இரா. முருகன்'s Blog, page 60
December 28, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – The battle continues, albeit at a low key, as casualties mount
An excerpt from my forthcoming novel MILAGU
காவல் படையில் கூடுதல் சேதம் ஏற்பட, எதிரணியில் பில்கி மாநில அரசர் திம்மராஜு அனுப்பி வைத்த முதல் நூறு பேர் சேர்ந்து போரணியைப் பலப்படுத்தினார்கள். அனுபவம் வாய்ந்த அந்த வீரர்கள் நேமிநாதனை மகிழ்ச்சியடைய வைத்தார்கள்.
பிற்பகல் போரில் முதல் தடவையாக குதிரை ஏறிவந்த ஓர் அரசு காவல்படை வீரரை நோக்கி குறுவாளை வீசி எறிந்தான் எதிரணி வீரன் ஒருவன். அது காவல் படை வீரர் நெஞ்சில் ஆழப்பதிய குதிரையில் இருந்து சரிந்து விழுந்து அவர் உடனடியாக மரணமடைந்தார்.
அந்த முதல் உயிரிழப்பு யுத்தபூமியில் தொடர்ந்த மவுனத்தை விதைத்திருந்தது. தற்காலிகமாக போர் நடவடிக்கைகளை தன்னிச்சையாக இருதரப்பும் நிறுத்தி வைத்து மௌனமாக நிற்க, இறந்த காவலரின் உடல் சாரட் வண்டியில் கோட்டைக்கு உள்ளே எடுத்துப் போகப்பட பீரங்கி மூன்று முறை முழங்க, விட்டுவிட்டு முரசு அதிர்ந்தது.
இரு தரப்பு முரசுகளும் அப்படி துக்கம் கொண்டாட, அதற்கு அப்புறம் ஒரு மணி நேரம் பேருக்காக யுத்தம் தொடர்ந்தது.
நாள் முடிவில் இருதரப்பிலும் தலா முப்பது பேருக்குக் காயம் ஏற்பட்டது. அரசு அணியின் இரவு ஆய்வுக் கூட்டத்தில் சிறு படையணியாக டய்யூவில் இருந்து போர்த்துகீஸ் ராணுவம் அனுப்பப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
நாளை மறுநாள் ஷெராவதி நதியில் படகுகள் செலுத்தி அவர்கள் வரும்போது வெற்றி சென்னபைரதேவிக்கு என்று முன்கூட்டியே ஊகிக்கப்பட்டது.
இது தவிர தயார்நிலை இரண்டாம் கட்ட படையில் நூறு பேர் போரிடத் தயாராக வந்திருப்பதாகவும், நாளை அவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் நஞ்சுண்டய்யா பிரதானி மறுபடியும் பலத்த கரகோஷத்துக்கு இடையே அறிவித்தார்.
போர் தொடங்கி மிர்ஜான் கோட்டைப் பகுதியில் யுத்தம் நடப்பதால், ஹொன்னாவர் நகருக்கு வெளியில் இருந்து தினம் வரும் காய்கறி, இறைச்சி, மீன், பழங்கள், பால் இவை வந்து சேர முடியாமல் நகரில் தட்டுப்பாடு நிலவுவதாக ஒற்றர் படை அறிக்கை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
ஹொன்னாவர் நகர மக்கள், முக்கியமாக முதியவர்கள் இது குறித்து கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக அந்த அறிக்கை சொல்லியது. போர் எதுக்கு என்று நகரமே கேட்பதாக இவர்கள் மிகைப்படுத்திச் சொன்னாலும், தட்டுப்பாடு உண்மைதான் என்றும் அறிக்கை சொல்லியது.
ஜெருஸூப்பாவில் கதக் நாட்டிய நிகழ்ச்சி நிறைவுற்று அடுத்து ஹென்னோவாரில் அடுத்த கச்சேரிக்காக அங்கே வந்துகொண்டிருந்த மகத்தான கதக் நாட்டியக்காரி அமீராஜான், நகருக்குள் நுழைய முடியாமல் முற்றுகையால் திரும்பிப் போனதற்கு நகரில் பெரும்பான்மையான ஆண்கள் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர் என்று அறிக்கை மேலும் கூறியது. யாருடைய யுத்தம் இது என்று அவர்கள் உரக்கக் கேட்பதாகவும் அறிக்கை சொல்லியது.
சென்னபைரதேவி விஷம் கலந்த உணவை உண்டு சாகக் கிடப்பதாக ஊரில் பரவிய வதந்தி கூறுவதை பலரும் நம்பியிருப்பதாகத் தெரிகிறது. சென்னா மகாராணி தன் ஆயுளை முடித்துக்கொள்ள தானே அதை உண்டதாகவும், நேமிநாதன் மனைவியான ரஞ்சனா தேவியால் மறைவாக உணவளிக்கப்பட்டதாகவும் இரண்டு மாதிரி வதந்திகள் பரவியதை அறிக்கை அறிவிக்கிறது.
யுத்த காலத்தில் தினம் காலையில் நாட்டு மக்களை சந்தித்து வதந்திகள் பரவாமல் அரசு தரப்பு செய்தியை தானே தர சென்னா மகாராணி முன்வந்ததை அவை உடனடியாக பாதுகாப்பு காரணம் காட்டி தள்ளுபடி செய்தது. நஞ்சுண்டய்யா அந்தக் கடமையை நிறைவேற்றுவார்.
ஜெர்ஸூப்பா நகரில் வசிப்பிடங்களில் இருந்து தென் கன்னட, ஆந்திர, தமிழ், மலையாள பிரதேசங்களுக்கு மக்கள் குடி பெயர்வது தொடங்கி விட்டதாக அறிக்கை கூறுகிறது.
எனினும் மிர்ஜான் கோட்டைக்கு மிக அருகே அமைந்த ஹொன்னாவரில் அப்படியான நடவடிக்கை ஏதும் தட்டுப்படவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
கோகர்ணம், பட்கல் பகுதிகளில் பதட்டமான வாழ்க்கை தொடர்கிறதாகவும் தெரிவிக்கிறது. ஆட்ட பாட்டங்களும் கோவில் விழாக்களும் ரத்து செய்யப்பட்டிருக்க, அரசு நடவடிக்கை பற்றி செய்தி பகிர்வது மிக அதிகமாகியுள்ளதாகத் தெரியப்படுத்துகிற அறிக்கை நாளை தொடர்வதாக குறித்து முடிவடைகிறது.
pic medieval European battle
ack explorethearchive.com
December 27, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – The battle goes on with no détente in sight
An excerpt from my forthcoming novel MiLAGU
முதல் நாள் யுத்தம் கோட்டை முற்றுகையாக ஆரம்பித்து நாள் முடிந்தபோது அரசு தரப்பில் ஏழு பேருக்கும் எதிரணியில் பதினேழு பேருக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டதாக ஒற்றர் படை மகாராணிக்குத் தகவல் அறிவித்தது. உயிரிழப்பு இரு தரப்பிலும் இல்லை என்றும் இரு தரப்பிலும் அறிவிப்பு பதிவிட்டிருந்தது.
ராத்திரி கோட்டை அரசாங்க மாளிகை மண்டபத்தில் சென்னபைரதேவி தலைமையில் பிரதானிகளும் தளவாய், ஒற்றர் படைத் தலைவர் ஆகியோரும் கூடி அன்றைய யுத்த நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.
படை அனுப்ப, கொஞ்சம் அதிக ஊழியக் காசுக்கு அனுப்பி வைக்க போர்த்துகல் அரசு ஒத்துக்கொண்ட சந்தோஷ சமாசாரத்தை அரச தலைமைப் பிரதிநிதி பெத்ரோ பிரபு அறிவித்துப் போன சந்தோஷ சமாசாரம் பகிரப்பட்டது.
அடுத்து வரும் நாட்களில் கைகொள்ள வேண்டிய ராஜதந்திரமாக போர்த்துகல் படைகள் தாமதமானாலும் ஜெருஸுப்பா ஊர்க்காவல், ஹொன்னாவர், பட்கல் ஊர்க்காவல் படையினர் ஊருக்கு ஐம்பது பேர் ஆயத்த நிலையில் வைக்கப் பட்டனர்.
வெற்றி முகமாக அரசுப் படை விளங்குவதை சென்னா அறிவித்தபோது நீண்ட கரகோஷம் நிலைத்தது.
போர்த்துகல் படைகள் வருவதை துரிதப்படுத்த அவர்களின் ஒரு பகுதியை கோவாவில் இருக்கும் போர்த்துகல் காவல்படையில் இருந்தும். டையூவில் இருந்தும், டாமனில் இருந்தும் உடனடியாக ஷராவதி நதியில் பயணம் செய்வித்து அனுப்பவும், அவர்களுக்கு இரண்டு மடங்கு ஊதியம் தரப்படும் என்றும் வேண்டும் கடிதத்தை உடனே பெத்ரோ பிரபு மூலம் அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. பெத்ரோ இதற்கான உத்தரவை கோவா பிரதிநிதி ப்ரகான்ஸாவுக்கு அனுப்பி உடன்பட வைத்ததாகப் பகிரப்பட்டது.
பெத்ரோ பிரபுவும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கு பெற்றால் அது போர்த்துகல் என்ற நேச அரசின் நடவடிக்கை என வரவேற்கத் தக்கதாகும் என்று கூட்டம் அபிப்பிராயம் தெரிவித்தது.
அப்பக்கா மகாராணி படை உதவி அனுப்ப இயலாததற்கு வருத்தம் தெரிவித்து லிகிதம் எழுதியது படிக்கப்பட்டது. இன்னொரு முறை தனிப்பட்ட அன்பும் தோழமையும் அடிப்படையாகக் கொண்டு கடிதம் எழுதுவதாக சென்னா வாக்களித்தபோது அப்பக்கா கேலடி, பில்கி அரசர்களுக்கு பயந்து படை அனுப்பவில்லை என்று புரிந்தது.
நேமிநாதனும், வகுளாபரணனும் நடத்திய ஆய்வுக் கூட்டம் பாதுகாப்பு கருதி ஹொன்னாவருக்கு வெளியே மாநில எல்லைக்கு அப்பால் அவசரமாக ஏற்படுத்தப்பட்ட கூடாரங்களால் அமைந்த போர் அலுவலகத்தில் ராத்திரி நேரத்தில் தீவட்டிகளின் மட்டுப்படுத்தப்பட்ட ஒளியில் நடைபெற்றது.
படையினருக்கு பயிற்சியும் அனுபவமும் இல்லாவிட்டாலும், உத்வேகமும் உற்சாகமும் இருப்பதால் வெற்றி முகம் தட்டுப்படுகிறது என்று நேமிநாதன் அறிவிக்க நீண்டு ஒலித்த கரகோஷத்தைத் தொடர்ந்து மிளகு அரசர் நேமிநாதர் வாழ்க, ஜெயவிஜயீபவ கோஷங்களை ரோகிணி ஓங்கிச் சொல்லி கூடியிருந்தவர்களை ஒருசேர முழங்க வைத்தாள்.
படையினருக்கு உணவு, முதல் நிலை மருத்துவ உதவி இவற்றை அவள் தான் ஒருங்கிணைத்து வருகிறாள். நிதியை வகுளாபரணனோடு சேர்ந்து நிர்வகித்து தளவாடங்கள் வாங்க, பழுதுபார்த்து உடனே திரும்பப் பெற என்று பல சிறுசிறு பணிகளை செய்வதில் நேமிநாதனுக்கு உதவியாக அவள் இருப்பாள் என்று அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் நாளும் கோட்டை முற்றுகை தொடர்ந்தது.
pic a medieval war scene
ack worldhistory.org
December 26, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – The chapter in which the battle lines are drawn and the charge of the Light Brigade commences
an excerpt from my forthcoming novel MiLAGU
எழுபத்தாறு 1606 மிர்ஜான் கோட்டை
யுத்தம் ஆரம்பித்து விட்டது.
மகாராணி சென்னபைரதேவி தொடங்கி வைக்கவில்லை. நேமிநாதன் தொடங்கினானா, தொடங்கினான் என்றால் எப்போது என்று அவனுக்கே தெரியாது.
என்றாலும் அடிதடி ஆரம்பமாகியிருக்கிறது. மிர்ஜானுக்கு வெளியே நூறு பேரைக் கையில் வாளெடுத்து அணிவகுத்து இப்படியும் அப்படியும் கோட்டைக்கு வெளியே பிரதட்சணமாக நடக்க வைத்தபோது அந்தக் கூட்டத்துக்கும் கோட்டைக்குள்ளே வழக்கமான பாதுகாப்புக்காகப் பணிபுரியும் அரசு காவல் படைக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் தட்டுப்படவில்லை.
ஒரே ஒரு விஷயம். காவல்படை வருடக் கணக்காக அணிவகுத்து நடந்து கோட்டைக்கு உள்ளும் வெளியும் சுற்றி மிடுக்காக ஒருசேர காலடி எடுத்து வைத்து நடப்பது போல் ஒழுங்கான நடையும் கம்பீரமும் நேமிநாதன் அவசர அவசரமாகக் கூட்டிய கூட்டத்தில் இல்லை.
ஏனோ தானோவென்று மிர்ஜான் கோட்டையை பிரதட்சிணமாகவும் இரண்டு கோஷ்டியாக பிரிந்து இடவலம், வல இடமாகவும் சுற்றிச் சுற்றி வந்தபோது உள்ளே இருந்து ஒரு குதிரை வீரன் கையில் நீலத்துணியில் ஓரமாக மூன்று வெள்ளை வட்டங்கள் மின்னும் ஜெருஸோப்பா நாட்டுக் கொடியோடு வந்து நின்று இரு கைகளையும் வட்டச் சுழற்சியில் ஈடுபடுத்தினான்.
பின்னால் போ, கலைந்து போ என்று அரசு காவல்படை உத்தரவிடும் சமிக்ஞை அது. கோட்டையில் பீரங்கி வேட்டு ஒன்பது முறை முழங்கி யுத்தம் ஆரம்பித்ததாக அடையாளம் காட்டியது. கோட்டை முரசங்கள் அதிர்ந்து ஒலித்தன. எதிரணியின் எக்காளங்கள் அவ்வப்போது ஊதப்பட்டு யுத்த சூழலை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டது.
நேமிநாதனின் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினார்கள் வாய் வார்த்தைத் தகராறு அடுத்துத் தொடங்கியது. அது மும்முரமாகி இரண்டு பக்கமும் வாள் பயிற்சி செய்து பழக்கமுடையவர்கள் வாளோங்கி முன்னும் பின்னும் ஓடினார்கள்.
வாள் வீசும்போது மிக அருகில் வந்து தோளிலும் நெற்றியிலும் ரத்தக் காயம் ஏற்பட்டவர்கள் உடனடியாக இரு தரப்பிலும் அகற்றப்பட்டு முதல் சுற்று மருத்துவ உதவியாக காயத்துக்கு துணிக்கட்டு போடப்பட்டது. காயத்தின் தீவிரத்தைப் பரிசீலித்து அவர்கள் ஓய்வு தரப்பட்டார்கள். அல்லது திரும்ப போர் நடத்த அனுப்பப் பட்டார்கள்.
அரசு காவல் படை வீரர்கள் காயமடைந்தபோது அவர்கள் உடனடியாகக் கோட்டைக்குள் கொண்டு போய் சிகிச்சை அளிக்கப் பட்டார்கள். எதிரணி வீரர்கள் கோட்டைக்கு மேற்கே மரங்கள் நிறைந்த நிலப்பகுதியில் கூடாரம் அமைத்து முதல் உதவி தரப்பட்டார்கள்.
சங்குகள் ஒலிக்க, முரசுகள் நிதானமாக முழங்கின. காவல் படை கோட்டைக்குள் போக, உள்ளே இருந்து அடுத்த அலை படையினர் குதிரை வீரர்களாக கோட்டை வாசல் காவலில் ஈடுபட்டார்கள்
எதிரணி கோட்டைக்கு அடுத்த வெற்று நிலத்தில் தரையில் குந்தி உட்கார்ந்து, தென்னம்பாளை, வாழை மட்டைகளைக் கிழித்து மடித்து உருவாக்கிய தொன்னைகளில் சோறும் வாழைக் கறியும் உண்டார்கள். உணவு ஹொன்னாவரில் நேமிநாதன் ஏற்பாடு செய்தது.
நகரத்தில் ரதவீதி மிட்டாய்க்கடையில் இனிப்பு தயாரிப்பது உடனடியாக நிறுத்தி வைக்கப் பட்டு எதிரணி போர்ப்படைக்கு உணவு தயாரிக்க தளவாடங்களும் அரிசியும், புளியும், வெங்காயமும், பச்சை மிளகாயும், வற்றல் மிளகாயும், பூசணியும், பரங்கியும், வாழைக்காயும் பயன்படுத்தப்பட்டன.
அரசு அணி படையினருக்குக் கிட்டத்தட்ட இது போன்ற உணவு மிர்ஜான் கோட்டை சமையலறையிலும் அதை ஒட்டிய வெளியிலும் சமைக்கப்பட்டு கோட்டைக்குள் பரிமாறப்பட்டது. அணி அணியாக உண்ண உள்ளே போனார்கள். உண்ணக் காத்திருக்கிறவர்கள் கோட்டை வாசலில் காவல் தொடர, உண்டு வந்தவர்கள் அவர்களிடமிருந்து காவலைக் கைக்கொண்டார்கள்.
அடுத்த சங்கு முழங்குதல். முரசு அதிர்தல். பீரங்கி கோட்டைக்குள் இருந்து ஒன்பது முறை ஒலித்தல். யுத்தம் தொடர்ந்தது. சாயந்திரம் ஆறு மணிக்கு முரசு ஒலித்து நிற்க இரண்டு தரப்பும் இன்றைய போராட்டம் ஓய்ந்து திரும்பின.
pic medieval battle
ack en.wikipedia.org
December 25, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – Chenna faces a barrage of questions from the citizens of her kingdom
An excerpt from my forthcoming novel ‘MILAGU’
இனி உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலிறுப்பேன் என்று அடுத்து சொன்னாள் மகாராணி. எதுக்கு அவர்கள் ஏதும் பேச மேடை தரணும் என்கிற மாதிரி நஞ்சுண்டய்யாவும் சந்திரபிரபு பிரதானியும் சென்னாவைப் பார்த்தார்கள்.
நல்லா நடக்கும், கவலைப்படாதீங்க என்று கண் இமை தாழ்த்தி சமிக்ஞை கொடுத்தாள் மிளகு ராணி. ஒருவர், இருவராகக் கூட்டம் சேர்ந்தது.
மனம் திறந்து பேசலாம். யாரையும் கேள்வி கேட்டதற்காகத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ போவதில்லை. விமர்சனத்தை ஐம்பத்தைந்து வருடமாக வரவேற்று மாற்றுக் கருத்துகளை மதித்துவாங்கிப் பரிசீலித்து நாடு நிர்வகிப்பவள் நான். இப்போதும் எதிர்பார்க்கிறேன்.
கேள்விகள் கேள்விகள் ஒரு பெரிய ஜனக்கூட்டம் அரசியிடம் தொடர்ந்து வினாத்தொடுத்தது. விடை கொண்டது. பேச்சைக் கேட்க இருந்தவர்களை விட கோவில் முழுக்க அடைத்துக்கொண்டு வெளியேயும் நின்றபடி கிட்டத்தட்ட எண்ணூறு பேர் சென்னபைரதேவியிடம் கேள்வி கேட்டவை இதுவரை கேட்கப்பட்டவை தான் – பதில் தேவைப்படாத, புகார் செய்யும் தொனியில் வந்தவை பெரும்பாலும்.
போர் வருதென்றால் நீங்கள் இத்தனை நாள் அது வராமல் தடுக்க என்ன செய்தீங்க? இப்போது எப்படி வந்தது?
ஏன் அரசுத் துறையில் மிளகு விற்ற வருமானத்தையும், தனியார் வர்த்தகர்கள் மிளகு விற்றதுக்குக் கணிசமான வரி கட்டி வந்த வருமானத்தையும் தொடர்ந்து கட்டடம் கட்ட பயன்படுத்தணும்?
ஐம்பத்தைந்து வருடம் ஆண்டாச்சுன்னு நீங்க பெருமையா சொல்றீங்க. எங்களுக்கும் பெருமைதான். போதுமே. நீங்க பதவி துறந்து அடுத்த தலைமுறை ஆட்சிக்கு வர வழி பண்ணலாமே?
வீட்டுக்கு ஒருத்தர் வந்தால் எங்கே பயன்படுத்துவீங்க அவங்களை?
ரெண்டாம் நிலை போர் ஆதரவுப் படை என்கிறது உண்மையா? முதல் நிலைப் படையே நம்மிடம் கிடையாதே. இவங்க எப்படி அடுத்த நிலையிலே வருவாங்க?
வீட்டுக்கு ஒருத்தரை கூப்பிட்டு ஒரு பயிற்சியும் இல்லாமல் கையிலே துப்பாக்கியைத் தூக்கிக் கொடுத்து மிர்ஜான் கோட்டையைப் பாதுகாக்க நிறுத்தி அவங்களை இறப்புக் கோட்டுக்கு அருகே கொண்டு போய் விடுவீங்க அப்படித்தானே?
நாங்கள் வராமலே ரெண்டாயிரம் பேருக்கு மேலே ரெண்டாம் நிலைப்படைக்கு தயார்ப் பணம் மாதாமாதம் வழங்கி நிறுத்தி வச்சிருக்கீங்க. அவர்களை முதல்லே கூப்பிட்டு விட்டு யுத்தத்துக்கு அனுப்புங்க. அப்புறம் வேணும் என்றால் நாங்கள் வீட்டுக்கு ஒருவரை அனுப்ப முடியுமான்னு பார்க்கறோம்.
அம்மாவுக்கும் பிள்ளைக்கும் சண்டை வந்தா கதவை அடைச்சு வச்சுட்டு வீட்டுக்குள்ளே அடிச்சுக்குங்க, தீர்த்துக்குங்க. . எங்களை எதுக்கு யுத்தத்திலே இழுத்து விடறீங்க?
சென்னா சட்டென்று எழுந்தாள். முகம் இறுகி இருந்தது. நடக்க ஆரம்பித்தாள்.
தேசபக்தியும் அரசுமேலே நம்பிக்கையும் மதிப்பும் இல்லாத நகரம் ஜெருஸொப்பா. இது இனியும் இருக்க வேணாம்னுதான் நீங்களே இடிக்க ஏற்பாடு செய்யறீங்க. இடியுங்க. நல்லா இருங்க. ரொம்ப நல்லா இருங்க. உங்களை தெய்வம் காப்பாற்றட்டும்.
அவள் வாயிலிருந்து இப்படி ஆயாசமும் அங்கலாய்ப்புமான வார்த்தைகள், இதுவரை வந்ததே இல்லை. எனினும் அதைப் பொருட்படுத்தாமல் கூட்டம் சென்னபைரதேவியை எதிர்த்துக் கோஷம் போட்டபடி கலைந்து போனது.
கோவில் மணி முழங்கியது. ராத்திரி ஆராதனை. சென்னா கண்ணீர் கன்னங்களில் பெருகி வடிய கண்மூடி கைகூப்பி சந்நிதியை நோக்கி நின்று வேண்டினாள் – எல்லோருக்கும் நல்ல புத்தி கொடுப்பா. எல்லாரும் கோபத்திலே பேசியதை மன்னிச்சுடு. எல்லோரும் நம்மவர்கள். எல்லோரும் என்னவர்கள். எல்லோரும் சந்தோஷமாக நல்வாழ்வு வாழட்டும்.
pic Medieval Emperor
ack en.wikipedia.org
December 24, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – The logistics of a medieval war
An excerpt from my forthcoming novel MILAGU
அவன் நஞ்சுண்டய்யா பிரதானை விடுவதாக இல்லை. மேலும் கேட்டது இப்படி – சேனையில் இருக்கப் போகிறவர்களுக்கு ஒரே மாதிரி நீலக் குப்பாயம், காலில் செருப்பு எல்லாம் வந்து கொண்டிருக்கா?
நஞ்சுண்டய்யா யோசித்து ஒரு நிமிடம் கழித்துச் சொன்னார் –
ஆயிரம் ஜோடி செருப்பு தைக்க இந்த மாதம் முழுக்க ஆகும். அதற்காக போரை ஒத்திப் போடமுடியுமா?இதுநாள் வரை செருப்பு அணியாமல் இப்போது அணிந்து ஓடிக் குதித்து யுத்தம் புரிந்தால் செருப்பில் தான் கவனம் போக அசௌகரியமாக அது கடித்துத் தொலைக்கலாம். அதுக்கு, செருப்பில்லாமலேயே போருக்குப் போவது சரிப்படும்.
மேலும் தளபதியிடம் கூறியது இது –
ஒரே நிறத்தில், நீலக் குப்பாயத்தை ஹொன்னாவரிலும் ஜெருஸூப்பாவிலும் கோகர்ணத்திலும், மீர்ஜான் கோட்டையிலும் தையல்காரர்கள் தைத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கு குறைந்தது இரண்டு குப்பாயமாவது தரவேண்டும். அப்படிக் கொடுத்தால் அதில் ஒன்றை வீட்டில் பிள்ளைகளுக்குத் தரப் பத்திரமாக எடுத்து வைத்து விட்டு, ஜீவித்திருந்தால் ஒரே குப்பாயத்தோடு நாள் கணக்காக வியர்வை மணக்க ஓடியாடுவார்கள். அதைச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோவில் வாசலில் சாரட் வந்து நிற்க, கோவில் முக்கியஸ்தர்களும், குருக்கள்களும் பூர்ண கும்பத்தோடு மெல்ல எதிர்கொண்டு நடந்தார்கள்.
ஜெருஸுப்பா மகாராணி மிளகு அரசி சென்னபைரதேவி வாகனத்தில் இருந்து கைகூப்பியபடி புன்னகைத்துக் கொண்டு இறங்கினாள்.
வழக்கமாக கோவிலுக்கு வரும் நூறு நூற்றைம்பது பேர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் குழுமி இருந்தார்கள். சிறிய மேடையை மண்டபத்தின் நடுவே தாற்காலிகமாக அமைத்து வாள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நாலு திசையிலும் பார்த்து மிடுக்காக நின்றார்கள்.
கோவில் மணி இல்லாமல் சாயரட்சை தீபாராதனை நடந்தது. குருக்கள் அர்ச்சனை செய்யும்போது குரல் தாழ்த்தி தனக்கும் சுவாமிக்கும் மட்டும் கேட்கும்படியாக மந்திரம் சொன்னார்.
சென்னா பேச ஆரம்பித்தாள் –
உங்கள் வயது நாற்பதுக்குள் இருக்கும் என் அன்பு மகன், மகள்களே, நாற்பதிலிருந்து எழுபது வயதான என் சகோதர சகோதரிகளே, என் பெற்றோர் போல் எப்போதும் எனக்கு வாழ்த்தும் ஆசியும் அருளும் அன்னை, தந்தையரே, அனைவருக்கும் என் வணக்கம்.
நான் ஜெருஸோப்பாவை அரசாட்சி செய்து வரும் கடந்த ஐம்பத்தைந்து வருடத்தில் நான் எப்போதும் உங்கள் அனைவரையும் எதையாவது உதவி என்று கேட்டு வந்ததில்லை. இப்போது வந்திருக்கிறேன்.
என் அன்புள்ள ஜெருஸுப்பா தேசவாசிகளே, நான் உங்களிடம் பொன்னோ மணியோ, மரகதமோ, வெள்ளியோ கேட்க வரவில்லை. வரியை உயர்த்திக் கட்டச் சொல்லிக் கோரிக்கை விடுக்கவில்லை.
இதுவரை மிகச் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்டு, தரமான மிளகு மற்றும் இதர வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி மூலம் வளமான, முன்னேற்றப் பாதையில் நடக்கும் நாடு ஜெர்ஸோப்பா.
அதன் குடிமக்களான உங்கள் அனைவரையும் செழிப்பும் செல்வமும் பெருகி வாழ வழிநடத்திப் போவதில் பெருமை கொண்ட நான் இப்போது உங்களிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்கிறேன்.
இங்கே பத்து வினாடி இடைவெளி விட்டு நிறுத்தித் தொடர்ந்தார் சென்னா.
வீட்டுக்கு ஒருவர். ஆம், வீட்டுக்கு ஒருவர் வரட்டும்.
எங்கு என்று உங்களுக்குத் தெரியும்.
நாட்டுக்கு உழைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு. இந்த சென்னபைரதேவிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் அளிக்கும் மகத்தான உதவி இது.
pic medieval meeting
ack medieval.eu
December 23, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – Her Highness ‘The Pepper Queen’ addresses not so large a public gathering at Gerusoppe
Excerpt from my forthcoming novel MiLAGU
நஞ்சுண்டர் இறங்க, சாரட் நேரே உள்ளே போய்விட்டது.
நஞ்சுண்டருக்கு அப்போதுதான் அடிப்படையான தேவைகள் அவர் முக்கிய பிரதானி என்பதையும் மீறி முன்னால் வந்தன. சிறுநீர் கழிக்க வேண்டும். தாகத்துக்கு தண்ணீர் வேண்டும். சற்றே படுத்து எழ ஒரு படுக்கை வேணும். பசிக்கிறது. மதியத்துக்கு ஆகாரம் வேண்டும். சாயந்திரம் சென்னபைரதேவி கூட்டங்களுக்கு போய்ச்சேர வாகனம் வேண்டும்.
ஜெரஸோப்பாவில் யாரைக் கேட்க? ராஜமாளிகைக்குள் போகலாமா என்று மனதில் ஹொன்னுவைக் கேட்க பதிலே இல்லை. பகல் உறக்கத்தில் போல.
அழைக்காமல் அரசு மாளிகைக்குள் போவது நாகரிகம் இல்லை என்று தோன்றியது. என்ன செய்வதென்று அறியாமல் மெல்ல நடக்க ஆரம்பித்தார்.
ஜெருஸோப்பா கடைவீதிக்குப் போனால் பழக்கமான பெரும் வர்த்தகர்கள் நிறைய உண்டு. பெத்ரோவின் அலுவலகமும் அங்கே உண்டு.
அவர் அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் பக்கத்தில் இன்னொரு பெரிய மூன்று குதிரை வாகனம் நின்றது.
தேவரீர் எழுந்தருளணும். உள்ளே இருந்து இருகை கூப்பியபடி வகுளாபரணன் இறங்கி நஞ்சுண்டய்யா பிரதானியை தன்னோடு வரச் சொன்னான்.
பக்கத்தில் அரசுப் பிரதானி மாளிகை இருப்பதை மறந்து போனீரோ?
வகுளன் அவர் சாரட்டில் ஏறக் கையைப் பிடித்து உயர்த்தி விட்டான்.
ஜெருஸோப்பா வராமல் கோட்டையிலேயே அரசாங்கம் நடந்தால் இப்படியான விஷயம் எல்லாம் மனதில் வராது, இதுதான் பிரச்சனை என்று அவனிடம் சொல்ல வேணும் போலிருந்தது நஞ்சுண்டருக்கு.
ஜெருஸோப்பா கூட்டங்கள்? நஞ்சுண்டர் கேட்க, வரவில்லை என்று தலையாட்டினான் வகுளன்.
அவரை இறக்கி விட்டு உள்ளே நுழையும் வரை பார்த்திருந்து விட்டு வகுளன் கோச்சை நகர்த்தினான்.
திருப்தியான சாப்பாடு, சற்றே உறக்கம். ஐந்து மணிக்கே அரசு மாளிகை ஏற்பாடு செய்து கொடுத்த வாகனத்தில் ஈஸ்வரர் கோவில். நஞ்சுண்டய்யா நாளிறுதிப் பரபரப்பின் வசமானார்.
காவல் சேவகர்கள் பத்து இருபது பேர் நடை பயின்று கொண்டிருந்தார்கள். நஞ்சுண்டரைப் பார்த்ததும் சவுதஸோ. சல்யூட் என முழங்கி போர்த்துகீஸ் காலணி அணிந்த கால்களைச் சத்தமெழ தரையில் அடித்து சல்யூட் செய்தார்கள்.
நஞ்சுண்டய்யாவுக்கு பெருமையாக இருந்தது. தளபதியும் அப்படி வெள்ளைக்கார சலாம் வைத்தால், அதுவும் ஹொன்னம்மா பார்த்துக் கொண்டிருக்க காலை உதைத்து சல்யூட் செய்தால் ரொம்ப கௌரவமாக இருக்கும். ஆனால் இந்த தளபதி நரி மாதிரி. ராணியம்மா ஜாக்கிரதையாக இவனை நம்பாமல் இருந்தால் நல்லது.
தளபதி மேலே நார்த்தங்காய் ஊறுகாய் மணம் வீச அருகில் வந்து நஞ்சுண்டய்யாவைக் கேட்டான் – பிரதானி அவர்களே, எவ்வளவு பெரிய கூட்டத்தை இங்கே எதிர்பார்க்கிறீர்கள்?
முன்னூறில் இருந்து ஐநூறு வரை. அடுத்து சௌதாமுக சமண பஸ்தியில்?
இருநூறில் இருந்து முன்னூறு பேர். ஆக எண்ணூறு பேர் அதிகபட்சம், ஐநூறு பேர் குறைந்த பட்சம். அது போதுமா? இந்த ஊரே திரண்டு வந்து கேட்க வேண்டாமா? நஞ்சுண்டய்யா தெரியவில்லை என்பதுபோல் தலையை ஆட்டியபடி தளபதியைக் கூர்ந்து பார்த்தார்.
தமிழ்ப் பிரதேசத்தில் தஞ்சாவூரில் இருந்து மிகப் பிரபலமான இந்துமதி, சாந்தமுகி, சுவர்ணாம்பா சகோதரிகளின் சதுர் கச்சேரி இன்று மாலை நடக்கிறதாம். அதைப் பார்த்துக் களிக்க பெரிய கூட்டம் இருக்குமாம். ராணியம்மா அவர்களோடு போட்டியிட முடியுமா தெரியவில்லை.
ஆட்டக்காரி சென்னாவை மனதில் கண்டவனாக தளபதி சிரித்தான்.
இவன் இன்றைக்கு எந்தப் பக்கம் இருக்கிறான்? நஞ்சுண்டருக்குத் தெரியவில்லை.
Pic Medieval Indian Dance
Ack britannia.com
பெரு நாவல் ‘மிளகு’ – And quiet flows the Sharawathi
An excerpt from my forthcoming novel MILAGU
காலை ஜெருஸோப்பா செல்லும் வழியில் மிர்ஜான் கோட்டைக்குப் போய் ராணியை நலம் விசாரித்தார் நஞ்சுண்டய்யா.
நஞ்சுண்டரே வாரும், உம்மைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். யுத்தம் வந்தாலும் வராவிட்டாலும் நூறு ஆயுசு உமக்கு என்று முகத்தில் மலர்ச்சியை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டு உபசார வார்த்தை சொன்னாள் மிளகு ராணி.
ஏதாவது ராத்திரியோடு ராத்திரியாக நல்ல திருப்பம் உண்டாயிருக்குமோ என்று அறிய ஆவலம்மா என்று நிஜ ஆர்வத்தோடு கேட்டார் நஞ்சுண்டய்யா.
அப்படி இருந்தால் நானும் மகிழ்வேன் என்றாள் சென்னா.
நான் உம்மை நினைத்துக்கொண்டது ஜெருஸூப்பா போகும்போது என் சாரட்டிலேயே நீங்களும் வந்தால் பயண நேரத்தில் திட்டங்களை விவாதிக்கலாமே என்றுதான். செய்யலாமே என்றார் நஞ்சுண்டர்.
அவருக்கு ஒரு கெட்ட அல்லது சுபாவமான நல்ல பழக்கம் பத்து அடி சாரட்டில் நகர்ந்தால்கூட உறங்க ஆரம்பித்து விடுவார். போய்ச் சேரவேண்டிய இடத்தில் இறங்கும்போது தெளிவாக, சுறுசுறுப்பாக இருப்பார்.
ராணியம்மாவோடு போனால் உறக்கத்தை எப்படி விரட்டுவது? அதோடு போர்க்காலத் திட்டங்களை வேறு பேச வேண்டும் என்கிறாள் மகாராணி.
ஈசன் பாடு ராணி பாடு, சரி என்று சொல்லியாகத்தானே வேண்டும்? சரி என்றார் நஞ்சுண்டய்யா பிரதானி. கிளம்பி நேரே போகாமல் கோட்டைக்குள் எட்டிப் பார்க்க அப்படி என்ன இருக்கிறது என்று தன்மேலேயே கொஞ்சம் கோபமும் ஏற்பட்டது.
நேற்று ராத்திரி சாப்பிடும்போது மனைவி ஹொன்னம்மாவிடம் பிரஸ்தாபித்திருந்தால் வேண்டாம் என்று காரண காரியம் கூறி தடுத்தாட்கொண்டிருப்பாள். அப்படி இல்லை என்றிருக்கிறது, என்ன செய்ய?
நஞ்சுண்டர் கோட்டை உத்தியோகஸ்தன் மூலமாக ரதசாரதியை திரும்பிப்போய் கோட்டைக்கு மாலை ஆறு மணிக்கு மறுபடி வரும்படி சொல்லி அனுப்பினார்.
நம்முடைய ஆட்கள் எத்தனை பேர் என்று சாரட்டில் போகும்போது திடுதிப்பென்று நஞ்சுண்டய்யாவை வினவினாள் சென்னா மகாராணி.
மூவாயிரத்து இருநூற்று முப்பத்தாறு பேர் என்று நினைவில் இருந்து சொன்னார் நஞ்சுண்டய்யா.
என்ன சொல்கிறீர் நஞ்சுண்டரே, நிஜமாகவா? இத்தனை பேர் எங்கே இருக்கிறார்கள்? கோட்டையில் மூவாயிரம் பேர் இருந்தால் நாம் எல்லாரும் வெளியே போக வேண்டி வருமே. சென்னா சிரித்தாள்.
இவர்கள் இங்கேதான் வட கன்னட பிர்தேச கிராமங்களில் வசிக்கிறவர்கள். ஊதியம் கிடையாது. தயார் நிலைப் பணமாக மாதம் இருபது வராகன் பெறுகிறார்கள். கூப்பிட்டால் யுத்தத்துக்கு வந்து விடுவார்கள்.
கூப்பிட்டீர்களா?
கூப்பிட்டு விட்டோம். நூற்று பதினெட்டு பேர் வரத் தயாராக இருக்கிறார்கள். மீதி? எல்லோரும் ஒன்று பெஜவாடா, பெனுகொண்டா போயிருக்கிறார்கள் அல்லது மதுரை, திருச்சிராப்பள்ளியில் காவல் பணிக்குப் போயிருக்கிறார்கள். மாமியாருக்கு வளைகாப்பு, மாப்பிள்ளைக்கு காது குத்து இப்படி காரணம் சொல்லி சிலர் தில்லி, அவௌத் என்ரு போயிருக்கிறார்கள்.
எப்படி இவர்களைப் படை திரட்டப் போகிறீர்கள்? அடுத்த மாதம் பிறந்ததும் தயார்நிலைப் பணம் வாங்க கருவூலத்துக்கு வருவார்கள். அப்போது பிடித்துக் கோணிச் சாக்கில் கட்டிப் போட்டு விடுவீர்களா? சென்னா சிரித்தாள்.
நாளை பக்கத்து கிராமங்களில் தண்டோரா போட்டு தயார்நிலைப் பணம் பெறுகிறவர்கள் எல்லோரும் நாளை மறுநாள் கட்டாயம் கோட்டைக்கு வரவேண்டும். வரவில்லை என்றால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இப்படிச் செய்யலாமா?
நஞ்சுண்டய்யா பிரதானி இரண்டாயிரத்து சொச்சம் பேரை எப்படி எங்கே அடைத்து வைத்து சாப்பாடு கொடுப்பது என்று நினைக்கையிலே விதிர்விதிர்த்தார்.
தண்டோரா போட்டு அரச உத்தரவுப்படி இவர்கள் வந்து சேர்ந்தாலும் அதே பிரச்சனை தான் இருக்கும்.
இருக்காது என்று அவர் மனதுக்குள் இருந்து ஹொன்னம்மா சொன்னாள் – கோட்டை அகழி, எதிரே பெரிய வெற்றிடம் இங்கெல்லாம் அவர்களை இருக்க வைத்து கோட்டை போஜனசாலையில் அரிசிச் சோறும் புளிக் குழம்பும் வாழைக்காய் கறியும் உணவு கொடுத்து சண்டைக்குப் போகத் தயாராக்கலாமே. அந்த முக்கியமான இடத்தை எதிரணிப் படை சூழ்ந்து நெருக்க திட்டமிட்டாலும் அதை இல்லாதாக்கி விடலாம்.
இதை நிச்சயம் சென்னபைரதேவி ராணியிடம் சொல்ல வேண்டும்.
நிமிர்ந்து ராணியைப் பார்த்தார் அவள் உறங்கிவிட்டிருந்தாள்.
ஜெருஸோப்பா நெருங்க நெருங்க நஞ்சுண்டருக்குப் படபடப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. இரண்டாயிரம் பேரை ஒன்றரை நாளில் என்ன பயிற்சி கொடுத்து கையில் வாளைக் கொடுத்து யுத்தம் செய்ய அனுப்புவது?
இவர்களுக்கு ஆடி ஓடி சாடும்போது உடலில் தடை செய்யாமல் எப்படி வஸ்திரம் அணியத் தருவது?
யுத்தத்தில் ஜெயித்தால் வேறே மாதிரி புத்தி போகாமல், அதாவது நம் பக்கத்தில் இருந்து நமக்கு எதிராக போர் செய்து குழப்பம் உண்டாக்கும் சிந்தை ஏற்படாது ஜெயித்ததற்குப் பரிசு தந்து ஊக்கப்படுத்துவது, தோற்று ஓடி வந்தால் அந்தப் பெரும்படையை அல்லது நூறும் இருநூறுமாக திரும்பி வந்தவர்களைக் கவனிப்பது, மருத்துவச் செலவு.
நஞ்சுண்டருக்குத் தலை சுற்றியது. பத்து கல்யாணம் ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தி விடலாம். ஒரு சிறிய யுத்தம் நடத்துவது பெரும்பாடு.
Pic Sharavathi river
Ack wikipedia.org
December 22, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – That’s how the onion made a surreptitious entry into the kitchen of Nanjundan Prathani
An excerpt from my forthcoming novel
எழுபத்தைந்து 1606 ஹொன்னாவர்
கடந்த மார்க்கஷீர, புஷ்ய மாதங்களில் – தமிழ் மார்கழி, தை மாதங்கள் – தட்சிண கன்னடத்தில் மங்களாபுரி என்ற மங்களூரு, மைசூரு, , மலையாளக் கரையான ஆலப்புழை, திருவனந்தபுரம், தமிழ் பிரதேசங்களான மதுரை, தஞ்சாவூர், ஆந்திரத்தில் பெஜவாடா, கர்னூல், அனந்தபூர், உத்தர ஹிந்துஸ்தானமான அவத் என்ற லக்னௌ முதலான நகரங்களில் இருந்து ஜெருஸுப்ரா நகருக்கு வந்து போன நாட்டியக்காரிகளின் எண்ணிக்கை முப்பத்தேழு. இவர்கள் சதுர், மோகினி ஆட்டம், குச்சிப்புடி,கதக் என்று பலவித நாட்டிய வகைகளில் தேர்ந்தவர்கள்.
கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு ஒரு நாட்டிய நிகழ்ச்சி வீதம் ஜெருஸுப்பாவில் இப்படியான பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடந்திருப்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
ஜெருஸூப்பா ஒற்றர் துறை அறிக்கை இப்படித் தெரிவித்தது.
பிரதானி நஞ்சுண்டய்யா தினமும் ராச்சாப்பாடு நேரத்தில் அன்றைக்கு நடந்த முக்கிய நிகழ்ச்சிகள், கேட்டது, பார்த்தது என்று அவருடைய அறுபத்தேழு வயது மனைவி ஹொன்னம்மாவிடம் சொல்லுவது வழக்கம்.
முழுவதும் சொல்ல முடியாது. ஏனென்றால் அவருக்கே சில விஷயங்கள் நினைவு இருக்காது. பார்த்ததும் கேட்டதும் முழுசாக இருக்காது. எழுபத்திரெண்டு வயசாகி விட்டதே. இத்தனை நாள் காலம் தள்ளியதே முர்தேஷ்வர் சிவபிரான் கிருபையால். இருப்பதற்கு நொட்டைச்சொல் சொன்னால் சிவன் அதையும் இல்லாமல் செய்து விடுவான். எதற்கு வம்பு.
என்றாலும் அந்தப் பழுது, விஷய கனம் எல்லாம் கடந்து சொல்ல வந்ததை ஹொன்னம்மாவிடம் சொல்வது எதற்காக என்றால் காரணம் இருக்கிறது. அவருக்கோ அவரோடு ராஜ்ய சபையில் அந்த விஷயம் குறித்து விவாதம் செய்த மற்ற பிரதானிகள், உப ப்ரதானிகளுக்கோ, நிறைய மரியாதையோடு சொல்கிறதாக, மகாராணி சென்னபைரதேவிக்குமோ பிடிபடாத ஏதாவது ஒரு முக்கியமான கோணம் ஹொன்னம்மா வாயிலிருந்து கேள்வியாக அல்லது ஒரு வாக்கியமாக வந்து விழும்போது நஞ்சுண்டய்யா அசந்துதான் போவார்.
இப்படி நிகழ்ந்தால் அடுத்த நாள் காலையில் அரசவைக்கு சற்று சீக்கிரமாகவே போய், மற்ற விஷயங்கள் பற்றிப் பேச்சு எழும் முன், பணிவோடும் பிரியத்தோடும் நேற்று நாம் விவாதித்த இந்த விஷயம் பற்றி இன்னும் ஒரு பார்வையைத் தவற விட்டுவிட்டோமோ என்று ராத்திரி உறங்கப் போகும்போது நினைவு வந்தது. காலையில் எழுந்து மறக்கக் கூடாதே என்று மேல்துண்டில் முடிச்சு போட்டு வைத்துக்கொண்டு காலையில் எழுந்து முடிச்சு மறந்து போக, அதை எடுத்துக் கொண்டு நடக்க, எதற்கு முடிந்து வைத்தேன் என்று அடுத்த நினைவு படுத்தலுக்கு சிந்தனையை உள்ளிட்டு, நான் சொல்ல வந்தது என்ன என்றால் –
ராணி சென்னபைராதேவி முதல் அவையில் கடைக்குட்டி அதிகாரி வரை அவர் சொல்வதை சிலாகிப்பது வழக்கம். எல்லாப் புகழையும் அப்போது நஞ்சுண்டார் வழித்து எடுத்துக் கொள்வதும் வழக்கம் என்றாலும் ஹொன்னம்மா அது சுபாவமானது தானே என்று எடுத்துக் கொண்டு விடுவதால் நாற்பது வருட தாம்பத்தியம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.
இன்றைக்கு ராத்திரி ஊத்தப்பம், சப்பாத்தி, ஹுளி உப்பிட்டுவோடு நாட்டியக்காரிகளின் ஜெர்ஸூப்பா விஜயம் பற்றிய அறிக்கை சாப்பிடும்போது பகிர்ந்து கொள்ள எடுத்து வைக்கப்பட்டது பிரதானியால்.
பக்க வாத்யம் என்ன எல்லாம் பண்ணியிருக்கே என்று ஹொன்னம்மாவை வழக்கம்போல் விசாரித்தார் நஞ்சுண்டர். அவள் சமையல் செய்யக் கரண்டியைக் கையில் எடுத்து இரண்டு மகாமகம் ஆச்சு என்பதும் சமையல் வேலைக்கு நிற்கிற ஆணும் பெண்ணுமான, கூடவே புருஷன், பெண்டாட்டியான தமிழ் பிராமண ஜதை அதை எல்லாம் வேளை தவறாமல் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதும் நஞ்சுண்டய்யாவுக்குத் தெரிந்ததுதான் என்றாலும் சாப்பாட்டு மேஜையில் ஹொன்னம்மாவைத்தான் அவர் எதற்கும் கூப்பிடுவார்.
தமிழர்கள் கைவேலை என்பதால், சக்கரை பொங்கல், பால் பணியாரம், அக்கார வடிசில் என்று தமிழ்ப் பலகாரம் அடிக்கடி தலைகாட்டுவது நஞ்சுண்டய்யா, ஹொன்னம்மா தம்பதிக்குப் பிடித்திருந்தது. இன்றைக்கு அப்படியான சிறப்பு தமிழ் ஆகாரம் இல்லைதான் என்று தெரியப்படுத்தப்பட நஞ்சுண்டாருக்குச் சிறிய ஏமாற்றம்.
என்ன சமைத்தார்கள் ஊத்தப்பம், சப்பாத்தி, ஹுளி உப்பிட்டுவோடு?
சாஸ்திரத்துக்கு மிளகு விழுது ஒரு துளியும், ஒரு மண்டை வெல்லமும் குழைத்த மிளகுத் துவையல் தொட்டுக்கொள்ள என்று கேட்டு பரபரப்பானார் நஞ்சுண்டய்யா. உஸ் உஸ் என்று நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு துவையலில் ஊத்தப்பத்தை பிரட்டும்போது ஹொன்னம்மா அவர் அருகில் வந்து தயங்கி நின்றாள்.
என்ன ஹொன்னு? துவையல் உரைப்பாக இருக்கேன்னு விசனப்படறியா? போகுது. அபார ருஜியா இருக்கே. அது போதும்.
சிலாகித்தபடி ஆகாரத்தைத் தொடர, ஹொன்னம்மா அவரிடம் ரகசியமாகச் சொன்னாள் – எப்படி இருக்கும்னு பார்க்க நான் ஊத்தப்பத்திலே வெங்காயம் நெய்யிலே வறுத்து அரிஞ்சு தூவி வார்க்கச் சொன்னேன். தப்புதான். மன்னிச்சுக்குங்க. நம்ம வீட்டிலே வெங்காயம் நுழைஞ்சிருக்குன்னு விசனப்பட வேண்டாம். இன்னிக்கு ஒரு ராத்திரிக்கு மட்டும்தான் என்றாள் பவ்யமாக.
மகாதப்பு மகாதப்பு. இந்த கிரஹத்துலே மாமிசம் துல்யமான வெங்காயமா? மகாதப்பு. எங்கெ அந்த வெங்காய ஊத்தப்பம்? உடனே எடுத்துட்டு வா. அழிச்சுடலாம்.
சமையல் பரமேஸ்வர ஐயரும் பார்யாள் லட்சுமியும் ஓட்ட ஓட்டமாக உடம்பு பதற ஒரு தட்டில் இரண்டு வெங்காய ஊத்தப்பங்களோடு வந்து குற்றவாளி தோரணைகளோடு நின்றார்கள்.
என்ன பார்க்கறீர் ஐயரே, அந்த சனியனை என் எலையிலே போடுங்கோ. நிர்மூலம் பண்ணிடறேன். எனக்காச்சு அதுக்காச்சு என்று முழங்கியபடி வெகு சந்தோஷமாக உண்ண ஆரம்பிக்கும் முன் பெரிய சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். ஹொன்னம்மாவும் முகத்தில் தீற்றியிருந்த பயம் போக அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டாள்.
Pic Onion dinner
Ack en.wikipedia.org
December 21, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – Thus the diplomatic working breakfast comes to an end
An excerpt from my forthcoming novel MILAGU
இன்னொரு வெற்றிலையை காம்பு கிள்ளி மடித்து குல்கந்து தடவி வாயில் போட்டுவிட அடைப்பக்காரன் ஓடி வந்து ஓரமாக நின்றதை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டே மாமனாரே வாயை இன்னும் திறக்கணும். அவன் விரலை கடிச்சுடப் போறீங்க என்றார் திம்மராஜு.
வெத்திலை மடிச்சுத்தர ரெண்டு பொண்ணுங்க உண்டு இன்னிக்கு ரெண்டு பேரும் வரல்லேன்னு இவனை அனுப்பிட்டாங்க. ஏண்டா எலும்பா நீ இது தவிர என்ன பண்ணிட்டிருக்கே அரண்மனையிலே என்று அந்த எடுபிடியைக் கேட்டார் வெங்கடப்ப நாயக்கர்.
மீன் கழுவறது, கோழி இறைச்சிக்கு கார மிளகு விழுது புரட்டறது, குல்கந்து செய்து பீங்கான் பாத்திரத்திலே நிறைச்சு வைக்கறது எஜமானே என்றான்.
அது என்னடா கோழி சமைச்சு குல்கந்து கிண்டி ?
அவன் அசட்டுச் சிரிப்போடு இன்னொரு வெற்றிலையை எடுத்தான்.
வேணாம்டா காலையிலே ரொம்ப சுதி ஏத்த வச்சுடுவே போல இருக்கே. சரி ஒண்ணே ஒண்ணு கொடுத்துட்டு ஓடிப் போ என்றார்
அவன் நீட்டிய தட்டிலிருந்து குச்சி எடுத்துப் பல் குத்தியபடி சொன்னார் வெங்கடப்ப நாயக்கர் – ஜெரஸோப்பாவிலிருந்து நாங்க மிளகும் குடைமிளகாய், வெல்லமும் வாங்கறோம். யுத்தம் வந்தா அது முடியாது. அப்பக்கா கிட்டே வாங்கிக்க வேண்டியதுதான்
உரத்த சிந்தனையாகச் சொன்னார் அவர்.
வெல்லம் நான் தரேன் மாமனாரே. சல்லிசா கூடுதல் இனிப்பா பெரிய மண்டை மண்டையா தர்றேன்.
அது நல்லா இருக்காது மாப்ளே. அட நான் சொல்ல வந்தது உங்க பிரதேசத்து ஏற்றுமதிக்காக காய்ச்சி வச்சிருக்கறதிலே கை வைக்கறதா ஆயிடும். அப்புறமா பார்த்துக்கலாம் எல்லாத்தையும் ஒரே அடுப்பிலே ஏத்தி கிண்ட வேண்டாம். என்ன நான் சொல்றது என்றது கேலடி. சரிதான் என்று ஒத்துக்கொண்டது பில்கி.
அப்பக்கா மண்டை வெல்லத்தோடு அச்சு வெல்லமும் செய்ய ஆலோசனை கொடுத்திருக்காம். உள்ளல்லே பாதி பேர் வெல்லம் காய்ச்சி அச்சுலே வார்க்கற வேலைதானாம்.
இதை திம்மராஜுவிடம் புதுத் தகவலாகச் சொன்னார் வெங்கடப்பர்.
நாம் ரெண்டு பேரும் இப்படி ஜெர்ஸூப்பா விவகாரத்திலே தலையிட்டா அப்பக்காவும், அடுத்தடுத்து இருக்கப்பட்ட ராஜதானிகளும் அவங்க மேலேயும் நாம் படையெடுத்து வந்துடுவோம்னு நம்பிக்கைக்குறைவு வந்துடும் இல்லையா என்று நியாயமான கேள்வியைக் கேட்டார் திம்மராஜு.
அதுக்குத்தான் மாப்ளே நம்மாளுங்களை முன்னாடி போய் உக்கிரமா சண்டை வலிக்காம, படைக்குப் பிந்து, பந்திக்கு முந்துன்னு சொல்றமாதிரி பின்னாலே இருந்து ஆள் கணக்கை அதிகரிச்சுக் காட்டலாம்னு யோசனை என்றார் நாயக்கர்.
எத்தனை பேர், என்ன தொகை, எத்தனை நாள் என்று சுருக்கமாகக் கேட்டார் வெங்கடப்ப நாயக்கர்.
இப்போதைக்கு பத்து பேர்.
நாயக்கர் சிரித்தார். பத்து பேரா? கபடி விளையாட குழு அனுப்பறியா? கபடி கபடி கபடின்னு பாடி மூச்சடக்கி தொட்டுட்டுத் திரும்பற விளையாட்டா என்ன இது? பெரிய யுத்தமா இருக்காது. வெத்துவேட்டு கலவரமாகவும் இருக்காது. ஆனாலும் ஆள் சேதம், காயம் எல்லாம் உண்டு. பத்து போதாது. ஆளுக்கு இருநூறு பேர் தயார் பண்ணி அனுப்பலாம்.
அப்படியா மாமா, நீங்க சொன்னா சரிதான் என்று அடக்கி வாசித்தார் திம்மராஜு.
இதுலே ஒண்ணு பாரு, நீயும் இதுக்கு முந்தி யுத்தம் பார்த்தது இல்லே. நேமியும் தான். நான் ஒருத்தன் தான் நாற்பது வருஷம் முந்தி தலைக்கோட்டை யுத்தத்திலே விஜயநகரப் படையிலே ஒரு தளவாயாகப் போனவன். விஜயநகர பேரரசர் ராம ராயர் தலையை பீஜப்பூர் சுல்தான் அறுத்தபோது ஓரமா நின்னு பார்த்து நடுங்கினவன். அப்போ எனக்கு இருபத்தைந்து வயசு.
நாமளும் இப்போ போக வேண்டி வருமா மாமனாரே?
கொஞ்சம் படபடப்பாக திம்மராஜு கேட்டதை ரசித்தபடி வெங்கடப்ப நாயக்கர் கூறினார் – போகணும்னு வந்தா போகலாம். இப்போதைக்கு ஆள்படை அனுப்பறது. நீ இருநூறு நான் ஒரு இருநூறு பேர். இவங்க கையிலே வாள், சூரிக்கத்தி, அரிவாள் இதெல்லாம் அந்த புள்ளையாண்டன் தான் தரணும். துப்பாக்கியைத் தூக்கு, பீரங்கியிலே வெடிமருந்து அடைச்சுவை இப்படி வேலை ஏவமுடியாது இவன்களை. வயல்லே விவசாய வேலை பார்க்கறவங்க நாம் அனுப்பப் போறவங்க. துப்பாக்கி, பீரங்கி எல்லாம் அவன் கதையிலே கூட வராது.
தினத்துக்கு ரெண்டு வராகன், சோறு கறி என்று சேர்த்துக் கொண்டார் பில்கி.
கறி எப்படிடா போடுவான். சமணனாச்சே என்றார் வெங்கடப்பா. சுத்த சைவ ஆகாரம் தான் தருவான்.
அவன் சைவமா இருக்கலாம், யுத்தம் ரத்தம் கொட்டற முழு அசைவ சமாசாரம் ஆச்சே மாமனாரே என்றார் திம்மராஜு.
நாளைக்கு வேணும்கறானே பயபுள்ளே. அனுப்பி வைக்கவா என்று வெங்கடப்ப நாயக்கரை விசாரித்தபடி எழுந்து நின்றார் திம்மராஜு.
அவன் கேட்டதும் கொடுத்து அனுப்ப இதென்ன வெல்ல மண்டை வியாபாரமா, திங்கள்கிழமை அனுப்பி வைச்சுக்கலாம். சரியா இருக்கும் என்றபடி விடை கொடுத்தார் வெங்கடப்பர்.
எது சரியாக இருக்கும் என்று திம்மராஜூவும் கேட்கவில்லை, வெங்கடப்ப நாயக்கரும் சொல்லவில்லை.
pic jaggery making
ack Deccan Herald
December 20, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – Gerusoppa for dessert after a breakfast European laced with oriental flavour
An excerpt from my forthcoming novel MILAGU
போயிடாதீங்க மாப்பிள்ளை, இனிப்பு கொஞ்சம் மெல்ல எடுத்துவரச் சொன்னேன்.
கேலடி பேரரசர் வெங்கடப்ப நாயக்கர் கடைவாயில் வடிந்த எச்சிலை அவசரமாகத் துடைத்தபடி, ஒக்க மோதிசூரு லட்டு தீஸுகுரா என்று யாருக்கோ கட்டளையிட்டார். பில்கி அரசர் திம்மராஜு மனதுக்குள் ஆவலை மடித்து வைத்தார்.
இனிப்பு எப்பவும் கடைசியிலே தான் சாப்பிடுவான் வெள்ளைக்காரன். அப்போ தான் அளவுக்கு மேலே தின்னாம அளவா தின்னலாம். பாரு ரெண்டு பேருக்கும் மதுமேகம் இருக்கு. ஒரு லட்டு தான் எடுத்து வரச் சொன்னேன்.
வெள்ளித் தட்டில் கொஞ்சம் பெரிய மோதிசூர்லட்டு உருண்டை ஒன்று முத்து முத்தாக பூந்தி புத்தம் புதியதாக உருட்டிப் பிடித்து சுடச்சுட வந்தது.
அதுவும் சரிதான் மாமனாரே. ஆளுக்கு பாதி உதிர்த்து தின்னலாம்.
பாதியா? சொன்னா கேளுங்க மாப்ளே. ஏற்கனவே உப்புசம் கண்ட வயிறு. சரிக்கணும். கட்டுப்பாடா கால்வாசி எடுத்துக்கும். நான் மீதியை வச்சுக்கறேன். நாளைக்கே வேறே எதாவது மொகலாய் ஹல்வா கிடைச்சா அப்போ நானே வந்து பாதியை உமக்கு ஊட்டி விடச் சொல்றேன். மிட்டாய்க்காரி மாட்டேன்னு சொல்வாளா என்ன?
அப்ப கால்வாசிதானா மாமனாரே. உங்க பங்கு லட்டுலே பதிச்சிருக்கிற நாலு முந்திரிப்பருப்பை அதோடு சேர்த்து எனக்கு சாப்பிட கொடுங்களேன். மாமனார் பெயர் சொல்லி சாப்பிடுவேனில்லே.
சரி எடுத்துக்கோ. நீ கேட்டு மாட்டேன்னு சொல்லியிருக்கேனா எப்பவாவது? லட்டு பங்கு போடப்பட்டது. ஜெருஸுப்பாவின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டது.
வெத்தலை போட்டு சுதி ஏத்திக்கிட்டு போகலாம் என்று நாயக்கர் யாரையோ வெற்றிலைச் செல்லத்தைக் கொண்டுவரச் சொன்னார்.
நீர் வெத்தலெ போடுவீரா? திம்மராஜுவை ஒரு உபசாரத்துக்குக் கேட்டார்.
இல்லே மாமனாரே, நீங்க எடுத்துக்குங்க.
திம்மராஜுவின் எதிரே அமர்ந்து தாம்பூலம் தரிக்கலானார் வெங்கடப்பநாயக்கர்.
சரி, மாமனாரே. எல்லாம் சரிதான். இப்போ இதிலே இடிக்குற பெரிய சமாசாரம் சென்னபைரதேவியம்மா இன்னும் சக்தியா அரசாட்சி செஞ்சுக்கிட்டிருக்காங்க. வயசைச் சொல்லி, அதாவது அறுபத்தைந்து வயசிலே பதவி இறங்கணும்னு காரணம் சொன்னா.
திம்மராஜு பாதி வாக்கியத்தில் நிறுத்தினார்.
நல்லாத்தான் சொல்றே போ. எனக்கு அறுபத்தொன்பது வயசு ஆகிடுத்தேன்னு கேட்கறியா?
அது நான் சொல்லலே மாமனாரே. நீங்க இன்னும் நூறு வருஷம் கேலடி மகா அதிபதியாக இப்போது போல் எப்போதும் துருவ நட்சத்திரமா ஒளிவீசிக்கிட்டிருக்கணும் என்று இருகை உயர்த்தி வணங்கினார் திம்மராஜு.
நீ ஒண்ணுப்பா இன்னும் நூறு வருஷம் இருந்தா கடல் ஆமை மாதிரி மெதுவா அசைஞ்சுதான் போய்க்கிட்டிருக்கணும். மக்கள் ரெண்டு பேரும் சேர்ந்து பதவி கையில் வாங்கற நாளுக்கு காத்துக்கிட்டிருக்கேன்.
அவர் சொல்லும்போது வெங்கடப்பாவுக்கும் மிளகு ராணிக்கும் என்ன வித்தியாசம், வெங்கடப்பா மகன்களுக்கும் நேமிநாதனுக்கும் என்ன வித்தியாசம் என்று திம்மராஜு நினைத்துப் பார்த்தார்.
அது வேறே இதுவேறே திம்மா. திம்மராஜு மனதில் ஓடுவதை சரியாக நாடி பிடித்தவராக பேச ஆரம்பித்தார் வெங்கடப்பா.
அது என்ன வித்தியாசம்னா அங்கே பொம்பளை தேசம் இங்கே ஆம்பளை ராஜ்ஜியம். உனக்குத் தெரியாததில்லே. ஆம்பளை ராஜ்ஜியத்திலே இப்படி வந்து போய் பேசி பேசி இன்னும் கொஞ்சம் பேசி வெளியேறி முற்றுகையிட்டு மறுபடி பேச வகை இருக்கான்னு பார்த்துக்கிட்டு நின்னு மெல்ல சத்தமில்லாத யுத்தம் வராது. அடுத்த நாட்டுக்கு கைமாற நூறு பேர் வேணும். கொடுங்க. காசு தர்றேன் ரெண்டு வாரத்திலே வெளிநாட்டில் இருந்து படை வரும். எப்படியும் வந்துவிடும். வந்ததும் உங்க ஆள்படைகளை திருப்பி அனுப்பிடறேன். இப்படி எந்த போரும் நடந்ததில்லே. ஒரு சின்ன நிலப்பரப்புக்கு உரிமை போராட்டம்னாலும் ஆயிரம் ஊரை, கிராமத்தை, வயல்வெளியை அடக்கிய பூமிக்கு உரிமை கேட்கறதாக இருந்தாலும் சிரத்தையும் வேகமும், செய் அல்லது செத்து மடின்னு ஆவேசமுமாக சிப்பாய் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து ஒற்றைப் படையாக யுத்தம் செய்யணும்.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

