இரா. முருகன்'s Blog, page 57

January 30, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – This is how Keladi Venkatappa usurped Gerusoppa throne

An extract from my forthcoming novel –

வெளி மண்டபத்தில் ஓவென்று பெரும் சத்தம்.

கெலடி மாநிலப் படைத் தலைமைத் தளபதிகளும், சேனாதிபதிகளும் மிடுக்காக நடந்து வர, நடுவே கம்பீரமாக நரை மீசையை நீவிக்கொண்டு கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் வந்து கொண்டிருந்தார்.

அத்தனை பேரும் உள்ளே நுழைந்தபின் வாசல் கதவுகள் உள்ளிருந்து தாளிடப்பட்டன. கெலடிப் படைகள் கோட்டைக்குள் அரச மாளிகை வாசலில் அணிவகுந்து நின்றதை உள்ளே இருந்து பார்க்க முடிந்தது. அவர்கள் சத்தத்தையும் கேட்க முடிந்தது.

மிளகுராணிக்கு வணக்கம் என்று சொல்லி வெங்கடப்ப நாயக்கர் சென்னாபைரதேவிக்கு முன் குனிந்து வணங்கினார்.

மிளகு ராணி வாழ்க என்ற குரல்  நீல வண்ணத்தில் தலைப்பாகை அணிந்திருந்த சைன்ய உடை உடுத்தியிருந்த இளைஞரிடமிருந்து வந்தது.

வகுளாபரணன்.

சென்னபைராதேவி அமர்ந்தபடி கெலடி அரசருக்கு வணக்கம் சொன்னாள். நாயக்கர் சென்னா அருகே இன்னொரு நாற்காலியை தரதரவென்று இழுத்துப் போட்டு அமர்ந்து கால் மேல் கால் போட்டு தோரணையோடு சுற்றிலும் நோக்கினார்.

வகுளாபரணனைத் தன் அருகே,  சென்னபைராதேவி ஆசனத்துக்குக் கிட்டத்தட்ட சமமாக உட்காரச் சொன்னார். வகுளன் விதிர்விதிர்த்து எழுந்து நிற்கவும் வணங்கவும் எடுத்த முயற்சிகளை  சென்னபைராதேவி ஓர் இகழ்ச்சிச் சிரிப்போடு புறக்கணித்து தலையைத் திருப்பிக்கொண்டாள்.

நான் பேசும்போது யார் குறுக்கிட்டாலும் கைது செய்து சிறையில் அடைக்கும்படி விஜயநகர உத்தரவை முதலில் சொல்கிறேன்.

மிரட்டும் தணிந்த குரலில் அறிவித்து விட்டு வெங்கடப்ப நாயக்கர் பேசத் தொடங்கினார்.

இந்த அரசவை, அதாவது மாஜி அரசவையில் நான் சில அறிவிப்புகளை செய்ய வேண்டியுள்ளது. கெருஸொப்பா மாநிலத்தின் தொடர்ந்த பொருளாதார, சமூக, கலாச்சார முன்னேற்றத்தை உத்தேசித்து விஜயநகரப்  பேரரசின் ஆலோசனைப்படி எடுக்கப்பட்ட முடிவுகளை உத்தர கன்னடப் பிரதேசத்தின் அக்கறையுள்ள பூமிவாசியும் கெலடி மாநில அரசனுமான நான் அறிவிக்கிறேன்.

மிளகுராணி  சென்னபைராதேவி இப்போது முதல் கெருஸொப்பாவின் அரசி பதவியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். ஐம்பத்துநான்கு வருடம் ஒரே அரசர் நடத்தும் அரசாட்சி என்பது உலகிலேயே எந்த தேசத்திலும் நடக்காத ஒரு அதிசயம். அதுவும் ஒரு பெண் ஐம்பத்து நான்கு வருடம் சாதனையாக ஆட்சி செய்து, உலகமே திரும்பிப் பார்த்து மிளகுராணி என்று கொண்டாடப்படுவது நம் எல்லோருக்கும்  பெருமை தருவதாகும்.

என்றாலும் முதுமையும் நீண்ட அரசாட்சியின் களைப்பும் அவரை வெகுவாகப் பாதித்திருக்கின்றதைப் பார்க்க முடிகிறது. கடந்த ஒரே ஆண்டில் கெருஸொப்பாவின் நிதி நிலை சீரழிந்து எது முக்கியம் எது இல்லை என்று தீர்மானிக்காமல் கண்டமேனிக்கு பொருளாதாரம் நாசமடைந்திருக்கிறது.

மகாராணியின் வளர்ப்புப் புத்திரர் நேமிநாதர் இதைச் சுட்டிக் காட்டி ராணியால் வெளியேற்றப்பட்டார். அவரும் எங்களோடு இந்த தினம் இங்கே வந்து அரசராக முடிசூட்டப் பட்டிருக்க வேண்டும்.

கூடாநட்பு அதுவும் ஒரு பெண்ணோடு வைத்து அரச நிதியைத் தங்கப் பாளமாக மாற்றி வெளியே கொண்டு போவதில் உத்வேகத்தோடு செயல்பட்டு, தட்டிக் கேட்ட எங்களை மூர்க்கமாகத் தாக்க முனைந்து, உயிரும் இழந்தது துரதிருஷ்டமானது.

அது நிற்க. சென்னபைராதேவியின் இந்த ஆட்சி தொடர வேண்டாம் என்பது விஜயநகரப் பேரரசின் விருப்பமும் ஆகும்.

சென்னபைராதேவி மகாராணி இனி என் மற்றும் பில்கி அரசர் திம்மராஜு கவனத்தில் ஓய்வெடுப்பார். எங்கே என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

கெருஸொப்பா நாடு ஒரு பெரும் பகுதியாகவும் ஒரு சிறு பகுதியாகவும் நிர்வாகச் சீரமைப்பு நிமித்தம் பிரிக்கப்படும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2022 05:22

January 28, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – Chennabadhradevi held in captivity in her own fort

an excerpt from my forthcoming novel MILAGU

அகநாசினி நதிநீர் நிரம்பிய குளத்தைப் பார்த்தபடி இருந்தது விருந்தினர் அறை. போர்த்துகீஸ் இளவரசர், கோழிக்கோட்டு சாமுத்ரி மகாராஜா, மதுரை  மன்னர், நிர்மல முனிவர், உள்ளால் மகாராணி அப்பக்கா என்று கெருஸொப்பாவின் அதிமுக்கிய விருந்தாளிகள் வந்து வெவ்வேறு கால கட்டத்தில் தங்கியிருந்த அழகான, பெரிய அறை அது.

முழுக்கவோ வரிசையாகப் பாதி கவிழ்த்தோ ஜன்னல் கண்ணாடிகள் வெனீஷியன் ப்ளைண்ட் அடுக்காக ஒவ்வொரு ஜன்னலும் வடிவெடுத்திருப்பது இந்த அறையிலும், அரசியின் படுக்கை அறையிலும் மட்டும்தான்.

இருபத்துநாலு மணிநேரமும் ஜன்னலுக்கு வெளியே ரோந்து போய்க்கொண்டிருக்கும் வீரர்கள் கண்ணை, தலையை இப்பக்கம் அப்பக்கம் அசைப்பது கூட இல்லை.  ஜன்னலை, ஜன்னலுக்குள்ளே வெளிச்சக் கோடாகத் தெரியும் உள்ளறையை, வெளி இருளும், உள் ஒளியும் ஒன்றை ஒன்று விழுங்கப் பார்க்கும் விளையாட்டைப் பார்த்தபடி நடை பழகினாலும் கவனம் சிதறாது இருக்கிறவர்கள் அவர்கள்.

இப்போதும் அறைக்கு வெளியே அவர்கள் ரோந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். உள்ளே தங்கியிருப்பவருக்குப் பாதுகாவலாக இல்லை. கைதிக்கு வெறுங்காவலாக.

சென்னபைராதேவி மிளகுராணி அரசப் பதவி பறிக்கப்பட்டு, நண்பரான கெலடி மாநில அரசர் வெங்கடப்ப நாயக்கரால் கைதாக்கப்பட்டு மிளகுராணி நிர்மாணித்த மிர்ஜான் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட இரவு இது.

தன் வீட்டிலேயே விருந்தினராக  சென்னபைராதேவி மகாராணி உட்காரவைக்கப் பட்டிருக்கிறாள்.

இன்று பகல் இங்கே அழைத்து வரப்பட்டாள். அதற்கு அப்புறம் நகரவே இல்லை. நேரே நிமிர்ந்து அமர்ந்து சுவரை வெறித்துக்கொண்டு   அப்படியே அமர்ந்திருக்கிறாள்.

அவளை  இந்த அறைக்கு அனுப்ப சிரமமாக இருக்கும் என்று எதிர்பார்த்து கெலடி வெங்கடப்ப நாயக்கரும், பிலகி அதிபர் திம்மராஜுவும் ஒரு சிறு படையை கோட்டையில் அரச மாளிகைக்கு வெளியே நிறுத்தியிருந்தார்கள் இன்று பிற்பகலில். ஆனால் அதற்குத் தேவையே ஏற்படவில்லை.

இந்த அறைக்குள் கழிவறை, நாற்காலியில் அமர்தல் போல் இருந்து கழிவு நீக்கும் சௌகரியத்தோடு அமைத்தது நன்றாகப் போய்விட்டது. சென்னா   குத்தவைக்கும் சிரமம் இல்லாமல் போனது. கழிவறை பயன்படுத்தி விட்டு நாற்காலிக்கு வந்தாள் சென்னா. இன்றைய தினம் அவள் மனக்கண்ணில் ஓடிக் கொண்டிருந்தது.

காலையில் வழக்கம் போல் குளி கழிந்து பூஜை முடித்து வெகுநேரம் விஷ்ணு சகஸ்ரநாமமும் சமண மந்திரமும் நிதானமாகச் சொல்லி, வெளி மண்டபத்துக்கு நடக்கும்போது  அவளுக்கு முன்னும் பின்னும் காவல்படை வீரர்கள் பாதுகாப்புக்காக இடைவெளி விட்டு நடந்து கொண்டிருந்தார்கள்.

ரஞ்சனாதேவி சாப்பிட்டார்களா என்று பக்கத்தில் வந்து கொண்டிருந்த புதுத் தாதி ருக்மணியை விசாரித்தாள் மிளகுராணி. அவங்க வீட்டுக்கு வெளியே வரல்லே மகாராணி அம்மா என்று பயந்த குரலில் சொன்னாள் ருக்மணி.

அவளுக்கு வேலை நிலைக்குமா, உயிர் உடலில் நிலைக்குமா என்று பயம் என்பதை சரியாகக் கண்ட மிளகுராணி ருக்மணியின் தோளில் தட்டிச் சொன்னது – பயப்படாதே. எல்லாம் சரியாகி விடும். ரஞ்சனாதேவியைப் பார்க்கலாம். நட.

ராணி சிறு குறுக்குப் பாதை வழியே இரண்டே நிமிடத்தில் இளவரசர் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தாள்.

இன்னும் தண்ணீர் காயாத தரை குருதி வாடை புலர்த்திக் கொண்டிருந்தது. நேமிநாதனின் ரத்தம் நிணவாடையை மட்டும் மீதி வைத்துவிட்டுத் தண்ணீரோடு தண்ணீராகக் கலைந்து போயிருந்ததைக் காணத் துக்கம் மனதில் கவிந்து மிகுந்த சோர்வையும், படபடப்பையும் உண்டாக்கியிருந்தது.

உள்ளே இருளில் விசும்பும் முனகல் ஒலி. ரஞ்சனா. மெல்ல அங்கே நடந்தாள் மிளகுராணி.

அடுத்த ஐந்து நிமிடம் அந்த இரண்டு பெண்களும் மௌனமாகத் தலையாய சோகத்தைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒற்றை ஜன்னலைத் திறந்து வைத்தாள் மகாராணி. தாதி ருக்மணியை அழைத்து ரஞ்சனாதேவிக்கு காலைப் பசியாற பலகாரம் அனுப்ப ஏற்பாடு செய்யச் சொல்லியபடி ரஞ்சனாவைத் தலையில் வருடிச் சொன்னாள் –

ரஞ்சி இதையும் நாம் கடந்து போவோம்

சொல்லியபடி வெளியே நடந்தாள் மிளகுராணி. போஜனசாலை வாசலில் தலைமை மடையர் காத்திருந்தார்.

அம்மா, நீர்த் தோசை பண்ணியிருக்கிறோம். உண்டு பார்க்க வேணும். ஜீரணம் சுலபமாக இருக்கும் என்று தலைமை மடையர் கிருஷ்ண ராயர் பணிவோடு நின்று வார்த்தை சமர்ப்பித்தார்.

ராயரே, ஜீரணத்துக்கு எனக்கு யாதொரு பிரச்சனையும் இல்லை. கெருஸொப்பா, ஆட்சி, ஜனம், மிர்ஜான் கோட்டை எல்லாம் விழுங்கி என் மகனையும் விழுங்கி விட்டது. மிளகு ரசம் பகலுக்கு வைத்து இன்னும் விழுங்க என்ன எல்லாம் உண்டோ அதெல்லாம் விழுங்க உத்தேசம் என்று கலகலவென்று சிரித்தாள்.

அம்மா அப்படி நீங்கள் சொல்லக் கூடாது. உங்களைப் பார்த்து நாங்கள் நம்பிக்கையை மீதி வைத்திருக்கிறோம். எல்லாம் நல்லபடி முடியும் என்றார் தலைமை மடையர் ராயர்.

இரண்டு இட்டலிகளையும் ஒரு நீர்த்தோசையையும் பிய்த்துக் கொஞ்சம் தின்று, உண்டதாக பேர் பண்ணினாள். ராயரே, நீர்த்தோசை மிக அருமை என்று பாராட்டி விட்டுக் கோட்டையின் முன் மண்டபத்துக்கு நடந்தாள்.

பிரதானிகளும் உப பிரதானிகளும் தளவாய்களும்  சென்னபைராதேவி வருகைக்காக அங்கே காத்திருந்தார்கள். சடங்கு சம்பிரதாயத்துக்காகக் கூடிய சபை அது. எனினும் தோல்வியில் துவண்டவர்களாக யாரும் இல்லை என்பதை சென்னா ராணி கவனித்தாள்.

மனதளவில் இருந்தாலும் வெளியே காட்டாத பாங்கு அவளுக்கு ஆறுதலைக் கொடுத்தது. அரியணைக்கும் வேலைப்பாடு அமைந்த நாற்காலிக்கும் நடுவில் அமைந்த ஆசனத்தில்  சென்னபைராதேவி அமர்ந்தாள்.

ஜயவிஜயீபவ என்று முழக்கங்கள் எழுந்தன. வாசலில் முரசறைவதும், மங்கல வாத்தியம் இசைப்பதும் இல்லாத அமைதி.

சென்னபைராதேவி பிரதானிகளின் வரிசையில் தேடினாள். நஞ்சுண்டய்யா பிரதானி எங்கே?

பிரதானி சந்த்ரப்ரபு எழுந்து மரியாதையாக வணங்கி, நஞ்சுண்டய்யா-வருக்கு ராத்திரி முதல் நெஞ்சுவலி அதிகமாகி கைகால்கள் சுண்டி இழுத்து படுத்த படுக்கையாக இருக்கிற தகவலைப் பகிர்ந்து கொண்டார். உடம்பு உஷ்ணமாகி ஜ்வரமும் பீடித்திருப்பதாகச் சொன்னார் சந்த்ரா.

குதிரைகளில் இருந்து மனுஷர்களைப் பீடிக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளின் நோயுண்டாக்கும் செயல் இது என்று பின்வரிசை உப பிரதானி ஒருவர் சொன்னார். நஞ்சுண்டய்யா குதிரை ஏறி எங்கும் போகவில்லையே.  இன்னொரு உப பிரதானி சொல்ல, பிரதானிகள் மௌனமானார்கள்.

நடந்து முடிந்த சிறு யுத்தத்தில் தளவாய்களையும் ஒன்றிரண்டு சேனாதிபதிகளையும் தவிர பிரதானி, உப பிரதானி அளவில் யாரும் போரிடவோ, குதிரையேறி அரசுப் படைகளுக்கு ஆதரவும், துணிவும், ஊக்கமும் தரவோ வரவில்லை என்பதைத் தினசரி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டது சென்னாவுக்கு நினைவு வந்தது.

நஞ்சுண்டய்யா எழுபதைத் தொடும் முதியவர். அவர் குதிரையேறி விழுந்துவைப்பார். வேண்டாம். மற்றவர்கள்?

அரசுப் படை தோற்றதற்கு அது காரணம் இல்லைதான். என்றாலும் இனி அதை எப்போது கேட்பது?

என்ன பேசப் போகிறோம்? சென்னா அவையைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டுக் கேட்டாள். அமைதிதான் பதிலாக வந்தது.

போன மாதம் விளைந்த மிளகு நீர்ச் சத்து கூடியதால் தரம் சற்றே குறைந்து, லிஸ்பனில் இருந்து விலை குறைப்பை எதிர்பார்க்கிறதை சந்த்ரப்ரபு பிரதானி சொல்ல ஆரம்பித்தார். ஏதாவது பேச வேண்டும் என்ற நினைப்பு தெரிந்தது அவர் குரல் நடுங்கப் பேசியதில்.

வெளி மண்டபத்தில் ஓவென்று பெரும் சத்தம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2022 19:00

January 27, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – உத்தேசமான முன்னுரை – A probable foreword

the first draft of the foreword of my forthcoming novel MILAGU

கொங்கணக் கடற்கரைப் பயணம் போய் வருடக் கணக்கில் ஆகிவிட்டது. மிளகு, ஏலம், கிராம்பு, லவங்கம் என்று மணக்கும், மழை ஓய்ந்த ஈரமண் அந்தக் கடலும் கடல் சார்ந்த நெய்தலும், பசுமை கொஞ்சும் மலையும் மலை சார்ந்த குறிஞ்சியும். மிளகு, அதுவும் மிகத் தரமான மிளகு விளைவித்து, ஐரோப்பிய நாடுகளைக் கவர்ந்திழுத்துக் கூட்டிவந்து, என்ன விலையும் கொடுத்து வாங்க வைத்த நிலப் பிரதேசம் இது. பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை மிளகு உற்பத்தி, ஏற்றுமதி சாதனை செய்த பூமி.

மிளகின் அடிச்சுவட்டில் பயணப்பட்டால், கேரளத்தில் கோழிக்கோட்டில் தொடங்கி, கர்னாடகம், கோவா வழியே மகாராஷ்டிரம் வரை நீளும் அது என்று என் நண்பர் திரு கமல் ஹாசன் ஒரு சாயந்திர நேர உரையாடலைத் துவக்கி வைத்தார்.  தொடர்ந்து கொங்கண் கடற்கரை, குஞ்ஞாலி மரைக்காயர், சாமுத்ரி என்ற சாமுரின், எரிவு மிகுந்த தலைச்சேரி மிளகு என அந்த அறிவார்ந்த பேச்சு நீண்டது. அடுத்து எழுதும் நாவலைக் கொங்கணக் கடற்கரையில் தொடங்கி மிளகின் அடிச்சுவட்டில் விரிவதாக எழுதிப் பார்த்தால் என்ன என்று அப்போது என் மனதில் ஒரு பொறி தட்டியது.

கொங்கணப் பிரதேசத்தின் வரலாறு விஜயநகர சாம்ராஜ்ய வரலாற்றோடு இணந்து நடப்பது. 15650-இல் அகமத்நகர், பிடார், பீஜப்பூர், கோல்கொண்டா ஆகிய தக்காண சுல்தானிய அரசுகள் ஒன்றுசேர்ந்து  விஜயநகரத் தலைநகர் ஹம்பியைச் சின்னாபின்னம் செய்து பேரரசர் அலிய ராமராயரைச் சிரச்சேதம் செய்ததோடு அந்த மாபெரும் சாம்ராஜ்யம் வீழ்ச்சி கண்டது. கொங்கணக் கரைப் பிரதேசக் குறுநில அரசுகள் தவறாமல் தத்தம் பாதுகாப்புக்காகத் திறை செலுத்தியவை. பெரும்பாலும் விஜயநகரம் சார்ந்தவை. தமிழகத்தில் பாளையங்கள் போல் நூறு  இருநூறு கிராமம், சிறு நகரம் என்று சிறு நாடுகள் அவை. மிளகு, ஏலம் என்று வாசனைத் திரவியங்களைப் பிறப்பித்து, விற்பனைக்கு உலகச் சந்தையில் கொண்டு போய்ச் சேர்க்கும் இந்த இந்துஸ்தானத்துக் குறுநாடுகளோடு போர்ச்சுக்கல்லும் ஹாலந்து  என்ற டச்சுநாடும்   மிகப் பெரிய அளவில்  வர்த்தகம் செய்தன. முக்கியமாக மிளகு உற்பத்தியில் உலக அளவில் தரமும், சுவையும், மணமும் செரிந்த மிளகை அவர்களுக்கு அளித்த கெருஸொப்பா தேசத்தோடு மிகச் சிறந்த நட்பும் இணக்கமும் காட்டிய போர்ச்சுகல், கெருஸொப்பாவை ஐம்பத்துநான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த சென்னபைராதேவிக்கு   கௌரவமான பட்டப்பெயராக மிளகுராணி என்ற பெயரைச்சூட்டி உரக்கச்  சொல்லிக் கவுரவித்தது. சென்னபைராதேவியின் இந்தச் சாதனைகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் புறக்கணிக்கப் பட்டவை. ஏனோ தெரியாது. சரித்திரத்தின் அடிக்குறிப்பாகக் கூட இவை இடம்பெறவில்லை.

மிளகின் அடிச்சுவட்டில் பயணப்படும் எந்த வரலாற்று ஆசிரியனும் தவிர்க்க முடியாத பதினாறாம் நூற்றாண்டு அரசி சென்னபைராதேவி. என் ’மிளகு’ நாவலிலும் சென்னா மகத்தான ஓர் ஆளுமையாகக் கடந்து வர ஆசைப்பட்டேன். கொங்கணப் பிரதேச மிளகு வர்த்தகம் பற்றி யாரிடம்  கேட்டால் தகவல் கிடைக்கும்?  அருமை நண்பரும்,  தமிழிலும் கன்னடத்திலும் அற்புதமான நடிப்பைக் காட்சிப்படுத்தும் புகழ்பெற்ற திரைப்பட நடிகரும்,  இலக்கிய ஆர்வலருமான ரமேஷ் அரவிந்த் உதவிக்கு வந்தார். ரமேஷ் மூலம் எனக்குக் கன்னட எழுத்தாளர் டாக்டர் கஜானன ஷர்மா அறிமுகம் கிடைத்தது. இப்போது என் சிறந்த நண்பரான அவருடைய கைகாட்டுதலும் புரிய வைத்தலும் இல்லாவிட்டால் ’மிளகு’ எழுதப்பட்டிருக்காது. டாக்டர் ஷர்மாவுக்கு என் பிரியம் கூடிய நன்றி. அவர் கெருஸொப்பா பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அண்மையில் சென்னபைராதேவி வரலாற்று நாவலைக் கன்னடத்தில் எழுதி கன்னட இலக்கியத்தில் முக்கிய இடம் வகிப்பவரும் கூட அவர். நாவல் பதிப்பில் சாதனை செய்து வரும் கன்னட நாவல் அது.

வரலாறோடு விண் அறிவியல் புனைகதையாகவும் இன்னொரு தளத்தில் இயங்குகிறது ’மிளகு’. இருபதாம் நூற்றாண்டிலிருந்து நானூறு ஆண்டுகள் பின்னே, சென்னபைராதேவி காலத்துக்கு நாவல் கதாபாத்திரம் ஒன்று காலப் பயணம் மேற்கொள்வதைப் புனைகதை  உத்தியாக மற்ற சில புதினங்களில் பார்த்திருக்கலாம். எனில், அந்தப் பாத்திரத்தின் பிரதிகள் வேறு பிரபஞ்சங்களில் இருந்து வந்து, ஒன்றை மற்றொன்று பதிலிப்படுத்தித் தொடர்ந்து இயங்குவது சற்றுப் புதியது. மரபார்ந்த கதையாடலாக இன்றி சிதறிய கதையாடலாக (fragmented narrative) இந்நாவல் சொல்லப்படுவதால், மிளகு கருப்பொருளாகவும் கருத்தாக்கமாகவும் பல பரிமாணங்களிலும் வந்து சூழ்ந்து நிறைகிறது.

’மிளகு’ உங்கள் மனதுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு இச்சிறு முன்னுரையை நிறைவு செய்து நாவலுக்குள் உங்களை அன்போடு அழைக்கிறேன்.

அன்புடன்

இரா.முருகன்

ஜனவரி 2022

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2022 05:33

January 25, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – Thus Reached Ambalapuzha through Gerusoppa across time space continuum

An excerpt from my forthcoming novel MILAGU

ரயில் நின்று தாமதித்து மறுபடியும் நகரும் முன் இந்தப் பரமனும் அந்த ரயில்பெட்டியில் ஏறிக் கொள்கிறார். வந்த பரமன் கம்பார்ட்மெண்டில் கூட்டத்துக்கு நடுவே  நின்றுகொண்டு மேலே தொங்கும் வாரை இழுத்துப் பிடித்தபடி கால் மாற்றும் போது லெனின் கடிதங்கள் தரையில் விழுகின்றன.

பக்கத்தில் நின்ற வயதான மராட்டியர் குனிந்து அதை எடுத்துத் தலைப்பைப் படித்து விட்டு வந்த பரமனிடம் கொடுக்கிறார்.

லெனின் வீட்டை விட்டு வெளியே போயிருந்தாரா? கடிதங்களை யாருக்கு எழுதினார் என்று கேட்கிறார். லெனின் அமெரிக்க விண்வெளி வீரர் என்று அடுத்து நின்ற யாரிடமோ விளக்கம் சொல்கிறார்.

வந்த பரமன் பொறுமையாக லெனின் என்றால் யாரென்று விளக்கிக்கொண்டிருக்கும்போது இந்தப் பரமனிடம் தமிழில் சொல்கிறார் = அடிப்படைப் புரிதல் இல்லாமல் கடிதம், உரை, எழுத்து என்று லெனினை   ரஷ்ய மொழியில் இருந்து ஆங்கிலம் மூலமாக இந்திக்கும் மராட்டிக்கும் எப்படிக் கொண்டு போக முடியும்?

லெனின் விண்வெளி வீரராக இருந்திருந்தால் சோவியத் யூனியனை வழிநடத்திச் சென்றிருக்க முடியுமா? பரமனே பார்த்துச் சொல் என்கிறார். அவருடைய கால்கள் அடிபடாமல் மீண்டுவர காலத்தைப் பின்நோக்கி எடுத்துப் போனவர் யார் என்று கேட்க, வந்த பரமன் எனக்கும் தெரியாது என்கிறார். திரும்ப காட்சி நிலைத்து எல்லாம் பின்னால் போகிற இயக்கம்.

வந்த பரமன் முப்பது வயதில் இருக்கிறார். ஷாலினி மேத்தி கீரையும் ஜவ்வரிசியும் கோதுமை ரவையும் வாங்கி வரச் சொல்லியிருக்கிறாள். மகன் திலீப்புக்கு நூறு கிராம் சாக்லெட்டுகளாவது வாங்கிப் போக வேண்டும் சயானில் இறங்கி என்றபடி வந்த பரமன் பாதி காலியாகி விட்ட ரயிலில் இருக்கை தேடி அமர்கிறார்.

இன்னொரு ஷாலினி மோரே. இன்னொரு திலீப். இன்னொரு சர்வமங்கள் சால் வீடு உண்டா? இந்த பரமனும் தன்னுடைய முப்பதாம் வயதுக்குப் போகிறார்.

சாக்லெட்களை நானே தின்று விடுவேன் வேண்டாம் என்றபடி ரயில் நிற்கக் காத்திருக்க, காட்சி மறுபடி குழம்புகிறது. சுழலும் பசதி, முன்னால் யாருமில்லாமல் உபந்நியாசம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிர்மல முனிவர்.  பூஜ்ய சுவாமிஜி, என் வண்டி இன்னும் வரவில்லையே. எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் இந்த பாவப்பட்ட மனிதன்? முனிவரின் காலில் விழுந்து கண்மூடிப் பிரார்த்தித்து விட்டு எழுந்து மறுபடியும் தொழுகிறார் பரமன்.

நீர் இன்னும் சற்று இங்கே இருக்கலாம். உமக்கு முன்னே போக நேரம் வருவதை எண்ணிக் காத்திருக்கலாம். சொல்லிவிட்டு நிர்மல முனிவர் நிஷ்டையில் அமிழ்கிறார்.

பசதி மறுபடி சுழல்கிறது.

இதென்ன, ஜெர்ஸோப்பாவின் தெருக்கள் இங்கே எப்படி வந்தன? வண்டிக்காரன் சத்திரத்தில் ஜேஜே என்று கூட்டம் நிரம்பி வழிகிறது. வீராயி இடுப்பில் கைவைத்து அணைத்து உக்கிராண அறை இருட்டில் முத்தமிடுகிறவன் பரமன் ஜாடையில். ஜாடையில் என்ன பரமனேதான்.

என்ன பார்க்கறே நான் உன் பிரபஞ்சத்திலே இருக்கப்பட்டவன் இல்லை. மற்ற எத்தனையோ பிரபஞ்சத்திலே ஒண்ணிலே, மேகவீதிங்கற பிரபஞ்சத்திலே இருக்கறவன். இந்த வீராயியும் மேகவீதியில் தான் இருக்கா.சென்னபைரதேவி இங்கே அரசியில்லே. மிட்டாய்க்கடை வச்சிருக்காங்க. ரோகிணி அரசியாக இருக்கற ஜெருஸோப்பா நாடு இந்தப் பிரபஞ்சத்திலே. எனக்கு குற்றேவல் செய்கிற வேலைக்காரன் என் பிரபஞ்சத்திலே நேமிநாதன். சென்னபைரதேவிக்கு அப்பன் நேமிநாதன் எங்க மேகவீதி பிரபஞ்சத்திலே. வீராயியை நான் கல்யாணம் செய்துக்கிட்டு ரோகிணியைப் பெண்டாளப் போறேன். மிங்குவும் கஸாண்ட்ராவும் ஜெர்ஸுப்பாவில் பிரபலமான கணிகையர். போகலாம் வர்றியா?

வேண்டாம் எனக்கு எழுபது வயதாகிறது. இதெதுவும் வேண்டாம். என் வண்டிக்காகக் காத்திருக்கிறேன்.

சொல்லிக்கொண்டிருக்கும்போதே பசதி வாசலில் அப்பா அப்பா என்று குழந்தை மஞ்சுநாத் அழைக்கும் ஒலி. மஞ்சு என் குழந்தே வந்துட்டேண்டா என்றபடி இந்த பரமன் வாசலுக்குப் போக அடியெடுத்து வைக்கும்போது காட்சி மறுபடியும் குழம்பி தாதர் ரயில் நிலையத்தில் கூட்டம் குறைந்த ஒரு மழைநாள் காலை. கல்யாண் டோம்பிவிலி லோக்கல் கூட்டமே இல்லாமல் வந்து நிற்கிறது.

ஏறிக்கோ உன் வண்டி வந்தாச்சு என்று நிர்மல் முனிவர் சொன்னபடி நிஷ்டையில் ஆழ்கிறார்.

வாசலில் மஞ்சுவின் குரல் அப்பா அப்பா என்று தீனமாக அழைக்கிறது. பரமன் தயங்கி ஒரு வினாடி நின்றுவிட்டு ரயிலில் ஏறிக் கொள்கிறார். வண்டி நகர்கிறது. அவர் கால்கள் கணுக்காலுக்குக் கீழே இல்லை. தாங்குகட்டைகள்

ஈரமான கம்பார்ட்மெண்ட் பெஞ்சில் நீள நெடுக இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு வைக்கப்பட்டுள்ளன. பசதி திரும்ப மெல்லச் சுழல்கிறது.

அம்பலப்புழைக்கு  வந்திருக்கீங்க என்று யாரோ அவரை அணைத்துப் பிடித்து ஆட்டோ ரிக்‌ஷாவில் அழைத்துப் போகிறார்கள். இங்கே தான் போகணும் என்று சொல்லி இறக்கி விட்டு தாங்குகட்டைகளை கையிடுக்கில் பொருதுகிறார்கள். வாசல் கதவைத் திறந்து உள்ளே நிறுத்துகிறார்கள்.

பெயர்ப்பலகை திலீப் ராவ்ஜி என்று அறிவிக்கிறது.    அழைப்பு மணியை அழுத்துகிறார். திலீப் உங்கப்பா வந்திருக்கேன். பசிக்கறது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2022 19:16

January 24, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – Paraman meets Paraman who meets Paraman who is himself who..

An longish extract from my forthcoming novel MILAGU

காட்சி கலைந்து சதுர்முக பசதி சுழல்கிறது.

ஓரமாக அடித்துச் செல்லப்பட்ட பரமன் சுவரை ஆதரவாகப்  பற்றிக்கொண்டு எழுந்து நிற்கப் பார்க்கிறார். காட்சி நிலைக்க, ஆப்பிரிக்க நாட்டு அரசாங்க அலுவலகம். வெளியே பெயர் எதுவும் போடாத அங்கே வாசலில் கடைசிப் படியில் உட்கார்ந்திருப்பதும் பரமன் தான்.

இரண்டு தாங்குகட்டைகள் நிறுத்தி வைக்க அவற்றை ஊன்றி நடக்க முயலும் அந்த இன்னொரு பரமன் தத்தித் தத்தி நடக்கத் தொடங்க, ஒரு பெரிய நாற்காலியைக் கழிகளில் பிணைத்துச் சுமந்து கொண்டு இரண்டு கருப்பர் இனத்தவர் வருகிறார்கள்.

இன்னொரு பரமன் இந்தப் பரமனைப் பார்த்துச் சிரிக்கிறார். உம் தாங்குகட்டைகளை வேண்டாம் என்று தீர்மானித்து விட்டார்கள். சனியன் விட்டது. எனக்கு உம் துன்பமும் சேர்த்து சிலுவை சுமக்க வேண்டும் என்று எங்கள் பிரபஞ்சத்தில் விதித்திருக்கிறது.

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாற்காலி சுமந்து வந்த கருப்பர் இனத்தவர் அந்தப் பரமனை நாற்காலியில் ஏற்றி மாடிப்படியில் ஏறி தடதடவென்று ஓடுகிறார்கள்.

இந்தப் பரமன் வாசல் படிக்குப் பக்கத்தில் நெருங்க, நாற்காலிக்காரர் அவரிடம் சொல்கிறார் –  உமக்குத்தான் கால்கள் கிழங்கு மாதிரி இருக்கே. நடந்து தான் போய் எல்லா வினோதமும் சுற்றிப் பாரும். எதற்கு உம்மை தூக்கிக்கொண்டு நடக்கவேணும்?

காட்சி மறுபடியும் குழம்ப, இந்தப் பரமன் மறுபடி பசதியின் சுழற்சியில் கால் தடுமாறித் தரையில் விழுகிறார். எழுந்திருக்கும்போது நடுவயது பரமன் தாதர் மின்சார ரயில் பரபரப்பாக வந்து போய்க் கொண்டிருக்கும் தாதர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலத்தில்அடுத்த கல்யாண் விரைவு லோக்கல் ட்ரெயின் வந்து கொண்டிருப்பதை உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். அவர் கையிடுக்கில் லெனின் கடிதங்கள் தொகுப்பு மராட்டி மொழிபெயர்ப்பு புதுப் புத்தக வாடையோடு அமர்ந்திருக்கிறது.

மூன்றாவது ப்ளாட்பாரத்துக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினல் – கல்யாண் விரைவு லோக்கல் வருவது தெரிய தடதடவென்று தாதர் மேம்பாலப் படிகளில் ஓட்டமும் நடையுமாக விரைகிறார் நடுவயது பரமன்.

இந்தப் பரமன் அவர் பாதையில் குறுக்கிடுகிறார். காட்சியாக வந்த பரமன் இவரிடம் சொல்கிறார் – விலகிப் போ. என் ரயில் வந்துவிட்டது.

அதற்குள் தாதர் லோக்கல் கிளம்பி விடுகிறது. வந்த பரமன் தாவி வண்டியில் ஏறும்போது நிலை தவறி ஓவென்று அலறல். வந்த பரமனின் இடது கால்  நடைமேடைக்குக் கீழே எலக்ட்ரிக் ட்ரெயின் சிக்கிக் கொண்டிருக்க வண்டி நகர்கிறது.

இந்த ஜெருஸூப்பா பரமன் ஐயோ வேணாம் வேணாம் என்று கூக்குரலிட ஓரமாக நிர்மல் முனிவர் நக்னராக வீற்றிருந்து உபன்யாசம் செய்து கொண்டிருக்கிறார்.

உன்னையே நீ அகன்று நின்று பார்க்கிறாய். வேண்டுவதும் வேண்டாததும் எதுவென்று தீர்மானிப்பது உன் கையிலும் மனோசக்தியிலும் இல்லை. பொறுத்திரு. உன் ரயில் இன்னும் வரவில்லை.

நிர்மல முனிவருக்குக் காணிக்கையாகக் கையிடுக்கில் வைத்திருந்த லெனின் கடிதங்கள் புதுப் புத்தகத்தை அளித்து அவர் காலில் விழுந்து வணங்குகிறார் பரமர். சதுர்முக பசதி மறுபடி சுழல்கிறது. வலம் இடமாக இருக்கிறது இந்த சுழற்சி.

மண்டபத்தில் தாதர் ரயில்வே ஸ்டேஷன் காட்சி பின்னோக்கி நகர, ரயிலும், மனுஷர்களும் பின்னால் போகிறார்கள். மேம்பாலத்தில் ஏறுகிறவர்கள் பசதிச் சுவருக்கு முதுகு காட்டிக்கொண்டு இறங்குவதாகவும். இறங்குகிறவர்கள் ஏறுகிறதாகவும் காட்சி தொடர்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2022 19:02

January 23, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – Paramans of the Multiverse, line up. You have nothing to lose

An excerpt from my forthcoming novel MILAGU

பரமன் வெளியே வரும்போது யோசித்தபடி ஓடத் தொடங்கினார்.  தெருக் கோடி பெரிய மைதானத்தில் விரிந்தது. பிரகாசமாக தீபம் இன்னும் எரியும் சதுர்முக பசதி வெற்றிடத்துக்கு நடுவே பிரதானமாக எழும்பியிருந்தது. அது ஆடவில்லை. சுழன்று கொண்டிருந்தது.

பரமனுக்கு திடீரென்று தோன்றியது இந்த பசதியிலும் இதன் சுழற்சியிலும் தான் பரமன் திரும்ப அவர் காலத்துக்கும் வசித்த பூமிக்கும் போக வழி இருக்கும். அது எந்தப் பிரபஞ்சத்தில்? அவர் தான் பரமனா, அல்லது பரமனின் பிரதியா? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்?

அப்படி நினைவு வந்தபோதே பசதி சுற்றும் வேகம் அதிகமானது. ஓட்டமாக ஓடிப் போய் சுழலும் பசதிக்கு நெருக்கமாக நின்றார். பசதியின் உள்ளே எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் சீரான வெளிச்சம் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் காணமுடியாமல் அந்தப் பிரார்த்தனை மண்டபம் முழுக்க நிறைத்திருந்தது.

ஒரு வினாடி உற்றுப் பார்த்தார் பரமன். அது பிரார்த்தனை மண்டபம் இல்லை. தெருவும் கட்டிடங்களுமாக வேறு உலகம் அது. அது பம்பாயில் தாதர் ரயில் நிலையத்துக்கு வெளியே காமத் ஓட்டல் வாசல்.

பங்கஜ் நாரி ப்ரீதம் ப்யாரி என்று ஓட்டல் ரேடியோ பாடுகிறது.பரமன் துள்ளும் நடையும் சிறு ஓட்டமுமாக ஓட்டலுக்குள் நுழைவதை வெளியே இருந்து பரமனே பார்க்கிறார்.

உள்ளே படியேறும் பரமன் வெளியே இருந்து பார்க்கும் பரமனுக்கு வயதில் பாதிக்குக் கீழ் இளையவன். ஓடிப் போய் அந்தக் காட்சி வெளியில் கலந்துவிட அவர் மனம் துடிக்கிறது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளின் பம்பாய். இருபத்தைந்து வயது பரமன்.

ரொம்ப நாள் கழித்துப்  பார்க்கும் பம்பாய். அவசரமாக அங்கே போக பரமன் காலை எட்டிப் போட்டு சதுர்முக பசதி பிரார்த்தனை மண்டபத்துக்குள் நுழைகின்றார்.

அது பசதி மண்டபம் இல்லை. உள்ளே இருந்த இளைய பரமன் இவரைப் பார்த்துச் சிரிக்கிறான்.

இந்தப் பரமனுக்குப் பேச வரவில்லை. ஏதோ தப்பு நடந்திருக்கு என்று முணுமுணுத்தபடி வெளியே நடக்க நினைக்கும்போது வா, காப்பி சாப்பிட்டுப் போகலாம் என்று இளைஞன் வற்புறுத்துகிறான்.

நீ நீங்க நீ யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா? அந்த இளைஞனை பவ்யமாக விசாரிக்கிறார் இந்தப் பரமர். நான் தான் நீங்க. நீங்க தான் நான். சொல்லிவிட்டுச் சிரிக்கிறான் இளைஞன் பரமன்.

இந்தப் பரமனுக்கு எப்படி என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்ற அறுதப்பழைய வாக்கியத்தைச் சொல்கிறார்.

போதாது என்றுபட, இந்த சந்திப்பு நல்ல நட்பாக மலரட்டும் என்று சொல்லும்போது பரமனுக்கு இந்த சூழ்நிலைக்குத் தகுந்தபடி பேசியதாக சந்தோஷம். சந்திப்பின் மகிழ்ச்சியை அடைந்தாலே போதும்.

நாம் சந்தித்து பழகி நட்பு வளர்க்க முடியுமானால் தேவையில்லாத குழப்பம் தான் ஏற்படும் என்றபடி காமத் ஓட்டல் மேஜை முன் அமர்கிறான் இளைய பரமன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2022 19:20

January 22, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – a poignant farewell and the Colonel’s retreat

An extract from my forthcoming novel MILAGU

வீராயி ஓரமாகக் கிடந்த பிடவையை உடுத்திக் கொண்டு பரமனிடம், போகலாம் என்றாள்.  யாரும் இல்லே எல்லாரும் போய்ட்டாங்க என்று இன்னொரு தடவை சொன்னார் காரியகர்த்தா.

பரமன் வெளியே கிளம்பியபோது வீராயியும் அவரோடு நடந்தாள். மனதே இல்லாமல் அவள் கூட வரச் சம்மதித்தார் பரமன்.

எல்லோரும் வந்தாங்க யாரும் இல்லே இப்போ என்றார் காரியகர்த்தா கடைசியாக.

வேட்டி வேணாமா என்று பரமனிடம் கேட்டாள் வீராயி. ஒன்றும் பதில் சொல்லவில்லை பரமன். இருட்ட ஆரம்பித்திருந்தது. பரமன் அருகே நடந்த வீராயியால் இரண்டடி சேர்த்து எடுத்து வைக்க முடியவில்லை. பரமனின் கையைப் பற்றிக்கொண்டு அவர் மார்பில் முகம் புதைத்து நின்றாள் அவள்.

அஞ்சு பேர் ஐயா, ஒருத்தன் அடுத்து மத்தவன் இல்லே. ரெண்டு ரெண்டு பேராக சேர்ந்து வந்து சீரழிச்சாங்க தேவிடியா பசங்க.

சொல்லியபடி அழுதாள் வீராயி. அவள் பரமனைக் கட்டியிருந்த கரங்கள் வலுவாக அவர் மேல் படர, தெருவோரத்தில் ஆள் அரவம் இல்லாமல் யார் வீடோ வெறுமையோடு நின்றது. பேய் மிளகு விதைக்காத அது வீடு தானா?

நாட்டியசாலை என்றாள் வீராயி. வாசலில் எடுப்பாக இரண்டு பக்கமும் இரு திண்ணைகள் உள்கதவு வரை நீண்டிருந்தன. பரமனை அதில் சாய்த்து மேலே படர்ந்தாள் வீராயி. அசதியும்  களைப்பும் பறந்து போக அவளோடு இயற்கை தர்மப்படி இயங்கினார் பரமன்.

எல்லாம் முடிந்து மேடையை விட்டு இறங்கும்போது ரொம்ப நன்றி என்று சொல்லி நினைவு வச்சுக்குங்க நானா என் உடம்பை கொடுத்தது உங்களுக்கு மட்டும்தான் நான் போகறேன் என்று அவர் உதட்டில் இழுத்து முத்தமிட்டாள் வீராயி. சட்டென்று கையை விட்டுவிட்டு இருளில் ஓடி மறைந்தாள் அவள். சில்வண்டுகளின் நீண்ட சீழ்க்கையொலி அவளோடு ஓடி திரும்பி வந்தது.

இடுப்பில் வேட்டி இல்லாமல் இருந்தது நினைவு வர சத்திரத்துக்குள் ஓடினார். விளக்கு இல்லாத வண்டிக்காரன் சத்திரத்தில் வாசலில் உட்கார்ந்திருந்தார் காரியகர்த்தா. என்ன வேணும் என்று கேட்டார். என் வேட்டி என்றார் பரமன். இங்கே எப்படி வந்தது வேட்டி? நான் கொஞ்ச நேரம் முந்தி வீராயியை உங்களோடு வந்து அந்த உக்கிராண அறைக்குள்ளே பார்த்தோமே அப்போ நக்னம் மறைக்க வேட்டி கொடுத்தேனே அவளுக்கு.

வீராயியா அந்தப் பொண்னு இறந்து போய் ஒரு மாசம் ஆச்சே.

இப்போ பேசினோமே அவளோடு, நீங்க இங்கேதானே இருந்தீங்க?

நான் இப்போதான் வர்றேன். வண்டிக்காரன் சத்திரம் மூடி ஒரு வருஷம் ஆகப் போறது. வேட்டி ஏது அங்கே?

அவர் கேட்பதற்கு முன் பரமன் சாடி உக்கிராண அறைக்குள் கதவு திறந்து பார்த்தார். ஒரு வேட்டி ஒரு ஓரமாகக் கிடந்தது. வீராயி குரல் இருட்டில் கேட்டது.

பரமனய்யா சீரழிச்சிட்டாங்க. அவள் சொன்னாள். அந்தக் காட்சி இன்னொரு முறை அனுபவிக்க வேண்டி வரும் என்று தோன்ற வெளியே ஓடினார் பரமன்.

சமையலறையில் வைத்திருந்த சாதமும் புளிக்குழம்பும் நினைவு வர சமையலறைக்குள் புகுந்தார். ஒரு கடுகு கூட இல்லாத சமையலறை. வெளியே ஓடி வரும்போது அவர் இடுப்பில் வேட்டி ஏறி இருந்தது. உக்கிராண அறைக்குள் சத்தம் ஏதுமில்லை.

சதுர்முக பசதி ஆடியது.

பரமனுக்கு அப்படித்தான் தோன்றியது. அது தூரத்தில் இருந்து கண்ணில் பட்டு மூளையில் உறைந்த காட்சி. பக்கத்தில் அருகனின் சமணக் கோவிலும் ஆடியது. பின்னால் ஏதோ சத்தம். என்னவென்று பார்த்தால் ரிஷபநாதர் ஆலயம் நிதானமாக ஆடியது. தொடர்ந்து சுமதிநாதர், விமலநாதர், மகாவீரர் கோவில்கள் அந்தப் பரம்பில் ஆடத் தொடங்கின. நிசப்தமான  தெருவும் ஆட்டத்தைத் தொடர்ந்தது. பரமன் அவசரமாகத் தெரு ஓர வாதுமை மரத்தைப் பிடித்துக் கொண்டார்.

வண்டிக்காரன் சத்திரத்தில் என்ன சாப்பிட்டோம்?  சுயம்பாகமாக பூஷணிக்காய் புளிக்குழம்பும், குழைய வடித்த சாதமும் தான்.

அந்த சாதத்துக்கும் புளிக்குழம்புக்கும் ஆதாரமாக சுடவைத்த தண்ணீர்? அங்கேயே செப்புப் பாத்திரத்தில் வைத்திருந்த பாதி வரை பாத்திரம் நிறைத்த கிணற்றுத் தண்ணீர்,  அந்தத் தண்ணீரில் போதை தரும் ஏதாவது கள்ளோ சாராயமோ கலந்திருந்ததா?

பரமனுக்கு எப்படித் தெரியும்? ஆக, தெருவும் கட்டிடங்களும் ஆடவில்லை. பரமன் தான் ஆடுவது. விளக்கு ஒற்றையாக எரியும் கோவில் மண்டபத்துக்குள் நுழையும்போது தலைசுற்றல் கூடவே வந்தது. நான்கு தெருக்கள் சந்திக்கும் விளக்குச் சந்திப்பில் மண்டபத்தின் மற்ற வாயில் திறந்து வெளியே போக வழி தெரிந்தது.

நைவேத்தியம் இல்லாத கோவிலும் பரிசாரகர்கள் இல்லாத மடைப்பள்ளியும் விளக்கு இல்லாத சந்நிதியுமாக வெற்றிடம் கொண்டு இருந்தது. வெளிப் பிரகாரத்துக்கு திரும்பி நடந்தபோது மறுபடி கட்டிடம் எல்லாம் ஆடும் அனுபவம்.

புளிக்குழம்பில் தொடங்கிய ஆட்டம் இல்லை இது என்று தீர்மானமாகத் தெரிந்தது. நிலநடுக்கமாக இருக்கலாம்.

பரமன் வெளியே வரும்போது யோசித்தபடி ஓடத் தொடங்கினார்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2022 17:30

January 19, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – Veerayee makes a comeback only to bid goodbye

An extract from my forthcoming novel MILAGU

வயதான சத்திரக் காரியகர்த்தா மட்டும் வாசல் படியில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு சந்தோஷம் ஏற்பட்டது பரமனுக்கு.

மகாதேவரே, தனியாக என்ன செய்யறீங்க இங்கே?

பரமன் கேட்டபடி கிழவரின் சிலீர் எனக் குளிர்ந்த விரைத்த கையைப் பற்ற அவர் பதற்றத்தோடு தன் கரத்தை உதறி யாரும் இல்லே போங்க போங்க என்று திருப்பித் திருப்பிச் சொல்கிறார்.

உள்ளே சோறு இருக்கா, நேத்து வடிச்சதுன்னாலும் சரிதான். பரமன் கேட்க, காரியகர்த்தா மறுபடியும் யாரும் இல்லே போங்க என்கிறார்.

அவர் சித்த சுவாதீனம் இல்லாமல் போயிருக்கிறார் என்று பட்டது பரமனுக்கு. அவரைக் கடந்து உள்ளே போக, அரிசியும், மிளகும், பூசணிக்காயும், புளியும், அலமாரியில் அததற்கான இடத்தில் வைத்திருக்க, அடுப்புகள் வெப்பம் இன்றித் தணுத்து இருந்தன.

எப்படி இந்த சத்திரத்தை சூறாட கேலடிப்படை வரவில்லை என்று தெரியவில்லை. வாசலில் இருந்த காரியகர்த்தாவைச் சற்றே குரல் உயர்த்திக் கேட்டார் பரமன் – ஏன் இங்கே யாரும் வரல்லே?

அவர் திரும்ப அவருடைய வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்து விட்டார் – யாரும் இல்லே. போங்க.

தடதடவென்று அரிசியைக் களைந்து வேகவைத்து, பூஷணிக்காயை நறுக்கி புளிக்குழம்பும் வைத்துவிட்டார் பரமன். சாப்பிட உட்கார்ந்தபோது கண்ணில் கரகரவென்று கண்ணீர் வழிந்தது.

மஞ்சு மஞ்சுநாத் எங்கேடா இருக்கே கண்மணி?

பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் காரியகர்த்தா. யாரும் இல்லே எல்லோரும் போயாச்சு. அவர் திரும்பச் சொல்ல, வெங்கலப்பானையில் இருந்து எடுத்து அவருக்கும் ஒரு வாழை இலை மடக்கில் பரிமாறினார் பரமன்.

யாரும் இல்லே எல்லோரும் போய்ட்டாங்க. சொல்லியபடி உண்டு முடித்தார் அவர். கை அலம்ப கொல்லைப் பக்கம் போனார் பரமன்.

கிணற்றில் தண்ணீர் சேந்த வாளியை இருட்டில் கிணற்றில் விட, சொத்தென்று எதன்மீதோ பட்டது அது. தீபம் பிடித்து பின்னால் நின்ற கிழவர் யாரும் இல்லே எல்லோரும் போய்ட்டாங்க என்று கிணற்றுக்குள் பார்த்துச் சொன்னார்.

பரமனும் தீபத்தைத் தாழப் பிடித்து கிணற்றில் பார்க்க, உள்ளே உயிரற்ற உடல்கள் கிட்டத்தட்ட பாதி ஆழத்துக்கு நிறைந்திருந்தன. சத்திரத்தில் கூடும் வண்டிக்காரர்கள் அவர்கள் என்று பரமனுக்குத் தெரிந்தது.

எல்லோரும் போய்ட்டாங்க. யாரும் இல்லே. கிழவர் திரும்பச் சொன்னார்.

கேலடிக்காரங்க வண்டிக்காரங்களை கொன்னுட்டாங்களா? கிழவர் உடனே அதே பதிலைச் சொன்னார்.

இவரைக் கேட்டு பயனில்லை. மீதி சோற்றை ஒரு வட்டிலில் வைத்து இலையால் மூடி, புளிக்குழம்பை இன்னொரு பாத்திரத்தில் எடுத்து வைத்தார்.

உக்கிராண அறையில் மீதி பூசணிக்காயை வைத்துவிட்டு வர கதவு திறந்து உள்ளே நுழைந்தவர் அந்த இருட்டில் விளக்கு இருட்டைப் பெருக்கி வைத்த அதிசயத்தை உணரும் முன் தரையில் எதுவோஅவசரமாக அசைந்தது தெரிந்தது.

பரமன் விளக்கைக் கீழே போட்டிருப்பார். கீழே கிடந்ததை அவர் அடையாளம் கண்டு கொண்டார். வீராயி. பரமனய்யா என்று திரும்பத் திரும்ப அழைத்தாள் அவள். பரமன் தன் இடுப்பு வேட்டியை அவிழ்த்து வீராயி மேல் போர்த்தினார். அவள் அழுகைக்கு ஊடே சொன்னதை ஊகித்திருந்தார்,

வயிற்றுப் பசிக்கு உணவு அளிக்கும் சத்திரத்தில் உடல் பசிக்கு உணவு கொண்டிருந்தன வந்த மிருகங்கள். வண்டிக்காரர்கள் காவல் இருந்து உயிரையும் கொடுத்தும் வீராயியை கூட்டமாக சீரழித்திருக்கிறார்கள் அவர்கள்.

வீராயி உங்க அப்பா எங்கே? அவர் இறந்து போய் ரெண்டு வருஷம் ஆச்சு பரமனய்யா. ஏதோ ஒரு ஆசுவாசம் பரமனுக்கு.

வீராயி ஓரமாகக் கிடந்த பிடவையை உடுத்திக் கொண்டு பரமனிடம் போகலாம் என்றாள்.  யாரும் இல்லே எல்லாரும் போய்ட்டாங்க என்று இன்னொரு தடவை சொன்னார் காரியகர்த்தா.

பரமன் வெளியே கிளம்பியபோது வீராயியும் அவரோடு நடந்தாள். மனதே இல்லாமல் அவள் கூட வரச் சம்மதித்தார் பரமன்.

எல்லோரும் வந்தாங்க யாரும் இல்லே இப்போ என்றார் காரியகர்த்தா கடைசியாக.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2022 18:02

January 18, 2022

பெரு நாவல் ‘மிளகு’ – Child’s day out in a deserted town

An excerpt from my forthcoming novel MILAGU

ஜெருஸூப்பா பிற்பகல் மஞ்சுநாத்.

மஞ்சுநாத் ஓடி விளையாடிய தெருதான் இது. சதா பாட்டுச் சத்தமும் பேச்சொலியும் கேட்டுக் கொண்டிருக்கும் பெரிய வீடுகளும், அங்கங்கே ஜவுளித் துணியும், சந்தனமும் அத்தரும், மாமிசமும், பழங்களும் விற்கும் கடைகளும் அம்மாவின் இனிப்பு மிட்டாய்க்கடையும் இருக்கும் ராஜவீதி இது.

பழக்கமான இடத்துக்கு வந்து சேர்ந்ததில் மஞ்சுநாத்துக்கு ஒரு சின்ன உற்சாகம் ஏற்பட்டது. இதோ வெற்றிலைக்கடை. அதற்கு அடுத்து மிட்டாய்க்கடை.

மிட்டாய்க்கடை படி ஏறும்போது கவனித்தான். அலமாரிகளில் அங்கும் இங்குமாகக் கொஞ்சம்  மிட்டாய் இருந்தது. அதை விற்றுக் காசு வாங்கிப் போட்டுக்கொள்கிற ஊழியர்களைக் காணோம். வாங்க வந்து காத்திருப்பவர்களையும் காணோம்.

அம்மா அம்மா அவன் கூப்பிட்டான். அவள் குரல் கேட்கவில்லை.

அப்பா. அப்பா. பரமன் அப்பாவைக் கூப்பிட்டான். அவர் சமையல் கட்டத்தில் ஜயவிஜயிபவ இனிப்பு செய்துகொண்டிருப்பார்.

கடை மேடையைக் கடந்து உள்ளே ஓடினான். எண்ணெய் நெய் காய்ச்சும் வாடையும், முந்திரியும் ஏலமும் வாதுமையும் கலந்து வறுபடும் ஆகார வாடையும் இல்லை எங்கும். இனிப்பு மிட்டாய்க்கு சர்க்கரை பாகு வைக்கும் மடையர்கள் ஒருவரும் இல்லை.

திலகன் அம்மாவா திலகன் அம்மாவா. உதவி தலைமை மடையரான திலகனை உரக்கக் கூப்பிட்டான் மஞ்சுநாத். இல்லை அவரும்.

நல்ல பசி எடுத்தது.  என்ன உண்ணலாம்? யார் கொடுப்பார்கள்? பசி அதிகமானது. பயம் அதிகமானது. கடை முகப்பில் அலமாரிகளுக்குள் கை விட்டுத் துளாவினான். சின்ன எறும்புகள் லட்டுருண்டை உதிர்த்த பூந்திலட்டு துகள்களின் மேலும், ஜாங்கிரி ஓரமாகவும், பாதாம் அல்வா நடுவிலும் பரவ ஆரம்பித்திருந்தன. அவற்றை உதறிவிட்டு இனிப்பு மிட்டாய்த் துணுக்குகளை பொறுக்கி எடுத்து உண்டான் மஞ்சுநாத்.

கிராம்பு அடைத்த ஒரு இனிப்பை கொஞ்சம் போல் எறும்பு அரித்திருந்தது. அதைத் திரட்டி எடுத்து வாயிலிட்டுக் கொண்டபோது கிராம்பு வாயில் கடிபட காரம் நாக்கில் சூடு போல் தட்டுப்பட்டது.

தண்ணீர் தேடி கடை முழுக்க சுற்றி வந்தான் மஞ்சுநாத்.  எங்கும் கிடைக்கவில்லை.

அடுத்த வெற்றிலை, பாக்கு விற்கும் கடையில் வெற்றிலைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரில் மிதக்க விட்டிருப்பார்கள். படி இறங்கி அங்கே ஓடிப்போய்ப் பார்த்தான் மஞ்சுநாத். கடை கதவு திறந்திருக்க உள்ளே வெற்றிலை மிதக்கும் பாத்திரத்தில் ஒற்றை வெற்றிலை மிதந்து கொண்டிருக்க, முழுக்க நனைத்துத் தண்ணீர்.

பாத்திரத்தில் இருந்து உள்ளங்கையில் அந்த வெற்றிலை வாசமடிக்கும் நீரை எடுத்துப் பருகினான். பழைய வாடையும், வெற்றிலைக் காம்பு காரமுமாக இருந்த அந்தத் தண்ணீரை விட்டால் வேறேதும் இல்லை.

இனிப்புக் கடைக்குள் திரும்ப வந்தபோது கண்ணைச் சுழற்றிக்கொண்டு உறக்கமும் வந்தது. அலமாரி வைத்த சுவர் ஓரமாக நீட்டிக் கொண்டிருக்கும் வட்டமான சுற்றுப் பலகையில் ஏறிப் படுத்தபோது அவனுக்கு உறைத்தது அவன் மட்டும்தான் அந்தப் பெரிய வீதியில் இருக்கப்பட்டவன்.

நகரமே அவன் தவிர வேறே யாரும் இல்லாமல் தனிமைப் பட்டிருப்பதை அவனுக்குச் சொல்ல யாருமில்லை.

அப்பா அப்பா அம்மா அம்மா.

அவன் நாலு தடவை குரலெடுத்து அழைத்து வெறுமையை பதிலாகப் பெற்றான்.

அப்பா அம்மா.

அவன் உறங்கியிருந்தான்.

ஜெருஸோப்பா அந்திப்பொழுது பரமன்.

இவ்வளவு தூரம் வந்து அந்தக் கொலைகாரி ரோகிணி கண்ணில் பட்டிருக்க வேண்டாம். அதற்காக இப்படி ஓடியும் வந்திருக்க வேண்டாம்.

தெருவில், ஏன் ஊரிலேயே யாரும் இல்லாமல் வீடு வாசலை இடித்துத் தகர்த்து எல்லோரும் சேர்ந்து கிளம்பி விட்டார்கள். ஊர் எல்லை வரை பரமன் நடையை எட்டிப்போட்டு நடந்தார். எங்குமே யாருமே கண்ணில் தட்டுப்படவில்லை.

காலையில் சூறையிடும் கேலடி படை வீரர்கள் பெரிதாக எதுவும் கிடைக்காமல் பேய் மிளகு காலிலும் கையிலும் சுற்ற ஓடிப் போனதை இங்கே இருந்து பார்த்தார் பரமன். அதற்கு முன் வீட்டு முன்னறையில் நெருப்புக் கட்டை வைத்து வெப்பப்படுத்தும் சுவர்ப் பகுதிக்குள் புதையலை வைத்ததையும் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

பரமனுக்கு செல்வம் ஏதும் வேண்டாம். பம்பாய் திரும்ப ஏதாவது வண்டி கிட்டினால் போதும். பம்பாய் இல்லாத இறந்த காலத்தில் இருந்துகொண்டு அங்கே எப்படிப் போவது?

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதில் இருந்து ஆயிரத்துஅறுநூறாம் ஆண்டுக்கு வர முடியும் என்றால் பின்னே இருந்து முன்னால் பயணப்படுவது முடியாதா?

ஹொன்னாவரில் இருந்திருக்கலாம். அங்கே பக்கத்தில் மிர்ஜான் கோட்டையை முற்றுகை இட்டு நேமிநாதனும் அடுத்தடுத்த குறுநில மன்னர்களும் ஜெர்ஸோப்பாவின் மகாராணி சென்னபைரதேவியை எதிர்த்துப் போர் நடப்பதால் இங்கே ஜெருஸப்பாவில் பாதுகாப்பாக இருக்கும் என்று வந்ததற்குக் காரணம் இருந்தால் அதோடு மஞ்சுநாத்தைப் பார்க்க வேண்டும், எப்படியாவது அவனைக் கூட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்றும் வழி தேடி வந்ததும் பரமனின் வலுவான காரணம் தான்.

நானூறு வயது மூத்த சின்னப் பையன் மஞ்சுநாத்தோடு நாளைக்கே  பம்பாய் போக வழி பிறந்தால் அவனைக் கூடவே கூட்டிப் போகலாமா? வண்டிக்காரன் சத்திரத்தில் கிழவர்கள் யாராவது இருப்பார்களே. போய்ப் பார்த்தால் என்ன?

அப்படியே காலை எட்டிப்போட்டு நடந்து சமணக் கோவில்கள் நிறைந்த தெருவில் சாப்பிட ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்து வரலாமே. பரமன் ஜெருஸோப்பா முழுக்க நடந்து திரிந்த அனுபவம் கைகொடுக்க, அடுத்த அரை மணி நேரத்தில் வண்டிக்காரன் சத்திரத்துக்கு வந்து சேர்ந்தார்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2022 18:36

பெரு நாவல் ‘மிளகு’ – An evening in Gerusoppa as the town is under destruction

An excerpt from my forthcoming novel MILAGU

ஆளுக்கு ஒரு கடப்பாரையோடு கேலடி படை அந்த வீட்டுக்குள் ஹோவென்று கத்திக்கொண்டு நுழைகிறது. வாசல் முழுக்க   காரைக்கட்டிகளுக்கு நடுவே சுவர்  பாதி கிடக்க, முன் கதவு பாதி அறுந்து கிடக்கிறது.

ஜாக்கிரதையாகக் கால் வைத்து வீட்டுக்குள் நுழைகிறவர்கள் அடுத்த வினாடி காலில் யாரோ எதுவோ இறுகக் கட்டி மேலே ஊர்வது முதுகுத் தண்டில் சிலிர்ப்பை ஏற்படுத்த பாம்பு பாம்பு பாம்பு என்று அங்கங்கே குரல் எழுகிறது.

அவசரமாக வெளியேறுகிறவர்களின் காலை இன்னும் இறுகிப் பிடித்து பேய் மிளகுக்கொடி அசுர வேகத்தில் இலையும் சிறுதண்டுமாக நீண்டு கவ்வுகிறது.

சிக்கிமுக்கிக் கல்லை வைத்து நெருப்புப் பொறி உண்டாக்கி அந்தப் பேய்க் கொடியை சுட்டுப் பொசுக்க முயன்றால் தீக்குள் சாம்பலாகாமல் துளிர்க்கிறது அந்த அதிசயக் கொடி.

சர்க்கார் உத்தியோகஸ்தன் வீட்டு வாசலை முழுக்க மறைத்த பேய் மிளகுக் கொடிக்குப் பின்னே இருந்து விடுவிக்கச் சொல்லி முதலில் உள்ளே புகுந்த படைவீரன் தீனமாக ஒலியெழுப்புவது கேட்கிறது. தீவட்டிகளின் மங்கிய ஒளி காற்றில் அணைகிறது. உஸ்ஸ்ஸ் என்று ஒளி இறந்த தீவட்டிகள் தீனமாக ஒலி எழுப்பி, இலுப்பை எண்ணெய் வாடையோடு அடுத்த ஒளியூட்டலுக்குக் காத்திருக்க, சூறையாடும் படை முன்னே நகர்கிறது.

இந்த வீட்டில் தங்க நகையாசாரி உள்ளே நுழைய முயன்று பேய் மிளகுக்கொடி விரைந்து காலில் சுற்றுவதற்குப் பயந்து அந்த வீட்டை விட்டு அடுத்த வீடு, அதற்கும் அடுத்தது என்று போக முற்பட்டு எதுவும் சரிவராமல் தெருவில் கடைசியில் இருந்த நாகநாத பசதியில் ஊடுறுவுகிறார்கள்.

அப்பாண்டை பூங்கா காலை எட்டு மணி. மஞ்சுநாத். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுவனைத் தலையில் தாக்குகிறான் சொத்தைப்பல் தளபதி.  மஞ்சுநாத் அவனை உற்றுப் பார்க்கிறான். நெருப்புப் பாளம் மேலே விழுந்து உருள்வது போல் உணர்ந்து தளபதி அலறுகிறான்.

தாறுமாறாக ஓடிய குதிரை வண்டி தெருக்கோடியில் கவிழ குதிரை தன்னிச்சையாக லகானிலிருந்து பிய்த்துக் கொண்டு வெளிவந்து வெறும்வாயை அசைபோட்டபடி நிற்கிறது.

அவிழ்ந்து தொங்கிய அதன் சேணத்தைக் கழற்றி எறிந்து விட்டு மஞ்சுநாத் ஓடுகிறான். வண்டிக்குள் இருந்து தளபதி காப்பாற்றச் சொல்லி இரைஞ்சுகிற பார்வையோடு ஒலியெழுப்பியபடி கிடக்கிறான்.

பின்னால் குதிரைகளின் காலடி ஓசை. கேலடி படை பூங்காவை ஒட்டிய தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

முற்பகல் பதினொன்று மணி.

அப்பாண்டை பூங்கா. ரோகிணி. அவசரமாக பூங்கா வாசலில் தன் சாரட்டை நிறுத்தி ஓட்டமும் நடையுமாக பூங்காவுக்குள் சுற்றுகிறாள் ரோகிணி.

மஞ்சுவையோ தளபதியையோ அங்கே எங்கும் காணோம். பூங்காவுக்கு பின்வாசலுக்கு அருகே குதிரை வண்டி கவிழ்ந்து கிடந்தது கண்ணில் பட அங்கே ஓடுகிறாள்.

மஞ்சு மஞ்சு என்று அரற்றிக்கொண்டு அவள் தாறுமாறாக ஓடி செடிகளுக்குமேல் மிதித்து மலர்களை கூழாக்கி நசிப்பித்து ஓடி விபத்து நடந்த இடத்துக்கு விரைகிறாள்.

வண்டிக்குள் யாரும் இல்லை. வண்டிக்குள் இருந்து ரத்தச் சுவடு வீதியில் வழிந்து ஓடிச் சால் கட்டி நிற்கிறது. சிறிது தொலைவில் குதிரை ஏறிய கேலடி சூறையாடும் படை போய்க் கொண்டிருக்கக் காண்கிறாள்.

அடக்க முடியாமல் அழுகிறாள் ரோகிணி.

அவள் இனி இருக்கப் போவதில்லை. இருப்பில் எந்த அர்த்தமும் கிடையாது. இந்தத் தங்கமும் வைரமும் சாக்குப் பைகளில் அடைத்திருந்தது எதற்குப் பயன்படும் இனி?

தன் சாரட்டை நோக்கி நடக்கிறாள் மெதுவாக. கண் இருண்டு வர சாரட்டை கேலடிப் படையைத் தொடர்ந்து ஓட்ட ஆரம்பிக்கிறாள்.  தரையில் ஏதோ, யாரோ கிடக்கிறதாகப்பட நிறுத்துகிறாள். தளபதிதான்.

அவனுடைய மோதிரம் அணிந்த கை விரல்கள் வெட்டிச் சிதைக்கப்பட்டிருக்கின்றன. கைகளில்

மஞ்சு மஞ்சு.

தளபதி சிரமத்தோடு கண் திறந்து பார்க்கிறான்.

குழந்தை ஓடிட்டான். குழந்தையா அவன்? பரிசுத்த ஆத்மா. தீர்க்காயுசா இருப்பான். என்னை மன்னிச்சுடுங்க.

இதற்காகவே காத்திருந்த மாதிரி அவன் கண்கள் இறுதி உறக்கத்தில் மூடுகின்றன.

ரோகிணிக்கு ஒரு அபத்தமான நாட்டியத்தில் ஆயிரம் பேரோடு அவளும் ஆடுவதாகத் தோன்றியது. எதற்குச் சிரிக்க வேண்டும், எப்போது அழ வேண்டும் என்று தெரியாத நர்த்தகி. காலடிச் சுவடுகள்  தடுமாறி ஆடுகிறாள். ஆடச் சொல்லி தன்னைத்தானே சாட்டையால் அடித்துச் சுழன்றாடுகிறாள்.

இந்தப் பாதையில் மஞ்சு நடந்துபோனானோ? அவன் மோதிரம் ஏதும் அணியவில்லை தான். சூறையாடும் கேலடிப்படை அவனை குழந்தை என்பதற்காக விட்டு வைத்திருப்பார்கள் அவர்கள் கண்ணில் பட்டிருந்தால்.

பால்மணம் மாறாத அந்த ஐந்து வயதுச் சிறுவன் எங்கே இருக்கிறான் இப்போது? யாருமில்லாத வீதியின் இருபுறமும் பார்த்து சாரட் ஓட்டிப் போகிறாள் ரோகிணி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2022 05:07

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.