இரா. முருகன்'s Blog, page 72

August 27, 2021

அடக்கியும் அன்றியும் அதற்கும் பயிற்சி : மிளகு நாவலில் இருந்து

an excerpt from my forthcoming novel MILAGU

அடக்கியும் அன்றியும்

மிளகுராணி சென்னபைரதேவியும் அபயராணி அப்பக்கா தேவியும் இருக்கும்வரை டச்சுக்காரர்களின் ஏகாதிபத்யமோ இங்கிலீஷ் ஈஸ்ட் இண்டியா கம்பெனியின் குள்ளநரித் தந்திரங்களோ இங்கே எடுபடாது என்றார் ஸாமுரின். போர்த்துகீசியர்களும் இந்தப் பட்டியலில் உண்டு என்பதை அவர் தற்காலிகமாக மறந்திருந்தார். பெத்ரோவும் தான்.

திடீரென்று ஸாமுரின் எழுந்தார். எல்லோரும் எழுந்து வணங்கித் தலை தாழ்த்தி இருக்க அவர் பின் அரங்கத்துக்கு நடந்தார். போகும்போது யாரிடமோ காதில் ஏதோ சொல்லிப் போனார்.

”ஸாமுத்ரி மகாராஜாவு அற்ப சங்கைக்கு ஒதுங்கப் போயிருக்கார். பெத்ரோ துரைக்கு ஒதுங்க வேணுமென்றால் உதவி செய்யச் சொன்னார்”. அந்த அரண்மனை ஊழியர் பணிவு விலகாத குரலில் பெத்ரோவுடன் சொன்னார்.

நன்றி இப்போது வேண்டாம் என்று புன்சிரிப்போடு தலையசைத்துச் சொல்லி விட்டார் பெத்ரோ.

லிஸ்பனில் இருந்து அரசாங்க உத்தியோகம் கொடுத்து வெளியே அனுப்பும்போது இந்துஸ்தானி, கொங்கணி வசவுகளைக் கற்பிப்பதோடு, மணிக்கணக்காக சிறுநீர் கழிக்காது அடக்கியபடி வேலையில் ஈடுபடவும் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அதை அடிக்கடி செய்யக் கூடாது, உடல் நலம் கெட்டுவிடும், அந்த மாதிரி நேரங்களில் தண்ணீர் குடிப்பதைத் தற்காலிகமாகக் குறைத்துக் கொண்டு பிறகு அதிகமாக்கலாம் என்ற மருத்துவ ஆலோசனையும் கூட உண்டு.

”எங்கள் அவை இந்த வாரம் செயல்படாது. பத்து நாள் ஓணத் திருநாள் கொண்டாட்டங்கள் இன்று தொடங்குகின்றன. அனைவரும் ஓணச் சிந்தனைகளில் இருப்பார்கள். என் இஸ்லாமிய கப்பல் தளபதி கூட இங்கே இல்லை, சொந்த ஊருக்குப் போயிருக்கிறார்” என்று சிரித்தார் ஸாமுரின்.

’குஞ்ஞாலி’ மரைக்காயர் ஊரில் இல்லை என்று அறிய நிம்மதியாக இருந்தது பெத்ரோவுக்கு. குஞ்ஞாலி பட்டம் பெற்ற கடற்படைத் தளபதிகள் ஸாமரினோடு சேர்ந்து உக்கிரமாகப் போராடி வேறெந்த அரசும் வியாபாரம் பேசி நாடு பிடிக்க முற்பட்டால் அவர்களின் கப்பல்களை முற்றுகையிட்டுத் திருப்பி அனுப்புவார்கள். சுலைமான் என்ற பெயருள்ள தற்போதைய ’குஞ்ஞாலி’ மரைக்காயர் சென்னபைரதேவிக்கு நல்ல சிநேகிதத்தில் இருக்கப்பட்டவர். அவரை வைத்துக்கொண்டு தனி வர்த்தக ஒப்பந்தம் பற்றிப் பேசுவது தர்மசங்கடமாக இருக்கும் பெத்ரோவுக்கு.

——————————————–
மாமனார் வீட்டுக்குள் பெத்ரோ நுழைந்து மனைவி மரியாவையும் குழந்தைகளையும் பார்த்து ஒரு நிமிடம் பேசினார். இதோ ஒரு நிமிடம் என்று காலணிகளை அவசரமாகக் கழற்றி உதறி விட்டுத் தோட்ட வெளிச்சத்தில் நடந்தும் ஓடியும் போனார்.

மிளகும், பிலிப்பும், சென்னபைரதேவியும், ஸாமுரினும் யாரும் எங்கேயும் போகட்டும். பெத்ரோவுக்கு இப்போது மேலும் தள்ளிப்போட முடியாத வேறு காரியம் இருக்கிறது.

கால்களை நனைத்து சால் வெட்டியதுபோல் சுழித்து ஓட, மரத் தண்டுகளை ஈரமாக்கிச் சுழன்று மண்ணில் இறங்கி, வாழை மரங்களைச் சுற்றி வளைந்து திரும்பி, பாத்தி கட்டி வளர்த்த கீரையை விளிம்பில் தொட்டு நெடி மிகுந்து பெருக, நிறுத்தாமல் சிறுநீர் கழித்தபடி இருந்தார் பெத்ரோ.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2021 20:16

August 25, 2021

மிளகு நாவல் – லிஸ்பன் போக வேணுமா அல்லது மாட்ரிட் பெருநகருக்கா?

”ஜனவரியில் புறப்பட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் லிஸ்பனை அடையலாம். அப்படியே எடுத்துக் கொள்ளட்டுமா? அல்லது மாட்ரிட் முதலில் வருவீர்களா?”

ஆர்வம் மிகுந்த குரலில் பெத்ரோ பிரபு வினவினார்.

“இருங்கள் சின்ஹோர் இமானுவல் பெத்ரோ. இந்தப் பயணம் உடனே முடிவெடுத்து அடுத்த நாள் நாலு துணிமணியை மடித்து சஞ்சியில் வைத்துக்கொண்டு கிளம்பி விடுகிற சமாசாரம் இல்லையே. நான் இல்லாதபோது இங்கே காரியங்கள் நான் இல்லாதது குறையாகத் தெரியாமல் நடந்தேறத் திட்டமிட வேண்டும். பயணம் போனால், எவ்வளவு சீக்கிரம் திரும்புகிறேனோ அவ்வளவு விரைவில் மிர்ஜான் திரும்ப வேண்டும். யாரெல்லாம் என்னோடு வருகிறார்கள். இது நல்ல கேள்வி. கல்யாண கோஷ்டி மாதிரி முப்பது, நாற்பது பேரோடு லிஸ்பன் புறப்பட நானும் விரும்ப மாட்டேன். உங்கள் அரசரும் அவர்தம் குடும்பமும் கூட இவ்வளவு பெரிய குழுவைச் சந்திக்க விருப்பப்பட மாட்டார்கள். ஆமாம், பயணம் என்றால் கப்பல் சீட்டு, லிஸ்பனில் தங்க, உணவு உண்ண, சுற்றிப் பார்க்க, இதெல்லாம் இலவசமாக எல்லோருக்கும் கிடைக்குமா என்ன? அந்தக் கணக்கு தெரிய வேண்டாமா பயணம் என்று புறப்படும் முன்னால்? ஒரு பேச்சுக்காக பத்து பேர் கொண்ட பயணக் குழு என்று வைத்துக் கொள்வோமா?”

பெத்ரோ சிரித்தபடி இருகை கூப்பி இந்தியனாக வணங்கினார்.

”பேகம் சாய்பா, அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம். மிளகு ராணி அவர்களே, தாங்கள் எங்களுடைய பெருமதிப்புக்குரிய விருந்தினர். செலவு கணக்கு தங்களுக்கானது அல்ல. அதைத் திட்டமிடுவோம் உண்மைதான். ஆனால் எந்தச் செலவும் குறையேதும் வராதபடி திட்டமிடப்படும். அதற்குத்தான் அழைப்பு முழுமைப்படுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுப்பது, யுவர் மெஜஸ்டி”.

”அதென்ன மிளகு ராணி, யுவர் மெஜஸ்டி, பேகம் சாய்பா ஒரேயடியாக சிரசைக் குளிர வைக்கிறீர்களே? திரும்ப ஜலதோஷம் பிடித்தால் எங்கள் வைத்தியனைத்தான் கூப்பிட வேண்டும். கசப்பு கஷாயம் திப்பிலி, சுக்கு, பனஞ்சீனி என்று தட்டிப்போட்டு காய்ச்சிக் கொடுப்பதை பிடிக்கவில்லை என்று தள்ளவும் முடியாது, பிடிக்கிறதென்று ஒரு குவளைக்கு மேல் அந்தக் கருப்பு திரவத்தைப் பருகவும் முடியாது. வைத்தியன் அத்தியாவசியமான ஒருவர்”

சென்னபைரதேவி மகாராணி பெத்ரோவைப் பார்த்தாள். அவர் ஒரு வினாடி யோசித்தார்.

“அத்தியாவசியமாக யாரெல்லாம் வரக்கூடும் என்பதை ஊகித்துப் பார்க்கலாமே. நான் குத்துமதிப்பாகப் பார்த்தால் இளையவர் நேமிநாதன், அவர் மனைவியவர்கள், வைத்தியர்”.

பெத்ரோ அடுக்கிக் கொண்டு போக போதும் என்று கைகாட்டினாள் சென்னா.

”இந்தப் பட்டியலை நான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இல்லை”.

ஒருவினாடி சாந்தமான அந்த முகத்தில் சினம் தெரிய, பெத்ரோ பதறிப் போனார்.

எஸ்பேனியத் தலைநகர் மாட்ரிட் – ஒரு பழைய புகைப்படம்

Processed with VSCO with j2 preset

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2021 07:25

August 23, 2021

மிளகு நாவலில் இருந்து – கோழிக்கோடு சாமுத்ரியை (ஸாமுரின்) போர்த்துகீஸ் அரசு தலைமைப் பிரதிநிதி இம்மானுவல் பெத்ரோ சந்திக்கிறார் (ஆண்டு 1605)

ஸாமுரின் இடுப்பில் அவசரமாக உடுத்தியதுபோல் ஒரு பட்டுத் துணியை இறுக்கக் கட்டி இருக்கிறார். அதற்கு மேல் உடை ஏதும் இல்லை.

பரந்த மார்பும் கரளை கரளையாகக் கையும் காலும் வாய்த்து இரு பக்க கை அமரும் இடங்களிலும் சிங்க உருவங்கள் வடித்து நிறுத்திய அரியணையில் அமர்ந்திருக்கிறார் ஸாமுரின்.

மேலுடம்பில் துணி போர்த்தாததைக் குறையாக்காமல் கழுத்திலிருந்து இடுப்பு வரை நீளமான, குறைந்த நீளத்தில், மத்திய நீளமாக முத்துமுத்தாகப் பதித்த மாலைகளும் காசுமாலைகளும் அழகான ஆபரணங்களாக அவர் நெஞ்சில் தவழ்கின்றன.

தோள்களிலும் இறுகக் கவ்விப்பிடித்த ஆபரணங்களை ஸாமுரின் அணிந்திருக்கிறார். இடுப்பில் ஒரு குத்துவாளைச் செருகியிருக்கிறார். தலையில் பெரியதோர் ஆபரணமாக மணிமுடி தரித்திருக்கிறார். அதற்குள் இடைவெளியை அழகான மயில் அல்லது வேறு ஏதோ வண்ணமயமான பறவை இறகுகள் மறைத்துள்ளன.

தலைமுடியை முன்குடுமி கட்டியிருப்பது அவர் அரியணையில் இருக்கும்போது குனிந்து ஏதாவது தேடினால் அன்றி கண்ணில் படுவதில்லை.

காலில் செருப்புகளோடு கணுக்கால் பிடிக்கும் ஆபரணங்களையும் அணிந்திருக்கிறார் ஸாமுரின். எந்த ஆபரணமும் பொன்னாக ஒளி வீசவில்லை. வெள்ளியில் செய்தமைத்தவையாக இருக்கக்கூடும் என்று பெத்ரோவுக்குத் தோன்றியது.

அரியணை கூட சிங்கம், வளைவுகள், சிறு இலை, கொடி வேலைப்பாடுகளோடு வெள்ளியில் செய்ததாக இருக்கக் கூடும். அதன் கீழே ஒரு படி வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது.

ஸாமுரின் செருப்பணிந்த ஒரு காலை படியில் ஊன்றி, மற்றதை இருக்கையில் மடித்து வைத்து அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பின் நீல நிறத்தில் சாட்டின் துணித் தலையணை உறை போட்ட திண்டு ஒன்று ஸாமுரின் அரியணையில் சாய்ந்து சௌகரியமாக அமர வகை செய்கிறது.

முரட்டுச் செருப்புகளும் காதில் பெரிய வளையங்களும் அணிந்து தலைப்பாகை வைத்த வீரர்கள் நான்கு பேர் வலது கரத்தில் ஓங்கிப் பிடித்த வாளோடு அரியணைக்கு அருகே நாலு பக்கமும் நிற்கிறார்கள். அவர்களில் ஒருவன் தரையில் அரியணை பக்கம் ஜாக்கிரதையாக அமர்ந்திருக்கிறான்.

அரசவையில் ஸாமரினுக்குத் தொட்டு விடும் தூரத்தில் முப்புரிநூல் தரித்த முதிய ஆலோசகர் நின்றபடி இருக்கிறார். பெத்ரோ போர்த்துகீஸ் மொழியில் சொல்வதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதும், ஸாமுரின் மலையாளத்தில் உரைப்பதை போர்த்துகீஸ் மொழிக்கு மாற்றுவதும் ஆலோசகரின் பணிபோல. வெகுவேகமாக மொழியாக்குவதால் வார்த்தைக்கு வார்த்தை சரிதானா என்று சோதிக்க முடியவில்லை. சென்னபைரதேவி அரசவையில் பிரதானி நஞ்சுண்டையா நிதானமாக எல்லோருக்கும் எல்லாம் விளங்கும்படி மொழிபெயர்ப்பார். இந்த ஆலோசகர் எதற்கோ ஓட்டஓட்டமாக ஓடுகிறார்,

பலாப்பழ சுளைகளும், வாழைப்பழத்தைத் துண்டுபடுத்தி தேங்காய் எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொறித்தெடுத்து மிளகுப்பொடியும் உப்பும் தூவிய வறுவலும், தென்னை இளநீரும் உரையாடலுக்கு இடையே பெத்ரோவுக்கும், ஸாமுரினுக்கும் வழங்கப்படுகின்றன.

கையில் பிடித்த உணவுத் தட்டுகளோடு அரசியல் பேச்சுவார்த்தை நடத்த பெத்ரோவுக்குச் சற்றே சிரமமாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் பேசியபடி இருக்கிறார்.

அவரிடம் மிளகு விலை நிர்ணயம் பற்றிய முதல் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று போர்த்துகல் பேரரசர் பிலிப்பு தீவிரமாக இருப்பதை பெத்ரோ சொல்லி ஆரம்பிக்க வேண்டியுள்ளது. மிளகு அரசி ஜெர்ஸோப்பா மகாராணி சென்னபைரதேவியோடு மொத்த மிளகுக் கொள்முதல் பற்றி உடன்படிக்கைக்கு வழி செய்தபடி, கோழிக்கோடு ஸாமரினோடு மலபார், தலைச்சேரி இன மிளகுக்குத் தனி வணிக ஒப்பந்தம் ஏற்படுத்துவது பற்றிப் பேச பெத்ரோவுக்குச் சற்றும் பிடிக்கவில்லை.

என்ன செய்ய, மன்னர் தீவிரமாக இந்தப் பேச்சு வார்த்தைக்கு முனைந்திருக்கும்போது அவருடைய ஊழியர் பெத்ரோ என்ன செய்யமுடியும். அதை நோக்கி பேச்சை நகர்த்த ஒரு சரியான தருணத்தை எதிர்பார்த்து இளநீர் பருகிக் கொண்டிருந்தார் பெத்ரோ.

இனிப்பும் உப்புமாக இந்தத் தென்னை இளநீரும் தனிச் சுவையாக இருந்தது பெத்ரோவுக்கு.

painted by Veloso Salgado in 1898

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2021 06:58

August 22, 2021

எலும்பை மறைத்த எறும்பு – எல்லும் உறும்பும் – மிளகு நாவல்

மிளகு நாவலில் இருந்து

கோரன் போனபோது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது என்றார் பரமேஸ்வரன்.

“பின்னே இல்லையா? ரெபல்லியஸ் லெஃப்டிஸ்ட் அப்படித்தான் கவிதைப் புத்தகத்து அட்டையிலே போட்டிருக்கார். காண்பிக்கறேன் பாருங்கோ”.

அவர் காஃபி டேபிள் கீழ் வரிசையாக வைத்திருந்த புத்தகங்களை குவியலாக அள்ளி எடுத்து உரக்கப் பெயர் குறிப்பிட்டார்.

“எதுக்கு திலீப்? நான் மலையாளம் படிக்கலே. தமிழும் இங்க்லீஷும் மராத்தியும் கொஞ்சம் இந்தியும் தெரியும். அவ்வளவுதான்”.

புத்தகத்தைத் தேடி எடுத்து தூசி தட்டி ஓரமாக ஜன்னல் கம்பிக்கு நடுவே செருகியிருந்த துணிச் சுருணையால் துடைத்தபடி பரமேஸ்வரனிடம் கொடுத்தார் திலீப். அதில் பின் அட்டையில் கிரீடம் அணிந்த கோரன் படம்.

திரும்ப வாங்கிப் புத்தகப் பக்கங்களைப் புரட்டினார் திலீப்.

“இது பாருங்கோ. எல்லும் உறும்பும்.. எலும்பும் எறும்பும்.. என்ன மாதிரி கவிதை எழுதறார்ங்கறதுக்கு சாம்பிள்.

எலும்பும் எறும்பும்
——————–
நிறைய யோசித்து எழுதினான்:
’எறும்பு எலும்பாகும் எனினும்
எலும்பு சிலவேளை தான் எறும்பாகும்
எலும்புப் புற்றில் கடியெலும்பும்
சேவக எலும்பும் உண்டு’.

’மழைக்காலத்துக்காகச் சேமிக்க
எலும்புகள் இரையை இருநூறு முன்னூறாக
இழுத்துப் போகின்றன
மழை வரும்போது
எலும்பு இருக்குமோ’.

’அதெல்லாம் எலும்பில்லை எறும்பு
அச்சுப் பிழை’
சத்தம் போட்ட இன்னொருத்தன்
வெளியேற்றப் பட்டான்

எலும்புகளின் புற்றில் சர்வாதிகாரம் பற்றி
எறும்புகள் கட்டிவைத்த உடல்களோடு
எல்லோரும் சர்ச்சையில் இருந்தார்கள்.

எலும்பில்லை எறும்பு சில நேரம்
எறும்பில்லை எலும்பு இன்னும் சில நேரம்
வலது கை அசைத்தால் எலும்பு
இடக்கை அசைத்தால் எறும்பு

எறும்பு எலும்புதான்
எலும்பு எறும்பு இல்லை”

கவிதை வாசித்து முடிந்தபிறகு அப்பாவைப் பார்த்து திலீப் கேட்டார் –

“என்ன தோண்றது கவிதையைப் பற்றி?”

“நானே குளிச்சுக்கறேன்ப்பா” அவர் தாங்குகோல்களைச் சேர்த்தெடுத்து வைத்துக்கொண்டு கள்ளச் சிரிப்போடு சொன்னார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2021 08:01

August 21, 2021

என் நாவல்களில் சென்னை – அரசூர் வம்சம், விஸ்வரூபம், ராமோஜியம் சில சிறு பகுதிகள்

ஆகஸ்ட் 22 1639

மதராஸ் என்ற சென்னை அமைக்கப்பட்ட தினம். இன்றைக்கு அந்தப் பெரும் நிகழ்வின் ஆண்டு நிறைவு. சென்னைக்கு என் வாழ்த்துகள்.

என் படைப்புகளில் நான் விரிவாகச் சிறப்பித்து எழுதிக் கொண்டாடும் என் பிரியத்துக்கு உரிய பெருநிலப் பரப்பு மதறாஸ். முக்கியமாக நாவல்களில் கதாபாத்திரமே ஆகியிருப்பது வெவ்வேறு காலகட்டத்தில் சென்னை மாநகர்.

அரசூர் வம்சம் 1850-களின் சென்னை

விஸ்வரூபம் நாவலில் – 1915 முதல் 1945 வரையான சென்னை

அச்சுதம் கேசவம் 1960-களின் சென்னை

வாழ்ந்து போதீரே 1950, 1960-களின் சென்னை

மூன்று விரல் 1990-களின் சென்னை

1975 – 1970களின் சென்னை

ராமோஜியம் – 1930,1940களின் சென்னை

இது தவிர ஆழ்வார், சிலிக்கன் வாசல், வெறுங்காவல், மீண்டும் கல்யாணி போன்ற பல சிறுகதைகளும், முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் போன்ற குறுநாவல்களும் சென்னையைக் கதை நிகழும் களமாகக் கொண்டவை.

சென்னையைப் பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டும். எழுதுவேன்.

சென்னை பற்றி நான் எழுதிய சில சிறு நாவல் பகுதிகளை இன்று இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களுக்கு என் அன்பான சென்னை தினம் 2021 வாழ்த்துகள்
——————————————————————–

ராமோஜியம் நாவல் – 1943 சென்னை

இந்தக் காரை யாரெல்லாம் உபயோகிக்கிறார்கள் என்று பிள்ளை டிரைவரிடம் விசாரித்தேன்.

கவர்னர் ஆர்தர் ஹோப் துரை எப்பவாவது குஷி கிளம்பினால் காரை ஓட்டிக் கொண்டு ரேஸ் கிளப் போவார் என்று தெரிந்தது. குதிரை ரேஸில் பைத்தியம் பிடித்தது போல் ஈடுபாடு உள்ள மனுஷர் அவர்.

அவரைத் தவிர இன்னும் இரண்டு துரைகளின் பெயர்களைச் சொன்னார். அதில் ஒருத்தர் எவாகுவேஷன் நேரத்தில் மெட்றாஸ் மிருகக் காட்சி சாலைக்கு யமனாகப் போனவர். மிருகங்கள் எல்லாம் எவாக்குவேஷன் நேரத்தில் ஊருக்குள் வந்து வழியோடு போகிற யாரையும் அடித்துத் தின்று விடும் என்ற பயத்தால் அவருக்கு அரசாங்க அனுமதி கொடுத்து ராத்திரியோடு ராத்திரியாக வேலையை முடித்து வர அனுப்பியிருந்தார்கள்.

ரிப்பன் கட்டடத்துக்கு பின்னால் மிருகக் காட்சி சாலையில் வாசல் கதவை அடைத்துப் பூட்டி விட்டு, டார்ச் விளக்குகளோடு நாலு காவலாளிகள் கூட நடந்து வர, சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, கொரில்லா இப்படி ஒவ்வொரு விலங்காக கம்பி வழியே துப்பாக்கியால் துடிக்கத் துடிக்கச் சுட்டுக் கொன்ற படுபாவி அந்த வெள்ளைக்காரன்.

காண்டாமிருகத்தையும் நீர்யானையையும் கொல்ல காவல்காரர்களும் துப்பாக்கிகளால் சுட்டார்கள் என்று தகவல். அது மட்டுமில்லை, குட்டி யானையோடு அம்மா யானையையும் சேர்த்து மத்தகத்தில் குறி பார்த்துச் சுட்டுக் கொன்ற பாதகன் அவன்.

மிருகக் காட்சி சாலை உள்ளே இருந்த கவரிமான், புள்ளிமான் என்று அத்தனையையும் வேனில் ஏற்றித் தூக்கிப் போய் அடுத்த ஒரு மாதம் எல்லா வெள்ளைக்காரன் வீட்டிலும் மான்கறி, சமைத்து, கபாலத்திலிருந்து கொம்பு முளைக்கும் அளவு தின்று தீர்த்ததாகத் தகவல் வந்தது.

குரங்குகள் மட்டும் தப்பித்து திருப்பதி பக்கம் ஓடி விட்டதாக நிம்மதி தரும் செய்தியும் வந்தது.

இந்தக் கொலைகாரனுக்குக் கொஞ்சமும் குறையாத இன்னொரு பாபாத்மா காரில் தினசரி வரப் போகிற இன்னொரு தடியன். இவன் மெட்றாஸ் தெருவில் அலைந்த லைசன்ஸ் இல்லாத நாய், கிழட்டு மாடு, வழி தவறிய வெள்ளாடு என்று எல்லா மிருகங்களையும் வர்ஜாவர்ஜமில்லாமல் கொன்று, மிருகக்காட்சிசாலை சிங்கத்துக்கும் புலிக்கும் அந்த மாமிசத்தைச் சாப்பிடப் போட்டவன். நாய் மாமிசம் சாப்பிடுகிற வன விலங்குகள் மதறாஸில் தான் இருந்திருக்கும்.
யானையும் காண்டாமிருகமும் மாமிசம் தின்னாது என்று யாரோ சொல்ல, யுத்தகாலத்தில் கிடைக்கிறதை வைத்துத்தான் ஜீவிக்க வேண்டும் என்று யானைக்கு புத்தி சொன்ன அபூர்வ புத்திசாலி இவன்.

“சாமிகளே, கோட்டைக்கு வந்தாச்சு. கொடி பிடிச்சு நடந்து போங்க”,

பிள்ளையார் ஓரமாக நிறுத்தினார். ஓரக் கண்ணால் பார்த்தேன். இரண்டு மூன்று உத்தியோகஸ்தர்கள் போகிற போக்கில் அலட்சியமாக என்னைப் பார்த்து மூக்கைச் சிந்தி எறிந்து சுவரில் விரலைத் துடைத்துப் போனமாதிரி இருந்தது. நான் இறங்க முற்பட்டேன்.

“சாமிகளே, இந்தாங்க, கையெழுத்து போடுங்க” என்ற் ஒரு நூறு பக்க நோட்புக்கை நீட்டினார் ஆறுமுகத்தா பிள்ளை.

“கையெழுத்தெல்லாம் போடணும்னு யாரும் சொல்லலே. தினம் காலையிலே ஆபீஸ் வர கார் அனுப்பறோம்னு தான் பேச்சு அண்ணாச்சி” என்றேன்.

“அதை எனக்குச் சொல்லலியே, தம்பியாப்பிள்ளே. துளசிங்க முதலியார்வாள் நேத்து கார் சாவியைக் கொடுத்தபோதே நோட்டுப்புத்தகம் வாங்கி அதையும் சேர்த்துத்தான் கொடுத்தார்.

தினம் என்ன என்ன செய்யணும்னு வேறே சாங்கோபாங்கமா சொல்லியிருக்கார்”, பிள்ளையார் வெளியே வந்து எனக்கு முன்னால் கொஞ்சம் ஒதுங்கி மரியாதையாக நின்றார்.
“என்ன என்ன செய்யணும்?”
இன்னிக்கு ஆபீஸ் ஐந்து பத்து நிமிஷம் தாமதமாகப் போனால் பரவாயில்லை. துரை காலைக் கழுவிக் குடிக்கிற இவர்களாச்சு, நானாச்சு.. துளசிங்கம் முதலியார் போன ஜன்மத்தில் இருந்து ஜூனியர் குமாஸ்தாவாகவே இருக்கப்பட்டவர். அவர் என்னை அதிகாரம் செய்வதாவது.

”காலையிலே டெப்போ போகணும், கவுர்மெண்ட் காரெல்லாம் ட்ராம் கார்களோட தான் நிப்பாட்டி வச்சிருக்கு. டிப்போவிலே இருபத்திநாலு மணி நேரமும் காவல் இருக்கும்கறதாலே பாதுகாப்புன்னு இந்த ஏற்பாடு. போய் காரைத் திறந்து சீட், ஸ்டீரிங்க், ப்ரேக் எல்லாம் இருக்கா, அததோட இடத்தில் அதது இருக்கான்னு செக் பண்ணனும். இஸ்பிரிட்டு இருக்கான்னு டேங்கைத் துறந்து பாத்துக்கணும்.”

“இஸ்பிரிட்டா?”

”ஆமா இல்லாட்டி பெட்ரோல் ஐயங்கார் பம்புலே போய் போட்டுக்கிட்டு சீட்டு வாங்கிட்டு வந்துடணும். அப்புறம் அதை ட்ரஷரியிலே கொடுத்துட்டு வந்தா போதும். ஐயங்காருக்கு காசு போயிடும்”..

இன்னும் இருக்கிறது என்று கையமர்த்தித் தொடர்ந்தார் –

”இஸ்பிரிட் இருந்தாலும் இல்லேன்னாலும் சீட் கீழே, பானட் உள்ளே, டாங்கு ஓரம், பின்னாடி டிக்கியிலே எல்லாம் தரோவா செக் பண்ணிடணும். வெடி குண்டு, குடுக்கை ஏதும் இருந்தா உடனே பக்கத்துலே போலீஸ் ஸ்டேஷன்லே சொல்லணும். அவங்க இருக்கட்டும் போய்ட்டு வாங்கன்னு அனுப்பி வைக்கலாம். குண்டு இருந்தா, ஆபீஸ் வாசல்லே நிறுத்தி வச்சு பிகில் ஊதி ஆர்ப்பாட்டம் பண்ணி வெளியே எடுக்கவும் செய்யலாம். குண்டு இல்லேன்னு தெரிஞ்சா கார்லே அன்னிக்கும் அடுத்த நாளும் ஒரு கான்ஸ்டபிள் கூடவே வருவார்”.

இதுலே நான் எங்கே வரேன் என்று குழம்பிப்போய்க் கேட்டேன்.

“நீர் இல்லாமலா, கல்யாண மாப்பிள்ளையே நீர் தான்.. தினம் உங்க வீட்டுக்கு வந்து உம்மை வச்சு ஓட்டிப் போகணும். கார் உள்ளாற குண்டு இருந்து வெடிச்சா நம்ம ரெண்டு பேருக்கும் கைலாச பதவி கிடைச்சுடும்.. விஷ வாயு குடுக்கை இருந்தா, எனக்கு ஏதொண்ணும் செய்யாது. மூக்கு வீக்கு எனக்கு. உமக்கு அப்படி இல்லே. ரொம்ப நாசுக்கானது. அப்படித்தான் துரை சொன்னாரு…”

சமய சந்தர்ப்பம் தெரியாமல் எனக்கு பேருவகையும் பெருமையும் ஏற்பட்டது.

பின்னே இல்லேயா? ரத்னா பாய் பொடிபோட்டு பொடி போட்டு என் மூக்கையும் வாசனை பிடிப்பதில் கூர்மையானதாக்கியிருக்கிறாள். ஆனால் இது எப்படி அந்த கேடுகெட்ட ஜூனியர் துரைக்குத் தெரியும்?

”விஷ வாயு இருந்து மூக்கிலே குத்தினா நீங்க உடனே மயக்கம் போட்டுடுவீங்க.. இல்லையோ, நாக்கு தொங்கி மூஞ்சி விகாரப்பட்டு வைகுந்தம் போயிடுவீங்க.. அப்போ நான் ஓரம் கட்டி வண்டியை நிறுத்தி..”.

போதும் என்றேன். நோட்புக் பத்தி சொல்லலியே என்று பிள்ளையாரே தகவல் பரிமாற முன்வந்தார்.
”தினம் நீங்க ஆபீஸ் போய்ச் சேர்ந்ததும், வண்டியிலே குண்டு இல்லே, விஷ வாயு இல்லே.. நான் இன்னிக்கு சவாரி வந்து இன்னும் உயிரோடு இருக்கேன்னு கையெழுத்து போடணும் தேதி போட்டு அதைக் காட்டினால் தான் பெரிய துரை, சின்ன துரைங்க வண்டியிலே ஏறுவாங்க”.

எனக்கு வகைதொகை இல்லாமல் கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன். கோபத்தில் சாமியாடி, நாலு நல்ல வார்த்தையைத் துப்பித் தாண்டவம் ஆடலாம் தான். ஆனால் மாதம் பிறந்ததும் சம்பளம் கிடைக்காது. தடித்தோல் இருந்தால் சம்பளம், ப்ரமோஷன், அந்தஸ்து என்று எல்லாம் தானே வந்து சேரும். ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி நீடூழி வாழ்க. கழிந்து விட்டு குண்டி துடைத்துப் போடும் அவருடைய பட்டாளத்தின் கடைக்கோடியில் நிற்கிற இந்த படுபாவிகளும் கட்டுப்பாடில்லாமல் காகிதம் கிடைத்து வாழ்க. இப்படித் துதித்துப் போனால் நானும் ரத்னாவும் திண்டாட்டம் இல்லாமல் ஜீவித்திருக்கலாம்.

பிள்ளையாரே எங்கே கையெழுத்து போடணும்? ஒண்ணு போதுமா?
———————————————————————-
அரசூர் வம்சம் நாவலில் இருந்து

சென்னை – 1850கள்

பாம்பும் சாரையும். அப்புறம் இன்னொரு பாம்பு. கூட இன்னும் ரெண்டு நீளமாக. ஒரு மலைப்பாம்பு. அதைக் குறுக்கே வெட்டிக் கொண்டு இன்னொரு சின்னப் பாம்பு. அப்புறம் ரெண்டு. எண்ணி மாளவில்லை. அத்தனை தெருக்கள். அகலமான வீதிகள். குதிரைச் சாணமும் மாட்டுச் சாணமும், பலாப்பழமும், வறுத்த தானியமும், மல்லிகைப் பூவும், வியர்வையும், ஒச்ச நெடியும், மனுஷ மூத்திரமுமாக மணக்கிற தெருக்கள். குறுக்குச் சந்துகள். அதிலெல்லாம் புகுந்து புறப்படுகிற மனுஷர்கள். குதிரை வண்டிகள். துரைகள் பவிஷாக ஏறிப் போகும் ரெட்டைக் குதிரை சாரட்டுகள். துரைசானிகள் குடை பிடித்து நடக்கிற வீதிகள். துரைகளுக்கும் துரைசானிகளுக்கும் சேவகம் செய்து குடும்பம் நடத்திக் குழந்தை குட்டி பெற்று அவர்களை அடுத்த தலைமுறை துரைமாருக்குத் தெண்டனிட்டு ஊழியம் செய்யப் பெருமையோடு அனுப்புகிற ஜனங்கள் ஜீவிக்கிற கருப்புப் பட்டணம். ராத்திரியோ, பகலோ தமிழும் தெலுங்குமாக சதா சத்தமாக ஒலிக்கிற ஜாகைகள், முச்சந்தி, சாப்பாட்டுக் கடைகள். அப்புறம் இந்தச் சமுத்திரக் கரை.

சங்கரனுக்கு ஒண்ணொண்ணும் ஆச்சரியமாக இருந்தது. கப்பல் ஏறிப் போய் வந்த யாழ்ப்பாணமும், அரசூரிலிருந்து அவ்வளவொண்ணும் அதிக தூரம் என்று இல்லாத மதுரைப் பட்டணமும் எல்லாம் சின்னஞ்சிறு கிராமம், குக்கிராமம் இந்தச் சென்னப் பட்டணத்தோடு பக்கத்தில் வைத்துப் பார்த்தால்.

ஓவென்று இரைச்சலிட்டு அலையடித்துக் கொண்டிருக்கிற கடல் அதை ஒட்டி விரிந்த இந்த பிரம்மாண்டமான மணல் வெளியால் இன்னும் பெரிதாகத் தெரிந்து கொண்டிருக்கிறது.

கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நாள் சாவகாசமாகப் பகவதிக் குட்டியைக் கூட்டி வந்து காட்ட வேண்டும். காயலையும் வள்ளத்தையும் தவிர வேறெதுவும் பெரியதாகப் பார்த்திருக்கப் போவதில்லை அந்தப் பதினாறு மட்டும் திகைந்த சிறு பெண்.

இந்தக் கடற்கரையில் கால் மணலில் புதையப் புதைய அவளோடு கூட நடக்க வேண்டும். கால் வலித்துக் களைத்துப் போகும்போது உட்கார்ந்து அவளைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும். அலைக்கு மேலே அவள் குரல் எழும்பி வரும். தண்ணீர் முகத்தில் தெறிக்கும். உடுப்பை சுவாதீனமாக நனைத்துச் சிரித்துக் கொண்டே திரும்பி ஓடும். போயிடாதே. இதோ நொடியிலே வந்துடறேன் என்று அது இரைகிறது எட்டு ஊருக்குக் கேட்கும். பகவதிக் குட்டி அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். கொட்டகுடித் தாசி போல் அபிநயம் பிடிப்பியாடி பொண்ணே ?

என்ன அய்யர்சாமி சமுத்திரக்கரையை வளைச்சுப்போட்டுக் கல்லுக் கட்டடம் உசரமா எலுப்பி இந்தாண்ட ஒண்ணுலே மூக்குத் தூள் அன்னாண்ட அடுத்ததிலே புகையிலைன்னு வித்துச் சாரட்டுலே ஓடற சொப்பனமா ?

கருத்த ராவுத்தன் கடகடவென்று சிரித்தான்.
————————————————————————————

என் விஸ்வரூபம் நாவலில் சென்னை 1920களில்

1927 மார்ச் 5 அக்ஷய மாசி 21 சனிக்கிழமை

கப்பலில் தெலூக்குஸ் கேபினில் சுகமாக வந்து இறங்கி தரையில் பல்லக்கு பரிவட்டம், போர்டு கம்பேனியாரின் சொகுசான மோட்டார் கார் சவாரி என்று பவனி வருகிற பெரிய மனுஷனாக இருக்கட்டும். அல்லாத பட்சத்தில் நடுவாந்திரமாக சம்பாதிச்சு பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைத்து ஒப்பேற்றி ஆஹான்னும் இல்லாது, ஓஹோன்னும் இல்லாமல் ஜீவிதத்தை நடத்திப் போகிற குமஸ்தனாக இருக்கட்டும். இல்லையோ, தெருவைப் பெருக்கி, அஞ்சு லாந்தரில் எண்ணெய் விளக்கு ஏற்றி விட்டு நடக்கிற வேலைக்கார மனுஷனாக இருக்கட்டும். அட, வேறே எதுவுமே வேணாம், தெருவில், கோவில் குளத்துப் பக்கம் நின்று ரெண்டு சல்லியும் ஒரு சல்லியும் யாசிக்கிற நித்ய யாசகனாகவே இருக்கட்டும். இந்தப் பட்டணத்தை ஒரு தடவை வந்து தரிசித்தாலே புளகாங்கிதம் சித்தமாகிறது. இங்கேயே ஏதாவது கொழுகொம்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒண்டிக் கொள்ளச் சொல்கிறது. பட்டிணப் பிரவேசம் செய்து, ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இருந்து விட்டு, என்னத்துக்காகவோ வெளியில் போய் காலம் கடத்தி விட்டு திரும்ப வரும்போது மலைத்துப் போக வைக்கிறது.

பட்டணம் ரொம்பவே மாறிடுத்து.

இன்னும் எத்தனை நூறு நூறு வருஷம் மதராஸ் இருந்தாலும் இந்த வாக்கியத்தை லட்சம் கோடி பேர் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். நானும் சொன்னேன்.

பிராட்வேயிலும் ஐகோர்ட் எதிரிலும் குறுக்கும் நெடுக்குமாக டிராம் வண்டிகள் ஜனத்தொகையை ஏற்றி இறக்கி சலிப்பே இல்லாமல் அததுக்காக ஏற்படுத்திய வழியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.

தலையில் முளைத்த கொம்பு பாதைக்கு மேலே இழுத்த எலக்டிரிசிட்டி கம்பியைத் தொட்டு முன்னாலே செலுத்த தபால்காரன் நடக்கிற வேகத்தில் ஊர்ந்த அவற்றைப் புளி மூட்டை போல நிறைத்துக் கொண்டு அடை அடையாக மனுஷர்கள், ஸ்திரிகள். அலிகள்.

முன்னைக்கிப்போ பெருகியிருக்கிற அதிகமான ஜனம். அதிகமான டிராம் கார்கள். டிராமில் ஏறிப்போக எந்த நேரத்திலும் காத்திருக்கும் கூட்டமும் அதிகம். அவர்கள் துப்புகிற எச்சிலும், சொல்லி மகிழ்கிற சுப வார்த்தைகளும் வெகு திவ்யம். இதெல்லாம் போக, தெருவிலும் அறுபத்து மூவர் உற்சவம் போல வருவானும் போவானுமாக தொடர்ந்து ஆள் நடமாட்டம்.

கொத்தவால் சாவடியில் காய்கறி ஏற்றி இறக்கி வெளியே கட்டி வைத்திருந்த மாட்டு வண்டிகள் ஒரு நூறோ இருநூறோ சாவடியைச் சுற்றி நுகத்தடியை மேலே ஓங்கிக் கொண்டு ஒயிலாக நிற்கிற காட்சியும், சாவடிக்குள்ளே கடை கடையாக காயும் கனியும் கிழங்கும் இறக்கி விட்டு நடக்கிற கூலிகளின் புளித்து நாறும் வசவும் இருபது வருஷத்துக்கு முன்னால் அனுபவப்பட்டதை விட இன்னும் மோசமாகப் போயிருந்தது. சுதேசித் துணிப் பையில் ராட்டினமும், மகாத்மா காந்தியும் எழுதின படத்தோடு சாவடிக்குள் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் வெளியே வந்து டிராமுக்காகக் காத்திருக்கும்போது அந்தப் பையெல்லாம் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது.

கண்ணில் தட்டுப்படுகிற கடையில் பத்துக்கு ஒண்ணாவது சாப்பாட்டுக் கடை. அதிலும் பிராமணாள் ஹோட்டல்களே அதிகம். மைசூர் ஓட்டல், உடுப்பி ஓட்டல் என்று கன்னடக் காரர்களோ அவர்கள் பெயரை திருடிக் கொண்டு உள்ளூர் குப்பன்களோ ஊர் முழுக்க உப்புமா கிண்டிப் போட்டுக் காப்பி கலந்து கொடுத்து காசை வாங்கி வாங்கிக் கல்லாவில் ரொப்பிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

இந்த டிராமில் எது எங்கே போகும்? டெர்மினஸ் என்று பலகை எழுதின வண்டிகள் எங்கே இருந்து வருது, எங்கே போகிறது என்று ஒரு மண்ணும் புரியவில்லை. யாரையாவது கேட்கலாம் என்று யோசிப்பு. ஒரு மாச தாடியும், கடல் காற்றில் உலர்ந்து பொருக்குத் தட்டிப் போன உடம்புமாக நான் முன்னால் போய் நின்றால், குப்பாயத்தில் தடவிப் பார்த்துவிட்டு சில்லறை இல்லை என்பான்கள் தடியன்கள். நான் உடுத்தி இருந்த வஸ்திரமும் சொல்லும் தரத்தில் இல்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2021 21:26

இம்மானுவல் பெத்ரோவுக்குக் கிடைத்த பதவி உயர்வு 1605

வேகமாக வளர்ந்து வரும் மிளகு நாவலில் இருந்து –

பதவி உயர்வு கிடைத்ததும் பெத்ரோ ஜெரஸோப்பா நகரில் ஒரு அலுவலகம் திறந்தார். ஹொன்னாவர் ரதவீதி மாளிகை பார்க்க வருகிறவர்களால் நிரம்பி வழியத் தொடங்கியது அதற்கு முக்கியக் காரணம்.

ஒரு மாதம் முன் அவுத் என்ற லக்னோ, கல்கத்தா, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் நகர போர்த்துகீசிய பிரதிநிதிகள் ஒரே நாளில் வந்து சிரமமாகி விட்டது.

பகலில் ஆளுக்கு ஒரு குரிச்சி, கூட வந்தவர்களுக்கு வாசலில் பாய் விரித்து இடம் என்று ஏற்பாடு செய்ய, வீடே கல்யாண வீடு மாதிரி கோலாகலமாக இருந்தது.

ராத்திரி பெத்ரோ படுக்கையை லக்னோ பிரதிநிதியோடும், திருச்சி பிரதிநிதியோடும் பகிர்ந்து கொள்ள வேண்டிப் போனது. கஸாண்ட்ரா ஏக்கமும் சிருங்காரமுமாக பெத்ரோவைக் கண்ணுக்குள் பார்த்தபடி வீடு போக, லக்னோ பிரதிநிதியின் முழு இரவும் தொடர்ந்த அபானவாயு பேரொலியும், திருச்சி பிரதிநிதி மணிக்கொரு தடவை மூத்திரம் போக எழுந்து போய் வந்ததும் வெகு தொந்தரவாகி விட்டது.

பெத்ரோவுக்கு. ஹொன்னாவர் மாளிகை வசிக்க, ஜெருஸோப்பா அலுவலகம் வேலை பார்க்க என்று ஏற்படுத்திக் கொள்ளத் திட்டம். என்ன ஆனதென்றால் இரவு வெகுநேரம் அலுவலகத்தில் அதாவது ஜெரஸோப்பாவில் சந்திப்பு, லிகிதம் வாசிக்க, எழுத என்று செலவிட்டு நடு ராத்திரிக்கு வீடு திரும்ப ஹொன்னாவருக்குப் போகக் கிளம்பினால், சாரட் ஓட்டி, சிப்பந்தி, குதிரை எல்லாரும் எல்லாமும் உறக்கத்தில்.

நடு ராத்திரிக்கு கொள்ளைக்காரர்கள் சுற்றுவது உண்டோ இல்லையோ, காட்டு விலங்குகள் ஜெரஸோப்பாவுக்கு வெளியே சுற்றுவதைப் பலபேர் பார்த்ததாகச் சொல்கிறார்கள்.

லிஸ்பனில் சீராகத் தொடங்கி, மாட்ரிட்டில் நல்ல கல்வியும் பழக்க வழக்கங்களும் சேர்ந்த ஆளுமையாக உருவாகி, மிர்ஜான் கோட்டையிலும் ஹொன்னாவரிலும் ராஜதந்திரம் கற்று தலைமை பிரதிநிதியாகப் பதவி உயர்வும் பெற்றிருப்பது சிறுத்தைப் புலி வாயில் சிக்கிச் சின்னாபின்னப்பட இல்லையே.

எனவே ஜெர்ஸோப்பா அலுவலகத்திலேயே ஒரு நாள் உறங்க வேண்டி வந்தது.

மேஜைகளை இழுத்துப் போட்டு துணிகளைக் குவித்துத் தலைமாட்டில் தலையணை போல் வைத்து கொசுக்கடிக்கு நடுவே அவர் தூங்குவதாகப் பெயர் பண்ணி அடுத்த நாள் அப்படியே வேலையைத் தொடர வெகு சங்கடமானதாகப் போனது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2021 08:25

August 20, 2021

சென்னை நகரவாசிகள் உலக மகா யுத்த நேரத்தில் காலி செய்து போன சென்னை (1942) (ராமோஜியம் நாவலில் இருந்து)

Madras Week Aug 22 2021

சென்னை நகரவாசிகள் உலக மகா யுத்த நேரத்தில் காலி செய்து போன சென்னை (1942)
)

(ராமோஜியம் நாவலில் இருந்து)

ராமோஜி நகர் நீங்காத 1942 மதறாஸ்

கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு எங்கள் வீட்டில் நானும் ரத்னா பாயும். தெருவில் முதல் வீட்டிலும், கடைசி வீட்டிலும் சேர்த்து நாலைந்து பேர்வழிகள் உண்டு. மற்ற வீடெல்லாம் கதவடைத்துப் பூட்டி திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.

பேட்டை முழுக்க ஆள் நடமாட்டம் உள்ள வீடுகளை விட பூட்டிய வீடுகள் அதிகமாகத் தட்டுப்படுகின்றன. பலசரக்குக்கடை, பெட்டிக்கடை, காப்பிக்கடை என்று வீடுகள் உள்வாங்க, வீட்டு வாசலில், திண்ணையில் தடுப்பு எழுப்பி வைத்துப் பரபரப்பாக வியாபாரம் நடக்கும் சின்னச் சின்னக் கடைகளையும் அடைத்துப் பூட்டியானது.

தெருக்கோடியில் உட்கார்ந்து ரப்பர் வளையல் போட்ட கையால் முழம் போட்டு மல்லிகைப்பூ விற்கும் பூக்காரியும் நேற்றிலிருந்து காணாமல் போனாள்.

இன்று தமிழ் வருஷப் பிறப்பு. பண்டிகைக்கு அடையாளமாக ஒரே ஒரு வீட்டில் முகப்பில் மாக்கோலம் கண்ணில் படுகிறது. நாலு இழை திடமாக இழுத்து
ரத்னா பாய் தான் வீட்டு வாசலில் கோலம் போட்டிருக்கிறாள். கோலத்தைச் சுற்றி செம்மண்ணைப் பட்டையாகத் தீற்றவும் மறக்கவில்லை அவள்.

தினசரி பேப்பர் திண்ணைக்கும் ரேழிக்கும் குறுக்கே கதவோரமாகக் கிடக்கிறது.. நாளை பேப்பர் வருமோ என்று தெரியவில்லை. வந்தாலும் யுத்தச் செய்தி தவிரப் புதுசாகப் படிக்க அதில் ஏதுமிருக்காது. யுத்தத்துக்கு அடுத்த முக்கியமான விஷயமான ரேஷன் பற்றியும் புதுசாக ஏதும் வராது.

உப்பு, புளி தவிர சகலமானதுக்கும் ரேஷன் ஏற்கனவே அமுலில் இருப்பதால் ரேஷனில் புதுசாகச் சேர்க்க ஒரு உருப்படியும் கிடையாது. அடுப்பெரிக்க விறகுக்கு ரேஷன் வரப் போகிறதாக ரொம்ப நாளாக வதந்தி.

சர்க்கார் விறகுக்கடை, அடுப்புக்கரிக்கடை, கும்முட்டி அடுப்பு விற்கிற கடை என்று நடத்தினால் எப்படி இருக்கும் தெரியவில்லை.

ரேடியோ, நாள் முழுக்க ’மெட்றாஸை காலி செய்து விட்டு வெளியேறிப் போங்கள்’ என்று சகலரையும் வேண்டிக் கொண்டிருக்கிற செய்திதான் பத்திரிகையிலும் அச்சடித்து வந்திருக்கும். ரேடியோவில், அறிவித்த பிறகு நிலைய வித்வான் சோகம் கவிய கோட்டு வாத்தியம் வாசிப்பார்.

பேப்பரில் அந்தத் தொடர் மிரட்டல் இல்லை. என்னத்தைச் சொல்ல? யுத்தம் லண்டன், பெர்லின், மாஸ்கோ. பாரீஸ், டோக்யோ என்று சுற்றி விட்டு இப்போது சென்னைப் பட்டணத்தைக் குசலம் விசாரிக்க நெருங்கி வந்தே விட்டது.

எல்லாம் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையான போன வாரம் ஐந்தாம் தேதி, கொழும்பு துறைமுகத்தை ஜப்பான் விமானப்படையின் எழுபது சொச்சம் விமானங்கள் பப்படமாக நொறுக்கி கிட்டத்தட்ட ஐம்பது பேரைக் காவு கொண்டதில் தொடங்கியது. பிரிட்டீஷ் சமுத்திர சேனையின் ஒரு விமானம் தாங்கிக் கப்பலும், இரண்டு யுத்தக் கப்பல்களும் ஜப்பான் தாக்குதலில் சிதறியதாகத் தெரிய வந்தது.

இப்படி ஆள் சேதம், பொருள் சேதம் என்று கணிசமாக ஏற்பட்டாலும், வருத்தப்பட ஒண்ணுமில்லே என்று இங்க்லீஷ்கார இலங்கை கவர்னர், நம்பிக்கை கொடுத்துப் பேசியதாகச் செய்தி. அதுவும் தமிழில் பேசினாராம். கொழும்பில் இறந்த பலரும் தமிழர்கள் என்றும் தெரிய வந்தது.

கவர்னர் தமிழில் பேசியதற்காக நாலு பேர் சந்தோஷப்படலாம். என்றாலும் ’ஐம்பது பேர் பரலோகம் போனதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, லண்டனில் தினம் தினம் போக்குவரத்து விபத்துகளில் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை அது’ என்று அவர் பிரிட்டீஷ் சர்க்காரின் அசமஞ்சத்தனத்துக்குச் சப்பைக்கட்டு கட்டிப் பேசியது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாச்சு.

சகுந்தலா, மீராபாய் என்று ஏதாவது புனைபெயர் வைத்துக்கொண்டு இந்த ஏகடிய அதிகப்பிரசங்கம் பற்றி ’தி ஹிந்து’ பத்திரிகைக்கு ஆசிரியருக்குக் கடிதம் எழுதினாலென்ன என்று யோசித்தேன்.

பத்திரிகை படிப்பதில் ஏற்படும் களைப்புக்கு கொஞ்சமும் குறையாத ஒன்று, அதற்குக் கடிதாசு எழுதணும் என்றதுமே வந்து சேர்கிற அலுப்பு.

இப்படி ஒருத்தர் மனுஷத்தன்மை இல்லாமல் பேசிவிட்டுப் போனது பற்றிய கடிதாசு வன்மையாகக் கண்டிக்கும் அல்லது ஓவென்று கட்டிப் பிடித்து அழும் தொனியில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறதே.

என் இங்க்லீஷ் அதெல்லாம் செய்யாது. வேண்டுமானல் தொப்பியைக் கழற்றும். யாருக்கு எதுக்கு ஹாட்ஸ் ஆஃப்?

ஏப்ரல் ஆறாந்தேதி காக்கினாடாவிலும், விசாகப்பட்டணத்திலும் ஜப்பான் விமானத் தாக்குதல் எனறு தகவல் வந்தபோது மெட்றாஸுக்கு தொடை நடுங்க ஆரம்பித்தது.

ஏப்ரல் ஏழாம் தேதி ஏதோ பொத்தானை எங்கேயோ யாரோ தவறாக அழுத்தி, சென்னைக்கு மேல் ஜப்பானிய விமானப்படை தாக்குதல் நடத்தப் போவதாக விடிகாலை நாலே முக்கால் மணிக்கு சைரன் அலற, பட்டணம் உச்ச பட்ச பிராண பயத்தில் கதவடைத்து வீட்டுக்குள் மத்தியானம் வரை அடைந்து கிடந்தது.

அப்புறம் பகல் சாப்பாட்டுக்காக அசைய நகர நிற்க உட்கார வேண்டிப் போனது. உயிர்ப் பயம் என்பதால் வாய்க்கு ருசியாகச் சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன?

ஐந்து லட்சம் பேர். மெட்றாஸின் பாதி ஜனத்தொகை. இந்த ஜனக்கூட்டம் உயிருக்குப் பயந்து பட்டணத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.

ரயிலில், பஸ்ஸில், மாட்டு வண்டியில் காணும் பொங்கலுக்கு உசிர்க் காலேஜ், செத்த காலேஜ், கடற்கரை பார்க்கப் போகிற மாதிரி குடும்பம் குடும்பமாகப் பயணமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

எவாகுவேஷன் என்ற வார்த்தை எல்லார் நாக்கிலும் சரளமாகப் புரள ஆரம்பித்து விட்டது.

எழும்பூர் ரயில்வே ஜங்க்ஷனும் சென்ட்ரல் ஸ்டேஷனும் நித்திய கல்யாண உற்சவம் மாதிரி நாள் முழுக்க, ராத்திரி முழுக்க ஜனநெரிசலில் திணறுகின்றன, ஜனங்களை ஏற்றிக்கொண்டு மெட்றாஸ் விட்டு ஓடும் ரயில்கள் இலவச சேவையாகத்தான் பிரயாணப்படுகின்றன. யாரும் எங்கே போகவும் டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. டிக்கட் வாங்கணும் என்று வைத்தாலும், யார் டிக்கட் கொடுக்க, யார் வாங்கின விஷயம் சோதிக்க?

மிச்ச சொச்சம் இல்லாமல் மெட்றாஸ் காலியாக வகை செய்யும் நல்ல நோக்கத்தோடு, முந்தாநாள், ஏப்ரல் பனிரெண்டாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மதறாஸ் சர்க்கார் அதிகார பூர்வமான ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது யாதெனில் – “மதறாஸ் பட்டணத்தைப் பயமுறுத்தும் போர் அபாயம் முன்னிருந்ததை விடத் தற்போது அதிகமாகி இருக்கிறது. எனவே அத்தியாவசியமான பணிகளைச் செய்ய மதறாஸில் இருக்க வேண்டியவர்களைத் தவிர மற்ற நகரவாசிகள் இன்னும் சில நாட்களுக்குள் பட்டணத்தை விட்டு உடனே குடிபெயர வேண்டும். போக்கிடம் இல்லாதவர்கள் பக்கத்து கிராமங்களில் சர்க்கார் ஏற்படுத்தி இருக்கும் முகாம்களில் போய்ச் சேர வேண்டும்”.

உலகம் அழியப் போகிறது என்று சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் கவர்மெண்ட் முக்காடு போட்டு மூலையில் குந்தி உட்கார்ந்து அல்லல்பட்டு அழுது அலறுகிற பரிதாபம். உள்ளூரார்களை ஊரை விட்டு விரட்டவா இந்த வெள்ளை மூஞ்சித் தடியன்களை சீமையிலிருந்து வரவழைத்து பக்கப் பதிய உட்கார்த்தியது?

”தற்காலிகமாக நகரக் குடிமக்கள் சென்னையை விட்டு வெளியேறுவதை சர்க்கார் விரும்புகிறது. அதி விரைவில் இந்த நிலைமை மாறி, அனைவரும் மீண்டும் அவரவர் இருப்பிடத்துக்கும், வேலை செய்யுமிடத்துக்கும் திரும்பி வருவதை சர்க்கார் எதிர்பார்க்கிறது. அதற்காக அரசாங்கம் பாடுபடும். இதை நடப்பாக்க எந்த விதமான நடவடிக்கை எடுக்கவும் கவர்மெண்ட் தயங்காது”.

கவர்மெண்ட் அறிவிப்பு எழுதுகிற வேலை என்னுடையதாக இருந்தால் நான் இப்படித்தான் நம்பிக்கை தரும்படி எழுதியிருப்பேன். ரத்னா பாய் இன்னும் ஒரு வீசை கூடுதல் நம்பிக்கையைக் கசப்பு தூக்கலான காப்பியில் அஸ்கா ஜீனியைக் கரைத்து தித்திப்பாக்கியது போல் எழுதியிருக்கக் கூடும். அவளுக்குத் தமிழ் இன்னும் நன்றாகத் தெரிந்திருந்தால் என்று சேர்த்துக் கொள்வதில் வருத்தமில்லை.

இன்றைக்கு ஏப்ரல் 14. செவ்வாய்க்கிழமை. தமிழ் வருஷப் பிறப்பு. பண்டிகை கொண்டாடும் சந்தோஷமும் குதூகலமும் எங்கேயும் தெரியவில்லை. கூட்டம் கூட்டமாகத் தெருவில் போவோர் வருவாரும், கோவில்களில் புது வேஷ்டியும், முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டையும், புதுப் புடவை, பாவாடை தாவணியுமாக ஒரு நிமிடம் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டுப் போகிறவர்களும் ஆகக் குறைவு என்பதில் சந்தேகமில்லை.

பகல் சாப்பாட்டுக்கு களைகட்டும்படியாக பாயசம் இலையில் இட்டு உண்டும், குவளையில் பருகியும் களிப்படைவது பற்றிய எதிர்பார்ப்போடு வீடு போகிறவர்களாக யாரையும் நான் பார்க்கவில்லை. வேப்பம்பூ தூவிய இனிப்பு மாங்காய்ப் பச்சடியும் யாரெல்லாம் செய்து கொண்டாடினரோ.

வருடம் தவறாமல் காளிகாம்பாள் கோவிலுக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கும் வருஷப் பிறப்பன்று காலையிலேயே போய் சண்டை, சச்சரவு, யுத்தம் எதுவும் தொடராமல் நின்று, எல்லாரும் சௌக்கியமாக இருக்க வேண்டுதலோடு அர்ச்சனை செய்து வருவது என் வழக்கம்.

வருஷப் பிறப்பன்று சாயந்திரம் மயிலை கற்பகாம்பாள் கோவிலில் இதே போல, யுத்தம் தீர அர்ச்சனை செய்வேன். அங்கே புது வருஷ பஞ்சாங்கம் வாசிப்பதைக் கொஞ்ச நேரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ரேடியோவில் நியூஸ் நேரத்துக்கு வீடு திரும்புவேன்.

எங்கும் போகாமல் சைக்கிளைத் துடைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் இப்போது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2021 20:11

ஹொன்னாவர் நகரில் ஒரு பிற்பகல், ஒரு முன்னிரவு: மிளகு – நாவலில் இருந்து ஒரு துளி

From the novel being written by me – MILAGU

நாற்பது நாழிகை. பிற்பகல் நான்கு மணி. ஹொன்னாவர் வெண்மாளிகை வீதியில் கணிகையர் வீடுகளில் அழகான பெண்கள் எழுந்து பசியாறுகிறார்கள்.

வாடிக்கையாளர்களோடு இரவு முழுக்கக் கூடியிருந்து விடிகாலையில் பசியாறி உறங்கப்போன அந்தப் பெண்கள் இன்றிரவு அணிய வேண்டிய, அணிந்து களைய வேண்டிய உடைகள் சீராக மடித்து நறுமணமூட்டி வைக்கப்படுகின்றன.

அவர்கள் கூட்டமாக நீராட மாளிகைக் குளங்களுக்குப் போகிறார்கள். நீராடித் தற்காலிகமாகப் புத்துணர்ச்சி பெற்று மாளிகையில் கிழக்கு பார்த்து ஏற்படுத்திய சிறு கோவிலுக்கு, ஈரம் காயத் துணி சுற்றிய கூந்தலோடு போகிறார்கள். வாடிக்கையாளர்கள் அதிகம் வரப் பிரார்த்தித்து அவர்களைச் சுற்றி சிறு மணிகள் முழங்க, தூபம் கமழ தீபாராதனை காட்டப்படுகிறது.

நாற்பத்தைந்து நாழிகை. மாலை ஆறு மணி. ஜெரஸோப்பா கடைவீதியிலும், ஹொன்னாவர் ரதவீதியிலும் துணி விற்கும் கடைகளும், பாத்திரம் விற்கும் கடைகளும், வளையலும், நகப்பூச்சும், உடம்பில் அள்ளிப்பூசி மணக்க வைக்கும் வாசனைத் தைலங்களும், அத்தரும், ஜவ்வாதும் விற்கும் கடைகளும் பரபரப்பாகின்றன.

கடைத்தெருவில் பொருள் வாங்க வந்தவர்கள் தெருக் கோடியில் குதிரை சாரட் வாகனங்களை நிறுத்தித் தெருவோடு நடந்து கடைகடையாக நின்று போகிறார்கள்.
ஜவுளிக்கடைகளில் பிடவை வாங்க வந்த பெண்கள் விற்பனையாளனிடம் பிடவைகளைப் பிரித்துக் காட்டச் சொல்கிறார்கள். அணிந்த மாதிரி துணியை தோளில் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

மார்க்கச்சு தைக்கும் தையல்காரர்கள் கடைக்கு உள்ளே ஒற்றைத் திரியிட்ட நிலவிளக்கின் ஒளியில் விதவிதமான ஸ்தனங்களை உற்று நோக்கித் தேவையான புதுத்துணி கத்தரிக்கிறார்கள்.

கோவில்களில் சங்கீத வினிகை வழங்க (கச்சேரி செய்ய) வந்திருக்கும் கலைஞர்கள் இசைக்கருவிகளை மீண்டும் மீண்டும் மீட்டி சுநாதம் தர வழிவகை செய்கிறார்கள். பாடும் இசைஞர்கள் சற்றுப் பாடித் தொண்டையைச் சீர் செய்ய சீரகமும், சுக்குப்பொடியும் இட்ட சூடான நீர் பருகுகிறார்கள்.

ஐம்பது நாழிகை. இரவு எட்டு மணி. ஹொன்னாவர் மதுசாலையில் கூட்டம் பெருகி வழிகிறது. போர்ச்சுகீசிய ராணுவ வீரர்களும், அராபியர்களும், நகர தனவந்தர் வீட்டுப் பிள்ளைகளும், கணிகையரோடு கூடும் முன் நல்ல மதுவை ருசித்துப் போக வந்தவர்களுமாக கலகலப்பாக இருக்கும் மதுசாலை.

போர்த்துகீசிய நாணயம் நான்கு குருஸடோவுக்கு ஒரு வராகன் நாணய மாற்று செய்கிற மதுக்கடை ஊழியனோடு, கப்பலிறங்கி ஹொன்னாவர் வந்த போர்த்துகீசிய வீரனொருவன் அதிக வராகன் மாற்றாகக் கேட்டுத் தகராறு செய்ய, வெளியே கொண்டு போய் விடப்படுகிறான்.

ஐம்பத்தைந்து நாழிகை. இரவு பத்து மணி. மதுசாலையின் மறுபக்கம் கள் விற்பனை சுறுசுறுப்பாக நடக்கிறது. மண் பானைகளிலும் தாழிகளிலும் இரவில் பறக்கும் சிறு பூச்சிகள் இறந்து கிடக்கும், போதை மிகத்தரும் தேறல் பருகக் கிடைக்கிறது. அது வடிகட்டாமல் பருகப்படுகின்றது. வெல்லமும் தேனும், முந்திரிப் பழச்சாறும் புளிக்க வைத்து வடித்த மதுவும், அரிசி கொண்டு உண்டாக்கிய மதுவும், தென்னங்கள்ளும், பனங்கள்ளும் பருகி லகரி தலைக்கேறியவர்கள் தரையில் உருண்டும், பாடி ஆடி விழுந்தும் அடுத்த கோப்பைக்கு அரை வராகன் காசு தனியாக மடியில் முடிந்ததை எடுத்துக் கடைக்காரர்களிடம் நீட்டுகிறார்கள். இன்னிக்கு இதுதான் கடைசி கிண்ணி என்றபடி மடியில் இன்னொரு முடிச்சைத் தடவிக் கொள்கிறார்கள்.

Old city evening scene
pic ack unsplash.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2021 07:40

August 19, 2021

லிஸ்பன் மாநகரில் இருந்து வந்த வான்கோழிகள் :மிளகு நாவலில் இருந்து

”இது வெட்டிவேர் கலந்த தண்ணீர். ஒரு பலா இலை மடக்கு நிறைய ஏலமும் கலந்து தெளித்தேன். வெய்யிலுக்கும், வியர்வைக் கசகசப்பு குறைக்கவும் இதைவிட வேறே விமோசனம் இல்லை பிரபு”.
முகத்திலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி வடிந்தாலும் மலர்ச்சியோடு சொன்னான் கிருஷ்ணப்பா.

”நீ கோழிமுட்டை மட்டும் விற்றே எத்தனை நாள் கஷ்டப்படப் போகிறாய்? வான்கோழி வைத்துப் பராமரித்து அதன் முட்டைகளையும் விற்கலாமே? இந்தியர்கள் வாங்குகிறார்களோ என்னமோ, ஹொன்னாவரில் இருக்கப்பட்ட போர்த்துகீசியர்கள் ஒருத்தர் விடாமல், நீ என்ன விலை சொன்னாலும் கொடுத்து வாங்கிப் போய் சமைத்து உண்பார்களே”.

வழக்கமாகத் தரும் யோசனைதான். புதிதாகச் சொல்லும் உற்சாகத்தோடு பெத்ரோ சொல்ல, கும்பிட்டு நன்றி சொன்னான் கிருஷ்ணப்பா.

”அந்தப் பறவையை வளர்ப்பது பற்றி ஒன்றும் இல்லை பிரபோ. வாய்க்குக் கீழே சவ்வு தொங்கிக் கொண்டு அலைகிற அவற்றைப் பார்க்கத்தான் குமட்டலாக இருக்கிறது. அந்த முட்டைகளின் வாடை வேறே ஒரு மாதிரி”.

அவன் வழக்கமான பதில் சொன்னான்.

”அதெல்லாம் பணத்தின் வாடை. பிடிக்காமல் எப்படி காசு சேரும்?” என்றார் பெத்ரோ.

கிருஷ்ணப்பா வெகுளியாகச் சிரித்தான்.

”நான் அடுத்த முறை லிஸ்பனில் இருந்து திரும்பும்போது உனக்காக ஒரு பத்து வான்கோழிகளைக் கொண்டு வருகிறேன். பத்து வான்கோழி ஏற்றினால், இங்கே வந்து சேரும்போது அதில் இரண்டு மிஞ்சினால் அதிசயம் தான். அந்தக் கோழிகள் நீ சொன்னபடி வசீகரமாக, மயில் போல இருப்பதோடு, நறுமணம் வீசும் முட்டை பொறிக்கும். நல்ல நிறமாகவும் இருக்கும். மயில் போல் இறகு விரித்து ஆடும். சரிதானா?” பெத்ரோ நடந்தார்.

”பிரபோ, ஆடாத இருபது கோழி கொண்டு வர முடியுமா?”

கிருஷ்ணப்பாவின் உற்சாகமான குரல் அவருக்குப் பின் கேட்டதை ரசித்தபடி போனார் அவர்.

படம் – போர்த்துகல் தலைநகர் லிஸ்பன்
நன்றி wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2021 08:23

August 18, 2021

ஹொன்னாவர் பெருச்சாளிகளும், லிஸ்பன் மாநகரப் பெருச்சாளிகளும்

மிளகு நாவலில் இருந்து

சிருங்காரக் கனவில் மனம் லயிக்க இடுப்புக்குக் கீழ் அவசரமாக ஊர்ந்து படுக்கையில் இருந்து குதித்துக் கீக்கீக்கென்று சத்தமிட்டுப் போனது பெருச்சாளி. சந்தன மணமும் ஒதிகோலன் வாசனையுமில்லை. புழுத்த கழிவு தேங்கிய சாக்கடை ஓரம் குமட்டும் மேல்தோல் நனைய நகரும் பெருச்சாளி வாடை.

அதன் சிறு கண்கள் அகஸ்டின்ஹோவின் கண்ணை நேரே பார்த்த பார்வை காமாந்தகாரா என்று இகழ்ந்தது. வாயைத் திறந்து வெளிப்பட்ட பற்கள் கடித்துக் கொல்லக் கூடியவையாகத் தெரிந்தன. நாலு பெருச்சாளிகள் சேர்ந்து ஒரு ராத்திரியில் அகஸ்டின்ஹோ உடம்பை முழுக்கத் தின்றுவிடும்.

முதுகுத் தண்டில் பனிக்கத்தியைச் செருகின மாதிரி சிலிர்க்க கைகால் ஒரு நிமிடம் மரத்துப் போய் வியர்வை ஆறாகப் பெருக கட்டிலில் அமர்ந்திருந்தார் அகஸ்டின்ஹோ. முதுகில் பெருச்சாளி அப்பியிருப்பதாக பிரமை. பின்னால் சுவரில் பிடித்து பெருச்சாளி ஏறிப் போவதாக பயம். எதுவும் நிஜமில்லை

வீட்டை விட்டு வெளியே வந்து கதவடைத்து பிச்சைக்காரன் போல் வாசல் படிகளில் படுத்து உருண்டு உறங்கலாமா என்று ஒரு நிமிட யோசனை. வேண்டாம் என்று ஒதுக்கினார். அவர் நாலு தலைமுறையாகக் கப்பல் கட்டும் பரம்பரை பணக்காரர். பெருச்சாளிக்காகப் பயந்து வீட்டை விட்டு ஓடுகிறவரில்லை.

அதற்கப்புறம் ஒரு அரை மணி நேரம் சத்தமே இல்லை. காற்று பெரிதாக அடித்து ஜன்னல்கள் படார் படாரென்று மூடிக்கொண்டன. அந்த ஜன்னல்கள் வழியாக பெருச்சாளி வந்து போயிருக்கலாம் என்று பட்டது அகஸ்டின்ஹோவுக்கு.

எழுந்து போய் நான்கு ஜன்னல்களையும் சார்த்தி, அழுத்தமாகக் கொக்கித் தாழ்ப்பாள் போட்டு பூட்டி விட்டுப் படுக்கைக்கு வந்தார் அவர். படுக்கையில் இருந்து சாடி எழுந்து கட்டிலுக்குக் கீழ் பார்த்து எதுவும் இல்லையென்று நிச்சயப்படுத்திக் கொண்டார்.

உறக்கம் மெல்ல வருவதாகப் போக்குக் காட்ட அதன் அணைப்புக்குத் தன்னைக் கொடுத்தபடி அவருடைய நினைவுகள் ஊர்வலம் போகத் தொடங்கின.

கார்டெலில் காசு கொடுத்து பங்கு எடுத்ததென்னமோ சரிதான். நாலு புது தேசம், கடல் கடந்த நிலப்பரப்பு, விதம்விதமான மனுஷர்கள், மனுஷிகளைப் பார்ப்போம் பழகுவோம் போய் வந்ததைப் பற்றி எழுதி எல்லோருக்கும் தெரியச் செய்து பிரபலமாவோம் என்று நினைத்தது தான் சரியாக வரவில்லை.

கார்டலில் சேர்ந்த, அகஸ்டின்ஹோ கூடப் பயணம் வைக்காமல் லிஸ்பனில் மரச்சாமனை உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருக்கும் அவனவன் தானே எஜமானன் மாதிரி, அவர்களுக்காக உயிரை திரணமாக மதித்து பயணம் வந்த அகஸ்டின்ஹோவை வேலைக்காரன் மாதிரி கருதி, ’ஓய் அது என்னாச்சு இது என்னாச்சு’ என்று வெகுவான அதிகாரம் தட்டுப்பட விசாரிக்கிறான்.

இந்த பன்றியைக் கலக்கும் பயல்களுக்கு கார்டல் சார்பில் ரகசியக் கடிதம் அனுப்பி பெற்று நடத்த ஒரு பிரத்தியேக சேவை இருந்தால் நன்றாக இருக்கும்.

இங்கே குப்பச்சிகள் எழுதுகிற ஏதோ கொங்கணி கவிதைகளை போர்த்துகீஸ் மொழியில் பெயர்த்து எழுதி லிஸ்பன் கவிதை மன்றத்துக்கோ எழவெடுத்த எங்கேயோ அவை பத்திரமாக அனுப்பப் படுகிறதாக நேமிநாதன் சொன்னானே, அந்த ஏற்பாட்டை பயன்படுத்தினால் என்ன?

தூக்கம் கண்ணைக் கவிந்து கொண்டு வந்தது. அகஸ்டின்ஹோ கவிதைகள் பற்றி யோசித்தார். கவிதைகளோடு கவிதையாக வணிகக் கவிதைகள் என்று தலைப்பிட்டு முக்கியமான வர்த்தகத் தகவலை எழுத்தெழுத்தாகத் தகுந்த முறையில் மாற்றி எழுதி அனுப்பிப் பூடகமாக்கிப் பெற்றால் என்ன?

வணிகக் கவிதைகள் தலைப்பை பார்த்ததுமே அவை வர்த்தக கவுன்சிலுக்கு அனுப்பப் பெறும். வர்த்தகக் கவுன்சில் ஏதாவது அனுப்ப வேண்டுமென்றால் கவிதை மன்றம் மூலமாக வணிகக் கவிதை தலைப்பில் நேமிநாதனுக்கும் ரோகிணிக்கும் பூடகமான உருவத்தில் வந்து சேர்ந்து விடலாம்.

யார் கண்டது? வர்த்தகத் தகவல்கள் பற்றி எழுதிய, வேறு யாருக்கும் புரியாத வணிகக் கவிதைகள் சிறந்த கவிதைகளாகக் கொண்டாடப்பட்டு விருது வழங்கப்படலாம். புரிந்தால் அதென்ன கவிதை?

ரோகிணி ரோகிணி ரோகிணி.

தடார் என்று குசினியில் சத்தம். தூக்கமும் விழிப்புமான ரெண்டுங்கெட்டான் நிலைமை விலகி அகஸ்டின்ஹோ எழுந்து நின்றார். பெருச்சாளிதான். ஆனால் குசினியில் போய்ப் பார்க்க, ஒரு பூனை பால் பாத்திரத்தைச் சாய்த்து தரையில் இருந்து பாலை நக்கிக் கொண்டிருந்தது.

பெருச்சாளி இல்லை என்பதே அகஸ்டின்ஹோவுக்கு நிம்மதி. அவர் பேருக்கு பூனையை விரட்டுவதாக நாலு வார்த்தை சொல்லிவிட்டு படுக்கைக்குத் திரும்பினார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2021 07:13

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.