இரா. முருகன்'s Blog, page 78

June 21, 2021

வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து : அகல்யா வந்த தினம்

’மிளகு’ -வளர்ந்து வரும் நாவலில் இருந்து –

பெரும்பாலான சடங்குகள் விரிவான விருந்துகளில் முடிவடைகின்றன. அவற்றைப் பற்றித்தான் திலீப் ராவ்ஜியின் ஆதங்கம் மனதில் அழுத்த வேரூன்றி இருக்கிறது. புரோகிதர்கள் நிர்வகித்து நடத்தித் தரும் வருஷாப்திகம் என்ற நீத்தார் நினைவஞ்சலி, காது குத்துதல், பிரம்மோபதேசம் என்று எந்த சடங்கிலும் ராவ்ஜி அழைக்கப்படுவதில்லை. அவர் முப்புரிநூல் அணியாததே அதற்கான பிரதம காரணமாக இருக்கலாம் என்பதை ராவ்ஜி அறிவார்.

ஆனால், புரோகிதர்கள் இல்லாமல் அவர் எப்படி அகல்யாவுக்கு சாப்பாடு தர முடியும்?

இறந்து போயிருந்தாலும் அவளுக்கும் பசி உண்டே? பஞ்சாங்கம் கணித்துக் கொடுத்த வருடாவருடம் வரும் நட்சத்திரம் சார்ந்த ஒரு நாளில் அகல்யா பசியோடு சரீரமின்றி பசித்து வந்து நிற்பாள். புரோகிதர்கள் மூலம் தான் அவள் உண்ணவும் தண்ணீர் பருகவும் வேண்டும். அகல்யா மட்டுமில்லை, திலீப் ராவ்ஜியின் அம்மா ஷாலினிதாய் அம்மாளும் அகல்யாவோடு கூடவே வந்து திவசச் சோற்றுக்காகக் காத்திருப்பாள். பசித்த பெண்மணிகள்.

யார் கண்டது? கற்பகம் பாட்டியும் இவர்களோடு வந்து பசியாற நிற்கிறாளோ என்னமோ? ஏன், திலீப் ராவ்ஜியின் தகப்பனார், சகா பரமேஸ்வரன் அய்யர் திவசச் சாப்பாட்டுக்காக அலைகிறாரோ? திலீப் யோசித்துப் பார்த்தார். அவர் எப்படி வருவார்? இருக்கும் வரை இடதுசாரியாக இருந்தவர் ஆச்சே அப்பா? திவசத்திலும் திதியிலும் நம்பிக்கை இல்லாதவர் எப்படி நாள் நட்சத்திரம் பார்த்துப் பசியாற வர முடியும்?

ஒருவேளை அப்பா இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரோ. திலீப் ராவ்ஜிக்கு இந்த நினைப்பு கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது. இருந்தால் என்ன, ஒரு நூற்றுப் பதினைந்து வயதாகி இருக்குமே.

அவர் ஒரு அவசரக் குளியல் போட்டார். ஹாலில் சிறு அலமாரிக்குள் வைத்த ஸ்ரீகிருஷ்ணனின் சிறு பிரதிமை முன் கண் மூடி கை கூப்பி நின்று வணங்கினார்.

அகல்யா ஆத்மான்னு இருந்தா அது சாந்தமா, சௌக்கியமா, அலைந்து திரியாமல் அமைதியாக இருக்க கிருபை செய்யூ கிருஷ்ணா. அச்சுதம் கேசவம் ராம நாராயணம் ஜானகி வல்லபம் வாசுதேவம் பஜே.

அவர் உரக்கச் சொல்லி, ராகம் இழுத்துப் பாடி கிருஷ்ணனை வணங்கினார்.

கிருஷ்ணா, இன்னிக்கு அகல்யாவுக்கு திதி. புரட்டாசி திரியோதசி அவள் போன நாள். அகல்யாவோட என்னோட எங்களோட பிள்ளை அவளோட சிரார்த்தத்தை நடத்த இதுவரை முன்கை எடுக்கலே. எடுத்து திவசம் பண்ணியிருந்தா இன்றைக்கு அவளுக்கு ஒரு குத்து சோறும் மேலே எள்ளும் தண்ணியும் இரைச்சுக் கிடைக்கும். இன்னும் ஒரு வருஷத்துக்கு அவளோட ஆகாரமும் பானமும் அதுதான்னு விதிச்சவன் நீதானேப்பா. அவ இந்த ரெண்டுக்காகவும் இல்லே வேறே எதுக்காகவும் அலையாமல் நிறைவோடு இருக்க கிருபை செய்யப்பா. கூடவே ரெண்டு வயசான ஸ்திரிகள், எங்கம்மாவும் என் பாட்டியும். அவாளுக்கும் ஆகாரமும் பானமும் வருஷம் முழுக்கக் கிட்ட இன்னும் கொஞ்சம் கருணை செய்யூ கிருஷ்ணா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2021 20:15

June 20, 2021

எழுதி வரும் நாவல் மிளகு-வில் இருந்து : 1999 டிசம்பர் 24 காட்மாண்டு

எழுதி வரும் நாவல் மிளகு-வில் இருந்து : 1999 டிசம்பர் 24 காட்மாண்டு (draft to be edited)
————————————————————————————————–
சங்கரன் உள்ளாடைக்குள் மூத்திரம் போய் விட்டார். இந்த அறுபத்தைந்து வயசில் அவருக்கு இது நேர்ந்திருக்க வேண்டாம். ஐந்து வயதில் பள்ளிக்கூடத்தில் முதல் நாளன்று பகவதி பாட்டி கொண்டு போய் விட்டுவிட்டு வாசலுக்குப் போக, அவளை தீனமான குரலில் அழைத்துக் கொண்டிருந்தபோது தோன்றியது, அவள் இனி திரும்ப வரவே மாட்டாள், சங்கரனை வீட்டுக்குக் கூட்டிப்போக யாரும் வரப்போவதில்லை. இந்த மர பெஞ்சில் தான் இனி எப்போதும் உட்கார்ந்தும் தூங்கியும் இருக்க வேண்டும் என்று பயம் எழ, அவன் தன்னை அறியாமல் டிராயரை நனைத்து வெளியே சொட்ட மூத்திரம் பெய்தது அப்போதுதான்.

பகவதி மாமி, பகவதி மாமி. சங்கரனைப் பார்த்து விட்டு ஆமினா டீச்சர் பாட்டியை அவசரமாகக் கூப்பிட அவள் என்னமோ ஏதோ என்று அடித்துப் பிடித்துக்கொண்டு திரும்பி டீச்சரம்மா என்ன என்று ஆரம்பிப்பதற்குள் பேரனின் இருப்பு கண்டு தலையில் அடித்துக் கொண்டு, எனக்குன்னு வாய்ச்சிருக்கே என்று ஆமினாவிடம் புகார் சொல்ல டீச்சரம்மா சிரித்துவிட்டுச் சொன்னது – அதை ஏன் கேக்கறீங்க பகவதி மாமி. ஒவ்வொரு வருஷம் விஜயதசமி நேரத்திலே பசங்களை அரிஸ்ரீ எழுதி ஒண்ணாங்கிளாஸ்லே போடறபோதும் குறைஞ்சது பத்து பேராவது டிரவுசரை நனைச்சுப்பாங்க. இன்னிக்கு உங்க பேரன் ஆரம்பிச்சு வச்சிருக்கான்.

நினைப்பு எங்கேயோ போக, பிடித்து இழுத்து நேரே பார்க்க, உயர்ந்து மெலிந்த முகமூடிக்காரன் துப்பாக்கியை அவரை நோக்கி நீட்டினான்.

பயத்தில் உறைந்தார் ஓய்வு பெற்ற இந்திய அரசாங்க மூத்த காரியதிரிசி அரசூர் சங்கரன்.
அவசரமாகப் பார்வையால் இரைஞ்சினார் அவனை. இனிமேல் பகவதி பாட்டி பற்றியும் ஆமினா டீச்சர் பற்றியும் சத்தியமாக நினைக்க மாட்டார் சங்கரன். அரையில் மூத்திரம் நனைந்து அசௌகரியமாக இருக்கிறது. விமான நடைப்பாதைக்கு ஒட்டிய ஆசனத்தில் இருப்பதால் நொடிக்கொரு தடவை யாராவது ஒரு முகமூடிக்காரன் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு நடைபோட்டு வர, அவனுடைய மிலிட்டரி உடுப்பு சங்கரன் மேல் உராய்கிறது. அவன் சங்கரன் பேண்டை நனைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து முகம் சுளிப்பான். முகம் சுளித்தபடி துப்பாக்கியை நெற்றிப் பொட்டில் வைத்துச் சுட்டு விடுவான்.

முகமூடி அணிந்த ஐந்து பேர். அவர்களுக்குள் அரபியில் பேசியபடி விமானத்தைக் கடத்திக்கொண்டு போகிறார்கள். சங்கரன் அடங்கலாக நூற்று எழுபது பிரயாணிகள் அடுத்த நிமிஷம் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் பறந்து கொண்டிருக்கிறார்கள். நேபாளத்தில் காட்மாண்டு நகரில் தொடங்கிய பயணம். டில்லிக்குப் போகிற விமானம். இப்போது எங்கே போகிறதோ தெரியாது.

மணி என்ன? எதோடும் சம்பந்தம் இல்லாததுபோல் சங்கரனுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்து இருமலோடு துளசி மணி உருட்டி ஜபித்துக் கொண்டிருந்த முதியவர் சங்கரனைக் கேட்டார். பக்கத்து இருக்கைகளில் இருந்தவர்கள் சங்கரனையும் அவரையும் பார்த்துவிட்டு உயிர்ப் பயம் மேலெழ நேரே பார்த்தபடி திரும்ப வெறிக்க ஆரம்பித்தார்கள்.

சங்கரன் கடியாரத்தில் தன்னிச்சையாக நேரம் பார்த்தார். சாயந்திரம் ஏழு மணிக்கு பத்து நிமிடம் பாக்கி இருக்கிறது. விமானம் சாயந்திரம் ஐந்தரைக்கு காட்மாண்டுவில் புறப்பட்டது. ராத்திரி எட்டுக்கு தில்லியில் இறங்க வேண்டியது. அதை ஒவ்வொரு தடவை நினைக்கும்போதும் பகீர் என்று அடி வயிற்றில் ஒரு பயம் ஊடூறி உடம்பை நடுங்க வைக்கிறது.

டைம் என்னன்னு கேட்டேன். பக்கத்து சீட்காரர் அவருடைய கடியாரமில்லாத உலகத்தில் இருந்து பொறுமை இழந்து கேட்கும்போது ஒரு பயங்கரவாதி சங்கரனைப் பார்த்து சத்தம் போட்டான் – கேட்டா சொல்லேன். இந்தி தெரியாதா உனக்கு?

சங்கரன் பரிதாபமாகப் பார்த்தபடி சொல்றேன் சார் என்றார். எட்டு மணி ராத்திரி. வயசானவன் யாருக்கோ சங்கரன் தகவல் சொல்வதைக் காதில் போட்டுக்கொள்கிறது போல் போகுது போ என்று கையை ஆட்டிப் புறக்கணித்தான். சாப்பாடு எப்போ வரும்? அடுத்த கேள்வி. சங்கரன் கடவுளைப் பார்ப்பது போல் துப்பாக்கி பிடித்த பயங்கரவாதியைப் பார்த்தான். பதிலே தேவையில்லாமல் உணவுப் பாக்கெட்கள் வைத்த சிறு வண்டிகளைத் தள்ளிக்கொண்டு இறுகிய முகங்களும், நடுங்கும் கைகளுமான விமான உபசரிணி பெண்கள் விமான நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.

மூத்திர ஈரத்தை உறிஞ்ச முன் இருக்கைக்குப் பின் செருகி வைத்திருந்த காலையில் வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியின் இணைப்பை இடுப்புக்குக் கீழே இறக்கி உள்ளாடையின் ஈரத்தை உறிஞ்சும்படி வைத்துக் கொண்டார். நல்ல வேளை. அந்த தீவிரவாதிகள் யாரும் பார்க்கவில்லை.

எனக்கு வெங்காயம் இல்லாத மசாலாவும் சப்பாத்தியும் ராத்திரி சாப்பாடாக வேண்டும் என்று கோலாலம்பூரில் இருந்து வரும்போதே பதிந்து கொடுத்திருந்தேன். வைத்திருக்கிறார்களா கேள்.

அறிவு கெட்ட கிழவா, அவனவன் உசிரு போகப் போகுதுன்னு பயந்து போய் இருக்கோம். நீ வெங்காயம் இல்லாம மசாலா கேட்கறே. நாசமாப் போறவனே

முன் வரிசையில் மூன்று புதுமணத் தம்பதிகள் தேன்நிலவு நேப்பாளத்தில் முடித்து தில்லிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். அதில் ஒரு பையன் எழுந்து நின்று ஹலோ என்று கூப்பிட சங்கரன் பீதியோடு அவனைப் பார்த்தார். லேடீஸ் வாண்ட் பாத்ரூம் யூஸ் என்று அரைகுறை இங்கிலீஷில் அவன் சொல்ல, நாங்க சொன்னதுக்கு அப்புறம் போனா போதும் என்று எரிந்து விழுந்தான் ஐந்து முரடர்களில் ஒருத்தன்.

யாருக்கும் சாப்பாடு பரிமாறக் கூடாது. கடைசி வரிசை இருக்கைகளுக்கு முன்னால் அதற்கு முந்திய இருக்கைகளின் பின் இருந்த பலகைகளை நீட்டி பூரியும், பிரியாணியும் நிறைந்த பாகெட்களை வைத்துக் கொண்டிருந்த ஏர் ஹோஸ்டஸ்கள் பயந்து போய் அப்படியே நின்றார்கள்.

ஒரு பயங்கவாதி முன்னால் வந்து உணவு எடுத்து வரும் சிறு வண்டியைக் காலால் உதைத்தான். சாப்பிட ஆரம்பித்தவர்கள் முன்னால் இருந்து சாப்பாட்டைப் பறித்து விமானத்தின் இறுதிப் பகுதியை நோக்கி வீசினானன் அவன்.

சிறு குழந்தை ஒன்றுக்கு அம்மா ஃபீடிங் பாட்டில் வைத்துப் பால் கொடுத்தபடி இருக்க பாட்டிலைப் பறித்தான். குழந்தையின் அம்மா இருகை கூப்பி குரல் நடுங்க எஜமான், பசிக்குது குழந்தைக்கு. கொஞ்சம் அது மட்டுமாவது பால் குடிக்க விடுங்க நீங்க நல்ல இருப்பீங்க என்று பிச்சைக்காரியாகக் கெஞ்சினாள். நிறைய நகை அணிந்து உயர்தரப் பட்டாடை தரித்திருந்தாள் அந்தப் பெண். ஒழிந்து போ என்கிற மாதிரி அவளை நோக்கி பாட்டிலை விட்டெறிய அது தரையில் விழுந்து ஆசனங்களுக்கு அடியில் உருண்டது. அந்தப்பெண் வேகமாகக் கீழே குழந்தையோடு சரிந்து கை துழாவி அதை எடுத்தாள். மேலே ஒட்டிய தூசியை முந்தானையில் துடைத்து சுத்தப்படுத்தத் தன் வாயிலிட்டு சுவைicsத்து குழந்தைக்கு நீட்டினாள். அழுகை நிறுத்திய குழந்தை குடிக்க ஆரம்பித்தது.

pic kathmandu ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2021 20:14

எழுதி வரும் புதிய நாவல் ‘மிளகு’ – ஒரு சிறு பகுதி – கிளஸ்டர் ரோடு, லண்டன்

எழுதி வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து ஒரு பக்கம்

”லண்டன்லே உடுப்பி காப்பி ஓட்டல் இருக்குமா? சீரியஸாத்தான் கேக்கறேன்” கல்பா ஆர்வத்தோடு கேட்டாள். “ஈஸ்ட் ஹாமில் ஒண்ணு இருக்கு. ஆனால் இத்தனை காலையிலே திறந்திருக்குமான்னு தெரியலே” ப்ரபசர் சொன்னார்.

“ஏன் அப்படி? ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அங்கேயும் இருக்குமே” கல்பா கேட்டபோது இருக்கலாம் என்று தோன்றியது.

“இதுக்காக ஈஸ்ட் ஹாம் போகணுமா?”

பிஷாரடி நைட்ஸ்பிரிட்ஜிலிருந்து திரும்பி காரை மெதுவாக ஓட்டியபடி கிளஸ்டர் வீதியின் இரண்டு பக்கமும் பார்த்தபடி வந்தார்.

“தா இவிடெ சாயாக்கடை உண்டு” பச்சை மலையாளத்துக்கு அவர் சந்தோஷமான நேரம் என்பதால் இங்கிலீஷில் இருந்து மாறியதாக கல்பா ஊகித்தாள்.

ப்ளாட்பாரத்தை ஒட்டி ஒடுக்கமான கடை. வாசலில் சாக்பீஸால் எழுதிய பலகை. காரனேஷன் காஃபி ஹவுஸ். அடுத்த பலகை நாலு வரி எழுதி இருந்ததை கண்ணாடி இல்லாமல் படிக்க முடியவில்லை. கல்பா இரைந்து படித்தாள் – இன்று பத்தாம் ஆண்டுவிழா. காபி ஆர்டர் செய்தால் டோநட் ஒன்று இலவசமாகத் தரப்படும்”

சாப்பிட்டுப் போகலாம் சார், வாங்க. கல்பா காரை நிறுத்தப் போவது போல் சைகை காட்ட, தெரு ஓரமாக நிறுத்தினார் பிஷாரடி.

காரனேஷன் சாயா கடையில் நாலைந்து பேர் டோநட்டைப் பிய்த்து காபியில் நனைத்துத் தின்று கொண்டிருந்தார்கள். சுமாரான ஒரு பெஞ்சில் உட்கார்ந்து முன்னால் மேஜையில் காபியும் டோநட்டும் வரக் காத்திருந்தார்கள் கல்பாவும் பிஷாரடியும். பஞ்ச கச்சமும் முன் குடுமியும் நெற்றியில் சந்தனமுமாக அவரை ஒரு வினாடி நின்று பார்த்துப் போனவர்கள் அதிகமாகிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று உயர்ந்து ஒலித்த ஒரு குரல் கேட்டது. மன்றாடும் தீனமாக சத்தம் அது. “எனக்கு டோநட் தரலே”

முகத்தில் மூன்று நாள் தாடியோடு நடுத்தர வயசுக்காரன் ஒருத்தன் காப்பி ஹவுஸ் செர்வர் பெண்ணிடம் புகார் செய்து கொண்டிருந்தான்.

“அரை மணி நேரமா இங்கே இருக்கீங்க. வந்ததுமே டோநட்டை உங்களுக்குக் கொடுத்து நீங்களும் சாப்பிட்டாச்சு. இப்போ காப்பியும் ஆச்சு. எழுந்து நடையக் கட்டுங்க”

“எனக்கு டோநட் கொடுக்கலே” சின்னப் பையன் மாதிரி அந்த மனுஷர் அடம் பிடித்தார்.

இன்னொரு நிமிடத்தில் டோநட் தராவிட்டால் தரையில் விழுந்து புரண்டு அழுவார் என்று கல்பாவுக்குத் தோன்ற பிஷாரடி சார் காதில் சொன்னாள் –

நாம் வேணும்னா இன்னொண்ணு கொடுக்கச் சொல்லிட்டு காசு தரலாமா?

இல்லே கல்பா. அவன் தெருமுனையிலே பிச்சை எடுக்கற கிழக்கு ஐரோப்பிய அகதி. பிச்சையா ரொட்டி, டோநட் கொடுத்தா வாங்க அவனோட சுய கௌரவம் இடம் தராது.

இப்ப என்ன செய்ய? கல்பா கேட்டாள்

பேசாமா சாப்பிட்டு எழுந்து போகறதுதான்.

கல்பா கொஞ்சம் குரல் உயர்த்தி அந்த கிழக்கு ஐரோப்பா காரனைக் கூப்பிட்டாள்.

வாங்க, டோநட் நல்லா இருக்கு. எங்களோடு பங்கு போட்டுக்குங்களேன். ”

அவன் முகம் மலர நன்றி சொல்லி பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தான். அவன் மேல் தீர்க்கமான மிளகு வாடை அடித்தது.

Pic courtesy Caffe Forum Gloucester Road London

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2021 06:00

June 17, 2021

புது நாவல் ‘மிளகு’ – எழுதப்படும்போதே … அம்பலப்புழையில் ஒரு பகல் -பரமேஸ்வரன் வந்திருக்கார்

திலீப் திலீப் ராவ்ஜி ஆனது மலையாள பூமியில் வர்த்தகம் விருத்தியாகி பெரிய ஹோட்டல் உரிமையாளராக ஆன இந்த முப்பது வருடங்களின் மத்தியில் தான். கொஞ்ச நாள் அவரை திலீபன் பரமேஸ்வர ஐயர் என்று அழைத்தார்கள். இத்தனை நீளமான பெயர் எதற்கு என்று நடுவில் சுருக்கி திலீப் பி ஐயர் என்று அழைத்துப் பார்த்தார்கள். அது ஏனோ ஒட்டவில்லை.

ஓட்டல் முதலாளிகள் அதுவும் பெரும் தோதில் சைவ உணவகம் நடத்துகிற வெற்றி பெற்ற ஹோட்டல்காரர்கள் எல்லாம் உடுப்பி பின்னணியிலிருந்து வரும் ராவ்ஜிக்கள் என்று எல்லோருக்கும் தெரியும். திலீபையும் ராவ்ஜி ஆக்கி விட்டார்கள் நண்பர்களும் விரோதிகளும். விரோதிகள் என்றால் தொழில் முறையில் போட்டியில் ஈடுபட்டு நேரில் தனிமனுஷராகப் பழக பிரியமும் நேசமும் உள்ளவர்களாக எல்லோரும் தட்டுப்பட வைத்தது திலீப் ராவ்ஜிக்கு பகவான் கொடுத்த கொடை.

அவர்களோடு வாணிபம் பேசுவார். தொழில் அபிவிருத்தி பற்றிப் பேசுவார். ஹோட்டல் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளையும் தரவேண்டிய தீர்வுகளையும் பற்றிப் பேசுவார். ராவ்ஜியாகப் பேசுவது எளிதாக இருக்கிறது அதற்கெல்லாம். திலீப் பி ஐயர் மும்பை ஷவர ப்ளேட் கம்பெனி ஆபீசில் டைப்பிஸ்ட் பெயர் போல ஒலிக்கிறதாக அகல்யா சொல்லியிருந்தாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றில்லை. அவரை வெறும் திலீப்பாகக் காணவே அவளுக்கு இஷ்டம்.

வெறும் திலீப்போ ஐயரோ ராவ்ஜியோ திலீப்புக்கு அகல்யா காலமானதும் பேச்சுத் துணை அற்றுப் போனது முதல் துக்கம். அவருக்கு மராட்டி இலக்கியத்தையும் மலையாளக் கவிதையையும் மார்க்க்சீயத்தையும், ஷேக்ஸ்பியரையும் சர்ச்சை செய்யப் பேச்சுத் துணை வேண்டாம்.

அதெல்லாம் தெரியும் தான். ஆனால் அது சம்பந்தமான பேச்சு திலீப் ராவ்ஜியின் தந்தையார் பரமேஸ்வர ஐயர் காலத்திலேயே ஓய்ந்து போனது. தில்லி போய் வருகிறேன் என்று பம்பாயில் இருந்து புறப்பட்டுத் திரும்பும்போது திடீரென்று நாக்பூரில் காணாமல் போனவர் பரமேஸ்வரன்.

திலீப்புக்கு அரசியலோ இலக்கியமோ அத்துப்படி எல்லாம். ஸம்ஸாரிக்கான் மடுப்பு தோணுண்னு. பேசிக் களைத்துப் போயாச்சு. இனி எதுவும் பேச வேண்டாம். மத்திய சர்க்காரையும் மாநில அரசாங்கத்தையும் இங்கிலாந்து தொழிற்கட்சி மகாநாட்டையும் பற்றிப் பேசித் தீர்க்க அவரால் முடியாது. ஆனால் நேற்றைக்கும் இன்றைக்கும் தட்பவெப்ப நிலை எப்படி இருக்கிறது, இன்றைக்கு மழை பெய்யுமா, நாளை புயல் உருவாகிறதாமே என்று வானிலை பேசவோ, புது இந்தி மற்றும் பழைய மலையாள சினிமா, வந்து போகும் விழாக்கள் பற்றி ஏலம் தட்டிப் போட்ட தேநீர் குடித்தபடி உற்சாகமாக்ப் பேசவோ திலீப் இருந்தார். அகல்யா போனதும் அவரும் காணாமல் போனார்.

அவருக்கு வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு வெகு நாளாகிறது. ஓட்டல் நடத்தினாலும் வீட்டில் ஒரு பொரியல், ஒரு துவையல், ஒரு ரசம், ஒரு கீரை மசியல், ஒரு பப்படம் என்று ஒரே ஒரு நாள் சாப்பிடக் கிடைத்தால் அம்பலப்புழை கிருஷ்ணனை வந்தித்து நன்றியும் கடப்பாடும் சொல்லி வணங்குவார். பெரிய விருந்து, ஓணமும் பொங்கலும் விஷுவும், தீபாவளியும் எல்லாம் கொண்டாட இலை நிறைய அதுவும் இதுவும் வந்து கொண்டிருக்க வேண்டாம். அகல்யா இருந்த வரை தினசரி அனுபவப்பட்டுக் கொண்டிருந்தது அது.

திலீப் ராவ்ஜிக்கு அண்டை அயலில் சிநேகிதர்கள், தூரத்து, பக்கத்து சொந்தக்காரர்கள், ஏன், பழக்கமானவர்கள் என்று பலர் உண்டு. இவர்கள் மதியச் சாப்பாட்டுக்கு உட்காரும் நேரம் அவருக்குத் துல்லியமாகத் தெரியும். அதற்கு ஒரு மணி நேரம் முன்பே நலம் விசாரிக்கிற தோரணையில் ராவ்ஜி அவர்களின் வீடுகளுக்கு அழைக்காமலேயே போவதுண்டு.

அதிலும், விடிந்ததும் சோற்றில் விழிக்கிற, காலை ஏழு மணிக்கு சாதம், சாம்பார், ரசம் என்று விஸ்தாரமாக உண்டு விட்டு ஓடும் ஆபீஸ்காரர்களைத் தவிர்த்து விடுவார். மதியம் சிற்றுண்டி சாப்பிட்டு காலையில் சம்பிரதாயமான சாப்பாடு சாப்பிடும் அவர்களை மனுஷர்களாகவே அவர் மதிப்பதில்லை.

மீதி இருப்பவர்கள் எல்லோரும் அவருடைய அன்புக்குப் பாத்திரமானவர்கள். சகல சௌபாக்கியமும் கூடிவரப் பெற்றவர்கள். எனினும் இவர்களில் ஒருத்தர் கூட சாப்பிடறீங்களா என்று அவரைக் கேட்டதில்லை. இவ்வளவு பெரிய மனுஷனை எங்க வீட்டில் வற்றல் குழம்பு சாதம், சுட்ட அப்பளம் சாப்பிட வாங்கன்னு கூப்பிடச் சங்கடம் தான்.

பேஷா வரேன், அந்த அப்பளத்திலே, உளுந்து அப்பளம் தானே, சுட்டதுக்கு அப்புறம் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவி வை என்று குஷியாக வந்து விடுவார் திலீப் ராவ்ஜி. இதுவரை. போகட்டும். எல்லா சௌகரியங்களும் பெற்று விளங்கட்டும்.

திலீப் ராவ்ஜி அழைக்காமல் விருந்தாடப் போகும்போது மறக்காமல் ஒரு சீப்பு வாழைப்பழமோ, இருப்பதிலேயே பெரிய பாக்கெட் வெண்ணெய் பிஸ்கோத்தோ கடலை உருண்டைகளோ வாங்கிப் போவார். போகிற வீட்டுக் குழந்தைகளுக்குப் பிடித்த சமாசாரம் இவை இரண்டும்.

குழந்தைகளுக்கு வந்திருக்கும் தாத்தாவைப் பிடித்துப் போனால், பெரியவர்கள் போனால் போகிறது என்று அவரைக் குழந்தைக்கு சமமாக மதித்துச் சாப்பிடக் கூப்பிடலாம். குழந்தைகள் வீட்டுப் பெரியவர்களை நச்சரித்து ஒன்றிரண்டு முறை அப்படி அழைக்கப்பட்டிருக்கிறார் அவர்.

அவருக்குப் பணம் செலவழிப்பது ஒரு பொருட்டே இல்லை. வீட்டுச் சாப்பாடு. அதற்காக பத்து கிலோமீட்டர் கூட அவருடைய காரில் போவார்.

தானாக விருந்தாடப் போகும் வேளைகளில் அவர் கடைப்பிடிக்கும் இன்னொரு ஒழுங்குமுறையும் உண்டு. சாப்பாடு எவ்வளவு மோசமாக இருந்தாலும் குடும்பத் தலைவருக்கும், வீட்டம்மைக்கும் குறைவில்லாமல் பாராட்டுகளை எடுத்து விடுவது முக்கியம் என்பதை அவர் அறிவார். இந்தப் பாராட்டுகள் பொய்யாக ஒலிக்காமல் இருக்க அவர் கடைப்பிடித்த யுக்தி அவர் என்றைக்கோ உண்டு நினைவில் இன்னும் இருக்கும் சாப்பாட்டை நினைவு கூர்வதாக அந்தப் பாராட்டை அமைத்துக்கொள்வதாகும்.

நினைவில் நிற்கும் அந்த உணவு அகல்யா ஒரு ஞாயிற்றுக்கிழமை சமைத்ததாகவோ, கற்பகம் பாட்டி கண்ணை இடுக்கிக்கொண்டு பம்பாய் சாலில் ஸ்டவ்வோடு மல்லுக்கட்டி கிண்டிக் கிளறி இறக்கியதாகவோ, திலீப்பின் அம்மா ஷாலினிதாய் மேத்தி பொரட்டாவும் ஆம்பா ஊறுகாயும் அவருக்கு உண்ணக்கொடுத்த அபூர்வமான தினமாகவோ நினைவில் உடனடியாக அழைக்கப்படும்.

அப்புறம் மனதில் செயற்கைத் தன்மை இல்லாமல் அந்த நினைவு நெஞ்சாற பகிரப்படும். “அகல்யா சமைக்கற கீரை மசியல் நினைவுக்கு வந்துதும்மா. நல்லா இரு. நல்லா இரு. எங்கம்மா சமையல்கட்டுக்கு வந்திருந்தாளா என்ன? கத்தரிக்காய் ரசவாங்கி எவ்வளவு ருசியா இருந்தது தெரியுமா? எங்கம்மா பண்ணினா இதே போலதான் இருக்கும். ஜீத்தே ரஹோ பிட்டியா. ஷாலினி மோரே கேட்டிருக்கீங்களா, எங்கம்மா தான். அவ பண்ணின மேத்தி ரொட்டியும் புரட்டாவும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். சொல்லப் போனா நீ பண்ணினது ஷாலினிதாய் சமைச்சதை விட ஒரு லவலேசம் இன்னும் பிரமாதம். இப்படி அவர் பாராட்டுகளை அள்ளித்தர கண் கலங்கிய பெண்கள் அவரை விரைவில் அடுத்த எளிய விருந்துக்கு அழைக்கத் தயங்கியதில்லை.

திலீப் ராவ்ஜிக்கு கூட்டம் கூட்டமாக வைதிக காரியங்களுக்காகச் சஞ்சரிக்கும் புரோகிதர்கள் என்னமோ அவர் அலைவரிசைக்கு ஒத்து வந்ததில்லை. அவர்கள் ஒரு காலத்தில் வெய்யிலோ மழையோ, தொலைவிலிருக்கும் இடங்களுக்குக் கூட கால்தேய நடந்து போய் வந்தார்கள். அப்புறம் மாங்குமாங்கென்று சைக்கிள் மிதித்து வைதீக காரியங்களை நிர்வகித்து நடத்தித்தரப் போய்க் கொண்டிருந்தார்கள். சைக்கிள் மோட்டார் பைக்கோ ஸ்கூட்டரோ ஆக நாள் அதிகம் பிடிக்கவில்லை. அவர்களில் சிலர் புத்தம்புதுக் கார்களை நேர்த்தியாக ஓட்டியபடி வைதீகம் செய்துதரப் போவதை திலீப் ராவ்ஜி சுவாரசியத்தோடு பார்க்கிறார்.

அது மட்டுமில்லை. பேரம் ஏதும் பேச வாய்ப்புத் தராத கட்டண விகிதங்கள், அவர்கள் நிச்சயித்த வேறு யாரும் மாற்ற முடியாத நாள்-நட்சத்திரம்-நேரம் சார்ந்த நிகழ்ச்சி அட்டவணைகள், ஹோமம் வளர்க்கவும், நிகழ்ச்சியை அனுசரிக்க, தெய்வத்துக்குப் படைக்க என்ன என்ன உணவு, எவ்வளவு என்று கண்டிப்பான கட்டளைகள் என்று அவர்கள் சொன்னபடி எல்லாம் நடந்தாலே ஆசுவாசம் கொள்கிறார்கள். அகல்யாவின் இறுதிச் சடங்குகள் நடந்த போது அதைக் கவனித்திருக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2021 18:46

June 16, 2021

புதிய நாவல் ‘மிளகு’ ஒரு சிறு பகுதி – திலீப் ராவ்ஜி அவர்களின் காலைப் பொழுது

திலீப ராவ்ஜி தன் காலை நடைப் பயிற்சியிலிருந்து திரும்பி வந்தபோது வீட்டு முன்பில் போட்டிருந்த தோட்டத்தில் ஒரு பசுமாடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தோட்டத்தை கிட்டத்தட்ட தின்று தீர்த்திருந்தது அந்த மாடு. பசு மட்டுமில்லை. கூடவே ஒரு கிழட்டுக் காளையும் மேய்ந்து கொண்டிருந்தது. மாஞ்செடி பதியம் போட்டது, மூலிகை வளர்த்த புதர்வெளிகள், மல்லிகைக் கொடி என்று எல்லாவற்றையும் இந்தக் கால்நடைகள் வேட்டையாடிக் கொண்டிருந்தன.

சாப்பிட்டு முடித்து இரண்டு மாடுகளும் வயிற்றுப் பசி தீர்ந்து உடல் பசி முன் எழ, திலீப ராவின் தோட்டத்தில் கேளிக்கை நடத்த முற்பட்டன.

வாக்கிங்க் ஸ்டிக்கை ஆயுதம் போல் சுழற்றிக்கொண்டு வீட்டுக் காம்பவுண்டுக்குள் வேகமாக நுழைந்தார் திலீப ராவ்ஜி. உள்ளே அவர் மனைவி அகல்யாம்மா கொம்பு முளைத்த காதலர்களுக்கு முன் பக்தியும் மரியாதையுமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டார். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் கணத்துக்காக அவள் காத்துக் கொண்டிருப்பதாக திலீப ராவுக்குப் பட்டது.

“அகிலா, உனக்கென்ன ப்ராந்தா? அது ரெண்டும் வேறே லோகத்துலே சஞ்சரிச்சுண்டிருக்கு நீ என்னடான்னா முன்னாலே நின்னு கை கூப்பிண்டு இருக்கே. முட்டிடுத்துன்னா?”

“அது ஏன் முட்டும்?”

”நீ சுகப்படறபோது அது வந்து பார்த்தா சும்மா இருப்பியா?” ராவ் உதட்டைக் கடித்துக் கொண்டு விஷமமாகச் சிரித்தார். அகிலா பாய்ந்து வந்து அவர் கையிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கைப் பிடுங்கி அவர் முதுகில் ஒரு போடு போட்டாள்.

”கிழவரே, உமக்கு வெக்கம் மானம் எதுவும் கிடையாது. அறுபத்தைஞ்சு வயசிலே சிருங்காரம் கேட்கறது. என்னை விட்டுடுங்கோ”

விட்டுடுங்கோன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ளே போறியே? யாரை விட, யாரைப் பிடிக்க?

ராவ் இன்று முழுக்க விளையாட்டுப் பிள்ளையாகத் தன்னை உணர்ந்து உற்சாகம் கொப்பளிக்க நின்றார்.

“இருங்கோ, ஒரு தீபாரதனை எடுத்துடறேன் ரெண்டையும். நம்மாத்துக்கு வந்த தேவதையும் தேவ புருஷனும் இந்த ரெண்டு உசுரும்”

நிஜமாகவே நீ ஸ்க்ரூ கழண்டு போயிட்டே போ. ரிடையர் ஆனதும் பென்ஷன் மட்டும் வரலே. கெக்கெபிக்கெ நம்பிக்கை எல்லாம் வந்து சேர்ந்தாச்சு.

காளை சரிதான் போடா என்று அமர்க்களமாக ராவ்ஜியைப் பார்த்தபடி நடந்து போக, பசு பின்னாலேயே மீதிச் செடிகொடிகளை மேய்ந்தபடி நடந்தது.

“வாக்கிங் போயிட்டு வரேன்னு போனது ஆறு மணிக்கு. வந்திருக்கறது வெய்யில் உரைக்கற எட்டு மணிக்கு. ராவ்ஜி நீர் வாக்கிங் போனீரா வடசேரிக்காவிலே தொடுப்பு எவளையாவது பார்க்கப் போனீரா?” அகல்யா சிரிப்பை ஜாக்கிரதையாக மறைத்து அவரை முறைத்தாலும் அப்படியே இருக்க முடியவில்லை.

“ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் பாரும். நான் உம்ம பின்னாலேயே வந்து கையும் களவுமா உம்மைப் பிடிக்கத்தான் போறேன்.”.

அகல்யா சொல்லி முடிக்கும்முன் திலீப ராவ்ஜியைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

“அகில், இந்த வயசுலே நான் நிஜமாவே கட்டில் போட்டு சர்க்கஸ் பண்ண முடியும்னு நினைக்கறியா? ஏதோ காலம்பற மலச்சிக்கல் இல்லாமல் சரசரன்னு வெளிக்குப் போனா சுபதினம், மதியச் சாப்பாட்டுக்கு பசி எடுத்தா நல்ல நாள், ஜலதோஷம் பிடிக்கலேன்னா அதிர்ஷ்ட தினம் அப்படி தள்ளிண்டிருக்கேன். சுகம் கொண்டாடறது எல்லாம் பேச மட்டும் தான்”.

“நீரா, இந்த வயசிலும் துள்ளிக் குதிக்கற யுவன் நீர். எங்கே, பிடியும் பார்க்கலாம்”

அகல்யா வீட்டுக்குள் பூஞ்சிட்டாக ஓடினாள். திலீப ராவ் அவள் பின்னால் ஓடி கதவில் மோதிக்கொண்டு ஸ்தம்பித்து நின்றார்.

கதவு பூட்டியிருந்தது.

திலீப ராவ்ஜியின் கண்கள் நனைந்தன. அகல்யா அங்கே இல்லை. பசுவும் இல்லை. காளையும் இல்லை. தனி வீடும் இல்லை. இரண்டு படுக்கை அறை, சமையல்கட்டு, முன்னறை என்று அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு. பூட்டிய கதவு நிஜம்.

மூன்று மாடி படியேறி வந்த களைப்பும் படபடப்பும் சற்றே தீர மூச்சு வாங்கியபடி நின்றார் திலீப ராவ்ஜி. லிப்ட் வேலை செய்கிறதுதான். உடல் பயிற்சியாக படிகளில் ஏற, இறங்கத்தான் அவருக்குப் பிடித்திருக்கிறது.

அகல்யா திரும்பி வராமல் போய்ச் சேர்ந்து இன்றைய திதியோடு ஐந்து வருடமாகி விட்டது. என்றாலும் மனமும் உடலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. வலிய வந்து மேலே ஏறிப் படர்ந்து நினைவை ஆட்கொண்ட தனிமை உள்மனதுக்குள் புகுந்து நிதர்சனமானதாக உறைய இன்னும் நாள் செல்லலாம். எல்லா எதிர்பார்ப்புகளோடும் அகல்யாவின் அணைப்பில் பத்திரமாகச் சுருண்டு கிடப்பதாக பழைய நினைவும் கனவு மேலெழுந்த பகுதி பிரக்ஞை நிலையும் விளையாட்டுக் காட்டுகின்ற நேரங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2021 21:36

June 14, 2021

புதிய நாவல் ’மிளகு’ – கடைவீதிக் கதைகள்

கோழி மாமிசத்தில் பிரட்ட மிளகு விழுதை எடுத்தாள் கஸாண்ட்ரா.

நல்ல வாடை இல்லையா? குசினிக்குள் எட்டிப் பார்த்த பெத்ரோ துரை விசாரித்தார்.

நல்ல வாடைதான். ஆனால் கோழிக்கு இந்தக் காரம் போதாது. வெங்காயமும், வற்றல் மிளகாயும் சேர்த்து அரைத்த விழுது பூசி எண்ணெயில் பொறிக்க வேண்டிய மரியாதைக்குத் தகுந்தது கோழி மாமிசம்.

கஸாண்ட்ரா மாமிசத்தில் மசாலா சேர்த்துப் பிரட்டியபடியே சொன்னாள். எதிராளியைக் கீழே வீழ்த்தி தோளை இறுக்கிப் பிடித்துப் பிசையும் மல்லன் போல் கோழி மாமிசத்தைக் கால்களுக்கு இடையே போட்டுக் கொண்டு இரண்டு கரங்களிலும் தோள் தசைகள் இறுகித் திரண்டு வர கைகளுக்கு பின்னால் பெருத்த மார்பகங்கள் பிதுங்கி காட்சி கொடுத்து நிற்க மாமிசம் பாகம் பண்ணினாள் கஸாண்ட்ரா.

சரி அப்படியே செய்துவிடேன் என்றபடி வாசலுக்கு நடந்தார் பிரபு. அப்போ மிளகு அரைத்து வைத்த விழுது? கஸாண்ட்ரா அழகாக சந்தேகம் கேட்டாள்.

வாசலில் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு அவசரமாக உள்ளே வந்து கஸாண்ட்ராவிடம் ஏதோ ரகசியமாகச் சொல்ல அவள் சீயென்று முகம் வலித்துச் சிரித்தாள். இன்றைய நாள் இப்படியே போகட்டும் என்று பெத்ரோ வாசலுக்கும் நடைக்கும் இடையே சற்றே நடந்தார்.

அப்படியே சருவப் பானையில் வென்னீர் போட்டு வை நான் வந்து ஸ்நானம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தபடி தெருவில் இறங்கினார். சட்டென்று இப்படி தெருவில் நடந்து எல்லோரும் எல்லா இயக்கமும் எப்படிப் போகிறது என்று தெரிந்து வைத்துக் கொள்ள அவருக்கு நிறையவே ஆர்வம் உண்டு.

தெருவின் ஓரத்தில் குத்த வைத்து உட்கார்ந்து முட்டைகளை பிரம்புக் கூடைகளில் வைத்து விற்கிற கிருஷ்ணப்பா அவர் கண்ணில் முதலில் பட்டான். பெத்ரோவின் மாளிகைக்கு நேர் எதிரே தெரு ஓரமாக உட்கார்ந்திருந்தவனுக்கு மேலே ஒரு பிரப்பங்குடை நிழல் பரப்பிக் கொண்டிருந்ததைக் கண்டார். அதன் மேல் இருந்து தண்ணீர் வடிந்தபடி இருக்க, கிருஷ்ணப்பா கீழிலிருந்து கையில் செப்புக் கிண்டியோடு வெளியே வந்து கையளவு நீரை குடைமேல் விசிறி அடிக்க, சுகமான வாசனை குளிர்ச்சி பகர்த்தி வந்து நின்றது.

ஓ கிருஷ்ணப்பா அதென்ன அபின் கலந்த தண்ணீரா? முட்டை விற்க அபின் எதற்கு? பெத்ரோ கேட்க, இல்லை பிரபோ என்று அவசரமாக மறுத்தான் கிருஷ்ணப்பா.

இது வெட்டிவேர் கலந்த தண்ணீர். ஒரு பலா இலை மடக்கு நிறைய ஏலமும் கலந்து தெளித்தேன். வெய்யிலுக்கு இதைவிட வேறே விமோசனம் இல்லை பிரபு. முகத்திலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி வடிந்தாலும் மலர்ச்சியோடு சொன்னான் கிருஷ்ணப்பா.

நீ கோழிமுட்டை மட்டும் விற்றே எத்தனை நாள் கஷ்டப்படப் போகிறாய்? வான்கோழி வைத்துப் பராமரித்து அதன் முட்டைகளையும் விற்கலாமே? இந்தியர்கள் வாங்குகிறார்களோ என்னமோ, ஹொன்னாவரில் இருக்கப்பட்ட போர்த்துகீசியர்கள் ஒருத்தர் விடாமல், நீ என்ன விலை சொன்னாலும் கொடுத்து வாங்கிப் போய் சமைத்து உண்பார்களே.

வழக்கமாகச் சொல்கிற யோசனை தான். புதிதாக முதல் தடவை சொல்லும் உற்சாகத்தோடு அவர் சொல்ல, கை கூப்பி நன்றி சொன்னான் கிருஷ்ணப்பா.

அந்தப் பறவையை வளர்ப்பது பற்றி ஒன்றும் இல்லை பிரபோ. வாய்க்குக் கீழே சவ்வு தொங்கிக் கொண்டு அலைகிற அவற்றைப் பார்க்கத்தான் குமட்டலாக இருக்கிறது. அந்த முட்டைகளின் வாடை வேறே.

அவன் வழக்கமான பதில் சொன்னான்.

அதெல்லாம் பணத்தின் வாடை. பிடிக்காமல் எப்படி காசு சேரும் என்றார் பெத்ரோ. கிருஷ்ணப்பா வெகுளியாகச் சிரித்தான்.

நான் அடுத்த முறை லிஸ்பனில் இருந்து திரும்பும்போது உனக்காக ஒரு பத்து வான்கோழிகளைக் கொண்டு வருகிறேன். பத்து வான்கோழி ஏற்றினால், இங்கே வந்து சேரும்போது அதில் இரண்டு மிஞ்சினால் அதிசயம் தான். அந்தக் கோழிகள் நீ சொன்னபடி வசீகரமாக, நறுமணம் வீசும் முட்டை பொறிப்பதோடு நல்ல நிறமாகவும் இருக்கும். சரிதானா? பெத்ரோ நடந்தார்.

பிரபோ, அப்போ இருபது கோழி கொண்டு வர முடியுமா? கிருஷ்ணப்பாவின் உற்சாகமான குரல் அவருக்குப் பின் கேட்டதை ரசித்தபடி போனார் அவர்.

பிடவை விற்கும் சந்திரய்யா கடை வாசலில் நின்று சந்திராரே என்று கொஞ்சம் குரல் உயர்த்தி அழைத்தார் பெத்ரோ. பளிச்சென்று கண்ணில் படும் பட்டுப் பிடவைகளும் தமிழ்ப் பிரதேசத்தில் தறி நிறுத்தி நெய்து அனுப்பிய நூல் பிடவைகளும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடை அது. முறுக்கி நிறுத்திய சில பிடவைகள் கடைக்குள் நீளமான இரும்புக் கம்பி பொருத்திய மரக் கட்டைகளிலிருந்து தொங்கவிட்ட பூமாலைகள் போல் தொங்கிக் கொண்டிருந்தன. வெப்பக் காற்று மட்டும் இல்லாமல் இருந்தால் அந்தக் கடையே சொக்க வைக்கும் வர்ணக் களேபரமும், சாயம் தோய்த்த புதுத்துணி வாசனையுமாக வேறு உலகத்தைச் சித்தரித்திருக்கும். சந்திரய்யா எங்கே? ஒய் சந்திரய்ய-ரே.

கடைக்குப் பின்னால் தரையில் சம்மணம் கொட்டி இருந்து அவசர அவசரமாக கம்பங்களி உருண்டையை வாயில் இட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சந்திரய்யா எழுந்து எச்சில் கையோடு ஓடி வரத் தயாராக, “ஒண்ணும் அவசரம் இல்லே, சாப்பிட்டு வா. நான் சும்மா வேடிக்கை பார்க்கத் தான் வந்தேன்” என்றபடி புடவை அடுக்கிய அலமாரிகளைப் பார்வையிட்டார் பெத்ரோ. ஒரே ஒரு அலமாரியில் மயில்கண்ணும் பட்டையாக நீலமும் பச்சையும் சரிகையும் கரையாகக் கொண்ட வேஷ்டிகளும் மேல் துண்டுகளும் அடைத்திருக்க, மீதி நான்கு அலமாரி முழுக்க விதவிதமான பிடவைகள், கச்சுகள்.

சந்திரய்யா மெல்லச் சாப்பிட்டு வரட்டும். பெத்ரோ ஒரு அலமாரிக்குள் கை நீட்டி அங்கே வைத்திருந்த பட்டுக் கச்சைகளில் மேலே இருந்ததை எடுத்துப் பிரித்தார். இந்தத் துணி அதி சீக்கிரம் துணையொன்றைப் பெறப் போகிறது என்று நினைத்துப் பார்க்க துணி என்றும் பார்க்காது அதன் மேல் பொறாமை எழுந்தது. போன வருடம் தீபாவளிக்காக வேலைக்காரர்களுக்கு பிடவைகளும் வேட்டி அங்கவஸ்திரங்களும் பெத்ரோ வாங்கும்போது எப்படியோ கூடுதலாக ஒரு கச்சும் வந்துவிட்டது. அதை எடுத்து வைத்துக் கொண்டு மரியாவிடம் அன்போடு அன்றைய ராத்திரி அதை அணியச் சொன்னார் பெத்ரோ.

உமக்கு என்ன கிறுக்கா பிடித்தது, ஓலா சென்ஹோர் பெத்ரோ. அழகாக லிஸ்பனிலும் கிராமப் புற போர்ச்சுகல்லிலும் என் போன்ற பேரிளம் பெண்கள் உடுத்துவது போல் நீளப் பாவாடையும் மேற்சட்டையும் உடுத்தி நான் பாட்டுக்கு அங்குமிங்கும் போய் வந்து கொண்டிருக்கிறேன். கச்சு உடுத்தணுமாமே. அதை உடுத்தி பின்னால் இறுகிக் கட்டுவதற்கு யாரைத்தேட? உம்மைக் கட்டச் சொன்னால் இன்று பூரா அதை செய்து கொண்டிருப்பதாக சாக்கு சொல்லி வேறேதாவது பண்ணிக் கொண்டிருப்பீர். சரி நானே கட்டிக் கொண்டு கடைத்தெரு போனால் எதிர்பார்க்காத நேரத்தில் இந்தக் கச்சு கழன்று விழுந்து உலகுக்கெல்லாம் பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டும். தேவையா எனக்கு இது? தேவையா உமக்கு அதில் வரக்கூடிய துக்கமும் அவமானமும்.

கஸாண்ட்ராவை கச்சு உடுக்கச் சொன்னாலென்ன? கோழி சமைக்கட்டும், அப்புறம் உடுக்க, எடுக்கச் சொல்லலாம்.

பெத்ரோ திரும்பி நடப்பதற்குள் சகல மசாலாவும் வெங்காயமும் மணக்க சந்திரய்யா வேஷ்டியில் கையை ஒற்றிக்கொண்டு வெளியே வந்தார்.

மன்னிக்கணும், காலையில் வெறும் வயிற்றோடு கடை திறக்க வந்து விட்டேன். இப்போது பசியெடுத்து வீட்டிலிருந்து சோறும் மீனும் வரவழைத்துச் சாப்பிட்டேன் என்றார் மன்னிப்புக் கேட்கும் குரலில்.

என்ன மீன் சாப்பிட்டீர்கள் என்று விசாரித்தார் பெத்ரோ. அந்த மீன் வாடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததைக் கவனித்தார் அவர்.

இதுவா, இன்னும் கூட அடுக்குப் பாத்திரத்தில் உண்டே என்று உள்ளே போய் எடுத்து வந்து காட்டினார். இது இன்னொரு மீன் வகை. செம்மீன். மலையாள பூமியான கொச்சியில் இருந்து, சரியாகச் சொன்னால், குட்டநாடு கடல் பிரதேசத்து வாய்க்கால் விளைச்சல். ராட்டு என்று தமிழர்கள் சொல்வது. அனுப்பி வைக்கட்டுமா என்று அன்போடு கேட்டார் சந்திரையா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2021 19:05

June 12, 2021

எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து – ஹொன்னாவர் நகரில் ஒரு பகல்பொழுது

ஹொன்னாவர் நகரின் பகல் நேரம் பொறுக்க முடியாத சூட்டோடு மெல்லக் கடந்து போய்க்கொண்டிருந்தது. ஆயிற்று வெளியே போகிறபோது இந்தியர்கள் போல் மேல் குப்பாயத்தை, உள்சட்டையைத் துறந்து மாரில் சந்தனம் பூசிக்கொண்டு தெருவோடு போக முடிந்தால் எவ்வளவு நன்றாக, சுகமாக இருக்கும் என்று பெத்ரோ நினைத்துப் பார்த்தார். கள்ளிக்கோட்டை கிராமப் பகுதியில் பெண்களும் அப்படிப் போவார்களாம். மழைக் காலத்தில் கூடவா அப்படி நடந்து போவார்கள்?

இன்னும் இரண்டு வாரம் போனால் மழைக்காலம் வந்து விடும். மழை வந்தாலும் அடித்து விட்டு அது அவ்வப்போது ஓயும்போது வெப்பம் கூடுமே தவிரக் குறைவதில்லை. மழை அழிச்சாட்டியமாகத் தொடர்ந்து ஒரு வாரம் ராப்பகலாக அடித்துப் பெய்தால் தான் நிலம் குளிர்ந்து ஈசல்கள் பறக்கத் தொடங்கும். அந்தப் பொழுதுகள் மிளகுப் பயிர் வளரத் தேவையான வெப்பமும், நீர்வளமும் கொடுப்பவை என்று பெத்ரோ அறிந்திருந்தார்.

இரண்டு வாரம் முன் மிளகு திரளும் நேரம் வந்து சேர்ந்ததாக கடைத்தெருவில் பேச்சு எழுந்தபோது கொஞ்சம் முன்னால் நிகழ்ந்து விட்டது என்று வயதான வணிகர்கள் சொன்னார்கள். ஒரு நாள் பின்னாடி நிகழக் கூடாது. ஒரு நாள் முன்னாலும் நிகழ்ந்து விடக் கூடாது. அதன் குணத்தையும் விலைபோகும் பணமதிப்பையும் ஒரு கைப்பிடி மிளகை முகர்ந்து பார்த்தே நிச்சயிக்கக் கூடியவர்கள் அவர்கள்.

கள்ளிக்கோட்டையில் மழை ஹொன்னாவரை விட, ஜெர்ஸோப்பாவை விட அதிகமாகப் பொழியும். வெப்பமும், ஈரமும், வெள்ளப் பெருக்கும் இங்கே இருப்பதை விட இன்னும் குறைந்தது மூன்று மடங்காவது இருக்கும். கறுப்பு குறுமிளகு மலபார் இனமாக அங்கே விளைவது தான் உலகிலேயே உச்ச பட்ச விலைக்கு விற்கப்படுவது. பெத்ரோவின் மாமனார் குடும்பத்தில் ஒரு பகுதி போர்ச்சுகல் தலைநகரம் லிஸ்பனில் வாசனை திரவியங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதில் நூறு வருடத்துக்கு முன்பிருந்தே ஈடுபட்டவர்கள். வாஸ்கோ ட காமாவுக்கு ஐரோப்பாவில் இருந்து கடல் வழியாக ஆப்பிர்க்கக் கண்டத்தைச் சுற்றி நன்னம்பிக்கை முனை தொட்டு மேற்கில் திரும்ப இந்தியா வரும் என்று கண்டறிய கப்பல் பயணம் மேற்கொள்ள பண உதவி செய்த அரசர்கள், பிரபுக்கள், பெரும் வணிகர்களில் அவர்களும் உண்டு.

பெத்ரோவின் மாமனார் சந்தியாஹோ வேறு யார் பெயரிலோ கள்ளிக்கோட்டையில் நிலம் வாங்கினார். நிலத்தில் மிளகு பயிர் செய்யக் கூலிக்கு ஆளமர்த்தினார். சாகுபடி செய்து வந்ததை வாங்குவதாகப் பெயர்பண்ணி விற்பனை விலை நிர்ணயித்தார். அந்தத் தொகையில் ஒரு சிறு விழுக்காடு தொழிற்கூலியாகக் கொடுத்து மீதி எல்லாம் எடுத்துக்கொண்டார்.

சென்னபைரதேவி மகாராணி இந்தக் குற்றம் ஒன்றைத்தான் கண்டு பிடித்திருக்கிறாள். சந்தியாஹோ லிஸ்பனில் இருந்து இங்கே வந்ததே மறைவாக இப்படி வாசனைப் பொருள் விவசாயத்தில் ஈடுபட்டு குறைந்த விலைக்கு மிளகு கிடைக்க வழி செய்யத்தான். அவருடைய கடியார விற்பனைக் கடையும் போர்த்துக்கீசிய வெள்ளிப் பாத்திரங்கள் விற்கும் கடையும் முட்டை வியாபாரமும் இந்த மிளகு மறைவு சாகுபடிக்கு முன்னால் திரை போடத்தான்.

அந்த கடியாரக் கடையில் தான் ஐந்து வருடம் முன்பு பயிற்சி பெறும் ராஜப் பிரதிநிதியாக இந்தியாவில் கள்ளிக்கோட்டைக்கு வந்து சேர்ந்தபோது மரியாவை முதலில் சந்தித்தார் பெத்ரோ. சந்தியாஹோவின் ஒரே மகள்.

இடுப்பு கடியாரம் ஓடவில்லை என்று ஒக்கிட எடுத்துப் போனபோது அரச பிரதிநிதியாக இன்னும் சில மாதங்களில் பதவி ஏற்கப் போகிறவர் பெத்ரோ என்று தெரிந்த சந்தியாஹோ ஒரேயடியாக உபசாரமும் மரியாதையும் செய்தார் அப்போது. நீ யாராக இருந்தால் எனக்கென்ன, கடியாரம் ஒக்கிட கொடுக்க வந்திருக்கிறாய். சரி செய்தால் காசு தருவாய். அப்புறம் உனக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கப் போவதில்லை என்று அலட்சிய பாவம் காட்டியவள் மரியா.

அடுத்த ஆறு மாதத்தில் அவள் பெத்ரோவின் ஆகிருதியிலும் தன்மையான குரலிலும் நடத்தையிலும் மனதைப் பறிகொடுத்தாள். அவளுடைய அதிகாரமான அழகில் ஈர்க்கப் பட்டார் பெத்ரோ. வயது வித்தியாசம் மூன்று வருடங்கள் இருந்ததை அவர்கள் லட்சியம் செய்யவில்லை.

பெத்ரோவை விட மரியா மூன்று வயது மூத்தவள். மாதாகோவில் மதகுரு கல்யாணத்துக்கு முன் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்து திருமண நிச்சய ஓலை வாசிக்கும்போது இந்த வயது வித்தியாசத்தைச் சொல்லி யாருக்காவது ஆட்சேபணை இருக்கிறதா என்று கேட்க, மரியா எழுந்து நிற்காமல் இருந்தபடியே சொன்னாள் –

அச்சன், இது என் கல்யாணம். பெத்ரோவோட கல்யாணம். இதுலே யாருக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்? இருந்தா எழுந்திருக்கச் சொல்லுங்க. இப்பவே ரெண்டு கன்னத்திலும் அறைய கை துருதுருக்கிறது.

அப்புறம் ஒருத்தன், ஒருத்தி எழுந்திருக்கவில்லையே. பெத்ரோவுக்கு இப்போதும் மரியாவின் அலாதி துணிச்சலைப் பற்றி ஆச்சரியம் அடங்கவில்லை.

மரியா பிள்ளைப்பேற்றுக்காக கள்ளிக்கோட்டை போய் ஆறு மாதமாகிறது. போகும்போதே அவரை நாடி பிடித்த மாதிரி சரியாகக் கணித்து மிரட்டி விட்டுப் போயிருக்கிறாள் –

ஓலா சென்ஹார் பெத்ரோ! நான் இல்லாத நேரத்தில் வேலைக்காரப் பெண்பிள்ளை, குசினிக்காரி, அடுத்த, எதிர் வீட்டுப் பெண் என்று சந்தோஷமாக ஜோடி சேர்த்துக் கொள்ள வேண்டாம். திரும்பி வந்ததும் தெரியாமல் போகாது அதொண்ணும். அப்போது உம் உறுப்பு உம்மிடம் இருக்காது. வெட்டிப் போட்டுவிடுவேன். ஜாக்கிரதை.

ஹொன்னாவர் கடைத்தெருவில் சாரட் போகும்போது தீடீரென்று தன் இடுப்புக்குக் கீழ் அவசரமாகத் தொட்டுக் கொண்டார் பெத்ரோ. அவருக்குப் பின்னால் சாரட்டில் பாதுகாப்பாக நின்று வந்த ஊழியன் குழம்பிப் போய் துரை, கடியாரம் உங்கள் குப்பாயத்தில் இருக்கிறது என்று கூவினான்.

நல்ல வேளை மரியாவின் மிரட்டல் அவனுக்குத் தெரியாது. தெரிந்திருக்காது. ராட்சசி சொல்வதோடு நிற்க மாட்டாள். முழுக்க நனைந்தே போனார்.

வீட்டு வாசலில் கஸாண்ட்ராவும், தோட்டக் காரனும், எடுபிடிகள் இருவரும் காத்திருப்பதைப் பார்த்தபோதுதான் வாசல் கதவைக் காலையில் பூட்டி விட்டு சாரட் ஏறியது நினைவு வந்தது.

சாதாரணமாக தன் தனி அறையைப் பூட்டி வைத்துவிட்டு மற்றபடி வீட்டை கஸாண்ட்ரா அல்லது அவள் இல்லாதபோது மூத்த வேலைக்காரர் ஒருத்தரின் நிர்வாகத்தில் விட்டுத்தான் போவது வழக்கம். இன்றைக்குப் புறப்படும்போது கஸாண்ட்ராவோ, மற்ற வேலைக்காரர்களோ வராமல் போனதாலோ என்னமோ பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

“பூட்டிட்டு போயிட்டீங்களே எஜமான்” என்றான் தோட்டக்காரன் அபத்தமாகச் சிரித்தபடி. “உன்னை உள்ளே வச்சுப் பூட்டாமே போனாரே, சந்தோஷப்படு என்றாள் கஸாண்ட்ரா.

ஜோக் அருவி Pic Jog Falls (near Gerusoppa) Ack Wikimedia Commons

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2021 19:19

June 11, 2021

எழுதி வரும் புது நாவல் ‘மிளகு’வில் இருந்து- சபோலாவும் பச்சைக் கற்பூரமும் வாசனையடிக்கும் அரண்மனைக் காலையுணவு

எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி (சீராக்கப்பட வேண்டிய பிரதி)

குறிப்பு – இங்கே தரப்படும் சிறு நாவல் பகுதிகள் எந்த வரிசையிலும் வருகின்றவை அல்ல.

——————————————————-
“மகாராணி அவர்களின் அறுபதாம் பிறந்த நாள் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. அந்த விருந்து என்ன சுவை இன்னும் நாவில் உண்டு.”

பெத்ரோ நிஜமாகவே லயித்துச் சொன்னார். சென்னா தேவியின் முகம் மலர்ந்தது. கை இரண்டையும் கூப்பி எல்லாம் இறைவன் செயல் என்றாள். பிரதானி மொழிபெயர்க்கவில்லை அதை. அவரும் வணங்கினார்.

பிறந்தநாள் சாப்பாடு விஷயத்தில் நான் ஒரு விஷமம் செய்தேன். கண்கள் மின்ன பெத்ரோ சின்னப் பையன் போல் குறும்பு மிளிரச் சொன்னபோது மகாராணிக்கு வியப்பும் உதட்டில் மாறாத புன்சிரிப்பும். அதென்ன குறும்பு?

அந்த வாழைப்பூக் குடுவையில் வைத்த உணவு. என் வீட்டுப் பணியாளர்களுக்குத் தெரு முனையில் கொடுத்தபோது அதிகமாக ஒரு குடுவை கேட்டு வாங்கிவரச் சொல்லியிருந்தேன். எனக்கு ஒன்றல்ல இரண்டு கிடைத்தது. ராத்திரி இரண்டையும் சற்றே சூடுபடுத்திச் சாப்பிட்டேன். அடடா ஓ அடடா. அதுவும் அற்புதமான சுவைதான் மகாராணி. தினசரி உங்கள் பிறந்தநாள் வரக்கூடாதா என்று ஏக்கமாக இருக்கிறது.

பெத்ரோ சொல்லி முடிப்பதற்குள் சென்னபைரதேவி கலகலவென்று சிரித்தாள். அறுபது வயதிலும் அவள் சிரிப்பு வனப்போடு ஒலித்ததை பெத்ரோ கவனிக்கத் தவறவில்லை.

அடடா நான் சாப்பிடாமல் போய் விட்டேனே என்று அவள் அங்கலாய்த்தபடி நஞ்சுண்டையாவைக் கேட்டாள் – நீங்க உண்டீர்களா?

நானும் தவறவிட்டு விட்டேன் என்று குரலில் ஏமாற்றம் தெரியக் கூறினார் அவர். மறுபடி சிரித்தாள் மகாராணி. “போகிறது அடுத்த பிறந்தநாளுக்கு போர்ச்சுகல் அரசப் பிரதிநிதி நமக்கு அதேபோல் விருந்து அளிப்பார்” என்றார் மகாராணி அடுத்து. அவருடைய அரசரின் பிறந்தநாள் அல்லது அவருடைய பிறந்த நாளாக இருக்கும் அந்த நல்ல நாள்”.

உடனே மறுபடி எழுந்து குனிந்து வணங்கினார் பெத்ரோ. இன்றைக்கு அவர் முக்கியமான வர்த்தக உடன்படிக்கை ஒன்றை அல்லது சிலவற்றை அரசியின் கையொப்பத்தோடு பெறப் போகிறார். அல்லது அதற்கான முதல் செயல்களை நடந்தேற வைக்கப் போகிறார்.

“கள்ளிக்கோட்டையில் என்ன ஆச்சு?” முக பாவத்தை சிரிப்பு இல்லாமல் துடைத்து அரசாங்க முகம் காட்டினாள் மகாராணி திடீரென்று. பெத்ரோ அதை எதிர்பார்க்கவில்லை. கள்ளிக்கோட்டையில் நடந்தது கவலையளிக்கும் செயல்தான். அதற்காகத் தன்னைத் தனியே கூப்பிட்டுக் கண்டிப்பான தொனியில் ஏதும் சொல்வாள் மகாராணி என்று எதிர்பார்த்திருந்த பெத்ரோவுக்கு இந்தத் திடீர் விசாரணை சிரமமான ஒன்றுதான்.

கள்ளிக்கோட்டையில் மலையாளக் குடியானவர்கள் பெயரில் மிளகு பயிரிட்டு விளைச்சலை அங்கே இருக்கும் போர்த்துகீசியர்களுக்கு விற்பதாகக் காட்டி அவர்களுக்கே முழுதும் அளித்துவிட்டு அதற்கான கூலி வாங்கிக் கொள்வது என்று சில வருடமாக நடக்கிறது. போன வாரம் அது சம்பந்தமாக அந்த மிளகு விவசாயத்தில் தொடர்புடைய இரண்டு போர்ச்சுகீசியர்களும் அவர்கள் நியமித்த மலையாளி விவசாயிகளும் விளைச்சலில் பங்கு, அதிக விவசாயக் கட்டணம் கேட்டு, மறுத்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு போர்த்துகீசியர் பெத்ரோவின் மாமனார். இன்னொருவர் அவருடைய தம்பி. இரண்டு பேரும் பல வருடமாக காசு கொடுத்து மிளகு விவசாயம் செய்து விளைச்சல் வாங்கும் வேலையைச் செய்து வருகிறார்கள். போர்த்துகீஸ் நாடாளுமன்றம் அதை வெகுவாகக் கண்டித்திருப்பதோடு, போர்த்துகல் அரசரும் அபராதம் விதித்திருக்கிறார். அதெல்லாம் ஒரு வாரம் முன்னால் நிகழ்ந்தது. அதற்குள் சென்னபைரதேவிக்குத் தெரிந்து விட்டதா?

மன்னிக்கவும் மகாராணி. நானே உங்களை தரிசித்து இது பற்றிப் பேச நினைத்திருந்தேன். இன்று தரிசன வேளையில் முதலாவதாக அதைத்தான் பேச இருந்தேன். அதேபடி…

மகா தவறு. மகா தவறு. நீங்கள் இங்கே வணிகம் செய்ய வந்தவர்கள். சொத்து சுகம் வாங்கி நாடு பிடிக்க வந்தவர்கள் இல்லை. போர்ச்சுகீசியர்கள், ஒலாந்துக்காரர்கள், இங்கிலீஷ்காரர்கள் யாருக்கும் குடியுரிமை கிடையாது என்று உங்களை எங்கள் கடற்கரையில் கப்பல் இறங்கும்போதே காகிதம் கொடுத்துக் கையொப்பம் வாங்கித் தெரிவித்திருக்கிறோம். இப்படி போர்ச்சுகீசியர்கள், அதுவும் ராஜப் பிரதிதியான உங்கள் உறவினர்கள் செய்வது மகா தவறு. நீங்கள் இது தெரிந்ததும் சொல்லி இருக்கலாம்.

சென்னாதேவி நிறுத்தி நிதானமாகப் பேச துபாஷி அதே ஏற்ற இறக்கத்தோடு போர்ச்சுகீஸ் மொழியில் அதை மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். தலை குனிந்து நின்றபடி அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பெத்ரோ

இன்னும் ஒரு மாதத்துக்குள் காகிதம் அனுப்பியதற்கு உங்கள் அரசர் நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவேண்டும். இதில் சம்பந்தப்பட்ட போர்த்துகீசியர்கள் நாடு திரும்ப வைக்கப்பட வேண்டும். உங்கள் மாமனார் உட்பட சகலமானவர்களும்.

பெத்ரோவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய மாமனார் ப்ரான்சிஸ்கோ தன் இருபதாம் வயதில் லிஸ்பனில் இருந்து கள்ளிக்கோட்டை வந்தவர். இப்போது அறுபத்தைந்து வயதில் அவருக்கு கள்ளிக்கோட்டை பழகிய அளவு லிஸ்பன் தெரியாது. அவருக்குக் குடியுரிமை. சட்டென்று நினைவு வந்தது பெத்ரோவுக்கு.

மாண்புமிகு மகாராணி அவர்களே, தெண்டனிட்டுத் தெரிவிக்கிறேன். என் மாமனாருக்கு மலையாள பூமி குடியுரிமை கள்ளிக்கோட்டை சாமுரின் வழங்கியிருக்கிறார் என்பதால் அவரை திரும்ப அனுப்புவது அதுவும் இங்கே ஐம்பது வருடம் வசித்த பிறகு, ஒரு மலையாளம் சரளமாகப் பேசும் ஒரு இந்தியனாகவே வாழும் பொழுது திருப்பி அனுப்பினால் அரசியல் சிக்கல் ஏதும் ஏற்படுமா தெரியவில்லை.

அவர் சொல்லி முடிக்கும் வரை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சென்னபைரதேவி.

ஓ அவருக்கு குடியுரிமை உண்டா? போகட்டும். இந்த முறை நான் இங்கே மன்னிக்கிறேன். உங்கள் அரசர் மன்னிப்பதும் இல்லாமல் போவதும் அவர் இஷ்டம். ஆனால் மறுபடி அவர் பேரில் புகார் வந்தால் எங்கள் நாட்டு தண்டனையாக விதிக்கப்பட்டவை நிறைவேற்றப்படும்.

நிச்சயம் அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். பெத்ரோ சொல்லத் தலையாட்டிக் கேட்ட அரசி முகம் மறுபடி மலர, பெத்ரோ கொண்டு வந்த சிறு பேழையைக் கொடுத்தார். அதன் உள்ளே இருந்த சிறு கடியாரத்தை ஆசையோடு பார்த்தாள் மகாராணி.

இந்தக் கடியாரத்தில் எப்படி நேரம் பார்க்கிறது என்று என் மகன் நேமிநாதனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு இதைப் பயன்படுத்துவேன்.

ராணியம்மா சொல்ல, பெத்ரோ ஆச்சரியத்தை முகத்தில் காட்டாமல் இருந்தார். இந்தச் சிறிய காரியத்தைக் கூட மகனிடம் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அளவு அவன் மேல் சார்ந்திருக்கிறாள். இந்த முக்கியமான, போர்த்துகல் ராஜ பிரதிநிதியிடம் புகார் சொல்லும் நேரத்தில் அவன் இல்லாமல் எப்படி இந்தச் சந்திப்பு நடக்கிறது என்ற ஆச்சரியம்தான்.

மகாராணியார் அனுமதி கொடுத்தால் ஒரே நிமிடத்தில் இந்த கடியாரத்தில் எப்படி நேரம் பார்ப்பது என்று தெரிவிக்கிறேன். உங்கள் மற்றும் இளவரசர் நேரம் இதற்காகச் செலவிடாமல் மற்றப் பணிகளுக்கு செலவழிக்கலாம்.

பெத்ரோ சொல்ல, அதுவும் சரிதான், எங்கே சொல்லுங்கள் என்றபடி அருகே நின்ற ஊழியர்களைப் பார்க்க, அவர்கள் குறிப்புணர்ந்து அரசியாரின் ஆசனத்தைச் சற்றே பெத்ரோ பக்கம் நகர்த்தினார்கள்.

சின்ன முள், பெரிய முள், வினாடி முள், மணி நேரத்துக்கான அரேபிய எண்கள், மணி பார்ப்பது என்ற இரண்டே நிமிடத்தில் கற்றுக்கொண்டாள் அரசி. தன் சங்கிலிக் கடியாரத்தை முள் முன்னே பின்னே போக வைத்து நேரம் என்ன என்று சொல்ல இன்னும் இரண்டு நிமிடம் பயிற்சியும் ஆனது.

மகாராணியிடம் கிராம்பும் ஏலமும் பச்சைக் கற்பூரமும் கலந்த வாசனையும் அதை மீறி சற்றே வெங்காய வாசனையும் அடித்தது கவனிக்க பெத்ரோவுக்கு ஆசுவாசமாக இருந்தது. மிளகை கொடுத்துவிட்டு சபோலா, என்றால் வெங்காயம், மற்றும் மிளகாயை இங்கே கொண்டு வர எல்லோரும் ஆர்வம் காட்டுகிறதாக அவருக்குத் தோன்றுவது சரிதான் என்று இப்போது புலப்பட்டது. மிர்ஜான் கோட்டைக்குள்ளும் அரச உணவில் கலந்து வெங்காயம் பயன்படுத்தப் படுகிறது. மிளகாயும் ஊரில் அங்கே இங்கே பயனாகிறது. வீடுகளில் மிளகாய் கடித்து சோறு உண்கிறவர்களின் சந்தோஷமான உரைப்பு அனுபவிப்பை அவர் சாரட்டில் சவாரி செய்யும்போது கவனித்திருக்கிறார். சோறோடு கூட ஒரு சிட்டிகை உப்பும் ரெண்டு பச்சை மிளகாயும் இருந்தால் சோறு கடகடன்னு தொண்டைக்குள்ளே இறங்காதா என்று இந்தியக் கிராமங்களில் எளிய விவசாயிகள் வரை மிளகாயைத் தத்தெடுத்து இருக்கிறார்கள் என்பது பெத்ரோவுக்குச் சந்தோஷமளிக்கும் தகவல். அவர்கள் யாரும் மிளகைப் பயன்படுத்துகிறவர்கள் இல்லை.

”காலை உணவு உண்டீர்களா, பெத்ரோ அவர்களே” ராணி கேட்டாள். உண்டேனம்மா. பணிவாகச் சொன்னார் பெத்ரோ.

Fort Mirjon Pic Ack wikimedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2021 19:17

June 6, 2021

புதிது – எழுதிவரும் நாவல் ‘மிளகு’ – சிறு பகுதி- ஆசாரமல்லாத காகிதம்

Excerpts from the novel MILAGU I am currently writing – தற்போது எழுதிவரும் நாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறு பகுதி (draft awaiting editing)
————————————————————————————————–

திருவாளர் பெத்ரோவின் இரட்டைக் குதிரை வண்டி மிர்ஜான் துறைமுக நகர் கடந்து, மிர்ஜான் கோட்டைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது காலை எட்டு மணி என்று அதிர்வேட்டு போட்ட சத்தம் காதில் விழ தன் கால்சராய் கடியாரத்தை எடுத்து மணி பார்த்தார். எட்டு அடிக்க இன்னும் பத்து நிமிடம் இருந்தது.

என்றால் என்ன? கோட்டையில் அதிர்வேட்டு போட்டு முரசறைந்து தெரியப்படுத்தும் சத்தம் உத்தியோகபூர்வமானது. மற்றவர்கள் யாராக இருந்தாலும் அதன்படி தான் செயல்பட வேண்டும். பெத்ரோ இன்று சென்னபைரதேவி மகாராணியை அலுவல் நிமித்தம் சந்திக்க வேண்டியது காலை எட்டு மணிக்கு. அது ஏழு மணி ஐம்பது நிமிடம் என்று சரியான நேரம் இருந்தாலும் தாமதமாக வந்திருக்கிறார் பெத்ரோ என்பது சூழ்நிலை நிஜம்.

அவசரமாக சாரட்டை விட்டு இறங்கி பட்டுத் துணியால் அழகாகப் பொதிந்து கட்டிய பெட்டியை ஜாக்கிரதையாகக் கையில் சுமந்தபடி அவர் ஓட்டமும் நடையுமாக முன் மண்டபத்துக்குள் நுழைந்தார். இன்றைக்கு சந்திக்க வேண்டிய மற்றவர்கள் அங்கே திரளாகக் காத்திருப்பார்கள். கூட்டத்தில் இருப்பவர்களின் அந்தஸ்து விவரம் கருதி யார் முன்னால் போக, பின்னால் யார் அடுத்துப் போகவேண்டும் என்பதெல்லாம் தீர்மானித்து கோட்டை உத்தியோகஸ்தர் உள்ளே அழைத்துப் போவார். எப்படியும் அரை மணி நேரத்தில் இருந்து பகல் ஒரு மணி வரை காத்திருக்க வேண்டி வரும். சீக்கிரம் மகாராணி திருமுன்பு காட்சி கிடைத்து சகல மரியாதையோடும் உரையாடி பதினொரு மணிக்கு வீடு திரும்பினால் கஸாண்ட்ரா அப்புறம் அவள் சமைத்த கோழி மாமிசம். இரண்டுக்கும் நடுவிலே குளிக்க வேண்டியிருந்தால் அதற்கு ஒரு அரைமணி நேரம். எல்லா சுகமும் விதித்தபடி கிட்டி பிற்பகல் சுகமாக உறக்கம். பெத்ரோவின் நாற்பது வயது உடம்பு நேரம் காலம் இடம் எதுவும் லட்சியம் செய்யாமல் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டது.

இதென்ன, முன் மண்டபத்தில் யாரும் காத்திருக்கக் காணோமே.

பெத்ரோவுக்கு உடனடியாக உறைத்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஆச்சே. மிக முக்கியமான சந்திப்புகள் மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அடுத்த தினங்களுக்கு ஒத்திப் போட்டுவிடுவாள் சென்னபைரதேவி மகாராணி என்று. இந்தச் சந்திப்பு நீண்டு போகும் முக்கியமான நேர்காணலாக இருக்கக் கூடும் என்று நினைக்கும்போதே தான் இதற்காக தயாராக வந்திருக்கிறோமா என்று பெத்ரோவுக்குத் தோன்றியது. போர்ச்சுகல் அரசரின் விசேஷ பிரதிநிதி ஆன பெரேராவை வாவா என்று தாம்பூலம் வைத்து இந்தியர்கள் அழைக்கிறார்கள் என்றால் ஏதோ பெரிய விஷயம் தான். கோழிக்கறியும் கஸாண்ட்ராவும் காத்திருக்கட்டும். நல்லபடி இந்த சந்திப்பு முடிந்து அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.

துபாஷி நஞ்சுண்டய்யா சந்தனம் மணக்க வந்து முன் மண்டபத்தைக் கடந்து போகிற போக்கில் பெத்ரோவைப் பார்த்துப் புன்சிரித்துப் போனார். அவர் புன்சிரிப்போடு இருந்தால் விஷயம் சந்தோஷகரமானதாகத்தான் இருக்கக் கூடும். துபாஷிக்கு முன்கூட்டியே அடிப்படை நிலை ஆவணங்களும், நடவடிக்கைக் குறிப்புகளும் பகிரப்படும் என்பதை கேட்டறிந்திருக்கிறார் பெத்ரோ. வணிகம், முக்கியமாக மிளகு, ஏல வணிகம் பற்றிய பேச்சு வார்த்தைகளின்போது இது இன்னும் அதிகம்.

உள்ளே இருந்து கோட்டை மூத்த பிரதானி வந்து பெத்ரோ முன் குனிந்து வணங்கி ஷேமலாபம் கேட்டார். அவர் பெத்ரோவின் மாளிகை இருக்கும் தெருவில் தான் வசிக்கிறார். ஷேமலாபம் தினசரி பார்க்கும்போது பரிமாறிக் கொள்வது அவர்களுக்குள் நடப்பு என்றாலும் மரியாதை நிமித்தம் கோட்டை உத்தியோகஸ்தராக இன்னொரு தடவை கேட்டுச் சொல்லியானது.

அரண்மனை கடியாரத்தை அரசியின் பிறந்த நாளுக்காக நல்ல நேரம் காட்ட ஜோசியர் யோசனைப்படி பத்து நிமிஷங்கள் முன்னாலாக்கித் திருப்பி வைத்தோம். பஞ்சாங்கப்படி கணிக்கப்படும் நேரமும், ஐரோப்பிய நேரமும் ஒரே படி இருக்க ஒரு முயற்சியாக சூர்யோதம் இரண்டு நாளாக ஐரோப்பிய நேரப்படி ஆறு மணி முப்பது நிமிடம். கவனித்திருப்பீர்களே? உங்கள் கால்சராய் கடியாரத்தைத் திருத்தி வைத்துக் கொண்டீர்களோ?

இல்லை என்றார் பெத்ரோ. போர்ச்சுகல் அரசருக்குச் சொல்லாமல் காலம், இடம் எதுவும் மாற்றமாட்டார் அவர். அதுவும் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டி இங்கே பணி நிமித்தம் வந்திருக்கும்போது. எனினும் நஞ்சுண்டையா துபாஷி பஞ்சாங்கம், ஜோசியம் இப்படியான விஷயங்களிலும் நல்ல புலமை மிக்கவர். அவர் சொல்வது ராணியம்மா சொல்வது போன்றதாகும்.

அனுமதி கேட்டு எங்கள் பேரரசருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன் நஞ்சுண்டய்யா அவர்களே. வந்ததும் என் கடியாரத்தில் நேரத்தை மாற்றிவிடுவேன். பெத்ரோ நம்பிக்கை துளிர்க்க வரவழைத்துக்கொண்ட உற்சாகத்தோடு சொன்னார்.

ராணியம்மா சற்றே சுகவீனம் அடைந்திருக்கிறார். அரண்மனை வைத்தியர் தகுந்த மருந்து குளிகைள் உண்ணவும் பருகவும் தந்து குணமடையச் செய்தபடி இருக்கிறார். இன்று முழுவதும் ஓய்வு தேவை என்றான் வைத்தியன். எனினும் உங்களுக்கு சந்திக்க ஏற்கனவே ஒப்புதல் தந்துவிட்டதால் இந்த சந்திப்பை சுருக்கமானதாக நிகழ்த்தி தகவல் பெற, வழங்க மகாராணியார் விருப்பம் தெரிவிக்கிறார்.

அப்படியே ஆகட்டும். என் நன்றி மகாராணி அவர்களுக்கு.

வாருங்கள், உள்ளே போகலாம் என்று அழைத்துப் போனார் பிரதானி நஞ்சுண்டையா. சந்தனத்திலேயே சதா மூழ்கி இருப்பாரோ என்று பெத்ரோவின் நாசி கேட்டது. இந்தியர்களுக்கு சந்தனத்தில் அப்படி என்ன பெருவிருப்பம் என்று அவருக்குப் புரியவில்லை தான்.

அழகான ஜரிகை, பல நிறப் பட்டுத்துணி, தந்தப் பலகை கொண்டு இழைத்து, தைத்து, பளபளப்பாக்கி பன்னீரும் சந்தனம் ஊறிய நன்னீரும் கொண்டு அவ்வப்போது சுத்தமாகத் துடைத்து வைத்திருந்த அரச ஆசனத்தில் சென்னா தேவி அமர்ந்திருந்தார். போர்த்துகீஸ் தேசப் பிரதானி முழங்காலில் இருந்து தேவாலயத்தில் வணங்குவது போல் வணங்கினார். அது இந்திய வழக்கம் இல்லை. எனினும் அவர் வணங்கியது மகாராணிக்குப் பிடித்திருந்ததாக சென்னபைரதேவியின் முகக் குறிப்பு சொன்னது. பெத்ரோ வணங்கி எழுவதற்குள் மகாராணி தன் வலது கையைபெத்ரோவின் முகத்தை நோக்கி நீட்டினாள். இது இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத அசல் ஐரோப்பிய மரியாதை செலுத்துதலின் இறுதிக் கட்டம் என்பதை சென்னபைரதேவி அறிந்திருந்ததோடு இன்றைக்கு முதல் முறையாகப் பரீட்சித்துப் பார்க்கத் திருவுள்ளம் கொண்டதாகத் தெரிய பெத்ரோவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

அரசியின் கையை மெதுவாகப் பற்றி மரியாதையோடு முத்தமிட்டு தலை வணங்கவே, அவள் கையைப் பின்னால் எடுத்துக் கொள்ளும் முன் ஒரு பெண் ஊழியத்தி வெண்மையான பட்டுத் துண்டும் வெளிர் பருத்தித் துணிச்சவுக்கமும் கொண்டு கையை சுத்தப்படுத்தியது பெத்ரோவுக்கு சற்றே சினத்தை ஏற்படுத்தியது. அவருடைய வாயும் முத்தமும் இங்கே இருக்கும் ஒருத்தரை விடாமல் அதிக சுத்தமானது என்பதில் நம்பிக்கை உண்டு அவருக்கு. மரியாதை செலுத்தும் ஐரோப்பிய சடங்கை இந்திய முறையில் தீட்டு பார்த்து சுத்தப்படுத்தும் அந்தத் துணியால் துடைப்பது இன்னும் சில காலத்தில் இந்தப் பிரதேசம் எங்கும் பரவலாக வந்து சேரலாம்.

மகாராணியின் கரங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று வாதம் புரிய பத்து காரணங்கள் இருக்கலாம். ஆனால் சுத்தப்படுத்திக் கொண்டே ஆகவேண்டும் என்று மகாராணி நிபந்தனை வைக்க நிச்சயம் ஒரே ஒரு காரணம் போதும் – பெத்ரோவும் மற்ற எல்லா ஐரோப்பியர்கள் போல் காலைக்கடன் முடித்து இலை, தழை, வைக்கோல், இப்போது எங்கும் பரவி வரும் குண்டி துடைக்கும் காகிதம் இதிலெல்லாம் இஷ்டம்போல துடைத்துப் போட்டுவிட்டு வருகிறவர். நாள் கணக்காக தண்ணீர் காணாத பிருஷ்டங்கள் அவருடையவையும். மகாராணி கொலு இருக்கும்போது திருமுன்னர் இப்படியான அசுத்தங்களோடு ஒருத்தரை எவ்வளவு பெரிய மனுஷராக இருந்தாலும் அனுமதிப்பது ஆசாரஹீனம் ஆகும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2021 19:22

June 5, 2021

1596 ஹொன்னாவரில் இருந்து மிர்ஜான் கோட்டைக்கு – மிளகு நாவலில் இருந்து

நான் எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து

மாஜி அரசப் பிரதிநிதி ஒரு வினாடி ஏதும் பேசாமல் நின்றார்.

“சென்னபைரதேவி என்னை மதிக்காமல் நடந்து கொண்டது பெத்ரோவே, உமக்குத் தெரியாதா அல்லது மறந்து போனீரோ?” தெருவில் அடுத்து மூன்று குதிரை பூட்டிய ட்ரோய்க்கா ஒன்று பாதையை விட்டு விலகிச் சற்றே ஓரமாக வர, அதன் மேல் மோதாமல் ஒதுங்கி நின்றபடி கேட்டார் மாஜி கவர்னர்.

“பிரபு, மன்னிக்க வேண்டும். பல ஆயிரம் இங்கிலீஷ் பவுண்ட் மதிப்புக்கு மிளகும், ஏலமும், லவங்கமும், ஜாதிக்காயும், ஏன் பாக்கு கூட பெருமதிப்புக்குக் கைமாறப் போகிறது. நாம் பழைய அவமரியாதையை இன்னும் பெரிதாக எடுத்துக் கொண்டு இதெல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கப் போகிறோமா?”

பெத்ரோ பொறுமையாகச் சொன்னார். காலைச் சூரியன் அவருடைய முகத்தில் படிந்திருந்த சுருக்கங்களைக் கோடு பரத்திக் காட்டியது. நெற்றியில் துளிர்த்த வியர்வையை கோட் பாக்கெட்டில் இருந்து எடுத்த லேஞ்சியால் துடைத்தபடி பெத்ரோ அவசரமாகப் பேசினார். இதை முடித்து அடுத்த வேலைக்குப் போக வேண்டிய அவசரம் அது.

ராஜதரிசனம். கௌண்டின்ஹோவுக்கு அது வேண்டாம் என்றால் போகட்டும். பெத்ரோவுக்கு வேண்டி இருக்கிறது. இந்தப் பருவத்தில் விலை மலிவாக எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு கொள்முதல் செய்து லிஸ்பனில் போய்ச் சேர்ந்து அரசரிடம் ஒப்படைத்து நல்ல பெயர் வாங்க வேண்டும் அவர்.

அடுத்த கவர்னராக அவரையே அரசர் அறிவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் மிளகில் இருக்கிறது. ஜாதிக்காயும் பாக்கும் வேண்டுமென்று போர்த்துகீசு அரசியார் ஆர்வம் மிகுந்து கேட்டிருந்தார். பிரதேசம் முழுமைக்குமான கவர்னர் ஆக வாசனைத் திரவியம் போதும்.

பெத்ரோவுக்கு அந்த அளவில் ஏமாற்றமில்லாமல் நிறையக் கிடைக்கும் பூமி அது. மாஜி கவர்னருக்கும்தான்.

”நான் மரியாதையோடு பரிசளித்த பெல்ஜியம் கண்ணாடியை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தவள் இல்லையா உங்கள் சிநேகிதி மிளகு அரசி?”

மாஜி கவர்னர் சாக்கடை ஓரம் நின்றபடி கேட்டார். உங்கள் என்ன உங்கள்? சாக்கடையில் தூக்கிப் போட்டு மிதிக்கத் தோன்றியது பெத்ரோவுக்கு. வேண்டாம். உடுப்பு அழுக்காகிப் போகும். பாதரட்சையில் சேறு படியும். போய்த் தொலை சகதி பன்றியே. போ.

“பிரபு மன்னிக்க வேண்டும். நீங்கள் இந்தப் பிரதேசத்துக்கு போர்த்துகீசிய அரசின் சற்று முந்திய பிரதிநிதி. நான் போர்த்துகீசு அரசரின் தனிப் பிரதிநிதி. இரண்டு பேரும் ஒத்துழைத்தால் இங்கே அடுத்த பத்தாண்டுகளுக்கு போர்த்துகல் அரசின் செல்வாக்கை அசைக்க முடியாது. அற்பமான பெல்ஜியம் கண்ணாடி குறுக்கிட்டு நொறுக்காத ஒத்துழைப்பாக இருக்கட்டும் அது”.

வேலியில் போகிற ஓணான் இந்த கௌண்டின்ஹோ என்று பெத்ரோவுக்குத் தோன்றியது. எனவே துரையவர்களே பின்பாரமாக வந்தது.

பெத்ரோ பேசியபடி இருக்க கவுண்டிஹோ துரையின் வண்டி நகர்ந்திருந்தது.

“கால விரயம், வார்த்தை விரயம். இவன் சொல்கிறானே என்று இவனுக்குக் கொட்டை தாங்கிக் கொண்டிருந்தால், வருடக் கடைசியில் லிஸ்பன் போனதும் அரசருக்கு என்ன பதில் சொல்வது? புரிந்து கொள்ளாத மனுஷர்”.

இன்றைக்கு இவர் முகத்தில் விழித்திருக்க வேண்டுமா?

முக்கியமான வேலை என்று கிளம்பும்போது குறுக்கே வந்து நிற்கிறான் கழுத்தறுப்பான். அந்தக் கண்ணாடியை தனியறைச் சுவரில் மாட்டி மகாராணி உபயோகிக்கிறாள் என்று வளர்ப்பு மகன் நேமிநாதன் சொன்னானே. இவனிடம் அதைச் சொல்லியிருக்கலாமோ. போகட்டும், அதை வைத்து கவுண்டின்ஹோ என்ன பண்ண? போய்ப் பார்க்கவா போகிறான் அந்தத் தனியறைக்கு?

கஸாண்ட்ரா கோழி வாங்கி வந்து சமைத்து வைக்கட்டும். நல்ல பிராந்தியும் வீட்டில் உண்டு. அரசியை சந்தித்து வந்து பிராந்தியும் கோழியும் கஸாண்ட்ராவுமாகப் பொழுது போகட்டும்.

சாரட் ஹொன்னாவர் நகரின் வெளியே வந்து பெருவழியில் சீரான வேகத்தோடு நகர்ந்து கொண்டிருந்தது. சாரட் ஓட்டியின் பார்வையில் இருந்து அகல நடுவே இருக்கும் துணித் திரையை இழுத்து மூடினார் பெத்ரோ. இன்னும் அரை மணி நேரம் வெளிச்சம் இல்லாத இருட்டில் வண்டி தாலாட்டு பாட அவர் நித்திரை போவார். விருத்திகெட்ட மாஜி கவர்னர் எதிர்ப்பட்டிருக்காமல் இருந்திருந்தால் கஸாண்ட்ராவும் பக்கத்திலேயே இருந்திருக்கக் கூடும். சாரட்டில் அவளோடு சரசம் செய்வது எவ்வளவு அற்புதமாக இருக்கும். கள்ளிக்கோட்டையில் இருந்து பெத்ரோவின் மனைவி கண்ணை உருட்டி மிரட்ட அந்த எண்ணத்தைக் கைவிட்டார் தற்காலிகமாக. அதையும் இதையும் யோசித்தபடி உறங்கிப் போனார் பெத்ரோ துரை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2021 19:26

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.