இரா. முருகன்'s Blog, page 55
February 26, 2022
பெரு நாவல் ‘மிளகு’ – முதல் கருத்துகள்
நண்பர் திரு காளிபிரசாத் ரங்கமணி
ஆரம்பித்த வேகத்தில் கடகடவென நூறுபக்கங்கள் கடந்தன. பழைய காலக் கதையில் திடீரென முன்னோக்கி வந்து ஏற்கனவே நன்கு பரிச்சயமான திலீப், அகல்யா, கொச்சு தெரசா பரமேஸ்வரனின் நினைவுகள்… அது ஒரு சர்ப்ரைஸ்.. போகிற வேகத்தில் மூன்று நாட்களில் படித்து விடுவேன் என நினைக்கிறேன். ..மிளகோடு துவங்கியுள்ளது இவ்வருட புத்தக கண்காட்சி புது வரவுகளின் வாசிப்புநண்பர் மீனாட்சிசுந்தரம் முரளிநானும் வாங்கி வாசிக்க ஆரம்பித்து உள்ளேன். மனதிற்கு உகந்த எழுத்தாளர். இனிய நண்பர்.மர்மம் கலந்த நாவல். வாசகனாக மகிழும் எழுத்து நடை. களம்.. புதிது. ஆனாலும் பழையது.. எனக்கும் பிடித்திருந்தது.
February 22, 2022
ஆனந்தரங்கப் பிள்ளை சொல்லிப்போக ராமோசி ராயன் எழுதிய டயரிக் குறிப்பு
ராமோஜியம் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி. நாவல் சென்னை புத்தகக் கண்காட்சி 2022 கிழக்கு பதிப்பகம் அரங்கில் கிடைக்கும்
முரட்டாண்டி சாவடி வந்தாகி விட்டது. அடங்கொப்.. துயுப்ளே பேட்டை வந்தாச்சு.
”துரை உங்களை உக்கார சொன்னார்” என்று பாரா காவல் வீரர்களின் தலைவன் கிரிமாசி பண்டிதன் சொல்லி விட்டுத் திரும்பிப் போனான்.
துரை விடிகாலையிலேயே இங்கே கிளம்பி வந்துவிட்டார் போல. கோயிலுக்குப் போய் பூசை வைக்கிற சீலத்தை என்ன காரணமோ இந்த வாரம் வேண்டாம் என வைத்திருக்கிறார். அவரா வந்தார்? வைகாசி மாத வெய்யில் விரட்டி அடித்திருக்கிறது அவரை தோப்பையும் துரவையும் தேடி.
நடுப்பகலுக்கு துரைசானி ஆகாரமும் குடியும் எடுத்துக்கொண்டு, கூடவே தோழிப் பெண்டுகளான நான்கைந்து துரைசானிக் குரங்குகளோடு வந்து சேர்வாள். அதுவரை துரைக்கு தனியாட்சி தான்.
ராமோஜி போய்ச் சேர்ந்தபோது, தியூப்ளே துரை உள்ளே இருந்து ரொட்டியைக் கடித்துக்கொண்டு திரை விலக்கி எட்டிப் பார்த்தார். வாய் நிறைய ஆகாரத்தை வைத்துக்கொண்டு ராமோஜியைப் பார்த்து இரு வந்துடறேன் என்று சைகை காட்டினார். முழுக்க முழுங்கிய பிறகு கூடாரத்துக்குப் பின்னால் கை காட்டினார். அசிங்கம், ஆபாசம் என்றார், பிரஞ்சு மொழியில். அங்கே என்ன இருந்தது அப்படிக் குமட்டலெடுக்க? கிழிந்து ஒட்டுப்போட்ட கூடாரத் துணிதான் ராமோஜிக்குக் கண்ணில் பட்டது.
கிரிமாசி பண்டிதன் ஓரத்தில் கைகட்டி நின்று முக வார்த்தையாகச் சொன்னது –
“துரையவர்களே, காலையில் நீங்கள் வந்த வழியிலே ஓரமாக குத்த வச்சிருந்த எட்டு பேரையும் கையும் காலும் விலங்கு போட்டு கூடாரத்துக்குப் பின்னால் உட்கார்த்தி வைத்திருக்கிறோம். குண்டி உலர்ந்து போச்சு. தண்ணீர் கொடுத்தால் கழுவிக்கொண்டு இன்னும் காத்திருக்கிறோம் என்கிறார்கள் அவர்கள். பக்கத்தில் போக முடியலை. நரகல் வாடை”.
கிரிமாசி பண்டிதனின் கண்ணில் புன்சிரிப்போ விஷயத்தின் கோமாளித்தனம் படிந்த பெருஞ்சிரிப்பை அடக்கிய பிரயத்னமோ தெரிந்தது.
துரையின் புகார் இது –
அவர் காலையில் நிம்மதியாக பொழுது போக இங்கே வந்தபோது, பிருஷ்டத்தைக் காட்டிக்கொண்டு இத்தனை பேர் வெட்டவெளியில் குத்த வைத்திருந்தால், அவர் இல்லாத நேரத்தில் இந்தப் பாதை முழுக்க குதங்கள் தானே கண்ணில் படும்? அதுவும் அவருக்குப் பிரியமான தியூப்ளே பேட்டையில் இந்த விபரீதம் நடந்தால், மற்ற இடங்களில் எப்படி இருக்கும்?
”முசியெ பெனுவா பியெ தூமா என்ற நம் மரியாதைக்குரிய தூமா துரை கவர்னராக இருந்த காலத்தில் இப்படி கடற்கரையில், சம்பா கோவிலுக்குத் தெற்கே உப்பாற்றங்கரையிலே மலஜலம் கழித்தால் ஆறு பணம் அபராதம் என்று சட்டம் போட்டது என்ன ஆச்சு?” துரை ஆவேசத்தோடு கேட்டார்.
ராமோஜிக்குப் புரியவில்லை தான் –
அவனவன் குந்தாணி குந்தாணியாக பேண்டு வைக்கவா ராஜபாட்டை போட்டு வில்லியநல்லூருக்கும் பாகூருக்கும் ஏன் கடலூருக்கும் கூட எந்த சிரமமும் இல்லாமல் போகவர வசதி செய்து கொடுத்தது? இவன்கள் தெருவில் குத்த வைக்காமல் தினசரி வெளிக்கு இருக்க வீட்டில் கக்கூசு அமைத்துக் கொள்ள என்ன தடசம் பற்றியது?
தியூப்ளே துரை ராமோஜியை துச்சமாகப் பார்த்துக் கையை தூரத்தைச் சுட்டி அசைத்துச் சொன்னார் –
”போய் அவங்க கிட்டே எடுத்துச் சொல்லிட்டு வாரும்.. இந்த தடவை மன்னிச்சு விட்டுடறேன்.. அடுத்த தடவை இந்த பிருஷ்டங்களை காட்டினால் ஆளுக்கு பத்து கசையடி, ஐம்பது பணம் அபராதம்.. இதை புதுச்சேரி பிரதேசம் முழுக்க நியமமாக ஏற்படுத்தினேன்”.
தன் அதிகார எல்லைக்குள் புதுசாக ஒருத்தன், தற்காலிகம் என்றாலும் சாமர்த்தியமாக ஆனந்தரங்கம் பிள்ளை பெயரைச் சொல்லிக்கொண்டு நுழைந்து அதிகாரம் செலுத்தலாச்சே என்ற கோபமும், வெறுப்பும் கிரிமாசிப் பண்டிதனின் பார்வையில் தெறித்துக் கடந்து போயின.
துரை அடுத்த வேகவைத்த முட்டையில் மிளகு கலந்தபடி இருக்க, ராமோஜி கூடாரத்துக்குப் பின்னால் போனான். கிரிமாசி பண்டிதன் உன்னத உத்தியோகஸ்தனாக அவனுக்கு முன் மேட்டிமையோடு நடந்து போனான்.
”நானே சொல்கிறேன். நீர் இதெல்லாம் பழகாதவர். அதுவும் ஒருநாள் கூத்துக்கு குண்டி அலம்பிவிட வந்தவர். சும்மா இரும். நான் பார்த்துக்கறேன்”.
”சிவசிவ. நான் பேசுகிறேன் என்று எங்கே சொன்னேன். துரை ஆக்ஞை பிறப்பிச்சார். நான் தலையாட்டினேன். அவசரம் என்று அடித்துப் பிடித்து ஓடி வரச் சொன்னதால் அல்லவோ வந்தேன்” என்றான் ராமோஜி.
கூடாரத்துக்குப் பின்னால் நின்றபடிக்கும் தரையில் உட்கார்ந்தபடிக்கும் பதினைந்து பேராவது இருந்தார்கள். அத்தனை பேருமா துரைக்கு பிருஷ்ட தரிசனம் செய்வித்தது? இல்லையாம், துரை புது உத்தரவாக யாரும் வெளிக்கு போகக்கூடாது என்று கிரமம் செய்த அரை மணி நேரத்தில் அங்கங்கே பிடிபட்டவர்களாம். கிரிமாசி பண்டிதனின் காலாள் காவல் படை அதிரடியாக அவர்களைப் பிடித்த வேகத்தை அவன் தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.
பிடிபட்ட எல்லோரையும் ஏன் முரட்டாண்டி சாவடிக்குக் கொண்டு வரணும் என்று அங்கே யாரும் கேட்கவில்லை. யாருக்குமே ஏனென்று தெரியாது.
“கேளுங்க. துரையோட உத்தரவு” அவர்களுக்கு முன்னால் நின்று கிரிமாசி பண்டிதன் பேசத் தொடங்கினான். தமிழ் சனங்களின் அசிங்கமான பழக்கம் எதெல்லாம் என்று என்று பட்டியல் போட ஆரம்பித்து பாதியில் மேலே எப்படி பேச என்று நிச்சயமாகத் தெரியாமல் நிறுத்திப் போட்டு ராமோஜியைப் பார்த்தான். நீ பேசு என்று அதற்கு அர்த்தம்.
தியூப்ளே துரை கருணை காட்டி அவர்களைத் தண்டனையில்லாமல் விட்டுவிட்ட நல்ல செய்தியில் ஆரம்பித்தான் ராமோஜி. ஆசனம் நனைந்திராத மற்ற சந்தர்ப்பமாக இருந்தால் அவர்கள் தகவலை ஏற்று வாங்கி கரகோஷம் செய்திருப்பார்கள்.
அந்தப் பதினைந்து பேருடைய பெயரும், நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு ஒரே லிகிதமாக எழுதி, விலாசமும் தொழிலும் பதிந்து வைக்கலாம் என்று கிரிமாசி பண்டிதன் சொன்னபோது, காகிதம் இருந்தால் துடைத்து சுருட்டிப் போட்டு போயிருப்போமே என்றான் அவர்களில் ஒருத்தன்.
அதுவும் நியாயம் தான் என்று ராமோஜி ஒவ்வொருத்தருக்கும் முக வார்த்தையாக இனி இப்படி செய்யாதீர் என்று சொன்னபோது அதில் ரெண்டு பேர் கூத்துக்கு மத்தளமும் மிருதங்கமும் இசைக்கிறவர்கள் என்றும் இன்னொருத்தன் புல்லாங்குழல் வாசிக்கிறவன் என்றும் தெரிந்தது.
அரியாங்குப்பம் பட்டாமணியக்காரர் மகளுக்குத் திரண்டுகுளி வீட்டு விசேஷத்தில் நேற்று ராத்திரி வினிகை (கச்சேரி) நடத்த வந்து திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்களாம். தடபுடலான நேற்றைய ராத்திரி விருந்து இந்தக் காலை நேரத்தில் வயிற்றோடு பிரியாவிடை பெற்று வெளியேற அவசரப்பட்டதால் உடனடியாகச் சாலையோரமாகக் குத்த வைத்ததாகச் சொன்னார்கள் அவர்கள் எல்லோரும்.
இன்னும் இரண்டு நாள் முதலியார்பேட்டை டேராவாம். பக்கத்தில் பாலையர் மட சத்திரத்தில் ஜாகையாம். சரி சந்திக்கிறேன் என்றான் ராமோஜி. எதற்கு சந்திக்கணும் என்று கேட்கவில்லை யாரும்.
அதற்குள் நாலு கடைகால் நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து பித்தளைச் சொம்போடு வைத்துவிட்டுப் போக ஏற்பாடு செய்தான் ராமோஜி. அவர்கள் கால் கழுவிச் சுத்தப்படுத்திக் கொண்டு, கொஞ்ச நேரம் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் அனுப்பிவித்துக் கொண்டு போனார்கள்.
அதில் ஒருத்தன் மட்டும் இவ்வளவு தூரம் தண்ணியும், சொம்பும், தோப்பு நிழலும், வெற்றிடமும் இருக்கே, நான் போய்விட்டு வரட்டுமா என்றபடி தூரத்தில் மூலையில் உட்கார எழுந்து போனான்.
ராமோஜி திரும்ப கூடாரத்துக்கு வந்தான். கபே குடித்துக் கொண்டிருந்தார் தியூப்ளே.
February 21, 2022
18. துபாஷ் ராமோசி ராயன் 1745 புதுச்சேரி – சில குறிப்புகள் (என் நாவல் ராமோஜியம்)
an excerpt from my novel RAMOJIUM – novel available in Kizhakku Padhipagam stall in Chennai Book Fair 2022
முரட்டாண்டி சாவடி என்று சொல்லாதே என துரை கட்டளையிட்டால் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே. வீட்டுக்குள் வேணுமானாmல் முரட்டாண்டி, வரட்டாண்டி, பரட்டாண்டி எதுவும் சொல்லிக் கொள்ளட்டும். வெளியே வந்து, ஊர்ப் பெயரைத் துரை கேட்டால் அவன் ஆணைப்படி தியூப்ளே பேட்டை என்று சொல்ல மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்?
அந்த மனுஷனைப் பாவம் வாரம் முழுக்க, நாள் முழுக்க மதாம் தியூப்ளே துரைசானியம்மாள் கையில் கொட்டையை வாகாகப் பற்றி நெறித்து ’ஆடுறா ஆடு, கிழட்டு குரங்கே ஆடு, தியூப்ளே குரங்கே ஆடு’ என்று ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறாள். அதிலெல்லாம் இருந்து தப்பித்து, கொஞ்சம் தென்னங் கள்ளு, கொஞ்சம் ஓய்வு, கொஞ்சம் அதிகார ஆர்ப்பாட்டம் என்று பொழுது போக்கிவிட்டுத் திரும்ப, தியூப்ளே துரை முரட்டாண்டி சாவடிக்கு வந்து விடுவது வழக்கம். ஊர் ரொம்ப இஷ்டமாகி, அதன் பெயரையே தியூப்ளேசு பேட்டை என்று தனதாக மாற்றினார் அவர்.
தோப்பு மண்ணும், மர நிழலும், பறவைகளின் சத்தமும், பக்கத்தில் சிறிய நீர்த்தடமாகச் சுற்றி நடக்கும் ஓடையும், கடலில் இருந்து புறப்படும் காற்றும், சுத்தமான சூழ்நிலையுமாக அவருக்கு மிகவும் பிடித்துப்போன பிரதேசம் அது. அதை அசுத்தப்படுத்த அவரால் முடிந்ததனைத்தும் செய்வார், ஆமாம்.
இந்த வாரக் கடைசி சனிக்கிழமை இது. இன்று காலை ஏழு மணிக்கு மதாம் அசதியோடு தூங்கிக் கொண்டிருக்கும்போதே, துரை சாரட்டை சித்தம் செய்து வைக்க ஏற்பாடு செய்து விட்டார். ஆனால் நாம் நினைப்பது போலவா நாள் நடக்கும்? பிரஞ்சு கவர்னர் தியூப்ளே துரைக்கு எத்தனை பிரச்சனைகள்!
துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளை உடம்பு சரியில்லாமல் போன பிறகு துரையின் பிரதான வேலையான கபுறு கேட்டல் என்ற தகவல் கேட்பது தடைப்பட்டுப் போயிருக்கிறது.
பிள்ளைவாள் பார்த்துப் பார்த்து கவர்னர் துரை உத்தியோக ரீதியில் தெரிந்து கொள்ள வேண்டிய பிரத்தியேக கபுறு, மற்றபடி உளவு வார்த்தை, ஊர் வம்பு, ஹேஷ்யம், அனுமானம், ஹாஸ்யம் எல்லாம் அனுதினமும் வந்து இருந்து விஸ்தாரமாக முகவார்த்தை சொல்லி, அனுப்பிவித்துக்கொண்டு போவார். லிகிதமாகவும் சிலதை எழுதி அனுப்பி வைப்பார். அது பிள்ளைவாள் சுகவீனம் அடைந்த பிற்பாடு, எப்போதும் போல் தியூப்ளே துரைக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது. கிடைத்தாலும் உடனடியாக வந்து சேர்வதில்லை.
ஆனந்தரங்கம்பிள்ளை ஒற்றை மனுஷ்யராக ஆள் அம்பு குதிரை நிர்வகித்து இத்தனையும் திரட்டுகிறதை மற்றவர்கள் செய்தால் பல பேர் அதுக்கு வேண்டியிருக்கும்.
சர்க்கார் கபுறுக்கு ஒருத்தன், ஊர் வம்புக்கு ஒருத்தன், உளவு வார்த்தைக்கு ஒருத்தன், உளறுமொழிக்கு இன்னொருத்தன் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒருத்தனாக நியமித்தால் புதுச்சேரி பிரஞ்சு சர்க்காரின் கஜானா காலியாகி விடும்.
மேலும், எவனுக்கும் சர்வ வியாபகமான அறிவோ, சமத்காரமாகவும், சட்டென்று பதில் சொல்வதாகவும் மதிநுட்பமோ கிடையாது. வெற்றிலையும் பாக்கும் நாள் முழுக்க மென்று மென்று அசமஞ்சமாகத்தான் அரையில் சொறிந்தபடி அவனவன் வேலைக்கு வரான். பல் துலக்கும் நேரம் தவிர, அப்படி ஒன்று இருந்தால், பல் துலக்கும் நேரம் தவிர, சம்போக நேரம் அடங்கலாக இவர்கள் வெற்றிலை பாக்கு மெல்லாத பொழுது இல்லை.
ஈதெல்லாம் சேர்ந்து தியூப்ளே துரையின் சனிக்கிழமை விடுமுறை நாளைப் பாழ் பண்ணுவதாக ஆக்கியது. புறப்பட்டதுமே அவருக்கு நிலைமை சரியில்லாமல் போனது. சாரட் ஓட்டுகிறவனும் கூடவே லொங்குலொங்கென்று கையில் ஈட்டியோடு ஓடி வரும் நாலு பயல்களும் நவாப் மோஸ்தரில் சலாம் செய்து, அதிலே ஒரு முட்டாள் ”முரட்டாண்டி சாவடிக்கு போக எல்லாம் துரை சித்தப்படி தயார்” என்றபோதே அவருக்குக் கட்டோடு பிடிக்காமல் போனது.
இந்த கிராமத்துப் பெயர் முரட்டாண்டி சாவடி என்று இந்தப் பயல்கள் சொல்வதை இன்னும் நிறுத்தவில்லை. தியூப்ளே பேட்டை என்று ஒரு வருடம் முன்னால் ஊர்ப் பெயரை மாற்றி கவர்னர் துரை தன் பெயரைச் சூட்டினாலும் அதை ஒருத்தனும் லட்சியம் செய்வதில்லை.
சொல்லக் கஷ்டமாக இருப்பதாக அவனவன் சலித்துக் கொண்டபோது தியூப்ளெக்ஸ் பேட்டை, தியூப்ளே பேட்டை, தூப்ளே பேட்டை, துப்ளேப் பேட்டை என்று கொஞ்சம் அங்கே இங்கே தட்டிக்கொட்டி மாற்றிப் பெயரை உச்சரிக்கவும் அனுமதி கொடுத்தாகி விட்டது. இருந்தும் இன்னும் நீட்டி முழக்கி மொரட்டாண்டி சாவடி என்று தான் சொல்கிறான்கள்.
நிகழ்ந்து போன குரோதன வருடம் வைகாசி மாதத்தில் ஒருநாள் சாயங்காலம் முனிசிபல் கவுன்சிலில் இருந்து கவர்னர் அவரது மாளிகைக்கு வந்தார். அலமுசு பண்ணிவிட்டு (காப்பி குடித்து) கவர்னர் துரை இருந்துகொண்டு துபாஷ் ஆனந்தரங்கப் பிள்ளையிடம் சொன்னது என்னவென்றால் –
”ரங்கப்பா இதொண்ணும் சரியில்லை, கேட்டாயா.. இந்த சாமானிய ஜனங்களுக்கு பெரிய இடத்து வார்த்தை ஏதும் அர்த்தமாகுவதில்லை. எனவே கடுமையான நடவடிக்கை எடுத்து அதைப் புரிய வைக்கப் போகிறோம் இனி”.
உத்தரவாகணும் என்று பிள்ளையவர்கள் வாய் பார்த்திருக்க துரை சொன்னது –
”இந்த நாள் தொடங்கி இனி எப்போதும் முரட்டாண்டி சாவடி என்று யாரும் பழைய பெயரைச் சொல்லக் கூடாது என்று உத்தரவு போடுவோம். பிடிவாதமாகவோ, வாய் மறதியாகவோ முரட்டாண்டி சாவடி என்று சொன்னவன், சொன்ன ஸ்த்ரி காதை அறுத்து, நாக்கில் மாட்டுச் சாணத்தைத் தடவி புதுச்சேரி பட்டண எல்லையில் விடுத்து, மறுபடி உள்ளே வரவொட்டாமல் செய்ய வேண்டியது”.
அந்த யோசனைக்கு ஆனந்தரங்கம்பிள்ளையவர்கள் இருந்து கொண்டு தகுந்த உத்தரமாகச் சொன்னது-
”மெத்தவுஞ்சரி. கவர்னரவர்கள் இந்த விஷயத்துக்காக காதை அறுப்பது என்று புறப்பட்டால் அறுந்து விழுகின்ற காதுகளை எடுத்து அகற்றி வைக்க சிப்பந்தி, தொட்டி வகையறா என்று நிறையத் தேவைப்படும். இன்னொன்று யார் இப்படி சொல்கிறான் என்று கேட்டுக்கொண்டு சுற்றிவர அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ருசுப்பிக்க சாட்சிகளை தயார் செய்ய வேண்டும். இந்த சின்ன காரியத்துக்கு அத்தனை பிரயத்தனம் தேவை இல்லையே”.
அந்த மட்டில் அங்கே வந்த மதாம் துரைசானியம்மாள் துரைக்கும் தனக்கும் கபே கொண்டு வர குசினிக்கார குப்பையா செட்டியிடம் உத்தரவிட்டுவிட்டு இருந்து கொண்டு, ஆனந்தரங்கப் பிள்ளையிடமும், அவர் முகாந்திரம் கவர்னரிடமும் மொழிந்ததோ இந்த விதத்தில் இருந்தது –
”காலையில் சாவடியிலோ நெல் விளையும் வயலிலோ, கள் இறக்கவும், குடிக்கவும் போகும் தென்னந்தோப்பிலோ ஜனங்கள் கூடும்போது சுவாமியை ஸ்மரிக்கிறதுபோல் பத்து தடவை எல்லோரும் சேர்ந்து ”தியூப்ளெக்ஸ் பேட்டை, தியூப்ளெக்ஸ் பேட்டை” என்று உச்ச ஸ்தாயியில் சொல்லி அதன்பிறகு அவனவனுக்கான கிரமத்தில் புத்தி செலுத்த வேண்டியதென்று சட்டம் போடலாம். வீடுகளிலும் காலையில் உலையேற்றும்போது இதேபடி ஸ்திரிகளும், வயசு ரொம்ப ஆகி வீட்டோடு கிடக்கிற கிழங்களும் ஓசை எழுப்பப் பண்ணாலாம்.
”இதற்கு அப்புறமும் முரட்டாண்டி சாவடி என்று உச்சரிக்கிறவன் பல்லை ஒரு தடவை சொன்னதற்கு ஒன்று வீதம் உடைத்துப் போடலாம்.
”ஷாம்பினா பாதிரியார் இந்த மாதிரி தண்டனைகளை அவிசுவாசிகளுக்கு அளிக்க பரீஸிலிருந்து தளவாடம் வாங்கி வந்திருக்கிறார். பல் உடைக்கும்போது சத்தத்தை பெருக்கி கேட்க நன்றாக உள்ளது. பல் உடைபட்டவன் தீனமாக அலறுவதும் கேட்க நேர்த்தியாக உள்ளது”.
அப்போது துரையவர்கள் இருந்து கொண்டு சொன்னது –
”பெயரை மாற்றிச் சொல்வதில் தான் நாம் கருத்து செலுத்த வேண்டுமே தவிர, பழைய பெயரைச் சொல்லுவான் என்று எதிர்பார்த்து தண்டிப்பதில் நேரம் செலுத்தினால், நமக்கு சித்திரவதையில் தான் நாட்டம் என்று புலனாகிவிடும். ஏற்கனவே பாதிரியார் அவிசுவாசிகளுக்கு இதுபோல் தண்டனை தர ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் பிரசங்கித்தது ஊரில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாம். இதிலே முரட்டாண்டிச் சாவடிக்காகப் பல் உடைப்பதையும் சேர்த்து இன்னும் கஷ்டமாக்க வேண்டாம். என்ன ரங்கப்பா நீ நினைப்பது என்ன?”
ஆனந்தரங்கம் பிள்ளை அதற்கு பதிலாகச் சொன்னது-
”நானும் அது தான் சொல்ல உத்தேசித்தேன். வேலியில் போகிற ஓணானை எதுக்கு இடுப்பில் எடுத்து விட்டுக் கொள்ளவேணும் என்று இங்கே பழமொழி ஒன்று உண்டு. மதாமுக்கு தமிழ் புரியுமென்பதால் தெரிந்திருக்கக்கூடும்”.
மதாம் அபூர்வமாக தே (டீ) வேணாமென்று வைத்து கபே பருகியபடி இருந்துகொண்டு இதுக்கு உத்தரமாகச் சொன்ன யோசனை பின்வருமாறு இருந்தது –
”அங்கங்கே தெருவிலே கூட்டம் போட்டு பெயர் மாற்றத்தை ஜனங்களின் புத்திக்குக் கொண்டு போகணும் ரங்கப்பா. அப்படியே பயப்படுத்தணும்”.
அந்த யோசனை இன்னும் நடப்பாக்கப்படவில்லை. நேற்றுக்கூட மதாம் ஞாபகப்படுத்தினாள். கவர்னர் துரைக்கு ஆயிரம் ஜோலி. முரட்டாண்டி சாவடி புத்தியில் முன்னால் வந்து நிற்கவில்லை நேற்று வரை. காரணம் இதுதான் –
கிறிஸ்துவ மதப் பிரசாரம் போல் தெருக்கோடியில் கூட்டம் கூட்டிப் பேச ஆட்கள் வேண்டும். கவுன்சில் உத்தியோகத்தில் இப்படி யாரும் இல்லாத காரணத்தால் வெளியே ஆட்களைத் தேட வேண்டும். குறைந்த செலவாக ஆளுக்கு நாலைந்து துட்டு, ஒரு தினத்துக்கு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இலவசமாகக் கொடுத்து விடலாம்.
அது ஒரு பிரச்சனையைத் தீர்க்கிற வழிமுறையாக இருக்கும்.
மற்றபடி சில லிகிதங்களை இங்க்லீஷில் எழுதுவிக்கவும், கபுறு வந்ததில் தமிழை, வேறே அந்நிய பாஷையை கவர்னரிடம் பிரஞ்சில் சொல்லவுமாக, துவிபாஷி தேவை. ஆனந்தரங்கம் பிள்ளை மறுபடி ஆரோக்கியம் கொள்ள இன்னொரு மாதமாவது ஆகும் என்றார்களாம் பிள்ளையின் வைத்தியர்கள். தாற்காலிகமாக ஒரு துபாஷை வேலைக்கு தயார் பண்ண வேணும். பிள்ளைக்கு வேண்டியவர்களில் யாரையாவது அவரே ஒரு மாதம், பத்து நாளுக்கு விரல் சுட்டலாம்.
துரை இளநீரை ஒவ்வொன்றாக சீவித்தரச் சொல்லி குடிக்க தொண்டையும் கழுத்தும் கண்ணும் குளிர்ந்ததாக தோன்றியது. பின்னால் பூட்ஸ் அணிந்த கால்களின் சத்தம். இளநீரைத் தரையில் தவறவிடாமல் இறுகப் பற்றி மடியில் இருத்தியபடி திரும்பிப் பார்த்தார் அவர். வந்தவன் மெய்க்காப்பாளன் ஆன முசியெ அந்த்வான் மொர்சேன். தமிழ் கற்ற கும்பினி பிரஞ்சுக்காரன் அவன்.
”என்ன மொர்சேன், கள்ளு எடுத்து வரவா என்று கேட்கிறான்களா? வேணாம். இவ்வளவு சீக்கிரம் கள்ளு குடித்தால் அப்புறம் எனக்கு தூக்கம் வந்துவிடும். மதியத்துக்கு நண்டும், இறாலும் சமைத்து அனுப்பச் சொல்லியிருக்கிறேன். தூங்கினால் அதெல்லாம் வீணாக, பசியும் அசதியுமாக சாயந்திரமே ஆகிவிடும்.. கள்ளை பகலுக்கு ஒரு மணி நேரம் தள்ளி எடுத்துவரச் சொல்”.
”மன்னிக்க வேணும் முசியே கவர்னதோர், கவர்னர் அவர்களே, உங்களைப் பார்க்க ஒரு துபாஷி வந்திருக்கிறார். தமிழ்க்காரர். சோமாசி ராயரென்றோ ராமோசி ராயர் என்றோ பெயர் சொன்னார்”.
தியூப்ளே நெஞ்சுக்குக் குறுக்கே பூணூல் தரிப்பது போல் அபிநயம் செய்து காட்டி, வந்தவன் பிராமணனா என்று விசாரித்தார். நூல் எதுவும் கண்ணில் படவில்லை என்றான் எய்ட் தெ காம்ப் அந்த்வான் மொர்சேன்.
”நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று வந்த இடத்திலும் தொல்லைதானா? நாளைக்கு.. நாளைக்கு வேண்டாம், ஞாயிற்றுக்கிழமை. கோவிலுக்குப் போக, பூசை வைக்க நேரம் போய்விடும். பனிரெண்டு மணிக்கு மறுபடி முரட்டாண்டி.. நாசம்.. தூப்ளெக்ஸ் பேட்டைக்கு வருவேன் மிச்சமீதி ஓய்வெடுக்க. அவனை திங்கள்கிழமை என் பீரோவுக்கு (ஆபீசுக்கு) வரச் சொல்லு”.
கவர்னர் துரையவர்கள் சலித்துக்கொண்டார். முரட்டாண்டி நாக்கை விட்டு இறங்க மாட்டேனென்கிறது.
”மன்னிக்கணும் முசியே, இந்த துபாஷ் முசியே ரங்கப்பிள்ளே அனுப்பி வச்சவராம். அவரை முரட்டாண்டி சாவடியில் வந்து பார்க்கச் சொன்னீர்களாம் ப்ரபோ”.
திரும்பவும் முரட்டாண்டி. எய்ட் தெ காம்ப் அனர்த்தம் விளைவித்ததை உணர்ந்து உடனே பேச்சை நிறுத்தினான்.
இப்படி தன் சொந்த நாக்கே, பக்கத்தில் இருந்து குற்றேவல் செய்கிறவர்களே, சொன்ன பிரகாரம் கேட்காதபோது ஊர்க்காரன் காதை எங்ஙனம் அறுப்பது? தியூப்ளே துரை முகம் சுளித்துக் கொண்டார்,
அவர் இன்னொரு இளநீரை எடுத்தபடி, அந்த மனுஷரை வரச்சொல்லு என்று சொல்லி, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார். துணிக் கூடாரத்து நீலத் துணி படுதாவாகவும் சுவராகவும் கூரையாகவும் காற்றில் சலசலத்தது.
”உம் பெயர் என்ன?”
கவர்னர் தியூப்ளே துரை வடக்கு பிரான்சில் லாந்த்ரொசி பிரதேசத்தில் பேசப்படும் பிரெஞ்சு மொழி உச்சரிப்பில் ராமோஜியைக் கேட்டார்.
”ராமோஜி பத்துஜி ராவ்”.
ரொம்ப பெரிசா இருக்கே என்றார் ழோசப் பிரான்ஸ்வா தியூப்ளே.
தன்னை ராமோஜி அல்லது ராமோ என்று கூப்பிடலாம் என்று அடக்கத்தோடு பதில் சொன்னபோது சர்வ ஜாக்கிரதையாக அவனும் வடக்கு பிரான்ஸ் உச்சரிப்புக்கு மாறினான். துரை முகம் துளி சந்தோஷத்தைக் காட்டியது.
”குடும்பம் எப்படி? கல்யாணம் ஆனவரா நீர்?”
ஆம் என்று பணிவோடு சொன்னான் ராமோஜி.
“பெண்டாட்டியையும் ரெட்டை பிறவிகளான எட்டு வயது மகள்கள் இருவரையும் ஆறு வருஷம் முன் படகுப் பிரயாணத்தின்போது பறி கொடுத்தவன் நான். தனியனாக என் வாழ்க்கை போகிறது பிரபோ”.
தியூப்ளே தலையைக் குலுக்கியபடி துக்கம் அபிநயித்தார். தேவனுக்கு மகிமை என்று அவருடைய கரங்கள் யந்திரமாக விரிந்து வானத்தைப் பார்த்து நொடியில் தாழ்ந்தன.
”வெனீஸ் நகர் காணக் கூட்டிப் போயிருந்தீரோ?”
“இல்லை மகாப்ரபு, சந்திரநாகூர் காட்டுவதற்காகக் கூட்டிப் போனபோது படகு மூழ்கி ..”
ராமோஜி தரையைப் பார்த்தபடி நின்றிருந்தான். துரை அவனை நோக்கினார்.
”நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?”
துரை விசாரித்தார். இன்னொரு இளநீர் வெட்டப்பட்டு அவர் வாய்க்குள் தாரையாக வழிந்து கொண்டிருந்தது. மரியாதைக்குக் கூட இரும் என்றோ இளநீர் குடிக்கிறீரோ என்றோ விசாரிக்கவில்லை துரை.
அது கிடக்குது. வந்தது வந்தாய், நான் கேட்கக் கேட்கப் பதில் சொல்லிக்கொண்டு என் காலைப் பிடித்து விடு என்று சொல்லாமல் இருந்தாரே, அதுவரை விசேஷம்தான்.
“புடவைக் கிடங்கு வைத்து சாயம் தோய்த்து அந்நிய நாடுகளில் விற்கிறவர்களில் நானும் ஒருவன், ஐயா”
”பிரஞ்சு எங்கே பயின்றீர்?
”நான் காரைக்கால் காரன். காரைக்காலை துமா துரை மராத்தி மன்னரிடம் இருந்து விலைக்கு வாங்கியபோது அங்கே ப்ரஞ்சு கலாசாலையும் நாகரிகமும் பரவி வந்தது. நான் அப்படி ஒரு கலாசாலையில் தான் பிரஞ்சு படித்தேன்” என்றான் ராமோஜி.
”ராமோசி ராயர் … ராமோசி இது போதும் உம்மைக் கூப்பிட”.
உத்தரவு முசியே என்று வணங்கினான் ராமோஜி. அப்போதிருந்து அவன் ராமோசி ராயன் ஆனான்.
”ரங்கப்பிள்ளை வரும்வரை அவர் வேலையில் கொஞ்சம் பங்கு போட்டுக்கொள்ளும். அவரால் செய்ய முடியாமல் போகிறவற்றை அனுமதி பெற்று நீர் எடுத்துப் பாரும்”.
”யார் அனுமதி, கடவுளே?”
”ரங்கப்பிள்ளை தான், வேறு யார்? நீர் முதல் நாள் என்பதால் என்னோடு இவ்வளவு நேரம் நின்று பேச முடிகிறது. சரி வேலைக்கு வந்தீர். முதல் வேலை இது… இன்னும் ஒரு மாதத்தில் நாட்டியம், பாட்டு, பேச்சு மூலமாக தியூப்ளே பேட்டை பெயரை பிரபலமாக்கணும். நீர் என்ன செய்வீரோ தெரியாது. ஊர்ப் பெயரை முரட்டாண்டி என்று யாராவது சொன்னால் காது அறுபடும் என்பதையும் புரிய வைக்கணும். இன்னும் முப்பது நாளில் உம்மைக் கேட்பேன். இதெல்லாம் நடக்க முடியாமல் போனால் உம் காதையும் அறுத்து பட்டணத்துக்கு வெளியே துரத்தி விடுவேன்”.
கிராதக துரை.
”உமக்கு சம்பளம் எல்லாம் முசியே பிள்ளை மூலம் தெரியப்படுத்தப்படும்”
”உத்தரவு முசியே துரையவர்களே”
வேலை பார்த்துக் கிட்டும் பணம் ராமோஜிக்குத் தேவையில்லை. ஆஸ்தி உண்டு. அது போதும். ஆனால் வேலையில் வரும் பெயர் அவனுக்கு வேண்டியுள்ளது. ஒரே ஒரு நாள் பிரஞ்சு ராஜாங்க உத்தியோகம் என்றாலும்.
”கேட்க விட்டுப் போச்சே. உமக்கு எப்படி முசியே ரங்கப்புள்ளே பரிச்சயம்? அவர் மராத்தி ராயர் இல்லையே. தமிழராச்சுதே”
”ஐயா, அவர் என் காலம் செய்த தந்தையாருடைய நல்ல சிநேகிதர். இரண்டு பேரும் ஆரம்ப நாட்களில் கூட்டு வியாபாரமாக புடவைக் கிடங்கு வைத்து சாயமேற்றி விற்பனைக்கு வெளிதேசம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்”.
”நல்லது. நீர் சரியாக காரியம் செய்யாவிட்டால் முசியே ரங்கப்புள்ளே மூலம் தண்டனை தருவோம். போய் நாளைக்கு வாரும்”.
அப்படி ராமோஜி அனுப்பிவித்துக்கொண்டு போனான். போகும் போது மனசு தியூப்ளே சொன்னதை அசை போட்டது.
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் துரை? நாட்டியத்தையும் சங்கீதத்தையும் ராமோஜியே ஒரு மாதத்தில் கற்றுக்கொண்டு பாடி ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? இது ஆடிப் பாடினதோடு முடிவடைகிற சமாச்சாரம் இல்லையே. சாகித்தியம் வேறே வேண்டி இருக்கிறது. அதைக் கேட்டு, ஆட்டம் பார்த்து ஜனங்கள் முரட்டாண்டிச் சாவடி என்ற பெயரையே மறந்துவிட வேண்டும். கோஷ்டியாக, அல்லது தனித்து, தியூப்ளே பேட்டை என்று ராகமாலிகையில் பாட வேண்டும். தில்லானா ஆட வேண்டும். எல்லாம் ஒரே மாதத்தில் நடந்து விடணுமாம்.
இதை அப்படியே ராமோஜியின் குருநாதர் ஆனந்தரங்கம்பிள்ளை அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருப்பதால் அவர் வீட்டுக்குப் போனான் ராமோஜி. உப்பரிகையில் கடற்காற்று ஏற்று மெல்ல உலவிக் கொண்டிருந்தார் அவர். ரொம்பவும் தளர்ந்திருந்தார். அவர் நடைக்குப் பாந்தமாக பின்னால் வெற்றிலைப் படிக்கத்தோடு ஒரு சிப்பந்தி போய்க் கொண்டிருந்தான்.
பிள்ளைவாள் உடம்பு என்ன வந்தாலும், ஒரு வெற்றிலையும், கொஞ்சம் பாக்கும் மென்றால் மெச்சப்பட்ட நிலைமை அடைந்து விடுவார். இரண்டு வாரமாக வெற்றிலையைக் கண்ணில் காணாமல் ஆக்கி விட்டான் வைத்தியன். அது அவரை சாய்ந்து விட்டது.
ராமோஜி வணங்கியபடி நின்றான். உள்ளே வாரும் என்று தலையை அசைத்தார் பிள்ளைவாள்.
மாடிக்குப் போவதில் ராமோஜிக்கு மனதில் ஒரு இடைஞ்சல் இருந்தது. பிள்ளைவாள் என்னதான் தனவந்தரும், பெரிய உத்தியோகஸ்தரும், அப்பாவின் அத்யந்த சிநேகிதரும் ஆனாலும், வாரக் கணக்கில் குளிக்காத மனுஷர். பக்கத்தில் போனால் வாடை அடிக்கத்தான் செய்யும்.
அதுவும், சுரமும் வேறே என்னவோ ரோகமுமாக இருக்கக் கூடியவர் என்பதால், பக்கத்தில் போனாலோ அல்லது அவருக்கு பின்னால் நின்றாலோ தொற்றுநோயாக அது நம்மையும் பீடிக்கக் கூடும். அப்புறம் ராமோஜி இடத்துக்கு துபாஷியை எங்கே தேட? காது அறுக்க கம்பியோடு தியூப்ளே துரை வேறே பின்னால் நிற்கிறார்.
அதைச் சொல்லணுமே ரங்கப்பிள்ளைவாளிடம். மேலே போகாமல் கீழேயே நின்று வர்த்தமானம் எல்லாம் சொன்னால் தெருவில் போகிறவனும், வீட்டுக்குள் குற்றேவல் செய்கிறவளுமெல்லாம் இதைக் காதில் வாங்கி வேறெங்காவது யாரோடாவது பகிர்ந்து கொள்ளக் கூடும்.
”நான் மேலே வரலாமா?” என்று பிள்ளைவாளிடம் பணிவோடு கேட்டான் ராமோஜி.
”வேணாமய்யா, நானே கீழே வருகிறேன்.. அங்கே என் குரிச்சியில் இருந்தால் தான் ராஜாங்க விஷயம் வகையறா நினைக்கவும் எழுதவும் தோதுப்படும்”.
ராமோஜி வாசலில் போட்டிருந்த பிரம்மாண்டமான நாற்காலிக்கு முன்னால் நிலைக் கண்ணாடியை ஒட்டி ஓரமாக நின்றான். பிள்ளை கீழே வர பத்து நிமிஷமானது. தளர்ந்த உடம்பு ஒத்துழைக்காவிட்டாலும் அவரே படி இறங்கினார். அலமுசு பண்ணிக் கொள்கிறீரா என்று ராமோஜியைக் கேட்டார். அவர் காப்பி குடிக்கிறாயா என்று விசாரித்தால் நிறைய நாட்குறிப்பாக எழுத வேண்டி இருக்கும். சில சமயம் பிரதி எடுக்கவும் நேரும்.
”வயணங்கள் சொல்லும், முரட்டாண்டி சாவடிக்குப் போயிருந்தீராமே”.
பிள்ளைவாள் விசாரித்தார். அவர் முரட்டாண்டி சாவடி என்று சொல்ல, ராமோஜி சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
எதற்கு சிரிக்கிறீர் என்று தெரியும் என்றபடி அவரும் அடக்க முடியாமல் சிரித்தார்.
துரைத்தனத்து கபுறு எல்லாம் பிள்ளைவாளுக்குக் கூறினான் ராமோசி ராயன் என்ற ராமோஜி.
”இதென்ன ஆரியக்கூத்து? பெயரை இஷ்டத்துக்கு மாற்றி வைப்பார்களாம். அதை ஜாக்கிரதையாக அதே படிக்கு புதுப் பெயரில் சொல்லாவிட்டால் கசையடியாம், அபராதமாம், காதறுப்பாம். ஒவ்வொருத்தர் பின்னாலேயும் கவர்னர் மாளிகை, காதறுக்கக் கத்தியோடு சேவகர்களை அனுப்புமா?”
”பெரியவர்கள் மன்னிக்கணும். இந்த பெயர் விஷயத்தில் துரை உறுதியாக இருக்கறபடியால் தான், நானும் கொஞ்ச நாள் உங்கள் பெயரைச் சொல்லி தற்காலிகமாக சர்க்கார் உத்தியோகஸ்தனாக இருக்கேனே” என்றான் ராமோஜி.
அதுவும் மெத்தச் சரிதான் என்றவர் போன வாரம் விட்ட இடத்திலிருந்து நாள் குறிப்பு எழுதலாமா என்று கேட்டார். ஒரு வாரம் எழுதலியே என்றான் ராமோஜி.
“அது ரொம்ப இல்லை, ராஜாங்கம் இல்லாத சம்பவங்கள் தான் எழுத வேண்டியது. ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும்” என்றார் அவர்.
இந்த வாரத்தில் ராஜாங்கமாக இல்லாமல் என்னவெல்லாம் நடந்தது இந்த நாள் குறிப்பில் எழுதி வைக்க என்று புரியாமல் ஆனந்தரங்கம் பிள்ளையைப் பார்த்தான் ராமோஜி.
”கள்ளுக் குடித்து விட்டு கும்பினி ஒஃபிசியே (ஆஃபீசர்) ஒருத்தன் நல்ல மீனாக பத்திருபது வாங்கி வா என்று சிப்பந்தியை சந்தைக்கு அனுப்பிச்சு வைத்து, அவன் வாங்கி வந்த மீன் நல்லதாக இல்லையென்று அடித்து உதைத்த விஷயம் அய்யா” என்றார் பிள்ளைவாள்.
இதென்ன கூத்து என்று முக வார்த்தையாக அவர் சொல்வதை எதிர்பார்த்திருந்தான் ராமோஜி. இது அவனுக்குக் கதை சொல்ல மட்டும். எழுத வேறே மாதிரி தமிழில் நீளநீளமாக வாக்கியங்கள் அமைத்து அவர் சொல்வதை அதே வேகத்தில் எழுத வேண்டியிருக்கும். எழுதினதைப் படிக்கச் சொல்லி அங்கங்கே அவர் திருத்தம் இருந்தால் சொல்வதால், எழுதிய பிரதி ஏறக்குறையப் பிழை இன்றி அமைந்து போகும்.
”அப்புறம் இந்த லச்சை கெட்ட சோல்தாத்து விவகாரம். கேட்டீரோ”, பிள்ளை உற்சாகமாகத் தொடர்ந்தார்.
”புலோ தோன் என்றோ என்னமோ பெயர் விளங்கான். பரீசில் இருந்து வந்தவனில்லை. காப்பிரி. தீவில் இருந்து வந்தவன். அவன் என்ன செய்தானா, நேற்று சாயங்காலம் வாணரப்பேட்டை தோப்பில் தென்னங்கள் மாந்தி அதே படிக்கு தியாகு முதலியார் தெருவில் திறந்து கிடந்த ஒரு வீட்டில் நுழைந்திருக்கிறான். பதினைந்து வயசு சொல்லத்தக்க ஒரு பெண்ணுக்கு அவளுக்கு தாயார் வயதில் இன்னொரு ஸ்திரி தலைமயிரில் பேன் பார்த்துக் கொண்டிருக்க இவன் குடிபோதையிலே உடுப்பை களைந்து விட்டு, சாடி விழுந்து அந்தப் பெண்பிள்ளைகள் ரெண்டு பேரையும் முத்தமிட்டு சந்தோஷமாக இருப்போம். ரெண்டு பேரும் வாங்களடி என்று ஆரம்பித்து இன்னும் அசங்கியமானதாக வார்த்தை எடுத்து விட அவர்கள் கூகூ வென்று கூக்குரலிட்டு வாசலுக்கு ஓடி வந்தார்களாம். வந்து, திரும்ப அங்கே கதவை சாத்தி, வெளியில் இருந்து பூட்டும் இட்டார்கள். பக்கத்து வீடுகளில் இருந்து ஆண்கள் திரண்டு வந்து காப்பிரி சொலுதாதுவை (சிப்பாய்) அடித்து, இரண்டு பல்லையும் உடைத்து, கிரிமாசி பண்டிதன் அதிகாரத்தில் இருக்கும் சாவடியில் கொண்டு போய்த் தள்ளி விட்டார்களாம். கும்பினி சொலுதாதுக்கு இனியும் இங்கே காவல் இருக்க சந்தர்ப்பம் தராது அடுத்த கப்பலில் கோலனிக்கு திரும்ப அனுப்பும் முன்பு அவனுக்கு பத்து சாட்டையடியாவது தரணும் என்று தெருக்கார மனுஷர்கள் என்னிடம் முறையிட வந்து, நான் உடம்பு சரியில்லாமல் போனதால் வீட்டில் சொல்லிப் போனார்கள். துரைக்கு சமாசாரம் தெரியுமோ என்னமோ. இதை மட்டும் இன்று எழுதினால் போதும்”.
அவர் நிறுத்தாமல் பேசியதால் களைப்படைந்து காணப்பட்டார்.
February 18, 2022
பெரு நாவல் ‘மிளகு’ வெளியீடு
February 17, 2022
பெரு நாவல் ‘மிளகு’ – Sankaran goes under the surgeon’s scalpel
an excerpt from my ready-to-be-published novel MILAGU
அப்படியாக அலோபதி அறுவை சிகிச்சை நடத்தி சங்கரனின் நாசியைச் சரிபண்ணலாம் என்ற முடிவுக்கு மறுபடி வந்தாகி விட்டது. இந்த மாதிரி அறுவைசிகிச்சை நடத்த புது டில்லி லாஜ்பத் நகர் பகுதியில் பிரபலமான மருத்துவ மனையில் கௌரவ சர்ஜனாக இருக்கும் சுக்தேவ் சாமிநாதன் பெயர் பெற்றவர் என்று தெரிய வந்தது. அவர் மகப்பேறு மருத்துவரும் கூட.
அதென்ன பெயர் சுக்தேவ் சாமிநாதன் என்று விசாரிக்கத் தெரிய வந்த மேலதிகத் தகவல் இது – கடந்து போன தலைமுறையில் அதாவது 1940களில் மதறாஸில் இருந்து உத்தியோகம் தேடி வந்து ஆஸ்பத்திரி கிளார்க் ஆக வேலை கிடைத்து, நாளடைவில் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி பாஸ் பண்ணி சவுத் ப்ளாக்கில் லோயர் டிவிஷன் கிளார்க் ஆன சாமிநாதன் பக்கத்து சீட் அமர்ஜீத் கவுரைக் காதலித்து சீக்கிய மதத்துக்கு மாறி அவளைக் கல்யாணம் செய்து கொண்டு பெற்ற பிள்ளை சுக்தேவ் டாக்டரானாராம்.
எது எப்படியோ இருக்கட்டும், சுக்தேவ் அரை மணி நேரத்தில் சங்கரனின் நாசியைச் சரி பண்ணுவதாகச் சொல்லி ஆபரேஷன் தியேட்டரில் சங்கரனுக்கு அனஸ்தீசியா மயக்க மருந்து கொடுத்துப் படுக்க வைத்திருந்தார்கள். அவ்வேளையில் சர்ஜன் ஆபரேஷனுக்காக உள்ளே காலடி எடுத்து வைக்க, மின்சாரம் நின்று போனதாம்.
சகுனம் சரியில்லை என்று வசந்தி கருத, அன்றைக்கு முழுக்க மின்சாரம் வராத தினமாகப் போய், ஜெனரேட்டரும் வேலை செய்யாமல், அறுவை சிகிச்சையை வேறொரு நாளுக்கு மாற்றி வைக்கத் தீர்மானமானது.
அது போன வாரம் நடந்த சம்பவம். அன்று அனஸ்தீசியா ரொம்பவே பிடித்துப் போனது சங்கரனுக்கு. மயக்கத்தில் இருந்தபோது நாள் முழுக்க ரோஜாச் செடிகள் இரண்டு பக்கமும் அணிவகுத்த தோட்டத்து வழியில் அவற்றின் நறுமணத்தைத் தீர்க்கமாக முகர்ந்தபடி நடந்து போய்க் கொண்டே இருக்கும் காட்சி மனதை அமைதியாக வைத்திருந்ததாகச் சொன்னார் அந்த மயக்கம் நீங்கியதும்.
தெரிசாவுக்கும் அவருக்கும் முப்பது வயது குறைவாக, அவர்கள் கைகோர்த்து, அந்தத் தோட்டத்தில் மல்லிகைக் கொடிகளின் பின்னே அணைத்து இதழ் சேர்த்து, குறுமணல் காது மடல்களில் ஒட்டக் காதல் புரிந்த அனுபவம் ரசமாக இருந்தாலும், வசந்தி சங்கரனிடம் ரகசியமாகச் சொன்னதோடு சரியான கேள்வியும் கேட்டாள் –
பாவாடைப் பாப்பாவோடு க்லோரொஃபார்ம் க்ரீடையா கனவெல்லாம்?
ஒண்ணுமில்லே, ப்ளேன்லே போற கனவு. அதுலே முட்டிண்டு வந்தாலும் ஒண்ணுக்கு போகாம அடக்கிண்ட மாதிரி இருந்தது.
மனசறிந்து பொய் சொன்னார் சங்கரன். அப்புறம் அன்பு மனைவியை எல்லா பிரியத்தோடும் கௌரவத்தோடும் நடத்தும் மோஸ்தரில் சொன்னது இது –
உன் கண்ணுக்கு எல்லாம் பட்டுடறது. படாம இருந்தா நான் செக்ரட்டரியாக ரிடையர் ஆகியிருக்க முடியாது. சங்கரனுக்கு தீர்க்கமான முன்நோக்கு உண்டுன்னு ரெண்டு மத்திய அமைச்சர்கள் சொன்னாளே அந்த முன்நோக்கு எப்படி கிடைச்சது? என் வசந்தி கற்றுக் கொடுத்த யோகாசனத்தால் வந்த ஒண்ணாச்சே.
வசந்தி கையைப் பிடித்துக் கொண்டு நாத்தழதழக்கச் சொன்னார் சங்கரன்.
முன்னோக்குன்னா என்ன வசந்தி கேட்டாள்.
தூரதிருஷ்டி ஃபோர்ஸைட். Foresight.
அது உங்களுக்கு இருக்காமா?
இல்லையா பின்னே?
யார் சொன்னா உண்டுன்னு?
ஒண்ணுக்கு ரெண்டா செண்ட்ரல் மினிஸ்டர்ஸ்.
அங்கேயும் ஒண்ணுக்கா? வசந்தி அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.
வாயிலும் மூக்கிலும் சேர்த்துக் கட்டிய மெல்லிய துணி சர்ஜிகல் மாஸ்க் surgical mask அவிழ்ந்து தரையில் விழ, சங்கரன் ஓவென்று சிரித்தார்.
சங்கரன் கேட்டதெல்லாம் தினசரி ஒரு வேளையாவது அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உடம்பில் மயக்க மருந்து ஏற்றிவிட வேண்டும். அப்புறம் சங்கரனுக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது. யாருக்கும் எந்தக் கஷ்டமும் இருக்காது.
ஆனால் என்ன செய்ய? சர்ஜன் அதெல்லாம் தர முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் லேசான மயக்கம் தரும் மாத்திரைகள் இரண்டு அட்டை கொடுத்து தினம் ஒண்ணு முழுங்குங்கோ. அதுக்கு மேலே கூடாது. ஹிண்டுலே ஆபிசுவரி வந்துடும் என்று எச்சரித்து விட்டுப் போனார்.
வாசலில் வசந்தி அவரைத் துரத்தி வந்து தாழ்ந்த குரலில் சொன்னாள் – என்ன டாக்டர் அவர் தான் கேட்கறார்னா நீங்க தூக்க மாத்திரை கொடுத்துட்டேளே.
கவலையே படவேணாம். நான் கொடுத்தது வெறும் லிவ்-52 தான். அட்டையிலே வச்சு வந்தது. காலம்பற சங்கரன் சார் பிரச்சனை இல்லாமல் டாய்லெட்டுலே போய் உட்காரலாம் என்றபடி வசந்தியின் நல்மதிப்பில் நான்கைந்து படி மேலே ஏறி நின்று அந்தாண்டை நடந்து போனார்.
வசந்திக்குக்கூட சங்கரனுக்கு நாசி ஆபரேஷன் செய்யக் காத்திருக்கிற நாட்களாக எல்லா நாளும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
சங்கரனுக்கு தூக்க மாத்திரையோ லிவ் 52ஓ கிடைக்க நிம்மதியாக உறங்குவார். பாவாடைப் பாப்பா அவரோடு கலப்பாளோ என்னமோ, விரைத்துக் கிடந்தாலும் படுக்கையை நனைக்க மாட்டார் சங்கரன். சாப்பாடு கட்டு எதுவும் மூக்கிலோ வாயிலோ இல்லாமல் கொஞ்சம் போல் உள்ளே போகும். ஆனால் இன்றைக்கு ஆபரேஷனுக்கு நாள் குறித்துவிட்டார்கள்.
காலை ஏழு மணிக்கே கரண்ட் நிற்பதற்கு முன் அறுவை சிகிச்சையை நடத்தினார்கள். சங்கரனின் மகள் பகவதி, அவருடைய மனைவி வசந்தி, அப்புறம் மைத்துனர் என்று மருத்துவமனை வருகையாளர் இருக்கைகளை நிறைத்துவிட்டிருந்தார்கள். சாரதா தெரிசா முன்னால் வந்து உட்கார்ந்திருந்தாள். ராத்திரி தூங்கவே இல்லேடி என்று வசந்தியிடம் சொன்னாள் அவள். இப்போ கொஞ்சம் கண்மூடித் தூங்கப் பாரேண்டி என்றாள் வசந்தி. வாடி போடி உறவு சக்களத்திகளுக்குப் பிடித்திருந்தது.
மூக்கை அப்படியே சூர்ப்பனகைக்கு லட்சுமணன் அறுத்த மாதிரி அறுத்துடுவா. உள்ளே அழுக்கு, கல்லு இருந்தா எடுத்து க்ளீன் பண்ணி தச்சுப் போட்டுடுவா என்று தலைமை சர்ஜனாக சங்கரனின் மைத்துனர் பஞ்சாபகேசன் என்ற பஞ்சு அவுன்ஸ் கிளாஸில் அறிவு வழங்கிக் கொண்டிருந்தார் சகலருக்கும்.
ஒரு மணி நேரத்தில் ஆப்பரேஷன் முடிந்தாலும் அனஸ்தீசியா இன்னும் சக்தியாகச் செயல்பட்டதால் சங்கரன் நிம்மதியாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார்.
February 16, 2022
பெரு நாவல் ‘மிளகு’ – Chinna Sankaran regains his olfactory prowess
An excerpt from the novel MILAGU expected to hit the book sellers the coming week
சின்னச் சங்கரன் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருந்தார் –
ப்ரம்மம் ஒகடெ, ப்ரம்மம் ஒகடெ.
தெலுங்குப் பாட்டு. அன்னமாச்சார்யாவின் கீர்த்தனை. பௌளி ராகத்தில் அமைந்தது.
சங்கரனுக்கு தெலுங்கு தெரியாது. பௌளி மட்டும் இல்லை. எந்த ராகத்திலும் பாடத் தெரியாது. இந்தப் பாட்டும் முதல் வரியைத் தவிரப் பாடத் தெரியாது.
பாட்டை நிறுத்தி அப்பா அப்பா என்று கிரீச்சிடுகின்றார். மறுபடி பாடுகிறார்.
ப்ரம்மம் ஒகடெ, பரப்ரம்மம் ஒகடெ என்று திருப்பித் திருப்பி அவர் பாடிக் கொண்டிருந்ததற்கு அவர் காரணம் இல்லை. அப்பா அப்பா என்று அழைப்பதற்கும் தான்.
மறுபடி மறுபடி அவருக்கு வரும் கனவுக்கு அடுத்து மனம் இதைக் காட்சி விரிக்கின்றது. கூடவே ஒரே வாடை தட்டுப்படுகிறது. மூக்கைக் குத்தும் மிளகு வாடை அது.
அவருடைய மனதுக்குள் அல்லது புத்திக்குள், நீலச்சட்டை போட்டுக்கொண்டு, பொத்தான் இல்லாத, வயசானவர்கள் தலைவழியாகப் போட்டுக்கொள்ளும் சட்டை மாட்டிக் கொண்டு,யாரோ, ஒரு பத்து வயது அல்லது அதற்கும் கீழே வயதுள்ள பையன் அவரைப் பார்த்து சினேகிதமாகச் சிரிக்கிறான். அழுகிறான். அப்பா அப்பா என்று திரும்பத் திரும்பத் திரும்ப அழைக்கிறான். சங்கரன் அவனோடு பேச முற்படும்போது கனவு முடிந்து போகிறது.
அவனுக்குக் கட்டுப்பட்டு சங்கரனும் அதே குரலிலும் தொனியிலும் அப்பா அப்பா என்று கூவுகிறார்.
அவனோ சின்னச் சங்கரனோ எவ்வளவு அழைத்தாலும் யாரும் வருவதில்லை. யாரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்று சங்கரனுக்குத் தெரியாது. படபடப்பும் மன அழுத்தமும் அதிகரிக்கும் பொழுது அது.
அது கூடப் பொறுத்துக் கொள்ளலாம் கனவு வந்து போனதும் சங்கரனால். எதையும் சாப்பிட, குடிக்க முடியாமல் எல்லா ஆகாரமும், பானமும் மிளகு வாசனை, மிளகு வாடை மட்டும் அடிப்பதாக அவர் நாசிக்குத் தெரிய வந்தது தான் நரக வாதனை.
அம்பலப்புழைக்கும் அங்கிருந்து மங்களூருக்கும் போய் வந்தபோது அந்தக் கனவு வரவில்லை. ஒன்றிரண்டு நாள் எல்லா வாடையும் சந்தோஷகரமாக நாசியில் பட்டது.
இங்கே டில்லிக்குத் திரும்பி வந்ததும், விநோதமான நீலச்சட்டைப் பையன் வரும் கனவும் வந்தேன் வந்தேன் என்று திரும்ப வந்து சேர, சங்கரன் என்ன செய்யலாம் என்று செய்வதறியாது அலோபதி மருத்துவரைச் சென்றடைந்தார்.
டாக்டர் வெகுவாக ஆச்சரியப்பட்டார். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரே ஓரொற்றை வாடையை மனதில் கற்பனை செய்துகொண்டு, மூக்கைத் துணியால் கட்டி ஆகாரம் கழிக்க அமர்ந்து ஒரு மனுஷர். அதுவும் ஓய்வு பெற்ற அமைச்சரகக் காரியதரிசி வாயிலும் மூக்கிலும் மறைத்த துணியோடு இருந்தார் என்றால் அவருக்கு ஆச்சரியம் சொல்லி மாளவில்லை.
ஒரு சின்ன ப்ரொசீஜர், என்றால், அறுவை சிகிச்சை செய்து நாசியில் ஒரு எலும்பைச் சரிப்படுத்தினால், சாக்கடை முதல் பூக்கடை வரை எல்லா வாடையும் மூக்கை முட்டிக்கொண்டு வரிசையாக வந்து நிற்குமே.
இந்த யோசனையை ரெண்டாவது அபிப்ராயமாக இன்னொரு மருத்துவரிடம் பெறுவதற்காக சங்கரன் போய்ச் சந்தித்தபோது மனோதத்துவ நிபுணரான – என்றாலும் அலோபதி டாக்டரும் கூட- மருத்துவர் நிதானமாக வெற்றிலை பாக்குத் தாம்பூலம் தரித்துக்கொண்டு சொன்னார் –
உங்க மூக்கை பழக்கப்படுத்தணும். நினைச்ச நேரத்திலே நினைச்ச வாடை இருக்கறதா அது மூளைக்குச் சொல்லணும். அவ்வளவு தான். இதுக்காக மூக்கையே கழற்றி ஆப்பரேஷன் பண்ணிட்டு தலைகீழா ஒட்டிண்டிருக்கணுமா? உங்க இஷ்டம். நான் சொல்றதை சொல்லிட்டேன்.
என்ன ஆனது அதற்கு அப்புறம் என்றால், அலோபதி வேண்டாம், ஆபரேஷன் வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்து திரும்ப சங்கரன் வாயைக் கட்டி, நாசியைக் கட்டி அவ்வப்போது கொஞ்சம்போல் சாப்பிட்டு வர, எடை மிக மிகக் குறைந்து போனது. வேறொரு மூக்கு, தொண்டை, காது ஸ்பெஷலிஸ்ட் அலோபதி டாக்டரைப் போய்ப் பார்த்தார். ரதி போன்று பேரழகியான சினிமா நடிகைக்கு மூக்கைச் சற்றே நீட்டி வைத்துப் பிரபஞ்சப் பேரழகி ஆக்கியவராம் அவர்.
It is a muted version of congenital anosmia. I recommend a curative surgical procedure.
டாக்டர் அந்த குறைபாட்டையே தான் தான் உலகத்திலேயே முதலாகக் கண்டுபிடித்துப் பெயரும் இட்டது போன்ற பெருமையோடு வந்து போனார்.
சங்கரன் அத்தோடு நிறுத்தாமல் யாரோ ஆலோசனை சொல்ல, மூன்றாவதாக இன்னொரு டாக்டரை, அவர் ஆர்ய வைத்தியர், அணுகி அவருடைய கருத்தைப் பகிர்ந்து கொள்ளப் பணம் கொடுத்துக் காத்திருக்க மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும் என்றார் அந்த ஆர்யக்கூத்தர், என்றால், ஆர்ய வைத்தியர்.
செய்தால் எப்போதும் நல்ல வாடை எல்லாம் சுவாசிக்கலாம் என்றும் ஷரகரின் சத்ரசிகித்சைக் கோட்பாடுகள்படிச் சில ஆயிரம் வருடப் பழையகால முறையில் அந்த அறுவை சிகிச்சையை நடத்திக் கொடுக்க இருக்கும் ஆர்ய வைத்தியர்கள் ருத்ரப்ரயாகையில் ஒன்றிரண்டு பேர் தான் உண்டு என்றும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வர அலோபதி சிகிச்சைச் செலவைவிட அதிகம் பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
அவர் சிகிச்சை செய்துகொள்ளணுமா வேண்டாமா என்று தீர்மானமாகச் சொல்லாததால் சங்கரன் அவரிடம் மறுபடி கேட்க, முகம் சிவக்க அவர் சொன்னது –
சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது. சொல்ல வேண்டாதவை அப்படியே இருக்கட்டும். வேறேதும் எதிர்பார்த்தால் ருத்ரப்ரயாகையில் யோகிகள் உண்டு. நக்னரான அவர்கள் சொல்லக் கூடும் என்றார்.
சங்கரன் திரும்பிப் போகும்போது, அலோபதி வைத்தியர் உதவக்கூடும் என்றார். அலோபதி டாக்டர் அறுவை சிகிச்சைக்கு மறுபடி யோசனை சொன்னார்.
February 15, 2022
பெரு நாவல் ‘மிளகு’ – Paraman or his instance travels through the time-space continuum to 1600 AD for one last time
An excerpt from my forthcoming novel MILAGU
புது இடம் கொஞ்சமாவது பழகினால் அல்லாமல் இயல்பாக இருக்க முடியாது என்பதால் பரமனைத் தவிர மற்றவர்கள் அறை அறையாகப் புகுந்து புறப்பட்டு, இருட்டு வானத்தில் அடர்த்தியாகத் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து வியந்து கொண்டு குரலைச் சற்றே உயர்த்தி இது சகஜமான சூழ்நிலை என்று அவரவர்க்கு அவரவரே கற்பித்து அதுவும் இதுவும் பேசியபடி இருக்க நிலா சகல சௌந்தர்யத்தோடும் வானத்தில் புறப்பட்டது.
பௌர்ணமியா இன்னிக்கு என்று பகவதிக்குட்டி கேட்டாள்.
பௌர்ணமிக்கு இன்னும் மூணு நாள் இருக்கே என்றாள் தெரிசா.
அப்பாவை எழுப்பி சாப்பிட வைக்கலாமே. தெரிசா சொன்னாள்.
பரமன் பாதி நித்திரைக்கு மாறி இருந்தார். அவர் வாய் முணுமுணுத்துக்கொண்டே இருந்ததை பிஷாரடி கவனித்தார். கெருஸொப்பா என்று திரும்பத் திரும்பச் சொன்னார் அவர் உறக்கத்தில்.
திலீப் ராவ்ஜி அவருக்கு ஊட்ட நினைத்த சப்பாத்தியை வாயில் வைத்திருந்து உமிழ்ந்து விட்டார். துவையலை மட்டும் ஐந்து பெரிய ஸ்பூன், உறங்கியபடியே சுவைத்து உண்டார்.
மிளகு போடவில்லை என்று யாரிடமென்று இல்லாமல் பொதுவான புகாரைச் சொல்லியபடி படுத்தவர் கெருஸொப்பா என்றபடி மறுபடி உறங்கினார்.
அவரை உறங்க விட்டு மற்றவர்கள் சேர்ந்து உட்கார்ந்து அந்த வினோதமான சப்பாத்தி தேங்காய்த் துவையல் ராச்சாப்பாட்டை கோகோ கோலா சகிதம் சுவைத்து உண்டார்கள்.
மருது கான்வாஸ் பையை காரில் இருந்து எடுத்து வந்தான். மெட்டல் டிடெக்டர் என்றான் உள்ளிருந்து எடுத்த இரண்டு உலோகக் கண்டுபிடிப்பான் கருவிகளை நாற்காலியில் வைத்து.
நாளைக்கு விடிந்து எழுந்து கெருஸொப்பா நகரம் சிதிலமடைந்து என்ன இருக்கோ அதை எல்லாம் பார்க்கறோம். பரமன் தாத்தாவுக்கு அதைப் பார்க்கும்போது பழைய கெருஸொப்பா நினைவு வரலாம். இதுவரை அதிகமாக அகழ்வு செய்யாத பூமி இது. தரைக்கு ஆழத்திலே புதைத்து வைத்த புராதனப் பொருளாக, ஏதாவது கிடைக்கலாம். மெட்டல் டிடெக்டர் அதுக்குத்தான்.
அப்படிக்கூட புதையல் கிடைக்குமா? கல்பா கேட்டாள். –
எல்லாம் பரமன் நினைவு வைத்திருப்பதைப் பொறுத்து.
பிஷாரடி தேங்காய்த் துவையல் புரட்டிய சப்பாத்தியை ரசித்து உண்டபடி சொன்னார்.
என்ன எல்லாம் இருக்கு பார்க்க என்று கல்பா கேட்டாள். மருதுவுக்கும் இப்போது ஆர்வம் பற்றிக் கொண்டது.
நாலைந்து கட்டிடங்கள் சிதிலமடைந்து, அதெல்லாம் நானூறு வருஷம் முன்பு மனுஷர் வசித்த சிறு மாளிகைகளாக இருக்கலாம். விளக்குத் தூண் தெருச் சந்திப்பில் இருந்து விழுந்ததாக இருக்கலாம். அப்போது அங்கே சந்தித்துப் பிரியும் சாலைகள் இருந்திருக்கலாம். அப்புறம் சிதிலமடைந்து ஜ்வாலாமுகி கோவில். மகா முக்கியமாக சதுர்முக பஸதி, கிட்டத்தட்ட சிதிலமடையாமல்.
சதுர்முக பஸதின்னா? தெரிசா கேட்டாள்.
நாலு கதவு நாலு திசையிலும் இருக்கப்பட்ட சமணக் கோவில். நாளைக்கு எல்லாம் பார்க்கப் போறோம். பார்க்கக் கிடைக்காவிட்டாலும் பழைய நினைவுப்படி கெருஸொப்பாவை அங்கே இருந்தவர்ங்கிறதாலே பரமன் வாய் வார்த்தையாக விரிவாகச் சொல்வார்னு எதிர்பார்த்துத்தான் இங்கே வந்திருக்கோம். புதையல் ஏதும் கிடைத்தால் சர்க்காருக்குத் தரணும். இங்கே வர்றதுக்குக் கொடுத்த அனுமதிக் கடிதத்திலேயே அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கு. கிடைக்கும். கொடுப்போம்.
பிஷாரடி சொல்லிவிட்டுக் கை அலம்பப் போனார். உண்ட களைப்பு தீர சற்றுப் பக்கத்தில் நடந்து விட்டு வரலாம் என்று மருது புறப்பட்டான்.
போய்த்தான் ஆகணுமா என்று திலீப் ராவ்ஜி தன் மெல்லிய மறுப்பை வெளியிட்டார்.
மலையும் வனமுமாக இன்னும் இயற்கை விடைபெறாத பிரதேசம். பண்படுத்தப்படாத தரை, மேலே நட்சத்திரங்களும் சந்திரனும் மூடிய ஆகாசம். பார்த்தால் போதாதா, நடந்து அந்த அமைதியை ஏன் குலைக்கணும்? அப்பா அப்படி நினைக்கறார் என்றாள் கல்பா.
நான் இவ்வளவு நேர்த்தியாக கோவையாக நினைக்க மாட்டேன். ஆனாலும் கிட்டத்தட்ட இதெல்லாம் நினைவுலே வந்தது என்றார் திலீப் ராவ்ஜி.
ராவ் அங்கிள், ஆறு பேட்டரி செல் போட்ட பெரிய டார்ச் நாலு வச்சிருக்கோம். டிரைவர் பாலனுக்கு இது ரொம்பப் பழக்கமான இடம். நாளைக்கு பார்க்கறபோது கெருஸொப்பா இன்னும் தீர்க்கமாக அர்த்தமாகணும்னா இன்னிக்கு ராத்திரி அதில் கொஞ்சமாவது பார்த்துவிட்டு வரணும்னு கிளம்பினேன் என்ற மருதுவுக்குப் பின்னால் மற்ற எல்லோருமே நின்றார்கள்.
பரமன் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பதால் அவரை அப்படியே உறங்க விட்டு கதவைச் சார்த்தினார் பிஷாரடி.
தனியா இருக்கணுமே அப்பா என்று கவலைப்பட்டார் திலீப் ராவ்ஜி.
அவர் என்ன குழந்தையா, யார் எங்கே எப்போது இருக்கறாங்கன்னு எல்லா பிரபஞ்சத்திலும் தகவல் இருக்குமே என்று பிஷாரடி சொல்ல, அதை ஏற்கனவே அவர் சொன்ன தேஜாவூ திலீப் ராவ்ஜிக்கு.
இந்த பிரவேச அனுமதி ராத்திரியிலே இந்தப் பிரதேசத்தில் அலைந்து திரிய அனுமதி கொடுக்கலே என்றார் கடைசியாக திலீப்.
எந்த நேரத்தில் இங்கே நடக்கலாம்னு சொல்லாததாலே இருபத்து நாலு மணி நேரமும் பிரவேசிக்க, சுற்ற அனுமதி உண்டுன்னேன் என்றான் மருது.
டார்ச் விளக்குகள் தரையில் பரந்த ஒளிவட்டங்கள் இட்டு நகர்ந்து போக, பிஷாரடி முன்னால் நடந்தார். வடக்கில் கை சுண்டியபடி மற்றவர்கள் பின்னால் மெல்ல வருவதால் அவர்கள் வந்து சேரச் சற்றே நின்றார் அவர்.
ஏனோ அவருக்கு இல்லாத நினைவெல்லாம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. அதெல்லாம் அவர் அனுபவமும், எண்ணமும் சார்ந்து எழுந்த நினைப்புகள் இல்லை. அடுத்தவர் டயரியைப் படித்துத் தன்னை அவராக உணரும் விசித்திரமான மனநிலையில் அவர் இருந்தார்.
கைக்கடியாரத்தில் நேரம் பார்த்தார். இரவு பதினொன்று.
மற்றவர்கள் வந்தபிறகு வடக்கில் கொஞ்ச தூரத்தில் சதுர்முக பஸதி இருக்கிறது. நாளை அங்கே ஒரு மணி நேரமாவது செலவிடுவோம். அங்கிருந்துதான் நம் கெருஸொப்பா நடைப் பயணம் தொடங்கும்.
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது பின்னால் இருந்து சத்தம்.
நாளைக்கு ஏன், இன்னிக்கு இப்பவே நடக்கலாம் வாங்க. நான் எல்லாம் காட்டித் தரேன் என்று பரமன் குரல்.
கட்டைக்கால்களை ஊன்றி நடந்தபடி பரமன். அவர் குரல் தெளிவாக இருந்தது. புதர் மண்டிய ஒற்றையடிப் பாதையில் அவர் நடக்க, அந்தப் பாதை இருப்பதை அப்போதுதான் கவனித்த மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள். இது வாணியர் தெரு. தனபாலன் செட்டியார் மாளிகை இதோ நிற்கிறது. பரமன் கூறினார்.
ஆனா, இங்கே என்று ட்ரைவர் பாலன் ஏதோ இடைமறிக்க பிஷாரடி உஷ் என்று வாயில் விரல் வைத்து சும்மா இருக்கச் சொன்னார்.
ஒருவர் பின் ஒருவராகப் போய்க் கொண்டிருக்க, பரமன் சொன்னார் – நாங்கள் தினசரி தேங்காயெண்ணெயும் நல்லெண்ணெயும் இங்கே வாங்கித்தான் ஜயவிஜயீபவ இனிப்பு செய்ய எண்ணெய்ச்சட்டி காய வைப்போம்.
ரோகிணியம்மாள் மிட்டாய்க் கடையிலே என்று எங்கேயோ பார்த்தபடி பிஷாரடி சொன்னார்.
ஆமா, நான் தான் தலைமை மடையன். இது ரதவீதி. என் வீடு இங்கே தான் இருக்கு. அதோ அந்த மேற்கிலே நாலாவது, அதான் என் வீடு. என் பெண்டாட்டி ரோகிணி எனக்கு வாடகைக்குப் பார்த்துக் கொடுத்த வீடு.
அவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு என்றார் பிஷாரடி முணுமுணுப்பாக.
ரொம்பவே. நேமிநாதன் இல்லேன்னா என்னை நல்லா வச்சிண்டிருப்பா. குழந்தை மஞ்சுநாத்தையும் தான்.
இங்கே கிழக்கே நடந்தால் கோவில் வீதி. ராத்திரியிலே கோவில் எதுவும் திறந்திருக்காதே. பரமன் சோகமாக நின்றார்.
நாளைக்கு பார்த்துக்கலாம் என்றார் வெட்டவெளியைப் பார்த்தபடி பிஷாரடி.
ஆமா, எங்கே ஓடிப் போகப் போறது எல்லாம் என்றபடி நடந்தார் பரமன். நின்றார். எல்லோரும் நின்றார்கள்.
திலீப் ராவ்ஜிக்கு அவர் சித்த சுவாதீனம் இல்லாத பிரகிருதியாக ஏதோ பிதற்ற, பின்னால் எல்லோரும் சிரத்தையாக வருவது அபத்தம் எனப் பட்டது.
இங்கே இருந்து பாருங்க எல்லோரும். இதுதான் சதுர்முக பஸதி.
அவர் காட்டிய வெளியில் நிலவொளியில் கம்பீரமான ஒரு கட்டிடம் எழுந்து நின்றது. நான்கு பக்கத்திலும் நான்கு கதவுகள் திறந்திருந்தன.
சமணக் கோவில். உண்மைக்கு நூறு வாசல் உண்டு. இது தான் சத்தியத்தை நோக்கி அழைத்துப் போகும் என்று மதமோ, இனமோ, மொழியோ இல்லை. எல்லாத் திசையில் இருந்தும் எல்லா நல்ல வழிகளில் பயணப்பட்டும் அதை அடையலாம். சதுர்முக பஸதி. நான்கு வாசல் கோவில். நான்கு வாசல் நான்கு திசை குறிப்பது. வாருங்கள். எல்லாக் கதவும் திறந்திருக்கிறது.
பரமன் இப்போது கூட்டத்துக்கு முன்னால் வந்திருந்தார். ஏதோ அசாதரணமான ஒரு சம்பவம் நிகழப் போவதாக எதிர்பார்த்து எல்லோரும் அவர் பின் நடந்தார்கள்.
எத்தனை அழகான சத்திய ஆலயம். பரமன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தக் கட்டிடம் மெல்லச் சுழலத் தொடங்கியது.
நடுவில் அச்சு வைத்துச் சுழலும் சக்கரத்தின் மேல் அந்தக் கட்டிடம் நின்றிருந்தது. பஸதியின் உள்ளே ஒவ்வொரு வாசல் வழியாகவும் வரிசையாக பரமன் பிரதிகள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு நிமிடம் கெருஸொப்பா தெரு பஸதிக்குள் தட்டுப்பட்டது. ஒரு பரமன் குதிரை வண்டியில் வேகமாக நகரும்போது எதிரே அரச அலங்காரங்களோடு ஒரு அறுபது வயது மூதாட்டி கம்பீரமாக வந்து கொண்டிருந்தாள்.
அந்தப் பரமன் வண்டியை ஓரமாக நிறுத்த, வந்தவள் ‘நீர் வரதனா’ என்று அவரைக் கேட்டாள்.
இல்லை மகாராணி, நான் பரமன் என்கிறார். நானூறு வருடங்கள் உங்கள் காலத்துக்கு அப்புறம் பம்பாயில் ஜீவிக்கிறவன்.
பம்பாயா? தலைக்கு சுகவீனம் போல என்றபடி அந்த மூதாட்டி போகும்போது நான் தான் வரதன் என்று இளைஞனாக இருக்கும் இன்னொரு பரமன் பிரதி பஸதிக்குள் காட்சிப்படுகிறான்.
இளமையான அழகான பெண் ஒருத்தி, கோச்சில் வந்த அரசிதான் அது, நேர்த்தியான தோட்டத்தில் ஓடிவர வரதன் என்ற பரமன் பிரதி அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு இதழ் கலந்து நிற்கிறான்.
உம்மை நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். நாளை கோகர்ணத்தில் நமக்குத் திருமணம். என் மகன் மஞ்சுநாத்துக்கு ஒரு பிரியமான அப்பா வேணும். எனக்கு ஒரு கணவன் வேணும். மிக்க அழகான சற்றே உயரம் குறைந்த முப்பத்தைந்து வயதுப் பேரழகி ஒரு பரமன் பிரதியை நெஞ்சில் தடவிச் சாய்ந்தபடி சொல்கிறாள்.
பால் மணம் மாறாத ஐந்து வயதுச் சிறுவனோடு பட்டாம்பூச்சிகளைத் துரத்தி ஓடுகிறான் ஒரு பரமன் பிரதி.
அப்பா அப்பா.
குழந்தை மஞ்சுநாத் குரல். சுழன்று போன ஒரு வாசல் பார்வையை அடைக்க அங்கிருந்து அப்பா அப்பா என்று மஞ்சுநாத் குரல்.
இன்னொரு வாசல் பார்வையை அடைக்க அங்கே இருந்து அப்பா அப்பா என்று மஞ்சுநாத் குரல். அடுத்த வாசலோடு ஓடி வருகிறான் மஞ்சுநாத்.
மஞ்சு வந்துட்டேண்டா.
பிஷாரடியின் கைப்பிடியை உதறிச் சுழலும் பஸதிக்குள் ஓடும் பரமனுக்கு இரு கால்களும் முழுமையாக இருந்தன.
அப்பா அப்பா,
திலீப் பரமன் பின்னால் பஸதிக்குள் சாடப் பார்க்கிறார். பிஷாரடியும் பாலனும் அவரை இறுகப் பற்றி நிறுத்த சதுர்முக பஸதி சுழற்சி நிற்கிறது.
நிலவொளியை அடர்ந்த மேகம் மறைக்க இருட்டில் அவர்கள் மௌனமாக வந்த வழியே மெல்ல நடக்கிறார்கள்.
பெரு நாவல் ‘மிளகு’ – A frugal candlelight dinner and a leisurely walk at a silent night
Excerpt from my forthcoming (next week, perhaps) novel MILAGU
எல்லா எறும்பும் இப்படி சாதுவா இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனாலும் ஒண்ணு சொல்லலாம். கடிக்கற எறும்பு கட்டாயம் இறக்கை விரிச்சுப் பறக்காது.
பரமன் சொன்னார் மெல்லத் தாங்குகோல் ஊன்றி நடந்தபடி.
திலீப் ராவ்ஜியின் தோளில் கைவைத்து அணைத்து நின்றார் ஒரு வினாடி.
நான் இங்கே வந்திருக்கேன் என்று முணுமுணுத்தார்.
தெஜாவூ-ன்னு சொல்றது இதுதான் என்று திலீப் ராவ்ஜிக்குக் கூடுதல் தகவலாக மிகுந்த பிரயாசையோடு சொன்னார் பரமன். அவர்கள் கூட்டமாக விருந்தினர் மாளிகைக்குள் பிரவேசித்தார்கள்.
வாசலில் நின்றிருந்த மாளிகைப் பணியாளர்கள் இருவர் திலீப் ராவ்ஜி கொடுத்த அனுமதிக் கடிதத்தைப் படித்துத் திருப்தியடைந்தார்கள்.
இந்த வனப் பிரதேசத்தில் வந்து சிதிலமான பழைய நகரைப் பார்க்க அரசாங்க அனுமதி வேணும் என்று திலீப் ராவ்ஜி மற்றவர்களுக்கு விளக்கினார்.
இவர்களுக்காகத் தயாராக வைக்கப்பட்ட அறைகளைப் பூட்டுத் திறந்து உள்ளே அழைத்தனர்.
மங்கிய இருபத்தைந்து வாட்ஸ் பல்புகள் லைட் ஷேட் அணைப்பு இல்லாமல் ஹோல்டர்களில் நிர்வாணமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. பரமனை ஒரு அறைக்கு இட்டுப்போய் திலீப் ராவ்ஜி கட்டிலில் படுக்க வைத்தார். படுத்ததுமே உறங்கியிருந்தார் பரமன்.
முண்டாசு கட்டிய ஒரு பராமரிப்பு ஊழியர் முதல் அறையின் கோடியில் வைத்திருந்த பாத்திரங்களைச் சுட்டிக்காட்டிச் சொன்னார் –
நீங்க கேட்டிருந்தபடி பத்து பேருக்கு சாப்பாடு தயார் பண்ணியிருக்கு. சாப்பிடறீங்களா?
ரொம்ப சீக்கிரம் சாப்பிடணுமா? கல்பா கேட்டாள்.
ஏழு மணிக்கு அப்புறம் கொசு, ஈசல், எறும்புன்னு படையெடுக்க ஆரம்பிச்சுடும். ஜன்னல் கதவை மூடி வயர்மெஷ் போட்டு மூடியிருக்கு. இருந்தாலும் ஒண்ணு ரெண்டு வாயில் போக வாய்ப்பு இருக்கு என்றார் அந்த ஊழியர்.
ரோம் நகரில் ரோமானியன் போல. சமண ஸ்தலத்துக்கு வந்தால் சமண முனிவர் போல் ராச்சாப்பாட்டை வெகு முன்னரே முடிச்சுக்கணும். பிஷாரடி சொன்னார்.
ராத்திரி எங்க ஆட்கள் யாரும் இங்கே இருக்க மாட்டாங்க. தண்ணி, சாப்பாடு, இதோ இங்கே இருக்கு. கூடுதல் லைட் பல்ப் இங்கே இருக்கு. விளக்குமாறு இதோ ஓரமா இருக்கு. அது கரப்பு வந்தால் அடிக்கறதுக்கு. நாலு அறைக்கும் சேர்த்துப் பொதுவா இங்கே ரெண்டு கழிவறை இருக்கு. கதவு சரியாக சார்த்தாது. கவனிச்சு அட்ஜஸ்ட் பண்ணி உபயோகிக்கணும். சாப்பாட்டுக்கு இப்பவே பணம் கொடுக்கணும். கொடுக்கறீங்களா சார்?
எவ்வளவு தரணும்?
பிஷாரடி ஜோல்னாபையில் இருந்து வேலட்டை எடுக்க, திலீப் ராவ்ஜி அவரைத் தடுத்து தன் பர்ஸை எடுத்தார்.
ஐநூறு ரூபா சாப்பாட்டுக்கு, சமையல், கொண்டு வந்து கொடுக்க முன்னூறு. ஆக மொத்த எண்ணூறு ரூபா என்று கராராகச் சொன்னார் அந்த ஊழியர்.
என்ன கொண்டு வந்திருக்கீங்க? கல்பா கேட்டாள்.
பத்து பேர் தாராளமாக சாப்பிடற அளவு சப்பாத்தி, தேங்காய் துவையல் கொண்டு வந்திருக்கேன் என்றார் அவர்.
சப்பாத்திக்கு கூட தேங்காய்த் துவையலா?
தெரிசா ஒன்றுக்கு இரண்டு தடவை கேட்டுச் சிரித்தாள்.
அதென்ன இந்தப் பக்கத்துலே இப்படித்தான் சிம்பில் சப்பர் மெனு இருக்கும் போலே என்றாள் பகவதிக் குட்டி.
நூறு நூறு வருஷமா இப்படித்தான் இங்கே ராத்திரி போஜனம். சந்தேகம்னா யாரையும் கேட்டுப் பாருங்க என்றார் ஊழியர்.
அதெல்லாம் வேணாம் என்று சொல்லி திலீப் ஆயிரம் ரூபாய் ஊழியரிடம் அந்த அதியற்புத உணவுக்காகக் கொடுத்தனுப்ப, வாசல் வரை போன அவர் அவசரமாக உள்ளே வந்து மேஜைக்குக் கீழே இருந்து இரண்டு பெரிய பிளாஸ்டிக் போத்தல்களில் கோகோ கோலாவை எடுத்து வைத்து, ’அது கடிக்க, இது குடிக்க’ என்றார்.
நூறுநூறு வருஷம் புராதன பானமான கோகோ கோலாவை மேஜை மேல் வைத்துவிட்டு விடை பெற்றார் அந்த ஊழியர்.
பெரு நாவல் ‘மிளகு’ – A frugile candlelight dinner and a leisurely walk at a silent night
Excerpt from my forthcoming (next week, perhaps) novel MILAGU
எல்லா எறும்பும் இப்படி சாதுவா இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனாலும் ஒண்ணு சொல்லலாம். கடிக்கற எறும்பு கட்டாயம் இறக்கை விரிச்சுப் பறக்காது.
பரமன் சொன்னார் மெல்லத் தாங்குகோல் ஊன்றி நடந்தபடி.
திலீப் ராவ்ஜியின் தோளில் கைவைத்து அணைத்து நின்றார் ஒரு வினாடி.
நான் இங்கே வந்திருக்கேன் என்று முணுமுணுத்தார்.
தெஜாவூ-ன்னு சொல்றது இதுதான் என்று திலீப் ராவ்ஜிக்குக் கூடுதல் தகவலாக மிகுந்த பிரயாசையோடு சொன்னார் பரமன். அவர்கள் கூட்டமாக விருந்தினர் மாளிகைக்குள் பிரவேசித்தார்கள்.
வாசலில் நின்றிருந்த மாளிகைப் பணியாளர்கள் இருவர் திலீப் ராவ்ஜி கொடுத்த அனுமதிக் கடிதத்தைப் படித்துத் திருப்தியடைந்தார்கள்.
இந்த வனப் பிரதேசத்தில் வந்து சிதிலமான பழைய நகரைப் பார்க்க அரசாங்க அனுமதி வேணும் என்று திலீப் ராவ்ஜி மற்றவர்களுக்கு விளக்கினார்.
இவர்களுக்காகத் தயாராக வைக்கப்பட்ட அறைகளைப் பூட்டுத் திறந்து உள்ளே அழைத்தனர்.
மங்கிய இருபத்தைந்து வாட்ஸ் பல்புகள் லைட் ஷேட் அணைப்பு இல்லாமல் ஹோல்டர்களில் நிர்வாணமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. பரமனை ஒரு அறைக்கு இட்டுப்போய் திலீப் ராவ்ஜி கட்டிலில் படுக்க வைத்தார். படுத்ததுமே உறங்கியிருந்தார் பரமன்.
முண்டாசு கட்டிய ஒரு பராமரிப்பு ஊழியர் முதல் அறையின் கோடியில் வைத்திருந்த பாத்திரங்களைச் சுட்டிக்காட்டிச் சொன்னார் –
நீங்க கேட்டிருந்தபடி பத்து பேருக்கு சாப்பாடு தயார் பண்ணியிருக்கு. சாப்பிடறீங்களா?
ரொம்ப சீக்கிரம் சாப்பிடணுமா? கல்பா கேட்டாள்.
ஏழு மணிக்கு அப்புறம் கொசு, ஈசல், எறும்புன்னு படையெடுக்க ஆரம்பிச்சுடும். ஜன்னல் கதவை மூடி வயர்மெஷ் போட்டு மூடியிருக்கு. இருந்தாலும் ஒண்ணு ரெண்டு வாயில் போக வாய்ப்பு இருக்கு என்றார் அந்த ஊழியர்.
ரோம் நகரில் ரோமானியன் போல. சமண ஸ்தலத்துக்கு வந்தால் சமண முனிவர் போல் ராச்சாப்பாட்டை வெகு முன்னரே முடிச்சுக்கணும். பிஷாரடி சொன்னார்.
ராத்திரி எங்க ஆட்கள் யாரும் இங்கே இருக்க மாட்டாங்க. தண்ணி, சாப்பாடு, இதோ இங்கே இருக்கு. கூடுதல் லைட் பல்ப் இங்கே இருக்கு. விளக்குமாறு இதோ ஓரமா இருக்கு. அது கரப்பு வந்தால் அடிக்கறதுக்கு. நாலு அறைக்கும் சேர்த்துப் பொதுவா இங்கே ரெண்டு கழிவறை இருக்கு. கதவு சரியாக சார்த்தாது. கவனிச்சு அட்ஜஸ்ட் பண்ணி உபயோகிக்கணும். சாப்பாட்டுக்கு இப்பவே பணம் கொடுக்கணும். கொடுக்கறீங்களா சார்?
எவ்வளவு தரணும்?
பிஷாரடி ஜோல்னாபையில் இருந்து வேலட்டை எடுக்க, திலீப் ராவ்ஜி அவரைத் தடுத்து தன் பர்ஸை எடுத்தார்.
ஐநூறு ரூபா சாப்பாட்டுக்கு, சமையல், கொண்டு வந்து கொடுக்க முன்னூறு. ஆக மொத்த எண்ணூறு ரூபா என்று கராராகச் சொன்னார் அந்த ஊழியர்.
என்ன கொண்டு வந்திருக்கீங்க? கல்பா கேட்டாள்.
பத்து பேர் தாராளமாக சாப்பிடற அளவு சப்பாத்தி, தேங்காய் துவையல் கொண்டு வந்திருக்கேன் என்றார் அவர்.
சப்பாத்திக்கு கூட தேங்காய்த் துவையலா?
தெரிசா ஒன்றுக்கு இரண்டு தடவை கேட்டுச் சிரித்தாள்.
அதென்ன இந்தப் பக்கத்துலே இப்படித்தான் சிம்பில் சப்பர் மெனு இருக்கும் போலே என்றாள் பகவதிக் குட்டி.
நூறு நூறு வருஷமா இப்படித்தான் இங்கே ராத்திரி போஜனம். சந்தேகம்னா யாரையும் கேட்டுப் பாருங்க என்றார் ஊழியர்.
அதெல்லாம் வேணாம் என்று சொல்லி திலீப் ஆயிரம் ரூபாய் ஊழியரிடம் அந்த அதியற்புத உணவுக்காகக் கொடுத்தனுப்ப, வாசல் வரை போன அவர் அவசரமாக உள்ளே வந்து மேஜைக்குக் கீழே இருந்து இரண்டு பெரிய பிளாஸ்டிக் போத்தல்களில் கோகோ கோலாவை எடுத்து வைத்து, ’அது கடிக்க, இது குடிக்க’ என்றார்.
நூறுநூறு வருஷம் புராதன பானமான கோகோ கோலாவை மேஜை மேல் வைத்துவிட்டு விடை பெற்றார் அந்த ஊழியர்.
February 13, 2022
பெரு நாவல் ‘மிளகு’ – Encountering the ants’ army at dusk on a forest road
An excerpt from my forthcoming novel MILAGU
படகில் முதலில் வேனும் தொடர்ந்து காரும் உருண்டு ஏறியது. படகு சைரன் ஊதிக் கிளம்பியது.
ஸ்ராங், எல்லோரும் ஒரே பக்கம் உட்காராதீர்கள் பிரிந்து உட்காருங்கள் என்று சத்தமாக மலையாளத்திலும், கன்னடத்திலும், கொங்கணியிலும் சொன்னான்.
ஏன் அப்படி என்றாள் தெரிசா.
Load Balancing என்று சுருக்கமாகச் சொன்னாள் கல்பா. சரிதான் என்றாள் பகவதி. அறிவியலார் குழுக்குறி போல இருக்கு என்று திலீப் ராவ்ஜி கல்பாவைக் கேட்டார். அப்படித்தான்னு வச்சுக்குங்களேன் என்றாள் கல்பா.
அக்கரையில் என்ன இருக்கு?
சாரதா தெரிசா கேட்டாள்.
மாலை மங்கும் நேரம் பக்கவாட்டுத் தோற்றமாக அவள் ரொம்ப அழகாக இருக்கிறதாக பகவதிக்குத் தோன்றியது. அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
போட் பயணத்துக்கு எல்லாம் பயப்படக் கூடாது என்று தெரிசா வெள்ளந்தியாகச் சொல்ல, பகவதி சிரித்து ஓயவில்லை.
அக்கரையில் நாம் இன்று ராத்திரி தங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. நாலு ரூம் இருக்கு. நாலையும் நாம் புக் பண்ணிட்டோம் என்று பிஷாரடி வேனுக்குள் அறிவித்தார்.
அப்பா, கெருஸொப்பா இங்கேயா இருக்கு?
திலீப் ராவ்ஜி பரமனைக் கேட்டார். அவர் மௌனமாக தாங்குகோல்களை எடுத்துக் கொண்டிருந்தார்.
திலீப் அவசரமாக இறங்கி அவர் கீழே தாங்குகோல்களை ஊன்றி வெளியே வர உதவி செய்தார்.
தரை மெல்லிய கீற்றாக இறங்கும் இருட்டில் கல்லும் செடியும் கொடியுமாக சமதளமின்றி இருந்தது. எறும்புகள் ஓரமாகப் புற்று வைத்து அமைதியான படையாக மெல்லிய வெளிச்சத்திலும் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.
கடிக்குமே என்று தெரிசா இறங்க தயக்கம் காட்டினாள்.
அது கிட்டே போகாமல் நாம் பாட்டுக்கு இன்னொரு ஓரமாக நகரந்தா ஒண்ணும் பண்ணாது என்றார் வேன் ஓட்டி வந்த ட்ரைவர் பாலன்.
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பரமனின் தாங்குகோல் ஒன்று எறும்பு வரிசையில் ஊன்றிக் கடகடத்தது.
ஐயோ எறும்பு மேலே கட்டைக்காலை வச்சுட்டேனே என்று பரமன் நடுநடுங்கிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அந்தப் பெரிய எறும்புகள் சின்னச் சின்னதாகச் சிறகு விடர்த்தின.
அவை நமநமநம என்று கூட்டாக இறகு தாழ்த்தி உயர்த்தி மேலே எழும்பிப் பறந்தன. எந்த நேரமும் அவை பெரும்படையாக மேலே இறங்கிக் கடிக்கத் துவங்கும் என்ற நடுக்கத்தோடு எல்லோரும் நின்றார்கள்.
அணி அணியாக மேலே எழுந்து அவை தரைக்கு ஆறடி உயரம் பறந்தபோது இவர்களையும் வாகனங்களையும் தவிர்த்துப் போனதைக் கண்டார்கள்.
அபூர்வமாக ஒன்று இரண்டாக, சட்டை காலரிலோ புறங்கையிலோ இறங்கியவை பரம சாதுவாக ஊர்ந்தன.
யாரும் சத்தம் போடவோ அதிகமாக உடல் அசைத்து நடக்கவும் வேணாம். இதெல்லாம் இப்போ போயிடும்
ட்ரைவர் பாலன் சொன்னபடி இரண்டு நிமிடத்தில் எறும்புப் படை காணாமல் போனது.
எல்லா எறும்பும் இப்படி சாதுவா இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனாலும் ஒண்ணு சொல்லலாம். கடிக்கற எறும்பு கட்டாயம் இறக்கை விரிச்சுப் பறக்காது.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

