இரா. முருகன்'s Blog, page 71

September 7, 2021

மிளகு நாவலில் இருந்து நழுவி விழுந்த மீன்

“வேம்பு அண்ணாவரே, நேற்றைக்கு கடையிலே காணோம் எங்கே போயிருந்தீங்க?”

மீன் தலைகளை தனியாக ஒரு பாத்திரத்தில் இட்டு வேம்புவிடம் கொடுக்கப் போனபோது அவர் அடுப்பு பக்கம் நகர்ந்திருந்தார்.

“நானா, ஊரே ஓடிக்கிட்டு இருக்கே, நானும் அங்கே தான் போனது. சீக்கிரம் வரலாம்னு பார்த்தேன். ரொம்ப நேரமாயிடுச்சு’ என்றார், தலைகளை வெண்ணெய் விட்டுப் பொறிக்க கூடுதல் வெப்பம் உண்டாக்க ஒரு விறகைத் அடுப்பில் திணித்தபடி.

”நான் கூட நேத்தைக்கு தங்கம் வாங்கப் போயிருந்தேன். தனசேகரன் செட்டியார் வேண்டப்பட்ட ஆளாக இருக்கறதாலே நாலு பவுன் வாங்கினேன். மத்தவங்களுக்கு எல்லாம் ஆளுக்கு ரெண்டு பவுன் தான் கொடுத்தார். அதுவும் பவன் ஒண்ணு பத்து சவரன் பணத்துக்கு. எனக்கு பவுனுக்கு எட்டு சவரன்லே கொடுத்தார். அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் வாங்கணும். வீட்டுலே பீவி போர்ச்சுகீசியப் பணம் ரியல் சேர்த்து வச்சிருக்கு. அதையும் தங்கமாக்கணும்” என்றபடி பால் குவளையை வைத்து விட்டு எழுந்தார் அபுசாலி ராவுத்தர்.

லூசியா, வேம்பு சொன்னபடி, மீன் குழம்புக்காக மிளகு விழுதையும் உப்பையும் எடுத்து அடுப்புச் சட்டியில் கொதிக்க வைத்தபோது, பூண்டு போடாதது நினைவு வர, அவசர அவசரமாக அலமாரியைத் திறந்து எடுத்து, சன்னமான துண்டுகளாக வெட்டி, இரும்புச் சட்டிக்குள் போட்டாள்.

“எல்லோரும் ஆளுக்கு ஒண்ணு ரெண்டு சவரன் வாங்கினா சரிதான். லட்சுமி பூஜைன்னு ரொம்ப வருஷமா கொண்டாடறதுதானே இப்படி அப்போ அப்போ பொன் வாங்கிச் சேர்த்து வைக்கிறது. ஆனா இப்போ ஏன் திடீர்னு எல்லோருக்கும் தங்கத்துலே ஆசை?” அல்வாரிஸ் அபுசாலியைக் கேட்டார்.

”ஆல்வா, மிளகு ராணிக்கு உடம்பு சரியில்லே. மனசும் சரியில்லே. நல்லது நினைச்சு செய்யறாங்களோ என்னமோ, ஊரெல்லாம் கோபப்பட வச்சுட்டாங்க. எங்கே பார்த்தாலும் சதுர்முக பசதியைக் கட்டு, கோவிலைக் கட்டுன்னு கிளம்பி தேசத்திலே நடக்கிற ஒரே காரியம் இப்படி கட்டுறதுதான். மிளகு வித்து வர்ற பணம், வரிப் பணம் எல்லாம் இதுக்கே போச்சுன்னா மத்த காரியத்துக்கு என்ன செய்யன்னு அவங்க மகன் ராஜகுமாரர் கேட்கறது சரியாகத்தான் இருக்குமோ” என்றார் அபுசாலி குடையை ஊன்றிக் கொண்டு.

”அவர் யோக்யதைக்கு அம்மாவை கேள்வி கேக்கறது தப்பு இல்லீங்களா?” அல்வாரிஸ் கேட்டார். ”அம்மா கல்யாணம் செஞ்சுக்கலே. குடும்பம் கிடையாது. ஊரோடு வற்புறுத்தித்தான் அண்ணன் மகனை தத்து எடுத்துக்கிட்டாங்க. அந்த நன்றி கூட வேணாமா? தேசத்துக்காக உழைச்சே ஓடாகறாங்க அம்மா. அவங்களைக் கேட்க இவர் யாரு? வெறும் வளர்ப்பு மகன்”. அல்வாரிஸ் பொரிந்து தள்ளி விட்டார்.

“அவர் கேட்க இல்லேன்னா ஊரில் மத்தவங்க கேட்காமல் இருப்பாங்களா? ஐம்பது வருஷத்துக்கு மேலே ராணியா இருந்தாச்சு. கொஞ்சம் விலகி இளையவங்களுக்கு சந்தர்ப்பம் இப்போ இல்லேன்னா வேறெப்போ தர்றதாம்?’ என்றார் அபுசாலி. ”நான் சொல்லலே, ஊர்லே பேச்சு” என்று ஜாக்கிரதையாக பின்னொட்டு வைத்துப் பேசினார்.

காய்கறி கூடைகளோடு பொன்னையா வந்து நுழைந்தார். ”என்ன ஹொன்னய்யா, ஆறு மணிக்கு வரச் சொன்னா, ஆறரை மணிக்கு காய்கறி கொண்டு வரீங்களே” என்று அல்வாரிஸ் கேட்க, பொன்னையா, உறங்கிட்டேன் என்றார் அப்பாவியாக.

“நேத்து பூரா ஹொன்னாவர் நகைக்கடைகள்லே எல்லாம் தேடிப் போய் கடைசியா ஒரு கடையிலே மூணு பவன் பதினோரு சவரன் மேனிக்கு வாங்கிட்டு வந்தேன். நெல் விளையற நாலு குண்டு நிலத்தையும் கொடுத்துட்டு தங்கமாக மாற்றிக்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். இந்தம்மா சமணக் கோவிலும் இந்து கோவிலும் ஊர் முழுக்க கட்டவும் வேணாம், நாட்டுலே பணத்துக்கு மதிப்பு குறைஞ்சு ஒண்ணுமே இல்லாம போயிடுமான்னு எல்லோரும் பயப்படவும் வேணாம். கோவில் கட்டறது, பசதி கட்டறது எல்லாம் அவசியமா இப்போ?” என்றார் பொன்னையா.

லூசியாவுக்கு கொஞ்சம் போல் புரிந்தமாதிரி இருந்தது. நிறைய சேமித்து வைக்கிறவர்களுக்கு அந்தக் கவலை எல்லாம் வேணும். பணமாக இருந்தால் என்ன தங்கமாக இருந்தால் என்ன, வீடு நிலமாக இருந்தால் என்ன அதென்ன பிடிவாதம், எல்லாவற்றையும் கொடுத்து தங்க நகை ஏன் வாங்க வேண்டும்?

கையில் பிடித்திருந்த கடைசி மீன் அதானே என்று சொல்லியபடி தரையில் விழுந்து துள்ளியது. லூசியா அதை எடுத்தபோது கை நழுவி மார்க்கச்சில் நடுவாக விழுந்தது.

pic fish curry
ack keralatourism.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2021 19:27

September 5, 2021

சதுர்முக பசதி என்ற சமணக் கோவில் – மிளகு நாவலில் இருந்து

மிளகு நாவலில் இருந்து

”சதுர்முக பசதி. நான்கு வாயில் கோவில். பன்முக மெய்யின் உருவகம். உண்மை என்பது ஆன்ம லயிப்பாக இருக்கலாம். உண்மை என்பது மனதில் நான் யார் என்று சதா கேட்டுத் தேடியடைவதாக இருக்கலாம். உண்மை என்பது உறவுகளின் நதிமூலம் தெளிவதாக இருக்கலாம். உண்மை என்பது, நட்பும் காதலும் காமமும் பாசமும் சென்றடையும் இறுதி நிலையாக இருக்கலாம். தேடிப்போய்த் திரும்ப வந்தடைந்த தொடக்கமாக இருக்கலாம். உண்மை என்பது எண்ணங்கள் உருவாக்கிய இலக்கியமும், ஓவியமும், சிற்பமும், கடவுளும் ஆக இருக்கலாம். உண்மையை அடைய நான்கில் எந்த வாயிலும் கடந்து சதுர்முக பசதிக்குள் போகலாம்”.

நிர்மல முனிவரின் ஆன்மீகச் சொற்பொழிவுக்கு ஜெரஸோப்பாவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஜெரஸோப்பாவில் சென்னபைரதேவி ஒரு சமண சதுர்முக பசதியைக் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார். மிகப் பெரியதுமில்லை. ஆகச் சிறியதும் இல்லை. நான்கு பக்கமும் உள்ளே திறக்கும் வாசல் கதவுகள் அந்தக் கோவிலின் பிரார்த்தனைக் கூட மண்டபத்துக்கு யாரையும் வரவேற்கும்.

கோவில் என்பதால் சிற்பமும், ஓவியமும், கட்டிடக்கலையின் உன்னதம் தொட்ட மண்டபங்களும், உயர்ந்த கோபுரங்களும், திருக்குளங்களும் இல்லை.

தீர்த்தங்கரர்களான அறநாத், மல்லிநாத், முனீஸ்வரநாத் ஆகியோரின் திரு உருவச் சிலைகளும், வேலைப்பாடு அமைந்த விதானமும், கல்பாளம் மேவிய தரையுமாக மலர்ந்து நிற்பது சதுர்முக பசதி. திரிலோக ஜீன சில்பாலயா என்று பெயர் சூட்டப்படும் பசதிக்கு. மூன்று உலகத்துக்கும் நெற்றித் திலகம் போன்ற, சமண சிற்பங்களின் ஆலயம் என்று அந்தப் பெயர் பொருள் கொள்கிறது.

படம் ஜெரஸூப்பா சதுர்முக பசதி – சமணக் கோவில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2021 07:42

September 4, 2021

முகத்தில் பூசிய மிளகு விழுது -மிளகு நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி

குட்டி, நானே மொளகு விழுது எடுத்து தட்டுலே போட்டுக்கணுமா? அதுக்கு முன்னாடி அது நல்லா அரைச்சிருக்கான்னு பார்த்து சொல்லு கொஞ்சம். சொல்லியபடி லூசியாவின் தலையை மிளகு விழுதுக் கிண்ணத்துக்குள் அமிழ்த்தினான் அவன்.

ஓவென்று குரல் எடுத்து அலறினாள் லூசியா. ஐயோ கண்ணு எரியுதே.. ஒண்ணும் பார்க்க முடியலியே. குருடாகிட்டேன். இருட்டிட்டு வருது.. நெஞ்செல்லாம் எரியுதே.. கண்ணை கழுவிக்கணுமே தண்ணீ ஆல்வாரிஸ் சின்ஹோர் ஐயோ எரியுதே

அவள் பக்கத்தில் அல்வாரிஸ் நடந்து மெல்ல அவளை அருகில் ஒரு நாற்காலியில் அமர வைத்தார். யாரோ ஒரு குவளையில் தண்ணீரோடு வந்தார்கள். அதை லூசியாவின் கண்ணில் துடைக்கப் போவதற்கு முன் அல்வாரிஸ் அவரைத் தடுத்து நிறுத்தினார். மிளகு கண்ணுலே பட்டா தண்ணியை விட்டுக் கழுவக் கூடாது. எரிச்சல் கூடத்தான் கூடும். குறையாது

ராணுவத் தடியன் ஒன்றுமே நடக்காதது மாதிரி தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கோழிக்கறி ஒரு தட்டு கொண்டு வர ஏன் நேரமானது என்று சத்தம் போட்டான் இங்கிதம் இல்லாமல். பரிமாறும் பெண்கள் பம்பரமாகச் சுழன்று அவனுக்கும் மற்றவர்களுக்கும் பரிமாற, லூசியா படும் துன்பம் உறைக்காமல் அந்தக் கூட்டம் பசியாறிக் கொண்டிருந்தது.

லூசியா இருகண்ணையும் பொத்தியபடி தரையில் உருண்டாள். அவளை மெதுவாக சமையல்கட்டுக்கு அழைத்துப் போனார்கள் பரிமாற வந்த பெண்கள். நாகு பால் இருக்கா பாரு. அல்வாரீஸ் கேட்டார். இருக்கு சின்ஹோர். ரெண்டு படி இருக்கு. பாயசம் காய்ச்ச எடுத்து வச்சது. சர்க்கரை கம்மியா இருக்குன்னு…

நாகுவைக் கை காட்டி அமர்த்தினார் அல்வாரிஸ். ஐயோ எரியுதே நான் பொட்டையாகிட்டேனே அல்வாரிஸ் சின்ஹோர். வேலையிலே வச்சுப்பீங்களா லூசியா கண் எரிச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தரையில் உட்கார்ந்தாள். சரியாயிடும்மா. கொஞ்சம் பொறுத்துக்க.. நாகு பால் இருக்கு இல்லே, இருக்கா? பிதாவுக்கு நன்றி. பாலை ஒரு குவளையிலே ஊற்று. கொஞ்சம் போதும். பஞ்சு எடுங்க அடுத்து . மரப்பெட்டியிலே மருந்தோடு மருந்தாக கொஞ்சம் பொதியா வச்சிருக்கு. கிறிஸ்துமஸ் நேரத்துலே தீபத்துக்கு திரி செஞ்சு போட.. எடுத்தியா? நாகு ஓடிப் போய் மரப்பெட்டியில் இருந்து பஞ்சுப் பொதி எடுத்துவந்தான். அதில் இருந்து கொஞ்சம் பிய்த்து ஒரு சிறு பந்தாக்கினார்

ஆல்வரீஸ். சின்ஹோர் கோவா போயிடறேன் விட்டுடுங்க. ஐயோ கண் போச்சே. எரியுதே. லூசியா இன்னும் பலமாக அழுதாள். அவள் கண் இரண்டும் வீங்கி இருந்தன.

தாய் தந்தை போல லூசியாவைத் தோளில் சார்த்திக் கொண்டு அல்வாரிஸ் பாலில் நனைத்த பஞ்சுப் பொதியை லூசியா கண்ணின் மேல் வைத்து மெல்லத் துடைத்தார். ஐந்து நிமிட்ம் இரு கண்களும் பால் நனைந்து கழுவப்பட, சென்ஹோர், நன்றி எரிச்சல் ரொம்ப குறைஞ்சுடுச்சு, நன்றி என்று சிரித்தபடி கண்ணைத் திறந்தாள் லூசியா.

கண்ணு தெரியுது கண்ணு தெரியுது. அவளை அப்படியே பிடித்து இன்னும் மிச்சமிருந்த பாலை எல்லாம் பஞ்சுப் பந்தில் நனைத்து அவள் கண்களைத் தொடர்ந்து கழுவினார் ஆல்வாரிஸ்.

முதல் பந்தி விருந்து முடிந்து சாப்பிட்டவர்கள் கைகழுவித் தாம்பூலம் வாங்கித் தரித்து ”சாப்பாடு பிரமாதம்” என்று சொல்லி ஒவ்வொருவராக வெளியே போனார்கள். கிராதக அதிகாரி லூசியா பக்கம் ஒரு வினாடி நின்றான். அப்புறம் நடந்தான். ஒன்றும் சொல்லவில்லை அவன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2021 08:54

September 3, 2021

மிளகு தின்னும் போட்டியோடு ஒரு வசந்த விழா – மிளகு நாவலில் இருந்து

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

மிளகு தின்னும் போட்டியோடு ஒரு வசந்த விழா

சீனாவும் தைவானும் அடுத்த வாரம், தொடங்கி ஒரு வாரம் கொண்டாடப் போகும் வசந்த விழா என்ற சீனப் பண்டிகைக்கு மிளகு தேவை.

பெருமழையால் ஏற்பட்ட யாங்ட்ஸீ நதியின் வெள்ளப் பெருக்கு காரணம் நதிக்கரை கோடவுண்களில் சேமித்து வைத்திருந்த இந்திய இறக்குமதி மிளகில் பாதிக்கு மேல் கெட்டுப் போய்விட்டதாக சீன அரசாங்க யந்திரம் அறிவிக்கத் தாமதமாகிப் போனது.

தைவான் சமாளித்துக் கொள்ளும். சிறு நாடுதான். எனினும் செஞ்சீனத்துக்கு தைவான் மிளகு வேகமாக போய்க் கொண்டிருப்பதால் அங்கும் மிளகு இன்னும் இன்னும் உடனடியாகத் தேவை.

மிளகு தின்னும் போட்டி என்று நாடு முழுக்க, சின்னக் கிராமங்களில் இருந்து தலைநகர் பீஜிங்க் வரை வசந்தவிழாவில் எல்லாத் தெரு, பேட்டை, ஊர் அளவில் போட்டிகள் நடக்கும். வயிறு எரிய, வாய் உரைப்பில் எச்சில் வடித்திருக்க, கண்ணில் நீர் திரண்டு கொட்ட, மிளகுப் போட்டியாளர்கள் அதைக் கடித்துச் சவைத்துக் குறுமிளகாகவும், அரைத்தெடுத்த மிளகு விழுதாகவும் உண்டு எரிச்சல் தணிய லிட்டர் லிட்டராக வெறும் பாலைக் குடிப்பார்கள். மிளகு உண்டது, பால் குடித்தது இரண்டுக்கும் சேர்த்து பரிசு நிர்ணயிக்கப்படும்.

அதோடு புத்தர் கோவில்களில் கபாடங்கள் மேலும், பிரகாரத்திலும், வரும் பாதையிலும், மரக்கிண்ணங்களில் மிளகும் உப்பும் நிறைத்துக் காணிக்கையாக விடுப்பதும் நடக்கும்.

எல்லாம் மருது அலுவலகத்தில் உதவி நிர்வாகியாக இருக்கும் சாங் என்ற சீனருக்குத் தொலைபேசி அறிந்து கொண்டது.

நன்றி சாங். வசந்தவிழா வாழ்த்துகள்.

நன்றி மருது.

எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள் வசந்த விழாவை சாங்?

நானா, ஒரு பூவேலைப்பாடு அமைந்த பழைய காலக் கிண்ணத்தை எடுப்பேன். நல்ல காரமும் வாசனையும் கொண்ட கறுப்பு மிளகு ஒரு பிடி மிக்சியில் அரைத்து விழுதாக்குவேன்.

அதை விழுங்குவீர்களா? Extraordinary!

நான் மிளகு விழுது சாப்பிடப் போகிறேன் என்று எப்போது சொன்னேன்?

அப்போது அந்த மிளகு விழுதை என்ன பண்ண உத்தேசம் சாங்?

மிளகு விழுதை அலங்காரமான கிண்ணத்தில் இட்டு, சகல மரியாதையோடும் எடுத்துப் போய் என் மாமியார் உட்காரும் இடத்தில் பூசி விடப் போகிறேன்.

மருது சிரிக்கத் தொடங்கும் முன் சாங் டெலிபோனை வைத்துவிட்டார்.

நாளை சனிக்கிழமை, அடுத்து ஞாயிறு. ஆப்ஷன், பார்வேர்ட் வர்த்தகம் இல்லாமல் உடனடி மிளகு – பணம் கைமாற்றத்துக்கான ஸ்பாட் காண்ட்ராக்ட்கள் முளைத்து மிளகு விலையை எங்கோ கொண்டுபோகப் போகின்றன. அதுவும் இந்த ராத்திரிக்குள். ஆஸ்திரேலியாவிலும், நியூஸிலாந்திலும் மார்க்கெட் அதிகாலை கடந்து திறக்கப்பட, மும்முரமான வர்த்தகம் தொடங்கி அடுத்தடுத்து மற்ற நாடுகளையும் பாதிக்கும், இந்தியாவில் இருந்தும், இந்தோனேஷியாவில் இருந்தும் பீய்ஜிங்-குக்கும், தைப்பே-க்கும் மிளகு உடனடியாக அனுப்பப்படும்.. சிலருக்குப் பின்னால் சந்தனத்தையும் மற்ற சிலருக்கு மிளகு விழுதையும் அப்பிவிட மிளகு வர்த்தகம் காத்திருக்கின்றது.

படம் சீன வசந்த விழா
நன்றி china.org.cn

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2021 05:59

September 2, 2021

தானே பொரித்துக் கொண்ட மீனும், மிளகுக் காப்பு போட்டுக் கொள்ளும் கோழியும்

என் நாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறிய பகுதி

லூசியா விடிந்து கொண்டிருக்கும்போதே போஜன சாலைக்கு வந்து விட்டிருந்தாள். பகல் பனிரெண்டுக்கு வாடிக்கையாளர்கள் உணவருந்திப்போக வர ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு காலை பத்து மணிக்கு ஒரு பெரிய கூட்டமாக பட்டாளத்துக்காரர்கள் வருகிறார்களாம். சாயந்திரம் சூரத்துக்கு அங்கிருந்து லிஸ்பனுக்கும் கப்பல் பயணம் போகிறவர்கள் என்பதால் காலைச் சாப்பாடாகவும் இல்லாமல், பகல் உணவாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டான் நேரத்தில் உண்டுவிட்டுக் கப்பலேறுவார்கள்.

இவர்கள் அவசரத்துக்குக் கோழிகள் தாமே ஓடிவந்து கழுத்தறுத்துக்கொண்டு, , மிளகு விழுதில் விழுந்து புரண்டு மேலெல்லாம் மிளகுக் காப்பு புரட்டிக்கொண்டு சுட வைத்த எண்ணெயில் விழுந்து பொறிந்து கொள்ளவேண்டும். அல்லது மீன்கள் செதில் உதிரக் கல்லில் உர்சி உரசித் தேய்த்துக் கொண்டு, கொதிக்கும் குழம்பில் விழுந்து நீந்தி அந்திம நித்திரை போகவேண்டும். கோழி முட்டைகள் இரும்பு வாணலியில் ஒன்றை ஒன்று அடித்து உடைத்துக் கிண்டிக்கொண்டு மிளகாயும் வெங்காயமும் சேர முட்டைக்கறி ஆக வேண்டும். இதெல்லாம் நடக்க முடியுமானால் நூறு பேர் சாப்பிட வரும்போது அவசரமாகக் கிண்டிக் கிளறிக் கொட்டிப் பரிமாற வேண்டியிருக்காது.

என்ன செய்ய, ஒஃபிலியா சாப்பாட்டுக்கடை உரிமையாளர் அல்வாரீஸ் காலை பத்து மணிக்கு விருந்து தயாராகி விடும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டார்.

கடைகண்ணியில் மாதச் சம்பளத்துக்குப் போய்ச் சேர்ந்தால் இந்த மாதிரி தொந்தரவுகள் எழும்பும் அவ்வப்போது. லூசியா அவற்றைச் சமாளித்தே ஆகவேண்டும். இது சரிப்படாது என்றால் கோவாவில் இருந்து ஹொன்னாவருக்கு வேலை தேடியே வந்திருக்கக் கூடாது. கோவாவிலேயே இருந்தால் சதா வெற்றிலை பாக்கை மென்று துப்பிக்கொண்டு, வண்டித் துறையில் தலையில் சும்மாடு வைத்து பிரயாணிகளுடைய மூட்டை முடிச்சுகளைத் தூக்கிச் சுமந்து அரைப் பணமும் ஒரு பணமுமாகக் காசு கூலி வாங்கிக்கொண்டு, வீடு பெருக்கி எச்சில் தட்டு கழுவிக் காசு வாங்கிக்கொண்டுதான் ஆயுசுக்கும் இருக்க வேண்டிவரும். இன்னும் பத்து வருடத்தில் பல் காவி பிடித்துவிடும் அல்லது உபத்ரவமில்லாமல் விழுந்துவிடும். மூட்டை தூக்கித் தூக்கிக் குத்திருமல் வந்து யாரும் கூலிகொடுத்துக் கூப்பிட மாட்டார்கள். வீடு பெருக்கி, பாத்திரம் கழுவுவது வேணுமானால் நாலைந்து வீட்டுக்கு செய்து கை காய்த்துப் போயிருக்கும்.

ஆனால் பழமை அழுத்தமாகப் பதிந்த கோவாவை விட்டு வெளியே ஹொன்னாவர், பட்கல், உடுப்பி, ஹம்பி என்று போய் உணவுக்கடை உத்தியோகம், துணி, காய்கறி-பழக்கடை, மிட்டாய்க்கடை வேலை என்று சேர்ந்துவிட்டால் பத்து வருடத்தில் அங்கே கிடைத்த அனுபவத்தையும், சேர்த்து வைத்த சம்பளப் பணத்தையும் கொண்டு சிறியதாக சொந்தக்கடை ஒன்று போட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வாய்ப்பு உண்டு. அந்த நம்பிக்கை தான் காலை ஆறுமணிக்கு கோழி சமைக்க வரவழைக்கிறது.

லூசியா லூசியா என்று வாசலில் கதவை அடித்தபடி யாரோ கூப்பிடும் சத்தம். மீன் வாடை பலமாகச் சூழ்ந்தது. வாசலுக்குப் போகாமலேயே லூசியாவுக்கு யார் வந்தது என்று தெரியும். மீன்கார அபுசாலி ராவுத்தர். இன்றைக்கு விருந்துக்கு ஆற்றுமீன் வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்ததால் வந்திருக்கிறார்.

அபுசாலி ராவுத்தர் பெரிய மீன்கூடையை கதவுக்கு இடையே உள்ளே தள்ள, கூடைக்குள் இன்னும் உயிர் இருந்த ஒரு மீன் துள்ளி வெளியே விழுந்தது. எடுத்து உள்ளே போட்டபடி எல்லாம் நேத்து ராத்திரி பிடிச்ச மீன் இதுக்கு மேலே புதுசு வேணும்னா சோத்துக் கடையை சமுத்திரத்துக்கு உள்ளே உக்காந்துதான் நடத்தணும் என்றார்.

அபுசாலிக்கா, கை கழுவிட்டு வாங்க. பசுவின்பால் காய்ச்சி வச்சிருக்கேன் என்று உபசரித்து விட்டு மீன் கூடையில் இருந்து ஒரு கை மீனை அள்ளிப் பார்த்துவிட்டு மிளகு அரைக்கத் திரும்ப உள்ளே போனாள் லூசியா. சமையலறை உள்ளே இருந்து பூனைக்குட்டி ஒன்று வேகமாக ஓடியது

pic Fried Chicken
ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2021 06:58

September 1, 2021

மீன் குழம்பும் தங்கம் வாங்கப் போனவர்களும்

விரைந்து முன்னேறும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி

லூசியா அபுசாலியின் கூடையிலிருந்து மீன்களை அள்ளியபடி எதிரே அலமாரியில் எதையோ தேடினாள் –

மரவை எங்கே நாகு என்று இளைய மடையரைக் கேட்க அவன் சிவப்பு வண்ணம் பூசிய அகன்ற கும்பா போன்ற மரவையை எடுத்துவந்து கொடுத்தான். மரவையில் ஊற்றியிருந்த கல் உப்பு கரைத்த தண்ணீரில் கையில் இருந்த மீன்களை முழுக்கக் கழுவினாள்.

ஷராவதி ஆற்று மீன் ரொம்ப வழுக்குதே என்றபடி லூசியா தரையில் விழுந்த ஒரு மீனை மறுபடி கழுவ மறுபடியும் அது நழுவி விழுந்தது. அபுசாலி ராவுத்தர் சிரித்தபடி சொன்னார் –

இதைத்தான் தமிழ்லே சொல்வாங்க, கழுவற மீன்லே நழுவற மீன்னு.

தமிழ் பேசும் பிரதேசத்தை விட்டு வந்து ஐம்பது வருடமாகி, ஹொன்னாவரில் கொங்கணியில் பேசி மும்முரமான மீன் வியாபாரத்தில் இருந்தாலும், தாய்மொழியை அதன் சகல அழகுகளோடும் நினைவில் வைத்த ஒருவர் அவர் என்பதில் லூசியாவுக்கு அவரிடம் மரியாதை உண்டு.

ஒவ்வொரு மீனாக எடுத்து வாலைப் பிடித்துக் கொண்டு செதிலை முழுக்கத் தேய்த்து உதிர்த்தாள். தலை, வால், துடுப்புகளை நீக்கி குடலைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டினாள்.

இந்தாங்க, உங்க மீன். கமகமன்னு மிளகுப் பொடி போட்டு மீன்குழம்பு உண்டாக்குங்க என்று இரண்டாம் சமையல்காரர் சுவேம்புவிடம் கொடுத்தாள் மீன் துண்டுகள் நிறைந்த பாத்திரத்தை.

சுவேம்பு அண்ணாவரே, நேற்றைக்கு கடையிலே காணோம் எங்கே போயி?

மீன் தலைகளை தனியாக ஒரு பாத்திரத்தில் இட்டு சுவேம்புவிடம் கொடுக்கப் போனபோது அவர் அடுப்பு பக்கம் நகர்ந்திருந்தார்.

நானா, ஊரே ஓடிக்கிட்டு இருக்கே, நானும் அங்கே தான் போனது. சீக்கிரம் வரலாம்னு பார்த்தேன். ரொம்ப நேரமாயிடுச்சு என்றார் தலைகளை வெண்ணெய் விட்டுப் பொறிக்க கூடுதல் வெப்பம் உண்டாக்க ஒரு விறகைத் அடுப்பில் திணித்தபடி.

நான் கூட நேத்தைக்கு தங்கம் வாங்கப் போயிருந்தேன். தனசேகரன் செட்டியார் வேண்டப்பட்ட ஆளாக இருக்கறதாலே நாலு பவுன் வாங்கினேன். மத்தவங்களுக்கு எல்லாம் ஆளுக்கு ரெண்டு பவுன் தான் கொடுத்தார். அதுவும் பவன் ஒண்ணு பத்து சவரன் பணத்துக்கு. எனக்கு பவுனுக்கு எட்டு சவரன்லே கொடுத்தார். அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் வாங்கணும் என்றபடி பால் குவளையை வைத்து விட்டு எழுந்தார் அபுசாலி ராவுத்தர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2021 09:03

August 31, 2021

ஒரு மழைநாள் பிற்பகல் நினைவுகள் : மிளகு நாவலில் இருந்து

ஐ ஏ எஸ் கோச்சிங் போனோமே ஞாபகம் இருக்கா? ஜெயம்மா புன்சிரிப்போடு கேட்டாள் சங்கரனை.

சங்கரன் ஞாபக மறதியோடு சிரித்தார்.

“நீயும் அந்த சோழ பிரம்மஹத்தி தைனிக் ஜாக்ரன் எடிட்டர் குப்தாவும் க்ளாஸுக்கு முதல்லே வந்து பேக்கு பேக்குன்னு உட்கார்ந்திருந்தீங்க. என்ன வயசு இருபத்துமூணு இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். ஆனா பாரு பகவான் ஆகிருதியை ரெண்டு பேரை ஒண்ணாக்கி நீட்டி நிமித்தினமாதிரி ஆக்கிட்டான்” என்றாள் ஜெயம்மா.

சங்கரன் மணலுக்குள் ஜெயம்மா கையை இழுத்து வைத்து மேலே மணலால் கோபுரம் செய்து மறைத்தபடி சொன்னார் –

“ஆறடிக்கு ஆஜானுபாகுவா ஒரு பொம்மணாட்டி, நிச்சயம் ஏதோ சப்ஜெக்ட் ப்ரபசர் தான் வந்திருக்கார்னு நடுநடுங்கி என்னைப் பார்த்து குப்தாவும் அவனைப் பார்த்து நானும் எழுந்து நின்னு குட் மார்னிங் மிஸ்ஸுனு கிண்டர் கார்டன் குழந்தைகள் மாதிரி விஷ் பண்றோம். சாயந்திரம் ஆறு மணிக்கு குட் மார்னிங் எல்லாம் சிங்சாங் வாய்ஸ்லே. நீ என்ன பண்ணினே சொல்லு” என்று ஜெயம்மாவைப் பார்த்து சிரித்தார்.

நானா என்று ஜெயம்மா சிரிக்க, ”நர்ஸரி பசங்க தானே, ஒன் பாத்ரூம் போய்ட்டு வந்துடுங்க, இல்லேன்னா ரெண்டு மணி நேரம் போக பெர்மிஷன் இல்லேன்னு சொல்லிட்டாங்களா”?

”சரியா சொன்னே தெரிசா” என்றார் சங்கரன்.

எப்படி தெரியும் தெரிசாவுக்கு? ஜெயம்மா ஆச்சரியத்தோடு கேட்க, ”வயதுக்கு வந்தது பத்தின சினிமா எத்தனை பார்த்திருக்கோம், புத்தகம் படிச்சிருக்கோம். ப்ரைம் ஆஃப் ஜீன் ப்ராடி மாதிரி, கேட்சர் இன் தி ரை மாதிரி.. துடுக்குத்தனமாத்தான் பதில் இருக்கும்னு தெரியும்”.

வசந்தி தெரிசாவுக்குக் கிடைத்த பாராட்டில் ஒரு ஓரமாகக்கிள்ளி மூளியாக்கி மண்ணில் புதைத்து மூடினாள். அதை சிரித்தபடி, தெரிசாவின் தோளில் கைபோட்டி இறுக்கியபடி செய்தாள்

தனக்கு எப்படி தெரியும் என்று சொல்ல தெரிசாவுக்கு ஆர்வம்தான். ஆனால் எப்படிச் சொல்ல? சங்கரனோடு ஒரு பிற்பகல் மழை நேரப் புணர்ச்சியில் போகம் முந்தாதிருக்க என்னென்னவோ சொல்லும்போது இது ரொம்ப நாழி சிரித்தபடி வைத்திருந்து தெரிசாவையும் சங்கரனையும் உச்சம் தொட்டு நீடித்து நிற்க வைத்தது ஜெயம்மா ஜோக்.

அது அம்பலப்புழையில் நடந்தது. அவள் பிங்க் ப்ளவுஸ் அணிந்து தலை குளித்து ஆற்றியிருந்தாள். வெள்ளைப் புடவை இடுப்பு காட்ட, பிங்க் இணை விழைய அழைக்க பிற்பகல் முழுக்கக் கூடிக் கிடந்த அந்த மழைநேரக் கலவி இருபது வருடம் முன் வந்தது.

அவள் தலை நிமிர்த்தி ஒரு வினாடி சங்கரனைப் பார்த்து மறுபடி தலை தாழ்த்திக் கொண்டதை வசந்தி பார்க்கத் தவறவில்லை. சங்கரன் மண்ணை மறுபடி குவித்துக் கொண்டிருந்தார்.

pic Vembanattu-k-kayal backwaters
ack Times of India

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2021 06:33

August 30, 2021

மதுரை அரசர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரும், போர்த்துகல் அரசரின் தலைமைப் பிரதிநிதி இமானுவேல் பெத்ரோவும், ராத்திரி விருந்தும்

வளர்ந்து வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து

ராத்திரியில் மன்னரோடு சந்திப்பு மிக சுவாரசியமானது என்றேன் மதுரை மகாராஜா முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் அவர்களிடம், இட்டலியை கோழிக் குழம்போடு வாயில் இட்டுக் கொண்டு. விஜயநகர அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் எங்கும் மெலிந்த இட்டலிகள் உண்ணக் கிடைக்கும். அவற்றின் நான்கு சேர்ந்து ஒன்றாக மதுரை அரண்மனையில் உண்டேன். நல்ல வெள்ளை நிறம், சற்றே அதிகம் உப்பு இட்டு வேகவைத்த, சூடான இட்டலிகள் அவை. அடுத்து இரண்டு தோசைகளை கொத்திச் சமைத்த இறைச்சியோடு உண்டேன். கைமா என்ற பெயர் அந்த இறைச்சிக்கு.

மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் என்னிடம் கூறியது இந்தப்படி இருந்தது –

”ராத்திரி நீங்களும் நானும் வேறு எந்த முக்கியப் பணியும் இல்லாமல் சந்திப்பை வேண்டும் நேரம் வரைத் தொடரலாம். மதுரையில் இருபத்துநாலு மணி நேரமும் ஊர் விழித்திருப்பதும் ஜனங்கள் விழித்திருப்பதும் இயல்பு. சாயந்திரம் ஆறு மணிக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து, ராத்திரி ஒன்பதுக்கு நகைக்கடையில் திருநாண் என்ற தாலியும், மற்ற நகைகளும், ராத்திரி பத்து மணிக்கு கல்யாணப் புடவை, வேட்டி என எல்லாமும் வாங்கி, நள்ளிரவுக்கு பழம், தேங்காய் என்று கல்யாணத்துக்கு வருகிறவர்களுக்கு அளிக்க வாங்கிவந்து, இனிப்பும், வேறு பலகாரங்களும் வாங்கி வைத்து, காலை ஆறு மணிக்குக் கோவில் பிரகாரத்தில் தாலி கட்டிக் கல்யாணம் வைக்க அனுமதி பெற்று, ஆறரை மணிக்கு மங்கள இசை ஏற்பாடு செய்து, காலை ஏழு மணிக்குக் கல்யாணம் நடத்தி விடலாம். வேறு எந்த ஊரிலும், லிஸ்பனில் கூட இந்த வசதி இருக்காது”.

கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையின் எப்போதும் இயக்கத்தில் இருக்கும் தன்மையை விளக்கிய விதம் எனக்குப் பிடித்திருந்தது. வித்தியாசமான ஊர்தான். அவரிடம் சொன்னேன். விநோதமான பதில் அளித்தார் அவரானால் –

”என்ன செய்ய, நாங்கள் மதுரைக்காரர்கள், கொஞ்சம் விஷமக்காரர்கள். எங்கள் தாத்தா மகாராஜா விஸ்வநாத நாயக்கர் ராயசம் ஆக, என்றால் எழுத, படிக்க அரசருக்கு உதவியாக இருக்க ஒரு படிப்பாளியை நியமிக்கத் தீர்மானித்தார். தேர்ந்தெடுக்க, ரெண்டு முரட்டு நாயக்கர் பய்யன்களை வரச் சொன்னார் – ரெண்டரைக்கு ஒருத்தன் வரட்டும். மூணுக்கு இன்னொருத்தன்
.
”பகல் ரெண்டரைக்கு வந்து காத்திருந்து ராஜாவை சந்திக்க முடியாமல் திரும்பிப் போய்ட்டார் முதல் ஆள். ராஜாவோட விஷயம் – விஷமம் தெரிஞ்ச ரெண்டாவது ஆள் மூணு மணிக்கு தானே, பகல்லே மூணு மணியாக இருக்காது. ராத்திரி மூணு மணிக்குப் போய்ப் பார்க்கலாம்னு ராத்திரி மூணு மணிக்கு அரண்மனை போனா, விஸ்வநாத நாயக்கர் வந்து உக்காந்திருக்கார்! உடனே உத்தியோகம். அந்தப் பய்யன் ராயசம் உத்தியோகத்தில் முப்பது வருஷம் சிறப்பாக இருந்து, எங்க அப்பா காலத்திலே ஓய்வு பெற்றார்”.

நாயக்கர் ரொம்ப சுவாரசியமாகப் பேசியபடி கை அலம்பி அரண்மனை முக மண்டபத்துக்குள் வந்து சேர்ந்தோம்.

தெற்கு கடற்கரையிலே எதுக்கு முத்துக் குளிக்கற இந்திய, தமிழ் பேசற பிரஜைகள் கிட்டே போர்த்துகல் வரி வாங்கணும்? நீங்க நாகப்பட்டணத்திலே அந்த சமுத்திர புத்திரர்களான பரதவர்கள் மீன் பிடிக்க வரி கட்டணும்னு வச்சது மாதிரி இது அபத்தமில்லையா? தடாரென்று கேட்டார் நாயக்கர்.

pic Thirumalai Naicker Mahal

ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 30, 2021 06:57

நப்பின்னை காணில் சிரிக்கும்

2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 26 கண்ணன் பிறந்த நாளில் நான் என் வேம்பநாட்டுக் காயல் blog-இல்
எழுதியது இது –

கோகுலாஷ்டமி வாழ்த்துகள்
————————————

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

சென்னை மகாலிங்கபுரம் கிருஷ்ணன் அம்பலத்தில் சற்று நேரம் முன் தொழுது வந்தேன்.

செத்தி மந்தாரம் துளசி
பிச்சக மாலகள் சார்த்தி
குருவாயூரப்பா நின்னெ கணிகாணேணம்.

நான் போன நேரம் கண்ணனுக்குத் திருமஞ்சன வேளை.

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்துபோய் பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ. நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ.

பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி
காணப்பெரிதும் உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும்
மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய்.

(தொழுவத்தில் புகுந்து விளையாடிக் களித்துப் புழுதியளைந்த உன் திருமேனியைக் காண எனக்குப் பெருவிருப்பம் என்றாலும், அழுக்குப் பிள்ளையான உன்னைக் கண்டவர் பழிப்பர். உனக்கு நாணமே இல்லை. நப்பின்னை கண்டால் சிரிப்பாள். என் மாணிக்கமே, மணியே திருமஞ்சனமாட வா – பெரியாழ்வார் திருமொழி).

என்று யசோதை அழைத்த பிள்ளைக்குக் குளிரக் குளிரத் திருமஞ்சனம். தமிழ், கேரள சோதர, சோதரியர் கூட்டம் பெருகி வழிந்து வழி மறைக்கும் திருக்கோவில் உள்ளே எப்படியோ வலம் வைத்து வந்தேன்.

அம்பலப்புழை கிருஷ்ண அம்பலம் போல் இன்று இந்தக் கோவில் அங்கணத்தில் பெரிய உருளி வைத்துப் பால் ஊற்றிக் காய்ச்சிப் பால்பாயசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கண்ணப்பெருமானுக்கு நிவேதனமாகி இது அடியார்க்கெல்லாம் பிரசாதமாக இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படும்.

பட்டத்ரியின் நாராயணீயத்தைக் கம்பீரமாகச் சொல்லியபடி ஒரு குழு அம்பல முற்றத்தில். சூழலில் விழாவின் உற்சாகம்.

ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.

இரவு பத்து மணிக்கு அத்தாழ பூசையும், பின்னே அவதார பூஜையும் எழுந்நள்ளிப்புமாக இன்று அடியார்க்கு உறக்கமில்லை.

அப்புறம் கண்ணன் உறங்குவான்.

மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே. தாலேலோ
வையமளந்தானே. தாலேலோ.

படம் அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் திருக்கோவில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 30, 2021 02:33

August 28, 2021

அரசூர் சங்கரனும் அடல்ட் டயாபரும்

வேகமாக முன்னேறி வரும் மிளகு நாவலில் இருந்து

அரசூர் சங்கரனும் அடல்ட் டயாபரும்

வசந்தி கையை இறுக்கமாகப் பிடித்தபடி சங்கரன் இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்திருந்தார். சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ள முடியாது என்று குழந்தை மாதிரி பிடிவாதம். விமானத்துக்குள் ஓட வேண்டியிருந்தது என்றால் இப்படிக் கட்டிப் போட்டபின் செய்ய முடியாது என்பது அவர் வாதம். உயிர் முக்கியமில்லியா என்று தெரிசாவிடம் யாரோ மூன்றாம் மனுஷியிடம் விசாரிப்பது போல் கேட்டபோது அவர் தன்னைத் தவிர மற்ற எல்லோரையும் எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தார் என்று தோன்றியது. அவ்வப்போது இப்படி தன்னை இழந்து விடுகிறார் என்று வசந்தி தெரிசாவிடமும் ஜெயம்மாளிடமும் சொன்னாள்.

மூச்சா வந்தா வாயைத் திறந்து சொல்லுங்கோ. இப்போ போய்ட்டு வந்துடறேளா?

மாட்டேன் வரலே என்று சீட்டில் உட்கார்ந்து முன் சீட் முதுகில் செருகி இருந்த நேற்றைய பத்திரிகையைப் பிரித்தார். ஜிலேபி ஜிலேபியா போட்டிருக்கு என்று அந்த மலையாளப் பத்திரிகையைத் திருப்பி வைத்தார் உடனே. தெரிசாவும் வசந்தியும் சிரிக்க, அட என் சமத்துக் கொடமே என்றாள் ஜெயம்மா.

ஜெயம்மா, என் முதல் ப்ளேன் பிரயாணத்துக்கு டெல்லி சப்தர்ஜங் ஏர்போர்டுலே நீங்க தான் கொண்டு வந்து விட்டுட்டுப் போனேள் என்றாள் வசந்தி.

நேற்றைக்கு, கிட்டத்தட்ட முப்பத்தைஞ்சு வருஷத்துக்கு அப்புறம் அன்னிக்கு உன் கூடவும் சங்கரன் கூடவும் கார்லே சப்தர்ஜங்குக்கு லிஃப்ட் கேட்டு சவாரி செஞ்ச ஒருத்தரை பார்த்தேன். திலீப் ராவ் ஜியோட நூற்றுப்பத்து வயசு அப்பா.

ஆமா, நானும் அதே வருஷம் முப்பத்தஞ்சு போய்த்தான் அவரை நேற்றைக்கு பிஷாரடி வைத்தியர் வீட்டிலே வச்சுப் பார்த்தேன். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு அவரை அங்கே பார்த்ததுமே யோசிச்சேன். பிடி கிட்டலே. அவர் கிட்டேயே கேட்டேன். எங்கேயோ பார்த்திருக்கோம் மாமான்னு சொன்னேன். டக்குனு சொல்லிட்டார்.

ஆமா, எங்க கூட ப்ளேன்லே வந்துட்டு நாக்பூர்லே இறங்கிக் காணாமல் போய்ட்டார் ரொம்ப நாளைக்கு ரொம்ப நாள் முந்தி. என்றாள் வசந்தி. வெகு சகஜமாக, முந்தாநாள் நடந்தமாதிரி சொன்னாள் அவள்.

அவரை சுட்டுக் கொல்றதுக்கு கூட்டிப் போறபோது மூத்திரம் போய் என்று ஆரம்பித்த சங்கரன் எழுந்து நின்றார். பாத்ரூம் போகணும் என்றார். அவரை தாங்கிப் பிடித்தபடி விமான டாய்லெட்டுக்கு நடத்திக் கூட்டிப் போனாள் வசந்தி.

கதவை மூடலே. நானும் இருக்கேன். பயப்படாமல் போங்கோ. யாரும் துப்பாக்கி வச்சுண்டு நிற்கலே வாசல்லே என்றாள் டாய்லெட் கதவைத் திறந்தபடிக்கு வைத்து சங்கரனை கமோடில் உட்கார வைத்துவிட்டு.

இவர்கள் பத்து நிமிடம் வரவில்லையே என்று தெரிசா இருக்கைகளின் ஊடாக நடந்து கழிவறை வாசலுக்கு வந்தாள். தெரிசா, அடல்ட் டயாபர் போட்டுவிட்டு பழக்கம் இருக்கா? வசந்தி கேட்டாள். தெரிஞ்சுட்டா போச்சு என்று வசந்தி போட உதவி செய்தாள் அவள். கூல், இனி நான் பார்த்துக்கறேன் என்றாள்.

இரண்டு அறுபது வயசுக்காரிகள் அதே வயசில் ஒரு ஆணுக்கு டாய்லெட் போக இப்படி விழுந்து விழுந்து உதவி செய்வதை ஏர் ஹோஸ்டஸ்களும் ப்ளைட் பர்ஸர்களும் விநோதமாகப் பார்க்க, அவர்களிடம் சுருக்கமாக முன்கதை சொன்னாள் தெரிசா. அதற்கப்புறம் அவர்கள் பார்வையே மாறிப் போனது. மிட்டாயும் காதில் அடைக்கப் பஞ்சும் விமானம் ரன்வேயில் ஓடி வந்து உயரப் பறக்கும் முன் உபசரிப்பாகக் கொடுத்துக்கொண்டு வந்த ஹோஸ்டஸ் சங்கரன் பக்கம் வந்ததும் டாஃபி சார் என்று கேட்டு பதிலை எதிர்பார்க்காமல் நாலைந்து மிட்டாய்களை அவர் கையில் கொடுத்து நகர்ந்தாள்.

குட்டிக் குழந்தைகளுக்கு மிட்டாய் உபசாரம் செய்வதுபோல் இருந்தது அது. சங்கரனும் சின்னப் பையனாக அந்த மிட்டாய்களை சட்டைப் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 28, 2021 18:01

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.