Jeyamohan's Blog
October 24, 2025
ஆழ்நதியைச் சென்றடைதல்
கோதாவரியின் கரையில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி இது. இலக்கியம் பற்றி பேசுவதற்கான ஓர் உருவகமாக அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். காவியம் நாவல் எழுதுவதற்காக சென்ற ஜூன் மாதம் பைதான் நகர் சென்றபோது பதிவுசெய்தது.
எரிமருள் வேங்கை
திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு மாளிகை கட்டி நிறைய மக்களுடன் பல்லக்கும் பரிவட்டமுமாக வாழ்ந்தார்.
ஒருநாள் ஆலயம்தொழவந்த நக்கீரரை அவர் கண்டார். உயிர்த்தெழுந்த பொற்றாமரைக்குளத்தை அடிக்கடி வந்து பார்த்துச்செல்வது அவரது வழக்கம். இருவரும் பிராகாரத்தில் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டார்கள். தருமி தன்னுள் நீண்டகாலம் இருந்த கேள்வியைக்கேட்டார். ‘திருவிளையாடல் நடந்தது. ஆயிரம் பொன்னும் பெற்றேன். அய்யா, உண்மையிலேயே கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா?’
ரகசியமாக தருமி சொன்னான் ‘நான் ஈட்டும் பொன்னில் பாதி இதைத்தெரிந்துகொள்வதற்காகவே கணிகையர் தெருவில் வீணாகிப்போகிறது.’ தாடிக்குள் நகைத்த நக்கீரர் சொன்னார் ‘நான் சென்ற வருடங்களில் வாசித்த அனைத்து நூல்களும் இந்த வினாவுக்கு விடைதேடித்தான்.’ ’உங்கள் முடிவென்ன புலவரே?’ என்றான் தருமி.
’உண்டு என்கிறது கவிதை. இல்லை என்கிறது அறிவு. ஆனால் விடைமீது செம்பொன் மேனியன் என அறிவின் மீதமர்ந்திருக்கிறது கவிதை. பூத்தகாடு தேன்கொண்டிருப்பதுபோல கவிதையை தேக்கியிருக்கிறது அறிவு’ ‘நீங்கள் எம்முடிவை வந்தடைந்தீர்கள்?’ ‘நான் வேழம். காட்டையே உண்ணமுடியும். தேன்சுவை அறியமுடியாது’ என்றார் நக்கீரர்.
கவிதைக்கு இருபக்கமும் இவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். சாமானியனும் அறிஞனும். இருவரும் திகைத்து நோக்குகிறார்கள். இது என்ன? நான் புழங்கும் உலகைப்பற்றியது இது, நானறிய முடியாதது என்கிறான் சாமானியன். நான் கற்ற மொழியில் இது அமைந்திருக்கிறது, ஆனால் நான் கற்கமுடியாதது என்கிறான் அறிஞன்.
இந்த மர்மமான, அற்புதமான, முற்றிலும் தேவையற்ற, சற்றும் தவிர்க்கமுடியாத விஷயத்தைப்பற்றி எத்தனையோ பேசப்பட்டிருக்கிறது. எவ்வளவோ விளக்கப்பட்டிருக்கிறது. அனைத்து விளக்கங்களுக்கும் மிக அண்மையில் அது நின்றுகொண்டிருக்கிறது, நிறைக்கமுடியாத இடைவெளியுடன்.
‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம்செப்பாது கண்டது மொழிமோ
நறியியது செறிந்த செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியதும் உளவோ நீ அறியும் பூவே
என்னும் இறையனாரின் கவிதையைக்கொண்டே அதை விளக்கலாமே. காட்டை உண்ணும் யானைக்குரியதல்ல கவிதை. கொங்குதேர் வாழ்க்கை கொண்ட அஞ்சிறைத் தும்பிக்கு உடையது அது. கவிஞனுக்கு இதைவிடச் சிறந்த வரையறை இருக்கமுடியுமா என்ன? காட்டில் உள்ள மலர்களில் ஊறிய தேனை மட்டுமே அருந்தும் சுவை கொண்டது. அந்தத் தேனை நாடிச்செல்வதற்கான அழகிய சிறகுகள் கொண்டது. மலரில் அமரும் சிறகும் மலர்போலவே அமையவேண்டுமென நினைத்தவனாதலால்தானே அவனை நாம் முழுமுதல் கவிஞன் என்கிறோம்.
ஆம், வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் சாரமென ஊறும் தேன் மட்டும் போதும் அவனுக்கு. காட்டை அதன் தேன் வழியாகவே அறிய அவனால் முடியும். அந்தக்காடு அவன் வழியாகவே காய்த்துக் கனிகிறது. ஒரு செடியின் ஆன்மாவை மகரந்தமாக ஆக்கி இன்னொரு செடிக்குக் கொண்டுசெல்லக்கூடியவன் அவன் இல்லையா?
கொங்குதேர்வாழ்க்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது. காமம் செப்பாது கண்டது மொழியும் நேர்மையும் தேவை கவிஞனுக்கு. உறையுருவப்பட்ட வாளின் சமரசமின்மை. இவ்வாழ்க்கையின் அனைத்து பொய்மைகளுக்கும் அப்பால் நிற்கும் தனிமை. இதன் விருப்புவெறுப்புகளை கடந்த தூய்மை.
அந்தக்கவிஞனிடம்தான் கோரிக்கை வைக்கப்படுகிறது. செறி எயிற்று அரிவை கூந்தலை விட மணம் கொண்ட மலர் உண்டா? எனக் கேட்பவன் காதலன். அவன் அறிந்த மணம் அவனுடைய காதலியான அரிவையின் கூந்தலில் எழுவது.
அதை ‘பெண்ணின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா?’ என்று பொதுமைப்படுத்துவதே அறிவின் இயல்பு. இந்தப்பெண்ணின் கூந்தலுக்கு இயற்கை மணம் இருந்தால் அது அனைத்துப்பெண்களிடமும் இருந்தாகவேண்டும் என அது வாதிடும். அதை இவன் உணர்ந்தால் அனைவரும் உணர்ந்தாகவேண்டும் என அது கோரும்.
நக்கீரரின் அறிவு கோரியது ஓர் புறவய உண்மை. மைதானத்தில் நிற்கும் உண்மை. மேடையேறிய உண்மை. அனைவரும் கேட்கும் உண்மை. அக்காதலன் கவிஞனாகிய தும்பியிடம் கோரியதோ அந்தரங்க உண்மை. அறைக்குள் நிற்கும் உண்மை. அகம் மட்டுமே அறியும் உண்மை.
ஆம் கவிதைக்கும் பிற அறிதல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். பிற அறிதல்கள் அனைத்தும் புறவயமானவை. கவிதை அகவயமானது. புறவயமான உண்மையின் நுனியில் கனிந்தூறிய அகவயமான உண்மை அது. மரத்தில் ஊறிய தேன் போல.
அந்தக்காதலன் தன் அரிவையின் கூந்தலை அள்ளி முகர்ந்து அடைந்த மனஎழுச்சியின் கணத்தில் அவன் அடையும் உச்சநிலையை கவிதை சென்று தொடுகிறது. அவன் சற்று நேரத்தில் கீழிறங்கி பொது உண்மையின் தரையை தொட்டு விடுவான். அவன் கணவனாக ஆவான். தந்தையாவான். கிழவனாவான். கவிஞன் மட்டும் அந்த உச்சகணத்தில் மட்டும் நின்றுகொண்டிருப்பான். மண்ணுக்கே வராமல் வானிலேயே வாழும் ஒரு பறவை கவிதை. மண்ணிலிருந்து எழுந்து வானைத்தொடுபவர்கள் அதைக் கண்டு மீளமுயலும் அவ்வளவுதான்.
நான் பள்ளியில் படிக்கும்போது ஐந்து மலைக்காணிப்பையன்கள் என்னுடன் படித்தனர். அவர்களும் மலையாளம்தான் பேசுவார்கள். ஆனால் அவர்கள் பேசுவது தனிமொழி. அவர்களுக்கு மட்டுமே புரியும். ஆட்டிலை என்றால் ஆட்டுக்காது. பூவால் என்றால் பூவின் அல்லி. கிணறு தன்னைப்பார்த்தது என்றான் ஒருவன், நான் அவனிடம் கிணற்றில் நீர் இருக்கிறதா என்று கேட்டபோது.
அவர்களின் மொழி முற்றிலும் படிமங்களால் ஆனது. அந்தப்படிமங்கள்கூட எல்லாருக்கும் உரியவை அல்ல. அவ்வப்போது அவர்கள் உருவாக்குவது. மரத்தின் உகிர் என்று அவன் ஒருமுறை சொன்னான். அப்போதுதான் வேரை மண்ணில் கவ்வி ஊன்றி நின்ற மரத்தை ஒரு மாபெரும் பருந்தின் காலாக நான் கண்டேன். அந்தமொழி அவர்களுக்கு புரியும்.
பெரும்பாலும் கவிதையும் அப்படித்தான் இருக்கிறது. கவிஞர்கள் ஒரு தனிக்குழு போல. தமிழகம் என்னும் வகுப்பில் அந்த மாணவர்கள் ஐந்துபேரும் தனியாக இருக்கிறார்கள். அவர்கள் பேசுவது எங்களுடைய அதே மொழிதான். ஆனால் அது மொழிக்குள் வேறு மொழி. தனிமொழி – ஆங்கிலத்தில் மெட்டாலாங்குவேஜ் என்கிறோம்.
ஆம், கவிதை என்பது ஒரு மொழிக்குள் செயல்படும் ஒரு தனிமொழி. அதை வாசிக்க உங்களுக்கு மொழி மட்டும் தெரிந்தால் போதாது. அந்தத் தனிமொழியும் தெரிந்திருக்கவேண்டும். கடல்நீரில் ஒருசதவீதம் கனநீர் இருக்கிறது என்கிறார்கள். ஒரு எலக்டிரான் கூடுதலாக உள்ள நீர் அது. கடல் தன் ஆழத்தின் அழுத்தத்தாலும் வெம்மையாலும் அதை உருவாக்கி வைத்திருக்கிறது. அதைப்போல மொழியும் தன் ஆழத்தால் தனக்குள் ஒரு கனமொழியை உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு எலக்ட்ரான் கூடுதலான மொழி. அதுதான் கவிதை.
மொழி இரண்டு வகையில் தொடர்புறுத்துகிறது. இன்னசொல்லுக்கு இன்ன பொருள் என்ற பொதுப்புரிதல் வழியாக அது தொடர்புறுத்தலை நிகழ்த்துகிறது. கண் என்றால் ஓர் உறுப்பைக்குறிக்கும் என சொல்பவரும் கேட்பவரும் அறிவர். அப்படித்தான் நாம் பேசிக்கொள்கிறோம். ஆனால் கூடவே அந்தத் திட்டவட்டத்தன்மையை கலைத்துக்கொண்டும் நாம் தொடர்புறுத்துகிறோம். நகக்கண் என்கிறோம். அகக்கண் என்கிறோம். உறுதியாகச் சொல்லமுடிபவற்றுக்கு அப்பாலுள்ள ஒன்றைச்சொல்வதற்காக உறுதியை அகற்றி சொல்லமுயல்கிறோம்.
இந்த இரண்டாவது செயல்பாடு பொதுவாக இன்றும் பழங்குடிகளிடம் அதிகம். மரத்தில் ஆயிரம் கண் என்று அவர்கள் சொல்வது பழங்களைக் குறிக்கிறது. நாகரீகமடையும்தோறும் நாம் இந்த பொருள்மயக்கத்தை முழுமையாகவே தவிர்க்கமுயல்கிறோம். சட்டம் வணிகம் அரசியல் அறிவியல் போன்றவற்றில் பொருள்மயக்குக்கே இடமில்லை.
அவ்வகையில் பார்த்தால் நாகரீகத்தின் உள்ளே உறையும் பழங்குடித்தன்மைதான் கவிதை. ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் நவநாகரீக புழக்கத்தின் நடுவே அங்குள்ள ஆதிவாசி ஒருவர் தன் மாபெரும் குழல்வாத்தியத்தை இசைப்பதுபோல நம் நாகரீக வாழ்க்கையின் நடுவே ஒலிக்கிறது கவிதை.
இப்படிச் சொல்கிறேன். ஏற்கனவே இருக்கக்கூடிய அர்த்தங்கள் வழியாக பேசுவதல்ல கவிதை. புதிய அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கக்கூடியது. மொழி ஒரு கட்டுமானமாக ஆகி உறைந்துகொண்டே இருக்கிறது. மறுபக்கம் அதன் ஒரு பக்கம் உயிர்த்துடிப்புடன் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பறம்பிக்குளத்தில் ஒரு மரக் குடிலில் ஒருமுறை தங்கினேன். அதன் ஒரு கால் முருக்கமரத்தால் ஆனது. அது முளைத்து கிளைவிரித்து பூத்து நின்றது. அது மட்டும் வளர்ந்துகொண்டிருந்தது. அதுதான் மொழியில் கவிதையின் இடம்.
பழங்குடிப்பாடல்களில் இயல்பாகவே எப்போதும் கவிதை உள்ளது. கையில் உள்ள சொற்களைக்கொண்டு சொல்லமுடியாதவற்றைச் சொல்ல அவர்கள் முயல்கிறார்கள். எங்களூரின் பழங்குடிப்பாடல்
ஆனைகேறா மலையில் ஆடு கேறா மலையில்
ஆயிரம் காந்தாரி பூத்திறங்கி
என்கிறது. யானை ஏறாத மலையாக வரையாடும் ஏறாத மலையாக தெரிவது வானம். அதில் ஆயிரம் சிவந்த காந்தாரி மலர்களாக விண்மீன்கள். இது ஒரு அதீதக் கற்பனை அல்ல. உட்கார்ந்து கண்ட கனவும் அல்ல. எங்களூரின் மேற்கு மலையை கண்ணால் பார்க்கும் குழந்தைகூட இந்த அனுபவத்தை அடையும். நீலநிற அடுக்குகளாக மலைகள். மேலே கருநீல மேக அடுக்குகளும் மலைகள் போலவே தோன்றும். அந்த மலையுச்சியில் ஏறும் ஆடும் ஆனையும் அடுத்த மலையின் மேகப்பாறைகளுக்கு கீழேதான் நிற்க முடியும்!
அங்கிருந்து ஆரம்பிக்கிறது கவிதை. செவ்வியல் கவிதை அந்தப்பழங்குடிக் கவிதைக்கு மிக அருகே நிற்கக்கூடியது. அது கண்ணுக்கும் காதுக்கும் மிக அண்மையானது. கற்பனைக்குப்பதில் நேரடி அனுபவத்தில் உருவாகக்கூடியது. நம் சங்கப்பாடல்கள் அத்தகையவை. அவை ஒருபக்கம் பழங்குடிப்பாடல்களின் உடனடி அனுபவத்தளம் கொண்டவை. புலன் சார்ந்தவை, மறுபக்கம் தேர்ந்த மொழிநுட்பத்துடன் துல்லியமாகச் சொல்லப்பட்டவை.
எரிமருள் வேங்கை இருந்த தோகை
இழையணி மடந்தையின் தோன்றும் நாட
என்று கபிலர் ஐங்குறுநூறில் பாடுகிறார். வேங்கைமரம் நெருப்பு போல பூத்திருக்கும் அனுபவத்தை நான் உண்மையிலேயே அறிந்திருக்கிறேன் . வேங்கை பூக்கும் காலம் இளவேனில். காட்டில் அப்போது காட்டுத்தீ உண்மையான அபாயம். பேச்சிப்பாறைக் காட்டில் பசுமைக்கு அப்பால் நெருப்பைக்கண்டு நான் கைகாட்டி கூவினேன். என் மாடு மேய்க்கும் துணைவர்கள் அது வேங்கை என்று சொல்லி சிரித்தனர். அந்த அனுபவத்தையே கபிலரும் அடைந்திருக்கக்கூடும்.
அதை ‘எரிமருள் வேங்கை’ என சொற்குவிதலாகச் சொல்லி முடிக்க முடிந்தமையால்தான் அவர் கவிஞர். பழங்குடிப்பாடகர்களில் இருந்து கவிஞன் பிறக்கும் தருணம் அது. அவன் சொல்லை தன்னிச்சையாகக் கையாள்பவன் அல்ல. தன் அகத்தைச் சொல்லும்பொருட்டு சொல்பயில்பவன்.
அடுத்தகட்டம் அந்தக் காட்சியை வாழ்க்கையாக விரித்துக்கொள்வது. தீ என பூத்த வேங்கையில் அமர்ந்த மயில்கள் நகைகளை அணிந்த பெண்களைப் போல தோன்றுகின்றன என இன்னொரு காட்சியில் அதை இணைக்கிறார் அவர். அக்காட்சியை வாழ்க்கைச் சித்திரம் ஒன்றுக்கு அருகே கொண்டுவருகிறார். அத்தகைய நாட்டைச்சேர்ந்தவனாகிய நீ அன்று என் தோழியின் கூந்தலில் மலர்சூட்டினாயே என்ற தோழிக்கூற்று அந்த காட்சிக்கு மேலதிகப்பொருளை அளிக்கிறது.
அது தீ போல தோன்றும், ஆனால் மலர்தான். அதைப்போல அந்த ஆண் நெருப்புதான். ஆனால் மலர் நெருப்பு. அவள் அதில் ஏறி அமர்ந்த மயில். இந்தப்பொருளேற்றம் நிகழ்ந்ததுமே ஒன்று உருவாகிறது. அதை நாம் படிமம் -. பொயட்டிக் இமேஜ் என்கிறோம். ஆனைகேறாமலை என்பது வெறும் காட்சி. எரிமருள் வேங்கை என்பது அர்த்தம் ஏற்றப்பட்ட காட்சி. ஆகவே இது படிமம். படிமம் உருவானதுமே கவிதை பிறந்துவிட்டது.
செவ்விலக்கியம் என்பது ஒரு மொழி இலக்கியத்தின் அடித்தளம். மண்ணுக்கு அடியில் உள்ள விதையும் வேரும் நிறைந்த பரப்பு போல. அதிலிருந்து முளைத்தெழுகின்றன இலக்கியத்தின் அனைத்துக்கிளைகளும்.
இவ்வாறு கவிதை உருவாகி வரும் பரிணாமத்தை நாம் நம் வரலாற்றில் காணலாம். சங்ககாலச் செவ்வியல் கவிதையில் ஒவ்வொன்றாக வந்துசேர்கிறது. முக்கியமாக பெருமதங்களின் சிந்தனைகள். சமணம், பௌத்தம், இந்து மதங்களின் சிந்தனைகள் தமிழ்க்கவிதைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்கின்றன. வாழ்க்கையின் உணர்ச்சிநிலைகளையும் இயற்கை அளிக்கும் மெய்ஞானத்தையும் இணைத்து தங்கள் கவித்தரிசனத்தை முன்வைத்த சங்கக்கவிதைகளில் பெருமதங்கள் இரு அம்சத்தை சேர்க்கின்றன. ஒன்று பொதுஅறம் அல்லது பேரறம் பற்றிய தரிசனம். இரண்டு ஒட்டுமொத்த பிரபஞ்சம் பற்றிய தரிசனம். இவ்விரண்டையும் அன்றாட வாழக்கையில் இணைக்கும்போது உருவாகும் தரிசனமே ஊழ் என்பதாகும்.
சங்கக்கவிதைக்கும் சிலப்பதிகாரத்துக்கும் இடையேயான வேறுபாடு இதுதான். சங்கக்கவிதை மானுட உறவுகளை, மோதல்களை, மரணத்தை பாடும்போது அவற்றுக்கு இப்பிரபஞ்சத்தில் என்ன இடம் என்ற வினாவை காப்பியங்கள் எழுப்பிக்கொள்கின்றன. சிலம்பின் செய்தியே ‘அரைசியல் பிழைத்தோர்க்கு கூற்றாகும் அறம்’ பற்றித்தான் இல்லையா? சங்ககாலக் கவிதைகளின் இறுதிப்பகுதியில் தென்படத்தொடங்கும் இந்த பிரபஞ்ச தரிசனம் காப்பியகாலகட்டத்தில் மிக வலுவாக நிறுவப்பட்டுவிட்டது. ’நீர்வழிப்படூஉம் புணைபோல’ வாழ்க்கை என்ற தரிசனம் அது. மனிதனை பிரபஞ்சவெளிக்கும் காலப்பெருக்குக்கும் முன் நிறுத்தி மதிப்பிடும் நோக்கும்.
இந்தக் கட்டத்தில் கவிதை என்பது மேலும் விரிவாகிறது. ஒரு பிரபஞ்ச தரிசனத்தை முன்வைப்பதும் கவிதையே என்றாகிறது. உயர்ந்த, முழுமையான ஒரு கருத்தை சரியான சொற்களில் வெளிப்படுத்துவதும் கவிதையே என கவிதையின் அடையாளம் விரிவடைகிறது.
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்
என்ற வரி அவ்வாறுதான் கவிதையாகிறது. நம் நீதிநூல்களில் கவித்துவம் என்பது தரிசனத்தின் கவித்துவமே.
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு
என்ற வரியில் ஒரு அழகிய படிமம் உள்ளது. ஆனால் படிமமே இல்லாத கூற்றுகளும் கவிதைகளே என ஆனது இக்காலகட்டத்தில்தான்.
இவற்றை கவிதையாக்கும் அம்சம் எது? ஒரு படிமத்தை நம் அகம் விரிவாக்கிக்கொள்கிறது. அது ஒரு விதை. அதை நாம் முளைக்கவைத்து நமக்கான காடாக ஆக்கிக்கொள்கிறோம் . அதைப்போல இவ்வரிகளும் நம்முள் விரிவுகொள்ள முடியும். அவ்விரிவு கவிதைக்குரிய தனிமொழியில் நிகழ்கிறது. ஆகவேதான் இது கவிதை.
கற்றதனால் என்ன பயன் கடவுளைத்தொழாவிட்டால் என்றால் அது கவிதை அல்ல. அதிலுள்ள வாலறிவன் என்ற சொல்லே அதை கவிதையாக்குகிறது. அறிவுக்கு அறிவானவன், முதன்மை அறிவைக்கொண்டவன், அறிவேயானவன் வாலறிவன். அந்த அறிவை அறியாவிட்டால் பிற அறிவுகளால் என்ன பயன்? அதுவே அந்தக் கவிதையின் தரிசனம். அவ்வாறு விரிவடைவது பொதுமொழியில் நிகழவில்லை, கவிதையின் தனிமொழியில் நிகழ்கிறது. அந்தத் தனிமொழியை அறியாதவர்கள் கடவுளை கும்பிடாதவன் கற்றுபயனில்லை என்ற எளிய பொருளையே எடுப்பார்கள். அவர்களுக்கு அது நீதி, கவிதை அல்ல.
ஊருணியின் நீர் அந்த ஊருக்குள் பெய்யும் மழை. அந்த ஊரின் ஊற்று. அந்த ஊருணி நிறைவது மழையாலும் ஊற்றாலும். ஆகவே அது ஊருக்குச் சொந்தமானது. அவ்வாறுதான் செல்வனின் செல்வமும். அவனுடையது அல்ல அது. வானமும் மண்ணும் அவனுக்கு அளித்தது அது. ஆகவே அது ஊருக்கு உதவவேண்டும். அந்த ஞானமே பேரறிவு. அப்பேரறிவை உடையவனின் திருவே ஊருணி போல உலகாக்குவது. இந்த வாசிப்பை கவிதையின் தனிமொழி அடைந்தவனே செய்வான். அவனே கவிதைவாசகன். அவனுக்கே இது கவிதை.
மூன்றாவது வளர்ச்சிக்காலகட்டம் செவ்வியலின் முதிர்வுநிலை எனலாம். செவ்வியலின் உச்சம் என்பது இலக்கியம் வழியாக அது அடையும் உச்சப்புள்ளிதான். கவிதைகள் பலநூற்றாண்டுகளாக எழுதப்பட்டுவிட்டன. மெல்லமெல்ல கவிதைக்குரிய தனிமொழி வலுவாகவே நிலைபெற்றுவிட்டது. அந்தத் தனிமொழிக்கு இலக்கணங்களும் வகுக்கப்பட்டுவிட்டன. அதை கவிதை அழகியல் எனலாம். அதன் பின்னர் அந்த அழகியலை நுண்மைப்படுத்தும் ஒரு போக்கு ஆரம்பமாகிறது. கவிதையைக் கற்று அக்கல்வியைக்கொண்டு மேலும் மேலும் நுட்பமாக ஆக்கிக்கொண்டே செல்லும் போக்கு அது. அதுவே அவ்வழகியலின் சிகரத்தைச் சென்று தொடுகிறது. ஆங்கிலத்தில் இம்ப்ரவைசேஷன் என்று சொல்கிறார்கள். எந்தக்கலையும் அதன் அழகியல் முழுமையாக உருவானதும் நுண்மையாக்கத்தில் இறங்கும். ஏழு எட்டாம் நூற்றாண்டில், காப்பியகாலகட்டம் முடிந்தபின் தமிழில் கவிதையழகியல் முழுமை பெற்றுவிட்டது. அதன்பின் நிகழ்ந்தது நுண்மையாக்கம். அந்த நுண்மையாக்கத்தின் உச்சம் கம்பராமாயணம்.
கம்பராமாயணம் அனைத்தையும் செய்துபார்க்கிறது. படிமங்களின் கடல் அது. அறக்கூற்றுகளின் உச்சம் அது. நாடகீயத்தருணங்களின் களஞ்சியம். இங்கே கவிதை அடுத்த கட்டத்தை அடைகிறது. ஓர் உணர்ச்சி மொழியை நேரடியாகவே சந்தித்தால் அது மேலான கவிதை என்றாகிவிடுகிறது. கம்பராமாயணத்தில் அத்தகைய பல்லாயிரம் கவித்தருணங்கள்
இன்று இறந்தன நாளை இறந்தன
என்று திறம் தரும் தன்மை இதால் எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ குழை
சென்று இறங்கி மறம்தரும் செங்கணாய்
என்று ராவணன் சீதையிடம் கேட்கிறான். இன்று இறந்தன நாளை இறந்தன என்றவரியை நான் அர்த்தமே இல்லாமல் அரற்றிக்கொண்டிருந்த நாட்கள் உண்டு. அந்தவரியில் உள்ள உணர்ச்சிகரமான ஒலியிசைவு அதை பெரும் கவிதையாக்குகிறது. சொல்லச்சொல்ல அந்த உணர்ச்சி நாவிலும் நெஞ்சிலும் நிறைகிறது அதுவே அதன் கவித்துவம்.
அந்த உணர்ச்சிகரம் பக்தியுகக் கவிதைகளில் அடுத்தகட்டத்தை அடைந்தது. ஆண்டாளும் நம்மாழ்வாரும் மாணிக்கவாசகரும் எழுதிய பாடல்கள் அவற்றின் உணர்ச்சிகரத்தாலேயே மாபெரும் கவிதைகளாயின.
எறும்பிடை நாங்கூழ் என்ன புலனால் அரிப்புண்டு அலந்த
வெறும் தமியோனை விடுதி கண்டாய்!
என மாணிக்கவாசகர் பாடுகிறார். அழகிய படிமம் ஒன்று இதிலுள்ளது. எறும்புகள் நான்குபக்கமும் கடித்து இழுக்க துடிக்கும் மண்புழு போன்று புலன்களால் தன் ஆன்மா அரிப்புறுவதை சொல்கிறார். நினைக்க நினைக்க விரியும் படிமம். மண்புழு கண்ணற்றது. கைகளும் கால்களும் அற்றது.உள்ளுணர்வால் இயங்குவது. அதைச்சூழ்ந்து எறும்புகள் கவ்வி இழுக்கின்றன.
எறும்புகள் மண்புழுவை இழுப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொரு எறும்பும் ஒவ்வொரு திசைக்கு இழுக்கும். ஒட்டுமொத்தமாக மண்புழு ஒரு திசை நோக்கிச் செல்லும். அவை இணைந்து இழுப்பதில்லை. அதைப்போன்றே புலன்களும். அவை இணைந்து நம்மை செலுத்துவதில்லை. அவை ஒவ்வொரு திசைக்கும் நம்மை பிய்த்துச்செல்லமுயல்கின்றன.
இந்த விரிவாக்கம் ஒரு கவிதை வாசகனால் மட்டுமே செய்யக்கூடியது. அந்த விரிவாக்கம் செய்யும் திறன் அவன் தமிழில் ஈராயிரமாண்டுகாலமாக மெல்லமெல்ல உருவாகி வந்திருக்கும் கவிதை என்னும் தனிமொழியை அறிந்ததனால் நிகழ்வது. அதைத்தான் கவிதையுணர்வு என்கிறோம்.
மெல்லமெல்ல வளரும் இந்தத் தனிமொழியின் வளர்ச்சியில் கடைசிகட்டம் என சிற்றிலக்கியங்களைச் சொல்லலாம். இக்காலகட்டத்தின் தனித்தன்மை என்பது இதில் மதம் சார்ந்த மெய்ஞானமும் மதம் சார்ந்த படிமங்களும் நிலைபெற்று கவிதைக்குள் வந்து நிறைந்தன என்பதே.
பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தர்
பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறை மௌலி
பெம்மான் முக்கண் சுடர்க்கிடு நல்
விருந்தே வருக!
குமர குருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலை வாசிக்கையில் முக்கண் பெருமான் தன் மூன்றாவது விழியால் பார்த்து ரசிக்கும் அழகுவிருந்து என மீனாட்சியை சொல்கிறார் என அறிபவனே கவிதைவாசகன். முக்கண் திறந்து அவர் தேவியை எரித்தார் என்ற கதையுடன் அவ்வரி இணையவேண்டும். இங்கே கவிதைவாசகன் மதக்குறியீடுகளையும் அறிந்தவனாகிறான். கவிதையின் தனிமொழிக்குள் மதத்தின் குறியீட்டு மொழியும் இணைகிறது.
இவ்வாறு நம் மரபின் கவிதை என்னும் தனிமொழி வளர்ந்து வந்துள்ளது. இயற்கையை அறியும் பழங்குடியின் தூயபிரக்ஞையாக அது இருந்தது. மொழியின் நுட்பமும் வாழ்க்கைதரிசனமும் அதில் கலந்தபோது சங்கச்செவ்வியலாகியது. பெருமதங்களின் பிரபஞ்ச தரிசனத்துடன் முயங்கி காப்பியகாலமாகியது. அறதரிசனங்கள் அதில் கலந்தன. நாடகீய உணர்ச்சிகள் வந்து இணைந்தன, பக்தியின் உணர்ச்சிப்பெருக்கு நிகழ்ந்தது. மதக்குறியீடுகள் கலந்தன. இவையனைத்தும் கலந்து உருவான ஒரு முழுமையான தனிமொழியாக அது நவீனகாலத்தில் நம்மை வந்தடைந்தது.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு பெரும் மாற்றம் உலகசிந்தனையில் நிகழ்ந்தது. ஐரோப்பா தன் காலனியாதிக்கம் மூலம் உலகை ஒன்றாக இணைக்கத் தொடங்கியது. உலக இலக்கியங்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் பெறத்தொடங்கின. ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மன் ஸ்பானிஷ் மொழிகளில் உலகின் அனைத்து இலக்கியங்களும் வந்துசேர்ந்தன.முதல்முறையாக உலக இலக்கியம் என்ற ஒரு மன உருவகம் உருவானது. ஜெர்மானியப்பெருங்கவிஞரான கதே அச்சொல்லாட்சியை உருவாக்கினார் என்கிறார்கள்.
உலக இலக்கியம் என ஒன்று மெல்லமெல்ல திரண்டு உருவானபின் அது ஐரோப்பிய மொழிகள் வழியாக உலகமெங்கும் உள்ள இலக்கியங்களுக்குச் சென்று சேர்ந்தது. அந்த உலக இலக்கியம் பற்றிய பிரக்ஞையே நவீன இலக்கியத்தை உருவாக்கியது. சாதாரணமாக மேடைகளில் சில பேச்சாளர்கள் கத்துவதை நீங்கள் கேட்டிருக்கலாம். நவீன இலக்கியம் நவீன இலக்கியம் என்கிறீர்களே அது என்னய்யா நவீன இலக்கியம்? எல்லா இலக்கியமும் அந்தந்த காலகட்டத்துக்கு நவீன இலக்கியம்தான் என்றெல்லாம். அந்தப் பாமர வினாவுக்கான பதில் இதுதான். பதினெட்டாம் நூற்றாண்டுவரை ஒரு மொழியின் பெருங்கவிஞன் கூட அம்மொழியும் பண்பாடும் உருவாக்கும் இலக்கியப்பிரக்ஞையை மட்டுமே கொண்டிருந்தான். அவன் மரபான கவிஞன். ஒரு கவிஞனுக்கு உலக இலக்கியம் என்ற அந்த ஒட்டுமொத்தம் பற்றிய ஒரு புரிதல் இருக்குமென்றால், அதன் நீட்சியாக அவன் எழுத முற்படுவான் என்றால் அவன் நவீனக்கவிஞன்.
பாரதி நமது முதல் நவீனக்கவிஞன். அவனுக்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு வழியாக உலக இலக்கியமென்றால் என்ன என்று தெரியும். அதன் நீட்சியாகவே அவன் எழுதினான். அவன் கபிலர் கம்பன் முதலான கவிஞர்களின் வழித்தோன்றல். ஷெல்லியின் வழித்தோன்றலும்கூடத்தான். இதுதான் நவீனக்கவிஞனின் இலக்கணம். எவனுக்கு உலக இலக்கியத்தின் பின்புலம் உள்ளதோ அவனே நவீனக் கவிஞன்.
பாரதி நவீனக் கவிஞன். ஆனால் அவரது சமகாலத்தில் வாழ்ந்த மாம்பழக்கவிசிங்கராயர் நவீனக் கவிஞர் அல்ல. அவர் மரபுக்கவிஞர். பாரதிதாசன் நவீனக்கவிஞர் அல்ல. வேழவேந்தனும் முடியரசனும் சுரதாவும் நவீனக்கவிஞர்கள் அல்ல. அவர்கள் மரபார்ந்த கவிஞர்கள். அவர்களுக்கு உலக இலக்கியப்போக்குகள் தெரியாது. அவர்கள் கற்ற மரபின் வழி நின்று அவர்கள் எழுதினார்கள். இன்றும்கூட அந்தப்பிரிவினை உண்டு. இங்கு இருப்பவர்களிலேயே நவீனக்கவிஞர்கள் உண்டு, பழைய கவிஞர்களும் உண்டு. உங்களுக்கு இன்றைய உலகளாவிய கவிதைப்போக்கு தெரியுமா? உலக இலக்கியத்தின் தளத்தில் நின்று எழுதுகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் நவீனக்கவிஞர்.
பாரதிக்குப்பின் நவீனக்கவிதை ந,பிச்சமூர்த்தி வழியாக தமிழில் புதுக்கவிதை என்ற பேரில் உருவாகியது. அது வசனத்தில் எழுதப்பட்டது . இசையற்ற மரபான இலக்கணம் அற்ற கவிதை. க.நா.சு அதை புதுக்கவிதை என்று அழைத்தார் அந்த மரபே இன்றும் தமிழ் நவீனக்கவிதைப் போக்காக தொடர்கிறது.
நவீனக்கவிதையின் இயல்பு என்ன? இப்படிச் சுருக்கமாகச் சொல்கிறேனே. ஒன்று அது நம் மரபு இதுகாறும் திரட்டி எடுத்துள்ள கவிதை என்ற தனிமொழியை மேலும் முன்னெடுக்கிறது. அதாவது அது நேற்று அடைந்தவற்றை திரும்பவும் நிகழ்த்தவில்லை. அதை வளர்த்து மேலே கொண்டுசெல்ல முயல்கிறது.
சங்ககாலம் முதல் தமிழ்க்கவிதை சொல்வதல்ல, குறிப்புணர்த்தலே கவிதை என்று நம்பிவந்தது. கவிதை என்பது மறைபொருள் என வகுத்தது. இறைச்சி என்றும் அணிகள் என்றும் பெயரிட்டது. அதை அறிய கொண்டுகூட்டிப்பொருள் கொள்ளுதல் போன்ற பல வழிகளை உருவாக்கியது. அவ்வாறு சொல்லப்படாத அர்த்தங்களை சொல்மூலம் உருவாக்குவதே கவிதையின் தனிமொழி.
நவீனக்கவிதை அந்தத் தனிமொழியை முன்னெடுக்கிறது. நவீனக்கவிதை புரியவில்லை என்று சொல்லும் தமிழாசிரியர்களிடம் நான் மரபுக்கவிதை மட்டும் புரிகிறதா என்று கேட்பேன். மரபுக்கவிதை அவர்களுக்குப் புரியவில்லை, அதன் பொழிப்புரையைத்தான் அவர்கள் அறிவார்கள். புறநாநூறோ திருக்குறளோ ஒருவருக்கு உரையில்லாமல் புரியும் என்றால் புதுக்கவிதையும் புரியும். ஏனென்றால் அவர் தமிழ்க்கவிதை என்ற தனிமொழிக்குள் இருக்கிறார். பொழிப்புரைதான் புரியும் என்றால் அவருக்கு நவீனக்கவிதை புரியாது.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்தொக்க கூர்த்த இடத்து
இந்தக்குறள் ஒருவனுக்குப் புரிகிறதா? பொழிப்புரை தெரிந்துவைத்திருப்பார். கொக்கு மீனுக்காக காத்திருப்பது போல சரியான தருணத்துக்காக பொறுமையுடன் காத்திருக்கவேண்டும் என்று அர்த்தம் தெரிந்து வைத்திருப்பதை நான் சொல்லவில்லை. இதில் உள்ள இரு சொற்கள் முக்கியமனாவை. கூம்பும் பருவம். கூர்த்த இடத்து. என்ன பொருள் அதற்கு? ஒரு செயலின் விளைவுகள் முனைகொள்ளும் காலகட்டத்தை கூம்பும்பருவம் என்கிறார். கதிர் கூம்பும் பருவம் காய்க்குலைகள் கூம்பும் பருவம். அது முனைகூர்ந்த கட்டத்தை கூர்த்த இடத்து என்கிறார். இந்த வார்த்தையை எவரும் சொல்லாமல் ஒருவன் அவனே அறிந்தான் என்றால் அவன் கவிதை வாசகன். அவனுக்கு புதுக்கவிதை தினத்தந்தி வாசிப்பதுபோல புரியும்.
தமிழ் நவீனக்கவிதை இவ்வாறு மரபான கவிதைமொழியை முன்னெடுக்கையில் அதற்கு உலக இலக்கியத்தின் அழகியலையும் துணைகொள்கிறது. கம்பன் நம் கவிதையைத் தீர்மானிப்பதுபோல எலியட்டும் எஸ்ராபவுண்டும் தீர்மானிக்கிறார்கள். இதுவே வேறுபாடு.
நவீனக்கவிதையின் பல முகங்களை நாம் விரிவாகவே பேசலாம். எஸ்ராபவுண்டை முன்னுதாரணமாகக் கொண்டு க.நா.சு இங்கே படிமவியலை முதன்மையான கவிதையழகியலாக முன்வைத்தார். முடிந்தவரை சுருக்கமாகச் சொல்லுதல், முடிந்தவரை குறிப்பால் உணர்த்துதல், எளிய நேரடி மொழியில் எழுதுதல், உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தாமலிருத்தல் ஆகிய தன்மைகளை க.நா.சு தமிழ் நவீனக்கவிதைக்கு அளித்தார்.
இந்த இலக்கணம் ஏன் வருகிறது என்றால் உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தும் இசைத்தன்மை கொண்ட கவிதையே நமக்கு அதற்குமுன் இருந்தது என்பதுதான். நவீனக்கவிதையின் இயல்பு என்பது முந்தைய பக்திக்கவிதைக்கு நேர் மாறானதாக இருந்தது. அது நேரடியாக நம் அறிவை, கற்பனையை, நுண்ணுணர்வை நோக்கி பேசியது. உணர்ச்சிகளை தவிர்த்தது. அதாவது கவிதையை சங்க இலக்கியப்பாடல்களின் நிதானமான உணர்ச்சிவெளிப்பாட்டுத்தன்மை நோக்கி கொண்டு சென்றது.
பிரமிள்அந்த அழகியல் உருவானதுமே அதில் எது விடுபடுகிறதோ அதைச் சேர்க்கும் கவிஞன் உருவாகிவிட்டான். தமிழ்நவீனக் கவிதையில் பிரமிளின் வரவு அத்தகையது.
வழிதொறும் நிழல்வலைக்கண்ணிகள்
திசைதடுமாற்றும் ஓராயிரம் வடுக்கள்
என்னும் பிரமிளின் வரிகளை நான் பித்துப்பிடித்தவன் போல சொல்லி அலைந்ததுண்டு. என் தந்தையும் தாயும் இறந்த நாட்கள். மனம் நிலைகொள்ளாமல் பேருந்துகளில் இருந்து பேருந்துகளில் ஏறி நான் அலைந்த நாட்கள். வழிதொறும் நிழல்வலைக்கண்ணிகள் என்னை திசைதடுமாற்றிய நாட்கள். இந்த வரி என்ன சொல்கிறது? பெரிய கருத்து ஏதும் இல்லை. ஒரு படிமம். அது மொழியில் தன்னிச்சையாக நிகழும் பேரழகு அவ்வளவுதான்.
பிரமிளின் கவிதைமரபையே தமிழ்க்கவிதையில் எனக்கு உவப்பானது என்பேன். அது சிந்தனையின் தர்க்கம் மூலம் முன்னகராமல் உணர்ச்சிகரத்தை, தியானநிலையை நம்புவது. அதன் முக்கியமான வளர்ச்சிப்புள்ளியான தேவதேவனின்
ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.
என்றவரி எனக்கு கவிதை மட்டும் அல்ல. வாழ்க்கையின் சாரமே கவிதையாகக் கனிந்துவரும் ஒரு தருணமும் கூட. காடு தேனாகும் ஒரு பரிணாமம், மேலிருந்து அந்த வீட்டைப் பார்க்கும் சின்னஞ்சிறிய பறவை அறியும் மானுடவாழ்க்கை. ஒளி நிழல் சருகு. அவ்வளவுதான். உள்ளே அது சிரிப்பு அழுகை மரணமாக நமக்கு பொருள்படுகிறது.
ஆனால் சுகுமாரனின்
எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல
போன்ற ஒரு கவிதையின் எளிமையான ரத்தினச்சுருக்கமும் எனக்கு ஏற்புடையதேயாகும். ஈராயிரம் வருடத்தமிழ்க்கவிதை மரபு என்னென்னவோ அரிய பொருட்களை அன்புக்கு உவமையாக்கும்போது மிகமிக எளிமையான ஒன்றை, எளிமையின் மகத்துவத்தை சுட்டும் அழகிய படிமம் அது. நடுஆற்றில்தான் அன்பு தூயது. ஓரங்களில் அது கசடு கலக்கும். அது ஓடிக்கொண்டிருக்கையில் மட்டுமே தூயது – என நான் அதை விரிவாக்கம் செய்தபடியே செல்வேன்.
நவீனக்கவிதையை இருபதாண்டுகாலமாக தொடர்ந்து வாசிக்கும் எனக்கு அது தமிழின் ஈராயிரம் வருடமரபில் மிகமிகப் பொருத்தமாக இணைந்திருப்பதகவே தோன்றுகிறது. கபிலருக்கும் தேவதேவனுக்கும் நடுவே பெரிய அழகியல் வேறுபாடு ஏதும் இல்லை என்று தோன்றுகிறது. அவ்வையார் சாப்பிட்ட வழுதுணங்காய் வாட்டும் நான் என் வீட்டில் சாப்பிடும் கத்தரிக்காய் பொரியலும் ஒன்றே. எண்ணையும் கடுகும் கொஞ்சம் சேர்ந்திருக்கலாம். அவ்வளவுதான்.
சு வில்வரத்தினம்இத்தனை படிமங்களும் உருவகங்களும் அணிகளும் உருவானபின்னரும்கூட நவீனக்கவிதை மிகநேரடியாக சொல்லும் சொல்லின் வல்லமையை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்பதையே நான் அதன் தனி
க.நவரத்தினம்
தமிழ்ப்பண்பாட்டை பழந்தமிழ்நூல்களையும், மரபுக்கலைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வுசெய்த முன்னோடிகளில் ஒருவராக க.நவரத்தினம் மதிப்பிடப்படுகிறார். தென்னிந்தியக் கலைகளின் தோற்றம், வகைபாடுகள் பற்றிய அவருடைய ஆய்வுகள் பின்னர் வந்த ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக அமைந்தன. சைவசித்தாந்தத்தை நவீனப்பார்வையுடன் மீட்டுருவாக்கம் செய்ததிலும் பங்களிப்பாற்றினார்.
க.நவரத்தினம் – தமிழ் விக்கி
நாவல் பயிற்சி நிகழ்வு, கடிதம்
அன்புள்ள ஜெ.,
நான் அக்டோபர் மாதம் வால்நட் க்ரீக், கலிபோர்னியாவில் நாவல் எழுதும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். சிறுகதை கூட எழுத நான் இதுவரை முயற்சித்ததில்லை. எனவே இந்தப் பயிற்சியில் சேர மிகவும் தயங்கினேன். மேலும் இதுபோன்ற பயிற்சிகளில், நம்மை ஏதாவது எழுதச்சொல்லி, அதை அனைவரின் முன் வைத்துக் கருத்துக் கேட்பார்களோ என்ற பயமும் இருந்தது. இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த விசு அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியளித்ததாலும், இவ்வகுப்பு, எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல, தீவிர வாசகனாவதற்கும் உதவும் என்றதாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வகுப்பில் சேர்ந்தேன்.
எனது தயக்கங்களுக்கும் கேள்விகளுக்குமான பதில்களை ஜெ. முதல் சில நிமிடங்களிலேயே தந்தார். நம்மிடமுள்ள தகவல்களை இணைத்து நினைவில் வைத்துக்கொள்ள அவற்றை ஒரு நாவலாக எழுதினால் மட்டுமே முடியும். தகவல்களை அப்படியே கட்டுரையாக எழுதினால் நுணுக்கமான தகவல்கள் மறைந்து போகும். இதுவே தகவல்களைக் கட்டுரையாக எழுதுவதற்கும் நாவலாக எழுதுவதற்கும் உள்ள பெரும் வேறுபாடு. நாம் நம்முடைய அன்றாட நிகழ்வுகளையே இவ்வாறு புனைவாக நாவல் வடிவில் எழுதிவைத்தால் அவை நன்றாக நினைவில் நிற்கும். இக்கருத்து என்னைப் பெரிதும் கவர்ந்தது. இவ்வகுப்பு ஒரு நாள் மட்டுமே நடப்பதால் எங்களை எதுவும் எழுதச்சொல்லப் போவதில்லை என்று ஜெ சொன்னதும் நிம்மதி அடைந்தேன். ஆனாலும் ஒரு நாவலின் கருவுக்கும் பேசுபொருளுக்கும் உண்டான வேறுபாட்டை விளக்கிவிட்டு ஏதாவது ஒரு கருவைப் பற்றி பத்து வரிகளில் எழுதச்சொன்னார். அதற்கு நான் என்னுடைய அன்றாட அலுவலக வேலையையே புனைவாகக் கருதி எழுதினேன்.
வகுப்பின் ஆரம்பத்தில் ஜெ சில விதிமுறைகளை விதித்தார். ஒன்று அவர் பேசும்போது அவரை மட்டுமே கவனிக்க வேண்டும், குறிப்பு எழுதக்கூடாது. குறிப்பு எழுதத் தனியே சில நிமிடங்கள் ஒதுக்கினார். இரண்டாவது, கேள்விகள் கேட்காமல் சொல்வதைக் கவனித்தல். முதலில் இது வித்தியாசமானதாகப்பட்டது. ஆனால் இதனால் மற்றவர்களுடைய தெளிவற்ற சிந்தனைகள் என்னைக் குழப்பாமலிருந்தன.
நாவலில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் விரிவாகப் பேசினார். ஆரம்பத்தில் இலக்கியத் தரம் வாய்ந்த நாவல்களிலிருந்தும் சிறுகதைகளிலிருந்தும் மேற்கோள் கொடுத்த ஜெ., பங்கு பெற்றவர்களின் முகக்குறிப்பறிந்து சினிமாக்களிலிருந்து குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தார்.
ஒரு மகத்தான எழுத்தாளரிடமிருந்து இவற்றைக் கற்கக் கிடைத்தது பெரும் வாய்ப்பென்றே நான் கருதுகிறேன். இந்த வகுப்பு தந்த ஊக்கத்தில் உடனடியாகச் செய்ய வேண்டியது என மூன்றை நினைத்திருக்கிறேன: தினமும் கொஞ்சம் எழுதுவது, வகுப்பில் எழுதிக்கொண்ட குறிப்புகளை விரிவாக எடுத்து எழுதுவது, மற்றும் நாங்கள் குழுவாகப் படித்த War and Peace நாவலை இப்பொழுது கற்றுக்கொண்ட கருத்துக்களுடனும், முறைகளுடனும் பொருத்திப் பார்த்து, குழுவில் விவாதிதிப்பது.
நன்றியுடன்
ரவி
பின்குறிப்பு: சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக மாதம் தோறும் தமிழில் உள்ள சிறந்த சிறுகதைகளைப் பற்றி விவாதிக்கிறோம். விவரங்களுக்கு vishnupurambayarea@gmail.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
We are spiritually bankrupt people!
இன்றைக்கு நாம் பார்க்கும் கல்லூரி மாணவர்களில் கணிசமானவர்கள் உளச்சோர்வு கொண்டவர்கள். அதற்காக மருந்து சாப்பிடுபவர்கள். அந்த மருந்துக்கும் அடிமையானவர்கள். காரணம் படிப்பு ஓடவில்லை, ஆகவே எதிர்காலம் இருண்டுவிட்டது என்பதுதான். ஏன் படிப்பு ஓடவில்லை என்றால் இண்டர்நெட் அடிக்ஷன்.
இணையமும் இயற்கையும்
The truth is that we are not spiritual;We are spiritually bankrupt people! We are very earthly people, and we imagine that prayer for earthly things is a spiritual matter.
We are spiritually bankrupt people!October 23, 2025
தெலுங்கில் என் ஐந்தாவது நூல்
தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்படும் என்னுடைய ஐந்தாவது நூல். நெம்மிநீலம் (அறம் கதைகள்) அதோலோகா (ஏழாம் உலகம்) மாயாமோகம் (மாயப்பொன்) , தெள்ளெ எனிகு (வெள்ளை யானை) ஆகிய நூல்களுக்குப் பிறகு மாடன் மோட்சம் மற்றும் கதைகள். மாடன் மோட்சம் உட்பட பல்வேறு கதைகள் கொண்ட தொகுப்பு இது.
மொழியாக்கம் பாஸ்கர் அவினேனி.
வெளியீட்டு நிகழ்வு. சாயா இலக்கிய விழா 2025
இடம் Dr B.R. Ambedkar Open University, Jubilee Hills
CHAAYA LITERATURE FESTIVAL – 2025
Hyderabad Book Trust
பேசுபவர்கள்: பாஸ்கர் அவினேனி
ஆதித்ய அண்ணா வஜ்ஜாலா (தெலுங்கு கூட்டமைப்பு நிறுவனர்)
மதுராவும் இலக்கியமும்.
அன்புள்ள ஜெ,
இந்தக் கடிதம் மதுராவுக்காக. உங்களின் அமெரிக்காவின் வேரும் நீரும் பதிவு வந்ததிலிருந்து அவள் மகிழ்ச்சி பன்மடங்காகி இருக்கிறது. அவள் பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதிய ஒற்றை வரியை, ஊரிலிருக்கும் தாத்தா பாட்டியிலிருந்து இங்கு அவள் வகுப்பு ஆசிரியை வரை அனைவரிடமும் சொல்லி பீற்றிக் கொண்டிருக்கிறாள். கட்டுரையின் அந்த ஒரு பத்தியை மட்டும் தமிழில் தட்டுத் தடுமாறி அவளே வாசித்தும் விடுகிறாள்.
நீங்களும் அருண்மொழி அக்காவும் சான் பிரான்சிஸ்கோவுக்கு வந்த அந்த ஒரு வாரமும் அவளுக்கு பள்ளியில் இலையுதிர்கால விடுமுறை. வழக்கமாக எங்காவது வெளியூர் பயணத்துக்குச் செல்வோம். ஆனால் இம்முறை அடுத்தடுத்து நம் குழு நிகழ்வுகள் இருந்ததாலும், மாத இறுதியில் பூன் முகாமுக்காக விடுப்பு எடுக்க வேண்டியிருப்பதாலும் எங்கும் அழைத்துச் செல்ல முடியவில்லை. அதனால் கொஞ்சம் அழுகையும் என்மேல் வருத்தமுமாக இருந்தாள். உங்களை வரவேற்க நான் விமானநிலையத்திற்குச் செல்வதாகச் சொன்னவுடன் கூடவே ஒட்டிக்கொண்டு வந்து விட்டாள். உங்களை மீண்டும் நேரில் சந்தித்ததிலும், அருண்மொழி அக்கா போனவருடம் அவளை சந்தித்ததை நினைவில் வைத்துச் சொன்னதிலும் மிகவும் பெருமை அவளுக்கு.
அதைவிட பெரிய மகிழ்ச்சி நீங்கள் Stories of the True நூலின் FSG பதிப்பை அப்போதுதான் நேரில் பார்க்கிறேன் என்று சொல்லி, அவள் பெயரை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தது தான். அதுதான் அவள் வாங்கும் முதல் ஆசிரியர் கையழுத்து. அன்று வீட்டிற்குத் திரும்புகையில் மதுராவிடம், ஒருவேளை Stories of the True நூலில் அமெரிக்காவிலேயே நீதான் முதலில் கையெழுத்துப் பெற்றிருக்கிறாய் என்று விளையாட்டாகச் சொல்லி விட்டேன். இந்த ஊரில் வரும் ஸ்ட்ராபெர்ரி நிலவைப் போல அவள் முகம் வெட்கத்தில் சிவந்து, மகிழ்ச்சியில் பிரகாசமாகிவிட்டது.
“பள்ளி திறந்தபின் என் நண்பர்கள் எல்லோரும் அவர்கள் போய்வந்த இடங்களைப் பற்றி பெருமையாக வகுப்பில் சொல்வார்கள், நான் என்ன சொல்வது” என்று அன்றுவரை என்னிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தாள். உங்களை நேரில் பார்த்து நூலில் கையெழுத்துப் பெற்றது அவள் மனநிலையையே மாற்றி விட்டது. விடுமுறைக்குப் பின் பள்ளி திறந்த முதல் நாள் அவள் வகுப்பாசிரியையும் நண்பர்களும் தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, இவள் இந்தியாவின் சிறந்த எழுத்தாளரை நேரில் சென்று வரவேற்றதையும் அவரிடம் கையெழுத்துப் பெற்றதையும் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறாள். உங்கள் மூலமாக அவள் அந்தஸ்து வகுப்பில் ஏற்கனவே உயர்ந்திருந்த நிலையில், உங்களின் இந்தப் பதிவிற்குப் பிறகு இன்னும் ஒரு படி மேலே சென்று காற்றில் மிதந்து கொண்டிருக்கிறாள்.
நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல, இது மதுராவிற்கும் நிச்சயம் ஒரு அழகிய தொடக்கமாக இருக்கும். உங்கள் ஆசிக்கும் அன்பிற்கும் நன்றி ஜெ.
சாரதி
அன்புள்ள சாரதி,
மதுராவுக்கு என் வாழ்த்துக்கள்.
அமெரிக்காவில் நான் கவனித்த ஒரு முக்கியமான விஷயம் இளவயதினரிடையே இலக்கியம் மற்றும் இலக்கியவாதி பற்றி இருக்கும் பெருமதிப்பு. அதை இங்குள்ள பள்ளிகள் உருவாக்குகின்றன. ஆரம்பப்பள்ளி மாணவர்கள் கூட ‘author’ ஆகவேண்டும் என்று சொல்வதைக் காண்கிறேன். இங்குள்ள பள்ளிக்கல்வியும் ஆசிரியர்களும் அந்த மதிப்பை உருவாக்குகிறார்கள்.
மதுரா சொன்னதுபோல இந்தியாவிலுள்ள பள்ளிக்குச் சென்று ஒரு குழந்தை ஒரு நூலாசிரியரைச் சந்தித்தேன் என்று சொன்னால் என்ன ஆகும்? முதலில் நூல் என்றால் என்ன, அதை எழுதுபவர் என்றால் யார் என்று அந்த ஆசிரியருக்கு அக்குழந்தை விளக்கவேண்டியிருக்கும். விளக்கினால் உடனடியாக ‘பள்ளிப்பாடம் படிக்காமல் என்ன வேறு புத்தகம் படிப்பது?’ என அடிவிழும்.
சிறுவயதில் பள்ளிக்கு நூல்களை எடுத்துச்சென்று அஜிதன் நிறைய அடி வாங்கியிருக்கிறான். உச்சகட்டமாக ஓர் ஆசிரியர் என்னிடமே பள்ளிப்புத்தகம் அல்லாத எல்லா புத்தகமும் பாலியல் சார்ந்ததுதான், பையன் கெட்டுவிடுவான் என அறிவுரை சொன்ன நிகழ்வும் உண்டு.
அமெரிக்கப் பள்ளிகள் வாசிப்பு பற்றி உருவாக்கும் மதிப்பு மிக முக்கியமான ஒன்று. மிகமிகத் தொடக்கநிலையிலேயே அவர்கள் சுயமாக நூல்களை வாசிக்கவும், மதிப்பிட்டுப் பேசவும் பயிற்சி அளிக்கிறார்கள். நான் கலந்துகொண்ட எல்லா நிகழ்வுகளிலும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளையோர் என் நூல் பற்றிப் பேசினார்கள். எல்லா பேச்சுகளுமே கச்சிதமானவை, செறிவானவை. அவற்றை பின்னர் வலையேற்றம் செய்யலாமென்னும் எண்ணம் உள்ளது.
அத்தகைய பார்வை இலக்கியம், வாசிப்பு, அறிவியக்கம் பற்றி இந்தியாவில் மாணவர்களிடையே அறவே இல்லை. மிக உயர்தரப் பள்ளிகளில்கூட இல்லை. நம் கல்விமுறை அதற்கு எதிரானது என்பதே காரணம். அந்தவகையான ஆர்வத்தை உருவாக்க கல்விநிலையங்கள் சார்ந்து நாங்கள் என் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் கல்விச்சேவைகள் வழியாக ஓர் இணையான கல்விப்பயிற்சியை முறையை முன்னெடுக்கிறோம். அவை எல்லாமே மிகப்பெரிய வெற்றியை காட்டுகின்றன. ஓரிரு ஆண்டுகளிலேயே அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மிகச்சிறந்த வாசகர்களாக மட்டுமல்ல எழுத்தாளர்களாகவும் ஆகியுள்ளனர். அவர்களின் நூல்களும் வெளிவரவுள்ளன.
ஆச்சரியமாக ஒன்று உண்டு. அமெரிக்காவிலுள்ள இந்தியப் பெற்றோரிலேயே கணிசமானவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இருக்கும் இந்த வாசிப்பார்வத்தை, இலக்கியம் மீதும் அறிவியக்கம் மீதும் அவர்களிடம் இங்குள்ள கல்விமுறை உருவாக்கியிருக்கும் பெருமதிப்பை புரிந்துகொள்வதில்லை. காரணம் அவர்கள் இந்தியக் கல்விமுறையில் உருவாகி வந்தவர்கள். வாசிப்புப் பழக்கம் அறவே இருப்பதில்லை. அறிவியக்கத் தொடர்பே இருப்பதில்லை. பிழைப்புக்கல்வி பெற்று பிழைப்பையே வாழ்வெனக் கொண்ட எளியவர்கள் அவர்கள்.
அவர்களின் அணுகுமுறை இரண்டு வகையானது. ஒருசாரார், அவர்கள் அமெரிக்காவில் தங்கள் குழந்தைகள் நிறைய வாசிப்பதைக் கண்டு அஞ்சி அதை தடுக்கவும், அவர்களை பள்ளிப்பாடம் மட்டுமே முக்கியம் என்று நம்பவைக்கவும் முயல்பவர்கள். இன்னொரு சாரார், தங்கள் குழந்தைகள் நிறையப்படிப்பார்கள் என்று சொல்வார்கள், ஆனால் என்ன படிக்கிறார்கள் என்று தெரியாமலிருப்பார்கள். இரண்டுமே பிழையானவை. வாசித்து வளரும் குழந்தைகளிடம் அதன் பெற்றோர் தொடர்ச்சியாக உரையாடவேண்டும். அதற்கு அவர்களும் வாசிக்கவேண்டும்.
குழந்தைகள் தங்கள் வாசிப்பை பெற்றோரிடம் பேச, விவாதிக்க விரும்புவார்கள். ஏனென்றால் அது பற்றி அவர்கள் ஒரு கிளர்ச்சியுடன் இருப்பார்கள். அவர்களை பேசவிடுவது, அவர்கள் பேசுவதை புரிந்துகொள்வதுபோலவே அவர்களிடம் பெற்றோர் தாங்கள் வாசித்த நூல்களைப் பற்றிச் சொல்வதும் முக்கியமானது. எத்தனை தீவிரமான நூல் என்றாலும் அதைப் பற்றிக் குழந்தையிடம் பேசலாம். தீவிரமாகவே பேசலாம். அதில் ஒரு பகுதியே குழந்தைக்கு புரியும், ஆனால் எஞ்சிய பகுதி பற்றிய ஆர்வத்தை குழந்தை அடையும்.
அந்த விவாதம் ஓர் அறிவார்ந்த சூழலை குடும்பத்தில் உருவாக்கும். குழந்தைகளின் அகவுலகுடன் பெற்றோருக்கு ஒரு தொடர்பை உருவாக்கும். அதை இங்குள்ள கல்விமுறை வலியுறுத்துகிறது. நம்மவர் பெரும்பாலும் ஏதும் வாசிப்பதில்லை என்பது நம் குழந்தைகளையும் இங்குள்ள கல்விமுறையில் பின்தங்கியவர்களாக ஆக்கிவிடக்கூடும்.
மதுராவின் உற்சாகம் அத்தனை நிறைவை உருவாக்கியது. என் அமெரிக்கப் பயணத்தின் இப்போதைய மனநிலையின் தொடக்கப்புள்ளி அவள். அதன்பின் இன்றுவரை என் நிகழ்வுகளுக்கு என் நூலை வாசித்துவிட்டு வரும் ஒவ்வொரு அமெரிக்கக் குழந்தையும் அளிக்கும் நம்பிக்கையும் நிறைவுமே இப்பயணத்தின் பரிசுகள்.
மதுராவுக்கு என் அன்பு முத்தங்கள்.
ஜெ
அமெரிக்கா, நூலறிமுகங்கள், ஒரு கடிதம் அமெரிக்காவின் வேரும் நீரும் ஒரு பெரும் தொடக்கத்தின் முகப்பில்…கவிஞர் மீனவன்
கவிஞர் மீனவன் நினைவாக ‘கவிஞர் மீனவன் கல்வி அறக்கட்டளை’ என்ற அமைப்பு மீனவனின் குடும்பத்தாரால் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பு, மாணவர்களிடையே கவிதைப் போட்டிகள் நடத்திப் பரிசளித்து கவிதை வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் ஊக்கமளித்து வருகிறது.
கவிஞர் மீனவன் – தமிழ் விக்கி
ரமேஷ் பிரேதன் விருது- பாவண்ணன்
அழகியமணவாளன்
அன்புள்ள நண்பருக்கு
வணக்கம். விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருதுக்குரியவர்களாக ஐந்து இளம்படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மகிழ்ச்சியடைந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயராக அறிவிக்கத் தொடங்கியதும் நாளை வரும் பெயர் யாருடையதாக இருக்கும் என எதிர்பார்ப்புடன் அடுத்த அறிவிப்புக்காகக் காத்திருந்து பார்த்தேன்.
இளம்படைப்பாளிகள் மீது கவனம் குவியச் செய்யும் செயல்கள் அனைத்துமே நம் தமிழ்ச்சூழலில் முக்கியமானவை. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவந்த இலக்கியச்சிந்தனை அமைப்பின் செயல்பாடுகளை நாம் அனைவருமே அறிந்திருப்போம். அந்த அமைப்பின் ஐம்பதாண்டு கால இலக்கியச்செயல்பாடுகள் தமிழிலக்கியச்சூழலில் மிகமுக்கியமானவை. ப.லட்சுமணனும் ஆர். அனந்தகிருஷ்ண பாரதியும் அதன் பின்னணியில் இருந்தவர்கள்.
சஜு1970 முதல் மாதாந்திர இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளைப் பரிசீலனை செய்து சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகளை வேறொரு நடுவர் வழியாக அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து விருது கொடுத்து கெளரவித்து வந்தார்கள். அவ்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களை இப்போது பட்டியலிட்டுப் பார்த்தால், அவர்களில் பெரும்பாலானோர் அந்தந்த காலகட்டத்தில் எழுதத் தொடங்கிய இளம் எழுத்தாளர்கள் அல்லது எழுதி சற்றே கவனத்துக்கு வந்த எழுத்தாளர்கள் அனைவரும் இருப்பதைப் பார்க்கலாம். பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன், மேலாண்மை பொன்னுசாமி, சோ.தருமன் என இன்று ஆளுமைகளாக விளங்கும் பலரும் அந்தப் படைப்பாளிகள் பட்டியலில் இருக்கிறார்கள். அவர்கள் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் அவ்விருதுகள் கிடைத்திருக்கின்றன. இலக்கியச்சிந்தனை மட்டுமே அக்காலத்தில் அச்செயலைச் செய்துவந்தது. இலக்கியச்சிந்தனையைத் தொடர்ந்து இலக்கியவீதி ஒருசில ஆண்டுகள் அதே பணியைத் தொடர்ந்து செய்துவந்தது.
செல்வக்குமார்இரண்டாயிரத்துக்குப் பிறகு, பல நகரங்களில் பல இலக்கிய அமைப்புகள் தோன்றி போட்டிகள் நடத்தி இளம்படைப்பாளிகளை அடையாளம் கண்டு முன்னிறுத்தத் தொடங்கின. இச்சூழலில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக விஷ்ணுபுரம் அமைப்பு தொடர்ச்சியாக அளித்துவரும் விருதுகள், அவ்விருதை ஒட்டி குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகள் மீது குவியும் கூடுதலான கவனத்தாலும் பல்வேறு வாசிப்புகளாலும் உரையாடல்களாலும் பிற விருதுகளைவிட முக்கியத்துவம் கொண்டதாக நிலைகொண்டுவிட்டன.
அசோக் ராம்ராஜ்எதிர்பாராத விதமாக இந்த ஆண்டுக்குரிய விருதாளராக அறிவிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் மறைவின் காரணமாக அவருடைய பெயராலேயே ஐந்து இளம்படைப்பாளிகள் கண்டடையப்பட்டு விருதுக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதை நல்லதொரு தொடக்கமாகவே நான் உணர்கிறேன். நற்செயல்கள் எல்லாவற்றுக்கும் ஒரு நிமித்தமும் காரணமும் தாமாகவே அமைந்துவிடுகின்றன.
விருதுக்குரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தேவிலிங்கம், சஜூ, செல்வகுமார் பேச்சிமுத்து, அசோக் சாம்ராஜ், அழகிய மணவாளன் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுகதை, கவிதை, நாவல், ஆய்வு, மொழிபெயர்ப்பு என அனைத்துத் தளங்கள் சார்ந்தும் அவர்கள் கண்டடையப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்விருதுகளும் வாசகவனமும், இந்த இளம்படைப்பாளிகள் இன்னும் செயலூக்கம் கொள்ள உதவும் என்று நம்புகிறேன். விருது பெறும் இளம்படைப்பாளிகள் ஐவருக்கும் மீண்டும் என் வாழ்த்துகள். அவர்களைக் கண்டடைந்த விஷ்ணுபுரம் அமைப்பினருக்கும் என் வாழ்த்துகள்.
அன்புடன்
பாவண்ணன்
தேவி லிங்கம்
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 5 – அழகிய மணவாளன்
அலைதல், கண்டடைதல்- கடிதம்
மனித வாழ்வில் கிடைக்கபெறும் பெரும்பான்மையான அனுபவமும் பயணத்தின் பூர்வமாக வருபவை தான்.
இடப் பெயர்தல் என்பது நம் அகமும் சேர்ந்து வேறு ஓருலுலகை உருவாக்கி விடுவது தான். அதில் எண்ணற்ற மனித உணர்வுகள் நம்மிள் தொடுகின்றன. ஒரு இதயத்தின் பூர்வமாக நாம் மனிதர்களை உணரும் போது அங்கு நாம் பார்ப்பது வெறும் மனித உடல்களை மட்டுமல்ல.
வலிகள் நிறைந்த சிலரையும், துயரத்தின் விளிம்பில் சிலரையும், மகிழ்ச்சியின் உச்சத்தில் சிலரையும் நாம் பார்க்கின்றோம்.
இது போன்ற தருணத்தில் மனித உணர்வை மேலும் அந்தரங்கமான ஒரு உணர்வாக உணர வேண்டுமெனில் அது பயணத்தின் போது ஏற்ப்படுவையே. உண்மையில் நாம் பார்க்காத ஒரு உலகை நமக்கு பயணத்தால் மட்டுமே எளிதாக கற்பிக்க முடியும். நான் பயணிக்கும் சின்ன சின்ன பயணத்திலேயே ஏராளமான மனித உணர்வுகள் மொத்தமாக ஒன்று சேர்ந்து மோதிக் கொள்வதைக் நானே உணர்ந்துள்ளேன். நான் இந்த இலக்கு என்று இலக்கை நிர்ணயம் செய்யும் ஒரு பயணியாக தான் நான் இதுவரை என்னை கற்பனை செய்துக் கொண்டேன்.
ஆனால், ஜெயமோகன் எழுதிய புறப்பாடு படித்த பின் நான் உணர்ந்த உணர்வும், மேலும் நான் போகும் என் பயணமும் என் கண் முன் விரிந்து சென்றது. உண்மையில் இதனை நான் நாவல் என்றே எண்ணிக் கொண்டேன். பொதுவாக ஒரு நாவல் மட்டுமே எண்ண ஓட்டத்தின் வழியாக நம்மை அதனுள் இழுத்துக் கொண்டு நம்மை ஒரு பெரும் பிரபஞ்சத்துக்குள் நம்மையும் நம் அகத்தையும் கொண்டு செல்லும், ஆனால் ஒரு கட்டுரை என எடுத்துக் கொண்டால் எவ்வளவு உன்னத படைப்பானாலும் சில இடத்தில் சலிப்பான ஒரு உணர்வை நமக்கு இடும்.
அது பொதுவாக கட்டுரையில் என்னளவில் நான் உணர்ந்துள்ளேன்.புறப்பாட்டில் என் அனுபவத்தின் ஊடாக ஒரு தரிசன உணர்வை நான் பெற்றேன்.
பொதுவாக நான் ஜெயமோகனை என் ஆதர்ச எழுத்தாளராக எண்ணுபவன். அவர் படைப்பில் ஏதோ ஒரு விதமான அக உணர்வை எனக்கு அவர் ஏற்ப்படுத்தியது உண்டு. அவரின் எந்த ஒரு படைப்பும் இதில் ஏதுமல்ல என்று சொல்வதற்கில்லாத ஒரு எழுத்தை தான் ஜெயமோகன் தன் வாழ்நாளெல்லாம் எழுதி குமித்தியிருக்கிறார்.
அவருடைய எந்த ஒரு படைப்பை படித்தாலும் ஒரு படி மேலே உயரும் ஆற்றலை தன் எழுத்தில் காண்பித்துள்ளர். ஒரு விஷ்ணுபுரம் படித்து நாம் பார்க்கும் ஒரு ஜெ, அறம் படித்த பின் ஒரு படி மேலே உள்ளார்.
காட்டை படித்து பின் அவரை இன்னும் இன்னும் படைப்பின் ஊடாக தரிசிகவே எண்ணுனேன் அந்த உயரத்தில் இருந்ததாலும், ஏழாம் உலகை படித்த பின் ஒரு படி மேலே உயருவார்.
இப்படியான ஜெயமோகன் புறப்பாட்டில் உயர்வானார் என்றால் அதில் ஒன்றும் வியப்பு இல்லை தான். ஆனால் ஒரு பயண கட்டுரையை கூட மனித ஆத்மாவுடன் தொட்டு எழுதுவார் என்றால் அதில் நாம் காணும் ஜெயமோகன் என்பது என்னவென்று வார்த்தையால் சொல்ல இயலாத ஒருவர் தான். உண்மையில் அது வாசிப்பு தரும் பரவசம்.
மற்ற அனைத்து கிளாஸிக்கல் படைப்பை தாண்டி ஒரு புறப்பாட்டின் வழியே நம்மை உணர செய்தியிருக்கிறார் என்றால் அது தான் ஜெயமோகனின் எழுத்து.
புறப்பாட்டில் வரும் எண்ணற்ற பயணத்தின் வழியே ஜெயமோகனோடு நாமும் பயனிப்போம். அவர் பார்த்த வெவ்வேறு வகையான மனிதர்களை நாமும் பார்ப்போம். அவர் வாங்கிய அடியை நமக்கும் உணர செய்வார். இது தானே ஒரு படைப்பாளானின் பணி. அதனை தான் தரிசன பூர்வமாக நமக்கு கடத்த வேண்டும்.
அனுபவத்தின் வழியே நாம் கானும் மனிதர்கள் வெவ்வேறு வகையினர். இரவில் திரியும் மனிதர்களுடன் பயணிப்பது அது வேறு மாதிரியன ஒரு அந்தரங்கமாக நம்மை உணர செய்யும்.
விடுதி மாணவர் பற்றி ஜெ எழுதியிருப்பார். ஒரு விடுதியில் பயிலும் ஒரு மாணவன் என்ற முறையில் அந்த உணர்வை என்னாலும் அரிய இயலும். அவர் ஒரு புறம் வெறும் பயணத்தை பற்றி கூறும் அதே வழியில் மனித மனதை பற்றி கூறிக் கொண்டு வருவார். ஒரு கட்டத்தில் புறப்பாடு என்பது மனித உணர்வின் தொகுப்பாக ஆகிறது. அந்த தருணத்திலே அந்த படைப்பை இன்னும் அதிகமாக நமக்குள் அது உரையாட துவங்குகிறது.
பயணங்கள் தொடர்ந்து ஏதாவது நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும். அதில் மனிதர்களை நாம் வெவ்வேறு வகையான நிலையில் அறியலாம். புறப்பாடு இதனை தான் செய்கிறது. புறப்பாட்டின் வெற்றி என நான் கருதுவது நம் மனதுக்குள் ஒரு பயணத்தை ஜெயமோகன் நிகழ்த்தி காட்டுகிறார். உண்மையில் பயணங்கள் தரும் வலி, துன்பம் என எல்லா வகைகளையும் நம் முன் காட்டி பின் அதனுள் மறைந்தியிருக்கும் இன்பத்தினை நமக்கு நாமலே உணர செய்யும் படி விட்டு விடுகிறார்.
பயணங்கள் என்பது எப்போது முடிகின்றன, அது மரணத்தில் நிகழ்பவையா என்ற ஒரு கேள்விகள் எனக்கு எழுவதுண்டு. நம் வாழ்வு முடியும் வரை இந்த பயணம் என்பது முடிவுறா ஒன்றாகே அது இருக்கும். அதிலிருந்து நாம் பெறுவது ஏராளம்.
இப்புத்தகத்தை முடித்து விட்டு வெளியேறிய போது ஒரு பறவை பறப்பதை கண்டேன். அந்த பறவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துக் கொண்டியிருந்து. அது உயர உயர அந்த ஆகாயமே அந்த பறவையின் வடிவில் உருமாறி, அந்த பறவையை ஓர் பேரரழகாக உணர்ந்தேன். சற்று நேரத்தில் அப்பறவையாக நான் இருந்தால் என ஒரு எண்ணம் வந்தவுடன் இரு கைகளை நீட்டி பறப்பது போல் ஒரு பிரக்ஞையை உணர்ந்தேன்.
நான் இவ்வுலகை பறந்து பார்க்க ஒரு கணம் ஆசைப்பட்டேன். அந்த நேரத்தில் இன்னொன்று தோன்றியது. இந்த புறப்பாடு தான் என்னை பறவை ஆக்கியதோ ……
அப்துல் வஹாப் .
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

