இரா. முருகன்'s Blog, page 62
December 5, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – Thus went the deliberations of the Gerusoppa Administrative Council
An excerpt from my forthcoming novel MILAGU
குதிரை லாயம் முழுக்க கொள்ளு வாடையும் பன்னீர் வாடையும் சேர்ந்து மணத்தது. பின்னால் இருந்து கோட்டை உத்தியோகஸ்தர் ஒருவர் ஆடம்பரமில்லாத நாற்காலியைக் கொண்டு வந்து போட, சென்னா மகாராணி அமர்ந்தாள்.
“நான் எப்போதும் இந்த கூட்டத்தை நின்று கொண்டு தான் விளித்துப் பேசுவேன். இப்போது அமர்ந்திருந்து பேச உங்கள் அனுமதி கேட்கிறேன். கிடந்து பேசும் நாள் வந்தால் நான்.
பாதி சொல்லில் நிறுத்தி கூட்டத்தைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்தாள் மகாராணி. வகுளாபரணனுக்கு இந்த நாடகத்தன்மை பிடிக்கவில்லை தான். வெளியே சொல்வது மரியாதை இல்லையென்று சும்மா இருந்தான் அவன்.
பேராயம் அமைதியாக நின்றது. நஞ்சுண்டையா பிரதானி இருகையும் தலைக்கு மேல் கூப்பி அகவும் குரலில் சொன்னார் – அப்படி விதிக்கப்பட்டிருந்தால் மகாராணிக்கான விதிப்பை என் கணக்கில் சேர்த்துக் கொண்டு அவர்களை நூறாண்டு செயலோடு இருக்க மல்லிகார்ஜுன சுவாமியைப் பிரார்த்திக்கிறேன். ஜெயவிஜயீ பவ. மிளகுராணி வாழ்க.
இருமலுக்கு இடையே குரல் உயர்த்தினார் நஞ்சுண்டையா. மற்ற பேரவையினரும் கூடவே முழக்கினார்கள். சென்னா முகத்தில் சற்றே ஓடி மறைந்தது புன்னகை ஒன்று. முழு நாடகீயமாக இது நடக்கப் போகிறதா?
நஞ்சுண்டரே உமக்குப் பேராசை என்று சொல்வேன். நூறாண்டு இருக்க என்னை ஏன் சபித்தீர்? அறுபத்தேழு நடந்துகொண்டிருக்கிறது. சுமையோடு பயணம் போகிற வழிப்போக்கனாக என்னை உணர்கிறேன்.
நான் பயணி. வீடில்லை தங்குமிடம் இல்லை. நகர்ந்து போய்க் கொண்டிருக்க விதிக்கப்பட்ட பயணி நான் என்று தில்லி முகல் ஏ ஆஸம் அக்பர் சக்ரவர்த்தியின் தர்பாரில் அரங்கேறிப் புகழ்பெற்று இந்துஸ்தானம் எங்கும் பரவிய மெல்லிசை கானத்தின் வரிகளைச் சொன்னாள் ராணி.
பறவைகள் சரணாலயத்தில்/மூத்த புறாவுக்கு முதல் இடம்/களைப்பு நீங்க இறகு கொண்டு/காலமெல்லாம் விசிறுவோம்/சற்றே ஓய்வெடுக்கட்டும்
வகுளாபரணன் குரல் எடுத்துப் பாட்டாகச் சொன்னான். கவிதை அரங்கேறும்போது ஒன்றிரண்டு முறை அதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களிடமிருந்து வாஹ் வாஹ் என்று பாராட்டு எழுவது வாடிக்கை. வகுளாபரணன் கவிதைக்கு மௌனத்தை பரிசாக எல்லாரும் அளித்தார்கள். ஒரு நிமிடம் மௌனத்துக்குப் பிறகு ஒற்றைக் குரல் வாஹ் வாஹ் என்று பாராட்டி மெல்ல எழுந்தது. சென்னபைரதேவி மகாராணி குரல்.
அம்மா இந்த அவையில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது. எனக்குத் தோன்றுவது நீங்கள் சற்று ஓய்வெடுக்க வேண்டும். பயணம் கொஞ்சம் எளிதாக, சிரமமின்றி அமைய சுமையைப் பகுதியாவது கைமாற்ற வேண்டும்.
மாட்டுவண்டிக் காளையை அசைத்துக் கிளப்பும் தார்க்குச்சி மேலே விழுந்த புலி போல் கண்கள் ஜ்வலிக்க சட்டென்று பார்வையை முழுக்க வகுளாபரணன் மேல் பதித்து என்ன சொல்கிறாய் என்று கேட்பதாக உற்று நோக்கி, வீறுகொண்டு நாற்காலியில் வீற்றிருந்தாள் சென்ன பைரதேவி.
அம்மா மீண்டும் சொல்கிறேன், நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதைப் பற்றிச் சர்ச்சை செய்யத்தான் இந்தப் பேராயம் கூட்டப்பட்டிருக்கிறது. மற்ற பேராயக் கூட்டங்கள் போல் தாங்கள் எங்களை வரச்சொல்லி கூட்டவில்லை. நாங்கள் உங்களை ஒரு தாயைக் குழந்தைகள் கூப்பிடுவதுபோல் உரிமையோடு கூப்பிட்டிருக்கிறோம். உங்கள் நலமும், ஜெரஸோப்பா மாநில நலமும் நம் எல்லோருக்கும் பிரதானமான விஷயங்கள். அவற்றைப் பற்றி ஏனோதானோ என்று இருக்க முடியாது என்பதை யாரும் மறுக்க இயலாது.
வகுளன் ஒரு வினாடி நிறுத்தி விட்டு சென்னாவைப் பார்த்தான். மேலே போ என்கிறது போல் கண்ணால் சைகை செய்தாள் அவள். தலையசைத்து வணங்கி அவன் மேலே பேசலானான் – இந்தக் கூட்டம் சிக்கலான, இடர் மிகுந்த ஒரு காலத்தில் நடக்கிற ஒன்று. போன வாரம் மகாராணியின் உயிருக்கே ஆபத்து நேர இருந்தது. யாரால் அனுப்பப்பட்டவள் என்றே தெரியாத ஒரு பெண் குறுவாளால் மகாராணியைக் கொல்ல முற்பட்டாள். விசுவாசமான ஊழியை தாதி மிங்கு தன்னுயிர் கொடுத்து அரசியார் உயிர் காப்பாற்றினாள்.
அவன் சொல்லும்போது எல்லோர் பார்வையும் வைத்தியர் மேல். தலை குனிந்து வெறித்துப் பார்த்துக் கொண்டு அங்கே நின்றதோ வைத்தியரின் சோகையான நிழல்.
Pic Royal Court
Ack en.wikipedia.org
MILAGU – not on a Sunday!
That’s a good picture (though the subject is not) clicked by my friend, the renowned poet Iyyappa Madhavan at yesterday’s book launch event (Zero Degree Publishing)
Thanks Iyyappa Madhavan
A respite from MILAGU being Sunday today. Writing the closing 20 chapters. With 110 chapters (with these 20 plus on the anvil ) editing will be a lot challenging if not fun. Trust the book will be ready for launch by March 2022
With space time continuum, alternative universe is also finding a place now in the narration, which can loosely be termed as a historical fantasy.
Waiting for writing the grand finale …
Picture Courtesy Mr Iyyappa Madhavan 
December 4, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – in which the Jerusoppa Administrative Council convenes an urgent meeting
Excerpts from my forthcoming novel MILAGU
மிர்ஜான் கோட்டை குதிரை லாயத்தில் பேராய அவை கூடப்போகும் பின்மாலைப் பொழுது. இந்தக் கூட்டம் இன்று இரவிலும் நீண்டு கொண்டு போகும். விடிகாலையிலாவது முடியுமா என்பது சந்தேகமே என்று வகுளாபரணன் நினைத்தான்.
ஜெருஸோப்பா அரசின் உப பிரதானிகளில் ஒருவன் வகுளாபரணன். பேரிளைஞன். சென்னபைரதேவி மேல் மதிப்பும் அன்பும் கொண்டவன். நேமிநாதனுக்கு உற்ற தோழன். ஜெரஸோப்பாவின் வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் சிலரில் வகுளன் என்ற வகுளாபரணனும் ஒருவன்.
இன்றைக்கு கூட்டத்தில் நேமிநாதனும் வந்திருந்தால் பேச வேண்டிய, பேசித் தீர்க்க வேண்டிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம். தீர்வு காணாவிட்டாலும் அதற்கான தேடலில் சுவடு வைக்கலாம். ஆனால் என்ன செய்ய? நேமிநாதன் கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறான்.
வகுளனுக்கு இது சம்பந்தமாக சென்னா மகாராணி மேல் கோபம் ஏற்பட்டது உண்மைதான். அம்மா பிள்ளை தகராறு என்றால் அவர்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டியதுதானே? கிட்டத்தட்ட அற்ப விஷயம். மழைநாள் பிற்பகலில் கடலைமாவு பட்சணத்தை நொறுக்குத்தீனியாக மென்றபடி ஜன்னலுக்கும் பாதி திறந்த கதவுக்கும் அந்தப் பக்கம் மழை சீராகப் பெய்வதைப் பார்த்தபடி பேசிக் கொண்டே இருந்தால் அடுத்த ஈடு கடலைமாவு பலகாரம் வருவதற்குள் பேசி முடித்துத் தீர்வு கண்டு, உற்சாகமாக சேர்ந்து சாப்பிடலாம். மழை நின்று போனாலும் சரிதான்.
நல்ல வேளை. மிர்ஜான் கோட்டைக்குள் வரத்தான் தடை விதித்திருக்கிறார் மகாராணி. அதுவும் நேமிநாதனுக்கு மட்டும் தான். அவன் மனைவி ரஞ்சனா தேவி இங்கே எப்போதும் போல் இருக்கலாம். நேமிநாதன் ஹொன்னாவரிலும் ஜெரஸுப்பாவிலும் போக வர இருக்கிறான். அங்கே நடமாட, வசிக்க எந்தத் தடையும் இல்லை. இப்படி ஒரு தடை ஏற்படுத்துவதற்கு எதுவும் இல்லாமலேயே இருக்கலாம். அரச குடும்பம். விமர்சனம் செய்யக்கூடாது.
வளர்ப்பு மகனைத் தன் வாஞ்சையில் இருந்தும் கரிசனத்தில் இருந்தும் விலக்கி வைத்திருப்பதாகக் காட்ட மிளகு ராணிக்கு திடீரென்று என்ன அவசியம் ஏற்பட்டுவிட்டது என்று வகுளனுக்குப் புரியவில்லை. அல்லது இருவரும் பேசி வைத்துக்கொண்டு செய்கிறார்களா? அதுவும் தெரியவில்லை. யாருக்கு இதைக் காட்ட வேண்டும்?
சென்னா ராணி இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேரவைக் கூட்டத்தில் நேமிநாதனும் பங்கெடுக்க வசதியாக, இன்று மட்டும் கோட்டை நுழைவுத் தடையை அமலாக்காமல் வைத்திருக்கலாம். அல்லது இந்தப் பேரவைக் கூட்டத்தை கோட்டைக்கு வெளியே நடத்த ஏற்பாடு செய்திருக்கலாம். அவன் வரவேண்டும் என்று ராணி விரும்பியிருந்தால் இதைச் செய்திருக்கலாம். அப்படியே ஏற்பாடு செய்தாலும் நேமிநாதன் வர வேண்டுமே. ரெண்டு ஆப்பை ரெண்டும் கழண்ட ஆப்பை என்று வகுளனின் அப்பனாத்தாள், என்றால் பாட்ட, தமிழில் இந்தப் பழமொழி சொல்லி வளர்த்தது வகுளனுக்கு நினைவு வரவே சிரித்துக்கொண்டான்.
குதிரை லாயத்தில் கூட்டம் நடத்தலாம் என்றால் கோட்டைக்கு வெளியே நடத்த என்ன சிரமம்? என்ன மாதிரி பேரிடரோ சின்ன இடரோ இதில் உண்டு? ஒன்றும் இல்லை. ஜன்மப் பகைவர்களா அம்மாவும் பிள்ளையும்?
சென்னா மகாராணி நேமிநாதனை பகிரங்கமாகக் கண்டித்துத்தானாக வேண்டும் என்றால் அது அவன் அரசாட்சி கேட்பதற்காக இருக்காது. வீட்டில் கிளிபோல் ரஞ்சனாதேவி என்ற புத்திசாலியும் அடக்கமும் அழகும் கொண்ட மனைவியை வைத்துக்கொண்டு மிட்டாய் அங்காடிக்காரி மேல் மையல் கொண்டு அவளே எல்லாம் என்று பிடவை விலகிய தொப்புள் தரிசித்து, சதா பிடவைத் தலைப்பு வாசம் பிடித்துக்கொண்டு போகிறானே அந்த அநியாயத்துக்கு வேண்டுமானால் விசாரிக்கலாம்.
அவனை விட ஏழெட்டு வயது பெரியவளாம் மிட்டாய்க்காரி. அவளோடு ரமித்தால் ரோகம் எல்லாம் எங்கே எங்கே என்று ஓடி வந்து சேராதா? வகுளன் தலையைக் குலுக்கினான். வராது போலிருக்கிறது. வரும் என்றால் இந்நேரம் பெண்சீக்கு முகத்திலும் உடம்பிலும் தூலமாகத் தெரிய, மருந்து தின்றுகொண்டிருப்பானே நேமிநாதன். யோசித்தபடி வகுளன் அமர்ந்திருக்க, சாரட் குதிரை லாயத்து வாசலில் நின்றது.
ஏழு பிரதானிகள், வகுளனையும் சேர்த்து மூன்று உப பிரதானிகள், ஒரு தளவாய். உளவுத்துறை சார்பில் பைத்யநாத் வைத்தியர். சென்னபைரதேவி அரசி, பேரவை முழுவதும் கூடியிருக்கிறது. வகுளன் அரசி பக்கத்தில் வெற்றிடமாக இருந்த நாற்காலியைப் பார்த்தான். நேமிநாதனுடையது அது. அவன் இல்லாமல் என்ன முடிவுகள் எடுக்கப்படும்? எடுத்தாலும் நடைமுறைப்படுத்தப் படுமா?
சென்னபைரதேவி உள்ளே வரும்போது எப்போதும் புன்னகையும், கையசைத்து ஒவ்வொருவரையும் வணங்குவதும், பதிலுக்கு வணக்கமுமாக இருக்கும். பேரவை உறுப்பினர்கள் ஜெயவிஜயீபவ ஜபித்து மிளகுராணி வாழ்க என சேர்ந்து முழங்குவதும் நடைபெறும். இன்று எந்த முழக்கமும் இன்றி பேரவை ஒட்டுமொத்தமாக எழுந்து நின்றனர். ராணி அமர்ந்தபிறகு அவர்கள் சத்தமின்றி இருக்கைகளில் அமர்ந்து ராணியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். சென்னா உரையாடலைத் தொடங்கி வைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு அவர்கள் கண்களில் தெரிந்தது.
PIC Medieval royal cabinet meet
Ack britannica
December 3, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – in which the Medicine Man attempts to contact his late wife
An excerpt from my forthcoming novel MILAGU
திடீரென்று ஒரு ராத்திரி தூங்கி எழுந்து முப்பது பெண்களை, யாரென்று தெரியாது, எல்லோரும் ஜெருஸோப்பா பிரஜைகள் அவர்களை கோட்டைக்கு காலை ஆகாரம் கூட இருந்து சாப்பிட அழைக்க ஏற்பாடு செய்யச் சொன்னாள் ராணி. மிங்கு தலையில் பெரும்பாலும் விழுந்த கடமை இது.
வைத்தியா நீ ஏன் ஒண்ணும் சொல்லாமல் நிற்கிறே என்று கேள்வி வேறே.
அப்போது வைத்தியர் சொன்னார் – அம்மா, இந்த விருந்துகள் பாதுகாப்பை பதம் பார்க்கக் கூடியவை. முப்பது பெண்களை ஒவ்வொருத்தரின் பின்னணி, குடும்பத்தினர், நண்பர்கள் இப்படி எல்லோருக்கும் விரிவாக குறிப்பு தயார் செய்து தேர்ந்தெடுத்தால் பாதி ஜாக்கிரதையாக இருந்தால் போதும்.
சொன்னது மருத்துவனாக இல்லை, உளவுத்துறை அதிகாரியாக.
மதிக்கவே இல்லை ராணியம்மா. மிர்ஜான் கோட்டையின் அமைப்பு ரகசியங்கள் அதிகம் பேருக்குத் தெரியாமல் இருக்க கோட்டைக்குள் வரும் போகும் நபர்களை ஆகக் குறைவாக அனுமதித்து இல்லாத கெடுபிடி எல்லாம் கொடுப்பாள் மிளகு ராணி. அதைவிட பத்து, நூறு தடவை அதிகமான ஜாக்கிரதை தேவைப்படும் இந்த மாதிரியான போஜன விவகாரங்களை ஒன்றும் ஆகாது என்று வீம்பாக இழுத்து விட்டுக் கொண்டால் என்ன ஆகும்?
ராணிக்கு ஒன்றும் ஆகாது. அவள் தாதி தலையில் தான் ராணியின் அஜாக்கிரதை வந்து விடியும். விடியாமல் போனது.
நெல்பரலி மூலிகைக்கு நடுவே சென்னா ராணியின் முகத்தைக் கற்பனை செய்து காலால் ஓங்கி மிதிக்கக் காலை உயர்த்தினார் வைத்தியர். காலைப் பின்னால் இழுத்துக் கொண்டார். அவரால் முடியாது. மிங்கு கண்டிக்கிறாள்.
ராணியம்மா, வயதுக்கும், என் அம்மா வயசு என்று மதிப்புக்கும் அவதூறு செய்யும் விதமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று அவர் உடல் நடுங்கியது.
மிங்கு நான் தவறாக அப்படி நினைத்து விட்டேன். மன்னித்துக்கொள் என்று மிங்குவிடம் காலைப் பற்றிக்கொண்டு மன்னிப்பு கேட்க வேணும் என்று தோன்றியது வைத்தியருக்கு.
மிங்கு. நீ எங்கே இருக்கே? உன் மரணம் துர்மரணமா? அப்போது நீ ஆவியாக அலைகிறாயா? எப்படி உன்னை அமைதிப்படுத்துவது? வாயைத் திறந்து பேசு, மிங்கு மிங்கு என்று முணுமுணுத்தபடி வெறும் தரையில் அசதியோடு சாய்ந்து கிடந்தார்.
அவர் விழித்தபோது பின்மாலை பொழுதாகி இருந்தது.
அவர் ஒரு தீர்மானத்தோடு கிளம்பினார். சாரட்டை ரத சாரதி வேண்டாம் என்று அனுப்பிவிட்டு அவரே ஓட்டிப் போனது ஹொன்னாவரில் ரதவீதிக்கு.
இனிப்பு அங்காடி வாசலில் நின்றவரை மாடியில் இருந்து நேமிநாதன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கீழே வந்தபோது நான்கு நாள் தாடியும் கலைந்த தலையுமாக பைத்யாநாத் வைத்தியர் புயலில் அடிபட்ட புறா போல் நடுங்கி நின்றார்.
வைத்தியரே. ஆழ்ந்த அனுதாபங்கள், மிங்கு போனபிறகு நீங்க ஒரேயடியா கலங்கிப் போனது தெரியும். ஒரு தாதி இறந்தா ராணியம்மாவுக்கு ஒண்ணுமில்லே. ஒரு மனைவி இறந்தால் சாமானியனுக்கு வரும் துன்பம் அவங்களுக்குப் புரியாதுதான். சொல்லுங்க, நான் என்ன செய்யணும் என்று விசாரித்தபடி வைத்தியரின் கையைப் பற்றிக் கொண்டான் நேமிநாதன்.
வைத்தியர் குலுங்கக் குலுங்க அழுதார். அப்புறம் சொன்னார் – மிங்குவோட பேசணும் என் மிங்குவோட ஒரு தடவையாவது ஒரு நிமிஷமாவது பேசணும் ராஜகுமாரரே என்று யாசித்தார் மெல்லிய குரலில்.
ஓ அதுக்கென்ன ஆவியை அழைக்கிறவங்க மேலே தான் இருக்காங்க. நீங்க அங்கே போங்க என்று நேமிநாதன் சொல்ல முடியாத திருப்தியோடு வைத்தியரை மேல்மாடிக்கு அனுப்பினான்.
பத்து நிமிடம் கழித்து அங்கே பலகையில் சதுரங்கள் ஊடாகக் காய் நகர்ந்தது. ஆவி வந்து சேரவில்லை.
pic medieval singleton
ack medieval.eu
December 2, 2021
பெரு நாவல் ‘மிளகு – To feed a child gooey rice with milk and sugar
An excerpt from my forthcoming novel MILAGU
அரிசி வைத்த செப்புக்குடத்தில் இருந்து அரை ஆழாக்கு அரிசி எடுத்து சோறு பொங்க அடுப்பில் ஏற்றினார் வைத்தியர்.
நான் சொன்னா நீங்க எங்கே கேக்கப் போறீங்க என்று அலுத்தபடி வெற்றிலை இடிக்கத் தொடங்கினாள் அந்த முதிய மருத்துவச்சி.
வைத்தியர் அவளுக்கு மிங்கு மேலும் குழந்தை மேலும் வைத்திருக்கும் அலாதி பிரியத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க நெகிழ்ந்து போனார் அவர். ஒரு வேளை மட்டும் நாலு கவளம் சோறும் புளிக்குழம்பும் உண்டபடி மற்ற நேரம் வெற்றிலை பாக்கு மட்டும் தாம்பூலமாக சுவைக்கிற கிழவி அவள்.
சோறு பொங்கி முடிக்கும் வரை அதிலேயே கவனமாக இருக்க வேணும் என்று முடிவு செய்து கொண்டது நல்லதாகப் போயிற்று. இரக்கம், சினம், சந்தோஷம், துக்கம், அருவறுப்பு என்று பாளம் பாளமாக மனதில் கவிந்துகொண்டிருந்த உணர்ச்சிகளை அகற்றி நிறுத்தி மனதை அடுப்பிலேற்றிய சிறு பானையில் வைக்க எளிதாக இருந்தது. பொங்கி முடித்து ஆற வைத்து காய்ச்சிய பாலையும், சர்க்கரையையும் இட்டுப் பிசைந்து குழந்தையிடம் எடுத்துப் போனார் அவர்.
கோணேஷன் முகத்தைத் திருப்பிக்கொண்டு மருத்துவச்சியைப் பார்த்து அடுத்த அழுகையை ஆரம்பித்தான்.
இந்த அப்பா என்னத்தையோ கொண்டு வந்து கரண்டியால் வாயில் அடைத்து தின்னு தின்னு என்று நச்சரிக்கிறார், வந்து காப்பாத்து அப்பத்தாளே என்று அந்த அழுகைக்குப் பொருள் கொண்டார் வைத்தியர்.
பால்சோறுடா ஒரு கவளம் சாப்பிட்டா ஆயுசுக்கும் விடமாட்டே என்று நைச்சியமாகச் சொல்லும்போதே அவருடைய வார்த்தையின் நிஜம் அவருக்கு சந்தேகத்தை கொடுத்தது.
ஆயூசுபூரா பால்சாதம் யார் சாப்பிடுவார்கள்? கோணேஷனிடம் மாற்றிச் சொல்ல நினைத்தபோது அவனே சின்னக் கரண்டியில் அள்ளி வைத்தியர் வைத்திருந்த பால்சோற்றை வாய்கொள்ளாமல் அடைத்துக்கொண்டான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த வெள்ளிப் பாத்திரத்தில் கொண்டு வந்த பால்சோறு முழுவதையும் மிச்சம் மீதி வைக்காமல் அவன் ஆகாரம் பண்ணுவதை வைத்தியர் புளகாங்கிதமடைந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
வைத்தியர் அரிந்தம் பண்டொரு காலத்தில் தன் பிள்ளை வைத்தியர் பைத்யநாத் மேல் வைத்திருந்த நம்பிக்கையை விட வைத்தியர் பைத்யநாத் தன் மகன் ஒரு வயது கோணேஷன் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். தந்தை சொல் கேட்டுப் புரிந்து கொண்டு நடக்க மிகச் சிறுவயதிலேயே அவன் முற்பட்டதை பைத்யா மெச்சினார்.
அப்பாவுக்கு கஷ்டம் கொடுக்காமல் அடுத்த பிறந்தநாளிலிருந்து கோணேஷன் சோறு பொங்கி பால் ஊற்றிக் கலந்து சர்க்கரை தூவி உண்பான் என்ற நிம்மதியே அலாதியானது. மிங்கு இல்லாத உலகம் அப்படித்தான் பழக்கப்படும் போல.
அதற்காக மூணு வேளையும் பால்சாதம் சாப்பிட்டுக்கொண்டு ஒரு சிறுவன் இருக்கமுடியுமா?
வேறு என்ன பழக்கப்படுத்தலாம்? இட்டலிகள், தோசைகள் இத்யாதி. இவற்றை பாகம் பண்ண முன்கூட்டியே செய்ய வேண்டிய ஏற்பாடுகள், வேகவைத்து இட்டலிகளைச் சாப்பிடத் தருவதும், சூடான தோசைக்கல்லில் வார்த்து எடுத்து தோசைகளை உண்ணக் கொடுப்பதும் வைத்தியருக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால் ஒருநாள் போல் வருடம் முழுக்க பலகாரம் செய்வது மடுத்துப் போகாதா? வீட்டில் மிங்கு இல்லாத துன்பம் இதெல்லாம் கூடவே வருவது.
அவளை எப்படி விட்டுவிட்டு மீதி ஜீவிதத்தை நடத்தப் போகிறேன் என்று வைத்தியருக்கு சுய இரக்கம் மறுபடி ஏற்பட இன்னொரு குழந்தையாக கண்ணீர் விட்டு அழுதார்.
வைத்தியருக்கு மறுபடி மிளகு மகாராணி பேரில் கோபம் அடக்க முடியாமல் ஏற்பட்டது. அம்மா. இனியொரு முறையும் மிளகுப் பைசாசத்தை அந்த பெண் சூனியக்காரியை அம்மா என்று அழைக்க மாட்டார் வைத்தியர்.
ஒரு வைத்தியனாக மகாராணியின் உடல்நலம் பற்றிய அதிக அக்கறை அவருக்குத்தான் இருந்தது. ஒரு ரோகியாக ராணியம்மா வைத்தியர் சொன்னதைக் கேட்டு நடக்காவிட்டாலும்.
பனிக்குழைவு, புளியன்னம், தித்திப்புப் பலகாரங்கள் என்று கண்டதையும் தின்று ருசி இன்பத்தில் திளைக்கும் சீக்கு பிடித்த மகாராணி. நாட்டின் முதல் பிரஜையான மகாராணிக்கே நாவை அடக்க முடியாமல் தின்று ரோகம் பிடிப்பது அவளுக்கு நல்லதா இல்லை நாட்டுக்கா?
இதிலே லிஸ்பன் போகணும், வாராணசி போகணும், தில்லி போகணும் என்று ஊர் சுற்றுகிற ஆசை வேறே. மருந்துப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு லொங்குலொங்கென்று ஓடி ராணி போகிற இடத்தில் அவளுக்கு முன்னால் அவள் நேரப்பிரகாரம் சாப்பிட வேண்டிய குளிகை, பானம் பண்ண வேண்டிய கஷாயம், நாக்கில் இட்டு சுவைத்து உண்ணவேண்டிய லேகியம், காலில் புரட்டிக்கொள்ள வேண்டிய தைலம் என்று பார்த்துப் பார்த்து எடுத்துப் போய் சிஷ்ருசை செய்ததற்கு மிளகுக்கிழவி கொடுத்த பரிசு, வைத்தியனின் ஆருயிர் மனைவி மிங்குவை உயிர் போக வைத்து ஏதுமே நடக்காத மாதிரி பஸதி திறக்க ஊர் ஊராகப் போய்க் கொண்டிருப்பது.
Pic medieval children
Ack medievalchronicles.com
December 1, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – on the ripple effect of the transcription error that cost Minku’s life
an excerpt from my forthcoming novel MILAGU
ஏனோ நெல்பரலி மேல் அதி உக்கிரமான கோபம் ஏற்பட்டது அவருக்கு.
நெல்பரலி மேல் கோபப்படலாமா? ஆறறிவில் ஓரறிவும் இல்லாத வெறும் தாவரம் அது.
வேறே யார் மேல் கோபப்பட? எப்படி வாய் திறந்து சொல்வார்?
சென்னபைரதேவி மிளகு ராணி தன்முனைப்போடு செயல்பட்டு மிங்குவை அவளுடைய அன்புக் கணவர் பைத்யநாத் வைத்தியரிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து விட்டாள்.
சோறு போடும் கை அவளது. வைத்தியருக்கு மட்டுமில்லை, மெய்க்காப்பாளராக மிங்குவை நியமித்து அவளுக்கு கிட்டத்தட்ட சொல்லப்போனால் வைத்தியருக்கு மாதாமாதம் தருவதை விடவும் கூடுதலாக அளிக்கிறவள் மகாராணி. காசால் அடித்த விசுவாசமில்லை அது.
வைத்தியர் இன்னும் விடியாத, மிங்கு மரித்த ராத்திரியில் அமிழ்ந்திருக்க, குழந்தை அழுகுரல் அவரை இந்தக் காலை நேரத்துக்குக் கொண்டுவந்தது.
வைத்தியரின் ஒருவயதுக் குழந்தை கோணேஷன் அழ ஆரம்பித்திருக்கிறான். மிங்கு இல்லாத உலகத்தை பழகிக்கொள்ள வைத்தியருக்கே முடியாது என்றிருக்க, அந்த சிசுவுக்கு அம்மா இல்லாத தினங்கள் எத்தனை வருடம் துன்பத்தோடு கடந்து போக வேண்டி வருமோ.
கோணேஷன் மறுபடி சத்தம் அதிகமாக்கி அழ, வைத்தியர் அவன் படுத்திருந்த தொட்டிலின் அருகே போனார். கையில் எடுத்துக்கொள்ளச் சொல்லி கண்களால் கெஞ்சலான அழைப்பு விடுக்கிறான்.
கண்ணில் நீர் நிறைய வைத்தியர் முரட்டுப் பிடிவாதத்தோடு அவனிடமிருந்து விலகி வெளியே போக, மருத்துவச்சி அவசரமாக உள்ளே வந்து முறையிடுகிறாள் –
ஏன் மாப்ளே, பிள்ளை என்ன கத்து கத்துது என்ன அதுக்கு பசியா வவுத்து வலியான்னு பிள்ளைக்கு அப்பனாகத்தான் வேணாம், பிள்ளையைப் பார்க்க வந்த மருத்துவனாவது பார்க்க வேணாமா?
கண்டிக்கிற தொனியில் கேட்டாள் மருத்துவச்சி.
வைத்தியர் அவளுடைய வழியை மறைத்துக் கொண்டு நின்றார்.
விலகும். விட்டு விட்டு அழுது பசியாத்தான் இருக்கும். பசும்பால் கிண்டியிலே அடைச்சுத்தரச் சொன்னேனே, காய்ச்சி சர்க்கரை போட்டிருக்கீங்களா? அது பசும்பால் தானே, எருமைப்பால் இல்லையே? காய்ச்சினீங்களா? காய்ச்சும்போதே சர்க்கரையைப் போட்டுக் கலந்திருக்கலியே? காய்ச்சினபோது முழுக்கக் காஞ்சு நுரையோட பொங்கி வர்ற வரைக்கும் பொறுமையா இருந்தீங்க இல்லே?
அடுத்த தொகுதிக் கேள்விகள். ஆமாம் என்ற பதில் கட்டாயம் வேண்டுபவை அவை.
என் வெத்திலை செல்லமும் உரலும் சமையல்கட்டுலே வச்சுட்டேன். கொஞ்சம் எடுத்து வந்துடும். புண்ணியமாகப் போகும்.
மருத்துவச்சி வைத்தியரை பதிலாக ஒரு வார்த்தை கூடச் சொல்ல அனுமதிக்காமல் படபடவென்று கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்பதை சாதாரண தினமாக இருந்தால் மதித்திருக்க மாட்டார். சிரித்திருப்பார்.
வீட்டுக்கு மருத்துவச்சி அவ்வப்போது வரும்போது, வைத்தியர் சிரிக்காவிட்டாலும் மிங்கு அவரைத் தூண்டி சிரிக்கச் சொல்லி ஜாடை காட்டுவாள். மருத்துவச்சிக்கு அவளுடைய செல்லப் பெட்டியும் தாம்பூலம் இடிக்கும் சின்ன உரலும் பெரிய ஆஸ்தி.
மருத்துவச்சி குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டாள். அவளுக்கும் குழந்தைக்கும் பொதுவான ஏதோ மொழியில் அவனை பாலுண்ண கூப்பிட்டாள். பால் என்றதும் கிண்டி பக்கம் வந்த குழந்தை வேண்டாம் என்று மறுத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டது.
“மாப்பிள்ளே, பனகுடியிலே இருந்து ஷெட்டியாரும் வீட்டம்மாவும் வந்திருந்தாங்க.
அவள் சொல்லி முடிப்பதற்குள் வைத்தியர் தேம்பும் குரலில் சொன்னார்- அக்கா மீங்கு போய் ரெண்டு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ளே மகனையும் சேர்த்துத் தொலைக்கணும்ங்கறீங்களா?
யார் மாப்பிள்ளை தொலைக்கச் சொன்னது. உங்க மகன் தான் எங்கே இருந்தாலும். ஷெட்டியார் அவனை தன் மகன் போல் விரல்லே எல்லாம் வைர மோதிரம், கழுத்திலே தங்கச் சங்கிலி, இடையிலே தங்கத்திலே அரைஞாண் அப்படீன்னு வைரம் தங்கம் வைடூர்யம்னு வச்சு இழச்சுட மாட்டாரா?
அவனுக்கு பசி வந்தா வைரமும் வைடூர்யமும் நேரத்துக்குத் தந்து பசியாற வைக்க முடியுமா? அதுக்கு பால்சோறும், கம்பங்களியும், உளுந்து தோசையும் ஒரு நிமிடம் கூட தாமதமில்லாமல் செஞ்சு தரணும். அது இப்போதைக்கு நீங்களும் நானும் தான் செய்துதர முடியும்.
வெற்றிலை படிக்கத்தைத் தேடி எடுத்து முன்னால் வைத்து துப்பிக்கொண்டு மருத்துவச்சி சொன்னாள் –
ஷெட்டியார் வீட்டிலா ஆகாரத்துக்கு குறைவு? அவுங்க வீட்டு வாசல்லே சாப்பிட்டுப் போடற எச்சில் வாழை இலையே கமகமன்னு தெருக்கோடி வரைக்கும் நெய் வாசனை அடிக்கும். அப்பளத்தைக் கூட புத்துருக்கு வெண்ணெய் காய்ச்சி வந்த நெய்யிலே தான் பொரிச்செடுப்பாங்க. தினம் ஜாங்கிரி, பொங்கல்னு நெய் வடியற பலகாரம். பிள்ளையை கையிலே பிடிக்க முடியாது.
வைத்தியர் மௌனமாக மிங்கு நினைப்பில் மூழ்கி இருந்தார். பூசினாற்போல் உடம்பும், நாசி எந்த நேரமும் இன்னும் கால் அங்குலம் வளரப் போகிறேன் என்று அறிவித்துக் கொண்டிருக்கும் துடிப்பும், கண்ணால் சிரிக்கும் அழகும், வழுவழுத்து நீண்ட காது மடலும், சிறிய சீன உதடுகளுமாக அவள் இந்த வீட்டுக்குள் தான் கண்ணில் படாமல் சுற்றிக்கொண்டிருக்கிறாள்.
குழந்தைக்கு பால்சோறு ஊட்டச் சொல்லி அவள் வற்புறுத்துவது வைத்தியரின் உட்செவியில் கேட்கிறது.
அக்கா, கொஞ்சம் போல சோறு குழைய வடிக்கறீங்களா.
ஏன் மாப்ளே, வயிறு சரியில்லையா?
அது இல்லே அக்கா, இவனுக்கு பால்சோறு கொடுத்துப் பார்க்கலாம். ஆச்சு கிட்டத்தட்ட ஒரு வயசு.
தரலாம்தான். குருவாயூர்லே சோறூண் முடிச்சுட்டு எந்த தினமும் தொடங்கலாம் மாப்ளே.
சோறூண் முடிக்கக் காத்திட்டிருக்கறதுக்கு இங்கே இருந்தே குருவாயூரப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு பிள்ளைக்கு இன்னிக்கே பசியாற்றிடலாமே.
pic Medieval Doctor
ack en.wikipedia.org
November 30, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – An error in writing that cost a life dearly
An excerpt from my forthcoming novel MiLAGU
அடர் சிவப்பில் நனைந்து இருக்கிற மிங்குவின் வயிற்றை கண்ணீர் கண்ணில் மறைக்க உற்றுப் பார்க்கிறார் அவர். வயிற்றில் இருந்து குருதிப் பெருக்கு குறைந்து வருவதை அவருடைய வைத்திய அனுபவம் சொல்கிறது.
கொலைபாதகம் நடத்த வந்த பெண்பிள்ளை ஓடி வந்து குறுவாளை அழுத்தப் பிடித்து ராணியின் தலையில் ஆழமாக வெட்ட உத்தேசித்திருந்தாள். அந்த வேகமும் அழுத்தமும் எல்லாம் குறுக்கிட்டுப் பாய்ந்து வந்த மிங்குவின் வயிறு வாங்கிக் கொண்டது.
வைத்தியர் வருவதற்குள் ஆழப் பதிந்த கத்தியை எடுக்க எல்லோருக்கும் சங்கடம். அது பெரும் ரத்தப் போக்கில் முடிந்து போகும் என்ற அச்சம். கத்தி வயிற்றில் பதிந்த முற்பகல் பத்து மணிக்கு என்றால் அது தானே கீழே விழுந்தது உச்சிப் பொழுதானபோது.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வேண்டா விருந்தாளியாக மிங்குவின் வயிற்றில், தேகத்தில் என்னவெல்லாம் களேபரம் நிகழ்த்தியிருக்குது அந்த சீனக் கத்தி என்று மருத்துவச்சி நடுராத்திரிக்கு சுவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள்.
வைத்தியர் மிங்குவின் வயிற்றில் இருந்து ரத்தப்போக்கு கணிசமாக மட்டுப்பட்டதை உறுதி செய்துகொண்டார். அடுத்து அவள் வயிற்றில் தாமரை இழை வைத்து சத்ர சிகிச்சையாக நான்கு தையல் போட தண்ணீர், வெள்ளைக்கார மருத்துவர் கொடுத்த கிருமிநாசினி, கட்டுப்போட வெள்ளைத் துணி என்று எடுத்து வைத்தார்.
ஆங்கிலேய மருத்துவன் சொன்னபடி ஆனால் தாமரை நாரை வைத்து மிங்கு வயிற்றில் தையல் போட்டார். வலிக்கும் தான். மரண வலி. அவள் பொறுத்துக்கொள்ளப் பழகி விட்டாள்.
அப்போதுதான் வைத்தியருக்கு நெல்பரலி நினைவு வந்தது.
ஆழமான காயத்தை ஆறவைப்பது, ரத்தப்போக்கை மட்டுப்படுத்தி இனியும் ஏற்படாது செய்தல் இந்த விஷயங்களில் நெல்பரலி எப்படி பயன்படும் என்று அறிய அவசர அவசரமாக அலமாரியில் இருக்கும் நூற்றைம்பது வருடம் முந்திய தமிழ் ஓலைச் சுவடிகளைப் புரட்டினார் அவர்.
நெல்பரலி ஒரு சர்வரோக நிவாரணி, இறைவன் அமிர்தத்தை நெல்பரலி ஆக்கி அதை அதன் மதிப்புத் தெரியாதவர்களுக்கு நடுவே குப்பைச் செடி மாதிரி வளர்த்து வைத்திருக்கிறான் என்பது வைத்தியரின் திட நம்பிக்கை.
இதோ இருக்கிறதே. அந்நிய வஸ்துக்கள் மூலம் உடலில் காயம் ஏற்பட்டால் நெல்பரலி கஷாயத்தில் வசம்பு இடித்துப்போட்டு பெருங்காயப் பொடி ஒரு சிட்டிகை இட்டு மிதமான சூட்டில் காய்ச்சி வர, பழுப்புச் சர்க்கரை ஒரு சிறு கரண்டியளவு கரையவிட்டுப் பருகக் கொடுத்தால் உடம்பில் ஏற்பட்ட ஆழமான காயம் சீக்கிரம் ஆறும், ரத்தப் போக்கு மட்டுப்படும் என்று பூடகமாக எழுதப்பட்ட சித்தர் பாடல். ‘சிவசம்பு காயம் ஐந்தொன்றாகும் பெருங்காயம் நிலைக்கும்’ என்ற இறுதி வரிக்கு வசம்பும் பெருங்காயமும் கூட்டி நெல்பரலியோடு தர காயம் ஆறும், உடல் ஆரோக்கியப்படும் என்று உடுக்குறியிட்டுப் பொருள் சொன்னது சுவடி.
அதை அப்படியே கடைப்பிடித்தார் வைத்தியர். கஷ்டப்பட்டு மிங்குவை இரண்டு மடக்கு நெல்பரலி கஷாயத்தை பருக வைத்தார் அவர். என்ன சொல்ல, கத்தி வயிற்றில் தைத்த இடத்தில் மறுபடி கணிசமாக ரத்தப் பெருக்கு உண்டானது.
வைத்தியர் நெல்பரலி மருந்தை உடனே நிறுத்தினார். குருதிப் பெருக்கு மட்டுப்பட்டது. ஆனால் முழுக்க நிற்க வைக்க முடியவில்லை . மிங்குவின் நினைவு தப்பவில்லை என்றாலும் அவள் கண்கள் மூடியே இருந்தன.
என்னமோ சந்தேகம் தோன்ற ஓடிப்போய் ஓலைச் சுவடிகளை பெட்டியோடு இறக்கி இன்னொரு தடவை பார்த்தார் வைத்தியர். ’வசம்பு இடித்துப் போடச் சொன்னது சித்தர் வாக்கைத் தவறாகப் பொருள் கொள்வதாகும். சிவசம்பு ஒரு அலங்கார விளி, அதற்குள் வசம்பைத் தேடக்கூடாது’ என்று பாடபேதம், பெயர்ப்புப் பிழை பற்றிய சுவடியின் இறுதி ஏட்டில் எழுதியிருந்தது கண்ணில் பட்டது. சிவசம்பு-வுக்கு விசும்பு என்று இன்னொரு பாடமும் உண்டாம்.
வசம்பும் ரத்தமும் ஒன்றுக்கொன்று இழைந்து போகாமல் எதிர்த்து வந்து ஆரோக்கியத்தை மோசமாக்கி விடும் என்று மேலும் சொன்னது இந்த சுவடி.
ஆண்டவனே!
வைத்தியர் பெருங்குரல் எடுத்து அலறினார்.
மிங்குவின் நோய்ப் படுக்கைப் பக்கம் அவர் ஓடுவதற்குள் கண்ணில் ஒரு சின்னச் சிரிப்போடு மிங்கு விடைபெறாமல் புறப்பட்டுப் போயிருந்தாள்.
மிங்கூஊஊஊ
அவர் மௌனமாக அழுதார். சொல்லித் தீராத துயரத்தை மருந்துப் பெட்டிமேல் தலையை மோதி மோதி வெளியாக்க முயன்றார். எல்லா மருந்து, எல்லா வைத்தியம், எல்லா மூலிகை, எல்லா எண்ணெய், எல்லா மருத்துவர்கள், எல்லா நோயாளிகள், எல்லா கொலைகாரப் பெண்டுகள், எல்லா குறுவாள் அடித்துத்தரும் கருமான்கள் என்று வகைதொகை இல்லாமல் எல்லார் மேலும் எல்லாவற்றின் மேலும் கோபம் ஏற்பட்டது.
அவர் படித்தும், பார்த்துக் கற்றும், அனுபவத்தில் படிந்தும் பெற்ற மருத்துவ அறிவெல்லாம் ஒன்றுமில்லாமல் போனதாக உணர்ந்தார். எல்லாம் இழந்த அநாதையாக சுய பச்சாதாபம் மேலெழ தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
அவருடைய மிங்கு இல்லாமல் போனாள்.

UNSPECIFIED – CIRCA 1754: Surgeon operating on an man’s eye. 12th century English manuscript. (Photo by Universal History Archive/Getty Images)
November 29, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – In which Minku bids farewell for ever to her Medicine man husband and her infant son
An excerpt from my forthcoming novel MILAGU
பைத்யநாத வைத்தியருக்கு சித்தம் கலங்கிப் பித்தம் தலைக்கேறி விட்டது. அவரோடு பழகாதவர்கள் பார்த்தால் அப்படித்தான் சொல்வார்கள்.
பின் என்ன? காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, சிப்பம் சிப்பமாகக் கட்டி வைத்திருந்த உலர்ந்த வேரும் இலையுமான மூலிகையை அலமாரிக்கு உள்ளும், மருத்துவப் பெட்டியில் இருந்தும் எடுத்துத் தரையில் போட்டுக் காலால் மிதிக்கிறார்.
அவருக்கு உள்ளே இருந்து ஒரு வெறி அவரைக் கொண்டு செலுத்துகிறது. அவருடைய மருந்துப் பெட்டியில் இருந்து, மருந்து சேகர அறையில் இருந்து, வீட்டிலிருந்து, ஊர், நாடு ஏன் உலகத்தில் எங்கே நெல்பரலி தாவரம் இருக்கிறதோ அங்கே எல்லாம் இருந்து அதைப் பிடுங்கிப் போட்டு அழிக்க வேண்டும் என்ற வெறி அது.
ஊரோடு பேய் மிளகுக் கொடியைப் பிடுங்கிப் போட்டு அழிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால், வைத்தியருக்கு பேய் மிளகை விடப் பெரிய எதிரி நெல்பரலி. ஜலதோஷ நிவாரணி, மலச்சிக்கல் லேகியம், நுரையீரல் அடைப்பு நீக்கி, ரத்த சுத்தம் செய்யும் தோஷாந்தக சூரணம் என்று நெல்பரலியை போன வாரம் வரை கொண்டாடினார் அவர். இப்போது இல்லை.
நெல்பரலி இல்லாமல் கோடிக்கணக்கான பேருக்கு ரத்தம் கெட்டுப் போகட்டும், இன்னும் சில கோடிபேர் ஜலதோஷத்தில் தும்மிக் கண் எரிந்து ஜுரம் தோன்றி, ஜன்னி கண்டு எதுவோ ஆகட்டும். நுரையீரல் அடைத்துக் கொள்ளட்டும். இனி வைத்தியர் யாரையும் ஸ்வஸ்தப்படுத்தப் போவதில்லை. நெல்பரலி அவருடைய மிங்குவை அவரிடமிருந்து பறித்து விட்டது. என்றென்றைக்குமாக. நெல்பரலி ஒரேயடியாக அழிந்து போகட்டும்.
மிர்ஜான் கோட்டையே அதிர்கிற மாதிரி, ஜெர்ஸோப்பா, கன்னட பிரதேசம் என்று இந்துஸ்தானத்தில் பாதி பூமி ஒரு வாரமாக இதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறது. ஜெருஸோப்பா மகாராணி சென்னபைரதேவி, மிளகு ராணி என்று உலகமே போற்றும் பெருமாட்டி, அவளை அவள் இருப்பிடமான மிர்ஜான் கோட்டையில் நுழைந்து ஒரு பெண் குத்திக் கொலை செய்ய முயற்சி எடுத்தாளாம். மகாராணியின் தாதிப் பெண் குறுக்கே விழுந்து தடுக்காமல் இருந்தால் ராணி ரத்தம் வெளியாகியே இறந்து போயிருப்பாள். அவள் மயிரிழையில் தப்பிப் பிழைக்க தாதிப்பெண் உடல்நிலை சீரடையாமல் மரித்தாளாம்.
ஒரு தகவலாக இதைப் பகிர்ந்து விட்டு வேறு ஏதாவது பற்றி அவரவர் பேச்சைத் தொடர, வைத்தியர் அப்படிக் கடந்து போக முடியாமல் அந்தக் கொடும் துயரத்தில் அமிழ்ந்திருக்கிறார். தாதிப்பெண் என்று ஒரு வெற்றுச் சொற்றொடர் இல்லை அவள். வைத்தியரின் பிரியமான மனைவி மிங்கு என்ற செண்பகலட்சுமி.
கடந்து போன வாரம் திங்கள் நள்ளிரவில் மிங்கு ரத்தம் இழந்து இறந்து போனாள். வைத்தியர் இன்னும் அந்தப் பொழுதில் தான் இருக்கிறார். மிங்கு மறைந்த அந்த துக்கம் சொட்டச் சொட்ட நனைத்த இரவு இன்னும் அவருக்கு விடியவில்லை.
அந்த இரவு இப்படி இருந்தது –
ஆஆஆ. பகவானே. கோகர்ணேஷ்வரா. வைத்தியரே. வலிக்குதே.
மிங்கு வலி தாங்க முடியாமல் முனகுகிறாள்.
மிங்குவின் படுக்கையை ஒட்டிய அறையில் மருத்துவச்சி ராஜம்மா, மிங்கு வலியில் முனகுவது கேட்டு எழுகிறாள். அவளைக் கவனித்துக்கொள்ள வைத்தியர் மருத்துவச்சியைக் கேட்டுக்கொண்டபோது ஒரு வார்த்தை சொல்லாமல் உடனே வெற்றிலைப் பெட்டியோடு புறப்பட்டு வந்து விட்டாள் அவள்.
மிங்குவைப் பார்த்துக் கொள்வது மட்டுமில்லை அவள் பொறுப்பு. மிங்கு கர்ப்பம் தாங்கியபோது மருத்துவச்சி பெற்றுப்போட்ட, இப்போது ஒரு வயதான குழந்தை கோணேஷன் என்ற கோகர்ணேசனுக்கு வேளாவேளைக்கு ஆகாரம் கொடுத்துப் போஷிப்பதும் மருத்துவச்சிக்கு வந்து சேர்ந்த பொறுப்பு. வேண்டாம் என்று விரக்தியில் எதையும் சாப்பிட மறுத்தாலும், வைத்தியருக்கு ஜீவன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கத் தேவையான குறைந்த பட்ச அளவு போஜனத்தை சமைத்து அளிப்பதும் மருத்துவச்சிதான். மிங்குவின் அம்மா உயிரோடு இருந்தால் இதைவிட ஒரு துளி குறைவாகத்தான் உழைத்திருப்பாள்.
மருத்துவச்சியின் சிறு உரலில் வெற்றிலை நசுக்கிக்கொண்டே ராராராரா என்று வார்த்தை இல்லாமல் பாடுகிறாள் மருத்துவச்சி. சுவர்க்கோழி கீச்சிடும் ராத்திரி நீண்டு போக, மிங்குவின் வலி முனகல் சற்றே மட்டுப்பட்டதை கவனித்தபடி மருத்துவப் பெட்டியை அணைத்து மிங்குவின் படுக்கை அருகே தளர்ந்து அமர்ந்து இருக்கிறார் வைத்தியர்.
pic medieval European Medicine Man
November 28, 2021
வாழ்ந்து போதீரே நாவல் பெயர்க் காரணம்
ஏண்டி பொண்ணே, எதுக்கு அவளோட ஈஷிக்கறே. கோவிலுக்குப் போயிட்டு சமையல்கட்டுலே எல்லாம் போகணும் அவளானா. நீ மேலே பட்டா தீட்டாகி, அவ ராத்திரியிலே கிணத்துலே எறைச்சு விட்டுண்டு குளிக்கணுமாக்கும், பாவம்.
இப்படி ஜோசியர் மாமி அந்தச் சின்னப் பொண்ணு கிட்டே சொல்றா. நான் என்ன தெரியுமோ பண்ணினேன். அந்தச் செறிய குட்டியை சேர்த்துக் கட்டிண்டேன். கோவில் நந்தவனம்னா என்ன. பிரியத்தைக் காட்டக் கூடாதா. அவ தலையிலே இதமா வருடி, வாடீன்னு கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போனேன். எங்கேயா? அதான் ஓதுவார் கதா பிரசங்கம் பண்றாரே, சப்பரம் வச்ச கொட்டகைக்கு வெளியே காத்தோட்டமான இடத்துலே, அங்கே தான்.
யாரோ சுந்தரமூர்த்தி நாயனாராம். அவர் தான் பித்தா, வயசா, பிராந்தான்னு வாயிலே வந்த படிக்கு தேவாரம் எழுதினாராம். அவ்வளவு பிரேமமாம் ஈஸ்வரன் மேலே. சக மனுஷாளை விட பரமசிவனே எல்லாம்னு ஆனவராம். ரெண்டு பொண்டாட்டி வேறே. ரெண்டாவது வேளி கழிக்க ஈஸ்வரனே தரகர் உத்தியோகம் பார்த்தாராம். இதெல்லாம் கேட்க ரசமாத் தான் இருக்கு. அந்த மனுஷர் ரெண்டாம் தாரத்தோட வீட்டிலேயே தங்கிட்டாராம். அந்தப் பொண்ணு இவரை அரைக்கட்டுலே சேர்த்துப் பிடிச்சுண்டவ போல இருக்கு. நீர் இந்த ஊர் எல்லையை விட்டுப் போனீர் பாத்துக்கும்னு மிரட்டி வச்சிருந்தா. என்ன திமிர். இந்த மனுஷன் சொந்த ஊர்லே தேர் திருவிழான்னு கிளம்பிட்டாராம். அவரோட கண்ணு ரெண்டும் தெரியாமப் போனது அந்தப் பொம்மனாட்டி கைவேலயாக்கம். மனுஷன் திருவாரூர்லே போய் ஓய் கண்ணு குடுமய்யான்னு தேவாரம் பாடினாராம். ஈஸ்வரன் ஒத்தைக் கண்ணைக் கொடுத்திட்டு, இன்னொரு கண்ணுக்கு நீ இன்னொரு ஸ்தலத்துலே போய் இன்னொரு தேவாரம் பாடணும்னாராம். இவருக்குக் கோவம் வந்ததே பார்க்கணும். ஓய் ஈஸ்வரன், நீர் மூணு கண்ணோட, உம் பிள்ளை சுப்பிரமணி ஆறு ரெண்டு பனிரெண்டு கண்ணோட, உம்ம ரிஷபம் அதுக்கு ரெண்டு கண், ரெண்டு வீட்டுக்காரிக்கு மொத்தமா நாலு கண் இப்படி எல்லாம் சவுக்கியமா ஜீவியுங்கோ, நான் குன்றத்துலே ஏறி, குழியிலே விழுந்து கண்ணு தெரியாம அவதிப்பட்டுட்டுப் போறேன். நன்னா இருங்கோ. நீங்க நன்னா இருங்கோ. நீங்க எல்லோரும் ரொம்பவே நன்னா இருங்கோன்னாராம் பார்க்கலாம். என்ன தைரியம். இவர் ரெண்டு பொண்டாட்டி வச்சுண்டு கூத்தடிப்பாராம். கண்ணு போனா, மாற்றுக் கண்ணை ஈஸ்வரன் உடனடியா கொண்டு வந்து ஒப்படைச்சுடணுமாம். போக்கடாத்தனம். அவர் ஏழெட்டு பாட்டு வாழ்ந்து போ வாழ்ந்து போன்னு பாடினாராம். இல்லே அந்த தேவாரம் எல்லாம் வாழ்ந்து போவீர்ன்னோ என்னமோ முடியுமாம்.
ஓதுவார் சொன்ன கதையை நானானா சுவாரசியமாக் கேட்டுண்டிருக்கேன்
அமிர்தவல்லி இருக்கட்டும்.. உங்க சிநேகிதி மோகனவல்லி, அதான் கொட்டகுடித் தாசி. கூடப் படுக்க வான்னு அவ கூப்பிட்டிருந்தா?
அவர் என்னை தீர்க்கமாகப் பார்த்தார்.
நிச்சயம் போயிருப்பேன்.
நான் ஒண்ணும் பேசாமல் தலையை முடிஞ்ச படி வெளியில் வந்தேன். தீத்தி இருந்த குங்குமத்துக்கு மேலே கோவில் பிரசாதமா வந்த குங்குமத்தை வச்சேன். மதுரை மீனாட்சி மஞ்சள் குங்குமம். இதமா வாசனை அடிக்கற அம்மன் குங்குமம் அது.
பத்து நாளா மனசுலே வச்சுப் புழுங்கி, சரியா பேசாம, சாப்பிடாம இருந்த விரதம் கலைஞ்சு இதோ எழுதிண்டிருக்கேன் எல்லாத்தையும்.
வாழ்ந்து போங்கோ. வாழ்ந்து போங்கோ எல்லோரும். வய்யலே. திட்டலே. மனசுலே பிரியமும் இல்லாம, விரோதமும் இல்லாம, குரோதமும் இல்லாம, குரூரம் இல்லாம, குசும்பும் இல்லாம சொல்றேன். வாழ்ந்து போங்கோ.
November 26, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – A diplomatic incident with serious repercussions
Excerpt from my forthcoming novel MILAGU
சென்னா தரையில் அமர்ந்திருந்தவள் இந்தப் பெண் தன்னை நோக்கிக் கொலைப்படுத்தும் நோக்கத்தோடு பாய்ந்து வருவதைக் கண்டாலும், மூப்பு காரணம் எழுந்து நிற்க, ஓரமாக ஒதுங்க, அவளிடமிருந்தும் அவள் குறுவாளில் இருந்தும் உடனே தப்பி பாதுகாப்பான தூரத்துக்கு விலக முடியாமல் போனது.
குறுவாள் பெண் அதற்குள் சென்னா தலையில் குறுவாளால் ஓங்கிக் குத்திப் பிளப்பவளாக பாய்ந்தாள். ராணி பக்கம் ஆடிக் கொண்டிருந்த மிங்கு சட்டென்று சென்னா மகாராணியின் தலையைத் தன் இடுப்போடு சேர்த்துப் பிடித்துப் பின்னால் தள்ளி குறுவாள்காரிக்கு முன் தடுப்பாக, ராணிக்கு முதுகு காட்டி நின்றாள்.
துளைத்து ராணியின் தலையைக் கிழிக்க வந்த குறுவாள் மிங்குவின் வயிற்றில் பாய்ந்து அங்கேயே அமர்ந்திருக்க, அந்தப் பெண் வெளியே கொத்தளத்துக்கு வேகமாக ஓடி அதன் விதானத்தில் இருந்து குதித்தாள். அவள் சுவாசித்த கடைசி வினாடி அது.
ஆட்டத்தை நிறுத்த உடனே கால் மாற்றி நிலைகுலைந்த பெண்கள் ஓவென்று பெருங்குரலில் சேர்ந்து கத்தினார்கள். ஓவென அழுதார்கள். எல்லோரும் சிதறி எல்லா வாசல்களையும் நோக்கி ஓடினார்கள்.
மிங்குவின் வயிற்றில் இருந்து குருதி கொட்டத் தொடங்கியது. காயத்தை அடைப்பதுபோல் குறுவாள் அங்கேயே குத்தி இருந்ததை அகற்ற எல்லோருக்கும் பயம். எடுத்தால் ரத்தப் போக்கு அதிகப்படலாம் என்ற பீதி. மிங்கு மயக்கமடைந்திருந்தாள் அதற்குள்.
வாளோடு வந்த அந்தப் பெண்ணின் கைப்பையை யாரோ எடுத்து காசிரையிடம் கொடுக்க, உள்ளே இருந்து ஒரு லட்டுருண்டை கீழே விழுந்து ஓடியது. ஏதோ மருந்து சீசா வெளியே உருண்டது மூக்கில் குத்தும் வாடையோடு.
யாரோ சொன்னார்கள் அவள் கோகர்ணத்தில் துணிகளைத் தைத்துக் கொடுத்து வாழ்க்கை நடத்துகிறவள் என்று. போன மாதம் சாக்கடைத் தண்ணீர் குடிதண்ணீர்லே கலந்து ரோகம் பிடித்து அவளுடைய கணவன் இறந்து போனான் என்று தெரியவந்தது. அவன் சமையல் தொழில் எடுபிடியாக இருந்தான் என்றும் ரோகம் காரணமாக இரண்டு மாதமாக வேலைக்கு யாரும் அழைப்பதில்லை என்றும் தெரிந்தது.
மிங்குவை என் அறைக்கு எடுத்துப் போங்க. எனக்கு ஒண்ணுமில்லே. அவளைக் கவனியுங்க. வைத்தியரை கூட்டி வாங்க. அவ இடுப்பிலே துணியை நனைச்சு இறுகக் கட்டுங்க. மிங்கு உனக்கு ஒண்ணும் ஆகாது. நான் இருக்கேன். பயப்படாம இரு. காசிரை அவளுக்கு விசிறி எடுத்து விசிறு.
மகாராணி குரல் கோட்டைக்குள் மோதி எதிரொலித்துக் கொண்டிருந்தது.
Pic Medieval women
Ack en.wikipedia.org
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

