இரா. முருகன்'s Blog, page 66
October 23, 2021
பெருநாவல் மிளகு – Neminathan attempts Keladi town entry incognito
சாகரா பெருநகருக்கு ஐந்து கல் தொலைவில் கெலடி நகரம். நகர வெளிப்பரப்பில் சாரட் வந்து நின்றபோது பிற்பகல் மூன்று மணியாகியிருந்தது. நகரில் புதியதாக வருகிற பயணிகள், வர்த்தகத்தின் பொருட்டு வந்தவர்கள், சுவாமி தரிசனத்துக்கு வந்தவர்கள் என்று பலரையும் ஊர் எல்லையில் நிறுத்தி விசாரித்து தகுதியான நபர் என்று தட்டுப்பட்டாலே உள்ளே போக அனுமதி இலச்சினை வழங்குவதை சீராகச் செய்து கொண்டிருந்தார்கள் அதற்கான ஊழியர்கள்.
நேமிநாதன் தான் வியாபரத்திற்காக, அதுவும் பவளமும் முத்தும் வாங்க ஜெருஸொப்பாவில் இருந்து வருவதாகச் சொன்னபோது புன்முறுவலோடு அந்த அதிகாரி, ”ஜெருஸொப்பா மிளகுராணியின் அபிமான புத்திரன் நேமிநாதர் வாழ்க வாழ்க” என்று வாழ்த்தினான்.
ஆக, கன்னத்தில் மரு வைத்துக்கொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறுவேடம் பூண்டு உள்ளே போய், வெளியேறலாம் என்பதெல்லாம் சூரவீரதீரக் கதைகளிலும் கதைப் பாட்டுகளிலும் வேண்டுமானல் நடக்கும். நேமிநாதனாக உள்ளே வந்ததால் சந்திக்க வேண்டியவர் பெருமதிப்புக்கும் மரியாதைக்குமுரிய கெலடி மாநில அரசபிரான் லட்சம் ஸ்ரீ வெங்கடப்ப நாயக்கர் அவர்களை என்று பதிய வேண்டிப் போனது.
தனி இலச்சனை நேமிநாதனுக்குத் தரப்பட்டதோடு அவனை அரண்மனைக்கு வழிநடத்த இரு குதிரை வீரர்களும் சாரட்டுக்கு முன்னும் பின்னுமாக வர அனுப்பப் பட்டார்கள்.
அவர்களில் மூப்பனாக முகம் தோன்றும் குதிரைவீரன் நேமிநாதனிடம் ”ஐயா ராமேஸ்வர, வீரபத்ர ஆலயங்கள் ஒரு நிமிடம் தரிசித்து அரண்மனை போகலாமா? நீங்கள் வந்த காரியம் ஜெயமாகும்” என்று வினயமாக வினவினான். வந்த காரியம் அவனுக்கு எப்படித் தெரியும்? தெரிந்திருக்காதென்றே நேமிநாதன் நம்பினான்.
“நல்ல காரியம் நினைவு படுத்தினீர், ஒரு வினாடி என்ன ஒரு மணி நேரம் கூட வழிபட வேணும்தான். அரசர் எனக்காகக் காத்திருக்கக் கூடாது. அரைமணி நேரத்தில் ஆண்டவனை உள்வாங்குவோம் வாரும்” என கோவில் வளாகத்துக்குப் போனது அந்தச் சிறிய ஊர்வலம்.
சாரட்டை கவனத்தை ஈர்க்காத ஆலமரத்தரைக்குப் பின்னால் நிறுத்தி, தலையில் உத்தரீயத்தை தலைப்பாகையாகக் கட்டி கழுத்தில் பெரிய உருத்திராட்ச மாலையை பெட்டியில் இருந்து எடுத்து அணிந்து, முகத்தைத் தூய குளிர்நீரால் கழுவி, வீபுதியைத் தண்ணீர் விட்டுக் குழைத்து நெற்றியிலும் தோளிலும் மார்பிலும் தரித்துச் சைவனாகக் கோவில் வலம்வந்து வணங்கப் புறப்பட்டான் நேமிநாதன்.
நூறு வருடம் முன்னால் என்றால் சமணர்கள் சைவக் கோவிலில் வணங்குவது அரிதானது. அனல் வாதம், புனல் வாதம் என்று மோதி வென்று தோற்று, வென்றோர், கழுவேற்றக்கூட செய்தார்கள் தோற்றோரை என்று நேமிநாதன் கேட்டிருக்கிறான்.
அந்த மதவிரோதக் காலத்தை எதற்காகத் திரும்பக் கொண்டுவர வேண்டும்? கார்டல் நிதிக்குழுமம் சொன்னால் சமண பசதியில் மீனை விட்டெறிந்து கோகர்ணத்து ஆலயத்தில் நரகல் சட்டியை வீசி சமண சைவ விரோதத்தைக் கொண்டு வர இந்த மண்ணில் எவ்வளவு, எப்போது முடியும் என்று நேமிநாதனுக்குப் புரியவில்லை.
அவன் மிளகு அரசன் ஆக, நூறு தலை உருளணும் என்றால் அது வேண்டாம்.
நேமிநாதன் சட்டென்று அதிர்ந்து தன் சிந்தனை தன்னை அறியாமல் நல்ல வழியில் போவதெப்படி எனப் பரபரப்பாக நோக்க, அவனோடு ஒட்டி நடந்து வலத்திலொருத்தரும், இடத்திலொருத்தருமாக, இடுப்பில் கைத்தறித் துண்டு மட்டும் அணிந்த கருத்த இருவர் மெல்ல வருவது தெரிந்தது.
இல்லை இவர்கள் நடக்கிற வர்க்கமில்லை மிதக்கும் வடிவங்கள். உடல் இருந்து உயிர் உள்ளே பிணைந்திருந்து நகமும் சதையும் ரத்தமும் கொழுப்பும் மயிரும் நவ துவாரமுமாக சுவாசித்து உலவி வந்து உயிர் உடலை விட்டு நீங்கி ஆவி ரூபமாக இன்னும் உலவுகிறவர்கள்.
நேமிநாதன் அவர்களை மனதில் வணங்கி, ”கோவில் போகிறேன், நீங்கள் தொல்லைப்படுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என் பாட்டன் பூட்டன் வகையறா நல்லாவிகளே” என்று அன்போடு கோரினான்.
”ராஜகுமாரரே, நீங்கள் கோவில் போய் தரிசித்து வாரும். நாங்கள் இங்கேயே இருக்கிறோம்” என்று அவர்கள் சாரட்டில் ஏறும் போது அடுத்து நின்ற குதிரைகள் இவர்களை இனம் கண்டு நடுங்கி சேணம் குலுங்கி நின்றன. கோவிலில் சங்காபிஷேகம் நடக்கிறதாக உள்ளே அவசரமாகப் போய்க் கொண்டிருந்த சிவாசாரியர் ஒருவர் நேமிநாதனிடம் தெரிவித்தபடி நடந்தார்.
நேமிநாதன் அர்ச்சனைப் பொருட்கள் வாங்கி எடுத்துக்கொண்டு உள்ளே போக, மணிகள் நல்ல சகுனம் என்று சொல்லி ஒரே நேரத்தில் முழங்கின.
ராமேஸ்வரன் சந்நிதிக் குருக்கள் நேமிநாதன் சொன்னபடி ஜெர்ஸுப்பா என்ற பெயரில் அர்ச்சனை செய்விக்க முனைந்தார். வாசலில் இருந்து தன் நாவைச் செலுத்திக் குரல் உண்டாக்கியது யாரென்று நேமிநாதன் அறிவான்.
pic medieval war
ack wikipedia.org
October 22, 2021
பெருநாவல் மிளகு : Before breakfast -Long Live the Prince; after breakfast – Long Live the Emperor
ஹொன்னாவரில் இருந்து ஜெருஸோப்பாவைத் தொடாமல் கோகர்ணம் வழியாக ஐந்து மணி நேரப் பயணம். ’கெலடிக்கு. வரப் போகிறேன்’ என்று வெங்கடப்ப நாயக்கரிடம் முன்கூட்டிச் சொல்லி அனுப்பவில்லை. பயணம் வைத்ததும் அதை உடனே நாயக்கரிடம் சொல்லச் செய்தி கிரகித்து அனுப்பும் ஒற்றர் படை கெலடி அரசருக்கு உண்டு என்பதை அவன் அறிவான்.
வரப் போகிறேன் என்ற செய்தி அதிகாரம் தொனிக்கும். அல்லது நேரத்தை யாசிக்கிறதாக இருக்கும். ‘புறப்பட்டேன், வந்து சேர்ந்தேன், பேசி முடித்தேன், விரைந்து புறப்பட்டு ஊர் சேர்ந்தேன், அடுத்த வேலையைக் கையில் எடுத்தேன்’ என்று செயல்படலே சரியான அணுகுமுறை என்று ரோகிணி தலையணை அரசியல் மந்திரம் ஓதியிருந்தாள் நேமிநாதனின் காதில். காது என்று இருட்டில் அவள் அனுமானித்த இடத்தில்.
என்ன, சொன்ன நேரத்தில் கிளம்ப வேண்டும் என்பதில் தான் சுணக்கம் உண்டானது. காலை உணவு அருந்தாமலேயே புறப்பட்டு விட்டான் நேமிநாதன்.
கோகர்ணம் கடந்து கெலடிக்குப் போகும் பாதையில் இல்லாத உணவகங்களா? விஜயநகரம் செழித்து வளர்ந்து தேய்ந்த இந்த இருநூற்று சில்லறை வருட காலத்தில் சோறு விற்பது சகஜமாகி விட்டிருந்தது.
பிடவை, வேட்டி, காய்கறி, பால் விற்கிற மாதிரி வழியில் ஒரு உணவு விடுதி. நேமிநாதன் யாரென்று அறிந்த உடமையாளரும் இருந்தார். இளம் வயது. பரபரப்போடும் உற்சாகத்தோடும் அவனைப் பார்த்து வணங்கி, மிளகு அரசர் வாழ்க என்று முழங்கினார்.
அங்கே உணவு செய்து கொண்டிருந்த ஏழெட்டு இளைஞர்கள் உடனே நேமிநாதனைச் சூழ்ந்து கொண்டு மிளகு அரசர் வாழ்க என்றும் நாளை அரசர் நேமிநாதர் வாழ்க என்றும் உற்சாகமாக எச்சில் கையோடு முழங்கினார்கள்.
அலை வந்த திசை மாறி இருக்கிறது என்றுபட நேமிநாதன் அவர்களைப் பார்த்துக் கையசைத்து உப்பிட்டும் தோசையும் கிடைக்குமா, நான் கொஞ்சம் விரைவாகப் பயணம் போய்க்கொண்டிருக்கிறேன் என்று விடுதிக்காரரிடம் தெரிவித்தான்.
ஒரு குழப்பமும் இல்லை, இன்னும் ஐந்து நிமிடத்தில் கிடைக்கப் பண்ணுவேன் என்று தேவதா பிரேமையும் மரியாதையுமாக அறிவித்தான் விடுதிக்காரன். தோசை செய்ய நேரமாகுமென்றால் வேணாம் என்று சிரித்தபடி சொன்னான் நேமிநாதன். ஒரு குழப்பமும் இல்லை என்று இரண்டாம் தடவையாகச் சொன்னான் மலையாளி விடுதிக்காரன். வாழை இலையை வெள்ளித் தட்டில் வைத்து, சுடச்சுட அதன் மேல் இரண்டு தோசைகளை வைத்து, தேங்காய்த் துவையலும் புளி இஞ்சியும் தொடுபண்ணியமாகப் பக்கங்களிலிட்டுக் கொண்டு வந்து, பெரும் மரியாதையோடு நேமிநாதன் முன் வைத்தான அவன்.
அடடா எவ்வளவு ஸ்வாதும் நிறமும் கொண்ட சூடான தோசைகள். நன்றி நண்பரே. ஆனால் உப்பிட்டுவை விட்டுவிட்டீரே என்று சிரித்தான் நேமிநாதன்.
உண்டே ஐயா என்று கரண்டி கொண்டு ஒரு தோசையைத் திருப்பித் திறக்க உள்ளே உப்பிட்டு ஒரு கையளவு பரத்தியிருந்தது. இதென்ன உப்பிட்டு உள்ளிட்ட தோசையா என்று சந்தோஷத்தோடு கேட்டான் நேமிநாதன். ஆம் என்று குஷியாகச் சொன்ன விடுதிக்காரன் ஒரு காசும் வாங்க மாட்டேன் என்று சொல்லி வழியனுப்பினான்.
கையலம்பி வந்த மற்ற வாடிக்கையாளர் இளைஞர்களும் மிகுந்த நம்பிக்கையும் சாதிக்கப் போகும் தீவிரமுமாக மிளகு சக்ரவர்த்தி வாழ்க என்று ஒரு தோசை தின்னும் நேரத்தில் அரசனை சக்கரவர்த்தியாகப் பதவி உயர்த்தி வாழ்த்தி முழங்க, நேமிநாதனின் சாரட் ஊர்ந்து வேகம் கொண்டது.
சுப்பாராவ் போற்றுதும் – மதுரை போற்றுதும்
மதுரை போற்றுதும் நூல் அறிமுகம்
————————————————–
நானும் மதுரைக்காரன் தான்.
ப்ரோப்பர் மதுரையா என்று கேட்டால் மதுரைக்கு வெறும் 48 கிலோமீட்டர் கிழக்கே சிவகங்கை என்று கூடுதல் தகவல் வரும்.
நான் 1975 என்ற, எமர்ஜென்சி காலம் பற்றிய என் நாவலில் எழுதினேன் –
/
இப்போதெல்லாம் ஒரு கைக்குட்டை வாங்கணும் என்றால் கூட பஸ் பிடித்து மதுரை போகிற கூட்டம் ஊரில் கூடிப் போயிருக்கிறது.
“மேலமாசி வீதிவரைக்கும் போனேன், கீழ மாரட் ஸ்ட்ரீட்லே மெஸ்ஸுலே சாப்பிட்டேன்” என்று படு கேஷுவலாக மதுரைத் தெருக்களை ஊர்ப்பெயர் சேர்க்காது 48 கிலோமீட்டர் தூரத்து சிறுநகர வாசிகளான நாங்கள் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம். மதுரையின் புறநகர் என்ற அடையாளம் கிடைக்கக் கூடும் விரைவில். செம்மண் பூமியின் வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஊர் என்ற பழைய பெருமை எல்லாம் யாருக்கு வேண்டி இருக்கிறது.
ஒரே ஒரு ஆறுதல். கோவிலுக்குப் போய் வந்ததை மட்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனேன் என்பது போல் ஊர்ப் பெயரோடு தான் சொல்லப் பிடிக்கிறது சகலமானவர்களுக்கும்.
//
நண்பர் சுப்பாராவ் எல்லா விதத்திலும் மதுரைக்காரர். அவரே சொல்கிறபடி, ‘விபரம் தெரிந்த நாள் முதல் , மதுரையிலேயே வாழ்ந்து, அங்கேயே படித்து, அங்கேயே நல்ல வேலை பெற்று, அடுத்த தெரு பெண்ணையே கல்யாணம் செய்துகொண்டு, மகளுக்கு உள்ளூரிலேயே இரண்டு ஸ்டாப் தள்ளி இருக்கும் தெருவில் மாப்பிள்ளை பார்த்து சம்பந்தம் செய்து கொண்ட முழு மதுரைக்காரன்’. கடந்த ஐம்பது வருடமாக அவரும் மதுரையும் சேர்ந்தே வாழ்கிறார்கள். சேர்ந்தே மாறினார்கள். சேர்ந்தே மாறாமல் அப்படியே இருக்கிறார்கள்.
எப்படி? சுப்பாராவ் நம் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு சிம்மக்கல் ஜெயவீர ஆஞ்சனேயர் கோவிலில் இருந்து புறப்பட்டு நடந்தபடி சுவாரசியமாகச் சொல்லிப் போகிறார். ரொம்ப நிதானமும் இல்லாத, வேகுவேகென்று விரையவும் இல்லாத சரியான வேகத்திலான நடை அது.
சுப்பாராவ் வேடிக்கை பார்க்கக் கூட்டிப் போவதில்லை. ‘வேடிக்கை பார்க்க வந்தவனுக்குச் சத்தியம் புலப்படாது’ என்று பாரதியார் ஞானரதத்தில் சொன்னார். சுப்பாராவ் எழுத்தில் நோஸ்டால்ஜியாவாக நனைவிடைத் தோய்தல் மட்டும் இல்லை, மதுரையின் வளர்சிதை மாற்றங்கள் பற்றி விவாதிக்கிறார், மகிழ்ச்சியடைகிறார், கவலைப்படுகிறார். நுண்ணிய பார்வை, நகைச்சுவை, அங்கதம் இதெல்லாம் தான் மதுரை போற்றுதும்.
நான் எந்தப் புத்தகத்தை வாங்கினாலும் அதைத் திறந்து ஏதோ ஒரு பக்கத்தைப் படிப்பேன். அந்தப் பக்கம் படிக்க சுவையாக, நேர்த்தியான மொழிநடையோடு இருந்தால் முழு நூலையும் பற்றி ஒரு திடமான நம்பிக்கை வரும். வராத நூலெதுவும் வாங்கமாட்டேன் தான். மதுரை போற்றுதும் நூலில் திறந்து படித்த பக்கத்தில் இருந்து –
//
ஆட்டுக்கார அலமேலு கல்பனாவில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. அதற்காக நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக (படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த) ராமு ஆடு கலந்து கொண்டது. ஆட்டுக்கு மாலை எல்லாம் போட்டு, நான்கு பெட்ரோமாக்ஸ் லைட், பேண்ட் செட்டுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். அதன் முன்னாலும், பின்னாலும் ஏரியாவின் அத்தனை சிறுவர்களும். நான் அந்த ஊர்வலத்தில் பத்து அடி மட்டும் நடந்து செல்ல முடிந்தது. பதினோறாவது அடியில் என் அக்காவால் வீட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். பெரிய படிப்பாளியாக வரவேண்டியவன் இப்படி ஆட்டுக்குப் பின்னால் போய்விட்டானே என்ற என் தாயாரின் துக்கம் தீர ஒரு வாரம் ஆனது.
//
இந்தக் கலகலப்பைப் புத்தகம் முழுக்க அளித்துப் போகிறார் சுப்பாராவ்.
மகாத்மா காந்தியின் தலைமையில் நிகழ்ந்த உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு தமிழகம் 100 தொண்டர்களை அனுப்பியது. அவர்களில் 24 பேர் மதுரைக்கார்ர்கள் என்று பெருமையோடு சொல்கிறார் சுப்பாராவ். சொன்னதோடு நிற்கவில்லை.. இது தொடர்பாக, தமிழ் உரைநடை இலக்கியப் பிதாமர்களில் ஒருவரான சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகம் -சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவலில் இருந்து பளிச்சென்று மதுரைக் காட்சி விரிகிறது
//
ஊர்வலம் கீழச்சித்திரை வீதி திரும்புவதற்குள்ளேயே சத்தியாகிரகிகளின் கழுத்தில்தான் எத்தனை கதர்சிட்ட மாலைகள் விழுந்தன. கீழச்சித்திரை வீதிக்குள் திரும்பி அம்மன் சந்நிதிக்கு வந்து, கோவிலில் நுழைந்தோம்//
சி.சு.செல்லப்பா மட்டுமில்லை, சுஜாதா, இரா.முருகன், சு.வெங்கடேசன், பா.வெங்கடேசன் என்று சக இலக்கியப் படைப்பாளிகளின் கதைகளிலிருந்து மதுரைச் சித்தரிப்பை கோடி காட்டுகிறார் அங்கங்கே. ஞானக்கூத்தனின் ‘நரிகளைப் பரிகளாக்கும் திருவிளையாடல் முற்றுப் பெற்றது’ கவிதையும்.
சிம்மக்கல் ஜெயவீர ஆஞ்சநேயர் சந்நிதியில் ஒரு கும்பிடு போட்டுத் தொடங்கும் சுப்பராவ் திரும்பிப் பார்க்க, அனுமனைக் காணோம்.. பழைய அனும விக்ரகத்தை அகற்றிவிட்டு, தெருவில் இருந்தே பார்த்தாலும் தெரியும் மெகா சைஸ் வாயுபுத்திரரை சிலையாக்கி வைத்திருக்கிறார்களாம். காலம் மாறிப் போச்சு!
இன்றைய பலமாடிக் குடியிருப்பு போல் 1960-களூடாக சிம்மக்கல் பகுதியிலும், எஞ்சிய மதுரையிலும் ஸ்டோர், காம்பவுண்ட் ஒண்டுக்குடித்தன குடியிருப்புகளை நினைவு கூர்கிறார். அவற்றில் மின்சாரம் இல்லாத சில வீடுகளில் ’மாலை வேளைகளில் கோலப்பொடியை வைத்து ஹரிக்கேன் விளக்குகளை துடைத்துக் கொண்டிருப்பார்கள்’. ஆர்.கே.லட்சுமண் வரைந்த குறைந்த அளவு கோடுகளில் சூழலைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் கோட்டோவியம் போன்றது சுப்பாராவின் குறைந்த சொற்களில் விரியும் நுண்ணிய சித்தரிப்பு. ஆர் கே லக்ஷ்மண் கோட்டோவியம் மட்டுமில்லை, மதுரையின் அற்புதமான ஓவியர் மனோகர் தேவதாஸ், தன் வகுப்பறை ஓவியத்தில் வரைந்து நிலைபெறச் செய்த பள்ளிக்கூட வகுப்பறையைப் பார்க்க சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்கு அழைத்துப் போய், ஓவியத்தில் வந்த ஜன்னல் அருகே அந்த வகுப்பறை பெஞ்சில் அமர்த்தி வைக்கிறார் சுப்பாராவ்.
நண்பனின் குடும்பம் நடத்தும் கடையில் அரிசி மூட்டைமேல் உட்கார்ந்து கேட்ட, தெருவில் நடக்கும் அரசியல் கட்சிக் கூட்ட சொற்பொழிவுகள், ஒண்டுக் குடுத்தன ஸ்டோரில் வீட்டுக்கு விலக்காகி ஒதுங்க வைக்கப்பட்ட பெண்மணிகள் மேட்னி ஷோ சினிமா பார்த்து விட்டு வந்து கொல்லைக் கதவைத் திறந்து உள்ளே பிரவேசிக்கக் காத்திருப்பது என்று புனைவுக்குரிய கதையாடலும் அங்கங்கே தலைகாட்டுகிறது.
கட்டபொம்மனோடு விவாதம் புரிந்த, ஜாக்சன் துரையின் சமாதியைத் தேடிக் கண்டுபிடித்த நிகழ்ச்சி மிகைப்படுத்தாமல் சொல்லப்படுகிறது. எண்பது வயது நாடக ராஜ நடிகை எஸ்.பி மீனாளின் நேர்காணலில் இந்த வயசிலும் அழகாகத் தெரியும் அந்த மூதாட்டியின் சினிமா கசப்பு அனுபவங்கள் பற்றிக் கோடி காட்டுகிறார் ஆசிரியர். 1970களில் வெளியான ’பொண்ணு ஊருக்குப் புதுசு’ திரைப்படத்தில் ‘ஓரம் போ ஓரம் போ’ பாடல் காட்சியில் வரும் அழகான நடுவயசு அம்மணி அவர்தானாம். (யூடியூபில் ஓரம் போ பார்த்தேன். அவர் சொன்னது உண்மைதான்).
1970=களில் தெருவுக்குத் தெரு மதுரையில் அரசியல் கட்சிகள் படிப்பகங்களை ஏற்படுத்தி, புத்தகங்கள் இல்லாவிட்டாலும் சுடச்சுட செய்தி வழங்கிய தினசரிப் பத்திரிகைளை வாங்கிப் போட்டு கட்சி வேறுபாடில்லாமல் வாசிப்பை வளர்த்த வரலாறு சுவையாகச் சொல்லப்படுகிறது அடுத்து.
மதுரையின் மெல்லிசைக் குழுக்கள், ராஜபார்ட் நாடகக் குழுக்கள், சினிமா அரங்கங்கள்,பதிப்பகங்கள், புத்தகக் கடைகள், ஜிம்னாஸ்டிக்ஸ் உடற்பயிற்சி நல்கும் ஜிம்கள் இவற்றோடு 1970-80களில் மதுரையில் இசை வளர்த்த, கேஸட்டில் சினிமா கானங்களைப் பகர்த்தித் தந்து பரபரப்பாக இயங்கிய கடைகள் பற்றி எல்லாம் அருமையாகச் சித்தரிக்கிறார் சுப்பாராவ்.
மதுரை சோமு, மதுரை மணி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சகோதரர் மிருதங்கம் சக்திவேலு, திரைப்படத்திலும் நாகசுவரம் வாசித்து அழியாப் புகழ் பெற்ற மதுரை எம்பிஎன் சேதுராமன், எம்பிஎன் பொன்னுசாமி பற்றியும் விரிவாகச் சொல்கிறது இந்நூல்.
எம்பிஎன் சகோதரர்கள் சாதா வேட்டி சட்டை அணிந்து கோவிலுக்கு வழிபட வந்தபோது பிரதோஷம் சாமி புறப்பாடு என்று அறிந்து எந்த பந்தாவும் இல்லாமல் கோவில் வித்வானின் நாகசுவரத்தைக் கடன் வாங்கி விஸ்தாரமாக கல்யாணியில் வாசுதேவயனி க்ருதியை வாசித்துக் கச்சேரி செய்தபடி நடந்து போவதும் கதைபோல் விவரிக்கப்படுகிறது.
வடக்கு பெருமாள் மேஸ்திரி தெரு குஸ்திப் பள்ளியில் பிரபல பாடகர் மதுரை சோமு அதிகாலை நேரத்தில் குஸ்தி ஒர்க் அவுட் பண்ணியபோது (மதுரை தமிழில் – உழைத்தபோது) குஸ்தி பள்ளியின் பின்பக்கத்து வீட்டு மாடியில் இளம் நாகசுவரக் கலைஞர்களான எம்பிஎன் சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் கடினமான நாகசுவர சாதகத்தில் ஈடுபட்டிருப்பர். அந்த இனிய இசை சோமு காதில் வந்து சற்றே பட்டதோடு அந்த மாடியும் அவர் கண்ணில் படும்.
மதுரைக் கோவிலின் சாயந்திரம் தொடங்கி அர்த்தஜாம பூஜை வரையான நிகழ்ச்சிகளைப் பற்றி சுப்பாராவ் எழுதியதைப் படித்ததும் உடனே ஃப்ளைட், ரயில், ஸ்பெஷல் பஸ் பிடித்து மதுரை போய் கோவிலுக்கு ஓடி அங்கே அங்கயற்கண் அம்மை சந்நிதியில் நெக்குருகி நின்று வணங்கிவரத் தூண்டும் சுப்பாராவ் ஓர் இடதுசாரி சிந்தனையாளர்தான். எனில் என்?
மதுரைக்காரர்களுக்கே உரித்தான ‘எங்கம்மா மீனாட்சி’ பெருமை சாற்றிக் கொள்வதும், தினசரி ஒன்றென வருடம் முழுவதும் நடந்தேறும் விழாக்களும் – நரியைப் பரியாக்கிய திருநாள், வன்னிமரம் சாட்சி சொன்ன நாள் இப்படி திருவிளையாடல் அடிப்படையில், பல கோவில் சார்ந்த விழாக்களின் சித்தரிப்பும் நூல் முழுக்க பாயசத்தில் கலந்து சுவைக்கும் முந்திரி போல் சுவை கூட்டுகின்றன. சித்திரைத் திருவிழாவில் பத்து நாள் உற்சவமாக மனம் கொள்ளை கொள்ளும் விழாப் பாங்கையும் விரிவாக, அழகாக விவரிக்கிறார் சுப்பாராவ்.
மாட்டுப் பொங்கலன்று மதுரைத் தெருவில் கரக ஆட்டமாக சரஸ்வதி பள்ளிக்கூடம் கதைப்பாடல் பாட்டும் ஆட்டமுமாக பரபரப்பாக நிகழ்வதை சமூகப் பொறுப்போடு கூடிய கலை வெளிப்பாடாக சுட்டிக் காட்டுகிறார் சுப்பாராவ். 1964-ஆம் ஆண்டு மதுரையில் சரஸ்வதி பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 36 குழந்தைகள் இறந்தது பற்றிய மனதை உருக்கும் கதைப்பாடல் அது. அதன் முடிவில் ஆண் பாடகர் கேட்பார் – ’இவ்வளவு நடந்திருக்கு. இந்த ஊர்லே ஒரு மகாராணி இருக்குது, அது என்ன செஞ்சுச்சு?’ அதற்கு பெண்குரல் பதில் சொல்வது – ’அது என்ன பண்ணிச்சு? அது பாட்டுக்கு பட்டாபிஷேகம் பண்ணிக்கும். திக்விஜயம் வரும். கல்யாணம் கட்டிக்கும்’.
சரஸ்வதி பள்ளி விபத்தை அங்கையற்கண் அம்மையின் சித்திரைத் திருவிழாவோடு இணைத்துக் கரகமாடும் அவர்கள் எல்லோரும் மீனாட்சி அம்மனின் பரம பக்தர்கள். அந்த பக்தியின் வெளிப்பாடு தான் ’என்ன செஞ்சே நீ?’ என்று மீனாளை இடித்துரைப்பது. சுப்பாராவ் அந்தத் தொனியை மிகச் சரியாக ’மதுரை போற்றுதும்’ நூலில் அடையாளம் காட்டியிருக்கிறார். உருவம், உத்தி, உள்ளடக்கம் என்று அனைத்துப் பரிமாணங்களிலும் வெற்றி காணும் படைப்பு இந்த நூல்.
நூல் – மதுரை போற்றுதும்
ஆசிரியர் – ச.சுப்பாராவ்
பதிப்பாளர் சந்தியா பதிப்பகம், அஷோக் நகர், சென்னை 83 (044 – 24896979)
விலை ரூ 200
October 21, 2021
மிளகு பெருநாவல் – NemiNathan expelled from the palace by Pepper Queen & shifts base to Honnavar
ஹொன்னாவர் ரதவீதியில் பரபரப்பு ஏற்படுவதற்கு முன் மாந்தோப்புத் தெரு இல்லத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று நேமிநாதன் தீர்மானம் செய்திருந்தது நிலைகுலைந்து போனதற்கு பாதிராத்திரிக்கு மேலும் விழித்திருக்க வைத்த ரோகிணி காரணம் இல்லை.
மாந்தோப்புத் தெருவே மரங்களின் அணிவகுப்புக்கு இடையே இருப்பது. வேம்பும், மலை வேம்பும், நெடுநெடுவென்று நெட்டிலிங்க மரங்களும், அசோகமும், பலா மரங்களுமாக தெருவோரம் வரிசையாக நிற்கும். வீடுகளுக்கு நடுவே ஒன்றிரண்டு மாமரங்கள் தட்டுப்படாமல் இருக்காது.
நாள் முழுக்க வெப்பம் தட்டுப்படாமலும் ராத்திரியில் குளிர் மிகுந்தும் உள்ள சூழலில், படுத்தது தெரியும், எழுந்தது தெரியும். காலை ஐந்துக்கு எழ நினைத்தது, ஏழுக்கு எழுந்தானது.
இன்னும் ஒரு வாரம். நேமிநாதனுக்கு மனை வாடகைக்குக் கொடுத்திருக்கும் நாகேச பட்டர் நேற்றைக்கே சொல்லி விட்டார் –
”ஸ்வாமின், நீங்கள் பேஷாக நடுக்கூடத்திலே ஒத்தக்கால்லே நின்னுண்டு இருங்கோ, மூக்கிலே விரலை விட்டுண்டு சம்மணம் கொட்டி திண்ணையிலே உக்காந்துண்டிருங்கோ, சமையல் உள்ளுலே குப்புறப் படுத்திண்டிருங்கோ, தோட்டத்துலே இலை போட்டு பலகாரம் பண்ணிண்டு இருங்கோ. நீங்க வருங்கால மகாராஜா. நான் எப்பவும் பிரஜைதான். வருங்காலத்திலே ஜீவிச்சிருந்தா பல் இல்லாம போன பிரஜை. இந்த பிரஜைக்கு ஒரே ஒரு அபேக்ஷைதான். உங்க பார்யாளை கொண்டு வந்து வச்சுண்டு ஜாம்ஜாம்னு இருங்கோ. மத்த ஸ்த்ரிகள் ஆத்துலே சமைக்க, பெருக்கி மெழுக இப்படி வந்துட்டு போகட்டும். மத்ததுக்கு உசிதம் போல பண்ணுங்கோ. உங்களுக்கு தெரியாததில்லே”.
பட்டர் சொன்னது ஒரு விதத்தில் சரிதான் என்று நேமிநாதனுக்கும் பட்டது. மிளகுராணி மிர்ஜான் கோட்டை மாளிகைக்கு வெளியே போகச் சொன்னதும் இங்கே ரோகிணி முயற்சியில் நாகேச பட்டர் வீடு பூட்டியிருந்தது திறந்து துப்புரவு செய்யப்பட்டு நேமிநாதன் வசிக்க இடம் ஏற்படுத்தித் தரப்பட்டது. மாதம் முன்நூறு வராகன் பட்டருக்கு குடக்கூலியாகத் தரவேணும் என்றும் ஒப்பந்தமானது.
தத்துப் புத்திரன் நேமிநாதனின் மனைவி ரஞ்சனா தேவி எங்கும் போக வேண்டாம், கோட்டையிலேயே இருக்கலாம் என்று சென்னபைரதேவி மகாராணி நிர்ணயித்தது மூலம் நேமிநாதனுக்கு மட்டும்தான் வெளியே போக உத்தரவு என்று தெரிந்தது.
சந்தேசங்கள் எப்போதும் கீழ் உத்தியோகஸ்தர் மூலம் அறிவிக்கப்படுவது வாடிக்கை. என்றாலும் சென்னா தன் வளர்ப்பு மகனை வெளியேற்றி வெளியிட்ட அதிகார ஆணையை பிரதானி நஞ்சுண்டய்யா தான் அவனிடம் கொண்டு வந்து சேர்ப்பித்தார்.
அதற்கு முக்கிய காரணம் நேமிநாதனின் அரசகுமார அந்தஸ்து என்பதோடு நேமிநாதனின் மூத்த நண்பர், நேமிநாதன் புழங்கும் ஹொன்னாவர் ரதவீதியில் மனை இருக்கிறவர் அவர், முலைகளும் நிதம்பமும் வரும் கொங்கணிக் கவிதைகளை (எல்லாக் கவிதையும் அப்படித்தான்) போர்த்துகீஸ் மொழியாக்கம் செய்வதில் கூட்டு சேர்ந்த கவிதா ரசிகர்கள், என்பதால் எப்படியும் நஞ்சுண்டய்யா நேமிநாதனை சந்தித்து லிகிதத்தைக் கொடுத்து விடுவார் என்ற திடமான நம்பிக்கையும் தான்.
நேமிநாதன் அதேபடி சந்தேசத்தை வாங்கிக்கொண்டு, வலுக்கட்டாயமாக நஞ்சுண்டர் பிரதானியை இனிப்பு அங்காடிக்குள் இழுத்துப்போய், ஜயவிஜயீ இனிப்பு எடுத்து, வேண்டாம் என்று மறுத்தாலும் ஊட்டாத குறையாக நிர்பந்தித்துத் தின்ன வைத்தான்.
சென்னாவை விட்டு விலகி இருப்பதற்கான ஆணையை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாகவும், கொண்டு வந்தவருக்கு இனிப்பு வழங்கி அதைக் கொண்டாடுவதாகவும் காட்டிக் கொண்டான்.
அதற்கும் மேலே ஒருபடி போய் அந்த நேரத்தில் கடைக்கு வந்தவர்கள், தெருவில் அந்தப் பக்கமாக வந்தவர்கள், போனவர்களுக்கும் ஒருவர் விடாமல், சிலபேரைத் துரத்திச் சென்றும், ஜபர்தஸ்தியாக இனிப்பு எடுத்துக்கொள்ளச் சொல்லி நீட்டி ஊரோடு கொண்டாடினான் நேமிநாதன்.
மிளகு – All is well that ends well for Lord Coutinhoe, his housekeeper and his co-researcher
படுக்கை அறைக்கு ஓரமாக ஜன்னல் வழியே பேய் மிளகுக்கொடி திரும்பவும் உள்ளே நுழைந்து படர ஆரம்பித்திருந்ததை சுபமங்களத்தம்மாள் திகிலோடு பார்த்து, குசினிக்காரனை விளித்து அதை வெட்டியெறியச் சொன்னாள்.
அவனும் பயப்பட, பைத்யநாத் வைத்தியர் மருந்துப் பெட்டிக்குள் இருந்து பெரிய கத்தரிக்கோலை எடுத்து கொடியை சுபாவமாக நறுக்கித் தள்ளினார்.
என்ன செய்கிறது இவருக்கு என்று கட்டிலில் சுபமங்களா மேல் முகம் சாய்த்து சயனம் செய்திருந்த பிரபுவுக்கு தன் பிருஷ்டம் இடிபடும் தூரத்தில் நின்று விசாரித்தார் பைத்யநாத்.
பிரபு நல்ல நினைவோடு இருந்தால் இப்படி அவர் முகத்தில் பிருஷ்டம் உரச நிற்பாரா வைத்தியர்? எல்லாம் செயலாக இருந்தால் ஒரு மரியாதை இல்லையென்றால் இன்னொரு வகை மரியாதை, இப்படித்தான் உலகம் போய்க் கொண்டிருக்கிறது என்று தத்துவார்த்தமாக நினைத்தபடி சுபமங்களத்தம்மாள் நடந்ததாக அவள் கருதியதை எல்லாம் வரிசை தப்பியும் முன்பின் யார் என்ன சொன்னது செய்தது குழம்பியும் சொல்லி முடித்தபோது மருத்துவர் பைத்யநாத்துக்குக் கிட்டிய மனக்காட்சியானது, விக்ஞான உபாத்தியாயர் செருப்பை வாயில் கவ்விக்கொண்டு கவுட்டின்ஹோ மாளிகைக்குள் இருந்து துள்ளிக் குதித்து வெளியே ஓடியது.
உபாத்தியாயரும், பிரபுவும் ஏதோ மிளகுப் பதார்த்தத்தை காய்ச்சிக் குடித்து போதம் கெட்டுப் போனதாகவும் தெரிந்து கொண்டார் வைத்தியர். கவுட்டின்ஹோவுக்கு நாடி பிடித்துப் பார்த்தார் அவர். சீராக இருந்தது அது. சுவாசத்தை நாசிக்கு எதிரே உள்ளங்கை வைத்துச் சோதிக்க, அபின் வாடை தூக்கலாக இருந்தததாகப் பட்டது அவருக்கு. அந்த வாடையில் வைத்தியர் தலையே சுற்றத் தொடங்க, பிரபுவுக்கு எவ்வளவு லகரி ஏற்றுவதாக இருக்கும் அது.
என்ன மருந்து பெட்ரோ துரையின் மருத்துவப் பெட்டியில் இருந்து கஸாண்ட்ரா கொடுத்தாள் என்று சொல்லத் தெரியவில்லை சுபமங்களத்துக்கு. அதை விழுங்கியதும் கண் திறக்காமலேயே தன்னோடு சிருங்கார சேஷ்டைகளைத் தொடங்கினார் அவர் என்பதை மட்டும் சொன்னாள் அவள். அதில் ஒரு மறைமுகப் பெருமை தட்டுப்பட்டதை கவனிக்க வைத்தியர் தவறவில்லை.
அந்தக்கொடி காலில் சுற்றி தரையில் விழுத்தாட்டும்படி மூப்பர் என்ன செய்து கொண்டிருந்தாராம்? பதில் தெரிந்தே கேட்கிற கேள்வி அது என்பது போல் சிரிப்போடு வந்த வினா அது.
”வைத்தியர் ஐயா, என்ன ஆச்சு என்று தெரியவில்லை”.
’வேறென்ன ஆகியிருக்கப் போறது? எவளாவது முலைகள் கனத்த தட்டுவாணியை உள்ளே தூக்கிக்கொண்டு வந்து போட்டு ஓடிப் பிடித்து விளையாட உத்தேசித்திருப்பான் கிழவன். இங்கே இப்படி பிரக்ஞை இல்லாமல் இருக்கும்போதே பேய்ப் பிடியாக என்னைப் பிடித்திருக்கிறானே, எழுந்தால் வேறென்ன எல்லாம் பண்ணுவானோ’.
மனதில் பதில் சொல்லி புன்சிரித்தாள் அவள். ரொம்ப நாளுக்கு அப்புறம் தன்னை புஞ்சிரி பொழியும் சுந்தரிப் பெண்குட்டியாக அவள் உணர்ந்தாள்.
இந்த அதிரூப சொரூபத்தோடு காதல், காமாந்தகமான உறவு எல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று தனக்குள் ஆச்சரியப்பட்டார் வைத்தியர். காம அந்தகம் தானே? கண்தெரியா காமத்தோடு முதுமை, சாக்கடையில் மிட்டாய் கிடைத்தாலும் பாய்ந்து எடுத்து, மேலே ஒட்டிய நரகலைத் துடைத்து, தின்னத் தயாராக்குமே, எதுதான் சாத்தியமில்லை? வியந்தார் அவர்.
கொஞ்சம் கஷாயம் காய்ச்ச வேண்டும், குசினிக்கு போக முடியுமா என்று சுபமங்களத்திடம் கேட்க, அவள் பிரபுவின் பிடியிலிருந்து விடுபட செய்ததைப் பார்க்க வைத்தியருக்கே மனம் ஒருநிலைப்படாமல் அலைபாய்ந்தது.
கவுட்டின்ஹோ இன்னும் அதிகமாக பிரக்ஞை தவறி, கஸாண்ட்ரா வந்து படு என்று சொல்லிவிட்டு உறக்கத்திலும் ஆழ்ந்தார்.
”உன் பிரபுவுக்கு இன்னொரு பிரபுவின் மாளிகை நிர்வாகி மேல் அசுரத்தனமான வெறி போலிருக்கு. அதற்கும் பேய் போல அப்பும் மிளகுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?”
விசாரித்தபடி குசினிக்குத் தானே போய் கனன்று கொண்டிருந்த கரி அடுப்பை உயிர்ப்பித்து கஷாயம் காய்ச்சிக் கொண்டிருந்தபோது தான் அசம்பாவிதம் ஏற்பட்டது.
அது யாதெனில், பைத்யநாத் பின்னால் இருந்து பேய் மிளகு நேரே நிமிர்ந்து உயர்ந்து இரு பக்கமும் இலைக் கரங்களை பிரம்மாண்டமாக நீட்டி அலாதியான மனுஷப் பிறவியோ, பனிமனிதனோ நடக்கிறது போல் முன்னால் நகர்ந்து பைத்யநாத் வைத்தியர் பின்னால் நெருங்கி நின்று அவர் தோளைத் தீண்டியது.
”சுபமங்களா, நீ போய்ப் படு, இதெல்லாம் ஒண்ணும் நீ நடப்பிக்கிற காரியமில்லை”
பொத்தாம் பொதுவாகச் சொல்லி அடுப்பில் பொங்கி வழியத் தயாராக இருக்கும் கஷாயத்தை இடுக்கி தேடிப் பிடித்து இறக்குவதற்கு முன் பின்னால் திரும்பிப் பார்த்து அவர் அலறியது – ”ஐயோ மிங்கு”.
இடர் வந்தபோது பெண்டாட்டியைக் கூப்பிடும் முதல் மனுஷன் தானாகத்தான் இருக்கும் என்று தோன்ற இடுக்கி போட்டுப் பிடித்த கஷாயப் பாத்திரத்தை சற்றே பின்னால் நின்று அணைக்க முற்பட்ட அசுரத் தாவரத்தின்மேல் வடிக்க, ஒரே வினாடியில் அது இருந்த இடம் தெரியாமல் போனது. அது கிளப்பிய வாடை வீடு முழுக்கச் சூழ்ந்து அங்கங்கே தலை காட்ட ஆரம்பித்த பேய் மிளகை கருவறுத்துப் போட்டது.
அந்த கஷாயத்தை புகட்டியதும் ஒரே நிமிடத்தில் விழித்தெழுந்த கவுட்டின்ஹோ, ”எங்கே அந்த தேவதை கஸாண்ட்ரா?” என்று பைத்யா வைத்தியரின் தாடையைப் பிடித்து அசைத்துக் கேட்டார், ஏதோ, வைத்தியர் அவளைக் கடித்து முழுங்கின மாதிரி.
“அந்தப் பெண்பிள்ளை நினைவை ஒழியும் இந்தக் கிழ வயதில். இறைநம்பிக்கையில் சிறந்து, போகும் காலம் புண்ணியம் தேடும்” என்றாள் சுபமங்களா அவர் விரல்களை நெட்டிமுறித்தபடி.
கவுட்டின்ஹோ அவளை குக்கலின் நரகல் போல் அருவருத்துப் பார்த்து, நீ உன் வீட்டுக்கு போகலாம் என்று துரத்தினார். பைத்யா வைத்தியரிடம் அவர் அடுத்துச் சொன்னது – ”வைத்தியரே, பேய் மிளகுக்கு எதிர்மருந்து நீர் உண்டாக்கிய கஷாயம் தான். செய்முறை சொல்லும். கணிசமாக வராகன் தரேன்”.
சொல்லியபடி மருந்து சீசாவைக் குலுக்குவது போல் குலுங்கிக்கொண்டு அவர் மறுபடி உறங்க ஆரம்பித்தார். அது பிரக்ஞை தவறுவதில்லை என்று நிச்சயப்படுத்திக்கொண்ட பைத்யா வைத்தியர் அவரை கட்டிலில் படுக்க வைத்து விட்டுத் திரும்ப, பிரபுவுக்கு நெருக்கமாக சுபமங்களத்தம்மாள்.
”அவருக்கு ஒண்ணுமில்லே. காலையிலே கலகலன்னு எழுந்திடுவார்” என்றபடி நடந்தபோது கவுடின்ஹோவுக்கு நெல்பரலி லேகியம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது வைத்தியருக்கு. போகட்டும் அதை விழுங்கினால், இணைவிழைச்சு சிலருக்கு அதிகமாகிறதாகக் கேட்டறிந்திருந்தார் அவர். கவுட்டின்ஹோ ஏற்கனவே ஸ்திரி நவத்வார வாடை பிடித்து அலைகிறவர். நெல்பரலி வேறே எதுக்கு அவருக்கு?
அவர் வாசல் பக்கம் நகர்ந்தபோது, ”கதவைச் சாத்திட்டு போங்க வைத்தியரே” என்றாள் கண்கள் தரைநோக்கிக் குனிந்து அலைபாய, சுபமங்களம். கதவைச் சார்த்தும் போது வைத்தியர் சுபாவமாக உள்ளே ஒரு நொடி பார்க்க, கட்டிலில் சுபமங்களமும் அவசரமாகப் படுத்துக் கொள்வது கண்ணில் பட்டது. பேய் மிளகு. அவர் தன்னையறியாமல் சொன்னபடி சாரட் ஏறினார் அவர். குதிரைகள் கனைத்து ஆமோதித்து ரதம் உருள ஆரம்பித்தது.
pic newscientist.com
October 20, 2021
மிளகு – பெருநாவல் Senhor Emmanuel Petro reached to tide over SOS situation at Lord Coutinhoe household
an excerpt from MILAGU
“வாத்தியாரே, இன்னும் தாமதிக்காமல் பெத்ரோ பிரபுவிடம் வந்து பார்க்கச் சொல்லி அவசரச் செய்தி அனுப்பினால் என்ன” என்று சுபமங்களத்தம்மாள் கேட்டாள். அதுவுஞ்சரிதான் என்று ஒரு சாரட் வண்டியில் தோட்டக்காரனையும், குசினிக்காரனையும் அனுப்பி வைக்கச் சொன்னார் விக்ஞான உபாத்தியாயர்.
அனுப்பி வைக்கப்பட்டது. போனவர்கள் போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்கள். பெத்ரோ பிரபு கிழக்குக் கரையில் காளிகட்டம் பயணம் வைத்து நேற்றுக்காலைதான் புறப்பட்டுப் போனதாகவும் இன்னும் மூன்று வாரம் ஆகும் அவர் திரும்பிவர என்றும் பெத்ரோ பிரபு மாளிகை நிர்வாகி கஸாண்ட்ரா சொல்லியனுப்பியிருந்ததாக சுபமங்களத்தம்மாளிடம் தெரிவித்தார்கள்.
கஸாண்ட்ரா, பெத்ரோ இங்கே வைத்துவிட்டுப்போன கூடுதல் மருத்துவப் பெட்டியிலிருந்து ஏதோ சில குளிகைகளையும், நாசித் துவாரங்களில் சளி நிவர்த்திக்காகப் பூசும் களிம்பையும் அனுப்பிவைத்திருந்தாள்.
கவுட்டின்ஹோவை அந்தக் குளிகையை விழுங்க வைக்க சிரமமாக இருந்தது. விழுங்கியும் கண் திறக்கவில்லை. என்றாலும் சுபமங்களத்தோடு தன் தன்னை அட்டைப்பூச்சி மாதிரி ஒட்ட வைத்துக்கொண்டு கிடந்தார் அவர்.
அந்தக் களிம்பு பிரயோஜனமாக இருக்கும் என்று எடுத்து அதை பிரபுவின் நாசித் துவாரத்தில் அடைக்க, கண் மூடியபடியே அவர் கை உயர்ந்து அதை எடுத்து சுபமங்களத்தின் வயிற்றில் பூசி அங்கே மீண்டும் தலை வைத்தார்.
ரோஜாப்பூக்கள் தன் வயிற்றுக்குள் இறக்கை முளைத்துப் பறக்கின்றன என்றும், மிளகுக் கொடிகள் சரிகை உடுப்பணிந்து பாடுவதைத் தன்னால் கேட்க முடிகிறதென்றும், வண்ணத்துப் பூச்சிகள் நீந்தும் பச்சைநிற நீர் நிறைந்த குளக்கரையில் வயிறு மின்னும் தவளைகள் பாதிரி உடுப்பணிந்து ஆடுகின்றனவென்றும் சுபமங்களத்தம்மாள் தெரிவிக்க, விக்ஞான உபாத்தியாயர், அவள் பூசியதும், அவள் வயிற்றில் பிரபு வழித்துப் பூசியதும், அபின் கலந்த களிம்பு என்று உறுதியாகத் தெரிவித்தார்.
இன்னொரு முறை வாசலுக்கு நடந்தார். அந்தப் பேய் மிளகு தன் உக்கிரம் எல்லாம் தீர்ந்தோ என்னமோ சும்மா கிடக்க, அவர் வாசலுக்கு செருப்பைக் கையில் எடுத்துப் போய், அங்கிருந்து ஓடி ரட்சைப்பட்டார்.
தோட்டக்காரன் சுவாதீனமாக உள்ளே வந்து சுபமங்களத்தம்மாளிடம் சொன்னது இது – ’மூப்பரை அரண்மனை வைத்தியர் பைத்யநாத்திடம் காட்டினால் உடனே சுவஸ்தமாகும். அதற்கான பணம் கொஞ்சம் கூடுதலாகுமே”. அவனே வைத்தியன் மாதிரி கூட்டிச் சேர்த்தான்.
“மருத்துவக் கூலி பற்றி எல்லாம் நீ ஒன்றும் கவலைப்பட வேணாம். நீயும் குசினிக்காரனும் போய் பைத்யநாத் வைத்தியரை விவரம் எல்லாம் சொல்லி, ஸ்திதி ரொம்ப மோசம் என்று அறிய வைத்து, அவரோடு உடனே வந்து சேருங்கள். கவுட்டின்ஹோ பிரபு என்றால் அவரும் வந்து விடுவார்”.
என்றெல்லாம் பலதும் சொல்லி சுபமங்களத்தம்மாள் அனுப்பி வைத்தாள். கவுட்டின்ஹோ பிரபு அதற்குள் ஆழ்ந்து உறங்கிப் போயிருந்தார். அவர் சுபமங்களாவைப் பற்றிப் பிடித்திருந்த தலம் சொல்லக் கூடாதது என்பதால் அவள் நீளம் அகலம் மிகுந்த போர்வையைப் போர்த்தி, இரண்டு பேரையும் தேவையான அளவு மறைத்து இருக்கும்படி செய்திருந்தாள்.
போர்வை விலகினால் பார்த்துப் போக உத்தேசத்தோடு, கடை எடுத்து வைத்துவிட்டு வீடேகும் சிறுகடை உடமையாளர்களும், அடுத்த, எதிர் மாளிகை நவரத்ன வியாபாரிகள் வீட்டு நவுகர்கள், என்றால் வேலைக்காரர்களும், தெருவில் திரியும் வெறுந்தடியர்களும் உள்ளே வந்து கையைக் கட்டிக்கொண்டு, சட்டமாக நின்று கொண்டிருக்க, உட்கார்ந்தபடிக்கே சுபமங்களத்தம்மாள் பலமாகக் குரல் விட்டு விரட்டினாள்.
அரை மணி நேரத்தில் அம்மாள் தலையணைகளைப் பின்னால் அண்டக்கொடுத்து வைத்தபடி, சாய்ந்து கட்டிலில் உறங்கியிருந்தாள். கவுட்டன்ஹோ பிரபு அவளோடு ஈஷிக் கொண்டு உறக்கமா பிரக்ஞை தவறியதா என்று சொல்ல முடியாத நிலையில் கிடந்தார். கூத்து பார்க்கப் புறப்பட்ட சிப்பந்திகள் கதவை மட்ட மல்லாக்கத் திறந்து வைத்துவிட்டுப் போய்விட்டிருந்தார்கள்.
சாரட் ஒன்று சத்தமில்லாமல் வந்து நின்றது. குதிரைகள் நாள் முழுதும் ஓடி ஓய்ந்து, இப்படி ராத்திரியிலும் ஓடச் செய்யும் கொடுமையை ஆட்சேபிப்பதுபோல் ஓங்கிக் கனைத்த சத்தம் வெளியில் நிறைந்தது.
சாரட் சாரதி உடனே வண்டிக்குள் ஓரமாக வைத்திருந்த பிரப்பங்கூடைக்குள் இருந்து பசும்புல்லும் கொள்ளும் கொடுக்க, போடா மயிரு என்று அந்தக் குதிரைகள் அதைப் புறக்கணித்து இன்னொரு முறை கனைத்துவிட்டு, வாடை எழக் கழிந்து, நின்றபடியே உறங்க ஆரம்பித்தன.
குதிரைகள் என்று சொல்லி சிரித்தபடி, குதிரை லத்தியை மிதிக்காமல் தாண்டிக் குதித்து, பைத்யநாத் வைத்தியர் மருந்துப் பெட்டியோடு கவுட்டின்ஹோ மாளிகைக்குள் நுழைந்தபோது, ஓரமாக வைத்திருந்த பெரிய கடியாரம் டண்டண்டண என்று நிறுத்தாமல் அடிக்க, நெட்டுயிர்த்தபடி நடுராத்திரி என்றாள் சுபமங்களத்தம்மாள்.
வைத்தியர் முன் பிரபுவிடமிருந்து விலகி இருக்க அவள் முயன்றாள். பிரபு நீங்குகிற வழியாக இல்லை. போர்த்திய துணியை வைத்தியர் எடுக்க, கவ்டின்ஹோவின் விரல்கள் உடுப்போடு சேர்த்து சுபமங்களத்தமாளின் அந்தரங்க பாகத்தை கெல்லி எடுப்பதுபோல் பிடித்திருந்தன.
Scientific Pursuit During Middle Ages
Ack history.com
மிளகு பெருநாவலில் இருந்து – The retired Science Teacher and the confectioner from the future
”இன்னும் கூடுதல் குருதிப் பசியோடு இந்தக் கொடியை முன்னேற்றினால் அது கொடுக்கும் மிளகு அளவு மிகும். எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது வளர்ந்து செழிக்க, கோழி, ஆட்டின் குட்டி, கன்றுக்குட்டி, எருமை என்று புலிக்கு இரை போடுகிறதுபோல் ஈய முற்பட்டால் மிளகிலேயே சிறந்ததாகி விடும் நம் பேய் மிளகு”. உபாத்தியாயர் பெருமையோடு சொன்னார்.
”விக்ஞான உபாத்தியாயரே, கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த மிளகுக்கொடியை இன்னும் உக்ரமாக்குவோம் வாரீர்” என்று காலையில் தொடங்கி மயில் துத்தம் சேர்த்து காய்ச்சியது பாதியில் கவனிக்கப்படாமல் போக, கஸாண்ட்ரா என்ற பேரழகி வந்தபின்னர் கவுட்டின்ஹோ வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் அவளது உடல் வாடை நுகர்ந்துகொண்டே பின்னால் போய்விட்டார்.
கஸாண்ட்ரா வந்தால் என்ன, எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா வந்தால் என்ன, கைவேலையை முடிக்காமல் பசு தர்மம் தலைதூக்க விட்டிருப்பது தவறன்றோ.
இப்போது இந்த கவுண்டின்ஹோ கஞ்சி குடிக்க ஆரம்பித்து விட்டார். தலையை கிழவியின் மாரிடத்தில் சாய்த்து வைத்து அவர் கொண்டாடும் சுகம் கொஞ்சநஞ்சம் இல்லை. கண் திறக்கவில்லை. உடல் இயங்கவில்லை. மற்றபடி அவர் கேட்கிறார், தொட்டால் உணர்கிறார், பசியும் தாகமும் தெரிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
விக்ஞான உபாத்தியாயர் வெளியே தப்பி ஓடுவதை ஏனோ அவர் விரும்பவில்லை போல. வீடு முழுக்க அங்கும் இங்கும் மறுபடி பேய் மிளகு மண்ட ஆரம்பித்து விட்டது.
உபாத்தியாயர் மறுபடி உள்ளே போய் வரவேற்பறை நாற்காலியில் வேண்டா வெறுப்பாக அமர்ந்தார். ஐயா என்று சத்தம் கேட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தார். இனிப்பு அங்காடியில் அவற்றைக் கிண்டிக் கிளறி உருவாக்கும் கிழட்டு மடையன் உள்ளே படியேறி வந்து கொண்டிருந்தான்.
இவன் என்ன இழவுக்கு இங்கே வருகிறான்?
அவன் மேல்படியில் நின்று விக்ஞான உபாத்தியாயரை நோக்கி இருகரம் குவித்து வணங்கினான்.
“ஐயா நீங்கள் அறிவியல் மேதையான ஒரு கேரளபூமித் தமிழர் என்று சற்று நேரம் முன்னால் தான் இங்கே குசினிப் பணி நோக்கும் மனுஷன் சொல்ல அறிந்தேன். ரொம்ப சந்தோஷம். அவன் தான் சொன்னான் நீங்கள் இங்கே இருப்பதாக.”.
விக்ஞான உபாத்தியாயர் பெண்டாட்டியோடு சண்டை போட்டு வாசலுக்குத் துரத்தப்பட்டவர் போல் கடுகடுவென்ற முகத்தோடு உட்கார்ந்திருந்தார். என்ன விஷயமாக வந்திருக்கீர் என்று வந்தவனை விசாரித்தார்.
”அது வேறொண்ணுமில்லை, நீங்களும் இவ்விடத்து பிரபுவும் உன்னதமான விக்ஞான மேம்பாட்டுக்காக தாவரவியலில் முக்கியமான முன்னெடுப்பை எடுத்து வைக்கும் விதத்தில் மிளகுக் கொடியை அதிவினோத, அதிநவீனத் தாவரமாக்கியுள்ளீர்களெனக் கேள்விப்பட்டேன். சந்தோஷம். நிரம்ப சந்தோஷம்”.
”நிறைய சந்தோஷப்பட்டு விட்டீர் போய் வரலாமே” என்று விக்ஞானி அவரைப் பார்த்துக் கைகூப்ப, மடையர் சொன்னது இந்த மாதிரி இருந்தது – ”தாவரவியல், வேதியியலில் எனக்கும் அக்கறை உண்டு. நானும் இங்கே ஆய்வுகளில் பங்கெடுத்துக் கொள்ளலாமா? அதுவும் காலம் என்ற இன்னொரு பரிமாணம் பற்றி ஆய்வு செய்ய எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு”.
உம் பெயர் என்ன? விக்ஞானி அமைதியாகக் கேட்டார் வந்தவனை.
”பரமன் என்பார்கள். பரமேஸ்வர அய்யன் என்பது முழுப்பெயர். அப்புறம் ஒன்று. நான் உங்கள் காலத்து மனுஷன் இல்லை. இது பதினேழாம் நூற்றாண்டு தானே, நான் வந்தது இருபதாம் நூற்றாண்டில் இருந்து”.
”அய்யா, பெரியவர் மூர்ச்சித்துக் கிடக்கிறார். நீர் ஏதோ கெக்கெபிக்கெ என்று காலம், இருபதாம் நூற்றாண்டு என்பதுபோல உளறிக் கொண்டிருக்கிறீர். எழுந்து போம்” என்றார் விக்ஞானி கோபத்தோடு.
“நம்புங்கள், நான் விமானத்தில் தில்லியில் இருந்து பம்பாய் பறந்தபோது நாக்பூரில் விமானத்தைத் தவறவிட்டு இந்த இடத்துக்கும் காலத்துக்கும் வந்துவிட்டேன். உம் போன்ற அறிவியல் மூப்பர் வழிகாட்டினால் என் காலத்துக்குத் திரும்பி விட முடியும். தயவு செய்து உதவுங்கள்” என்றார் நெஞ்சுருக.
விக்ஞானியோ அவசரமாக வீட்டுக்கு உள்ளே வந்து கதவடைக்கும்போது அந்த மடையரின் கண்களைப் பார்த்தார். அவை பொய் சொல்வதாகத் தெரியவில்லை. மடையர் நின்று பார்த்துவிட்டுத் திரும்பப் போகும்போது அவர் குப்பாயத்தில் ஒரு சிறு கொழுந்தும் நான்கைந்து இலைகளுமாக பேய் மிளகு படர்ந்தேறி இருப்பதைக் கண்டார் விக்ஞான உபாத்தியாயர்.
ஓய் ஓய் ஓய்
வந்தவரைப் பின்னால் இருந்து கூப்பிட்டது கனவில் நடப்பது போல் மிகுந்த பிரயத்தனத்தின்பேரில், சத்தமே கூட்டாமல் வந்தது. அவர் கூப்பிடுவதற்குள் பரமன் படியிறங்கியாகி விட்டது.
”ஓய் மடையரே, குப்பாயத்தில் நுழைந்த மிளகுவள்ளியை எடுத்துத் தூர எரியும்”.
“நான் எடுத்துப் போகவில்லை. அதுவாகவே உள்ளே நுழைந்துவிட்டது. மன்னிக்கவும். அடுத்தவர் சொத்துக்கு நான் ஆசைப்பட மாட்டேன்”.
பரமன் தன் குப்பாயத்தில் இருந்து கல், மண், செடி, கொடி என்று தானாகவே வந்தது, அவர் எடுத்து உள்ளே போட்டது, எல்லாம் அகற்றிவிட்டு நடந்தார்.
A Middle Ages get together
October 19, 2021
மிளகு – Lord Coutinho regains consciousness – from a longish, interesting chapter
சுபமங்களத்தம்மாள் கஞ்சியோடு வந்து கட்டில் முனையில் உட்கார்ந்து, கவுட்டிங்ஹோவை தோளில் சாய்த்துக்கொண்டு உபாத்தியாயரைப் பார்த்துப் புன்சிரித்தாள்.
“இவர் அடிக்கடி இப்படி நினைவு இல்லாம போயிடுவார். ஆனா இன்னிக்கு பகல்லேயே போய் தரையிலே விழுந்து கிடந்தார். வாங்க வாத்தியாரே, நீங்க அந்தத் தோளைப் பிடிச்சுட்டு, அவர் தோளை சொன்னேன், கட்டிலுக்கு பின்னாலே நில்லுங்க. இன்னும் பத்து நிமிஷத்துலே கஞ்சி குடிச்சுடுவார்” என்றாள் சாதாரணமான தொனியில் சுபமங்களத்தம்மாள்.
”அது என்னமோ செய்யலாம் தான். ஆனால் மயக்கம் தெளியாவிட்டால்?”
விக்ஞான உபாத்தியாயரின் மனைவி அவருக்காக இந்த ராத்திரிக்கு மீன் பொரித்து வைத்திருக்கிறாள். ஏரி மீன் என்று சாயந்திரம் லாந்திவிட்டு வர, என்றால் உலவிவிட்டு வரக் கிளம்பியபோதே சொன்னாள்.
பிரபு சின்ஹோரையும், அவரை அணைத்து பிடித்து நொய்க்கஞ்சி ஊட்டும் கிழவியையும் பார்த்துக் கொண்டிருப்பது தவிர அவருக்கு வேலை இல்லாமல் அஸ்தமித்து விட்டதா என்ன? அவர் சொல்லிக்கொண்டு கிளம்புவார். நான் காலையிலே வர்றேன் என்றோ சாயாந்திரம் வர்றேன் என்றோ சொல்லிவிட்டுக் கிளம்பலாம்தான். காலையில் அவர் நடப்பது ரதவீதிப் பக்கம். சாயந்திரம் மாதாகோவில் பக்கம். பாதையை மாற்றினால் காலை வயிறு சுத்தப்படாது. என்றாலும் சொல்லி விடலாம்.
அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சுபமங்களத்தம்மாளிடம் பேச முற்படும்போது கர்ர்ர் என்று சின்ஹர் கவுட்டின்ஹோ வாய்க்குள் போன கஞ்சி வெளியே வந்து கொண்டிருந்தது. இது ஏதோ தகராறு என்று உபாத்தியாயருக்குப் புரிந்தது. இப்போது வீட்டுக்குப் போவது எப்படி?
வாசலில் சத்தம். சாரட் ஓட்டிகள் இருவரும், தோட்டக்காரனும், உள்ளே குசினியில் உதவி செய்யும் பய்யனும் எல்லாம் அவசரமாக வந்து கொண்டிருந்தார்கள். குசினிப் பய்யன் எதற்கென்று தெரியாமல் விசும்பி அழுதபடி வந்து கொண்டிருந்தான்.
அவன் சொன்னான் – போனவாரம் எனக்கு இருமல் அதிகமாக இருந்தபோது இங்கே ராத்திரி தங்கச் சொல்லி ஏதோ மருந்தை அழுத்தி தடவினார் கவுட்டின்ஹோ பிரபு. இருமல் ஓடியே போச்சு.
சுபமங்களத்தம்மாள் கட்டிலில் உட்கார்ந்து, கண்மூடி இருக்கும் எஜமானரை தோளில் சாய்த்து கஞ்சி ஊட்டுவது அவர்களை ஆகர்ஷித்தது இத்தனை அத்தனை இல்லை என்று தோன்ற வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
”கூத்து பார்க்க போயிட்டிருக்கோம். இங்கே என்ன ஆச்சு விளக்கே எரியலியேன்னு பார்க்க வந்தோம் ஒண்ணும் இல்லையே” என்று தோட்டக்காரன் விசாரிக்க, பக்கத்தில் நின்ற விக்ஞான உபாத்தியாயர் அவர்களைப் பதட்டத்தோடு பார்த்து ”ஏம்ப்பா சின்ஹோர் கண்ணு திறக்காம இருக்கார் அது உங்க கண்ணுலே படவில்லையா?” என்று குற்றம் சாற்றும் தொனியில் கேட்டார்.
“முகத்துலே சாராயம் தெளிக்கலாமுங்க வாத்தியார் ஐயா” என்றான் குசினி உதவிப் பையன்.
‘சாராயம் தெளிச்சா மூச்சு முட்டும் அதற்கு அப்புறம் என்ன ஆகுமோ தெரியலே வேண்டாம்” என்றாள் சுபமங்களத்தம்மாள்.
”அப்போ வெறும் தண்ணி தெளிக்கலாமே” என்று உபாத்தியாயர் யோசனை சொன்னார்.
“அவருக்கு தண்ணி முகத்திலே சட்டுனு தெளிச்சா முகம் வீங்கிப் போய் ஒரு மணி நேரமாவது ஆகும் திரும்ப சரியாக வர்றதுக்கு” என்று சுபமங்களா திரும்பச் சொன்னாள்.
“ஆபத்துக்கு தோஷமில்லே. பிரக்ஞை திரும்பறது தான் இப்போது முக்கியம். தண்ணி, சாராயம், வென்னீர், பன்னீர் ஏதாவது எடுத்து வாங்க” என்றார் உபாத்தியாயர்.
காலையில் மயில் துத்தமும், ஒரு துளி ராஜதிராவகமும், கொஞ்சம் போல் பெர்மாங்கனேட் சாயநீரும், இன்னும் புகை விடும் இத்தனூண்டு கந்தகமும் சேர்த்துக் காய்ச்சிய நிறமற்ற அந்தக் கூழ் காலிலோ பேய் மிளகுக் கொடியிலோ பட்டால் நம்ப முடியாத விளைவுகள் ஏற்படுவதை நாளை ஆராய்ச்சி முடிவாக எழுதி சின்ஹோர் மூலம் லிஸ்பன் விக்ஞான பேரவைக்கு அனுப்ப நிச்சயம் செய்து கொண்டார் விக்ஞான உபாத்தியாயர்.
அவர்களுக்கு மிளகு பற்றித் தனியான ஆர்வம் எதுவும் இல்லை. நிற்காத யந்திரம், புவியீர்ப்பு விசையைக் கடந்து போவது, காலத்தில் பயணம் செய்வது போன்ற தலைப்புகளில் ஆராய்ச்சியும், சொற்பொழிவும் பேரவைக்குப் பிடித்தவை மட்டுமில்லை. வருமானம் கொண்டு வருகிறவை.
லிஸ்பன் நகரப் பணம் படைத்த தனவந்தர்கள், விக்ஞானத்தில் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல், ஏதோ இந்த சொற்பொழிவுகள் அறிவு சேர்வதற்கு வழி செய்பவை என்று நினைத்து, அங்கனமே பறைசாற்றிக்கொண்டு, கட்டணம் கொடுத்து சொற்பொழிவுக்கு வந்து அங்கே கண்மூடி உறங்குவதெல்லாம் உபாத்தியாயருக்குத் தெரியும்.
அதெல்லாம் எக்கேடும் கெட்டுப் போகட்டும். விக்ஞான உபாத்தியாயர் வீடு போய், மீன் கறியோடு சோறு உண்டு நிம்மதியாக உறங்கப் போகவேண்டும். இந்த உச்சைக் கிறுக்கன் கண் விழித்து மிளகுக் கஷாயம் கேட்டால் என்ன, கண் மூடியே பரலோகம் போனால் என்ன?
அவர் நேரே சுபமங்களத்தம்மாளிடம் போய் ’வீட்டில் கட்டியோள் ஆரோக்யம் நலிந்து குருதரமாக இருப்பதால் நான் போய் நாளைக் காலை திரும்புகிறேன்’ என்று வாசலுக்கு வேகமாக நடந்தார். அவர் அதை மீறிப் போக முடியாமல் அவர் காலையும் பேய் மிளகுக் கொடி கட்டியது.
pic ack nytimes.com
October 18, 2021
பெருநாவல் மிளகு – Lord Coutinho and his sagacious housekeeper
excerpts from the mega novel MILAGU
”பிரபு, வாசலில் விளக்கில்லேயே. உள்ளே மும்முரமாக வாசித்துக் கொண்டிருக்கிறீரா”?
உபாத்தியாயர் உள்ளே நுழையும்போது அழைத்தபடி வந்தார். கீழே தரையில் கிடந்த ஏதோ அவர் காலில் தட்ட சுவரில் கையை வைத்து விழாமல் நின்று கொண்டார்.
சின்ஹோர் சின்ஹோர் என்று இரண்டு தடவை கூப்பிட கீழே இருந்து ஏதோ மிளகு வாசனையோடு அவர் காலில் ஏறத் தொடங்கியது. அவர் கைகளை மிகையாக அசைத்துக்கொண்டு வாசலுக்குத் திரும்ப ஓட, காலையிலேயே சகோதரி வீட்டுக்குப் போயிருந்த சுபமங்களத்தம்மாள் விரைவாக வீட்டுக்குள் நுழைந்து, ’பிரபு காலமாகிவிட்டாரா?’ என்று தான் இழக்க இருக்கும் சுகங்களை நினைத்து வருந்தியோ என்னமோ அழ ஆரம்பித்தார்.
”அம்மே, பிரபு சுகம்” என்றபடி உபாத்தியாயர் நின்ற இடத்திலேயே நிற்க அவரைச் சுற்றிப் படர்ந்து ஏறும் பேய் மிளகைக் கண்டு மிரண்டு வார்த்தையின்றி நின்றாள் சுபமங்களத்தம்மாள்.
உபாத்தியாயர் காலில் படர்ந்து பந்தலித்த மிளகுக்கொடி சுபமங்களத்தம்மாள் காலில் ஏற முனைந்து அவள் கிறீச்சிடவோ என்னவோ, ,அவளைத் தவிர்த்து கீழே இறங்கி, தரையில் கிடந்த பிரபுவின் கழுத்தை நோக்கித் திரும்பி விட்டது.
விக்ஞான உபாத்தியாயர் இதுவரை செய்யத் தவறிய காரியத்தை உடனே செய்தாள் சுபமங்களத்தம்மாள். ”ஓடி வாங்க ஐயயோ ஓடி வாங்க” என்று உச்சக் குரலில் சத்தம் போட்டாள் அவள்.
உபாத்தியாயருக்கு, தனக்கு ஏன் இது தோன்றவில்லை என்று மனதில் பட, அவளுடைய பன்மொழிப் புலமை காரணமாக இந்தத் திறமை வந்திருக்கலாம் என்று நினைப்போடு நிற்க, அண்டை அயல், தெருவில் போனவர்கள் என்று ஏழெட்டு பேர் வீட்டுக்குள் ஓடி வந்து விட்டார்கள்.
பத்தே நிமிஷத்தில் கவுடின்ஹோ பிரபு அவர் படுக்கையில் கிடத்தப்பட்டார் தரையில் கிடந்த மிளகுக்கொடி பலவான்களாக நின்று கொண்டிருந்த இருவரால் அகற்றப்பட்டது. அவர்கள் போனபோது வரவேற்பு அறை மேசையில் இருந்த இரண்டு போர்த்துகீஸ் செப்பு மதுக் குவளைகளும் அகற்றப்பட்டிருந்தன.
சுபமங்களாம்மாள் விக்ஞான உபாத்தியாயர் கையைப் பற்றி பயப்படக் கூடாது என்று தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள். உபாத்தியாயருக்கு அது ரொம்ப பிடிக்கவே அசங்காமல் அங்கே நின்று கட்டிலில் இன்னும் பிரக்ஞை திரும்பாமல் கிடக்கும் கவுட்டின்ஹோவைப் பார்த்தபடி இருந்தார்.
விலகுங்க நான் சின்ஹோருக்கு அரிசி நொய் கஞ்சி செய்து எடுத்து வரேன் என்று விலகிக் கொண்டாள் சுபமங்களத்தம்மால். நெய் வேணாம் சீரணம் ஆகக் கஷ்டப்படுவார் என்று உபாத்தியாயர் சுட்டிக் காட்டினார்.
அம்மாள் சொன்னாள் – நெய் இல்லே வாத்தியாரே, நொய், அரிசியை மாவாக அரைக்காமல் அது அரைகுறை திரிகையிலே அடிபட்டதுமே எடுத்து அதுலே கஞ்சி காச்சறது.
அந்த நொய் சமாசாரத்தை உண்டு பார்க்கவேண்டும் என்று உபாத்தியாயருக்குத் தோன்றியது. இன்னொருத்தர் வீட்டில் போய் எனக்கு நொய்க்கஞ்சி குடிக்கக் கொடு என்று கேட்கலாமா? அதுவும் வீட்டு எஜமானர் நினைவு தப்பிக் கிடக்கும்போது.
pic Science pursuit in middle ages
ack uppen.edu
October 17, 2021
பெருநாவல் மிளகு – Lord Coutinho and the retired Science teacher engaged in botanical experiments
கஸாண்ட்ரா முகம் பார்த்து கவுட்டின்ஹோ பிரபு உன்மத்தம் கொண்டு அவளை கட்டிலுக்கு தூக்கிப் போக யத்தனம் செய்தது, அவர் தரையில் மயங்கிக் கிடப்பதிலும், கொதிக்க வைத்திருந்த தண்ணீர் சிந்தி பேய் மிளகு ராட்சசத்தனமாக வளர்ந்து பிரபு காலைச் சுற்றி வளர்ந்ததிலும் முடிந்தது. தற்போது அவர் இன்னும் தரையில் கிடந்து உறங்கியபடி, மிளகுக்கொடி சுற்றி, கர்ப்பத்தில் சிசு போல் பிரசவிக்கப்படக் காத்திருக்கிறார்.
விக்ஞான உபாத்தியாயரிடம் ஒரு நாள்பட்ட பழக்கம் உண்டு. காலையில் ஐந்து மணிக்கும் சாயந்திரம் ஐந்து மணிக்கும் நாலு கடைவீதி சுற்றி வீட்டுக்குப் போவது. மாலையில் அப்படிப் போகும்போது கடைக்காரர்கள் அவருக்கு தினசரி ஒரு கொட்டைப் பாக்கும், அரை வெற்றிலைக் கவுளியும் காணிக்கையாகத் தருவதுண்டு. அவரிடம் சிறப்பாகப் படித்து முன்னுக்கு வந்த பிரகாசமான மாணவர்கள் மண்டிக்கடையில் கைமேஜை போட்டுக் கணக்கு எழுதும்போது வாத்தியார் சம்பாவனை என்று ஒரு வராகன் செலவுக் கணக்கு எழுத, அதை ஏற்று அனுமதிப்பார்கள் கடை அதிபர்கள். இவர்கள் பெரும்பாலும் விக்ஞான உபாத்தியாயரின் கடைந்தெடுத்த அடிமுட்டாள் பழைய மாணவர்களாக இருப்பது சகஜம்.
ஒரு மனுஷன் வெற்றிலையையும் பாக்கையும் பட்சணம் பண்ணி பசியாற முடியாது என்பதால் தினசரி வரும் சம்பாவனையில் முக்கால் பாகத்துக்கும் மேல் விக்ஞான உபாத்தியாயர் பெண்டாட்டி வீட்டு வாசலில் கூறு கட்டி விற்பது வழக்கம். அந்தப் பணம் மீன் வாங்கவோ கருவாடு வாங்கவோ தினசரி பிரயோஜனப்படுவது வாடிக்கை.
உபாத்தியாயர் சாயந்திர உலா அப்படிப் போகும்போது மாலையில் மட்டும் கவுட்டின்ஹோ பிரபு மாளிகையில் படியேறி அரை மணி அவரோடு சல்லாபம் செய்துவிட்டு, என்றால், இலக்கியம், விக்ஞானம் பற்றி எல்லாம் உரையாடிவிட்டு வீடு திரும்புவது அவ்வபோது நிகழும்.
அவர் பிரபுவோடு ஆராய்ச்சி செய்வது வாரம் மூன்று தடவையாவது காலை எட்டில் இருந்து பகல் இரண்டு வரை இருப்பதால் சாயந்திரம் வெட்டிப் பேச்சு அதற்குக் குந்தகம் விளைவிக்காமல் போகும்.
அபூர்வமான தினங்களில் பகல் ரெண்டுக்கு மேல் ஆராய்ச்சி நீளும்போது பிரபு மாளிகையிலேயே மாளிகை நிர்வாகி சுபமங்களத்தம்மாள், தாரா முட்டை அல்லது வான்கோழி முட்டை உடைத்து உப்பிட்டுவோடு சேர்த்துக் கிண்டி. புளிக்காடியோடு உபாத்தியாயருக்குத்தர மடையருக்கு ஆக்ஞை பிறப்பிப்பார்.
சுபமங்களத்தம்மாளுக்கு கொங்கணி, கன்னடம், தமிழ், தெலுகு, போர்த்துகீஸ், இங்க்லீஷ் என்று ஊர்ப்பட்ட பாஷை அத்துப்படி. என்றாலும் அவரிடம் போய்ப் பேச பிரபுவோ மற்றவர்களோ முற்படுவது அபூர்வம்.
அறுபத்து மூன்று வயது அம்மாளோடு போர்த்துகீசிய இலக்கியத்தில் காதல் பற்றி ஐந்து நிமிடம் பேசிவிட்டுப் போக யார் உத்தேசிப்பார்கள்?
விக்ஞான உபாத்தியாயருக்கு அம்மாளின் கருப்படித்த பற்கள் பார்க்க அவ்வளவாக, அவ்வளவாக என்ன, முழுக்கவே பிடிக்காது. முட்டை கொண்டு வரும் போது அவளுடைய அக்குளில் கற்றாழை வாடை லோகம் முழுவதும் அடிப்பதும், சுபமங்களம் அம்மாளின் வாய் வாசனையும் எட்டு ஊர் தாண்டி விரட்டும். என்ன செய்வது, கவுட்டன்ஹோவின் மனைவி, காலம் சென்ற விக்டோரியா கவுட்டன்ஹோவுக்கு ஏதோ தூரத்து சொந்தம்.
சாவுப் படுக்கையில் சித்தம் கலங்கிப்போய் அவள் கவுட்டின்ஹோ பிரபுவிடம் சொல்ல நினைத்தது – நான் போனபின் சுபமங்களத்தைக் கல்யாணம் செய்து கொண்டு, வீரையனை வீட்டு நிர்வாகி ஆக்க வேண்டியது. அவள் சொன்னதோ, நான் போனபின் சுபமங்களத்தை வீட்டு நிர்வாகி ஆக்கி, வீரையனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

