Jeyamohan's Blog, page 131
April 11, 2025
நீலஜாடி, கடிதம்
என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
வணக்கம்!
“நினைக்கவே இனிமையாகத் தான் இருக்கிறதல்லவா? நாம் சற்று பொறுமையாக இருந்தால் போதும் நம்மிடமிருந்ததெல்லாம் நிச்சயமாகத் திரும்பி வந்து சேர்ந்துவிடும்”.
இவ்வரியை வாசித்து முடிக்கையில் மனதில் ஒரு சிறு அதிர்வுடன் கூடிய நிறைவு. என்னை விட்டு பிரிந்த உறவுகள் என் தோள் தொட்டு கூறிய ஆறுதல். அடுத்த சிலநிமிடங்கள் நான் அந்த நிறைவுடன் சுழன்று கொண்டிருந்தேன்.
அந்த ஒன்பது நாட்கள் நீலம் சூழ அவள் வாழ்ந்திருந்த கணங்கள், அந்த நீலத்தை மீண்டும் மீண்டும் உள்ளத்தில் மீட்டியபடி இருக்கிறாள். தன் வாழ்நாள் முழுவதுமாய். இறுதியில் அந்த நீலம் மட்டுமே போதுமானதாய் இருந்திருக்கிறது. கதையை வாசித்து முடிக்கையில், எனக்கும் Titanic படக்காட்சிதான் நினைவில் தட்டியது.
தனக்கு நெருங்கிய உறவில் இருந்தவர் என்றாலும், தனது தந்தையே ஆயினும், அந்த தருணத்தில் தன்னைத் தனியே விட்டுச்சென்றுவிட்டதை நினைத்து அவள் திகைத்திருக்கக்கூடும். அந்த சந்தர்ப்பத்தில் மனம் அவரை விட்டு அந்நியப்பட்டிருக்கும். அப்போது அவள் அண்டத்தையே தனது சொந்தமாக்கி கொள்கிறாள். அந்த மாலுமியை கூட அவள் அவ்வண்டத்தின் ஓர் அங்கமாய் மட்டுமே பார்த்திருக்கலாம். அவளது தேடல் மனித இருப்பை தாண்டிய ஒன்றாக இருந்திருக்கலாம். இருப்பு (Being) என்பது மட்டுமாக இருந்திருக்கலாம்.
அவளுக்கு காலம் என்பது ஒட்டாத நேர்கோடுகள் அல்ல. நூலின் ஒரு நுனியை கொண்டு மறு நுனியுடன் வளைத்து இணைக்கிறாள். ஒரு நுனி அவள் வாழ்ந்த காலம்(Past), மறு நுனி அவள் எதிர்நோக்கும் காலம் (Future), இணைப்பு – அவள் அதை நோக்கி குவித்த செயல்பாடு (Present). ஆகையால்தான், அவளால் எளிதாய் காணமுடிகிறது, பூமி கோளின் மறுபுறம் அவளுக்கான பயணத்தை.
சில நாட்களுக்கு முன்பு, என் நண்பருடன் உரையாடலில் இருந்தபோது, என் தந்தையின் இழப்பு பற்றிய பேச்சு வருகையில் நான் அவரிடம், “ சில நேரங்கள் எனக்குத் தோன்றும். பூமி கோளின் இந்த பக்கம் நானிருக்கிறேன், சற்று சுத்திச் சென்று மறுபக்கம் பார்த்தால் அவர் இருப்பார். ஆகையால், ஆசுவாசமாய் இருக்கிறேன் “ என்றேன். அப்போது எனக்கு ஐசக் டெனிசனையும் தெரியாது, ஹடெக்கரின் தத்துவமும் தெரியாது.
“அங்கே பூமிக் கோளத்தின் மறுபுறம் ஒரு கப்பல் பயணம் செய்கிறது. அதனுடன் நான் இணைக்கப்பட்டிருக்கிறேன்”.
“ மூழ்குதல் என்பதே உங்களின் வார்த்தை . நான் உறுதியாகக் கூறுவேன் . கடலில் கீழ் , மேல் என்று எதுவும் கிடையாது . அந்த மையத்தில் நாங்கள் சந்தித்துக் கொள்வோம் ”.
சைதன்யாவின் கட்டுரைகள் வழி, அதற்கான தங்கள் எதிர்வினை பதிவை வந்தடைந்து அதிலிருந்து அருணா அக்காவின் (நீல ஜாடி) மொழிப்பெயர்ப்பில், ஐசக் டெனிசனை கண்டுக்கொண்டேன். ஒருவகையில், இவரும் எனது பிரதிபலிப்பே. இப்போது யோசிக்கையில், இச்சிந்தனையும் கச்சிதமாய் பொருந்துவதை உணருகிறேன்.
“ஆழ்கடலில் பரஸ்பர பிரதிபலிப்பு போலத்தான் நாங்கள்”.
அவளது தேடல் அவளை வந்தடைந்ததும், அவள் நிறைவுறுகிறாள். நம்மை அந்த நீலமாய் தொடர விரும்புகிறாள். இக்கட்டுரையை முடித்து கொள்ள எத்தனிக்கும்போது, மீண்டும் அவ்வரி என்னுள் எழுகிறது. மேலும் என்னை ஒரு அகவிரிவுக்கு இட்டுச்செல்கிறது.
“நம்மிடமிருந்ததெல்லாம்” நிச்சயமாகத் திரும்பி வந்து சேர்ந்துவிடும், என்கிறார். ‘நமக்குள்ளவை’ என்று எதிர்காலத்தை சொல்லவில்லை. நம்மிடம் இருந்தவை என்று நிகழ்ந்த காலத்தை சொல்கிறார்.
நித்திய மறுவாழ்வை (Eternal recurrence) நோக்கும் தைரியமும்,நம்பிக்கையும் அவள் வார்த்தையில் உள்ளது. வாழ்வதற்கான பெரு விழைவும், வீரியமும் கூடிய வார்த்தை.
நன்றி
ரம்யா மனோகரன்
பனிமலையும் பிரம்மசூத்திரமும்
அல்மோராவில் பிரம்மசூத்திர வகுப்புகள் முடிந்து வந்து ஒரு வாரமாகிறது. அங்கு சென்று வந்ததே ஒரு கனவென ஆகிவிட்டிருக்கிறது. அங்கே அந்த வகுப்புகளை நடத்த எண்ணியது முதன்மையாக எனக்காகத்தான். எனக்கு ஒரு தொடக்கம் தேவைப்பட்டது, அதற்குள் செல்ல.
I watched your video on conformity and unity. It is indeed a very novel idea, an age-old one as well. For the past two hundred years, the West has been telling us that the history of humanity, nature, and everything we see in the universe operates through a dialectic, and there is a constant conflict between the units of everything.
The harmony around usApril 10, 2025
கலையின் வழியே இயற்கை
என் வீட்டுக்குப் பின்பக்கம் சோழர்காலத்து ஏரி ஒன்று உள்ளது, அது அழிந்துகொண்டிருந்தது. முக்கால்வாசி ஆக்ரமிப்பு, கால்வாசி எஞ்சியதை சாலைபோடுவதற்காகத் தூர்த்துக் கொண்டிருக்கின்றனர். சிறுபகுதி சதுப்பாக எஞ்சியிருக்கிறது. அங்கே எடுத்த காணொளி, ஒரு காலைப்பொழுதில். ஆனால் இயற்கை எங்கும் உள்ளது, நமக்குத் தேவை அதை அறியும் கண்கள்.
அதிமானுட வாசகர்கள்!
ஒரு நண்பர் நேர்ப்பேச்சில் கேட்டது இது. எனக்கு கிருஷ்ணன் சங்கரன் எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிட்டிருந்ததைச் அவர் சுட்டிக்காட்டினார். “அதிமானுட எழுத்தாளரால் அதிமானுட வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவல் அது. வாசகனாக என்னுடைய சாதனை வெண்முரசு முழுவதும் படித்து முடித்ததுதான்“.
“உங்கள் நட்புச்சூழலில் இருப்பதற்கு வெண்முரசு வாசிப்பு ஒரு நிபந்தனையா? உங்கள் வாசகர்களை ’அதிமானுடர்களாக’ நினைக்கிறீர்களா?” என்றார் நண்பர்.
நான் என்னுடன் பழக என் இணையதளத்தை, அல்லது என்னை வாசிப்பதை நிபந்தனையாக வைக்கவில்லை. இன்றைய சூழலில் அப்படி நிபந்தனை போடவும் முடியாது. நான் உருவாக்க நினைப்பது ஒரு கூட்டான இயக்கம். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பங்களிப்பு உண்டு. கூடுதலோ குறைவோ ஆர்வம் கொண்டிருப்பது மட்டுமே அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது.
வாசகர்கள் என்பவர்கள் நம் சமூகத்தில் இருந்து திரண்டு வருபவர்கள். அவர்கள் நம் சமூகத்தின் சிறந்த பகுதி என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தச் சிறந்த பகுதியில்கூட நம் சமூகத்தின் எல்லா இயல்புகளும் இருக்கும். நம் சமூகத்தில் அவ்வியல்புகள் எப்படி எந்த விகிதத்தில் இருக்கின்றனவோ அதே விகிதத்தில் இருக்கும்.
நம் சமூகத்திலுள்ள முதன்மை இயல்பு தீவிரமின்மை. எதிலும் தொடர்ச்சியான ஆர்வம் பெரும்பாலானவர்களிடம் இருப்பதில்லை. கொஞ்சம் ஆர்வம் உருவாகும், வெவ்வேறு காரணங்களால் அது திசைதிரும்பி மழுங்கி மறையும். ஓர் ஆர்வத்தால் வாசிப்புக்கும் அறிவியக்கத்துக்கும் வந்து எனக்கு அறிமுகமாகும் நண்பர்களில் பலர் ’காணாமல்’ போய் கொஞ்சநாள் கழித்து திரும்பி வருவார்கள்.சிலர் மறைந்தே விடுவார்கள்.
எந்தச் செயலையும் அர்ப்பணிப்புடன் நீண்டநாட்களாகச் செய்வது, அதில் திறனை வளர்த்துக்கொள்வது என்பது நம் சமூகத்தில் மிக அரிதான குணாதிசயம்.அதற்கு பல காரணங்கள். நம் கல்விமுறை திறன்வளர்ப்புக்கு சாதகமானது அல்ல, ’சமாளிப்பதை’யே அது கற்றுக்கொடுக்கிறது. நம் வேலைகளும் ‘ஒப்பேற்றுதல்’ மட்டுமே. நம்மைச்சுற்றி நிகழும் மரப்பணி, கட்டிடப்பணி முதல் கணிப்பொறிப் பணி வரை மிகச்சிலரே மெய்யான திறமை கொண்டவர்கள், கற்றுக்கொண்டே இருப்பவர்கள். எஞ்சியோர் ஒட்டிக்கொண்டு முன்செல்பவர்கள் மட்டுமே. எங்கும் எவராலும் கவனிக்கப்படாமல் பதுங்கி நாட்களை ஓட்டிவிட முயல்வர்களே மிகுதி.
இன்னொன்று, நம் குடும்பச் சூழல் மற்றும் சமூகச் சூழல். அவை இரண்டும் நம் உள்ளத்தின் பெரும்பகுதியை ஆக்ரமிக்கின்றன. நம்மை உலகியலில் முழுமையாகவே கட்டிப்போடுகின்றன. ஒருவன் விழித்திருக்கும் பொழுதெல்லாம் குடும்பத்துக்காக உழைக்கவேண்டும் என்றும், குடும்பம் பற்றி மட்டுமே யோசிக்கவேண்டும் என்றும் இங்கே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அழுத்தம் அளிக்கவும் படுகிறது. சிறு தனிப்பட்ட ஆர்வம் இருந்தால்கூட அது குடும்பத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.இங்கே சொந்தமான ஆசைகளேகூட பெரும் ஆடம்பரமாகக் கருதப்படுகின்றன.
ஆகவே நம்மவர் பெரும்பாலும் உலகியலில் மூழ்கி வாழ்பவர்கள். சின்னச் சின்ன உலகியல் செயல்களே முழுநாளையும் ஆக்ரமித்துக் கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட வங்கியின் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் கட்டணம் கம்மி என்று அதைத்தேடி முழுநாளும் பைக்கில் அலையும் ஆண்கள் உண்டு. ஒரு ’மேட்சிங்’ ஜாக்கெட்டுக்காக ஒருவாரம் கவலைப்ப்டும் பெண்களும் உண்டு. கொஞ்சம் வெளியே வருபவர்கள்கூட திரும்ப உள்ளே இழுக்கப்பட்டு விடுகிறார்கள். ஆகவே கொஞ்சம் வெளிவருவதே பெரியது என்றுதான் நினைக்கிறேன். அவர்கள் திருமப மூழ்கினால் ஒருவகையான பரிதாபம்தான் உருவாகிறது.
அத்துடன் நம் நடுத்தரவர்க்க வாழ்க்கையிலுள்ள இயல்பான தளர்ந்த நிலை. நாண் தொய்ந்த வில்போன்றது நம் நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கை. அந்த தளர்ந்த நிலையை ‘தன்னடக்கம்’ ‘எளிமை’ என்றெல்லாம் பாவனை செய்துகொள்ளவும் பழகியிருக்கிறார்கள். எதையும் ஊக்கத்துடன் தொடங்கிச் செய்யமாட்டார்கள். எதிலும் தயக்கம். ‘நமக்கேன்ன’ என்றும் ‘என்னத்துக்கு வம்பு’ என்றும்தான் இவர்களின் உள்ளம் நிரந்தரமாக வேலைசெய்யும்.
அப்படிப்பட்டவர்களே எனக்கு அறிமுகமாகின்றனர். ஏனென்றால் நம் சூழலில் நிறைந்திருப்பவர்கள் அவர்களே. மெல்ல மெல்ல இச்சூழலால் அவர்கள் இழுக்கப்படுகின்றனர். இங்கே தொடர்ச்சியாக வாசிக்காமலிருக்கமுடியாது. ஒரு கட்டத்திற்குப் பின் எதையேனும் செய்யாமலும் இருக்கமுடியாது. ஆகவே தீவிரம் கொள்கிறார்கள். அந்தப் பயணத்தின் பல படிநிலைகளில் வாசகர்கள் இருக்கிறார்கள். என் இணையப்பக்கத்தை அவ்வப்போது படிப்பவர்கள், ஒன்றிரண்டு பதிவுகளை மட்டும் படிப்பவர்கள், என் நூல்களில் சிலவற்றை மட்டுமே படிப்பவர்கள் என தொடங்கி எழுதப்பட்ட என் படைப்புகள் எல்லாவற்றையுமே படித்திருப்பவர்கள் என அந்த படிநிலை வளர்கிறது.
என் வாசகர்கள் பற்றிய ஒரு திகைப்பு பொதுவாக நம் சூழலில் உள்ளதை நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். என் தளத்தில் ஒரு கடிதம் வெளிவந்ததும் அவர் எவர் என தேடுவது முகநூலர்களின் வழக்கம், அவர் பெயர் முகநூலில் இல்லை என்றால் அது பொய்யான பெயர் என முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதை ஏளனமாகச் சொல்லிக்கொண்டும் இருப்பார்கள். உண்மையில் முகநூலில் உள்ள பெயர்களில்தான் பெரும்பாலானவை பொய்யான அடையாளங்கள்.
என் வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் முகநூலில் இருப்பதில்லை. முகநூலில் திளைப்பவர்களால் நூல்களை வாசிக்க முடியாது. தொடக்கத்தில் கொஞ்சம் வாசிப்பார்கள், அதன்பின் அச்சுப்பக்கங்களைப் படிக்கும் பொறுமை இல்லாமலாகிவிடும். நூல்களில் உள்ள எழுத்துக்கள் கண்ணுக்கு அன்னியமாகவே ஆகிவிடும். சில பத்திகளில் ஏதேனும் ஒரு செய்தியை, அரட்டையை வாசிப்பது எதிர்வினையாற்றுவது என மனம் அமைந்துவிட்டால் நூல்களைப் படிக்கமுடியாது. என் வாசகர்கள் பெரும்பாலும் முகநூலில் இல்லை, ஏனென்றால் அவர்கள் வாசகர்கள்.
அத்தகைய வாசகர்கள் பல ஆயிரம்பேர் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது. இல்லையேல் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இப்படி உலகமெங்கும் நிகழமுடியாது. விஷ்ணுபுரம் பதிப்பகநூல்கள் ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்க்குமேல் விற்கமுடியாது. முழுமையறிவு நிகழ்ச்சிகள் வாரந்தோறும் நிகழமுடியாது. ‘எங்களுக்குத் தெரியாத அந்தவாசகர்கள் எவர்?’ என்றுகேட்கும் அற்பமுகநூலர்கள் முகநூலுக்கு வெளியே உலகம் இருப்பதையே அறியாதவர்கள்.
சரி, என் வாசகர்களில் ‘அதிமானுடர்கள்’ உண்டா? ஆம், கண்டிப்பாக உண்டு. என் அகவிசைக்கு இணைநிற்பவர்கள், ஒருவகையில் என்னையும் கடந்துசெல்லும் விசைகொண்டவர்கள். அவர்களால்தான் இத்தனை பெரிய அமைப்பு இத்தனை செயல்பாடுகளுடன் முன்செல்கிறது. தமிழ்ச்சூழலில் அவர்களைப் போன்றவர்கள் அரிதினும் அரிதானவர்கள். என் சுற்றத்துக்கு வெளியே அப்படி தீவிரமாகச் செயல்படுபவர்கள் வேறெங்காவது இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. உண்மையில் இந்த மைய அணியை ஒட்டியே என் வாசகர்கள் பற்றிய பொது உளப்பிம்பங்கள் உருவாகின்றன.
தமிழ்விக்கி போன்ற இணைய இயக்கத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். வெண்முரசை பலமுறை படித்தவர்கள் இருக்கிறார்கள். மிகுந்த தீவிரத்துடன் என்னை மொழியாக்கம் செய்து வெளியே கொண்டுசெல்லும் இளம்பெண்களின் ஓர் அணி உள்ளது. வெவ்வேறு இணையதளங்களை நடத்துபவர்கள் உண்டு. நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்போர் உண்டு. அந்த தீவிரம் கொண்டவர்களை நம்பியே முன்செல்கிறோம். மற்றவர்களை பொறுமையுடன் உடனிழுக்கவேண்டியதுதான்.
என் அறிதலுக்கு வரவே வராத அதிதீவிர வாசகர்ள் பலர் உண்டு. எங்கேனும் சந்திக்கையில் அவர்கள் வெண்முரசை இருமுறை முழுமையாக வாசித்துவிட்டோம் என்று சொல்லும்போது திகைப்பாகவே இருக்கும். அவர்களின் வாசிப்பு வேறுவகையானது. அவர்கள் வாழ்க்கையை அறிந்துகொள்ள, பண்பாட்டை உள்வாங்க, தத்துவத்தைப் புரிந்துகொள்ள வாசிப்பவர்கள். ஒருவகையில் இலக்கிய ஆக்கங்கள் அவர்களுக்காகவே எழுதப்படுகின்றன.
நண்பர் மணிவண்ணன் அவர்களில் ஒருவர். அவரை நான் சிலமுறை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் சந்தித்துப் பேசியதுடன் சரி. வெண்முரசின் வாசகர். பேராசிரியர். சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருடைய மாணவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் நூல்களை வாங்கிச்சென்றபடியே இருப்பார்கள். இறுதியாக அவர் வருவார். அருகே சற்றுநேரம் அமர்ந்திருந்துவிட்டுச் செல்வார். இதுவரை கடிதமேதும் எழுதியதில்லை. அவரை நான் நண்பர் என்று சொல்வது மானசீகமான உறவால்தான். அவர் தன்னளவில் ஓர் அறிவியக்கம். அத்தகையோர்தான் வெண்முரசின் சிறந்த வாசகர்கள்.
அத்தகைய பல்லாயிரம் வாசகர்கள் வெளியே அறியப்படாமல் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு ரகசிய சக்தி. அதுதான் அனைத்துக்கும் அடித்தளம். அடித்தளம் பெரும்பாலும் வெளியே தெரியாது.
வெண்முரசு சுருக்க வடிவம் வெளிவருமா?
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887)
இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்விஇரா.நாகசாமி
இந்தியத் தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர். கோயில் கல்வெட்டுகள் மற்றும் கலை வரலாற்றியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர். இந்தியாவில் முதல்முறையாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொண்டார். மத்திய அரசின் கலை, பண்பாட்டுக் குழுக்களில் அங்கம் வகித்தார். இவரது கட்டுரைகளை 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டன. பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவைத் தொடங்கினார்.
இரா.நாகசாமி – தமிழ் விக்கி
பாரிஜாதம் – தேவி லிங்கம்
மலர் என்பதே மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் தருவது தான் அதில் பாரிஜாதம் முதன்மையானது அருமையான மலர். எனக்கென்னவோ எழுத்தாளர்அருண்மொழி நங்கையைப்பற்றி படிக்க ஆரம்பித்தவுடன் அவரை பாரிஜாதம் என அழைக்கவேண்டுமென ஆவல் மேலெழுந்து உந்தித்தள்ளியது.அவருக்கு இந்தப்பெயர் மிகப்பொருத்தமாக இருக்கும்.ஒரு எழுத்தாளராக அவரைப்பற்றிய செய்திகளை ஆர்வமாக தெரிந்துக்கொள்ள ஆரம்பித்து அவரெழுதிய கட்டுரைகளைப்படிக்க ஆரம்பித்தவுடன் கிருஷ்ணனின் லீலைகளில் மனமயங்கும் கோபியரைப்போல மதி மயங்கி நின்றேன். ஒருவேளை அவரின் சொந்த ஊரும் எனது சொந்த ஊரும் அருகருகே அமைந்தமையாலா? என எனக்குள்ளே கேள்விகளைக்கேட்டு எனக்கு நானே பரிசோதித்துப்பார்ப்பீனும் அது அவ்வாறு இல்லை உண்மையிலேயே அவரின் கட்டுரைகள் கதைகள் அனைத்தும் மிக அருமையானவை எந்த பூச்சும் இல்லாத அப்பட்டமான இயல்பான மண்வாசனையோடுக்கூடிய ஈரம் கசியும் உயிரோட்டமான எழுத்து. குழந்தையாக , மாணவியாக பேத்தியாக அத்தைக்கு மருமகளாக தோழியாக காதலியாக மனைவியாக அம்மாவாக எந்த இடத்திலும் மிகையான சொற்களே இல்லாமல் அப்பட்டமான உணர்வுகளைச்சொல்லும் சுவாரஸ்யமான எழுத்து.
அரசமரத்தில் ஆரம்பிக்கும் அவரது கட்டுரை ஒரு நல்ல சிறுகதைக்கான அத்தனை பரிணாமங்களுடன் மிளிர்கிறது.மரத்தில் ஆரம்பிக்கும் அவரது எழுத்து பட்டாணி என்கிற ஒருவருடைய வாழ்க்கையைப்பற்றி கூறி அதில் அவரின் துயரங்களை ஒரு குழந்தையின் மனவோட்டத்தோடு விவரித்து எங்கும் யாரையும் குறை சொல்லாமல் அனைத்து மனிதர்களையும் அவர்களின் சுயத்தோட அப்படியே பிரதிபலித்து கண்தெரியாத அவரின் மனைவி அவரை நம்பி மூத்தவளையும் பராமரிக்க வரும் இளையவள்.சிறுவயதிலேயே நெல் அவிப்பதற்கு அன்னைக்கு துணைப்புரிந்ததோடு நெல்லை எப்படி ஊறவைப்பது அவிப்பது அரைப்பது என நல்ல சிறுகதைக்கான அத்தனை தகுதிகளும் இந்தக்கட்டுரைக்கு உண்டு
அதுபோல அவரைச்சுற்றியுருந்த அத்தனை சொந்தங்களும் கம்பீரமும் கருணையும் மிக்கவர்களாக இயற்கையிலேயே அவருக்கு வரமாக அமைந்திருந்தது.அப்படி அமையாததையும் இவரின் அன்பால் அமைந்ததாக நினைத்துக்கொண்டது உள்ளுக்குள் நம்மை அருவி வழியும் குகைக்குள் சென்றது போல குளிரச்செய்கிறது. இவரது கட்டுரைகளைப்படித்தால் உறவினர் யாருடனாவது நமக்கு பிணக்கு ஏற்பட்டிருந்தால் கூட நாமே முன் சென்று அவர்களிடம் பேசிவிடுவோம் அப்படியான ஒரு மென் எழுத்துக்களோடு அதீத அன்பான உணர்வுகளை மேலெழச்செய்யும் நேர்மறையான எழுத்துவகை.
இவரது அரசி கட்டுரையில் குறிப்பிட்டுள்ள இருபாட்டிகளில் ஒருவருக்கொருவர் இருதுருவங்கள் எனினும் ஆசிரியர் யாருடைய பக்கங்களுக்கும் நியாயம் சேர்க்கவும் இல்லை தவறென்று சொல்லவும் இல்லை . ஜெகதாம்பாள் பாட்டி கணவரே கண்கண்ட தெய்வம் அவருக்கு சேவை செய்வதே வாழ்க்கை எனக்கொண்டிருந்தாலும், மூத்தவளின் குழந்தையை சரிசமமாக பார்க்காததை தவறென ஆசிரியர் குறிப்பிடவே இல்லை அதுவும் சகஜமெனக்குறிப்பிடுகிறார்.அதுபோல இன்னொரு பாட்டி அப்பாவைப்பெற்றவர் ராஜம்மா பாட்டி கணவரோடு ஒத்து இல்லை சண்டை சச்சரவாக இருந்தாலும் ஒரு ஆளுமையாக இரசனை மிக்கவராக பாடத்தெரிந்தவராக சுதந்திரமாகச்செயல்பட்டதையும் மிகையாக அந்த நடத்தயை உயர்த்திச்சொல்லவில்லை அதையும் ஒரு இயல்பெனவேக்குறிப்பிடுகிறார்ஒருவரை தூக்கிப்பிடித்து மற்றொருவரை சரித்துச்சொல்லும் போக்கு அவரது எழுத்துக்களில் எங்குமே காணப்படவில்லை எங்கு நோக்கினும் நேர்மறையான சிந்தனைகளும் அலைகளும் தான். அப்பாவிற்கும் அம்மாவிற்குமான சண்டைகளாகட்டும்.மருமகளுக்கும் மாமியாருக்கும் நடந்த பிரச்சினைகளாகட்டும் நமக்கு அந்தக்கட்டுரைகளைப்படிக்கும் பொழுதே சில நியாய அநியாயங்கள் தோன்றுகின்றன
ஆனால் ஆசிரியர் அவ்வாறு எதையும் முடிவாகச்சொல்லவில்லை அவர் கொண்டிருப்பது மிகச்சிறப்பான ஒரு மானிடர் தத்துவம் .அவருக்கு சிறுவயதிலேயே அத்தகைய மனநிலை எவ்வாறு வாய்ந்திருந்தது என்பது மிகவும் ஆச்சிரியப்படவைக்கிறது.ஓரிடத்தில் அம்மாவிற்கு சாதகமாக எழுதுவதால் அவர் பாட்டியை குறை சொல்லிவிடவில்லை அதுபோலவே அம்மாவை ஆணாதிக்கத்தோடு நடத்திய அப்பாவையும் ஆசிரியர் குறை சொல்லவில்லை அவரவருக்கான இடத்தில் தன்னைப்பொருத்தி அவர்களை அவர்களின் தன்மையோடு ஓர் ஓடை எவ்வாறு சூரியனின் வெப்பத்தையும் நிலவின் தண்மையையும் பாந்தமாக வெளிவிடுகிறதோ அதைப்போல சொல்லும் ஆசிரியரின் மனப்பாங்கு சிறந்த பெண்மைக்கானது.
காதலின் இசை என்னும் கட்டுரையில் அக்பரின் அரசவையில் இடம்பெற்ற தான்சேன் எனும் இசைக்கலைஞர் பாடுவதாக1960 ம் ஆண்டு வெளியான மொகல்_இ_ஆஸாம் எனும் திரைப்படத்தில் நௌஷத் அலிஅவர்களால் இசையமைக்கப்பட்டு பாடலாசிரியர்ஷகீல் பதாயுனியால் எழுதப்பட்டு வெளிவந்த ஒரு பாடலைப்பற்றி ஆசிரியர் மிக அற்புதமாக குறிப்பிட்டிருந்தார்.காதல் உணர்வுள்ள யாராக இருப்பினும் அக்கட்டுரையைப்படித்துவிட்டு அப்பாடலை காணாமல் இருக்கவே முடியாது.திலீப்குமார்.மதுபாலா நடித்து வெளியான பாடல் அது. அந்தக்காலத்திலேயே அத்தனைப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பாடல் ஆசிரியர் மயிலிறகால் காதலன் காதலியின் முகத்தை வருட அவள் நாணமுறும் விதமாக அந்தப்பாடலின் ஒருக்காட்சியை விவரித்திருக்கும் விதத்திலும் பாடல் பாடியவரைப்பற்றிய குறிப்புகளிலும் நள்ளிரவுக்கடந்து வீசும் இளந்தென்றலுக்கென சில சாத்வீகங்கள் உண்டு. அந்தகைய காற்றில் தலையசைத்து விரும்பிச் சோர்ந்த மலர்களைக்களைப்போல அந்தப்பாடலைக்கண்டு மயங்கி நின்றேன்.அந்தப்பாடலைப்பாடியவர் உஸ்தாத் படே குலாம் அலிகான் பாடலைவிட அதனை ரசித்து எழுதிய விதம் அத்தனை சிறப்பு. ஆசிரியருக்குள் எப்பொழுதுமே இசையின் மெல்லிய துணுக்கொன்றும் காதலின் மிகப்பெரிய தணலொன்றும் அவர்கூடவே எப்பொழுதுமே இருந்துக்கொண்டே இருப்பது போல எனக்கு தோன்றிற்று.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு …இருபத்தியோரு வயது பெண்ணின் குணங்களாக ஆசிரியர் அவரைப்பற்றி குறிப்பிட்டிருப்பது எல்லாமே ஒரு வளரிளம் குழந்தைக்கான குணநலன்கள்.நன்றாக படிப்பதாலும் நிறைய புத்தகங்கள் படித்ததாலும் பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருப்பதாலும் தான் பெரிதாக வளர்ந்துவிட்டதாக எண்ணிய குழந்தையாகவே இக்கட்டுரையில் எழுதியிருந்த அருண்மொழி நங்கையை எனும் பெண்ணை நான் உணர்ந்தேன்.அவர் எழுதிருந்த ஒவ்வொரு செயலிலும் குறும்புகள் இதழ்களில் சிதற விழிகள் ஆர்வத்தில் விரிந்து அடுத்து என்ன நிகழும் எனத்தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டைப்போலவே காதலையும் அவர் கைக்கொண்டிருக்கிறார்.இக்கட்டுரையை படடிக்கும் பொழுது தன்னிச்சையாக எழுத்தாளர் ஜெயமோகன் அந்த காலத்தில் காதலின் பொருட்டு செய்த வேலைகளைக்கண்டு புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. எனினும் இருவருக்குள்ளும் காதலின் ஆரம்ப பொறி எழுந்து ஜூவாலையாக மாறி இன்னும் அது கனன்றுக்கொண்டிருப்பது இந்தக்காலத்தில் மகத்தான சாதனை. முதல் நாளில் பார்த்து அடுத்த நாளில் இணைந்து மறுநாளே பிரிந்துப்போகும் தலைமுறையினரிடையே ஒரு காதல் திருமணமும் அதன் மகத்தான வெற்றியும் குன்றத்து விளக்கு.எதுவும் தெரியாமல் காதல் ஒன்றையே நம்பி கைப்பற்றி காலத்தை ஒப்புக்கொடுப்பதென்பது விழுதை நம்பி வேரை மறக்கும் ஆலமரத்திற்கு ஒப்பான உறுதியாகும்.இத்தனை உறுதியை ஒரு பெண்ணிற்கு காதல் கொடுப்பதற்கு அந்த மனிதனும் அத்தனை தகுதியுள்ளவனாக அந்த பெண்ணிற்கு தோன்றியிருக்க வேண்டும் அவளது பெயரை அவன் மந்திரம் போல உச்சரித்திருக்க வேண்டுமல்லவா? அப்படிதான் அருண்மொழிநங்கை ஜெயமோகன் காதலும் அமைந்தது.நிலம் வேறு உறவுகள் வேறு மொழி வேறு உணர்வுகளில் மட்டுமே ஒன்றி ஒரு தேவதை தன்னை தலைவனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறது.அதுவும் அத்தனை அன்பான உறவுகள் சுற்றம் எதனையும் பொருட்படுத்தாது ஒரு நேசத்தின் முன்பு நீட்டப்பட்ட கரத்தை பற்றிக்கொள்வதென்பதை பிறந்த மான் குட்டி ஒன்றின் துள்ளலின் இசைவோடு செய்திருப்பதை அன்பின் கண்கொண்டு உற்று நோக்கும் பொழுது மனம் அக்காதலில் முன்பு கற்பூரமாக கரைந்துவிடுகிறது இருவரின் தெளிவான தீர்க்கமான அன்பு.ரசனைகள்.அப்படியே இயல்போடு ஏற்றுக்கொள்ளல்.இருவருக்கும் உள்ளிருந்த அக்கறை அடர்ந்த காதல் மெல்லிய காமம்.காதல் தான் எத்தனை மாயம். ஆயிரக்கணக்கான வர்ணங்களின் வானவில்.பேசாத போது பேசத்தவிக்கும் ஊமை.மனதில் வார்த்தைகள் சத்தமிடும் பொழுது மௌனத்திருக்கும் நிலவு.முடிவில்லாமல் பரவும் பெருவெளி.உள்ளங்கை நீரில் பிரதிபலிக்கும் நீலவானம். நெடுங்காட்டு வண்டின் ரீங்காரம்.கடும்வெயில் மரநிழல் . குடுவைத்தேன்.தேனிறத்தழல்.தழலின் நீல வண்ணம்.நீலவண்ணக்கடல் கடல் பார்த்த வானம்.வானம் முடிவுரா பிரபஞ்சம்.பிரபஞ்சமே காதல்.
ஆசிரியர் நிறைய இடங்களில் இசைக்கு பெரிய முக்கியத்துவம் தந்திருக்கிறார்.அதற்கு அவரது குடும்ப பிண்ணனியும் காரணமாக இருந்திருக்கிறது.முதலில் கர்நாடக இசையில் மீது ஆர்வம் இருந்தாலும் அவரது மகனால் ஹிந்துஸ்தானி இசையை ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்.பண்டிட் வெங்கடேஷ் குமார் அவர்களின் பாடலான”சியாம சுந்தர மதன மோகன பாடலை குறைந்தப்பட்சம் ஐம்பது தடவை கேட்டு நெகிழ்ந்ததாகக்குறிப்பிடுகிறார். திருவையாறு இசை நிகழ்ச்சிக்கு சென்று நிறைய ஆடியோ கேசட்டுகளை வாங்கியதால் பயணத்திற்கு கூட பணம் இல்லாமல் போனதுப்பற்றி நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். ஆசிரியருக்கு சிறுவயதில் அவருக்கு சுற்றி நடந்த நிகழ்வுகள் வாழ்க்கைக்கு அனுபவிக்க ஆழமான அடித்தளமாக அமைந்திருக்கின்றது
சிறுவயதில் அதாவது எட்டுவயதாக இருக்கும்பொழுதே புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டதாகக்கூறும் ஆசிரியர் சுஜாதாவின் கதைகளில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டிருக்கிறார். அவ்வயதில் குமுதத்தில் வெளியான வாஸந்தியின் சிறுகதையைப்படித்துவிட்டு அழ ஆரம்பித்தவர் இருபது வயதில் தஸ்தாயெவெஸ்கியை படித்துவிட்டு அழும் அளவிற்கு குழந்தை மனம் கொண்டிருக்கிறார்.சுந்தரராமசாமி அசோகமித்திரன் முதலியவர்கள் இவருடைய படிப்பகத்தில் இருந்திருக்கிறார்கள்அவரது வீட்டில் விஜயா அத்தையே இவருக்கு பாடம் சொல்லிக்கொடுப்பவராக பாசம் காட்டுபவராகவும் இருந்திருக்கிறார். இரு பாட்டிகள் அம்மாவழிபாட்டிப்பாட்டி கணவர் இறந்ததற்கப்புறமாக அவர்மேல் கொண்ட அன்பின் பொருட்டு செருப்பைக்கூடத்துறந்து மாடுகளை வைத்து பராமரித்து கடினமாக வேலை செய்து உழைப்பை கற்றுக்கொடுப்பவராக மறுபுறம் தந்தை வழிப்பாட்டி எதைப்பற்றியும் அதிக கவனம் கொள்ளாது எதன் மீதும் பற்றில்லாத சுதந்திரத்தை சொல்லித்தருபவராக இருந்திருக்கிறார்.ஆசிரிரியால் ஒரே சமயத்தில் இருவேறு குண நலன்களையும் பற்றிக்கொள்ள இது ஏதுவாக இருந்திருக்கிறது.தம்பியின் மேல் கொண்ட பிரியம் .நட்புகள் மீது கொண்ட அன்பு.சுற்றத்தார்கள் மேலேக்கொண்ட மரியாதை என கட்டுரைகள் முழுவதும் அனைவருமே இப்படிப்பட்ட ஒரு பெண்ணாக இருந்துவிட்டால் நன்றாக இருக்கும் என எண்ண வைக்கிறது.
மதுரை மீனாட்சி எப்படியோ எல்லோருக்கும் குலதெய்வமாகிவிடுகிறாள். அப்படிதான் ஒருக்காலத்தில் அவள் ஆசிரியருக்கும் மூச்சாக இருந்தாள் என நிறைய இடங்களில் காணமுடிகிறதுஆசிரியருக்கு மீனாட்சி மேல் இருந்த பற்றே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்ட குமரித்துறைவிக்காரணமாக இருந்திருக்கலாம் அற்புதத்திலும் அற்புதம் அந்த நூல்.என்னை ஆட்கொண்ட நூல்.நூலின் தலைவி உலகாளும் சுந்தரி மீனாட்சி
ஆசிரியருக்கு நிலங்களைப்பற்றியும் நிறையத்தெரிந்திருக்கிறது என்பது அவர் ஆங்காங்கே பயன்படுத்தி எழுதியிருக்கும் நிலக்குறிப்புகளை வைத்து நாம் எளிதாகப்புரிந்துகொள்ளலாம்.அவரது பாட்டியை அருவியை காணக்கூட்டிச்செல்லும் கட்டுரையில் வறண்டநிலங்களையும் அதைப் பற்றி வளரும் கருவேலஞ்செடிகளையும் குறிப்பிட்டுக்கொண்டே வருபவர் ஓரிடத்தில் அந்த வறண்ட நிலத்தில் பருத்த தண்டுகளை உடைய மரங்கள் இருந்ததாக அதனால் பூமிக்கு அடியில் நீர் இருக்கலாம் எனக்குறிப்பிடுகிறார்.ஒரு பயணத்தில் நாம் எது எதையோ பார்ப்போம் யோசிப்போம் அவர் மரங்களின் வளர்ச்சி நீர்நிலைகள் இடங்களின் குளிர்ச்சி காற்றின் ஈரப்பதம் என சிறு உயிர்களை கணக்கில் கொண்டு வந்து எருமைகளை ரசிப்பது அதனை குளிப்பாட்டுவது.சுற்றியுள்ள மனிதர்களுக்கு உதவுவது உணர்வினை பகுத்தறிவது என்பது இயல்பாகவே அவரது மனம் அனபிற்கும் கருணைக்குமானது என்பதை உணர்த்துகிறது
அதிகாலையில் கண்விழித்து முகநூலைப்பார்க்கிறேன் .ஒரு புகைப்படத்தை அத்தனைப்பேர் பகிர்ந்திருக்கின்றனர்.நான் அந்தப்புகைப்படத்தைப்பார்க்கிறேன்.அது ஒரு மணிவிழா புகைப்படம் அந்தப்புகைப்படத்தில் நாயகியின் மகிழ்ச்சியையும் சிறு குழந்தைப்போன்ற குதூகலிப்பையும் பார்த்ததும் மெல்ல எழும் அதிகாலை கதிரின் வெளிச்சம் போல மனதிற்குள்ளே மகிழ்ச்சி பனிப்புகையாக பரவுகிறது. அந்த மகிழ்ச்சி பூவரசமரத்தின் மஞ்சள்நிறப்பூக்களை போல அன்று முழுவதும் என்னை தொற்றிப்பொலியச்செய்தது..அந்த பெரிய விழிகள் மூன்று வயதில் உலகை ஆர்வத்தோடு பார்க்கும் குழந்தையின் பாவனை .முகப்பரவசம் சொர்ண ஜொலிப்பு . வெகு நேரம் அந்தப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த நான்அந்தப்புகைப்படத்தை எனது பக்கத்தில் பகிர்ந்துக்கொண்டேன். ஆற்றூர் கவிஞர் ரவிவர்மா ஜெய மோகன் அவர்களுக்கு தந்தை போன்றவர் எனவும் அவர் அருண்மொழி நங்கையை முதன் முதலில் பார்த்தபொழுது “பிரகாசம் பரந்துந்ந பெண்குட்டி “என்றாராம் அதில் துளி அளவுக்கூட சந்தேகமில்லாமல் உண்மை.
ஆசிரியரின் பயணங்கள்.நிகழ்வுகள் என எதுவாக இருந்தாலும் அதில் எடுத்த புகைப்படங்களைப்பார்த்தோமேயானால் ஒன்றுக்கூட ஒரேமாதிரியாக இயந்திரத்தனமாக இருக்காது.ஒவ்வொன்றும் இரசனையானதாக துள்ளலாக உண்மையோடு ஒளிர்வதாகவே தோன்றும்.அந்தக்கட்டுரைகள் எனக்கு ஒரு அமைதியான நதியில் பயணித்ததைப்போல உள்ளுல் அமைதியை உணரச்செய்தன அதே நேரத்தில் அன்பின் ஆழத்தையும் உணரச்செய்தன ஆசிரியர் ஒளிரட்டும்.ஒளி பரவட்டும்
தேவி லிங்கம்
வேதாரண்யம்.
ஒரு புதிய தொடக்கம்- ஃபைஸ் காதிரி
நீங்கள் கடந்த பல மாதங்களாக பல்வேறு தலைப்புகளின் கீழ் பல்வேறு துறையைச் சார்ந்த ஆளுமைகளைக் கொண்டு “முழுமையறிவு” வகுப்புகள் நடந்து வருவதை சரியாக கவனித்து வருகிறேன்.. இந்த வகுப்புகள் தொடங்கப்பட்ட பொழுது, எத்தனை நாட்களுக்கு இதுபோன்ற வகுப்புகள் தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லையே என்கின்ற கேள்வி எனக்குள்ளும் இயல்பாகவே எழுந்தது.ஆனால் அதைப் பொய்யாக்கும் வகையில் அனைத்து வகுப்புகளும் இன்று சாதனை வகுப்புகளாக மாறியிருப்பதை யாவரும் அறிவர்.
ஒரு புதிய தொடக்கம்- ஃபைஸ் காதிரிI have to wear different shirts to make a distinction between videos. That’s why I’m wearing old shirts. That shirt was big for me even when I had 10 kilograms more weight… Nothing to do.
The Tamil Wiki and Knowledge _ A Letterஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாஷாபரிஷத் விருது
இந்திய அளவில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் இலக்கிய விருதான பாஷாபரிஷத் விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.
பாஷா பரிஷத் விருது எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் விக்கி S. Ramakrishnan Tamil WikiApril 9, 2025
அன்றாடங்கள்
நான் இந்த இணையப்பக்கத்தைத் திரும்பப் படிக்கும்போது எனக்குச் சுவாரசியமாக இருப்பவை முன்பு நான் எழுதிய அன்றாடக்குறிப்புகள்தான். கருத்துக்களையும் படிப்பதுண்டு. ஆனால் அவை கொஞ்சம் பழையவையாக இருக்கும்- காலத்தால் பின்னகர்ந்து பொருளிழந்துவிட்டிருக்காது. ஏனென்றால் நான் அரசியல் கருத்துக்களைச் சொல்வதில்லை. நான் சொல்பவை பெரும்பாலும் இலக்கியம், மெய்யியல் சார்ந்த கருத்துக்கள் மட்டிலுமே. அவை அப்படி மாறுவதில்லை. நானறிந்து நான் சொல்லும் இலக்கிய- மெய்யியல் கருத்துக்கள் ஆயிரமாண்டுகளாக இருந்துகொண்டிருக்கின்றன.
அன்றாடக்குறிப்புகள் ஆர்வமூட்டுவதற்குக் காரணம் நுணுக்கமான மாற்றங்கள்தான். நான் வயதாகி மாறிவிட்டிருக்கிறேன். என் நடை தளரவில்லை, உள்ளம் ஊக்கம் குறையவில்லை, என் அன்றாடம்கூட பெரிதாக மாறவில்லை. ஆனால் ஏதோ ஒன்று மாறிவிட்டிருக்கிறது.என் குழந்தைகள் வளர்ந்து மாறிவிட்டிருக்கின்றனர். அஜிதன் திருமணமாகி, தனிக் குடும்பம் ஆகி, சென்னையில் இருக்கிறான். சைதன்யா பதிப்பாளர் ஆகி சென்னையில் தனி அலுவலகமும் வீடுமாக இருக்கிறாள், நல்ல பையன் அமைந்தால் தனிக் குடும்பம் ஆகிவிடுவாள்.
ஒவ்வொன்றும் பறந்து செல்கின்றது. பார்வதிபுரத்தின் சூழல் மாறியிருக்கிறது. நான் வழக்கமாக நடை சென்ற ஆளரவமில்லாத வேளிமலை அடிவாரங்கள் இப்போது முழுமையாகவே மாறிவிட்டிருக்கின்றன. அங்கே ஆம்பல் பூத்த ஏரிகளை நிரப்பி ஆறுவழிச்சாலை வருகிறது. ரயில்பாதை இரட்டையாகிறது. ஏராளமான புதிய ‘நகர்கள்’ உருவாகிக்கொண்டே இருக்கின்றன. நான் சாலையில் சந்திக்கும் முகங்கள் பல புதியவை. முன்பெல்லாம் கிராமிய முகங்களே மிகுதி. இப்போது எங்கு பார்த்தாலும் சிறுசிறு குடிக்குழுக்கள். மரநிழல்களில், ஓடைக்கரையில். பல கஞ்சாக்குழுக்கள். நேற்றுகூட போலீஸ்காரர்கள் ஒரு கும்பலை பிடித்து அடித்து மிரட்டிக்கொண்டிருந்தார்கள். முழுக்க வெளியிடத்தவர். தமிழகம் போதையில் மூழ்கிக்கிடக்கிறது என்றால் இன்றைக்கு பத்துப்பதினைந்து நவீன இலக்கியவாதிகள் பாய்ந்து கடிக்கவருவார்கள.
ஆனால் எங்கும் சிறு இடைவெளியை கண்டடைய முடியும். எப்போதும் நமக்காக சில பூக்கள் மலர்ந்திருக்கும். வேளிமலை அப்படியேதான் இருக்கிறது. பசுமையும் பாறையுமாக எழுந்த பேரலை. வான் தொட்டு மேலெழுந்த மௌனம். காற்றுதழுவும் அமைதி. நிரந்தரச் சாட்சியாக மலையுச்சியில் அமர்ந்திருக்கும் குட்டியானை. அங்கே துளிச்சொட்டு சாஸ்தா குகையில் நீர்த்துளிகள் என காலம் சொட்டிக்கொண்டே இருக்கிறது.
சென்ற அக்டோபரில் இருந்தே நான் ஊரில் தொடர்ச்சியாக ஒரு வாரம் இருக்கமுடியாதபடி ஆகியிருக்கிறது. ஆகவே ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்துகொண்டு, அன்றாடத்தின் சுழற்சியில் சிக்கி இருக்க ஏங்க ஆரம்பித்துவிட்டேன். இந்த பத்துநாளையும் பார்வதிபுரத்துக்காக ஒதுக்கியமையால் அன்றாடம் என்னும் இனிமை அமைந்தது.
எப்போதும் இரவு பன்னிரண்டுக்கு தூங்கி காலையில் ஏழு மணிக்கு எழுவது வழக்கம். மதியம் ஒருமணிநேரம் தூங்குவேன். அண்மையில் தூக்கம் ஏன் அவ்வப்போது கலைகிறது என அவதானித்து காபியோ என ஐயம் கொண்டு மதியத்துக்குமேல் காபி டீ எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டேன். அருண்மொழி காய்ச்சிய ஓர் எண்ணையை மாலையில் தலைக்கு வைத்து ஒருமணிநேரம் கழித்து குளிப்பேன். பத்துமணிக்கே சொக்கிக்கொண்டு வருவதனால் உடனே தூங்கி மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுகிறேன். ஒரு சின்ன நடை. கருப்பட்டிக்காப்பிகடையில் ஒரு -சீனி இல்லாதது. அதன்பின் எழுத்து.
அமெரிக்கா ஐரோப்பா என பயணம் செய்து, அங்கிருக்கும் அரையிருள் பகல்களுக்குப் பழகிவிட்டமையால், இங்கிருக்கும் சுடரும் வெயில் இன்னும் அழகாகத் தெரிகிறது. மொட்டைமாடியில் வேப்பமர நிழலில் அமர்ந்து வெயிலைப் பார்த்தபடி , டீ குடித்தபடி வாசிப்பு. நடுவே வெயிலில் நிழல்கள் வழியாகச் சென்று பார்வதிபுரம் சந்திப்பில் மீண்டும் ஒரு பால் இல்லாத டீ. அங்கே நிகழும் வம்பளப்புகளுக்குச் செவிகொடுத்தல். இப்போதுகூட என்னை எவருக்குமே தெரியாது இங்கே. பார்வதிபுரம் அரசியலே ஒரு மாதிரியானது. நாலைந்துபேர் சேர்ந்தமர்ந்து இந்துத்துவாவாகக் கொட்டிக்கொண்டிருப்பார்கள். ஒருவர் புதியதாக வருவார். கிறிஸ்தவராக இருப்பார். அப்படியே பேச்சு இரவுணவுக்கு பயறுக்கஞ்சி நல்லதா என திரும்பிவிடும். அலுங்காமல் நலுங்காமல்…
மதியம் சிவப்பரிசிச்சோறு, மீன்குழம்புடன் சாப்பாடு. அதன்பின் தூக்கம். பிறகு ஒரு மாலைநடை. இப்போது புதிய பாதைகளைக் கண்டடைந்துவிட்டேன். குமரிமாவட்டத்தில் மட்டும்தான் எந்த உச்சவேனிலிலும் பசுமைகொப்பளிக்கும் இடங்கள் உண்டு. கோடைக்குரிய பறவைகள், கோடைக்குரிய புல்கொத்துக்கள், கோடையை அழகாக்கும் செக்கச்சிவந்த அந்திவானம். புழுதியும் வானைச் சிவப்பாக்கும். ஆனால் நீராவி அளவுக்கு அல்ல. குமரிமாவட்டத்தில் கோடையில் எல்லா குளங்களும் கொதித்து ஆவி உமிழ்ந்து வானை நீராவியால் நிறைத்துவிட்டிருக்கும்.
பாறையடி பக்கமாக மாலைநடை சென்றேன். இப்பகுதியில் முன்பு மாலைநடை வந்துகொண்டிருந்தது கோவிட் காலகட்டத்தில். மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு நடைசெல்லவேண்டும் என்பதற்காகவே. அன்றெல்லாம் சைதன்யாவும் உடன்வருவாள். நாங்கள் ஓட்டப்பயிற்சி எடுத்துக்கொண்டோம். கோவிட் வந்தால் நுரையீரல் தாக்குப்பிடிக்கவேண்டும் என்பதற்காக. மாலையில் நடக்கும்போது ஏதேதோ கண்ணுக்குப் படுகிறது. ஒருவர் ஒரு நாய்க்குட்டியை குளிப்பாட்டுகிறார். அது கண்சொக்கி நின்றிருக்கிறது. அதன் இணைநாய்க்குட்டி கரையில் ஒரு சரடால் கட்டப்பட்டு என்னைப் பார்த்து ஆர்வத்துடன் வாலாட்டுகிறது. நாட்டுநாய்கள்தான். குட்டியில்தான் அவை மனிதர்களைப் பொருட்படுத்தும், அதன்பின் வெளியே ஓடி மந்தையாக ஆவதிலேயே குறியாக இருக்கும்.
தாமரைகள் மலர்ந்த ஏரி. தாமரையிலைத் தண்ணீர். ‘நளினீ தலகத ஜலம் அதி தரளம்’. தாமரையிலை நீர் நலுங்கிக்கொண்டிருக்கிறது.சங்கரரின் வரி. தரளம் என்றால் தமிழில் முத்து. நலுங்கும் முத்து. ஆனால் காற்றே இல்லை. ஆகவே நீர்த்துளி நலுங்காமல் நின்றிருக்கிறது. நல்ல பெரிய துளி. ஒரு குட்டி நீர்த்தேக்கம் என்றே சொல்லிவிடலாம். இப்போதைக்கு அசைவின்மையின் ஒளி கொண்டிருக்கிறது. இப்படியே சிலகாலம் நீடிக்குமென்று நினைக்கிறேன்.
கோடை பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம் கணியாகுளம்,பாறையடி… கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி பூவாப் பூ வண்ணங்களை மீட்டெடுத்தல் வேறொரு காலம் அந்தி எழுகை பசுஞ்சுடர்வு வீடு நமக்கு… செல்வது மீளாது காலைநடையில்… மானுடம் செவ்வல்லியின் நாள்
பால் டைஷன்
ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர். பிரம்மசூத்திரத்தையும் பிற நூல்களையும் சம்ஸ்கிருத ஏட்டுச்சுவடிகளில் இருந்து ஜெர்மானிய மொழிக்கு மொழியாக்கம் செய்தவர். கீல் பல்கலை கழகத்தின் தத்துவப்பேராசிரியராகப் பணியாற்றினார்.
பால் டைஷன்
பால் டைஷன் – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

