Jeyamohan's Blog, page 4
October 18, 2025
நம் கதாபாத்திரங்களை மாற்றுவோம்
நாம் யார்? நாம் நமக்கே உருவாக்கிக்கொண்ட கதாபாத்திரம் ஒன்று உண்டு. அதையே நாம் என நம்பி முன்வைக்கிறோம். உண்மையில் அந்த கதாபாத்திரத்தையே திரும்பத் திரும்ப நடிக்கிறோம். குடும்பத்தலைவர், அலுவலக ஊழியர் என பல கதாபாத்திரங்கள். ஏன் நாம் அவற்றை மாற்றிக்கொள்ளக்கூடாது?
அமெரிக்காவின் வேரும் நீரும்
சென்ற அக்டோபர் 8 அன்று காலை சான் ஃப்ரான்ஸிஸ்கோ வந்து இறங்கினேன். இலையுதிர்காலத்தில் அமெரிக்கா வருவது சென்ற சில ஆண்டுகளாகவே வழக்கமாக ஆகிவிட்டிருக்கிறது. வழக்கமான பூன் இலக்கிய- தத்துவ முகாம். அது மெல்ல உலகம் முழுக்க பரவி வருகிறது. ஐரோப்பாவில் சென்ற ஜூலையில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தத்துவ முகாம். வரும் நவம்பரில் பிரிட்டனில். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் விஷ்ணுபுரம் சார்பில் ஒரு இந்து தத்துவ வகுப்பு நடத்தும் திட்டம் விவாதத்தில் உள்ளது.
இம்முறை அமெரிக்காவில் கூடுதலாக ஒரு பயணநோக்கமும் உண்டு. என் அறம் கதைகளின் ஆங்கில மொழியககமான Stories of the True அமெரிக்காவில் வெளியாகியுள்ளது, அதை வாசகர்களிடையே கொண்டுசென்று சேர்ப்பதற்கான நூலறிமுக நிகழ்வுகள். ஒரு பெரிய பதிப்பகம் தமிழில் இருந்து ஒரு நூலை வெளியிடுவது முதல்முறை. இந்நூல் பெறும் வரவேற்பே வரவிருக்கும் நூல்களுக்கான வழித்திறப்பாக அமையும். தமிழிலிருந்து குறைந்தது 20 ஆசிரியர்களின் நூல்களை அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்கா கொண்டுவர எண்ணம் உள்ளது. அதன்பொருட்டே அடுத்த கோடையில் தமிழ் நவீன இலக்கிய மாநாட்டையும் இங்கே கூட்டவிருக்கிறோம்.
சாரதா -பிரசாத் இல்லத்து சந்திப்புவிமான நிலையத்திற்கே நண்பர் சாரதியும் அவர் மகள் மதுராவும் Stories of the True நூலின் ஒரு பிரதியுடன் வந்திருந்தனர். அந்நூலில் கையெழுத்திட்டு மதுராவுக்கு அளித்தேன். அது ஓர் அழகிய தொடக்கம். அமெரிக்கப்பதிப்பு நூலை நான் அப்போதுதான் பார்த்தேன், இந்தியாவில் எனக்கு பிரதி வந்துசேரவில்லை. மதுரா என் நூலில் சில கதைகளை படித்திருந்தாள். சாரதாவின் பதின்பருவ மகள் அஞ்சலியும் நூலை படித்திருந்தார். இம்முறை சட்டென்று நான் செல்லும் இல்லங்களிலெல்லாம் பதின்பருவத்தினர் என் வாசகர்களாக இருப்பதைக் காண்கிறேன். நான் விரும்பிய தொடக்கமே இதுதான்.
சாரதாவின் இல்லத்தில் ஒரு நண்பர் சந்திப்பு. பிரசாத் முன்னெடுப்பில் அங்கே ஒரு மாதாந்திர இலக்கியக் கூடுகையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்த்ததற்கு மேலாகவே தொடர்ச்சியாக அதில் வாசகர்களும் நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். அன்று அசோகமித்திரனின் நான்கு கதைகளைப் பற்றிய விவாதம். நான் என் கோணத்தையும் சொன்னேன். அனைவருமே விவாதத்தில் பங்குகொண்டதும், வெவ்வேறு கோணங்களில் கதைகளை ஆராய்ந்ததும், எவரும் தலைப்புவிட்டுப்பேசாமலிருந்ததும் சிறப்பாக இருந்தது. அந்த நண்பர்சந்திப்பை மேலும் எப்படி முன்னெடுக்கலாம் என ஒரு சிறு ஆலோசனை உரையை ஆற்றினேன்.
அன்று காலையில் சான் பிரான்ஸிஸ்கோவின் அருகே சான் மட்டேயோ (புனித மத்தேயூ) நகரின் புகழ்பெற்ற புத்தகக்கடையான Barnes and Noble ல் ஒரு நூலறிமுகச் சந்திப்பு. நான் அதை அத்தனை பெரிய தனிக்கட்டிடம் என நினைத்திருக்கவில்லை. ஏறத்தாழ எழுபதுபேர் வரை வந்திருந்தார்கள். முகப்பிலேயே நிகழ்வு. அஞ்சலி என் நூலில் இருந்து அவருக்கு உகந்த ஒரு பகுதியை வாசித்தார். (உலகம் யாவையும்). தூய அமெரிக்க உச்சரிப்பில் அதைக் கேட்க ஏதோ அன்னிய நூல் போலிருந்தது.
முதல் கேள்விகளை அஞ்சலி எழுப்பினார். இன்றைய உலகச்சூழலில் உலகம் யாவையும் கதை முன்வைக்கும் ஓருலகம் என்னும் கொள்கைக்கு என்ன இடம்? நான் இவ்வாறு பதில் சொன்னேன். அமெரிக்கா என்பது வணிகத்தின், தொழிலின், தேசியவாதத்தின் நிலம் மட்டுமல்ல என்றேன். அது ‘எக்ஸெண்டிரிக்கு’களின் நிலமும் கூட. எல்லைகளை மீறிச்சென்றுகொண்டே இருப்பவர்கள் அவர்கள். உண்மையில் அவர்கள்தான் அமெரிக்காவை உருவாக்கியவர்கள். அவர்களில் ஒருவர்தான் உலகம் யாவையும் கதையின் நாயகன்.
சென்ற நூற்றாண்டில் உலகை காலனியாக்கிச் சுரண்டியது ஐரோப்பா. ஆனால் அதே ஐரோப்பாதான் உலகுக்கே ஜனநாயகத்தை, மானுட உரிமையுணர்வை உருவாக்கி அளித்தது. இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளர்கள், குறிப்பாக காந்தி, அந்த இரண்டாவது ஐரோப்பாவையே ஏற்றுக்கொண்டனர். அதேபோல நான் அந்த இரண்டாவது அமெரிக்காவையே முன்வைக்கிறேன். அந்த அமெரிக்கா அழியாது. அது உலகின் ஒளியென என்றுமிருக்கும். அவ்வாறு பல கேள்விகள்.
சான் மட்டாயோஅன்று மாலையே சாக்ரமண்டோ நகரிலுள்ள சின்மயா மிஷன் கூடத்தில் இன்னொரு இலக்கிய உரை மற்றும் சந்திப்பு. நண்பர் அண்ணாத்துரை அதை ஏற்பாடு செய்திருந்தார். இளையதலைமுறையைச் சேர்ந்த மூன்றுபேர் கதைகளைப் பற்றிப் பேசினர். தமிழில் சிறப்பாகப் பாடினர். தமிழில் பேச்சைத் தொடங்கினார்கள். ஆனால் தொடர்ந்து அமெரிக்க ஆங்கிலத்தில் கதைகளைப் பற்றிப் பேசினர். சிவநேயன், சமீக்ஷா, அம்ருதா பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள்.உணர்ச்சிகரமாகவும் ஈடுபாட்டுடனும் அவர்கள் பேசியது எழுத்தாளனாக மனநிறைவூட்டும் அனுபவம். அதன்பின் நான் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். நூல்களில் கையெழுத்திடும் நிகழ்வு.
நாங்கள் நடத்தவிருக்கும் தமிழ் நவீன இலக்கிய மாநாடு அடுத்த கோடையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நிகழவுள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன என்பதை கேள்விகளுக்குப் பதிலாகச் சொன்னேன். சென்ற அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் சங்க (ஆல்டா) விருதுவிழாவுக்கு அவ்விருதுக்காக சர்வதேச அளவிலான இறுதிப்பட்டியலில் இருந்த என் மொழிபெயர்ப்பாளரான பிரியம்வதா வந்தபோது அவர்களுக்கு தமிழ் என்னும் மொழி இருப்பதே தெரியவில்லை என்பது தெரியவந்தது.
தமிழ் மாநாட்டுக்கு நன்கொடை செக், சாக்ரமண்டோகிட்டத்தட்ட ஏழுலட்சம் தமிழர்கள் அமெரிக்காவில் இருக்கிறோம். தமிழுக்கு, தமிழ்ப்பண்பாட்டுக்கென இங்கே ஓர் இடம் இல்லை. அந்த இடத்தை அரசியல் வழியாக, கொண்டாட்டங்கள் வழியாக அடைய முடியாது. நவீன இலக்கியம் மட்டுமே அதை உருவாக்கி அளிக்கும். அதுவும் தரமான நவீன இலக்கியம். நாம் வெற்றுப்பெருமை பேசினால் நம் வாரிசுகளே நம்மை பொருட்படுத்த மாட்டார்கள். நம் பலவீனங்களை, இருளை நாம் ஒளிக்கவேண்டியதில்லை. ஏனென்றால் அவற்றையெல்லாம் அமெரிக்கக் கல்விமுறையே நம் வாரிசுகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறது. அந்த இருளில் இருந்து நாம் மீண்டகதையை, நம் பண்பாட்டிலுள்ள அடிப்படையான ஒளியை நாம் முன்வைக்கவேண்டும். அத்தகைய கதைகள் உள்ள தொகுதியே Stories of the True.
அந்நூல் அமெரிக்காவில் எனக்கு உருவாக்கியளிக்கும் வெளிச்சத்தை அனைத்து நவீன இலக்கியத்தை நோக்கியும் ஈர்க்கும் முயற்சியே எங்கள் இலக்கிய மாநாடு. அதை நியூயார்க்கில் நடத்துவது இங்குள்ள பண்பாட்டின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டே. அதற்கு இங்குள்ள அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் ஒத்துழைப்பும் தேவை. அவர்கள் நடத்துவதுபோன்ற பெருவாரியான மக்கள் பங்கேற்குள்ள விழாக்கள் வேறொருவகையில் தேவைதான். அவை தமிழ்ச்சமூகத்தை ஒருங்கிணைக்கின்றன. ஆனால் இவையே நம் பெருமிதங்களை உலகறியச்செய்பவை. எளிய அரசியலை கடந்து இந்த வகையான முயற்சிகளை அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் ஆதரிக்கவேண்டும் என்று கோரினேன்.
நியூயார்க் விழாவுக்காக எங்களுக்கு சாக்ரமண்டோ தமிழ் அமைப்புகள் சார்பாக வாக்களிக்கப்பட்ட தொகையை அளித்தனர். ஓர் அலங்காரச் செக் ஆக அந்த தொகை அளிக்கப்பட்டது. அது மிக மனநிறைவூட்டும் ஒரு நிகழ்வாக அமைந்தது.
அங்கிருந்து நேராக வால்நட் கிரீக் வந்து நண்பர் பிரமோதினி- விஸ்வநாதன் இல்லத்தில் தங்கினேன். அது மறுநாள் அங்கே ஒரு நாவல் பயிலரங்கு. மானசா பதிப்பகம் சார்பில் சென்னையில் நிகழ்ந்த நாவல் பயிலரங்கின் அதே வடிவம். ( Manasa Lit Prize ) பெண்களுக்கான நாவல்போட்டிகளை மானசா பதிப்பகம் அறிவித்துள்ளது. அமெரிக்கவாழ் இந்தியர்களும் கலந்துகொள்ளலாம்.
காலை பத்து முதல் மாலை 5 வரை பயிற்சி நடைபெற்றது. நாவல் வடிவங்களை பொதுவாக மூன்றாகப் பிரிக்கலாம். சிறியநாவல், பெருநாவல் மற்றும் மாற்றுநாவல். பின்னிரண்டுக்கும் வடிவம் இல்லை. வடிவ இலக்கணம் உடையது சிறிய நாவல் மட்டுமே. அதன் வடிவ வரையறை, எழுதும் முறை ஆகியவற்றை கற்பித்தேன். முப்பத்தைந்துபேர் கலந்துகொண்டனர்.
நாவல் பயிலரங்கு குழுவினர்மறுநாள் நண்பர் ஶ்ரீராமின் காரில் லாஸ் ஆஞ்சல்ஸ் நோக்கி பயணம். மேற்குக் கடற்கரை ஓரமாகவே முழுநாளும் காரில் சென்றோம். உடன் ஓவியர் அருண் இருந்தார். கடற்கரையை தொட்டும் விலகியும் பல ஊர்கள் வழியாகச் சென்ற அந்தப் பயணம் அழகியது. இலையுதிர்காலம் அமெரிக்காவில் மென்மையான குளிரும், சுடர்விடும் வானொளியும் கொண்ட அழகிய பருவம். எப்போதுமே ஒரு மாலைநேர மனநிலை நீடிக்கும். பசிபிக் கடல் ஆழ்ந்த நீலமும், அலையில்லா பெருவிரிவுமாக உடன் வந்துகொண்டே இருந்தது.
பல இடங்களில் கடல் உள்வளைந்து சிறிய குடாக்களாகியிருந்தது. மலைகளின் விளிம்புகளில் இருந்து நேரடியாக கடல் நோக்கி இறங்கியது நிலம். ஓரிடத்தில் யானைச் சீல்களும், கடற்சிங்கங்களும் கரையில் கரிய கடற்பறவைகளுடன் ஊடுகலந்து நெளிந்துகொண்டிருந்தன. நீர்நிறைந்த தோற்கலங்கள் போல ஒரு கணமும், மிகப்பெரிய குழந்தைகள் போல மறுகணமும் தோன்றச்செய்தன அவை. கரையில் அவை புழுக்களை போலத் தவழ்ந்தன. நீரில் துள்ளி அம்புகள் போல எழுந்து விழுந்து மூழ்கி மீண்டும் சீறிக்கிளம்பின.
ஶ்ரீராம்- சிவப்ரியா இல்லத்தில் நண்பர்கள் வந்து சந்தித்தனர். நான் இந்துவா கட்டுரையின் தொடக்கக் கேள்வியை எழுப்பிய காளிராஜ் இங்குதான் இருக்கிறார். அக்கட்டுரை ஆங்கிலம் வழியாகவும் இன்று இந்தியாவெங்கும் புகழ்பெற்றுள்ளது. (நான் இ துவா?) காளிராஜ் அவர் மகளுடன் வந்து சந்தித்தார். அவர் மகளும் என் நூலை ஆங்கிலத்தில் வாசித்திருந்தார். அருணுடன் அருகே உள்ள கடற்கரைக்கும் குன்றுகளுக்கும் சிறிய பயணங்கள் மேற்கொண்டோம்.
யூனிவர்சிட்டி ஆஃப் சதர்ன் கலிஃபோர்னியாவில் ஒரு நிகழ்வு. ஐம்பது பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பெரும்பாலும் வெவ்வேறு ஆசிய, ஆப்ரிக்க நாடுகளை பூர்விகமாகக் கொண்டவர்கள். இந்தியர்களும் உண்டு. ஆனால் அனேகமாக அனைவருமே அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அமெரிக்கக் குழந்தைகள்.
மாணவிகள் ஶ்ரீநிதியும், பெக்கியும் என்னை அறிமுகம் செய்து என் நூல் பற்றிக் கேள்விகள் கேட்டனர். அதன்பின் பங்கேற்பாளர்களிடமிருந்து கேள்விகள். ஒரு மணிநேரம் கேள்விபதில், அதன்பின் நூல்களில் கையெழுத்து. அமெரிக்காவில் ஒரு பல்கலையில் ஒரு நூலறிமுக நிகழ்வுக்கு அத்தனைபேர் வந்திருந்தது மிக அரிய நிகழ்வு என்றனர். நான் ஓர் அயல்நாட்டு எழுத்தாளன் என்னும் கவற்சியே காரணம் என நினைக்கிறேன்
கேள்விகள் பெரும்பாலும் இன்றைய அமெரிக்க இளம்தலைமுறையின் வினாக்கள். முதன்மையாக ‘வேர்’ குறித்தது. நான் ஒரு நிலத்தில், ஒரு நாட்டில், ஒரு பண்பாட்டில் மாறாத்தொடர்பு கொண்டிருப்பதே வேர் என நினைக்கவில்லை என்று பதில் சொன்னேன். நம் கற்பனைக்கும் தர்க்கத்துக்கும் அப்பாற்பட்ட கடந்தகால ஆழத்துடன் நாம் கொண்டிருக்கும் தொடர்பே வேர் என்பது. அது ஆழ்படிமங்களாக நம் கனவில் நீடிக்கவேண்டும். வேர் எங்குமாகலாம். உலகம் முழுக்க வேர் பரவியிருக்கலாம். என் வேர் கன்யாகுமரியில் மட்டுமல்ல இமைய மலையில் கூடத்தான். அதைப்போலவே மௌண்ட் சாஸ்தாவும் எனக்கு புனிதமானது, ஆழமானது என்றேன்.
இந்நூற்றாண்டு நம்மை சராசரிப்படுத்திக்கொண்டே இருக்கிறது என்றேன். உலகம் முழுக்க அந்தச் சராசரித்தன்மை பரவிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மூலையையும் சென்றடைகிறது. உலகமே ஒரே முகம் கொள்கிறது. இன்று நாம் கொள்ளவேண்டிய முதன்மை எதிர்ப்பு என்பது நம்மை எளிய சராசரிகளாக ஆக்கும் ஊடகங்கள், இலக்கியங்கள் ஆகியவை. எனவே எவை புகழ்பெற்றவையோ அவற்றை ஐயப்படவேண்டும். எவை அனைவராலும் முன்வைக்கப்படுகின்றனவோ அவற்றை கடந்து செல்லவேண்டும்.
வேர் என்றும் தனித்தன்மை என்றும் இரண்டு சொற்களாகச் சொல்லப்பட்டாலும் அவை ஒன்றே. நம்மை நாமாக நாமே வகுத்துக்கொள்வது. நம்மை இன்னொரு உலகளாவிய பெரும் சக்தி வகுத்துக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பது. அது தொழில்நுட்பமோ, கல்வியோ, சமூகமுறைமையோ, அரசியலோ எதுவானாலும். ஆகவே எல்லாவகையான கிறுக்குகளும் உயர்ந்தவையே என்பதே என் எண்ணம் என்று நான் சொன்னேன். நாம் இன்று முன்வைக்கவேண்டியது நம் பண்பாட்டின் அசல்சுவையை. அதை மேற்குக்காக எளிமையாக்க வேண்டியதில்லை. அவர்களிடம் எது சென்று சேருமோ அதைச் சொல்லவேண்டியதில்லை. அவர்கள் சற்று முயன்று நம்மை நோக்கி வரட்டுமே.
அந்த உரையாடலே சிறப்பாக அமைந்தது. என் ஆங்கில உச்சரிப்பு பற்றிய தயக்கம் இருந்தமையால் என் சொற்றொடர்களை நிதானமாகவும், ஒன்றுக்கு இரண்டுமுறையும் சொன்னேன். ஆகவே ஒருவகையான ‘தீர்க்கதரிசனத்தன்மை’ அவற்றுக்கு வந்ததோ என எண்ணிக்கொண்டேன். என்னை ஒரு குலப்பாடகன், நான் பேராளுமைகளையும் விழுமியங்களையும் பாடுபவன் என்றே உணர்கிறேன் என்றேன்.
ஒரு பெண், இந்தவகை எழுத்து இதழியலில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்றார். இதழியலும் இலக்கியமாக நோபல் கமிட்டியால் இரண்டுமுறை ஏற்கப்பட்டுள்ளது என்றேன். ஆனால் இதழியல் வெளியே இருந்து பார்ப்பது. இலக்கியம் உள்ளிருந்து பார்ப்பது, உள்ளே சென்று வாழ்ந்து அறிவது. நூறுநாற்காலிகள் கதை ‘அவன்’ என்று பேசவில்லை, ‘நான்’ என்றே பேசுகிறது என்றேன். அந்த தன்மயபாவனையே இலக்கியத்தின் அடிப்படை. வாசகனும் அதேபோல அந்த வாழ்க்கைக்குள் நுழைந்து வாழமுடிகிறது. அது அறியும் அனுபவம் அல்ல, வாழும் அனுபவம்.
நான் ஓர் எண்ணம் கொண்டிருந்தேன், இளையதலைமுறை ஒரு நிலம், ஒரு நாட்டுடன் தொடர்பற்றதாக உருவாகி வருகிறது என. குறிப்பாக அமெரிக்க இளையதலைமுறை. எதிர்கால உலகக்குடிமகன் அப்படிப்பட்டவன் என எண்ணியிருந்தேன். ஆனால் என் உரை முடிந்தபின் மாணவர்கள் பேசியபோது நேர்மாறாக ஒவ்வொருவரும் தங்கள் வேர்நிலம் குறித்த ஒரு புரிதல், தேடல் அல்லது ஏக்கம் கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
மொராக்கோ நாட்டுப் பெண் ஒருவர் நான் சொன்ன ‘அசல் சுவை’ என்பதை தன் நாட்டை வைத்து புரிந்துகொள்வதாகச் சொன்னார். வங்காளத்தில் இருந்து கிளம்பி அமெரிக்காவில் வேர்கொண்ட குடும்பத்து இளைஞர் ஒருவர் ‘வங்கத்தை தேடிக்கண்டடைந்து ஒரு தொடர்பை அடையவேண்டுமா என யோசிக்கிறேன்’ என்றார். அந்த கருத்துக்கள், அவற்றிலிருந்த உணர்ச்சிகரம் என் எண்ணத்தை நேர் எதிர்த்திசை நோக்கி திருப்பின.
ஶ்ரீநிதி, பெக்கிஆனால் ஓர் இளம்பெண் என்னிடம் “நீங்கள் வந்து அமர்ந்ததைக் கண்டதுமே இதோ எங்கள் இடம் என்ற எண்ணம் வந்தது” என்றதுமே நெகிழ்ந்து கண்ணீர் மல்கிவிட்டார். அவரை ஶ்ரீநிதி அணைத்துக்கொள்ள கண்ணீரைத்துடைத்துக்கொண்டு சிரித்து “நமக்கான ஓர் அடையாளம். நமக்கான குரல்” என்றார்.அவர் மிகநல்ல மாணவி என்றும், கல்லூரிப் பேரவை உறுப்பினர் என்றும் கேள்விப்பட்டேன். அந்த நெகிழ்வை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. அது எனக்கு அவர்களைப் பற்றிய என் புரிதலை வேறுவகையில் தொடங்கவேண்டும் என்னும் எண்ணத்தை உருவாக்கியது.
கா.பெருமாள்
மலேசிய எழுத்தாளர், வானொலித் தொகுப்பாளர், ஓவிய கலைஞர் . கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், வில்லுப்பாட்டு போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது துயரப்பாதை நாவல் மலேசியாவில் கவனம் பெற்ற படைப்பு.
கா.பெருமாள் – தமிழ் விக்கி
பிரபந்தம், ஒரு வகுப்பு, ஒரு தளம்
வணக்கம் !
உங்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை.
சென்ற ஆண்டு குருபூர்ணிமாவில், அந்தி மாலையில், வெள்ளிமலையில் உங்கள் அருகாமையில் நண்பர்கள் சூழ அமர்ந்து உங்கள் உரை தொடங்குவதற்கு முன் கபீர் தாசரின் பாடலைப் பாடியது பசுமையாய் நினைவில் இருக்கிறது. நான் உங்களை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாய் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தது நிகழ்ந்ததில் எனக்கு நிறைவாக இருந்தது. உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 2022 ஆம் வருடம் குருபூர்ணிமாவிற்கு வெண்முரசின் நீலத்தில் சில பகுதிகளை இணையம் வழியாக வாசித்தோம்.
அதன் பின் அதில் அழகியல் தாண்டி தத்துவத்தைப் புரிந்து கொள்ள ஜாஜாவின் உதவியை நாடினோம். முழு நீலத்தையும் அதன் அழகியல், நாடகீய தருணங்கள், தத்துவப் பார்வை என ஜாஜாவுடன் கலந்துரையாடி வாசித்து மகிழ்ந்தோம். நீலத்தை வாசிக்கும்போது ஆழ்வார்களின் பாடல்களை ஜாஜா மேற்கோள் காட்டுவார்.
புதிய அறிமுகங்கள், திறப்புகள் என மகிழ்ந்த தருணங்கள் அது.
அதிலிருந்து நாம் ஆழ்வார்களை வாசித்தால் என்ன என்று ஆர்வம் எழுந்தது அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் மணிநீலம் பிரபந்தம் என்ற குழுமம். அதிலிருப்பது இந்திய, அமெரிக்க விஷ்ணுபுரம் நண்பர்கள்தான். அந்த அமர்வுகளில் நானும் பார்கவி, மற்றும் சில நண்பர்கள் சில பாடல்களைப் பாடுவதுண்டு. ஜாஜா சொல்வார், “வாசித்துக் கேட்பதை விட பாடிக் கேட்கும்போது அப்பாடலின் பொருள் உடனே நம்மை வந்தடைகிறது“, என்று. அதைக் கேட்டு என் கணவருக்கு நாலாயிரம் பாடல்களையும் கர்நாடக அல்லது இந்துஸ்தானியில் பாடல்களைப் பாடி வெளியிடும் முயற்சி செய்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் இது. ஜாஜாவும் நண்பர்களும் உற்சாகம் அளித்தனர்.
இப்போதுதான் அதற்குரிய இணையதளத்தை வடிவமைத்திருக்கிறோம். நம்முடைய விஷ்ணுபுரம் குழுமங்களில் பாடக்கூடிய நண்பர்கள் முடிந்த பாடல்களைப் பாடி உதவி செய்யக் கேட்டிருக்கிறோம். இது முழுக்க முழுக்க பக்தி இலக்கியத்தை இசையுடன் தர எடுக்கும் லாப நோக்கமற்ற முயற்சி. உங்களுடைய ஆசியை வேண்டி நிற்கிறோம். இதை முடிக்க சில காலம் ஆகலாம்.
4000 பாடல்களையும் கர்நாடக அல்லது இந்துஸ்தானியில் பாடல்கள் பாடப்பட்டவுடன் அவற்றைத் தொகுத்து விட்டு உங்களிடம் சொல்கிறேன். உங்களுடைய ஆசியை வேண்டி நிற்கிறோம். அது இருந்தால் போதும் வாழ்வை நிறைவாக்கக் கூடிய செயல் செய்ய. நன்றி!
என்றும் பிரியமுள்ள வாசகி,
ஜமீலா.G
பிரபஞ்சமும் நம் வாழ்வும், கடிதம்
உங்கள் காணொளிகளில் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் உங்களிடம் வெவ்வேறு தரப்பிலிருந்து உரையாடிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் .உங்களுக்கு அவரிடம் சொல்வதற்கு நிறையவே இருக்கிறது. உங்களுடைய பார்வையை முன்வைக்கிறீர்கள். ங்கள் பார்வையை விரிவாக்கம் செய்யும்பொருட்டு நீங்கள் செய்து கொண்டிருக்கும் பயணங்களும் அதில் தெரிகின்றன.
பிரபஞ்சமும் நம் வாழ்வும், கடிதம்
I came to know that you are conducting classes on Vedanta philosophy and other religious philosophies through your United Wisdom endeavor. Are you aware of the significant oversight you might be committing?
There is a mistake in your teaching.October 17, 2025
மானுட மட்காக்குப்பைகள்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய காணொளிகளில் முதியோருக்கான ஆலோசனைகள் நிறைவே உள்ளன. உங்களிடம் பல முதியவர்கள் அதைப்பற்றி பேசி இருப்பார்கள் என்பதனால்தான் நீங்கள் இதைப் பற்றி கூடுதலாகப் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக தமிழகத்தில் இந்தத் தலைப்பை இந்த கோணத்தில் பிற எவரும் பேசுவதுபோலத் தெரியவில்லை. நீங்கள் திரும்பத் திரும்ப ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுக்கான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லி வருகிறீர்கள். ‘நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்களா?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
இந்த விஷயம் இன்று தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான நெரேஷனை அடைந்திருக்கிறது. அது இரண்டு பக்கம் கொண்டது. அதாவது பெற்றோரை குழந்தைகள் கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்களை முதியோர் விடுதியில் விட்டு விடக்கூடாது, முதியோர் விடுதியில் இருக்கும் பெற்றோர் மிகப் பரிதாபகரமானவர்கள், அங்கே பிள்ளைகள் பெற்றோரைக் கொண்டுசென்று சேர்ப்பது என்பது ஒரு பெரிய கொடுமை, இந்தியாவில் பெற்றோரை குழந்தைகள் முதியோர் விடுதிளுக்கு தள்ளிவிட்டு தங்களுடைய தொழிலை வாழ்க்கையும் பார்ப்பதற்கு வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள் – இது ஒரு பக்க நெரேஷன்.
அதேபோல பெற்றோர் தன்னுடைய இளமைக்காலத்தை முழுக்க குழந்தைகளுக்காகவே செலவழிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படி குழந்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பெற்றோர் அனைவ்ரும் தியாகிகள் என்கிறார்கள். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்களாம். ஒருவர் செய்யும் தியாகமே அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறதாம். தியாகம் என்பது ஒரு உயர்ந்த பண்பு நிலையாம். இதெல்லாம் இன்னொரு பக்கம் சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு நெரேஷன்களும் ஒன்றை ஒன்று சரியாக நிரப்புகின்றன. அதாவது பெற்றோர் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும், பிள்ளைகள் பெற்றோருக்காக வாழ வேண்டும், ஒட்டுமொத்தமாக யாரும் தங்களுக்காக வாழ கூடாது, தங்களுக்கான மகிழ்ச்சியோ லட்சியமோ கொண்டிருக்ககூடாது. அது தான் தியாகம். இதைத்தான் ஒவ்வொரு பட்டிமன்றப் பேச்சாளரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படம் சீரியல் அனைத்திலிருந்தும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை நம்பித்தான் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்தார்கள். அதாவது அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்று நம்ப வைக்கப்பட்டார்கள். அந்த மாதிரியான வாழ்க்கைக்காக தங்களுடைய எல்லாவற்றையும் அவர்கள் தத்தம் செய்தார்கள். விளைவாக அவர்கள் வாழவே இல்லை. பிள்ளைகளை வளர்த்து அவர்கள் கையில் இருந்து பறந்து சென்றதும் அவர்கள் முதலில் பெருமை அடைந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வாழ்க்கை இழந்துவிட்டதாகதான் உணர்கிறார்கள்.
அந்த இழப்பு உணர்வு இருந்தால் பிள்ளைகள் மேல் ஒரு மறைமுகமான கசப்பு உருவாகிறது. பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழ்வது பிடிக்காமல் ஆகிறது. பிள்ளைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் அவர்களைப் போலவே தங்களுடைய வாழ்க்கையை தங்களுடைய பிள்ளைகளுக்கு மட்டுமாகச் செலவழித்து இருந்தார்கள் என்றால் இவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இருக்கிறது என்பதைப் பார்ப்பது இந்தப்பெற்றோருக்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை.
இன்றைய பெற்றோர் இமோஷனல் பிளாக்மெயில் செய்வதற்காக தங்களுடைய தியாகத்தை ஒரு பெரிய அடையாளமாக காட்டுகிறார்கள். தங்களுடைய தியாகத்தால்தான் பிள்ளைகள் வளர்ந்தார்கள், ஆகவே அந்த பிள்ளைகள் அதை எப்போதும் உணர்ந்து இருக்க வேண்டும், எந்த நிலையிலும் பெற்றோருக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் – என்றுசொல்லும் பெற்றோர்கள் ஏராளமாக உள்ளனர். தாங்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் வாழ்ந்தோம், ஆகவே தன் பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு முதியோர் ஏராளமாக உள்ளனர். ஒரு நாசகாரக் கூட்டமாக இந்தப் பெற்றோர் இன்றைக்கு மாறிவிட்டிருக்கிறார்கள்.
இந்த உண்மையை நாம் இன்று சொல்லியாக வேண்டும். ஏனெனில் இந்த உண்மை நிறைய குடும்பங்களில் வன்முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நிறைய குடும்பங்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. ஏனெனில் இந்தப் பெற்றோரை என்ன செய்வது என்பது அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய சவால். இந்த பெற்றோரை அவர்கள் தங்களுடன் வைத்திருக்க முடியாது. இந்த பெற்றோரை வேறு எங்காவது அனுப்பவும் முடியாது. இந்தப் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்யலாம், ஆனால் இந்தப் பெற்றோர் சொல்லும்படி வாழ்க்கை அமைத்துக் கொண்டால் இந்த நூற்றாண்டின் மொத்த வாய்ப்புகளையும் இழந்து விட வேண்டி இருக்கும். சொந்தமாக அகப்பயணமோ புறப்பயணமோ இருக்காது. சாதனைகளோ மகிழ்ச்சிகளோ இருக்காது. இன்னும் ஒரு படி மேலே சென்று இந்தப் பெற்றோர் இன்று பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையிலும் தலையிட்டு அழிக்கிறார்கள்.
இந்தச் சூழலில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் அவரவர்களுக்காகத்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் சொல்வது முக்கியமானது. கடமையைச் செய்வது என்பது தியாகம் அல்ல. கடமையை செய்தாக வேண்டும். அதற்காக மொத்த வாழ்க்கையும் இழந்ததும், இழப்பதும் பிழையானது என்கிறீர்கள். அறியாமையால் அப்படி தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் அதை பிறவரிடமிருந்து திருப்பிக் கேட்கக் கூடாது என்று சொல்கிறீர்கள். முக்கியமான குரல் இது.
உங்கள் காணொளிகளில் ‘நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். ‘உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்களா?’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். அந்த கேள்வி முக்கியமானது .அந்த கேள்வியை முன் வைப்பதற்காக உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
(என்னுடைய பெற்றோரும் இதை படிப்பார்கள் என்று நினைக்கிறேன் ஆகவே இந்த கடிதத்துடன் என் பெயரை சேர்க்க வேண்டியது இல்லை)
அ
அன்புள்ள அ,
நம் சூழலில் ஒவ்வொருவரிடமும் சில மதிப்பீடுகளை மரபு ஏற்றியுள்ளது. எந்த ஒரு மரபும் நீண்டகால நாகரிகத்தின் ஊடாக சில நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறைகளை, அதைச்சார்ந்த உணர்வுநிலைகளை உருவாக்கி இருக்கும். அவற்றையே நாம் விழுமியங்கள் என்று சொல்கிறோம். விழுமியங்கள் என்பவை நாம் நம்பி ஏற்க வேண்டியவை, நிறைவேற்றப்படவேண்டியவை, கைமாறப்பட வேண்டியவை.
இந்த விழுமியங்களில் முதன்மையானதாக இருப்பது தியாகம். தியாகம் என்று சொல்லை மிக விரிவான பொருளில் உலகத்தின் எல்லா நாகரிகங்களும் பயன்படுத்தி இருப்பதை பார்க்கலாம். உண்மையில் அனைத்து உயிர்க்குலங்களிலும் அது காணப்படுகிறது. தேனீக்கூட்டில் இன்னொரு பூச்சி வந்துவிட்டது என்றால் உடனடியாக அந்த பூச்சி மேல் பாய்ந்து அதை கொன்றுவிட்டு தாங்கள் உயிர்விடும் போர்த்தேனீக்களின் செயலை தியாகம் எனலாம். எறும்புகளில் பாக்டீரியாக்களில் கூட அப்படிப்பட்ட தியாகம் உள்ளது.
அந்த தியாகத்தின் ஊடாகவே அந்த ஒட்டுமொத்த அமைப்பு கட்டிக் காக்கப்படுகிறது. ஆகவே பழைய சமூகங்களில் போர்வீரனின் தியாகம் என்பது மிகப்பெரிய அளவிலே போற்றப்பட்டது. அவர்கள் நினைவு கூரப்பட்டார்கள். வழிபடப்பட்டார்கள். பண்பாடு நமக்குக் கிடைக்கும் தொடக்க காலத்திலேயே நடுகற்கள் நமக்கு உள்ளன. நவீன சமுதாயத்தை உருவாக்கிய அடிப்படை விழுமியங்களில் ஒன்று வீரத்தியாகம் என்று சொல்லலாம். இன்றும் கேள்விக்கு அப்பாற்பட்டு அது கொண்டாடப்படுகிறது.
அடுத்ததாக, ஒவ்வொரு உயிரும் அடுத்த தலைமுறைக்காக செய்யும் தியாகத்தை சொல்ல வேண்டும். ஒரு தெருநாய் குட்டி போட்டபின் ஒரு மாதத்தில் அதை பார்த்தால் தியாகம் என்பதன் மதிப்பென்ன என்று தெரியும். ஐந்து குட்டிகள் போட்ட நாய் அதன் மொத்தத் தசையையுமே குட்டிகள் உறிஞ்சி எடுத்துக் கொள்வதை உணர்ந்துதான் இருக்கின்றது. அது இரவு பகலாக உணவு தேடி, நரகலை உண்டு, அலைந்து திரிந்து மெலிந்து சொறிபிடித்து மறையும். தந்தை உருவாகி வந்த விலங்குச் சமூகங்களில் தந்தையின் தியாகமும் அதற்கிணையானது என்பதை கொரில்லாக்களில் காணலாம். பறவைகளில் கூட இருவாச்சியில் (கிரேட் ஹார்ன்பில்) தந்தையின் தியாகத்தைக் காணலாம். இத்தகைய தியாகங்கள் வழியாகவே குடும்பம் என்னும் அமைப்பு நிலை நிறுத்தப்படுகிறது.
இவ்விரு அடிப்படைத் தியாகங்களுக்கும் மேலாக ஒவ்வொரு தனிமனிதரும் செய்தாக வேண்டிய பல தியாகங்களை விழுமியங்கள் என்ற வடிவில் நம் சமூகம் நமக்கு அறிவுறுத்துகிறது. விருந்தினருக்கு உணவு ஊட்டுவது என்பது அதில் ஒரு தியாகம். மகாபாரதத்தில் ஒரு கதை. பலநாள் பட்டினி நோன்பு இருந்து உயிர்விடும் தருவாயில் சற்று உணவைப் பெற்ற ஒரு முனிவர் அங்கே வந்த இன்னொரு முனிவருக்கு விருந்தூட்டும் பொருட்டு அந்த உணவை அவருக்கு அளித்து தான் உயிர் துறக்கிறார். அந்த உணவின் மிச்சம் விழுந்த் இலையில் புரண்டதனால் ஒரு கீரி தன் உடலை பாதி பொன்னாக்கிக் கொண்டது. எஞ்சிய உடலை பொன்னாக்கும் பொருட்டு அது யுதிஷ்டிரர் அளித்த மாபெரும் வேள்வி விருந்தின் எச்சில்மேல் புரண்டது. உடல் பொன்னாகவில்லை. மாபெரும் ராஜசூய வேளவியை விட அந்த முனிவர் அளித்த எளிய கொடை பெரிது என்று மரபு கூறுகிறது.
மூன்றாவது வகைமை என்பது மாமனிதர்களின் தியாகம். தலைவர்கள் தங்கள் குடிகளுக்காக தியாகம் செய்கிறார்கள். தியாகம் வழியாகவே தலைவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். காந்தி தலைவராக ஆனது அவருடைய தியாகத்தினூடாக மட்டுமே. தலைமைப் பண்பு என்பது ஒரு பெரும் தியாகமாகவே கொள்ளப்படுகிறது. சான்றோர் தங்களுடைய அனைத்தையும் பிறருக்காக அளிப்பவர்கள் என்றும், என்பும் உடையார் பிறர்க்கு என்று அதைப் பற்றி வள்ளுவர் கூறுகிறார்.
விழுமியங்கள் மேல் அவநம்பிக்கை கொள்ளும் ஒரு சமூகம் காலப்போக்கில் தன்னுடைய கட்டுக்கோப்பை இழக்கும். ஆகவே தியாகம் என்னும் விழுமியம் என்பது நம்முடைய மரபு நமக்கு கற்பித்தது. ஆனால் இன்று வாழ்க்கைச்சூழல் மாறுவதை ஒட்டி அந்த விழுமியம் மாற்றப்படவில்லை. வாழ்க்கையின் அடிப்படை வசதிகளுக்காகவே போராடிக் கொண்டிருந்த ஒரு சூழலில் குடும்பத்துக்காக தியாகம் செய்வது என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருந்தது. ஒரு குடும்பத் தலைவனின் ஒற்றை வருமானத்தில் ஏழெட்டு பேர் கொண்ட குடும்பங்கள் வாழ்ந்த ஒரு காலம் தமிழகத்தில் இருந்தது. அன்று குடும்பத் தலைவன் தனக்கென எதுவும் செய்யாமல் தன்னுடைய கடைசித் துளி உழைப்பையும் அந்த குடும்பத்திற்காக அளித்து ஒரு தியாகியாக வாழ்வது என்பது ஒரு வகையில் நியாயப்படுத்தப்பட்டது. அவர் தன் கடமையை தான் செய்கிறார், ஆனாலும் அது தவிர்க்கமுடியாத தியாகமும் கூட. அப்படி பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன, அவை கொண்டாடவும் பட்டன (உதாரணம், ஆறிலிருந்து அறுபது வரை)
அந்தச்சூழல் இன்று இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இன்று ஒருவர் தன்னுடைய முழுவாழ்க்கையையும் குடும்பத்துக்காக அளிக்க வேண்டிய தேவை இல்லை. கடமையை முழுமையாகச் செய்தபின்னர் அவர் தனக்கெனவும் கனவும், செயலும் கொண்டிருக்க முடியும். இன்றைய குடும்பங்களில் பெண்கள் தங்கள் கணவர்கள் குடும்பத்திற்காக மட்டுமே உயிர்வாழவேண்டிய ஒருவகை அடிமைகள் என பல நினைக்கிறார்கள்.பல குழந்தைகள் தங்கள் பெற்றோர் தங்களுக்காக மட்டுமே வாழவேண்டிய அடிமைகள் என நினைக்கிறார்கள். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அன்னை என்பவர் தங்களால் கடைசிச்சொட்டு வரை உறிஞ்சி எடுக்கப்படவேண்டிய ஒரு வளர்ப்பு மிருகம். தியாகம் என்னும் விழுமியம் இன்று அடிமைமுறை – இரக்கமற்ற சுரண்டல் என ஆகியுள்ளது. அதற்கு நம்மை அளிக்கவேண்டியதில்லை. இன்னொருவர் நமக்காக வாழவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றால் மிகமிகக் குரூரமான சுரண்டல் ஒன்றை நிகழ்த்துகிறோம் என்றே பொருள்.
தியாகம் உயர் விழுமியமே. ஆனால் தியாகத்தை விட பெரிய உயர்விழுமியம் என்பது ஒருவர் தன்னை அறிவார்ந்தும், ஆன்மிகமாகவும் முன்னகர்த்தி தன் ஆளுமையை முழுமை செய்துகொள்வது. ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான ஆன்மிகப் பயணங்களை நம்முடைய மரபு கூறுகிறது. ஒன்று மெய்ஞானம் நோக்கிய பயணம். அறிந்தும் உணர்ந்தும் ஒருவர் தன் ஆன்மிக விடுதலை நோக்கி பயணம் செய்யவேண்டும். அந்த ஞானவழி என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் தளத்தில் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. அனைத்தையும் துறந்து ஞானத்தின் பொருட்டு சமூகத்தில் இருந்தே வெளியே செல்பவர் ஓர் உச்ச நிலையில் இருக்கிறார். இல்லறத்தில் இருந்து கொண்டு, மிகச்சிறிய அளவிலேனும் தன்னை ஞானத்திற்கு ஒப்படைப்பவர் ஞானப் பாதையில் தானும் ஏதோ ஒரு இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.
இரண்டாவது பயணம் நற்செயல்கள் வழியாக ஒருவர் அடைவது. புண்ணியம் என அது வகுக்கப்பட்டுள்ளது. இறைச்சேவை மற்றும் மானுடச்சேவையினூடாக அடையும் விடுதலை அது. ‘யாவர்க்கும் ஆம் இறைவர்க்கொரு பச்சிலை’ என தொடங்கும் திருமூலர் பாடலின் சாரமே அதுதான். ஒவ்வொருவருக்கும் அவர் தளத்தில் செய்ய இயலும் நற்செயல், அறச்செயல் என சில உள்ளன. அவற்றை செய்தே ஆகவேண்டும்.
கடமைகள் இரண்டுவகை. உலகியல் கடமைகள் மற்றும் ஆன்மிகக்கடமைகள். நாம் உலகியல் கடமைகளை மட்டுமே செய்பவர்களாக இன்று இருக்கிறோம். அதை மட்டும் செய்தால் நாம் நல்லவர்கள் என்றும் சான்றோர்கள் என்றும் நினைக்கிறோம். நான் சந்திக்கும் ஒவ்வொரு முதியவரும் தங்கள் பிள்ளைகளுக்குத் தாங்கள் செய்தவற்றை தாங்கள் நிகழ்த்திய பெரிய வாழ்க்கைச் சாதனையாக கூறுகிறார்கள். அது உலகியல் கடமையைச் செய்தல் மட்டுமே. அதற்கப்பால் அவர்களுக்கென ஆன்மிகநாட்டம், அறிவுநாட்டம் ஏதும் இல்லை. அந்த வெறுமையையே பெரும்பாலானவர்கள் முதுமையில் உணர்கிறார்கள். அது கசப்பாக ஆகிறது. அதை பிள்ளைகள் மேல் சுமத்துகிறார்கள். தானும் கசந்து பிள்ளைகள் வாழ்க்கையையும் கசப்பாக ஆக்குகிறார்கள்.
இந்த ‘பயனற்ற முதியோர்’ இன்று இந்திய சமூகத்தின் மாபெரும் சுமை. நவீன நாகரீகம் உருவாக்கிய நுகர்வோர் கலாச்சாரம் இந்தியா போன்ற மாபெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில் குப்பைமலைகளை உருவாக்கியுள்ளது, அது உலகுக்கே பெரிய தீங்கு என்கிறார்கள். அதற்கிணையானது இந்த மானுடக்குப்பைக் குவியல். இதை எப்படி என்ன செய்வது என்பது இன்று மிகப்பெரிய சவால்தான். நவீன மருத்துவத்தின் வழியாக இந்த குப்பைகள் எளிதில் மட்காமல் நீண்டகாலம் நீடிக்கின்றன என்பது அச்சவாலை இன்னமும் கடினமாக ஆக்குகிறது.
ஜெ
கு.திருமேனி
எழுத்தாளர், ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிலப்பதிகாரம், கம்பராமாயணம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களை எழுதினார். கம்பராமாயண வித்தகர் என்று போற்றப்பட்டார்.
கு.திருமேனி – தமிழ் விக்கி
கவிதைகள் அக்டோபர் இதழ்
அன்புள்ள ஜெ,
அக்டோபர் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் சென்ற இதழில் பார்கவி கவிதை வாயிலாக இசை அனுபவத்தைக் குறித்து எழுதிய ‘கடலில் ஊறும் சிறு தும்பி – 2’ கட்டுரையின் இரண்டாம் பாகம் இவ்விதழில் வெளியாகியுள்ளது. க.நா.சு. கட்டுரைத் தொடரின் பகுதியாக காரைக்கால் அம்மையார் கவிதைகள் குறித்து க.நா.சு எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கவிஞர் செல்வசங்கரனை மதார் நேர்காணல் செய்துள்ளார். வேணு வேட்ராயன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தேவதேவனின் ‘கிச்சு கிச்சு மூட்டினால்’ (If tickled…) கவிதை மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது.
சில தமிழ் கவிதைகள் பகுதியில் இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதாளர், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் கவிதைகள் உள்ளன.
நன்றி,
ஆசிரியர் குழு
மதார், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
அறம் அறிதல், வெண்பா
பத்து வருடங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஒன்றிரண்டு கதைகளை வாசித்திருக்கிறேன். புத்தகமாக வாங்கி பொக்கிசமாக வைக்க வேண்டிய படைப்பு இது என்பதால் இந்த புக்பேரில் வாங்கினேன்.
அறம் எளியவர்களின் குரல். அந்தக் குரலின் ஆழமும் அடர்த்தியும் நம் ஆன்மாவைத் தொடுபவை. சூரியனால் வெளிச்சம் வருவது போல, அறத்தால் தான் மனதில் விருட்சம் வருகிறது. ஒரு மனிதனுக்கு மனம் நிறைந்து கண்ணீர் வரும்போது வாழ்வு அவனுக்கு அர்த்தமுள்ளதாக மாறிவிடும். அப்படியொரு அர்த்தத்தை வழங்கும் பேராசான் ஜெயமோகனின் இந்த நூல்
பனிரெண்டு கதையில எது ஒசத்தி என்றால் ஒவ்வொன்றும் அதனதன் அளவில் ஒசத்தி தான். என்னை எப்போதும் அழ வைத்து பின் எழ வைக்கும் கதைகள் தான் அனைத்தும்!
வணங்கான் கதை
திருவிதாங்கூர் சமாஸ்தானத்தின் கீழ் அடிமைப்பட்டு யானைக்கு கீழே சாகக்கிடந்த சிறுவன் தப்பித்து ஓடுகிறான். அது வெள்ளைக்காரன் ஆட்சி. ஓட்டம் நின்று ஓட்டல் கடையில் வேலை செய்கிறான். சாணான் எனப்படும் நாடார் சாதிக்காரன் அவன். அவன் கடையில் வேலை செய்யலாம். ஆனா கடை உள்ளே போக முடியாது. அப்போதெல்லாம் சாணானைப் பாத்தாலே தீட்டுல்லா! அப்படியாப்பட்ட பையன் மார்ஷல் நேசமணி என்ற நேர்மையும் துணிச்சலும் கொண்ட வக்கீலைச் சந்திக்கிறான்.
நேசமணி சாதாரண ஆளுல்ல. திருவிங்கூர் சமாஸ்தனத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் நீதிமன்றத்துல உயர்சாதி வக்கீலுங்களுக்கு நாற்காலிகளும், நாடார் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சாதிவளுக்கு உட்கார குத்துப்பெஞ்சும் போட்டதை எடுத்து உடைச்ச மனுசனாக்கும். பார்கவுன்சில்ல எல்லாச் சாதிக்கும் ஒரே குவளைல தண்ணி கொடுக்க வச்ச சமுத்துவர் நேசமணி. அப்படியான நேசமணியோட ஆதரவு கிடைச்சதும் ஓட்டல் வேலை செஞ்ச அவனோட வாழ்க்கை மாறுது. கிடைச்சதெல்லாம் படிக்கான். கவர்மெண்டுக்கு எழுதுறான். அதிகாரி வேலை கிடைச்சி இலஞ்சிக்குப் போறான். ஆனா அங்குள்ள ஜமீன்தாரு, “நீ அதிகாரியா இரு எந்த மைராவதும் இரு” என்ற ரேஞ்சில் அவனை டீல் செய்கிறார். மேலும் அவர் மீது துப்பவும் செய்கிறார். சாதிப்பெயரைச் சொல்லி அடிக்கவும் செய்கிறார். ஜமீன் தாரு அடிக்கது நம்மளை இல்ல. வெள்ளைக்காரன் வேலைக்கு வச்சிருக்க அதிகாரியன்னு உணர்றார் அந்த எளியச் சாணான். அதை வச்சே ஜமீன் தாரு நிலபுலத்துல செஞ்ச ஊழலை வெளிக்கொண்டு வாரான். ஜமீன் தாரு ஆபிஸை விட்டு வெளில வந்தா கொல்லுததுக்கு ஆள் வைக்கிறாரு. 27 நாளா ஆபிஸுக்குள்ளே கிடக்காப்ல சாணான் அதிகாரி. உடனே யோசனை வந்து நேசமணிக்கு கடிதம் எழுதுதாரு. நேசமணி யானையோட வந்து இவரை யானைல உக்கார வச்சி ஜமீன் தாரு வீட்டுக்கதவை உடைச்சிட்டு உள்ள போறாரு. ஜமீன் தாரு ஆடிப்போறாரு. அதுக்குப் பிறகு அந்த அதிகாரி மூளைக்குள்ள யானை வந்துட்டாக்கும். அதை அவர் நடையிலே பாக்க முடியும். அடேயப்பா எப்பேர்ப்பட்ட வாழ்வைச் சொல்லி நெஞ்சை விம்ம வைத்த கதையிது
விழுந்தவன் எழுந்தே தீருவான்ற நிஜத்திற்கு மேலும் மேலும் வலு சேர்க்குற கதைல்லா இது.
எத்தனை முறை வாசித்தாலும் கண்ணில் நீர்வீழ்ச்சியை கொண்டு வார கதை சோத்துக்கணக்கு கதை. கறியும் சோறும் அள்ளி அள்ளி வச்சிட்டு, காசு எவ்வளவு போட்டாலும் போதும்னு உண்டியல் வச்சி கடை நடத்துன கெத்தெல் சாகிப் கைகளை இப்ப நினைச்சாலும் பெத்த அம்மா ஞாபகத்து வருவா. அந்தக் கடையில சாப்பிட்டு உயிர் வளத்து பின் வாழ்வை வளத்த ஒருவன் பெரிய வேலையோட திரும்பி அங்க போய் பணத்தை உண்டியல்ல கொட்டும் போது எழும் சிலிர்ப்பை சொல்லால.சொல்லிட முடியாது
யானை டாக்டர் கதையிலுள்ள மனிதமும், தாயார் பாதம் கதையில உள்ள வாழ்வும், முதல் கதையான அறம் கதையிலுள்ள உள்ள கருணையும் இந்த வாசிப்பு வாழ்வுக்கு போதும். முன் வாசித்த கதைகளாயினும் இப்போதும் அதே உணர்வெழுச்சியைத் தான் தந்துது. இன்னும் பத்து வருசம் கழித்து வாசிச்சாலும் இதையே தான் தரும். கதைகளில் இருக்க வாழ்வும், தத்துவமும், உண்மையும், கருணையும் அத்தகைய உன்னதமானது
வெண்பா
Stories of the true Macmillanபறவைகளின் குழந்தைகள்
The place you developed for parallel learning is a mission that is essential for our era. Here, education has become a torture because it is a competition. In any competition, only a few can win, and all others are labeled as failures.
நான்காவது பறவைகள் பார்த்தல் வகுப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. களத்துக்கு செல்லும்போது கோவில் திருவிழா சத்தம் அதிகமாக இருந்ததால் இரண்டு முறை கார்களில் மடம் வரை சென்றோம். அங்கு நிறைய பறவைகள் பார்க்க முடிந்ததில் அனைவரும் மகிழ்ந்திருந்தனர். ஒருசில படங்களை இணைத்துள்ளேன்.
பறவைகளின் குழந்தைகள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


