இரா. முருகன்'s Blog, page 75

July 26, 2021

மிளகு நாவலில் இருந்து பறந்து வந்த ஒரு பக்கம்

“சென்ஹோர் கார்லோஸ், மிளகு ராணி தீர்க்காயுசாக நூறு வயதும் கடந்து சௌக்கியமாக இருப்பார்கள். நான் எங்கே ராஜாவாவது? இருக்கும் ராஜகுமாரன் பதவியை இன்னும் ஆயுசு இருக்கும் நேரம் வரை வகித்து விட்டுப் போய்ச் சேர வேண்டியதுதான்” என்றான் நேமிநாதன் உதிர்த்த லட்டை மென்றுகொண்டு.

”அது ஒரு வழிதான். ஆனால் வயதானவங்களை சற்றே ஓய்வெடுக்கச் சொல்லிட்டு அவங்க சார்பிலே ஆட்சியை நடத்தலாம். எவ்வளவு வருஷமா மிளகு விற்றுக்கிட்டு இருக்காங்க. கையே மிளகு மாதிரி கரடுமுரடா ஆகியிருக்குமே. கண்ணுக்குள்ளே மிளகுப்பொடி நிரந்தரமாத் தங்கி பார்வையோடு நெடியடிச்சு வந்து போய்க்கிட்டிருக்குமே” அகஸ்டின்ஹொ சொன்னதன் கடைசி வாக்கியம் புரியவில்லை நேமிநாதனுக்கு. ரோகிணியை அப்புறம் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆக இந்த அகஸ்டியானோ லிஸ்பனில் இருந்து புறப்பட்டு வந்தது கிழவிக்கு ஒரு அந்திம தினத்தை குறிக்க என்பதில் நேமிநாதனுக்கு ஒரு இனம் புரியாத ஆசுவாசம் தோன்றியது. அதெல்லாம் சரி சென்ஹோர், அவங்க அவங்களுக்கு ஆயுள் ரேகை கையிலே திடமா இருந்தா, நூறும் இருப்பாங்க, நூற்று ஐம்பதும் இருப்பாங்க. ஆண்களை விட பெண்கள் இதில் அதிக சாதனை செய்தவங்க என்றான் நேமிநாதன் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக.

“சொல்லுங்க. நாளைக்கே யாரையாவது அனுப்பி வைக்கணுமா? சாம்பா கவனிச்சுப்பான். அவன் தொடக்கூட மாட்டான். போன மாதம் கோழிக்கோட்டுலே சாமுத்ரிக்கு ரொம்ப வேண்டிய ஒரு தரவாட்டு நாயர் அதிக ஜுரத்திலே மரிச்சாரே. அது எப்படி ஆச்சு?”

எப்படி ஆச்சு என்று நேமிநாதன் சற்று ஆர்வம் அதிகமாகக் கண்ணில் தெரியக் கேட்டான். நாயர் கோவிலுக்குப் போய்விட்டு வந்துட்டிருந்தார். தெருவிலே சீனத்து சீலைக்குடையை கக்கத்திலே இடுக்கிட்டு சாம்பா எதிர்த்தாப்பலே போனான். நாயரை நிறுத்தி குளத்துக்கு எப்படி போறதுன்ன்னு கேட்கும்போது குடைக்கம்பி நுனி நாயர் கையிலே கொஞ்சம் அழுத்தமாகப் பட்டு ரொம்ப சின்னதாக ஒரு ரத்தக் கீற்று. அது வழியா நாயருக்கு ரோகம் உடம்புலே கொண்டு போயாச்சு

நேமிநாதனுக்கு மனதில் பயம் எட்டிப் பார்த்தது. வந்திருக்கிறவர்கள் என்ன மாதிரியான ஆட்கள்?

அகஸ்டின்ஹோ தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னார் – எவ்வளவு செலவானாலும் சரி கார்டெல் செலவு பண்ணும். ராஜகுமாரர் ராஜா ஆகணும். ஆன பிறகு உங்களுக்கும் எங்களுக்கும் மட்டும் மிளகு வர்த்தகம். ஒவ்வொரு கொள்முதலுக்கும் அரை சதவிகிதம் ராஜாவுக்கு அன்பளிப்புப் பணம். கூடவே லிஸ்பன்லே ஒரு மாளிகை. ராஜா ராஜ போகத்தோடு தான் இருக்கணும். இதைவிட இன்னும் பத்து மடங்கு அதிக போகம்.

நேமிநாதனைப் பார்த்து விஷமமாகக் கண்ணால் சிரித்தாள் ரோகிணி. இது எழுதிக் கையெழுத்தெல்லாம் போட முடியாது என்கிறான் நேமிநாதன்.

வேண்டவே வேண்டாம், கனவான்களுக்குள் ஏற்படும் ஒப்பந்தம். நாங்கள் பணம் கொண்டு வருவோம். நீங்கள் கிராம்பு கொண்டு வருவீர்கள். இரண்டு பேருக்கும் ஜெயம் ஜெயம்.

நான் கிராம்பு கொண்டு வராவிட்டாலோ? நேமிநாதன் அகஸ்டின்ஹோவை நோக்கி ஒரு பகுதி புன்சிரிப்போடு கேட்டான்.

”குடைக்கம்பி நுனி வேறு பக்கமும் திரும்புமே?” அதிகச் சிரிப்போடு அகஸ்டின்ஹோ சொல்ல ஒரு வினாடி மௌனம் தீர்க்கமாக நிலவியது.

Pic Portuguese family
Ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2021 19:19

July 25, 2021

ஒரு சிறு குறுமிளகு – எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நாவல் மிளகு-வில் இருந்து

”ராஜா, நாங்கள் யாரென்று உங்களுக்கு ரோகிணி சொன்னாளா?” அகஸ்டின்ஹோ நேமிநாதனைக் கேட்டார். இல்லை என்று தலையசைத்தான் அவன். ஊர் சுற்றிப் பார்க்க லிஸ்பனில் இருந்து வந்திருக்கும் வர்த்தகர்கள். அது மட்டும் தெரியும்.

கார்லோஸ் சிரித்தார்.

”வாயில் கட்டை விரலைப் போட்டுக்கொண்டு ஊர் உலகம் தெரியாமல் சுற்றும் முதிய சிறுவர்கள் என்றோ, ஆவிகளோடு இழைவதை உயிர்மூச்சாக உலகமெங்கும் பரப்ப முற்பட்ட மத்திய வயசுக் கிழவர்கள் என்றோ எங்களைப் பற்றி மாண்பு மிக்க மகாராஜா சமூகத்துக்குத் தோன்றினால், அடாடா, அடாடா, என்ன சொல்ல”. அவர் ரோகிணியைப் பார்க்க அவள் சொல்கிறாள் –

”ஜோஸ் கார்லோஸ். லிஸ்பனில் வைர வர்த்தகர். ஸ்பெயின் தேசத் தலைநகரமான மாட்ரிடில் மிகப் பெரிய தங்க, வைர, மாணிக்க நகைகள் விற்பனைக்கு வைக்கும் நான்கு தலைமுறை நவரத்தின வியாபாரக் குடும்பம் இவருடையது. லண்டனிலும் இவர் குடும்பம் நகை வணிகர்கள். உலகிலேயே சிறந்த நறுமண தைலங்களையும் பென்னாலிகன் என்ற பெயரில் கமகமவென்று மணக்க மணக்க விற்பனை செய்கிறது”.

அகஸ்டின்ஹோ. நான்கு தலைமுறையாகக் கப்பல் கட்டுவது குடும்பத் தொழில். கப்பலை உடைப்பதும் தான் என்கிறாள் ரோகிணி.

கப்பல் கட்டுவானேன், அப்புறம் உடைப்பானேன் என்று நேமிநாதன் நியாயமான சந்தேகத்தைக் கேட்கிறான். ரோகிணி சிரித்தபடியே அதை நேர்த்தியான உச்சரிப்பில் அகஸ்டின்ஹோவிடம் போர்ச்சுகீஸ் மொழியில் சொல்கிறாள்.

”கட்டுவது புத்தம்புதுக் கப்பலை. உடைப்பது இனி உபயோகமே இல்லை என்கிற அளவு முப்பது நாற்பது வருடங்கள் கடலில் போய் வந்த பழம்பெரும் கப்பல்களை. மலிவு விலைக்கு வாங்கி உடைத்து இரும்பையும் மரத்தையும் உதிரியாக விற்றுப் பணம் பார்ப்பது பெரிய அளவு வியாபாரம்”.

துரை சிரித்தபடி சொல்ல நேமிநாதனுக்கு ரோகிணி மூலம் கொங்கணியாக வருகிறது. கணிசமான பிரமிப்பு, நிறைய மதிப்பு, கொஞ்சம் குழப்பம் என்று நேமிநாதன் கலவையாக முகத்தில் உணர்ச்சி காட்டியபடி உட்கார்ந்திருக்கிறான்.

வாஸ்கோ ட காமா கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே? அகஸ்டின்ஹோ கேட்கிறார். நேமிநாதன் நினைத்துக் கொள்கிறான் – கேள்விப்படாமல் என்ன? போர்த்துகீசியர்கள் எல்லோரும் அனுதினம் பூஜித்துத் திருப்பாதங்களைக் காலுறை கழட்டாமலேயே சிரசில் தாங்கி வணங்க வேண்டிய மகாநுபாவர் அல்லவா?

“இந்தியாவுக்கு போர்ச்சுகல்லில் இருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை சுற்றி விரைவாக வந்து சேரப் பாதை கண்டவர் அவரன்றோ” என நேமிநாதன் கௌதம புத்தரைப் பற்றி வினவுவதுபோல் போலிப் பரவசத்துடன் கேட்டான்.

pic Portuguese traders 16th Century

ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2021 19:16

July 24, 2021

மிளகுத் தெறிப்பு – நாவலில் ஒரு சிறு இழை

நேமிநாதன் இருந்தபடிக்கே வணக்கம் சொன்னான். போன வாரம் ஆவிகளோடு பேச வந்த இரண்டு போர்த்துகீசியர்களும் வணக்கம் என்று இருகை கூப்பி நின்றிருந்தார்கள்.

இவர் ஜோஸ் கார்லோஸ். லிஸ்பனில் வர்த்தகர். நேமிநாதன் ஜோஸ் கார்லோஸை ஒரு கீற்றுப் புன்னகையால் வரவேற்றான்.

இவர் தோமஸ் அகஸ்டின்ஹோ. குடும்பத் தொழிலைக் கவனிக்கிறார் என்றாள் ரோகிணி. கொஞ்சம் அலட்சியத்தோடு தலையாட்டுகிறான் நேமி.

நேமிநாதன் ரோகிணியை மங்கிய அறை வெளிச்சத்தில் பார்க்கிறான். போர்ச்சுகீசிய, இங்க்லீஷ், பிரஞ்ச், கிரேக்க அழகுத் தேவதை போல் இருக்கிறாள் அவள். வனப்பின் ஐரோப்பியத் தன்மை மேலெழுந்து சூழ்ந்திருக்க ஒப்பனை புனைந்திருக்கிறாள் அவள். உடுப்பும் ஐரோப்பிய பாவாடையும், நெஞ்சைக் கவ்விப் பிடிக்கும் மேல்சட்டையுமாக.

நேமிநாதன் இரண்டு துரைகளையும் உற்று நோக்குகிறான். பளபளப்பான கால்சராயும், அதே பளபளப்பில் பொத்தான் வைத்த மேல் குப்பாயமுமாக மெல்லிய உதடுகளும் சொத்தைப் பல்லுமாக இரண்டு துரைகள். துரைகள் என்பதால் நேமிநாதன் மதிக்கிறான். ரதவீதி கடைக்காரர்கள் போல் லிஸ்பன் சிறு வியாபாரிகள். அவ்வளவுதான் அசல் மதிப்பு.

சக்கரத்தில் கழுத்தை நுழைத்த மாதிரி கழுத்தில் பாதி வளைந்த கழுத்துப் பட்டி அணிந்திருக்கிறார்கள் இருவரும். நேமிநாதன் வயது தான் இருப்பார்கள். எல்லா நாட்டுக்காரர்களும் செய்வது போல் ரோகிணியையும். கஸாண்ட்ரோவையும் பார்த்து கண்ணில் ஜாக்கிரதையாக மறைக்கப்பட்ட காமத்தோடு நெருங்கி இழைந்து அபத்தமான பேச்சுக்கெல்லாம் சிரித்து, வாய்ப்பு கிடைக்குமா என்று முயங்கக் காத்திருக்கிறார்கள்.

அவ்வளவு சீக்கிரம் நேமிநாதன் ரோகிணியை விட்டுக் கொடுத்து விடுவானா? பெத்ரோ தான் கஸாண்ட்ராவை கைநழுவி, தற்சமயத்துக்கு மட்டும் என்றாலும் கொடுத்து விடுவாரா? என்றாலும் வர்த்தகம் பேசப்பட வேண்டும். பேச அமர்ந்திருக்கிறார்கள்.

pic Portuguese ships on a mercantile journey

ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2021 22:08

July 23, 2021

வளரும் மிளகு நாவல்கொடியில் ஒரு சிறுபிடி மிளகு – அப்பாவுக்குக் கல்யாணம், அம்மாவுக்கும்

கோகர்ணம் மகா கணபதி க்‌ஷேத்ரத்தில் கோவில் ஸ்தானிகர் சுருக்கமாக மந்திரம் சொல்ல, கஸாண்ட்ராவும், ரமணதிலகனும் ரோகிணிக்கும் பரமனுக்கும் மாலை எடுத்துத்தர, மாலை மாற்றித் திருப்பூட்டியானது. பிள்ளையார் சந்நிதி வெளிப் பிரகாரத்திலேயே ஓர் ஓரமாக கல்யாண விருந்தாகக் கொண்டு வந்த ஜெயவிஜயிபவ இனிப்பு, பிஸிபேளாஹூளியன்ன, மிளகு சாதம், எலுமிச்சை சாதம், ததியோன்னம் என்று இலைத் தொன்னைகளில் வழங்கப்பட்டு கடைசியாக பால் பாயசமும் பருகத் தந்து கல்யாணம் ஒரு வழியாக நிறைவேறுகிறது.

சடங்குகள் நிகழும்போது கல்யாணப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தரோடு ஒருத்தர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதும், அந்தப் பதினாலு பேர் கூட்டத்தில் தணிந்த குரலில் விருந்தாளிகள் பேசியது மட்டுமல்லாமல், மஞ்சுநாத் சிறுபையலைத் தவிர ஓடியாடி உற்சாகமாகப் பொழுது கழிக்க யாரும் முற்படவில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது ஆகும்.

கல்யாணம் முடிந்த பிறகு ஏதோ சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதுபோல் கல்யாண கோஷ்டியே கோகர்ணம் கடற்கரைக்குப் போய் அலைகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தது. பெரியவர்கள் விளையாடும் பொழுது குழந்தை மஞ்சுநாதன் உறங்கிவிட, சாரட்டின் உள்ளே துயில வைக்கப்பட்டான்.

கோகர்ணம் கடற்கரையில் இருந்து இரண்டு சாரட் வண்டிகளும் புறப்படும் முன் ராஜகம்பீரமாக இன்னொரு சாரட் அங்கே வந்து நின்றது. யாரும் மகிழ்ச்சியையோ ஆத்திரத்தையோ தெரிவிக்கும் முகபாவங்கள் இல்லாது பார்த்துக் கொண்டிருக்க, சாரட்டில் இருந்து நேமிநாதன் இறங்கினான். வந்தவன் பரமனை நகரச் சொல்லிவிட்டு, சாரட்டில் ரேணுகாவைத் தனியாக ஏறச் சொன்னான். உள்ளே அவன் பலமாகச் சிரிக்கிற சத்தம் அலைகளோடு போட்டியிட்டுக் கேட்டது. கல்யாணப் பெண்ணை எப்படி முத்தமிடணும் என்று கேட்டபடி சாரட் கதவை அவன் சார்த்தி ஐந்து நிமிடம் சென்று திறந்தது பிடிக்காமல் கஸாண்ட்ரா அலைகளில் கலந்து அவன் முகத்தில் வடியட்டும் என்று சொல்லித் துப்பிய எச்சில் அமிலமாக கோகர்ணம் கடற்கரையைத் தகித்தது.

ராத்திரி பதினொரு மணிக்கு சோபான ராத்திரிக்கு ரேணுகாவை அழைத்து வந்து கஸாண்ட்ராவும், பரமனைக் கூட்டி வந்து ரமணனும் காத்திருக்க, நேமிநாதன் அதிரடியாக உள்ளே வந்தான். பரமனை வெளியே போகச்சொல்லிக் கைகாட்டி ரோகிணியைக் கதவைச் சார்த்தச் சொன்னான். அவள் பரமனைக் கெஞ்சுவது போல் பார்த்துக்கொண்டு தன் விதிக்கு சுயபச்சாதாபப்பட்டது போல் முகம் தழதழத்திருக்க கதவைச் சார்த்தப் போனாள். உண்மையாகவே அப்படி நினைப்பு இருக்கும். அல்லது இதுதான் தேவைப்படும் உணர்ச்சி என்று கருதி முகத்தில் அணிந்திருக்கலாம். பரமன் போகும்போது ரோகிணியைக் கட்டி அணைத்து அவள் வளைகள் குலுங்க நேமிநாதன் முத்தமிட்ட சத்தம் நாராசமாகப் பரமன் காதில் ஒலித்தது.

உள்ளே இருந்து வந்த ஒலிகளைக் கேட்டுக்கொண்டு குழந்தை மஞ்சுநாதன் அருகில் படுத்துக் கிடந்தார் பரமன். அந்த சத்தம் தேய்ந்து மறைய ராப்பறவை ஒன்று ஒலியிட்டு மெல்லப் பறந்து போனது. கடல் வீட்டுக்கு அருகே வந்தது போல் தோன்றியது.

ஹொன்னாவர் கடற்கரையில் அலைகள் மூர்க்கமாக மோதி நேமிநாதனை சபிப்பதைக் கேட்டபடி அவர் சற்று நேரத்தில் உறங்கியும் விட்டார்.

படம் :கொங்கணி கல்யாண விருந்து
நன்றி டெக்கான் ஹெரால்ட்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2021 20:34

July 22, 2021

துடைத்துப் போடும் ஐரோப்பிய சுத்தம்

எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து -‘

வாருங்கள், உள்ளே போகலாம் என்று அழைத்துப் போனார் பிரதானி நஞ்சுண்டையா. சந்தனத்திலேயே சதா மூழ்கி இருப்பாரோ என்று பெத்ரோவின் நாசி கேட்டது. இந்தியர்களுக்கு சந்தனத்தில் அப்படி என்ன பெருவிருப்பம் என்று அவருக்குப் புரியவில்லை தான். ஐரோப்பியனுக்கு மிளகில் விளக்க முடியாத ஒரு வசீகரம் இருக்கும்போது இந்தியனுக்குச் சந்தனம் பிடிக்கக்கூடாதா என்ன?

அழகான ஜரிகை, பல நிறப் பட்டுத்துணி, தந்தப் பலகை கொண்டு இழைத்து, தைத்து, பளபளப்பாக்கி பன்னீரும் சந்தனம் ஊறிய நன்னீரும் கொண்டு அவ்வப்போது சுத்தமாகத் துடைத்து வைத்திருந்த அரச ஆசனத்தில் சென்னா தேவி அமர்ந்திருந்தார்.

போர்த்துகீஸ் தேசப் பிரதானி முழங்காலில் இருந்து தேவாலயத்தில் வணங்குவது போல் வணங்கினார். அது இந்திய வழக்கம் இல்லை. எனினும் அவர் வணங்கியது மகாராணிக்குப் பிடித்திருந்ததாக சென்னபைரதேவியின் முகக் குறிப்பு சொன்னது.

பெத்ரோ வணங்கி எழுவதற்குள் மகாராணி தன் வலது கையைபெத்ரோவின் முகத்தை நோக்கி நீட்டினாள். இது இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத அசல் ஐரோப்பிய மரியாதை செலுத்துதலின் இறுதிக் கட்டம் என்பதை சென்னபைரதேவி அறிந்திருந்ததோடு இன்றைக்கு முதல் முறையாகப் பரீட்சித்துப் பார்க்கத் திருவுள்ளம் கொண்டதாகத் தெரிய பெத்ரோவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

அரசியின் கையை மெதுவாகப் பற்றி மரியாதையோடு முத்தமிட்டு தலை வணங்கவே, அவள் கையைப் பின்னால் எடுத்துக் கொள்ளும் முன் ஒரு பெண் ஊழியத்தி வெண்மையான பட்டுத் துண்டும் வெளிர் பருத்தித் துணிச்சவுக்கமும் கொண்டு கையை சுத்தப்படுத்தியது பெத்ரோவுக்கு சற்றே சினத்தை ஏற்படுத்தியது.

அவருடைய வாயும் முத்தமும் இங்கே இருக்கும் ஒருத்தரை விடாமல் அதிக சுத்தமானது என்பதில் நம்பிக்கை உண்டு அவருக்கு. மரியாதை செலுத்தும் ஐரோப்பிய சடங்கை இந்திய முறையில் தீட்டு பார்த்து சுத்தப்படுத்தும் அந்தத் துணியால் துடைப்பது இன்னும் சில காலத்தில் இந்தப் பிரதேசம் எங்கும் பரவலாக வந்து சேரலாம்.

மகாராணியின் கரங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று வாதம் புரிய பத்து காரணங்கள் இருக்கலாம். ஆனால் சுத்தப்படுத்திக் கொண்டே ஆகவேண்டும் என்று மகாராணி நிபந்தனை வைக்க நிச்சயம் ஒரே ஒரு காரணம் போதும் – பெத்ரோவும் மற்ற எல்லா ஐரோப்பியர்கள் போல் காலைக்கடன் முடித்து இலை, தழை, வைக்கோல், இப்போது எங்கும் பரவி வரும் துடைக்கும் காகிதம் இதிலெல்லாம் இஷ்டம்போல துடைத்துப் போட்டுவிட்டு வருகிறவர். நாள் கணக்காக தண்ணீர் காணாத பிருஷ்டங்கள் அவருடையவையும். மகாராணி கொலு இருக்கும்போது திருமுன்னர் இப்படியான அசுத்தங்களோடு ஒருத்தரை எவ்வளவு பெரிய மனுஷராக இருந்தாலும் அனுமதிப்பது ஆசாரஹீனம் ஆகும்.

a

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2021 21:02

July 21, 2021

நாழிகைக் கணக்கும் நெல்பரலியும் – எழுதப்பட்டு வரும் மிளகு நாவலில் இருந்து

மிளகு நாவல் – நாழிகைக் கணக்கு

(ஒரு நாள் 60 நாழிகை – 24 மணி நேரம் – ஒரு நாழிகை 24 நிமிடம்-ஒரு மணி 2.5 நாழிகை)

நள்ளிரவுக்கு அப்புறம் பத்து நாழிகைகள் கழிந்து ஐரோப்பிய கடியாரம் காலை நாலு மணி என்று மணி அடிக்க, வைத்தியர் துள்ளி எழுந்தார். அவரோடு சகசயனம் செய்திருந்த மனைவியும் அரசிக்குத் தாதியுமான சீனச்சி போல் மூக்கு சற்றே தட்டையான, அதனால் மிங்கு என்ற பகடி சீனப்பெயர் கொண்டவளுமான செண்பகலட்சுமி வழுவழுத்த கனமான கால்களால் வைத்தியரை மடக்கி அவர் முகத்தைத் தன் வயிற்றோடு சிறைப் பிடித்து தலையைத் தடவி ”ஓய் வைத்தியரே உமக்கு என்ன கிறுக்கா பத்து நாழிகைக்கு எழுந்து என்ன பண்ணப் போகிறீர்? சும்மா என் உடம்பு வாடை பிடித்துக்கொண்டு ஒண்டியுறங்கும்” என்று தூக்கக் கலக்கமும் கிராம்பு மணக்கும் வாயுமாக உபதேசம் செய்து உறங்கினாள்.

வைத்தியர் இனி ஆத்மா உறங்கவா, விழிக்கவா, உறங்குவது போல் விழிக்கவா, விழிப்பது போல் உறங்கவா, எல்லாம் சேர்த்து நிகழவா, எதுவுமே செய்யாமல் சும்மா கிடக்கவா என்ற தத்துவ விசாரத்தில் ஒரு நிமிடம் மூழ்கினார்.

ஆத்மா கிடக்கட்டும், அற்ப சங்கைக்குப் போய்க் குத்த வைக்க வேண்டும் என்று நிமிடத்துக்கு நிமிடம் அவசம் கூடிக்கொண்டு போக, கட்டிலை விட்டு இறங்கினார்.

“போங்க ஓய் போங்க. அப்புறம் தேடிக்கொண்டு வருவீர்தானே, ஒன்றும் இவிடம்
காட்டித்தரப்பட மாட்டாது”. அவள் சொல்லி விட்டு நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

கழிவறைக்குப் போன காரியம் முடித்து தோட்டத்தில் காற்று வாங்க உட்காரும் கல் பாளம் பதித்த மேடையின் குளிர்ச்சியை அனுபவித்தபடி சற்றே அமர்ந்து கண் மூடிக் கொண்டார். நெல்பரலி. அதைத் தான் இன்று வஸ்திரகாயம் பண்ண வேண்டும். நேற்று சூரிய உதயத்துக்கு முன் கண்டெடுத்தது. கண்டெடுக்காமல் இருந்தால் பிரதானி நஞ்சுண்டையாவின் அம்மா உயிர் விடை பெற்றுப் போயிருக்கலாம். இனி ஆத்மாவும் உடம்பும் ஒன்றாக இருக்க பைத்தியநாத் மட்டும் சிகிச்சையும் சிஷ்ருசையும் செய்யக் கூடிய நாற்பது வயது மருத்துவர்.

இதற்கு முன்பு இன்னொருத்தரும் இருந்தார். அவர் பைத்தியநாத்தின் தந்தையார் அரிந்தம் வைத்தியர். போய்ச் சேர்ந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது.

பைத்தியநாதைவிட அரிந்தம் வைத்தியர் ஆழ்ந்த அறிவும், நிலைமை அவதானமும், தக்க சமாளிப்பும் கொண்டவர்.

நெல்பரலி மூலிகையை ஒரு வாரம் முன்பே தேடிக் கண்டு பிடித்திருப்பார். அல்லது தேடிக் கண்டதுதான் நெல்பரலி என்று சாதித்திருப்பார்.

படம் மூலிகை மருத்துவம்
நன்று timesofindia.indiatimes.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2021 20:09

July 20, 2021

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறிய விள்ளல்

“மிளகு சாகுபடி செய்யறதுக்குப் பதிலா பத்து நெருப்புக்கோழி வாங்கி மேய்க்கலாம். கூட்டிக் கழிச்சு பார்த்தால், கையில் தங்கறது ஒத்தை ரூபா”

உன்னித்தன் கொஞ்சம் அதிகமாகவே பிரச்சனையை ஊதிப் பெருக்கித் தொடங்கி வைத்தார். பின்னே என்ன, மிளகு ராணி இருந்த உத்தர கன்னடத்திலே பத்து டன் மிளகு விளைஞ்சா அபூர்வம். பூச்சி அரிச்சு அதிலே பெரும்பாலும் பங்கு உதிர்ந்து போகுது. நம்ம கேரள பெப்பர், தலைச்சேரி வகையும் மலபார் வகையும் முக்கியமா நல்லா போகணும்னு போன வருஷம் நினைச்சது என்ன ஆச்சு? எல்லா கொடியும் ஆறு வருஷம் பூத்து காய்ச்சு கனியாகி ஆயிரம் டன் விளைச்சல் எதிர்பார்த்தால், மழை இல்லாமல் போய் அதுலே பாதி கூட வரல்லே என்றார் பீமாராவ்.

தட்சிணா சார் மேடையேறினார்.

நூறு ஏக்கர் மிளகும் ஏலமும் கிராம்பும் ஒரே நிலத்திலே சாகுபடி செய்யற பெரிய விவசாயப் பிரமுகர்.

“மிளகுக் கொடி எல்லாம் வயசாகி நிக்குது கோழிக்கோடு தொடங்கி மலபார் வரை பதிமூன்று வயசான கொடி அவை எல்லாம். பூக்க தயாராக ஆறு வருஷம், பூத்தது அடுத்த ஆறு வருஷம்னு பந்த்ரெண்டு வருஷம் போயாச்சு. இன்னும் ஒரு வருஷம் மிளகு சாகுபடி ஆகும். அப்புறம் புதுக்கொடிகளை பதியன் பண்ணி வச்சிருக்காங்களான்னு கேட்டால், கார்பரேட் தோட்டங்கள்ளே மட்டும் செஞ்சிருக்காங்க அதுவும் ரொம்ப பந்தோபஸ்தோடு கூட. இனி குறைஞ்சது அடுத்த ஏழு வருஷம் மிளகு வித்துக் காசு பார்க்கறதை மறந்துடலாம்”.

வேட்டியை கிட்டத்தட்ட அவிழ்த்துக் கட்டியபடியே தட்சிணா மேடையை விட்டு இறங்கினார்.

”மிளகுலே காசு இல்லேன்னு நீங்க சொல்றது முழுக்க உண்மைன்னே வச்சுக்கலாம். அடுத்த ஆறு வருஷம் கொடியே இல்லாம போக விட்டுடுவாங்களா? இது நம்ம கையாலே நம்ம கண்ணைக் குத்திக்கறது மாதிரி இல்லையா?”

பீமாராவ் உணர்ச்சி பொங்கப் பேசினார்.

திலீப் ராவ்ஜி பேச வேண்டிய முறை வந்தபோது
சொல்ல ஆரம்பித்தார்.

”இப்போ மிளகு வர்த்தகத்திலே இந்தியா முதல்லே இல்லே. கிட்டத்தட்ட ஆறு வருஷமா இந்தோனேஷியா தான் அந்த இடத்தைப் பிடிச்சிருக்கு. இத்தனைக்கும் அவங்க விளைவிக்கிற மிளகு நம்மோடதை விட தரம் கம்மியானது தான். ஆனா கவர்ச்சிகரமான சந்தைப் படுத்தறதாலே அவங்க நமக்கு ரொம்ப முன்னாடி இருக்காங்க. அதுவும் டாலர் மதிப்பு ஏறப்போறதைக் கணக்கு போட்டு டாலர் வாங்கி மிளகு கொடுத்தாங்க. நல்ல லாபம். கூடவே, மிளகு வாங்கினா, பாதி விலைக்கு ஏலக்காய்னு சலுகை விலை, மிளகு தொடர்ந்து வருஷம் பூரா கிடைக்க ஏற்பாடு இப்படி முன்னாலே இருக்காங்க. சீனாவிலே குளிர்காலம் இந்த வருஷம் சீக்கிரம் வந்ததாலே அங்கே செலவு பண்ண இருநூறு டன் மிளகு உடனே தேவைப்பட்டது. இந்தியா கிட்டே தான் முதல்லே வாங்கறதுக்கு வந்தாங்க. இல்லைன்னு நாம கையை விரிக்க, அழகாக மிளகு அதிக விளைச்சல் கண்டு பத்திரமாக சேமித்து வைத்திருந்த இந்தோனேஷியா உடனே டெலிவரி கொடுத்து பணத்தை அள்ளினது. ஐநூறு கோடி ரூபா அதுவும் அமெரிக்க டாலர் வாங்கி மிளகு கொடுத்த சாமர்த்தியம். எங்கேயோ இருக்காங்க அவங்க. நாம் இன்னும் அரசாங்க கிராண்ட் எதிர்பார்த்துக்கிட்டு எதுவும் பெரிசா செய்யறது இல்லேன்னு படுறது. தப்பா சொல்றேன்னா மன்னிக்கவும்”.

ஒன்றிரண்டு பேர் இதுக்குக் கைதட்டக்கூட செய்தார்கள்.

“மெய்டன் ஸ்பீச் திலீப் ராவ்ஜி சாரோடது. எல்லாவரும் கையடிக்கணும்” என்று கூட்டத் தலைவர் சொல்லும்போது திலீப் ராவுக்கு சிரிப்பு அடக்க முடியாமல் போகத் தலையைக் குனிந்து கொண்டார். என்ன ஆச்சு என்று பக்கத்தில் இருந்த உன்னித்தன் கேட்க, திலீப் சுருக்கமாக “தமிழ்-மலையாளம்” என்றார்.

படம் மிளகு சாகுபாடி
நன்றி wikifamer.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2021 19:33

July 19, 2021

ஒரு சிறு கீற்று – மிளகு வாசனையோடு

A page from the novel MILAGU I am writing now –

சாரதா தெரிசா தன் மகன் மருதுவோடு தங்கி இருக்க லண்டன் வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிப் போனது.

குளிர்காலம் பனிப் பொழிவும் அதிகக் குளிருமாக மெல்லக் கடந்து போகும் வருஷம் இது. நேற்றைக்கு சாயந்திரம் கூட பனிமனிதன் வந்தான்.

”அம்மா வெளியே பனி பெய்யுது. வாங்க, பொம்மை பண்ணலாம்”.

நேற்று மருது வாசலில் இருந்து மூச்சுத் திணறச் சொல்லியபடி குழந்தை மாதிரி ஓடி வந்தான்.

மலையாளத்தில் எழுத்தச்சன் எழுதிய அதியாத்ம ராமாயணத்தை படித்தபடி உட்கார்ந்திருந்தாள் சாரதா.

சாயந்திரம் கனமான இருளாக அப்பிக்கொள்ளப் போகிற சூசனைகள். இவ்வளவும் சாயந்திரம் ஐந்து மணி இருக்கக் கூடும். சுவர்க் கடிகாரத்தில் ஐந்து மணியே தான்.

”வாசலுக்கு வாங்க அம்மா, பனி விழறது நின்னு போயிடும். எடின்பரோ மாதிரி ராப்பூறா பனி பெய்யற ஊர் இல்லே லண்டன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?”

”நான் என்னத்தைப்பா கண்டேன்? பிறந்ததிலே இருந்து யார்க்‌ஷயர், அப்புறம் அம்பலப்புழை. கால்டர்டேல்லேயும் பனிப்பொழிவு அதிகம் தான்”.

அடுத்த வினாடி சாரதாவை இரண்டு கையாலும் இடுப்பில் பிடித்துத் தூக்கி, ஆடை விற்கும் அங்காடியில் மாடல் பொம்மை போல சுமந்து கொண்டு சிரித்தபடி மாடிப்படி இறங்கினான் மருது. வாசலுக்கு முன்னால் சிறு வட்ட வடிவ ஓய்விடத்தில் சிமெண்ட் பெஞ்சில் பூத்தாற்போல் அமர்த்தினான் அவளை.

பெஞ்சில் விழுந்திருந்த பனியைக் கையால் குவித்து அதற்கு முகமும், உடம்பும் உருட்டி உருட்டி உருவாக்கும்போது மருது தன்னையே மறந்திருந்தான்.

மிளகு விலை ஊக வர்த்தகத்தை விட இது எவ்வளவோ பரவாயில்லை என்று தெரிசாவுக்குத் தோன்றியது. எல்லாம் மருது பற்றித்தான்.

இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்களும், ரத்ன கம்பளங்களும், சிறு சிற்பங்களும் என்று தொடங்கி அனைத்து கலைப் பொருட்களும் இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் உதவித் தலைமை நிர்வாகி.

இது உத்தியோகம். மற்ற நேர ஈடுபாடு வேறே மாதிரி.

கமோடிட்டீஸ் ஃபார்வேர்ட் அண்ட் ஆப்ஷன்ஸ்- COMMODITY FUTURES, FORWARDS AND OPTIONS வர்த்தகம் அது. தானியங்களுக்கும், வாசனை திரவியங்களுக்கும், முக்கியமாக மிளகுக்கும், அபூர்வமான மலர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் விலை என்னவாக இருக்கும் என ஊகித்து நடத்தும் ஊக வர்த்தகத்தில் வேலை நேரம் தவிர மூழ்கியிருப்பான். மிளகு விலைப் போக்கை கணித்து நடத்தும் வர்த்தகம் மருது செய்வது.

ஊக வர்த்தகம் என்றால் வர்த்தகம், ஊக விளையாட்டு என்றால் விளையாட்டு தான். மிளகு ஒன்று, இரண்டு மாத எதிர்காலத்தில் விற்பனையாகப் போகும் விலை ஊகிக்கப்பட்டு, அது சரியாகவோ, தவறாகவோ முடிய, கணிசமான தொகை கைமாறும். ஒரு நிலைக்கு மேல் சூதாட்டம் தான்.

பனிமனிதன் நன்றி en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2021 19:35

July 18, 2021

விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும்

பரமேஸ்வரன் நாக்பூரில் விமானத்தில் இருந்து இறங்கியிருக்கக் கூடாது.

பத்து நிமிடம் தபால் வாங்க, கொடுக்க என்று பாசஞ்சர் ரயில் மாதிரி நாக்பூரில் நின்று வருவது இந்த விமான சேவையின் தினசரிப் பழக்கமாக இருக்கலாம். அப்படி இறங்கி மீண்டும் டேக் ஆஃப் ஆகும்போது யாராவது குறைகிறார்களா என்று பார்க்க வேண்டாமோ?

ரயில் என்றால் கூட்டம் அதிகமாக, நெரிசலும் மிக அதிகமாக இருக்கக் கூடும். விமானத்தில் மிஞ்சிப் போனால் ஐம்பது பேர் பயணம் வந்தாலே அதிகம். இவர்களில், பாதி வழியில் காணாமல் போனவர்கள் யார் என்று ஒரு நிமிடம் தலை எண்ணிப் பார்த்துவிட்டு, விமானத்தை மறுபடியும் பறக்க வைத்திருக்கலாம்.

என்ன கஷ்டமோ, பரமனை நாக்பூரில் விட்டுவிட்டு அவர் வந்த டில்லி – பம்பாய் பிளேன் பறந்து விட்டது.

கிரிக்கெட் விளையாட பிட்ச் தயார்ப்படுத்திய மாதிரி இருக்கும் இடம். அந்த துண்டு நிலத்திலும் விமானம் இறங்கி குதிரை வண்டி பிடித்து வீட்டுக்குப் போக நாக்பூர்காரர்கள் ஏதோ வரியாகக் காசு கொடுத்து விமான தாவளம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

பரமன் என்ற பரமேஸ்வரனைக் கீழே இறங்க அனுமதிக்காமல் விமானக் கதவைத் திறந்து வைத்து, ”நாக்பூர் இறங்கறவங்க எல்லாரும் இறங்குங்க.. மத்தவங்க சீட்டிலேயே இருங்க… பம்பாய் பம்பாய் பம்பாய்…” என்று அழைக்காத குறையாக காத்திருந்த பத்து நிமிஷத்தில் ஒரு சிகரெட் புகைத்து விட்டு மறுபடி ஏறலாம் என்று பரமன் இறங்கி வந்தது தப்பாகப் போச்சு.

சொல்லி வைத்தாற்போல் அவரை மட்டும் அத்துவானக் காட்டில் விட்டுவிட்டு ’போனவன் போனாண்டி’ என்று விமானம் போயே போய் விட்டது.

பரமனுக்கு தாகம் எடுத்தது. பசி வேறே. விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், சின்ன பாட்டில் ஜாமும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும் பரமனின் கைப்பையில் இருப்பதால் பசி விஷயம் அவ்வளவு பெரிய பிரச்சனை ஆகாது. என்றாலும் தாகத்துக்குத் தண்ணீர்? இந்தத் தாங்கு கட்டைகள் வேறே எங்கே போனாலும் எடுத்துப் போக வேண்டியிருக்கிறது. அவை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

’இல்லாமல் இருந்தால், பரமு என்ற பரமேஸ்வரா, நீ வெய்யில் படிந்து உஷ்ணமேற்றிய மண் தரையில் புழு போல் ஊர்ந்து கொண்டிருப்பாய். கட்டைகளை வையாதே. அவை இல்லாமல் நீ இல்லை’.

வாஸ்தவம் தான். மனச்சாட்சி இடித்துக் காட்டியது சரிதான். பரமு தன் தாங்குகட்டைகளைக் கடவுள் போல பூஜிக்கிறவர். தாங்குகட்டைகள் எப்போதும் கூடவே உண்டு. தெய்வம்? கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் வர வேண்டாமா?

தெய்வத்தை மறந்திருந்த மாசேதுங் எழுதிய சிவப்புப் புத்தகத்தை மராட்டியில் மொழிபெயர்த்து வெறும் நூறு ரூபாய் வாங்கிய பரிதாபமான காலத்தில் அவருக்கு தெய்வம் அருள் புரிய வரவில்லை. ஏழரைக் கோடி பிரதிகள் எல்லா மொழிகளிலும் சேர்த்து பிரசுரமானதாம் அந்தப் புத்தகம்.

சிவப்புப் புத்தகத்தை உடைப்பில் போடு. எங்கே வந்து சேர்ந்திருக்கிறேன், எப்படி ஊர் திரும்புவது என்று தெரியவில்லை. பெண்டாட்டி ஷாலினியும், மகன் திலீப்பும் வீட்டுப் பெரியவரான பரமேஸ்வரன் என்ற பரமன் இல்லாமல் எப்படி இருப்பார்கள்? ஊரெல்லாம் தேடுவார்கள். அழுவார்கள்.

ஒரு வினாடி கண் கலங்கி சுபாவமானார் பரமன். திலீப் அம்மா ஷாலினியையும் தன்னைத் தானேயும் சீராக கவனித்துக் கொள்வான். இத்தனை நாள் கூட இருந்து பரமன் என்ன செய்தார் குடும்பத்துக்கு? அவருக்கே நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருந்தது. மறந்தார் அதை.வேறு என்னென்னமோ போல.

படம் – ஏர் இந்தியா பயண உணவு
நன்றி bangaloreaviation.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2021 19:23

July 17, 2021

புதிய நாவல் ‘மிளகு’ – மழை கொண்டு வா விதை கொண்டு போ

வேகமாக வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து ஒரு கீற்று

விருந்துக்கு அடுத்து அதிக நேரம் கடத்தாமல் கோமாளி வந்தான். ஆரம்பிக்கும்போதே அவன் நேமிநாதனிடம் மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொண்டது இந்தத் தோதில் இருந்தது –

“கொஞ்சம் வார்த்தை அப்படி இப்படிப் போகலாமா? சபை நாகரிகம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேணுமென்றால் சொல்லுங்க ஐயா”.

சென்னபைரதேவி சிரித்து ஆகட்டும் என்று கைகாட்ட, தெம்போடு தொடங்கினான் கோமாளி.

“சபை நாகரிகம் என்றால் மலையாள பிரதேசத்து சாக்கியார் கூத்து நினைவு வருது. மேடை ஏறி நகைச்சுவையோடு மகாபாரதக் கதை சொல்லிட்டிருக்கார் மாதவ சாக்கியார். திருவனந்தபுரம் மகாராஜா பாதிக் கதையிலே அவைக்குள்ளே வரார். சாக்கியார் கதையில் ஒரு காட்டுப் போத்து, என்றால் காட்டெருமை தெருவிலே வந்துட்டிருக்கு. சாக்கியார் சொன்னாராம் –காட்டுப் போத்து தடதடன்னு ஓடிவந்தா எப்படி இருக்கும் தெரியுமா? சாட்சாத் நம்ம ராஜா பாதிக்கதையிலே உள்ளே வந்தாரே அப்படித்தான்.

”ஆக, மகாராஜாவை பகடி செய்யக்கூட பயமில்லையாம் கேளுங்க

”நாம் அவ்வளவு உரிமை எடுத்து எல்லோரையும் கேலி பண்ண மாட்டோம். இது யார் மனதையும் புண்படுத்த இல்லை. எல்லா நடப்பிலும் நகைச்சுவையைக் கண்டு அதை எந்தச் சார்பும் இல்லாமல் கொண்டாடுவோம் வாருங்கள்”.

நான்கு கோமாளிகள், அதில் ஒருவன் பெண்ணாக வேடமிட்டவன். ஆட்டம் நிகழிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். முதல் கோமாளி பாடினான் –

போர்த்துகீசியர்களால் பாதிக்கப்பட்ட ஊர் வணிகப் பிரமுகர்களில் சிலர் சிரிக்க, மற்றவர்கள் சற்றுத் தாமதித்து வாங்கிச் சிரித்தார்கள்.

”மிளகு மகாராணி தேசத்திலே இருந்து மிளகு வாங்கி வாங்கி கஜானா காலி ஆகி இவங்க ஒரு வழி கண்டுபிடிச்சாங்க”.

”என்ன ஓய் ஓய் என்ன அது சொல்லும்”

”இந்த நாட்டு மிளகு விவசாயி என்ன பண்றான்னு பின்னாலே போய் பார்த்தாங்க”.

”பார்த்தா”?

”அவன் விதை மிளகை பசுஞ்சாணத்துலே வச்சு உலர்த்தறானா”?

”பின்னே இல்லையா? அது விதைமிளகுப் பெட்டகம் ஆச்சே. சாணகத்துக்கு உள்ளே பத்திரமாக இருந்து, சரியான நேரத்திலே முளைவிட்டுடும்”.

”அதேதான். நாட்டுக்குள்ளே போகிற நிலப்பரப்பில் எல்லாம் அந்த விதைமிளகுப் பெட்டகங்களை விட்டெறிஞ்சு தூவினா என்ன ஆகுது”?

”விழுந்த இடத்திலே மிளகுக்கொடி வந்து மரம் தேடி சாய்ந்திருக்கு”

”அப்புறம்?”

”அப்புறம் கொப்புறம். கதையா சொல்றேன்?”.

“முளை விட்ட மிளகுக் கொடியை ஒரு நிலத்திலிருந்து அப்படியே இன்னொரு மண்ணுலே எடுத்து நட்டும் பயிர் பண்ணுவாங்க தானே”

“ஆமான்னேன். புதுசா ஒரு கொடி வந்தா நூறு அடுத்து வரும். அப்புறம்”.

”அப்புறம் அதிகம் மிளகு விளையுதே” என்று பெண் வேடமிட்ட கோமாளி நாணிக் கோணிச் சொல்கிறான்.

”அதேதாண்டி என் அழகுப் பொண்ணே, என்னைக் கட்டிக்கயேன்”.

”எனக்கு ஸ்பெயின்கார மாப்பிள்ளை கிடைக்கப் போகுதே”.

”போர்ச்சுகல் மாப்பிள்ளை வேணாமா”?

”அவங்க எல்லாம் மாட்டுச் சாணத்தைத் தேடி அலைந்துகிட்டிருக்காங்க. கொங்கணி விவசாயி சாணியிலே விதைப் பெட்டகம் செஞ்சு அதிகம் மிளகு விளைவிக்கறதை தப்பா புரிஞ்சுகிட்டு வெறும் சாணி உருண்டை பிடிச்சுக்கிட்டு அலையறாங்க போர்ச்சுகீசுக்காரங்க எல்லாம்”.

”சாணியிலேயா சூட்சுமம்”?

சாணியிலேயா மிளகு விளையுது?

”அய்யே சாணிப் பசங்க”

”நாளைக்கே சாணிக்குள்ளே விதை மிளகு வைக்கணும்னு புரிஞ்சுக்கிட்டாலும் வேறே ஒண்ணு இருக்கு அவங்களுக்குப் புரிய வைக்க”.

”என்ன அது என்ன அது?”

பெண் வேடமிட்ட கோமாளியை முத்தமிட மற்றவரில் ஒருவன் துரத்தத் தப்பி ஓடியபடி பாடுகிறான் அந்தப் பெண் கோமாளி.

”நம்ம பூமி
மிளகு சாகுபடி
ஒரு வாழ்க்கை.
ஓர் ஈடுபாடு.
ஒரு மூச்சுக் காற்று.”

தொடர்ந்து பேசுகிறான் – “தெற்கே கோழிக்கோட்டிலிருந்து இங்கே ஹொன்னாவர், ஜெருஸோப்பா, பட்கல் வரை அழகழகான மலையாளப் பெண்ணுங்களும், கன்னடக் கிளிகளும், கொங்கணி தேவதைகளும் பார்த்து வளர்த்து பார்த்து பறிச்சு பார்த்து பதனிட்டு பார்த்து விற்க அனுப்பற செல்வம்”

”ஆகா அந்தப் பெண்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லணும்”

”அப்புறமும் நன்றி சொல்ல இன்னொருத்தி இருக்காளே”

”யார் அது? மிளகு ராணிகிட்டே கேட்கலாமா? ஒருக்கால் அவங்க தானா?”

”அவங்க மாதிரி வாரி வழங்கறவங்க. யார் தெரியுமா?”

”யார் அது சொல்லேன்”

”மழையம்மா”

”மிளகு பூவந்ததும் மழையம்மா சரியான தினத்துலே வந்து அதைத் தொட்டுத் தழுவி வடிஞ்சு போகிறா. அடுத்த ரெண்டு வாரம் மழையம்மா நாள் பூரா மிளகுக் கொடியை இதமா நனைத்து விலகிப் போறா”.

”சாணியை போர்ச்சுகல் எடுத்துப் போகலாம். விதை மிளகை எடுத்துப் போகலாம். இந்த இதமான மழையை எப்படி எடுத்துப் போவாங்க?”

”மிளகுராணி தேச மிளகு வேறெங்கும் விளையாது. வேறெங்கும் செழிக்காது. விதை மட்டும் போதாது. மழையும் பெய்து பெய்து நின்று பெய்து மலைநாட்டு மண்ணில் வடியணும். புரிஞ்சுதா என் சிங்காரிப் பெண்ணே”.

”பிரிஞ்சுது பிரிஞ்சுது என்னை கட்டிக்கறியாடா”? பெண் வேடக் கோமாளி சொல்கிறான்.

”கட்டிக்கலாம் தான். அப்போ என் அழகுப் பொண்டாட்டி என்னடி பண்ணுவா?”

”அவ வேணும்னா என் புருஷனை கட்டிக்கட்டும்”.

ஓவென்று உயர்ந்த குரலில் பாடி, தாளம் தட்டி கோமாளிகள் சுற்றி வந்து கரணம் போட்டு எழுந்து நிற்கிறார்கள். பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப் படுத்துகிறார்கள்.

படம் : மிளகுக் கொடி
pic ack amazon.in

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2021 19:36

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.