Jeyamohan's Blog, page 102
May 27, 2025
சி. கணபதிப்பிள்ளை
[image error]சி.கணபதிப்பிள்ளை சைவசமய அடிப்படைகளை விளக்கும் நூல்களை எழுதியவர், சைவநூல்களைப் பதிப்பித்தவர் என்னும் வகையில் ஈழத்துச் சைவ மறுமலர்ச்சிக்குப் பங்களிப்பாற்றினார். சைவத்துடன் இணைத்து மரபிலக்கியத்தை முன்வைத்தவர் என்னும் வகையில் தமிழிலக்கிய ஆய்வுகளின் முன்னோடியாகவும் மதிப்பிடப்படுகிறார். ஈழத்தில் ஆறுமுக நாவலர் உருவாக்கிய சைவத்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தவர்.
சுவாரசியமான ஒரு செய்தி, சி. கணபதிப்பிள்ளை சைவராயினும் பின்னாளில் கவிஞனுக்குரியது அழகியல் சார்ந்த இன்னொரு மரபு என்று சொன்னார். கவிச்சமயம் என அதை வகுத்துரைத்தார்.
சி. கணபதிப்பிள்ளை
சி. கணபதிப்பிள்ளை – தமிழ் விக்கி
The unexplainable and logic
I am listening to your speeches continuously. You are speaking with enormous enthusiasm and power. You are cautious not to cross the logical and scientific boundaries of spiritualism. I am doubtful about your way of expression. Could you please clarify if you possess a logical and scientific temperament? Or are you just trying to keep up with the current generation’s expectations? Don’t you have any supernatural, inexplicable experiences?
நுண்ணலகு அரசியல் பற்றி சச்சரவே இல்லை. அதுவே அது எத்தனை ஆக்கபூர்வமான ஒன்று என்பதற்கான சான்று என நினைக்கிறேன்
இன்னொரு அரசியல்May 26, 2025
சிலநேரங்களில் சிலமனிதர்கள் – ஒரு கழுவாய்
காலச்சுவடு பதிப்பகம் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சிலமனிதர்கள் நாவலை செவ்வியல் வரிசையில் வெளியிட்டிருக்கிறது. ஜெயகாந்தனின் புத்தகங்கள் எதற்கும் இத்தனை அழகிய பதிப்பொன்று வந்ததில்லை. அவர் தன் நண்பர்களின் நட்பை முதன்மையாகப் பேணுபவர் என்பதனால் தன்னுடைய வழக்கமான பதிப்பாளர்களை மாற்றியதில்லை. அவர்களுக்கு அட்டை என்பது அழகான ஒன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே இருந்ததில்லை.
ஜெயகாந்தனின் நூலை அழகிய தயாரிப்பில் பார்த்தது எனக்கொரு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒருவருக்கு அழகிய நூலொன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரே வருகிறது என்பதே விந்தையான ஒன்று. ஜெயகாந்தன் இருந்து இந்த பதிப்பை பார்த்திருந்தால் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று தயங்காமல் சொல்லலாம். நூல் வடிவமைப்பாளர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
உபால்டு கோட்டோவியமாக வரைந்த முழுப்பக்க விளம்பரம் ஒன்று 1976-ல் தினத்தந்தியில் வெளிவந்தது. ஒரு கார் தொலைவில் வருகிறது. சப்பையான காண்டஸா க்ளாசிக் அல்லது இம்பாலா. சிறிய உடல் கொண்ட ஒரு பெண் புத்தகங்களை அடுக்கியபடி சாலையோரம் நின்றிருக்கிறாள். கீழே சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் எழுத்துக்கள். அந்த கோட்டோவியம் அளித்த கற்பனையும் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற சொல்லாட்சியில் இருந்த அழகிய தாளமும் என்னைக் கவர்ந்தன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட நினைவில் நிற்கும்படி அந்த விளம்பரம் என்னுள் பதிந்திருக்கிறது.
அந்நாட்களில் ஜெயகாந்தன் குமுதம் வார இதழில் ஒரு பக்கத் தொடர் கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருந்தார். நான் அவற்றின் தீவிர வாசகனாக இருந்தேன். அன்று எங்கள் வீட்டருகே இருந்த ஆரம்பப் பள்ளியில் தமிழாசிரியராக வந்தவர் எனக்கு ஜெயகாந்தனின் வாழ்க்கை அழைக்கிறது என்ற நாவலை வாசிக்கத் தந்தார். ஜெயகாந்தனின் மிக மோசமான நாவல் என்று அதைச் சொல்லலாம். அவரது முதல் நாவல் முயற்சி அது. ஆயினும் அது எனக்கு பெரிய உளக்கிளர்ச்சியை அளித்தது. தொடர்ந்து ஒரு மாதத்தில் அன்றுவரை வெளிவந்த ஜெயகாந்தனின் அனைத்து நாவல்களையும் படித்தேன். மூன்று நாவல்கள் அவருடைய வெற்றிகரமான ஆக்கங்கள் என்று எனக்குத் தோன்றியது. முறையே பாரீஸுக்குப்போ, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள்.
சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் ஆகியவற்றை இணைத்து ஒரு பெரு நாவலாக வாசிக்கலாம். ஆனால் இந்த நாவலே கூட தன்னளவில் முழுமையான படைப்பு. அக்னிப்பிரவேசம் என்ற பெயரில் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதையும் அதை ஒட்டி வந்த விவாதங்களும் இந்த நாவலுக்கு வழிவகுத்தன. இது வெளி வந்த காலத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி அதனாலேயே வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அக்னிப்பிரவேசம் கதை அன்று உருவாக்கிய விவாதத்தை இன்று மேலும் பெரிய வரலாற்றுப் பின்னணியில் பார்க்க முடியும்.
அந்தக் காலகட்டத்தில் ஆயிரமாண்டுக்கால இற்செறிப்புப் பண்பாடு உடைபட்டு, நூறாண்டுக்கால பெண்கல்வி இயக்கம் கனிகளை அளிக்கத் தொடங்கியிருந்தது. பெண்கள் கல்வி கற்க வெளியே சென்று கொண்டிருந்தார்கள். பெண்கள் வேலைக்கு போகலாமா கூடாதா என்பதைப்பற்றிய ஆழ்ந்த விவாதம் நடந்து கொண்டிருந்தது. வழக்கம் போல இந்தியச் சூழலில் பிராமணப் பெண்கள் தான் அதிகமாக படிக்கவும் வேலைக்குச் செல்லவும் முன்வந்தார்கள். வேளாளர்கள் முதலியார்கள் போன்றோர்கள் இன்னும் இறுக்கமான குலநெறிகளுக்குள் தான் பெண்களை வைத்திருந்தார்கள். பிராமணர்களின் ஆசாரியர்களான காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்கள் பெண்கள் கல்வி கற்பதையும் வேலைக்குச் செல்வதையும் கடுமையாக எதிர்த்து வந்தனர். ஜெயகாந்தனின் நாவல் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கூட சங்கராச்சாரியார் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதும் கல்வி கற்பதும் வேலை செய்வதும் அவர்களை ஒழுக்கமற்றவர்களாக ஆக்கிவிடும் என்று கருத்துரைத்திருந்தார் என்பதை நினைவுகூரவேண்டும்
அன்றைய பிராமணர்களுக்கு ஒரு பெரிய சங்கடம் இருந்திருக்கலாம். அவர்களுடைய மதம், ஆசாரம் நம்பிக்கை ஆகியவை பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்கச் சொல்லின. அன்று உருவாகி வந்த புதிய வாய்ப்புகளும் அதன் லௌகீக சாத்தியங்களும் பெண்களை கல்வி கற்க வெளியே செல்லும்படித் தூண்டின. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத் திருமணச் சந்தையில் பெரிய மதிப்பு இருந்தது. பெண்கள் வேலைக்குச் செல்வதன் வழியாக குடும்பங்கள் மிக எளிதாக பொருளியல் சிக்கல்களிலிருந்து விடுபடுவதை உணரமுடிந்தது. மேலும் மேலும் பிராமணப் பெண்கள் கல்விக்கும் வேலைக்கும் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் தங்கள் ஆசாரியனின் மறுப்பை எதிர்த்து பிராமணர்கள் வாதிடவும் இல்லை. ஒரு குற்றவுணர்ச்சியுடன் ஒரு மௌன அலையாகவே அவர்கள் மீறிக்கொண்டிருந்தனர்.
அந்தச் சூழலில் தான் ஜெயகாந்தனின் கதை வருகிறது. அதில் எளிய பிராமணப்பெண், அம்மன் சிலை போன்றவள், ஒரு கயவனால் எளிதில் பாலுறவுக்கு ஆட்படுத்தப்படுகிறாள். அவளை அவன் வலுக்கட்டாயமாக கவர்ந்து செல்லவில்லை. சொல்லப்போனால் பேசி ஏமாற்றி அழைக்கவும் இல்லை. அவளுக்குப் புதிய உலகத்தை எதிர்கொள்ளத் தெரியவில்லை, புதியசூழலை கையாளத்தெரியவில்லை என்பதனால் அவள் அவனுக்கு உடன்படுகிறாள். ஒரு வலுவான “நோ” வழியாக அவள் கடந்து வந்திருக்கலாம். ஆனால் அவள் காலாகாலமாக வீட்டில் அடைபட்டிருந்த பெண். அவளால் எதையும் மறுப்பது இயலாது. கைகால் உதற சொற்கள் தொண்டைக்குள் தாழ்ந்து போக மறுக்கத் தெரியாமல் இருந்த ஒரே காரணத்தாலேயே அவள் அவனுக்கு வயப்படுகிறாள். கூடவே அவளுடைய பருவ வயதின் விருப்பமும் இணைந்து கொள்கிறது.
இந்தக் கதை பெண்கள் படிக்கவும் வேலைக்கும் செல்லலாமா கூடாதா என்று அன்றிருந்த விவாதத்தின் ஒரு பகுதியாக ஆனதனாலேயே அத்தனை கொந்தளிப்பையும் கிளப்பியது. சொல்லப்போனால் கதைக்கு வெளியேதான் விவாதம் நடந்தது. பெண்கள் வீட்டுக்கு வெளியே சென்றால் இத்தனை எளிதாக நெறி அழிவார்களா? வீட்டைவிட்டு வெளியேறும் பெண்ணுக்கு தன் தெரிவுகளும் தன் வழியும் தெளிவாக இருக்காதா? தன்னளவில் பெண் பலவீனமானவள் தானா? அவ்வாறு ஒரு பெண் தவறிவிட்டால் அதை அக்குடும்பம் இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? அது வழிவழியாக வந்த குலநெறிகளுக்கும் ஆசாரங்களுக்கும் எதிரானதாக ஆகாதா? அவளை அச்செய்தியை மறைத்து ஒருவனுக்குத் திருமணம் செய்துவைப்பது ஏமாற்றுவது ஆகுமா? அவ்வாறு ஒருவன் திருமணம் செய்து கொண்டபின் தெரியவந்தால் அவன் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இப்படி பல கேள்விகள்.
அன்றைய விவாதத்தில் இருசாராருக்கும் சொல்வதற்கான தரப்புகள் இக்கதையில் இருந்தன. பெண்கள் வீட்டைவிட்டு சென்றால் அவர்களால் தங்களை தற்காத்துக் கொள்ள முடியாது என்பவர்களுக்கு இந்தக் கதை ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது. பெண்ணின் கற்பு என்பது உள்ளம் சார்ந்ததே ஒழிய உடல் சார்ந்தது அல்ல என்று வாதிடும் முற்போக்குத் தரப்பினருக்கும் ஒரு மேற்கோள் கதையாக அமைந்தது. அதை மேலும் விரிவு படுத்தி ஜெயகாந்தன் எழுதிய இந்த நாவல் அந்தக் கேள்வியை பல்வேறு வரலாற்று பின்புலத்தில் வைக்கிறது.
ஜெயகாந்தன் மார்க்சியர் என்றாலும் வரலாற்று வாதத்தில் நம்பிக்கையற்றவர். எனவே இக்கதை அது நடக்கும் காலத்தில் முன்பு செல்வதே இல்லை. மரபையோ வரலாற்றையோ ஆராய்வதில்லை. நடைமுறைத்தளத்தில் வைத்தே கதையை பேசுகிறது. இந்தக் கதை எந்தவகையிலும் அதற்கு முன்பிருந்த மரபையோ தொன்மங்களையோ குறிப்புணர்த்துவதில்லை, விவாதிப்பதில்லை. ஆனால் இதற்குள் அன்றிருந்த மரபுகள் அனைத்தும் உள்ளன. அனைத்து வகையான பாலியல் மீறல்களையும் அனுமதித்துக் கொண்டு மேலே ஒரு ஆசாரவாதத்தை போர்த்திக் கொண்டு இருக்கும் மரபின் முகமாகவே இதில் வெங்கு மாமா வருகிறார். வெறும் லௌகீக அற்பப் பிறவிகளாக வாழும் சூழலின் பிரதிநிதியாக கங்காவின் அண்ணா வருகிறார். வீட்டுக்குள் அடைபட்டு சுயசிந்தனையற்றிருக்கும் பெண்களின் முகமாக அம்மா. இந்த மூன்று தரப்புகளுக்குள் முட்டி முட்டி அலைக்கழியும் நவீனப்பெண் கங்கா. பழைய காலகட்டத்தில் முளைத்து புதிய காலகட்டத்தில் இலைவிடும் தளிர்.
ஜெயகாந்தன் எழுதிய அனைத்து கதைகளுக்கும் யுகசந்தி என்று தலைப்பு கொடுத்துவிடலாம். சமூக மாறுதலின் ஒரு காலகட்டத்தில் அந்த விழுமிய மாற்றங்களை தன் வாழ்க்கையிலேயே சந்திக்க நேரும் கதாபாத்திரங்கள் அவரால் எழுதப்பட்டவர்கள். சரிதவறுகளும் செல்வழிகளும் குழம்பிக்கிடக்கும் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தன்னையும் சூழலையும் மறுபரிசீலனை செய்து அழுதும் சிரித்தும் தங்கள் வழியைக் கண்டடைபவர்களும் வீழ்பவர்களும். ஆனால் அடிப்படையில் ஒரு மார்க்சியர் என்பதனால் அவர் எப்போதும் நம்பிக்கை சார்ந்த பார்வையையே தேர்ந்தெடுக்கிறார். அதற்கு ஒரே விதிவிலக்கென்று சில நேரங்களில் சில மனிதர்களையே சொல்ல முடியும். இது கங்காவின் மாபெரும் வீழ்ச்சியின் கதை.
வெளிவந்த காலத்தில் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியச்சூழலால் இந்த நாவல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு பல காரணங்கள். சிற்றிதழ்ச் சூழல் அன்று தன்னை மையப்போக்கிலிருந்து பிரித்துக் கொண்டு தனியடையாளத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தது. எது இலக்கியம் என்பதை விட எது இலக்கியம் அல்ல என்பதுதான் அன்றைய பேச்சுகளில் முக்கியமானது. பெரும்பாலும் மேற்கத்திய இலக்கியங்களைச் சார்ந்து ஒரு இலக்கியப்பார்வையை இங்கு உருவாக்க முடியுமா என்று முன்னோடி முயற்சிகள் நடந்து கொண்டிருந்த காலம். தீவிர இலக்கியம் என்பது எல்லாவகையிலும் பொதுமக்களின் ரசனைக்கு எதிரானதாகவும் மாற்றானதாகவும் இருக்கும் என்ற நிலைபாடு ஓங்கியிருந்தது.
அத்துடன் அன்றைய சிறுபத்திரிகையின் வாசகர்கள் என்பவர்கள் அதிகபட்சம் ஆயிரம் பேர். அவர்கள் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை விரும்புபவர்கள். பொது ரசனையை எவ்வகையிலும் தங்களுடன் இணைக்க விரும்பாதவர்கள். அவர்களில் கணிசமானவர்கள் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களோ ஒதுக்கப்பட்டவர்களோ ஆகவே அவர்கள் இருந்தனர். ஆகவே வாசிப்பு என்பதும் அழகியல் நிலைபாடு என்பதும் பொதுப்போக்கு மீதான ஒரு வஞ்சமாகவும் வன்மமாகவும் அவர்களிடம் இருக்கவும் செய்தது என்று இப்போது தோன்றுகிறது.
ஆகவே அவர்களின் நிராகரிப்புகளும் மிகக்கூர்மையாக இருந்தன. வெற்றி பெற்றவர் என்பதனாலேயே அதிகமாக வாசிக்கப்பட்டவர் என்பதனாலேயே ஜெயகாந்தன் அவர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். சிறுபத்திரிகைச் சூழல் சார்ந்த மயக்கங்கள் கலைந்து அதை பகல் வெளிச்சத்தில் வந்து பார்க்கும் இடத்திற்கு வந்துவிட்டிருக்கும் இன்று, சிறுபத்திரிகை சூழலின் உருவாக்கமாகிய நான் அன்றைய சிற்றிதழ்சார் வாசகர்களின் ‘பாடல்பெற்ற’ ரசனைக்கூர்மை மீது ஆழ்ந்த ஐயம் கொண்டிருக்கிறேன்.
முக்கியமாக முன்னோடிகள் வகுத்த வழியிலேயே பெரும்பாலும் அவர்களுடைய ரசனை நிகழ்ந்தது. அவர்கள் அன்று அதிகபட்சம் ஐம்பது பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாகவே இருந்தனர். அக்குழுக்களுக்கு தலைமை தாங்கிய ஒருசிலரின் கருத்துக்களையே பிறர் பகிர்ந்து கொண்டனர். உதாரணமாக மௌனி மணிக்கொடியிலும் பின்னர் தேனியிலும் எழுதிய காலகட்டத்தில் அவருடைய கதைகளை அன்றிருந்த மணிக்கொடியினரோ பிறரோ அடையாளம் கண்டுகொள்ளவோ பாராட்டவோ இல்லையென்று எம்.வி.வெங்கட்ராம் குறிப்பிடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் க.நா.சு. அவை முக்கியமான கதைகள் என்று சொல்ல ஆரம்பித்தார். மௌனியின் முக்கியத்துவம் தொடர்ந்து பேசி அவரால் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பின்னரே செல்லப்பா இணைந்து கொண்டார். அவர்கள் இருவருமே மௌனியின் இடத்தை தமிழில் நிறுவினார்கள். ஒருவேளை கு.ப.ரா. போல மௌனி முன்னரே இறந்துவிட்டிருந்தால் தனக்கு இலக்கியத்தில் வந்த அந்த முக்கியத்துவம் தெரியாமலேயே சென்றிருப்பார்.
இவர்களின் வாசிப்பு சார்ந்த உளநிலைகள் மிகச்சிக்கலானவை. தான் மட்டுமே தேடி வாசிக்கும் ஒன்று அபூர்வமான ஒன்றாக இருக்கவேண்டும் என்று இவ்வாசகன் நினைக்கிறான். தனக்குரிய இலக்கியமே எங்கோ பதுக்கப்பட்டிருப்பதாகவும், அதைத் தேடி நூலக அடுக்குகள் வழியாக தான் சென்று கொண்டிருப்பதாகவும் ஒரு கனவு அவனை இயக்குகிறது. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒருவகையில் எங்கோ மறைந்திருக்கும் புகழ் பெறாத ஒரு எழுத்தாளனைக் கண்டுபிடித்து தங்களுடையவனாக சொல்லும் ஒரு பாவனை அவனிடம் கைபடுகிறது. மௌனியும் பின்னர் நகுலனும் பின்னர் சம்பத்தும் ஜி.நாகராஜனும், ப.சிங்காரமும் இவ்வாறு வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது ரசனையின் தேடல் அல்ல. தன்னைப்பற்றிய ஒரு புனைவை உருவாக்கும் முயற்சி மட்டும் தான்.
ரசனை என்பது அனைவரும் கவனிக்கும் மேடையின் உச்சியில் நின்றிருப்பதால் ஜெயகாந்தனை புறக்கணிக்காது. எவராலும் கவனிக்கப்படாமல் இருந்ததனால் ப.சிங்காரத்துக்கு மேலதிக அழுத்தத்தையும் கொடுக்காது. அந்த சமநிலை அன்றும் இன்றும் சிற்றிதழ் சூழலில் இருந்ததில்லை. ஜெயகாந்தனை வாசிப்பதும் விவாதிப்பதும் சரி ஒரு அறிவு ஜீவியின் அடையாளத்தை தருவதில்லை என்பதனால் அவர் புறக்கணிக்கப்பட்டார், படுகிறார். அவர் விவாதிக்கப்பட்டு, படைப்புகளின் நுட்பங்கள் முழுமையாக வாசிக்கப்பட்டு, கடக்கப்படவில்லை.
அத்துடன் சமகால சர்ச்சைகள் பெரும்பாலும் படைப்புகளை மறைத்துவிடுகின்றன. படைப்புகளின் மீது பொதுக்கருத்து எனும் பெரும் கம்பளத்தை அவை போர்த்திவிடுகின்றன. பெண்ணின் சுதந்திரம் கற்பு ஆகிய இரு கோணங்களிலேயே அன்று ஜெயகாந்தனின் இந்நாவல் எதிர்கொள்ளப்பட்டது. அதை ஒட்டியே அனைத்து கருத்துகளும் வெளிவந்தன. ஆகவே இது அதைப்பற்றிய நாவல் மட்டுமே என்று முழுமையாகவே வகுக்கப்பட்டுவிட்டது. அது நாவலுக்கு மிக மேலோட்டமான ஒரு வாசிப்பை அளித்தது. அவ்வகையில் பெரும்புகழ் பெற்ற நாவல் அப்பெரும்புகழாலேயே மறைக்கப்படுகிறது என்பது உண்மைதான்.
ஐம்பதாண்டுகாலம் இந்நாவல் வாசிக்கப்பட்டதை இன்று பார்த்தால் அது இந்நாவலுக்கு நியாயம் செய்ய வில்லை என்று தான் தோன்றுகிறது. இத்தகைய சூழலில் இந்தப் பொதுவாசிப்பின் திரையைக் கிழித்து விலக்கி மேலதிக வாசிப்பை அளிப்பதும் புதிய வாசிப்புக்கான சாத்தியங்களைத் திறந்து கொடுப்பதும் விமர்சகனின் வேலை. ஆனால் அத்தகைய கூரிய விமர்சனங்கள் தமிழில் எப்போதும் இருந்ததில்லை. க.நா.சு. சுந்தர ராமசாமி போன்றவர்கள் இலக்கிய சிபாரிசுக்காரர்கள். இலக்கியங்களைச் சுட்டிக் காட்டுவதன் வழியாக ஒரு பொதுச் சித்திரத்தை உருவாக்க முனைந்தவர்கள்.. இலக்கியப் படைப்புகளுக்குள் சென்று பிறர் வாசிக்காதவற்றை வெளியே கொண்டு வைத்து புதிய சாத்தியங்களை நோக்கித் திறக்கும் வல்லமை கொண்ட எழுத்துக்கள் அல்ல அவர்களுடையவை. தமிழில் அத்தகைய விமர்சகனின் பெருங்குறை எப்போதும் இருந்துகொண்டிருக்கிற்து என்பதற்கு ஜெயகாந்தனின் இந்நாவல் மீதான வாசிப்பு ஒரு முக்கியமான சான்று.
நீண்ட இடைவெளிக்குப்பின் இந்நாவலை இன்று வாசிக்கையில் இதன் மொழிநடை புதிதாக இருப்பதுபோல் தோன்றியது வியப்பளித்தது. அதற்கான காரணம் என்ன என்று என் கோணத்தில் யோசித்தேன். செம்மை நடையில் எழுதப்பட்ட பகுதிகள் தான் எப்போதும் விரைந்து காலாவதியாகின்றனவோ என்று தோன்றியது. ஏனெனில் பேச்சு மொழி என்னும் உயிர்த்துடிப்பான ஒரு மொழிபிலிருந்து அறிவு பூர்வமாக அள்ளப்படுவது அந்த செம்மைநடை. அந்தக் காலகட்டத்திலுள்ள பொதுவான பிற மொழிபுகளின் பாதிப்புள்ளது அது. அன்றைய பத்திரிகை நடை, மேடைப்பேச்சுநடை, அரசுத் துறைகளில் பயன்படுத்தப்பட்ட மொழி ஆகிய பல விஷயங்கள் அதை தீர்மானிக்கின்றன.
ஜெயகாந்தன் இந்நாவலை கங்காவின் பேச்சு மொழியில் அமைத்திருக்கிறார். அந்த மொழி பெரும்பாலும் அப்படியேதான் இன்றும் புழங்குகிறது. இந்நாவல் உருவாக்கும் காலகட்டத்தின் நேரடிப் பிரதிநிதித்துவம் அந்த மொழிக்கு இருக்கிறது. ஆகவே அந்த மொழியினூடாக அந்தக் காலத்திற்குள் செல்ல முடிகிறது. கங்காவுடன் ஒரு நீண்ட உரையாடலில் ஈடுபட்ட உணர்வை இந்நாவல் அளிக்கிறது.
இன்றைய வாசிப்பில் இது பெண்சுதந்திரம் பற்றிய நாவல் அல்ல என்றே தோன்றுகிறது. இது பெண்ணின் தனித்தன்மை பற்றிய நாவல். பெண்ணின் பாலியல் உரிமை பற்றிய நாவல். பெண்ணில் பாலியல் தேடல் பற்றிய நாவலும் கூட. அவ்வகையில் தமிழில் எல்லாத் தளத்திலும் முதன்மையான் பெரும் படைப்புகளில் ஒன்று என்று இதை தயங்காமல் சொல்வேன்.
இக்கோணங்களில் இதுவரை இந்நாவல் வாசிக்கப்பட்டதில்லை. கங்கா தேடுவது தனக்கென ஒர் அடையாளத்தை. காலூன்றி நின்று கிளைவிரிக்க ஒரு பிடி மண்ணை. அதை ஒரு ஆண் தான் உனக்குக் கொடுக்க முடியும் என்று அவளிடம் மரபு சொல்கிறது. அவள் அதைத் தேடி கண்டடைந்து அங்கு நிற்க முயல்கிறாள். அது மாயை என்று பெரும் வலியுடனும் துயரத்துடனும் அவள் கண்டடைகிறாள். பிறிதொரு அடையாளத்தை தனக்கென தேடிக்கொள்ள அவளால் இயலவில்லை. மூர்க்கமாகத் தன்னைக் கலைத்துக் கொள்கிறாள்.
இன்னொரு கோணத்தில் வாசித்தால் இது கங்காவின் பாலியல் சுதந்திரத்துக்கான தேடலைக் காட்டுகிறது. அன்று காரிலிருந்து இறங்கி வருகையில் அவள் வாயில் ஒரு சூயிங்கம் இருந்தது. தான் ஒருவனுடன் இருந்ததை அவள் அன்னையிடம் சொல்லும்போது கூட அதை மென்றுகொண்டுதான் இருக்கிறாள். அம்மா அதை துப்பு என்கிறாள். அது ஒரு அசைபோடல். பெண்ணுடலின் கொண்டாட்டம்… ஆனால் அவளுக்கே அது தெரியவில்லை.
அம்மா அழுது ஊர்கூட்டி குடும்பத்தாலும் சுற்றத்தாலும் பழிக்கப்பட்டு கெட்டுப்போன பெண்ணாக தன் வாழ்க்கையை அவள் அமைத்துக் கொள்ளும்போது அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய பாலியல் விடுதலையைத்தான் அவள் தேடுகிறாள். இயல்பான சகஜமான பாலியல் உறவொன்றுக்கான தேடலே அவளை மீண்டும் பிரபுவிடம் கொண்டு சேர்க்கிறது. மேலும் நுட்பமாகப் பார்த்தால் பாலியல் வேட்கை அதில் உள்ளது. முதல் நாள் முதல் அணுகலிலேயே பிரபுவை அவள் ஏற்றுக்கொண்டது. பெண்ணென அவளில் உறையும் ஒன்றின் இயல்பான விருப்பத்தால் தான் அவளுக்குரிய ஆண் அவன். அதை அவள் உடல் அறிந்திருந்தது. உள்ளத்தின் ஆழம் அறிந்திருந்தது. பிறிதொருவன் அதேபோல வந்து அவளை அழைத்திருந்தால் சீறி எழுந்திருக்ககூடும்.
அவனை அவள் ஏற்றுக் கொள்வது சமூகமோ எதிர்காலமோ கற்பிக்கப்பட்ட நெறிகளோ தடையாக இருக்கவில்லை. ஏனெனில் அவை அனைத்தும் எண்ணத்தில் வருமளவுக்கு அவளுக்கு வயதாகி இருக்கவில்லை. பின்னர் அவனை மீண்டும் காண்பது வரை அவளுக்குள் அந்த சூயிங்கத்தை அவள் ரகசியமாக மென்று கொண்டு தான் இருந்தாள். உனது கணவன் கந்தர்வ முறைப்படி உன்னுடன் இருந்தவன் தான் முடிந்தால் அவனைத் தேடிக் கண்டுபிடி என்று வெங்குமாமா சொல்லும்போது அவள் அவனைத் தேடிச் செல்வது, மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு வீம்பினால் தனது ஆளுமையை தேடிக் கண்டடைய வேண்டும் என்ற வெறியினால். உள்ளாழத்தில் அது பாலியல் விருப்பினாலும் கூட.
அந்நெருக்கத்தின் ஒரு கட்டத்தில் மானசீகமாக அவனிடம் தன் உடலை எடுத்துக் கொள்ளும்படி அவள் மன்றாடிக் கொண்டே இருக்கிறாள். எனது படுக்கையில் உனக்கு இடமிருக்கிறது என்று உணர்த்திக் கொண்டே இருக்கிறாள். ஒரு கட்டத்தில் அதை நேரடியாகச் சொல்லும்போது அவன் துணுக்குற்று விலகுகிறான். உண்மையில் அவள் உடைந்து சிதறுவது அதிலிருந்து தான். அவளுடைய சுய கௌரவமா தனித்தன்மையா பாலியல் வேட்கையா எது அவமதிக்கப்பட்டது என்ற வினாவை இந்நாவலில் இறுதியில் எடுத்துக் கொள்ளும்போதுதான் அதுவரைக்கும் அந்த நாவலின் உள்விரிவுகள் பல பகுதிகளைக் கொண்டு திறந்து கொள்கின்றன. அவளின்சிதைவு ஒரு தற்கொலையா ஒருவகையான பழிவாங்கலா அல்லது உடைவா பல கோணங்களில் இன்று இந்த நாவலை நாம் வாசிக்க முடியும்.
இத்தகைய வாசிப்பு ஒன்றை அன்றைய சிறுபத்திரிகை சூழல் ஜெயகாந்தனுக்கு அளிக்கவில்லை என்பது ஒருவகை அநீதி. அதற்கு அன்றைய சிறுபத்திரிகை சூழலை ஆண்டு கொண்டிருந்தவர்களில் முன்னோடிகள் ஒரு காரணம். இன்று புதிய கோணத்தில் இந்நாவலை வாசிக்கலாம். புதிய கண்டடைவுகளை நோக்கிச் செல்லவும் கூடும். எந்தச் சிற்றிதழ் விமர்சகன் விழிமூடினாலும் தமிழ்ச் சூழலில் இந்நாவல் அளவுக்கு பெண்களின் ஆளுமையை விழைவை சுதந்திரத்தை பாலியல் வேட்கையை விவாதித்த பிறிதொரு நாவல் இல்லை என்ற உண்மை நிலைநிற்கத்தான் செய்யும்.
இதனுடன் ஒப்பிடுகையில் பெரிதும் கொண்டாடப்பட்ட மோகமுள் போன்றவை உள் மடிப்புகளற்ற உணர்வுப்பெருக்கான படைப்புகள். தளுக்கினால் மட்டுமே பெரும்பகுதியைக் கடந்து சென்றவை என்பதைக் காணலாம். குறிப்பாக இன்று ஜானகிராமனின் மோகமுள் போன்ற நாவல்களின் உரையாடல்கள் அர்த்தமற்ற வெறும் வளவளப்புகளாக சலிப்பை ஏற்படுத்துகையில் சில நேரங்களில் சில மனிதர்களின் கூரிய உரையாடல்களும் சுய விமரிசன நோக்கு கொண்ட எண்ணங்களும் ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் தீவிரமும் பலமடங்கு மேலான ஒரு முதன்மைப் படைப்பாளியை நமக்குக் காட்டுகின்றன. வரலாற்றில் அந்த இடம் என்றும் ஜெயகாந்தனுக்கு அளிக்கப்படும் என்றே நான் நினைக்கிறேன். அதை எனக்கு உறுதிப்படுத்திய ஒன்று என்று இந்நூலுக்கு சுரேஷ்குமார் இந்திரஜித் அளித்த முன்னுரையைச் சொல்வேன்.
சுரேஷ்குமார இந்திரஜித்சுரேஷ்குமார் இந்திரஜித்தை தமிழ் சிறுபத்திரிகை சூழலின் மனநிலைகளின் மையத்தை சார்ந்த ஒருவர் என்று அடையாளப்படுத்தலாம். இந்நாவலை இப்போதுதான் அவர் வாசிக்கிறார் என்பது தெரிகிறது. இன்று வாசிக்கையில் ஒரு தேர்ந்த சிற்றிதழ் வாசகன் ஒருவன் இந்நாவலில் கண்டு கொள்ளும் பெரும்பாலான அனைத்து நுட்பங்களையும் அவருடைய் வாசிப்பு கண்டடைந்து முன்வைக்கிறது. நேற்றைய முன்னோடிகள் ஜெயகாந்தனுக்குச் செய்த புறக்கணிப்புக்கு ஒரு பிராயச்சித்தமாகவும் சுரேஷ்குமாரின் முன்னுரை அமைந்துள்ளது. கூரிய சொற்களில் முற்றிலும் புதிய பார்வையில் ஜெயகாந்தனை மீட்டு முன்வைக்கும் சுரேஷ்குமாரின் இந்த முன்னுரை காலச்சுவடு இந்நாவலுக்கு அணிந்திருக்கும் கட்டமைப்புக்கு நிகரான பெறுமதியுள்ளது. அதன் பொருட்டும் இதன் தொகுப்பாசிரியர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
முதற்பிரசுரம் May 12, 2017
சூட்சுமபுரீஸ்வரர் கோயில்
[image error]கிழக்கு நோக்கிய இந்தக் கோவிலின் ராஜகோபுரம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இக்கோயிலில் கொடிமரம் (த்வஜஸ்தம்பம்) இல்லை. இக்கோயிலில் உள்ள சிவபெருமான் தெய்வீக (திவ்ய) லிங்கம். லிங்கம் மண்ணால் ஆனது என்பதால் ஆவுடைக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத்தின் மீது எப்போதாவது ஒருமுறை புனுகு மட்டும் பூசப்படும்
சூட்சுமபுரீஸ்வரர் கோயில்
சூட்சுமபுரீஸ்வரர் கோயில் – தமிழ் விக்கி
காவியம் – 36
கானபூதி சொன்னது. ஊர்வசி பாட்னாவுக்கு வந்து சில நாட்களுக்குள் அவளுக்குக் குரல்கள் கேட்கத் தொடங்கின. அவளுடைய வலதுசெவியில் ஒரு பெண்குரல் ”உன்னை விடமாட்டேன். நீ என்னைப் போல் சீரழிந்து தெருவில் இறப்பாய். அது வரை நான் அடங்கமாட்டேன்” என்றது. அவள் திடுக்கிட்டு திரும்பிப் பார்க்கும்போது மெல்லிய சிரிப்பொலியுடன் இன்னொரு இளங்குரல் இன்னொரு செவியில் ”நீ எங்களைப் போலவே சாகப்போகிறாய் நாங்கள் உன்னை விடப்போவதில்லை” என்றது.
“யார்? யார்?” என்று அவள் அஞ்சி திரும்பித் திரும்பி கேட்பாள். அந்தக் குரல்கள் தன் தலைக்குள்ளிருந்து கேட்கின்றனவா என்று எண்ணினால் தலைக்குள் இருந்து கேட்பது போலிருக்கும். அருகிருக்கும் அறைக்குள் இருந்து எவரோ ஒளிந்து நின்று தன்னிடம் பேசுகிறார்கள் என்று எண்ணினால் அது உண்மை என்றே தோன்றும்.
அவள் திரும்பத் திரும்ப தன் அருகிலிருக்கும் அறைகளை சட்டென்று கதவைத்திறந்து உள்ளே பார்த்தாள். சிறு சிறு பெட்டிகளைத் திறந்து பார்த்தாள். ஒவ்வொரு முறையும் கதவுக்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள் அல்லது திரைக்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று எண்ணி தேடினாள்.
தொடக்கத்தில் கொஞ்சம் விசித்திரமாக இருந்த அவளுடைய அந்த நடத்தை கொஞ்சம் கொஞ்சமாக விபரீதமாக ஆவதாக ருக்மிணி தேஷ்பாண்டே நினைத்தாள். “என்ன பார்க்கிறாய்?” என்றாள்.
“இல்லை, ஏதோ சத்தம் கேட்டது” என்று அவள் சொன்னாள். “யாரோ பேசுகிறார்கள்”
“இந்த வீட்டில் எதிரொலிகள் நிறைய இருக்கின்றன. ஒரு காலத்தில் இங்கே நிறைய பொருட்கள் இருந்தன. பொருட்கள் இல்லாமல் ஆகும்போது எதிரொலி கேட்கிறது” என்று ருக்மிணி தேஷ்பாண்டே சொன்னாள்.
ஊர்வசி அந்தக் குரல்களை மேலும் மேலும் துல்லியமாகக் கேட்கத்தொடங்கினாள். ”ஏற்கனவே நீ கருவுற்ற உன்னுடைய குழந்தைகளைக் கொன்றது நாங்கள்தான். உன் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கொல்வோம். அதகாகத்தான் இங்கு வந்திருக்கிறோம்” என்று அந்தக் குரல் சொன்னது.
இன்னொரு பெண் குரல் “நீ மீண்டும் மீண்டும் கருவுறுவாய். உன்னுடைய எல்லாக் குழந்தைகளையும் நாங்கள் கொல்வோம்” என்றது.
முதற்குரல் “விடவே மாட்டோம்… எங்களை பல ஜாதிக்காரர்கள் புணர்ந்தார்கள். எங்கள் ரத்தத்தைச் சாக்கடையாக்கினார்கள்… நாங்கள் விட மாட்டோம்” என்றது. “நாங்கள் உன் குலத்தையே அழிப்போம்”
“நீயும் பலசாதிச் சாக்கடைகள் கலந்து தெருவில் அழியவேண்டும்… அதுவரை உன்னை விடமாட்டோம்”
அந்தக் குரல்கள் மாறிமாறி இடைவெளியே இல்லாமல் பேசின. அவள் ஒரு கணம் சொந்தமாக யோசிக்க அவை இடம் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவை அவளை தொட்டுத்தொட்டு அழைத்துப் பேசத்தொடங்கின. படுக்கவோ உட்காரவோ முடியவில்லை. நடந்துகொண்டும் எதையேனும் செய்துகொண்டும் இருந்தால் அவற்றை சமாளிக்க முடிந்தது.
ஒரு நாள் தனக்கு பைத்தியம் பிடிக்கவிருக்கிறது என்னும் எண்ணம் அவளுக்கு தோன்றியது. இது பைத்தியமேதான். பைத்தியங்களுக்குத்தான் குரல்கள் கேட்கும் என அவள் அறிந்திருந்தாள்.
அவள் மனம் உடைந்து இருண்ட மூலையில் அமர்ந்து குமுறி அழுதாள். அவள் அழுவதை வேலைக்காரர்கள் பார்த்துவிட்டு ருக்மிணியிடம் சொன்னார்கள்.
ருக்மிணி அவளிடம் திரும்பத் திரும்பக் கேட்டாள் ”என்ன நிகழ்கிறது? ஏன் அழுகிறாய்?”
பலமுறை கேட்டபின், அதட்டி வற்புறுத்தப்பட்டபோது ஊர்வசி தன் காதில் கேட்கும் குரல்களைப்பற்றி சொன்னாள்.
“அது குரல்கள் அல்ல, நீயே கற்பனை செய்துகொள்வதுதான். பெண்களுக்கு நான்கு ஐந்து மாதம் கர்ப்பம் இருக்கும்போது அந்த மாதிரியான சில பிரமைகள் உருவாகும். இந்த சமையலறையில் யாராவது பேசினால் காற்றில் அந்தக்குரல் மிதந்து போய் அறைகளின் சுவர்களில் எதிரொலித்து, சம்பந்தமில்லாத இடங்களில் இருந்து கேட்கும். எனக்கே சில நேரங்களில் பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும் கேட்பதுண்டு. ஆனால் அவையெல்லாம் எதிரொலிகள் என்று எனக்குத் தெரிந்தபிறகு அது எனக்கு பொருட்டாக இருப்பதில்லை” என்று ருக்மிணி சொன்னாள்.
“இல்லை. இது வேறு… தெளிவாக என் பக்கத்தில் வந்து சொல்கிறார்கள், சிரிக்கிறார்கள். இந்தக்குரல்களை இதுவரை நான் கேட்டதே இல்லை” என்று அவள் சொன்னாள்.
“நீ கடவுளைக் கும்பிடு. கர்ப்பிணிப்பெண்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் கங்கைக்கரையில் உள்ளன நான் கூட்டிச்செல்கிறேன்” என்று ருக்மிணி சொன்னாள்.
கங்கைக்கரையில் அமைந்த வெவ்வேறு பெண் தெய்வங்களின் ஆலயங்களுக்கு அவள் ஊர்வசியைக் கூட்டிச்சென்றாள். இரு கால்களையும் விரித்து பிறப்புறுப்பை அகலத்திறந்து படுத்திருக்கும் லஜ்ஜாகௌரியின் சிறு கோயிலில் குங்குமத்தை அள்ளி அப்பிறப்புறுப்பில் போட்டு வணங்கி தன் நெற்றியில் போட்டுக்கொண்டு திரும்பி வந்தாள். மண்டையோட்டு மாலையணிந்து கையில் ஆயுதங்களுடன் நிற்கும் அகோர காலபைரவனின் முன்னால் நின்று வணங்கி வந்தார்கள்.
ஒவ்வொரு முறையும் கோவில்களுக்குச் சென்று வரும்போதும் அனைத்தும் சரியாகிவிட்டதென்றும், முற்றிலும் விடுபட்டு விட்டாள் என்றும் ஊர்வசி நினைத்தாள். கோவில்களில் நிற்கும்போது அந்தக்குரல்கள் கேட்கவில்லை. முற்றிலும் அவளுடைய உள்ளம் அவளுடையதாகவே இருந்தது. அப்போது அவள் அதுவரை கேட்டதெல்லாம் வெறும் பிரமைகள் என்றும், அவற்றை மிக எளிதாகக் கடந்துவிட முடியும் என்றும் அவள் நினைத்தாள். இவ்வளவு எளிமையான விஷயங்களுக்காகவா இத்தனை சோர்வுற்றோம் என்றும் எண்ணிக்கொண்டாள்.
ஆனால் திரும்ப வரும்போது ஒவ்வொன்றும் வேறொன்றாயின. வீட்டை நெருங்க நெருங்க ஏதோ நிகழப் போகிறது என்று பதற்றம் பிடித்துக்கொள்ளும். காரிலேயே நெளிந்து நெளிந்து அலைய ஆரம்பிப்பாள். சன்னல் வழியாக வெளியே பார்த்து ஒவ்வொன்றாக தேடிக்கொண்டிருப்பாள். திடீரென்று எதிர்பாராத ஒரு தலை திரும்பி அவளை ஒருகணம் கண்ணுக்குக் கண் பார்த்துவிட்டு செல்லும். அம்முகத்திலிருந்த வெறிப்பும் சிரிப்பும் அவளை திடுக்கிடச்செய்து மூச்சொலியுடன் அலறச்செய்யும்.
“என்ன? என்ன?” என்று ருக்மிணி கேட்பாள்.
”யாரோ பார்க்கிறார்கள் என்னைப் பார்க்கிறார்கள்”
”எல்லாம் உன் பிரமை. பேசாமலிரு .காலபைரவனை நினைத்துக்கொள். லஜ்ஜா கௌரியை நினைத்துக்கொள்” என்று ருக்மிணி சொல்வாள்.
மீண்டும் சன்னல் வழியாக அவள் வெளியே பார்ப்பதைப் பார்த்து ”நீ வெளியே பார்க்காதே” என்பாள்.
அவள் வெளியே பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டே வருவாள். அதுவரை பார்த்த காட்சிகள் கண்களுக்குள் ஓட அதிலிருந்து ஒரு முகம் திரும்பி அவளை கண்ணோடு கண் பார்த்து , அந்த வெறித்த சிரிப்புடன் அணுகி வரும். திடுக்கிட்டு அலறி அவள் எழுந்து அமர்வாள்.
“எப்படியாவது இதைக் கடந்து விடு. இன்னும் சில மாதங்கள் தான். நீ குழந்தை பெற்றுவிடுவாய். அதோடு எல்லாம் சரியாகிவிடும். இது ஒரு பேற்றுக்கால மனச்சிக்கல்தான்” என்றே ருக்மிணி அவளுக்கு ஆறுதல் சொல்வாள். ”எனக்கும் இந்த மாதிரியான ஏராளமான மனப்பிரமைகள் இருந்தன. இது ஒன்றும் பிரச்னையே இல்லை. அமைதியாக இரு அமைதியாக இரு”
வீட்டை நெருங்கி படிகளில் ஏறும்போது அவள் உள்ளம் படபடத்துக் கொண்டிருக்கும். எங்கோ ஓர் இடத்திலிருந்து ஒரு கேள்வி வரப்போகிறது. சிரிப்பொலி கேட்கப்போகிறது. எப்போது? எங்கு? அறைகளுக்குள் நடப்பாள். ஆடைகளைக் களைந்து மாற்றாடைகளை அணிவாள். முகத்தையும் கைகால்களையும் கழுவிக்கொண்டு அமர்ந்து டீ குடிப்பாள். கண்ணாடியில் பார்த்து தலை வகிட்டை சரி செய்து கொள்வாள். படுக்கை விரிப்பை சரி செய்து, தலையணையை சாய்த்து வைத்து, சரிந்து அமர முயல்வாள். ஒவ்வொன்றிலும் அவள் கவனம் எப்போது அந்தக் குரல் கேட்கத்தொடங்கும் என்பதிலேயே இருக்கும். முற்றிலும் அது கேட்காதோ என்ற எண்ணம் கூட வரும். அகன்றுவிட்டதா, மெய்யாகவே அகன்றுவிட்டதா காலபைரவனின் ஆற்றல் அவளைக் காத்துவிட்டதா?
“எப்படிக்காக்க முடியும்?” என்று அவள் காதருகே ஒரு குரல் எக்களித்தது. ”நாங்கள் உன்னுடனேயே தான் இருக்கிறோம். உன் குழந்தைகளுடன்தான் செல்லப்போகிறோம்.”
“நாங்கள் உன்னை விடவே போவதில்லை. எங்களை நீ விலக்கவே முடியாது. ஏனென்றால் நாங்கள் உன் சாபத்தை வரமாக வாங்கி வந்திருப்பவர்கள்”
அவள் இருகாதுகளையும் கைகளால் பொத்திக்கொண்டு வீறிட்டு அலறி அறையைவிட்டு வெளியே ஓடி அதே விசையில் கூடத்தில் விழுந்தாள். வேலைக்காரர்களும் ருக்மணியும் தேடி ஓடிவந்து அவளைத்தூக்கி உட்கார வைத்து அவள் முகத்தில் நீர் தெளித்தார்கள்.
அவள் வெறியுடன் ”என்னை விடமாட்டார்கள்! என்னைவிட மாட்டார்கள்! இந்தப் பேய்கள் என் குழந்தையை கொன்றுவிட்டுத்தான் அடங்குவார்கள்” என்று கதறினாள்.
அதன்பிறகு ருக்மிணி அவளை மருத்துவர்களிடம் கூட்டிச் செல்லத்தொடங்கினாள். மருத்துவர்கள் அவளுக்கு மெல்லிய உளச்சிதைவின் தொடக்கம் இருப்பதை சொன்னார்கள். ருக்மிணியிடம் “தொடக்கம்தான். மாத்திரைகள் தருகிறோம்” என்றனர்.
ஊர்வசியிடம் “ஒரு சிறு மரப்பிரமை. சரியாகிவிடும். மாத்திரைகளைச் சாப்பிடுங்கள்” என்றார்கள்.
அவள் ”மிகத்தெளிவான குரல்கள். மிக வலுவான குரல்கள்… அவை விடாப்பிடியாக காதில் கேட்கின்றன. நான் சற்றும் எண்ணியிராத விஷயங்களை சொல்கின்றன. வெறும் பிரமையல்ல. மெய்யாகவே குரல்கள் கேட்கின்றன” என்றாள்.
டாக்டர்கள் “அதெல்லாம் நம் மனம் கற்பனை செய்வதுதான்… சரியாகிவிடும்” என்றனர்.
ஆனால் டாக்டர்கள் ருக்மிணியிடம் வேறுமாதிரி சொன்னார்கள். ”குரல்கள் கேட்பது ஸ்கிசோஃபிர்னியாவின் தொடக்கம்” என்று மருத்துவர் ரவீந்தர் குப்தா சொன்னார். ”ஆனால் மாத்திரைகள் மிக எளிதாக அதை கட்டுப்படுத்திவிடும்… நம்பிக்கையுடன் இருங்கள்.”
அவள் அவர் அளித்த மாத்திரைகளை அச்சத்துடன் தயங்கித்தான் விழுங்கினாள். ஆனால் அவை தன்னை அமைதிப்படுத்துவதை உணர்ந்து கொண்டாள். அவள் மெல்ல தரையில் அமர்வாள். அந்தத் தரை ஒரு மாபெரும் பனிப்பரப்பாகும். குளிர்ந்து வழுக்கும் பனிப்பரப்பு. அதில் அவள் வழுக்கி வழுக்கிச் செல்லத் தொடங்குவாள். அந்தச் சரிந்த பரப்பை அவள் அள்ளி அள்ளி பற்றப் பற்ற அது கைகளிலிருந்து நழுவிச் சென்று கொண்டே இருக்கும். வழுக்கிச் செல்வதின் விரைவு கூடிக்கூடி ஒரு கட்டத்தில் மிக விரைவாக அவள் சென்று அடியிலாத ஆழம் கொண்ட ஏதோ ஒன்றில் விழுந்து அந்த ஆழத்திற்குள் பறந்து கீழிறங்கிச் சென்று கொண்டே இருப்பாள்.
அதன்பிறகு நினைவு வரும்போது அவள் கட்டிலில் படுத்திருப்பாள். அவள் முகம் பல மடங்கு வீங்கிப்போயிருக்கும் உடல் முழுக்க நீர் நிரம்பிய ஒரு பெரிய தோல் குடுவை போலிருக்கும். உதடுகள் உலர்ந்து அவற்றை அசைக்கும்போது அவை உடைந்துவிடும் என்று தோன்றும். கண்ணிமைகள் எடைகொண்டு அந்த எடை தாளாமல் சரிந்து சரிந்து கண்களை மூடிக்கொண்டே இருக்கும். அவள் மெல்லிய குரலில் “தண்ணீர்! தண்ணீர்!” என்று கேட்க பணிப்பெண்கள் தண்ணீர் கொண்டு கொடுப்பார்கள்.
தண்ணீர் குடித்து எழுந்தமர்ந்து, கழிப்பறைக்கு சென்றுவிட்டு, மெல்ல நடந்து கூடத்திற்கு வந்து அமர்வாள். சுற்றியிருக்கும் வீடு எழுந்தமைந்து எழுந்தமைந்து அலைபாய்ந்து கொண்டிருக்கும். நேர் எதிரிலிருக்கும் சுவரைப் பார்த்தால் அந்தச்சுவர் திரைச்சீலை போல நெளியத்தொடங்கும். தொலைதூரத்துக் குரல்கள் சட்டென்று மிக அருகே கேட்கும். மிக அருகே நின்று பேசும் குரல்கள் மயங்கி மயங்கி உருக்கொண்டு அலைக்கழிக்கும். அந்த அவஸ்தை பல நிமிடங்கள் தொடரும்.
மிக மெதுவாக அவள் ஒவ்வொன்றாக எண்ணி எண்ணி தன்னைத் தொகுத்து, தான் எங்கிருக்கிறோம் என்றும் என்னவாக இருக்கிறோம் என்றும் வகுத்துக்கொண்டு, மீண்டு வருவாள். உடல் அசைக்க முடியாத எடைகொண்டிருப்பது போலிருக்கும். கைகளைத் தூக்கி மடியில் வைப்பதற்கே மிகப்பெரிய அளவில் மூளையைச் செலுத்தி முயலவேண்டியிருக்கும். தன் தோளிலிருந்து சரிந்த முந்தானையை சரிசெய்வதற்கே பத்து நிமிடங்களுக்கு மேல் அவளுக்குத் தேவைப்படும். கைகளுக்கு அவளுடைய எண்ணம் சென்று சேரவே நீண்ட நேரமாகும். கைகளை நோக்கி தன் எண்ணம் ஓடிச்செல்வதைக்கூட அவளால் உணர முடியும். எண்ணிய ஒன்றை சொல்வதற்கு பல நிமிடங்களாகும். அவள் உள்ளம் சொற்களை உணர்ந்தபின் அச்சொற்களை நாக்கை நோக்கி செலுத்தமுடியாது. நாக்கு அசைவில்லாமலிருக்கும். பேசத்தொடங்கும்போதே ஓரிரு சொற்களிலேயே குரல் உடைந்து அழத்தொடங்குவாள்.
ஆனால் அந்தக்குரல்கள் நின்றுவிட்டிருந்தன. தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுந்தோறும் அந்தக் குரல்களைக் கேட்பது இல்லாமலாயிற்று. தூக்கம் அவளுக்கு பிடித்திருந்தது. மிகப்பாதுகாப்பாக ஒரு அபாயகரமான இடத்தைக் கடந்துவிட்டது போல ஒவ்வொரு தூக்கத்துக்குப் பிறகும் உணர்ந்தாள். ஆகவே அவள் அந்த மாத்திரைகளை விரும்பத்தொடங்கினாள். மாத்திரைகளை தரும்படி அவளே கேட்டு வாங்குவாள். அவற்றை சாப்பிட்டுவிட்டு, வெண்மையான விரிப்பு பரவிய மெத்தையில் படுத்து, இதமாக கைகால்களைப் பரப்பிக்கொள்ளும்போது கையும் காலும் தனித்தனியாக துண்டிக்கப்பட்டு தனித்தனி உறுப்புகளாக அவள் அந்த மெத்தை முழுக்க பரவிக்கிடப்பதாகத் தோன்றும். அவள் கைகள் அவளிடமிருந்து அகன்று செல்லும். கால்கள் அவளைவிட்டு விலகிச்செல்லும். அவை அறையைவிட்டு வெளியே விலகி விலகி செல்ல அவள் அந்தப்பகுதி முழுக்க பரவி மிகப்பெரிய இடத்தை நிரப்பிக் கிடப்பாள். ஒவ்வொரு உறுப்பும் மெத்தையில் அழுந்தி அழுந்தி புதைந்து போகும். அவள் உடல் மெல்லிய சேற்றில் புதைவது போல அந்த மெத்தைக்குள் புதைந்து போகும்.
உடல் முற்றிலும் புதைந்த போனபிறகு அவள் மட்டும் தனித்து அந்தக் கட்டிலருகே மிகச்சிறிய உருவத்தில் அமர்ந்திருப்பது போல இருக்கும். ஒரு விரலளவுக்கான ஒன்றாக. மூன்று அங்குலம் மட்டுமே கொண்ட உருவம். ஆத்மா மூன்று அங்குலம் கொண்டது என்று யாரோ எங்கோ சொன்னார்கள். யார்? இவ்வளவு சிறிய தன்னை யாரோ பிடித்து ஒரு சிறு டப்பாவுக்குள் அடைத்துக்கொள்ள முடியும். ஒரு சிமிழில் அடைத்து கடலில் வீசிவிடமுடியும். அவ்வாறு அமர்ந்திருக்கும்போது அவள் அருகே இருவர் அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள். இரு கரிய நிழல்கள்.
அந்நிழல்கள் தன்னுடைய நிழல்கள் தான் என்று அவள் முதலில் எண்ணினாள். ஆனால் இரண்டு நிழல்கள் எப்படி வந்தன? மெல்லக் கைநீட்டி ஒரு நிழலைத் தொட்டபோது அது நீர்ப்பிம்பம் போல அதிர்ந்து விலகிக்கொண்டது. திரும்பி இன்னொரு நிழலைப் பார்த்தபோது அது மிக அருகே வந்திருப்பதைக் கண்டாள். அந்த நிழலுருவத்துக்கு கண்களும் பற்களும் இருந்தன. மிக அருகே அது மின்னும் கண்களுடன் சிரிப்பது போல் இருந்தது.
”நீங்கள் யார்?” என்று அவள் கேட்டாள்.
”நாங்கள் தொலை தூரத்திலிருந்து வருகிறோம். மிகத்தொலைவிலிருந்து…”
”எங்கிருந்து? எங்கிருந்து?” என்று அவள் கேட்டாள்
”நீ பிரதிஷ்டானபுரி என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?”
”இல்லை” என்று அவள் சொன்னாள்.
”அதன் இன்றைய பெயர் பைத்தான். நெடுந்தொலைவில் இருக்கிறது அந்த ஊர். அங்கே ஒரு மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையின் எல்லா வாசல்களும் பூட்டப்பட்டிருக்கின்றன. அதற்கு உள்ளே போகவும் வெளியே வரவும் எந்த வாசலும் கிடையாது. முற்றிலும் இருண்ட மாளிகை. அந்த மாளிகை ஒருகாலத்தில் ஒரு மாபெரும் கல்விச்சாலையாக இருந்தது. ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட நூலகம் அங்கு இருந்தது. பலநூறு பேர் அங்கு வந்து மொழிகளையும் இலக்கியமும் கற்றுத் தேர்ந்தார்கள். அங்கே அறிஞர்கள் கூடி விவாதம் செய்தார்கள். அழகிய திண்டுகளும் அமர்விடங்களும் கொண்டதாக அது இருந்தது…”
“அந்த மாளிகையின் எல்லா வாயில்களும் இன்று பூட்டப்பட்டிருக்கிறது” என்று கிரீச்சிட்டு கூவியது இன்னொரு நிழல். “வெளியே அது புழுதியும் அழுக்கும் படிந்து மட்கி பாழடைந்துவிட்டது. உள்ளே அதன் புத்தகங்கள் அனைத்தும் நைந்து மட்கி செடிகளால் மூடப்பட்டு காடாகிவிட்டன. அந்தக்காட்டுக்குள் பறவைகளும் விலங்குகளும் செறிந்திருக்கின்றன. இரவு எந்நேரமும் அங்கே குடியிருக்கிறது. அந்த மாளிகையை எல்லாப் பக்கமும் மூடியது யார்?”
”யார்?” என்று அவள் கேட்டாள்.
”நீ! நீதான் அதை மூடினவள். அதற்காக உன்னை பழிவாங்கத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். உன்னையும் உன் குடும்பத்தையும் முற்றாக பழி வாங்குவோம். கடைசியில் துளிக்குருதி வரை குடித்தபிறகுதான் அடங்குவோம்.”
”நான் எதுவும் செய்யவில்லை, எனக்கு எதுவும் தெரியாது. என்னை எதற்கு பழிவாங்குகிறீர்கள்?” என்றாள்.
”நீ துக்காராமை அறிந்திருக்கிறாயா?”
”இல்லை, அப்படி எவரையுமே நான் கேள்விப்பட்டதில்லை” என்று அவள் சொன்னாள்.
”உனது கணவனின் தங்கை ராதிகா தேஷ்பாண்டே அவனைத்தான் காதலித்தாள். மணந்து கொண்டாள்”
”அது எனக்குத் தெரியாது… எனக்குத் தெரியாது…” என்று அவள் சொன்னாள்.
”ராதிகா தேஷ்பாண்டேயை உன் கணவன் அனுப்பிய கொலைகாரன் ஒரே வெட்டில் கழுத்தையும், இன்னொரு வெட்டில் வயிற்றையும் கிழித்து வீழ்த்தினான்.”
”இல்லை எனக்குத் தெரியாது தெரியாது” என்று அவள் சொன்னாள்.
”அவளை இழுத்து சென்று ஒரு பெரிய சாக்கில் கட்டி உடன் இரண்டு பெரிய இரும்பு வளையங்களைக் கட்டி ஓர் ஏரியில் வீசினார்கள். அவள் உடல் மட்கி சதைக்கூழாகக் கண்டெடுக்கப்பட்டது. அப்படியே எரித்துவிட்டார்கள்.”
”தெரியாது. எனக்குத் தெரியாது எனக்கு எதுவுமே தெரியாது” என்று அவள் அலறினாள். ”நீ ஏதோ உளறுகிறாய். என்னை தவறுதலாகப் பிடித்திருக்கிறாய்.”
மறுபக்க நிழல் அவளைத் தொட்டு உலுக்கி ”இங்கே இங்கு பார் அது பொய். உன்னை குழப்புவதற்காக பொய் சொல்கிறது. உன்னிடம் உண்மையை சொல்வதற்காக நான் வந்திருக்கிறேன்.”
”சொல், என்ன உண்மை?” என்று அவள் கேட்டாள்.
”நீ குழந்தை பெறுவது உன்னுடைய மாமியாருக்கு பிடிக்கவில்லை. அவள் உனக்கு விஷமூட்டுகிறாள். உன் சாப்பாட்டில் உப்பு போல கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை ஏற்றுகிறாள். அந்த குரல்கள் கூட உன் மாமியார் உனக்கு வைத்த சூனியம்தான். நன்றாக எண்ணிப்பார், ஒவ்வொரு முறையும் நீ கருவுற்றபோது உன் வீட்டுக்கு உன் மாமியார் வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் சென்று சிலநாட்களில் உன் கரு கலைந்திருக்கிறது. நீ நஞ்சூட்டப்பட்டாய் உன் குழந்தைகள் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்படுகின்றன.”
”ஏன்?” என்று அவள் கேட்டாள்.
”ஏனெனில் உனக்குக் குழந்தை பிறக்கக்கூடாதென்று உன் மாமியார் எண்ணுகிறாள். உனக்கு குழந்தை பிறந்தால் உன் கணவன் உன்னிடம் அன்பாக இருப்பான் என்று அவள் நினைக்கிறாள். உன்னை அவனிடமிருந்து பிரிக்க திட்டமிடுகிறாள்.”
”ஏன்?” என்று அவள் மீண்டும் கேட்டாள்
”உன் கணவனுக்கு முதற்குழந்தை பிடிக்கவில்லை. ஆனால் பெண் குழந்தை பிறந்தால் அவன் உன்னுடன் ஒட்டுதலாக இருக்கக்கூடும். அப்படி ஆகக்கூடாது என்று அவள் நினைக்கிறாள்.”
”அப்படியா?”
மறுபக்க நிழல் அவளை தொட்டு உசுப்பி அழைத்தது. “இதோ பார், இவர்கள் பசப்புகிறார்கள். உன் மாமனாரின் குடும்பத்தில் இருக்கும் பெண்பழி யாருக்குத் தெரியாது?”
அவள் திகைத்து விழித்துக்கொண்டாள். அவள் அறைக்குள் வெயில் நிறைந்திருந்தது. ஜன்னல் வழியாக வந்த இலைகளின் நிழல்கள் அறைக்குள் கூத்தாடிக்கொண்டிருந்தன.
(மேலும்)
பேய்கள் எழும் காலம் – கடலூர் சீனு
திருவண்ணாமலை பகுதியில் ஒரு சிறிய சமணப் பயணம் முடித்துத் திரும்பி, அந்த உணர்வு நிலையின் தொடர்ச்சியாக அப்படியே மீண்டும் என காண்டீபம் நாவலை சிறு சிறு இடைவெளிகள் விட்டு இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன். புனைவு அளிக்கும் உத்வேக கற்பனை, நிலம் அளிக்கும் அக விரிவு, இதனோடு தொடர்பு கொண்ட அடிப்படை பண்பாட்டுச் செய்திகள், அது சென்று தொடும் உள்ளாழம், இவையெல்லாம் ஒன்று கூடினால் அதில் எழுந்து பறந்த என்னால், அந்த வானிலிருந்து மீண்டும் தரைக்கு வருவதே ஆகாத காரியம்.
இளைப்பாற ஏதேனும் கேளிக்கைப் படம் பார்க்கலாம் என்றால், அது இளைப்பாறலுக்கு பதிலாக வேறு எதையாவது கிளர்த்தி விடுகிறது. உதாரணத்துக்கு நான் இந்த வருடம் இதுவரை அரங்கில் சென்று பார்த்த ஒரே ஒரு படமான மர்மர் படத்தை சொல்லலாம். கிட்டத்தட்ட ஜீரோ பட்ஜெட்டில், நல்ல ஒளிப்பதிவு, நல்ல சவுண்ட் டிசைனிங், நல்ல மேக்கிங் கில் எடுக்கப்பட்ட திகில் படம். தங்களது யூடியூப் சேனலுக்காக அமானுஷ்ய விஷயங்களை படம் பிடிக்க காட்டுக்குள் செல்கிறார்கள் ஐவர். என்ன செய்தால் அங்குள்ள அமானுஷ்ய ஆற்றலை கிளர்த்த முடியுமோ அதை செய்கிறார்கள். அந்த அமானுஷ்ய ஆற்றல் என்ன செய்தது அந்த ஐவரும் தப்பித்தார்களா இதுதான் கதை. கதையாகவும் படமாகவும் சுவாரசியமான ஒன்றுதான். ஆனால் இதன் கான்செப்ட் எனக்கு கடுமையான ஒவ்வாமையை அளித்தது.
சப்த கன்னியர்கள், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட பௌர்ணமி இரவில், குறிப்பிட்ட காட்டுக்குள் குறிப்பிட்ட குளத்தில் வந்து குளிக்கிறார்களாம். அதை இவர்கள் படம் பிடிக்கிறார்களாம். அந்த சப்த கன்னிகள் இவர்களை தனித்தனியே தலையை வெட்டி குருதியை குடித்து கொன்று விடுகிறதாம். யோசித்துப் பாருங்கள் கன்னி மேரி எனும் தெய்வத்தைக் கொண்டு, இதே கான்செப்டில் இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டால் அதை முதல் காட்சி தாண்டினால் அரங்கில் பார்க்க முடியுமா? மாறாக மர்மர் படம் வெகுமக்கள் ஊடகத்தில் வைத்து செய்த இந்த ஆபாசமான திரித்தல் வேலையை மறுதலித்து இங்கே ஒரே ஒரு முனகல் கூட எழவில்லை. அடிப்படையில் இந்த கான்செப்ட்டே மேலை மரபின் கோதிக் இலக்கியம் வகையை தழுவியது. அந்த கோதிக் இலக்கியத்தில் இத்தகு அமானுஷ்யங்கள் நிகழ ஒரு நோக்கம் இருக்கும். மாறாக இதில் திரித்தல் என்பதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.
ஆகவே இம்முறை இளைப்பாற திரைப்படத்தை உதறி, கிராபிக் நாவல்கள் வாசிக்கலாம் என்று முடிவு செய்து சில கிராபிக் நாவல்கள் வாசித்தேன். கிராபிக் நாவல் வாசிப்பதில் இரண்டு வசதி உண்டு.அது நல்ல கிராபிக் நாவல் எனில், அது ஒரே நேரத்தில் காட்சி இன்பம் வாசிப்பு இன்பம் இரண்டையுமே தர வல்லதாக இருக்கும். மேற்கண்ட கிராபிக் நாவல் அட்டைப்படத்தில் இரண்டு சுவாரஸ்யங்கள் காணலாம். முதலாவது இது காமிக்ஸ் நிறுவன வெளியீடு எனும் செய்தி. இரண்டாவது இது கிராபிக் நாவல் எனும் செய்தி. காமிக்ஸ் எனும் நூற்றாண்டு கால பொது வகை மாதிரிக்குள் இருந்து கிராபிக் நாவல் எனும் தனி பிரிவு, தனக்கான தனி வரையறைகளை முன்வைத்து கிளைத்த ஆண்டு 1970. வில் ஐஸ்னர் எனும் சித்திரக் கதை ஆசிரியர்தான் தனது, கடவுளுடன் ஒப்பந்தம் மற்றும் பிற கதைகள் என்ற தலைப்பில் அமைந்த சித்திரக் கதையை அதன் முன்னுரையில் அது கிராபிக் நாவல் என்று சொல்லி அந்த பெயரை முதன் முதலாக காயின் செய்கிறார். மெல்ல மெல்ல திரண்ட அதன் வடிவக் கூறினை ஆர்ட் ஸ்பீகல்மேன் எனும் வரைகலை நாவல் ஆசிரியர் தனது மவுஸ் எனும் கிராபிக் நாவல் வரிசை வழியே முழுமை செய்கிறார். 2000 களில் கிராபிக் நாவல் என்பது காமிக்ஸ் என்பதில் இருந்து விலகி, முதிர்ந்த ரசனை கொண்டோர் ஈடுபடத்தக்க அல்லது அவர்களுக்கானது என்று மட்டுமே ஆன தனித்ததொரு கலைப் பிரதியாக நிலைபெற்றது.
சினிமா கலை அதன் உச்சம் தொட்ட பிறகு பரிணாம வளர்ச்சி கண்ட கலை இது எனில் சினிமா அளிக்கும் அனுபவத்தில் இருந்து கிராபிக் நாவல் அளிக்கும் அனுபவம் எங்கு வேறுபடுகிறது? சினிமாவில் காட்சி சட்டகங்களில் அதன் தொழில்நுட்பம் அதன் மேல் படிய வைக்கும் காலத்தின் களிம்பு உண்டு. மாறாக நல்ல கிராபிக் நாவலில் அதன் காட்சி சட்டகங்கள் காலத்தின் பிடிக்கு ஒரு எட்டு தள்ளி நிற்கும் தனித்ததொரு ஓவியக் கலை வெளியால் ஆனது.
சினிமா அசையும் பிம்பங்களை கொண்டு தாக்கத்தை உருவாக்குவதை தனது அடிப்படை அலகாக கொண்டது. கிராபிக் நாவல் நிலைத்த பிம்பங்களை கொண்டு தாக்கத்தை உருவாக்குவதை தனது அடிப்படை அலகாக கொண்டது. சினிமாவில் அதன் அடிப்படையான நிகழ் பிம்பத்துக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் கதையை, இசையை, ஓவியத்தை அது எடுத்துக் கொள்ளும். மாறாக கிராபிக் நாவல் கதை, ஓவியம் இந்த இரண்டை மட்டுமே இரு சிறகுகள் என்று கொண்ட பறவை. சினிமாவில் அது தனது நிகழ் பிம்பம் கொண்டு ஒரே ஒரு ஷாட் ஐ எத்தனை நிமிடம் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளும். கிராபிக் நாவல் தனது நிலை பிம்பம் கொண்டு ஒரே ஒரு காட்சி சட்டகத்தை ஒரு ஷாட் என்று உணர வைக்கும். சினிமாவில் (ஷாட்கள் சேர்ந்தால் சீன். சீன்கள் சேர்ந்தால் சீக்வென்ஸ். அனைவரும் அறிந்த மெல் கிப்சன் இயக்கிய அப்போகலிப்டோ படம் வெறும் மூன்றே சீக்வென்ஸில் நிகழ்ந்து முடியும் ) ஒரே ஒரு சீக்வென்சில் படம் எடுப்பது என்பதெல்லாம் பரிசோதனை முயற்சியாகவே செய்ய முடியும். மாறாக ஒரே ஒரு சீக்வென்ஸ் கொண்டு நிகழும் கதைகளை கிராபிக் நாவலில் மிக இலகுவாக கொண்டு வந்து விட முடியும். தனித்துவமான வலிமையான சில காட்சிப் படிமங்கள் கொண்ட வெளிப்பாடு, ஒரு தீவிர இலக்கிய பிரதியின் குறு நாவலோ, நாவலோ போல கூர்மை, அடர்த்தி, உள்ளடுக்குகள், விரிவு, ஆழம், கற்பனை சாத்தியங்கள், சொல்லாமல் காட்டாமல் உணர்த்தி செல்லும் சப் டெக்ஸ்ட் இவை கொண்ட உள்ளடக்கம் இவற்றின் சரி விகித கலவையாகவே நல்ல கிராபிக் நாவல் அமையும்.
மற்றபடி இந்த கிராபிக் நாவல் தனித்ததொரு கலைப் பிரதியாக கிளைக்க, அது எதிர் கொண்ட சவால்களை கடக்க அதற்கு மிக வசதியாக இருந்த பல களங்களில் முதன்மையான மூன்றில், முதலாவது உருவெளி தோற்றங்கள் வழியே அலைக்கழியும் பாத்திரங்கள் நிகழும் களம்,இரண்டாவது ஹாலோகாஸ்ட் சூழல் பின்னணி கொண்ட களம், மூன்றாவது கோதிக் பாணி இலக்கியங்கள் நிகழும் களம். மேற்கண்ட டோடோ ஃபராகி கதை எழுதிய, பாஸ்குவாலே ஃரைசென்ட்டா ஓவியங்கள் வரைந்த, s. விஜயன் மொழியாக்கம் செய்த லயன் காமிக்ஸ் வெளியீடான பனியில் ஒரு குருதிப்புனல் கிராபிக் நாவலும் கோதிக் லிட்ரேச்சர் வகைமாதிரியை சேர்ந்ததே.
கோதிக் இலக்கியம் எனும் வகைமை குறித்து நான் அறிய விரும்பியது விஷ்ணுபுரம் நாவலுக்கு பிறகே. எழுத்தாளர் சுஜாதா விஷ்ணுபுரம் குறித்து எழுத நேரும்போதெல்லாம் அந்த நாவல் இந்த வகைமையை சேர்ந்தது என்று குறிப்பிடுவார். அதன் பிறகே அது குறித்து தேடி சென்று வாசித்தேன். (கோதிக் இலக்கிய வகைமை கொண்ட வெளிப்பாட்டுக் கூறுகள் சில விஷ்ணுபுரம் நாவலில் உண்டு, ஆனால் விஷ்ணுபுரம் கோதிக் வைகைமைக்குள் வராது) 12 ஆம் நூற்றாண்டு துவங்கி 16 ஆம் நூற்றாண்டு வரை மேலை மரபில் நிகழ்ந்த கோதிக் கலை என்பது தனி. பண்படாத அல்லது காட்டுவாசித்தனமான என பொருள்படும் அதன் பெயர்க்காரணம் உள்ளிட்டு அது சார்ந்த அனைத்தும் தனி. கோதிக் இலக்கியம் என்பது 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் துவங்கிய ஒரு இலக்கிய அலை. பிரைம் ஸ்டோகர் டிராகுலா அதன் செவ்வியல் பிரதி. எட்கர் ஆலன் போ அந்த அலையின் முதன்மை ஆளுமைகளில் ஒருவர்.
நெல்லையில் நெல்லையப்பர் கோயில் பூதத்தார் முக்கு எதிரே காவல் பிறை தெருவில் எங்கள் வீடு. தெரு முனையில் இடதுபக்கம் மிகச் சிறிய உச்சினி மாகாளி அம்மன் கோயில். துடியான தெய்வம். 35 வருடம் முன்பு வரை, வருடம் ஒரு முறை அந்த அம்மன் கோயில் கொடைக்கு 108 ஆடுகள் பலி தர படும். தெருவெங்கும் கொழுங்குருதி வழிந்தோடும். அதில் மிதித்து நடந்து சிவந்த பாதங்களோடுதான் எங்கள் வீட்டுக்குள் போக முடியும். 35 வருடம் முன்னர் இது நிலை என்றால், பல்லவர் காலம் எல்லாம் எப்படி இருந்திருக்கும்? உலகெங்கும் இது எப்படி இருந்திருக்கும்?
மிக பின்னர் எங்கள் பகுதியில் யாதவர் செல்வாக்கு ஓங்கியது. அந்த கோயில் சார்ந்த அனைத்தும் யாதவர் கைகளுக்கு போக, அங்கே ஓடிய குருதி நின்று, குருதி பிரசாதம் குங்கும பிரசாதமாக மாறியது. ஆம் உயிர் பலியைதான் ஒழித்தார்களே தவிர உயிர் பலி கேட்ட தெய்வத்தை அல்ல. இந்திய நில பண்பாட்டின் உள்ளுறை என்று அமைந்த இந்த அம்சம் உலகின் பிற பகுதிகளில் கிடையாது. கிறிஸ்துவம் நுழைந்த நிலங்களில் எல்லாம் அந்த நிலத்தின் முந்தைய தெய்வங்களை எல்லாம் அடித்துப் புதைத்து பாதாள இருளுக்குள் அதற்கும் கீழ் நரக நெருப்புக்குள் தள்ளியது. 18 ஆம் நூற்றாண்டில் உலகு தழுவி நிகழ்ந்து கொண்டிருந்த போர்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் இவற்றின் பின்புலத்தில் அப்பண்பாடு தனது கலை வழியே தனது ஆழத்தை துறுவிப் பார்க்கையில், அந்த ஆழத்தில் இருந்து எழுந்து வந்தவை கிறிஸ்துவ கூட்டு நனவிலி சாத்தான் என புனைந்து வைத்திருந்த பாகணீய மதங்களின் தெய்வம். அவை இரத்தம் குடிப்பவை. மனிதனின் ஆன்மாவை திருடிக் கொண்டு அவனை நிரந்தரமாக நடை பிணம் என்றாகி தனது நரக குழிக்குள் தனக்கு அடிமையாக்கி வைத்துக் கொள்பவை. அந்த பின்புலத்தை மையம் கொள்வதே கோதிக் இலக்கியம். கோதிக் என்பதற்கு தோராயமாக அமானுஷ்யம் என்று பொருள் கொள்ளலாம்.
கோதிக் இலக்கிய வகைமைக்குள் வரும் மேற்கண்ட இந்த கிராபிக் நாவல், எக்ரியன் என்ற எழுத்தாளரின் பார்வைக் கோணம் வழியே சொல்லப்படுகிறது. 1812 ஆம் ஆண்டு கட்டாய இராணுவ சேவையாக நெப்போலியன் படையில் சேர்ந்து, ரஷ்ய எல்லைப்புற பனி வெளியில் ரஷ்யாவை ஊடுருவும் நெப்போலியன் படை ஒன்றில் பணி செய்கிறார் எக்ரியன். கடும் பனி. பட்டினி. படை வீரர்கள் ஒவ்வொருவராக செத்து விழுகிறார்கள். அந்த பனிப் பாலை நிலத்தில் ஒரு பெண் உதவி கேட்டு அவர்கள் வழியில் குறுக்கிட, அந்த பெண்ணை பின் தொடர்ந்தால் நிச்சயம் ஒரு கிராமம் வரும். அதை இருக்கும் ஆயுதங்களை கொண்டு அடிமை செய்தால் இப்போதைய சூழலில் இருந்து தப்பிக்க முடியும் என்று கேப்டன் கணக்கு போட, படை மொத்தமும் அந்த பெண்ணை தொடர்ந்து அவளது கிராமத்துக்கு போகிறது. அதுவோ ஒரு சபிக்கப்பட்ட பூமி. மனித ஆற்றலை மீறிய ஏதோ ஒன்று அவர்களை துரத்துகிறது. அவர்கள் ஓடி சென்று கண்ணில் பட்ட பாழடைந்த தேவாலயத்தில் தஞ்சம் அடைகிறார்கள். அந்த ஆலயத்தின் பாதிரியார் இறந்து போய் தூக்கில் தொங்கிக்கொண்டு இருக்கிறார். வாசலை மூடி படையினர் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஏற்பாடுகளில் பொழுது நள்ளிரவை தொட, செத்துப்போன பாதிரியார் எழுந்து வந்து படையினரை தாக்குகிறார். படையினர் தப்பிக்க மீண்டும் வாசலை திறந்து வெளியே ஓட, அந்த சபிக்கப்பட்ட நிலத்தின், எல்லா நடைபிணங்களும் இவர்களைத் தாக்க வருகின்றன. இவர்கள் தப்பித்து ஓடி திசை தவறி, நரகத்தின் வாசலை திறந்து விடுகிறார்கள், நெருப்புக் குழிக்குள் இருந்து பாதாள பேய்கள் எழுந்து வருகின்றன. படையினரின் ஆன்மாவை சூறையாட அவர்களை துரத்துகின்றன. பாதாள சாத்தான்கள் வசம் சிக்கி தங்கள் ஆன்மாவை இழந்து, நரக குழியில் நடை பிணமாக நிரந்தரமாக உழல்வதை விட தற்கொலை செய்து கொள்வது மேல் என்று கேப்டன் முடிவு செய்கிறார். அதற்கு முன்பாக தனது படையினரை தனது கைகளால் தானே கொன்று விட முடிவு செய்கிறார். முதல் வீரனாக எக்ரியனை தேர்வு செய்து அவனது மூச்சுக் குழாயை ஒரே வெட்டில் துண்டிக்கிறார்.
இதுதான் அங்கே நடந்தது என்றும், இதை ஜெனரல் வசம் இப்படி சொல்லிகொண்டிருப்பதால் கேப்டன் எங்கோ தோற்று விட்டார் என்று நினைக்கிறேன் என்றும் ஜெனரல் வசம் எக்ரியன் சொல்லி முடிக்க, கேட்டு முடித்த ஜெனரல் எழுந்து அறை கதவை திறக்க உள்ளே கேப்டன் நுழைகிறார். எழுத்தாளருக்கு எல்லாம் புரிந்து விடுகிறது. போரின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்க செயல்படுத்த மூவரும் ஒன்றுபட்டு கிளம்புகிறார்கள்.
ஓவியர் பாஸ்குவாலே இத்தகு களங்களுக்கே உரித்தான வகையில், துர் கனவு போலும் சாயலில், ஜப்பானிய நீர் வண்ண ஓவியங்களின் முறையில் நாவலுக்கான ஓவியங்களை தீட்டி இருக்கிறார். கருப்பு வெள்ளையில், பகலா இரவா என்று சூழல் மயங்கிய பனி வெளியின் தசையை எரிக்கும் உறைகுளிர் நிலையை ஒவ்வொரு ஓவியம் வழியாகவும் மனம் அந்த சில்லிப்பை உணரும் வண்ணம் அவற்றை தீட்டி இருக்கிறார். மெல்லிய வெண்மை விரவிய கரிய பின்புலம். காட்சி பின்னே பின்னே போக, அது உறைந்து போன பிணம் ஒன்றின் விழி. அழுகிய குதிரை சடலத்துக்குள் அதையே உணவாகவும், குளிருக்கு காப்பாகவும் கொண்டு அதற்கும் புதைந்து கிடந்த ஒருவனை (கொசாக்) வெளியே இழுத்து போட்டு சுட்டேன் என்று சொன்னபடி அறிமுகம் ஆகும் கேப்டன். முற்றிலும் அமானுஷ்ய சித்தரிப்பின் உச்சமாக தீட்டப்பட்ட நரக குழி என்று கனவிலும் வந்து துரத்தும் ஹாண்டிங் ஆன சில படிமங்கள் கொண்ட நாவல். கேப்டன், படை வீரனான எழுத்தாளர் எல்லோரும் சாத்தான்கள் வசம் எங்கே தோற்று போகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி விடுகிறது நாவல். தனது ஆன்மாவை சாத்தான்கள் திருடிவிடாது இருக்கத்தானே அந்த பாதிரியார் தற்கொலை செய்துகொண்டிருப்பார்?
துர்கனவு போன்ற காட்சி சித்தரிப்புகளும், முடிவில் இருந்து வாசகன் மனதுக்குள் கதை வேறு வகையில் துவங்கும் சப் டெக்ஸ்ட் டும் கொண்ட இந்த கிராபிக் குறுநாவல் உணர்த்தும் செய்தி மிக வலிமையானது.
வரலாறு நெடுக எந்த காலம் ஆயினும் சரிதான், உலகம் முழுக்க எந்த நிலம் என்றாலும் சரிதான். பின்புலம் என்ன காரணம் என்றாலும் சரிதான். போர் என்பது நடைபிணங்களின் கர்மம். மனிதம் இழிந்து மண்ணை நனைக்கும் குருதியை எற்று அமைதி நிலைபெறும் என்ற எந்த நிச்சயமும் இல்லை. ஆனால் அந்தக் குருதியைக் குடிக்க இருள் உலகிலிருந்து பாதாள தெய்வங்கள் எழுந்து வரும். அது மட்டும் நிச்சயம்.
கடலூர் சீனு
புதுவை வெண்முரசுக் கூடுகை-82
வணக்கம். மகாபாரதத்தை நவீன இலக்கியமாக மறு ஆக்கம் செய்த எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல்நிரையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு முழுவதும் வெண்முரசின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நிகழவிருக்கிறது.
புதுவை வெண்முரசுக் கூடுகையின் 82 வது அமர்வு 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் நண்பர் இராச மணிமேகலை உரையாற்றுவார்.
நிகழ்விடம் : கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001. தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
பேசு பகுதி: வெண்முரசு நூல் – 9. “வெய்யோன்” பகுதி 5 பன்னிரண்டாவது பகடை – 41 – 45 அத்தியாயம். (1 – 5 )
நிகழ்ச்சியில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும்ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
What is the use of philosophy to a common man?
What is the use of philosophy for an ordinary person? I am not ashamed to say I am an ordinary person with very ordinary tastes and lifestyle. I would rather not be a scholar or intellectual. Why should I read and learn philosophy? Can you explain?
What is the use of philosophy to a common man?வெறுப்பு பற்றிய காணொளி பார்த்தேன். சில நண்பர்களுக்கு அனுப்பினேன். இந்த வகையான உணர்ச்சிகள் எப்போதுமே இருந்துகொண்டிருப்பவைதான். ஆனால் இப்போது எல்லாருக்குமே ஊடகம் அமைந்துள்ளது. எவர் வேண்டுமென்றாலும் மறைந்து நின்று பேசலாம். பெரும்கூட்டமாக கூடலாம். இது அளிக்கும் வசதிகள் மனிதர்களின் வெறுப்பை பலமடங்காகப் பெருக்கிக்கொண்டிருக்கின்றன.
வெறுப்பு கடிதம்May 25, 2025
வாசிப்பைப் பற்றி மீண்டும்…
வாசிப்பின் இன்றியமையாமை பற்றி தெரிகிறது. வாசிக்காமல் வாழவே முடியாதென்ற நிலை. ஆனால் வாசிக்க முடியவில்லை. என்னிடம் வாசிப்பு பற்றி இத்தனை கேள்விகள் வருவது இதனால்தான். ஆகவே மீண்டும் வாசிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறேன்.
“கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்…
நான் 2016 ல் சிங்கப்பூரில் எழுத்தாளர்- பேராசிரியராக சில மாதங்கள் பணியாற்றியபோது பொதுவான மாணவர்கள், மற்றும் காட்சிக்கலைப் பேராசிரியர்களுக்காக சினிமா பற்றி ஒரு வகுப்பை எடுக்கவேண்டியிருந்தது. நான் சினிமாக்காரன் என்பதனால் அதற்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் மிகுதியாக இருந்தது. கதையில் இருந்து திரைக்கதையும் திரைக்கதையில் இருந்து சினிமாவும் உருவாவதைப் பற்றி இரண்டு மணிநேரம் வகுப்பெடுத்தேன். சினிமா பற்றி நான் நடத்திய ஒரே வகுப்பு அதுதான்.
அவ்வகுப்புக்காக முன்னரே தயாரித்துக்கொண்டு சென்றிருந்தேன். இரண்டு காட்சித்துண்டுகளை அங்கே காண்பித்தேன். நான்கடவுள், மற்றும் கடல் படங்களில் இருந்து. முதலில் ஏழாம் உலகம் நாவலில் இருந்து ஒரு பகுதியை வாசித்தேன். பிச்சைக்காரர்களின் உலகுக்குள் நாவல் செல்லும் அந்த நரகக் காட்சி. அதன்பின் அதையொட்டி நான் கடவுள் சினிமாவுக்காக நான் எழுதிய திரைக்கதைக் காட்சி. அதன்பின் அந்தக்காட்சி படத்தில் எப்படி வந்தது என்று. நாவலில் அது வெவ்வேறு பார்வைகளின் வழியாக துண்டுதுண்டாக வெளிவரும். திரைக்கதையில் ஓர் இடம், ஒரே காட்சிக்கோணமாக எழுதப்பட்டது.
ஆனால் சினிமாவில் அது ஒரே நீளமான ஷாட். தாண்டவன் நடந்து வந்து பாதாளத்திற்கு இறங்கி உள்ளே சென்றுகொண்டே இருப்பான். முதலில் நம் பார்வையில் அவன். அதன்பின் அவன் பார்வையில் அந்த உலகம். அது இரண்டு ஷாட்கள். ஆனால் ஒரே ஷாட் ஆக இணைக்கப்பட்டிருந்தன. நவீன எடைகுறைந்த காமிராக்கள் இல்லாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட அக்காட்சி ஓர் அற்புதம். பாதாளம் என்பதை அனுபவமாக ஆக்கிக் காட்டியது அது. இன்று திரைப்பட மாணவர்கள் அக்காட்சியை தனியாக கூர்ந்து பயில்கிறார்கள்.
அதேபோன்று ஒரு காட்சி கடலில். நான் கடல் கதையை மணி ரத்னம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாவலாகவே எழுதினேன். என் எல்லா நாவல்களையும்போல அது அடிப்படையான ஒரு கேள்வியில் இருந்து வெடித்துக் கிளைபிரிந்து வளர்ந்து சென்ற ஒரு படைப்பு. அதை அவரும் நானும் திரைக்கதையாக்கினோம். அவர் அதை இயக்கினார்.
நாவலில் இருந்து ஒரு காட்சியை வாசித்தேன். சாம் கிராமத்தாரால் சிறைக்கு அனுப்பப்படும் காட்சி. அது ஒரு சிலுவையேற்றம்தான். அதில் காட்டிக்கொடுக்கும் யூதாஸ்தான் செலினா. நாவலில் அது ஓர் உணர்ச்சிகரமான நினைவுகூரல், அல்லது நாடகீயத் தன்னுரை. அந்தக் காட்சியின் திரைக்கதை வடிவம் ஒரு காட்சிச்சித்தரிப்பு. ஆனால் அது சினிமாவில் பல உள்ளோட்டங்கள் கொண்டது. அந்த தேவாலயம், அதன் படிக்கட்டுகளினூடாக சாம் மேலேறுவது. அங்கிருந்த முகங்கள். ஒரு மேலைச் செவ்வியல் ஓவியத்திற்குரிய ஒளிப்பதிவு.
அனைத்திற்கும் மேலாக செலினா பொன்னொளியில் தேவதையாக கட்டப்பட்டிருந்தாள். திரைக்கதையில் இல்லாமல் இயக்குநர் காட்சி வழியாக உருவாக்கிய கூடுதல் அர்த்தம் அது. அவள் யூதாஸ் அல்ல மக்தலீனாதான் என்று அவர் காட்சி வழியாக அடிக்கோடிட்டிருந்தார். சினிமா என்னும் textஇன் subtext அது.(உண்மையில் சினிமாக்கல்வி என்பது இவற்றை எல்லாம் அடையாளம் காணக் கற்றுக்கொள்வதுதான்).
நீண்ட இடைவெளிக்குப்பின் கடல் சினிமாவின் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வணிகரீதியாக தோல்வியடைந்த சினிமாவை அதில் பணியாற்றிய எல்லாரும் மறக்க விரும்புகிறார்கள். நானும்தான். கடல் நாவலின் விரிவை சினிமா சுருக்கமாகவே முன்வைக்க முடிந்தது. கிறிஸ்தவத் தொன்மவியலில் அறிமுகமே அற்ற தமிழ் ரசிகர்களால் அதை உள்வாங்க முடியவில்லை. காதல் – வில்லன் என்ற அளவிலேயே எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இன்று கடல் சினிமாவை மிக விரும்பிக் கொண்டாடும் ஒரு சிறு இளைய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.
ஆகவே கடல் நாவலை நூலாக வெளியிட்டாலென்ன என்னும் எண்ணம் உருவானது. பல கணிப்பொறிகள் மாறியதனால் நாவல் என்னிடம் இல்லை. மணி ரத்னத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களில்தான் இருந்தது. பல வடிவங்களில் மாற்றங்களுடன். அவற்றை தொகுத்து நாவலை முழுமையாக்கினேன். இப்போது வெளிவருகிறது.
இது வேறொரு அனுபவம். நாவல் என்பது மிகப்பெரிய பேசுதளம் கொண்டது. அதில் ஏராளமான சினிமாக்கள் அடங்கியுள்ளன. விரிந்து விரிந்து செல்லும் அதன் கதைப்பின்னல். உணர்ச்சிகளின் நேரடி வெளிப்பாடான எண்ணங்கள், தன்னுரைகள், உரையாடல்கள். பிரம்மாண்டமான காட்சிப்பரப்புகள். இது பாவம்- மீட்பு என்னும் மகத்தான மானுடநாடகத்தின் சித்தரிப்பு.
சினிமாவாக வெளிவந்த ஒரு படைப்பு பத்தாண்டுகளுக்குப் பின் நாவலாக வருவதென்பது மிக அரிதாகவே நிகழ்வது. தமிழில் முன்னுதாரணம் ஏதுமில்லை. சினிமா நாவல் என்னும் இரு கலைகளை புரிந்துகொள்ள இது உதவலாம். இரு கலைகளின் வழியாக மானுடனின் அழியாத துயரையும், என்றுமுள மீட்பையும் உணரவும் உதவும் என நினைக்கிறேன்.
கடல் வாங்க
தொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



