இரா. முருகன்'s Blog, page 56

February 11, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்

வெளிவர இருக்கும் ‘மிளகு’ பெரு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

 

போதே கார் உள்ளே பின் சீட்டில் இருந்து பரமன் குரல் பெரியதாக்கி மஞ்சுநாத் மஞ்சுநாத் என் குழந்தே மஞ்சுநாத் என்று அங்கே இல்லாத மஞ்சுநாத்தைக் கூப்பிட்டார்.

முன்னால் இருக்கையில் இருந்த திலீப் ராவ்ஜி பின்னால் திரும்பிப் பார்த்து அப்பா என்ன பண்றது உடம்புக்கு என்று கேட்டார்.

ஒண்ணும் இல்லேடா திலீப். நான் இங்கே இருக்கேனா அங்கே இருக்கேனான்னு தெரியலே. அவர் பலமாக முணுமுணுத்தார்.

நீங்க எங்கேயும் இருக்கீங்க. எப்போதும் இருக்கீங்க.

திலீப் ராவ்ஜி ஒரு குறுமுறுவலோடு பதில் சொன்னார்.

புரியலே நீ என்ன சொல்றேன்னே.

அப்பா எழுந்து உட்கார்ந்து கொஞ்சம் தண்ணி தா என்கிறார். ஆண்கள் எல்லோரும் கொஞ்ச தூரம் மலைத் தாவரங்கள் ஊடாக நடந்து   பாதை அருகே கருங்கல் சுவர் எழுப்பியதுபோல் நின்ற இடம் காரிலிருந்தும் வானில் இருந்தும் கண்ணில் படாத ஒன்று.

ஆண்கள்  அற்பசங்கைக்கு ஒதுங்கி வர மருது கல்பாவிடம் காதில் சொன்னான் –

அம்மாவும் நீயும் பகவதியும் போறதுன்னா அங்கே போய்ட்டு வாங்க. கல் பாறைதான் மறைவு. சுத்தமான இடம். லேடீஸ் பிஸ் ஹியர்ன்னு சாக்பீஸாலே புது ஸ்பெல்லிங்லே எழுதி வச்சிருக்கு –

Ladys piss hear!!

கல்பா ஓவென்று சிரித்தாள். தெரிசா என்ன விஷயத்துக்காக சிரிக்கிறார்கள் என்று ஒருமாதிரி ஊகித்திருந்ததால், புன்சிரிப்போடு கல்பாவுடன் நடந்தாள்.

எல்லோரும் வந்து வண்டிகள் புறப்பட்டன. மாலை ஆறு மணி ஆகி வெளிச்சம் சிறு பொதியாக மலைப் பாதையில் இறங்கிக் கொண்டிருந்தது.

ஷராவதி நதி பாதையைத் தொட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது அந்தப் பின்மாலை நேரத்தில் அழகாகத் தெரிந்தது. அந்திக் கருக்கலில் வேறே ஒலியின்றி, சின்னச் சின்ன அலைகளின் சத்தம் அதிகரித்துக் கேட்டது.

காரையும் வேனையும் இங்கே போட்டுட்டு போகலாமா இல்லே பெரிய படகுலே அதையும் ஏத்தி ஆறு கடக்கலாமா என்று டிரைவர் பாலன் கேட்டார்.

இங்கே போட்டா பத்திரமாக இருக்குமா கார் என்று திலீப் வினவினார்.

அதுக்கு கியாரண்டி இல்லே சார்.

எவ்வளவு அடைக்கணும்? பிஷாரடி கேட்டார்.

முதல்லே பெரிய போட் இருக்கான்னு தெரியலே. அக்கரையிலே பெரிசா லைட் எல்லாம் போட்டுத் தெரியுது பாருங்க, அதான். இங்கே வந்துட்டிருக்கு. படகுக்காரங்க ஏதாவது தடை ஆறு மணிக்கு படகு ஓஃபரேட் பண்றதுலே வச்சிருக்காங்களா தெரியலெ.

படகு வரும்வரை காத்திருந்தார்கள் எல்லோரும். படகின் ஸ்ராங்க், என்றால் கேப்டன், உரக்கச் சொன்னார் –

எல்லோரும் உள்ளே வரலாம். பத்து கார் வரைக்கும் படகுலே ஏற்றி ஜாக்கிரதையா கொண்டு போகலாம். ஒரு காருக்கு நூறு ரூபாய் கட்டணம்.

சொல்லி முடித்து விட்டு கையில் வைத்திருந்த நூறு வாட்ஸ் பல்பை படகின் ஓரம் தொங்கவிட்டு சுவிட்சை ஆன் செய்ய கரையெல்லாம் ஒளி வெள்ளம்.

இயற்கை வெளிச்சம் இன்னும் அரைமணி நேரம் இருக்கும். அது அஸ்தமித்ததும் போட்டா போதும் என்றார் திலீப் ராவ்ஜி.

ஆமா, சார், பல்ப் ஃப்யூஸ் இல்லேன்னு செக் பண்ணினேன் என்றபடி நூறு வாட்ஸ் பல்ஃபை அணைத்தான் படகு கேப்டன் ஸ்ராங்க்.

படகில் முதலில் வேனும் தொடர்ந்து காரும் உருண்டு ஏறியது. படகு சைரன் ஊதிக் கிளம்பியது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 11, 2022 06:14

February 10, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – Journey to Gerusoppa in search of the past

An excerpt from my forthcoming novel MILAGU

ஹொன்னாவரில் இருந்து பிற்பகல் நாலு மணிக்குக் கிளம்பியாகி விட்டது.

காடும் மலையுமாகக் குறுகத் தரித்த பாதை. சட்டென்று முகம் காட்டிய சிறு அருவியைத் தொட்டு நனைந்து போகிறது அது.

வலமிருந்து இடமும் இடமிருந்து வலமும் செங்குத்தாகத் திரும்பி உடனே பாறையை எதிர்கொண்டு அடுத்த உடனடி திருப்பத்தை நிகழ்த்தி காரின் சக்கரங்களுக்குக் கடினமான வேலை தரும் பாதை.

எதிரில் வரும் வாகனத்தைப் பிரித்தறிய ஒட்டாமல் சதா பெய்யும் சன்னமான மழையில் கார் கண்ணாடி மேல் நீர்ப் படலம் வைப்பர் கொண்டு அகற்ற அகற்றக் கனமாகக் கவிந்து வருகிறது. நீண்டு மெலிந்த சரளைக் கற்கள் கூர்மையான முனை வானம் பார்க்க அங்கிங்காகக் கிடந்த ஈரமான வீதி.

மழை வலுக்காது, பாதையில் நிலச்சரிவு, கல் புரண்டு அடைப்பு ஏதுமில்லை, கார் போகும் என்று கிளம்பும்போதே ஹொன்னாவரில் தங்கிய விடுதியின் வரவேற்புப் பகுதியில் தெளிவாகச் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.

மழை சாயந்திரம் வலுக்கும் என்று ஏனோ யாரும் சொல்லவில்லை. மாலை ஐந்து மணிக்குப் பாதையில் இருள் படரத் தருணம் பார்த்தபடி இருக்கிறது.

இன்னும் ஒரு மணி நேரம் இந்தக் குறுகிய பாதையில் வண்டி போகவேண்டும். கூடவே கொஞ்ச தூரத்தில் நுரையும் அலையுமாகப் பொங்கிப் பிரவகித்துப் போய்க் கொண்டிருக்கிறது ஷராவதி நதி.

இந்தப் பாதை ஷராவதி நதிக்கரையில் முடியும். அடுத்து படகுகள் ஏறி அங்கிருந்து கெருஸொப்பா. ஏர் கண்டிஷன் வேன் ஒன்று முன்னால் போக, மருது ஓட்டி வந்த பி.எம்.டப்ல்யூ கார் அடக்கத்தோடு வேனைத் தொடர்ந்தது.

திலீப் ராவ்ஜியின் கார் அது. மருதுவுக்கு அருகே காரின் முன் இருக்கையில் திலீப் ராவ்ஜியும் பின்னால் கிட்டத்தட்டப் படுக்கை நிலையில் அவருடைய அப்பா பரமன் என்ற பரமேஸ்வரனும் இருந்தார்கள்.

மருது லண்டன் ஸ்ட்ராண்ட் பகுதியில் நாடக அரங்குகள் பற்றி சுவாரசியமாகப் பேசியபடியே கார் ஓட்டிக் கொண்டிருந்தான். முன்னால் போன வேன் ஒரு நொடி நின்று வலது பக்கம் சற்றே வளைய மருது அவசரமாக பிரேக் அழுத்தி வண்டி அதிர்ந்து குலுங்கிச் சமனப்பட வைத்துத் தொடர்ந்து ஒட்டிப் போய் ஓரமாக நிறுத்தினான்.

முன்னால் போன வேனும் ஓரம் கட்டி நின்றது. என்ன பாலன் நாயர், திடீர்னு ரைட் எடுத்திட்டீங்க. நான் தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டறேனான்னு டெஸ்ட் பண்ணவா என்று சிரித்தபடி கேட்டான் மருது.

பாலன் என்ற அந்த வேன் டிரைவரும் சிரித்தபடி மருது சார், திடீர்னு ரெண்டு விஐபி ரோடைக் கடந்து போனாங்க. நீங்க பார்க்கலியா என்றார்.

மருது பதில் சொல்லாமல் பார்த்திருக்க, பாலன் சொன்னார் –

நல்ல பாம்பு ரெண்டு, புருஷன் பெண்டாட்டியாக இருக்கும், நம்ம பாதையிலே வந்துட்டாங்க. ரொம்ப சுவாரசியமா நடந்துட்டிருக்காங்க போலே இருக்கு. நாமதான் வண்டியை பாதையிலே இருந்து விலக்கிப் போகணும். அடிச்சு உசிருக்கு ஆபத்து ஆச்சுன்னா ராத்திரி கனவிலே வந்துடுவாங்க.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 10, 2022 05:50

February 9, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – அனந்தம் அக்ஞாதம் அவர்ணனீயம் – Multiverse et al

An excerpt from my novel MILAGU

அனந்தம் அக்ஞாதம் அவர்ணநீயம்

ஈலோக கோளம் திரியுன்ன மார்க்கம்

அதின்கலெங்காந்து ஓரிடத்திருந்நு

நோக்குன்ன மர்தயன் கதயெந்தறிஞ்சு   (நாளப்பாட்டு நாராயண மேனோன்)

ராத்திரியில் கேட்கும் கவிதை இது. நகர்ந்தபடி சொல்லப்பட்ட கவிதை.

வேம்பநாட்டுக் காயலில் இரவு நேரத்தில் அந்த மோட்டார் படகு நிதானமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. பிஷாரடி வைத்தியர் என்ற எழுபது வயதான பேராசிரியரும். அவருக்கு அடுத்ததற்கு அடுத்த தலைமுறை இளையோரான கல்பா, மருது, பகவதிக்குட்டி ஆகியோரும், திலீப் ராவ்ஜி, சாரதா தெரசா என்ற இரண்டு அறுபதுக்காரர்களும் சென்று கொண்டிருக்கும் ராத்திரிப் படகு யாத்திரை.

ராத்திரி படகு யாத்திரை என்றால் எனக்கு ராப்பாடி நினைவு வருது. ஒன்றைக்கூடக் காணோமே என்றாள் கல்பா.

ராப்பாடி என்றால்? பகவதிக்குட்டி கேட்டாள். ராப்பாடி என்றால் nocturnal singing bird என்றான் மருது. ராத்திரியில் பறந்து இரைதேடும், பாடும் பறவை.  மருது அடுத்துக் கூறினான்.

எனக்கு குமாரன் ஆசான் நினைவு வருகிறார் என்றார் பிஷாரடி. கவிதையா என்று கேட்டாள் கல்பா.

பிஷாரடி சொன்னார் –

பௌர்ணமிக்கு முந்திய ராத்திரி  காயலில் போகும் நேரத்தில் கவிதையும் இருந்தால் இன்னும் நன்றாகவே இருக்கும் தான். குமாரன் ஆசான் கவிதை நினைவு வருதோ என்னமோ, ராத்திரி இப்படி படகேறி பல்லண நதிப் பயணமாக ஆலப்புழை போகும்போது படகு கவிழ்ந்து மகாகவி குமாரன் ஆசான் இறந்தது நினைவு வருகிறது.

பிஷாரடிதான் இந்த ராத்திரிப் படகுப் பயணத்தை ஏற்பாடு செய்தவர்.  கல்பாவின் சகோதரன் அனந்தனும் வரலாம் என்று சொல்லியிருந்தார். அனந்தனால் வரமுடியாமல் போய்விட்டது.

கல்பாவின் தந்தை திலீப் ராவ்ஜியும், மருதுவின் அம்மா சாரதா தெரிசாவும் நாங்களும் வருவோம் என்றார்கள். வேண்டாம் என்று தவிர்க்கப் பார்த்தார் பிஷாரடி. வருவேன் என்று ஒரே பிடிவாதம். சரி வாங்க.

பகவதிக்குட்டியின் அப்பா (மருதுவின் தந்தையும் கூட) சின்ன சங்கரன் ‘போட் யாத்திரை ஒழிவாக்கணும் அபகடம் பற்றும்’ என்று எந்தக் காலத்திலோ பகவதிப் பாட்டியிடம் கற்ற மலையாளத்தில் ஜாக்கிரதையாக வார்த்தை கோர்த்துச் சொன்னார்.  அவர் வரவில்லை

நாளப்பாடு நாராயண மேனோன் கவிதையை அதைப் படிப்பதற்கே உரிய பாட்டுக்கும் பேச்சுக்கும் இடைப்பட்ட குரல் எடுத்துச் சொன்னார் அவர் – அனந்தம் அக்ஞாதம் அவர்ணநீயம்.

கவி சொன்னது பூமி என்ற இந்தச் சிறு கிரகத்தின் இயற்கை பற்றி.

பிஷாரடி தொடர்ந்தார் –

சூரியனைச்  சார்ந்து சுழலும் பத்து கிரகங்களில் ஒன்றான பூமியில் இருக்கும் நாம், நம் பூமி, பூமி அடங்கிய சூரிய மண்டலம் Solar System, சூரிய மண்டலம் இடம் பெற்ற பால்வீதி என்ற விண்மீன் மண்டலம் Milky Way Galaxy, இன்னும் பலப்பல விண்மீன் மண்டலங்கள்.

அத்தனையும், எல்லாமும், எப்போதும்  இடம் பெற்ற பிரபஞ்சம் Universe.

இந்தப் பிரபஞ்சத்தின் தூசிக்குத் தூசியான தூசிக்குத் தூசியான உயிர்கள் நாம்.

இந்தப் பிரபஞ்சம் போல் இன்னும் எத்தனை பிரபஞ்சம் விண்வெளியில் உண்டோ அதிலெல்லாம் எத்தனை எத்தனை சூரிய மண்டலமோ, அந்தச் சூரிய மண்டலங்களில் எவ்வளவு பூமிக் கிரகமோ, அவற்றில் நம்மின் பிரதிகளாக எத்தனை நானோ, நீங்களோ.

அவர்கள் நம்மின் பிரதிகளா, நாம் அவர்களின் பிரதிகளா? எவற்றின் பிரதிகள் நாம்?

இந்தப் பால்வீதிப் பிரபஞ்சத்தில் நாம், நாம் என்றால் பிஷாரடியான நானும், மருது, கல்பா, கொச்சு பகவதி, திலீப் ராவ்ஜி, தெரசாம்மா ஆகிய நீங்களும் இப்போது, இந்தப் பௌர்ணமி இரவில் வேம்பநாட்டுக் காயலில் படகில் போய்க் கொண்டிருக்கிற இதே நேரத்தில் வேறு வேறு பிரபஞ்சங்களில் நம்மின் பிரதிகள் படகோட்டிக் கொண்டிருப்பார்கள் அல்லது சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள் அல்லது இன்பம் துய்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது காதைக் குடைந்து கொண்டிருப்பார்கள் அல்லது வேறேதாவது செய்து கொண்டு உயிர்த்திருப்பார்கள். அல்லது பிறக்கக் காத்திருப்பார்கள். அல்லது ஆடி முடித்து அடங்கி ஒன்றுமில்லாமல் போயிருப்பார்கள்.

இதே நேரம் என்று சொன்னேனா, காலமும் கன பரிமாணம் போல் ஒரு பரிமாணமாக, நான்காவது பரிமாணமாகத் திகழ்வது.

இன்றைய நாம், நேற்றைய இன்னொரு பிரபஞ்சத்து இன்னும் பல நாம், நாம் இல்லாத ஐநூறு வருடம் முந்திய பௌதீக வெளி என்று எல்லாமே, எல்லாரும், எப்போதும் வேறுபாடுகளோடு இந்தக் கணத்தில் உறைந்திருக்கலாம்.

பூமியின் குழந்தைகளான நாம் இந்த மாற்று பிரபஞ்சங்களை (alternative universe)   பலவான பிரபஞ்சங்களாக (multiple universes – multiverse) உணர்ந்ததுண்டோ! அவற்றின் இருப்பு சாத்தியமா என்று கூட அறியாமல், ஒரு ஓரத்தில் அறிவியல் ஆய்வு, மற்ற ஓரத்தில் புனைகதையில் கற்பனைச் சித்தரிப்பு என்று அம்பலப்புழை பால் பாயசத்தோடும், மில்க் சாக்லெட்டோடும் கலந்துகட்டியாகச் சுவைத்துக் கொண்டிருக்கிறோம்.

மாற்று பிரபஞ்சங்கள், கணிதமொழியில் சொன்னால் ten to the power of ten to the power of sixteen எண்ணிக்கையில் இருக்கிறதாம்.

கிட்டத்தட்ட கணக்கற்றவை. அநந்தம்.

வேறு யாரோ எதுவோ, நம் பிரபஞ்சத்திலோ வேறேந்தப் பிரபஞ்சத்திலோ, நம்மில் சிலரை, அவர்களின் பிற பிரபஞ்சப் பிரதிகளை, நான்காவதான கால வெளியில்,  முன்னும் பின்னும் அசைத்து இயக்கி, என்ன ஆகிறதென்று பார்க்கிறார்கள். அதுதான் இப்பொழுது நடக்கிறது.

முக்கியமாக கல்பா மற்றும் அனந்தனின் தாத்தாவான பரமன் என்ற பரமேஸ்வர அய்யரை இப்படிக் காலவெளியில் இயக்குகிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2022 18:36

February 8, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – And the Pepper Queen bids farewell as the night is young

An excerpt from my forthcoming novel MILAGU

சென்னாவுக்கு அரசவை வரவேற்பு அளித்தபோது மாலை ஆறு மணிக்குக் கூட்டம் முடித்துத் திரும்ப பல பிரதானிகள் மும்முரமாக இருந்தார்கள்.

சிறுத்தைப் புலி நடமாடும் ராத்திரியாம். ஊருக்குள் சிறுத்தை வருமோ. சென்னா கேள்விக்கு ஒரே பதில் வந்தது. அவர்கள் ஓரிருவரைத் தவிர கெருஸொப்பாவில் வசிக்கவில்லை. ஹொன்னாவரில் வீடும் மாளிகையுமாக இருப்பவர்கள். ஒருவர் கோகர்ணத்திலிருந்து வந்தவர்.

இத்தனை பேர் ஹொன்னாவரில் இருந்து கெருஸொப்பாவை நிர்வகிக்க முயற்சி செய்வதை விட, சென்னாவுக்கு யோசனை தோன்றியது கெருஸொப்பாவின் அரசவை ஹொன்னாவருக்கு வேண்டாம், அப்பாவுக்குப் பிடித்த அகநாசினிக் கரையில் அமைத்தால் என்ன?

அரண்மனையும் அரச மாளிகையும் அமைக்கலாம். குதிரை லாயமும், தெப்பக்குளமும், உத்தியோகஸ்தர்களின் இல்லங்களும் அமைக்கலாம். இதெல்லாம் பாதுகாப்பாக ஒரு கோட்டை எழுப்பி உள்ளே இருக்கட்டுமே.

அப்படித்தான் ஹொன்னாவருக்கு இடப் பெயர்ச்சி, அதன் பக்கத்தில் அகநாசினிக் கரையில் கோட்டை கட்டி அங்கே குடிபுகுதலாக கனவு மெய்ப்படலானது. வரைபடத்தோடு கட்டடக் கலைஞர்கள் வந்தபோது பௌர்ணமிக்கு முந்திய ஏறக்குறைய முழு நிலவு தினத்தில் அவர்களோடு கட்டமைப்பை விவாதித்துக் கொண்டிருந்தாள் சென்னா.

காலருகே ஏதோ சில்லென்று தொட்டுப் போக, ஓரமாக எரிந்து கொண்டிருந்த தீவட்டியைக் கவிழ்த்துப் பார்க்க, அங்கே ஒரு நல்ல பாம்பு  படம் எடுத்திருந்தது. எல்லோரும் விலகிப் போங்கள் என்று கட்டளை இட்டாள் சென்னா.

பாம்பைப் பேச்சில் சுமந்து போகும்போது மறுபடி காலில் சிலிர்ப்பு. இன்னொரு பாம்பு. அகநாசினிப் பெருக்குக்குச் சற்று மேற்கே கொஞ்சம் நீரிலும் மிகுதி நிலத்திலுமாக அமைத்த கல்லும் களிமண்ணும் சேர்த்து கைதேர்ந்த சிற்பிகள் வனைந்த கோட்டை போலத் தோன்றும் பரந்து விரிந்த பாம்புப் புற்று.

இப்படி இருக்கணும் நாம் அமைக்கப்போகும் கோட்டை. பாம்புகள் புற்றில் மறைய அவற்றுக்கு தொல்லை இல்லாமல் கோட்டை உருவானது. நதிப் பெருக்கைச் சற்றே திசை திருப்பி பாம்புப் புற்று நதிநீரில் நனையவே வேண்டாமல் வைத்து அருகே ஆலமரமும் புற்றோடு ஒட்டி வந்தபோது சென்னா தன் கோட்டையில் குடிபுகுந்திருந்தாள். மிர்ஜான் கோட்டை என்று பெயரும் அந்த நேர்த்தியான கோட்டைக்குக் கொடுத்திருந்தாள் அவள்.

குடிபுகுந்த திதியும் அதன் வருடாந்திர கொண்டாட்டமும் ஒவ்வொரு ஆண்டும் நிலவு பௌர்ணமிக்கு அருகே செல்லும்போது கொண்டாடப்படும் என்று அறிவித்ததோடு ஒரு வருடாந்திர நினைவுகூடத் தவறாமல் கோலாகலமாகக் கொண்டாடி வந்தாள் சென்னாவும்

அரசவை, நாடு ஆதரிக்க, போன வருடம் முழுப் பௌர்ணமி நேரத்தில் இந்தக் கொண்டாட்டம் வந்தபோது சென்னாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

முழுநிலவு அடுத்து கொஞ்சம் ஒளியும், மேல்பரப்பும் உதிர்த்து உதிர்த்து அமாவாசையன்று நிலவில்லா வானத்தில் கொண்டு போய் நிறுத்தும் நிலை அவளுக்குப் பொறுக்க முடியாமல் ஏனோ போனது.

முழுநிலவு கொண்டாட்டத்துக்கு அப்புறம் கோட்டை தினமும் இரவும் இல்லாமல் போனது.

கெலடி நகர அரண்மனைக் கைதிக்கு கோட்டையும் கொத்தளமும் ஏது? சோற்றுத் தட்டும், நீருக்குக் குவளையும் கல் படுக்கையில் காடாத் துணி விரித்து வராத உறக்கத்தைப் புரண்டு வரவழைக்க முயற்சியும் ஜன்னல் வழியே நிலவு சாட்சி இருக்க இதோ போய்க் கொண்டிருக்கிறது.

கோட்டை அமைத்துக் குடியேறியபோது உள்ளே பாம்புகளும் தேளும் ஆயிரம் கால் உடைத்த பூரான்களும் எலிகளும் உள்ளே நுழையாமல் இருக்க, வெளிக்கோட்டைச் சுவருக்கு அடுத்து உள்சுவர் அதேபடி உருவாக்கி நிறுத்தி நடுவில் சிறு அகழியில் கல்லும் மண்ணும் கனத்த பாறையுமாகத் தடுப்பு உண்டாக்கிய வடிவமைப்பைப் பாம்புப் புற்றில் இருந்து தான் கற்றாள் சென்னா.

கெருஸொப்பா அரசு மாளிகையில் இருந்து மிர்ஜான் கோட்டையில் குடிபுகத் தேவையான தளவாடங்களோடு புறப்பட்டதும் ஒரு அபூர்ண நிலவு நாளில் தான்.

பகல் முழுவதும் அந்த ஆண்டு விளைந்த மிளகுக்கு விலை நிர்ணயம் செய்யும் அமர்வில் இருந்து நிர்ணயித்து மாலை ஆறு மணிக்கு மிர்ஜான் போவதற்கு முன் தோன்றியது சென்னாவுக்கு –

ஏன் கெருஸொப்பாவில் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மிர்ஜான் போக வேண்டும்? அங்கே ஒரு இல்லம் இங்கே ஒரு மாளிகை என்று இரண்டும் இருக்கட்டுமே என்று தோன்ற அத்தியாவசியமான உடுப்புகளும் மருந்துகளுமாக மிர்ஜான் புறப்பட்டாள் சென்னா.

கெருஸொப்பா அரச மாளிகை தோட்டத்தில் எட்டிப் பார்த்து விட்டு கோச் ஏற நினைத்தாள் சென்னா. ஏனென்று தெரியாது வேறு யாருக்கும்.

அவளுக்கு மட்டும் மனதில் இன்னும் பசுமையாக இருந்தது வரதன் அன்பு செலுத்தி, வருகிறேன் என்று சொல்லி வராமல் போன நினைவு அது. வரதன்.

பதினைந்து வயதில் கெருஸொப்பா அரண்மனை வளாகத்தில் போர்த்துகீஸ் மொழியும் இங்க்லீஷும்  சொல்லித்தர வந்த தமிழன் வரதன் பற்றிய நினைவுகள்.  இருபத்தைந்து வயதும்   ஆறடிக்கு மேலும் அரையடி உயரமுமானவன்.

சென்னா ஒரு மகாராணி என்று வகுப்பு எடுக்கும் முன்பும், வகுப்பு முடிந்த அப்புறமும் எல்லா மரியாதையும் செலுத்துவான் வரதன். வகுப்பு ஆரம்பித்து விட்டாலோ?

நினைவுகளின் ஒழுங்கு குலைந்த ஊர்வலம்.

“சென்னா, இன்னொரு தடவை கொட்டாவி விட்டால் அரண்மனைத் தோட்டத்தை இரண்டு தடவை காலில் செருப்பில்லாமல் சுற்றி ஓடிவர வேண்டியிருக்கும்” கண்டிப்பான ஆசிரியனாக வரதன் சொல்லும் நினைவுகள்.

வகுப்பு நடக்கிறது. சென்னா வரதனை விழுங்கிவிடுவது போல் பார்த்தபடி இருக்க, வரதன் பார்வை நொடிக்கொரு தடவை அவளுடைய கருவண்டுக் கண்களைச் சந்திக்கின்றன. மீளமுடியாமல் துடிக்கின்றன. இனிய நினைவுகள் அவை. மிக இனியவை.

நினைவுகள் ஓடின.

வகுப்பைக் கவனிக்காமல் நேரம் கடத்துகிறேனா? சரி ஆசிரியரின் தண்டனை நேரம் இது. தோட்டத்தைச் சுற்றி ஓடி வருகிறேன்.

சிட்டுக்குருவியாக ஓடிய நினைவுகள்.

பத்து நிமிடம் பத்து யுகமாக வரதனுக்கு நகர்ந்திருக்கும். என்ன ஆனது சென்னாவுக்கு? மகாராணி எங்கே? நடுநடுங்கி வெறும் உபாத்தியாயன் வரதன் தோட்டத்துக்கு இட்டுச் செல்லும் ஒழுங்கையில் நடக்கத் தொடங்குகிறான் சென்னாவைத் தேடி. மாலை மயங்கிவரப் பாதை இருண்டு வருகிறது. ஒரு திருப்பத்தில் வரதன் மேல் பூக்குவியல் ஒன்று விழுகிறது. அவனை இறுக அணைக்கும் கரங்கள் சென்னாவின் பூங்கரங்கள்.

அவனைத் தரைக்கு இழுக்கும் வலிமை வாய்ந்த கரங்கள் அவை. வரதன் தன்னை இழக்கிறான். சென்னாவின் செவ்விதழ்களில் முத்தமிட்டுப் பற்றிக்கொள்கிறான். கைகள் ஊர்கின்றன. நிலைக்கின்றன. மறுபடி ஊர்கின்றன.

யாரோ கோல்விளக்கோடு தொலைவில் கதவு திறந்து வருகிறார்கள். சென்னா விலகிக் கொள்கிறாள். கற்றுத்தந்த மாணவி முன்னே நடக்க, கற்ற உபாத்தியாயன் தொடர்கிறான்.

ஒருவரை ஒருவர் துரத்தி யார் எங்கே என்றே தெரியாது நினைவுகளின் ஊர்வலம் நின்று விட்டது.

வரதன் மதுரை யுத்தத்துக்குப் போகாமல் இருந்தால்? கல்யாணம். குழந்தை பிறப்பு. பிள்ளை வளர்த்தல். மகனுக்குத் திருமணம். மகளுக்குத் திருமணம். பேரக் குழந்தை பிறப்பு. ஓய்வு கொள் சென்னா.

அதெல்லாம் அவளுக்கு விதிக்கப்பட்டதில்லை. மிளகுராணியாகப் பட்டம் சூடப் போகிறாள். எல்லாத் துயரமும் பொறுத்து நல்லாட்சி தருவாள் மாநிலத்துக்கு. அதற்காகப் படைக்கப்பட்டவள்.

சென்னா தோட்டத்தில் இருந்து மாஞ்செடி ஒன்றைப் பத்திரமாக எடுத்துக்கொண்டு தளர்ந்து நடந்து வருகிறாள்.

மிர்ஜான் கோட்டையில் பதியனிட வேண்டும். அன்பையும், நினைவையும் மகிழ்ச்சியையும் தான் பதியனிட முடியாது. அபூர்ண நிலவு வந்த இரவில் நெடுநேரம் சிறுத்தை நடமாடும் சாலையில் சென்னாவும் காவலர்களும் மிர்ஜான் நோக்கிப் போன நினைவுகள்.

விடிகாலையில் அவள் மிர்ஜான் கோட்டையில் பிரவேசித்தபோது கெருஸொப்பா மகாராணியாக மட்டும் இருந்தாள் சென்னா.

நினைவுகளின் ஊர்வலம் அடுத்த பாதைக்கு நீண்டு நடக்கிறது

உத்தரகன்னடப் பெருநிலத்தில் கெருஸொப்பா நகரப் பிரதேசம் ஆளும் சாளுவ வம்ச மகாராணி   சென்னபைராதேவிக்கு தங்களுக்குள் பிரியத்தோடு மிளகு ராணி பட்டம் அளித்து அழகு பார்க்கிற பரங்கியர்கள் நினைவு வருகிறார்கள்.

இங்கே மிளகும் லவங்கமும் ஏலமும் வாங்க வந்து கொண்டிருக்கும்  அவர்களுடைய மாபெரும் வணிகம் சென்னா இல்லாமல் ஒரே நாளில் ஓய்ந்து போய் நின்று விடும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

அறுபதை எட்டிய சென்னா    முகத்தைச் சுவரை நோக்கித் திருப்பிக் கொள்ள நினைவுப் பிரவாகம் கரை புரண்டு போகிறது.

அறுபதாம் வயதின் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக தலை சுற்றலும், நாவில் கசப்புப் படுதலும், சதா தொல்லை கொடுக்கும் மலச்சிக்கலும் அதன் காரணமாக வயிற்றில் வாயு பூரித்து வீர்த்திருப்பதுமான நினைவுகள்.  மாதவிலக்கு  மனமும் உடம்பும் சார்ந்த கடுமையாக பிரச்சனையாகத் துன்பம் நினைவு வருகிறது.

இன்னும் எத்தனை காலம் இந்தத் துன்பத்தோடு இங்கே சிறகு முறிந்து கிடக்க வேண்டும்?  மனதில் வணங்கிக் கேட்டாள் சென்னா. ஆதிநாதரில் தொடங்கி, மஹாவீரர் வரையான இருபத்து நான்கு சமணத் தீர்த்தங்கரர்கள் வரிசையை மனதில் உருப்போடத் தொடங்கினாள்.

படுக்கை ஓரத்தில் வெறுந்தரையில் கண்மூடி அமர்ந்தபடி. ஒவ்வொரு தீர்த்தங்கராக மனதில் அழைத்து அவர்களின் திவ்ய ரூபத்தை அகக்கண் குளிரப் பார்த்து மனதால் வணங்கி இருக்க, நினைவுகள் ஓய்ந்தன. மகிழ்ச்சியில்லை. துக்கமில்லை. துன்பமில்லை. இன்பமில்லை.

ஓம் நமோ அரிஹண்டானம்

ஓம் நமோ சித்தானம்

ஓம் நமோ  யரியானம்

ஓம் நமோ உவாஜ்ஜயானம்

நவ்கார் மஹாமந்திரத்தை வெற்று மனம் சொன்னது.  சென்னபைராதேவி மிளகுராணியின் கண்கள் மெல்ல மூட, உதட்டில் ஒரு புன்னகை. அவள் இல்லாமல் போயிருந்தாள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2022 17:47

February 7, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – Pepper Queen walks down the memory lane on the banks of river Sharawati, off Mirjan fort

An excerpt from my forthcoming novel MILAGU

போன மாதம் உள்ளாலில் இருந்து  சென்னபைராதேவியின் சிநேகிதி அப்பக்கா மகாராணி பத்தே பத்து நிமிடம் வந்து சந்தித்து விட்டுப் போனாள். வெங்கட லெட்சுமணனும் வகுளாபரணும் அப்பக்காவோடு வந்து அவளுக்கு மரியாதை செலுத்தி ஏதோ வினோதப் பிராணியைப் பார்க்க வந்ததுபோல் சென்னாவைப் பார்த்துத் திரும்பினார்கள்.

நீ நல்லா இருக்கியா, ஊர்லே மழை பெய்யுதா, நான் நல்லா இருக்கேன், காலையிலே இட்டலி சாப்பிட்டேன் என்று மிகப் பொதுவான வார்த்தைகளோடு அந்த உரையாடல் உப்புசப்பின்றி நடந்தேறியது. அப்பக்காவிடம் சொல்லணும் என்று நினைத்து வேண்டாம் என்று சென்னா ஒதுக்கிய ஒன்று உண்டு.

விழித்துக் கொண்டிரு அப்பக்காளே. நான் நல்ல பெயரை வாங்க முயற்சி செய்தேன். இங்கே போட்டு விட்டார்கள். உனக்கு அடுத்த வீடு அவசரமாகக் கட்டி விடுவார்கள். அல்லது என்னைத் தொலைத்துத் தலைமுழுகி விட்டு இந்த இடத்தில் உன்னைப் பிடித்துப் போட்டு விடுவார்கள். அணிலுக்குச் சோறு எடுத்து வைத்துக் கொண்டு நீயும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க வேணும்.

அப்பக்கா புறப்படும்போது  அவள் கண்ணில் துளிர்த்த கண்ணீர் நிஜம். சென்னாவின் கையைப் பிடித்துக்கொண்டு சென்னா சென்னா சென்னா என்றும் அபி அபி அபி என்றும் பெயரை மட்டும் அன்பு பொங்க உச்சரித்தபடி நின்றபோது வகுளாபரணன் தலை குனிந்து இருந்தான்.

ஒரு நல்ல அரசை, பெண் அதுவும் வயதான பெண் தொடர்ந்து ஐம்பத்துநான்கு வருடமாக ஆள்வது பொறுக்காமல் கலைத்து, தேவதைகள் இருந்த இடத்தில் குரங்குகள் குடியேற அவனும் கை கொடுத்திருக்கிறான். அவன் ஒரு நாள் இதைப் புரிந்துகொள்வான்.

வகுளாபரணன் புரிந்து கொண்டால் சென்னாவுக்கு என்ன, அவன் புரிந்து கொள்ளாவிட்டால் தான் என்ன?

ஜன்னல் வழியே பௌர்ணமிக்கு முந்தைய இரவுச் சந்திரன் அழகாக ஒளிர்ந்து குளிர் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆயிரம் பிறை கண்ட அன்னையா சென்னா?

கோகர்ணத்துக்கு வந்து வழிபட்டு மிர்ஜானுக்கு வந்த மராத்தியப் பேரூர் பண்டரிபுரத்து விட்டல பக்தரான மராட்டி பேஷ்வாவும் அவருடைய அழகான மனைவியும் குழந்தைகளும்  சென்னபைராதேவி பற்றி மிர்ஜான் கோட்டை கட்டிய தொழில் வினைஞர் கூறியது கேட்டு அவளைச் சந்தித்துப் போக வந்தது நேற்றுப்போல் நினைவு வருகிறது. முப்பது ஆண்டுக்கு முந்திய அந்தச் சந்திரனும் பூரணத்துக்கு இரண்டு நாள் முந்தைய சந்திரன் தான்.

சென்னபைராதேவி ஜன்னல் பக்கம் போனாள். மேகம் ஒரு பொதியாகச் சந்திரனை மறைக்கத் திரண்டு கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது.

பூரண சந்திரனுக்கு முந்திய அர்த்த பூரண நிலா சென்னா வாழ்க்கையில் எத்தனை தடவை வந்து போயிருக்கிறது. ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடி நின்று நிலவை வெறித்தாள் சென்னா.

அப்பா இறக்கும்போது அவளுக்குப் பதினைந்து வயதுதான். அவருக்கு வாரிசு என்று வேறு மகனோ மகளோ இல்லாததால் சென்னாவுக்கு ஆட்சியைக் கைமாற்றிக் கொடுத்தது மேல்நிர்வாகம் செய்திருக்கும் விஜயநகரப் பேரரசு. அப்போது செயலாக இருந்த பேரரசு அது.

அப்பா இருந்தவரை கெருஸொப்பாவில் அரச மாளிகையில் தான் எலிகளோடும், பூனைகளோடும், கரப்பான் பூச்சிகளோடும் வசித்து வரவேண்டி இருந்தது.

மிளகு சாம்ராஜ்ஜியம் குறுகலான வீடும் வாசலில் குப்பையுமாக இருந்ததை மிளகு வாங்க வந்த போர்த்துகீசியரும். ஒலாந்தினரும், என்றால், டச்சுக்காரர்களும் வாசலிலேயே நின்று வியாபாரம் பேச வேண்டிப் போனது.

சென்னாவுக்கு அந்த வீடு மட்டுமில்லை, கெருஸொப்பாவே பிடிக்கவில்லை. அப்பா காலமாகும் முன் ஹொன்னாவருக்கு ஒரு தடவை போயிருந்தபோது சென்னாவையும் கூட்டிப் போனார்.

இரவு நேரத்தில் சந்திர ஒளியில் ஹொன்னாவரை ஒட்டி   ஆற்றங்கரையில் நடக்கும்போது வேறு உலகம் மாதிரித் தெரிந்தது வெளி.

இந்த வெளியில் கூடாரம் அமைத்து நிலவுகாய வேண்டும் மகிழ்ச்சியைச் சொல்லும் நிலவு சோகம் கூறும் சந்திரன் கூட வந்த குளிர்காற்று என்று கவிதை மனதில் நெய்தபடி உறங்க வேண்டும்.

அப்பா சொன்னார். அவர் ஒரு காலத்தில் பெரிய கொங்கணிக் கவிஞராக இருந்தவர். அம்மா இறந்தபிறகு கவிதை அவரிடமிருந்து விடைபெற்றுப் போனது.

அப்பா ஷெராவதியின் கிளைநதி அகநாசினிக் கரை உங்கள் கவிதைகளை மீட்டெடுத்து விட்டது போலிருக்கிறதே என்று சென்னா அப்பாவைக் கேட்டபடி உட்கார்ந்திருந்த இடத்தில் சத்தம் குறைவாகச் சலசலத்து ஓடும் நதி அந்த நிலப்பரப்பை முழுக்க ஒட்டி நடந்து போனது.

அப்பா சொன்னார் சென்னா நீ ஏன் கவிதை எழுத முயற்சி செய்யக்கூடாது?

எனக்கு கணக்கு வருமளவுக்கு கவிதை வரமாட்டேன் என்கிறது அப்பா.

அப்பா சிரித்தார். கணக்கும் வேண்டியதுதான் வாழ்க்கைக்கு. கவிதை வேண்டும் ஆத்மாவுக்கு. எனக்கு ஒரு ஆசை. நான் இறப்பதற்குள் நம் ஆட்சியமைப்பை இந்த அகநாசினிக் கரைக்கு மாற்றிப் பார்க்க வேண்டும்.

அவர் சொல்லிய அந்த ராத்திரிக்கு மூன்று மாதம் சென்று இறந்து பட்டார் ஒரு நிலவு ஒளிர்ந்த ராத்திரியில்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2022 18:33

February 6, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – As the Gerusoppe political weather turns turbulent, quite flows still The Sherawati

An excerpt from my forthcoming novel MILAGU

சென்னபைராதேவி அணிலுக்காகக் காத்திருந்தாள்.

ராத்திரியில் வரும் அணில் அது. சென்னோவோடு தான் இங்கே எங்கேயோ தங்கி இருக்கிறது.

இந்த அணிலோடு அதன் பெண்டாட்டி ஒரு பெண் அணில் உண்டு. பொழுது சாய்ந்த பிறகு வெளியே வராது அது. சதா கர்ப்பத்தில் வயிறு புடைத்து ஊர்ந்து கொண்டிருக்கும் பெண் அணில் பிரசவித்துக் கொஞ்ச நாள் குழந்தை அணில்கள் ஒன்றிரண்டு அப்பா அணிலோடு கூடவே வால் பிடித்துப் போகும். அவையும் ராத்திரியில் காட்சி கொடுக்க மாட்டாதவை.

குஞ்சு அணில்கள் ஏதோ பேசி வைத்துக் கொண்ட மாதிரி திடீரென்று ஒருநாள் காணாமல் போய்விடும். அப்புறம் எப்போதாவது வாசலில் வாதுமை மரத்தில் நீண்டு வளைந்த கிளையில் குந்தி இருந்தபடி, பெரிய மனுஷ, பெரிய அணில்தனமாக, சௌக்கியமா என்று விசாரித்து விட்டு அவசர அவசரமாக ஓடும்.

இப்படி இதுவரை ஆறு முறை கர்ப்பம், பிரசவம், வீடு விட்டு நீங்குதல். ஒரு கர்ப்பத்துக்கும் அடுத்ததற்கும் இடையில் மூன்று மாதம் கிட்டத்தட்ட இடைவெளி இருப்பதை  சென்னபைராதேவி கவனித்திருக்கிறாள். ஆக பதினெட்டு மாதங்கள், ஒண்ணரை வருடங்களாகி விட்டது சென்னா இங்கே வந்து.

ஆண் அணில் ராத்திரியில் வரும்போது இப்போது தடுமாறுகிறது. சுவரில் மோதிக் கொள்கிறது சமயா சமயங்களில். கண் பார்வை சரியில்லை. வயதாகிக் கொண்டிருக்கிறது.

என்றாலும் ராத்திரியில்  சென்னபைராதேவி உண்ணக் கொண்டு வந்த தோசைகளில் ஒரு முழு தோசையை தட்டில் வைத்து இருப்பிடத்துக்குப் பின்னால் ஜன்னல் மேடையில் வைத்து விடுகிறாள் சென்னா. அணில் ஜோடிக்கு அது எதேஷ்டம்.

இட்டலியும் தோசையும் தவிர அணில்கள் ராத்திரி வேறு ஏதும் ஆகாரம் கழிப்பதில்லை என்பதால் சென்னாவும் ராப்போஜனமாக இந்த இரண்டு பலகாரங்களில் ஒன்றைத்தான் உண்ணுகிறாள்.

பகலுக்கு அரிசிச் சாதம் புளிக்குழம்போ மிளகுக் கூட்டோ சேர்த்து உண்பதில் பிரியமுண்டு அணிலுக்கு என்பதால் பகல் உணவை அதே ரீதியில் அமைத்துக் கொண்டிருக்கிறாள் சென்னா.

சில நாட்களில் ஜோடி சாப்பிடாமல் பட்டினி கிடக்கும். அப்போது வரக் காணாமல் பகலிலும் ராத்திரியிலும் சென்னா துடித்துப் போவாள்.

இன்றைக்கு ராத்திரி ஒன்பது மணிக்குத்தான் வந்து விட்டுப் போனது அணில். நேரம்  சென்னபைராதேவிக்குத் தெரியாது. சாப்பாடு எடுத்து வருகிறவர்கள் சொன்னால் தான் உண்டு. அதுவும் சரியான நேரமா தவறா என்று அவளுக்குத் தெரியாது.

கெலடியில் வெங்கடப்ப நாயக்கரின் அரண்மனைக்குப் பின்னால் அதே வளாகத்தில் அவசர அவசரமாகக் கட்டப்பட்ட ஒரு சிறு வீட்டில் அவள் வசிக்கிறாள் என்றால் அதைவிடப் பெரிய பொய் ஏதும் இருக்க முடியாது. அந்த வீட்டில் ஒரு ஜன்மாந்திர கைதியாக கண்ணுக்குத் தெரியாத கற்பனை விலங்குகள் கையிலும் காலிலும் பூட்டி அவளை வைத்திருக்கிறார்கள்.

இங்கே யாராவது அவளைப் பார்க்க வருகிறவர்கள் தகவல் அறிவித்துத்தான் கெருஸொப்பா ஒண்ணரை வருடத்தில் பாழடைந்த நகரமாகி விட்டது என்பதை அறிந்து வெகுவாக விசனப் பட்டாள் சென்னா.

ஹொன்னாவரில் என்ன நடக்கிறது? அவளுக்கு அன்பான பிரதானி நஞ்சுண்டய்யா காலம் சென்று விட்டதாகப் போன மாதம் செய்தியோடு வெங்கடப்ப நாயக்கரே  சென்னபைராதேவியை சந்திக்க வந்தார்.

ரஞ்சனா தேவி உடுப்பியில் அவள் தாய் வீட்டுக்குப் போய்த் தங்கியிருக்கிறாள். போன சித்திரையில் நேமி நாதனின் பரிசாக ஓர் அழகான குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள் என்று தெரிந்து அதிகமான மகிழ்ச்சியில் நாள் முழுக்க இருந்தாள் சென்னா.

குழந்தைக்கு  சென்னபைராதேவி என்று பெயர் வைத்ததுதான் சென்னா மகாராணிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவளுக்குத் தன் பெயரே பிடிக்கவில்லை. என்ன கண்டேன் என் வாழ்க்கையில் என்று அவள் தன்னைத்தானே சமயங்களில் உரக்கக் கேட்டுக்கொள்கிறாள்.

மிர்ஜான் கோட்டையில் வெங்கடப்ப நாயக்கரின் மகன் வெங்கட லட்சுமணன் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறானாம். ஹொன்னாவரும், மிர்ஜானும், கோகர்ணமும் எந்த வித்தியாசமும் இல்லாமல் வெங்கடப்ப நாயக்கர் குடும்பத்துக்கு ஜெயவிஜயிபவ சொல்லித் துதித்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனவாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2022 18:25

February 5, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – And there sets sail her ship at dawn

An excerpt from my forthcoming novel MILAGU

ஏமாற்றத்தோடு நடு ராத்திரியில் மைதானத்துக்குத் திரும்பிய கெலடிப் படையினர் மைதானத்தை அடுத்த கோவில் தெருவில் பெரிய வீட்டில் விளக்கு ஒளியும் மனுஷ நடமாட்டமும் இருப்பதைக் கவனித்து அங்கே போக முற்பட்டார்கள்.

மஞ்சு மஞ்சு என்று கூவியபடி வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த ரோகிணி  ஓட்டமும் நடையுமாக ஒவ்வொரு அறையிலும் மஞ்சுநாத்தைத் தேடினாள்.

அவனுக்குத் தெரிந்த இடம் என்பதால் வேறு எங்கேயும் யாரும் தட்டுப்படவில்லை என்றால் இங்கே தான் வந்திருப்பான் என்ற அவளுடைய அனுமானம் தவறிப் போக வெளியே தெரு முனையில் கெலடிப் படை வரும் சத்தம்.

பேய்மிளகைக் கையில் அறுக்காமல் தூவிக்கொண்டு தன் கோச்சு வண்டியில் தாவி ஏறி வேகமாகக் குதிரைகளை இருட்டு கவ்விய பாதையில் செலுத்திக்கொண்டு விரைந்தாள்.

துறைமுகம் நோக்கி சீரான வேகத்தோடு சென்று கொண்டிருந்த கோச் அதுவரை பின் தொடர்ந்தவர்களை உதறிவிட்டு குண்டும் குழியுமான பாதையில் அச்சு கடகடக்கப் போய்க் கொண்டிருந்தது.

நங்கூரம் பிணைப்பு அகற்றிப் பயணப்படத் தயாராக இருந்த சிறு கப்பல் அவளுக்காகக் காத்திருந்தது. கெருஸொப்பாவில் இருந்து பனாஜி, அங்கிருந்து சூரத், சூரத்தில் இருந்து லிஸ்பன் போக ஒவ்வொரு கட்டம் பயணமும் திட்டமிட்டிருந்தாள் ரோகிணி.

மஞ்சுநாத் காணாமல் போனதுதான் எதிர்பார்க்காத துக்கமாக அவளைப் பீடித்தது. நடு இரவில் கவனத்தைக் கவராமல் சிறு கப்பலில் கெருஸொப்பா துறைமுகத்தில் இருந்து புறப்படும் முன் அவளுக்கு நப்பாசை. மஞ்சு வீடு திரும்பியிருப்பானா என்று. ஓடோடி வந்து அவனைத் தேடி ஏமாற்றம் மனதை முழுவதுமாக ஆக்கிரமிக்க அவள் சிறு கப்பல் கரையோடு தொட்டு நிற்கும் கடல் பாலத்தில் நடந்து கப்பல் நுழைவுவெளியில் நின்றாள்.

அவள் பெட்டிகள் ஒவ்வொன்றாகக் கப்பலில் ஏற்றப்பட கப்பல் தரையில் சாய்ந்து படுத்து வானத்தை நோக்கினாள். நட்சத்திரம் ஏதுமின்றி வெளிர் சாம்பலும் கறுப்புமாக இருந்தது ஆகாயப் பரப்பு.

நேமிநாதன், பரமன், பெத்ரோ,  சென்னபைராதேவி, திம்மராஜு என்று முகங்களின் அணிவகுப்பு. நேமிநாதன் ஆவியாக மிதந்து வந்தான்.

உடை உடுத்திய ஆவி. ரோகிணி மகன் மஞ்சுநாத்தைத் தேடினாள். கூட்டத்தில் அவன் இல்லை. தேடிக் களைத்து அவள் கிடந்தபடி பாட ஆரம்பித்தாள் ஆராரோ ஆரிரரோ ஆரடிச்சார் சொல்லியழு. மஞ்சுநாத் அப்பா அப்பா என்று கூப்பிடும் குரல் அலைகளின் வெற்று ஆரவாரத்தில் மங்கி மறையக் கப்பல் நகர்ந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2022 19:20

February 4, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – A levitating hermit and a plunderer

Excerpt from my forthcoming novel MILAGU

அடுத்த தெருவில் தேளோ பாம்போ தட்டுப்படும் முன்னால் மரக்கட்டைகளும் கயிறுகளும் மரப்பெட்டிகளும் இல்லாததை அவசரமாகச் சோதித்தார்கள். திண்ணையில் நின்று கதவை உடைக்கும்போது ஏற்கனவே திறந்திருந்த கதவு வழியாக உள்ளே இருந்து வவ்வால்களும் ஆந்தை ஒன்றும் நான்கு மெலிந்த பாம்புகளும் அவசரமாக வெளியே வந்தன.

இந்த வீட்டையும் நிராகரித்து கெலடிப் படையினர் வெளிவந்தபோது எதிர்வீடு ஒரு கல்லோ மண்ணோ இல்லாமல் இருந்ததைப் பார்த்து இங்கே இருந்து அங்கே நாய் மாதிரி ஓடினார்கள். கதவைத் திறக்க முயல அது திறப்பேனா என்று மூடியே கிடந்த்து.

ஆனால் நிலையில் இடித்தபோது உத்திரத்தில் அது பிரதிபலித்து, உத்திரத்தில் இருந்து பேய்மிளகு ஒரு பெரிய கொடியாகத் தரைக்கு அங்கிருந்து தழைந்து வந்து இடித்த வீரனின் தலையில் அப்பிக்கொண்டது.

இது வெறும் பேய்மிளகு இல்லை, நிசமாகவே பேய் பிடிச்ச சமாச்சாரம் தான் என்று கூக்குரலிட்டபடி அந்த வீட்டையும் விட்டுப் போகத் திரும்பினார்கள்.

நிமிடத்துக்கு நிமிடம் சூறையாட எதுவும் கிட்டாத கெலடி படையின் கோபமும் வெறுப்பும் பயமும் கூடிக்கொண்டு வரும்போதுதான் கெருஸொப்பாவின் முக்கியமான சாராய வியாபாரி விதிவசத்தால் அவர்களிடம் மாட்டிக்கொண்டு நூறு போத்தல் சாராயத்தைக் கொடுத்துத் தொலைத்தார்.

போன வாரம் முழுக்க கெருஸொப்பாவே தோற்கும் துக்கத்தில் இருந்ததால் ஒருத்தர் முகத்தில் சிரிப்பில்லை. அவர்களை ஆறுதல் படுத்த அத்தனை சாராயத்தையும் வாங்கிக் குடித்துத் தீர்த்து விட்டதால் மிச்சம் இவ்வளவுதான் என்று விவரிக்கப்பட்டதை கெலடிப் படை நம்பாவிட்டாலும் பெரிய பாட்டில் நூறு சாராயம் மணக்க மணக்கக் கிடைத்தது அவர்களுக்கு சந்தோஷம் கொடுத்தது.

வெங்கடலட்சுமணனிடம் சாராயத்தைக் கொடுத்துத் தெரு வர்த்தமானமெல்லாம் சொன்னபோது அவன் இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற முகத்தை வைத்துக்கொண்டு சொன்னது –

அட முட்டாள்களா, பேய் மிளகு விதைத்த வீடு என்றால் கவனமாக இருக்க வேண்டியது தான். ஆனால் தேளும் பாம்பும் அடைத்த வீட்டிலிருந்து ஏனடா ஓடிவந்தீர்கள்? ஒரு முறை தேள்கள் வெளியே வந்திருந்தால் அவை மறுபடி மரப் பெட்டிக்குள் போகுமோ? மறுபடி அந்த வீட்டுக்குப் போயிருந்தால் மகராஜர்கள் நீங்கள் வரப்போவதை எதிர்பார்த்து சோறோ ரொட்டியோ வைத்து விட்டுப் போனது கிட்டியிருக்குமே என்று பாதி கிண்டலும் மீதி வெறுப்புமாகக் கேட்டான்.

அவர்கள் திரும்பப் போகிறேன் என்று கிளம்ப, கெலடி இளவரசர் கூறியது-

போன தெருவில் மீண்டும் போக இனி நேரம் இல்லை. விடிந்ததும் கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் கெருஸொப்பாவின் தற்போதைய நிலையைப் பார்வையிட வருகிறார். கொஞ்சம் உறங்கிக் காலையில் அணிவகுத்து நில்லுங்கள்.

சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் எதிரே மைதானத்து மையத்தில் சதுர்முக  பஸதி அவர்கள் கண்ணில் பட்டது.

வடக்குவாடி சாமியார் மடம் போல இருக்கு. உத்திரணிக் கரண்டி கூட தங்கத்திலே செய்து வச்சிருப்பாங்க.

உற்சாகமாக அந்தப் படை சதுர்முக  பஸதிக்குப் போக அதன் நான்கு கதவுகளும் உள்ளிருந்து இறுக அடைத்துக் கொண்டன. நூறு பேர் வாசல் கதவைத் தட்ட நான்கு கதவுகளின் அருகே நின்றாலும் திண்ணைகள் இருப்பது அவர்கள் கண்ணில் இருந்து மறைந்திருந்தது.

திண்ணையில் களைத்து  உறங்கிய மஞ்சுநாத்தையும் கண்மூடி மௌனமான தியானத்தில் கல் படுக்கைக்கு ஒரு அங்குலம் உயர மிதந்தபடி இருந்த நிர்மல முனிவரையும் அவர்கள் பார்க்கவில்லை.

நக்னதை மறைத்த வாழை இலையை இடுப்பில் போர்த்திப் புலன்களைக் கூர்மையாக்கி கதவுகள் திறக்காமல் தடுத்தபடி நிர்மல முனிவர் மிதந்து கொண்டிருந்தார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2022 20:02

February 3, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – The vaulted treasure and a nest of scorpions

An excerpt from my forthcoming novel MILAGU

சதுர்முக  பஸதியின் வெளித் திண்ணைகள் நான்கு பக்கக் கதவுகளையும் ஒட்டி உயரமும் தாழ்வுமாக சாய்ந்து நிறுவப்பட்டிருந்தன. கதவை உள்ளே இருந்து திறந்ததும் வலமும் இடமும் நிற்கும் திண்ணைகள் இவை.

வழிப்போக்கர்கள் வாசலுக்கு வந்து, கதவு அடைத்திருந்தாலும் திண்ணையில் நீட்டிப் படுத்து ஓய்வு கொள்ளலாம். கதவுக்கு வலமும் இடமும் திண்ணை இருப்பதால் இரண்டு வழிப்போக்கர்கள் ஒவ்வொரு கதவையும் ஒட்டிப் படுத்துக் கிடந்து ஓய்வு கொள்ள முடியும்.

ஓய்வு எடுப்பவர்கள் படுக்க மெல்லிய துணி போல் வழுவழுவென்ற தரை வாய்த்தவை திண்ணைகள். படுத்திருந்து துயில் கொள்ள வருகிறவர்களுக்கு இலவம்பஞ்சுத் தலையணை தர முடியாவிட்டாலும், காரையும் செங்கலும் கருங்கல்லும் பளிங்குக் கல்லும் வைத்துத் திண்ணை உருவாக்கியபோதே தலைமாட்டிலும் கால்மாட்டிலும் தலையணைபோல் உருவாக்கி வைத்த கட்டடக் கலைஞர்களைப் படுத்து ஓய்வெடுக்க வருகிறவர்கள் சிலாகித்து நன்றியும் சொல்லிப் போவதுண்டு.

அந்தத் திண்ணை ஒன்றில் ஒரு சிறுவன், வயது ஐந்து காணும், சந்திரனைப் போன்ற முகவிலாசம், மலர்த்திய கண்களையும் கடந்து  தெரிய நித்திரை போயிருக்கிறான். சற்றே களைப்பு தென்பட்டாலும் ஆழ்ந்து உறங்கும் சிறுவன் சிறு மலர் உதிர்ந்து நந்தவனத்தில் யார் காலும் படாமல் கிடப்பது போல் ஆழ்ந்த துயிலில் இருக்கிறான்.

அவனுக்கு எதிர்த் திண்ணையில் ஒரு பெரிய வாழை இலையை இடுப்புக்குக் கீழே போர்த்தி சமண திகம்பர முனிவர் துயில் கொண்டிருக்கிறார். நிர்மல முனிவர் அவர். சிறுவன் மஞ்சுநாத்.

வெகு அண்மையில் சதுர்முக  பஸதி வாசலில் நூறு இருநூறு பேர் வந்து உள்ளே புக முயன்றதன் மௌன சாட்சிகளாகத் தரையில் செருப்புக் கால்களில் ஒட்டி வந்த களிமண்ணும்  பஸதித் தோட்டத்தில் வீழ்ந்து கிடந்த கொழிந்த இலைச் சருகுகளும் அங்கே இங்கே காற்றுக்குப் புரண்டு கொடுத்துக்கொண்டு கிடக்கின்றன.

இரண்டு நாட்டுச் சாராய போத்தல்கள் தக்கை மூடித் திண்ணையில் முனிவருக்கு அருகே நின்று கொண்டுள்ளன.  பஸதி உள்ளே அமைதியும் தூய்மையும் ஒளி சிதறிப் பிரதிபலிக்கின்றன. சுவரில் நகராமல் பார்த்துக் கொண்டிருக்கும் மரப்பல்லியைத் தவிர உள்ளே உயிர் அடையாளமில்லை.

கெருஸொப்பாவை ஆக்கிரமித்த கெலடி சாம்ராஜ்யத்தின் மன்னர் வெங்கடப்ப நாயக்கரின் படைப் பிரிவு அவருடைய புத்திரன் வெங்கடலட்சுமணன் தலைமையில்   சூறையாடியபோது அவர்கள் கோவில்களிலும் பிரார்த்தனைக் கூடங்களிலும் கடந்து வந்து கொள்ளை அடித்துச் சுருட்டி எடுத்துத் திரும்பும் உத்தேசத்தோடுதான் வந்தார்கள்.

நடு ராத்திரிக்கு வீட்டுக்குத் திரும்பிய சாராய வியாபாரியைப் பிடித்து  கடையை வலுக்கட்டாயமாகத் திறக்க வைத்து உள்ளே இருந்த வெகு சொற்பமான சாராயத்தைப் பறித்து ஓவென்று குரலெழுப்பிச் சாத்தானின் மக்களாக அந்தப் படை வரும் என்று எதிர்பார்த்து சாராயக்கடையில் நூறு போத்தல் சாராயம் மட்டும் வைத்திருந்தது.

மீதி? இரண்டு நாள் முன்னே கெருஸொப்பா குடிமக்கள் எல்லோரும் மலிவு விலைக்கு வாங்கிக் குடித்துத் தீர்த்தாகி விட்டது.

தெருவிளக்குகள் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை எரிய முடியாமல் திரி வைக்கும் முனைகளிலும், எண்ணெய் நிற்கும் விளக்குக் குமிழ்களிலும் கவனமாகப் பிளந்து வைக்கப்பட்டிருந்த மாடங்கள் கெலடிப் படை நகர்வதைப் பாதித்தன.

எஜமான்.

கெலடிப் படையில் வந்த ஒருத்தன் சவக்கு சவக்கு என்று வெல்லம் தின்றபடி வெங்கடலட்சுமணனிடம் உரிமையோடு அழைத்தான்.

என்னவே. அதென்னவே வாயில் அருவதா சருவதா ஏதாவது அரைபோட்டுக்கிட்டிருக்கீர்? வெங்கட லட்சுமணன் விசாரித்தான்.

போன தெருவில் வெல்ல வியாபாரி வீட்டில் ஓலைப் பாயில் காய வைத்திருந்த வெல்லத்தை வழித்து எடுத்து வாயில் போட்டது இன்னும் கரைய மாட்டேன் எங்குது என்று பின்னும் வேகமாக மென்றான்.

கூப்பிட்டேரே, என்ன வேண்டியது?

எந்த வீட்டிலும் தங்கமும் வெள்ளியும் கிடைக்கிற மாதிரி தெரியவில்லை. பேசாமல் மைதானத்தில் கிடந்து உறங்கிக் காலையில் கெலடி போய்விடலாமே. நேரமும் நள்ளிரவாகி விட்டதே.

அவன் கரிசனமாகச் சொன்னான்.

தெருமுனையில் பெரிய வீடு இடிபாடுகளுக்கு நடுவே நிற்பதைக் கண்டு முன்னால் கையில் கடப்பாரையோடு ஓடியவன் சற்று நிதானித்து இந்த வீட்டில் ஏதாவது கிடைக்கும் என்று ராப்பிச்சைக்காரன் போல் சொல்லி அங்கே நூறுபேர் இருந்த அவன் அணியை நடத்திப் போனான்.

வாசலில் பேய்மிளகுக் கொடி இல்லாமல் வாசல் படிகளில் மரக்கட்டைகள் இரண்டு கிடந்தன. அவற்றைக் கடந்து வாசல் முற்றத்துக்கு அவன் நடந்தபோதுதான் கவனித்தான், படியின் குறுக்கே அந்த மரக்கட்டைகள் வலிந்து செருகப்பட்டிருந்ததை.

நகர வேணாம் என்று கையை மேலே தூக்கி எச்சரித்தபடி மேல்படிக்குத் தாவிக்குதித்தபோது கீழ்ப்படியில் சுமாரான சத்தத்தோடு வெடி வெடித்த ஒலி. படிக்கட்டுகளே தனியாகி நகர, கீழே வைத்திருந்த பழைய மரப்பெட்டியில் இருந்து தேள்கள் வெளியேறி ஊர்ந்தது அந்த அரையிருட்டில் பூதாகாரமாகத் தெரிய அந்தப் பெரிய வீட்டை விட்டு, அந்தத் தெருவையே விட்டு விலகி ஓடினார்கள் சூறையாட வந்த கெலடிப் படையினர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2022 06:01

January 31, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – The old order changeth

An excerpt from my forthcoming novel MILAGU

சென்னபைராதேவியின் இந்த ஆட்சி தொடர வேண்டாம் என்பது விஜயநகரப் பேரரசின் விருப்பமும் ஆகும்.

சென்னபைராதேவி மகாராணி இனி என் மற்றும் பில்கி அரசர் திம்மராஜு கவனத்தில் ஓய்வெடுப்பார். எங்கே என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

கெருஸொப்பா நாடு ஒரு பெரும் பகுதியாகவும் ஒரு சிறு பகுதியாகவும் நிர்வாகச் சீரமைப்பு நிமித்தம் பிரிக்கப்படும்.

நானும் பில்கி அரசர் திம்மராஜுவும் அந்த சீரமைப்பை எடுத்துக்கொண்டு நிறைவேற்ற சோமேஷ்வர் கோணேஸ்வர் மகாவீரர் என எல்லா தெய்வமும் அருளட்டும். உங்கள் வாழ்த்துகளும் சேரட்டும்.

இடைக்கால நிர்வாகியாக இங்கே பணியாற்ற, புது அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயல்பட, வகுளாபரணர் நியமிக்கப்படுகிறார்.

இங்கே கூடி இருக்கும் பிரதானி, உபபிரதானி, தளவாய் ஆகிய யாருக்கும் உயிர்ப் பயம் இருக்க வேண்டாம். மிகப் பெரும் குற்றம் புரிந்திருப்பதாகத் தெரிந்தாலே அன்றி நீங்கள் இப்போது இருக்கும் வீடு நிலம் அனுபவித்து இருக்கலாம். பதவி தொடர்வது பற்றி அப்படி உத்தரவாதம் தர முடியாது.

வயது காரணம் ஓய்வு பெற்று சென்னா மகாராணியோடு வயதானவர் கூட்டம் நடத்தி காலம் போக்க சில மூத்த பிரதானிகளை செயல்படுத்த இருக்கிறோம். அவர்கள் இப்போது இங்கே இல்லாவிட்டால் சந்திக்கும்போது அவர்களிடம் சொல்லுங்கள்.

இந்த இடத்தில்  சென்னபைராதேவி குரல் கீச்சிடச் சத்தம் போடத் தொடங்கினாள்.

‘துரோகிகளா, நம்பிக்கை துரோகிகளா, சகோதரன் சகோதரி, அம்மா என்றெல்லாம் உருகி உருகி என் மேல் பொய்யான அன்பை பூசிய திருடர்களே, உங்களுக்கு தொழுநோயும் பெண்சீக்கும் பீடிக்கட்டும். உங்கள் உடலைப் புழுத்துப் போக வைக்கட்டும், நாவு அழுகட்டும் என்று கூச்சலிட்டாள்.

வகுளன் தயாராக வைத்திருந்த ஒரு வர்ணத் துணியை எடுத்து சென்னாவின் வாயைச் சுற்றிக்கட்டுவதை அவையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

மகாராணிக்கு சித்த சுவாதீனம் இருக்கிறதா என்று இன்னும் அரைமணி நேரத்தில் பைத்யநாத் வைத்தியர் சோதித்துச் சொல்வார். இப்போது இந்த அவை கலைகிறது

சொல்லியபடி வெங்கடப்ப நாயக்கர் எழுந்து நிற்க வாயில் கட்டிய துணியோடு  சென்னபைராதேவியை நெருங்கிய நாலு மெய்க்காவலர்கள் மரியாதையோடு வணங்கி நின்றார்கள்.

விருந்தாளி அறைக்கு அழைத்துப் போங்கள் என்றார் கெலடி வெங்கடப்ப நாயக்கர்.

அவரும் வகுளனும் நிற்கக் கடந்துபோகும் போது சென்னா வகுளனைப் பார்த்து நீயுமா வகுளா நன்றாக இரு நன்றாக இரு என்று அவன் தலையில் கைவைத்து ஆசிர்வதித்து நடந்தாள்.

நடத்திப் போய்  சென்னபைராதேவி அறையில் அமர்ந்ததும் கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் மெல்லிய குரலில் சொன்னார் –

சென்னா, நேமிநாதன் போனாலும் உமக்கு இன்னும் உயிர் அபாயம் இருக்கு. போர்த்துகீசிய கார்டெல் இவ்வளவு நேமிநாதன் மூலம் செலவழித்தும் கெருஸொப்பாவும் குறைந்த விலையில் மிளகும் அவர்கள் கையை விட்டு நழுவிப் போவதால் ஆத்திரத்தில் இருக்காங்க. அவங்க கிட்டே இருந்து உம்மை பாதுகாக்க இந்த அறைக்கு வெளியே ரோந்து போனபடி என் அரசாங்கப் படை இருக்கும். பசிக்கு அன்னமும் பலகாரமும் நீரும் உமக்குத் தர தாதி கூடவே இருக்கலாம். நாளை மிர்ஜானில் இருந்து பாதுகாப்பு கருதி உம்மை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வேன்.

நாயக்கர் நகர்ந்தார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2022 18:33

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.