இரா. முருகன்'s Blog, page 69
September 28, 2021
மிளகு பெருநாவலில் இருந்து Caught in a four dimensional space
சாரட்டில் மனமே இல்லாமல் ஏறிக்கொண்டார் பரமன். குழந்தை மஞ்சுநாத் மட்டும் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால் அவர் எல்லாவற்றையும் எல்லோரையும் உதறிவிட்டுப் போயிருப்பார். எங்கே? ஜெரஸோப்பாவில் கோவில்கள் நிறைந்த ராஜவீதிக்கு. அங்கே இருக்கவும் உண்ணவும் வண்டிக்காரன் சத்திரம் உண்டே, அங்கே வண்டிக்கார நண்பர்களும் உண்டே
சீன மந்திரவாதியால் என்ன செய்ய முடியும் என்று பரமன் காத்திருக்க வேண்டும்? யோசித்துப் பார்த்தார். புரியவில்லை. மாசேதுங்கின் சிவப்புப் புத்தகத்தை மராட்டியின் கிளைமொழியில் மொழிபெயர்த்த இடதுசாரி பரமனா இப்போது சீன மந்திரவாதிக்காகக் காத்திருப்பது?
என்ன செய்ய? முப்பரிமாண உலகில் எல்லோரும் சுக ஜீவனம் நடத்தும்போது பரமனுக்கு மட்டும் இன்னொரு பரிமாணமாகக் காலமும் சேர்ந்திருக்கிறது. எடுத்தது எடுத்தது போல் அவரை பௌதீகமாக எந்த மாற்றத்துக்கும் உள்ளாக்காமல், டெல்லியில் இருந்து பம்பாய்க்கு வரும் வழியில் நானூறு வருஷம் பின்னால் போகவைத்து பழைய உலகத்தில் மூச்சுவிடச் செய்து வேடிக்கை பார்க்கிறவர் யார்?
நான்காவது பரிமாணத்தை ஒரு சாளரம் மாதிரி மூடினால் அடுத்த வினாடியே இந்த சாரட்டும், ஜெருஸோப்பாவும், ஹொன்னாவரும், அருகனும், ரோகிணியும், மஞ்சுநாத்தும் எல்லாமும் எல்லாவரும் மறைந்து விடுவார்கள். இது ஜெருஸோப்பாவிலிருந்து ஹொன்னாவர் போகும் நெடுஞ்சாலையாக இருக்காது. வருடம் பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி ஐந்தாம் ஆண்டான 1605 ஆகவும் இருக்காது. பரமனைக் கைகழுவிய 1960-ஆம் ஆண்டாக இருக்கலாம்.
பம்பாயில் இப்போது என்ன வருஷம், உலகம் முழுக்க என்ன வருடம்? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது முடிந்து எத்தனை வருஷம் ஆகியிருக்குமோ.
யார் எல்லாம் பரமன் போனபோது இருந்தபடியே இன்னும் இருப்பார்களோ, யாரெல்லாம் இறந்திருப்பார்களோ, பம்பாயும் மெட்றாஸும் எப்படி மாறியிருக்குமோ எதுவும் தெரியவில்லை. நினைக்க நினைக்க ஆயாசமும் அயர்வும் ஏற்பட சாரட்டுக்குள் கண்மூடி இருந்தார்.
ஹொன்னாவர் தெருக்களில் மெதுவாகக் குலுங்கி ஓடிய சாரட் நின்றபோது குதிரைகள் கால்களை அழுத்தப் பதித்து கழுத்து மணிகள் ஒலியெழுப்ப நின்றன. பரமன் கண் திறந்து பார்க்க அவர் மடியில் படுத்து நித்திரை போயிருந்தான் மஞ்சுநாத்.
சூரியன் சுட்டெரிக்காத கார்த்திகை மாத வெய்யில் இதமாக மேலே படிந்திருந்தது. மஞ்சுநாத் கடை மாடிப்படிகளில் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தான்.
”மஞ்சு ஓடாதே படியிலே தடுக்கி விழுந்தா பல் உடஞ்சுடும். வா, நாம் கீழே ஒளிஞ்சு பிடிச்சு விளையாடலாம்” என்றார் பரமன்.
மஞ்சு வந்துட்டேன் அப்பா என்று அவருக்கு முன்னால் வந்து நின்றான். கண்டு பிடிச்சுட்டேனே என்று பரமனின் கையைப் பிடித்து இழுத்தான்.
”பொடியா, நான் இன்னும் ஒளியவே இல்லை, எப்படி பிடிச்சே?” பரமன் கேட்க மஞ்சுநாத் சிரித்தான். அவன் பரமனின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தான்.
திடீரென்று அவனைச் சுற்றியும் பரமனைச் சுற்றியும் மிளகு வாடை கனமாக எழுந்து வந்தது.
”நீ எங்கே ஒளிஞ்சாலும் பட்டாம்பூச்சி மாதிரி பறந்து வந்து கண்டுபிடிச்சுடுவேன். நான் உன்னோடுதான் எப்பவும் இருக்கேனே அப்பா”.
அவன் சொல்லும்போது பரமனின் கண்களில் நீர் நிறைந்தது. மிளகு வாசனை சன்னமாகச் சூழ்ந்திருந்தது.
அப்பா வரட்டுமா என்று பின்னால் இருந்து குரல். இரு ஒளிஞ்சுக்கறேன் என்று பரமன் சந்த்ரய்யாவின் ஜவுளிக்கடை ஓரமாக அரச மரத்தின் பின்னால் போய் ஒளிந்து நின்றார். மறுபடியும் மிளகு வாடை.
அப்பா அப்பா. மஞ்சுநாத் தெருவில் நின்று அழைத்தபடி இருந்தான். அவன் குரல் பரமனின் உள்ளே இருந்து கேட்டது. அது தெருக்கோடியிலிருந்தும், மரத்தின் மேலிருந்தும், பறந்து போகும் பறவைகளோடும் சேர்ந்து ஒலித்தது.
”அப்பா அப்பா”.
“மஞ்சு மஞ்சு”.
பரமன் ஒளிந்த இடத்தில் இருந்து பார்க்க, எதிரே சிதிலமான சமண சதுர்முக வசதி உள்ளே இருந்து கால்களில் தாங்குகட்டைகள் வைத்துத் தாங்கி பரமன் நடந்து வந்து கொண்டிருந்தார்.
’அப்போ, மரத்தடியில் ஒளிந்திருக்கும் நான் யார்’?
”அப்பா அப்பா”.
மஞ்சு குரல் அண்மையில் ஒளித்தது. அவனுடைய பிஞ்சுக் கரங்கள் பரமனின் கையை இறுகப் பற்றிக் கொண்டன. மிளகு வாடை நின்று போயிருந்தது.
கட்டைகள் தாங்கி சிதிலமான சதுர்முக வசதியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த இன்னொரு பரமனைக் காணோம்.
மிளகு நாவலில் இருந்து – A diary of amourous moments logged chronologically
அவர் இன்னும் அப்சர்வேஷன்லே இருக்கார். நிறைய ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கா. பழச்சாறு, ரசம் சாதம், குழம்புக் கருவடாம், அரிசிப் புட்டு இப்படி சாத்வீகமாக சாப்பிட, குடிக்கன்னு சீலம் மாற்றி வச்சுண்டா இந்த கர்க்கடகத்துலே சரியாயிடும்னு சொல்றா. பார்ட்டி எல்லாம் இப்போ கூப்பிட வேண்டாம் தயவு செய்து. கெட்டக் கனவு கண்டு டயாபரை மாத்தி விட நான் தான் கஷ்டப்படவேண்டி வரும். சின்னக் குழந்தை மாதிரி சுத்திவர மூச்சா போய் முழங்காலைக் கட்டிண்டே படுக்கையிலே உக்கார்ந்திருக்கார்”.
”வசந்தி உனக்கு ஞாபகம் இருக்கோ?” சங்கரன் நடுராத்திரி போன ரெண்டுங்கெட்டான் பொழுதான ரெண்டரை மணிக்கு வசந்தியின் கட்டில் பக்கம் போய்த் தரையில் உட்கார்ந்து ரொம்ப சகஜமாகப் பேச்சை ஆரம்பிப்பார்.
“வசந்தி, இதுக்கு மட்டும் பதில் சொல்லு. 1960லே இல்லே 1961லே நம்ம பகவதியை கர்ப்பத்திலே வச்சிண்டிருந்தியே”
“அதுக்கென்ன?”
“அதுக்கு ஒண்ணுமில்லே. அந்த கர்ப்பத்துக்கு ஆறு மாதம் முந்தி ஒருதடவை நீ ப்ரக்ணண்ட் ஆனே ஞாபகம் இருக்கா? பிள்ளைதான், வயத்துலே உதைக்கறான்னு சொன்னே. திடீர்னு ஒரு நாள் காலம்பற, அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை.. உங்கப்பா, தம்பி, சித்தப்பா கரோல்பாக்கிலே வீட்டு செப்டிக் டாங்க் ரிபேர் பண்ணிண்டு இருக்கான்னு வந்து டாய்லெட்டை நாறடிச்சாளே, நம்பூதிரி தந்தசூரணம் பல்பொடி நெடி எங்கேயும் அடிச்சுண்டிருக்க நீ என்னை பாத்ரூமுக்கு கூப்பிட்டே. அந்தக் கர்ப்பம் கலைஞ்சு போச்சுன்னு அழுதுண்டே சொன்னே. ஞாபகம் இருக்கா. அது ஆம்பளைக் குழந்தைதானே. அந்த கரு இன்னும் உசிரோட இருக்கு. நான் பார்க்கலே. அப்பா அப்பான்னு கண்ட்ஹர்லே ப்ளேன்குள்ளே வந்து என்னைத் திட்டறதோ, நல்லதா நாலு வார்த்தை சொல்லறதோ தெரியலே. நல்ல வார்த்தை சொல்ல நான் ஒண்ணுமே செய்யலியே. திட்டுதான். என்னமோ அந்தக் குழந்தை கனவுலே வரும்போதெல்லாம் வீடு முழுக்க மிளகு வாடை. அது கூப்பிட்டுண்டு இருக்கும்போதே ஐஞ்சு கட்டாலேபோவான்கள் என் சிரசுக்கு துப்பாக்கி வைச்சிண்டு நிற்கறான். குடம் குடமா மூத்திரம் எப்படி வருதுன்னு தெரியலே. இவ்வளவுக்கும் ராத்திரி படுத்துக்கப் போறபோது போய்ட்டுத்தான் படுக்கறது. சரி சரி விஷயம் என்னன்னா அந்தக் குழந்தைக்கு நல்லதா ப்ரீதி பண்ணனும். அதுவரை வந்துண்டு தான் இருக்கும். ஞாபகம் இருக்கோ?”
”இல்லே நான் அப்படி எல்லாம் கர்ப்பம் தாங்கலே. உங்க தொடுப்பு வெள்ளைக்காரியைக் கேட்டுப் பார்த்தேளோ?”
ஒரு பத்து நிமிஷம் கனமான மௌனம் நிலவும் அங்கே.
”இல்லே, இது அதுக்கெல்லாம் ரொம்ப முன்னாடி.”
“அப்போ தில்ஷித் கவுரை ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்கோ. கேட்டுண்டு மஞ்சள் குங்குமம் பிளவுஸ் பீஸ் கொடுத்து அனுப்பலாம்”.
வசந்தி சகஜமான மனநிலைக்கு வந்திருப்பாள்.
“அவள் அப்புறம் முழுசா பத்து வருஷம் கழிச்சுத்தான் ஹோம் மினிஸ்ட்ரியிலே இருந்து டைப்பிஸ்டா ட்ரான்ஸ்பர்லே வந்தா”.
“சரி அப்போ ஏதாவது நடந்திருக்கும்”.
“சே அதெல்லாம் இல்லே. ரிகார்ட் ரூம்லே பழைய ஃபைல் தேடறபோது ஒரு தடவை கரண்ட் போய் இருட்டாச்சா? என்னைக் கட்டிப் பிடிச்சு பச்சுபச்சுன்னு முத்தம் கொடுத்தா”.
கொஞ்ச நேரம் பேசாமல் யோசித்துக் கொண்டிருப்பார் சங்கரன். திரும்பப் பேச ஆரம்பிப்பார்.
”அப்படித்தானா, இல்லே நான் தான் அவளுக்கு கொடுத்தேனா?”
“யார் யாருக்கு கொடுத்தேளோ, போன வருஷம் அவ ரிடையர் ஆனபோது திராட்சைப் பழம் வாங்கிண்டு வந்து கொடுத்து சாதாரணமா பார்த்து பேசிட்டு போனா. நீங்க தான் அலைஞ்சீங்க போல இருக்கு”.
“அப்படி இருக்க, அவளுக்கு எப்படி கர்ப்பதானம் பண்ணியிருக்க முடியும்?”
“அதான் வெள்ளைக்காரியைக் கேளுங்கோன்னு சொல்றேன்”.
“சொல்லிண்டே இருக்கேனே தெரிசா பழக்கமானது 1970லே. நான் கேக்கறது அதுக்கு பத்து வருஷம் முந்தி 1960லே. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலம்பர தான் பாத்ரூம்லே வென்னீர் வேம்பா பக்கத்துலே நின்னுண்டு கலைஞ்சு போச்சுன்னு அழுதே. ஞாபகம் இருக்கா. நீ சட்டுனு சொல்வேன்னு நினச்சேன்”.
”ஆமா, என்னிக்கு க்ரீடை பண்ணினது, என்னிக்கு சூல் பிடிச்சது, என்னிக்கு கலைஞ்சதுன்னு ஹோ அண்ட் கோ டயரி போட்டு குறிச்சு வச்சுக்கணுமா என்ன? திருக்கல்யாண வைபோக விவரண டயரி. அரசூர் சங்கரய்யர் தர்மபத்னி வசந்தாளோடு ரமித்த விவரங்கள் ஈண்டுக் காணலாம்னு முதல் பக்கத்துலே எழுதி வச்சு”.
சங்கரன் தூங்கியிருந்தான். வசந்தியும் அடுத்த பத்து நிமிஷத்தில் நெருங்கி அடித்துக்கொண்டு அதே கட்டிலில் கிடந்தாள்.
September 27, 2021
பெருநாவல் மிளகு – At the sacred precincts of Ambalapuzha SriKrishna temple
அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அதிகாலை ஐந்து மணிக்குச் சுறுசுறுப்பாக தரிசனம் அளித்துக் கொண்டிருந்தான்.
ஐந்து மணி காலை எல்லாம் ஒன்றுமே இல்லை இவனுக்கு. உறங்கினால் தானே புதுசாக விழிக்க. விடிகாலை அல்லது நடுராத்திரி கழிந்த மூன்று மணிக்கு மேல்சாந்தியையும், தந்த்ரியையும் எழுப்பி விடுவான் இவன்.
இந்த பூஜாரிமார் கோவில் தெப்பக்குளத்தில் ஒரு சம்பிரதாயத்துக்காக நீராடி, கோவில் பரப்பில் அருவி போல் மிதமான சூட்டோடு வெந்நீர் பிரவகிக்கும் நவீனமான குளிமுறியில், என்றால் குளியலறையில், கால்கேட் பற்பசையால் தந்தசுத்தி செய்து மைசூர் சந்தன சோப் தேய்த்து நீராடுவார்கள்.
சில சமயம் நன்றாக மழை பெய்யும்போது அல்லது கோடை காலத்தில் குளம் வற்றி பாசி மிதக்கத் தண்ணீர் கொஞ்சம் போல சிறுக்கும்போது, இன்னும் நுண்ணிய சம்பிரதாயபூர்வம் குளத்து நீரை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்து வந்து அதைச் சிரசில் ஊற்றிக்கொண்டு அடுத்து இவர்கள் குளிமுறி ஸ்நானம் செய்வது வழக்கம்.
இவனுக்கு திருக்குளத்து நீரைக் குடங்களில் துணி சுற்றி வடிகட்டி வைத்து நாள் முழுவதும் திருமஞ்சனம் செய்விப்பது வழக்கமாகப் போனது. இவனுக்கு கோல்கேட் பற்பசையும், ஷவரில் வெந்நீரும் விலக்கி வைக்கப்பட்டவை.
குளித்து முடித்ததும் காலை மூன்றரை மணிக்கு சூடும் சுவையுமான காப்பி பானம் செய்ய இவனுக்குக் கிட்டாது. காலை ஐந்து மணிக்கு துளசி இலையும், கற்பூரமும், ஏலக்காயும் ஊறிய குளிர்ந்த நீரில் ஸ்நானம் முடித்து பாலும் சோறும் நெய்யும் ஆராதனையாக இவனுக்கு அளிக்கிறார்கள்.
நடுப்பகல் வரை இவனுக்கு அவ்வப்போது சிறு கிண்டியில் பால் தரப்படுகிறது. குடிக்க இல்லை, குளிக்க.
அப்புறம் சற்று நேரம் ஸ்ரீகிருஷ்ணன் அதிகாரம்தான். தினசரி நடுப்பகலுக்கு அம்பலப்புழை பால்பாயசம் இவனுக்கு நைவேத்தியம் ஆகிறது. பொன் நிறத்தில் பாலும் நெய்யும் சர்க்கரையும் தேங்காயும் கலந்து மர அடுப்பில் காய்ச்சப்படும் பாயசம் நாள் தவறாமல் இவனுக்கு உணவு.
——————–
திரை விலகியபோது மஞ்சள் நிறத்தில் எரியும் தீபங்களும், உயர்ந்து ஐந்து முகம் திரி கொளுத்தி நல்ல எண்ணெயும் சுகந்தமான தேங்காய் எண்ணெயும் சந்தனமும் சேர்த்து மணக்க ஸ்ரீகிருஷ்ணன் இங்கே சிரித்தபடி நின்றான்.
சாரதா சங்கரனின் கைகளைச் சேர்த்து மார்புக்கு நேரே நீட்டி வணங்க வைத்து அச்சுதம் கேசவம் சொல்லுங்க என்றாள் மிக மெதுவாக.
சத்தம் அதிகமாக்கி தரையில் அமர்ந்து இருகையும் ஊன்றி சங்கரன் அச்சுதம் கேசவம் சொன்னார்.
சத்தம் அதிகமாக, யாரோ முணுமுணுக்க, திலீப் ராவ்ஜி மிக சுருக்கமாக அவரிடம் சொன்னது – ”போன மாசம் டிசம்பர் 1999, ஆப்கானிஸ்தானுக்கு ஹைஜேக் ஆன ப்ளேன்லே இருந்த ஹோஸ்டேஜ். இப்போதான் பேசறார். கொஞ்சம் பொறுத்துக்கணும். உயிரோட விளிம்புக்கு போயிட்டு திரும்பினவர்”.
அதற்கு அப்புறம் சங்கரன் குரல் உயர்த்த சந்நிதியில் ஒரு கண்ணும் அவர்மேல் ஒன்றுமாக சக பக்தர்கள் வழிபட்டு இருந்தார்கள்.
pic Ambalapuzha Temple Festival
ack alappuzha.nic.in
September 26, 2021
மிளகு நாவலில் இருந்து – A delivery well planned and somewhat shoddily executed
மருமகப்புள்ள! ஓ வைத்தியரே!
மருத்துவச்சி அம்மாள் வாசல் கதவுப் பக்கம் நின்று கூப்பிட்டது காதில் விழ வைத்தியர் அவசரமாக வீட்டுக்குள் நடந்தார்.
பனிக்குடம் இப்போ தான் உடைஞ்சது. இனி எந்த நேரமும் பிரசவம் நடக்கும். முதல்லே இங்கே ரெண்டு தீபம் கொண்டு வந்து வையுங்க வைத்தியரே. அப்படியே பெரிய பாத்திரத்திலே மஞ்சள் கரைச்ச தண்ணியும் வேணும். அதிலே நாலு கொழுந்து வேப்பிலை போட்டுக் கொண்டாங்க, விரசா வேணும்
வைத்தியர்தான் நோய் கண்டவரையோ உறவுக்காரர்களையோ வென்னீரைக் கொண்டுவா, நல்லெண்ணெய் எடுத்து வா, சூரணத்தை இருப்புச் சட்டியில் இளம் சூட்டில் வாட்டி எடுத்துவா, கட்டுப்போட துவைத்த வெள்ளை வேட்டியைக் கிழித்து எடுத்து வா என்று விரட்டுவார். இது பரவாயில்லை, நோயாளியோட மூத்திரம் கொஞ்சம் எடுத்து வா, அவர் கழிக்கறது கொஞ்சம் எடுத்து வைங்கோ. பார்த்துட்டு தூர போட்டுடலாம் என்று அசாத்தியமாகக் கருதப்பட்ட மருத்துவ கோரிக்கைகளை வைப்பார்.
மருத்துவச்சி திரும்ப காமரா அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். என்னாத்தா வேணும்? பணிவோடு கேட்டார் வைத்தியார். மருமகனே, வெத்திலை, பாக்கு, இடிக்கற உரல் அங்கே தான் வெளியிலே இருக்கு. கொஞ்சம் எடுத்தாங்க.
வைத்தியம் பார்த்து முடித்துப் புறப்படும்போது வைத்தியரின் மருந்துப் பையைச் சுமந்து கொண்டு வாசல் வரை அவரோடு நடப்பது பெரிய மனுஷர்களும், அதிகாரிகளும், தளபதிகளும், பிரதானிகளும், கல்விச்சாலை அதிபர்களும் கூடச் செய்ய விரும்புகிற பெருமைக்குரிய செயல்.
இந்தோ இருக்கு உங்க உரல். இடிச்சுத் தரட்டா என்று வைத்தியர் வினயமாகக் கேட்டார். அதை நான் தான் பண்ணனும் என்று உரலை வாங்கிக்கொண்டு உள்ளறைக்குப் போய்விட்டாள் மருத்துவச்சி. அவள் பின்னால் போவதா வேண்டாமா என்ற குழப்பம் வைத்தியருக்கு.
வரச் சொன்னேனே என்று திரும்பிப் பார்த்து மருத்துவச்சி கைகாட்டினாள். வைத்தியர் மருந்துப் பெட்டியோடு உள்ளே போக, அது எதுக்கு, வெளியே வச்சுட்டு வாங்க மருமகனே என்று அன்பொழுகச் சொன்னாள். அவரும் திரும்பிப் போய் மருந்துப் பெட்டியை வெளியே இறக்கி வைத்துவிட்டு உள்ளே ஓடினார். எதுக்கும் இருக்கட்டும். அதை எடுத்துட்டு வாரும் என்று நேரெதிர் தீர்மானத்தை அடுத்து வெளியிட்டாள் மருத்துவச்சி ராஜம்மா.
வரும் கோபம், அலுப்பு, சோம்பல் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு வெளியே மறுபடி போனார் வைத்தியர். அவர் வரும்போது தரையில் கால் நீட்டி உட்கார்ந்து மருத்துவச்சி சொன்னாள் –
தலை தட்டுப்பட நேரம் வந்தாச்சு மருமகனே. மீங்கு முக்கு. நல்லா முக்கு. உள்மூச்சை அடக்கிப் பிடிச்சு மெல்ல வெளியே விடணும். சொல்லுங்க மருமகனே சொல்லுங்க. நல்லா முக்கணும்
உரலில் மிச்சமிருந்த இடித்த தாம்பூலத்தை வாயில் அடக்கிக்கொண்டு சொன்னாள் மருத்துவச்சி.
மூச்சு அடக்கி பத்து எண்ணு செம்பா. அவள் எப்படி எண்ணுவாள்? வாய்க்குள்ளே எண்ணிக்கோ. இப்போ முக்கு.
வைத்தியர் தரையில் படுத்து அவளோடு சரிக்கு சரியாக முக்கியபடி மருத்துவச்சியைப் பார்க்க, பார்த்து, கக்கூசு போயிடப் போறீங்க மருமகனே என்று சிரித்தாள்.
வந்தாச்சு நான் என்று மிங்கு வயிற்றின் கீழ் அசைவு.
September 25, 2021
மிளகு நாவலில் இருந்து – I, Neminathan

நான், நேமிநாதன்….
ரஞ்சனாவை வெளியே வந்த கூண்டுக் கிளியைப் பார்க்கிறது போல் கழுத்தில் கை வைத்து நோக்கிச் சொன்னேன் – ”முகம் கழுவிக்கொண்டு வாடி. வெளியே போகணும்”.
நான் நடுராத்திரிக்கு வந்து அவளை எழுப்பிவிட்டது கூட அவளை வருத்தமும் கோபமும் அடையச் செய்யவில்லை. டி என்ற தொண்டச்சியை விளிக்கும் இழிவு தான் அவளை ரொம்பவும் பாதித்தது.
”மதுசாலைக்குப் போய் நிரம்ப மது பருகி தாறுமாறாக நடக்க வந்திருக்கிறீர்கள் என்றால், உடனே வெளியேறுங்கள். அம்மா மகாராணியிடம் புகார் அளிப்பேன் உங்கள் நடத்தை குறித்து”.
அவள் தீவிழி விழித்தாள்.
நான் பதவி போதையும், அதைத் தூண்டி முதன்மைப்படுத்தும் திராட்சை மதுவின் போதையையும் உச்சம் தொட்டு ஊசலாடியபடி, ”வாடி தேவடியாளே, உன்னைக் கொண்டு போய் விடணும் , உனக்காக ஒருத்தன் காத்திருக்கான்” என்று குழறிக்குழறிச் சொல்ல அவள்பின்னால் நகர்ந்து, பக்கத்தில் இருந்த குரிச்சியை என்மேல் எறிந்தாள்.
ஏதோ தோன்ற குசினிக்கு ஓடி கையில் மூடியிட்ட செப்புக் குழல் பாத்திரத்தோடு வந்தாள். கை நிறைய மிளகுப் பொடியை அதிலிருந்து அள்ளி என் உடுப்பை வயிற்றுக்குக் கீழே நெகிழ்த்தி, அதை என் பிரத்தியேக இடத்தில் பூசினாள், மிஞ்சிய பொடியை என் கண்ணிலும் பூச வந்து, சே பிசாசே போ என்று தரையில் விசிறினாள்.
எரியுதே என்று நான் கூச்சலிட என்னை வலுக்கட்டாயமாக வாசலுக்குக் கொண்டு போய்த் தள்ளினாள். ஒலியெழக் கதவையும் என் முகத்துக்கு நேராக சாத்திவிட்டாள். நடுராத்திரியில் குருடன் போல் தட்டுத்தடுமாறித் தோட்டத்தில் வீட்டுக் குளத்துக்கு ஊர்ந்தேன். அந்தத் தண்ணீரும் நீண்ட நேரம் பீஜத்தில் நனைத்து எரிச்சலை மிகைப்படுத்தியது. அப்புறம் அது மெல்லத் தணிந்து வர, என் போதையும் விலகியது.
ரஞ்சனா என்று விளித்தபடி இல்லத்தைச் சுற்றி வர, எல்லா கதவுகளும், ஜன்னல்களும் அடைத்து பாதுகாப்பாக இருந்தது வீடு. பிச்சைக்காரனைப் போல், சரியாகச் சொன்னால் அப்பக்கா மகாராணியின் கணவர் வீரு போல் என்னை உணர்ந்தேன் ஒரு கணம். வீரு ராஜ்யம் இல்லாத ராஜா. நானும் தான். ஆனால் வீருவின் மனைவி எல்லா சக்தியும் வாய்ந்த, சென்னா மகாராணி போல் மக்களால் விரும்பப்படும் அரசி அப்பக்கா. ரஞ்சனாவை இனிமேல் தான் பரவலாகத் தெரியப்படுத்த வேண்டும்.
பெத்ரோவுக்கு முதலில் அவளை அறிமுகப்படுத்தி, அவனை நிதிக்குழுமம் கார்டெல் பக்கம், ரோகிணி பக்கம், என் பக்கமாக இழுக்க வேண்டும். எத்தனை நாள் அவனும் பெண்டாட்டி பக்கத்தில் இல்லாமல் வேலைக்காரி கஸாண்ட்ராவின் மடியில் கிடந்து அலுக்க வேண்டும். ராஜவம்ச ரத்தமும் அழகு நிரம்பி வழியும் பட்டுப் போன்ற சதையுமாக ரஞ்சனாவை எடுத்துக் கொள்ளட்டும். போர்த்துகல் அரச பிரதிநிதிக்கு ரஞ்சனா ஒரு அழகான தூண்டில்.
I with my daughter Aishwarya Arun
Neminathan’s Soliloquy – மிளகு நாவல் சிறு பகுதி
நான் நேமிநாதன்.
காற்றில் அலைக்கழிக்கப்பட்டு துடுப்புகள் தவறி விழுந்து கடலோடிய படகு போல் நாற்பது வயதிலும் இலக்கு இன்றிச் சுற்றிச் சுற்றி வருகிறேன். அலைகள் என்னைச் சுற்றிச் சீறிச் சினந்து எழும்பிப் படகைக் கவிழ்த்து என்னையும் நீர்ப்பெருக்கில் அடித்துப் போகவைக்க ஆடிவருகின்றன. நேமிநாதன் துரோகி என்று அவை ஏசலைக் குரலுயர்த்தி ஒரே குரலில் பாடுகின்றன. காதுகளைப் பொத்திக்கொள்ள வைக்கும் இரைச்சல். திட்டு. வசவு. துரோகி என்கின்றன அவை என்னைத் திரும்பத் திரும்ப.
சென்னபைரதேவி மகாராணியின் மகன் என்ற பெருமையும் சங்கடமும் எனக்கு வாய்த்தன என்று இந்த ஒரு வருடமாகத்தான் தெரிந்து கொண்டேன். வளர்ப்பு மகன் என்ற உறவை யாராவது என் காதுபடச் சொன்னால், சத்தம் இன்றி உதடுகளை அசைத்து உச்சரித்தாலும் எனக்கு உட்செவியில் கேட்டு அருவருப்பு ஏற்படுகிறது.
வளர்ப்பு நாய், வளர்ப்புப் பூனை போல் வளர்ப்பு மகன் என்பது ஐந்தறிவு கொண்ட ஒரு பிராணியாக என்னைக் காட்டுகிறது. நேராநேரத்துக்கு சோறு போட்டு, தண்ணீர் கொடுத்து, உடுக்க உடை கொடுத்து, குளிக்க வென்னீர் விளம்பி வைக்க, குளித்துவிட வேலைக்காரர்களை நியமித்து, கழுத்தில் ஒரு சங்கிலியையும் போட்டுக் கட்டி வைத்தால் தான் வளர முடியும் போல் இருக்கிறது.
அம்மா அம்மா என்று எஜமானியம்மாளின் காலைச் சுற்றும் நாய்க்குட்டி போல் விசுவாசமும் பிரியமுமாக மனதில் வாலாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்தாயே, எப்போது விலகி ஓடி வந்தாய் என்று என்னைத் தெரிந்தவர்கள் மட்டுமின்றி தெரியாதவர்களும் கேட்கிறார்கள். ஏதோ அந்தக் கேள்விக்குக் கிடைத்த பதிலை வைத்து என்னைப் பார்த்து கோபிப்பதா, பரிதாபப்படுவதா அல்லது வெறுத்து எச்சில் உமிழ்வதா என்று தீர்மானத்துக்கு வர அது அத்தியாவசியமான தகவல் என்ற நிச்சயம் செய்துகொண்டு. சொல்கிறேன். அதைக் கேட்டு இத்தனை அற்பமான காரணத்துக்காகவா வளர்த்த அன்னை மேல் வன்மம் வளர்த்துக் கொண்டு வழிப் பிரிவு ஏற்படுத்திக் கொண்டாய் என்று சிரித்தாலும் எனக்குச் சம்மதமே.
எல்லாம் என் வளர்ப்பு தாயார் மிளகு மகாராணியின் அறுபதாம் பிறந்தநாளன்று தொடங்கியது. அந்தப் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாட நானும் ரஞ்சனாவும் பிறந்தநாள் வருவதற்கு ஒரு மாதம் முன்பே திட்டமிடத் தொடங்கி விட்டோம்.
பாக்குமரப் பட்டையிலும் வாழைப் பட்டையிலும் குடுவை செய்து அதில் அதுவும் இதுவுமாக உணவைத் தனித்தனியாக வைத்து மேலே அதே பட்டையை வளைத்து மூடி பிறந்தநாள் விருந்தை ஜெர்ஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் ஏழைப்பட்ட அத்தனை பேருக்கும் விநியோகித்தேன். மிகப் பெரிய வரவேற்பு அதற்கு இருந்தது.
ஹொன்னாவரில் விருந்து விநியோகிக்கும்போது ஒரு தெரு விடாமல் நான் என் சாரட்டில் போய் நின்று ஏதாவது குறைபாடு இருக்கிறதா, மக்கள் எப்படி இதை எதிர்கொண்டு பாராட்டுகிறார்கள் என்று கவனித்தேன்.
எல்லா இடத்திலும் பாராட்டு தான். இவ்வளவு புலவுச் சோறா? அதுவும் நெய் பெய்து, கூடவே இனிப்பும் வைத்து என்றுதான் உண்ண முடியாமல் வயிறு நிறைந்து வாழ்த்திய வாழ்த்தொலிதான் எங்கும்.
அந்த வார்த்தைகள் எல்லாம் மிளகுராணியம்மா தீர்க்காயுசா இருக்கட்டும் என்று மட்டும் வாழ்த்தின. நேமிநாதனா? யாரவன்?
September 19, 2021
’மிளகு’ பெரும் நாவலில் இருந்து Buyer Beware – he bought a call option instead of a put option when the commodities market for pepper is bearish
கம்ப்யூட்டர் அறையில் லேப்டாப்பை இயக்கியபடி ”உனக்கு ரொம்ப சிம்பிள் ஆக ஆப்ஷன்ஸ் ட்ரேடிங் சொல்லித்தரேன், வா”, என்றான் மருது.
இரு வரேன் என்று உள்ளே ட்ராவல் பையோடு போய், நைட்டி அணிந்து வந்தாள் கல்பா. நைட்டி அணிந்த தேவதைகளின் ஆராதக தெய்வம் போல் இருப்பதாக மருது சொல்ல, போடா என்றாள் சீரியஸான முகத்தோடு.
”ஷேர் மார்க்கெட் பரிபாஷையிலே call கால் என்றால் கூப்பிடறது இல்லே வாங்கறேன்னு அறிவிக்கிறது. Put புட் அப்படீன்னா வைக்கறது இல்லே. விற்கறேன்னு அறிவிக்கறது. Option Seller ஆப்ஷன் செல்லர் ஒரு நிறுவனம் அல்லது தனி மனிதர். எனக்கு call option அல்லது put option விற்பவர்.
Call கால் ஒப்பந்தத்தை ஆப்ஷன் செல்லர் கிட்டே இருந்து நான் வாங்கினால், எதிர்காலத்துலே ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட தேதியிலே அல்லது அதுக்கு முந்தி, அவர் ஒப்பந்தம் போட்ட அதே விலைக்கு அதே அளவு அந்த பொருளை எனக்கு விற்கச் சொல்லி அவரை நான் கேட்கலாம். எனக்கு அப்படி விக்கறது அவர் கட்டாயம் செய்தாக வேண்டியது.
Put புட் ஒப்பந்தத்தை ஆப்ஷன் செல்லர் கிட்டே இருந்து நான் வாங்கினால், எதிர்காலத்துலே ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட தேதியிலே அல்லது அதுக்கு முந்தி, அவர் ஒப்பந்தம் போட்ட அதே விலைக்கு, அதே அளவு, அந்த பொருளை என்னிடம் இருந்து வாங்கச் சொல்லி அவரை நான் கேட்டால், வாங்கறது அவர் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை.
அதே நேரத்திலே, ஆப்ஷன் வாங்கின நான் ஆப்ஷன் செல்லர் கிட்டே ஒப்பந்தப்படி வாங்கணும் அல்லது விற்கணும் அப்படின்னு கட்டாயம் இல்லை. ஆப்ஷன் வாங்கினவன்கிற உரிமை எனக்கு இருக்கு. ஆனால், அந்த ஒப்பந்தப்படி செயல்படணும்னு கட்டாயம் ஏதும் எனக்குக் கிடையாது.
கால் ஆப்ஷன் ஒன் மந்த் நூறு கிலோ பெப்பர் Call option one month one hundred kilos pepper at $1000 அப்படீங்கறது மிளகு விலை ஏறிட்டு இருக்கும்போது சகாய, ஒப்பந்த விலைக்கு அது கிடைக்க வழி செய்யும். மார்க்கெட்டுலே மிளகு விலை $1000-க்கு மேலே போனால், நான் $1000-க்கு எனக்கு விற்கச் சொல்லி ஆப்ஷன் செல்லரை அழைக்கலாம். அது $1000—க்குக் கீழே மார்க்கெட்டுலே போயிட்டிருந்தா, நான் சும்மா இருந்துடலாம்.
அதே மாதிரி புட் ஆப்ஷன் ஒன் மந்த் நூறு கிலோ பெப்பர் put option one month one hundred kilo pepper at $1000 அப்படீங்கறது மிளகு விலை சரிந்து வரும்போது வெளி மார்க்கெட் நிலவரத்தை விட அதிகமான ஒப்பந்த விலையான $1000-க்கு அவன் என்னிடம் இருந்து வாங்கிக்கொள்ள வழி செய்யும். இதுதான் ஆப்ஷன் வர்த்தகத்தோட சாறு”. கல்பா கைகூப்பி ’குரு’ என்று வணங்கினாள்.
மருது சிரித்தபடி ”ஆப்ஷன்லே ஒரு சுவாரசியமான விஷயம் என்னன்னா எந்தப் பொருளோட விற்பனை, வாங்குதலுக்கு எவ்வளவு விலை கைமாற்றணும் என்று ஆப்ஷன் காண்ட்ராக்ட் போடறோமோ அந்த தேதியும் விலையும் தான் முக்கியம். பொருள் கைமாற வேண்டாம். அதைவிட முக்கியம், சொன்னேனே, வாங்கவோ விற்கவோ ஆப்ஷன் வாங்கினால், நமக்கு வாங்கவோ விற்கவோ உரிமை கிடைக்கிறது. ஆனால் செய்தாகணும்ங்கிற கட்டாயம் எதுவும் இல்லை. கமோடிட்டி என்ற பொருட்கள் வைத்து, உதாரணத்துக்கு மிளகு – பெப்பர் ஆப்ஷன் என்றால் நான் வீட்டுலே மிளகு மூட்டை வாங்கி அடுக்கி வச்சு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்ய, வாங்க மண்டிக்கடை நடத்த வேண்டாம். ஆப்ஷன் செல்லரோடு ஒண்ணுக்கு மேற்பட்ட பரிவர்த்தனை இருக்கும்ங்கிறதாலே, அவர் எனக்கு எவ்வளவு தரணும் நான் அவருக்கு எவ்வளவு தரணும்னு நிலுவைத்தொகையை அப்போ அப்போ தீர்மானிச்சுக்கிட்டு வர்த்தகம் நகரும். நீ ட்ரை பண்ணி பாரு கல்பா. ஒரு தடவை ஆப்ஷன் காண்ட்ராக்ட் உள்ளே போய்ட்டா திரும்பவே மாட்டே என்றான் மருது.
“நீ என்ன பொருளுக்கு எல்லாம் ஆப்ஷன் காண்ட்ராக்ட் வர்த்தகம் பண்ணிக்கிட்டிருக்கே மருது?
”மிளகு மட்டும்தான். அதுவே சாகரம்”.
option trading on laptop
ack with thanks thebalance.com
’மிளகு’ பெரும் நாவலில் இருந்து Byer Beware – he bought a call option instead of a put option when the commodities market for pepper is bearish
கம்ப்யூட்டர் அறையில் லேப்டாப்பை இயக்கியபடி ”உனக்கு ரொம்ப சிம்பிள் ஆக ஆப்ஷன்ஸ் ட்ரேடிங் சொல்லித்தரேன், வா”, என்றான் மருது.
இரு வரேன் என்று உள்ளே ட்ராவல் பையோடு போய், நைட்டி அணிந்து வந்தாள் கல்பா. நைட்டி அணிந்த தேவதைகளின் ஆராதக தெய்வம் போல் இருப்பதாக மருது சொல்ல, போடா என்றாள் சீரியஸான முகத்தோடு.
”ஷேர் மார்க்கெட் பரிபாஷையிலே call கால் என்றால் கூப்பிடறது இல்லே வாங்கறேன்னு அறிவிக்கிறது. Put புட் அப்படீன்னா வைக்கறது இல்லே. விற்கறேன்னு அறிவிக்கறது. Option Seller ஆப்ஷன் செல்லர் ஒரு நிறுவனம் அல்லது தனி மனிதர். எனக்கு call option அல்லது put option விற்பவர்.
Call கால் ஒப்பந்தத்தை ஆப்ஷன் செல்லர் கிட்டே இருந்து நான் வாங்கினால், எதிர்காலத்துலே ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட தேதியிலே அல்லது அதுக்கு முந்தி, அவர் ஒப்பந்தம் போட்ட அதே விலைக்கு அதே அளவு அந்த பொருளை எனக்கு விற்கச் சொல்லி அவரை நான் கேட்கலாம். எனக்கு அப்படி விக்கறது அவர் கட்டாயம் செய்தாக வேண்டியது.
Put புட் ஒப்பந்தத்தை ஆப்ஷன் செல்லர் கிட்டே இருந்து நான் வாங்கினால், எதிர்காலத்துலே ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட தேதியிலே அல்லது அதுக்கு முந்தி, அவர் ஒப்பந்தம் போட்ட அதே விலைக்கு, அதே அளவு, அந்த பொருளை என்னிடம் இருந்து வாங்கச் சொல்லி அவரை நான் கேட்டால், வாங்கறது அவர் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை.
அதே நேரத்திலே, ஆப்ஷன் வாங்கின நான் ஆப்ஷன் செல்லர் கிட்டே ஒப்பந்தப்படி வாங்கணும் அல்லது விற்கணும் அப்படின்னு கட்டாயம் இல்லை. ஆப்ஷன் வாங்கினவன்கிற உரிமை எனக்கு இருக்கு. ஆனால், அந்த ஒப்பந்தப்படி செயல்படணும்னு கட்டாயம் ஏதும் எனக்குக் கிடையாது.
கால் ஆப்ஷன் ஒன் மந்த் நூறு கிலோ பெப்பர் Call option one month one hundred kilos pepper at $1000 அப்படீங்கறது மிளகு விலை ஏறிட்டு இருக்கும்போது சகாய, ஒப்பந்த விலைக்கு அது கிடைக்க வழி செய்யும். மார்க்கெட்டுலே மிளகு விலை $1000-க்கு மேலே போனால், நான் $1000-க்கு எனக்கு விற்கச் சொல்லி ஆப்ஷன் செல்லரை அழைக்கலாம். அது $1000—க்குக் கீழே மார்க்கெட்டுலே போயிட்டிருந்தா, நான் சும்மா இருந்துடலாம்.
அதே மாதிரி புட் ஆப்ஷன் ஒன் மந்த் நூறு கிலோ பெப்பர் put option one month one hundred kilo pepper at $1000 அப்படீங்கறது மிளகு விலை சரிந்து வரும்போது வெளி மார்க்கெட் நிலவரத்தை விட அதிகமான ஒப்பந்த விலையான $1000-க்கு அவன் என்னிடம் இருந்து வாங்கிக்கொள்ள வழி செய்யும். இதுதான் ஆப்ஷன் வர்த்தகத்தோட சாறு”. கல்பா கைகூப்பி ’குரு’ என்று வணங்கினாள்.
மருது சிரித்தபடி ”ஆப்ஷன்லே ஒரு சுவாரசியமான விஷயம் என்னன்னா எந்தப் பொருளோட விற்பனை, வாங்குதலுக்கு எவ்வளவு விலை கைமாற்றணும் என்று ஆப்ஷன் காண்ட்ராக்ட் போடறோமோ அந்த தேதியும் விலையும் தான் முக்கியம். பொருள் கைமாற வேண்டாம். அதைவிட முக்கியம், சொன்னேனே, வாங்கவோ விற்கவோ ஆப்ஷன் வாங்கினால், நமக்கு வாங்கவோ விற்கவோ உரிமை கிடைக்கிறது. ஆனால் செய்தாகணும்ங்கிற கட்டாயம் எதுவும் இல்லை. கமோடிட்டி என்ற பொருட்கள் வைத்து, உதாரணத்துக்கு மிளகு – பெப்பர் ஆப்ஷன் என்றால் நான் வீட்டுலே மிளகு மூட்டை வாங்கி அடுக்கி வச்சு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்ய, வாங்க மண்டிக்கடை நடத்த வேண்டாம். ஆப்ஷன் செல்லரோடு ஒண்ணுக்கு மேற்பட்ட பரிவர்த்தனை இருக்கும்ங்கிறதாலே, அவர் எனக்கு எவ்வளவு தரணும் நான் அவருக்கு எவ்வளவு தரணும்னு நிலுவைத்தொகையை அப்போ அப்போ தீர்மானிச்சுக்கிட்டு வர்த்தகம் நகரும். நீ ட்ரை பண்ணி பாரு கல்பா. ஒரு தடவை ஆப்ஷன் காண்ட்ராக்ட் உள்ளே போய்ட்டா திரும்பவே மாட்டே என்றான் மருது.
“நீ என்ன பொருளுக்கு எல்லாம் ஆப்ஷன் காண்ட்ராக்ட் வர்த்தகம் பண்ணிக்கிட்டிருக்கே மருது?
”மிளகு மட்டும்தான். அதுவே சாகரம்”.
option trading on laptop
ack with thanks thebalance.com
September 18, 2021
பெரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து – An epistle to the Prudent Phillip, the Emperor of Portugal and Spain
எதுவும் எழுதாத மரப்பட்டை ஒன்றை எடுத்து விரித்து கடுக்காய் மசிப் போத்தலில் மயிலிறகை அமிழ்த்தி மரப்பட்டையில் எழுதலானார் இமானுவெல் பெத்ரோ.
பிலிப்பைன் பெருவம்சத்தில் சூரியன் போல நற்பிறப்பு எய்தியவரும், எத்திசையும் புகழ அரசாண்ட மானுவேல் சக்கரவர்த்திகளின் நற்பேரனும், போர்த்துகீஸ் பேரரசரும், ஸ்பெயின் சக்கரவர்த்தியும், நேபிள்ஸ் மாமன்னரும், சிசிலி மாநிலத்தின் மன்னர் பெருமானும் ஆன, எங்கள் போர்த்துகீசிய வம்சத்தைத் தாயினும் சாலப் பரிந்து பாதுகாத்து வளர்த்து பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, கலை, இலக்கியச் செழிப்பு, மேன்மையான உணவு, சிறப்பான உடை, நோயற்ற வாழ்வு என்பன எம் மக்கள் அனைவரும் பெற உத்தரவாதம் அளித்தவரும், என்றும் எமக்குப் பேரரசரும், வழிகாட்டியுமான ’விவேகன்’ என்ற நற்பெயர் பெற்ற பிலிப்பு மகா சக்கரவர்த்தி அவர்களுக்குத் தாள் பணிந்து அனுப்புவித்த லிகிதம் இது.
வேறு யாரும் இது தற்செயலாகக் கூடக் கிடைத்து இதைப் படிப்பது தடை செய்யப்பட்டதும் ராஜத்துரோகத்துக்கு ஒப்பான குற்றமுமாகும். தூசியிலும் தூசியான, சக்கரவர்த்திகளின் ஊழியருக்கு ஊழியரான இம்மானுவல் பெத்ரோவாகிய நான், பேரரசரின் முன் மண்டியிட்டு, மரியாதையோடு விடுக்கும் லிகிதம் இது.
பரத கண்டம் என வழங்கப்படும் இந்திய தேசத்தில் உயர்ஜாதி மிளகு விளைவித்துச் சிறந்த உத்தரகன்னடப் பகுதியின் மிளகு மகாராணி என்ற சென்னபைரதேவி அவர்களின் அரசவைக்கு போர்ச்சுகல் அரசப் பிரதிநிதியாகப் போயிருந்து பணியாற்றுகிறவனான நான் ஆயிரம் தெண்டனிட்டு இந்த லிகிதத்தை எழுதலானேன். எழுத்துப் பிழை, சொற்பிழை, தெளிவின்மை இவை இந்த லிகிதத்தில் தென்பட்டால் தயைகூர்ந்து அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்.
இந்தியாவில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கு உட்பட்ட தென்னிந்திய சிற்றரசுகளில், வடக்கு கன்னட கொங்கணி பிரதேசத்து அரசுகள் வாசனை திரவியங்களும், வெல்லமும், சாயம் தோய்த்த துணியும், வெடியுப்பும் ஏற்றுமதி செய்து பெரும் வருமானம் சம்பாதித்து வருவது மன்னர் பெருந்தகை அறிந்ததே.
இந்தச் சிற்றரசர்களோடு நல்லிணக்கம் பூண்டு கடல் கடந்து ஏலமும், மிளகும், கிராம்பும் மிகக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்து ஐரோப்பா கொண்டு போவது நமக்குச் சாதகமான, நல்ல வருமானம் விளைவிக்கும் செயல் என்பதும் பேரரசர் எங்களுக்குச் சொல்லி விளக்கியிருப்பது.
அதிலும் மிளகு ராணி என்று போர்த்துகீசியர்களான நாம் நேசத்தோடு அழைக்கும் ஜெருஸோப்பா நகர் சார்ந்த நிலப்பரப்பின் அரசி சென்னபைரதேவி நம்மோடு நல்ல உறவு வைத்திருப்பதோடு, நமக்கு ஜன்மப் பகைவர்களான ஒலாந்தியர்களை அவர்கள் இந்தியாவின் மேற்குக் கரையான கொங்கணத்துக்கு நாடு பிடிக்க வந்தபோது விரட்டியடித்தவர்.
அரசியவர்கள் திருமுகம் காண வாய்ப்பு வரும்போதெல்லாம் இந்த லிகிதத்தை எழுதும் உங்கள் ஊழியன் இம்மானுவல் பெத்ரோ சென்று மரியாதை செலுத்தத் தவறுவதில்லை. அரசியார் ஆணைப்படி மிளகும், ஏலமும் அவர்கள் தர, நாம் சபோலாவும் மிளகாயும் பண்டமாற்றாகத் தரவும் ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்பட இருக்கிறதும் தெரிந்ததே.
இந்த ஒப்பந்தம் தொடர்பாகவும் அண்மையில் அறுபது வயது பூர்த்தியான மகாராணி சென்னபைரதேவியை வாழ்த்தி பரிசு சமர்ப்பிக்கவுமாக அடியேன் இரு தடவை அரசியார் வசித்து அரசாளும் மிர்ஜான் கோட்டைக்குச் சென்றிருந்தேன்.
முதல் பயணம் வாழ்த்தி விருந்துண்டு வர. மிக அற்புதமான விருந்து அது. அதற்கு இரண்டு நாள் கழித்து தனியாக அரசவைக் காரியாலயத்தில் சந்தித்தபோது பேரரசர் இங்கிருந்து அனுப்பிவைத்த தொழில் நுட்பம் மிகச் சிறந்ததும் நேர்த்தியான வடிவம்சம் கொண்டதுமான ஹெல்வெட்டியா இடுப்புவார் கடியாரத்தை நான் பேரரசர் சார்பில் பரிசளித்தபோது அரசியார் மனமுவந்து அதைப் பிரியமாக ஏற்றுக்கொண்டார்.
Medieval letter written on paper
Ack University of York
He was born holding tight the midwife’s finger -மிளகு நாவலில் இருந்து
–
குழந்தை மெல்ல தலை முதலில் வெளிவரப் பார்த்து நின்ற மருத்துவச்சி ஆச்சரியத்தைச் சொல்லும் குரல் எழுப்பினாள். எத்தனை தடவை பிரசவிக்கப் பண்ணினாலும், ஒவ்வொரு முறையும் அவளுக்கு அது ஆனந்தகரமும் ஆச்சரியமும் தான் என்று அவள் பார்வை சொன்னது.
குழந்தை தலைமேல் கை வெச்சுக்கிட்டிருக்கு. பாருங்க மருமகனே. அதை அங்கே இருந்து இடுப்புக்கு கொண்டு வரணும் என்றபடி சிசுவின் கையைத் தலையில் இருந்து அகற்ற மருத்துவச்சி தன் கையை அதன் அருகே கொண்டு போ0னாள். பிஞ்சு விரல்கள் உடனே அவள் கைவிரலைப் பற்றிக்கொண்டு விட்டன.
சுகப் பிரசவம். மிங்கு களைப்பில் மூடிக் கொள்ளும் கண்களை சிரமத்தோடு திறந்து பார்க்க அவளுக்கு முன் வைத்தியர் குழந்தையை ஸ்பர்ஸித்து ஆண் குழந்தை என்று அறிவிக்கிறார். சின்ன அரிந்தம் பிறந்துட்டான் என்று ஆனந்தமாக அறிவிக்கிறார். மிங்குவின் கண்கள் அசதியில் மூடியுள்ளன.
மருத்துவச்சி ராஜம்மா தன் விரலை சிசுவின் விரல் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள பூவை கையில் இருந்து எடுப்பது போல் விலக்கப் பார்க்கிறாள். சின்ன அரிந்தம் கையை விடுவேனா என்று முரண்டு பண்ணி அழுகிறான்.
மருமகனே தொப்புள் கொடியை எடுத்துடறீங்களா? நான் தான் எடுப்பேன். உங்க மகன் எழுந்திருக்க விடமாட்டேன்னு கையைப் பிடிச்சுட்டிருக்கானே.
அவள் கேட்கும் போதே மருத்துவப் பெட்டியில் இருந்து சுத்தம் செய்து வைத்திருந்த கத்தரியை எடுக்கிறார் வைத்தியர். லாகவமாக தொப்புள் கொடியை வெட்டி அகற்றி தாயையும் சேயையும் பிரித்தெடுக்கிறார்.
குழந்தை விரல்களை விடுவிக்க அவற்றை இதமாகத் தடவுகிறாள் ராஜம்மா. ஒரு வினாடி சும்மா இருந்து மருத்துவச்சியின் விரல்களை அணைத்துப் பிடித்தபடியே அவை துவள்கின்றன.
நல்லபடிக்கு கொடி வெட்டிட்டீங்க மருமகனே, பாருங்க, என்ன செஞ்சாலும் உங்க மகன் என் கையை விட மாட்டேன்கிறானே என்ன பண்ணலாம்?
மருத்துவச்சி விசாரிக்கிறாள். வைத்தியர் மனதில் பல தீர்வுகள் எழுந்து வருகின்றன.
கைக்கு மேலே புறங்கையிலே ஒரு சொட்டு பாலை வைக்கலாம் என்கிறார் வைத்தியர். மிங்குவின் மார்பகத்தில் கை வைக்கிறார். உள்ளங்கையில் சில துளிகள் தாய்ப்பால். இதை வைக்கலாம் என்கிறார் வைத்தியர்.
இல்லே மருமகனே, தாய்ப்பால் பிறந்ததும் குடிக்கத்தான் முதல்லே தரணும். அதை புறங்கையிலே வைக்கறது பாலுக்குச் செய்யற அவமரியாதை என்று ஒரு ஓரமாக கையை விடுவித்துக் கொள்ளாமல் கட்டிலில் மலர்த்திய சிசுவின் அருகே உட்கார்கிறாள் மருத்துவச்சி.
மிங்குவை எழுப்பி பிள்ளைக்கு பால் தரச் சொல்லலாமே. வைத்தியர் கேட்கிறார்.
தூங்கறா பாவம். இதோ அவளா எழுந்துடுவா பொறுங்க மருமகனே. பூ விரல் என் கிழட்டு விரலைப் பிடிச்சு கன்னிப்போயிடப் போகுது. பாவம். நல்ல பிள்ளை இல்லியோ. பாட்டி கையை விடுடா தங்கம்.
வேறே என்ன பண்ணலாம் சொல்லுங்க ராஜம்மா அக்கா
சித்தெறும்பு கடிச்சதுலேயும் பத்திலே ஒரு பங்கு தான் சுள்ளுனு இருக்கணும். சின்னஞ்சிறுசு விரல் பொறுத்துக்கற மாதிரி லேசானதிலும் லேசானதா இருக்கணும்.
மருத்துவச்சி சொல்ல, சிக்கிமுக்கி கல்லிலே உரசி ஒரு சின்ன தீப்பொறி உண்டு பண்ணட்டா என்று கேட்கிறார் வைத்தியர்.
மங்களகரமான குழந்தை பிறப்பு நடந்திருக்கு. இனிப்பு கொடுத்து கொண்டாட வேண்டிய தருணம். தீப்பொறி எல்லாம் சூரிய அம்சம். இந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்றது இல்லே. இதை அடுத்த வீட்டு நாராயணி அம்மாள் சொல்கிறாள்.
குழந்தை பிறந்தது தெரிந்து தெருவே வைத்தியர் வீட்டில் குழுமியிருக்கிறது.
Pic Pregnancy in art
Ack en.wikipedia.org
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

