இரா. முருகன்'s Blog, page 80
May 13, 2021
ராமோஜியம் நாவலில் உணவு
ராமோஜியம் நாவல் உணவைக் கொண்டாடுவது. நாவலில் இடம் பெற்ற உணவு வகைகளில் சில பட்டியலாக்கப்பட்டு இங்கே –
1) வெண்பொங்கல்
2) மல்லிப்பூ போல சாதம், கிள்ளிப்போட்ட இஞ்சியும், பறித்துப் போட்ட கொத்தமல்லியும் அரிந்து போட்ட பச்சை மிளகாயும் துருவிப் போட்ட தேங்காயுமாக துவையல், முருங்கைக்காய் சாம்பார், தக்காளி ரசம், பால் பாயசம், கெட்டித் தயிர், பப்படம், அவியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ், நல்லெண்ணெயில் பொரித்த கிடாரங்காய் ஊறுகாய்
3)பால் பாயசம்
4) குளுகுளுவென்று மஞ்சள் பூத்த சிவப்பு நிறத்தில், நெய் மினுமினுத்து, வறுத்துக் கலந்த முந்திரிப் பருப்பும், உலர்ந்த திராட்சையும் கண் முழித்துப் பார்க்க, அளவாக சர்க்கரை சேர்த்து அற்புதமாக கிண்டிச் சுடச்சுட பரிமாறிய ரவாகேசரி . தொடர்ந்து பஜ்ஜி தினுசுகளோடு அவல் உப்புமா.
5)புனர்பாகமா நிறைய நீர் விட்டு கொதிக்க விட்டு சாதம் . மோர் கலந்து கரைச்சு. தொட்டுக்கொள்ள நார்த்தங்காயும், காய்ந்த எலுமிச்சைத் துண்டங்களும்
6)பாம்பே ஹல்வா ஹவுஸ் ஜிலேபி
7)வேப்பம்பூ தூவிய இனிப்பு மாங்காய்ப் பச்சடி
8) உசிலம்பட்டி பெரீஸ் பிஸ்கட்
9)டி எஸ் ஆர் உடனே இட்லி, உடனே உப்புமா
10)டிஎஸ் ஆர் வற்றல் குழம்பு கரைசல், புளியோதரை கரைசல் பிசைந்து சாதம்
11)பாக்கி ரொட்டி உதிர்த்துப் போட்டு பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய் கலந்து கடாயில் உப்புமா
12) கோதுமைக் கத்தரிக்காய் – வாங்கிபாத் செய்ய அரிசி இல்லாததால் கோதுமை வேகவைத்து கத்தரிக்காய் வதக்கிப் போட்டு ஒரு யுத்த கால உணவு
13)பன் பட்டர் ஜாம், மசாலா போட்டு சாயா மலாயோடு
14) சாதமும், கொட்டு ரசமும், கோதுமை வாங்கிபாத்தும், வாட்டிய மசாலா அப்பளமும், வீட்டுத் தோட்டத்தில் பறித்த வெண்டைக்காய் வதக்கலும்
15) மொறுமொறுவென்று எண்ணெய் மின்னும் அடையும் பீர்க்கங்காய்த் துவையலும் மதியத்துக்குச் செய்ததில் மீந்த முருங்கைக்காய் சாம்பாரும்
16) கும்மாயம்
17)ஜவ்வரிசி வடை (சாபுதானா வடை)
18) எலுமிச்சம்பழ சேவை, தேங்காய் சேவை, மிளகு சேவை, புளி சேவை, தயிர் சேவை என்று அட்டகாசமாக ராச்சாப்பாடு. தேங்காய்ப் பாலும் துண்டு மாங்காய் ஊறுகாயும், தக்காளி ரச வண்டலும் கூட்டணி
19)பெசரெட் தோசை
20)உப்புமா குழக்கட்டையும் புளிச் சட்டினியும்
21)தேங்காய்ப் பத்தையும் வெல்லமும்
22)சேமியா உப்புமாவும், ரவாகேசரியும்
23)மல்லிகைப்பூ இட்லியும் சின்ன வெங்காய சாம்பாரும்
24)எலுமிச்சம்பழ சாதமும், புளிசாதமும், தயிர்சாதமும், ஜவ்வரிசி வடகமும்
25) மக்மல் பூரியும், குலோப்ஜாமுனும், உருளைக்கிழங்கு மசாலா சற்றே எலுமிச்சைச் சாறோடு கலந்து உள்ளே வைத்து, மொறுமொறுவென்று வார்த்த ரவா மசாலா தோசையும், பில்டர் காபியும்
26) சப்பாத்தியும் வெஜிடபிள் குருமாவும்
27)புடலங்காய்க் துவட்டல், தேங்காய்த் துவையல், கோதுமைச் சாதம் கொஞ்சம், அரிசிச் சாதம் கொஞ்சம், வீட்டுத் தோட்டக் காய்கறி அரிந்து போட்ட, அரைத்து விட்ட சாம்பார், தக்காளி ரசம், அரிசி அப்பளம், மாங்காய்த் தொக்கு, ஒரு குத்து கிடாரங்காய் ஊறுகாயும்,
28)இட்லி, மிளகாய்ப்பொடி எண்ணெய் முழுக்காட்டி, வேர்க்கடலை சட்னி,
29)தோசை, மிளகாய்ப் பொடி
30) மணக்க மணக்க தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சமைத்து பலா மூஸ் கறியும், அவியலும்
31) குழிப் பணியாரமும், இஞ்சித் துவையலும், புளிக்குழம்பும்
32)மதறாஸ் – தில்லி ரயில் பிரயாணம் – வேளாவேளைக்கு சாப்பாட்டு அட்டவணை
இன்று ராத்திரி எட்டு மணி – ஆளுக்கு நாலு மிளகாய்ப்பொடி இட்லி, தயிர் சாதம், கொத்தமல்லி தொக்கு, மைசூர்பாகு, பிளாஸ்க்கில் பசும்பால். பிளாஸ்கை அலம்பி வைக்க மறக்க வேண்டாம்
நாளைக் காலை ஏழரை மணி – ஆளுக்கு நாலு இட்லி, பூந்தி லட்டு, ரயில் காபி
நாளைப் பகல் ஒரு மணி– புளியஞ்சாதம், ஜவ்வரிசி வடாம், சப்பாத்தி, உருளைக் கிழங்கு பொடித்தது, மாவடு, தயிர்சாதம், குலோப் ஜாமுன்
நாளை சாயந்திரம் – பாதுஷா, மிக்சர், தேன்குழல், ரயில் காபி
நாளை ராத்திரி – பூரி, உருளை காரக்கறி, வாழைக்காய் வறுவல், தயிர் சாதம், எலுமிச்சை ஊறுகாய், ரயில் பால்
நாளை மறுநாள் காலை – அதிரசம், பிரட் ஜாம், ஜாங்கிரி, மிக்சர், ரயில் காபி
நாளை மறுநாள் பகல் – சப்பாத்தி, பூரி மசாலா, பிரட், ஜாம், ஜாங்கிரி
நாளை மறுநாள் சாயந்திரம் (ரயிலில் இருந்தால்) – மீந்த இனிப்பு, மீந்த காரம், ரயில் காபி. ஊர் போய்ச் சேர்ந்திருந்தால் பிளாட்பாரத்தில் யாசகர்களிடம் மிஞ்சியதைக் கொடுக்க வேண்டியது.
அப்புறம், நடுவாந்திர சைஸ் வெங்கல கூஜா நிறைய, பிரிட்டீஷ் இந்திய சர்க்கார் சார்பில் மெட்றாஸ் பட்டணம் முழுவதற்கும் நானும் என் இலாகாவும் வினியோகிக்கும் குளிர்ந்த குடிநீர்
33)ரயில்வே கேண்டின் இட்லி, சட்னி, பருப்பு வடை, உளுந்து வடை
34)பால் விட்டுப் பிசைந்து சத்துமாவு
35)ரயில் ப்ளாட்பாரத்தில் வடா பாவ் என்று உருளைக் கிழங்குக் கறி அடைத்த பன்
36)ரயில்வே சாப்பாடு – எவர்சில்வர் தட்டுகளில் சாதம், பருப்புக்கும் சாம்பாருக்கும் இடைப்பட்ட ஒன்று, பூரி, ஊறுகாய், தயிர், மோர் மிளகாய்; தட்டிலேயே குழித்து சாம்பாரும், கூட்டும் வைக்க இடம், ஓரமாக சப்பாத்தி, ரொட்டி மடித்து வைத்து
37)ரயில் ப்ளாட்பாரம் ஸ்டால் சீஸ் சாண்ட்விச், காப்பி
38) ஆலு பரட்டா-கூட தயிரும், கத்தரிக்காய் வதக்கல் கறியும், பம்பாய் பேடேகர் ஊறுகாயும்;
விஜிடபிள் புலாவ், தயிர் சாதம், பாஸந்தி
39) நிம்பு பிழிஞ்சு, கருகப்பிலை, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு எல்லாம் போட்டு ரவா உப்புமா. தொட்டுக்க சர்க்கரையும் மாங்கா ஊறுகாயும், மத்தியான சாம்பாரும்
40)ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, டிஆர் எஸ் குல்கந்து
41) மெத்தென்று ஊத்தப்பம். கூட புதினாத் துவையலும், மத்தியான புளிக்குழம்பும் தேங்காய் மிளகாய்ப்பொடியும் மணத்தக்காளி ஊறுகாயுமாக . மிளகாயைப் பொடியாக அரிந்து போட்டு, எலுமிச்சை பிழிந்து, தூள் பெருங்காயம் டப்பாவைக் காட்டி எடுத்து, கொத்தமல்லித் தழை தூவிய கெட்டி மோர்
42) தட்டு இட்லி, புதினா சட்னியும், ஒரு சிட்டிகை அஸ்கா தூவிய கார இட்லிப்பொடியும், காபியும்
43)சீரகச் சம்பா வடித்து சின்ன வெங்காயம் வேகவைத்துக் கலந்த, அரைத்து விட்ட சாம்பார், வாழைக்காய் காரக் கறி, புடலங்காய் அரையே அரைக்கால் காரக் கூட்டு, எலுமிச்சை ரசம், ஜவ்வரிசி வடகம், புதுசாக எண்ணெய் காய்ச்சி ஊற்றிய, நாள்பட ஊறிய கிடாரங்காய் ஊறுகாய், கெட்டித் தயிர்
44) ஜாங்கிரி, போளி, உளுந்து வடையும் சட்னியும், டீ
45)பதிர்பேணி, லட்டு, பால்
46)வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருந்து துவாதசிக் காலையில் – முருங்கைக்கீரை சமைத்து சுடச்சுட வெண்டைக்காய் சாம்பாரோடும், புதுப்புளியும் பச்சை மிளகாயும் இத்தனூண்டு அதிகமாக, வெழுமூணாக ஓட்டி அரைத்த தேங்காய்த் துவையலோடும் அரிசி அப்பளத்தோடும், தேங்காய் சேர்க்காமல் வெறுமனே வேகவைத்த புடலங்காய்க் கறியோடும், எலுமிச்சை ரசத்தோடும் சீரகச் சம்பா பழைய அரிசிச் சாதம் வடித்து
47)ஒரு ஈடு சுடச்சுட உதிர்த்து எடுத்து, கொஞ்சம் போல், லவலேசம், ஒன்றோடு ஒன்று ஒட்ட, கை நீட்டி, சூடு பொறுக்காமல் சின்ன ஊசியாகக் குத்துவதை அனுபவித்தபடி, விரல் முனையால் தொட்டு, மெல்லத் தள்ளப் பிரிந்து, சற்றே நல்லெண்ணெய் வாசம் பூசி, ஆவி பறக்கப் பசுமையான வாழை இலையில் கிடக்கும் இட்லிகளோடு இன்னொரு ஞாயிறு. இன்னொரு காலை விருந்து
48)ஆகாரம் நிறைவடையும் நேரத்தில், நேற்றுப் பால் திரிந்து போனதைக் கொட்டாமல் எடுத்து வைத்து, சர்க்கரையும் நெய்யும் ஏலக்காய், முந்திரிப் பருப்பும் கலந்து திவ்யமாக கிண்டி வைத்த பால்கோவா ரெண்டு மேஜைக்கரண்டி இலையின் ஓரத்தில்
49) நெய்யப்பமும் உண்ணியப்பமும்
50)இட்டலி, கடப்பா
51)வாழைக்காய்ப் பொடி
52)புட்டு, கடலை
53)சுக்கும், மிளகும், வெல்லமும், ஏலப் பொடியும் சரியான விகிதத்தில் கலந்த பானகம்
54)போளி ஸ்டால் கார, இனிப்பு போளி
55)கமகமவென்று மணமும் காரமுமாக கோலா உருண்டை, தம் பிரியாணி, கடல்பாசி களி
56) காலைச் சாப்பாடாக பாதாம் பருப்பு, அரிசி ஏடு என்று போட்டுக் காய்ச்சிய பாயசம், தீயில் வதக்கிய குப்பூஸ் என்ற அராபிய ரொட்டி, தேனும் சர்க்கரையும் கலந்து வைத்த மாம்பழக்கூழ், கோதுமையும் ஜீனியும் பசுநெய்யும் இட்டுக் கிண்டிய அரேபியா ஹல்வா
57)அரிசிச் சாதமும், மிளகு ரசமும், அவித்த கோழி முட்டையும்
58)குழைய வடித்த அன்னமும், எளிதாக சீரணமாகும் உணவு – உலர் திராட்சையும் பாதாம் பருப்புத் தூவலும் தேனும் கலந்து பிடித்த சிறு உருண்டைகளும், மராட்டி சாம்பார் என்று உலகை எல்லாம் மயக்கும் காரமான பருப்புச் சாறும்
59)கோழி அல்வா – கோழிக்கோடு பட்டணத்திலிருந்து வருவது. கோதுமை அல்வா கிண்டும்போது கோழிச்சாறு கலந்து செய்யப்படும் இனிப்பு
60)அரிசி வேகவைத்து வெல்லம் கலந்துச் செய்த மோதகங்கள்
61)நைவேத்தியமான மிளகுப் பொங்கலும் தோசையும்
[image error]
May 6, 2021
புதிய குறுநாவல் : பசுவன் – அத்தியாயம் 5 இரா.முருகன்
5)
ஞாயிற்றுக் கிழமையும் பவுர்ணமியும் சேர்ந்து வந்தது விசேஷம். சீத்துவின் அம்மா அப்படித்தான் சொன்னாள். அவனுடைய ரெண்டு அக்காக்களையும் காலை ஐந்து மணிக்கே எழுப்பி விட்டாள்.
“பெண் குழந்தைகள் எண்ணெய் குளி நடத்தி பசுவன் கரைக்க கோலாட்டம் போட, பட்டாமணியம் வீட்டிலே ஆளுக்கு ஆழாக்கு செக்கெண்ணெய் கொடுக்கறா. ரெண்டு பேரும் போய் வாங்கிண்டு வந்துடுங்கோ. நாலு நாளைக்கு சமையலுக்காச்சு”.
அவள் சொல்லி முடிக்கும் முன் சின்னக்கா, ”ஏம்மா தேய்ச்சு குளிக்க, எண்ணெய் கொடுத்தா சமையலுக்கு பதுக்கணும்கறியே” என்று பாதி சிரிப்பாகவும் மீதி வேதனையாகவும் கேட்டாள்.
“பசுவனுக்கு அரைப் படி எண்ணெயாமே, சீத்துவை பாத்திரம் எடுத்துண்டு போகச் சொல்லு” என்று நாகுப்பாட்டி சொல்லி விட்டுப் போனாள்.
அரைப்படி எண்ணெய் கொட்டி வைக்க வீட்டில் தகுந்த பாத்திரம் இல்லாததால் அடுத்த வீட்டில் வாங்கி சீத்துவுக்குப் பின்னால் குஞ்சரன் திருப்தியாக நடந்து போனார்.
சீத்துவின் இடது கை ஆள்காட்டி விரல் அதிகமாக வீங்கி இருந்ததால் கொஞ்சம் பெரிய துணியாக குஞ்சரனின் பழைய வேட்டியில் இருந்து கிழித்துச் சுற்றிக் கொண்டு போனான்.
”அது என்னடா கையிலே பெரிய பேண்டேஜ் போட்டிருக்கே” என்று ஞாயிற்றுக்கிழமை பேப்பரோடு தன் வீட்டு வாசலில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்த டாக்டர் கேட்டார்.
“ஒண்ணுமில்லே டாக்டர் மாமா; எங்கேயோ இடிச்சுண்டுட்டேன்”.
யட்சி வந்து மேலே உரசினால் வலி எதுவும் இல்லாமல் போகும். வருவாளோ. தூங்கிண்டே நடக்காதேடா என்று கூட வந்த அக்கா ரெண்டு பேரும் அவனை முன்னால் தள்ளியது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
”ஆளாளுக்கு ரெண்டு முட்டைக்கரண்டி தான் நல்லெண்ணெய் தரச் சொல்லி தாக்கீது. தலையைக் காட்டுங்கோ. எண்ணெய் வச்சுண்டு மீதியை கை கால்லே தடவிண்டு போங்கோ”.
ரெண்டு அக்காவும் கெஞ்சிய கெஞ்சலில் பட்டாமணியம் காரியஸ்தன் அவர்கள் இரண்டு பேருக்கும் ஆளுக்கு அரை உழக்கு எண்ணெய் வார்த்தான். பசுவனுக்கு ஸ்பெஷலாக ஒரு படி எண்ணெய் கிடைத்தது. உலகமே காலடியில் அடக்கிய மாதிரி குஞ்சரன் மமதையோடு நடந்தார். ரெண்டு பெண்களின் கல்யாணம் நடப்பது இனி எளிது.
தேய்த்துக் குளித்த எண்ணெயும் சீயக்காயும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஸ்நானப் பொடியும் மணக்க பெண்டுகள் பஜனை மடத்துக்கு வந்தபோது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
மந்தகதியில் கோலாட்டம் நகர, வக்கீல் மாமி சொன்னாள் –
“இன்னிக்கு ராத்திரியோட முடிச்சு ஏறக் கட்டிக்கறோம்டீ பொண்டுகளா ஞாபகம் இருக்கோன்னோ? முளைப் பாலிகை கரைச்சு அதோடு கூட பசுவன் பசுவும் கன்னும் தொப்பக்குளத்திலேயோ ஊருணியிலேயோ கரைச்சு வந்தா அடுத்த வருஷம் தான் இனி கோலாட்டம் கொண்டாட்டம் எல்லாம். அப்போ நான் இருக்கேனோ, நீங்க அவளவள் கல்யாணம் ஆகி எங்கே இருக்கேளோ, பட்டணத்திலே படிக்க போயிட்டேளோ, பிள்ளைத் தாச்சியோ, வேறே ஊருக்கு மாத்திண்டு குடும்பமே போறதோ, நமக்கு அதொண்ணும் இப்போ முன்கூட்டியே தெரியாது. இன்னிக்கு கோலாட்ட ஜோத்தரை. சந்தோஷமா கோலாட்டம் அடிச்சு ராத்திரி மழைக்கு முந்தி வீட்டுக்குப் போகணும். அவ்வளவுதான். நிச்சயம் மழை பெய்யும். சந்தோஷமா கோலே ந கோலே கோலே ந கோலேன்னு அடிச்சு அழைச்சா எப்படி பெய்யாம போவான் வருண பகவான்?. வாங்கடி குட்டிகளா பாம்பு கோலாட்டம் போடலாம்”.
ஏற்ற இறக்கத்தோடு அந்த நாற்பது வயசு ஸ்திரி பேசியபோது அவள் கண்கள் ஒளிர்ந்ததை சீத்து கவனித்தான். நான் இருப்பேனா அடுத்த ஜோத்தரைக்கு என்று யட்சியிடம் கேட்க வேண்டும் அவனுக்கு. அவள் இருப்பாள்.
பதினோரு மணிக்கு காப்பி கொடுத்து, வீட்டில் போய் கால் அலம்பிண்டு வர்றதுன்னா பெண்டுகள் போகலாம் என்று ஜோசியர் மாமி அறிவித்தாள். ”கால்லே வென்னீர் கொட்டிண்ட மாதிரி ஓடி வர வேணாம். மத்தக் காரியம் இருந்தா பண்ணிட்டு வரலாம்” என்றாள் வக்கீல் மாமி. போன மாதம் கல்யாணம் ஆன அச்சாபீஸ் பரமேஸ்வரன் மனைவி ஸ்ரீலட்சுமி தெம்பாகக் கிளம்ப, ”வேண்டாம்டீ; அது ராத்திரிக் கந்தாயம்; இப்போ வேண்டாம்; சொன்னாக் கேளு” என்றாள் முகத்தை சீரியஸ் ஆக வைத்துக்கொண்டு. சிரிப்பு அலை அலையாக எழுந்திருக்க, என்ன விஷயம் என்று புரியாமல் சீத்துவும் உரக்கச் சிரித்து வைத்தான்.
”உனக்கு ஒருதடவை தனியாகச் சொல்லணுமாடா, மூத்திரம் போறதுன்னா போய்ட்டு வந்துடு. அப்புறம் ரெண்டு மணிக்கு தான் ஆட்ட கிளாஸ் விடும்”.
மாமி சீத்துவின் காதைத் திருகிக் கொண்டு சொன்னபோது அவள் தலைமுடியில் அரப்புப்பொடி வாடை அடித்தது. காது மடலில் எண்ணெய் மினுமினுத்தது. அந்தக் காதை உதட்டில் வைத்து மெல்ல வேண்டும் என்று சீத்துவுக்குத் தோன்றியது.
போகும்போது யட்சி சொன்னது மறக்காமல் இருந்தது. தத்தம்மா சரிதம். அது தானா? ஏதோ ஒன்று.
வக்கீல் வீட்டில் சாத்தி வைத்த அறைக்குள் கட்டுக் கட்டாக புத்தகங்கள் இருப்பதாக ஒரு நினைப்பு. தத்தம்மா சரிதம் இருக்கக் கூடும் அங்கே. வீட்டுக்குப் போகும் வழியில் வக்கீல் வீட்டுக்குள் பூஞ்சிட்டாக உள்ளே போனான் சீத்து. வக்கீல் காமிரா உள்ளில் உட்கார்ந்தபடிக்கே தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லை. சீத்து சாத்தி வைத்த அறைக் கதவைத் தள்ள அது திறந்து கொண்டது. எலி வாடையும் மூஞ்சூறு வாடையும் மூக்கைக் குத்தியது.
சட்டென்று அந்த துர்வாடை மகிழம்பூவும் தாழம்பூவும் மாறி மாறி அடிக்கும் வாசனையாக மூக்கில் பட்டது. செண்ட் பாட்டில் உடைந்து தரையில் கிடந்து அள்ளி அள்ளிக் கண்ணாடிச் சில் இல்லாமல் வழித்து கையிடுக்கில் பூசிக் கொண்ட பெரிய பஜார் ஜவுளிக்கடைக்காரரின் நினைவு கூடவே வந்தது. இது ஜவுளிக்காரர் இல்லை. ஒரு பெண்ணின் மணக்கும் வாசம். சீத்துவுக்கு அது தெரியும். இந்த அறையில் யட்சி வந்திருக்கிறாளா? வக்கீல் வீட்டில் அவளா?
அறைக் கோடியில் இருந்த ஜன்னல் சற்றே திறந்து சன்னமான கீற்றாக வெளிச்சம் எட்டிப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்டது. பிரம்மாண்டமான பானைகளும், கரண்டிகளும், மரப் பெட்டிகளில் இன்னும் அதிகம் வெங்கலப் பாத்திரங்களும் அடைத்த இடம். சுவரில் மங்கிய கண்ணாடிச் சட்டத்துக்குள் யட்சி படம். சுவரை ஒட்டிப் போட்டிருந்த பழைய தேக்குக் கட்டிலின் மேல் கருப்பு வெல்வெட் துணி விரித்து, தலகாணி போட்டிருந்தது. தென்னை ஓலை விசிறி ஒன்று படுக்கைக்குப் பக்கத்தில் தரையில் கிடந்தது. அதன் பக்கத்தில் பெரிய வெங்கலப் பாத்திரம் முன் எப்போதோ குடிநீர் வைத்ததாக இருக்கலாம் என்று சீத்துவுக்குத் தோன்றியது.
வாவா பசவா வாவா வாவா. பாட்டு சத்தம். யட்சி குரல் இது. எங்கே அவள்? சீத்துவின் விரல் உச்சத்தில் வலித்தது. யட்சி உறிஞ்சினால் வலி நிற்கும். அவள் பக்கத்தில் படுத்திருந்து பசுவனைச் சுற்றி நின்று இந்தப் பெண்டுகள் சொல்லும் அரைகுறை வாக்கியங்களில் புரியாமல் போனதைக் கண்டுபிடிக்க வேண்டும். யட்சிக்கு அதெல்லாம் நிச்சயம் தெரிந்திருக்கும்.
”இது ஏன் இங்கே உன் ஃபோட்டோ படம் மாட்டியிருக்கு”? சீத்து யட்சியைக் கேட்டான்.
”ஃபோட்டோ இல்லே. வரைஞ்ச படம்”.
எதுக்கு வரையணும்?
“இருநூறு வருஷம் முந்தி ஃபோட்டோ கிடையாதே. அதான்”.
இங்கே ஏன் வைக்கணும்?
“இது என் வீடு. இங்கே இல்லாமல் வேறே எங்கே வைக்க?” யட்சி எதிர்க்கேள்வி கேட்டாள். மஞ்சள் வெய்யில் கோபுரமும் மண்டபமுமாக விரியும் உலகத்தில் அந்தப் படத்தை மாட்டி வைக்க இடம் இல்லையா? கேட்க நினைத்தான். யட்சி மறுபடியும் பாடினாள்.
”பாலும் பெருகிக் குடங்கள் நிறைய பசுவா பசுவய்யா
கோலும் அடித்து கூடியே ஆடினோம் பசுவா பசுவய்யா”
எங்கே அவள்?
கட்டிலில் உட்கார்ந்திருந்த யட்சி பாடியபடி மல்லாக்கக் கவிழ்ந்தாள். அவள் கண்கள் சுழன்று அவனை நோக்கின. பாடும்போது மின்னல் வெட்டியது போல் பற்கள் வெண்மையாகப் பிரகாசித்து அவனை அருகே அழைத்தன. என்னவாவது பேச வேண்டும் என்று சீத்துவுக்குத் தோன்றவே கோலாட்டப் பாட்டு என்றான்.
“அதுக்கென்ன இப்போ”.
“நீ கேட்டிருந்தியே. அதை எடுக்கத் தான் இங்கே வந்தேன்”.
“சரி, அதுக்கென்ன இப்போன்னு சொன்னேன்” என்றபடி கண்ணுக்குத் தட்டுப்படாமல் அவனை இழுத்துப் படுக்கையில் சரித்தாள். விரல் உச்சத்தில் வலித்தது. அவள் வாயிலிட்டுச் சுவைத்தாள். சந்தோஷமாக இருந்தது அந்தப் பரவசம் பல மடங்கு பொங்கிப் பெருகி அலையடித்து வெள்ளமாகப் புரண்டு வர அவன் ஒரு துரும்பாக அடித்துச் செல்லப்பட்டான்.
யட்சி எங்கே இருக்கே?
“இருநூறு வருஷமா இங்கே தான் இருக்கேன். வக்கீலுக்கு நான் கொள்ளுப்பாட்டி எள்ளுப்பாட்டி உறவு. என்னை விடப் பத்து வயசு குறைவான பிள்ளையோட இங்கே தேக சம்பந்தம் வச்சுண்டதாலே இங்கேயே பிடிச்சு வச்சு தாழ்ப்பாள் போட்டு பூட்டிட்டா. அன்னிக்கும் கோலாட்ட ஜோத்திரை. அவன் பசுவன். நான் தான் அவனை இங்கே கூட்டிண்டு வந்தேன்”.
அப்புறம் என்ன ஆச்சு?
”அவனை துரத்தி விட்டுட்டா. என்னை இங்கே நாள் கணக்கா பூட்டி வச்சு உடம்பும் மனசும் ரோகம் பிடிச்சுப் போய்ச் சேர்ந்தேன். இன்னும் அந்த மோகம் மாறாம அலையறது இங்கே இருந்தபடித்தான். கோலாட்ட ஜோத்திரையும் பசுவனும் இன்னும் இஷ்டம். வாடா பசுவா, வந்து படு”.
அவன் திரும்ப பஜனை மடத்துக்குப் போனபோது நாற்காலியில் களிமண் பசு பொம்மையை வைத்து சுற்றி வந்து அந்தப் பெண்கள் ரம்மியமாகக் கோலாட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
கன்றுக்குட்டியைத் தொட்டான் சீத்து. அது முட்ட வந்தது. கையை மேலே உயர்த்தி வைத்துக் கொண்டான்.
”தூங்கிட்டு வந்தியா? அதுவும் சரிதான். ராத்திரி ரொம்ப நாழிகை செல்லும். பசுவை எடுத்து வச்சுட்டு நாற்காலியிலே உட்காரேன். உன் கிட்டே என்ன கஷ்கத்திலே திடீர்னு தாழம்பூ வாசனை வருது அதுவும் நடுப்பகல்லே. ஜாக்கிரதை இந்த வாசனையைப் பிடிச்சுண்டு பாம்பு வந்து ஆடப் போறது.” குரல்கள். சிரிப்பு.
”கூடவே இவனுக்கும் ஒத்தை கோல் கொடுத்து பாம்புக் கோலாட்டம் போடச் சொன்னாப் போச்சு”. மேலும் குரல்கள். அலையடிக்கும் அடுத்த சிரிப்பு.
பகல் ரெண்டு மணி. ஓயாமல் பேசி, சிரித்து, ஆடிப் பாடி பகல் சாப்பாட்டுக்கு பஜனை மடத்திலேயே ஏற்பாடு ஆகியிருந்ததால் சந்தோஷமாகக் கோலாட்டம் போட்டபடி காத்திருந்தார்கள்.
சீத்து வீட்டுக்கு ஓடி அப்பா குடிதண்ணீர் ஊருணியில் இருந்து கொண்டு வந்திருந்த குடம் நீரைக் கொல்லைப் பக்கம் கொண்டு போய்ப் பழைய பித்தளைப் பாத்திரத்தில் மொண்டு தலையில் விட்டுக் கொண்டு குளித்தான். இடதுகை ஆள்காட்டி விரல் சர்க்கரை வள்ளிக்கிழங்கைச் சுட்டதுபோல் வீங்கி மினுமினுக்க, முழங்கை வரை மின்னிக்கொண்டிருந்தது. தலை சுற்றியது சீத்துவுக்கு. கோலாட்டம் முடித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, டாக்டரிடம் போய், ஊசி குத்தினாலும் பரவாயில்லை என்று வலியைப் பொறுத்துக் கொண்டு குணப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.
கஷ்கத்தில் தாழம்பு வாடை போக மொண்டு மொண்டு ஊற்றி அது போதாதென்று பட துணி துவைக்கும் சவுக்காரத்தை துவைக்கும் கல்லின் மேல் இருந்து சுரண்டி எடுத்துப் பூசிக் குளித்தான். இடது கை ஆள்காட்டி விரல் வலிக்கவில்லை என்றாலும் கையை ஜாக்கிரதையாக உயர்த்தி வைத்தபடி குளித்தான். அவனைப் பசியும், பஜனை மடத்தில் விதவிதமான சித்ரான்னமும், இனிப்பும், அப்பம், வடையும் இழுக்க ஓடினான்.
”பாவம் குழந்தை நாள் பூரா பசுவன் வேலை பார்க்கறான். உடம்பெல்லாம் என்னமா வலிக்கும் தெரியுமா? நான் அவன் வயசிலே இருந்தபோது நஞ்சைவிளை கிராமத்துலே நாலைஞ்சு வருஷம் பசுவனா இருந்திருக்கேன். உக்காந்து உக்காந்து அலுத்து, அப்பப்போ கோலிக்குண்டு விளையாடப் போயிடுவேன். முதுகிலே போட்டு விளையாட்டை பாதியிலே நிறுத்தி இழுத்துண்டு போய் எங்கப்பா உட்கார்த்தி வச்சுடுவார். அழுதா குஞ்சாலாடு கொடுப்பா. அப்பா தொடையிலே கிள்ளி அழ வைப்பார். அவருக்கு லாடு வேண்டியிருக்கும்”. குஞ்சரன் காலையில் சீத்து அனுப்பி வைத்த வடை ஒன்றை விண்டு வாயில் போட்டபடி சொன்னார், அவன் ஓடுவதைப் பார்த்து.
உனக்கு கையிலே சொம்பு குத்தி வீங்கினதோ? யட்சி உன்னைக் கட்டிண்டு படுத்திருந்தாளோ?
அப்பாவைக் கேட்க வேண்டும் போல் இருந்தது சீத்துவுக்கு. அது எதுக்கு?
இன்றைக்குத்தான் வள்ளிசாக நூறு ரூபாய் தரப் போகிறதாகப் பேசிக்கொண்டார்கள். அது தவிர பர்ஃபி, குஞ்சாலாடு, காரபூந்தி, தேங்குழல் என்று பாத்திரம் பாத்திரமாக சீத்துவிடம் கைமாறப் போகிறது.
சாயந்திரம் எல்லாப் பெண்களும் பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை கட்டி, தலையில் கொழும்புத் தேங்காய் எண்ணெய் தேய்த்து நேர் வகிடெடுத்துச் சீவி, கோலாட்டக் கோல்களை அலம்பித் துடைத்து, பஜனை மடத்துக்கு ஒன்று இரண்டாக மொத்தம் இருபத்தெட்டுப் பேர் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஆளுக்கு ஒரு ரூபாயாவது பசுவனுக்கு ஆசீர்வாதப் பணம் தருவார்கள். அது ஒரு முப்பது ரூபாயாவது குறைந்த பட்சம் தேறும். அவன் ரெண்டு டிராயர் வாங்கிக் கொள்வான். அக்காக்களுக்கு நூல் புடவை வாங்கித் தருவான். யட்சிக்கும்.
யட்சி ஜோத்திரை முடிந்து போய்விடுவாளோ? புடவையை யாரிடம் தருவது அப்போ? அந்தக் கவலையை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போதாவது இவர்கள் கோலாட்டம் போடும் பசுவன் பாட்டுக்கெல்லாம் தலை அசைத்து முகத்தை சந்தோஷமாக வைத்துக்கொண்டு எல்லோரோடும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க வேண்டும்.
பெட்ரோமாக்ஸ் விளக்குகளைச் சுமந்து கொண்டு கூட்டத்தின் முன்னால் இருவரும் பின்னால் இருவரும் நடந்துபோக, நாகசுவர கோஷ்டி ஆனந்த பைரவியிலும் மாண்ட் ராகத்திலும் வாசித்துக் கொண்டு போக, தொடர்ந்து இரண்டு நீள வரிசையாகக் கோலாட்டம் அடிக்கும் பெண்கள் ஆடியபடி போனார்கள். நடுவில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் பசுவன் இடது கையை உயர்த்திப் பிடித்தபடி சிரித்துக் கொண்டு, தலையாட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். ஃபோர்ட் கார் ஓட முடியாமல் ரிப்பேர் ஆனதால், சைக்கிள் ரிக்ஷா கடைசி நிமிடத்தில் ஊர்வலத்துக்கு வந்துவிட்டது.
கோலே கோலே கோலேனா கோலே
பசுவா பசுவா பசுவா பசுவய்யா
அதி மனோகரமாக ஆடிப் பாடி வந்தார்கள் அந்தப் பெண்கள். கை வலிக்க கை உயர்த்தி உடம்பைக் குலுக்கி பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் தகுந்தபடி அசைந்து வந்தான் பசுவன். என்ன நினைத்தானோ, ரிக்ஷாவில் இருந்து கீழே குதித்தான். கோலே கோலே கோலே கோலே. அவனும் பாடினான். ஆடாமல், கோலாட்டக் கழிகளோடு நடந்து வந்த ஒருத்தியிடமிருந்து அவற்றைப் பறித்து தாளம் தவறாமல் கோலாடி வந்தான். ”ஜோத்திரை வேண்டாம்டா, பம்பரக் குத்து வெளையாடலாம்” என்று சிவராமனும் மற்ற பையன்களும் பம்பரமும் சாட்டையுமாக சைக்கிள் ரிக்ஷாவுக்குக் குறுக்கே வந்தார்கள். கோவில் வாசலில் கோலாட்ட ஜோத்திரை ஊர்வலம் கடந்தபோது அந்தப் பெண்கள் அத்தனை பேரும் யட்சியாகி விட்டார்கள். அவர்கள் இடுப்பில் முண்டு உடுத்து சீத்து போட்டிருந்தது போல ஒரு சரிகைத் துணியைத் தோளில் இறுக்கமாகப் போர்த்தி ஆடினார்கள். நாதசுவரக் கோஷ்டி திரும்பத் திரும்ப இங்கிலீஷ் நோட் வாசிக்க பெட்ரோமாக்ஸ்கள் மங்கி ஒளிர அவர்கள் எல்லோரும் கோலாட்டம் அடித்து ஒருசேரப் பாடினார்கள்.
கோலேனா கோலே கோலேனா கோலே
சீத்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் தேரடிப் படியேறி உள்ளே போனார்கள்.
ராத்திரியிலும் மஞ்சள் வெயில் மசமசவென்று காய்ந்த அந்த மணல் பரப்பில் அவர்கள் வரிசையாக கோலாட்டம் போட்டு வர, சடசடவென்று நெருப்புக்கோழிகளாகித் தலையை மணலில் புதைத்து நின்றார்கள். சீத்துவை அவர்கள் மணலுக்குள் இருந்து கூப்பிட்டார்கள்
பசுவா பசுவய்யா வாவா பசுவா பசுவய்யா
சீத்து தோளில் போர்த்திய ஜரிகைத் துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டான். அவன் ஆடிக்கொண்டே கருப்பன் சந்நிதிக்குள் புகுவதை எல்லோரும் பார்த்தார்கள். இடதுகை ஆள்காட்டி விரல் அவன் கரத்தில் இருந்து பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்ததையும் அப்புறம் வீங்கி விடர்த்து அது தேரடி இருட்டில் விழுந்ததையும் கூடப் பார்த்தார்கள். அது கையில் முளைத்த இன்னொரு நீண்ட குறி போல இருந்ததாக எல்லோரும் ரகசியம் பேசிக் கொண்டார்கள்.
பசுவனை அப்புறம் எங்கும் காணோம். அன்று இரவு இடி இடித்து மின்னல் வெட்டிப் பெருமழை பெய்தது. ஊரே தாழம்பூ மணத்த ஈரமான ராத்திரி அது.
(நிறைவு)
இரா.முருகன்
May 5, 2021
புதிய குறுநாவல் – பசுவன் : அத்தியாயம் 4 இரா.முருகன்
4
சனிக்கிழமையும் ஞாயிறும் பள்ளிக்கூட விடுமுறை என்பதால் பசுவனுக்கு பஜனை மடத்தில் ஓவர்டைம் பார்க்க வேண்டி வந்தது. அது வேறொண்ணுமில்லை. காலையில் குளித்து விட்டு பஜனை மடம் போய்விட வேண்டும். சாப்பிடாம வந்துடு என்று வக்கீல் மாமி சொன்னாள்.
சனியும் ஞாயிறும் காலையில் நல்ல இட்டலியும், தோசையும், வடையும், பொங்கலும், காப்பியும் அவனுக்கு தாராளமாகக் கொடுத்து பஜனை மடத்தில் வைத்தே சாப்பிடச் சொன்னார்கள்.
தின்ன முடியாமல் மீந்து போனதை சீத்து வீட்டிலிருந்து ஏனம் எடுத்து வந்து அதில் போட்டு வைக்க, குஞ்சரன் வந்து வாங்கிப் போனார். சாப்பிட்டுவிட்டு ஒரு மர ஸ்டூலில் உட்கார்ந்து நாலு பக்கமும் பார்த்தபடி தூங்கி வழிவதே சீத்துவுக்கு வேலை.
அவனைச் சுற்றி ஒரு இருபத்தைந்து பெண்கள் ரயில் வண்டிக் கோலாட்டம் போட்டார்கள். ஒருத்தர் பின்னால் ஒருத்தர் கோலாட்டக் கழிகளை அடித்து ஆடி வர வரிசையாக நகரும் ரயில் அது. சுற்றி வளைந்து நகர்ந்து சுழன்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கழிகளை மோதிக்கொண்டு சீராக ஆடியபடி விரசாக நகர்வது மலைப்பாம்புக் கோலாட்டம். பத்து பதினைந்து நிமிடம் பார்த்தபின் எல்லாம் அலுத்துப் போக, உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தான் பசுவன்.
”பாலும் பெருகிக் குடங்கள் நிறைய பசுவா பசுவய்யா
கோலும் அடித்து கூடியே ஆடினோம் பசுவா பசுவய்யா”
என்று அடிகளை திரும்பத் திரும்ப வெவ்வேறு வேகத்திலும் ராகத்திலும் பாடி அவனைப் பார்த்து ஆடிக் குதித்தார்கள்.
”பசுவன் தூங்காம இருக்க, பசுவா பசுவய்யான்னு வர்றபோது வலக்கையை உயர்த்தி ஆசீர்வாதம் பண்ணலாமே”.
டாக்டர் மாமி சொல்ல, ”நன்னாத்தான் இருக்கு, இத்தணூண்டு பையன் பழுத்த சுமங்கலிகளை ஆசீர்வாதம் பண்ணறதாவது. அதெல்லாம் நம்மடவா வழக்கம் இல்லே”, என்றாள் நாகுப்பாட்டி சீத்துவுக்கு ஆறுதல் தரும்படியாக.
எத்தனை தடவை கையைத் தூக்கி ஆசிர்வாதம் செய்வது. கையில் பாத்திரம் கீறியது வேறே இன்னும் வலிக்கிறது. நேற்று ராத்திரி சின்னக்காவிடம் சொன்னபோது பக்கத்து வீட்டுத் தொழுவத்திலிருந்து பசுஞ்சாணி எடுத்து வந்து கை விரலில் வைத்து இட்லித் துணியால் கட்டி விட்டாள். காலையில் பசுவன் டியூட்டிக்கு கிளம்பியபோது ”இதென்னடா சாணியும் கையுமா. எடுத்துட்டு போ” என்றார் அப்பா.
சாணி விரலோடு இட்லி தின்ன முடியாது, டிபன் பாக்ஸில் எடுத்து வைத்து, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடக் கொடுத்து விடவும் முடியாது என்று அவருக்குத் தெரியும்.
”ஆசீர்வாதம் இல்லாட்ட பரவாயில்லே. குளுமையா அப்பப்போ சிரிச்சா போறும். ஜானவாச ஊர்வலத்துலே மாப்பிள்ளை மாதிரி”.
இது ஜவுளிக்கடை ஐயங்கார் பெண்டாட்டியின் யோசனை.
“கார்லே ஊர்வலம்னாலே அசட்டு அம்மாஞ்சி களை வந்துடுறது. இதுலே சிரிப்பு வேறேயா?”. வக்கீல் மாமி தள்ளுபடி செய்ய, சீத்துவைப் பார்த்து வேறு யோசனைகள் புறப்படாமல் கோலாட்ட சத்தம் மட்டும் சீராகத் தொடர்ந்தது.
சனிக்கிழமை நடுப்பகல் சாப்பாடும் போட்டு பிற்பகல் மூணு வரை கோலாட்டம். அப்புறம் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு ராத்திரி ஏழு மணிக்கு வந்தால் போதும். வீட்டில் வடையையும் சுண்டலையும் சுவியனையும் கொடுத்து விட்டு சீத்து தேரடிக்கு ஓடினான்.
படிகளுக்கு நடுவே பள்ளம் பறித்து உள்ளே மரங்களும் பழைய கோவில்களுமாக அவனுக்குப் பழக்கப்பட்ட இன்னொரு உலகம் எங்கே?
தேரடிக் கருப்பனின் சந்நிதி கீகடமான இடத்தில் தேரடிப் படிகளுக்குப் பின்னால் இருட்டில் தெரியாது கிடக்கும் வெளியில் சீத்துவின் பார்வை பட்டது. உள்ளே மரங்களும் பழைய கோவில்களுமாக அங்கே அந்த சாயந்திர உலகம் தெரிந்தது. வெளியே மஞ்சள் வெய்யில் பூத்திருக்க, உள்ளே அடர்த்தியாக மஞ்சளும் சிவப்பும் பூரித்துப் படிந்து சீத்துவை வா வா என்று கூப்பிட்டது. அந்தக் கோவில்களின் வரிசை, முன்பு பார்த்தது போல் இல்லை. சிறிய கோவில் ஒன்று சாயந்திர மஞ்சள் பூசி நாணத்தோடு நின்றது. அதன் பின்னால் பரந்து நின்ற ஒரு பிரம்மாண்டமான மரம் பின்னிருந்து அந்தக் கோவில் மண்டபத்தை இறுக்கித் தழுவி, தூண்களைத் துளைத்துப் போயிருந்தது. யட்சி எங்கே? அவனை இப்படி அணைத்துக் கொள்ள அவள் வரவேண்டும். வேண்டாம். அவளை சீத்து இப்படிப் பின்னால் இருந்து இறுகத் தழுவி நிற்க வேண்டும். எங்கே போனாய் யட்சி?
தேரடிக் கருப்பனுக்குப் பின்னால் ஓட்டமும் நடையுமாக நடந்தான் சீத்து. முன்னால் இருந்த தனிக் கோவிலில் நுழைந்து நின்றான். கோவில் மணி அடித்த சத்தம் போல காதில் கேட்டது. மணியே இல்லாமல் மணிச் சத்தம் எங்கிருந்து வந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை.
விரலில் வீக்கம் வலித்தது. இடது கையே வலிப்பது போல் பட்டது. யட்சி மாருக்கு நடுவே வைத்துக் கொண்டால் வலி தீரும். அடி யட்சி, எங்கேயடி போனாய்? வா.
யட்சி வராவிட்டால் வீட்டுக்குப் போய் அக்காவிடம் சொல்லி சாணிப் பத்து போட்டுக் கொள்ள வேண்டும். பசுவன் கோலாட்டத்தில் யாராவது கேட்டால் மருதாணிப் பற்று என்று சொல்லி விடலாம். மோந்து பார்க்கவா போறாங்க?
இட்லித் துணி இல்லாமல் அப்பாவின் பழைய வேட்டித் துணியைக் கிழித்து அக்காவைக் கட்டுப் போடச் சொல்லலாம். அப்பா வேட்டி எல்லாம் பழசு தான். வேட்டிக்கு மேலே பள்ளிக்கூட ரிடையர்ட் நாகராஜ வாத்தியார் போட்டிருந்த நைந்த அல்பாகா கோட். அவர் இறந்து போனதுக்கு அப்புறம் வாத்தியார் பெண்ஜாதி நீ போட்டுக்கோ என்று கொடுத்தாள். வாத்தியாரின் சட்டைகள் குஞ்சரனுக்கு ரொம்ப சின்னதாக இருந்ததால், சட்டை இல்லாமலேயே கோட் மட்டும் அணிந்து கொண்டு ஸ்கூல் வாத்தியார் களையோடு தான் ஊருணியில் தண்ணீர் மொண்டுவரப் போவார். அவர் கிடக்கட்டும். யட்சி எங்கே?
”வந்துட்டியா?”.
கோவில் உள்ளே இருந்து யட்சி குரல் கேட்டது. இறுக்கமான டிரவுசரை இழுத்து விட்டபடி பார்த்தான் சீத்து. கதவு சார்த்தி இருந்தது. வக்கீல் வீட்டு சமையல் மாமி ஆளில்லாத அறைகளில் நுழைவது பற்றிக் கண்டித்துச் சொன்னது நினைவு வர சும்மா நின்றான்.
”உள்ளே வாயேன். ஒவ்வொரு தடவையும் சொல்லணுமா?” உரிமையோடு அவன் தோளில் தட்டியவள் தலைமுடியை சிடுக்கெடுத்துப் பின்னிக்கொண்டிருந்தாள். யட்சி தலையை விரித்துக் கொண்டு நிற்பாள் என்று யாரோ எப்போதோ சொன்னது தப்புதான் போல் இருக்கிறது. யாரும் நாள் பூரா தலையை விரித்துக் கொண்டு நிற்பது அசௌகரியமில்லையோ. அதுவும் பூச்சியும் தூசியும் அடந்த இந்தக் காட்டுப் புறத்தில்.
”தத்தம்மா சரிதம் கோலாட்டப் பாட்டு புஸ்தகம் கேட்டேனே, கொண்டு வந்தியா?” அவள் கேட்டாள். ”அடடா, மறந்து விட்டேனே” என்று சொன்னபோது அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
வேளாவேளைக்கு ஆகாரம் கிடைக்கும்போது இதெல்லாம் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.
நாளைக்கு வரும்போது நிச்சயம் எடுத்து வரேன் என்றான். நாளைக் கதை நாளைக்கு என்று அவள் சிரித்தாள்.
“நாளைக்கு கோலாட்ட ஜோத்திரை. ஊருணிக்கரையிலே இருந்து பசுவையும், கன்றையும் தண்ணியிலே கரைக்கணும்”, என்று தீர்க்கமாக ஆலோசித்தபடி சொன்னான் சீத்து. தெரியும் என்றாள் சுருக்கமாக யட்சி.
“அது ஏன் என் கிட்டே மட்டும் பேசறே?” அவன் கேட்டான்.
“நீ மட்டும் தானே பசுவன். இந்த ரெண்டு நாளைக்கு”.
“இப்போ மட்டும் பேசுவியா? அப்புறம்?”
”அப்புறம் என்னன்னு அப்புறம் பார்க்கலாம்”.
“இத்தனை நாள் எங்கே இருந்தே?”
“இங்கே தான் இருந்தேன். ஏன் உனக்கு என்ன சந்தேகம்?”
ஒண்ணுமில்லே என்று விரலைப் பார்த்தபடி சத்தமில்லாமல் இருந்தான் சீத்து.
”விரல்லே என்ன?”
“பாத்திரம் குத்திடுத்து. சொம்பு”.
“சொம்பு எப்படி குத்தும்?”
“விழுந்து நசுங்கினதுலே விளிம்பு தூக்கலா இருந்ததா, கையை கீறி விட்டுடுத்து”.
“மருந்து சாப்பிட்டியா?”
“இல்லே”.
”ஊசி குத்திண்டியா?”
“ஐயோ பயமா இருக்கு”. அவன் கண்களை மூடிக்கொண்டான்.
“இந்தக் கோவில்லே எல்லாம் எப்போ பூஜை வரும்?” சீத்து கேட்டபோது அவள் சிரித்தாள்.
“இந்தக் கோவில் எல்லாம் உன் ஊர்லே இல்லே. உன் காலத்திலேயும் இல்லே.”
“அப்படீன்னா?”
“உனக்கும் எனக்கும்
நூறு வருஷம் வயசு வித்தியாசம்” என்றாள் யட்சி அவன் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு. அவள் சீத்துவின் முகவாய்க்கட்டையை உள்ளங்கையில் ஏந்திப் பிடித்து இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள். அது இது சாப்பாடு எல்லாம் கிடக்கட்டும். இந்த மாதிரி கொஞ்சினால் யட்சி தவிர பசுவனுக்கு வேறேதும் வேண்டாம்.
“உனக்கு யாரெல்லாம் முத்தம் கொடுத்திருக்காங்க?” யட்சி கேட்டாள்.
“கமலி ரேழியிலே கதவுக்குப் பின்னாலே வச்சு போன மாசம் முத்தினா”
“அப்புறம்?”
“எங்கப்பா நான் காணாமல் போய் திரும்பி வந்ததும் பளார்னு ஒரு அறை, அப்புறம் ஒரு முத்தம் கொடுத்தார்”.
யட்சி கலகலவென்று சிரித்தாள்.
“எப்படி காணாமல் போனே?”
”பாம்புப் பிடாரன் கூட, அவன் மகுடி வாசிச்சதைக் கேட்டபடி பின்னாலேயே முத்துப்பட்டி வரை போயிட்டேன். தூக்கத்திலே நடக்கிற மாதிரி இருந்தது. அப்புறம் அவன் எழுப்பி வீட்டுக்குப் போன்னு சொன்னான். வந்துட்டேன்”.
சீத்து விரலைச் சுழற்றிப் பார்த்தான். வீங்கியிருந்தது. வலித்தது.
”விரலுக்குத் தகுந்த வீக்கம். நாளைக்கு வடிஞ்சிடும்”, என்றபடி சீத்துவைத் தன் மடியில் இழுத்து இருத்திக் கொண்டாள் யட்சி. அவனுக்கு அதுவும் வேண்டியிருந்தது.
”நான் போறேன். கோலாட்டம் போட எல்லாரும் வந்து காத்திண்டிருப்பா”.
அவன் எழுந்திருக்க முயற்சி செய்தபோது கை தன்னிச்சையாக யட்சியின் கழுத்தில் உயர்ந்து மாலையாக விழுந்தது. உள்ளே இருந்து யாரோ சொன்ன மாதிரி அவளைப் பிடித்து இழுத்து உதட்டில் முத்தமிட்டான். போ என்று இன்னொரு மனசு சொல்ல எழுந்து உட்கார்ந்தான்.
“யட்சிக்கு கோபம் வந்தால் கழுத்திலே பல் பதிச்சு ரத்தம் குடிச்சுடுவான்னு சொன்னானே சிவராமன். உனக்கு என் மேலே கோபம் வரல்லியா?”
அவள் சிரித்தாள். சீத்து தன் கழுத்தைத் தடவிக் கொண்டான். ஒன்றும் இல்லை. கழுத்தில் கடிப்பதை விட விரலைக் கடித்தால் சுகமாக இருக்கும்; வீக்கம் வற்றிவிடும் என்று சீத்துவுக்குத் தோன்றியது.
”பஜ்ஜி வேணுமா?”
“வேணாம் பசிக்கலே அது பஜ்ஜி தானா?”
“வேறே என்னவா இருக்கும்னு எதிர்பார்க்கறே?”
அவன் முகத்தைத் தன் வியர்வை நனைத்த மார்பில் தேய்த்துக் கொண்டு அப்படியே சேர்த்துப் பிடித்தபடி கண்ணை மூடிக் கொண்டாள் யட்சி.
“பூச்சியை எல்லாம் வறுத்து தின்னுட்டு ரத்தம் குடிப்பா யட்சின்னு தீட்சிதர் தாத்தா சிவராமன் கிட்டே சொன்னாரே”.
“அவருக்குத் தான் வெட்டுக்கிளி வறுத்துப் போட்டுத் திங்கத் தரணும்”.
“ஐயே சாப்பிட மாட்டார்” என்று சிரித்தான் சீத்து. இப்படி பார்த்துண்டு ஊட்டி விட்டா, தேவேந்திரனே இன்னும் கொஞ்சம் தான்னு கெஞ்சிண்டு நிப்பான். அவள் தலைமுடி நெற்றியில் புரண்டு முகத்தில் இறங்க, துடிக்கும் உதடுகளால் சீத்துவின் உதட்டில் இன்னொரு முத்தமிட்டாள். கமலியின் ஈர உதடுகள் நினைவு வந்தன. அவளும் கோலாட்ட ஜோத்திரைக்கு வந்திருப்பாள்.
“இருடா. நாளைக்கு போய் அங்கே கோலாட்டம் போடலாம். இன்னிக்கு இங்கே. நான் சொல்லித் தரேன்”.
சொல்லி விட்டு அட்டகாசமாகச் சிரித்தாள் யட்சி.
”நாளைக்கு வர்ற போது”.
அவள் முடிப்பதற்குள் ”தத்தம்மா சரிதம் கோலாட்ட புஸ்தகம் தானே” என்று கேட்டான்.
”ஆமா, அப்புறம், நாளைக்கு டிராயர் போட்டுண்டு வராதே”.
”சினிமாக்காரி மாதிரி இருக்கேனா?” சீத்து அப்பாவியாகக் கேட்டான்.
“நீ என்ன பொம்பளையா சினிமாக்காரி மாதிரி இருக்கேன்னு சொல்ல. ஆம்பளை. ராஜா ராணி சினிமா ஹீரோ மாதிரி இருக்கணும்”.
”அவனும் சின்ன சைஸ் பாவாடை தானே கட்டிண்டிருக்கான்?” சீத்து கேட்டான்.
”அது வேறே, இது வேறே”, யட்சி சிரித்தாள்.
அவனை மறுபடி மடியில் வாரிப் போட்டுக் கொண்டாள். ஒரு நிமிடத்தில் குருதி வாடை அங்கே சூழ்ந்தது. சரி போய்ட்டு வா என்று எழுந்தாள்.
“தூரமாயிட்டியா? எங்கக்காவை வேணும்னா சமைச்சு வச்சுட்டுப் போக அனுப்பட்டுமா? எட்டணா கொடுத்தா போதும்”.
யட்சி அவனைக் கூர்ந்து பார்த்தாள். ”உங்கக்கா ரெண்டு பேரும் பாவம்” என்றாள்.
”பெரியக்கா ராயர் பஜ்ஜி கடையிலேயும் அங்கங்கே கூப்பிடற வீடுகளிலும் தோசைக்கு அரிசி, உளுந்து அரைச்சும், தவலவடைக்குக் கடலைப்பருப்பும், துவரம்பருப்பும், பாசிப்பருப்பும் ஊற வைத்தது அரைச்சும் கால் ரூபாயும் அரை ரூபாயும் வாங்குவா. சின்னவ வீட்டுலே இருந்தே அம்மாவுக்கு உதவியா அப்பளம் இடறது, முறுக்கு பிழிய சுத்துக் காரியம் இப்படி காசு சம்பாதிப்பா. ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க அப்பா ஊருணித் தண்ணி மொண்டு வந்து ஊத்தி பத்து பைசாவா வாங்கிச் சேர்த்து வச்சு அவா ரெண்டு பேருக்கும் அடுத்தடுத்து கல்யாணம் பண்ணி வைப்பாராம். ரெண்டு கல்யாணத்துலேயும் பெரிய சைஸ் குஞ்சாலாடு, பருப்பு வடை, போளி எல்லாம் உண்டு. நீ வரியா?” சீத்து ஆவலோடு கேட்டான்.
யட்சி அவசியம் வருவதாகச் சொன்னாள். சீத்து அப்படியும் இப்படியுமாக அசைந்து ஓரமாக கல் சுவர் பக்கம் ஓடினான்.
“ஒண்ணுக்கு போகலாமா இங்கே?”
“போக ஆரம்பிச்சுட்டே. இதிலே என்ன கேள்வி..” யட்சி சிரித்தாள். ஒரு குடம் மூத்திரம் போக வேண்டியிருந்ததால் யட்சியின் பார்வையிலிருந்து விலக முடியவில்லை.
“பித்தானை போட்டுண்டு போடா”.
அவள் குரல் பின்னால் துரத்த சீத்து கருப்பன் சந்நதிக்குள் இருந்து வெகு சாவகாசமாக நடந்து வந்தான். நல்ல வேளை யாரும் அங்கே இல்லை.
தேரின் பக்கம் ஒரு வினாடி நின்றான். சீத்து மாதிரி ஒரு சின்னப் பையனும் யட்சி போல வனப்பான மூத்த பெண் ஒருத்தியும் சேர்ந்து கெட்ட காரியங்கள் செய்யும் மர சிற்பங்கள் செதுக்கப் பட்டிருந்த தேரின் ஓரமாக யட்சியோடு சந்தோஷமாக இருக்க வேணும் என்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. சீத்து பஜனை மடத்தை நோக்கி ஓடினான்.
”குசேலோபாக்கியானம் கோலாட்டக் கதை இன்னிக்கு நாலு பாட்டு அடிக்கலாம்” என்று ஜோசியர் வீட்டு மாமி ஒரு பழைய பவுண்ட் நோட் புத்தகத்தைத் திறந்தபடி சொன்னபோது சீத்து அங்கே இருந்தான்.
”போடா குழந்தே மூஞ்சி கை கால் அலம்பிண்டு வீபுதி இட்டுண்டு வா. இப்படி நடுவிலே வந்து உக்காரு. உனக்கு பாட வந்தா நீயும் பாடலாம். வராட்டாலும் அங்கங்கே கிருஷ்ணா கிருஷ்ணான்னு இவா சொல்றபோது நீயும் கூடவே சொல்லலாம்”.
அந்த மாமி சொல்லிக்கொண்டே போக ”அப்புறம் இவனையும் கண்டாகண்டான்னு கோலாட்டம் போடச் சொல்வீங்க போல இருக்கே” என்று யாரோ சொல்லிச் சிரித்தார்கள்.
“உஷா, வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது”. இன்னும் சிரிப்பு. கோலாட்டம் ஆரம்பமாயிற்று.
துவாரகைக்கு சுதாமனை அவன் பெண்டாட்டி சுசீலை தோளில் அவல் மூட்டையோடு அனுப்ப, இருபத்தேழு குழந்தைகளும் ஜெயம் ஜெயம் என்று வழியனுப்பிக் கோலாட்டம் போடுவதாக பாட்டு. ”எங்கம்மா எழுதி சிட்டைப் படுத்தினா” என்று ஜோசியர் மாமி பெருமை பேசியபடி அந்தப் பாட்டை உரக்க சொல்லிக் கொடுத்தாள். காதில் பாட்டு வரிகளை வாங்கியபடி ”கோலேனா கோலே கோலேனா கோலே” என்று அசைந்து ஆடிப் பாடி கோலாட்டம் முன்னே போனது. சீத்து பார்த்துக் கொண்டே இருக்க, மஞ்சளும் பச்சையும் நீலமும் காவியும் பூசிய மெல்லிய கோல்கள் அவன் முகத்தை நெருங்கி விலகி சட்டென்று ஒன்றோடு ஒன்று மோதிச் சத்தமிட்டு நகர, பாட்டுச் சத்தம் மெல்லிய தாரையாக இழைந்து வந்தது. ராத்திரி எட்டு மணிக்கு நிறுத்தி அவரவர்கள் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு வந்தார்கள். சீத்து போனால் சாப்பிட்டுத் தூங்கி விடுவான் என்ற பயமோ என்னமோ இட்லியும், தோசையும், அரிசி உப்புமாவுமாக சின்ன எவர்சில்வர் சம்புடங்களில் கொண்டு வந்து அவனைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்கள்.
அதில் பாதிக்கு மேல் வீட்டுக்கு எடுத்துப் போகக் கட்டி வைத்து விட்டான் சீத்து. சாப்பிட்டு விட்டு தூங்காமல் கோலடிக்க, பஜனை மண்டபத்துக்கு உள்ளேயே லஞ்ச் ஹோம் வீட்டிலிருந்து சின்ன அண்டாவில் காப்பி சுடச்சுடக் கொண்டு வந்து வைத்திருந்ததை ஒன்பது மணி சுமாருக்கு எல்லோருக்கும் டம்ளர் டம்ளராக விளம்பிக் கொடுத்தார்கள். காப்பியை மூட்டை கட்டிப் போக சாத்தியமிருந்தால் அதையும் சுருட்டி எடுத்துக் கட்டி வைத்திருப்பான் சீத்து.
தலைமுடியை இறுக்கிப் பின்னி, தாழம்பூத் தொடுத்து வந்த நான்கு பெண்களின் தலையிலிருந்து கனமான தாழம்பூ மணம் அலையலையாக எழுந்தது. தேரடிக் கருப்பன் முன்மண்டபத்தின் உள்ளே இருட்டில் கோவில்களும், அதி உன்னதமான மரங்களுமாக விரியும் பாதையை நினைவு படுத்தும் வாசனை அது. ஒன்பது மணிக்கு கரண்ட் போக இருட்டில் பூ வாசனை தாறுமாறாக அதிகரித்தது.
சீத்து பஜனை மண்டபத்துக்கு வெளியே மூத்திரம் போக நகர, அவன் இடுப்புக்குக் கீழே அவசரமாக யாரோ பிடித்தபோது அவன் கண்ணை மூடிக்கொண்டு பரவசத்தோடு யட்சி என்றான். அங்கே மட்டும் மல்லிகைப்பூ மணம் தீர்க்கமாக அடித்து விலகியது. கரண்ட் வந்தபோது ஒவ்வொரு பெண்ணாகப் பார்த்தான். யாரும் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு வந்திருக்கவில்லை. யட்சி எங்கே?
பத்து மணி வரை கிருஷ்ணன் தூது கோலாட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. அண்டாவில் இருந்த காப்பியை வழிச்சு வாரி பசுவனுக்குக் கொடுத்தார்கள். மிஞ்சியதை ஆளுக்கு ஒரு வாய் குடித்து கிருஷ்ணா கிருஷ்ணா என்று பாடியபடி நகர்ந்தார்கள். மிச்சம் நாளைக்கு என்று வீட்டுக்குப் போனார்கள்.
ராத்திரி பத்து மணிக்கு வீடே சுற்றி உட்கார்ந்து சீத்து கொண்டு வந்த ஆகாரத்தை ஒரு கை பார்த்தபடி அதுவும் இதுவும் பேசிக் கொண்டிருக்க அரைக் கனவில் படுத்திருந்த சீத்துவின் விரலை யட்சி தாழம்பூ வாசனையோடு மெல்லத் தன் விரல்களால் நீவினாள். வலி குறையக் குறைய, அவளுடைய கை கீழே இறங்கி வந்தது. அவன் புரண்டு படுத்தான்.
”ஓடப்பாட்டு கொண்டு வர்றியா? ஜோசியர் பெண்டாட்டி கிட்டே கேளு”.
“சரி கேக்கறேன். அங்கே எல்லாம் கையை வைக்காதே அடி யட்சி”.
“நான் வைக்கலே. நீயா நினைச்சுக்கறே”.
சீத்துவைத் தன் உதடுகளால் ஒத்தியபடி இருக்க அவன் உறங்கிப் போனான்.
(அடுத்த இலக்கத்தில் நிறைவுறும்)
May 4, 2021
புதிய குறுநாவல் – பசுவன் – அத்தியாயம் 3 இரா.முருகன் –
3)
குலாலர் தெருவில் ஆறுமுக வேளார் வீட்டுக்குப் பெருங்கூட்டமாகப் பெண்கள் புறப்பட்டபோது ராத்திரி ஏழு மணி ஆகியிருந்தது. எல்லா வயதிலும் பெண்கள். சீட்டிப் பாவாடையில் ஏழெட்டு வயசுப் பெண்கள் முதல் புதுப்பட்டுப் புடவையில் அறுபது வயது மூதாட்டிகள் வரை மெல்ல நடந்து வர, நடுவே கல்யாண ஊர்வலத்துக்கு மாப்பிள்ளையை உட்கார்த்தி வரும் பழைய ஃபோர்ட் காரில் சீத்து கழுத்தில் மல்லிகைப்பூ மாலையோடு மிரள மிரளப் பார்த்தபடி வந்தான்.
இன்றைக்கு அவனுக்குச் சாப்பிடக் கிடைத்தது வருடம் ஒரு முறை பசுவனாகக் கிடைக்கும் உச்சபட்ச தீனியை விட மிக அதிகம் தான். ராத்திரி மோர்சாதம் சாப்பிட்டுப் படுக்கலாம் என்று உத்தேசித்திருந்தவனுக்கு வரிசையாக தீனி வந்துகொண்டிருந்தது. அது அவன் வக்கீல் வீட்டுக் கூடத்தில் நுழைந்தபோது ஆரம்பமானது.
”பசுவன் வந்தாச்சு. பசுவன் வந்தாச்சு”.
முதுபெண்கள் உற்சாகமாகக் கூவ கூடத்தில் ஊஞ்சலிலும் தரையிலுமாக உட்கார்ந்து கொண்டிருந்த பெண்கள் ஏற்று வாங்கி எதிரொலித்தார்கள்.
“பசுவன் வந்தாச்சு”.
கூச்சத்தோடு உள்ளே நுழைந்து ஓரமாகச் சுவரில் சாய்ந்து நின்றான் சீத்து.
“சீத்து வாடா, ஊஞ்சல்லே வந்து ஜம்முனு மாப்பிள்ளை மாதிரி உட்காரு அண்டர்வேர் போட்டுண்டு வந்தியோ” என்று விசாரித்தாள் வக்கீல் மாமி. எல்லாரும் சேர்ந்து சிரித்த சத்தம் தெருக் கோடிவரை, தெருத் தாண்டி சங்கரநயினார் தெருவில் பாதி வரை கேட்டிருக்கும் என்று சீத்துவுக்குத் தோன்ற, அவனும் சிரித்தான். பக்கத்தில் வந்து அவன் முதுகைத் தடவி, சோழிப் பல் மின்ன வக்கீல் மாமி சிரித்தது முதல் தடவையாக வசீகரமாக இருந்தது அவனுக்கு.
போன வருஷம் பசுவும் கன்றும் கொண்டு வரப் போனபோது நிஜாரைக் களைந்து வேட்டி உடுத்தி வந்தது நினைவு வந்தது. மெல்லிசு வேஷ்டியில் உள்ளே எதுவும் போடாதது நிதர்சனமாகத் தெரிய ’திவ்யமான தரிசனம்’ என்று கூட்டமாகப் பாடினார்கள் அப்போது. அதற்கு அப்புறம் குஞ்சரன் எப்படியோ பணம் புரட்டி ரெண்டு ஜட்டி வாங்கிக் கொடுத்ததை மாற்றி மாற்றி இந்த வருஷம் முழுக்கப் போட்டு வருகிறான். இந்த வருஷம் திவ்ய தரிசனமே பாட வேண்டியிருக்காது.
மாமி வயதுக்கும் சிற்றாடை பெண்டுகள் வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு மூன்று பெண்கள் டால்கம் பவுடர் மணக்க சீத்துவைக் கையைப் பிடித்து இழுத்து, பின்னால் இருந்து முன்னே நகர்த்தி ஊஞ்சலுக்குக் கூட்டி வந்தார்கள்.
”பசுவனுக்கு பாலும் பழமும் தரணுமா?” ஒருத்தி கேட்டது கூட்டச் சிரிப்பில் அமிழ்ந்து போனது.
”ஏது நீ சோபானத்துக்கும் அனுப்பி வச்சுடுவே போலே இருக்கே, நீயும் போறியா?”
இன்னொருத்தி கேட்டதற்கு உச்ச பட்ச கூச்சல் உற்சாகமாக ஒலித்தது.
ஆண்கள் இல்லாத கூட்டத்தின் பெண் உற்சாகம். சீத்துவை உளுத்தம்மாவு பிசைந்து பிடித்து வைத்த பிள்ளையாராகப் பார்த்தார்கள் எல்லாருமே.
“பசுவனுக்கு வைக்கோலும் தண்ணியும் தந்தால் எதேஷ்டம். என்ன புல் தின்னுவே? பச்சைப் புல்லா, காஞ்சதா?”
சீத்துவுக்கு பொட்டைக் கோபம் வந்தது. வந்து என்ன பிரயோஜனம்?
“புண்ணாக்கும் தரட்டா?” அடுத்த கேலி. ”எள்ளுப் புண்ணாக்கு தின்னு. பசுவன் பல்லு திவ்யமா இருக்கும்”.
வக்கீல் மாமியும் இந்தக் கூத்தில் கலந்து கொள்ள, காலை நீட்டி சௌகரியமாக உட்கார்ந்திருந்த நாகுப் பாட்டியும் சுந்தரிப் பாட்டியும் ”கிளம்ப வேண்டாமா? நீங்க இப்படி அசமஞ்சமா நடமாடிண்டு இருந்தா பொழுது வெடிஞ்சிடும்” என்று முறையிட்டார்கள்.
“நாகசுவரக் காரங்களும் வந்தாச்சு”.
வக்கீல் குமஸ்தா வீரபத்திரன் ஒரு வினாடி உள்ளே எட்டிப் பார்த்துத் தகவல் அறிவிக்க சீத்துவுக்கு கொஞ்சம் ஆறுதல். எல்லாம் ஆண்களான கோஷ்டி.
அடுத்த வினாடி சுறுசுறுப்பாக அத்தனை பெண்களும் செயல்பட்டார்கள். சீத்துவுக்கு ஒரு குஞ்சாலாடு உருண்டை கிடைத்தது. திருப்பதி பிரசாத லட்டு மாதிரி பெரிய சைஸில் இருந்த அதை வக்கீல் மாமியிடம் துணிப்பை கேட்டு வாங்கிப் போட்டு எடுத்துக்கொண்டான். இரண்டு ஜிலேபி, ஒரு கிண்ணம் ரவாகேசரி, மசால்வடை என்று ஆர்வத்தோடு சாப்பிட்டான். நேரம் கெட்ட நேரமாக ராத்திரி ஏழு மணிக்குக் காப்பி கொடுத்தார்கள். என்றைக்கோ ஒரு நாள் காபி சாப்பிடக் கிடைக்கும் வீட்டுப் பையன் என்பதால் நேரம் காலம் பார்த்துச் சாப்பிட, குடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ”சட்டையை கழட்டிடுடா” என்று அடுத்த ஆணை. கழட்டி எங்கே வைக்க என்று தேடினான் சீத்து. லட்டுப் பையிலேயே இருக்கட்டும் என்று யாரோ சொல்ல, வியர்வை ஊறிய சட்டையை அங்கே போடாதே என்று வக்கீல் மாமி சொல்லியதோடு லட்டு போட இன்னொரு பையும் கொடுத்தாள்.
சார்த்தி வைத்திருந்த கூடத்து அறையில் வைக்கக் கதவைத் திறந்தான்.
“அம்பி, அந்தக் கதவை எல்லாம் திறக்கக் கூடாது. மூடின எந்தக் கதவையும் தான். வந்தோமா, சாப்பிட்டோமா, சம்பாவனை வாங்கிண்டோமா போனோமான்னு இருக்கணும் தெரிஞ்சுதா?”
வக்கீல் வீட்டுச் சமையல் மாமி படபடவென்று அவன் காதில் மட்டும் கேட்கிற குரலில் பேசிவிட்டுக் கதவைத் திரும்ப மூடியது பார்க்கப் பயமாக இருந்தது.
வீபுதியை சம்படத்திலிருந்து எதேஷ்டமாக சீத்துவின் உள்ளங்கையில் கொட்டி குழைத்து நெற்றியிலும், புஜத்திலும் நெஞ்சிலும் பூசச் சொன்னார்கள். யாரோ நெற்றியில் சந்தனம் தொட்டுப் போனார்கள்.
“நெஞ்சிலேயும் பூசேண்டி பாகி.. உன் நெஞ்சிலே இல்லே, அவனோடது” என்றாள் டாக்டர் மாமி சந்தனப் பேலா கொண்டு வந்தவளிடம்.
“அவன் என்ன என் ஆம்படையானா?” பாகீரதி கேட்டாள். குமிழிட்டு இன்னொரு சிரிப்பு அங்கே தான் ஆரம்பித்தது. ஓரத்தில் சன்னமாகச் சரிகை போட்ட துண்டைப் பரிவட்டம் போல் அவன் தலையில் சுற்றி, கழுத்தில் மல்லிகைப்பூ மாலை போட்டு விட்டார்கள்.
“அந்தப் பக்கம் திரும்பிக்கறோம். அந்த சோமனை அதாண்டா வேஷ்டியை கட்டிண்டு நிஜாரைக் களை”, என்று சொல்லி எந்தப் பக்கமும் திரும்பாமல் அவன் உடுப்பு மாற்றுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாதி வெளிச்சமும் பாதி இருட்டுமாக இருந்த கூடத்தில் பாகீரதியின் மூக்குத்தி ஒளிர்ந்தது சீத்துவுக்கு வேண்டியிருந்தது. உடுப்பு மாற்றும்போது அவள் பார்ப்பது அவனுக்கு புது சந்தோஷத்தைத் தந்தது.
”இன்னும் கொஞ்சம் பெரிசா பெரியவனா இருந்தா என் நாத்தனாருக்குக் கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்”.
அடுத்த கிண்டலை சிரமப்பட்டு அடக்கி நாகசுவரக் காரர் கரகரப்ரியா வாசிக்க, சக்கனிராஜ என்று அநேகமாக எல்லோரும் சேர்ந்து பாடியபடி சீத்துவை நட்ட நடுவில் காரில் வைத்து அந்த ஊர்வலம் குலாலர் தெருவுக்குள் வந்தது இப்படித்தான்.
ஆறுமுக வேளார் வீட்டு வாசலில் ஆரத்தியும், பூவுமாக வரவேற்கக் காத்திருந்தார்கள்.
களிமண்ணில் பிடித்து வைத்து அடுப்புக் கரியும், காவிக்கட்டியும் கொண்டு நிறம் பூசி பானை சட்டியோடு சுட்டெடுத்த ஒரு பசுவின் பொம்மையும், கன்றின் பொம்மையும் தாமிரத் தாம்பாளங்களில் ஜவந்திப்பூ மாலை சார்த்தி வைக்கப் பட்டிருந்தன.
”பசுவன் தலையிலே பசுவையும் கன்னுக்குட்டியையும் ஏத்த வேண்டியது. பஜனை மடத்துக்குப் போக வேண்டியது”.
ஊர்வலத்தைத் தொடர்ந்து சைக்கிள்களில் வந்த ஆண்கள் நாலைந்து பேர் சொல்ல, ஆமா ஆமா என்று பலமாகப் பின்பாட்டு பாடிய கும்பலில் சீத்துவின் அப்பா குஞ்சரனும் உண்டு.
போன வருஷத்தை விடப் பெரிய பசு. நிஜக் கன்றுக்குட்டிக்கு காலே அரைக்கால் சைஸில் களிமண் கன்றுக்குட்டி. கனமா இருக்குமா? யாரோ யாரிடமோ கேட்க சீத்து எடுக்கப் போன பசுவையும் கன்றையும் தொடாமல் நின்றான்.
“ஒரு பொங்கல் பானை கனம் கூட இருக்காது ரெண்டும். ஏத்தி வையுங்கோ” என்றார் ரிடையர்டு ஸ்கூல் ஹெட்மாஸ்டர். ஏற்றி வைத்தார்கள். சீத்துவின் தலை கொள்ளாமல் கன்றுக்குட்டியை ஊர்வலக் காரில் அவன் மடியில் வைத்தார்கள். திரும்ப நடந்த ஊர்வலத்துக்கு முன்னால் ’தாமரை பூத்த தடாகமடி’ வாசித்தபடி நாதசுவர கோஷ்டி போனதால் சங்கீதத்தில் மயங்கி பேச்சு ஆகக் குறைவாகப் போனது.
சேர்வார் ஊருணிக்கரையோடு நடந்து ராஜ வீதி திருப்பத்தில் பஜனை மடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது சீத்துவுக்கு ஒண்ணுக்கு வந்துவிட்டது. அப்பாவை அழைக்க அவன் குரல் நாதசுவர தித்திப்பில் அவருக்குக் கேட்காமல் போனது.
காரோடு நடந்து வந்த ஒரு பெண் ”என்னடா, நெளியறே, அங்கே இங்கே எறும்பு கடிச்சுடுத்தா?”, என்று கண்ணில் குறும்பு மின்னக் கேட்டாள்.
“இல்லே, ராயர் மாமி, ஒண்ணுக்கு போகணும்”.
“போயேன், யார் வேண்டாம்னா”.
விஸ்தாரமாக வாசிக்க நாதசுவர கோஷ்டி சிவன்கோவில் தெரு திருப்பத்தில் நின்றபோது மடியில் இருந்து கன்றை எடுத்துப் பக்கத்தில் வைத்துவிட்டு சீத்து ஒரே ஓட்டமாக ஊருணிக்கரைக்கு ஓடினான். நாதசுவத்தையும் மீறும் சிரிப்பும் கூச்சலும் எழ, ஆனந்தம் பாடித் தாலி கட்டும் நேரத்தில் வாசிப்பது போல் தவுலும் நாதசுவரமும் உச்சத்தில் ஒலித்து இறங்கி இசையைத் தொடர்ந்தன.
”கையை அலம்பிண்டு பசுவைத் தொடு” என்று வக்கீல் மாமி ஜக்கில் இருந்து வார்த்தது பால். அதில் கை அலம்பி பிசுபிசு என்று இருக்க வழியில் யார் வீட்டிலோ சொம்பில் தண்ணீர் வாங்கி இன்னொரு முறை கை கழுவல். அந்தப் பழைய சொம்பை சீத்து திரும்பித் தரும்போது ஓரமாக நசுங்கி உடைந்திருந்த பாத்திரக் கழுத்தில் அவன் இடது கை பட்டு ஆழமாகக் கீறி விட்டது. கீறல் வழியே ரத்தம் எட்டிப் பார்த்து அவசரமாகக் கோடு போட்டது. சீத்து சின்னக் குழந்தை போல அழுதான்.
ரத்தம் இன்னும் கசிய அவர்கள் பஜனை மடத்தில் போய்ச் சேர்ந்ததும் ஒரு துண்டால் அவன் கையில் தண்ணீரில் நனைத்துக் கட்டுப் போட்டு ’இப்போ நின்னு போய்டும்டா அசடு. இதுக்கு அழுவாளா’ என்று பல குரல்களும் குழந்தையைச் சமாதானப்பட்டுத்துவதுபோல் ஒலித்தன. ஒரு மைசூர் பாகும் இன்னொரு ஜிலேபியும் தின்ற சீத்து நாலு கட்டி தேங்காய் பர்பியை நியூஸ்பேப்பரில் கட்டிப் பையில் வைத்துக்கொண்டான். ஜீரணமாக ஒரு பெரிய டம்ளர் சுக்கு, வெல்லம் போட்டுக் காய்ச்சிய பானகம் குடித்து, திருப்தியோடு வீடு நோக்கி நடந்தான்.
(தொடரும்)
May 3, 2021
புதிய குறுநாவல் – பசுவன் – அத்தியாயம் இரண்டு – இரா.முருகன்
2)
எல்லாப் பையன்களையும் போல யட்சி என்று யாராவது சொல்லிக் கேட்க சீத்துவுக்கும் மனசுக்குள் அதிகபட்ச குறுகுறுப்பு அலையடித்தபடி உற்சாகமாக இருந்தது. அவளைப் பற்றி முழுக்கத் தெரியாமல் சுகமான, பயமான சொப்பனம் வர ஆரம்பித்திருந்தது. யார் யாரோ வர்ணித்திருந்த யட்சி அவன் உதட்டில் தொடங்கி கீழே இறங்கி வந்து குறும்பு செய்யும் கனவின் சுகம், அவள் இடதுகை ஆள்காட்டி விரலை உறிஞ்சும் கோர சொப்பனத்தின் பயத்தில் முழுக்க அடங்குவதில்லை.
முந்தாநாள் சாயந்திரம் அவளைப் பக்கத்தில் இருந்து உற்றுப் பார்க்க அவனுக்குக் சந்தர்ப்பம் கிடைத்தது. கமலி இல்லை, யட்சிதான் அவள்.
சாயந்திர வெய்யில் மஞ்சள் பூத்து மசமசவென்று சுவரிலும் மரங்கள் மேலுமெல்லாம் சீராகப் படிந்த பொழுது ஏற்பட்டது அது. சாயந்திரமும் இல்லை பின்மாலைப் பொழுதுமில்லை. பிற்பகலும் இல்லை ராத்திரியும் வரவில்லை. எல்லாமான ஏதுமில்லாத நேரம் அது. எதுவும் செய்யாமல், பேசாமல், கேட்காமல், பார்க்காமல் உறைந்து போகச் சொன்ன பொழுது.
சீத்துவின் அப்பா குஞ்சரன், கடைத்தெரு ஜவுளிக்கடை, மருந்துக்கடை, ஸ்டேஷனரி கடைகளுக்கும் பெரிய வீடுகளுக்கும் குடிதண்ணீர் கொண்டு வந்து தந்து ஏதோ கொஞ்சம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஒரு குடம் குடிதண்ணீருக்குப் பத்து நயா பைசா, பத்து நயா பைசாவாக சம்பாதிக்கக் குடத்தை எடுத்துப்போய் ஊரணியில் நல்ல தண்ணீர் மொண்டு வந்து ஊற்றும் நேரம் அது. இரண்டு பெண்கள் வீட்டில் உண்டு. ரெண்டு பேரும் சீத்துவுக்கு அக்காதான். இந்தப் பத்து நயா பைசா வருமானத்தில் அவர்களுக்குக் கல்யாணம் நடத்தி வைத்து வந்தவர்களுக்கு நல்ல சாப்பாடு போட வேண்டும்.
குஞ்சரன் முந்தாநாள் சாயந்திரம், பெரியக்கா கல்யாண மாப்பிள்ளை அழைப்புக்கு குஞ்சாலாடு பெரிய சைஸில் பிடித்து போளியோடு கல்யாண விருந்து இலையில் பரிமாறலாம் என்று சீத்துவிடம் யோசனை சொன்னார்.
அவருடைய குஞ்சரன் என்ற பெயர் விளக்கத்தை சீத்து எத்தனையாவது முறையாகவோ கேட்டிருந்த நேரம் அது.
“குஞ்சரன்னா யானை முகத்து கணபதி. கொழக்கட்டை, லட்டு, பொரி உருண்டை எல்லாம் பெரிசு பெரிசா வேணும். அவர் பெயரை வச்சுண்டு நம்மாத்து கல்யாணத்திலேயும் திருப்பதி லட்டுலே பாதி அளவாவது இலைக்கு லட்டு போட வேண்டாமா? அவனவன் பந்தியிலே குந்தி நன்னா தின்னுட்டு பர்ருனு குசுவிண்டு போகட்டும். கல்யாணம் அப்பத்தான் களை கட்டும்”, என்றார் குஞ்சரன். காலிக் குடத்தை செல்லரித்துப்போன தூண் நிற்கும் வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டு, வியர்த்து வடியும் முகத்தைத் தோள் துண்டால் துடைத்தபடி அக்கறையாகச் சொன்னார் அவர். மாடப்பிறையில் பம்பரம் தேடி எடுத்திருந்தான் சீத்து அப்போது. ஏயென்ற பெரிய சிரிப்புப் பொத்துக்கொண்டு வர இறுக்கமான டிரவுசரை இழுத்து விட்டபடி வெளியே ஓடினான் அவன். நாகு என்ற நாகம்மா பாட்டி மேல் மோதிக்கொண்டு சீத்து ஓடிப் போக, “பாத்து போடா குழந்தே” என்றபடி நடந்தாள் நாகுப்பாட்டி. இத்தணூண்டு பீங்கான் ஜாடியில் மோரும் பொட்டலத்தில் சத்துமாவும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் அவள். இலவசமாகத் தினமும் வரும் ராத்திரி உணவு அது.
சிவராமன் குடும்பமான ராமவிலாஸ் ஓட்டல்காரர்களின் வடக்குவாடித் தெருக் கோடி வீட்டில் ஏழை விதவைப் பாட்டிகள் பத்து பேருக்கு தினசரி காலையிலும் சாயந்திரமும் ஒவ்வொருத்தருக்கும் நாலு கரண்டி மோரும், காலையில் ஆழாக்கு அரிசியும் சாயந்திரம் ரெண்டு கரண்டி சத்துமாவுப் பொடியும் இனாமாகத் தருவதை சீலமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பத்து பாட்டிகளில் ஒருத்தி சீத்து குடும்பத்தோடு ஒண்டுக் குடித்தனத்தில் இருக்கிறாள்.
நாகுப்பாட்டி என்ற நாகம்மா பாட்டி போன பவுர்ணமிக்கு வீட்டு முற்றத்தில் சீத்துவோடும் அவனுடைய அக்காள்களோடும் கூட இருந்து நிலாச்சோறு சாப்பிட்டாள். சீத்து குடும்பம் மொட்டைத்தண்ணி மோரில் பச்சை மிளகாய் அரிந்து போட்ட மோர்சாதமும், நாகுப்பாட்டி சத்துமாவும் கொண்டு வந்து அறுசுவை சாப்பாடாக சங்கல்பம் செய்து பகிர்ந்து உண்டது அந்த ராத்திரி. அப்போது பாட்டி, யட்சி விஷயம் பேசிக் கொண்டிருந்ததில் தான் யட்சி மேல் சீத்துவுக்கு பெரிய ஈர்ப்பு.
பாட்டியின் யட்சி தும்பைப்பூ போல பரிசுத்தமானவள். செம்பருத்தி போல மலர்ந்த முகம். கை இரண்டும் மணக்கும் தாழம்பூ போல நீளமானவை. வைக்கோலோ கற்றாழையோ வாடை அடிப்பவை இல்லை அவை. அவள் சிவராமன் விவரிக்கும் யட்சி போல் புரியாத ஏதோ தப்புக் காரியம் செய்கிறவள் இல்லை. ஔவையார், காரைக்காலம்மையார் போல் வயசான சிவபக்தை. கே.பி.சுந்தராம்பாள் குரலில் பாடுவாள். காரைக்காலம்மையாரை சீத்துவுக்குத் தெரியாதுதான். நாகுப் பாட்டிக்கு அம்மையார் எலும்புக்கூடாக சுவர்க்கம் போன கதையும் தெரியும். இன்னொரு நாள் சொல்கிறேன் என்றாள் அவள்.
நாகுப் பாட்டியைத் தவிர்த்து ஒதுக்கி, யட்சி மேல் மட்டும் கவனம் நிலைக்க முயற்சி செய்தபடி, சீத்து தேர்ப்படியில் உட்கார்ந்து, இன்னொரு விள்ளல் தேங்காய்ப் பத்தையை நிஜார் பாக்கெட்டில் இருந்து எடுக்க, பஜ்ஜி பொரித்த எண்ணெய் வாடையோடு பம்பரம் தான் கையில் தட்டுப்பட்டது.
முந்தாநாள் அவன் தேரடியில் அனுபவப்பட்டதை மனம் திரும்ப நினைவு படுத்திக் கொண்டிருந்தது.
முந்தாநாள் மஞ்சள் வெய்யில் நேரத்துக்கு முன் வெய்யிலே இல்லாத மேக மூட்டமான நேரம் வந்து போனது. மழை கொஞ்சம் கொஞ்சமாகப் பெய்து ஓய்ந்து மறுபடி பெய்து வெய்யிலுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது அப்போது.
ஈரம் குளித்த மர வேலைப்பாடும், நனைந்த கருங்கல் பாளப் படிகளுமாகத் தேரடி அவனை வா வா என்று அழைத்தது. தேரடிப் படிகளில் ஏறியபோது அவை அசைந்த மாதிரி இருக்க, சற்று நின்றான். அவன் கவனித்துக் கொண்டிருந்தபோதே தரையிலிருந்து மூன்றாம் நான்காம் படிகளுக்கு இடையே கல் பாளம் விலகி இடம் விட உள்ளே சீரான மஞ்சள் வெய்யில் மினுக்கிக்கொண்டு ஒரு மணல்வெளியும் பழைய கட்டிடங்களுமாக சீத்துவுக்குக் கண்ணில் பட்டது.
யாரோ பிரியத்தோடு அழைக்க அவன் அந்த வினோதமான உலகத்துக்குள் பம்பரத்தோடு அடியெடுத்து வைத்தான். அது, முந்தாநாள் சாயந்திரம்.
உள்ளே போனதுமே நெருப்புக் கோழிகளும், இடுப்பில் தொளதொளவென்று பைஜாமா அணிந்து விரிந்த மஞ்சள் மணல் வெளியில் அந்த நெருப்புக்கோழிகளை மேய்த்துப் போகும் கோழி மேய்க்கியும் கண்ணில் பட்டார்கள். நெருப்புக் கோழிகளை சீத்துவுக்குத் தெரியும். பூகோள வகுப்பில் அவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறார் ஆசிரியர். அவை ஆப்பிரிக்காவில் காணப்படுபவை என்று சீத்துவுக்கு நினைவு. இவ்வளவு உயரமும் கனமுமான அந்தப் பறவை பறக்காது என்று படித்ததும் கூடவே ஞாபகம் வந்தது. நல்லதுக்குத்தான். சீத்துவை நிஜார் பாக்கெட்டில் பம்பரத்தோடு தூக்கிக் கொண்டு அவை பறந்து விடாமல் இருக்கும்.
வெடவெடவென்று உயரமாக இருந்த கோழி மேய்க்கி சீத்துவைப் பேரென்ன என்று விசாரித்தான். சீத்து என்றான் இவன் நடந்தபடிக்கே. யாரைப் பார்க்க வந்திருக்கே? விடாமல் விசாரித்தான் மேய்க்கி. இவனிடம் என்னதுக்கு சொல்லணும் என்று சீத்துவுக்குப் புரியவில்லை. மஞ்சள் வெய்யில் வெளியில் அடிப்பதைவிட இன்னும் தீர்க்கமாக சகலமான இடத்திலும் பூசியிருந்ததைக் கவனித்தான் சீத்து. மணல் மஞ்சளும் சிவப்பும் கலந்த மெல்லிய ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்தது. நெருப்புக் கோழிகள் எல்லாம் பொன்னால் உடம்பு ஆனது போல் தலை குலுக்கி நிற்க மேய்க்கி வாயில் சிவப்புச் சாயத்தைப் பூசியிருந்தது மஞ்சள் வெய்யிலில் வெகு வினோதமாகத் தெரிந்தது. அவன் ’சீத்து தொடை சினிமா தொடை’ என்று பாடியபடி, வாயில் எச்சில் ஒழுக சீத்துவை நெருங்கி வர, நெருப்புக் கோழிகளும் அதைத் திரும்பப் பாடியபடி அவன் காலுக்குப் பக்கமாக வந்தன. சீத்து விரசாக விலகி நடந்தான்.
”பசுவா .. பசுவா”
யாரோ அவனைக் கூப்பிடும் சத்தம். மெல்லிய பெண் குரல்.
”உன் பெயர் பசுவன் தானே? யட்சிக்குத் தொடையைப் பார்க்கணுமாம். கூப்பிடறா. போய்க் காட்டு”.
மேய்க்கி சத்தமாகச் சொல்ல அந்த நெருப்புக் கோழிகள் எக்கெக்கெக்கென்று சிரித்துத் தலையை மணலில் புதைத்துக் கொண்டன. தங்கம் பூசிய குன்றுகள் போல அவை நின்றதை வேடிக்கையாகப் பார்த்தபடி சீத்து நிற்க மேய்க்கியும் ஒரு நெருப்புக் கோழி ஆனான். அல்லது நெருப்புக் கோழி தான் இத்தனை நேரம் மேய்க்கியாக மாறி நின்றதோ. அவன் உயரமும் எடையும் கூடிய பிராணியாக வலுவான கால்களால் நீண்ட அடி எடுத்து வைத்துத் தங்க மணல் பரப்பில் விலகி ஓட, பறக்காத மற்றப் பறவைகள் பின் தொடர்ந்தன. அவை ஓடிய திசையில் வரிசையாகக் கோவில்கள் தெரிந்தன. கூடவே மரங்களும் அக்கோவில்களோடு பின்னிப் பிணைந்து பிரம்மாண்டமாக அந்த இடத்தை வியாபித்திருந்தன.
”சீத்து… சீத்து..”
பெண்குரல் மறுபடி வந்தது. அந்த அடர்ந்த மரக் கூட்டத்துக்குள் இருந்து வந்த பெண்ணின் இனிய குரல். சீத்துவின் அக்கா ரெண்டு பேருக்கும், அவன் அம்மாவுக்கும் வாய்க்காத, சந்தோஷமும் பிரியமும் சிநேகமும் சிரிப்புமாக வரும் குரல். ஊருணிக்குத் தண்ணீர் எடுக்கப் போகும் சிற்றாடைப் பெண்களுக்கும் இல்லாத குரல் அது. அந்தச் சிரிப்பு மட்டும் யட்சி கடித்த விரல் மாதிரி தனியாக இருந்தது. இது நடந்தது, முந்தாநாள் சாயந்திரம், அதேதான்.
”சீத்து, சாப்பிட்டியா? அவன் கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தபோது அந்தப் பெண் உள்ளிருந்து வாசலில் பிடிவாதமாகப் படர்ந்திருந்த சிலந்திப் பூச்சி வலையை அகற்றியபடி வந்து நின்றாள்.
”என் பேரு எப்படித் தெரியும்?” சீத்து கேட்டான்.
“எப்படியோ. நான் உன்னை விட பெரியவ ஆச்சே. அதான் எல்லாம் தெரியும்”.
“எத்தனை வயசு பெரியவ? எங்க பெரியக்கா மாதிரி நாலு வயசா, சின்னவ மாதிரி ரெண்டு வயசா பெரியவ நீ?”
”நூறு வயசு, நூற்றைம்பது வயசு பெரியவ நான் உனக்கு”.
“அவ்வளவு பெரியவ அப்படீன்னா செத்துப் போக வேண்டாமோ”.
”போகப் பிடிக்கலே. சாவை நிறுத்தி வச்சிருக்கேன். நினைச்சபோது போயிடுவேன். இப்போ இல்லை”.
அவளைத் சீத்து கவனித்துப் பார்த்தான். யட்சி சின்ன அக்கா சாயலோ? இல்லை, இந்தத் தோரணை ஊருணிக்குத் தண்ணீர் மொண்டு வந்து கொண்டிருக்கும் சிற்றாடைப் பெண்களுடையது. அதென்னமோ வெறுங்குடத்தோடு தண்ணி தூக்கப் போகும்போது இருக்கும் சிநேகிதம் ஊருணித் தண்ணீரை எடுத்து வரும்போது மாறிவிடுகிறது. தண்ணீர் தங்கமாச்சே. இது அவர்கள் சொல்வதில்லை. சீத்துவின் அப்பா குஞ்சரன் பத்து நயா பைசாக்களை ஒரு தடவைக்கு நாலு முறை எண்ணிச் சுருக்குப் பையில் போடும்போது சொல்வது. தினம் அவர் ஒரு ரூபாயாவது சம்பாதிப்பார்.
இந்தப் பெண்பிள்ளை ஊருணிக்குத் தண்ணீர் தூக்கப் போகிற பெண்களின் கூட்டத்தில் இல்லை. அவர்களிடம் கம்புக்கூட்டில் காய்ந்த வியர்வையும் மல்லிகைப் பூவுமாக ஒரு கதம்ப மணம் அடிக்கும். அப்பா மேலும் அக்காக்கள் மேலும் வைக்கோல் வாடைதான் எப்போதும் அடிக்கும். சோப்பு வாங்கக் காசு ஏது என்று வைக்கோலை வைத்துத் தேய்த்துத் தேய்த்து அக்கா குளிக்கும் போது பாவமாக இருக்கும் சீத்துவுக்கு. அவனும் வைக்கோல் தேய்த்துக் கொள்வான். ஸ்கூல் போகும்போது பிள்ளையார் கோவில் வாசல் வீபுதிப் பரணியில் இருந்து ஒரு கை வீபுதியை அள்ளி அக்குளில் தேய்த்துக் கொண்டு சாம்பல் மணக்க கிளாஸுக்குப் போவான். வைக்கோல் வாடைக்கு சாம்பல் வாடை எவ்வளவோ பரவாயில்லை என்று வகுப்பில் சோமு வாத்தியார் பக்கத்தில் வரச்சொல்லி மேஜைக்கு அடியில் டிராயருக்குள் கைவிட்டு செல்லமாக நசுக்கிக் கொண்டே சொல்வார். சீத்துவிடம் ஏதாவது தப்பு கண்டுபிடித்து வாரம் ரெண்டு மூணு தடவையாவது இப்படி நெறிப்பது நடக்கும். அவர் மேல் மூக்குப்பொடி வாடை தான் எப்போதும் அடிக்கும்.
”சாப்பிட்டியான்னு கேட்டேன்”.
அந்தப் பெண் தலையைச் சாய்த்துச் சிரித்தபடி ஞாபகப் படுத்தினாள். சீத்துவுக்கு வெட்கமாக இருந்தது. புதுசாக ஒரு ஊருக்கு வந்து விட்டு அங்கே வடிவான ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டு நிற்கும்போது விதைக்கொட்டையை நெரிக்கும் கிழவர் நினைவுதான் வர வேண்டுமா என்று அவனையே அவன் கேட்டுக் கொண்டான்.
”சாப்பிட்டுட்டேனே. அம்மா வக்கீலாத்துலே கொடுத்தான்னு கரப்பு கிடந்த ரவையைக் கொண்டுவந்தா. கரப்பை எடுத்துப் போட்டுட்டு வெய்யிலே ரவையை காயவைச்சு வறுத்து, அம்மா ஆளாளுக்கு ரெண்டு ஆப்பக் கரண்டி வர்ற மாதிரி ரவா உப்புமா பண்ணிக் கொடுத்தா”.
சீத்து சகஜமாக அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். முகம் செம்பருத்தி போல, மூக்கு எள்ளுப்பூ போல, கை தாழம்பூ போல என்று யட்சியை நாகுப்பாட்டி வர்ணித்ததும் தப்பு போல. அவள் தலைமுடி உச்சந்தலையில் சிக்கான, கொஞ்சம் பூசினாற்போல உடல் ஆகிருதி கொண்ட, தாடையில் சொரசொரப்புள்ள முகத்தில் சுருக்கங்கள் தென்படும், பல்லில் பல்காரை லேசாகப் படர்ந்த, கண்ணால் சிரிக்கிற அழகான பெண். பொங்கிப் பூரித்து விம்முகிற மாரிடம் இவளுக்கு உண்டு. சுப்பா சாஸ்திரிகள் போல இல்லை.
அவன் வெட்கத்தோடு சிரித்துக் கொண்டான். முந்தாநாள் சாயந்திரம் அது.
“என்ன சிரிக்கறே, நான் திங்கத் தந்தா சாப்பிடுவியா?” அவள் கேட்டாள். அந்த அத்துவானக் காட்டுக்குள்ளே அவள் என்ன பட்சணம் பண்ணுவாள்?சாதம் தான் எப்படி வடிப்பாள்? என்ன கொடுப்பாள்? அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு உபசாரத்துக்கு, அப்பா பிரண்டைக் கொடி பறிச்சு கீழத் தெருக்கோடி மெஸ்கார வீட்டுலே அப்பளம் இடும் நாகுப் பாட்டிக்கும் அவள் தோழி சுந்தரிப் பாட்டிக்கும் கொண்டு வந்து கொடுக்கும்போது ”காப்பி போட்டுத் தரேண்டா குஞ்சா. ஒரு வாய் குடிச்சுட்டு போ” என்று பாட்டிகள் வாய் நிறைய உபசரிப்பார்கள். அவர்கள் யாரும் பாலைப் பார்த்தே வருடக் கணக்கிலிருக்கும் என்று தெரிந்த குஞ்சரன், ”அப்புறம் ஒரு நாள் வர்றேன் மாமி. பிரண்டைச் சாறு பிழிஞ்சு அப்பள மாவு ஒரு உருண்டை முடிஞ்சா கொண்டு வாங்கோ” என்று பாட்டிகளிடம் சொல்லி அனுப்புவார். அப்பள மாவுருண்டை ஒன்றோ இரண்டோ பிரண்டைச் சாறும் மிளகாய்ச் சாறும் மணக்க அவர்கள் கொண்டு வருவார்கள். சீத்து அதை அழிச்சாட்டியம் பண்ணித் தின்று விடுவான். இந்தப் பெண் அப்பள மாவுருண்டை தருவாளோ.
அவள் முன் மண்டபத்தில் இருந்து இறங்கி, சிறிய தனிக் கல் கட்டடமாக இருந்த மண்டபம் போன்ற கோவிலுக்குள் நுழைந்தாள். சீத்துவும் அவள் பின்னாலேயே போனான். அந்த மண்டபத்துக்குள் விக்கிரகம் எதுவும் இல்லை. பெரிய ஆல மரம் ஒன்று கட்டிடத்தைப் பிளந்து நட்டநடுவில் வளர்ந்து நாலு பக்கமும் நெருக்கிக் கொண்டிருந்தது.
உள்ளே போகாமல் வாசலிலே நின்றுவிட்டான் சீத்து. அவள் உள்ளே இருந்து ஒரு பழுக்காத் தட்டில் ஏதோ கொண்டு வந்து தந்தாள். பஜ்ஜியா என்று கேட்டான் சீத்து. அவனுக்குப் பெயர் தெரியாத உப்பும் காரமுமான பலகாரம் எல்லாம் பஜ்ஜி என்ற பொதுப் பெயரில் அவன் வயிற்றுக்குள் போகும். அதுவே சர்க்கரைத் தித்திப்பில் இருந்தால் சொஜ்ஜியா என்று கேட்பான் சம்பிரதாயமாக. எதுவாக இருந்தால் என்ன? இனிப்பு இனித்துக் கிடக்கணும். உரைப்பு, உப்பு காரம் தூக்கலாக இருக்கணும். அவ்வளவு தான்.
இது என்ன கோவில்? கேட்டபடி வாசல் படி தாண்டி உள்ளே போனான் சீத்து. அந்தப் பெண் உள்ளேயிருந்து அவன் கையைப் பற்றி விழாமல் உள்ளே இழுத்தாள். சில்லென்று இருந்த கை அது.
நல்லா இருக்கா என்று கேட்டு விட்டு உடனே வார்த்தை மாற்றிக் கொண்டு நன்னா இருக்காடா என்றபடி அவன் தலையைத் தடவினாள். ”நன்னா வெகு பேஷா இருக்கு” என்றபடி அந்த பஜ்ஜியைப் பிய்த்துத் தின்றான் சீத்து. எதுக்களித்துக்கொண்டு வந்தது. போகிறது. சொல்ல வேண்டாம். நிஜார் பாக்கெட்டில் போட்டு எடுத்துப்போய் சீத்து அதை எப்படியாவது சாப்பிட்டு முடித்து விடுவான்.
நிஜார் பாக்கெட்டில் போட்ட ஒரு வினாடியில் யட்சி அதைப் பார்த்து விட்டாள். “ஏண்டா சாப்பிட முடியலியா?” அவள் பாக்கெட்டில் கை நுழைக்க சீத்து நெளிந்தான். கையை விலக்கப் பார்த்தான். வேண்டியிருந்தது அது.
”சாப்பிட்டுட்டு காப்பி தருவேன்னு எதிர்பார்க்காதே. பாலுக்கு எங்கே போவேன், பசுமாட்டுக்கு எங்கே போவேண்டா பசுவா பசுவய்யா?” காலை நீட்டித் தூசி படிந்த தரையில் உட்கார்ந்தபடி கேட்டாள் பூடகமாகச் சிரித்தபடி. கோலாட்டம் தெரிந்த யட்சி தான் போலிருக்கிறது அவளுடைய உடுப்பில் அழுக்கு எதுவும் ஒட்டவில்லை என்பதை சீத்து கவனித்தான்.
அவள் கேட்டாள் – ”இந்த வருஷமும் கோலாட்ட ஜோத்திரைக்கு பசுவன் நீதானே. எனக்கு தத்தம்மா சரிதம் கோலாட்டப் பாட்டு வேணும். வக்கீல் வீட்டுலே இருக்கும். இருக்கும் என்ன, இருக்கு. எனக்குத் தெரியும். நான் தானே வாங்கி அடுக்கி வச்சேன் ஒரு காலத்துலே. அதைக் கேட்டு வாங்கிண்டு வந்து கொடு”.
அவள் சொன்னது எதுவும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் உடனே நினைவு வந்தது. வக்கீல் வீட்டுக்கு அவனை சாயந்திரம் ஆறரை மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். கோலாட்ட ஜோத்திரைக்கு, பசுவனாக இருக்க சம்மதம் என்று அவனும், அவன் அப்பாவும் நேரில் போய்ச் சொல்ல வேண்டும்.
”சரி, நான் போய்ட்டுச் சாவகாசமா வரேன்”. சீத்து சொல்லியபடி பட்சணத்தில் ஊறியிருந்த எண்ணெயை முழங்காலில் தேய்த்துக் கொண்டான். இன்னும் மிகுந்திருக்க, அவள் அவனுடைய கையைப் பிடித்துத் தன் முழங்காலில் பூசச் செய்தாள்.
“எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே”.
நியாயமான அங்கலாய்ப்பு தான் அவளுடையது. கொஞ்சம் உப்பு தூக்கல் என்று அப்பா தினசர் அம்மா சமையலைப் பற்றிக் குற்றம் குறை சொல்வது போல் ரொம்ப எண்ணெய் என்று சொல்ல நினைத்தான் சீத்து. எதுக்குச் சொல்லணும்? சாப்பிடக் கொடுக்கிறாள். அதிலே குற்றம் குறை எதுக்கு?
’திவ்யமா இருந்தது. அது என்ன பஜ்ஜி?” இதுவரை வெட்டிய இடது கை ஆள்காட்டி விரல்களைப் பொரித்தெடுத்தது அதெல்லாம் என்று சொல்லுவாளோ. கேட்டால் தானே? சீத்து கேட்கப் போவதில்லை.
உன் பெயர் என்ன என்று விசாரித்தான் சீத்து. யட்சி என்றாள். அவள் உதடுகள் சிவந்திருந்தது சீத்துவின் கவனத்தில் அடர்ந்து நிலைகொண்டது. எந்தப் பெண்ணின் உதட்டையும் கவனித்துப் பார்த்து மயங்கியதில்லை இதுவரை அவன்.
“எப்போ மறுபடி வருவே?” சீத்து விசாரித்தான்.
“அது உன் மனசுலே தானே தட்டுப்படும். போய்ட்டு வா” .
முந்தாநாள் சாயந்திரம் இப்படித்தான் போனது.
(தொடரும்)
May 2, 2021
பசுவன் – 1 புதிய குறுநாவல் இரா.முருகன்
பசுவன்
1)
காஞ்சங்காட்டு யட்சி.
சத்தம் போட்டுச் சொன்னான் சிவராமன். அவன் என்ன சொன்னாலும் அதைத் திருப்பி ரெண்டு மூணு தடவை சொல்ல ஒரு கோஷ்டி காத்திருக்கும். இருந்தது. அந்தப் பையன்கள் பம்பரம் விட்டுக்கொண்டே, ”அச்சி காஞ்சங்காட்டு அச்சி”, என்றார்கள்.
”அச்சி இல்லேடா. யட்சி”.
சிவராமன் அவசரமாக அவர்களைத் திருத்தினான்.
அவனுக்கே சந்தேகம். அச்சி தானோ. போகட்டும். அவன் என்ன சொன்னாலும் இவர்கள் கேட்பார்கள். அவன் நில் என்றால் தரையில் மண்டி போட்டு நரநரப்பான மணல் முழங்காலில் குத்த அவர்கள் நடப்பார்கள். கால் வளைந்தாலும் அவர்கள் எல்லோரையும் விடப் பெரிய பையன் அவன். லீடர். சாப்பிட சாயந்திரங்களில் ஏதாவது கொண்டு வந்து பகிரும் ஹோட்டல்காரப் பிள்ளை. தூள் பக்கோடாவோடு ஆஜராகி இருக்கிறான். யட்சி பற்றி எல்லாம் தெரிந்தவன்.
திடீரென்று ஊர்ப் பேச்சில் ஒரு யட்சி நுழைந்திருக்கிறாள். போன வாரம் பக்கத்து ஊரில் ஒரு பதிமூன்று வயதுப் பையன் ராத்திரி லவகுசா சினிமா பார்த்து விட்டுத் தனியாக வந்தபோது காஞ்சங்காட்டு ரோடில் பின் தொடர்ந்து வந்த அழகான யட்சி மயக்கி ரத்தம் முழுக்க எடுத்துக் கொண்டு, மதுரை பைபாஸில் கொண்டு வந்து கிடத்தி விட்டதாக ஊர் முழுக்க வதந்தி. அது விட்டலாச்சார்யா படம் மாய மோதிரம் போய்விட்டுக் கிறக்கத்துடன் திரும்பி வந்த செக்கன் என்று இன்னொரு வதந்தியும் உண்டு.
விட்டலாச்சார்யா படத்தில் வரும் சினிமா யட்சி போன்ற பெண் ’கட்டிக்கோ இறுக்க கட்டிக்கோ’ என்று குதிக்கும்போது டூரிங் டாக்கீஸ் வட்டாரமே அதிரும். ரெண்டு சினிமா டூரிங் தியேட்டர் இருப்பதால் விட்டலாச்சார்யா படம் ஓடும் தியேட்டருக்குப் போனதாகச் சொல்லாமல் அடுத்த தியேட்டர் பெயரைச் சொல்வது எல்லா வயதுக்கார ஆண்களுக்கும் வழக்கமாக இருந்தது. ஒரே நேரத்தில் புராணக் கதைப்படமும், கவர்ச்சி ஆட்டப் படமும் இரண்டு தியேட்டர்களிலும் காட்சிக்கு வருவதில்லை என்பதால் கௌரவமானவர்கள் எப்போதும் தகுந்தபடி சொல்ல முடிந்தது.
எது எப்படியோ, ஒரிஜினல் யட்சி வந்த பிறகு சினிமா தியேட்டர் போவது குறைந்து போனது. ராத்திரி எட்டு மணிக்கு வீடே ராச்சாப்பாட்டை அவசர அவசரமாக முடித்து உறங்க ஆரம்பித்தது.
பத்து வயதுக்கு மேற்பட்ட பையன்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் வாசல் நிலையில் வேப்பிலை செருகி யட்சியை திருப்பியனுப்ப முனைந்தார்கள். பையன்கள் மட்டுமில்லாமல் வீடு முழுக்க வேப்பெண்ணெய் பூசி ராத்திரி படுத்துறங்கியது. யட்சிக்கு வேப்பிலையும் வேப்பெண்ணெயும் பிடிக்காதாம்.
இருபது வருடத்துக்கு ஒரு தடவை யட்சி வந்துவிடுவாளாம். டாக்டர் மாமா சொன்னார். அவருக்குக் கல்யாணமான வருஷம் யட்சி பற்றி ஊர் பூரா பேச்சாக இருந்ததாகச் சொன்னார். அப்போது அவள் வலதுகை ஆள்காட்டி விரலை முரிக்கிற யட்சியாம். சலவைக்காரனுக்கு துணியிலே நீலம் படர்ந்து பிடிக்கவில்லை என்றால் ஊர் முழுக்க வதந்தி கிளப்பி விடுவதும், அது பரவப் பரவ, கால்வாயில் துவைக்கும் துணியில் பச்சென்று நீலம் ஒட்டி பளிச்சென்று துணி வெளுப்பது நடக்குமாம். டாக்டர் மாமா தான் சொன்னார்.
யட்சி வதந்தி இல்லை என்று போகிற போக்கில் சொன்னார் அவர். யட்சியை மட்டுமில்லை, சலவைக்காரனையும் இந்தப் பொடியன்கள் கவனித்துப் பார்த்தது இல்லை. பசங்க துணியை யாரும் சலவைக்குப் போடுவதில்லை. எல்லா அழுக்கோடு அழுக்காகக் குவித்து, செல்லம் சவுக்காரம் போட்டு, கட்டையில் சுற்றி ஓங்கி நாலைந்து தடவை துவைக்கிற கல்லில் அடித்துத் துவைப்பதுதான் வழக்கம்.
”சரி வாங்கடா, இருட்ட ஆரம்பிச்சுடும். வேகமா இன்னொரு ரவுண்ட் குத்து பம்பரம் போடலாமா?”.
ராமஜெயம் கால் கட்டை விரலால் தரையில் சுமாரான வட்டம் போட்டபடி சொன்னான். அதற்கு ஆறடிக்கு அப்புறம் இடதுகைப் பக்கம் தள்ளி இன்னொரு வட்டத்தை சிவராமன் தரையில் அவசரமாக வரைந்தான்.
”யாரோட பம்பரம் ஆக்கர் வாங்கப் போறது?”.
சிவராமன் கேட்டபடி தன் சாட்டைக் கயிற்றை எச்சில் படுத்தி பம்பரத்தைச் சுற்றி இறுக்கி அதைத் தரையில் வட்டத்துக்குள் ஓங்கிக் குத்தினான். மற்ற பம்பரங்களும் அவற்றை இறுகிச் சுற்றியிருந்த நனைந்த சாட்டைக் கயிறுகளும் விர்ரென்று சுழன்று, செம்மண் தரையில் ஏழு பம்பரங்கள் ஆட ஆரம்பித்தன.
“கோஸ் எடுக்க வட்டம் சரியாத் தெரியலேடா”, என்றான் வெங்கிட்டு. ஆட்டம் நின்று வட்டத்தைக் கொஞ்சம் தள்ளி வரையக் கால்கள் பரபரத்தன.
பதிமூன்று வயது பம்பரம் விளையாடும் வயது இல்லைதான். இல்லை என்றால் வேறு என்ன உண்டு? கால் பந்து நிறைவேறாத கனவு. பேட்மிட்டன் யாராவது நகரத்தில் விளையாடும் போது வேடிக்கை பார்த்து, இறகுப் பந்தைப் பொறுக்கிக்கொண்டு ஓடி வருவது மட்டும். கிரிக்கெட் தெரியாது. எல்லாம் ஏகத்துக்குச் செலவு வைக்கும் விளையாட்டுகள். யாரும் காசு தர மாட்டார்கள்.
பெரிய வீடுகளில் கூட இதுதான் நிலைமை. பதினைந்து வயதுவரை பம்பரமும் கோலியும் விளையாடி விட்டு, முகத்தில் பரு அரும்ப ஆரம்பித்ததும் வேட்டி கட்டிக்கொண்டு சைக்கிள் பழகி, நடந்தோ சைக்கிளிலோ ஊரைச் சுற்றி நேரத்தைப் போக்குவதாக சாயங்காலம் கழிந்து போகும்.
கமலியும், அவளோடு சாயந்திரம் ஊருணியில் தண்ணீர் எடுக்க எப்போதும் கூட வரும் பெண்களும் தூரத்தில் வந்து கொண்டிருந்தது கண்ணில் படப் பையன்கள் அவர்களை சாயந்திர வெய்யிலில் கண் சுருக்கி வெறித்தார்கள்.
”யட்சி இப்படி இருப்பாளா?”.
கமலியை விரலால் சுட்டிக் காட்டாமல் பார்வையால் சிவராமனைக் கேட்டான் ஒருத்தன்.
“இன்னும் உயரமா இருப்பா. தலைமுடி தரை வரைக்கும் இருக்கும். ஜோசியர் மாமி மாதிரி நீளமாக வளர்ந்த நரைச்ச தலை இல்லே. நல்ல கறுப்பு”, சிவராமன் சொன்னான்.
“சரி இப்போதைக்கு இப்படி வச்சுக்கலாம். கிட்டத்தட்ட யட்சி கமலி ஜாடை”.
வெங்கிட்டு சொன்னான். ’ஜாடை எல்லாம் எப்படி உனக்கு தெரியும்?’, அத்தனை பசங்களும் அவனுக்கு ஆக்கர் போட்டார்கள்.
சிவராமன் கொடுத்த தூள் பக்கோடாவை மென்றபடி அவர்கள் யட்சியை அலசினார்கள்.
”அப்புறம்?”
இது பையன்கள் ஆவலோடு பேச்சைத் தொடரத் தொடுக்கும் கேள்வி.
“அப்புறம் விழுப்புரம் தான்”.
“இதானே வேணாம்கிறது. சொல்லு சிவராமா”.
“அப்போ கேளுங்கடா. யட்சிக்கு சுப்பா சாஸ்திரிகள் மாதிரி ரெண்டு தோளுக்கும் நடுவிலே பெரிசு பெரிசா வீங்கியிருக்கும்”.
பூடகமாகச் சொல்லி சிரிப்பை ஆரம்பித்து வைத்தான் சிவராமன். காலேஜ் போக இருக்கும் பெரிய பையன்கள் ஆற்றங்கரைத் தோப்பில் ஒளிந்து மறைத்து சிகரெட் குடிப்பது போல பசங்கள் யட்சி வர்ணனையில், தப்பு செய்யும் முழு ஈர்ப்போடு ஈடுபட்டார்கள்.
தொடர்ந்து வந்த கேள்வி, ’தனியா மாட்டிண்டா என்ன பண்ணுவா?’. இது பெரியவர்களுக்கேயான ரகசியமான, இதுவரை அனுபவித்து அறியாத கேளிக்கை பற்றிக் கற்பனையை விரிக்கும் நேரம். அதைத் தொடங்கி வைக்கும் குறுகுறுப்புக்காகவே கேள்வி கேட்கப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும்.
”சொன்னேனேடா”.
“இன்னொரு வாட்டி சொல்லேன்”.
“தனியா மாட்டிண்டா இறுகக் கட்டிண்டு மடியிலே உக்கார்ந்துப்பா. முத்தம் கொடுப்பா. அப்புறம் ..”
“அப்புறம்?”
“இடது கை ஆள்காட்டி விரல் இருக்கு இல்லே அதை வாயில் வச்சு உறிஞ்சுவா அந்த யட்சி. பீச்சாங்கை”.
“அது நாத்தமா இருக்குமே”.
“இருக்கட்டுமே. உனக்கு என்ன போச்சு? யட்சிக்குப் பிடிச்சிருக்குன்னா ஓகே தான். அவள் அதை முழுக்க எச்சப் பண்ணிட்டு வெடுக்குனு கடிப்பா. சரியா? அப்புறம் ரத்தம் கொட்டக் கொட்ட அதைத் தரையிலே சிந்தாம ஆறின காப்பி குடிக்கற மாதிரி மடமடன்னு குடிப்பா..
வெண்டைக்காய் முனை முறிக்கற மாதிரி பட்டீர்னு .. விரல் பிஞ்சு போய் அவ வாயிலே இருந்தாலும் சுகமா இருக்குன்னு கண்ணை மூடிண்டே அவ பின்னாலே போய்ண்டிருப்போம்”.
“இடது கை ஆள்காட்டி விரல்லே என்ன விசேஷம்?”.
“ஒரு விசேஷமும் இல்லை. எந்த விரல்னாலும் சரிதான்”.
“அது நீளமா இருக்கணும். அப்படித்தானே?”.
சிவராமன் பதில் சொல்லவில்லை. எல்லாருக்கும் எல்லாம் புரிகிறது.
”கட்டக் கடோசி ஆட்டம்டா”. சிவராமன் ஓங்கிக் கத்தினான்.
ஏய்ய்ய் என்று சிரித்தபடி அவர்களுடைய பம்பரங்களைத் தரையில் குத்தி எறிந்து சுழல விட்டார்கள். கமலி மெல்ல நடந்து பக்கத்தில் வந்து கொண்டிருந்தாள்.
யார் பம்பரமோ ஊருணியில் தண்ணீர் எடுக்கக் குடத்தோடு வந்திருக்கும் அவள் முந்தானைக்கு மேலே பட்டுத் தெறித்து விட்டது. அந்தப் பம்பரம் திரும்பப் போவதற்கு முன் கமலி அதைக் கையில் பிடித்து வெறும் குடத்துக்குள் போட்டுக்கொண்டு விட்டாள்.
“முடிஞ்சா எடுத்துக்குங்கடா”.
குறுகுறுப்போடு பதினைந்து வயது கமலியை பார்த்தபடி ’பம்பரத்தை கொடு’, ’பம்பரத்தைக் கொடு’, என்றனர் கூட்டமாக. பம்பரத்தைக் கொடு அக்கா என்று போன வருஷம் கேட்டிருப்பார்கள். இப்போது கூப்பிடத் தோன்றவில்லை. குடத்தைச் சாக்கு வைத்துப் பக்கத்தில் அவள் மார்பை வெறித்துப் பார்க்க மட்டும் ஆசையாக இருக்கிறது.
”ஒழிஞ்சு போங்கடா”.
கமலி ஈரமான பம்பரத்தைத் தூக்கிப் போட்டபடி ஊருணியை நோக்கி நடந்தாள். தண்ணீர் மொண்டு, சற்றே உயர்த்திக் கட்டிய பாவாடைக்கு வெளியே ஊருணியின் செம்மண் துகள்கள் ஒட்டிய ஈரக் கால்கள் மினுமினுக்க, அவள் படியேறும்வரை பார்த்தபடி நின்றிருந்தார்கள் அவர்கள்.
அத்தனை பேரும் அவளை வெறிப்பதை அறிந்து பார்வையைத் தாழ்த்தியபடி பெருமையோடு நடந்து வந்தாள் கமலி. கொஞ்சம் பின்னால் அவளோடு தண்ணீர் எடுக்க வந்த தோழிகள்.
‘சுப்பா சாஸ்திரிகள்’.
வெங்கிட்டு கிசுகிசுத்தான். சிவராமன் ரகசியமாக ’அவங்கப்பா’ என்று சொல்ல பையன்கள் சிரிப்பை அடக்க முடியாமல் குரல் எழுப்பாது சிரித்தார்கள். குடத்தில் தண்ணீரோடு அந்தப் பெண்கள் கடந்து போக வழிவிட்டு ஒதுங்கி நின்றார்கள். இவன்கள் பம்மிப் பம்மிப் பின்வாங்க, கமலியும் இதர சிற்றாடைக் குட்டிகளும் துணிச்சலோடு அடி முன்னால் எடுத்து வைத்து ”டேய் பசங்களா” என்று இவன்களை விளித்து ”இருட்டிக்கிட்டு வருது, யட்சி துரத்தி வந்து இறுக்கிக் கையிலே பிடிச்சு இழுத்துப் போய் காலத்துக்கும் முதுகு தேய்ச்சுக் கழுவி விட வச்சுடுவா, சீக்கிரம் வீட்டுக்குப் போய் அடங்குங்கடா” என்று சிரிப்பும், சிங்காரமும் மறைமுகமாக விதைத்தபடி நடந்து போனார்கள். அந்தப் பெண்களுக்கும் யட்சி பற்றி நிறையக் கற்பனைகள் உண்டு.
யட்சியும் யட்சிக் கதைகளும் ஊரெங்கும் புழங்கி வந்த காலம் என்பதால் எல்லோருக்கும் தெரிந்ததை அங்கங்கே கொஞ்சம் புதிதாக ஒட்ட வைத்து திரும்பத் திரும்ப சுவாரசியமாகப் பகிர்ந்து கொள்வது நடக்கிறது. வயசுக்கு வந்த பெண்களுக்கும் சின்னப் பையன்களுக்கும் அவரவர் அணியாகக் கூடி இருக்கும்போது எங்கே தொடங்கி எங்கே அரைகுறையாக நிறுத்திச் சேர்ந்து சிரிப்பது என்று சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
”சீத்து பசுவன் வராண்டா”.
பம்பரத்தைத் தொளதொளவென்று தைத்த நிஜார்ப் பையில் பதுக்கியபடி கிட்டு சொன்னான்.
“நாளையிலே இருந்து அவனைச் சுத்திச் சுத்தி வந்து பொண்ணுங்க எல்லாம் பசுவா பசுவான்னு பாடிக் கோலாட்டம் போடும். கன்னத்தை தடவி விடும். முத்தம் கூடக் கொடுக்கும். ஜாலிடா”,
சிவராமன் கிண்டலும அசூயையுமாகச் சொல்லியபடி நடந்தான்.
சீத்து கோவில் வாசல் கருப்பன் தேரடிப் பக்கம் நடந்து வந்துகொண்டிருந்தான். அவனைக் கடந்து போன தண்ணீர்க் குடம் சுமந்த குமரிகள் விளையாட்டாக உள்ளங்கையில் கொஞ்சம் தண்ணீர் வார்த்து அவன் மேல் விசிறியபடி மெல்ல நடந்தார்கள். உடுத்திக் கழித்துக் கட்டிய, காலை இறுக்கிப் பிடிக்கும் கருப்பு நிஜாரும், பொம்மை போட்ட இறுக்கமான சட்டையுமாக வந்து கொண்டிருந்தான் அவன். சட்டை டாக்டர் மாமி பெண்ணுடையது. டிராயர் அவள் பிள்ளையுடையது. ரெண்டு பேரும் சீத்துவுக்கு ஒன்றிரண்டு வயது இளையவர்கள். பட்டணத்தில் படிப்பவர்கள்.
”தொடையைப் பாரு. சினிமாக்காரி மாதிரி. வேட்டி கட்டுடா”.
சீத்துவைப் ஈரக்கையால் முதுகுக்குக் கீழே பின்னால் தட்டி அவர்கள் மீதிச் சிரிப்பை ஒருமித்து சிந்தி, விழுங்குவது போல் அவனைப் பார்த்துக் கடந்து போனார்கள்.
பதிமூன்று வயதுக்கு நல்ல உயரமும், பளபளக்கும் கை காலும் தீர்க்கமான நாசியும், பெரிய கண்களுமாக அவர்களுடைய அந்தரங்கப் பேச்சிலும் கடந்து வருபவன் அவன். கொஞ்சம் அசமஞ்சமாக இருப்பதால் அவனைத் தொட்டுத் தடவிக் குறும்பு பண்ணினாலும் சும்மா சிரித்தபடியே உட்கார்ந்திருப்பான். அது போதும் அந்தப் பெண்களுக்கு.
’பசுவா பசுவா பசுவய்யா’ என்று அவர்கள் பாடியபடி போக, சீத்து தலையைத் தஞ்சாவூர்ப் பொம்மை போல ஆட்டினான்.
அவன் பசுவன் தான். வருடம் ஒரு முறை மழைக்காலம் தொடங்கும் முன் நாலு தெருப் பெண்கள் களிமண்ணால் செய்த பசுவையும் கன்றையும் வைத்துச் சுற்றி வந்து கோலாட்டம் போடும்போது நட்டநடுவே மழைக்கான தேவர்களின் பிரதிநிதியாக, பசுவோடும் கன்றோடும் வந்த பசுவனாக கழுத்தில் மல்லிகைப்பூ மாலையோடு உட்கார்ந்திருப்பான் சீத்து. ’பசுவா பசுவா பசுவய்யா’ என்று எல்லாப் பெண்களும் அவனைக் கண்களை அகல விரித்துப் பார்த்துக் கோலாட்டம் அடித்துச் சுழன்றாடுவதும் அப்படியே குளக்கரைக்கு அவன் தலையில் களிமண் பசுவையும் கன்றையும் ஏற்றிப் போய்க் கரைப்பதும் ராத்திரி மழை பெய்வதும் வருஷா வருஷம் நடக்கிற சம்பவம். எல்லா வருஷமும் பசுவன் அவன் தான். ’பசுவா பசுவய்யா’ என்று ஊர் முழுக்க கோலாட்டம் ஒலிக்கும். அந்த நேரத்தில் அவனை சீத்து என்று யாரும் கூப்பிடுவதில்லை. அவன் அம்மாவுக்குக்கூட பசுவன் தான் அவன்.
’குசுவா குசுவா குசுவய்யா’ என்று சுந்தரம் அதே மெட்டில் பாடிய போது பம்பரத்தை டிரவுசர் பாக்கெட்டில் வைத்தபடி அத்தனை பசங்களும் சிரித்துக்கொண்டே வீட்டுக்கு ஓடினார்கள். அந்தப் பெண்களும் பையன்களை விட இன்னும் உரக்கச் சிரித்தபடி நடந்தார்கள். ‘சாமியைக் கிண்டல் பண்ணாதே, மழை பெய்யாது’ என்று சொல்லவும் அவர்கள் மறக்கவில்லை. பசுவன் சீத்துவாக இருக்கும் வரை சாமி கோபித்துக் கொள்ள மாட்டாது என்று அவர்கள் எல்லோருக்கும் நம்பிக்கை உண்டு.
ஆள்காட்டி விரலை ஆகாசத்தைப் பார்த்துச் சுட்டினான் சீத்து. நாலு தடவை அப்படியே தட்டாமாலை சுற்றினான். கிறுகிறுப்பை அனுபவித்துக்கொண்டு நின்றான். மண்டையை ஆட்டிக்கொண்டு கருப்பன் தேர்ப்படி ஓரமாக உட்கார்ந்து, பிள்ளையார் கோவில் வாசலிலிருந்து பொறுக்கி எடுத்து வந்த சிதறு தேங்காய் விள்ளல்களைக் கடித்துத் தின்ன ஆரம்பித்தான் அவன்.
தேங்காய்ப் பத்தை கை நிறையக் கிடைத்தது. வீட்டுக்கு எடுத்துப் போனால் மண்டை வெல்லம் உடைத்துப் போட்டுக் கலந்து அம்மா எல்லோருக்கும் தருவாள். வெல்லத்துக்கு எங்கே போக?
ரொம்ப நாளாகக் கட்டிப்பட்டுப் போய் மளிகைக்கடை கழித்துக் கட்டி குப்பையில் போடாமல் சீத்துவின் அப்பா குஞ்சரனிடம் கொடுத்த உதிர்ந்த கருப்பட்டியைக் கலந்தாலும் சரிதான். வீட்டில் எல்லோரும் சேர்ந்து இருந்து சாப்பிடலாம். தனியாக இங்கே உட்கார்ந்து அத்தனையையும் சாப்பிட வேண்டாம் என்று ஒரு விள்ளல் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை டிராயர் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டபோது தொடையைப் பார்த்தான். யட்சிக்கு இப்படித்தான் இருக்குமா?
யட்சி இன்றைக்கு வருவாளா? அவளுடைய நினைவு பலமாகக் கவிந்தது அவன் மனதில். யட்சியின் பக்கத்தில் இருக்க வேண்டும், பக்கத்தில் பொம்மை வைத்துக் கொண்டு குழந்தை தூங்குவது போல யட்சியைப் பக்கத்தில் இழுத்துப் போட்டுக்கொண்டு கூட உறங்க வேண்டும் என ஆசை.
(தொடரும்)
April 1, 2021
டாக்டர் பாஸ்ட் என்றொரு காவியம் நாடகமானது
என் ‘வேம்பநாட்டுக் காயல்’ மின்நூலில் இருந்து
எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டர் குழுவின் பாஸ்ட் நாடகத்தைப் பார்க்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
இரண்டு பாகமாக அமைந்த நாடகம். ஒவ்வொரு பாகமும் இரண்டு, இரண்டேகால் மணி நேரம் நிகழக்கூடியது. ஒரே நாளில் நிகழ்த்தப்படும் போது பார்க்கப் போனால், பிற்பகலிலிருந்து ராத்திரி பத்து மணி வரை நாடகம் பார்க்க, கொட்டகைக் கடையில் பியர் குடிக்க, மூத்திரம் போக, சாயந்திரம் தட்டுக்கடையில் சூடாக டோநட், சாயா, பக்கத்து டிராவர்ஸ் தியேட்டரிலும், அஷர் ஹால் இசையரங்கிலும் அடுத்து என்ன நிகழ்ச்சி, எப்போது என்று விளம்பரங்களை மேய்வது, லோத்தியன் வீதி பங்களாதேஷ் சாப்பாட்டுக் கடையில் ரொட்டி, ராத்திரி போஜனம், திரும்ப நாடகம் என்று தொடர்ந்து செலவழிக்க வேண்டி வரும்.
நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கிட்டத்தட்ட இருபது பவுண்ட் கட்டணம். ஆனாலும் எடின்பரோ லைசியம் தியேட்டரில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக ‘பாஸ்ட்’ அவை நிறைந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் இரண்டாம் வாரம் வரையான காட்சிகளுக்குக் கணிசமாக நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.
அரங்கில் நுழைந்தபோது கிட்டத்தட்ட எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. இரண்டு பக்கத்திலும் வெள்ளைக்கார மூதாட்டிகள் கையில் பைனாகுலரோடு அமர்ந்திருக்க, நடு இருக்கையில் உட்கார வேண்டிய கட்டாயம்.
நாடகம் உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம்.
ஐரோப்பிய இலக்கிய சாதனைகளை யார் பட்டியல் போட்டாலும் தவறாமல் இடம் பெறுவது ஜெர்மன் கவிஞர் கதே எழுதிய கவிதை நாடகமான பாஸ்ட் (Faust). பதினேழாம் நூற்றாண்டு மத்தியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியப் பகுதி வரை வாழ்ந்த கதே அரசியல், கலை, இலக்கியம் என்று எல்லா வகையிலும் பரபரப்பாக விளங்கிய இந்த இரண்டு நூற்றாண்டுகளின் சிந்தனை ஓட்டங்களையும், அவற்றை மீறிய அசாத்தியப் படைப்பு ஆற்றலையும் இந்தக் கவிதை நாடகத்தில் வடிக்க எடுத்துக் கொண்ட காலம் கிட்டத்தட்ட அறுபது வருடம். அவருடைய வாழ்நாள் சாதனை என்று தயங்காமல் சொல்லலாம் இரண்டு பாகமாக அமைந்த இந்தப் படைப்பை.
ஹோமரின் கிரேக்க இதிகாசமான இலியாதில் வரும் நாயகி ட்ராய் நகரப் பேரரசி ஹெலன், சாமானியர்கள்,சாத்தான், தெய்வம், மிருகங்கள் என்று கிட்டத்தட்ட நூறு கதாபாத்திரங்கள் கொண்ட இந்தப் படைப்பை மேடையேற்றுவது அசுர சாதனை என்று தான் சொல்ல வேண்டும். லைசியம் தியேட்டர் நாடகக் குழுவினர் இதை அனாசயமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.
அதுவும் போன நூற்றாண்டு இலக்கியப் படைப்பை நவீன மேடை உத்திகள், பின் நவீனத்துவ நாடகமொழி இவற்றின் அடிப்படையில், நிகழ்கால பிரக்ஞையும், காலப் பிரமாணமும் கச்சிதமாகப் பொருந்திவரும்படிக்கு.
உடலுறவு பற்றி சதா உதிர்க்கப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் நாடகம் முழுக்க விரவி இருப்பதைக் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். தமிழ்ச் சூழலில் இதுதான் நிகழ்கலையான நாடகம் என்று தெரிவிக்கப்பட்டு நிகழ்த்தப்படும்போது பார்வையாளர்களாக இருந்தும், நாடகப் பிரதியை வாசித்தும் வளர்ந்தவர்களுக்கு, என்னதான் ஐரோப்பிய நாடக வளர்ச்சி பற்றிய புரிதல் இருந்தாலும், உடலுறவை கிட்டத்தட்ட நிகழ்த்திக்காட்டும் காட்சியமைப்புகள் அதிர்ச்சியை உண்டாக்கக் கூடும். கூட்டப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி போன்றவை இவை.
கதேயின் நாடக நாயகன் டாக்டர் பாஸ்ட் வானளாவிய அதிகாரம் கிடைக்க ஏங்குகிறான். உலகத்தின் சகலமான இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான். கேட்டதைத் தருகிறேன் என்று முன்வருகிறான் மெபிஸ்டபிலிஸ் என்ற பெயரில் வரும் சாத்தான். ஒரே ஒரு நிபந்தனை. பாஸ்ட் சாத்தானுக்குத் தன் ஆன்மாவை ஒப்புத்தரவேண்டும். எந்த ஒரு இன்பத்தை அனுபவிக்கும்போது அதில் அமிழ்ந்து வெளியேறி அடுத்த இன்ப அனுபவத்துக்கு வர முடியாமல் போகிறதோ, அப்போது பாஸ்ட் சாத்தானுக்கு அடிமையாகி விடுவான். ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுத்தரும் பாஸ்ட்டும், அவன் கூடவே மெபிஸ்டபிலிஸும் போகிற வெளி, உள் பயணங்களின் ஒழுங்கமைவு ஜாக்கிரதையாகக் குலைக்கப்பட்ட தொகுப்பு தான் ‘பாஸ்ட்’ நாடகம்.
‘இன்பத்தின் எல்லைகளை அனுபவிக்க வேணும்’ என்கிற பாஸ்ட் உடல் சார்ந்த இன்பத்தின் எல்லைகளைத் தொடும்போது தயங்குகிறான். ‘எல்லைகளை அனுபவிக்க வேண்டும். ஒரு எல்லைக்கு உட்பட்டு’ என்று திருத்திச் சொல்கிற பாஸ்ட் இந்தக்காலத் தயக்கமும், குழப்பமும் கலந்த மதிப்பீடுகளின் பிரதிநிதி.
சுழலும் நாடக மேடை. மேடைக்குள் மேடையாக இன்னொரு அரங்கம், மேடையைச் சுற்றிக் கவிந்து பிரம்மாண்டமான புத்தக அலமாரிகளாக, சுற்றிச் சூழ்ந்து இறுகும் கூண்டுகளாக, பாத்திரங்கள் அவ்வப்போது ஏறி இறங்கி, இருந்து அபிநயிக்கும் மேடை வெளியாக பிரம்மாண்டமான இரும்புச் சட்டகங்கள். பின்னால் திரையில் அவ்வப்போது விடியோ ப்ரஜெக்ஷனாக கோள்கள், வானப்பரப்பு என்று விரியும் காட்சிகள். மேடையில் பொதுவாகவும், சூழும் இருளுக்கு நடுவே குறிப்பிட்ட இடத்திலும் படரும் ஸ்ட்ரோபிக் ஒளியமைப்பு. தொழில் நுட்பம் நயமாகப் பயன்படுத்தப்பட்டு, பாஸ்ட் நாடகத்தைச் சிறப்பாக்குகிறது.
கூடவே, எளிய காட்சியமைப்புகள். பல காட்சிகளில் கட்டியங்காரன் போல் இயக்குனரும் ஒரு பாத்திரமாக மேடையில் நாற்காலி போட்டு ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறார். ‘இந்தப் பாத்திரம் உள்ளே போகலாம்’ என்று அவர் உரக்கச் சொல்ல, பாதிப் பேச்சில் ஒரு கதாபாத்திரம் மறைகிறது. ‘தெருவில் நடக்கிறான் பாஸ்ட்’ என்று சொல்ல, செட் பிராப்பர்ட்டி எதுவும் கண்ணில் காட்டாமல், மேடை சட்டென்று தெருவாகிறது. காட்சியைச் சட்டென்று முடிக்க வேண்டியிருந்தால், ‘உயிரைக் கொண்டு போக தேவதைகள் வரலாம்’ என்று அவர் அறிவிக்க, இரண்டு தேவதைகள் உள்ளே வர, இழுத்துப் பறிக்காமல் ஒரு மரணம். காட்சி முடிவு.
நாடகத்தின் முதல் பகுதியில் பெண் கதாபாத்திரமான கிரட்சென், பாஸ்ட் அவளுடைய படுக்கையறையில் மறைத்துவைத்துப்போன அழகான உடையைப் பார்க்கிறாள். தோழி தூண்ட, உடுத்தியிருந்ததைக் களைந்துவிட்டு அங்கேயே புது உடுப்பை மாற்றிக்கொண்டு அழகு பார்க்கிறாள். அவள் தோழியை சாத்தான் மயக்குகிறான். சுவரில் சாய்ந்து அவனோடு வாய்வழிப் புணர்ச்சியில் தோழி ஈடுபட, பாஸ்டோடு படுக்கையைப் பகிர்கிறாள் கிரட்சென். இரண்டு பக்கத்திலும் பெண் பார்வையாளர்கள் இருக்க, நடுவில் உட்கார்ந்து இதைப் பார்க்கச் சங்கடமாக இருந்தாலும், கதையும், வசனமும், நாடக ஆக்கமும் இருக்கையில் உட்காரவைத்தன.
நாடகத்தின் இரண்டாம் பகுதியில் பாஸ்ட் பேரழகியும் கிரேக்க மகாராணியும் ஆன ஹெலனைச் சந்திக்க விரும்புகிறான். கடல் தேவதைகளும் சாத்ததனும் கேட்டுக்கொண்டபடி அவன் முழு உடுப்பையும் களைய வேண்டி வருகிறது. பிறந்த மேனிக்கு மேடையில் நின்று வசனம் பேசும் பாஸ்ட், அப்படியே மெல்ல நடந்து பின்னால் போக, பக்கத்தில் சத்தம். திரும்பிப் பார்க்க, பைனாகுலர்கள் உயர்ந்திருந்தன.
March 24, 2021
அவன் தூக்கி எறிந்த பலா இலையை மேய்ந்த மாடு துரைத்தன பாஷையில் இரைய ஆரம்பித்தது
என் நாவல் ‘அரசூர் வம்சம்’ நூலில் இருந்து ஓர் அத்தியாயம்
————————————————————–
சாவக்காட்டு வேதக்கார பிராமணனுக்குப் புதையல் கிடைத்திருக்கிறது.
ஊர் முழுக்க இதுதான் பேச்சாக இருக்கிறது. சேரமான் காலத்துக் காசு பணம், தங்க ஆபரணங்கள், பளிங்குக் குப்பி. நூதன வஸ்துக்கள்.
ஒரு பெரிய பானை. அது முழுக்க இந்த சமாச்சாரம் எல்லாம்.
சாவக்காட்டானைக் குடியிருக்கும் வீட்டுக்குக் குடக்கூலி கொடுக்காத காரணத்தால் வீட்டுக்காரன் சவட்டிப் புறத்தாக்கிய பிற்பாடு இதெல்லாம் கூடி நடந்தேறியிருக்கிறது. புறத்தாக்கிய வீட்டுக்காரனும் வேதத்தில் ஏறிய இன்னொரு சாவக்காட்டுப் பிராமணன் தான்.
தோமையனோடு கூடப் போன வம்ச வழி வந்தவர்கள் அவனைப் புல்லே என்றுதான் பார்த்திருந்தார்கள். அம்பலப்புழை தேகண்டப் பிராமணர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவியலுக்கும், புளிங்கறிக்கும் காய் நறுக்கிக் கொடுத்துக் கூடமாட ஒத்தாசை செய்கிறேன், ஒரு கும்பா சாதம் போடு என்று நாயாகப் போய் நின்றாலும் எட்டி உதைத்து அனுப்பினார்கள்.
ஆனாலும் தெய்வம் என்று ஒன்று இருக்கிறதே. தோமையனோடு போனால் என்ன, வைக்கத்தப்பன் கோவில் சுற்றம்பலத்தில் தீவட்டி பிடித்துக்கொண்டு தொழுதபடி புறப்பாட்டுக்கு முன்னால் நடந்து போனால் என்ன ?
குடியிருந்த ஓட்டை மனையிடத்தை விட்டு விரட்டியானதும், சாவக்காட்டுக் கிழவன் குப்பைமேட்டுக்குப் போய் ஒண்டிக் கொண்டான். அது வெறும் மண்மேடு இல்லைதான். அவன் பூர்வீகர்கள் எந்தக் கொல்ல வருஷத்திலோ ஏற்படுத்தி, மழையும் வெயிலும் ஊறி ஊறி மனுஷ வாசம் கொள்ளத் தகுதி இழந்து அங்கே வெகு நாள் ஒரு பழைய வீடு நின்றுகொண்டிருந்தது. அது முழுக்க விழுந்து போய்க் குப்பைமேடாயிருந்த இடமாக்கும் அவன் போனது .
இடிந்து விழுந்ததை எல்லாம் எடுத்துக் கழித்து விட்டு, நாலு தூணும், மேலே தென்னோலையுமாக நிறுத்த அவன் தச்சனிடம் வேண்டிக் கொள்ள, தச்சனும் பரிதாபப்பட்டு வேலையை ஆரம்பித்தான். கிழவனுடைய அரைஞாணில் அரைக்கால் வராகன் பெறுமானமுள்ள தங்கம் இருப்பதாகவும் இருக்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் அதை நல்ல வண்ணம் சுத்தி செய்து கூலிப்பணத்துக்கு மாற்றாக ஒப்படைப்பதாகவும் தச்சனிடம் சாவக்காட்டான் சொன்னதும் இதற்கு ஒரு காரணம். தச்சன் நம்பித்தான் ஆகவேண்டி இருந்தது. தங்கம் இருக்கிறதா என்று உடுப்பை உருவியா பார்க்க முடியும் ?
தச்சன் முளை அடித்துக்கொண்டிருக்க, கிழவன் மண்வெட்டி கொண்டு ஒரு மூலையில் பீர்க்கை பயிரிடக் குழிக்கிறேன் என்று உட்கார்ந்திருக்கிறான்.
பிராந்தோ என்று உரக்கச் சந்தேகப்பட்டபடி தச்சன் உளியைத் தன்பாட்டில் இழைக்க, கிழவன் தோண்டிய இடத்தில் டண்டண் என்று சத்தம். என்ன விஷயம் என்று எழுந்துபோய்ப் பார்க்க, நாலு நாழி அரிசி வடிக்கிற அளவிலே உலோகப் பானை ஒண்ணு கிட்டியதாம்.
கிளவனைப் பேப்பட்டி போல புறத்தாக்கினதாச் சொன்னேளே, இப்பப் பாருங்கோ, ரத்னமும் தங்கமுமா அவன் எங்கே உசரத்துலே கேரியாச்சு. நமக்கு இந்த பாசகம், தேகண்டம். ஜன்மத்துக்கும் இதுகூடியல்லாதே வேறே உண்டோ ?
சிநேகாம்பாள் கிட்டாவய்யனிடம் இரைந்து கொண்டிருந்தது ஊர்க் கோடி, யட்சிக்காவு, குளங்கரை, நெல்பாட்டம் எல்லாம் தாண்டி அடுத்த கிராமம் வரை கேட்டிருக்கும்.
கிட்டாவய்யனுக்கும் அந்த வகையில் வருத்தம்தான். பிரஸ்தாப தினத்தில் என்னமோ ரெளத்ரம் தலைக்கேறிப் போய்விட்டது அவனுக்கு. அந்தப் பைராகிகள் வேறே காரே பூரே என்று இந்துஸ்தானியில் அவனையும் அவன் தகப்பனனயும் பிறத்தியாரையும் கிழங்கு கிழங்காக வசவு உதிர்ந்துவிழத் திட்டிவிட்டுப் போனது போல் இருந்தது. உச்சி வெய்யில் நேரத்தில் உயிர்த்தலத்தில் கொட்டிய குளவி வேறே இனிமேல் வம்சவிருத்தி பண்ண முடியுமா என்று அவ்வப்போது மனதில் பிருபிருக்க வைத்தது. ஆனாலும், சிநேகாம்பாள் இந்த மாதம் தூரம் குளிக்காமல் போனதாகச் சொன்னபோது அந்த விஷயத்தில் சேதாரமாக ஒண்ணுமில்லை என்றும் பட்டது.
எல்லாம் கிடக்கட்டும். கிழவனை மனையிலேற்றினது போல இந்தச் சாவக்காட்டு வேதக்காரன் இப்படி உச்சாணிக் கொப்புக்குப் போவான் என்று கிட்டாவய்யன் சொப்பனத்திலும் நினைக்கவே இல்லை.
இது ராஜாக்கன்மார்க்குப் போகவேண்டிய தனம். மூவாட்டுப்புழையில் இருக்கப்பட்ட ராஜப்பிரதானியிடம் இதைச் சேர்ப்பிக்கிறதே நியாயம் என்று விருத்தனுக்குத் தனம் கிடைத்தது தெரிந்து வயிறெரிந்தவர்கள் சொன்னார்கள். அப்போது தெய்வம் மாதிரிப் பாதிரி வந்து உத்தரவாக்கிப் போட்டது இது.
தேடுகிறவன் கிடைக்கிற வரை தேடிக்கொண்டிருக்கட்டும். கிடைத்தபோது அவனுக்கு ஆச்சரியம் உண்டாகட்டும் என்று தோமையர் புனித வார்த்தை உச்சரித்துப் போனதை அனுசரித்து இந்த மனுஷ்யனுக்குக் கிட்டிய திரவியமெல்லாம் இவனுக்கானதே. ராயனுக்கும் சுங்கத்துக்கும் ஒரு சக்கரமும் இவன் கொடுக்க வேண்டியதில்லை.
எல்லாரும் மாரில் குரிசு வரைந்து கொண்டு அதுவுஞ்சரிதான் என்று புறப்பட்டானபோது, தோமையனை வரி விடாமல் படித்து நித்திய பாராயணம் செய்யும் ஒரு மத்திய வயசுக் கிறிஸ்தியானி விடாமல் சந்தேகம் கேட்டான்.
பிரபு, தெய்வ துல்யமான தோமையர் சொன்னது இந்தப்படிக்கு இல்லையோ ? தேடுகிறவன் கிடைக்கிற வரை தேடிக்கொண்டிருக்கட்டும். கிடைத்தபோது அவனுக்குச் சகிக்கவொண்ணாத மனக் கிலேசம் வரும். அப்புறம் ரோமாஞ்சனத்தோடு பிடரி மயிர் கோரித் தரிக்கும்படிக்கு வெகுவாக ஓர் ஆச்சரியமுண்டாகும். இதை நீங்கள் பள்ளியில் அன்றைக்குப் பிரசங்கிக்கவில்லையோ ? உங்களுக்கு விரலில் நகச்சுற்று ஏற்பட்டு எலுமிச்சம்பழம் அரிந்து பொருத்திப் பிடித்தபடி உபதேசித்த மழைநாள் என்பதாக அடியேனுக்கு ஓர்மை. இந்தப் பாவப்பட்ட மனுஷ்யன் அன்வேஷிச்சுக் கண்டெத்திய விதத்தில் அவனுக்கு வேதம் விதித்த அப்பேர்க்கொத்த துக்கம் ஏதும் மனசிலே உண்டானதோ ?
பாதிரி அவன் நெற்றியில் குரிசு வரைந்தார். சமாதானமுண்டாகப் பிரார்த்தித்து விட்டு, ஒரு வாக்கு அரை வாக்கு குறைந்தாலும் தேவ வாக்கு, தேவ வாக்கில்லையோ என்று பிரியமாகக் கேட்டார். அவன் குனிந்து வணங்கி விட்டு அந்தாண்டை போனான்.
கொடுங்கல்லூரில் மாதா கோவில் கல்பாளங்களை இடிச்சுப் பொளிச்சுப் புதிதாக ஏற்படுத்தி வைக்க முழுச் செலவையும் புதுப்பணக்காரனான சாவக்காட்டு வேதக்காரப் பிராமணன் ஏற்பதாக வாக்குத்தத்தம் செய்ததைக் குடையும், பட்டுத்துணியுமாகக் குதிரையில் ஏறும்போது அந்தப் பாதிரி சொல்லிப் போனார்.
சாவக்காட்டானுக்குப் பழம்பானையிலிருந்து சில பழைய அபூர்வ ஓலைச் சுவடிகளும், கூடவே ஒரு குப்பியில் ஏதோ திரவமும் கூடக் கிடைத்ததாகப் பிரஸ்தாபம்.
சுவடிகள் தமிழ்ச் செய்யுளாக இருந்தபடியால் அவற்றைப் பாண்டிப் பிரதேசப் பண்டிதர் ஒருத்தரிடம் கொடுத்து அதற்கு ஏதாவது விலை படிந்து வந்தால் விற்றுத் தரும்படி சொன்னான் அவன்.
மேற்படி பண்டிதரும் அதையெல்லாம் தீரப் பரிசோதித்து, எழுத்து அத்தரைக்கொண்ணும் அர்த்தமாகவில்லை என்றும் அது சேரமான் பெருமாள் கைலாசம் போக விமானம் கட்டியது பற்றிய விளக்கமாகவோ அல்லாத பட்சத்தில், வஞ்சி என்ற பேரூரின் கழிவு நீர்ச் சாக்கடை அமைப்பு பற்றியதாகவோ இருக்கும் என்றும் தெரிவித்தார். நூதனமாக இப்படியான சுவடிகளை அச்சுப் போடுகிறவர்கள் திருவனந்தபுரத்திலும் சென்னைப் பட்டணத்திலும் தொழில் ஆரம்பித்து இருப்பதாகவும், அவர்களிடம் இதைக் காகிதப் புத்தகமாக உண்டாக்கி வாங்கினால் அதை துரைத்தனப் பணம் ஒரு ரூபாய் வீதம் ஆயுர்வேத வைத்தியர்களிடமும், பாண்டி வைத்தியர்களிடமும் விற்கலாம் என்றார் அவர்.
வைத்தியர்கள் இப்படிப் படிக்காத, அவர்களுக்குக் கிஞ்சித்தும் தேவைப்படாத கிரந்தங்களைச் சேகரித்து வைப்பது அவற்றின் நெடி ரோகிகளின் மேல் படப்பட நோய் குறையும் சாத்தியப்பாட்டை உத்தேசித்துத்தான் என்று பாண்டிப் பண்டிதர் சொன்னபோது இது விஷயமாக சாவகாசமாக யோசிக்கலாம் என்று கல்பித்து சாவக்காட்டான் அவரை அனுப்பி விட்டான்.
புதையலாகக் கிடைத்த பணத்தில் ஊர் மூப்பர்கள் சொன்னபடிக்குச் செலவு பண்ணி ஆசாரிமாரையும், மூசாரிகளையும் கொண்டு கொஞ்சம்போல் வசதியான ஒரு ரெண்டுகட்டு வீடு ஏற்படுத்திக் கொண்டான் அவன். மீதிப் பணத்தில் கணிசமான பகுதியை லேவாதேவி நடத்தப் பாண்டி நாட்டிலிருந்து வந்த பெரியகருப்பன் செட்டியிடமும், சுயஜாதிக்காரனும், பெரிய தோதில் கொப்பரை கச்சவடம் செய்கிறவனுமான மலியக்கல் தோமையிடமும் பிரித்துக் கொடுத்து வட்டி வாங்கிவர ஆரம்பித்தான்.
ஆனாலும் பெரிய குப்பியில் இருந்த திரவம் வேறே மாதிரி. அதை எடுத்தபோது குப்பியின் வெளியே வழிந்ததை சாவக்காடன் தன் தலையில் துடைத்துக் கொள்ள திரவம் பட்ட இடம் கருப்பு முடியானதோடு பளிச்சென்று பிரகாசமாக ஒளிரவும் ஆரம்பித்தது. ஆனால் பக்கத்தில் நின்றவன் தலைமுடி கொழிந்து உடனே கொத்துக் கொத்தாகத் தரையில் விழுந்தது.
சாவக்காட்டான் மருந்தை ஒரு சொட்டு இரண்டு சொட்டு குடிக்கலாமா என்று யோசித்தான். அப்புறம் அது வேண்டாம் என்று வைத்து விட்டான். இவன் குடித்துப் பக்கத்தில் இருப்பவன் யாராவது உசிரை விட்டால் ஏகக் களேபரமாகி விடும். அதன் பிற்பாடு யாரோ சொன்னதால் மேலமங்கலம் நம்பூதிரிகளை அழைத்து அஷ்டமாங்கல்யப் பிரச்னம் வைத்துப் பார்த்தான்.
அந்தப் பிரசன்னதன்றைக்கு கிட்டாவய்யன் தான் தேகண்டத்துக்குப் போனது. பட்டு வஸ்திரமும், நடையில் மிடுக்குமாக சாவக்காட்டு வேதக்காரன் இஞ்சிம்புளி கிண்டிக் கொண்டிருந்த கிட்டாவய்யனிடம் வந்து நின்று எப்படி ஓய் நடக்கிறது எல்லாம் ? வர்ஜா வர்ஜமில்லாமல் ஊரில் இருக்கப்பட்ட தனவான்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். உம் சாப்பாடு திருப்தியாக இல்லாத பட்சத்தில் இந்தப் பிரதேசத்திலேயே உமக்கு உத்தியோகம் கிட்டாது போயிடும் என்றான்.
அவனுடைய முகத்தில் ஒரு குரூர சந்தோஷத்தைப் பார்த்தான் கிட்டாவய்யன் அப்போது.
அஷ்டமாங்கல்யப் பிரச்னத்தின் முடிவில் சோமாத்ரி அடுதிரிப்பாடு அஸ்ஸலாயி என்று திருப்தியோடு சொன்னது இப்படி இருந்தது.
சாவக்காட்டு வேதக்காரன் இத்தர நாள் கஷ்டிச்ச ஜீவிதம் அனுபவிச்சது சொவ்வாயும் குசனும் அவன் ஜென்ம ஜாதகத்தில் இருந்த ஸ்தானம் கொண்டு. அது கழிந்து போனகாலம். இனிமேல் கொண்டு அவனுக்குப் பூர்வீகர் அனுக்ரஹம் பரிபூர்ணமாக உண்டு. அந்தக் குப்பி அமிர்தம் கொண்டதாகும். தண்ணி மத்தங்காயில் நடுவிலே அதைப் பிரதிஷ்டை செய்து கிழக்கே பார்த்து வைத்து ஒரு மண்டலம் இஷ்ட தெய்வத்தைப் பூஜிக்க வேணும். அது தோமையனோ, கிறிஸ்து பகவானோ ஆனாலும் சரி. அப்புறம் அந்தக் குப்பியை வெளியே எடுத்துப் பானம் பண்ணினால் அவனுக்கு யெளவனம் திரும்பும்.
இதை வேறே யாருக்காவது கொடுக்கலாமா ?
அவன் கேட்டபோது அடுதிரிப்பாடு அதுக்குப் பாடில்லை என்று சொல்லிவிட்டார். அப்படியே குடித்தாலும், அவர்களுக்கு தேக ஆரோக்கியம் கெடாது என்றும் உயிருக்கு ஆபத்து இல்லையென்றும் சொன்னவர் பிரச்னம் வைத்த இடத்தில் பூவை எடுத்து நகர்த்தியபடிக்குத் தொடர்ந்தார்-
அப்படிக் குடித்த மனுஷ்யர்கள் தப்பும் தவறுமாகத் துரைத்தன பாஷை பேச ஆரம்பித்து விடுவார்கள். உமக்கு இப்போது நல்லதெல்லாம் கூடிவரும் காலம். இப்படி ராஜ நிந்தனையாக நாலைந்து பேரைப் படைத்து அனுப்பி உம் பேரைக் கெடுத்துக் கொள்ளலாமா சொல்லும்.
சாவக்காட்டு வேதக்காரன் அப்புறம் அப்படியே ஒரு மண்டலம் மந்திர உருவேற்றம் செய்து அந்தக் குப்பியிலே இருந்து ஒரு பலா இலை மடக்கில் கொஞ்சம் எடுத்து மாந்திவிட்டு இரண்டு நாள் தொடர்ந்து கண்ணாடிக்கு முன்னால் சாட்டியமாக நிற்க ஒரு சுக்கும் இல்லை.
ஆனால் அவன் தூக்கி எறிந்த அந்தப் பலா இலையை மேய்ந்த தெருவிலே போன மாடு ஒன்று அரைகுறையாகத் துரைத்தனப் பாஷையில் இரைய ஆரம்பித்தது. மாட்டுக்காரன் சாவக்காட்டு வேதக்காரன் வீட்டில் ஏறி அவனிடம் பிராது கொடுத்தான்.
இப்படி என் பசுமாட்டை ராஜ தூஷணம் செய்ய வைத்து விட்டார்களே. இது கறக்கிற பாலும் இனி விலை போக மாட்டாதே. ஊரில் ஒருத்தனாவது அதைக் கையால் தொடவும் துணிவானா ? மாட்டைப் பழையபடி ஆக்கிப் போடும். இல்லாத பட்சத்தில் நீரே அதை எடுத்துக்கொண்டு அதுக்குண்டான பணத்தை அடையும்.
சாவக்காட்டான் மறுபேச்சு பேசாமல் மாட்டை அவன் சொன்ன விலை கொடுத்து வாங்கிக் கொட்டிலில் கட்ட அது ராத்திரி முழுக்க ஏதோ அன்னிய பாஷையில் பிரலாபித்துக் கொண்டிருந்தது. அது கறந்த பாலை வீணாக்க மனம் இல்லாமல் தினசரி சுண்டக் காய்ச்சி வெல்லப்பாகு சேர்த்து அம்பலத்தில் பாதியும், கொடுங்கல்லூர் பள்ளியில் மீதியுமாக விநியோகிக்கக் கொடுத்தான். அப்புறம் பாதிரி வந்து இந்த மாதிரிப் பிராணிகளை வீட்டில் வளர்க்காமல் இருப்பது நல்லது என்று சொல்லிப் போனார்.
ஆனால், அம்பல மேல்சாந்தி, சாவக்காட்டன் தத்தாத்ரேய ரிஷி கோத்திரத்தில் பட்டவன் என்பதாகக் கண்டறிந்து அந்தப் பாலை அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவதில் யாதொரு பிரச்னையும் இல்லை என்று சொல்லி விட்டார். பசுவையும் அம்பலத்திலேயே பராமரிக்கவும் அவர் ஏற்றுக் கொண்டார்.
சாவக்காட்டான் அனுப்பிய துரைத்தன பாஷை பேசும் பசுவின் பாலில் அபிடேகமான தேவி முகத்தில் அற்புதமான களை தென்பட்டதாக சிநேகாம்பாள் அம்பலத்துக்குப் போய்விட்டு வந்து கிட்டாவய்யனிடம் தெரிவித்தாள்.
அம்பலத்தில் பூதங்களி பார்க்க வீட்டோடு எல்லோரும் போயிருந்த நேரம் அது.
பூதம் பூதமா ஆடறதை எல்லாம் நான் பாக்க மாட்டேன். குழந்தைகளும் பயந்திடும். கிருஷ்ணனாட்டம்னா வரேன்.
சிநேகாம்பாளுக்கு பூதங்களி பிடிக்காது என்றில்லை. அவளுக்கு கிட்டாவய்யனிடம் பேச வேண்டி இருந்ததே காரணம்.
சாவக்காட்டார் மனைக்கு ஒரு நடை நடந்துட்டு வாங்களேன்.
ராத்திரியில் தனிக்கு இருக்கும்போது அவன் பூணூலைப் பிடித்து இழுத்தபடி சொன்னாள் சிநேகாம்பாள்.
ஏது விஷயமா ?
கிட்டாவய்யன் அவள் வாயில் முத்தம் கொடுக்க உத்தேசித்துக் கொஞ்சம் முன்னால் நீண்டிருந்த பற்கள் முந்தின நாள் உதட்டில் ஏற்படுத்தின தடம் இன்னும் காயாததால் கழுத்துக்குக் கீழே முத்தம் கொடுத்தான். பக்கத்தில் படுத்திருந்த மூத்த பெண் புரண்ட படிக்கே பகவதி அத்தை கல்யாணத்துக்கு எனக்குப் பட்டுப்பாவாடை வேணும் என்று தூக்கத்தில் சொன்னாள்.
வாங்கித் தரேண்டா குஞ்சே.
கிட்டாவய்யன் அவள் தலையைப் பிரியமாகத் தடவ அவள் திரும்பவும் நல்ல உறக்கத்தில் ஆகியிருந்தாள்.
பகவதிக்குட்டி கல்யாணத்துக்கு காணியை விக்கணும்கறாரே உங்க அண்ணா ?
சிநேகாம்பாள் கேட்டாள்.
ஆமா, கொஞ்சமாவது நம்ம அந்தஸ்துக்குத் தக்க மாதிரி தங்கமும் வெள்ளியும் ஸ்திரிதனமாகத் தர வேண்டாமா ?
இருக்கறதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உங்க அக்கா, தங்கைமார் கல்யாணத்துக்கே அழிச்சாச்சு. மிச்சமும் போறதுக்குள்ளே நமக்கும் ஒரு வழி பண்ணிக்க வேண்டாமா ?
கிட்டாவய்ய்யன் அவள் மாரில் கைவைத்து அளைந்தபடி இருந்தான். அவளை இடுப்பை அணைத்துப் பிடித்து உள்ளுக்குக் கூட்டிப் போக வேணும். எல்லாரும் வர நேரம் கொஞ்சம் தான் இருக்கிறது.
அரிசியும் சணல் மூடையுமாக வாடையடிக்கும் அறையில் சிநேகாம்பாள் மேல் அவன் படர்ந்தபோது அவள் சொன்னாள்.
உங்க பங்கு காணியை வித்த பணம் கொஞ்சம். சாவக்காட்டாரிடம் கொஞ்சமாக் கடம் மேடிச்சு ஒரு துகை. போதும். சாப்பாட்டுக் கடை போட்டுடலாம். ஆலப்புழையிலே இல்லே கொல்லத்துலேயோ.
முயக்கத்தின் உச்சியில் கூட அவர்கள் எதுவும் பேசவிடாதபடிக்குச் சாப்பாட்டுக் கடை மனதில் எழுந்து நின்று கொண்டிருந்தது.
March 20, 2021
மூதாதையர் உண்டுபோக ஓர் உணவு – அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து
உங்கம்மா சுமங்கலியாப் போயிட்டா. அப்பாவும் தீர்க்காயுசா இருந்து கல்யாணச் சாவு தான். பித்ரு காரியத்தை மட்டும் குறை வைக்காம பண்ணு. மாசாந்திரம் அமாவாசைக்குப் பண்ணாட்டாலும் பரவாயில்லே. இது வருஷ முடிவிலே வர்றது. அனிவர்சரி. மேரேஜுக்கு கொண்டாடறது மாதிரி ஜாம்ஜாம்னு செய்ய வேண்டிய காரியம். உங்கப்பாவும் சந்தோஷப்படுவார் கேட்டுக்கோ. ஷேமமா இரு.
சீனு வாத்தியார் காலையில் வந்ததும் தெற்கிலிருந்து திவசத்துக்கு மூதாதையர் சகிதம் புறப்பட்டு வந்து கொண்டிருந்த சாமாவுக்கும் கேட்கிற சத்ததில் இரைந்து ஆசிர்வாதம் சொல்லி, ஆத்துக்காரியை வரச் சொல்லு என்றார்.
நான் மட்டும்தான் வந்திருக்கேன்.
பம்மிப் பதுங்கிச் சொன்னான் சின்னச் சங்கரன் அப்போது.
சாஸ்திர விரோதமாகத் தான் எந்த நல்ல, அல்லாத காரியத்தையும் இந்த ஜன்மம் எடுத்து ஓடிக் கொண்டிருக்கிற இந்த அறுபத்து ரெண்டு வயசு வரை நடத்தி வைத்ததில்லை என்றும் இனி இருக்கக் கூடிய சொற்ப காலத்திலும் அந்த சீலத்தை மாற்ற உத்தேசம் இல்லை என்றும் இன்னும் பெருஞ்சத்தமாக, சாமா விதிர்விதிர்க்கவும், கூட வந்தபடி இருக்கும் முன்னோர்கள் இது ஏதடா ஏடாகூடமாச்சே, நிலைமை சரியாக என்ன செய்யணுமோ என்று மருகவுமாகச் சொன்னார் சீனு வாத்தியார்.
தியாகராஜ சாஸ்திரிகள் தான் கை கொடுத்தார். தில்லியில் வீட்டு வாசல்படி தாண்டி நகர முடியாதபடி சின்னச் சங்கரன் பெண்டாட்டியின் – மாமி பெயரென்னடா – வசந்தா. வசந்தலட்சுமி உடம்பு ஸ்திதி கொஞ்சம் காஸிங் கன்சர்ண். டாக்டர்கள், சங்கரனும் அங்கேயே இருந்து அவளைக் கவனித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் கண்டிப்பாகச் சொன்னாலும், அக்கம் பக்கத்தில் சொல்லி வைத்து விட்டு, வீட்டோடு இருக்க நர்சம்மாவையும் பெரும் செலவில் அமர்த்தி விட்டு சங்கரன் இங்கே வந்தான். ஆபீசில் லீவு கிடைக்காமல் கடைசி நிமிஷத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு புறப்பட்டது, மூணு ராத்திரி ரெண்டு பகல் முழுக்கக் கூட்டமான ரயிலில் நின்றும், கக்கூஸ் பக்கம் ஈரத் தரையில் உட்கார்ந்தும் மெட்றாஸ் போய்ச் சேர்ந்தது, மெட்றாஸில் இருந்து பல பஸ் மாறி ராத்திரி முழுக்கத் தூங்காமல், முழங்கால் வீங்கி உடம்புச் சூட்டில் கண் பொங்கி, தலைக்குள் குடைச்சலான அவஸ்தையோடு அரசூருக்கு வந்து சேர்ந்தது எல்லாமே இங்கே வைதீக காரியம் முடங்காமல் நடத்தித் தரத்தான் என்று ஏகத்துக்கு சங்கரனின் அவஸ்தைகளைப் பட்டியலிட்டார் தியாகராஜ சாஸ்திரிகள். அதில் பலதும் சங்கரனே அறியாதது.
புரோகிதத்துக்கான தட்சணையைக் கணிசமாக உயர்த்தும் உத்தேசத்தோடு சங்கரன் வந்திருக்கிறான். கோதானம் கொடுக்கவும் பணமும் மனமும் உண்டு. வெங்கடாசலக் கோனாரிடம் சொல்லி வைத்து அவர் காராம் பசுவோடு வந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பணம் கொடுத்து பசுவை வாங்கித் தானமாக சீனு வாத்தியாருக்குக் கொடுத்து, ஒரு மணி நேரம் கழித்து சீனு வாத்தியார் கோனாருக்கே, வாங்கினதுக்கு ஐம்பது ரூபாய் குறைவாகப் பசுவை விற்று விடலாம். இதையெல்லாம் உத்தேசித்து, ஒரு தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதை சின்னச் சங்கரன் பெண்டாட்டியாக சங்கல்பித்து, ஆத்திர அவசரத்துக்குத் தோஷமில்லை என்றபடி, எடுத்த காரியத்தை நல்ல படிக்கு நிறைவேற்றி முடிக்க வேண்டியது தான்.
போறது, இவரோட அப்பா சாமா தங்கமான மனுஷர். அப்பேர்க்கொத்தவர், திதிக்கு வந்துட்டு பசியோடு திரும்பினா, என்னடா வைதீகன் நீன்னு என்னையில்லையோ சபிப்பார்? தாங்குவேனா?
சீனு வாத்தியார் அதிகமாகவே நடுநடுங்கி வசந்தியைத் தருப்பையில் சங்கல்பித்து மளமளவென்று வருஷாப்திக காரியத்தை நடத்திப் போய்க் கொண்டிருக்கிறார்.
மீதி இருக்கப்பட்ட நெய்யை எல்லாம் அக்னியிலே விட்டுடுப்பா. எலை போடச் சொல்லு.
சீனு வாத்தியார் அறிவித்ததற்குப் பத்து நிமிஷம் கழித்து வைதீகர்கள் சாப்பிட்டுத் திருப்தி அறிவித்து வாசலுக்குப் போக, கொம்பில் ஜவந்திப் பூ சுற்றி, நெற்றியில் குங்குமம் வைத்து நின்றிருந்த பசு மாடு தானமாகியது.
தெருவில் இருந்த, சாமாவுக்கும், புகையிலைக்கடை குடும்பத்துக்கும் வேண்டப்பட்ட ஒரு முப்பது பேர் பேச்சு நெடுக சுவாதீனமாக சாமாவை நினைவு கூர்ந்தபடி, பெரிய இலையில் விளம்பப்பட்ட நேர்த்தியான வாழைக்காய்ப் பொறியல், கொத்தவரங்காய்க் கறி, அவரைக்காய்க் கூட்டு, பாகற்காய்ப் புளிக்கூட்டு, இஞ்சித் துவையல், வெல்லம் போட்ட பாசிப்பருப்புப் பாயசம், பால் திரட்டுப் பால், எள்ளுருண்டை, உளுந்துவடை, அப்பம், மிளகூட்டான், புத்துருக்கான நெய், சம்பா அரிசிச் சாதம், சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு, மிளகரைத்த காரக் குழம்பு, ரசம், தயிர்ப் பச்சடி, மாங்காய்ப் பச்சடி, சேனை வறுவல், கெட்டியான மோர், பலாச் சுளை, வாழைப்பழம் என்று ரெண்டு பந்தியாக இருந்து, திருப்தியாக உண்டு முடித்துக் கிளம்பிப் போனார்கள்.
March 17, 2021
என் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா’ நூல் மதிப்புரை
சாகித்ய அகாதமி கேட்டுக் கொண்டபடி நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் வரும் எழுத்தாளர் சுஜாதா பற்றிய நூலுக்கு நண்பர் மந்திரமூர்த்தி அழகு அவர்கள் எழுதிய அறிமுகம் – மதிப்பீடு.
இந்நூல் விரைவில் வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து சாகித்ய அகாதமியால் வெளியிடப்படும்.
இந்திய இலக்கியச் சிற்பிகள்(சுஜாதா) – இரா முருகன்
வெளியீடு: சாகித்ய அகாதமி
முதல் பதிப்பு- 2020
பக்கங்கள்: 130
விலை: ரூ 50
இந்திய இலக்கியச் சிற்பிகள்- சுஜாதா என்ற இந்த நூல் பதிமூன்று தலைப்புகளில் எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகளை அணுகி இருக்கிறது; முக்கியமாக சிறுகதைகள், அறிவியல், புனைவு, அறிவியல் கட்டுரைகள், நாடகங்கள், வரலாற்றுப் புதினங்கள், ஸ்ரீரங்கத்துக் கதைகள் ஆகியவற்றைக் குறித்துச் சற்று விரிவாக தகவல்களைத் தருகிறது. சுஜாதாவின் நகைச்சுவை குறித்த ஓர் அத்தியாயம் சாகித்ய அகாதமியின் பக்கங்களின் எல்லை அளவு காரணமாக இந்த நூலில் இடம் பெறாமல் போனது வாசகர்களுக்கு ஓர் இழப்பு என்றே சொல்ல வேண்டும்.
எழுத்தாளர் சுஜாதா தமிழ் வாசகர்களிடம் இரண்டறக் கலந்தவர்; தமிழில் வாசிப்பை வார்த்து எடுத்ததிலும், வளர்த்ததிலும் சுஜாதாவுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. எந்தவிதமான வெளிச்சமும் இல்லாமல் எழுபது எண்பதுகளில் எழுத்துத் துறைகளில் புதிதாக எழுத வருகின்ற இளைஞர்களை அவர்களது படைப்புகளின் அடிப்படையில் அடையாளம் கண்டு வாசகர்கள் மத்தியில் அடையாளம் காட்டிய பெருமையும் சுஜாதாவிற்கு உண்டு.
சுஜாதா இலக்கியச் சிந்தனைக்காக 12 சிறந்த சிறுகதைகளை வரிசைப்படுத்திச் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்த கட்டுரை, கதைகளை எப்படி அணுக வேண்டும் என்பதை உணர்த்துகின்ற ஒன்று. இந்த நூலில் எழுத்தாளர் இரா முருகன் அவர்கள் சுஜாதாவைப் பற்றிய செய்திகளை முழுமையான ஓர் ஆய்வு கட்டுரையாகவே தந்திருக்கின்றார். நடிகர் திலகம் சிவாஜி பாரத் பட்டம் பெறாததால் எப்படி அவர் நடிப்புப் பெருமைக்குக் குறைவில்லையோ அது போல சுஜாதா சாகித்ய அகாதமி விருது பெறாததால் அவரதுஎழுத்துப் பெருமைக்கு ஒருவிதத்திலும் குறை இல்லை என்றே சொல்ல வேண்டும்.
எழுத்தாளர் சுஜாதாவின் இளமைக்காலம் முதல் அவருடைய இறுதிக்காலம் வரை உள்ள சுஜாதாவின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளையும், அவருடைய வாழ்நிலை குறித்த தகவல்களையும் இந்த நூலில் தருகிறார் இரா.முருகன. சுஜாதாவை வரையறுக்கப்பட்ட பக்கங்களில் பாரபட்சமில்லாமல் நுணுக்கமாக அணுகி இந்த நூலில் பதிவு செய்கிறார் இரா.முருகன்.
இனி எழுத்தாளர் இரா.முருகன் இந்த நூலில் தரும் முக்கியமான தகவல்களைக் காணலாம்.
400-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 60 நாவல்கள், 40 நாவல்கள், 15 மேடை நாடகங்கள், 20 கட்டுரைத் தொகுதிகள், பத்துக்கும் மேற்பட்ட திரைக்கதை உரையாடல்கள், ஒற்றைக் கவிதை தொகுதி என்று தமிழில் சாதித்து காட்டினார் சுஜாதா. அந்தக் கால எழுத்தாளர்கள் ‘கல்கி கோத்திரம்’ போல இந்தக் கால எழுத்தாளர்கள் பலரும் ‘சுஜாதா கோத்திரம்’ என்று ரா.கி ரங்கராஜன் சொல்வதை நினைவு கூர்கிறார் இரா.முருகன். புனைவிலும், அபுனைவிலும் அவர் சாதித்தது அனேகம். தொழில் நுட்ப அறிவையும் அது சார்ந்த அனுபவ அறிவையும் தமிழில் பகிர்ந்துகொண்ட அவருடைய எழுத்துகள் தனித்துவம் வாய்ந்தவை. இந்த 21ஆம் நூற்றாண்டுக்கு இளைஞர் அணியைத் தயார் படுத்திய எழுத்துகள் அவை.
சுஜாதாவின் பள்ளித் தோழரான கஸ்தூரிரங்கனுடைய கணையாழி பத்திரிக்கையில் 1966 -இல் இருந்து 1996-ஆம் ஆண்டு முடிய சுமார் 30 ஆண்டுகள் அதனுடைய கடைசிப் பக்கத்தை எழுதிய பெருமை சுஜாதாவுக்கு உண்டு. கணையாழி கடைசிப் பக்கம் தமிழ் இலக்கிய உலகில் வழிகாட்டுதலாக உச்சக்கட்டப் பெருமையாக இன்றும் விளங்குகிறது.
சிறுகதைக்குரிய எளிய விளக்கமாக சுஜாதா ” உருவம், உள்ளடக்கம் என்று பலர் சிறுகதை குறித்து ஜல்லி அடிப்பதைக் கேட்டிருக்கிறேன். டெண்டர் நோட்டீஸ் கூட உருவமும் உள்ளடக்கமும் இருக்கிறது. பின் சிறுகதை என்பதுதான் என்ன? கூர்ந்து கவனியுங்கள்! சிறுகதை என்பது ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம் . சிறுகதை வெற்றியடைய எழுத்தாளரின் செறிவான அனுபவப்பகிர்வின் அடிப்படையில் அது அமைவது மட்டுமல்ல. எழுத்தாளர் கேட்ட, பார்த்த நிகழ்வுகள் அவருள் ஏற்படுத்திய சலனமும் கூட சிறுகதைக்குக் கைகொடுக்கும். சிறுகதை என்பது கோபம், ஆர்வம், வெறுப்பு போன்ற ஒன்பதில் ஏதேனும் ஒன்று வருமளவுக்கு ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும். பிரச்சனைக்குத் தீர்வு காண்பதையும், பிரச்சனை என்ன என்று சொல்வதையும் குழப்பாமல் ஒரு கலைஞனுக்கு பின்னதுதான் கட்டாயமானது எனபதை உணர்ந்து எழுதுவது” என்று குறிப்பிடுகிறார்.
சுஜாதாவினுடைய மிகச் சிறந்த சிறுகதைகளாக மட்டுமல்ல; தமிழின் சிறந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்ததாகவும் ரேணுகா, முதல் மனைவி, குதிரைக் கிச்சாமி, ஒரு லட்சம் புத்தகங்கள், நகரம், திமலா, நச்சுப் பொய்கை, மஹாபலி ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார் இரா.முருகன். அவற்றின் கதைச் சுருக்கத்துடன், முக்கியத்துவத்தையும் அவர் இந்த நூலில் விளக்குகிறார்.
அறிவியல் கதை என்றால் என்ன? என்று இந்த நூலில் விளக்குகிறார் இரா.முருகன். சுஜாதாவின் அறிவியல் கதைகளில் ராகவேனியம் 277, சூரியன், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, சொர்க்கத் தீவு, திசை கண்டேன் வான் கண்டேன் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் குறிப்பிடுகிறார்.
தன் கல்லூரிக் கால நண்பரும் முன்னாள் ஜனாதிபதியுமான திரு அப்துல் கலாம் குறித்து சுஜாதா சொல்வது: ” கலாமும் நானும் சேர்ந்து இந்திய ராக்கெட் இயலைப் பற்றி திப்பு சுல்தானிலிருந்து ஆரம்பித்து ஒரு புத்தகம் எழுதுவதாக திட்டம் போட்டோம் அவரை எப்போது விமானத்திலோ, விமான நிலையத்திலோ பார்த்தாலும் ‘கலாம், என்ன ஆச்சு புத்தகம்?’ என்பேன் எம்ஐடி-யின் ஐம்பதாம் ஆண்டு துவக்க விழாவில் பார்த்த போது கூட இதோ…. அடுத்த மாதம் லீவு எடுத்துட்டு 10 நாள் வரேன்யா! ரெண்டு பேரும் முதல்ல மைசூர் போவோம். அங்கே எழுத ஆரம்பிச்சுரலாம்” என்றார்.
எப்படிக் கணையாழியின் கடைசி பக்கங்கள் சுஜாதாவின் இலக்கியப் பரிச்சயம் கொண்ட வாசகர்களின் உள்ளம் கவர்ந்து நீண்ட காலம் சிறு பத்திரிக்கையான கணையாழியில் வெளியானதோ அதேபோல வெகுஜனப் பத்திரிகையில் தொடர்ந்து வாசகர்களின் பேராதரவோடு நீண்ட நெடும் பயணம் செய்த பத்திக் கட்டுரைகள் ‘கற்றதும் பெற்றதும்’. நான்கு நூல்களாக இவை தொகுக்கப்பட்டுள்ள செய்தியையும் நூலில் பதிவு செய்திருக்கிறார் இரா.முருகன்.
நாடகங்களைப் பொறுத்த அளவில் சுஜாதாவினுடைய படைப்புகள் நடிப்பதற்காக மட்டுமல்ல, வாசிப்பதற்கும் எழுதப்பட்ட சிறப்புடையது அவை என்பதை மறக்கக்கூடாது என்கிறார் இரா. முருகன்.
இந்த நூலின் மிகப் பெரிய சிறப்புகளில் ஒன்றாக எழுத்தாளர் இரா முருகன் அவர்கள் சுஜாதாவினுடைய ஸ்ரீரங்கத்துக் கதைகள் குறித்து தனியாக ஒரு அத்தியாயம் அமைத்ததுடன் அவற்றை ஆதியோடு அந்தமாக அலசுவதைக் கூறலாம். இந்த நூலை வாசிக்கின்ற ஒவ்வொரு வாசகனுக்கும் ஸ்ரீரங்கத்துக் கதைகளை வாசிக்க வேண்டும்/ மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்துவதுதே இரா. முருகனின் வெற்றி. பயோ பிக்ஷன் என்ற பிரயோகம் தமிழில் பரவலாக தற்போது பயன்படுத்தப்படுகிறது. சுஜாதா வெகு காலத்திற்கு முன்பே அவ்வகைக் கதைகளை நிறைய எழுதியிருக்கிறார். மூன்று பகுதிகளாக இந்த ஸ்ரீரங்கத்துக் கதைகள் வெளியானவை. 83 -இல் சாவி வார பத்திரிக்கையில் முதல் 7 கதைகள் வெளிவந்தன 2003-ஆம் ஆண்டில் இன்னொரு எட்டுக் கதைகள் ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் என்ற பெயரில் விகடன் வாரப் பத்திரிகையில் வெளியாகின. 1983-ஆம் ஆண்டுக்கும் 2003 -க்கும் இடைப்பட்ட சுமார் 20 வருட காலத்தில் அவ்வப்போது பல பத்திரிகைகளில் சுஜாதா ஸ்ரீரங்கம் பற்றிய கதைகளை எழுதியிருக்கிறார். அவற்றை சுஜாதாவின் சீடரும், நண்பருமாகிய ஸ்ரீரங்க தேசிகன் கோர்த்திருக்கிறார். இவை அனைத்தும் ஸ்ரீரங்கம் கதைகள் என்ற பொதுப் பிரிவில் அடங்குபவை.
காலம் எப்படி எழுத்தாளனை நடத்திப் போகிறது என்பதைச் சுருக்கமாக தனது ஸ்ரீரங்கத்து கதைகள் தொகுப்பில் சொல்கிறார் சுஜாதா. “ஓர் எழுத்தாளன் கதை எழுதும் போது மூன்று விதமான சக்திகள் பின்னணியில் செயல்படுகின்றன. ஒன்று அவனுடைய கதை சொல்லும் திறமை, உத்தி, நடை போன்றவை. இரண்டு அவன் ஞாபகங்கள் மூன்று மாறிவரும் அவன் கவலைகள் ”
சுஜாதாவின் வரலாற்றுப் புதினங்கள் ரத்தம் ஒரே நிறம், காந்தளூர் வசந்தகுமாரன் கதை ஆகிய இரண்டைப் பற்றியும் நூல் பேசுகிறது.
சுஜாதாவினுடைய சிறந்த அரசியல் புதினங்களாக பதவிக்காக, 24 ரூபாய்த் தீவு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார் இரா. முருகன்.
சுஜாதாவின் திரைப்படத்துறை பற்றிய நாவலான ‘கனவுத் தொழிற்சாலை’ திரைக்குப் பின் இயங்கும் ஒளியும் நிழலும் ஆன உலகத்தைக் காட்டுவதில் வெற்றி பெறுகிறது.
இளைய சமுதாயத்தோடு உற்சாகமாகத் தன் படைப்பாற்றலை சுஜாதா இணைத்துக்கொண்டு எழுதியதற்குச் சான்று அவரின் ‘பிரிவோம் சந்திப்போம்’ நாவல். இரண்டு பகுதிகளாக இந்தியாவையும், அமெரிக்காவையும் கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்டு வெளியான புதினம் இது.
எழுத்தாளர் சுஜாதாவை இன்றையத் தமிழ் வாசகருக்கு முழுமையாக வெளிச்சம் செய்து காட்டுகின்ற மிகச் சிறப்பான நூல் இது. சுஜாதாவினுடைய எழுத்தின் வீச்சினையும், பரந்து, விரிந்து கிடக்கும் அவரது படைப்புகளையும் குறித்து ஒரே பார்வையில் உணரவைக்கும் நூல் இது.
இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா என்ற இரா.முருகனின் இந்த நூல் எழுதப்பட்டவர், எழுதியவர் ஆகிய இருவரது பெயர்களையும் என்றும் பெருமையோடு தாங்கி நிற்கும் என்றால் அது மிகையல்ல.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

