இரா. முருகன்'s Blog, page 63

November 25, 2021

பெரு நாவல் ‘மிளகு’ -an attempt on the life of Pepper Queen Chenna as she was hosting an all women party

Excerpt from my forthcoming novel MILAGU

அடுத்து யார்? காசிரை கேட்க, மகாராணி கையமர்த்தி முதலில் பலகாரம் அப்புறம் ஆட்ட பாட்டம் அதற்கு அப்புறம் கலந்துரையாடல்.  பகல் பனிரெண்டு மணி வரை இதற்கான நேரம் ஒதுக்கியிருக்கிறேன் என்று பெரும் கரகோஷத்துக்கு இடையே கூறினாள்.

அடுத்த  மணி நேரம் அந்தப் பெண்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி என்ன பலகாரம் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று, சங்கோஜம் இல்லாமல் கேட்டு வாங்கி, அவசரப்படுத்தி விழுங்க வைக்க யாரும் இல்லாமல் நிதானமாகச் சாப்பிட்டார்கள்.

வீட்டில் குழந்தைகளை விட்டு வந்தவர்கள் தித்திப்புப் பலகாரங்களான லட்டுருண்டை, பாதுஷா ஆகியவற்றை இலைக்கு வெளியே குழந்தைகளுக்குக் கொண்டுபோய்க் கொடுக்க எடுத்து வைத்துக் கொண்டதைப் பார்த்து சென்னாதேவி, வீட்டுக்கு எடுத்துப்போக தனியாக  பலகாரங்கள் தரப்படும். இதெல்லாம் இங்கேயே நீங்கள் சாப்பிட என்று அவர்களிடம் தெரிவித்தாள்.

யாரும் எதையும் வீணாக்காமல் தேவையானதைக் கேட்டு வாங்கி சந்தோஷமாக உண்டு அந்த விருந்து நடந்தது.

கலந்துரையாடலைத் தொடரலாம் என்று காசிரையும், மிங்குவும் மகாராணியிடம் சொல்ல, எல்லோரும் என்ன சொல்றாங்களோ அப்படி செய்யலாம் என்றாள் அவள்.

அந்தப் பெண்கள் அனைவருக்கும் ராணியோடு சந்தித்துப் பேசுவதோடு, பிக்கல் பிடுங்கல் இல்லாமல் விருப்பப்படி உண்டு, பேசி, ஆடி இருக்க சந்தர்ப்பம் இது என்பதும் சந்தோஷமான விஷயம். அவர்கள் எல்லோரும் அடுத்து ஆட ஆசைப்பட்டார்கள். கலந்துரையாடல் அப்புறம் தொடரலாம் என்று முடிவானது. பேச வேண்டியதை எல்லாம் பேசியாச்சே என்றாள் ஒருத்தி.

கூட்டமாக ஆடப் பிரியப்பட்டார்கள். கேரள பூமியில் சுற்றி நின்று ஆடியபடி நகரும் கைகொட்டிக்களியாக ’கொட்டும் ஞான் கேட்டில்லா’ என்று மலையாளியான ஒரு பெண் பதம் பாட, சுவடு வைத்து ஆடினார்கள். சென்னா ஒரு நிமிடம் எழுந்து நின்று கைதட்டி, ஆடாமல் நின்று களித்தாள்.

ஆட்டத்தின் சுவடுவைப்பு வேகம் அதிகமாகிக் கொண்டே போனது. ஆடாமல் ஓரமாக நின்றவர்களையும் ஆடத் தூண்டுவதாக, கூச்சத்தோடு ஒரு காலடி எடுத்து, கடலில் கால் வைத்து இறங்கி அலை கண்டு திரும்ப காலடி பின்னால் வைப்பதுபோல் ஆட ஆர்வம் ஆனால் பயம் என்று திரும்புகிறவர்களையும் மறுபடி ஆடப் போகச் சொல்வதாக, வேகமான அதிர்வுகளோடும் எளிய அபிநயங்களோடும் ஆட்டமும் பாடலும் நகர்ந்து கொண்டிருந்தன.

கைகொட்டி எழும் தாளங்களோடு ஆடி அலைந்து, நேரே அசைந்து, வலம்போய் திரும்பி, இடம் வந்து பின்வாங்கி, நின்று, அசைந்து, குதித்து, கால் பரப்பி, பாதம் ஒடுக்கி, கைகள் மேலோங்கித் தட்டி, கீழே இறங்கி, தாமரை மலர்வதுபோல் மெல்ல அதிர்ந்து மீண்டும் எழ, கொங்கைகள் குதித்துக் கும்மாளமிட்டு அதிர, ஒரு ராட்சச இயக்கமாகக் கூட்டுச் சேர்ந்து எல்லோரும் பாடி எல்லோரும் ஆடினார்கள்.

விருந்துக்கு வந்த, வெளிர்நீலக் கரை பிடவை அணிந்த மெலிந்த நடுவயது ஸ்திரி ஆடியபடியே கண் மூடி அனுபவித்து சென்னா மகாராணி மேல் மோதுகிறவள் போல் ஆட்ட வேகத்தில் நகர, மிங்கு அவளை மெல்ல இடது புறம் அசைந்தாடியபடியே அகற்ற, காசிரை அவளை நேரே மற்ற ஆட்டக்காரிகளோடு சேர்த்துவிட்டு ஆடினாள். சிவந்த அதரங்ககள் சற்றே பிரிந்து பூடகமாகப் புன்சிரிக்க, அவள் காசிரையைப் பார்த்த பார்வையை அகற்றினாள். ஒரு வினாடி நேரத்தில் அது நிகழ்ந்தது.

வெளிர்நீலக் கரை பிடவை உடுத்த மெலிந்த நடுவயது ஸ்திரி தன் கச்சில் கைவிட்டு   முலைகளுக்கு மத்தியிலிருந்து ஒரு குறுவாளை எடுத்து மின்னல் போல் சென்னாராணியை நோக்கி பாய்ந்து வந்தாள்.

pic  Dance in the middle ages in Europe

ack indianexpress.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2021 05:10

November 23, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – loud thinking about kitchen cabinet

எல்லாரும் கேட்கற கேள்வியா எதுவும் நான் கேட்கப் போறதில்லே. நான் கேட்க நினைச்சது இதுதான். நீங்க எங்க எல்லார் மாதிரியும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு ஆகி, ராணியாகவும் இருந்தால் இப்போ ராஜாங்கம் நடத்தற மாதிரி தான் செய்வீங்களா இல்லே அது வேறு விதமா இருக்குமா?

ஒரு வினாடி அமைதி.

வேறு விதம்னா, அரண்மனை சமையல்கட்டுலே வாழைக்காய் புளிங்கறி பண்ணிக்கிட்டு சபைக்கு கரண்டியோட ஓடி வந்து, ’மிளகு விக்கற விலையை படிக்கு காலே அரைக்கால் வராகன் கூட்டி உத்தரவு போடறேன். போர்த்துகல்லே இருந்து வரவேண்டிய நிலுவை தொகையை இது பாதிக்குமா? கொஞ்சம் இருங்க. கடுகு தாளிச்சு கொட்டினது கரிஞ்சு  வருது. வாடையடிக்கறதே தெரியலியா? புளிங்கறி பண்ணி முடிச்சுட்டு வந்துடறேன். சமத்தா இந்த விஷயத்தை சர்ச்சை பண்ணுங்க’ன்னு மறுபடி சமையலறைக்கு ஓடி. இப்படி நிர்வாகமும் சமையலும் மாறிமாறிச் செய்வேனோ என்னமோ.

சென்னா அதைச் சொன்ன விதத்தை எல்லோரும் ரசித்தார்கள். சமையல் அறைக்குள் நுழைந்திருக்காவிட்டாலும் மிளகு ராணிக்குச் சமையலும் கைகண்ட விஷயம் தான் என்பதை அவள் பதில்   உணர்த்தியது.

மிளகு ராணி குசினி ராணியாகவும் இருக்கணுமா?

ஹொன்னாவர் கருமானின் மனைவி துடுக்கும் நட்பும் சிரிப்புமாகக் கேட்க, சென்னபைரதேவி மகாராணி சிரித்துவிட்டாள். எல்லோரையும் பார்த்து சொன்னாள் –

கல்யாணம் செஞ்சுட்டிருந்தா இப்ப இருக்கற சூழ்நிலை நிச்சயமாக மாறி இருக்க வாய்ப்பு இருக்கு. ஒரு கல்யாணமாகாத பெண் உலகத்தைப் பார்க்கறதுக்கும் கல்யாணமான பெண் பார்க்கறதுக்கும் வித்தியாசம் இருக்கும். கல்யாணமாகி குழந்தை குட்டி பெற்று அதுகளையும் கட்டியவனையும் பராமரித்துக்கொண்டு, அதோடு ராஜாங்க காரியங்களையும் கவனிக்கறது கஷ்டம் தான். ஒண்ணு வேணும்னா செய்திருப்பேன். சமையல்கட்டை பெரிசாக்கி சமைச்சுக்கிட்டே அரசியல் பேசி நிர்வாகம் பண்ணியிருப்பேன். சமையலும் பண்ணியிருப்பேன். அப்புறம் ஒண்ணு. எனக்கு சரியாக சமைக்க தெரியாது. ஆனால் கற்றுக்கொண்டிருப்பேன். நான் பதவிக்கு வந்தபோது வயது பதினாறு.   கொங்கணி மட்டும் பேச எழுதத் தெரியும்.  கன்னடம் எழுதத் தெரியாது. போர்த்துகீஸ் தெரியாது. மடில்டா சொல்லிக் கொடுத்தாள். அவள் என் அப்போதைய தாதி. எனக்கு உற்ற சிநேகிதி. அந்த சிநேகம் தான் காசிரையை இங்கே வரவழைச்சிருக்கு. காசிரையோட அம்மா   தான் மடில்டா.  என் தாதி.

காசிரை அடக்கமாகச் சிரித்தாள்.

ஜெருஸோப்பா சங்கு வளையல் வியாபாரி மகள் விலாசினி சொன்னாள் – குசினி அரசாங்கம் நல்லா இருக்கும். பிரதானி கத்தரிக்காய் அரிஞ்சு கொடுப்பார். தளபதி கொத்துமல்லி ஆய்ந்து ரசத்துலே போடுவார். உப பிரதானி புளிங்கறியிலே உப்பு போட்டிருக்கான்னு ஒரு துளி வாயில் போட்டுப் பார்த்து தீர்ப்பு சொல்லிட்டே, பசதி கட்ட ஆன செலவு இத்தனை இன்னிக்கு மிளகு வித்த காசிலே செலவழிச்சதுன்னு கணக்கு சொல்வார்.

சென்னா அந்தப் பெண்ணை சிரிப்பு விலகாமல் பார்த்துக் கேட்டாள் – நீ நம்பறியா, மிளகு விற்று வரும் பணம் முழுக்க கோவில் கட்ட, பசதி கட்ட செலவு செய்யறோம் அப்படின்னு?

நிச்சயம் இல்லேம்மா. விசாலம் சொன்னாள். நீங்க அம்மா பராசக்தி. வரவை எல்லாம் வச்சு கோவில் கட்டி, ’பசியோடு குழந்தைகளைத் தூக்கிண்டு வந்து கும்பிட்டுப் போ. போகிற வழிக்குப் புண்ணியம்’னு சொல்ல மாட்டீங்க. நீங்கன்னு இல்லை, எந்த பெண்ணும் கல்யாணம் ஆனாலென்ன ஆகலேன்னா என்ன அப்படி முடிவெடுக்க மாட்டோம்.

சென்னா சிரித்தபடி அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். பின் மெல்லச் சொன்னாள் –

எல்லா கோவில், பசதி கட்டறதுக்கும் பாதி செலவுக்கு மேலே செல்வந்தர்கள் கொடுத்த கொடையில் இருந்து எடுத்துக்கொள்ளப் படுகிறது.

அம்மா, வேறே மாதிரி இந்த கட்டடம் கட்டித்தர உதவி செய்யலாமா? கடலில் தினம் சென்று மீன்பிடித்து வரும் செம்படவர் கோரியின் மனைவி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட காத்தி கேட்டாள். ஐம்பது வயது இருக்கலாம். மீன் காயவைத்து காயவைத்து நகக் கண்ணிலும், கைவிரல்களைச் சுற்றியும் மீன்கள் என்ற உயிரினங்கள் அவளோடு உடலாறக் கலந்திருக்கின்றன என்பதை சென்னா மகாராணி அறிவாள்.

காத்தியம்மா, வேறே எப்படி உதவலாம்? காசிரை கேட்டாள். ஒரு வினாடி மௌனமாக இருந்து காத்தி சொன்னாள் –

கோவில், பசதின்னு சொன்னா, பசு நினைவு வருது. களஞ்சியத்தில் நெல்லும்,  படைக்க உபயோகப்படுத்தற பாத்திரங்களும், சில கோவில்களிலே படிப்படியாக பால், நெய், பழக்கூழ், வெண்ணெய், மணம் வீசும் சந்தனம், இளநீர் தேங்காய், தேங்காய் துருவி வரும் தேங்காய்ப்பூ இப்படி சாமான்யர்களில் இருந்து பணம் படைத்தவர்கள் வரை நேர்ந்து கொண்டும், வழக்கமாகத் தருவதுமான காணிக்கைகள், இதெல்லாம் கோவில் என்றால் நினைவு வரும். பசதி என்றாலும் கிட்டத்தட்ட இதெல்லாம் நினைவு வரும்.

நிச்சயமாக என்றாள் மிங்கூ. எல்லா வழிபாட்டு இடங்களிலும் இவற்றைக் காணிக்கை செலுத்த வழிமுறை உண்டே என்றாள் காசிரை. சென்னா அவர்கள் இரண்டு பேரையும் பொறுத்திரு என்று கை காட்டி, காத்தியைப் பார்த்தபடி இருந்தாள்.

என்னமோ சொல்ல ஆரம்பிச்சியே, அதை சொல்லு என்கிற முகபாவம். காத்தி கோவிலில் நிற்பதுபோல் எழுந்து கிழக்கு பார்த்து நின்று கைகுவித்துப் பாதிக்கண் மூடித் தோத்திரம் போல சொன்னாள் –

அத்தனை காணிக்கையையும் ஒரு துணுக்கு, ஒரு சொட்டு, ஒரு துளி வீணாகாமல் பயன்படுத்திக்கொண்டால் என்ன?

என்றால்? புருவம் உயர்த்திப் பார்வையால் கேட்டாள் சென்னா.

ஒரு நாளைக்கு பத்து படி பால் அபிசேகத்துக்கு வந்தால் அதில் ஒன்று அல்லது இரண்டு படியை அபிஷேகத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு பக்தரிடமிருந்து அபிசேகத்துக்கான பால் வாங்கும்போது அதில் பத்தில் ஒரு பங்கை வைத்து அபிஷேகம் செய்து மீதியைச் சேர்த்து வைக்கலாம். வைத்து? தினசரி என் மாதிரி ஏழைப் பெண்கள், கைக்குழந்தை உள்ள ஏழைப் பெண்கள் தினம் கோவிலுக்கோ பசதிக்கோ வந்தால் கிரமமாக ஆளுக்கு இரண்டு குவளையோ மேலுமோ சேர்ந்த பாலை பிரசாதமாக வழங்கலாம். அப்புறம் ஒண்ணு.

சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சென்னா.

வெறும் பாலை மட்டும் இல்லை. அரிசி மாவு, ராகி, கம்பு, பாசிப்பயறு, முந்திரி, வாதுமை, ஏலக்காய் இப்படி காணிக்கை வர்றதை சேர்த்து அரைச்சு சத்துமா ஆக்கி பால் விட்டுக் கரைச்சுத் தரலாம். காணிக்கையை பிரசாதமாக்கறது பாலுக்கு மட்டுமில்லை, தேன், பஞ்சாமிருதம், இளநீர், வாழைப்பழம், மாம்பழம் என்று சாப்பிடக்கூடியதான, தினசரி வந்து சேரும் எல்லா காணிக்கைக்கும் தான். கூடுதலாக வந்து சேரும் காணிக்கை எல்லாம் இப்போது எப்படி பிரயோஜனப்படுகிறதோ எனக்கு தெரியலீங்க. என்ன பண்ணலாம்னு யோசனை, கோரிக்கை அது மட்டும் என்னுது.

சென்னா காத்தியை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டாள்.

 

படம் போர்த்துகீஸ் உணவு

நன்றி விக்கிபீடியா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2021 17:46

November 22, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – In which Chenna Devi’s maid Mingu is stabbed while she saves the Queen

An excerpt from my forthcoming novel MILAGU

போஜனசாலையில் அவர்கள் குழுமியிருந்தார்கள்.

முன்னூறு பேர் இருந்து ஆகாரம் பண்ணும் அந்தப் பெரிய மண்டபத்தில் இவர்கள் முப்பது பேர் மட்டும் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே இரண்டடி இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். பேச்சும் சிரிப்பும் கலகலப்புமாக   இவர்கள் யாரோ வரக் காத்திருந்தார்கள்.

கோட்டை மடைப்பள்ளி ஊழியர்கள் இருவர் பெரிய குவளைகளில் மாம்பழச் சாறை  ஒவ்வொரு விருந்தாளி முன்னும் வைத்துப் போக, இரண்டு பக்க வரிசையிலும் கோடியில் இருந்த குவளைகளுக்கு முன் யாரும் இல்லை.

போஜனசாலை கதவுகள் திறக்க காசிரை என்ற கஸாண்ட்ரா ஒரு பக்கமும், மிங்கு என்ற செண்பகலட்சுமி இன்னொரு பக்கமும் தாங்கி நடத்தி வர சென்னபைரதேவி மிளகு ராணி மெல்ல அடியெடுத்து வைத்து இருகை கூப்பி வணங்கியபடி மண்டபத்துக்குள் பிரவேசித்தாள்.

அங்கே இருந்த முப்பது பேரும் ஒருசேர எழுந்து மகாராணியை வணங்கினார்கள். அத்தனையும் பெண்கள். பதினான்கு வயதில் இருந்து அறுபது வரையான பெண்கள். மிளகு மகாராணி சென்னபைரதேவியின் அழைப்பின் பேரில் இன்று மிர்ஜான் கோட்டையில் மகாராணியோடு சேர்ந்திருந்து காலை உணவு உண்டுபோக அழைக்கப்பட்டவர்கள். ஜெருஸோப்பா, ஹொன்னாவர், கோகர்ணம் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருப்பவர்கள்.

“அரசியலில் பங்கு பெறத்தான் நம் பெண்களுக்கு அனுமதி இல்லை. புரிந்து கொள்ளவாவது செய்யட்டுமே? அவர்களுக்கு தற்போதைய அரசியல் நிகழ்வுகள் பற்றிச் சரியான பார்வையைக் கொடுத்தால் அவர்கள் வீடு போய் அவர்களின் கணவன், தந்தை, மாமன், சகோதரன் என்று சகலரிடமும் நன்மை விதைத்து வருவார்கள்.” சென்னபைரதேவி சொன்னபோது  பிரதானிகள் அனைரும் வியப்போடு பார்த்தார்கள். உடனே  நடக்கட்டுமென்றாள் ராணி.

இத்தனை பேரை மிர்ஜான் கோட்டைக்குள் அனுமதித்தால் அரசியாரின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தாதா அது என்று அடுத்த கேள்வி. என் பாதுகாப்பு தானே, நான் கவனித்துக் கொள்கிறேன் என்றாள் பிடிவாதமாக.

மகாராணியவர்களின் யோசனைப்படி ஜனத்தொகை பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து, அழைப்பு அனுப்பி, வரப் போக வாகனம் ஏற்பாடு செய்து, விருந்தை ஏற்பாடு செய்து அனைத்தையும் ஒருங்கிணைத்தவர்கள் தோழிகளான மிங்குவும், காசிரை என்ற கஸாண்ட்ராவும்.

காசிரை மகாராணியை வணங்கி, ”அம்மா, நீங்க தீன்மேசை, நாற்காலி போட்டு  இருக்கலாமே. உடல்நலம் அனுமதிக்குமா சம்மணம் கொட்டி உட்கார்ந்திருப்பதை” என்று கேட்டாள்.

”நானே சமணத்தி தான். சமணத்தைத் தனியாகக் கொட்டணுமா? என்ன காசிரை?”. மகாராணி காசிரையை நோக்கிப் புன்சிரித்துச் சொன்னாள்.

அவளையும்  மிங்குவையும் மகாராணியையும் தவிர மற்றவர்களுக்கு காசிரை எப்படி அரண்மனை விருந்தில் இப்படி அரசியாரின் சிறப்பு கவனிப்போடும் சகஜமான பிரியத்தோடும் புழங்கி வருகிறாள் என்று தெரியவில்லைதான். தெரிந்து என்ன ஆகவேண்டியிருக்கிறது யாருக்கும்?

ராணி அவர்களிடம் சொன்னாள் –

”தரையில் அமர்ந்து வெகுநாள் ஆகிவிட்டது. தரையில் படுத்து உறங்கியும் வருடங்கள் பலவுமானது. கோட்டை மண்ணிலும், ஆற்றங்கரை மணலிலும், கல் பாளத்திலும், நிற்கவும், கிடக்கவும், நடக்கவும் நம்மை பூமி ஈர்க்கும். பூமித்தாயம்மாள் அன்னையின் வாஞ்சையோடு இழுத்துப் பிடித்து அணைத்துக் கொள்ளும் விசையாக புவி ஈர்ப்பு விசையை  எப்போதும் நம்மேல் பிரயோகிப்பாள். நாம்தான் அதைப் புரிந்து கொள்வதில்லை”.

மிங்கு மேல் மகாராணியின் பார்வை விழுந்தது.

”அடி மிங்கூ, நீ இன்னும் உட்காரவில்லை என்றால் என் தலையணையையும், உட்காரும் மனைப் பலகையையும் ஓடிப் போய் எடுத்து வாடி. ஓடு பெண்ணே”.

மிங்கூ மெய்யாலுமே ஓட, அத்தனை பெண்களும் சிரித்துக் கரம்கொட்டினார்கள். அவள் திரும்பி வரும்போது அந்த இடம் வழக்கமான பெண்கள் கூட்டமாக,  ஒரே நேரத்தில் பல பேச்சுகள் சேர்ந்து ஒலிக்க, சிரிப்பு தொடர்ந்து முழங்க ஜீவனோடு இயங்க ஆரம்பித்தது.

ராணியம்மாள் உட்கார மனையைப் போட்டுச் சுவரோடு தலையணையை சார்த்தி வைத்த மிங்குவிடம் ஜோசியர் பெண்டாட்டி விசாலம் கேட்டாள் – ”ராணியம்மா கிட்டே பேசணும்னு ரொம்ப ஆசை மிங்கு. பேசலாமா?”

”அதுக்குத்தானே கூப்பிட்டனுப்பி இருக்கு?” என்றாள் மிங்கு  ராணியம்மாளையும் விசாலத்தையும் மாறி மாறிப் பார்த்தபடி.

”மகாராணியம்மா, உங்களை எப்படி தகுந்த மரியாதையோடு அழைக்கணும்னு தெரியலே. தெரிஞ்சுக்க யாரும் என்னை கல்யாணம் ஆகி இந்த இருபது வருஷத்துலே வெளியே எங்கேயும் அனுப்பலே”.

”ஒண்ணும் கஷ்டமில்லே. சென்னாமாமின்னு கூப்பிடு” என்றாள் சென்னபைரதேவி சிரித்தபடி.

“அது ரொம்ப போக்டாத்தனமா இருக்கும்”

pic 17th Century Indian man

ack britanica.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2021 04:20

November 19, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – Await your train arriving soon

An excerpt from my forthcoming novel MILAGU

இன்று காலை நடந்ததுதான் பின்னும் வேடிக்கை, பெரும் வேடிக்கை.

காலையில் ரதவீதி மிட்டாய்க்கடைக்கு வேலைக்குப் போவது எட்டு மணிக்கு பிரதி தினமும். வீட்டில் இருந்து புறப்பட்டு சுமார் முக்கால் மணி நேரம் நடந்து கடைக்கு வந்து சேருவேன்.

உடலுக்கு தேகப் பயிற்சி என்பதோடு, கால் இருக்கறதாலே கிடைக்கும் சந்தோஷத்தை எல்லாம் உடனே அனுபவிக்க ஆசையும் கூட. இந்தக் காலத்தில் இருந்து பம்பாய், தில்லி, நாகபூர், ரயில், விமானம் என்று நான் இருந்த காலத்துக்குத் திரும்பப் போகும்போது அங்கே ரயில் விபத்தில் இரண்டு காலும் பாதத்தோடு எடுக்கப்பட்டு பழையபடி கட்டைக்கால்களோடு அன்றோ மெல்ல நகர்ந்து போவேன்.

இந்த காலத்தில், கால்கள் முழுசாக இருப்பது தான் எனக்குக் கிட்டிய ஒரே சந்தோஷம். அந்த சந்தோஷத்தை இங்கே எத்தனை நாள் இருக்கப் போகிறேனோ அத்தனை நாள் தீர அனுபவிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.

முடிந்தால் ஓடலாம். ஆனால் ஓடினால் சீக்கிரம் இனிப்பு அங்காடிக்குப் போய்ச் சேர்ந்துவிடுவேன். அதற்கு மெல்ல இருகாலையும் பலமாகத் தரையில் காலணிக்குள் கவ்விப் பிடிக்க வைத்து அணிந்து சீராக நடக்கிற சந்தோஷம் அது.

வெய்யிலோ மழையோ. வலது தோளில் சீனக்குடை ஆடியாடி, தலைகீழான பூ மலரக் காத்திருப்பது போல் தொங்கிக்கிடக்க, அதை லாகவமாகத் தாங்கி நடப்பேன். மேடு, பள்ளம். கல் பாளங்கள் மேவிய நெரிசலான வீதிகளின் நடைபாதை, ஷெராவதி ஆறு கடலோடு கலக்கும் அழிமுகம் இப்படி ஒரே நடையில் முக்கியமான ஊரிடங்கள் வழியே போகும்படி என் பாதையை நான் தீர்மானித்து வைத்திருக்கிறேன். மழையோ வெய்யிலோ எது வந்தாலும் அந்த வழியை மாற்றவோ, சாரட் ஏறி பயணம் போகவோ நான் எனக்குள் உடன்பட்டதில்லை.

மழை காலத்தில் தோளோடு அணைத்தபடி குடையைப் பிடித்து ஈரம் காதில் கசிய பெரும்பாலும் செருப்பு அணியாது நடப்பது வாடிக்கை. பள்ளமான பிரதேசங்களில் மழைநீர் அல்லது ஷராவதி ஆறு உடைப்பெடுத்து நிறைத்திருக்க, அந்தப் பள்ளங்களை கால்கள் ஸ்பரிசித்து எவ்வளவு ஆழமான குழிகள் என்று அனுமானித்து காலை விட்டோ அல்லது குழியைத் தாண்டிக் குதித்தோ முன்னேறிப் போவது மனசுக்கு பிடித்த ஒன்று.

இன்று மழையும் இல்லை, வெய்யிலும் இல்லை. அழிமுகத்துக்குப் போகும் சாலை வழியே நடந்து கொண்டிருந்தேன். வீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக துறைமுகத்துக்கு ஏலமும் கிராம்பும் மூட்டைகளாக் கட்டி எடுத்துப் போகிற மாட்டு வண்டிகள் வேகமின்றி ஊர்ந்து கொண்டிருந்தன. நடைபாதையில் என்னைத் தவிர அழிமுகத்தை நோக்கி நடப்பவர் வேறு யாருமில்லை.

அப்படி இருக்க இயற்கையிலும் பறவைகளின் இனிய சத்தத்திலும் மனதைப் பறிகொடுத்து மெல்ல நடந்து வரும்போது பின்னால் இருந்து களேபரமான ஒலி. அவசரமாகப் பார்க்கக் கூட இல்லாமல் தெருவுக்குக் குதித்து குறுக்கே ஓடி ரக்‌ஷைப் பட்டேன்.

தெருவின் எதிர் நடைபாதையில் ஏறி என் பின்னால் வந்த ராட்சத வாகனம் எது எனப் பார்த்தேன். இரட்டைக் குதிரை பூட்டிய சாரட். அந்தக் கழுவேறி நேமிநாதனுடைய அடித்துப் புரண்டு நரகத்துக்கு ஓடிப் போய்க் கவிழ்ந்து சில்லு சில்லாக உடைபடப்போகும் வண்டியை இந்தப் படுபாவிப் பெண்பிசாசு நான் சாவதானமாக நடக்கிற நேரம் பார்த்து பின்னால் இருந்து என்மேல் மோதி என்னைக் கொல்ல முயற்சி எடுத்ததும்தான் எனக்குப் பொறுக்க முடியாமல் போனது.

இந்த பதினேழாம் நூற்றாண்டின் முதல் வருஷங்களில் மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் மனுஷ மனுஷிகளை கிறிஸ்துநாதர் பிறந்த 20ஆம் நூற்றாண்டு வருஷம் 1960களில் ஜீவிக்கிறவர்களோடு ஒப்புச்செய்தால் ஒரு மண்ணும் தெரியாத நிராட்சரகுஷ்டிகள் இவர்கள்.

காலமும் நீள அகலம் மாதிரி ஒரு பரிமாணம், காலத்தில் பயணம் செய்து இருநூறு வருஷம் பின்னால் போகவோ, முன்னூறு வருஷம் முன்னால் போகவோ சாத்தியம் உண்டு என்று யோசித்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். இதிலே, நானூறு வருஷம் முந்தைய காலத்தில் இருந்து வந்து இருக்கிற என்னை கொல்லணுமாம். காலச் சங்கிலி அறுந்து போகுமல்லோ அப்புறம்?

நான் ஒரு கிறுக்கன் என்று ஒருத்தன், ஒருத்தி விடாமல் நம்புகிறார்கள். ஒரே ஒருத்தர் தான் இதைப் புரிந்துகொண்ட தொனியும் தோரணையுமாக என்னோடு ரெண்டு நிமிஷம் பேசியவர். திக்குகளையே உடுப்பாக உடுத்திய நிர்மலானாந்தா என்னும் நிர்மல் முனி.

போன வாரம் ஹொன்னாவர் பழைய அங்காடித்தெரு ஜெயின் மந்திரத்தில் தீர்த்தங்கர விஜயம் என்று எல்லா தீர்த்தங்கரர்களைப் பற்றியும் தொடர் சொற்பொழிவு செய்ய நிர்மல் முனி வந்தபோது பல நாள் சாயங்காலம் நான் போயிருந்து நாலு நல்ல வார்த்தை காதில் விழுந்து மனசில் படிய முயற்சி எடுத்துக் கொண்டேன்.

அவர் சொன்ன ஒரு வாக்கியம் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது – காலம் தொடக்கமற்றது. முடிவுமில்லாதது. காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. கடியார முட்கள் போல் பிரதட்சணமாக அந்தச் சக்கரம் சுழல்கிறது. காலம் என்ற ஒற்றைவெளி மேல்நோக்கி அல்லது முன்நோக்கிச் சுழலும் காலம், கீழ்நோக்கி இயங்கும் காலம் என இரண்டு பகுதிகளால் ஆனது.

சுழல் இயக்கத்தால் எல்லா நிகழ்வும் திரும்பவும் திரும்பவும் திரும்பவும் நிகழலாம். இதோ நான் பேசுகிறேன், நீங்கள் கேட்கிறீர்கள் இந்த கணம் இனியும் ஒரு முறை, பல முறை திரும்ப நிகழலாம். ஏற்கெனவே நிகழ்ந்திருக்கலாம்.

நான் பரபரப்பாக கைகூப்பி எழுந்தேன். யார் யாரையோ எப்படித் திரும்பப் போவது என்று விசாரித்து அலைந்து திரிந்தேனே. காலம் பற்றி இந்த சமண முனிவர் மிகச் சரியாகத் தெரிந்து வைத்திருப்பார் என்று தெரியாமல் போய்விட்டேனே. எழுந்து நின்று வணங்கினேன்.

பூஜ்யஸ்ரீ முனிபுங்கவரே, நான் வெறுந்தூசி. பரமன் என்ற பரமேஸ்வரனின் லட்சம் கோடி நமஸ்காரம். காலப் பெருவெளியில் எனக்கு மட்டும் ஏன் பின்னோக்கி இயக்கம்? நானூறு வருடம் பின்னால் ஏன் வரவேண்டும்?எப்போது திரும்புவேன் எங்கிருந்து வந்தேனோ அங்கிருந்து?

அவர் நிமிர்ந்து பார்த்துச் சொன்னார் – உன் வண்டி வரும் நேரம் நெருங்குகிறது. சும்மா இரு.

நான் இரண்டு நாளாக இதை மனதில் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

pic chariot

ack dreamstime.com

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2021 19:23

November 17, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – Paraman on the run

An excerpt from my forthcoming novel MiLAGU

முந்தாநாள் நடுராத்திரி கூடத்திலே தரையிலே பத்தமடைப் பாய் விரித்து சின்னதா ரெண்டு தலைகாணி தலைக்கு ஒண்ணு காலுக்கு ஒண்ணுன்னு வழக்கம்போல் வச்சு தூங்கிண்டிருந்தேன். தலைமாட்டுலே கொஞ்சம் தள்ளி சுவர்லே குழிச்ச மாடப் புறையிலே அகல் விளக்கு ராத்திரி முழுக்க சின்னதாக இருந்தாலும் நந்தாவிளக்காக, வெளிச்சம் வந்துண்டே இருக்கறது எல்லா வீட்டிலும் ராத்திரி நடவடிக்கை ஆச்சே. இல்லேன்னா தேளும், ஜலமண்டலியும், பூரானும் செவியனும் வீட்டுக்குள்ளே ராத்திரி வந்து ஜீவிதத்தை நரகமாக்கிடுமே. இத்தனை ஏன், நீர்ப் பாம்பு கூட நல்ல பாம்பு மாதிரி நீளமாக சுருண்டு மேலே ஏறப் பார்க்குமே இருண்ட ராத்திரியிலே.

என்வீட்டு மாடப்புறை தீபம் திடீர்னு அணைஞ்சு இலுப்பெண்ணெய் வாடை. கூடவே எனக்கு தெரிந்த, ஆரம்ப காலத்திலே என்னை அவளோடு முயங்க ரோகிணி அனுமதித்தபோது அவள் காது மடல்லே, இடுப்பிலே இருந்து வந்த ரோகிணி வாடை.

நான் எழுந்திருக்காமல் படுத்துண்டே இருந்தேன். எனக்கு ரொம்ப அருகே அவளோட ஸ்தன வாசனை. அது தனியான மனுஷத் தோல் வாசனை. அடைச்சு அடைச்சு வச்சு மேல் பிரதேசத்துலே இருந்து கிளம்பற அந்த வாடை இல்லாம சிருங்காரம்   சரி பாதியாக் குறைஞ்சிடும். கடும் ஜலதோஷமான போது ஏனோதானோன்னு கலவி பண்ற மாதிரி.

ஆக முந்தாநாள் ராத்திரி என்மூக்கு பக்கம் அவளோட பயோதர வாடை நெருங்க, ரொம்ப நாளைக்கு அப்புறம், மாரை பிடிச்சு ரமிக்க ஏற்பாடு பண்ணிண்டிருந்தேன். ஆனா, அவள் கை நீண்டது என் தலைக்குக் கீழே இருந்து தலைகாணியை உருவ. நானும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் தலைகாணியை விட்டுக் கொடுத்துட்டேன்.

சாகசி, தலைப் பக்கம் இருந்ததை எடுத்த மாதிரி கால் பக்கம் வச்சிண்டிருந்ததையும் பிடுங்கிண்டுட்டா. ரெண்டையும் என் முகத்திலே வச்சு மூச்சு முட்ட வச்சு நான் இப்படி அப்படி அலைபாய்ந்து சுவாசிக்க கஷ்டப்பட்டதை மீறி ரெண்டு மூக்குத் துவாரத்தையும் கையாலே வேறே அடச்சுண்டு என்னை பிணம் ஆக்கறதுக்கான முஸ்தீபுகளிலே இருந்தாள்.

ஓஓஓஓஒ. நான் சுவாசத்துக்காக சத்தம் போட்டேன். அவள் சட்டுனு என் பக்கம் உக்காந்து, விளக்கு அணைஞ்சு போச்சு. நீங்க துர்ஸ்வப்பனம் கண்டு கத்திக்கிட்டிருக்கீங்க. எழுந்து தண்ணீர் குடிச்சுட்டு தூங்குங்க. இல்லேன்னா தலைகாணி ரெண்டையும் சாப்பிட்டுடுவீங்க என்றாள் சிரித்தபடி.

அவள் இதை என் முகத்தைத் தடவிக்கொண்டு சொல்ல, நான் விளையாட்டாக அவளுடைய கொங்கைகளைப் பற்றினேன். கையை விடுவித்துக் கொண்டு பஞ்சுத் தலைகாணி இல்லே இதை பிய்ச்சா ரத்தம் தான் வரும் என்று சொன்னபடி கலகலவென இன்னொரு தடவை சிரித்தாள்.

கனவா, நினைவா என்று புரியாமல் நான் கிடந்த அந்த நிமிஷம் மகத்தானது. ரெண்டுக்கும் இடைப்பட்ட சில வினாடி நேரத்திலே தொங்கிக்கொண்டு இருந்தபடி முழு உறக்கத்துக்கு நழுவிப் போனேன்.

என் உள் மனதுக்குத் தெரிந்தது, அவள் என்னை சுவாசம் திணற வைத்துக் கொல்ல முயன்றாள். கனவாக இருக்கலாம் என்று ஒரு மனம் சொல்ல, அப்படியே எடுத்துக்கொண்டு விடிந்து குளித்துவிட்டு இட்டலி தின்ன படுக்கையை சுருட்டி வைத்து விட்டு குளியலறைக்குப் போனேன்.

pic  Sun rise in North Karnataka

ack  karnataka.com

Sunset at Ullal Bridge Mangalore. Photographer Nithin Bolar K https://commons.wikimedia.org/w/index...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2021 18:29

November 16, 2021

சென்று வாருங்கள், பாரதி மணி சார்

இலக்கிய நிகழ்வு, நாடக விழா என்று பாரதி மணி அவர்களோடு கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் அவ்வப்போது சந்தித்து அளவளாவி இருக்கிறேன். அவருடைய புகைக்குழலில் எழும் மிதமான புகையிலை வாடையாகத்தான் அவரை நினைவு வைத்திருக்கிறேன்.

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது கோவையில் அளிக்கப்பட்ட விழாவில் அமர்வுகளுக்கு இடையே நிறைய உரையாடினோம். வண்ணதாசனுக்கும் வண்ணநிலவனுக்கும் சாரல் விருது சென்னையில் வழங்கப்பட்டபோது பேசியது படமாக நினைவு இருக்கிறது.

இந்திரா பார்த்தசாரதி அவர்களைச் சந்தித்து உரையாடியபோது ஒரு முறை சொன்னார் –
என் ‘மழை’ நாடகம் தில்லியில் அரங்கேறியபோது (பாரதி)மணி தான் கதாநாயகன், அவருடைய would-be மனைவி தான் கதாநாயகி. நாடகம் அரங்கேற்ற நேரத்தில் கல்யாணமும் நடந்தது. அப்புறம் அந்த நாடகத்தை வெவ்வேறு நடிகர்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க மேடையேற்றிய போதெல்லாம், நிஜ வாழ்க்கையிலே அந்த ஜோடி கல்யாணம் செய்துகொண்டது நடந்தது.

ஆரம்பித்து வைத்தவர் பாரதிமணி அவர்கள்!

மியான்மார் அதிபர் (தற்போது ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டவர்) Aung San Suu Kyi முதல் தில்லி சுடுகாட்டு ஊழியர்வரை அவருடைய தொடர்பு வட்டத்தில் எத்தனை எத்தனை மனிதர்கள்.

அவர் எழுதினார் –
//
தில்லி போனபுதிதில், ஒரு தடவை என் நண்பரின் சடலத்துடன், இறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய க்யூவில் நின்றிருந்தேன். என் முறை வந்ததும், தூங்கிவழிந்துகொண்டிருந்த வயதான சிப்பந்தி, ‘க்யா நாம் ஹை? என்றார். என் பெயரைச்சொன்னேன். ‘பாப் கா நாம்?’ என் தந்தையின் பெயரைச்சொன்னேன். ‘உமர்?’. என் வயதைச் சொன்னேன். ப[த்]தா?என் விலாசத்தை பின் கோடு சகிதம் ஒப்பித்தேன். அவரது அடுத்த கேள்வி: ‘உன் பெயரென்ன?’ என் பெயரைத்தானே சொன்னேன் என்று சற்று உரக்கக்கூறினேன். ‘முட்டாள்,நான் செத்தவரின் பெயரைத்தான் கேட்டேன். நீ என்ன அட்வான்ஸ் புக்கிங் பண்ணறியா? பேட்டா! உனக்கு இங்கே வர இன்னும் நிறைய நாளிருக்கு. என் வயதும் உனக்குச்சேரட்டும்!’ என்று ஆசீர்வதித்தார்! ஆக என் பெயர் நிகம்போத் காட்டில் ஏற்கனவே பதிவாயிருக்கிறது!
//

அஞ்சலி செய்யப்பட வேண்டிய இறப்பு என்பதை விட, கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை பாரதிமணி அவர்களுடையது. சென்று வாருங்கள் மணிசார்!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2021 19:55

November 15, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – The reluctant Time Traveller gliding through space – time continuum

An excerpt from my forthcoming novel MILAGU

சாரி டாக்டர் பிஷாரடி, பேசிண்டே இருந்தபடி உறங்கிட்டேன். ஏசி போட்ட ரூம்லே இப்படி சௌகரியமான லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி போட்டு  உக்கார்ந்தேன்னும் இல்லாம படுத்தேன்னும் இல்லாம அரைத் தூக்கத்திலே கிடக்கறது பாக்யம்.

தலையசைத்தபடி மனதில் பெயர்களை பட்டியல் போட்டார் – மஞ்சுநாதன் இல்லே மஞ்சுநாத், நேமிநாதன், ரோகிணி, ஜெருஸூப்பா, ஹொன்னாவர்.

அவருக்குப் புரிகிறது நானூறு வருடம் முந்தி ஹொன்னாவரில் ஜீவித்திருந்தவர்கள் இவர்கள். பரமன் அந்தக் காலத்தில் போய் வாழ்ந்திருக்கிறார் இவர்களோடு எல்லாம் உறவும் பகையும் ஏற்படுத்திக் கொண்டு. ஹொன்னாவர். இன்னும் இருக்கிறது இந்தச் சிறு நகரம். ஷராவதி நதி அரபிக் கடலில் கலக்கும் முகத்துவாரப் பிரதேச நகரம் 600 வருடங்கள் பழையது,. ஜெர்ஸூப்பா அல்லது கெர்ஸூப்பா அல்லது ஜெரஸோப்பா அல்லது ஜெருஸப்பா என்று பலவிதமான பாட பேதங்களோடு அழைக்கப்பட்டு ஒரு காலத்தில் பெரும் துறைமுக நகராக இருந்து இப்போது குக்கிராமமாக இருக்கிறது ஜெர்ஸூப்பா. இடிந்த கோவிலும் சதுர்முக பஸதி என்ற நான்கு வாசல்கள் உள்ள  சமணக் கோவிலும், சில பழைய கட்டிடங்களின் சிதைவுண்ட பகுதிகளுமாக ஜெருஸூப்பா இருக்கிறது.

அங்கே எல்லாம் எப்படிப் போனார் இவர்? அதைவிட முக்கியம் அந்தக் காலத்தில் இருந்து எப்படி இந்தக் காலத்துக்குத் திரும்பி வந்தார்?

பிஷாரடி தன் முன்னோரை நினைத்துக் கொண்டார். இன்றைக்கு பரமன் பற்றிக் கிடைத்த தகவல் ஐந்து அல்லது பத்து சதவிகிதம் இருக்கும். மீதி தொண்ணூறு பெர்செண்ட் எப்படி, எப்போது கிடைக்கப் போகிறது?

எதற்குக் கிடைக்கணும்? அவருக்குப் புரியவில்லை. ஏதோ அவரை முன்நோக்கிச் செலுத்துகிறது. அது பேய் மிளகை நானூறு வருடத்துக்கு அப்புறம் கர்னாடகத்தில் இருந்து கேரளத்துக்குக் கொண்டு வருகின்றது. மிளகு சம்பந்தமாக எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ நடத்திப் போகிறது. ஒரு குழந்தைக் குரலில் அப்பா அப்பா என்று அழைக்கிறது. அந்தக் குழந்தை வீட்டில் இருந்து கடைவீதிக்குத் தனியாக போகிறான்.  சின்னப் பையன், மஞ்சுநாத், ரோகிணியின் மகனா? அப்பா அப்பா என்று பரமனைக் கூப்பிடுகிறானா?. பரமன் அவனுடைய தகப்பனா? ரோகிணியின் கணவனா? அப்போ, நேமிநாதன் யார்?

டாக்டர் வாங்க, வெளியே   போய்ட்டு வரலாம். கார் டிரைவர் வந்திருக்கார். ஏற மட்டும் கொஞ்சம் உதவி பண்ணுங்க போதும். பரமன் சொல்கிறார்.

காந்தம் வைத்து இழுத்தது போல் அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அம்பலம் கிருஷ்ணன் கோவிலுக்குக் கார் வந்து நின்றது. சந்நிதிக்கு வெளியே கடைகள் இரண்டு பக்கமும் விளக்குப் போட்டு வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கும் வரிசை.

வாங்கோ பரமன், நான் இருக்கேன், பிடிச்சு ஜாக்கிரதையா கூட்டிட்டுப் போறேன். சட்டையை அழிச்சு காரிலேயே வச்சுடுங்க. போகலாமா?

கோவிலுக்கு உள்ளேயா? பரமன் சிரித்தார்.

ஏன் என்ன விஷயம்?

நான் எப்படி நடக்கறது?

பரமன் சொல்லும்போத உறக்கச் சுவடுகள் பூசிய அவர் முகத்தில் உற்சாகம் தட்டுப்பட்டது.

டாக்டர், பெரிய கோவில், ஜெயின் டெம்பிள், ரெண்டு காலும் முழுசா இருக்க காற்று வாங்கியபடி பிரதிட்சணம் பண்றதை அனுபவிச்சேன், தத்ரூபமா இருந்தது கோவிலும் பிரகாரமும் ஜில்லுனு அடிக்கற காற்றும், ரெண்டு காலும் செயலாக இருந்ததும். வேறே எதோ காலம், எதோ ஊர்.

கோவில் அலுவலகத்தில் இருந்து சக்கர நாற்காலி ஒன்றை  உருட்டிக்கொண்டு கோவில் அலுவலர் வந்தார். பிஷாரடி இதை ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறார் என்று பரமனுக்குத் தோன்றியது.

சமணக் கோவில் அனுபவம் அவர் திட்டமிட்டதில்லைதான். இவ்வளவு தத்ரூபமாக, வேறே ஒரு காலத்தில்? கனவில் வருவதா எல்லாமும்? இதுவும்?

அது என்ன ஊர்லே பரமன்?

எது டாக்டர் பிஷாரடி?

அதான், நீங்க ரெண்டு காலும் முழுசா இருக்க, ஜெயின் கோவில் பிரகாரம் சுற்றி வந்தீங்களே? அது ஹொன்னாவர் தானே?

தெரியலே.  சட்டையை ஏன் அழிக்கணும்? பத்திரமா கார்லே வச்சுட்டு போய் அப்புறம் வந்து போட்டுக்கலாமே என்றார் பரமன். கோவில் ஊழியரும் பிஷாரடியும் சக்கர நாற்காலியில் தூக்கி வைக்க சிரித்தபடி அமர்ந்தார்.

அழிக்கறதுன்னா மலையாளத்தில் கழற்றறது.  தமிழ்லே எரிச்சு கிழிச்சு ஒண்ணுமில்லாம ஆக்கறது. பிஷாரடி சொல்லியபடி சக்கரநாற்காலியை நகர்த்திப் போகும் முன், கோவில் அலுவலகர் முன்வந்து உருட்டிப் போகத் தொடங்கினார்.  அங்கங்கே சிறு படிகள் கடக்க நாற்காலியை உயர்த்தி மீண்டும் இறக்க பிஷாரடியும் உதவினார்.

வாழ்க்கையிலே முதல் தடவையாக இந்தக் கோவிலுக்கு உள்ளே வரேன். சின்னக் குழந்தைலே எங்கம்மா கற்பகத்தோடு மைலாப்பூர் கபாலீஸ்வரன் கோவில் போன ஞாபகம் எல்லாம் வருது.

அவர் மெல்லத்தான் சொன்னார். என்றாலும் பின்னால் வந்த மூதாட்டி அபிப்ராயப்பட்டாள், அம்பலத்தினுள்ளில் சம்சாரம் பாடில்யா ஷமிக்கணும்.

கோவில் சந்நிதியில் நிற்கும்போது பரமன் கண்மூடி மஞ்சுநாத் என்றார்.   குழந்தே என்றார் அவர் அடுத்து. பிஷாரடி அவர் அருகே நகர்ந்து என்ன சொல்கிறார் என்று கவனிக்கத் தொடங்கினார்.

ஆனாலும் பரமன் அப்புறம் ஏதும் சொல்லவில்லை. எடக்கா வாசித்து அம்பலத்து மாரார் சோபான சங்கீதம் பாட ஆரம்பிக்க  அந்த இசை அம்பலத்து வெளியில் சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருந்தது.

சந்தனமும், துளசியுமாக இவர்கள் சந்நிதியில் தொழுது திரும்ப வரும்போது வெடிவழிபாட்டு சத்தம். என்ன அது என்று பக்கத்தில் போய்ப் பார்க்க ஆர்வம் காட்டினார் பரமன். வெடி வழிபாடு என்றார் பிஷாரடியும் ஆர்வத்தோடு.

வெடி வெடிச்சு வழிபடறதா?

பரமர் விசாரித்தார். அதேதான் என்றார் பிஷாரடி. அடுத்த நிமிடம் வெடித்தரைக்கு சக்கர நாற்காலி நகர்ந்தது.

ஐந்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தார் பிஷாரடி. யாராவது வந்தால் வெடி சத்தத்தையும் வழிபாட்டையும் அவர்கள் செலவில் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்ததற்கு மாறாக வந்த மூன்று பேரும் வெடிச் சத்தம் இலவசமாகக் கிடைக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் அலுத்துப்போய் கிளம்பினார்கள்.

மகா கஞ்சர்கள் என்றார் பிஷாரடி பரமனிடம். சின்னக் குழந்தை மாதிரி அவருக்கு வெடிச்சத்தம் வேண்டியிருந்தது. யாரும்   தரவில்லை என்றால்   வெடிக்காரனிடம் வெடிக்காசு தரப் போகிறேன் என்றபோது பரமனுக்குத் தலை சுற்றலாக இருந்தது. வேணாம் போகலாம் என்று அவர் சொல்வதற்குள் பிஷாரடி வெடி வழிபாட்டுக்காரன் பக்கம் நடந்து விட்டார்.

ராத்திரி குல்ஃபி ஐஸ் விற்கிறவன் கூம்புகளில் அடைத்துத் தரும் பனிக்கூழ் மாதிரி வெடிமருந்து நிரம்பிய கூம்புகள் தரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

வேணாம் என்று பரமன் இன்னொரு தடவை சொல்வதற்குள் பலமான வெடிச்சத்தம். வானத்திலிருந்து பெரிய பறவை கீழே இறங்குது போல் ஏதோ இறங்கி வந்து வெடிக்காரன் மேல் விழுந்தது. அது நக்னமான ஒரு வயசனின் உடம்பாக ஆக இருந்தது. கைகால் உயர்த்திக் கண் திறந்து உசிரோடிருந்தான் அவன்.

வெடிவழிபாட்டுக்காரன் முகம் மாறி வேறொருத்தனாக இருக்க, இடதுகால் சுண்டுவிரல் நைந்து போனதாக அவன் கதறியழுதான். பரமன் போதும் என்றார்.   வயசனும், கால் விரல் போனதாக வெடித்தரையில் தேடி எதையோ கையில் எடுத்து கதறிய மற்றையவன் வெடிக்காரனும் இல்லாமல் போய் தற்கால வெடிக்காரன் வெடி வெடிக்கத் தயாராக நின்று கொண்டிருந்தான்.

பிஷாரடி ஓடி வந்து பரமன் கையைக் குலுக்கினார். சொல்லுங்க சார், எப்படி அதை செஞ்சீங்க? You are a brilliant  time traveller.

பரமன் குழம்பிப்போய் இருக்க, பிஷாரடி மேலும் சொன்னது – இப்போ பார்த்த பத்து வினாடி நேரம் 1850-ம் வருஷம் இதே இடத்திலே இதே மாதிரி வெடி வழிபாடு நடந்தபோது ஏற்பட்ட அசம்பாவிதம். சின்னச் சங்கரன் சாரோட பாட்டி பகவதியம்மாள் பெரிய சங்கரன் ஐயாவை கல்யாணம் செஞ்சுக்கிட்ட நாள்னு நான் சங்கரன் குடும்பம் இங்கே அம்பலத்துலே வழிபட ஒரு மாதம் முந்தி வந்தபோது சொன்னேனே அன்னிக்குத்தான் கல்யாண தினம். இது கல்யாணத்துக்கு தொட்டு முன்பு அந்த குடும்பத்திலே ஆலப்பாடு வயசன் பறந்து கொடிமரம் நனைச்சுட்டு வெடியோடு சேர்ந்து மூத்திரம் வடிய வெடிக்காரன் மேலே விழுந்த கணம்.

பிஷாரடி மூச்சு விடாமல் பேசினார். பின்னும் தொடர்ந்தார்.

பரமரே, எப்படி அந்த வினாடிக்கு துல்லியமா கூட்டிப் போனீர்?

பிஷாரடி கேட்க அது காதில் விழவில்லை பரமனுக்கு. அவருடைய உள்செவியில் மட்டும் கேட்டது, அப்பா அப்பா என்று ஒரு குழந்தைக் குரல். வெடிமருந்து சேமித்து வைக்கும் கிடங்கு வாசலில் நின்று கூப்பிடும் சிறுவனுடையதாக இருந்தது அது.  பரமன் கவனம் சிதறாமல் உடல் பதறி சக்கர நாற்காலியில்  குமைந்து கொண்டிருந்தார்.

பரமன், என்ன ஆச்சு? ரோகிணி, நேமிநாதன், மஞ்சுநாத், ஹொன்னாவர், ஜெருஸூப்பா. எதாவது தோணுதா? மஞ்சுநாத், நேமிநாதன், ஹொன்னாவர்.

இல்லை என்றார் பரமன். தலை சுற்றி சக்கர நாற்காலியில் அவர் குழைந்து கிடக்க கோவில் அலுவலரும் பிஷாரடியும் வெடித் தரையில் இருந்து அவரை நகர்த்திப் போனார்கள்.

Pic chineese fan

Ack wikimedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2021 18:15

November 12, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – 1606 AD The story of a iconic half naked fakir, Paraman told his son

நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி

குழந்தை என்னோடு அவ்வளவாக ஒட்டவில்லை. எப்போதும்போல்தான் இது. அப்பாவை பிரிந்த துக்கம். அவனுக்கு அப்பா என்பது பரமன் என்று பேசத் தெரிந்த காலத்திலேயே சொல்லிக் கொடுத்தாகி விட்டது.

நேமிநாதனுக்கு அவன் மகன் என்பதில் அக்கறை இல்லை. அவனுக்கு நேமி தான் தகப்பன் என்பது இன்றுவரை தெரியாத உண்மை. அது தெரிய வரும்போது அவனும், நானும், நேமியும் பரமனும் என்ன ஆகியிருப்போமோ.

ஞாயிறு முழுக்க அப்பா அருகில் இல்லாத துக்கத்தை அழுது தீர்த்தான் மஞ்சுநாத். தெருநாய்களும், வீட்டில் வளர்க்கும் பூனையும்,  முயல்களும் பட்டாம்பூச்சிகளும் அவன் கவனத்தை அடுத்துக் கவர மஞ்சுநாத் தானே தனக்கான விளையாட்டுகளை இவற்றோடு சேர்ந்து வடிவமைத்துக் கொண்டான். அவன் வயதுக்கு இது அதிகமான பக்குவமும் சுய அறிவும் கலந்த முன்னெடுப்பு.

அவனை ஜெரஸோப்பாவில் விட்டுவிட்டு திங்களன்று  நான் ஹொன்னாவர் திரும்பும்போது, வீட்டு ஊழியர்களோடு இருப்பதில் சந்தோஷம் அடைந்ததாகவும், ஒரு வாரம் முழுக்க இருக்க எந்த கஷ்டமும் இல்லை என்றும் என்னிடம் குழந்தை மஞ்சுநாத் சொன்னபோது அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுக்க எந்தத் தாயும் போல்   பாசத்தால் செலுத்தப்பட்டேன்.

நான் பிடிவாதமாக பிரியம் காட்டாது அவன் தலை தடவி உச்சந்தலையில் முத்தமிட குனிய அவன் நகர்ந்திருந்தான்.

சாப்பாடு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை அவனுக்கு. சமாளித்துக் கொள்வான்.

ராத்திரியில் உறங்கும் முன் ஒரு கதை சொல்ல யாராவது வேணும். அது பரமனப்பாவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றான் குழந்தை மஞ்சுநாத்.

கறுப்பன் என்பதால் கோச் வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்ட ஒரு உயரமான மெலிந்த மனிதனைப்  பற்றி நிறையக் கதை சொல்லியிருக்கிறார் பரமன் அப்பா.

சமுத்திரத்தில் இருந்து உப்பு எடுத்து காய்ச்சி உபயோகிக்க வரி ஏன் தர வேண்டும் மாட்டேன் என்று அமைதியாக யுத்தம் செய்தவனாம் அவன். அரை நிர்வாணப் பக்கிரியாம். அவனையும் அவன் சகாக்களையும் அரசாங்கக் காவலர்கள் மூர்க்கமாகத் தடி கொண்டு தாக்கியும் அதெல்லாம் பொறுத்து, திருப்பி அடிக்காமல் வரிசை வரிசையாகப் பிடிவாதமாக உப்பெடுக்க முன்னால் நகர்ந்த அந்தக் கிழவனையும், அவனுடைய சகாக்களையும் பற்றி மஞ்சுநாத் சொன்ன ஆர்வம் எனக்கே அந்தக் கதை கேட்கத் தோன்றியது.

போகட்டும். அரைக்கிறுக்கன் பரமன் சொன்ன கதைக்கு கால் ஏது வால் ஏது? உப்புக் கிழவன் கதை எல்லாம் குழந்தையை முக்கால் கிறுக்கன் ஆக்கிவிடும்.  அவனுக்கு பயம் போக பிசாசுக் கதைகள் சொல்ல வேண்டும்.

போகட்டும். இனிமேல் இரண்டு பேரும் சந்திக்கப் போவதில்லையே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2021 19:45

பெரு நாவல் ‘மிளகு’-பேய் மிளகு?Devil’s-pepper. Rauvolfia vomitoria

Excerpt from my forthcoming novel MILAGU

பரமன் என்ற பரமேஸ்வர ஐயர் அறையின் மூலையில் வசதியான சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அறை நல்ல வெளிச்சத்தில் இருந்தது.

பரமனுக்கு எதிரே இன்னொரு நாற்காலியிட்டு பிஷாரடி வைத்தியர் உட்கார்ந்திருந்தார். அவர் மடியில் ஒரு சிறிய கேஸட் டேப் ரிக்கார்டரை வைத்திருந்தார்.

பரமன் சட்டை காலரில் இருந்து மிகச் சிறிய ஒலிவாங்கி டேப் ரிகார்டரோடு இணைத்திருந்தது.பரமனின் கண்கள் மூடியிருந்தன.

பிஷாரடியும் மைக் கொண்டு தன்னையும் டேப் ரிகார்டரோடு பிணைத்திருந்தார். பத்து நிமிடமாக அறையில் அமைதி நிலவியது. பிஷாரடி பேச ஆரம்பித்தார்.

பரமேஸ்வரன், அம்பலப்புழை அம்பலத்துக்குப் போயிருக்கிறீர்களா?

இல்லை என்ன விசேஷம் என்று சிரமத்தோடு குரல் வருகிறது பரமனிடம்  இருந்து.

கோவிலில் என்ன விசேஷம் இருக்குமோ அந்த விசேஷம் உள்ள புராதன கோவில் அது.

பிஷாரடி கூடுதல் தகவல் தருகிறவராகத் தன்னை உணர்ந்தார்.

வேறு எந்த கோவிலுக்கெல்லாம் போயிருக்கிறீர்கள் பரமேஸ்வரன் ஐயர்?

பரமன் என்றே அழையுங்கள்.

அப்படி அழைத்தால் மனதில் என்ன மாதிரியான நிம்மதி ஏற்படுகிறது?

அப்படித்தான் என்னை காலம் காலமாகக் கூப்பிட்டு வருகிறார்கள்.

காலம் காலம் என்றால்?

வருஷக் கணக்கில்.

எத்தனை வருஷம்?

நிறைய வருடம்.

நூறு?

நானூறு வருடம் முன்பு.

நானூறு வருடம் முன்பு நீங்கள் உயிரோடு இருந்தீர்களா?

பரமன் அமைதியானார். பிஷாரடி திரும்பக் கேட்டார் – நானூறு வருடம் முன் நீங்கள் ஜீவித்திருந்தீர்களா?

ஆமாம் என்றார் தீர்மானமானப் பதில் சொல்ல முடிவு எடுத்த மாதிரி, பரமன்.

உங்களோடு யாரெல்லாம் இருந்தார்கள்?

நிறையப் பேர் இருந்தார்கள்.

அதெல்லாம் யார்?

யாரெல்லாமோ இருந்தார்கள்.

யாராவது இருந்தால் பெயர் தெரிந்திருக்குமே என்று நைச்சியமாகக் கேட்டார் பிஷாரடி.

பெயர் தெரியாது. ஆனால் நிறையப்பேர் இருந்தார்கள்.

எங்கே?

பரமனிடமிருந்து பதில் இல்லை.

எங்கே நிறையப்பேர் இருந்தார்கள் பரமன்?

இதற்கும் பரமனிடமிருந்து பதில் இல்லை.

நானூறு வருடம் முன்பு யாரெல்லாம் இருந்தார்கள்? திலீப் ராவ்ஜி இருந்தாரா?

Don’t talk rubbish, doctor. அவன் பிறக்கவே இல்லை.

பின்னே நானூறு வருஷம் முன்னால் யார் உங்களோடு இருந்தார்கள்?

மாட்டேன். அந்த ராட்சசன் ஏதாவது பண்ணுவான்.

எந்த ராட்சசன்?

நேமிநாதன்.

பரபரப்பானார் பிஷாரடி வைத்தியர். ஜகஜ்ஜோதியாக எரிந்து கொண்டிருந்த டியூப் லைட்டுகளை அணைத்து இரண்டே இரண்டு அறுபது வாட்ஸ் விளக்குகளை மட்டும் ஒளிரச் செய்தார். பரமனை அருகில் சென்று பார்த்தார். புலன்கள் விழித்திருக்க,  ஆழமான உறக்கத்தில் இருந்தார் அவர்.

பரமன், நேமிநாதன் இல்லை, வரமாட்டான்.

பரமன் உறக்கத்தில் சிசு போல் சிரித்தார்.

அவன் பேய் மிளகு மாதிரி. இல்லாமல் போனான் என்று விட்டால் திரும்ப தழைத்து வந்துவிடுவான்.

பேய் மிளகு? பிஷாரடிக்குத் தெரியும். Devil’s-pepper. Rauvolfia vomitoria

தெரிசா வீட்டிலும் தன் வீட்டிலும் சடசடவென்று படர்ந்து வாசல் மறைத்து வளர்ந்த அந்த அசுரத் தாவரத்தை முற்றும் பிடுங்கிப் போட்டது நினைவு வந்தது பிஷாரடி வைத்தியருக்கு. முன்னோர் ஓலைச் சுவடியில் அந்தப் பெயரும், அதை ஒழிப்பது எப்படி என்றும் எழுதியிருந்ததும் நினைவு வந்தது.

பேய் மிளகு தான் என் வீட்டில் அடைந்து மண்டியது.

பிஷாரடி பரமனிடம் தகவல் தெரிவிக்கும் பாணியில் சொன்னார்.

பேய் மிளகு நானூறு வருஷம் முன்பு ஹொன்னாவரில் படர்ந்து வந்தது என்றார் பரமன்.  ஜெரஸூப்பாவிலேயும்.

ஹொன்னாவர். ஜெரஸோப்பா. ஹொன்னாவரில் நீங்கள் மட்டும் தான் இருந்தீர்களா?

இல்லை என்றார் பரமன்

உங்களோடு யாரெல்லாம் இருந்தது?

மஞ்சுநாத் இருந்தான். ரோகிணி கூட இருந்தாளே. என்ன இருந்தாலும் அம்மா ஆச்சே. அவனோடு ஜெருஸூப்பாவுக்கும் ஹொன்னாவருக்கும் போய்ட்டு போய்ட்டு வந்துண்டிருந்தா.

அவனுக்கு ரோகிணி என்ன வேணும் என்று ஆவலோடு கேட்டார் பிஷாரடி வைத்தியர்.

அம்மா, சொன்னேனே. பொறுமையில்லாமல் முணுமுணுத்தார் பரமன்.

மஞ்சுநாதன் இல்லை, இன்னொரு நாதன். நேமிநாதன். ஆமா, நேமிநாதனுக்கு மஞ்சுநாதன் என்ன உறவு?

அதெல்லாம் சொல்ல முடியாது போடா.

பரமன் குரல் கரகரப்பாக மாற வந்த பதிலை உடனே சரியாகப் புரிந்து கொண்டார் பிஷாரடி. கொங்கணி மொழி இது. அதுவும் நானூறு வருஷம் முன்னால் பேசப்பட்டது. உத்தரகன்னடத்தில் பேசப்பட்டது. குறிப்புகளை டேப் ரிகார்டரில் பிரதி எடுத்துப் பூர்த்தி செய்வதற்குள் பரமன் நன்றாக விழித்துக் கொண்டு விட்டார்.

படம்  பேய் மிளகு Devil’s-pepper. Rauvolfia vomitoria

நன்றி விக்கிபீடியா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2021 06:35

November 11, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – excerpt from the epistle penned by the Portugal – Spain emperor, the ‘pious’ Philip

Excerpt from my forthcoming novel MILAGU

இணைப்பு

போர்த்துகீசிய மகாமன்னர் ’பக்திமான்’ பிலிப் இந்துஸ்தானத்துக்கான போர்த்துகீசிய தலைமை அரசப் பிரதிநிதி சென்ஹோர் இம்மானுவேல் பெத்ரோ அவர்களுக்கு விடுத்த உத்தரவு லிகிதம் (பகுதிகள்)

இந்துஸ்தானப் பெருநிலத்துக்கு எம் தலைமைப் பிரதிநிதியாக   நியமித்து அனுப்பிய சென்ஹோர் இம்மானுவேல் பெத்ரோ அறிந்திடுக-

மகாராணி சென்னபைரதேவி அரசாளும் ஜெர்ஸோப்பா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சனை குறித்து  பெத்ரோ ஆகிய நீர் அறிந்திருக்கலாம். இது குறித்து எமக்கு உடனே விரிவாகத் தகவல் தெரிவித்து லிகிதம் அனுப்பியிருக்க வேண்டியது உம் கடமை. அதிலிருந்து நீங்கள் வழுவிவிட்டீர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசியார் அந்த அரசியல் பிரச்சனை தொடர்பாக நாம் கோவா பகுதி பஞ்சிம் துறைமுகத்தில் நிறுத்தியிருக்கும் நூற்றைம்பத்தாறு போர்த்துகீஸ் கடற்படையினரை ஒரு மாதம் இரவல் கேட்டு உம்மிடம் வரலாம் என்று எமக்குக் கிட்டிய துப்புகள் தெரிவிக்கின்றன. இதுவும் நீர் பெற்று எமக்கு அனுப்பிவைத்திருக்க வேண்டிய முக்கியமான செய்தி. செய்யத் தவறி விட்டீர்கள் என்பதில் பெருவருத்தம் அடைகிறோம்.

சென்னா மகாராணி அப்படி நம் படைகளை இரவல் கேட்டு வந்தால் நீர் செய்ய வேண்டியது

படையினரை ஒரு மாதத்துக்கு இரவல் தர முடியாது. இரண்டு ஆண்டுகள் குறைந்த பட்ச கால அளவு அவர்கள் அனுப்பப் படுவார்கள்ஒவ்வொரு வீரருக்கும் தினசரி காவல் கூலியாக ஐந்து வராகனும், உணவு, உடுப்புக்காக தினசரி ஒன்றரை வராகனும் தரப்பட வேண்டும்ஒரு வருடத்துக்கான காவல் கூலி, மற்ற செலவினங்களுக்கான பணம் முன்கூட்டியே கொடுக்கப்பட வேண்டும். அந்தத் தொகை பணமாக அன்றி முன்கூட்டி நாம் நிர்ணயித்திடப் போகும் மிளகுக் கொள்முதல் விலை விகிதத்தின்படி மிளகாகக் கொடுக்கப்பட வேண்டும்.மாநிலத்தில் மிளகு பயிரிட போர்த்துகீஸ் அரசர் சார்பில் பெத்ரோவாகிய உமக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்.மாநிலத்தில் அரசு மாற்றங்களுக்கு பிலிப் மன்னரான எமக்குத் தெரியப்படுத்தாமல் நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது.உதவிப் படைகளை கோவாவில் இருந்து கொண்டு வருவதா, லிஸ்பனில் இருந்து அனுப்புவதா என்பதை போர்த்துகல் அரசு தீர்மானிக்கும்படைகள், தளவாடங்கள் நகர்த்துவதற்கான அனைத்து செலவும் தளவாடங்களின் பராமரிப்பு செலவும் ஜெருஸோப்பா அரசே ஏற்கவேண்டும்.இரவலாக அனுப்பப்படும் படைகளை எந்த நேரத்திலும் பின்வாங்கிக் கொள்ள போர்த்துகீஸ் அரசுக்கு முழு உரிமை உள்ளது. தளவாடங்களையும் திரும்ப எடுத்துப் போக உரிமை போர்த்துகல் அரசுக்கு உண்டு.படைகளையும் தளவாடங்களையும் ஆள், பொருள் மாற்றத்துக்கு (ஒருவனுக்குப் பதிலாக இன்னொருவன், ஒரு பொருளுக்குப் பதிலாக அதே தோற்றம், குணம், பயன்பாடு உள்ள மற்றொரு பொருள் என) உட்படுத்த போர்த்துகல் அரசுக்கு முழு உரிமை உண்டு.கோழிக்கோடு சாமுரின், அவருக்குத் தொடர்புள்ள கடல் கொள்ளைக்காரர்களான குஞ்ஞாலிகள் ஆகியோருடன் ஜெர்ஸோப்பா நேசம் பாராட்டக் கூடாது.போர்த்துகல் இரவல் ராணுவம், சூழ்நிலை அடிப்படையில் போர் நடப்பதற்கான சந்தர்ப்பம் எழும்போது ஜெர்ஸூப்பா அரசின் சார்பில் அவர்களுடைய ராணுவத்தோடு சேர்ந்து போரிட முயற்சி எடுக்கப்படும். அந்தப் போர்களில் எம் படையினர் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை. வெற்றி பெற்றால் இருபது சதவிகிதம் கூடுதல் ஊக்க வருமானம் அவர்களுக்கு ஜெர்ஸோப்பா அரசு தரவேண்டும். வெற்றி பெறவில்லை என்றால் நஷ்ட ஈடு எதுவும் போர்த்துகல் அரசால் தரப்படாது.இந்த ஷரத்துகளுக்கு உடன்பட்டால் அதிக பட்சம் இன்னும் ஒரு மாதத்தில் அதை பெத்ரோவாகிய உம்மிடம் ஜெருஸோப்பா மகாராணி தெரிவிக்க வேண்டியது. அதன் பின்னரே போர்த்துகீஸ் படை ஜெர்ஸோப்பா, ஹொன்னாவருக்கு நகரும்.

pic Portugal emperor, the ‘Pious’ Philip II

ack  wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2021 18:56

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.