இரா. முருகன்'s Blog, page 59

January 8, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – The foot soldier inducted into the cavalry

An excerpt from my forthcoming novel ‘MILAGU’

ஒன்றுக்கு இரண்டாக இட்டலித் துணியை அவனிடம் வாங்கிக்கொண்டு வந்தேன். அவற்றில் ஒன்றை இடுப்பில் முடிந்து கொண்டு மற்றதை கால் காயத்தின் மேல் இறுக்கக் கட்டினேன்.

கூடார ஓரத்தில் கத்தி, அதுதான் சொன்னேனே, ஒவ்வொருத்தருக்கும் வாள் ஒன்று எடுத்துக் கொடுத்து ஜயவிஜயிபவா சொல்லி அனுப்புகிறார்கள். சாயந்திரம் மறந்து விடாமல் கொடுக்கவும் என்று நேமிநாதரின் உத்தியோகஸ்தன் சொல்லும்போது சிரித்தேன்.

வாங்கிய வாளை வீசிப் பார்த்தேன். அந்த வாள் வைத்த இடத்துக்கு அருகே நின்று வாள் வாங்கிப் போகிறவர்கள் அதை நின்று வீசிப் பார்க்க மறப்பதில்லை. நான் என் வாளை வீச அது ஒச்சை நாற்றம் அடித்தது. ரத்த வாடை அது. கொஞ்சம் வேகமாகச் சுழற்ற கைப்பிடி தனியாக வந்து விழுந்தது. உடனே அதை மாற்றி பழுதில்லாத வாள் ஒன்று வாங்கிக் கொண்டேன். ரத்த வாடையும் ருசியும் அறிந்திருக்காது அந்த வாள்.

நேற்றைக்கு வாளோங்கி நாள் முழுக்க யுத்தம் செய்து எப்போதோ மாலை மயங்கும்போது பின்னாலோ முன்னாலோ வந்த அரசுப்படை வீரர் ஆழக் குத்தி இறக்க வைத்த வாளை திரும்பக் கொடுத்தபோது அந்த உயிர் படிந்த வாள் உத்தியோகஸ்தனால் கவனமின்றிப் பின்னால் எறியப்பட்டது.  அவ்வீரன் இறந்திருந்தால் நேற்று இரவில் அவன் தகிக்கப் பட்டிருப்பான்.

வாளுக்கு மட்டுமில்லை, அதை எடுத்துப் போரிட்டவன் நினைவும் விரைவில் நிணம் சார்ந்த கூட்டு வழிபாடு ஒன்றை உயிர் நீத்த எல்லா வீரர்களுக்கும் பொதுவாக நடத்தி மறக்கப்படும்.

இதை யோசித்தபடி நிற்க, அடுத்து தளவாயை சந்திக்கச் சொன்னார்கள். இருமியபடி வசம்பு இட்ட வென்னீரால் வாய் கொப்பளித்தபடி நின்ற தளவாய் முகத்தை கொஞ்சம் அசைத்து, வருகிறேன் என்று ஓரமாகத் துப்பி வந்தான்.

நேற்று என் போர் நிகழ்வு திருப்திகரமாக இருந்ததால் எனக்கு இன்று பின் வரிசையில் இருந்து முதல் வரிசைக்கு இடம் மாற்றி நான் கௌரவப்படுத்தப் படுகிறேன் என்று கூறினான் அவன். கோட்டை வாசலுக்கு நேர் முன்னே வாளோங்கி வென்று வரச் சொல்லி அனுப்பினான். வருவேனா?

மறுபடியும், நான், திருத்தக்கன்.

மறுபடி இன்றும் காலை உணவாக கம்பங்களி. எந்த விரோதமும் எனக்குக் கம்பங்களிமேல் இல்லை. என்றாலும் மூன்று நாளாகத் தினமும் காலையிலும் ராத்திரி போஜனமாகவும் களி தின்ன வேண்டும் என்ற கட்டாயம் மனதில் ஒரு எரிச்சலை உண்டாக்குகிறது.

இதுவும் இல்லாமல் பட்டினியோடு யுத்தம் புரிய முடியாது. வீடா என்ன இது, காலை உணவு கொள்ளாவிட்டால் உடனே சாப்பிட்டு விட்டு மற்ற காரியம் பாருங்கள் என்று கட்டாயப்படுத்தும் மனைவியும், முட்டை உடைத்து ஊற்றிய தோசை ஆசையோடு வார்த்து மேலே மிளகுப்பொடு கொஞ்சம் தூவித் தரும்போது எச்சில் கை கண்ணு வேறே உனக்கு அம்மாவை சுட்டுத்தரச் சொல்றேன் என்று சொன்னதைக் கேட்காமல் என் தட்டில் இருந்தே பிய்த்துத்தரும் ஒண்ணரை வயது மகனும் இனி எப்போதும் நினைவுகள் மட்டும்தானா?

எனக்கு என் மனைவி தான் மிளகுராணி. என் மகன் தான் மிளகு இளவரசன். யாரும் ஜெயிக்கட்டும். யாரும் தோற்கட்டும். இன்றோடு நான் ஓய்வு பெறப் போகிறேன்.

இன்று இரவு மிர்ஜான் கோட்டைக்குப் போகப் போவதில்லை. நண்பனின் கோச் வண்டியில் குடும்பத்தோடு ராமுழுக்க பயணப்பட்டு தமிழ் சுவாசிக்கும் ஓசூருக்குப் போய்ச் சேர்ந்து இனி எப்போதும் அங்கே வசித்திருக்க விரிவாக, நுணுக்கமாகத் திட்டமிட்டிருக்கிறேன்.

மிளகுக் குடும்பம் எப்படியும் போகட்டும். அது சரியாமல் அண்டக்கொடுக்கிற வெல்வெட்டுத் தலகாணியாக நிறைய உழைத்தாகி விட்டது. வரியும் தவறாமல் கட்டிவிட்டாகி விட்டது. இனி எனக்காக, என் குடும்பத்துக்காக உழைக்கப் போகிறேன்.

pic  medieval cavalry

ack history.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2022 20:02

January 7, 2022

New : நாவல் பிறந்த கதை – அரசூர் வம்சம்

அந்திமழை ஜனவரி 2022 இதழில் பிரசுரமானது

நாவலுக்குப் பின்னால் – அரசூர் வம்சம்             இரா.முருகன்

எண்பதுகளின் தொடக்கத்தில் இலக்கியப் பத்திரிகைகளில் புதுக் கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் எண்பதுகளின் இறுதியில் வெகுஜனப் பத்திரிகைகளில் சிறுகதை எழுதத் தொடங்கியதற்கு தில்லியில் இருந்து சென்னைக்கு உத்தியோக மாற்றலாகி வந்ததுதான் முக்கியக் காரணம்.

தில்லியைப் போல் வார இறுதியில் கூடி இருந்து பியர் குடிக்க முடியாத  சென்னையில் அப்போது ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திர பொழுது போக்கு, அரசாங்க சானலில் வந்த தமிழ் சினிமா தான். ஒரு அருதப் பழைய திரைப்படத்தை பார்த்தபடி நான் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மனதுக்குள் எழுதிய சிறுகதை அம்பி.

1930-களில் ஒரு சிறு நகர சிறுவன் மூத்த சகோதரியின் மரணத்தை எதிர்கொள்ளும் கதையில் வந்த அம்பி என் அப்பாதான். கதை எழுதும்போது மனக் கண்ணில் நான் பிறந்தே இராத 1930-களின் உலகம் நுணுக்கமாக விரிந்தது.

அப்போது உயிரோடு இருந்த அப்பா கதையைப் படித்து விட்டு சொன்னார் – ”நான் உனக்கு இதெல்லாம் சொன்ன நினைவே இல்லையே. எப்படி எழுதினே அச்சு அசலா என் பக்கத்துலே இருந்து பார்த்த மாதிரி”.

நான் ஈசி சேரில் இருந்த அவர் அருகில் போய் கையைப் பற்றிக்கொண்டு சொன்னேன் – ”அப்பா நீங்க சொல்லலே, நான் கேட்கலே. ஆனால் அந்த குடும்ப வரலாறு உங்க கிட்டே இருந்து எனக்கு மரபணுக்களில் எழுதிக் கடந்து வந்திருக்கு”.

அப்பா ”போடா உளறாதே” என்றார். ”இந்த ஊர் மட்டுமில்லை, தேவகோட்டை அருகே அரசூருக்கும், கேரளத்தில் குட்டநாட்டு அம்பலப்புழைக்கும் நம்ப குடும்ப சரித்திரத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கு, தேடிப் பார். நீ நம்பவே மாட்டே”.

அந்த வரலாற்று நினைவில், ஆறு மாதத்தில் அமைதியாகக் காலம் சென்றார் அவர்.

அப்பா மறைவுக்கு அப்புறம் லண்டன் போயிருந்தேன் பணி நிமித்தமாக. அங்கே அலுவலக நிர்வாகியான ஜெஃப் மக்கன்ஸியோடு காரில் ஒரு மாலைப் பொழுதில் தங்குமிடம் கிளஸ்டர் ரோடு திரும்பிக் கொண்டிருந்தபோது பிக்கடலி வீதியில் ஒரு பெரிய கடை அருகே காரை பார்க்கிங் கட்டணம் செலுத்தி நிறுத்தி உள்ளே போனோம்.

இதமான, மூக்கைக் குத்தும், சாக்லெட் மணம் கொண்ட இன்னும் ஏதேதோ வாடைகளில் புகையிலை விற்கும் கடை அது. என்னால் ஒரு நிமிடத்துக்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை.

”தாங்கலே ஜெஃப் இந்த வாடை. நான் வெளியே போறேன்” என்று வெளியே வந்தபோது ஜெஃப் கேட்டார் – ”இந்த வாடையிலே நாள் முழுக்க இருந்து புகையிலை விக்கறாங்களே அவங்களை நெனச்சுப்பாரு. அதைவிடவா ஒரு நிமிட வாடை? நாலு தலைமுறையா புகையிலை விக்கற குடும்பக் கடை” என்றார் ஜெஃப்.

”என்னோட பத்து தலைமுறை புகையிலை கிட்டேயே போகாதவங்க” என்று பெருமையோடு சொன்னேன்.

இந்தியா திரும்பி என் சின்னப் பாட்டியிடம் லண்டன் புகையிலைக் கடைக்குள் நுழைந்த அனுபவத்தை சொல்லிக் கொண்டிருந்த போது அவள் சொன்னது –

”புகையிலை தெய்வம்டா நமக்கு. மூணு தலைமுறை புகையிலை வித்தவங்க நாம். அம்பலப்புழையிலே கடை வச்சிருந்தது. என் அக்கா, அதுதான் உங்க பாட்டி, நான் ரெண்டு பேரும் புகையிலைக்கடை குடும்பத்துலே கடைக்குட்டி பெண்கள். அப்புறம் உங்க அப்பா தலைமுறை பேங்க் வேலைக்காரங்க ஆகிவிட்டாங்க”.

ஜெஃப் லண்டனில் சிரித்தது என் மனச் செவியில் கேட்டது.

இதை எல்லாம் கலந்து என் சொந்த சரித்திரத்தை நான் எழுத ஆரம்பித்தபோது ஆலப்பாடு வயசன் என்ற முதியவர் கதைக்குள் நுழைந்தார். வயது அதிகமாகி, சிறுநீர் எங்கே போகணும் என்று தெரியாமல் வீட்டுக்கூடத்தில் கழிக்கிற மனப் பிறழ்வு உள்ள ஆலப்பாட்டு கிராம கிழவரை அரசூர் வம்ச கூட்டுக் குடித்தன வீட்டில் நுழைத்தால் அவர் அசுத்தம் செய்ததை சுத்தப்படுத்தத்தான் கதையாடல் நீளும்.

அது சரிப்படாது என்று அவரை கொஞ்சம் போல் பறந்து கொல்லைக்கு மிதந்து போய் குந்தியிருக்க வைத்தேன்.

அது இருக்கட்டும். என் வேர்களைத் தேடி அம்பலப்புழை போனபோது நல்ல மழைக்காலம். ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் அருகே வரிசையாக அமைந்த பழையகால மனைகளில் எங்கள் புகையிலைக் குடும்பத்தை அறிந்தவர்கள் யாருமில்லை.

ஒரு மனையில் பாக்கு இடித்து தாம்பூலம் தயார் பண்ணிக்கொண்டிருந்த நம்பூதிரி குடும்ப மூதாட்டி ஒருத்தி நாலாவது மனையில் தமிழ் அந்தணர் குடும்பம் ஒன்று வெகுகாலம் முன் இருந்ததாகவும் அவர்கள் வீட்டுக் கிழவர் ஹடயோகம் பயின்று தண்ணீர்மேல் நடக்க முயன்றதாகவும், முக்காலியைப் போட்டு மேலே ஏறி நின்று பறக்க முயன்றதாகவும் சொன்னாள்.

ஆலப்பாடு வயசனுக்கு ஹடயோகம் சரிப்படாது. செய்தால் ஜலதோஷம் தும்மல், சளியோடு வந்து சேரும்.

’சில நூறு வருடம் மூத்த குருக்கள் மகளோடு ஆவிபோகம் செய்யும் அரசூர் குடும்பத்து இளைஞன் சாமிநாதன் எப்படி அதைச் செய்தான்’ என்பது நான் பங்கெடுக்கும் அரசூர் வம்சம் ஆய்வுக் கூட்டங்களில் தவறாமல் கேட்கப்படுவது. பதில் இதுதான் – அவன் முழுக் கற்பனை. கூடா ஒழுக்கமாக வயதிலும், உறவிலும் அங்கீகரிக்கப்படாத பெண் சிநேகம் கொண்டவன். ஆவியோடு போகம் பண்ணலாம் என்று புறப்பட்டால் முட்டிவலியே மிஞ்சும்.

ஜோசியரிடம் யார் என்ன பிரச்சனை என்று வந்தாலும் யந்திரம் உருவாக்கி அதில் தேவதைகளை கொண்டு நிறுத்தி, நிற்க இடமில்லாமல் அவை சண்டை போட்டுக் கொள்வது, பல மருந்தும் சேர்த்து சகல ரோக நிவாரணி உண்டாக்கி நோயாளிகளுக்குத் தந்து நோய் நீக்க நினைக்கும் அந்தக்கால மருத்துவனின் தொழில் கண்ணோட்டம் பற்றியது.

தேவதைகள்? இருப்பார்கள். மக்களே போல்வராக.

அம்பலப்புழை புகையிலை குடும்பத்தில் பெண் எடுத்து அரசூர் வம்சம் தழைக்கிறது. இதை நிறைவேற்றும்  எட்டு தலைமுறை முந்தைய வாழ்வரசி பெயர் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல்,   எழுதத் தொடங்கியதும் என் மனதிலும் லேப் டாப்பில் சஞ்சரிக்கும் விரல்களிலும் வந்த பெயர் பகவதி.

என் சகோதரி இந்த மூத்த குடிப் பெண்ணை அறிந்த தொண்ணூறு வயசர் ஒருவர் சொல்ல அண்மையில் கூறினாள். ஆமாம், பகவதி தானாம் அவள் பெயர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2022 19:01

January 6, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – The private and the poetry at the battlefield

An excerpt from my forthcoming novel MILAGU

எனக்கு அவசர அவசரமாகக் காலில் கட்டுப் போட்டு விட்டு மருத்துவச் செக்கன் என்னமோ அவனை தனியாக வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தமாதிரி விழுந்தடித்துக்கொண்டு ஓடினது மட்டுமில்லாமல் நீயும் வா என்று என்னையும் நிர்பந்தித்தான்.

ஐந்து நிமிடம் முன்னால் தான் ஆழப் பதிந்த கத்தி கிழித்து ரத்தம் பெருகிய காலை எடுத்து வைத்து நான் எப்படி ஓடுவது? நடக்கிறது நடக்கட்டும் என்று நான் பொட்டலுக்குப் போகாமல் கூடாரத்திலேயே ஒரு ஓரமாக வாழை இலைக் குவியலுக்கு அப்புறம்  தலைக்கு அண்டக்கொடுத்து ஒரு பெரிய பரங்கிக்காயை வைத்துக்கொண்டு நன்றாகத் தூங்கி விட்டேன்.

நடு ராத்திரிக்கு என் காலில் குளிர்ச்சியும் வலியுமாக சேர்ந்து ஒரு கதம்ப அனுபவம். நன்றாக முழிப்பு வந்து பார்க்க,  இரண்டு எலிகள் கால்கட்டைத் துருவி ருஜித்துத் தின்றுகொண்டிருந்தன.

அவை காயத்தை நாவால் நக்கும்போது ஈரமும் குளிர்ச்சியும் பல்லால் குடைந்து பிறாண்டி எடுக்கும்போது வலியுமாக அனுபவத்தை இனியும் எத்தனை நாள் இருக்கப் போகிறேனோ அதுவரை மறக்க முடியாது.

எனக்கு நேர் கீழே விரிப்பு விரித்து இரண்டு பில்கி பிரதேசத்து வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தர் காலருகே முக்கால் வாசி குடித்து முடித்த ஷெண்டி கள்ளுக் குடுவை. அதை மெல்ல அவர்களை எழுப்பாமல் எடுத்துப்போய் கால் காயத்தைக் கழுவிக்கொண்டு வந்து படுத்தேன்.

அவள், தமயந்தி, என் அன்பு மனைவி, இன்னும் அழுது கொண்டிருப்பாள். யாரோ ஆட்சியை மாற்ற எதற்காக எந்த சம்பந்தமும்  இல்லாத நீ வாளேந்திப் போரிட வேண்டும் என்று கூர்மையான வினாத் தொடுத்தாள். எல்லா யுத்தமும் சம்பந்தமில்லாதவர்களால் செய்யப்படுகிறது, வெற்றியும் தோல்வியும் வேறு தளங்களில் வேறொரு கும்பலால் நிச்சயிக்கப் படுகிறது என்றேன் அவளிடம். தமயந்தி, நான் வரும்போது நீ இருப்பாயா? போவேனா?

திரும்பப் போவேன் என்று எனக்கு நானே காயத்தைப் பார்த்துச் சொன்னேன். காயம் ரணமானாலும், நொண்டி நடந்தாவது தமயந்தியை முத்தமிட திரும்பி வந்துவிடுவேன். இனியும் ஒரு போர் வேண்டாம் எனக்கு.

புலரும் காலை நேரம் இது. இதோ எழுந்து மலசலாதிகள் முடித்து ஷராவதி நதியில் குளித்து போர் உடுப்பை அணிந்து கூடாரத்துக்கு வந்திருக்கிறேன். எல்லோருக்கும் இட்டலிகள் உணவாகத் தரப்படுகின்றன. ராத்திரி இரண்டு மணிக்கே இட்டலி வார்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.

ஒவ்வொருவருக்கும் எட்டு இட்டலிகள் கொடுத்து சமையல்காரன் சொன்னான் –

உமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ராத்திரி கறிச்சோறு இல்லையென்றால் நாளைக்குப் பால்சோறு என்றான்.

அவனிடம் நீ கவிஞனாக இல்லாமல் போனாய். இட்டலி பண்ணாமல் கவியாகி இருந்தால் ரெண்டு விதத்திலும் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று அறிவுறுத்தினேன். தமயந்தி, போர்க்களத்திலும் கவிதையுண்டு பார்த்தாயா?

pic medieval breakfast

ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2022 18:31

January 5, 2022

பெரு நாவல் ‘மிளகு’

மிளகு நாவலில் இருந்து இரு சிறு பகுதிகள்

சென்னா ஒற்றர் அணி கொண்டுவந்த தகவலை முன்பைவிட நிதானமாக அறிவித்தாள். ஆச்சர்யம் விலகாமல் கையிரண்டையும் உயர்த்தி, இது அதிசயமானது என்று பொருள் தர பெத்ரோ நின்று நடனக் கலைஞன் போல் அபிநயிக்க, சென்னபைரதேவி இருந்தபடியே குறுநகையோடு, அதேபோல் அபிநயித்தாள். அவளுடைய ஊன்றுகோல் தரையில் ஓசையெழுப்பி விழுந்தது.

பெத்ரோ அமர்ந்து சொன்னார் –

சரி அம்மா! நான் உங்கள் அனுமதியோடு கோழிக்கோடு செல்லப் போகிறேன். அங்கிருந்து என்னை இயங்கச் சொல்லி கோவா செயலகம் மூலமாக உத்தரவு வந்திருக்கிறது. போர் நின்றதும் திரும்ப அனுமதி உண்டு.

தெரியும் பெத்ரோ. ஆனால் நீங்கள் வரப் போவதில்லை. லிஸ்பனுக்குக் குடும்பத்தோடு திரும்பிவிடுவீர்கள்.

பெத்ரோ தலைகுனிந்து சென்னபைரதேவி காலில் விழுந்து இந்துஸ்தானி பாரம்பரியத்தின் படி சர்வாங்கமும் நிலம் தொட வணங்கி எழுந்தார்.

ஆயுஷ்மான் பவ. ஜெயவிஜயிபவ. முன்கூட்டிய ஆசிர்வாதங்கள் என்றாள் மகாராணி. பெத்ரோ கைகூப்ப அவள் சொன்னாள் –

முன்கூட்டியே போர்த்துகல் படைக்கு ஊதியம் அதுவும் மிளகாகத் தரவேண்டும். அதை நீங்கள் தரச்சொல்லி கேட்கவில்லையே. போகிறது. நாளை நஞ்சுண்டார் படை எண்ணிக்கை, தகுதி சரி பார்த்து அளிப்பார்.

பெத்ரோவுக்கு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அரசாளுதல் ஈதன்றி வேறு உண்டோ. அவருக்குத் தெரியாது.

கண்ணைக் கண்ணீர் மறைக்கப் புவி ஈர்ப்பு இல்லாத பூமியில் நடப்பதுபோல்  தடுமாறிக் காலடிகளை எடுத்து வைத்து இருள் படியும் முன்மண்டபத்துக்கு நடந்தார். ஏதோ  தோன்றப் பின்னால் திரும்பிப் பார்த்தார். அங்கே மகாராணி சென்னபைரதேவி நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருகையும் கூப்பி வணங்கி பெத்ரோ தொடர்ந்து நடந்தார். இனி மிளகுராணியைச் சந்திக்கப் போவதில்லை என்று அவருக்குத் தோன்றியது.

*************************************************************************

திருத்தக்கன் என்ற எளிய போர் வீரன் பேசுகிறான் – தொடர்ச்சி

அரசுப்படையில் இருக்கும் இந்தியன், போர்த்துகீஸ் வீரன் என்ற தனித்தனியான கவனிப்பு எதிரணியில் கிடையாது. எல்லோரும் ஒரே மாதிரித்தான்.

அதுவும் இளைஞர்கள் என்பதில் தான் அவர்கள் மேலே இருக்கிறார்கள்.

இன்னும் சிறிது நேரத்தில் இன்றைய யுத்தம் தொடங்கி விடும். இரண்டு பக்கத்திலும் இரண்டாயிரம் பேர் கிட்டத்த்ட்ட பங்குபெறும் பெரிய யுத்தம் தான் இது. இன்று ஐந்தாம் நாள்.

ஆனால் என்ன? அரசு அணியோ எதிரணியோ எந்தப் பக்கத்தில் யுத்தம் செய்தாலும், எதற்காக சண்டை போடுகிறாய், ஜெயித்தால் என்ன ஆகும், தோற்றால் என்ன ஆகும், உயிர் பிரிய நேர்ந்தால் என்ன ஆகும் என்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாது இரண்டு ஜனப் பிரவாகமாக சண்டை நடக்கிறது. இரண்டு அணியாகப் பிரித்து இறப்பு வந்து இணைத்துச் சேர்கிறது.

நான் வஜ்ரமுனி.

நான் ஜெரஸோப்பா யுத்தத்தில் பங்குபெரும் காலாட்படை வீரன். பில்கி அரசர் அனுப்பிப் பங்குபெற வைத்த பில்கி பிரதேசத்து விவசாயி.

நேற்றைய யுத்தத்தில், என் காலில், எங்களுக்கு விரோதியான அரசு அணி வீரர் ஒருவர் விட்டெறிந்த, வழியில் கிடந்த கத்தி கிழித்து,  காயம் உண்டாக்கியது. மன்னிக்கவும். நேற்று வந்ததும் எங்களுக்கு படைத் தலைவரான ஒரு தளவாய் பாடமாகக் கற்றுக்கொடுத்தபடி கத்தி என்று சொல்லக் கூடாது. வாள் என்பதே சரியான வார்த்தைப் பிரயோகமாம்.

நேற்று இரவு எங்களுடையதான எதிரணியின் பெருந்தலைவர் நேமிநாதர் எம் படையினர் அனைத்துப் பேரும் வந்து நின்றிருக்க சொற்பொழிந்தார்.

ராத்திரி மருத்துவன் என் காலில் காயத்தைக் கழுவி சாராயத்தை எரிய எரியத் தடவி வெள்ளைத் துணியைக்கிழித்துக் காயத்தின் மேல் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தபோது எல்லோரும் அவசரமாக முன்வசத்துப் பொட்டலில் வந்து குழும வேண்டும் என்று தண்டோரா முழக்கிப் போனார்கள்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2022 18:38

January 4, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – A simple soldier speaks

An excerpt from my forthcoming novel MiLAGU

நான் திருத்தக்கன்.

ஹொன்னாவர் வாசி. தமிழ்ப் புலவன். கன்னட கவிஞன். போர்த்துகீஸ் மொழி எழுதப் படிக்கத் தெரியும். தமிழிலும் கன்னடத்திலும்   முறைப்படி இலக்கணம் படித்திருக்கிறேன். தச்சுத் தொழில் செய்கிறேன். இப்போது சென்னபைரதேவி மிளகு ராணியின் அரசு அணி போர்வீரன்.

தயார்நிலைப் போர்வீரனாக இருந்து இந்த வாரம் அரசுப் படைவீரனாக நியமிக்கப்பட்டிருக்கிறேன்.

எங்கள் அணியில் என் போன்ற தயார்நிலை போர்வீரர்கள், அரசு காவல்படை வீரர்கள், போர்த்துகல் அரசு கட்டணம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்த ஆப்பிரிக்க இனத்து போர்த்துகீஸ் போர்வீரர்கள் என்று மூன்று பகுதி உண்டு. எங்களில்.

போர்த்துகீஸ படைவீரன் என்றால் இடுப்பில் இரண்டு பக்கமும் வெள்ளை றெக்கை முளைத்தவர்கள். முளைத்து மட்டுமில்லை அதைப் பரத்திப் பறப்பவர்கள். கால் நடப்பதற்காக ஏற்பட்டவர்கள் இல்லை அவர்கள்.

நேரம்  பார்த்து வேலை ஆரம்பிப்பார்கள்.  நேரம் முடிந்தால் அதற்கு அப்புறம் ஒரு க்‌ஷணம் கூட வேலையைத் தொடர மாட்டார்கள். காலை ஒன்பதுக்கு யுத்தம் புரிய ஆரம்பித்தால் சாயந்திரம் எதிர்த் தரப்பில் வந்த படைவீரனைத் துரத்துவதில் ஈடுபட்டிருக்கும்போது சாயந்திரம் ஆறு என்று சங்கு ஊதக் கேட்டு உடனே துரத்துவதை நிறுத்தி நடந்து வந்து விடுவார்கள்.

சாயந்திரம் போரிட்டு வந்து கோட்டைக்குள் நிற்கும்போது ஆளாளுக்கு இரண்டு குவளை நாட்டுச் சாராயமோ கள்ளோ தரப்பட மற்ற வீரர்களுக்குப் பானகம் வழங்கப்பட்டாலே ரொம்ப அதிகமான உபசரிப்பு அது.

அவர்களுக்காக போர்த்துகீஸ் அரசு சார்பில் கோவாவில் இருந்து வந்திருக்கும் அதிகாரி, இத்தனை நாள் சீரும் சிறப்புமாக தலைமை பிரதிநிதியாக இருந்த இம்மானுவேல் பெத்ரோ பிரபுவை ஓரம் கட்டிவிட்டு ஜோசப் பவுலோஸ் என்ற இவரே சகலமும் என்று இந்த ஊதியத்தை மிளகாக படியால் அளந்து தினசரி சாயந்திரம் வாங்கிப் போகிறார்.

பவுலோஸ் துரைக்கும் சாராயம் விளம்பப்படும். வந்ததுதான் வந்தீர் மிளகு இருக்கட்டும். உம்மை ஆகாயத்தில் பறக்க வைக்கும் மங்கலாபுரம் நாட்டுச் சாராயம் ஒரு குவளை பருகிவிட்டுப் போம் என்றோம். வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

வேண்டாமா கொஞ்சம் கம்மி போதை நல்ல வாசனை, ருசியாக ஷெண்டி என்று நாங்கள் தினம் ருசித்து மதம் கொண்டு மிதந்திடச் செய்யும் தேங்காய்க் கள்ளு நாலு லோட்டா குடித்துப் போம் என்று சகலரும் உபசரித்து முட்டமுட்டக் குடிக்க வைத்து அனுப்பினோம்.

பெத்ரோ பிரபு ’என்ன கண்றாவி என்றாலும் கம்புக்கூட்டில் இடுக்கிக்கொண்டு ஆரியக்கூத்து ஆடுங்கள், நான் லிஸ்பனுக்குத் திரும்பப் போகிறேன்’ என்று மெழுகு பொம்மையாக உட்கார்ந்திருக்கிறார். அவர் லிஸ்பனுக்கு கோழிக்கோடு வழியாகப் போகப் போகிறதாகக் கேள்வி.

பெத்ரோ செயலாக இருந்தாலாவது போர்த்துகீஸ் படையினர் தலைதிரிந்து ஆடுவதை நிறுத்திப் போட்டிருப்பார். அல்லது கட்டுப்படுத்தியிருப்பார். அவருக்குத் தெரியும், போர்த்துகீஸ் படைவீரனை விட வலிமையிலும் போர்த் திறத்திலும் அதிகமாக முன்னே நிற்பவர்கள் உள்நாட்டு வீரர்கள்.

அதுவும் காவல் படை போன்ற கட்டுக்கோப்பான அமைப்பில் வீரர்கள் கொஞ்சம் கூடுதலாக வயதானவர்களாக இருந்தாலும், நம்பி யுத்தபூமியில் இறங்கலாம். அவர்களிடமிருந்து போரை ஒரு கலையாக மற்றவர்கள் கற்றுக் கொள்ளலாம். போர் அறனையும் அவர்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம்.

நடந்தும் ஓடியும் போர் செய்கிற ஒரு படைவீரன் எதிரணியில் அதே போல் வந்த காலாட்படை வீரனோடு பொருதுதல் தான் அடிப்படை போர் தர்மம் என்று செயல்மூலம் கற்றுத் தருவார்கள் காவல் படையினர்.

எதிரணியோ இதற்கு நேர்மாறு. நேற்றைக்கு சாயந்திரம் இருள் அப்பிக்கொண்டு வரும் அந்திக் கருக்கலில் எதிரணி காலாட்படை வீரன் ஒருவன் போர் செய்து தளர்ந்து குதிரைமேல் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் காவல்படை வீரருக்குப் பின்னால் இருந்து கடப்பாறையை எறிந்து ரத்தக் காயம் உண்டாக்கியதை வீரப் பிரதாபமாக எதிரணியே ஆரவாரம் செய்து வரவேற்றது.

யுத்த தர்மம் என்ற சொல்லே அவர்கள் அகராதியில் இல்லை போலிருக்கிறது.

PIC  A medieval European soldier

Ack  en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2022 18:37

January 2, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – Je vous souhaite un bon voyage, M.Petro. Que Dieu soit avec toi

An excerpt from my forthcoming novel MILAGU

கோட்டை மதிலின் உள்சுவர் தெப்பக்குளத்துக்கு அருகே வளைந்து திரும்பும் இடத்தில் தரையில் வெண்துணி பரப்பி காயமடைந்த வீரர்கள் நால்வர் படுத்திருக்க முழங்காலில் மூலிகைப் பற்று தன்மையான வெப்பத்தில் பூசப்பட அவர்கள் வலியில் துடிக்கும் ஒலியைக் கடந்து ஊர்ந்தது கோச்.

லாகவமாக கோச் குதிரைகளை சற்றே மேடாக வளைந்து திரும்பும் பாதையில் செலுத்தி கோட்டை அலுவலகத்துக்கு முன் வண்டியை நிறுத்தி உள்ளே நுழையப் போகும்போதுதான் அவருக்கு நினைவு வந்தது –குதிரைகளுக்கு ஓய்வும் உணவும் தண்ணீரும் தரவேண்டுமே என்று.

கோச்சில் திரும்ப ஏறி, அரசு குதிரை லாயத்தில் நுழைந்தார் அவர். வணக்கம் சொல்லி அவருடைய கோச்சை ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தினார் லாயத் தலைமைக் காவலர்.

வண்டிக்குள் விலை மதிப்புயுர்ந்த ஏதும் இல்லையே என்று அவர் கேட்க, நான் தான் இருக்கிறேன் என்று பெத்ரோ சொல்லிச் சிரித்தார். லாயத் தலைமைக் காவலர் தானும் சேர்ந்து சிரிப்பது மரியாதையாக இருக்காது என்று நினைத்தோ என்னமோ முகத்தைக் கரிசனம் காட்டாமல் வைத்துக்கொண்டு குதிரைகளை அவிழ்த்து உள்ளே நடத்திப் போனார்.

அந்தி சூரியன் சிவப்பு பூசியிருந்த கோட்டையின் பிரம்மாண்டமான சுவர்களைப் பார்த்தபடி உள்ளே நடந்தார் பெத்ரோ.

சற்றே வேகமாக நடந்து வெளிமண்டபம் கடந்து உள்ளே போக, யாருமில்லை அங்கே. அரச வசிப்பிடத்தில் மேற்கில்  இருந்து பாத்திரங்கள்  உருள, உணவு பாகம் பண்ணும் ஒலியும் வாடையும் கலந்து வந்தது.

பெத்ரோ ஆசனத்தில் அமரும் முன் பார்த்தார் – அது சென்ற முறை வந்தபோது இருந்தது போலன்றி, சுத்தமாக இருந்தது ஒரு தூசு இன்றி.  மறையும் ஆதவன் சாளரங்கள் வழியே விடைபெற,  அந்த மாளிகை, பகுதி வெளிச்சம் பூசி, மீதி இருளை வரவேற்று நின்றது காண, ஏனோ துயரமாக இருந்தது பெத்ரோவுக்கு.

டொக் டொக் என்று கட்டைகளைத் தரையில் மோதினால் வரும் ஒலி. உள்கதவு திறந்து கைத்தடியை ஊன்றியபடி மிளகுராணி ஜெர்ஸுப்பா மகாராணி சென்னபைரதேவி தளர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் அவளுடைய தளர்ச்சியும் வயதும் இருமடங்கு அதிகரித்திருந்ததாக பெத்ரோவுக்குப் பட்டது. தன்னையும் முதுமையும் தளர்ச்சியும் தொற்றி, தசை, நாளங்களூடாக பீடித்ததாகத் தோன்றியது.

வரிசையாக ஏழு தீபங்களை ஏற்றி சூழலை பிரகாசிக்க வைத்து விட்டு ஒரு பணிப்பெண் உள்ளே போனாள்.

எழுந்து மரியாதையோடு வணங்கினார் பெத்ரோ. அவரைத் திரும்ப அமரச் சொல்லி விட்டு பெத்ரோ அருகில் இருந்த நாற்காலியைச் சற்றே திருப்பி பெத்ரோ முகத்தைப் பார்க்க வசதியாக நகர்த்தியபடி அமர்ந்தாள் சென்னா.

பெத்ரோ மண்டியிட்டு அவள் கையில் மரியாதையோடு முத்தமிட்டு தலைகுனிந்து இருக்க   அன்னைபோல் அவர் தலையில் கைவைத்து ஆசியருளினாள் சென்னா.

பெத்ரோவுக்கு அடக்க முடியாமல் கண்ணீர் சுரக்க, கண்கள் கலங்கி. எல்லா வண்ணமும் மேலோடி, குவியம் காணாத விழிகளைத் திரை மறைக்க, உருவங்கள் குழம்பித் தெரிய, சமாளித்துக்கொண்டு எழுந்தார். தன் இருக்கையில் அமர்ந்தார்.

அரசி  அவரைக் குறிப்பாகப் பார்த்துச் சொன்னாள் – காலையில் செய்தி வந்தது. நீங்கள் கோவாவுக்கு போயிருக்கிறீர்கள் என்று.

பெத்ரோ நிதானமாகச் சொன்னார் –

ஆம் அம்மா. எவ்வளவு விரைவில் போர்த்துகல் படையாக நான் தங்களுக்கு அனுப்பித்தர முடியுமோ அவ்வளவு விரைவில் அனுப்பினால் பல விதத்திலும் நன்மை உண்டாகுமே. அதனால்தான் நானே நேரில் போய்வந்தேன். இன்று இரவுதான் திரும்புவதாக இருந்தேன். ஆனால் அங்கே இருப்புக் கொள்ளாமல் நேற்று இரவெல்லாம் பயணம் செய்து காலையில் வந்து சேர்ந்தேன். அசதியில் கண்ணயர்ந்து விட்டேன். விழிப்பு வந்ததும் தங்களை தரிசிக்க இங்கேதான் ஓடி வந்திருக்கிறேன் என்றார் பெத்ரோ.

தரிசனம். அது ரொம்ப பெரிய வார்த்தை பெத்ரோ சின்ஹோர். நான் வெறும் மனுஷி. என்னைச் சந்திக்க நீங்கள் வந்திருக்கிறீர்கள். தரிசிக்க இல்லை. நான் இறந்தால்கூட, சொந்தமும் நட்பும் விரும்பினால், உடல் காட்சிக்கு வைக்கப்படும். தரிசனத்துக்கு வைக்கப்படாது.

பெத்ரோ இருகை கூப்பி, நீங்கள் இன்னும் பல ஆண்டு ஜீவித்திருப்பீர்கள் என்றார். சென்னா சிரித்தாள்.

இறப்பு பற்றி இப்போதெல்லாம் நினைவு வந்துகொண்டே இருக்கிறது. இழப்பு பற்றியும் தான். பேரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த யுத்தத்தால் என்ன பிரயோஜனம்? நேற்று மட்டும், நூற்று அறுபத்திரண்டு பேர், போர் என்ற, தெய்வங்கள் ஆடிக் களிக்கும் குரூர விளையாட்டில் இறந்து போனார்கள். இரண்டு பக்கமும் சேர்த்த சாவு எண்ணிக்கை இது. எல்லா யுத்தங்களையும், பேரிழப்பையும், போரிழப்பையும் களைந்த உலகம் வர பகவான் மகாவீரரை பிரார்த்திக்கிறேன்.

சென்னா கைகூப்பி கண்மூடிப் பிரார்த்திக்க, பெத்ரோ தானும் கைகூப்பி இருந்தார். இனி இவர் பேசுவாரா? அரசியைக் கவனித்தார். உறக்கமோ, அயர்வோ, பிரார்த்தனை ஆழ்ந்திருந்தாரோ சென்னா அசையவில்லை.

இதற்கு மேல் பேச ஏதுமில்லை பெத்ரோவுக்கு. அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு மெல்லிய குரலில் கூறினார் –

மன்னியுங்கள். நான் திரும்பப் போய் போர்த்துகீசிய படைகள் பற்றி செய்தி உண்டா என்று பார்த்து வரட்டுமா?

அவசரமாக எழுந்து அனுமதியின்றிப் புறப்பட்டதற்காக கண்டிப்பான வார்த்தை வாங்காமல் இருக்க நாற்காலியின் முனையில் தொற்றியபடி இருந்தார்.

போர்த்துகீஸ் படைகள் வந்துவிட்டன.

சென்னா நிதானமாகச் சொல்ல பெத்ரோவால் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

வந்துடுத்தா? எனக்குத் தெரியாமலா?

ஆமாம் அங்கோலா படைகள். தில்லி பக்கம் கப்பலை நிறுத்தி இறங்க வரைபடத்தைப் பார்த்துக்கொண்டு உள்ளல் துறைமுகத்துக்கு வந்தார்களாம். அவர்களை ஹொன்னாவர் துறைமுகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறாள் என் பிரியமான தோழி அப்பக்கா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2022 18:34

December 31, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – And quite flows the Sharawathi

An excerpt from my forthcoming novel MILAGU

ஆக உங்கள் காதலும் காமமும் நான் உங்கள் மேல் வைத்த காதலும் அரசாங்க விஷயங்கள்.

பெத்ரோ ஒரு சிரிப்போடு கேட்டார் –

அது அரசாங்க விஷயமாகவே இருக்கட்டும் என் கண்ணின் கண்ணே. உனக்கு என்னை பிடித்து வந்தாயா அரசாங்க கட்டாயத்தின் பேரில் என்னோடு ஒட்டிக் கொண்டு பழகினாயா என் இதயமே?

கஸாண்ட்ரா அவர் தோள்களில் மாலையாகத் தன் வளையணிந்த வனப்பான கரங்களை இட்டு வளைத்தாள். அவள் உதடு துடித்தது. கண்ணில் நீர் திரண்டது.

நான் அடுத்த பிறவி என்றிருந்தால் உம்மோடு உயிர் வாழ்வேன். இப்போது என் அன்பு சிநேகிதி மிங்குவின் குடும்பத்தோடு மிர்ஜானின் வசிக்கப் போகிறேன்.

அதிர்ஷ்டக்கார மூலிகை மனுஷன் என்று மட்டும் சொல்லி பெத்ரோ எழுவதற்கும் வெளியே போயிருந்த மரியாவும் குழந்தைகளும் திரும்ப வந்து சேரவும் சரியாக இருந்தது.

அந்த உறவாடல் உயிர் இருக்கும்வரை பெத்ரோவுக்கு  உடலில் ஒவ்வொரு திசுவிலும் நினைவாகத் தங்கி இருக்கப் போகிறது. கஸாண்ட்ராவோடு அவருக்கு ஏற்பட்ட இந்த சிநேகிதமும் எப்போதும் நினைவு வந்து வதைக்கப் போகிறது அவரை.

கி ஃக்யுண்டா ஃபெய்ரா (que quinta-feira)- என்ன அற்புதமான வியாழக்கிழமை என்று முணுமுணுத்தபடி படுக்கை அறையில் நுழைந்தார் பெத்ரோ. அயர்வு அசாத்தியமாக அழுத்த உறங்கிவிட்டார் அவர்.

அவர் எழுந்தபோது மாலை ஐந்து மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் என்று அவருடைய இடுப்பு வாரில் தொங்கிய கடியாரம் அறிவித்தது. பசியும் தாகமும் இல்லை அவருக்கு. மரியா கட்டாயப்படுத்தி ரொட்டித் துண்டுகளை அனலில் வாட்டி வெண்ணெய் தடவிக் கொடுத்தாள்.

அதில் பாதியை உண்ட பெத்ரோ, மிர்ஜான் போய் வரேன் என்று பொதுவாக சொல்லிக்கொண்டு கோச் வண்டியில் தாவி அமர்ந்தார். அவரே செலுத்த வேகமாக நகர்ந்தது கோச் வண்டி.

பழகிய பாதை என்பதாலோ என்னமோ அவர் திரும்புவதற்காக லகானை வலிக்கும் முன் குதிரைகளே தன்போக்கில் திரும்பி, மேடு பள்ளம் பார்த்து ஓடி மிர்ஜான் கோட்டை வளாகத்துக்குள் வரும்போது ஆச்சரியமாக அவர் கவனித்தது இது –

முற்றுகை இடப்படும் கோட்டை என்ற எந்த அடையாளமும் இன்றி கோட்டை ஆளரவமற்ற வெட்டவெளியில் நின்றிருந்தது. வெட்டவெளிக்குக் கிழக்கே ஒழுங்கின்றி எழுந்திருந்த கூடாரங்களில் ஆளரவம் காணப்பட்டது.

இன்றைக்கு படைநடத்தல் இல்லையோ? அல்லது ஞாயிறன்று யுத்த விடுமுறையோ? அதுவும் இல்லையென்றால், மாலை ஆறு மணிக்குப் போர் நின்று மறுநாள் தொடருமா? பெத்ரோவுக்குப் புரியவில்லை.

காதலிலும் யுத்தத்திலும் எதுவும் சரியானது தானே. தொடர்க என்றால் மேலே தொடரலாம். நிற்கலாம் என்றால் நிற்கலாம். யுத்தம் தற்காலிகமாக ஓய்ந்த யுத்த பூமி காண என்ன ஆச்சரியம்?

கோட்டையின் சுரங்கப் பாதையின் தோட்டத்து வழி நுழைவாசலில் பரபரப்பு தட்டுப்பட்டது. மிக அதிகமாகக் காயம் அடைந்த ஒரு வீரனை உருளை பொருத்திய பலகைப் படுக்கையில் வைத்து இரண்டு பேர் தள்ளிக்கொண்டு போக தலையில் அடிபட்ட ஒரு வீரனின் காயத்திலிருந்து  கொட்டிய வண்ணம் இருந்த குருதியைத் தடுக்க இயலாமல் ஒரு மருத்துவ உதவியாளன் அந்த வீரனைத் தொடையில் தாங்கி இறுதி மூச்சை விடுவதை இயலாமையோடும், தவிப்போடும், துக்கத்தோடும், பாசத்தோடும், பரிவோடும், அன்போடும், இரக்கத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஓம் நமசிவாய.

பெத்ரோ கடந்து போகும்போது பின்னால் அந்த உயிர் கைலாச யாத்திரைக்குப் புறப்பட்டதைத் தெரிவிக்கும் குரலாக மருத்துவ உதவியாளன் குரல் எழுந்து அழுகையில் கரைந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 19:56

பெரு நாவல் ‘மிளகு’ – chapter in which Cassendra bids farewell to Senhor Petro

an excerpt from my forthcoming novel MILAGU

இரவெல்லாம் கண் விழித்து இரு கோச் வண்டிகள் மாற்றி காலை ஒன்பது மணிக்கு அவர் மாளிகைக்கு வந்து சேர கதவு எல்லாம் அடைத்துச் சார்த்தி வைத்திருந்தது. மனைவி மரியா, குழந்தைகள் மற்றும் கஸாண்ட்ராவைக் காணவில்லை. அவர் வசம் மாளிகைத் திறவுகோல் இல்லாத காரணத்தால் வாசலில் நின்று காத்திருக்க, எதிரே முட்டை வணிகம் செய்யும் கிருஷ்ணப்பா, அவர்கள் இன்று ஞாயிறென்பதால் தேவாலயம் போயிருப்பதாகத் தெரிவித்தான்.

ஞாயிற்றுக்கிழமை பரமபிதா அண்ட சராசரங்களைப் படைத்து ஓய்வெடுத்த வார முதல் நாள். பெத்ரோ மட்டும் அரசு காரியமாக அலைய வேணும் என்று விதித்தவன் சாத்தானாக இருக்கும் என்று மனதில் பழித்தார் அவர்.

உத்தேசமாக தலையில் கொம்போடு மனதில் சாத்தான் உருவம் உருவாக்கினார். பாதி கவுட்டின்ஹோ பிரபு சாயலிலும், மீதி பெத்ரோவின் மாமனார் சாயலிலும் மனதில் வந்த அந்த சாத்தான், நரகத்தைவிட கோரமாக இருந்த ஸ்திதியை எண்ணி பெத்ரோ வியந்து நிற்க, வாசலில் கோச் வண்டி வந்து நின்றது.

பெத்ரோவின் மனைவி மரியாவும். குழந்தைகளும் கஸாண்ட்ராவும் இறங்க, மரியாவோடு கைகோர்த்து கஸாண்ட்ரா வந்த அந்நியோன்யம் கண்டு சகோதரிகளோ என்று பார்த்தவர் ஆச்சரியப்படுவர் என பெத்ரோவுக்குத் தோன்ற, கொஞ்சம் சந்தோஷமும், மீதி அந்த அவசரமான கூட்டணி குறித்து ஆச்சரியமுமாக அவர்களை வரவேற்றார்.

மரியாளுக்கு உதட்டில் முத்தம் தந்து கஸாண்ட்ராவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது அவரே முக்கியப் பங்கு பெறும் ஒரு நாடகத்தின் அந்தம் அரங்கேறுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி பெத்ரோவுக்குத் தோன்றியது.

நாளை இதே நேரம் மரியாவும் குழந்தைகளும் பயணம். வேறெங்கே, கோழிக்கோட்டில் மரியாவின் தாய்வீடுதான். இது அவசியமானதாகக் கருதப்படும் பயணம். அவளும் பெத்ரோவும் யோசித்து முடிவெடுத்த ஒன்று.

தாய்வீட்டுக்குத் திரும்பவும் குடும்பத்தோடு போய்ச் சேருவதில் அடக்க முடியாத சந்தோஷம் மரியாவுக்கு. நாளை பெத்ரோவும் மரியாவோடு கோழிக்கோடு போகிறார். அங்கே தற்காலிகமாகத் தன் பணியிடத்தை மாற்றிக் கொள்கிறார்.

யுத்தத்தில் இறப்பு அதிகரிப்பும், கலவரமான சூழ்நிலையும் ஹொன்னாவரில் இருந்து பணிபுரிவதைச் சிக்கலாக்கும். ஹொன்னாவரில் இந்த போர்த்துகீஸ் அரச தலைமை பிரதிநிதி மாளிகை இப்போதைக்கு பூட்டி வைக்கப் பட்டிருக்கும். கோவாவில் இருந்து ஜெருஸூப்பா நிலைமை கண்காணிக்கப்படும்.

கஸாண்ட்ரா? கஸாண்ட்ரா ரொம்ப யோசித்து எடுத்த முடிவு அவள் மிர்ஜான் கோட்டைக்குள் வசிப்பிடத்தை மாற்றிக் கொள்கிறாள். மிங்குவின் அகால மரணத்தைத் தொடர்ந்து பைத்யநாத் வைத்தியர் வீட்டில் இருப்பாள். வைத்தியரும் குழந்தை கோணேஸ்வரனும், மருத்துவச்சி ராஜம்மாளும் கூட இருக்க தோழியின் குழந்தையைக் கவனித்துக் கொள்ள கஸாண்ட்ரா அங்கே குடிபுகுவாள் நாளை. வைத்தியரோடு பேசி விவாதித்து அவருடைய இல்லை, குழந்தையின் நன்மைக்காக எடுத்த முடிவு அது.

வைத்தியருக்கு, யுத்தத்தில் எந்தக் கட்சி வென்றாலும் பணியும் ஆயுளும் கெட்டி. ஒரு மாதத்திற்குள் நிரந்தரத் தேர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்போது வைத்தியர் கஸாண்ட்ராவைக் கல்யாணம் கழிப்பார். அவளுடைய இறந்த காலத்தைத் துடைத்து தூரப் போட்டு விட்டு வரப்போகிறாள் கஸாண்ட்ரா. அவரும் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை.

கஸாண்ட்ரோ கடந்து போன வியாழக்கிழமை சாயந்திரம் பெத்ரோவோடு நிறையப் பேசினாள். மடாலய வீதி போர்த்துகீஸிய மற்றும் உள்ளூர் சிநேகிதிகளிடம் யாத்திரை சொல்லி வரப் போயிருந்தாள் மரியா. குழந்தைகளையும் தன்னோடு கூட்டிப் போயிருந்தாள் அவள்.

வேலைக்காரர்கள் எல்லோருக்கும் கணக்கு தீர்த்து மூன்று மாத ஊதியம் கூடுதலாகவும் அளிக்கப்பட்டு விட்டது. வீட்டில் ஆழ்ந்த மௌனம் நிலவியது.

மரியா ஏறிப்போன கோச் வண்டி நகர்ந்ததும் பெத்ரோ கஸாண்ட்ராவை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார்.

என் கண்ணே, உயிரின் உயிரே, நீ மட்டும் சரின்னு சொல்லு, எல்லாவற்றையும் எல்லாரையும் விட்டு நீங்கி உன்னோடு நான் வருவேன். வா ரெண்டு பேரும் எங்காவது கண்காணாத இடத்துக்குப் போய் ஏதாவது சிறிய வேலை பார்த்து பிழைக்கலாம். அப்படித்தானே சொல்லப் போறீங்க சின்ஹோர் பெத்ரோ.

அவரை உதட்டில் கடித்து முத்தமிட்டபடி கஸாண்ட்ரா சொல்ல, பெத்ரோ மயக்கம் போட்டு விழாத குறைதான். கஸாண்ட்ரா அவர் பக்கத்தில் அமர்ந்தாள். இன்னொரு ஆலிங்கனம். அமைதி. அதைக் கிழித்தபடி கஸாண்ட்ரா சொன்னாள் –

நான் இங்கே மாளிகை நிர்வாகியாக நானாக வரல்லே. அரசியார் சென்னபைரதேவி கட்டளைப்படி, முக்கிய பிரதானி நஞ்சுண்டய்யா சுவாமி ஏற்பாடு செய்து நான் இங்கே வந்தேன். காரணம், நான் அரசாங்க வேவுத்துறையில் கௌரவ அங்கம் வகிக்கிறவள். உங்களால், உங்கள் மூலம், போர்த்துகல் அரசால் சென்னா மகாராணியின் ஜெருஸுப்பா அரசுக்கு ஏதும் இடர் ஏற்பட சாத்தியம் இருக்கிறதா, உங்களை தினசரி சந்திக்க யார் யார் வருகின்றார்கள் என்ற விவரம் எல்லாம் நான் அரசுக்கு அறிவிக்க வேண்டிய கடமை. ஆனால் நான் வந்த இரண்டு மாதத்தில் எனக்கு பணி விலக்கு தரப்பட்டது. காரணமாகச் சொல்லப்பட்டது இது –

பெத்ரோ துரையால் ராஜாங்க ரகசியம் எதுவும் வெளியேறாது. அவர் சாது பிராணி. நல்லொழுக்கம் கொண்டவர். ஒரே போதைப் பழக்கம் பெண் சிநேகிதத்தில் அசாத்தியமான ஈடுபாடு. செல்வி கஸாண்ட்ரா அதை ஏற்றுக்கொண்டால் ஜெரஸூப்பா அரசு அதைப் பற்றிக் கரிசனம் காட்டுவதை நிறுத்திக் கொள்ளலாம்.

ஆக உங்கள் காதலும் காமமும் நான் உங்கள் மேல் வைத்த காதலும் அரசாங்க விஷயங்கள்.

pic medieval european lady

ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 02:55

December 29, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – The Portuguese are coming! And they have arrived

An excerpt from my forthcoming novel MILAGU

மிளகு அத்தியாயம் எழுபத்தேழு                    1606 உள்ளால்

போர்த்துகீஸ் படை வந்து சேர்ந்தது.

எங்கே வரவேண்டும் என்று தெரிவிக்கப் படாததால் உள்ளால் துறைமுகத்துக்கு வந்து நங்கூரமிட்ட பத்து சிறு கப்பல்களில் வந்த ஐநூறு பேர்   படகுகளை அமர்த்திக்கொண்டு கரைக்கு ஏக கோலாகலமாக வந்து சேர, அப்பக்கா மகாராணிக்கு உடனடியாகச் செய்தி அறிவிக்கப்பட்டது.

அப்பக்கா உடனே போர்த்துகல் அரசின் தலைமைப் பிரதிநிதியான சின்ஹோர் இம்மானுவல் பெத்ரோ அவர்களை துரிதமாக உள்ளாலுக்குப் புறப்பட்டு வரச்சொல்லி ராஜாங்க தூதன் மூலம் லிகிதம் அனுப்பினாள்.

இது  போர்த்துகீஸ் அரசின் கோவா பிரதிநிதி அல்வாரீஸால் நிர்வகிக்கப்படும் என்று திருப்பிவிட நினைத்தாலும், தான் கோழிக்கோடு வழியாக லிஸ்பனுக்குத் தாயகம் திரும்ப இருக்கிற இந்த நேரத்தில் எல்லோருக்கும் நட்போடு செயல்பட்டிருக்கத் தீர்மானித்தார் பெத்ரோ.

அவர் வரும்வரை போர்த்துகீஸ் படையினரை திரும்ப கப்பலுக்கே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போர்த்துகல்  ஆக்கிரமித்து அடக்கி ஆட்சி செய்யும் ஆப்பிரிக்கக் காலனி அங்கோலாவிலிருந்து புறப்பட்டு வந்த அந்தக் கடற்படை திரும்பக் கடலுக்குப் போகச் சொன்னதற்காக கோபித்துக் கொண்டார்கள்.

கையில் கிடைத்த பொருட்களைப் பிடுங்கி அழித்து ஆட்சேபத்தை வெளிப்படுத்தவோ என்னமோ அவர்கள் பார்க்க கடற்கரை மணல் தவிர கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதையும் காணோம்.

இங்கே போகச் சொல்லி இருக்கிறார்கள் எங்களை மாண்புமிகு போர்த்துகீஸ் அரசர் என்று ஒரு பழைய கிழிந்த வரைபடத்தில் அவர்கள் கைசுண்டிக் காட்டியது தில்லியை ஒட்டி விரிந்த பெருமணல் வெளியை. அங்கே கப்பல் ஓட்டிப் போக முடியாது என்று அப்பக்காவின் அரசு அதிகாரிகள் பொறுமையாகச் சொன்னபோது கொஞ்சம் புரிந்து தலையசைத்தார்கள்.

ஆனாலும் திரும்ப கப்பலுக்கு போகமுடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்கள்.  அப்பக்காவின் அதிகாரிகள் அடுத்து செய்வதென்ன என்று அறியாமல் அரசியைப் பணிந்து கைகட்டி நிற்க, விருந்தினராக வந்த போர்த்துகீசியர்களுக்கு உணவும் தண்ணீரும் இந்த ஒரு காலை வேளைக்கு கடற்கரையில் வைத்து தரவும், அவர்கள் அதற்கு அப்புறம் கப்பலுக்கு திரும்பினால் மூன்று நாள் மும்மூன்று ஒன்பது வேளைக்கான ஆகாரமும் தண்ணீரும் போனால் போகிறதென்று கொஞ்சம் சாராயமும் கள்ளும் அவர்களுக்குக் கப்பல் உள்ளே வந்து அன்பளிப்பாகத் தரப்படும் என்றும் அவர்களிடம் தெரிவித்தார்கள் அரசு அதிகாரிகள்.

அதுவும் சரி, முடிந்தால் சாராயத்தை உடனே தந்தருள முடிந்தால் கடப்பாடு உடையவர்கள் ஆவோம் என்று அந்த படையணியின் தலைவர் என்று அறிமுகப்படுத்துக்கொண்ட  பெரைரா அவர்கள் வேண்டியது அப்பக்கா மகாராணியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அவர்கள் போக வேண்டிய துறைமுகம் அதிகத் தொலைவில் இல்லாமல் மேற்குக் கரையோடு வரும் ஜெருஸுப்பா அல்லது ஹொன்னாவர் துறைமுகமாக இருக்கக் கூடும் என்றும் புரியவைக்கப் பட்டது.

கப்பலுக்குப் போனதும்   படைத்தலைவர் என்று சொல்லப்பட்ட பெரைரா உடனே சாராயம், ஆகாரம் வருவதை எதிர்பார்த்திருக்க, படையினரில் பத்து பேர் மட்டும் எப்படியோ கடற்கரையில் இருந்து உள்ளால் நகரத்துக்குள் புகுந்தார்கள். அவர்கள் அப்பக்கா மகாராணியின் அதிகாரிகளால் உடனே பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஒன்பது வேளை ஆகாரம், தண்ணீர், சாராயம் எல்லாம் அன்பளிப்பாக வந்து சேர, நின்று, மண்டியிட்டு, தரையைத் தலையால் தொட்டு, விதவிதமாக நன்றி தெரிவித்து கப்தான் பெரைரா பாய்மரம் ஏற்றி ஒன்றன் பின் ஒன்றாக பத்து சிறுகப்பல்களைச் செலுத்திப் போனபோது, அனுபவம் இல்லாத காரணத்தால் தலை எண்ணாமல் போனார்.

pic Medieval Navy

ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2021 20:44

பெரு நாவல் ‘மிளகு’ – Daily deliberations at day end – analysis of day 3 proceedings

An excerpt from my forthcoming novel MILAGU

எதிரணி போர் நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் பில்கி அரச்ர் திம்மராஜுவும் கலந்து கொண்டதை நேமிநாதனும் வகுளாபரணனும் சிலாகித்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு முக்கியமான பிரச்சனையும் விவாதிக்கப்பட்டது.

வேறுவேறு இடங்கள், சூழலில் இருந்து வரும் எதிரணிப் படையில் ஒற்றுமை அருகி வருவதை தினசரி அறிக்கை சுட்டிக்காட்டியது. முக்கியமாக கேலடி படை வீரர்கள் அணியின் தளவாய் ராஜசேகரனின் அதிகாரத்தை மதிக்காமல் தாந்தோன்றியாகச் செயலபடுவது பலவீனமாகச் சுட்டிக் காட்டப்பட்டது.

கூட்டத்துக்கு நாளை வெங்கடப்ப நாயக்கரும் வருகை புரிவார் என்ற செய்தியில் முக்கியத்துவம் அழுத்தமாக வைத்து வகுளாபரனணன் பேசினான்.

காவலர் அணி ஓய்வு வயதை நெருங்கும் வயதான வீரர்களால் அமைந்தது என்றும் எதிரணி முப்பது வயது அதிக பட்சமாகவும், பதினெட்டு குறைந்த பட்சமாகவும் அமைந்த இளைஞர் படை என்றும் இது குறித்தே வெற்றி நிச்சயம் என்றும் வகுளாபரணனால் நம்பிக்கையோடு சொல்லப்பட்டது.

மூன்றாம் நாள் காலை தாறுமாறாக எந்த ஒழுங்கும் இல்லாமல் யுத்தம் தொடங்கியது. அரசுக்கு எதிரணிப் படையில் கேலடி வெங்கடப்ப நாயக்கர் அடுத்த ஈடாக அனுப்பிய, ஐம்பது அனுபவம் வாய்ந்த வீரர்களும் சேர, எதிரணி பலமும் போர்த் திறமையும் உடனடியாக அதிகரித்தது.

கேலடி படைவீரர்கள் யாருக்கும் அடங்காது, கீழ்ப்படியாது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையில் அரிவாளைச் சுழற்றிக்கொண்டு முன்னேறி ஓடியதைக் கண்டே அரசுக் காவல் படையில் ஒரு பகுதி கலவரமாகி   ஓடியதை எதிரணி ஆச்சரியத்தோடு கவனித்தது. என்றாலும் சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பக் குழுமி போரைத் தொடர்ந்து கேலடி வீரர்களைப் பின்வாங்க வைத்தார்கள்.

அரசு காவல்படைக்கு நல்ல வேளையாக இருநூற்றைம்பது தயார்நிலை இரண்டாம் கட்டப் படையினர் சேர்ந்தது வலிமையை ஏகமாக அதிகரித்திருப்பது பிரத்யட்சமாக்த் தெரிந்தது.

கேலடி படையணியும் பில்கி அணியும் முற்றுகையை இன்னும் சக்தியோடு முன்னெடுத்துச் செல்வதை உடனடியாக தடுத்து நிறுத்த தயார்நிலைப் படை மிகுந்த உழைப்பை ஈந்து போர்த் தந்திரப் பிரயோகத்தையும் நடத்தியது.

என்றாலும் பதினோரு பேர் அரசு காவல் படையிலும், முப்பத்தேழு பேர் எதிரணியிலும் போர் நடவடிக்கைகளின்போது இறந்து போனார்கள். அறுபத்தேழு எதிரணியினரும், இருபத்தெட்டு அரசு காவல் படைவீரர்களும் அரிவாள், கத்தி, குறுவாள் காயங்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள்.

இரவு நடந்த அரசணியின் போர் நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் நாளை போர்த்துகீஸ் வீரர்கள் இருபத்தாறு பேருக்கு முன்கூட்டியே வார ஊதியம் மிளகாகத் தரவேண்டும், அடுத்த வாரம் மற்ற படையினருக்கு ஊதியம் வராகன் நாணயங்களாகத் தரவேண்டும் என்பதும் அதற்கான தொகை கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டால் முக்கிய கட்டிட, சாலை மராமத்து நடவடிக்கைகள் நின்றுபோகும் என்றும் பொருளாதார அறிக்கை சென்னபைரதேவி  மகாராணி  அரசவைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

ஊதியத்தை மிளகாக வழங்க மகாராணி ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று நஞ்சுண்டய்யா உட்பட எல்லா பிரதானிகளும் கருத்து சொன்னார்கள்.

அவசரமான தேவையான ஒரே ஒரு முறைச் செலவு என்பதால் என் முடிவை மன்னித்து விடுங்கள், செலவுகளை சுருக்குவோம். போரில் வெல்வோம் என்றாள் மிளகுராணி. ஏனோ யாரும் ஏற்று வாங்கி அந்த கோஷத்தை எதிரொலிக்கவில்லை.

இன்னும் இரண்டு செய்திகள்.

பைத்யநாத் வைத்தியர் சென்னபைரதேவியின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார்.

எதிரணியின் ஆய்வுக் கூட்டத்தில் ரோகிணி கலந்து கொள்ளவில்லை.

 

pic medieval European war

ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2021 06:21

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.