது வைத்தியரும் வகுளரும் செய்வது. மகாராணி பதவி துறக்க வேண்டும் என்று நீங்கள் வேண்டுகிறீர்கள். சுற்றி வளைத்துப் பேசுவது இதுதான். இல்லை என்று நேமிநாதரோ அவருடைய, எல்லாம் தெரிந்த பிரதிநிதியாக வேடமிட்டு வந்த நண்பர் வகுளரோ சொல்லட்டும் பார்ப்போம். உங்கள் பகல்கனவு ஒருபோதும் நிறைவேறாது. நீங்கள் அரசாளத் தொடங்கினால். அரசவைக் கூட்டம் மிட்டாய்க்கடையில் தான் நடக்கும். நேமிநாதர் ஆள மாட்டார். வேறு யாரோ பூமாலை கைக்கொண்ட குரங்காக ஜெர்ஸூப்பாவின் ஆட்சியை நிர்மூலமாக்கி கிடைத்தவரை லாபம் என்று சுருட்டவும் செய்வார்கள். உங்கள் கோரிக்கைக்கு அரசியார் செவிசாய்க்க வேண்டாமென்று கோருகிறேன்.
pic a medieval surgeon
ack en.wikipedia.org
December 7, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – ‘I am a woman more sinned against than sinning’, says Queen Chennabhairadevi
An excerpt from my forthcoming novel MiLAGU
”அரசுத் தரப்பில் பேரிழப்பு என்பதோடு எனக்கு தனிப்பட்ட முறையில் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் இழப்பு மிங்குவின் இறப்பு”
சென்னபைரதேவி சொல்லும்போதே குரல் நெருடியது. வைத்தியர் நிமிர்ந்து பார்த்தார். நடுங்கும் குரலில் சொன்னார் அவர் –
”அந்த விசுவாசம் மிக்க ஊழியை இறந்திருக்க வேண்டாம். அந்தக் கலந்துரையாடல் நடத்த வேண்டாம் என்று இங்கே இருக்கும் பலரும் சொன்னதைக் கேட்டிருந்தால். மிங்கு இன்னும் இருந்திருப்பாள். அப்படி நடக்க வேணும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எனில் அப்படி நடக்கலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும், முக்கியமாக மகாராணிக்கு மனதில் எழுந்திருக்கலாம். அந்தக் குரல் கேட்டு நடந்திருக்கலாம். வாய்க்கவில்லை”.
வைத்தியர் மேலே பேச முடியாமல் வாயைத் துண்டால் பொத்திக்கொண்டு குலுங்கி விம்மினார். சென்னபைரதேவியின் அணுக்கத் தொண்டராகவும் அவளுடைய உடல்நலம் பற்றி உரிமையோடு கட்டுப்பாடு விதித்து ராணியிடமே கண்டிப்பாகப் பேசக்கூடியவருமான பைத்யநாத் வைத்தியர் முதல்தடவை ராணியை விமர்சனம் செய்த பொழுது அது.
தலையை அசைத்தபடி வைத்தியரைப் பார்த்த ராணியின் பார்வையில் நீயுமா வைத்தியா என்ற தீனமான விசாரிப்பு அப்பட்டமாக எழுதியிருந்தது.
வைத்தியர் மகாராணியின் கண்களை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தார். அவரால் கோபப்பட முடியவில்லை. சென்னா நிறுத்தாமல் ஒரு நிமிடம் இருமிவிட்டு கையில் வைத்திருந்த துணியால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். வைத்தியர் கண்கள் கசியத் தொடங்கின. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவர் வகுளன் அருகே நின்றார். தொடர்ந்து கனைக்கிற குதிரைகளின் சத்தம் பூசி வந்த ராத்திரி இன்னும் நீண்டது.
அம்மா, நேமிநாதர் சார்பில் நான் இந்தக் கூட்டத்தில் பங்கு பெறுகிறேன்.
வகுளன் அறிவித்ததைத் தலையைச் சற்றே சாய்த்துக் கேட்டபடி இருந்தாள் சென்னா. தக்க பதிலை யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று உள்ளங்கையில் குவிந்த விழிகள் வெளிப்படுத்தின.
பிரதிநிதியை அனுப்பி அவர் வராமல் போனதற்கு என்ன காரணமோ?
வகுளனை கூர்மையாகத் துளைத்தெடுக்கும் சற்றே சத்தம் ஓங்கிய குரலில் கேட்டாள் சென்னா. வகுளன் இதை எதிர்பார்த்தவனாக சாந்தமாகச் சொன்னான் – வரமுடியாத சூழ்நிலை. வந்தால் உயிருக்கு அபாயம் நேரலாம் என்று நினைக்கிறோம்.
சென்னா உடனே எழுந்து நின்றாள். இரண்டு கையும் விரித்துக் காட்டி வகுளனிடம் அதிகாரம் மிளிரும் குரலில் சொன்னாள் –
இப்படி ஒரு எண்ணத்தை மனதில் வைத்திருக்கும் நீங்கள் என்னைப் பற்றியும் அறிந்தவர் இல்லை. நேர்மையான அரசியலில் நம்பிக்கை வைத்தவரும் இல்லை என்று எனக்குத் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. இத்தனை வருடம் இந்த அவையில் இருந்தும், நான் மதிப்பு வைக்கும் இளம் நண்பராக இருந்தும் சென்னாதேவி என்ற பிற உயிர்க்குத் துன்பம் நினைக்காத சமணத்தியை நீங்கள் அறியாமல் போனது என் குற்றம் தான். வாள் வீசத் தெரிந்த சமணத்தி நான். எங்கு வாளோங்குவது, எங்கே நாவோங்குவது என்று இந்த அறுபத்தேழு வயதில் நன்றாகவே உணர்ந்தவள். அதுவும் என் பிரியமான மகன் மேல், என்னோடு பேச வந்தவன் மேல், என் இன்னொரு மகனான உங்கள் மேல் ஆயுதம் வீசிக் கொலைப்படுத்த என் மதமும் சொல்லவில்லை நான் அறிந்த ராஜாங்க நெறிமுறையும் கூறவில்லை, அடிப்படை மனிதாபிமானமும் கற்றுத்தரவில்லை. நேமிநாதரை வரச்சொல்லுங்கள். அவருடைய உடலுக்கும் உயிருக்கும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இன்னும் சந்தேகம் என்றால் வாளும் துப்பாக்கியும் ஏந்திய இரு நபர் காவலர் கூட்டத்தோடு வரட்டும். நான் உங்களை, நேமிநாதரை நம்புகிறேன். என் உடலும் உயிரும் உங்களிடம் எந்த இடருமின்றிப் பாதுகாப்பாக இருக்கும் என்றறிவேன்.
வகுளன் வானை நோக்கி இரு கரமும் உயர்த்திக் கூறினான் – அம்மா உங்கள் மனதை அறியாமல் நான் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். நான் பேசியது ஒரு பார்வைக் கோணத்தை இங்கே தரவே. குழந்தைகள் மேல் சினம் கொள்ளும் தாயை நாங்கள் அறிவோம். சிசுவதை செய்யும், அதுவும் தம் மக்களையே வதம் செய்யும் தாயை நாங்கள் பார்த்ததில்லை.
pic a medieval doctor examining a patient
ack historyextra.com
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

