பெரு நாவல் ‘மிளகு’ – “The most tragic thing in this world is a sick doctor”

An excerpt from my forthcoming novel MILAGU

அவன் தொடர்ந்தான்.

மேலும் போர்த்துகல்லோடு மட்டுமின்றி மற்ற ஐரோப்பிய நாடுகளோடும் மிளகு கொள்முதல் விற்பனை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும்.

எப்படி கையெழுத்து இடப் போகிறீர் வகுளரே? நான் போட்டால் தான் கையெழுத்து. இல்லை என்றால் என் விரலை வெட்டி வைத்துத்தான் துணியில் தொக்கிப் பிடித்து அழுத்தி கட்டைவிரல் ரேகை வைக்க வேண்டும். செய்தாலும் செய்வீர்.

வன்மையாகக் கண்டிக்கிறேன். மகாராணியார் இதைக் கையாளும் விதம் தவறானது. உப பிரதானி செயலுக்கு உள்நோக்கம் கற்பித்து அவரை அற்பமானவராகப் பார்க்கிறார். சரியில்லை அது என்கிறார் இன்னொரு பிரதானி.

வாயைப் பொத்திக்கிட்டு போடா என்று இதுவரை இப்படி பேசி யாரும் பார்த்திருக்காத தொனியும் ஊடாடும் சொற்கடுமையுமாக நஞ்சுண்டய்யா பிரதானி ஏசுகிறார்.

வேறெங்கே யுத்தம் வருகிறதோ என்னமோ, அங்கே வாக்கு யுத்தம். குதிரை லாயத்துக் குதிரைகள் ஆர்வமின்றிப் பார்த்திருக்கும்.

இன்னும் ஒருவாரம் அவகாசம் தருகிறோம். ராணி சென்னபைரதேவி உடன்பட்டு ஒத்துழைக்காவிட்டால் யுத்தம் துவங்கும். ஆட்சி மாறும்.

வகுளாபரணன் ராணிக்கு முதுகு காட்டி நடக்க, சந்த்ரப்பிரபு பிரதானி அவன் கன்னத்தில் சுரீர் என்று அடிக்கிறார். நாயும் பன்றியுமாக அந்த அரசவை அறிஞர்கள் உரத்த குரல் வசவுகளில் மறு அடையாளம் காணப்படுகிறார்கள்.

நஞ்சுண்டய்யாவின் குல்லாவை ஒரு உப பிரதானி தரைக்குத் தட்டி விட்டு அதன்மேல் உமிழ்கிறார். குதிரைகள் ஏதோ கலவரம் என்று உணர்ந்து ஒருசேர கனைக்கின்றன. குதிரை லாய தீவட்டிகள் பாதிக்கு மேல் அணைந்துவிட்டன.

வீரு தளவாய் இடுப்பில் இருந்து குறுவாளை எடுத்து வகுளாபரணன் முதுகுப்பக்கம் அதைப் பாய்ச்ச ஓடுகிறார்.  திரும்பிப் பார்த்த வகுளன் தப்பி ஓடுகிறான். தரையில் விழுந்து எழுகிறான். வீரு தளவாய் காலால் அவனை  உதைக்கிறார்.

வீரு, கத்தியை மடக்கு. அவரைப் போகவிடு. நேமிநாதன் ஆப்பிரிக்க மந்திரவாதி மூலமாக எனக்கு சூனியம் வைக்கப் பார்த்தான். படுக்கையறையிலே என் தலைமுடி பிடுங்கி எடுக்க ராத்திரியிலே ஆளனுப்பினான். ஒற்றாக வந்த செய்தி இது. விழிப்பாக இருந்து ரட்சைப்பட்டேன். நேமிநாதனும் இந்த வகுளாபரணன் போன்ற அவன் சிநேகிதர்களும் என்மேல் கத்தி செலுத்தி என்னை முடிக்கத் திட்டமிட்டு, குறி தவறி என் தாதி மிங்குவைக் கொன்றார்கள். இன்னொரு சாவு விழவேண்டாம்.

எழுந்து நின்று சொல்கிறாள் சென்னபைரதேவி. சொல்லியபடி நெஞ்சைப் பிடித்தபடி நாற்காலியில் மறுபடி தடுமாறி உட்கார்கிறாள்.

அம்மா என்ன பண்ணுது என்றபடி வைத்தியர் அவள் பக்கம் ஓடி வருகிறார். அவர் குனிந்து அவள் கையைப் பற்றி நாடி பார்க்கும்முன் கையை உதறியபடி சென்னா அங்கிருந்து அகன்று போயிருந்தாள்.

pic medieval apothecary

ack en.wikipedia.org

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2021 05:48
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.