இரா. முருகன்'s Blog, page 81
March 17, 2021
லூயி புனுவலும் பெட்ரோ அல்மடோவரும் கூட வர தேம்ஸ் நதிக்கரையில் ஒரு மதுக்கடை தனில்
என் ‘லண்டன் டயரி’ நூலில் இருந்து (கிழக்கு பதிப்பகம் வெளியீடு)
சாயந்திரமும் ராத்திரியும் சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்ளும் நேரம். மெல்லப் படர்ந்து கொண்டிருக்கும் இருட்டில் லண்டன் நகருக்குக் குறுக்கே கோடு கிழித்தபடி நீண்டு விரிந்து கிடக்கும் தேம்ஸ் நதி. கரை நெடுக்க நியான் விளக்குகளும், மெர்க்குரி வேப்பர் குழல் விளக்குகளும் பிரகாசிக்கும் கட்டிடங்களிலிருந்து கசியும் ஒளி. அது நதியலைகளில் பிரதிபலித்தும் மறைந்தும் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. நதிக்கரையில் ஒரு மதுக்கடை. பின்வரிசை நாற்காலியில் நான். மற்றும் இத்தாலிய, பிரஞ்சு நண்பர்கள் இருவர்.
விடுமுறை நாள் இது. காலையிலிருந்து திரைப்பட விழா கொண்டாடி, ராபர்ட்டோ ரோஸலினி, லூயி புனுவல், பெட்ரோ ஆல்மடோவார் என்று திரையுலகச் சிற்பிகளின் படங்களை வரிசையாகப் பார்த்து முடித்து, விவாதித்தபடியே மதுக்கடையில் நுழைந்திருக்கிறோம்.
“மதுக்கடை வினாடிவினா நடக்கப் போகிறது. நீங்களும் பங்கேற்கிறீர்களா?” என்று விசாரிக்கிறார் கடை உபசரிப்புப் பெண். “இல்லை; ஆளுக்கொரு கோப்பை ஒயின் போதும்” என்று சிரித்தபடி தலையசைக்கிறார் நண்பர் பாஸ்க்யூல். இத்தாலிய உச்சரிப்பில் அவருடைய ஆங்கிலம் மென்மையான சங்கீதம் போல் ஒலிக்கிறது.
“லூயி புனுவல் சினிமாவின் விஷ¤வல் சர்ரியலிசத்தில் சால்வடார் டாலி ஓவிய பாதிப்பு”. பிரஞ்சு நண்பர் அந்த்வான் விவாதத்தைத் தொடர, நான் கைகாட்டி நிறுத்துகிறேன். “இன்றைக்கு முழுக்க இலக்கியத்தரமான சினிமாவை சுவாசித்து. பகல் சாப்பாட்டோடு மென்று, குடிதண்ணீரோடு கலக்கிக் குடித்தாகிவிட்டது. வேறே ஏதாவது பேசலாமே. உதாரணமாக இந்த மதுக்கடை பற்றி, அந்த தேம்ஸ் நதி பற்றி”.
“அது தேம்ஸ் இல்லை, டெம்ஸ்”, இத்தாலிய நண்பர் சிரித்தபடி குவளையை உயர்த்துகிறார். சினிமா வரலாற்றோடு, லண்டன் சரித்திரமும் முழுக்கத் தெரிந்தவர்.
“ஒண்ணாம் ஜார்ஜ் மன்னனின் அம்மா ஜெர்மனியிலிருந்து வந்தவராம். ஜார்ஜ்க்கு தேம்ஸ் என்று சொல்ல நாக்குப் புரளவில்லை. ஜெர்மன் மொழி உச்சரிப்பில் டெம்ஸ் என்று அரசன் சொல்ல, என்னத்துக்கு வம்பு என்று அரசவையில் எல்லோருமே மரியாதையை உத்தேசித்து அதேபடி டெம்ஸ் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்”. ராஜா உச்சரிச்சா அது ராங்காப் போனதில்லை என்பதால் இன்றைக்கும் அதிகாரபூர்வமான உச்சரிப்பு டெம்ஸ்தான்.
இளங்கோவடிகள் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், ‘நடந்தாய் வாழி தேம்ஸ்’ என்று அந்த நதியைப் பெண்ணாக உருவகித்துப் பாடியிருக்க முடியாது. காரணம், இந்த நாட்டுப் பாரம்பரியப் பிரகாரம் தேம்ஸ் நதி ஆண். நதியம்மா இல்லை. நதியப்பா.
அப்பாவோ, அம்மாவோ, ஆயிரம் வருடத்துக்கு மேலாக தேம்ஸ் நதிக்கரையில் மக்கள் குடியிருக்கிறார்கள். அதில் படகு ஓட்டிப் போகிறார்கள். நூற்றைம்பது வருடம் முன்புவரை தேம்ஸில் குளித்திருக்கிறார்கள். மீன் பிடித்திருக்கிறார்கள். கரையில் பல தொழில் நடத்தி, நதியை அங்கங்கே தேங்கி நிற்கச் செய்திருக்கிறார்கள்.
1666-ம் வருடம் லண்டனில் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டு மூன்று நாள் தொடர்ந்து ஊரே பற்றி எரிந்தது. அப்போது கூட இருக்க இடம் கிடைக்காமல், லண்டன் பாலத்தில் இரு பக்கத்திலும் வரிசையாகக் கூரை எழுப்பிக் கீழ்த்தட்டு மக்கள் வசித்திருக்கிறார்கள். பாலத்தில் வீடு கட்டி தண்ணீருக்கு மேல் இருந்ததாலோ என்னமோ ஊரை எல்லாம் அழித்த அந்த நெருப்பு பாலத்தில் ஏறாமல் நின்றுவிட்டது.
ஆனாலும் நதிக்கரையிலும், நதிக்குக் குறுக்கே ஆற்றுப் பாலத்திலும் சகலரும் இஷ்டத்துக்கு அசுத்தம் செய்ய, அந்தக் கால தேம்ஸ் இந்தக்காலக் கூவம் போல் மணக்க ஆரம்பித்தது. காற்று அதிகமான நேரங்களில் லண்டன் முழுக்க இந்த சுகந்த பரிமள வாசம் நிறைந்து பரவ, மக்கள் மூக்கைக் கையால் பொத்திக்கொண்டு நடைபயில வேண்டிப் போனது. அந்தப்படிக்கே சாப்பிடவோ அல்லது அதைவிட முக்கியமாக மதுக்கடையில் பியர் குடிக்கவோ கஷ்டமாக இருந்ததால் அரசாங்க அலுவலகங்களில் புகார் மனுக்கள் குவிந்தன. 1858-ம் வருடம் ஒரு பகல் பொழுதில் தேம்ஸ் நதியில் எழுந்த உச்சபட்ச வாடை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புகுந்து அடர்த்தியாகக் கவிய, எதிர்க்கட்சி மட்டுமில்லை, ஆளுங்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து உடனடியாக வெளிநடப்பு அல்லது வெளியோட்டம் செய்ய வேண்டி வந்தது. உலக சரித்திரத்திலேயே கழிவுநீர் வாடை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டிவந்தது முதல்தடவையாக அப்போதுதான்.
இத்தாலிய நண்பர் டெம்ஸ் நதியின் பழங்கதையைச் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டிருக்க, எந்த வாடையும் இல்லாது, பளிங்கு போல் தண்ணீரோடு சுத்தபத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக்கால தேம்ஸை நினைத்துப் பார்க்கிறேன். இருபது கோடி லிட்டர் சுத்த நீர். காஸ்டோல்ட் பகுதியில் பிறந்து வடகடலில் கலக்கிறவரை மாசுமறுவற்று ஓடுகிற ஆற்றில் ஒரு தேங்கலோ அடைப்போ அசுத்தமோ கிடையாது என்று நண்பர் சொல்லும்போது ‘எங்க தலைநகரத்துலேயும் இப்படி ஒரு ஆறு இருக்கு’ என்கிறேன். இத்தாலிய நண்பர் இப்போதைக்கு சென்னை வரப்போவதில்லை என்பதில் ஒரு ஆறுதல்.
மதுக்கடையில் ‘பப் க்விஸ்’ என்ற வினாடிவினா ஆரம்பமாகிறது. மைக்கைப் பிடித்தபடி ஒருத்தர் குடிமக்களுக்கு முன்னால் மேடையில் கேள்வி கேட்கத் தயாராக நிற்கிறார். சுற்றிலும் பார்க்கிறேன். முட்டக் குடித்தபடி இருக்கும் இந்த ஜனக்கூட்டத்திடம் என்ன க்விஸ் நடத்தப் போகிறார்? இரண்டு விரலை விரித்துக் காட்டி இது எத்தனை என்று கேட்டு, உத்தேசமாகச் சரியாக மூணு என்று சொன்னவர்களுக்குப் பரிசாக இன்னொரு கோப்பை பியர் கொடுப்பார்களோ?
“தேம்ஸ் நதியில் ஒருகாலத்தில் மீன்பிடிக்கும் தொழில் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. பெரிய வலை விரித்துப் பெரிய மீனைப் பிடிப்பது போதாமல், ஆகக் குறுகிய வலை நெய்து சின்னச் சின்ன, வயதுக்கு வராத மீனை எல்லாம் வாரி எடுப்பது தொடர்ந்தது. சட்டம் போட்டு வலை சைஸ் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இப்போது தேம்ஸில் மீனே கிடைப்பதில்லை. ஆனால் அன்னப்பறவை அவ்வப்போது தட்டுப்படும். அதை வேட்டையாடத் தடை உத்தரவு அமலில் உள்ளது. அன்னப்பறவை மாமிசம் சாப்பிட இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மட்டுமே அனுமதி உண்டு. எலிசபெத் ராணியின் அம்மா மகாராணி இரண்டு வருஷம் முன்னால் அன்னம் ரோஸ்ட் சாப்பிட்டுவிட்டுத்தான் கடைசி மூச்சை விட்டார் ” நண்பர் தேம்ஸ் கதையைத் தொடர்கிறார். அந்த அன்னத்துக்குப் பதிலாக சுடச்சுட சீரகச் சம்பா அன்னம், சாம்பார், கீரை மசியல் சாப்பிட்டிருந்தால் ராணிப்பாட்டி இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்திருப்பார் என்று தோன்றுகிறது.
“சுட்டுக் கொல்லப்பட்ட இங்கிலாந்து பிரதமர் யார்?” மதுக்கடை வினாடிவினா நடத்துனர் நிறுத்தி நிதானமாகக் கேட்கிறார். சாயந்திரம் பத்திரிகை படிக்காமல் போனது நினைவு வர, பதறுகிறேன்.
“1812-ம் வருடம் மே பதினொண்ணாம் தேதி நாடாளுமன்ற வராந்தாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்பென்சர் பெர்சிவல்” விக்கலுக்கு நடுவே ஒரு குடிமகன் பியர் கோப்பையை உயர்த்திச் சொல்லிய விடை சரியானதாக அறிவிக்கப்படுவதைக் கேட்டபடி வெளியே வருகிறேன்.
March 16, 2021
வாழ்ந்து போதீரே நாவலில் ஒரு மதுரைக் காட்சி – 1960களில்
இது டவுண்ஹால் வீதி.நேரே நடந்து போனா ஆவணி மூல வீதி. அது மேலக் கோபுரத்துக்கு கொண்டு போய் விடும். மிஞ்சிப் போனா பத்து நிமிஷம். தெரு வேடிக்கை பூரா பார்த்துக்கிட்டு போங்க. கேமரா உண்டுதானே?
நல்ல யோசனை தான். நடக்கத் தலைப்பட்டாள் கொச்சு தெரிசா. காமிராவை எடுத்து வந்து போகிற இடம் எல்லாம் படம் பிடிக்கும் சுற்றுப் பயணிகளுக்கான ஆவலும் ஆர்வமும் போன இடம் தெரியவில்லை. சொந்த ஊரில், சொந்த வீட்டில் மூலை முடுக்கெல்லாம் படம் எடுத்து வைத்துக் கொள்வார்களா என்ன? யாருக்குக் கொண்டு போய்க் காட்ட அதெல்லாம் வேண்டியிருக்கிறது?
கடை வாசல்களைக் கூட வீட்டு வாசல்கள் போல், கரிசனத்தோடு கூட்டிப் பெருக்கி, குளிரக் குளிரத் தண்ணீர் எடுத்து விசிறித் தெளிப்பதும், நீர் நனைத்த படிகளில் நேர்த்தியாகக் கோலம் போடுகிறதும் கண்ணில் பட கேமிராவை எடுத்து வந்திருக்கலாமே என்று தோன்றியது கொச்சு தெரிசாவுக்கு. படம் எடுத்து எதற்கு வேற்று மனுஷர்களுக்குக் காட்டி ஆனந்தப்பட வேணும்? தானே பார்த்து மகிழலாமே.
இன்னும் திறக்காத கடை வாசலில் உட்கார்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பவரை எப்படியோ கொச்சு தெரிசா அறிவாள். தேஜா உ தானா என்றால் தெரியாது. இந்தக் கடைத் தெருவும், வாசல் தெளிக்கும் பெண்கள் இழுத்து வார்த்தைகளை நீட்டிப் பேசும் குரலும், புல்லாங்குழலும், மண்ணில் நீர் பட்டு எழும் வாசமும் எல்லாம் அவளுக்கு ஏற்கனவே அறிமுகமானவை. எங்கே?
மேலக் கோபுர வாசலில் மணக்க மணக்க அல்லிப்பூ கட்டிக் கொண்டிருந்த இளம்பெண் கொச்சு தெரிசாவைப் பார்த்தாள். ஒரு வினாடி பூத்தொடுப்பதை நிறுத்தி இன்னொரு பூவாக மலர்ந்து சிரித்தாள் அவள்.
அக்கா, பூ வாங்கி வச்சுட்டுப் போங்க. மனசுக்கு நிறைவா மனோரஞ்சிதம் இது.
கொச்சு தெரிசா பூ வாங்கினாள்.
இதைக் கையிலேயே வைத்துக் கொண்டு கோவிலுக்குப் போய் அப்புறம் கண்காணாத இடத்தில் போட்டு விடலாம் என்று நினைப்பு. கண்ணில் தட்டுப் படுகிற பெண்கள் எல்லோரும் தலையில் பூச்சூட்டி இருக்கிறார்கள். இந்த மிதமிஞ்சிய வாசனையோடு நடக்க முடியுமா, சுவாசித்துக் கொண்டிருக்க முடியுமா என்று அவளுக்குத் தெரியவில்லை.
கைப்பையில் கைவிட்டுத் தேட, மூன்று பத்து ரூபாய் தாள்கள், கிட்டத்தட்ட பத்திரிகையை எட்டாக மடித்த வடிவத்தில் பெரிசு பெரிசாகத் தட்டுப் பட்டன.
இது போதுமா இருந்துதுன்னா வச்சுக்கோ. இன்னும் வேணும்னா சொல்லு.
பூத்தொடுக்கும் பெண்ணிடம் சொல்ல, அவள் செல்லமாக கொச்சு தெரிசாவைக் கோபிக்கிறவளாக உதட்டைச் சுழித்தபடி அவளையே பார்த்தாள். அந்தப் பெண்ணைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு கூடப் பிறந்தவள் போல, உயிர்த் தோழி போல கொண்டாட வேண்டும் என்று கொச்சு தெரிசாவுக்குத் தோன்றியது.
அக்கா, இந்தப் பூவுக்கு நீங்க கொடுக்கற காசு நான் விலை வைச்சு விக்கறதை விட ரொம்ப ரொம்ப அதிகம். இவ்வளவு எல்லாம் கொடுத்து என்னைக் கெடுத்திடாதீங்க நாச்சியா. ரெண்டு ரூபா கொடுங்க, போதும் மகராசி.
அவள் இரண்டு விரலை நீட்டியதைப் புரிந்து கொண்டு இன்னும் இரண்டு பத்து ரூபாய் நீட்டினாள் கொச்சு தெரிசா. பூக்காரிப் பெண் டூ ரூபீஸ் டூ ருபீஸ் என நினைவு வந்த இங்கிலீஷில் தடுமாற, இது கொச்சு தெரிசா சிரிக்கும் வேளை.
அந்தப் பெண் எழுந்து நின்று கொச்சு தெரிசாவை அருகில் கூப்பிட்டாள்.
அக்கா பெயர் என்ன?
கொச்சு தெரிசா.
நான் மீனு. மீனம்மா.
மீனு கொச்சு தெரிசாவைத் திரும்பி நிற்கச் சொல்லி விட்டு அவள் கூந்தலில் பாந்தமாக அவள் வாங்கிய பூவைச் சூட்டி விட்டாள்.
உங்க தலைமுடிக்கு இன்னும் கூட வைக்கலாம். கதம்பம் ஜோரா இருக்கும். இருங்க அக்கா.
அவளாகப் பரிசாகக் கொடுப்பதையும் கொச்சு தெரிசாவுக்கு வைத்து விட்டாள்.
விழுந்துடாம நடப்பீங்களா அக்கா? நீங்க இல்லே, பூவு.
ரொம்பப் புரிந்தது போல் தலையாட்டினாள் கொச்சு தெரிசா.
எங்கே, சொன்னா மட்டும் ஆச்சா, விழுந்துடும் இதெல்லாம். எதுக்கு வம்பு? யக்கா, நில்லுங்க.
அந்தப் பெண் வில்லில் அம்பு எய்வது போல் அபிநயித்து தன் தலையில் வைத்திருந்த ஹேர்பின் இரண்டை உருவி எடுத்து கொச்சு தெரிசா தலைக்கு இடம் மாற்றினாள்.
கொச்சு தெரிசாவுக்கு குளிப்பாட்டித் தலை துடைத்து விட்ட தீபஜோதிப் பாட்டித் தள்ளை நினைவு வந்து நீங்கிப் போனாள்.
இந்த ஹேர்பின்னுக்கு காசு? கொச்சு தெரிசா மென்று விழுங்கினாள். பூக்காரி அவளை வேடிக்கையாகப் பார்த்தாள். அவள் பின்னலைப் பிடித்து இழுத்து விட்டுச் சொன்னாள் –
இப்போ அம்சமா இருக்கு அக்கா.
கொச்சு தெரிசா தேங்க்ஸ் சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினாள்.
நில்லுங்க. நில்லுங்க.
அவசரமாகக் குனிந்து புது ரோஜாப் பூ ஒன்றையும் பூத்தட்டில் இருந்து எடுத்து அவள் காதோரம் சாய்வாகச் செருகி, தான் செய்த அலங்காரத்தைத் தானே ரசித்துச் சிரித்துத் தலையாட்டினாள் பூக்காரிப் பெண். கொச்சு தெரிசா கன்னத்தில் செல்லமாகத் தட்டிச் சொல்லி அவள் வழி அனுப்பியது –
கோவிலுக்குப் போய்ட்டு வரும்போது ஞாபகமா ஹேர்பின்னை கொடுத்துடணும் அக்கா. ஒன்ணொண்ணும் ஒரு கோடியே அம்பதாயிரம் ரூபாய் விலை.
விடிகாலையில் பூவும் நாருமாகத் தட்டில் போட்டுக் கொண்டு தெரு ஓரத்தில் பூக்காரி ஒருத்தி சிரித்துக் கொண்டிருப்பதை உள்ளூரோ, வெளியூரோ, கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்த ஒருத்தர் விடாமல் ரசித்தபடி போனார்கள்.
March 15, 2021
புளிக்குழம்பும், வாழக்கா கறியும், சுவியனும், வடையும், தோசையும், லட்டு உருண்டையும், காரசேவும், தேங்குழலும், அதிரசமும்.
என் ‘வாழ்ந்து போதீரே’ நாவலில் இருந்து –
நவராத்திரியோ, பொங்கலோ, தீபாவளியோ ராணியும் ராஜாவும் இருந்த வரை அதுவும் செயலில்லாமல் முடங்கி, அப்புறம் எதுவும் கொண்டாட யாருமில்லாமல் அரண்மனை அட்டுப் பிடித்துக் கிடந்ததெல்லாம் அடி முதல் நுனி வரை மாறியதில் ராணிக்கும் மகிழ்ச்சிதான்.
வேதையன் பள்ளிக்கூடத்துக்கு அரண்மனைக்குள் இடமும், வாசகசாலையும் ஏற்படுத்தி வைத்த அப்புறம், கோவிலைச் சீராக்கினதன் பின்னால், இந்த இடத்தில் கூட்டத்துக்கும் குறைவில்லை. கொண்டாட்டமும் மிதமாக இருந்ததில்லை.
ராஜாவும் ராணியும் உறங்கியும் ஊர்ந்தும் இருந்த அறைகளும், பரம்பரை பரம்பரையாக வாள், சுரிகை, ஈட்டி, வேல், வேல் கம்பு, வளரி, கேடயம் என்று தளவாடங்களைக் காபந்து செய்து வைத்த இடமும் இன்னும் பூட்டித்தான் இருக்கின்றன. ஆனால் அவை கிரமமாகப் பராமரிக்கப்பட்டு தூசு துப்பட்டை நீங்கி, சுத்தமும் சுகாதாரமுமாக எப்போதும் காட்சியளிக்கின்றன. இதுவும் ராணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் தான்.
என்னத்தை சுத்தம். அவன் ஒரு கல்யாணம் செஞ்சுக்கிட்டு பிள்ளை பெத்து, அதெல்லாம் ஓடி விளையாடி, ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் இருந்து, ஒரே வீச்சமா வீசிக் கெடந்தா, அதோட அழகுக்கு, இதெல்லாம் உறை போடக் காணாது.
ராஜா ரொம்ப நாள் சொல்லிக் கொண்டிருந்தது வேதையனும் போய்ச் சேர்ந்த பிறகு நின்று போனது. அவன் எங்கே இப்போது? ராஜா யோசித்தார்.
ராணி மாதிரியா, இல்லே என்னை மாதிரியா? லேசுப் பட்டவனா என்ன? அவன் படிச்ச படிப்பும், பார்த்தும் கேட்டும் கத்துக்கிட்டதும், கத்துக் கொடுத்ததும் அவனை இனியும் சுத்தித் திரியாம கொண்டு போய் நிலையா வச்சிருக்கும்.
ஆமா அதே தான் என்றான் சமையல்காரன் பழநியப்பன் சகலமும் கரை கண்ட இன்னொரு புஸ்தி மீசைக் கிழவனாக.
அட பயலே நீ இன்னும் வேறே லெக்குக்குப் போகலியா?
ராஜா கேட்கும் போதே தன் பிரியமான சமையல்காரனை சகல விதமான பிரியத்தோடும் விசாரிக்கும் குரல் சுபாவமாக வந்திருந்தது. அவனோடு அவருக்கு என்ன விரோதம். யாரோடு தான் என்ன பகை?
அரண்மனை வளாகத்தில் அவர் புகையிலைச் செடி பயிரிட்ட பூமியைச் சுற்றி கிடுகு வேலி போட்டு அடைத்து அரைக் கல்யாணத் தோதில் பந்தல் போட்டிருந்தது மட்டும் ராஜாவுக்கு ஒட்டும் பிடிக்கவில்லை.
கூரையும் பந்தலும் போட்டால், மதில் சுவரில் இருந்து எதிர் மதில் வரை வளைத்து, முழுக்க கிடுகு வேய்ந்து கொட்டகை போட வேண்டும். பார்க்க ஒரு கெத்தாக, ராஜா வசித்த இடத்துக்கும் அவருடைய நினைவுக்கும் கௌரவம் சேர்க்கிற மாதிரி கம்பீரமாக இருக்க வேணாமோ ஏற்பாடுகள் எல்லாம்?
செஞ்சிருப்பாங்க. அவகாசம் கிட்டலே அதான் போல, அரையும் குறையுமா ஆக்கி வச்சிருக்காங்க. போகுது. எல்லாம் நம்ம பிள்ளை, பேரப் பிள்ளை வகையறா தானே. நல்லா காரியம் எல்லாம் நடத்தி நல்லா இருக்கட்டும்.
ராணி வாழ்த்துச் சொல்லியபடி உள்ளே போனாள்.
கரகரவென்று சுழன்று அடுத்த ரெக்கார்ட், கட்டித் தங்கம் வெட்டியெடுத்து தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவமடா என்று வெகு பவிஷாகப் பாடியது. ஒப்பாரி போல வருமா இது? ராஜா ஏக்கத்தோடு கேட்டபடி நின்றார். அது ஓய, ஊசி வைத்து முடுக்கி, அடுத்த பாட்டு இன்னும் இரைச்சலோடு ஆரம்பமானது.
ஓசைப்படாமல் மிதந்து கொண்டு திரும்ப வந்து சேர்ந்த மீசைக் கிழவன் ரிகார்டில் சுழலும் பாட்டுக்கு இசைவாக அபிநயம் வேறே பிடித்தபடி இருந்தான். ராஜகுமாரி, ரோஜா மலர், பக்கத்தில் வரலாமா என்று மனம் உருகிப் பாடும் ஆணும், கூடவே இங்கிதம் தெரியாமல் அதை முழுக்க அப்படியே ஒப்பிக்கும் பெண்களின் கூட்டமுமாக ஒரு சினிமாப் பாட்டு. ஊசி நடுவில் மாட்டி, வரலாமா வரலாமா வரலாமா என்று கீச்சிட, கிழவன் அதே படிக்கு விடாமல், முன்னால் வந்து வந்து, பின்னால் போய் ஆடிக் காட்டினான். ஆடற வயசா அவனுக்கு?
என்ன மாமா, அவனுக தான் கிறுக்குப் பய புள்ளேங்கன்னா உங்களுக்கு என்ன கெரகம்? ஆட்டமும் பாட்டமும் சிரிப்பாணியும் பொத்துக்கிட்டில்லே வருது.
ராஜா சொல்லச் சொல்ல அவர் முகத்தில் மறுபடியும் சிரிப்பு. ஆனந்தம். பழநியப்பன் மட்டும் இல்லை, இந்தக் கிழவனும் அடிப்படையில் நல்ல மாதிரித் தான். சேர்க்கை சரியில்லாமல் கிருத்துருமத்தோடு குழிக்குள் போனான். அவ்வளவே.
ஏன் மாப்பிள்ளே, இம்புட்டு கோலாகலமா நவராத்திரி எல்லாம் கொண்டாடுறாங்க. பழைய உசிருக்கெல்லாம் ஒரு மடக்கு கள்ளுத் தண்ணியோ சாராயமோ ஊத்தணும்னு தோணலியே. நீ எம்புட்டு பொறுப்பா சோசியக்கார அய்யன் கிட்டே எழுதி வாங்கிட்டு ஆள் அம்பு ஏற்பாடு செஞ்சு ஊத்தினே. அதுலே ஒரு துளி கெடச்சா கூட வேணாம்னா சொல்லப் போறேன். வாய்க்கலியே.
கிழவன் ஆட்டத்தை நிறுத்தாமல் சொன்னான்.
ஆக, குழிக்குள் கிழவன் போனது சகவாச தோஷத்தால் உண்டான வக்கிரமோ கிருத்துருமமோ உடன் கொண்டில்லை. நாட்டு சரக்கு, சீமைச் சாராயம், கள்ளுத் தண்ணி, கஞ்சா, அபின் உருண்டை என இன்னும் மாயாத ஆசையோடு தான்.
ராஜாவுக்கு பரிதாபமாக இருந்தது. இன்னும் எத்தனை காலம் இவன் உடுத்துக்கிட்டு ஆடிக்கிட்டு இங்கேயே சந்தோஷமா மிதக்கப் போறான் தெரியலை அவருக்கு. வந்திருக்கும் பயல்களில் யாருக்காவது முடியுமானால் இவனுக்கு மறுபடி தாகசாந்தி செய்விக்கலாம் என்று அவருக்கும் தோன்றியது.
அரண்மனை வாசலில் ஏதோ சத்தம். என்ன ஏது என்று புரியாமல் ராஜா பார்க்க, எல்லாம் தெரிந்த அறிவாளி, மீசையை நீவிக் கொண்டு மிதந்து முன்னால் வந்தான்.
வல்லார இத்யாதி, உன் மீசையை வழிச்செடுத்து செனைத் தேவாங்கு மாதிரி ஆக்கிடறேன் பாரு. ராஜா மனதில் கருவிக் கொண்டே என்ன மாமா என்றார்.
அதென்னமோ, ஒரு வினாடி இவன் மேல் பிரியம் வந்தால், அடுத்த வினாடி நாக்கை மடித்து வசவு எறியத் தோன்றுகிறது.
அரண்மனை வாசலில் சத்தத்துக்குக் காரணம் கண்டு வந்த கிழவன் சொன்னான் –
கல்யாணம் கருமாதிக்கு சோறு போடற மாதிரி இந்தப் பார்ப்பான் ஒரு நூத்தம்பது பேரை வரச் சொல்லியிருக்கான் வைபவத்துக்கு. ஆரம்பிக்க முந்தி, எல்லோருக்கும் வடையும், இடியாப்பமும், தோசையும், காப்பித் தண்ணியும் கொடுக்கறதா ஏற்பாடு. ஓட்டல் அய்யன் அதெல்லாம் பண்ணி எடுத்து வந்து உச்சிப் பகலுக்கே இறக்கிட்டான். தவல வடையும், சுவியனும் நல்லா இருக்கவே, ஊர்ப்பட்ட கூட்டமும் இங்கே தான். வராதீங்கடா, திங்கத் தர ஒண்ணும் இல்லே, சட்டியும் பானையும் தான் இருக்குங்கறான் அவன். வந்தவனுங்கள்ளே, தீனி வேணாம்னு திரும்பிப் போகிறவனா ஒருத்தனும் இல்லே. அவனுங்க கூட்டுற சத்தம் அது. புத்தகம் போட்டு கூட்டம் நடத்த தவலை வடையும் வெங்காய வடையும் என்ன எளவுக்கு? சாராயம் ஊத்தினாலும் சன்மத்துக்கும் புண்ணியம்.
தவலை வடை, வெங்காய வடை, உளுந்து வடை, ஆமை வடை, மிளகு வடை, கீரை வடை. கிழவனுக்கு அய்யர் மூலம் கள்ளுத் தண்ணி ஊற்றலாம் என்றால் ராஜாவுக்கும் யாராவது இதில் ரகத்துக்கு ஒண்ணாவது ருசிக்கத் தரலாம்.
மாமா. நீங்க போய்ச் சேர்ந்தபோது என்னமா சமைச்சுப் போட்டான். பூணூல் இல்லே உடம்பிலே. ஆனா, அருமையான சமையல் அய்யன் அவன். புளிக்குழம்பும், வாழக்கா கறியும், சுவியனும், வடையும், தோசையும், லட்டு உருண்டையும், காரசேவும், தேங்குழலும், அதிரசமும். அடடா அடடா அடடா.
ராஜா உற்சாகமாகச் சொல்ல, புஸ்தி மீசைக் கிழவன் நமட்டுச் சிரிப்போடு கேட்டான் – ஏன் மாப்பிள்ளே, இன்னொரு வாட்டி போய்ச் சேரச் சொல்றீகளா?
ஐய்யே நான் அப்படி எல்லாம் சொல்வேனா என்ன? அந்த விருந்து அமோகம்னு சொல்ல வந்தேன். ராஜா பின் வாங்க, ஒரு பெரிய கூட்டமாக வந்த பள்ளிக்கூட வாத்தியார்களும், நீதிமன்ற குமாஸ்தாக்களும், சில கன்யாஸ்திரிகளும், வயதான குடும்ப பெண்களும் கூச்சலாகச் சொன்னார்கள் –
விருந்தும் வேண்டாம். மற்றதும் வேண்டாம். கீர்த்தனை கவனப்படுத்தறவங்களையும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமும் பின்முடுகு வெண்பாவும் எழுதறவங்களையும் பார்க்கறதே அபூர்வமான காலம். ஒருத்தர் பழங்காலத்திலே எழுதி, இன்னொருத்தர் அதைச் செப்பனிட்டு ராகக் குறிப்பு சேர்க்க, மூணாமவர் அதைப் பாட சங்கீத நோட் எழுதிச் சேர்க்க, இன்னொரு சின்ன வயசுப் பொண்ணு அதை எல்லாம் அந்தப்படிக்கு கானம் பாட, இதெல்லாம் எல்லாம் எல்லாம் கிறிஸ்துநாதர் மேலே இருக்க. இந்த அருமையான வைபவத்துக்கு வந்தோமேயல்லாமல், தவலை வடைக்கும் பூண்டுத் தொகையலுக்கும் வரல்லே நாங்க. சந்தை கூடும்போது தமுக்கு போட்டு அறிவிச்சதால் வந்தோம். வடை தீர்ந்து போகுதேன்னு விசனப்படாம, வைபோகம் நடக்க விடுங்க தயவு செய்து. எத்தனை வடை வேணும் சொல்லுங்க. பக்கத்துலே ஓட்டல்லே உங்களுக்கு ரசவடை வாங்கி வரச் சொல்கிறோம்.
அவர்கள் தியாகராஜ அய்யனிடம் தெரிவித்தபடி உள்ளே போக அது சரிதான் என்றார் ராஜா. அவர் சுற்றிலும் பார்க்க, அவரும் பழநியப்பனும் மட்டும் தான் நின்று கொண்டிருந்தார்கள்.
தாவரங்கள் இனியவை ஆகுக. தண்ணீர் இனியதாகுக. ஆகாயம் இனியதாகுக. வெளி இனியதாகுக.
‘வாழ்ந்து போதீரே’ நாவலின் இறுதி அத்தியாயத்தில் இருந்து –
ஹோமம் ஆரம்பமாறது. கலந்துக்க வேணும்.
திராவிடப் பண்டிதர் வேண்டுகோள் விட, எல்லோரும் அங்கே தான்.
எந்தக் கடவுளின் கருணையினால் நாமனைவரும் நலமாகவும் எந்தக் குறையுமின்றியும் உயிர்த்திருக்கிறோமோ அந்த க்ஷேத்ரபதியை வழிபடுகிறோம். நம்முடைய பசுக்களும் குதிரைகளும் நலம் பெற்று இருக்க, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வர, அவரைத் துதிக்கிறோம். இயற்கை அன்னையின் கருணை எம் பசுக்கள் சுரக்கும் பால் போல் பெருகி ஓட அருள்க.
நான்கு வட இந்திய புரோகிதர்கள் தெளிவான உச்சரிப்போடு ரிக்வேத மந்திரங்களை ஓதிச் சடங்குகளைத் தொடங்கினார்கள்.
தாவரங்கள் இனியவை ஆகுக. தண்ணீர் இனியதாகுக. ஆகாயம் இனியதாகுக. வெளி இனியதாகுக.
புருஷசூக்தம் சொல்றாளா என்று பாட்டியம்மா விசாரித்தாள்.
அம்மாவுக்கு வேதம் என்ன, கஜானனம் கூட ரெண்டாவது வரி சொல்லத் தெரியாது. ஆனாலும் புருஷசூக்தம்ங்கற பெயர்லே ஒரு ஈர்ப்பு.
தியாகராஜ சாஸ்திரிகள் சொன்னார்.
பாட்டியம்மா கேட்டுட்டாங்க இல்லே? புருஷசூக்தம் சொல்லச் சொல்றேன் பண்டாக்களை.
திராவிடப் பண்டிதர் சிரித்தார்.
இன்னும் கொஞ்சம் தட்சணைக் காசு எடுத்துக் கொண்டு அவர் ஹோமம் செய்ய இருந்த புரோகிதர்கள் பக்கம் போனார். அவர்களின் ஒருமித்த குரலில் கம்பீரமாக வேத மந்திரங்கள் தொடர்ந்து மேலெழுந்து வந்து கொண்டிருந்தன.
இந்த வரிகள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இருந்து வருகிறவை. என்னோடு இவற்றைத் திரும்பவும் சொல்லுங்கள் சகோதரி.
திராவிடப் பண்டிதர் கனமும் கம்பீரமும் நிரம்பிய குரலில் சொல்லச் சொல்ல கொச்சு தெரிசா திரும்பச் சொன்னாள் –
யார் மகத்தான ஒளியாக இருக்கிறாரோ, யார் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறாரோ, யார் எங்கும் எதிலும் எவரிலும் நிலவும் தலையாய சத்தியமாக இருக்கிறாரோ, யார் தலை சிறந்த இலக்காக இருக்கிறாரோ, அந்த விஷ்ணுவை வணங்குவோம்.
துளசி இலை மிதக்கும் சுத்தமான கங்கை நீர் அருந்தக் கிடைத்தது. மூன்று முறை அந்நீரை உள்ளங்கையில் வாங்கி அருந்தி, கண்கள் மூடியிருக்க, ஹரி என்று உச்சரித்து குழிந்த உள்ளங்கையை உச்சிச் சிரசில் பொத்தி வைத்துப் பூசிக் கொண்டாள்.
மகாவிஷ்ணுவில் அனைத்தும் அடக்கம். மகாவிஷ்ணுவே அனைத்தாகவும் காணப்படுவார். அனைத்துயிர்களின் சாரமாக உணரப்படுவார். அவர் உலகைக் காக்கிறார். அவர் அழிவற்றவர். அவர் அனைத்தையும் அனைவரையும் ஆள்கிறவர். மூவுலகிலும் நிறைந்து நிலைத்திருக்கிறார் அவர். எல்லோருமானவர். எல்லாவற்றிலும் இருந்து இருத்தலின் பேரின்பம் நுகர்கிறார்.
பால், தேன், பழக்கூழ், தேங்காய், ஏலம் கலந்ததை ஹோமம் நடத்தியவர்கள் நிவேதனம் செய்து ஆராதித்துக் கொடுக்க, தெரிசாவின் வலது உள்ளங்கையில் சிறு உத்தரிணி கொண்டு அதை வார்த்தார் திராவிடப் பண்டிதர்.
இதை எச்சிலாக்காமல் வாயிலிட்டுச் சுவைத்து உண்ணுங்கள். நாராயணனைத் தித்திக்கத் தித்திக்க உங்களுக்குள் ஏற்று வாங்கிக் கொள்கிறீர்கள்.
கேசவா, நாராயண, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா, சங்கர்ஷணா, வாசுதேவா, ப்ரத்யும்னா, அநிருத்தா, புருஷோத்தமா, அதோக்ஷாஜா, நரசிம்மா, அச்சுதா, ஜனார்த்தனா, உபேந்திரா, ஹரி, கிருஷ்ணா.
விஷ்ணுவின் இருபத்துநான்கு திருநாமங்களை ஒவ்வொன்றாக அந்த நாமத்தில் மனம் லயித்து திராவிடப் பண்டிதர் சொல்ல, கண் மூடியிருந்து கொச்சு தெரிசா அவற்றைத் திரும்ப உச்சரித்தாள்.
அவள் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது.
பண்டிதர் எழுந்தார். கையில் பஞ்ச பாத்திரமும், உத்தரிணியுமாக, கங்கா தீரத்துக் கல் பாளங்களின் வெம்மையில் பாதம் தோய நடந்து ஆற்று நீரில் கால் அமிழ்த்தி நின்றார்.
இது சாமவேதம்.
அவர் நீண்ட சொற்களும் திரும்பித் திரும்பி ஒலிக்கும் குறுஞ்சொற்களும், உயர்ந்து உயர்ந்து மேலெழும் குரலுமாகச் சாம கானம் பாடத் தொடங்கினார்.
தண்ணீரே, நீ ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வருகிறாய். நாங்கள் சக்தி மேம்பட்டிருக்க, அது குறித்து மகிழ்ந்திருக்க எமக்கு உதவு. பனித்துளியை எங்களுக்குப் பங்கு வைத்து நீ கொடு நீரே.
March 13, 2021
வாழ்த்தத் தெரியாத வழக்கு முத்தச்சி
என் அரசூர் நான்கு நாவல் வரிசையில் இறுதி நாவலான ‘வாழ்ந்து போதீரே’- நூலில் இருந்து
வழக்கு முத்தச்சி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.
ஆலப்புழ – அம்பலப்புழ டவுண்பஸ் படிக்கட்டில் பல்லி போல தொங்கிக் கொண்டு நின்ற க்ளீனர் பையன் சத்தமாக அறிவித்துச் சிரித்தான்.
பஸ் இங்கே ஒரு அஞ்சு மினிட் நிக்கும். தோச, பரிப்பு வட, சாயா, மலையாளத்திலே தெறி பறைய, தமிழ்லே கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட வசதி எல்லாம் உண்டு மான்ய மகா ஜனங்களே. வழக்கு முத்தச்சிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.
அவன் அறிவிக்க, திலீப் அதிசயமாகப் பார்த்தான். மற்ற பயணிகள் குலுங்கிச் சிரித்தபடி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல கடைக்கு ஏக காலத்தில் நடந்து பரிப்பு வடையும் சாயாவும் உடனே விளம்பித் தரும்படி கோரினார்கள். கடைக்குப் பின்னால் தொலைவில் ஆங்காங்கே செடிகளுக்கும் புதர்களுக்கும் இடையில் குத்தி இருந்து சிறுநீர் கழிக்கும் வாடை இங்கே முகத்தில் குத்தத் தொடங்கி இருந்தது.
மிஞ்சிப் போனால் பத்து நிமிஷமோ, பதினைந்து நிமிஷமோ பிடிக்கும் இந்தப் பயணத்தை அரைமணி நேரமாக்கிய மகானுபாவன் யார் என்று திலீப்புக்குத் தெரியவில்லை.
உலகத்தோடு ஒட்டி செயல்பட, திலீப்பும் ஒரு கயிற்றைப் பற்றி. பற்றி? ஓரமாக உட்கார்ந்து மூத்திரம் போக வேண்டும். அவன் அவசரமாக இறங்கினான்.
சாப்பாட்டுக்கடைவாசலில் கால் நீட்டி இருந்த முத்தச்சி அவனைப் பார்த்ததும் தள்ளாடி எழுந்து அவனைக் கும்பிட்டாள்.
திருமேனி எனக்கு உடனே சாவு வர ஆசீர்வாதம் பண்ணு. ஜீவிதம் மதியாயி.
திலீப் சொன்னான் – அதது அதது நடக்கற நேரத்தில் நடக்கும். நான் திருமேனி இல்லே பாட்டி. பம்பாய் கி சோக்ரா. சின்னப் பையன்.
அவன் சட்டைப் பையில் இருந்து பர்ஸை எடுத்தான்.
இது திட்ட இல்லே, பாட்டித் தள்ளை. வாழ்த்த. நுங்கம்பாக்கம் நீலகண்டய்யர் சம்சாரம் கற்பகம்மாள் இன்னும் இருக்கபட்ட காலம் சௌக்கியமாக கழிந்து தூக்கத்திலேயே சொர்க்கம் போய்ச் சேரணும். தூக்கம்னா மலையாளத்திலே வேறே தானே. அது வேணாம். உறக்கத்திலேயே. உறங்கியே மெல்ல போகட்டும்.
கிழவி திருதிருவென்று விழித்தாள். பிரியமாகக் காசு கொடுத்து ஒருத்தரை வாழ்த்தச் சொன்னது அவள் ஆயுசிலேயே இதுதான் முதல் முறை.
வாய் கோணி, கண் நிலைக்க அவள் வெற்றுவெளியில் கைகளை நீட்டிப் பரத்தினாள். சுழலில் அகப்பட்டு வெள்ளப் பெருக்கத்தில் அடித்துப் போகப்படும் போது சின்னச் செடியையோ மிதக்கும் மரக் கட்டையையோ பற்றியபடி நீந்திக் கரை சேர்ந்து உயிர் பிழைக்கச் செய்யும் கடைசி முயற்சி போல அவள் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள். இதுவரை கற்றது எல்லாம், பேசியது எல்லாம், சபித்தது எல்லாம் பிரயோஜனப் படாதவை என்று ஆக, இன்னொரு தடவை முதலில் இருந்து தொடங்கி, புதிய ஒரு மொழியில் எழுத்தெண்ணிப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவளாக அவள் தெரிந்தாள். நீட்டிய கைகள் நீட்டியபடி இருக்க அவள் மெல்ல எழுந்தாள். ஓவென்று அழுதபடி திலீப்பின் கையைப் பிடித்துக் கொண்டாள் –
நாயனே, எனக்குத் தெரியாது. யாரையும் வாழ்த்த எனக்குத் தெரியாது.
சொல்லியபடி அவன் கையில் அவனிடமிருந்து வாங்கிய ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு அவள் தள்ளாடித் தள்ளாடி நடந்து போய்விட்டாள். பஸ் திரும்பக் கிளம்பும் போது யாருமே எதுவுமே பேசவில்லை.
கிழவியைச் செயலில்லாமல் நான் ஆக்கி விட்டேனா? புதுசாகக் கவலைப் பட ஆரம்பித்தான் திலீப். எதிர்பார்க்க, கரிசனம் காட்ட, பயம் விலக எவ்வளவோ இருக்க, இந்த வயசான பெண்பிள்ளை எங்கே இதற்கு நடுவே வந்தாள். அவளுக்கு ஏதும் கயிறுகள் இல்லை. அவள் நினைத்தபடி நினைத்த இடத்தில் நினைத்த நேரம் கோலூன்றி நடுங்கும் கால்களை ஊன்றி ஆட முயலலாம். திட்டாமலேயே உயிர் வாழ முடியாதா என்ன? வாழ்த்தாமல் இத்தனை வருடம் வாழ்ந்தவளுக்கு அது என்ன கஷ்டம்? ஆனால் வருமானத்துக்கு என்ன செய்வாள்? திலீப் அவளை மறுபடி சந்திக்கும்போது ஐந்து ரூபாய் கொடுப்பான். அவனால் முடிந்தது அதுதான்.
என்னால் முடிஞ்சது இதுதான். இந்த சம்பளம் தான் திலீப்.
பிஸ்கட் சாஸ்திரி நேற்றைக்கு அவனிடம் சொன்னார். இன்னும் இருநூறு ரூபாய் சம்பளம் உயர்த்தித் தர முடியுமா என்று அவர் சந்தோஷமும் சாந்தமுமாக இருந்த நேரத்தில் விசாரித்தான் திலீப்.
உங்க பெரியம்மா இப்போதைக்கு வர மாட்டா. டாக்டரேட் வாங்கிட்டா. மற்ற நாட்டு பல்கலைக் கழகத்திலே எல்லாம் பேசக் கூப்பிடறா. பிரிட்டன் முடிச்சு பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அப்புறம் நடாஷா மூலமா சோவியத் யூனியன் பிரயாணம். அப்படி மெகா பெரிய சுற்றுப் பயணத் திட்டம். அவா வர வரைக்கும் இங்கே உனக்கும் வேலை இல்லே. எனக்கும் கிடையாது. சியாமளா வந்து கவர்மெண்ட் நிதி கையிலே கிடைக்க இன்னும் குறைஞ்சது மூணு மாசமாவது ஆகும். அதுவரை தண்டச் சம்பளம் தான் நமக்கு. எப்படி ஏத்தித் தர?
பஸ்ஸில் இருந்து இறங்கி வழக்கு முத்தச்சியிடம் காசு கொடுத்து பிஸ்கட்டைப் பிய்த்தெறியச் சொல்லலாமா என்று ஒரு நினைப்பு.
பிழைத்துப் போகட்டும். திலீப் படிப்புக்கு இந்த வேலை கிடைத்ததே ஆச்சரியம். பிஸ்கட் சாஸ்திரி அவனை இரைந்து பேசி எடுத்தெறிந்து இதுவரை வேலை வாங்கியதில்லை. ஆனால் நக்கலாக ஒரு சிரிப்பு அவரிடம் உண்டு. ட்ரங்குப் பெட்டிக்குள் ஷார்ட் ஹேண்ட் லோயர், டைப் ரைட்டிங் ஹையர், எஸ் எஸ் எல் சி சர்ட்டிபிகேட்டுகளுடனும், உள்ளூர் ஹெட்மாஸ்டர் கொடுத்த ரென் அண்ட் மார்ட்டின் இலக்கணப் புத்தகத்தை விட்டு இம்மியும் வழுவாத இங்கிலீஷில் நன்னடத்தை சர்ட்டிபிகேட்டுடனும் மதராஸ் செண்ட்ரல் ஸ்டேஷனில் ரயிலேறி, வடக்கே தில்லி, கிழக்கே கல்கத்தா, மேற்கே பம்பாய் என வேலை தேடிப் போய் வெற்றி கண்டு நிலைத்தவர்களின் தேகத்தில் ஊறி வரும் அந்தண எள்ளல் அதுவென்று திலீப்புக்குத் தெரியும். அத்தனை படித்த அவன் அப்பாவும் பெரியப்பாவும் கூட அந்த மனநிலையில் ஊறியவர்கள் என அவன் அறிவான்.
தியேட்டர் வாசலில் பஸ்ஸை நட்ட நடு ரோடில் நிறுத்தி, சகாவே அடிச்சுப் பொளி என்று பஸ் டிரைவரும் க்ளீனர் பையனும், விசில் ஊதாமல் காத்திருந்த கண்டக்டரும் திலீப்பை உற்சாகப்படுத்தி இறக்கி விட்டு பஸ் நகர்த்திப் போனார்கள். இந்த எட்டு மாசப் பழக்கத்தில் அவன் கிட்டத்தட்ட நூறு மலையாளி இளைஞர்களுக்கு நல்ல சிநேகிதனாகி விட்டான். கோவில் போகிற வழியில் ஒரு வினாடி புன்சிரித்துப் போகிற தலை குளித்த, உதடு பெருத்த மலையாளி தேவதைகளும் அதில் உண்டு. இன்னும் ஒரு வருஷம் எல்லோர் புண்ணியத்திலும் இங்கேயே குப்பை கொட்டினால் அவனுக்காகவே பஸ் விடுவார்கள். அந்த சுந்தரிகள் ஏட்டா என்று விளித்துக் கைகோர்த்து வருவார்கள்.
அடி செருப்பாலே.
March 10, 2021
காலம் கடந்து வந்தவர்கள்
என் ’வாழ்ந்து போதீரே’ நாவல் -சில பகுதிகள்
உடம்பு சொடுக்கெடுத்து விட்டது போல் இருந்தது. ராஜாவுக்கு நடக்க நடக்கக் கம்பீரம் கூடிக் கொண்டு வந்ததேயல்லாமல் இம்மியும் அது இறங்கவில்லை. மணக்க மணக்க எல்லாத் தைலத்தையும் சுடச் சுடக் கலந்து உடம்பெங்கும் நீவி நாலைந்து ராட்சதர்கள் மரியாதையோடு உடம்பு பிடித்து விட்டு எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் புரட்டிப் போட்டு முதுகில் ஏறி நின்று திம்திம்மென்று குதித்துக் கும்மாளமிட்டு இறங்கிப் போக எழுந்து உட்கார்ந்தது முதல் உடம்பில் ஒரு வலி, நோவு, பலகீனம் எதுவுமில்லாமல் போனது.
அபீசீனியாவில் இருந்து வந்த ஒரு உடம்பு பிடிக்காரனும் அவனோடு வந்த பொம்பிளையும் அரண்மனைக்கே வந்து இப்படி மணிக் கணக்காக உடம்பு பிடித்து விட்டார்கள். ராணி தாய்வீடு போயிருந்த நேரம் அது. அபீசீனியாக்காரிப் பொம்பளை மட்டும் ராஜாவோடு இருந்து கள்ளுத் தண்ணி போல போதையேற்றிச் சிரிக்க, ராஜா சமர்த்தாக உறங்கிப் போனார் அன்று.
இங்கே பெண் வாசனையே கிடையாது. ஆவி பறக்க, மலையாளத்தில் பேசியபடி காய்ச்சிய எண்ணெயை அறை வாசலில் வைத்து விட்டு வேஷ்டி கட்டிய இளம்பெண்கள் நகர, மல்லர்கள் தான் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தியது. ரெண்டு பொற்காசுகளை ராஜா ஆயுர்வேத வைத்தியனுக்கும், பிரித்துக் கொள்ளச் சொல்லி இன்னுமொரு காசை இந்த மல்லர்களுக்கும் தர, அவர்கள் காட்டிய சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை.
ஒரு பெரிய சீனப் போத்தல் நிறைய இன்னும் ஒரு வருஷம் ராஜா பூசிக் கொள்ள மூலிகை எண்ணெய் அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். நாசித் துவாரத்திலும் ஆசனத் துவாரத்திலும் தினம் ஒரு துளி தொட்டு வைத்தால் ஒரு சுகக்கேடு அண்டாதாம். அரைக்குக் கீழே முன்னாலும் வைத்துக் கொண்டால் சகல சுகமும் சித்திக்குமாம். என்ன, நாள் முழுக்க அங்கே எரிச்சல் கொஞ்சம் போல் இருக்கலாம். அது எதுக்கு இழவு.
புஸ்தி மீசைக் கிழவன் வைத்தியசாலையைச் சுற்றிப் பறந்தபடி ராஜா இதை சேடிப்பெண்ணுக்கு எங்கெல்லாம் தடவலாம் என ஆலோசனை சொன்னான். போடா வக்காளி என்று ராஜா மிதமாக அவனைக் கடிந்து கொள்ள, என் மத்த இடத்து மசுரே போச்சு என்று சிரித்துக் கிழவன் கோலாகலமாக மிதந்தான்.
வைத்தியசாலை வாசலில் அரண்மனை ஜோசியர் தரையில் பரத்திய மண்ணில் வேப்ப மரக் குச்சி கொண்டு ஷட்கோண யந்திரம் நிறுத்துவதன் நுட்பங்கள் குறித்துப் பேச சுற்றி ஏழெட்டுப் பேர் நின்று சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஜோசியர் அறிவுஜீவியாகக் காட்சி அளிப்பது மனதில் பட, ராஜா மனதில் தேவையில்லாத அசூயை எழுந்தது.
கேணையன் நாமக்கார அய்யன் சோழியை உருட்டிப் போட்டுக் காசு பார்க்கக் கிளம்பிட்டான். நம்ம மீசையான் வேறே ஒய்யாரமா அங்கே இங்கே சாடறான். இவனுகளோட என்ன எழவுக்குடா நான் கூட வரணும்?
அவர் பார்வை பனியன் சகோதரர்களைத் தீய்க்க அவசரமாகத் தேடத் தெரு வளைந்து வலது வசம் திரும்பி மேற்கு திசையில் நீளும் வீதியில், வாசலில் கூரைக் கொட்டகை போட்ட கட்டிட வாசலில் அவர்கள் நின்றிருந்தார்கள்.
மரமேஜை போட்டு அங்கே நாலைந்து பேர் உட்கார்ந்து காகிதங்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னால், ஒருத்தன் பிருஷ்டத்தை ஒட்டி அடுத்தவன் என்ற கணக்கில் சர்ப்பமாக வளைந்து மனுஷர்கள் வரிசையாக நின்றார்கள். கும்பினி உத்தியோகஸ்தர்கள் வரி வாங்கவோ புதுச்சேரியில் பிரஞ்சுக் காரர்களோடு யுத்தம் செய்ய ஆள் எடுத்து அனுப்பவோ ஏற்படுத்திய இடம் என்று ராஜாவுக்குத் தோன்றியது. பக்கத்திலே கெந்தி நடந்து வந்த புஸ்தி மீசைக் கிழவன் இல்லையெனத் திடமாக மறுத்தான். நடக்க வேணாம், தரையை ஒட்டிப் பிருஷ்டம் படப் பறந்து செல்லடா கொசுவே என கேட்டுக் கொண்டால் வெகு இஷ்டமாகச் செய்வான்.
இவங்க எல்லாம் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள். வெள்ளைக்காரன் சர்க்கார் இல்லே இப்போ நடக்கிறது. நம்மாளுங்க தான். ஆட்ட பாட்டமா நாலு நாள் வைபோகம் நடத்தி வெள்ளைக்காரனும் அபீசினியக் கருப்பனும் வந்து பார்த்து சந்தோஷப்பட ஏற்பாடு. இங்கே நிக்கறவன் எல்லாம் ஆடவும் பாடவும் வந்தவனுங்க. நேரம் ஒதுக்கச் சொல்லி காகிதத்துலே மனு கொடுக்கறாங்க.
என்ன தான் இளக்காரம் செய்தாலும் புஸ்தி மீசையானுக்கு இருக்கும் கற்பூர புத்தி தனக்கு இல்லை என்பதை ராஜா மனசார அங்கீகரித்தார். அது கிழவன் மேல் நொடி நேர அபிமானமாக மலர்ந்தது. அதுக்குக் காசா பணமா செலவு?
மாமா, எல்லாம் சரிதான். நம்ம களவாணிப் பயலுக அங்கே என்னத்துக்கு நிக்கறாங்க? உங்களையும் என்னையும் சப்ஜாடா ஒரு வெலை பேசி இங்கே சர்க்காருக்கு வித்துட்டுப் போகலாம்னு யோசிக்கறானுங்களோ?
செஞ்சாலும் செய்வானுக மாப்ளே. சூதானமா நடந்துக்கறது நல்லது. உனக்கு உடம்பு வேறே இப்போ சொடுக்கெடுத்து விட்டுட்டான் மலையாளத்தான். இவனுகளோட போனா, மலையாளச்சி மாரைக் காட்டறேன் மத்ததைக் காட்டறேன்னு பெரிசா கருங்குழியிலே உன் தலையை நுழைச்சு விட்டுடுவானுங்க. அவமானம் எல்லாம் உனக்குத்தான் அப்புறம். உஷார்.
தான் கொஞ்சம் தாழ்ந்தாலும் உலகை ரட்சிக்க வந்த அவதாரம் போல உதடு வீங்கி நான்நான் என்று நிற்கிற கிழவனை போடா பருப்பே என்று மனதில் திட்டியபடி ராஜா அந்தக் கொட்டகைக்குள் நுழைந்தார்.
March 8, 2021
திகில் கனவொன்று கண்டேன்
(ஆர்.கே.நாராயண் ஆங்கிலக் கட்டுரை – மொழியாக்கம் இரா.முருகன்)
சமீபத்தில் நான் ஒரு பயங்கரக் கனவு கண்டேன். ஸனாடு என்ற பெயரில் வினோதமான ஒரு நாடு வந்த கனவு அது. நான் அந்த தேசத்தின் குடிமகனாகி இருந்தேன். அந்த நாட்டு அரசாங்கம் திடுதிப்பென்று கதைகள் கண்காணிப்பாளார் என்று ஒரு அதிகாரியை நியமித்து விட்டதாக அறிவித்தது.
நாடாளுமன்றத்தில் எழுத்தாளர்களுடைய பிரதிநிதியும் இடம் பெற்றிருக்கும் தேசம் ஸனாடு. எழுத்தாளர்கள் தங்கள் பிரதிநிதியை இது பற்றிக் கேட்க, அவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் வினா எழுப்பினார் : ‘கதைகள் கண்காணிப்பாளர் என்று ஒரு புது அரசுத் துறை ஏன் ஏற்படுத்தப் பட்டது என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?’
ஆளுங்கட்சி சார்பாக வந்த பதில் : ‘அரசு அச்சிடும் துறையில் ஏற்பட்ட ஒரு பிழை காரணமாக கண்ட்ரோலர் ஓஃப் ஸ்டோர்ஸ் (Controller of Stores) என்று அச்சிட்டிருக்க வேண்டிய ஐந்து டன் காகிதப் படிவங்கள், கண்ட்ரோலர் ஓஃப் ஸ்டோரீஸ் (Controller of Stories) என்று அச்சாகி விட்டன. ஒரு எழுத்து (ஐ i ) அதிகம். இந்தப் படிவங்களைப் எப்படிப் பயன்படுத்துவது என்று தீர்மானிப்பது அரசின் முக்கிய கடமையாகிப் போனது’.
‘என்ன மாதிரி உபயோகம்?’ உறுப்பினர் கேட்டார்.
‘தவறுதலாக நடந்ததென்றாலும் ஐந்து டன் படிவங்கள் அச்சடிக்க்கப் பட்டுவிட்ட காரணத்தால், அவற்றில் அச்சடித்தபடி, கண்ட்ரோலர் ஓஃப் ஸ்டோரீஸ் – கதைகள் கண்காணிப்புத் துறை தொடங்கப்பட்டது’.
‘ஒரு புது அதிகாரி துறைத் தலைவராக நியமிக்கப் பட்டாரா? அப்படி எனில், பொதுப்பணி ஆணையத்தின் சுற்றறிக்கை இது குறித்து ஏதேனும் உண்டெனில் மாண்பு மிகு அமைச்சர் அதை மேற்கோள் காட்ட முடியுமா? இந்தப் பதவி ஏற்படுத்தியதால் சம்பளம் இதர வகைகளில் அரசுக்கு எவ்வளவு செலவு ஏற்படும்? எங்கிருந்து அந்தப் பணம் கிடைக்கும்? அரசு கணக்குகளில் எந்த கணக்கில் இதற்கான செலவினங்கள் பற்று எழுதப்படும்? இது குறித்த முடிவு எடுக்க வேண்டிய அதிகாரி யார்? இது குறித்து கணக்குத் தணிக்கை மேலாளரின் கருத்துகளை இந்த அவையின் முன் வைக்க முடியுமா?
நாடாளுமன்ற உறுப்பினர் பேசிக்கொண்டே போனார். சங்கிலித் தொடர் போல் நீண்ட, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த கேள்விப் பின்னலில் அமைச்சரைச் சிக்க வைக்க அவர் முயன்றார். இது போன்ற உபாயங்களை எத்தனை முறை அமைச்சர் சந்தித்திருப்பார்? அவர் கறாராக மறுமொழி சொன்னார்:
’கேள்வி அ-வுக்கு பதில் இல்லை. ஆ – அரசு நிலமையைக் கவனித்து வருகிறது. இ – இந்தக் கேள்வி எழ முகாந்திரம் இல்லை. ஈ – ஆவுக்கான பதிலைக் கவனிக்கவும். உ – பொதுநலன் கருதி இக்கேள்விக்கு பதில் அளிப்பதைத் தவிர்க்கிறேன்’,
அவர் மிக வேகமாக, நிறுத்தாமல் பேசியதால் கேள்வி கேட்ட உறுப்பினர் தடுமாறிப் போனார். என்றாலும் சளைக்காமல் அவர் மறுபடி கேட்டார் – ‘இது அண்மையில் அறிவிக்கப் பட்ட அரசின் சிக்கன நடவடிக்கைகளோடு ஒத்துப் போகிறதா என்பதை மதிப்புக்குரிய அமைச்சர் விளக்குவாரா?’
‘இதற்கான பதில், ஆம்’.
‘அவர் இப்போது சொன்ன பதிலுக்கான விளக்கத்தைத் தயவு செய்து சொல்வாரா?’
’நிச்சயமாக. முதலாவதாக, மிகப் பெருமளவில் அச்சடிக்கப்பட்ட படிவங்களை நாம் உபயோகப்படுத்த நடவடிக்கை எடுத்து விட்டோம். உலகில் காகிதக் கட்டுப்பாடு பற்றிய அறிதல் உள்ள யாரும் இந்த நடவடிக்கையைப் பாராட்டவே செய்வார்கள். இரண்டாவதாக, கதைகள் கண்காணிப்பு என்ற புதிய துறை துவங்க கூடுதல் செலவு ஏதும் இல்லை. கண்ட்ரோலர் ஓஃப் ஸ்டோர்ஸ் நிர்வாக அதிகாரியே கண்ட்ரோலர் ஓஃப் ஸ்டோரீஸ் துறைக்கும் கௌரவத் தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார். அவர் கதைகள்துறைப் பணிகளையும் சேர்த்தே ஆற்றுவார். ஏனெனில் எல்லா ஸ்டோரிகளும் ஒரு விதத்தில் ஸ்டோர்கள் தான்’. (ஸ்டோரி – கதை; ஸ்டோர் – சேமித்து வைக்குமிடம்).
இந்த கதைகள் துறை பற்றிய ஏன் – எப்படி – எவ்வாறு – எங்கு தகவல்களை எங்களுக்குத் தர முடியுமா?’
’இது குறித்துப் பேச எழுந்துள்ள சந்தர்ப்பத்தைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தேசிய வாழ்க்கையில் கதைகளின் முக்கியத்துவம் குறித்து அரசு நன்கு அறிந்திருக்கிறது. இது மக்கள் நலம் பேணும் அரசு. ஆதலால், குடிமக்களைப் பாதிக்கக் கூடிய எல்லா செயல்பாடுகளையும் அவதானிப்பது அரசின் தலையாய பணிகளில் ஒன்றாகும். உணவு, தண்ணீர் இவற்றுக்கு அடுத்து கதைகளே அதிகமாகக் கோரப்படுகின்றன என்பது அரசின் கவனத்துக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு வினாடியும், எங்கோ யாரோ யாரையோ ஒரு கதை கூறச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறார்கள். அது ஆசிரியரைக் கேட்கிற குழந்தையாக இருக்கலாம். நாவலாசிரியரைக் கேட்கிற வாசகனாக இருக்கலாம். பத்திரிகை ஆசிரியரைக் கேட்கிற சந்தாதாரனாக இருக்கலாம். அல்லது லட்ச லட்சமாக முதலீடு செய்து எல்லா உபக்ரணங்களும் தயாராக இருக்க, சினிமாப் படம் எடுக்கக் கதை மட்டும் இன்னும் கிடைக்காத சினிமா தயாரிப்பாளராக இருக்கலாம். மேலும், நம் வானொலி நிலையங்களும், நாடகக் கொட்டகைகளும் கதைகள் வேண்டுமென்று கேட்கின்றன. கதைகளுக்கான தேவை உற்பத்தியாகிற கதைகளை விட மிக அதிகமாக இருக்கிறது. கதை கிடைத்தாலும், அது வெறுக்கத் தகுந்த மோசமான கதையாக இருக்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மோசமான கதைகளை இந்த அரசு இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்த இடத்தில் கேள்வி கேட்ட உறுப்பினர் குறுக்கிட்டார் – ‘மோசமான கதைகள் என்றால் என்ன என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? மதிப்புக்குரிய அமைச்சர் உதாரணங்களுடன் விளக்குவாரா?’
‘மன்னிக்கவும். இதுவே மோசமான கதை என்று நான் எந்த ஒரு கதையையும் சுட்டிக் காட்ட இயலாது. அப்படிச் செய்தால் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையில் முடிவு எடுக்கப் படுவதாகச் சந்தேகப்பட ஏதுவாகலாம். நன்றாக இல்லாத கதைகளே மோசமான கதைகள் என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த விளக்கத்தோடு நம் மதிப்புக்குரிய உறுப்பினர் திருப்தி அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்’.
‘இந்தத் துறை எப்படி செயல் படும் என்று தெரிந்து கொள்ளலாமா?’. உறுபினர் அடுத்துக் கேட்டார்.
’கதைகள் கண்காளிப்பாளர் உடன் ஒரு மத்திய கதை அலுவலகத்தை ஆரம்பிப்பார். அந்த அமைப்பு, மாநில வாரியாக முதன்மை கதை அதிகாரி அலுவலகங்களைத் தொடங்க முயற்சி எடுக்கும்’.
‘நாட்டின் இருக்கும் கதை எழுத்தாளர்களுக்கு இந்த நடவடிக்கைகள் எவ்விதத்தில் தொடர்பு உள்ளவை என்று தெரிந்து கொள்ளலாமா?’.
‘ஒவ்வொரு கதை எழுத்தாளரும் படிவம் அ-வைப் பூர்த்தி செய்து, கருவூலத்தில் பத்து ரூபாய் பணம் செலுத்தி வாங்கிய ரசீதோடு அப்படிவத்தை மத்திய கதை அலுவலகம் – பொதுக் கிளைக்கு அனுப்ப வேண்டும். அந்த அலுவலகத்திலிருந்து அவர் தன்னைப் பதிவு செய்யப்பட்ட கதை எழுத்தாளர் என்று அழைத்துக் கொள்ளத் தேவையான அனுமதி கிடைக்கும். அதன் பிறகு, எப்போதெல்லாம் கதை எழுத உந்தல் ஏற்படுகிறதோ, அது சிறுகதை எழுத என்றாலும் சரி, நாவல் எழுத என்றாலும் சரி, அவர் அந்தக் கதைக் கருவைச் சுருக்கமாக எழுதிய குறிப்பின் நான்கு பிரதிகளை மத்திய கதை அலுவலகம் – தொழில்நுட்பப் பிரிவுக்கு அனுப்பி, அந்த அலுவலகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அந்த அனுமதியோடு தான் அவர் கதையை மேற்கொண்டு எழுத முடியும்.
’அது ஏன் நான்கு பிரதி அனுப்ப வேண்டும்?’
‘வழிமுறைகளைச் சரியாக நடப்பாக்கத்தான். மத்திய கதை அலுவலகம் – தொழில் நுட்பப் பிரிவு நான்கு இயக்குநரகங்களைக் கொண்டதாக இருக்கும். ஒன்று கதைக்கரு, அடுத்தது கதாபாத்திரங்கள், மூன்றாவது கதைக் களன், நான்காவது கதையின் முடிவு இவற்றுக்கான இயக்குநரகங்கள் இவை. தங்கள் பணி வரம்புக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்ட கதை எழுத்தாளர் நான்கு பிரதிகள் அனுப்பிய கதைக் குறிப்பை இந்த இயக்குனரகங்கள் ஒவ்வொன்றும் தீர ஆய்வு செய்து தேவையானால் கதை பற்றிய ஆலோசனைகளையும் கதையை மேம்படுத்துவது குறித்த கருத்துகளையும் தெரிவிக்கும். இந்த இயக்குநரகங்களின் பரிசீலனை முடிந்து கதை தொடர்பான மாற்றங்கள் உறுதியான பிறகு கதையை எழுத இறுதி கட்ட அனுமதிச் சான்றிதழ கதை எழுத்தாளருக்கு வழங்கப்படும். எழுத்தாளர் இந்த அனுமதியை எளிதில் கண்ணில் படும் வண்ணம் தன் வீட்டு முன்னறையில் காட்சிப் படுத்த வேண்டும். தகுந்த அனுமதி இன்றிக் கதை எழுத முற்படுகிற எந்த எழுத்தாளரும் ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, பதினெட்டு மாதங்களுக்கு உட்பட்ட கால அளவு சிறையில் அடைக்கப் படுவார்… இப்படியான தீவிர நடவடிக்கைகளைத் தவிர்க்கவே அரசு விரும்புகிறது. அரசின் முக்கிய நோக்கம் தேசிய கலாசாரத்தை முன்னேற்றுவதே ஆகும். இந்தக் கதைகள் துறை ஏற்படுத்திச் செயல்படுவது தொடர்பான நடவடிக்கை கதை எழுதுவதில் ஒரு புரட்சியை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கு உண்டு. தேசிய கதை வாரத்தை நாங்கள் தொடங்கி வைக்க இருக்கிறோம் என்பதை மதிப்புக்குரிய உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘நல்ல கதை எழுதுவோம்’ இயக்கம் நாடு முழுவதும் இந்த தேசியக் கதை வாரத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவது மூலம் பிறப்பெடுக்கும்.’.
அமைச்சர் இறுதியாகக் கூறியதாவது : ‘இதெல்லாம் இந்த நாட்டில் எழுதப்படும் கதைகளின் தரத்தை மேம்படுத்த இந்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அங்கமாகும். நாங்கள் இந்த நடவடிக்கைகளின் பலனை கவனமாக நோக்கி வருவோம்.’
அமைச்சர் இந்த இடத்தில் குரலை உயர்த்திச் சொன்னார் : ‘மோசமான கதை எழுத்தாளர்களின் மசிப் புட்டிகளை உடைத்தெறிய இந்த அரசு சற்றும் தயங்காது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டில் மோசமான கதைகள் எந்த வடிவத்திலும் பிறப்பெடுப்பதை நாங்கள் விரும்பவில்லை. மாநிலக் கதை அதிகாரிகள் அனுப்பும் காலாண்டு அறிக்கைகளின் அடிப்படையில் நிலமையை நாங்கள் கூர்ந்து கவனித்து அதன் போக்கை அவதானிப்போம். எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தில் முன்னேற்றம் எதையும் காட்டாமல் இருந்தால், ஆளுங்கட்சி உறுப்பினர்களான நாங்களே கதை எழுதத் தொடங்கி விடுவோம் என்பதைச் சொல்வதில் எந்த தயக்கமும் எனக்கில்லை’.
இந்தக் கட்டத்தில் நான் விழித்துக் கொண்டேன்.
(நன்றி : A writer’s nightmare – R.K.Narain’s essays anthology)
March 6, 2021
லண்டன் டயரி – நூலில் இருந்து
என் ‘லண்டன் டயரி’ பயண நூலில் இருந்து (கிழக்கு பதிப்பகம், Stall F 7, Chennai Book Fair 2021 )
வெஸ்ட்மின்ஸ்டர் பாதாள ரயில் நிலையத்துக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் என்றாலும் ஒரு பெரிய அலையாக எல்லா கிரகங்களிலிருந்தும் புறப்பட்டு வந்த உயிரினங்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. மற்றொரு கும்பல் வெளியிலிருந்து உள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு நான் முதல் கூட்டத்தில்.
கழிவறைக்குப் போகிற பாதையில் தரையில் துண்டு விரித்து வைத்து ஒரு இளைஞர் அற்புதமாக வயலினில் மேற்கத்திய இசை வாசித்துக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் சுவரில் ‘இங்கே பஸ்கிங்க் busking அனுமதிக்கப் பட்டுள்ளது’ என்று எழுதியிருப்பது கண்ணில் படுகிறது. ரயில் நிலையத்தில் இப்படி வாத்தியம் வாசித்து துண்டு விரித்துக் காசு சம்பாதிக்க (இதற்குப் பெயர்தான் பஸ்கிங்க்) லண்டன் மாநகராட்சி ஏற்படுத்திய தடை சமீபத்தில் நீங்கியதால், ரயில்வே ஸ்டேஷன்களில் அங்கங்கே இசைமழை. துண்டு விரிப்பில் காசு போட்டுவிட்டு “என்ன வாசிக்கிறீங்க?” என்கிறேன். ரிச்சர்ட் வாக்னர் எழுதிய இசை என்று சொல்லிவிட்டு அவர் தொடர்கிறார். அடுத்து இடத்தைப் பிடிக்கத் தயாராக ஒரு ஆப்பிரிக்கக் கூட்டம் முரசுகளோடு நிற்கிறது.
ரயில் நிலையக் கழிவறையில் நுழைய ஐம்பது பென்ஸ் கட்டணம். ஒன் பாத்ரூம் போக நாற்பத்தைந்து ரூபாயா? “பக்கத்திலே செடிகொடி இருக்காமலா போயிடும்?” தோளைக் குலுக்கிக் கொண்டு இரண்டு அமெரிக்க இளைஞர்கள் வெளிநடப்புச் செய்கிறார்கள். உள்ளே காசைக் கொடுத்துவிட்டுக் கனவான்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்கிறார்கள். “குப்தாஜி, இஸ் மே ஸரா பானி ..” அடைத்த கதவுக்குப் பின்னால் இருந்து யாரோ காலி பிளாஸ்டிக் மினரல் வாட்டர் பாட்டிலை வெளியே நீட்ட, வெளியெ நிற்கும் குப்தாஜி காகிதத்தை உபயோகிக்கச் சொல்லி இந்தியில் மன்றாடுகிறார். உள்ளே இருந்து இன்னும் அதிகாரமும் அவசரமுமாக குப்தாஜி மிரட்டப்பட, காலிபாட்டிலோடு தண்ணீர் பிடிக்க ஓடுகிறார் அவர். இனிமேல் இந்த பிராண்ட் மினரல் வாட்டர் வாங்கப் போவதில்லை என்று தீர்மானித்தபடி ஸ்டேஷனுக்கு வெளியே வருகிறேன்.
பாதாள ரயில் பாதையின் இருட்டைப் பார்த்துப் பழகிய கண்ணுக்கு, ஸ்டேஷனுக்கு வெளியே கண்ணைக் குத்தும் காலை வெய்யில் இதமாக இருக்கிறது. இங்கிலாந்தின் பரபரப்பான சரித்திரம் தொடர்ந்து நிகழ்கிற பெரிய வெட்டவெளி மேடையாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பிரதேசம், வெய்யில் காய்ந்தபடி சோம்பலோடு கொட்டாவி விட்டுக்கொண்டு நிற்கிறது.
மூடியிருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தின் வாசலில் நூற்றுச் சொச்சம் வயதானவர்கள் பெஞ்சில் உட்கார்ந்து ஒரு கடமையை நிறைவேற்றுகிறது போல் நிதானமாகச் சாக்லெட் க்ரீம் வடியும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பின்னால், வெஸ்ட்மின்ஸ்டர் கல்லறைகள். மூச்சுவிட மறந்துபோன வி.ஐ.பிகளால் அந்த இடம் நிறைந்து கிடக்கிறது. பெரிய சைஸ் சதுரங்கப் பலகைகளிலிருந்து வாரியெடுத்துக் கிடத்திப் படுக்க வைத்தது மாதிரி ராஜா, ராணி, மந்திரி, மதகுரு என்று ஒரு நட்சத்திரக் கும்பலே அங்கே உண்டு. கூடவே புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமா, நாடக நடிகர்கள், அரசியல்வாதிகள். இன்னும் நிறையப் பிரபலங்களை இங்கே புதைக்க இங்கிலாந்து மக்கள் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், உயிரோடு இருக்கிறவர்களைப் புதைக்கச் சட்டத்தில் இடமில்லை என்பதுதான் சின்னச் சிக்கல்.
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை வாசல். அப்படிச் சொன்னால் ஆட்டோக்காரருக்கு வழி தெரியாது. நாடாளுமன்றம் என்று சொன்னால் சுலபமாகப் புரியும். (குறுக்கு வெட்டாக ஒரு தகவல் – இங்கிலாந்தில் ஆட்டோக்கள் புதிதாக அறிமுகமாகியிருக்கின்றன. நம்ம ஊர்த் தயாரிப்புதான்.
இன்னும் இவை லண்டனுக்கு வராவிட்டாலும் அறிமுகப்படுத்திய இடங்களில் சக்கைப்போடு போட, லண்டன் டாக்சி டிரைவர்கள் முஷ்டியை மடக்கிக்கொண்டு காத்திருக்கிறார்களாம்).
நாடாளுமன்ற வாசல் முன்பாக நின்றபடி முறைத்துப் பார்க்கிற பழைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை. கன்சர்வேடிவ் கட்சி – லிபரல் கட்சி – திரும்ப கன்சர்வேடிவ் கட்சி என்று தாத்தா அந்தக் காலத்திலேயே ஜம்மென்று கட்சித் தாவல் நடத்தினாலும் இரண்டாவது உலகமகா யுத்தத்தின் போது சர்வ கட்சி அரசாங்கத்தின் பிரதமரமாக சக்கைப் போடு போட்டிருக்கிறார்.
அதிமுக்கியமான நூறு பிரிட்டீஷ்காரர்கள் யார் என்று பி.பி.சி டெலிவிஷன் இரண்டு வருடம் முன்னால் எடுத்த கணக்கெடுப்பில் எலிசபெத் மகாராணி, மறைந்த அவருடைய மருமகள் டயானா எல்லோரையும் பின்னால் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்தவர் இவர். மகாத்மா காந்தியைப் பற்றி, ‘அந்த அரை நிர்வாணப் பக்கிரியைக் கையையும் காலையும் கட்டி, டில்லித் தெருவிலே போட்டு யானை மேலே வைஸ்ராய் துரையை உக்கார வச்சு ஓங்கி மிதிச்சுக் கொல்லச் சொல்லணும்’ என்று அழுகல் வாக்கு அருளிய இந்தச் சுருட்டுக்காரக் கிழவரைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறேன்.
நாடாளுமன்றத்துக்கு முன்னால் சுற்றி வளைந்து போகிற சந்து பொந்துகளில் கால்போன போக்கில் நடக்கிறேன். பழைய காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசித்த இந்தத் தெருக்கள் இன்னும் பழைய கேஸ் விளக்கு அலங்காரத்தோடு காலத்தில் உறைந்துபோய் நிற்கின்றன.
நாடாளுமன்றத்தில் ஏதாவது மசோதா மேல் ஓட்டெடுப்பு வந்தால் அங்கே முழங்கும் மணிச்சத்தம் இந்த முடுக்குச் சந்துகளில் சத்தமாகக் கேட்க, சாப்பிட உட்கார்ந்த, தூங்க ஆரம்பித்த, சும்மா வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து காதைக் குடைந்து கொண்டிருக்கிற உறுப்பினர்கள் எல்லாரும் போட்டதுபோட்டபடி ஓடி வருவார்களாம்.
தற்போது நாட்டை ஆளும் தொழிற்கட்சியும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் எதிரும் புதிருமாகத் தலைமைச் செயலகம் அமைத்திருந்த தெரு நிசப்தமாக இருக்கிறது. ஐம்பது வருடம் முன்னால் இரண்டு கட்சி ஆபீசிலும் தொண்டர்கள் மாடியில் ஏறி நின்று கட்சித் தாவலுக்காக எதிர்க் கட்டிட ஆசாமிகளைத் தூண்டுவார்கள். இந்தோ வந்தாச்சு என்று யாராவது நிஜமாகவே கட்டிடம் விட்டுக் கட்டிடம் தாவித் தவறி விழுந்து காலை உடைத்துக்கொண்டார்களோ என்னவோ தெரியாது, ரெண்டு கட்சிகளும் ஆபீசை வேறுவேறு இடங்களுக்கு மாற்றி விட்டன.
வெஸ்ட்மின்ஸ்டர் சுரங்கப் பாதையில் மறுபடி புகுந்து நான்காம் வாசல் வழியாகத் தேம்ஸ் நதி தீரத்துக்கு வருகிறேன். போன நூற்றாண்டில் கிட்டத்தட்ட லண்டன் கூவமாகக் கிடந்த தேம்ஸ்.
சுத்தமும் சுகாதாரமும் பளிங்கு போன்ற தண்ணீருமாக மணக்க ஆரம்பித்து வெகுகாலம் ஆகிறதை நினைத்துப் பார்க்கிறேன்.. கூவம் ஐயோ பாவம் என்று பக்கத்தில் பிக்பென் கடிகாரம் சத்தமாக மணியடித்து அனுதாபப்படுகிறது.
தேம்ஸ் படித்துறையில் பான்கேக் கடை பூட்டியிருக்கிறது. இந்தியக் களையோடு எந்த மூஞ்சியாவது தட்டுப்பட்டால், பான்கேக் வார்க்கிற இரும்புச் சட்டியில் கரண்டியால் டொண்டொண் என்று தட்டி, ‘தோசை சாப்பிட வாங்க’ என்று அன்போடு கூப்பிடுகிற பிரிட்டீஷ் பாட்டியம்மாளைக் காணோம். பான் கேக்குக்கும் தோசைக்கும் உள்ள ஒற்றுமையை யாரோ அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். “ஒரு மாதம் கடையை மூடிட்டு தென்னிந்தியாவிலே சுத்தலாம்னு இருக்கேன்” என்று போனமுறை சந்தித்தபோது சொன்னார். மெரினா மிளகாய் பஜ்ஜிக் கடைகள் பக்கம் புதுசாக ஸ்டால் போட்டு, ‘இங்கிலீஷ் தோசை’ விற்கிற, கத்தரிப்பூ கலர் கவுன் மாட்டிய ஒரு வெள்ளைக்காரப் பாட்டியை யாராவது பார்த்தால் தகவல் சொல்லவும்.

DIGITAL CAMERA
நாவல் ‘1975’ – மதிப்புரை – வெங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி ஆர்.வி.எஸ்
நண்பர் ஆர்.வி.எஸ் எழுதிய 1975 நூல் மதிப்புரை. அவருக்கு என் நன்றி
சங்கரன் போத்தி ஒரு வங்கி பணியாளர். எமர்ஜென்ஸி காலத்தில் மெட்ராஸ், அரசூர் மற்றும் புதுதில்லியில் பணியாற்றுகிறார். இருபது அம்சத் திட்டத்தில் ஊரெல்லாம் கடன் வழங்குகிறார்கள். வங்கிகள் எப்படி அப்போது இருந்தன என்பதை ஒரு வசனமாக இரா. மு எழுதுகிறார்.
>>>>>>>>>>>>
”வங்கிகள் வாங்கிகளாக இருக்கக்கூடாது, வழங்கிகளாக இருக்க வேண்டும்”
<<<<<<<<<<< அந்தக் காலத்துச் சம்பங்களின் கோர்வை 1975ன் கதைக்கரு. கருப்பு-வெள்ளையில் காட்சிகள் விரிகின்றன.இரா. முருகன் சாரின் மாய யதார்த்த கதைகள் அனைத்தும் படித்திருக்கிறேன். அவரது பயோஃபிக்ஷன்களும்தான். இந்த 1975ல் போத்தி கதை சொல்வதாக எமர்ஜென்ஸியைப் படம் பிடித்திருக்கிறார். அவருடைய எல்லா நாவல்களைப் போலவே எடுத்தால் மூடாமல் படிக்கும் தினுசுதான் இதுவும். கிண்டிலில் படித்துக்கொண்டிருந்த நான் அச்சுப்புத்தகமாக கிழக்கு வெளியிட்டீல் வந்ததை எடுத்து படுக்கையில் புரண்டு படித்தேன். 390 பக்கங்களை ஒரே நாளில் ஒரே மூச்சாக முடித்தேன்.எமர்ஜென்ஸி காலத்தில் ஜனநாயகத்தை சாவடித்துவிட்டார்கள். பத்திரிகைகளுக்கு ஏகக்கெடுபிடி. சென்சார். இப்படி இருக்கும் காலக்கட்டத்தில் சர்க்காரை எதிர்ப்பதாக ஒரு லோக்கல் பத்திரிகையில் விளம்பரம் தயார் செய்கிறார்கள். எப்படித் தெரியுமா?>>>>>>>>>>>>>
”25.6.1975 புதன்கிழமை திரு. ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்பர்கள், உறவினர்கள்” என்று எதிர்ப்பை மறைமுகமாகத் தெரிவிக்கும் விளம்பரம்
<<<<<<<<<<<<>>>>>>>>>
”இப்போ வாணாம் சாமியோவ்! இருவது பள்ளிக்கூடத்துல படிப்பான்… அப்ப தேவையின்னா கேட்டு வாங்கிக்கிறேன்”
சிரித்தார் எண்ணூர் என்ற அந்த குருவிக்காரர்.
“இருபதுன்னா?” நான் கேட்டேன்.
“பிறந்திருக்கிருக்கிற பிள்ளை. இருபது அம்சத் திட்டப் பெயரை வச்சுட்டார்” என்றார் ஜெபர்சன்.
<<<<<<<<கடுமையான வயத்துப் போக்கு ஏற்படும் ஒரு இடத்தில் கதாபாத்திரம் பேசும் வசனம் ஒன்று.>>>>>>>>>>>
”கொடுமையான வயத்துப் போக்கு. அது பாதக மலம். மருந்து கொடுத்து நிறுத்தலேன்னா, கடவுளோட பாத கமலம்….. நல்லா இருக்கா?”
<<<<<<<<<#1975#கிழக்கு#இரா_முருகன்
March 4, 2021
லண்டனில் சுற்றித் திரிந்த போது – மெய்டன் லேன் (கோவண்ட் தோட்டப் பகுதி)
என் லண்டன் பயண நூல் ‘லண்டன் டயரி’யில் இருந்து –
மூக்கு வழியே மூளையிலும் மனதிலும் புகுந்து கிறங்கடிக்கிற வாடையைச் சுற்றிலும் கிளப்பிக்கொண்டு பொன்னிறமாக வறுத்து, கையால் சுற்றும் இயந்திரத்தில் கரகரவென்று அரைத்து, கொதிக்கக் கொதிக்க வென்னீர் சேர்த்து ‘திக்’கான டீக்காஷனை ·பில்ட்டரில் இறக்கி, பத்து நிமிஷத்துக்கு முன்னால் கறந்த பசும்பால் காய்ச்சிச் சேர்த்து, வில்லை வளைக்கிறதுபோல வீசி ஆற்றி, நுரைக்க நுரைக்க டம்ளரில் ஊற்றி நீட்டுகிற அற்புதமான காப்பிக்கடைகள் லண்டனில் திறந்தது கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கதி.
விக்டோரியா மகாராணி இங்கிலாந்தை ஆண்டபோது நாடு முச்சூடும் மும்முரமாக காப்பி குடித்துக் கொண்டிருந்தது. அல்லது மதுபானம் பருகிக் கொண்டிருந்தது. பல குடிமக்கள் பகல், இரவு என்று நேரத்தைப் பிரித்துக்கொண்டு இரண்டு கட்சியிலும் அரும்பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
கோவண்ட் தோட்டச் சுற்றுவட்டாரத்தில் அப்போது காப்பிக்கடை இல்லாத சந்து பொந்து ஒன்று கூடக் கிடையாது. பரபரப்பான போட்டிக்கு நடுவே காப்பிப் பிரியர்களைக் கடைக்கு வரவழைக்கப் புதுமையான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ‘எங்க கடையில் காப்பி குடித்தால், ஒரு சுருட்டு இலவசம்’ என்று விளம்பரம் செய்கிற கடைக்கு நேர் எதிரே, ‘காப்பி குடித்தபடியே இலவசமாக தினசரிப் பத்திரிகை படியுங்கள்’ போர்ட் வைத்த கடை. ‘பெரிய சைஸ் டம்ளர் காப்பி ரெண்டு சல்லி, சின்ன சைஸ் டம்ளர் ஒரே ஒரு சல்லி’ என்று மினி மார்க்கெட்டிங்கில் காசை அள்ளிய கடை இப்படிப்பல. பால் பவுடர் என்ற சமாசாரத்தைக் கண்டுபிடித்ததும் அந்த சமயத்தில்தான். “என்னத்துக்கு மெனக்கெடணும்? லண்டன் பால்காரங்களைக் கேட்டா சொல்லுவாங்களே, சுண்ணாம்புக் கட்டியைக் கரைச்சுத் தண்ணியை ஊத்திக் கொஞ்சம் பாலைச் சேர்த்தாப் போதுமே” என்று அந்தக்கால நகைச்சுவை பத்திரிகை ‘பஞ்ச்’ நையாண்டிக் கட்டுரை எழுதியதும் அப்போதுதான்.
கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு வசமாகத் திரும்பி, ஒரு காலத்தில் காப்பிக் கடைகள் செழித்தோங்கிய மெய்டன் சந்தில் நடக்கிறேன். முட்டுச் சந்தாக முடிந்த இந்த மெய்டன் சந்து இரண்டு பக்கத்திலும் திறந்து, பக்கத்து சவுத்ஹாம்ப்டன் வீதியில் முடிய வழிவகுத்தவர் விக்டோரியா மகாராணி. நாடக ரசிகையான அவர், கோவண்ட் தோட்டப் பக்கத்து நாடகக் கொட்டகைக்கு சாரட் வண்டியில் வந்துவிட்டுத் திரும்பப் போக வசதியாக இப்படி மெய்டன் சந்துக்கு ராஜபாட்டை அந்தஸ்து ஏற்பட்டதோடு, அந்தத் தெரு கூடுதல் பரபரப்புக்கு இடமானது.
நான் இப்போது நிற்கும் மெய்டன் சந்து முழுக்க சாப்பாட்டுக் கடைகள், அங்கங்கே வக்கீல் ஆபீஸ்கள். மெக்சிகோ, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ் என்று எல்லா தேசத்து உணவுக்கும் இந்தத் தெருவுக்கு வந்தால் போதும். பழைய காலக் காப்பிக்கடை ஏதும் மிச்சமிருக்கிறதா என்று ஒவ்வொரு வாசலிலும் ஆர்வத்தோடு நோக்கினால் ஏமாற்றம்தான். காப்பிக்கடைகள் எல்லாம் நம்மூருக்குக் குடிபெயர்ந்து ஏழெட்டு மாமாங்கமாவது ஆகியிருக்கும்.
எதிர்வசத்து ரூல்ஸ் ஓட்டல் போர்ட் கவனத்தை ஈர்க்கிறது – ‘லண்டனிலேயே பழைய ஓட்டல்’. 1798-ல் தொடங்கியதாம். அப்போது தயாரித்த மைசூர்பாகு எதுவும் ஷோகேஸில் தட்டுப்படவில்லை என்றாலும் இது உண்மையாக இருக்குமென்று நம்பலாம். சார்லஸ் டிக்கன்ஸ், கிரகாம் கிரீன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் வந்து இருந்து சாப்பிட்டுவிட்டுப் போன கடை என்று எழுதி வைத்திருக்கிறது. டிக்கன்ஸ் நாவல் எழுதியதோடு நிற்கவில்லை. மேடை போட்டு, தான் எழுதிய கதைகளை அதன் பாத்திரங்களாக மாறி வாசித்துக்காட்டவும் செய்தார். வாசகர்கள் காசுகொடுத்து டிக்கட் எடுத்துக் குழுமி, அரங்கு நிறைந்து நடந்த இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கான பழைய நோட்டீசுகளை ரூல்ஸ் ஓட்டலில் காட்சியாக வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட ஏழாம் எட்வர்ட் மன்னன் தன் காதலியான நாடக நடிகை லில்லி லாங்ட்ரீயை பிரதிதினமும் அந்தி சாய்ந்த பின்னர் இந்த ஓட்டலில் வைத்துத்தான் சந்திப்பானாம்.
“நாலாவது டேபிள் தாடிக்காரப் பெரிசுக்கு மட்டன் சாப்ஸ், ரெண்டாவது டேபிள் இங்கிலாந்து ராஜாவுக்கும் அவரு ஜோடிக்கும் சிக்கன் ரோஸ்ட், எட்டாவது டேபிளுக்கு தக்காளி சூப்.” என்று அந்தக்கால ஓட்டல் வெயிட்டர்கள் மேற்படி ராஜரகசியத்தை சகஜமாக எடுத்துக்கொண்டு நடமாடியிருப்பார்கள் என்ற நினைவோடு நடையை எட்டிப் போடுகிறேன்.
மெய்டன் சந்து பத்தாம் எண் வீட்டு வாசலில் ஒரு வினாடி நிற்கிறேன். வால்ட்டேர் இருந்த வீடு என்று வெளியே பலகை அறிவிக்கிறது. பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்ட்டேர் அது வெடிப்பதற்கு முன்னால் அகதியாகத் தஞ்சம் புகுந்தது லண்டனில்தான். அதுவும் இந்த கோவண்ட் கார்ட்ன் பகுதியும், மெய்டன் சந்து சூழ்நிலையும் ரொம்பப் பிடித்துப் போகவே இந்த வீட்டில் ஒரு வருடம் குடக்கூலி கொடுத்து வசித்து லண்டன் வாழ்க்கையை அனுபவித்தபடி சொந்த நாட்டில் புரட்சிக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார். ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றப்போகிற மனுஷர் நம்மிடையே இருக்கிறார் என்று தெரியாத அந்தக்கால மெய்டன் சந்துவாசிகள் அவரை அடிக்க ஒருதடவை படைபட்டாளமாகக் கிளம்பியிருக்கிறார்கள். பிரஞ்சுக்காரர்கள் தொடங்கி அன்னிய தேசத்துக்காரர்கள் யாரையும் கூடியிருக்கச் சம்மதிக்காத மனநிலையே இதற்குக் காரணம். இந்தச் சகிப்பின்மை இப்போதும் அவ்வப்போது ஷில்பா ஷெட்டி விவகாரம் போல் தலைகாட்டிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.
மெய்டன் சந்தில் மணக்க மணக்க செண்ட் விற்கிற பென்னலிஹன் கடை கண்ணில் படுகிறது. இதுவும் நூற்றுச் சில்லறை வருடம் முற்பட்டதுதான். உள்ளே வாக்கிங் ஸ்டிக்கை அப்படியும் இப்படியும் வீசியபடி அலமாரிகளில் அடைத்து வைத்திருந்த செண்ட் போத்தல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கனவான்கூடக் கடை திறந்த நாள் முதல் வாடிக்கையாளராக இருக்கப்பட்டவர் என்று தோன்றுகிறது. கடைக்குள்ளே நுழைந்து ஒரு சுற்று சுற்றி வருகிறேன். இரண்டாம் உலக மகாயுத்த காலத்துச் சூழல் கனமாகச் சூழ்ந்து நிற்கிற பிரமை.
தஞ்சாவூர் அத்தர்க்கடை, கோபுலு வரைந்த தில்லானா மோகனாம்பாள் ஓவியம், வாசனைப் புகையிலை, சர்ச்சிலின் சுருட்டு வாடை, ராத்திரி முழுக்க நடக்கிற நாதசுவரக் கச்சேரி என்று நான் பிறப்பதற்கு முந்திய 1940-கள் மாயமாகக் கிளர்ந்தெழுந்து புலன்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மெய்டன் சந்தில் காலம் உறைந்து கிடக்கிறது.
மெல்ல நடந்து சவுத்ஹாம்ப்டன் தெருவில் திரும்புகிறேன். எதிரே நிற்கிற பழைய கட்டிடம் ஒரு பத்திரிகை அலுவலகமாக இருந்தது. ஆமாம், நூறு வருடம் முன்னால்தான். ஆர்தர் கானன்டாயில் உருவாக்கிய பிரபலமான துப்பறியும் நிபுணரான ஷெர்லாக் ஹோம்ஸ் கதாநாயகனாக இடம்பெற்ற கதைகள் வெளியான ‘தி ஸ்ட்ராண்ட்’ பத்திரிகை இந்தக் கட்டிடத்திலிருந்துதான் பிரசுரமானது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதை வாசிக்க ஆர்வமான ரசிகர்கள் இங்கிலாந்திலும், கடல் கடந்து அமெரிக்காவிலும் அதிகம் என்பதால், கிட்டத்தட்ட லட்சக் கணக்கில் விற்ற பத்திரிகை அது.
ஸ்ட்ராண்ட் பத்திரிகை அடித்து ஓய்ந்த நேரத்தில் அச்சு யந்திரத்தைச் சும்மா வைத்திருக்க வேண்டாமே, இன்னும் நாலு காசு பார்க்கலாமே என்ற நல்லெண்ணத்தோடு அங்கேயிருந்து ஒரு கிசுகிசு பத்திரிகையும் வெளியாகிக் கொண்டிருந்ததாம். அதை ஆரம்பித்தபோது முதல்நாள் கிசுகிசுவாக, ‘ஏழாம் எட்வர்ட் மன்னருக்குப் பிரபல நடிகையோடு தொடர்பு’ தான் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.
Maiden Lane – near Covent Garden, London
Photo : ERA

DIGITAL CAMERA

DIGITAL CAMERA

DIGITAL CAMERA
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

