இரா. முருகன்'s Blog, page 64

November 11, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – esprit de corps – Portugal et Gersoppa

Excerpts from my forthcoming novel MiLAGU

 

யுத்தம் வருமா?

தனக்குத்தானே பேசுகிற முணுமுணுப்பாகக் கேட்டாள். பெத்ரோ ஏதும் சொல்வதற்குள் சென்னபைரதேவி தொடர்ந்தாள் –

போர் வரும். அரசாள ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்த்திருந்த என் வளர்ப்பு மகன் நேமிநாதன் சும்மா இருக்க மாட்டான்.  கெலடி வெங்கடப்ப நாயக்கரும், பில்ஜி அரசன் திம்மையாவும் அவனுக்கு உடனே ஆதரவு தருவார்கள். எனக்கு ஆதரவுக்கு யாருமில்லை. அப்பக்கா ராணியை  எனக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து மாற்றிக்கொள்ளக் கட்டாயப்படுத்தி விட்டார்கள். அவள் நல்ல தோழி ஆனால் இந்த முறை அரசியலில் காயப்பட்டு ஒதுங்கி விட்டாள் அப்பக்கா. ஆக நான் காசு கொடுத்து ராணுவம் சேர்க்க வேண்டி உள்ளது.

குத்திருமல் காரணமாகப் பேச சிரமப்பட்டாள் மிளகுராணி. வாசலில் மிங்கு வந்து நின்றாள் ஒரு சிறு குப்பியில் மருந்தோடு. அவளே நேரே உள்ளே நடந்து வந்து ராணிக்கு மருந்தைப் புகட்டிவிட்டு வெளியே போனாள்.

என் பக்கம், என் பட்டாளமாக யுத்தம் செய்ய போர்த்துகல் அரசு முன்வருமா? எனக்குக் கோரிக்கை லிஸ்பனில் இருந்து படை வரவேண்டும் என்பதில்லை. கோவா பஞ்சிமில் நீங்கள் நிறுத்தி வைத்து ஊர் ஒழுங்கைப் பராமரிக்க பயன்படுத்தும் அந்த ஐநூறு வீரர்களை   துப்பாக்கி சகிதம் இரண்டு வாரம் ஹொன்னாவருக்கு கப்பலில் வந்து நங்கூரம் பாய்ச்சி நிற்கச் சொல்ல வேண்டும். அது போதும்.

பெத்ரோவைக் கூர்ந்து பார்த்தபடி ஒரு வினாடி மருந்துக் குப்பிக்காகக் கை நீட்டினாள் சென்னா. மிங்கு ஓடிவந்து சிசுவுக்குச் சங்கில் மாந்தத்திற்கு மருந்து புகட்டுவது போல் புகட்டித் தாயாகத் தலையைத் தடவிப் போனாள்.

ஒவ்வொரு வீரருக்கும் ஒரு நாளைக்கு இரண்டு வராகன், உணவு விலையின்றித் தரப்படும். இப்படி என் பக்கம் போர்த்துகல் இருந்தால் நிச்சயம் நான் வெல்லுவேன்.  குறைந்த பட்சம் இன்னும் பத்து வருடம் அரசாளுவேன். அதற்குள் கையில் எடுத்த கோவில், பஸதி கட்டுமானப் பணிகளோடு சாலை பராமரிப்பு, புது சாலை இடுதல், சாக்கடைத் திட்டம், குடிநீர் திட்டம் என்று ஊர்தோறும் நல்லன செய்வேன். பண்டகசாலை அமைத்து மிளகு தவிர சாயம் தோய்த்த கைத்தறித்துணி, ஏலம், பலத்த கண்காணிப்போடு வெடியுப்பு என்று வேறு பொருள் மிகுந்த ஏற்றுமதிக்கும் வழிசெய்து வருமானம் பெருக்க, அது கடைசிக் குடிமகனுக்கும் போய்ச்சேர வழி செய்ய எப்படியும் பத்து ஆண்டுகள் தேவைப்படும். யுத்தத்தில் நான் போர்த்துகல் அரசு ஒத்துழைப்போடு வென்றால் இதைக் கட்டாயம் நடத்தி முடிக்கலாம்.

இருமல் மறுபடி எட்டிப்பார்க்க, தாதி மிங்கு மருந்தோடு வந்தாள்.

எந்த ஆதரவும் கிடைக்காத பட்சத்தில் எனக்கு ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என்று விலகிக் கொள்வேன்.

சென்னா சொல்லியபடி பெத்ரோவைப் பார்த்த பார்வையில் ‘சரிதானா?’ என்ற வினா தொக்கி இருந்தது. பெத்ரோ புன்முறுவலித்தார்.

சகோதரரே பெத்ரோ, உங்களுக்கு அரச தலைமைப் பிரதிநிதியாக மிக உயர்ந்த பதவி அளித்து உங்கள் அரசர் அனுப்பியிருக்கிறார். உங்கள் பஞ்சிம் துறைமுக படையை இரண்டு வாரம் இரவல் தருவீர்கள் தானே?

பெத்ரோ சற்றும் எதிர்பார்க்காத கேள்வி அது. அதை அரசியல் வாய்ப்பாக அவர் கருதலாம். போர்த்துகல் அரசரும், அரசாங்கமும் என்ன நினைப்பார்கள்? அரசத் தலைமைப் பிரதிநிதி பதவி மட்டும் போதாது இது தொடர்பாக முடிவு செய்ய என்று பட்டது பெத்ரோவுக்கு.

என்ன சகோதரரே, நான் கேள்வி கேட்டு ரெண்டு நிமிடமாகி விட்டது. கோவாவில் இருந்து போர்த்துகல் படையை எப்படி ஹொன்னாவர் கொண்டு வரலாம் என்ற சிந்தனையில் மூழ்கி விட்டீர்களா? யோசியுங்கள். நாளை மறுநாள் தகுந்த மறுமொழியோடு வாருங்கள்.

உள்மண்டபத்துச் சுவரை அலங்கரித்த சுவர்க் கடியாரம் பதின்மூன்று முறை அடித்தது. பெத்ரோ தன் இடுப்பு வார் கடியாரத்தைப் பார்த்து மாலை ஐந்து மணி பதினெட்டு நிமிடம் என்று தனக்குள் முணுமுணுத்தார்.

மகாராணி, சிறு பழுதுதான். நான் எடுத்துப்போய் கோழிக்கோட்டில் என் மாமனாரின் வர்த்தக நிறுவனத்தில் பிழை திருத்த ஏற்பாடு செய்கிறேன் என்று கடியாரம் மாட்டியிருந்த சுவர்ப் பக்கம் போனார் பெத்ரோ.

இருக்கட்டும், சகோதரர் பெத்ரோ, அந்தக் கடியாரமும் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என்றாள் சிரித்தபடி மகாராணி.

மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து அதன் தலைப் பகுதியை இறுகப் பிடித்தபடி மிங்கூ மிங்கூ என்று சத்தம் தாழ்த்தி அழைத்தாள் சென்னபைரதேவி மகாராணி. தாதி மிங்கு உள்ளிருந்து வந்து நாற்காலியைத் தள்ளியபடி உள் நோக்கிப் போனாள்.

pic  a queen and the nurse

ack  freeimages.com

nurse

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2021 05:50

November 10, 2021

பெரு நாவல் ‘மிளகு’ -Thus spoke the common man- Assim falou o homem comum

Excerpt from my forthcoming novel

சமணன் குற்றம் சொன்னா, பஸதியிலே பத்து திகம்பர தீர்த்தங்கருக்குப் பதிலா பதினைந்து பேர் சிலை. சொல்லப்போனா ஒரு தீர்த்தங்கரருக்கும் இன்னொருத்தருக்கும் வித்தியாசமே தெரியாமத்தான் சிற்பிகள் கொத்தி வச்சுட்டுப் போயிடறாங்க. பத்து பதினஞ்சாகிறதால் பெருசா ஒண்ணுமில்லே.

மிளகு வித்தோம் லிஸ்பன்லே. வர்ற பணத்திலே கணிசமாக வரி எடுத்து மீதியை ஏற்றுமதி செஞ்சவங்களுக்கு வெகுமதி, வருமானமாக எடுத்துக்க விட்டுடறாங்க.  அவங்க, அரண்மனை தவிர வேறே எல்லா இடத்திலேயும் வருமானம் குறைஞ்சிருக்கு.

அரசாங்கத்திலேயே பணம் எல்லாம் நிர்வாண சாமிகளுக்கு உபசாரம் செய்ய போயிட்டிருக்கு. பிறந்த பிள்ளைக்கு பால் கொடுக்க பிரசவித்த அம்மாவுக்கு உடம்பிலே சக்தி இல்லே. அவங்க கையிலே பூஜை பிரசாதத்தை ஒரு நெல்லிக்காய் அளவு கொடுத்து பசிக்கு இதைத் தின்னுன்னா நியாயமா?

மதமும் மிளகும் தவிர ராணியம்மா கவனிக்க வேறே எதுவுமே இல்லைன்னு நினைக்கறாங்களா?

பணம் படைச்சவன் வீட்டை, நிலத்தை, காசு பணத்தை எல்லாம் பொன் ஆக்கி ஜாக்கிரதையாக பதுக்கி வச்சுப்பான். நம்ம கிட்டே இருக்கறது சட்டி பானை, ஓலைக் குடை, கூழ் காய்ச்சி வார்த்து குடிக்கற கும்பா, அழுக்கு வேட்டி, கிழிஞ்ச பிடவை, கழுத்திலே பாசிமணி மாலை, குடிசைக்கு பின்னாடி ரெண்டு வெங்காயச் செடி. இதை எடுத்துக்கிட்டு யார் தங்கம் கொடுப்பாங்கன்னு தேடிக்கிட்டிருக்கேன். யாரும் இதுவரை கிடைக்கலே. கோட்டைக்குள்ளே போய் ராணியம்மா கிட்டே தான் விசாரிக்கணும்.

சண்டை வரும், யுத்தம் வருது. இதைத்தான் எல்லோரும் சொல்றாங்க. யாரு யாரோட யுத்தம் செய்யப் போறாங்க? யாரு யாருக்கு ஆதரவு தரப் போறாங்க?

இருந்த பழைய வீட்டை எல்லாம் இடிச்சு வச்சுட்டு போறதை அவனவன் எதிர்பார்த்துக்கிட்டிருக்கான். இருக்கற குடிசையைப் பிரிச்சு துரத்திவிட்டா, பஸதியிலே போய்த் தங்க விடுவாங்களா, கோவில் பிரகாரத்திலே உறங்க விடுவாங்களா?

ராணி அம்மா கிட்டே சிப்பாய், குதிரைப்படைன்னு நூறு பேர் கூட இல்லையாம். பத்து குதிரை, ஐம்பது காலாட்படை, இதை வச்சுக்கிட்டு சம்பளம் கொடுத்து பராமரிக்கறதே மகா சிரமமாக இருக்க யுத்தம் செய்ய வாளை வச்சுக்கிட்டு இன்னமும் பழைய காலத்திலே இருக்க முடியாது.

பீரங்கி, துப்பாக்கி, கண்ணிவெடி இதெல்லாம் வாங்கி வச்சிருக்காம யுத்தத்துக்கு போனா, அது யாரோட போனாலும், வெற்றி கிடைக்கிறது கடினம்ங்கறது உனக்கு தெரியுது எனக்கு தெரியுது ராணியம்மாவுக்கு தெரியலியே.

உலகம் முழுக்க அடுத்த தலைமுறை, அதுக்கு அடுத்த தலைமுறைன்னு பதவிக்கு வந்துட்டாங்க. இவங்களுக்கு அப்படி என்ன பிடிவாதம்? அறுபத்தைந்து வயசிலேயும் மிளகுராணின்னு பட்டம் வாங்கி கழுத்திலே மாட்டிக்கணும். நாலு வேலையத்தவன் மிளகுராணி வாழ்கன்னு எல்லா மொழியிலேயும் கூப்பாடு போடணும். ஒரு பசதியிலே சங்கு ஒலிச்சு கல்கண்டும் உலர்ந்த திராட்சையும் பிரசாதமாக கொண்டு வந்து தரணும், இன்னொரு கோவில்லே இருந்து மிளகுப் பொங்கல் பிரசாதம் வரணும், தாதி மிங்குவோடு ஓடிப் பிடிச்சு விளையாடணும், நிம்மதியா தின்னுட்டு தூங்கணும். யார் எக்கேடு கெட்டா மிளகுராணிக்கு என்ன போச்சு?

ராணி மகாராணியா நாற்காலியை இறுகப் பிடிச்சுக்கிட்டு பதவி போதையிலே, அதிகார போதையிலே, புகழ் போதையிலே இருக்கணும், மகனே ஆனாலும் ராஜ பதவி எல்லாம் தர முடியாது. மூணு வேலை நெய் விட்டு சாப்பிட்டுவிட்டு வயத்தைத் தடவிக்கிட்டு நிம்மதியாக உறங்கி உறங்கி மோர்க்குழம்பிலே போட்ட சேப்பங்கிழங்கு மாதிரி வழவழ கொழகொழன்னு ஏதாவது பேசிக்கிட்டிருக்கணும். அதான் ராணியம்மாவுக்கு வேண்டியது.

மகன்னு இல்லே, நாளைக்கே பேரனை அந்தப் பொண்ணு ரஞ்சனாதேவி பெத்துப் போட்டா கூட அப்பவும் தொண்டு கிழவியா மிளகுப் பொம்பளை தான் சர்வத்துக்கும் தலைமை.

சரி ஊரூரா பசதியைக் கட்டு கோவிலைக் கட்டுன்னு பிடிவாதமா அலைஞ்சிட்டிருக்காங்களே. நாளைக்கே இவங்க திடீர்னு செத்துக்கித்து போயிட்டா என்ன ஆகும் ஜெருஸொப்பா மாநிலத்துக்கு? அரை குறையா நிக்கற அந்தக் கோவில்களும் பசதிகளுமெல்லாம் என்ன ஆகும்? அதுக்கு இதுவரை செலவழித்த பணம் நஷ்டக் கணக்குலே காட்டுவாங்களா?

ஏதாவது ஒரு கோவில் எங்கேயாவது கோவில் இல்லாத இடத்திலே கட்டு அது நியாயம். ஒரே நேரத்துலே எட்டு பசதி, ஏழு கோவில். அவங்க அப்பன் வீட்டு காசா? மிளகு சாகுபடின்னு வெய்யில்லே வாடி, மழையிலே நனைஞ்சது அவங்களா? நாங்க. அந்தப் பணம் முழுக்க எங்களுக்கு வரணும். நாங்க பார்த்து அவங்களுக்கு ஏதாவது தரணும். அப்படி இருந்தா, தண்டச் செலவு ஒரு துட்டு போகாது.

வரத்தான் போகுது அந்தக் காலம், பார்த்துக்கிட்டே இரு. எப்படி பதவி சிரமமில்லாமல் தேர்ந்த கைக்கு மாறும், நடவடிக்கை எல்லாம் எப்பவும்போல் கிரமமாக நடந்தேறும்னு எந்த சிரமமும் இல்லாம கைமாற என்ன திட்டம் பண்ணி வச்சிருக்காங்க?

படம்  A medieval cuisine

Acq  en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2021 06:29

November 9, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – Vox Populi, Vox Dei

Excerpt from my forthcoming novel MILAGU

சகோதரரே, ஹொன்னாவரில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பொதுவாகக் கேட்டாள் சென்னபைரதேவி மகாராணி.

நாட்டு நடப்பை ஹொன்னாவர் குடிமக்கள் எப்படி சீர்தூக்கி எடைபோட்டுப் பேசுகிறார்கள், நடக்கும் சம்பவங்கள், நடக்க வேண்டிய ஆனால் நடக்காத சம்பவங்கள் குறித்து மக்கள் கருத்தென்ன என்றுதான் ராணியம்மாள் கேட்கிறாள் என்று பெத்ரோவுக்குப் புரிந்தது.

பெத்ரோ சற்று தயங்கினார். யோசிக்க வேணாம். உங்கள் காதில் விழுந்ததை விழுந்தபடி பகிர்ந்து கொண்டால் நன்றி. உங்களுக்கு கொங்கணி தெரியாது என்ற நினைப்பில் உங்கள் முன்னால் ஜாக்கிரதை குறைவாகப் பேசுவார்கள் ஜனங்கள், அதைத்தான் நினைவிருந்தால் சொல்லுங்கள் என்றாள் சென்னா மகாராணி.

சகோதரி, நான் என் காதில் விழுந்த சில அபிப்ராயங்களைப் பற்றி மட்டும் கூடியவரை ஒரு சொல்லும் மாற்றாது எடுத்துச் சொல்கிறேன். அவை எதுவும் என் கருத்து இல்லை. சரிதானா?

பெத்ரோ எங்கிருந்து தனக்குள் இவ்வளவு நன்மை வேண்டுதலும், தைரியமும், வாக்கில் தயக்கமில்லாத தெளிவும் வந்து சேர்ந்தது என்று தெரியாமல் ஆச்சரியப்பட்டார்.

சென்னபைரதேவி போன்ற நியாயமும் கண்ணியமும், திறமையும், தன்னையே தியாகம் செய்து தேசத்துக்கு நன்று இதென்றும் அன்று அதென்றும் பிரித்து நல்லவை நிறைவேற உழைப்பும் பொறுப்புமாக வாழ்வை நடத்திப் போகும் அரச பரம்பரையினர் யாரையும் பெத்ரோ பார்த்ததில்லை.

சென்னா எப்படியும் இந்தத் துன்பம் சூழ்ந்த காலத்தின் ஊடாக வெகுவிரைவில் வெளியே வந்து இன்னும் பத்து ஆண்டுகளாவது சிறப்பாக ஆட்சி செய்யவேண்டும் என்று அவர் திடமாக நம்பினார், அந்த அடிப்படையில் ஊர் நிலவரம் சொல்ல ஆரம்பித்தார்.

ஊர்க் கொச்சை கொங்கணி அவருக்கு சரியாக உச்சரிக்க வரவில்லை. ஆனால் முகபாவமும், கைகால் அசைவும் அதற்கு ஈடு செய்து பேசியது பேசிய மாதிரி  புரிந்துகொள்ளப்பட கொஞ்சம் போல் உதவின. அப்புறம் போர்த்துகீஸ் மொழியிலும்   மொழிபெயர்த்து, கூற வேண்டியதைக் கூறினார்.

தெருவில் பொரி உருண்டை  விக்கறவன் சொன்னது – அவங்க நல்லவங்க தான். ஆனா எல்லாருக்கும் நல்லவங்களா இருக்கணும்னு பார்க்கறாங்க. அது ராமச்சந்திர பிரபு திரும்பி வந்து ஆட்சி செய்ய ஆரம்பிச்சாக்கூட நடக்காது.

இந்த மாதிரி கொங்கணி பாஷை கொச்சையாக பேசினது எல்லாம். அது இல்லாமல், யார், எங்கே, எப்போது பேசினது என்ற தகவல்களைத் தவிர்த்துப் பேசட்டுமா சகோதரி? பெத்ரோ அனுமதி கேட்க, நடக்கட்டும் என்று கையசைத்தாள் சென்னபைரதேவி மகாராணி.

இவங்க, யாராவது தன் ஆட்சியைப் பற்றி குறை சொன்னா அவங்களுக்கு உடனே மிட்டாய் கொடுக்கறதை ஒரே வழியாக வச்சிருக்காங்க. சமணர்கள் சிவன் கோவில்லே நரகல் சட்டியை விட்டெறிஞ்சதா ஊர்ஜிதம் ஆகாத தகவல்கள் சொன்னா, உடனே சைவர்களுக்கு ஒரு புது கோவில் அல்லது விக்ரகத்துக்கு அல்லது கோபுரத்துக்கு பொன் வேய்ந்து தர்றதா வாக்குதத்தம்.

நிறுத்தி, மேலே போகட்டுமா என்று சைகையால் வினவினார் பெத்ரோ. போ என்றாள் சென்னா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2021 05:47

November 8, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – Portugal ambassador learns a lesson on royal etiquettes and protocols

Excerpt from my forthcoming novel MILAGU

பெத்ரோ நின்றபடி குனிந்து மரியாதையோடு சொல்லத் தொடங்கினார் – அம்மா, உங்களை சம்பிரதாயங்கள் மீறி அன்புச் சகோதரி என்று அழைக்கிறேன் இந்தச் சந்திப்பின் மிகுதி நேரத்தில் மட்டும். சகோதரி,  நான் சந்திப்பு என்றதும் நீங்கள் லிஸ்பன் பயணத்தைத்   தள்ளிப்போடுவது பற்றி பேசத்தான் அழைக்கிறீர்கள் என்று மனதில் பட்டது. நீங்கள் சந்தித்திருக்கும் இடர்களை ஒரு அரசரோ அரசரில்லாது தனியே வாழும், ஆளும் ராணியோ எப்படிச் சமாளிப்பார்கள் என்று வியப்படைகிறேன். உங்களுக்கு இதைத் தாங்க மனதில் துணிவையும், பலத்தையும், உடல் நலத்தையும் எங்கும் பரந்த இறை அளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

பெத்ரோ முழங்காலில் மண்டியிட்டு பிரார்த்தனையை உரக்கச் சொல்லி எழுந்தார். இந்தப் பிரார்த்தனையை அவர் மனதிலிருந்து செய்தார்.

சகோதரி, நீங்கள் கட்டாயம் லிஸ்பன் பயணத்தை மேற்கொள்வீர்கள். சற்று தாமதமாகப் புறப்படலாம். சரியான காலத்தில் சரியான நேரத்தில் சென்றடைவீர்கள். ஆண்டவன் அருள் உங்களுக்குண்டு.

முழுக்க பாதிரியாராகத் தன்னை உணர்ந்தார் பெத்ரோ.

அதிகாரபூர்வமாக பயணத்தை ரத்து செய்து லிகிதம் எழுதியனுப்ப வேண்டுமானால் எப்படி எழுதுவது என விசாரிக்க நினைத்திருந்தேன். ஆனாலும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை மீதியுண்டு என்று உங்கள் வாக்கிலிருந்து எனக்கும் நம்பிக்கை முழுக்க அழியவில்லை. தொண்ணூறு வயதில், இன்னும் இருபத்தைந்து வருடம் சென்று கண் பார்வை பழுதுபட்டும், வாயில் பல் எல்லாம் உதிர்ந்தும், காது சரியாகக் கேட்காமலும் இருப்பேன். எனினும் கப்பலேறி லிஸ்பனும் லண்டன் அடைய டோவரிலும் நான் போய் இறங்குவேன். இன்னும் அதிகம் என் நாட்டு வாசனை திரவியங்கள் ஏற்றுமதியாக வழி செய்வேன். முடித்து அப்போது ஜெர்ஸோப்பாவின் அரசரிடம் யாராக இருந்தாலும் சரி பொறுப்பை ஒப்படைத்து நிம்மதியாகக் கண் மூடுவேன்.

கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்ததைத் துடைக்கக் கூடச் செய்யாமல் எதிரே விளக்குத் தூணை உற்றுப் பார்த்தபடி இருந்தாள் சென்னா.

நான் விடை வாங்கிக் கொள்ளலாமா மகாராணி? பணிவோடு கேட்டார் பெத்ரோ பிரபு. அவரை உடனே உற்றுப் பார்த்து சென்னபைரதேவி கேட்டாள் – புறப்பட்டு விட்டீர்களா? நான் உங்களைப் போகச் சொல்லவில்லையே.

இது பெத்ரோவுக்குப் பழக்கமான சென்னபைரதேவி. ஒரு நிமிடம் கருணையும் பரிவும் அடுத்த நிமிடம் அரசாளும் வம்சத்துக்கே உரிய மேட்டுமைத் தனமும், கண்டிப்புமாக உரையாடும் ஜெர்ஸோப்பா மகாராணி.

பெத்ரோ பிரபு குனிந்து வணங்கி மன்னிக்க வேண்டும் மன்னிக்க வேண்டும் மகாராணி அவர்கள் ஓய்வெடுக்கும் நேரத்தில் அவருக்கு தொந்தரவு அளிக்கக் கூடாது என்று நானே முடிவு செய்து புறப்பட்டிருக்கிறேன். என் தவறுதான். மன்னிக்க வேண்டும்.

அவர் நாற்காலியில் அமர்ந்து பேசுவதா, நின்றபடி உரையாடுவதா என்ற தீர்மானத்துக்குவர முடியாமல்  குனிந்து நிமிர்ந்ததைக் காண சென்னபைரதேவிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

Pic Royal etiquettes

Ack  Nobility Association

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2021 06:01

November 7, 2021

வழக்கு முத்தச்சி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்

அசல் குட்டநாடன் சாப்பாட்டுக் கடை உண்டு. போகலாம் சாரே.

ஆலப்புழை போகிற வழியில் அவன் நிறுத்திய இடத்தில் நாலு பெஞ்சுகளையும் மர ஸ்டூல்களையும் பரத்திப் போட்டு ஒரு விடுதி. ஓரமாகத் தூங்கிய நாய்களையும், வாசலில் கட்டி வைத்த செம்மறி ஆட்டையும், பீடி புகைத்தபடி ஓட்டல் வாசல் படிகளில் உட்கார்ந்திருந்த கைலி அணிந்த பெரியவர்களையும் எல்லா ஓட்டல்களிலும் தான் பார்க்க முடியும். ஆனால் வாசலில் நட்ட நடுவே கால் பரப்பி மண் தரையில் அமர்ந்து இருக்கும் ஸ்தூல சரீரப் பெண்மணி?

ஓ, அவளா, வழக்கு முத்தச்சி. டாக்சி டிரைவர் சொன்னான்.

என்றால்? வைத்தாஸ் குழப்பமாகப் பார்த்தபடி காரை விட்டு இறங்க, அந்தப் பெண் இரைய ஆரம்பித்தாள். அவள் சொல்லுகிறதெல்லாம் ஆண்கள் கூடப் பேச யோசிக்கும் தெறிகள், என்றால் வசவுகள் என்று சொன்னான் டாக்சி டிரைவர் சிரித்தபடி.

யாரையாவது வாய்ச் சொல்லால் துன்பப் படுத்த வேணும் என்றால், அவர்கள் எங்கே இருந்தாலும் சரிதான், முத்தச்சிக்குக் காசு கொடுத்தால் இங்கே இருந்தே சரமாரியாக வசவு வீசி அவர்களை முட்டுக் குத்தச் செய்து விடுவாள் இவள்.

இங்கிருந்து திட்டினால் வேற்றூரில் எப்படி அது போய்ச் சேரும்?

அது என்னவென்று தெரியாது. ஆனால் இங்கே திட்டியதும் அங்கே போய் சேர்ந்த உடனே சம்பந்தப் பட்டவர்களுக்குப் பேதியாவதும், நாக்குழறி, வியர்த்துப் போய் சுருண்டு விழுவதும் கிரமமாக நடக்கிறதே.

டாக்சி டிரைவர் சொன்னபடி எட்டணா நாணயத்தை அந்தக் கிழவிக்கு முன்னால் போட்டு விவரம் சொன்னான் – மகம்மை பஞ்சாயத்து தெக்கே பரம்பில் சங்குண்யார். என்னு பறஞ்சால் காணாதுண்ணி சங்கு.

அவன் விலாசம் விவரம் சொல்லும்போதே புன்னகைக்க, வைத்தாஸ் என்ன விஷயம் என்று கேட்டபடித் தானும் சிரித்து வைத்தான்.

என் மாமனார் தான். யாரும் பார்க்காமல் ஒளிந்திருந்து சாப்பிடுகிறவன் என்று பட்டப் பெயர். எனக்கும் காசு தரமாட்டேன் என்கிறான் வயசன்.

அவன் பின்னும் வெகு சத்தமாகச் சிரிக்க, கிழவி வைய ஆரம்பித்தாள். காற்றும் அபானவாயுவாக நாறிப் போனதாக யாரோ சொல்லி அந்தக் கிழவியின் அண்டையில் நின்று இன்னும் ஒருமுறை வசவைத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள்.

கடல் சிலந்தி புணரட்டும் என்கிறாள் கிழவி. ஆக்டோபஸ் பற்றி எங்கே தெரிந்து கொண்டாள்? வியப்போடு வேறே யாரோ சொன்னார்கள். அந்தப் பெண்பிள்ளை இந்த வயதிலும் புதுசு புதுசாக அறிந்து வைத்துக் கொள்வது வெகுவாகப் பாராட்டப் பட்டது.

காணாதுண்ணிக்கு அரையில் புழுப் புழுத்து வீங்கி குறி அறுந்து விழச் சொல்லித் திட்டு என்று சொல்லியபடி டிரைவர் படியேற அதுக்குத் தனியாகத் தரணும் என்றாள் கிழவி.

துரெ, ஒரு ரூபாய் காசோ நோட்டொ இருந்தா தள்ளைக்குக் கொடு. பின்னாலே அட்ஜெஸ்ட் ஆக்கித் தரும்.

யாருக்கோ குறி புழு வைத்து அழுகி அறுந்து விழத் தானும் ஒத்தாசை செய்கிற குற்ற போதத்தோடு உள்ளே நுழைந்தான் வைத்தாஸ்.
———————————————————————————

வழக்கு முத்தச்சி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.

ஆலப்புழ – அம்பலப்புழ டவுண்பஸ் படிக்கட்டில் பல்லி போல தொங்கிக் கொண்டு நின்ற க்ளீனர் பையன் சத்தமாக அறிவித்துச் சிரித்தான்.

பஸ் இங்கே ஒரு அஞ்சு மினிட் நிக்கும். தோச, பரிப்பு வட, சாயா, மலையாளத்திலே தெறி பறைய, தமிழ்லே கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட வசதி எல்லாம் உண்டு மான்ய மகா ஜனங்களே. வழக்கு முத்தச்சிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.

அவன் அறிவிக்க, திலீப் அதிசயமாகப் பார்த்தான். மற்ற பயணிகள் குலுங்கிச் சிரித்தபடி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல கடைக்கு ஏக காலத்தில் நடந்து பரிப்பு வடையும் சாயாவும் உடனே விளம்பித் தரும்படி கோரினார்கள். கடைக்குப் பின்னால் தொலைவில் ஆங்காங்கே செடிகளுக்கும் புதர்களுக்கும் இடையில் குத்தி இருந்து சிறுநீர் கழிக்கும் வாடை இங்கே முகத்தில் குத்தத் தொடங்கி இருந்தது.

மிஞ்சிப் போனால் பத்து நிமிஷமோ, பதினைந்து நிமிஷமோ பிடிக்கும் இந்தப் பயணத்தை அரைமணி நேரமாக்கிய மகானுபாவன் யார் என்று திலீப்புக்குத் தெரியவில்லை.
உலகத்தோடு ஒட்டி செயல்பட, திலீப்பும் ஒரு கயிற்றைப் பற்றி. பற்றி? ஓரமாக உட்கார்ந்து மூத்திரம் போக வேண்டும். அவன் அவசரமாக இறங்கினான்.

சாப்பாட்டுக்கடைவாசலில் கால் நீட்டி இருந்த முத்தச்சி அவனைப் பார்த்ததும் தள்ளாடி எழுந்து அவனைக் கும்பிட்டாள்.

திருமேனி எனக்கு உடனே சாவு வர ஆசீர்வாதம் பண்ணு. ஜீவிதம் மதியாயி.

திலீப் சொன்னான் – அதது அதது நடக்கற நேரத்தில் நடக்கும். நான் திருமேனி இல்லே பாட்டி. பம்பாய் கி சோக்ரா. சின்னப் பையன்.

அவன் சட்டைப் பையில் இருந்து பர்ஸை எடுத்தான்.

இது திட்ட இல்லே, பாட்டித் தள்ளை. வாழ்த்த. நுங்கம்பாக்கம் நீலகண்டய்யர் சம்சாரம் கற்பகம்மாள் இன்னும் இருக்கபட்ட காலம் சௌக்கியமாக கழிந்து தூக்கத்திலேயே சொர்க்கம் போய்ச் சேரணும். தூக்கம்னா மலையாளத்திலே வேறே தானே. அது வேணாம். உறக்கத்திலேயே. உறங்கியே மெல்ல போகட்டும்.

கிழவி திருதிருவென்று விழித்தாள். பிரியமாகக் காசு கொடுத்து ஒருத்தரை வாழ்த்தச் சொன்னது அவள் ஆயுசிலேயே இதுதான் முதல் முறை.

வாய் கோணி, கண் நிலைக்க அவள் வெற்றுவெளியில் கைகளை நீட்டிப் பரத்தினாள். சுழலில் அகப்பட்டு வெள்ளப் பெருக்கத்தில் அடித்துப் போகப்படும் போது சின்னச் செடியையோ மிதக்கும் மரக் கட்டையையோ பற்றியபடி நீந்திக் கரை சேர்ந்து உயிர் பிழைக்கச் செய்யும் கடைசி முயற்சி போல அவள் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள். இதுவரை கற்றது எல்லாம், பேசியது எல்லாம், சபித்தது எல்லாம் பிரயோஜனப் படாதவை என்று ஆக, இன்னொரு தடவை முதலில் இருந்து தொடங்கி, புதிய ஒரு மொழியில் எழுத்தெண்ணிப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவளாக அவள் தெரிந்தாள். நீட்டிய கைகள் நீட்டியபடி இருக்க அவள் மெல்ல எழுந்தாள். ஓவென்று அழுதபடி திலீப்பின் கையைப் பிடித்துக் கொண்டாள் –

நாயனே, எனக்குத் தெரியாது. யாரையும் வாழ்த்த எனக்குத் தெரியாது.

சொல்லியபடி அவன் கையில் அவனிடமிருந்து வாங்கிய ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு அவள் தள்ளாடித் தள்ளாடி நடந்து போய்விட்டாள். பஸ் திரும்பக் கிளம்பும் போது யாருமே எதுவுமே பேசவில்லை.

கிழவியைச் செயலில்லாமல் நான் ஆக்கி விட்டேனா? புதுசாகக் கவலைப் பட ஆரம்பித்தான் திலீப். எதிர்பார்க்க, கரிசனம் காட்ட, பயம் விலக எவ்வளவோ இருக்க, இந்த வயசான பெண்பிள்ளை எங்கே இதற்கு நடுவே வந்தாள். அவளுக்கு ஏதும் கயிறுகள் இல்லை. அவள் நினைத்தபடி நினைத்த இடத்தில் நினைத்த நேரம் கோலூன்றி நடுங்கும் கால்களை ஊன்றி ஆட முயலலாம். திட்டாமலேயே உயிர் வாழ முடியாதா என்ன? வாழ்த்தாமல் இத்தனை வருடம் வாழ்ந்தவளுக்கு அது என்ன கஷ்டம்? ஆனால் வருமானத்துக்கு என்ன செய்வாள்? திலீப் அவளை மறுபடி சந்திக்கும்போது ஐந்து ரூபாய் கொடுப்பான். அவனால் முடிந்தது அதுதான்.

(என் ‘வாழ்ந்து போதீரே’ நாவலில் இருந்து இரண்டு சிறு பகுதிகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2021 05:41

November 6, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – யாதனின் யாதனின் நீங்கியான் – To renounce is to attain eternal bliss

ராணியின் தாதி கையில் ஏந்திய சிறு குப்பியில் மருந்து மணக்கும் ஏதோ ரசாயனத்தை எடுத்து வந்திருக்க, இதோ வருகிறேன் என்று பெத்ரோவிடம் சொல்லிவிட்டு ராணி வாசலுக்குப் போனாள்.

ராணி திரும்பி வந்து கேட்கப் போகும் கேள்விகள் எப்படி இருக்கும்? பெத்ரோ யோசித்தார் –  உங்கள் மாளிகையில் வளர்க்கும் பசுக்கள் நீல நிறத்திலும் பச்சை நிறத்திலும் பொழியும் பால் சுவையாக இருக்கிறதா? சனிக்கிழமை பகலில் கருப்புக் குடை பிடித்து காய்ச்சிய பால் பருகுகிறீர்களா?

பொருள் இருக்கிறதோ இல்லையோ, புது மொழியைக் கற்றுக்கொள்ள இப்படியான உதிரிக் கேள்விகள் மூலம் மொழிப் பயன்பாட்டைப் பரிச்சயம் செய்து கொள்வதே எளிய வழி என்று கேள்விப்பட்டிருக்கிறார் அவர். இந்தக் கேள்விகளுக்கு அதே போல அல்லது இதைவிட அபத்தமாகப் பதில் சொல்வதும் நினைவு வந்தது.

ஆரஞ்சு வர்ணப் பசுக்கள் புதன்கிழமை பால் ஈந்தன. வியாழனன்று      பிற்பகலில் தாடி வைத்த, சரிகைப் பிடவை அணிந்த அரசாங்க அதிகாரிகள் சருக்கரை சேர்த்து பாலைச் சுண்டக் காய்ச்சி எனக்கு குடிக்கக் கொடுத்தார்கள். அதை உம்மிடம் சொல்ல மறந்து போனேன். மன்னிக்கவும்.

இந்த பதிலை மனதில் ஓட விட்டு சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தார் பெத்ரோ. ராணியம்மாள் தாதி கொண்டுவந்த மருந்தை அருந்திவிட்டுத் திரும்பி வரும்போதே வினாத் தொடுத்தபடி வந்தாள் – லிஸ்பனில் பிற்பகல் நேரத்தில் இப்போது மழை இருக்காதோ?

ஆம் இது மழைக்கொண்டல் மேகங்கள் வெளிவாங்கும் காலம் என்பதால் அப்படி நடக்கும் என்று பதில் சொன்னார் பெத்ரோ.

வெளிவாங்கும் என்ற சொல்லுக்கான பொருள் புரியாமல் அதை இருமுறை உச்சரித்தாள் மகாராணி அவர்கள். அதிலிருந்து வெளியே வருவது என்று பெத்ரோ சொல்ல, அதிலிருந்து வெளியேறுவது. நல்லது அதிலிருந்து வெளியேறுவது என்று திரும்பத் திரும்பச் சொன்னாள் சென்னபைரதேவி,

வெளிவாங்கினேன். உறவில் இருந்து வெளிவாங்கினேன். லிஸ்பன் பயணம் செய்து கண்டு வர நினைத்த ஆசையிலிருந்து வெளிவாங்கினேன். சொல்லியபடி பெத்ரோவை நோக்கிக் கனிவாகச் சிரித்தாள் சென்னா.

வளர்ப்பு மகன் நேமிநாதனை அரச மாளிகையிலிருந்து வெளியேற்றியாகி விட்டது. வாழ்க்கையில் ஒரே ஆசை கடல்மேல் பயணப்பட்டு ஐரோப்பாவில் லிஸ்பன் சென்றடைந்து தன் சரிசமனான அந்தஸ்து உள்ள போர்த்துகல் அரசரோடு மிளகு ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றியும் மிளகு தருவோம் மிளகாய், வெங்காயம் கொடுங்கள் என்று பண்ட மாற்று வணிகத்துக்கு வழி வகுத்திருக்கலாம். ஆனால் இப்போது எந்தப் பயணமும் இல்லை. எல்லாவற்றில் இருந்தும், எல்லோரோடுமிருந்தும் வெளிவாங்கி விட்டேன். துன்பம் ஏற்படுத்தும் எல்லாவற்றிலிருந்தும் வெளிவாங்கி விட்டேன். இன்பம் தரும் எல்லாவற்றிலிருந்தும் வெளிவாங்கி விட்டேன்.

சிரிப்பு வெளிவாங்காத மனம் முகத்தில் பிரதிபலிக்கச் சொன்னாள் மிளகு ராணி.

pic ack amazon.com

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2021 20:08

November 4, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – Making the Portugal ambassador feel at home, as part of the détente

Excerpts from the forthcoming novel MiLAGU

உள்கதவு திறக்க மகாராணியின் தாதி உள்ளே வந்து பெத்ரோ பிரபு மிளகு ராணியை சந்திக்கலாம் என்றாள். நன்றி சொல்லி பெத்ரோ நஞ்சுண்டையாவை நோக்கினார். மொழிபெயர்ப்பாளராக துபாஷி பணி செய்ய அவர் இல்லாமல் கொங்கணி பேசும் சென்னபைரதேவி மகாராணியும் போர்த்துகீஸ் மொழி பேசும் இமாலுவேல் பெத்ரோவும் நேர்காணலோ, ஆலோசனையோ, பேச்சு வார்த்தையோ நடத்த முடியாதே.

நஞ்சுண்டையா குனிந்து பெத்ரோ காதில் சொன்னார் –

நீங்கள் கடந்த ஐந்து ஆண்டில் கொங்கணியில் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டீர்கள். எங்கள் போர்த்துகீஸ் மொழியறிவு தான் கொஞ்சம் குறைவு. அதை ஈடு செய்ய ராணியம்மா போர்த்துகீஸ் மொழியிலேயே பேச முயல்வார். பிரபு, நீங்கள் சற்று வேகம் தவிர்த்து மெல்லப் பேசினால் நல்லது.

நிச்சயமாக என்றார் பெருமகிழ்வோடு பெத்ரோ.

ராணி சிரித்தபடி தயங்கினால் வேறு எளிய சொற்களைப் பயன்படுத்தி பேச்சு தடம் மாறாமல் நேர்கோட்டில் பயணம் செய்ய முன்கை எடுக்கக் கோருகிறேன் என்றார் பின்னும் நஞ்சுண்டையா பிரதானி சிரித்தபடி.

முயற்சி செய்கிறேன் சென்ஹர் நஞ்சுண்டய்யா. நீங்கள் இல்லாமல் எப்படி நடக்குமோ என்று விசனத்தைக் களைகின்றேன்.

கவலைப்படாதீர்கள், சமாளிக்க முடியாமல் போனால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளத் தயாராக நான் இங்கேயே இருப்பேன் என்றார் பிரதானி.

பெத்ரோ வேகமாகக் கதவைத் திறந்து உள்ளே போக முற்பட, அவரைக் கையைக் காட்டி ஒரு வினாடி நிறுத்தினார் நஞ்சுண்டய்யா.

பிரபு, தங்கள் காலணிகளை கதவருகில் விட்டுச் சென்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.

ஓ மறந்துவிட்டேன் என்று கூறியபடி காலில் கையை வைத்து நடனமாடுகிற மாதிரி காலணிகளைக் களைய முற்பட்டார். ஒரு வினாடி கீழே விழுகிறது போல தள்ளாட, நஞ்சுண்டய்யா அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

உள்ளே இருந்து சிரிப்பு சத்தம்.

பெத்ரோ பிரபு ஆடிப் பாடி இந்த சந்திப்புக்கு வர உத்தேசித்தது போல் தெரிகிறது. அப்படித்தானே? என்னால் ஆட முடியாது. வயதாகிவிட்டது.

சிரித்தபடி அரசி தாம் அமரும் சிறப்பு ஆசனத்தில் இருந்து எழுந்து நிற்க பெத்ரோ இருகரமும்  சேர்த்துக் கூப்பி வணங்கினார். சென்னபைரதேவி மகாராணியோ ஐரோப்பிய பாணியில் வலதுகையை நீட்டி பெத்ரோவோடு அன்போடு கைகுலுக்கினார்.

பெத்ரோவுக்கு முன்னொரு பொழுதில் மகாராணி அவருக்குக் கைகொடுத்து விட்டு உடனே கை அலம்பிக் கொண்டது நினைவு வந்தது. இப்போதும் கைகழுவத் தண்ணீரோடு சேடிப்பெண் அல்லது தாதியோ வரலாம் என்று எதிர்பார்த்திருக்க யாரும் வரக்காணோம்.

சூழல்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல், கலாசார சமன்பாடுகள் மாறிக் கொண்டிருக்கின்றன. பெத்ரோ ஐந்து வருடம் முன்பு மிளகு ராணி சென்னபைரதேவி என்று சொல்லக்கேட்டு பிரமிப்பும், வியப்பும், மனதில் படபடப்புமாக முதல் தடவையாக மிர்ஜான் கோட்டையில், தன்னை போர்த்துகீஸ் அரசர் விவேகன் பிலிப் அரசப் பிரதிநிதியாக நியமித்து எழு,திய கடிதத்தைக் கொடுத்தபோது அவருடைய கரங்கள் நடுங்கியது நினைவு வந்தது.

மூச்சு பேச்சு நீங்கி தரையில் கிடத்தி விடுமோ மேனி நடுக்கமும், தலை சுற்றுதலுமாக உடல் நிலை என்று பயம் உண்மையிலேயே ஏற்பட்ட நேரம் அது. போர்த்துகல் அரசின் வருடாந்திர செலவில் கணிசமான தொகையை ஏற்றுமதி வருமானமாகத் தொடர்ந்து பெற்று வரும் மெலிந்த இந்துஸ்தானத்துப் பெண்மணியாக மிளகு ராணியைச் சந்தித்ததில் ஏற்பட்ட வியப்பை விவரிக்க அவரிடம் வார்த்தையில்லை. .

அதற்கப்புறம் மிளகு விலை நிர்ணயித்தல் பற்றிக் கறாராக மகாராணி பேசிய பல நேர்காணல்கள், யாருக்கு எவ்வளவு லாபம் என்று தெளிவாகத் தெரிந்து செய்தி பகிர்ந்து உரையாடும் திறமை, அபாரமான நகைச்சுவை ரசனை, வாசிப்பு ரசனை என்றெல்லாம் பெத்ரோவை ஆச்சரியப்படுத்தியவள் சென்னா மகாராணி.

ஆற்றலும் அதைக் கொண்டாடும் பாங்கும் இரண்டு பக்கமும் உண்டு. வியந்து கரகோஷம் செய்து வணங்கி வானம் நோக்கி வியப்பைப் பகிர்தல் மட்டும் இல்லை. சென்னா என்ற மனிதப் பிறவி பற்றி, சொந்த வாழ்க்கையில் சுகப்படாத, தேசம் தேசம் என்று மிளகு மூட்டையை மனதில் எப்போதும் சுமந்து விற்று அதிகக் காசு வரவழைத்து வருமானத்தை அதிகப்படுத்துவதிலேயே கண்ணாக இருக்கும் மூதாட்டி மேல் பரிவும் அனுதாபமும் பெத்ரோ மனதில் இப்போது மேலெழுகின்றன.

வாருங்கள் பெத்ரோ நான் இன்றைக்கு முழுக்க போர்த்துகீசில் தான் உங்களோடு உரையாடப் போகிறேன். உங்களுக்கு விரோதம் ஏதுமில்லையே

யுவர் எக்ஸலென்ஸி, நீங்கள் எம் மொழியில் இந்த சந்திப்பில் பேசப் போகிறீர்கள் என்பது எனக்குக் கிடைத்த பெரும் பேறாகும். உங்கள் பேச்சு மிக அருமையாக, லிஸ்பனில் மகாராணி மற்றும் மகாராஜா ஆகியோரின் மேட்டுக்குடி அரச உச்சரிப்பு கொண்டுள்ளது. நன்றி மகாராணி. நன்றி மிளகு மகாராணி என்று மெதுவாகச் சொன்னார், பெத்ரோ.

சென்ஹோர் பெத்ரோ, உங்கள் வயது என்ன?

சென்னபைரதேவி மகாராணி உரையாடலைத் தொடங்கிய விதமே பெத்ரோவுக்கு ஆச்சரியகரமானதாக இருந்தது. லிஸ்பனில் இருந்து இங்கே பெத்ரோ பணி நிமித்தம் வந்த பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக   மிர்ஜான் அரண்மனைக்கு வந்து மகாராணியோடு எவ்வளவோ தடவை விரிவான நேர்காணலும், குறிப்பிட்ட காரிய காரணங்கள் பற்றி சிறு சந்திப்பும் உரையாடலுமாக அலுவல் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்.

இதுவரை சென்னபைரதேவி மகாராணி பெத்ரோவின் சொந்த வாழ்க்கை பற்றிக் கேட்டதே இல்லை. ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் பெத்ரோ குடும்பம் பற்றிய குற்றச்சாட்டு இங்கே பேச்சு நடக்கும்போது அடிபட்டது. பெத்ரோவின் மாமனார் கோழிக்கோட்டில் விவசாயத் தொழிலாளிகள் மூலம் மறைமுக மிளகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதை விசாரித்துக் கடுமையாக எச்சரித்தார் மகாராணி. அதுவும் முழுக்க அரசுப் பணி சார்ந்ததுதான்.

வயது என்ன? பெத்ரோவுக்கு ஐம்பத்தைந்து வயது. சென்னபைரதேவி மகாராணிக்கு அறுபதாம் ஆண்டு விழா மாநிலமே கொண்டாடி இப்போது அவர் வயது அறுபத்தைந்து என்று அனைவரும் அறிவர். பெத்ரோவை விட பத்து வயது மூத்தவர் அவர்.

சிரித்தபடி ”யுவர் எக்சலென்ஸி, நான் மகாராணியாரை விட பத்து வயது இளையவன். அனுபவத்திலும் திறமையிலும் வைத்துப் பார்த்தால் இன்னும் பிறக்கவே இல்லை.  யுவர் எக்ஸெலன்சியிடம் பார்த்து, கேட்டு, உரையாடி, கற்றுக்கொள்ள வேண்டியவன்” என்று தலை வணங்கிச் சொன்னார்.

”உங்கள் வயதில் எனக்கு ஒரு இளைய சகோதரன் இருந்தான். மகாமாரி நோய்த் தொற்று ஐம்பது வருடங்களுக்கு முன் உத்தர கர்னாடகப் பிரதேசத்தில் நிறைய உயிர்களைக் காவு  வாங்கியபோது அவனும் நோய் கண்டு இறந்து போனான். போகிறது. நீங்கள் இப்போது என் இளைய சகோதரனாக  இருக்கிறீர்கள்”.

ராணி பெருமூச்செறிந்து ஒரு நிமிடம் தரையைப் பார்த்தபடி இருந்தாள். பெத்ரோ அரசியல் சந்திப்புகள் பலவற்றையும் பல பிரமுகர்களோடு நடத்தி இருக்கிறார். மரியாதை விலகாமல் அதே நேரத்தில் பேசும் பொருளை, பேச்சு நடக்கும் போக்கினை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் கொண்டு செலுத்துவதாக இருக்கத் தேவையான பயிற்சி கொடுத்துத்தான் இந்துஸ்தானத்துக்கு அனுப்பியுள்ளார்கள். ஆனால் இது போல் ஒரு சூழ்நிலையை அவர்கள் கற்பனை செய்தும் பார்த்திருக்க முடியாது.

இந்த நேர்காணல் எந்த திசையில் போய்க் கொண்டிருக்கிறது என்றே அனுமானிக்க முடியவில்லை. பெத்ரோ அவருக்குப் பழக்கமான உரையாடல் போக்கை சற்றே மாற்றி நிறுத்திவிட்டு ஆத்மார்த்தமாக உரையாட முடிவு செய்தார்.

ராணிக்கு இளைய சகோதரன், ரத்த பாசம் அடிப்படையான உறவின் வார்ப்பு தான். அந்த அன்பை கூடப் பிறக்காவிட்டாலும், சகோதரி என்ற பிரியம் வெளிப்பட பெத்ரோ திரும்பச் செலுத்துவார். இதில் ராஜாங்கம் ஏதுமில்லை.

எனின், அரசர்களும், அரசிகளும், இளவரசர்களும் இளவரசியரும் மிகுந்த உலகில் பெத்ரோ எப்போதும் அரசராக மாற முடியாது. செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக ஒரு பதவி கிட்டினாலும் அது ஆள வழி செய்யாது. செயல்படுவதைக் கட்டுப்படுத்துவதும் புதுக் கட்டுப்பாடுகளை விதிப்பதும் அப்படியான மக்கள் பிரதிநிதி தேர்வுகளால் சாதிக்க முடியும். சரித்திர நாடகம் எழுதி மேடையில் நடித்தால் தவிர அவர் அரசராக மாட்டார்.

சகோதரரே, உங்கள் மனைவி குழந்தைகள் நலமாக உள்ளார்களா?

மிளகுராணி கேட்டது ஒரு அளவில் தன் போர்த்துகீஸ் பேச்சு ஞானத்தைச் சோதித்துக் கொள்வதற்கான சொற்றொடர் அமைப்புப் பயிற்சி போல தெரிந்தாலும், ராணி வினவிய கேள்விகள் தகுந்த பதில் சொல்ல வேண்டியவை என உணர்ந்த பெத்ரோ, ”யுவர் எக்சலண்சி, என் மனைவியும் இரு குழந்தைகளும் கடந்த ஞாயிறன்று ஹொன்னாவரில் என் வீட்டுக்குத் திரும்பினார்கள். அவர்கள் அனைவரும் நலம்” என்று பணிவோடு பதில் சொல்லி அடுத்த கேள்வியை எதிர்பார்த்திருந்தார்.

pic detente

ack  yale.edu

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2021 19:34

November 2, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – Pepper Queen commences negotiations on diplomatic help, with Portugal ambassador

பெத்ரோ பிரபு மிர்ஜான் கோட்டை வாசலுக்கு வந்தபோது எந்தப் பரபரப்பும் இல்லாமல் அந்தப் பெருவெளி இருந்தது.

திட்டிவாசலைத் திறந்து யார் வந்திருப்பது என்று பார்க்கும் பெரிய மீசை வைத்த காவலாளி இல்லை. இன்னார் வந்திருக்கிறார் என்ற செய்தியை உள்ளே தெரிவிக்க கோட்டை அலுவலகத்துக்கு ஓடும் வீரன் இல்லை. என்றாலும் கோட்டைக் கதவுகள் சார்த்தியிருந்தன.

சிக்கன நடவடிக்கையாக கோட்டை ஊழியர்கள் சிலருக்கு அரை ஊதியத்தில் விடுமுறை கொடுத்து வீட்டுக்குத் தற்காலிகமாக அனுப்பியிருப்பதாகக் கேட்ட வதந்தி பெத்ரோவுக்கு நினைவு வந்தது. கருவூலப் பணம் இருப்பு குறைந்திருப்பதாகக் கேட்டது நிஜமாக இல்லாதிருக்கலாம்.

ஓஓஓ என்று யாரோ கோட்டையை அணைத்து எழுந்த கொத்தளத்தில் இருந்து ஒலி எழுப்பியதுபோல் கேட்டது பெத்ரோவுக்கு. நிமிர்ந்து பார்த்தார். அங்கே சாதாரணமாக முரசு அறைவோர் இருப்பார்கள். வாசலில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளே வருகிறார் ஒரு வெளியார் என்று கோட்டையில் இருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்ல அந்த முரசு முழங்கும். வந்தவருக்கு மரியாதை செலுத்தும் முறையும் அதுவாகவே இருக்கும்.

இன்றைக்கு முரசு மேடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. ஓவென்று குரல் எழுப்பியது யாராக இருக்கும்? பெத்ரோ பார்த்துக் கொண்டிருந்தபோது அரண்மனை வைத்தியர் பைத்யநாத் உள்ளிருந்து வந்து ஓஓஓ என்று கையைக் குவித்து வாயருகில் வைத்துப் பெரும் பறவை கூவுவதுபோல் ஒலி எழுப்பினார்.

உள்ளே இருந்து சேடிப் பெண்டிர் இருவர் வந்து பார்த்துவிட்டு நின்றார்கள். வைத்தியர் பெத்ரோவின் நான்கு குதிரை சாரட்டைச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்ல அந்தப் பெண்கள் உள்ளே ஓடினார்கள். உடன் திரும்பி வந்து அவரிடம் ஏதோ தெரிவித்துப் போனார்கள்.

வைத்தியர் கொத்தளத்தில் நின்றபடி பெத்ரோவின் கவனத்தைக் கவர, கணேச கௌஸ்துபம் ஆடுவதற்கு வெகு அருகில் வரும் அடவுகளை, அடுத்தடுத்து அபிநயித்தார். பெத்ரோ கையசைத்துத்துத் தான் கவனிப்பதாகப் புரியவைத்தார். வைத்தியர் ஒரு வினாடி உறைந்து நின்று இரு கரமும் உள்ளும் வெளியும் கவாத்து செய்கிறதுபோல் சமிக்ஞை காட்டி அடக்கமாகச் சற்று குனிந்து அங்கிருந்தபடியே பெத்ரோவை வணங்கினார். பெத்ரோவுக்கு ஆட்டபாட்டத்தோடு அனுமதி கிடைத்திருக்கிறது உள்ளே வர.

சாரட்டை விட்டு இறங்கி கோட்டை வளாகத்தின் ஈசான்ய மூலையில் காத்திருக்குமாறு அனுப்பிவிட்டு கோட்டை வாசல்களை நோக்கி நடக்க ஆரம்பித்தார் பெத்ரோ.

வெளிமண்டபத்தில் போட்டு வைத்திருந்த குரிச்சிகள் வரிசை குலைந்து இருப்பதைப் பார்க்க ஏனோ மனதுக்கு வருத்தமாக இருந்தது பெத்ரோவுக்கு. அந்த பிரம்பு நாற்காலிகளின் மேல் மெல்லிய தூசிப் பூச்சு காணப்பட்டதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.

வெளிமண்டபம் முழுவதும், உள்மதிலுக்கு அருகே தோட்டத்தில் பிரம்மாண்டமாக வேர்விட்டு நின்றிருந்த ஆலமரத்தின் உதிர்ந்த இலைகள் காற்றில் அடித்து வரப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றும் ஒதுங்கி உலர்ந்து கிடந்தன. அவை மண்டபத்துக்கு கூடுதல் சோபை  அளித்தன.

கோட்டை அலுவலகர்கள் பெரும்பாலும் அவர்கள் அளவில் கொண்டு வரப்பட்ட விஷயத்தில் தீர்வு சொல்லி அனுப்புவது வெளிமண்டபத்தில் வைத்துதான். உள்மண்டப சந்திப்பு ஏதாவது தரப்பட்ட நேரம் கடந்து நீளும்போது, அடுத்த சந்திப்புக்காக வந்து சேர்ந்தவர்களை இருக்க  வைப்பதும் வெளிமண்டபத்தில் தான்.

தீபங்களும் லாந்தர்களும் ஒளியூட்ட அநேக முறை பெத்ரோ கலந்து கொண்ட நேர்காணல் சந்திப்புகள் மாலை மங்கி இரவாகும்போதும் நடந்து கொண்டிருப்பது வாடிக்கை. வெளிமண்டபத்திற்கு அவ்வப்போது உள்ளே இருந்து வந்து அற்பசங்கை தீர்க்க, குவளையில் எடுத்துப் பானைத் தண்ணீர் குடிக்க என்று ஐந்து நிமிடம் ஈடுபட்டு, மறுபடி உள்ளே போவதும் வாடிக்கை.

அந்த வெளிமண்டபம் இப்படி சோபை இழந்து காணப்பட்டதில்லை இதுவரை. பெத்ரோ வெளிமண்டபத்தின் வழியே நிதானமாக நடந்து உள்ளே போனார். கதவுகளும் ஜன்னல்களும் பாதுகாப்பு கருதியோ என்னவோ அடைத்து வைத்திருந்ததால் பகல் நேர பகுதி இருட்டும் அந்த இருட்டுக்கே உரிய புழுக்கமான வாடையுமாக வெளி, உள் மண்டபங்கள் குமைந்துகொண்டிருந்தன.

உள் மண்டபத்தில் இருந்து ராணியம்மாளின் அலுவலகமும் அங்கிருந்து கோட்டை அலுவலகங்களுக்குப் போகும் பாதையும். ராணியம்மாவின் தங்குமிடமான கோட்டை அரண்மனைக்கு நீளும் தோட்ட வீதியும் ஆள் நடமாட்டம் சிறிதுமின்றிக் கிடந்தன.

வழியில் ஓரமாக இருட்டில் நின்ற சின்ன பூனையின் கண்கள் இருட்டில் ஒளிர நீண்ட பற்கள் பெத்ரோவுக்குப் பயமுண்டாக்கின. அவர் தயங்கி நிற்க, வாருங்கள் என்று உள்ளிருந்து அழைப்பு.

ஜன்னல்களைத் திறக்கச் சொல்லி கூட நின்ற சிப்பந்திக்குக் கட்டளையிட்டபடி ஆசனத்தில் அமர்ந்து, பெத்ரோவையும் பக்கத்து நாற்காலியில் இருக்கச் சொன்னவர் நஞ்சுண்டையா பிரதானி. தலையில் குல்லா தரிக்காததால் யாரென்று அடையாளம் காண சற்றே சிரமப்பட்டார் பெத்ரோ.  தொப்பி தரிக்காத போர்த்துகல் மன்னர் போல வழுக்கை ஓடிய தலையோடு வித்தியாசமாகத் தெரிந்தார் நஞ்சுண்டையா.

நலம் விசாரிப்பு வழக்கம்போல் நடந்தேறியது. ஒரே தெருவில் அடுத்தடுத்த மாளிகைகளில் வசித்தாலும் இப்படி எப்போதாவது சந்திக்கிற அளவு நகர வாழ்க்கை பரபரப்பானதாக இருப்பதாக எப்போதும் மொழியப்படும் அங்கலாய்ப்புகள் வந்து போயின.

உள்கதவு திறக்க மகாராணியின் தாதி உள்ளே வந்து பெத்ரோ பிரபு மிளகு ராணியை சந்திக்கலாம் என்றாள்.

 

ack diplomacy.edu

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2021 18:51

November 1, 2021

பெரு நாவல் ‘மிளகு’ – Gerusoppa expects an imminent war while Honnavar does not forecast it

ஆக ஹொன்னாவரிலே யுத்தம் வர்றதப் பற்றி அவ்வளவா கவலைப்பட்டுக்கலே. ஜெரொஸுப்பாவிலே நிலைமை எப்படி?

யுத்தம் கட்டாயம் இன்னும் ரெண்டு மாசத்திலே வந்துடும்னு நம்பறா அவா. தெருவிலே காய்கறி விக்கறவன், வீடு கூட்டற பெண், கல்லை உடைச்சு கட்டடம் கட்டறவா, தெருவிலே புட்டும் கடலை சுண்டலும் விக்கறவா, சர்க்கார் உத்தியோகஸ்தன் இப்படி சாமான்ய ஜனங்கள் சண்டை வரும்னு எதிர்பார்க்கறா.

அவா எல்லாம் ஸ்வாமிக்கு பயந்தவா. ஆனா கோவில், பசதின்னு செலவு பண்ணி மத்தபடி ஊரை கவனிக்காம விட்டதா ராணியம்மா மேலே கோபம்.

சண்டை வரட்டும் நியாயம் ஜெயிக்கட்டும்கிறா அவா எல்லாரும். கடந்த நாலு மாசமா அவா எல்லாம் சொத்தை எல்லாம் தங்கமா மாத்தி எடுத்துண்டு போய் உடுப்பி, உள்ளால், மங்கலாபுரத்துலே பத்திரமா வச்சுட்டா. வீட்டை என்ன பண்றது? அதை எடுத்துண்டா போக முடியும்? அப்புறம் ஒண்ணு. நம்ப மாட்டேள்.

சொன்னாத்தானே நம்பறதும் மத்ததும் பார்க்கலாம் ராயரண்ணா?

ஒரு வேளை யுத்தத்திலே தோற்றுப் போய் வெளியூருக்கு குடிபெயர வேண்டி வந்தா வரலாம். அப்போ ஜெயிச்ச படைகள் வீடு வீடாகத் தேடிப்போய் காசு பணம் விலையுயர்ந்த பொருள் எதாவது இருக்கான்னு கொள்ளையடிக்கப் போவா. வீடு நன்னா இருந்தா அவனவன் அங்கேயே குடியிருப்பை மாத்திக்கக் கூடும். ஜெருஸோப்பா வீடு எல்லாம் களிமண் பூமிங்கறதாலே  சோறு வட்டையிலே வார்த்த மாதிரி ஒண்ணுக்கும் மத்ததுக்கும் வித்தியாசமே தெரியாது. ரொம்ப எளிசான கட்டிடம் எல்லாம். இருந்தாலும் விரோதி குடிபுகாம இருக்கணுமே.

அதுக்கு என்ன பண்றாளாம்?

அதுக்கு கொத்தனாரை விட்டு அங்கே இங்கேன்னு இடிச்சு வெளியிலே தெருவிலே இருந்து பார்த்தா, முழுசா இடிஞ்ச கட்டிடமா எல்லா வீடும் தெரியும். உள்ளே மரம், கதவு எல்லாம் அப்படியே வச்சு இல்லே எடுத்து அடுக்கி வச்சுட்டு, பேய் மிளகு கொடியை சுத்தி பயிர்பண்ணிட்டா அப்புறம் உள்ளே யாரும் போக மாட்டா.

இன்னும் புரியலே இது அண்ணா

நல்ல காலம் திரும்பி சென்னபைரதேவி ஆட்சி திரும்ப வந்தா ஜெருஸொப்பா ஜனக்கூட்டமும் ஊர் திரும்பும், வீடு திரும்பும். குறைந்த பட்ச மராமத்து செய்து பேய் மிளகை எடுத்து போட்டுட்டா வசிக்க தகுதியாகிடும் வீடெல்லாம். அல்லது அதுக்குள்ளே பேய்மிளகு சாத்வீகமான பயிராகி இருக்கும் அதுக்கு எதிர்மறை மருந்து கண்டு பிடிச்சிருப்பா. அல்லது வெட்டிப்போட்டு காரை பூசி தரைக்குக் கீழே புதைச்சிருப்பா, இப்படி ஊரோடு அபிப்ராயமாம். இப்போதைக்கு பேய் மிளகுல்லேருந்து ரசாயனம் எடுத்து எலி பாஷாணம் பண்ணினா அதை முழுங்கின எலி எல்லாம் தானே கழுத்தை நெறிஞ்சுண்டு பரலோகம் போயிடுமாம்

என்ன மூஷிக ஸ்வர்க்கமோ! அது கிடக்கட்டும். கோவில், பசதி, பஜனை மடம் இப்படி பொதுக் கட்டடங்களைக்கூட கிரமமா இடிக்க திட்டம் எல்லாம் கொத்தனாரை வச்சு பூர்த்தி பண்ணியாகிறதாம்.

யுத்தம் மட்டும் தான் வருமா, வந்தா யாருக்கும் யாருக்கும்னு நிச்சயமா தெரியலெ.

கட்டற கொத்தனார் எல்லாரும் முதல்லே இடிக்க மாட்டேன்னாளாம். என் கையாலே கட்டி என்கையாலேயே இடிக்க மாட்டேன்னு கண்ணீர் விட்டு அழுகையாம். காசு கூடக் கொடுக்கறேன்னதும் பார்க்கலாம்னு சமாதானமானதா கேள்வி. இப்பவே கொத்தனாருக்கெல்லாம் வீட்டை இடிக்க வரச் சொல்லி நிறைய வேண்டுகோளாம். இருபது வராகன் தரும் வேலைக்கு நூறு வராகன் தர தயாராம் ஊர் ஜனங்கள். கிருஷ்ணராயர் சொன்னார்.

கட்டறதுக்கு செலவை விட இடிக்கறதுக்கு அதிக செலவு பிடிக்கும். ராமராயர் சொல்லும்போதே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

அதானே, ஒரு பணம் கொடுத்து கட்டு. ஒம்பது பணம் கொடுத்து வெட்டு.

இரண்டு வைதீகர்களும் ஒரே நேரத்தில் சிரித்துக்கொண்டிருக்க, ராமராயரை சிவராம பட்டர் கேட்டார் –

ஹொன்னாவர் அக்ரஹாரத்திலே நாம் என்ன பண்ணப் போறோம்? அக்ரஹாரம் இருக்கட்டும், நீர் என்ன பண்ணப் போறீர்?

ராமராயர் வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து ஒரு காய்ந்த வெற்றிலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். வெற்றிலையா இது, பேய் மிளகு மாதிரின்னா இருக்கு என்று ஆச்சரியப்பட்டார்.

எழுந்து வேஷ்டியை இன்னொரு முறை கிட்டத்தட்ட அவிழ்த்தே கட்டி கச்சத்தை முடிந்தபடி சொன்னார் –  வரும் வியாழக்கிழமை, கோட்டை கார்யஸ்தன் சுப்பு சஷ்டியப்த பூர்த்தி. நடத்திக் கொடுத்திட்டு, திருப்தியா போஜனம் செஞ்சுண்டு, சிரம பரிகாரம் பண்ணிண்டு, யோசிக்கலாம்.

படம் பழங்காலக் கடை
நன்றி – en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2021 20:11

பெருநாவல் ‘மிளகு’ – There certainly is going to be a war. We don’t know who will fight whom

An excerpt from MILAGU

இதெல்லாம் சென்னாவா செய்ய மாட்டா அண்ணா. அவ ரொம்ப நல்லவ. சாது வேறே. அந்த அப்பக்காவோ, கிறுக்கு வேஷம் போடற அவாத்துக்காரன் வீரநரசிம்மனோ அவ மனசைக் கெடுக்கறாளாம்.

பெத்ரோ துரை இருக்காரே, போர்த்துகல் ராஜ பிரதிநிதி அவருக்கு மிர்ஜான் கோட்டையிலே இருக்கப்பட்ட செல்வாக்கு, விஜயநகர பிரதிநிதி ஹனுமந்த ராயக் கிழடுக்குக் கூட அங்கே இல்லையாம். யார் கண்டா இவா வேறே என்ன மாதிரி ஒருத்தொருக்கொருத்தர் பட்சமா இருக்காளோ. வயசானா சிலபேருக்கு விபரீத ஆசை எல்லாம் திரும்ப வந்துடுமாம்.

அதெல்லாம் சரி, இந்த ராஜகுமாரன் நேமிநாதன். அவன் அலாதி குசும்பனாமே. அந்த மிட்டாய்கார தேவிடியாளோட சேர்ந்து ஊரைக் கொள்ளை அடிக்கத்தான் தீர்மானம் பண்ணி இறங்கியிருக்கானாம்.

இல்லேப்பா  இந்த ஊழல் சாம்ராஜ்யத்திலே ஸ்வயம் யோஜனையோடு தேசம் ஷேமமா இருக்க நான் சுமைதலை எடுத்துக்கறேன்னு   சின்ன வயசுலே ஒருத்தன் தைரியமா முன்னாலே வந்தா, அவனுக்கு நம்ம ஆதரவை கண்ணை மூடிண்டு கொடுக்கலாம்.   இப்ப இருக்கறதைவிட எதுவும் மோசமாகப் போகப்போறது இல்லே, என்ன சொல்றேள்?

ஆயிரத்துலே ஒரு வார்த்தை, ஆனா, அந்த மிட்டாய்க்கடைக்காரி?

அவளுக்கென்ன? லட்டுருண்டை மாதிரி நன்னாத்தான் இருக்கா

பார்த்துண்டே இரும் இன்னும் ரெண்டு மாசத்திலே ஒண்ணு இவன் அவளை துணியைக் கிழிச்சு தொரத்தி விட்டுடுவான். இல்லியோ அவ இவனை தொரத்தி விட்டுடுவா.

எனக்கு என்னமோ கிழவியை விரட்டறதுதான் நடக்கப் போறதுன்னு தோணறது. நேமி ராஜாவா வரட்டும். கிழவி இத்தனை வருஷம் மிளகு வித்து பசதி கட்டினது போறும். கொஞ்சம் ஓய்வெடுத்துக்கட்டும். தத்துப் பிள்ளைன்னாலும் சத்துப் பிள்ளையாக்கும்.

சரிதான் அண்ணா இதெல்லாம் அதுவாகவே நடந்துடுமா?

அதெப்படி தானா நடக்கும்? கலகம் பிறந்தாத்தான் நியாயம் பிறக்கும்.

கலகம்னா ராமராயரண்ணா, நாமும் ஆயுதம் எடுத்துண்டு யுத்தம் பண்ணனுமா? நமக்கு வேதமும் சம்பிரதாய மந்திரங்களும் தான் சொல்லிக் கொடுத்திருக்கா பெரியவா. இதை வச்சுண்டு வாள் ஓங்க முடியாது.

அது இருக்கட்டும். இங்கே இருக்கப்பட்ட, விஜயநகரத்துக்கு ஐம்பதும் நூறும் கப்பம் கட்டற ராஜ்ஜியங்கள் அதாவது நம்ம ஜெருஸொப்பா, உள்ளால், பனகுடி, கெலடி, பில்ஜி இப்படி சின்னச் சின்னதா இருக்கற ராஜ்யம் ஒவ்வொண்ணுக்கும் மிஞ்சிப் போனால் நூறு பேர் ராணுவம்னு சொல்லிண்டு இருப்பா. அவா யுத்தம்னு மோதறது ஊர் கம்மாய்க்கரை தகராறு மாதிரி இருக்கும்.

நல்ல உதாரணம் சொல்லணும்னா, ஊர்த் திருவிழாவிலே ரெண்டு கட்சி கட்டி மல்யுத்தம், கயறு இழுக்கறதுன்னு மோதி ஜெயிக்கறவாளுக்கு பணம், சேவல், கோழி. அரிசி, கோதுமைன்னு தர்ற மாதிரி நம்ம பிரதேச யுத்தம் அந்தப் பக்கம் இருநூறு பேர் இந்தப் பக்கம் இருநூறு பேர் மோதறதா இருக்கும்.

அதிலே ஜெயிச்சா ஆளற உரிமை ஒண்ணு கையை விட்டுப் போகும், இல்லேன்னா புதுசா வந்து சேரும்.

விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு இங்கே ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஒரு வித்தியாசமும் தட்டுப்படப் போறதில்லே. அவாளே கவிழ்ந்து படுத்து ஒரு மாமாங்கம் ஆறது. எழுந்திருக்கற வழியை காணோம்.

ஆக ஒரு யுத்தம், ஒரு நாள், அரை நாள்,  ரெண்டு மணி நேரத்திலே முடிஞ்சு உடமை கை மாறினாலும் சண்டை சண்டைதான். பெரிய யுத்தங்கள் மாதிரி, சுல்தானிய ராஜாங்கங்கள் கூட்டு சேர்ந்து விஜயநகர ராஜதானி மேலே படையெடுத்து வந்து மஹாராஜா அளியராயனை தலைக்கோட்டையிலே சிரச்சேதம் பண்ணி, அவா படையிலே ஆயிரம் பேரையும் கொன்னாளே, அப்படி இந்த உள்ளூர் யுத்தத்திலும் தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆறதாலே யுத்த பூமியிலே தலை நிறைய உருள வாய்ப்பு இருக்கு.

யுத்த பூமின்னு எல்லாம் சொல்லி பயமுறுத்தாதீங்கோ. வயத்தைக் கலக்கறது

நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடுமா என்ன? யுத்தம்னு சொன்னா அடிச்சுக்கோ குத்திக்கோன்னு ஆரம்பமாயிடுமா என்ன? அப்புறம் இன்னொண்ணு, ரெண்டு தரப்புலேயும் ஆதரவு தர்றதா அண்டை அயலில் இருக்கப்பட்ட மற்ற ராஜ்ஜியங்கள் சேர்ந்துண்டா, யுத்தம் வலுக்க சந்தர்ப்பம் இருக்கு.

எப்படி இருந்தாலும், சண்டைக்கு அரிவாளை தூக்கிண்டு போறவன் மட்டுமில்லே நம்மை மாதிரி ஓரத்துலே நின்னு வேடிக்கை பார்க்கறவனும் கூடத்தான் உயிரைவிட வேண்டி வரலாம். கவனிக்கணும். வரும்னு சொல்லலே. அண்ணா இங்கே யுத்தம் வருமா வராதா?

வரலாம். வராமலும் இருக்கலாம். அம்மாவும் பிள்ளையும் ஆத்துக்குள்லே சண்டை போடற மாதிரித்தான் அடிச்சுப்பா, கூடிப்பா. என்ன ஆகுமோ தெரியலை.

அப்படி சண்டை வந்தா?

சண்டை வந்தா வர்ற மாதிரி சூசனை தட்டுப்பட்டா ஊரைக் காலி பண்ணிட்டு பெனுகொண்டா, மதுரை, மைசூரு, கோழிக்கோடுன்னு ஓடி ரட்சைப்பட பலபேரும் தயாராகிண்டிருக்கா தெரியுமா?

ராமராயர் அத்தனை வெற்றிலையையும் மென்று விட்டு கிள்ளிப் போட்டிருந்த வெற்றிலைக் காம்புகளை அடுத்து எடுத்து செல்லமாகப் பார்த்தபடி வாயில் போட்டுக்கொண்டார்.

அது இல்லே, ராமராயரே. மகாராணிக்கு அடுத்தபடி ஹேஷ்யம், ஆருடம், ஊகம் எல்லாம் அற்புதமா வாய்க்கப்பட்டவர், வியாகரணப்புலி வேறே.

யாரைச் சொல்றீர் என்றபடி குடுமியை அவிழ்த்து முடிந்து கொண்டார் ராம ராயர்.

உம்மைத்தான் ராமராயரே என்று சிவராம பட்டர் சொல்ல ராமராயர் புளகாங்கிதம் அடைந்தது நிஜம்.

ஜெருஸோப்பா சின்ன ராஜ்ஜியம் தான். ஆனா பாருங்கோ இங்கே ஜெருஸோப்பாவில் ஒரு மாதிரி, ஹொன்னாவர்லே இன்னொரு மாதிரி பொதுஜன அபிப்ராயம் இருக்கறதா தெரியறது. ஹொன்னாவர்லே இங்கே கலவரம் வராதுன்னு சொல்றா. நன்னா சகல விதத்திலேயும் முன்னேறி காசு பணம் ஆட்ட பாட்டம்னு எல்லாம் நிறைஞ்சிருக்கு ஹொன்னாவர். சென்னா சண்டை போடற வர்க்கம் இல்லே.

நீங்க சொல்றேள் அண்ணா, கோழிக்கோட்டிலே சாமுத்ரி நீ வா, குஞ்சாலி மரைக்காயா நீ வான்னு கூட்டத்தை சேர்த்துண்டு சண்டை போட்டுத்தானே ரொம்ப நாளுக்கு ரொம்ப நாள் முந்தி சென்னா போர்த்துகீசுகாரனை அடிச்சு விரட்டினா

அது இல்லேங்காணும் இப்போ நிலைமை. அது சமுத்திரத்திலே கப்பல், பெரிய படகு வச்சு போர்த்துகல்லோடு மோதி ஜெயிச்ச காலம்.

இது தரையிலே வரக்கூடிய யுத்தம். இப்போ போர்த்துகல்லும் ஜெருஸோப்பாவும் நல்ல சிநேகிதத்திலே இருக்கப்பட்டவா. குஞ்சாலி மரைக்காயர் மாப்ளைப்படை சமுத்திரத்திலே ரொம்ப செயலா இருக்கு. கோழிக்கோட்டு சாமரின், சென்னா, அப்பக்கா, மாப்ளையார் எல்லாம் ஒரே பக்கம் தான்.

அப்போ எதிர்த்தரப்பிலே யார் இருக்கப் போறா?

அதுதான் தெளிவா  தெரியலே.

படம் மேசைப் பண்பாடுகள்

நன்றி கார்டியன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2021 07:12

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.