Jeyamohan's Blog, page 99
June 2, 2025
The world of plants- A Letter
வாசிக்கும் வழிகளை பற்றிய காணொளியை பார்த்தேன்.வாசிப்பும் தியானம்தான். வாசிப்புதான் உலகிலுள்ள கலாச்சாரத்தை, பண்பாட்டை அடையாளப்படுத்தியது. நவீன உலகில் எப்படி வாசிக்க வேண்டும் என்று கூறியதற்கு நன்றி.
வாசிப்பு- கடிதம்This is Kaavyan from Chennai, studying in 9th grade. A few days back, I had travelled to Vellimalai to attend the Botany(தாவரவியல்) course taught by Logamadevi mam. It was a truly enriching experience learning about plants. The course opened my eyes in many different ways and completely changed my perspective about Botany.
The world of plants- A LetterJune 1, 2025
யோகம்- தியானப் பயிற்சி
யோகப்பயிற்சி.தொடக்கநிலை.பிகார் சத்யானந்த குருமரபின் முதன்மை ஆசிரியர் (குரு) ஆக 26 ஏப்ரல் 2025 அன்று அறிவிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் குரு. சௌந்தர். இருபதாண்டுகளுக்கும் மேலாக சௌந்தரின் யோகப்பயிற்சிகள் இந்தியாவிலும், இலங்கை மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் நடந்து வருகிறன. ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை என்று கருதும் பயிற்சிகள் அவை.
அன்றாடவாழ்க்கையில் கவனக்குறைவு, பொறுமையின்மை, பதற்றம் போன்ற அகப்பிரச்ச்னைகளுக்கும்; முதுகுவலி, கழுத்துவலி, உடல்சோர்வு போன்ற பலவகையான புறப்பிரச்சினைகளுக்கும் ஒருங்கிணைந்த தீர்வாக அமைவது முறையான யோகப்பயிற்சி. யோக ஆசிரியர் யோகமுறைகளைப் பயிற்றுநர் என்பதுடன் வாழ்க்கை முழுக்க துணைவராக நம்மைக் கண்காணித்து, உடன் வருபவராகவும் அமையவேண்டும். சௌந்தர் அத்தகைய ஆசிரியர்.
நான்காண்டுகளாக நிகழும் இந்த வகுப்புகளில் ஏற்கனவே ஐநூறு பேருக்குமேல் முழுமையறிவு வகுப்புகள் வழியாக சௌந்தரிடம் பயின்றுள்ளனர்.
நாள் ஜூலை 11, 12, 13
ஜூலை 10 ஆம் தேதி குருபூர்ணிமா (வியாசபூர்ணிமா) நித்யவனத்தில் கொண்டாடப்படுகிறது. வெண்முரசு – மகாபாரத நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. சௌந்தர் முன்னின்று நடத்துவார். யோகப்பயிற்சிக்கு வருபவர்கள் ஒருநாள் முன்னதாக வந்தால் அந்நிகழ்விலும் கலந்துகொள்ளலாம்
குருபூர்ணிமா நிகழ்வில் மட்டும் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தனியாக எழுதலாம்)
சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா? இஸ்லாம் ஒரு கடிதம் சூஃபி தரிசனம்- கடிதம் இஸ்லாம் கடிதம் இஸ்லாம் கடிதம் வரவிருக்கும் நிகழ்ச்சிகள்- இடமிருப்பவைநிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய தத்துவம் – சூபி மரபு பற்றிய வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன. ஏற்கனவே நிகழ்ந்த இவ்வகுப்புகள் முற்றிலும் புதிய ஓர் ஆன்மிக உலகைத் திறந்தன என்று பங்கேற்றவர்கள் கூறினார்கள்.
இரண்டு வகைகளில் இந்த வகுப்புகள் முக்கியமானவை. இவை இந்தியப்பண்பாட்டை முழுமையாக உணர்வதற்கு இன்றியமையாதவை. கலை இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் கற்றே ஆகவேண்டிய வரலாற்று- ஞானப் பரப்பு இது. இஸ்லாமின் மெய்யியல், சூஃபிகள் இந்தியாவில் அதை நிலைநிறுத்திய வரலாறு, சூபி மரபின் உள்ளடக்கம் ஆகியவற்றை அறியாமல் ஒருவர் இந்திய இலக்கியம், இந்தியக் கலை, இந்திய இசை ஆகியவற்றை அறிந்தார் என்று சொல்ல முடியாது.
சென்ற ஆயிரமாண்டுகளாக இஸ்லாமின் ஆன்மிகமரபும் சூஃபி மெய்யியலும் இந்தியாவின் எல்லா மெய்ஞான மரபுகளிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் நாராயண குரு வரை பிற மரபுகளைச் சேர்ந்த ஞானிகள் கூட அதன் ஒளியை பெற்றுக்கொண்டவர்கள். இந்திய மெய்ஞான மரபின் சாரத்தை அகத்தே உணரவிரும்புபவர்களுக்கு அவசியமான வகுப்புகள் இவை.
நாள் ஜூலை4,5 மற்றும் 6
பௌத்தம்- தியானம்- அறிமுக வகுப்பு
வி.அமலன் ஸ்டேன்லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் – விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றனர். முதல் வகுப்பு சென்ற ஜூலை முதல் வாரம் நிகழ்ந்தது, விரைவிலேயே அதன் இடங்கள் நிறைவுற்றமையால் மீண்டும் அடுத்த வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன.
2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார். 2008-ல் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களிடம் நேரடிப் பயிற்சியை வியட்நாமில் பெற்றுக் கொண்டார்.2010-ல் மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் கீர்னி எனும் விபசனா ஆசிரியரை கொடைக்கானலில் உள்ள போதி ஜென்டோ மையத்திற்குத் தொடர்ந்து அழைத்து வந்து கற்றுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து தவ முகாம் நடத்தவும் கற்றுக்கொண்டார். 2013-ல் சோகிஈமா ரின்போசே மூலம் திபெத்திய மகாமுத்ரா, ட்சோக்சென் பயிற்சி பெற்றார்.
இரண்டரை ஆண்டு அகவிழிப்புத் தியானப்பயிற்சி ஆசிரியராக The Awareness Training Institute and the Greater Good Science Center at the University of California மையத்தால் பயிற்சியும் சான்றும் (MMTCP) பெற்றுக் கொண்டார்
யோகமரபின் தொடக்கம் எது என நமக்குத் தெரியாது. சாங்கிய தரிசனத்தின் ஒரு கிளையாக அது பதஞ்சலியால் வரையறை செய்யப்பட்டது. பின்னர் சமண மதத்தில் வளர்ச்சி அடைந்தது. அதை முழுவிரிவை அடையச்செய்தவர்கள் பௌத்தர்கள். பௌத்த யோகாசார மரபே தியானம் என்பதற்கான இன்றைய அர்த்ததை உருவாக்கியது. அசங்கர், வசுபந்து, திக்நாகர், நாகார்ஜுனர், தர்மகீர்த்தி, தர்மசேனர், தர்மபாலர் என அதன் ஆசிரியர் மரபு மிக விரிவானது. போதிதர்மர் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்று ஜென் பௌத்தம் ஆகியது. பத்மசம்பவர் வழியாக திபெத் சென்று திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்திய பௌத்தம் வஜ்ராயனம் எனப்படுகிறது.
பௌத்தம் வளர்த்தெடுத்த யோகாசார மரபு இந்தியாவில் பெரும்பாலும் மறைந்துவிட்டது, அதன் அடிப்படைகள் சில வேறுவகையில் நீடிக்கின்றன. பௌத்த தியான – மெய்யியல் மரபை அது இங்கிருந்து சென்று வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும் திபெத், ஜப்பான், தாய்லாந்து பௌத்த மரபுகளிடமிருந்தே நாம் கற்கமுடிகிறது. இப்பயிற்சி அதற்கான முயற்சி.
செப்டெம்பர்
ஜூன்27, 28 மற்றும் 29 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com அறிவிக்கப்பட்ட பயிற்சிகள்- இடமிருப்பவை
தியானம்- உளக்குவிப்புப் பயிற்சி, இரண்டாம்நிலை
தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இன்றைய தலைமுறையில் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் தொழிலிலும் கவனம்குவிக்கமுடியாத அகச்சிதறல் கொண்டவர்களுக்கும், மெய்யியல் நோக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விழைபவர்களுக்குமாக குறிப்பாக வடிவமைக்கப்பட்டவை. நவீன முறையைச் சேர்ந்தவை. தில்லை இந்த தியானப்பயிற்சியை வெவ்வேறு புகழ்பெற்ற அமைப்புகளைச் சார்ந்து சென்ற 20 ஆண்டுகளாக அளித்து வருபவர். பல்லாயிரம் மாணவர்கள் அவருக்கு உள்ளனர். இந்த பயிற்சி அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளது.
இது மதம்சார்ந்த பயிற்சி அல்ல, இந்து பௌத்த மரபுகளில் இருந்து உருவானது எனினும். ஒருவர் தன் அகத்தை திரும்பி நோக்கவும், அதன் கட்டற்ற பாய்ச்சலை புரிந்துகொள்ளவும், அதை தனக்கேற்றவகையில் பழக்கிக்கொள்ளவும் உதவும் முறைமைகள் இவை. தொன்மையானவை, நவீனப்படுத்தப்பட்டவை.
முந்தைய தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்களுக்கான இரண்டாவது நிலை தியான வகுப்பு இது. தில்லை செந்தில் பிரபு பிற இடங்களில் நடத்திய தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.
முந்தைய வகுப்பு உளக்குவிப்பு – கவனக்கூர்மைக்கான முதல்நிலை பயிற்சிகள் அடங்கியது. இப்பயிற்சி அதன் இரண்டாம் நிலை. அகத்தை கட்டுப்படுத்தி செயலில் ஈடுபடுத்துவதற்கான கூடுதல் செயல்முறைகள் கொண்டது. வெவ்வேறு செயற்களங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது மிக உதவியானது.நாள் ஜூன் 6 7 மற்றும் 8
காலமில்லாத கிராமம்
ஒரு வாரம் இங்கிலாந்தின் வடக்கே அமைந்த லேக் டிஸ்ட்ரிக்ட் பகுதியில் விண்டர்மியர் ஏரிக்கரையில் தங்கியிருந்தோம். பொதுவாகவே மழையும் குளிரும் கொண்ட இப்பகுதியில் இது வசந்தகாலம். ஆனாலும் மழை இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நல்லவேளையாக ஒரே ஒருநாள்தான் மழை. மற்றநாட்களில் சுடர்விடும் இளவெயிலும் குளிரும். மிகச்சிறிய ஒரு பகுதிக்குள் நுணுக்கமாகச் சுற்றி வருவதே சரியான பயணம் என எனக்கு இப்போது தோன்ற ஆரம்பித்துவிட்டிருக்கிறது. முக்கியமான இடங்களை அதிகமாக பார்த்துவிட வேண்டும் என்னும் பரபரப்புடன் வெவ்வேறு ஊர்களை கண்களால் தொட்டு தொட்டுச் செல்வது அங்கே நம் அகம் திகழ வாய்ப்பமைப்பதில்லை.
ஐரோப்பாவுக்குப் பொதுவாக உள்ள சில பண்புகள் இங்கிலாந்துக்கும் உண்டு. ஐரோப்பா இன்று தன்னை முழுக்க முழுக்க சுற்றுலாத் தலமாக மாற்றிக்கொண்டுவிட்டது. சுற்றுலாப்பயணிகள் வராத, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முயலாத எந்த இடமும் இருப்பதுபோலத் தெரியவில்லை. மொத்த ஐரோப்பாவே அமெரிக்கா, சீனா என்னும் இரு நாடுகளின் சுற்றுலாத்தலம்தானோ என்று தோன்றும். ஐரோப்பாவையே அப்படியே ஒரு பெரிய அருங்காட்சியகத்தில் தூக்கி வைத்திருப்பதுபோல எண்ணிக்கொள்வேன்.
அந்த பண்புகளை இவ்வாறு வரையறை செய்வேன்.
பழமையான ஊர்கள் கூடுமானவரை அந்தப் பழமையுடனேயே பேணப்படுதல்; பழைய கட்டிடங்களும் சாலைகளும் நூற்றாண்டுகளின் தொன்மையுடன் அமைந்திருத்தல். ஆனால் இடிபாடுகள் ஏதுமில்லாமல் எல்லா கட்டிடங்களும் முழுமையாகப் பழுதுபார்க்கப்பட்டு, தூய்மையாக , அப்போது உருவானவை போலவும் தோன்றுதல்.ஊரின் சிறிய வரலாற்றுச் சின்னங்கள் கூட முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு, நன்றாகப் பேணப்படுதல். அவற்றை அந்த ஊர் மக்கள்சபைகள் பராமரித்தல். ஒவ்வொன்றைப்பற்றியும் அந்த ஊர்க்காரர்களுக்கும் தெரிந்திருத்தல்.சிறு ஊராக இருந்தாலும் சுற்றுலாப்பயணிகள் வந்து தங்குவதற்கான வசதிகள் இருத்தல். உணவகங்கள், தங்கும் விடுதிகள், வீட்டில் தங்கும் வசதிகள். ஊரில் பல வீடுகள் முழுக்கவே சுற்றுலாப் பயணிகளுக்குரியவையாக இருக்கும்.இணையத்தில் அந்த ஊர் மிக விரிவாக ஆவணப்படுத்தபட்டிருத்தல். இணையத்தை வைத்துப் பார்த்தால் அந்த ஊர் தவறவிடவே கூடாத ஓர் அரிய வரலாற்று மையம் என்றே நாம் எண்ணிவிட வாய்ப்புண்டு.விண்டர்மீர் ஏரிக்கரையில் இருந்து கிளம்பி அருகே இருந்த சிறு ஊர்களுக்கும் காரில் சென்று வந்தோம். ஏரா ஃபோர்ஸ் என்னும் அருவியைப் பார்ப்பதற்காகச் சென்ற வழியில் கார்ட்மெல் (Cartmel ) என்னும்சிற்றூரை அடைந்து சிலமணி நேரம் செலவிட்டோம். இந்த ஊர்களினூடாகச் செல்லும் பயணமே முக்கியமானது. வளைந்து செல்லும் சாலையின் இருபக்கமும் பசுமை செறிந்த புல்வெளி அலைகள். தொலைவில் மலைகள். முகில்கள் இறங்கிப்பரந்திருக்கும் பசுமைமேல் பொழியும் வெயில். இதற்கிணையான காட்சியை இந்தியாவில் ஊட்டியின் வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட், அவலாஞ்சி போன்ற மிகமிக ஒதுக்குபுறமான மலைப்பகுதிளிலேயே காணமுடியும், அங்கே குப்பைகளை கொட்டுகிறார்கள் என்பதனால் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதே இல்லை. அனுமதி பெற்றே செல்லவேண்டும்.
கார்ட்மெல் ஊரின Sticky Toffee Pudding. என்னும் இனிப்புவகை மிகச்சிறப்பானது என இணையம் சொன்னதுதான் அங்கே நாங்கள் இறங்குவதற்கான காரணம். பழைய நார்ஸ் மொழியில் அமைந்த இந்த ஊரின் பெயர் ‘பாறைகளின் நடுவே மணற கரை’ என்பதாம். நார்மன்களின் காலகட்டத்தில் உருவான ஊர். கார்ட்மெல் ஊரைப்பற்ற் தகவல்களைச் சொல்லவேண்டியதில்லை- மிக விரிவாக எல்லாம் இணையத்திலேயே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (கார்ட்மெல் கிராமம்) . அது இங்கிலாந்தின் வழக்கமான சிறிய ஊர், அதற்கு அப்பால் ஒன்றுமில்லை. ஆனால் மிகச்சரியான பிரதிநிதித்துவம் கொண்ட ஊர். சீரான, அழகான ,பழமையான கல்வீடுகள். சதுக்கம், தேவாலயம், பழைய கிறிஸ்தவ காலகட்டத்தின் சில நினைவுச்சின்னங்கள், அமைதியான உணவகங்கள்.
சுற்றுலா மையம் என்றதும் அங்கே நம்மூர் போல பயணிகள் முட்டிமோதி நெரிசலிட்டு, கூச்சலிடுவார்கள் என்றோ; சாலைவணிகர்களும் வழிகாட்டிகளும் மொய்த்துக்கொண்டு உயிரைவாங்குவார்கள் என்றோ, தெருக்களெல்லாம் குப்பைமலைகளும் ஓட்டை உடைசல்களுமாக நாற்றமடிக்கும் என்றோ எண்ண வேண்டியதில்லை. ஏரி மாவட்டம் என்பது இங்கிலாந்தின் வடக்குப் பகுதி. தென்பகுதியை விட குளிர், மழை, பசுமை கூடுதல். மக்கள் தொகை மிகக்குறைவு. நவீன காலகட்டத்தில்தான் இங்கே மக்கள் இந்த அளவுக்காவது வாழத்தொடங்கியிருக்கிறார்கள். செம்மரியாடு வளர்ப்பு தான் முதன்மையான தொழிலாக இன்றும் உள்ளது. இவையெல்லாம் பழைய இடையர் கிராமங்கள். மிகச்சிலரே இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின்போதுதான் லண்டனில் இருந்து குண்டுவீச்சுக்குத் தப்பி மேலும் சில குடும்பங்கள் வந்துள்ளன.
இன்று இந்த அமைதிக்காகவும் குளிருக்காகவும்தான் சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். ஏரிகளில் நீர்விளையாட்டுக்கள்தான் இப்பகுதியின் முதன்மை ஈர்ப்பு. அது ஆண்டில் நான்கே மாதங்கள்தான். எஞ்சிய காலம் முழுக்க இந்த ஊர்கள் மழைப்போர்வைக்குள், குளிரில் ஒண்டி கிடப்பவை. கோடைகாலத்தில்கூட திங்கள் முதல் வியாழன் வரை மக்கள் போக்குவரத்து குறைவுதான். வார இறுதிகள், குறிப்பாக நல்ல வானிலை என அறிவிப்பும் இருந்தால் திரள் இருக்கும். அப்போதுகூட அவை நெரிசலாக ஆவதில்லை.
கார்ட்மெல் ஊரில் நாங்கள் இறங்கியபோது என் கண்ணுக்கு அது ஆளே இல்லாத ஊராகத்தான் தோன்றியது. இத்தகைய தெருக்களை குளிர்நாடுகளில் சாதாரணமாகவே பார்க்கலாம். அமெரிக்காவில் பல கிராமங்கள் முழுமையாகவே மானுட நடமாட்டமே இல்லாமலிருக்கும். இங்கே இந்த வசந்தகாலத்தில் இரவு இருட்டுவதற்கு மிகப்பிந்தும், ஒன்பது ஒன்பதரை வரை நம் ஊரில் ஐந்து மணி அளவுக்கு வெளிச்சம் இருக்கும். ஆனால் ஏரி மாவட்டத்தில் அரிதாகவே பகலிலும் வெயில் வந்தது. எப்போதுமே மங்கலான ஓர் ஒளிதான் வானில் இருந்து இறங்கியது.
இங்குள்ள கட்டிடங்கள் எல்லாமே கரிய கற்களை சீராக அடுக்கிக் கட்டப்பட்டவை, அல்லது சுட்டசெங்கற்களை அடுக்கிக் கட்டப்பட்டவை. சுவர்களை பூசி, வண்ணம் தேய்க்கும் வழக்கம் இல்லை.பெரும்பாலும் எல்லா வீடுகளுமே நுறாண்டுக்குமேல் தொன்மையானவை, எஞ்சியவை அந்த பழைய கட்டிடங்களின் அதே பாணியில் கட்டப்பட்டவை. மண்ணாலான ஓடு போட்ட சாய்வான கூரைகள். தூண்கள் இல்லாத வீடுகள் சாலையை ஒட்டியே வரிசையாக அமைந்திருந்தன. பெரும்பாலானவை பூட்டியிருந்தன, உள்ளே ஆளிருப்பது விளக்கொளிகளால் தெரிந்தது. வசந்த மலர்கள் முகப்புகளில் வைக்கப்பட்டிருந்தன.
இந்தச் சிற்றூரில் இன்று நூறாண்டுக்கு முன் செத்துப்போன ஒரு விண்டர்மியர் ஏரிக்கரை வெள்ளைக்கார தாத்தா திரும்ப வந்தார் என்றால் கார்கள் மட்டும் புதியதாக இருப்பதைக் கண்டு கொஞ்சம் ஆச்சரியப்படுவார். கண்ணில்பட்ட பெரும்பாலானவர்கள் முதியவர்கள். இப்பகுதிக்குச் சுற்றுலா வருபவர்கள் இரண்டு வகையினர். ஒன்று வளராத குழந்தைகளுடன் குடும்பங்கள். இரண்டு , முதிய தம்பதியினர். இளைஞர்கள் கண்ணுக்குப் படுவது அரிது. அவர்கள் வேறொரு ‘பப் கலாச்சார’த்தில் வாழ்கிறார்கள். முதியவர்கள் ‘அமைதியாக ஒரு பீருடன் அமர்ந்திருப்பது’ என்னும் கற்பனைகொண்டவர்கள். அப்படியே அமர்ந்து முணுமுணுப்பாகப் பேசிக்கொண்டும், மிகமெல்லச் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்.
புட்டிங் ‘ஒரிஜினல்’ கிடைக்குமா என்று முத்துக்கிருஷ்ணனும் டாக்டர் பார்கவியும் அங்கே அலைந்தனர். தயார்நிலை புட்டிங்தான் உண்டு, சூடுபண்ணி தருவோம் என்றார்கள். சரி, அதில் எந்த இடம் நல்லது என்று விசாரித்து அந்தக் கடைநோக்கிச் சென்றோம். அதற்குள் இரண்டு மூன்று கடைகளுக்குள் நுழைந்து விசாரித்தோம். எந்த கடையில் நல்ல புட்டிங் கிடைக்கும் என்று வேறு கடைக்காரர்களே சொன்னார்கள். எவருக்கும் விற்பனையில் எல்லாம் பெரிய ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.
அந்த தெருவில் ஓய்வாக நடந்தேன். காலமில்லாத ஒரு சிற்றூரில் சென்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒரு பழைய பிரிட்டிஷ் நாவலுக்குள் நுழைந்துவிட்டதுபோலவும் இருந்தது. நேர் எதிரில் வேர்ட்ஸ்வெர்த்தும் கூலிரிட்ஜும் பேசிக்கொண்டு வந்தால் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.
சாலையில் கொஞ்சம் கார்கள். அவ்வப்போது சிலர் சிரித்து வாழ்த்து சொன்னபடி நடந்து சென்றனர். ஆழ்ந்த அமைதியில் காற்றுவீசும் ஒலி. மழைத்துளிகள் கூரையிலிருந்து சொட்டும் ஒலி. இந்த கட்டிடங்களின் கருங்கல் சில்லுகளால் ஆன வெளிப்பக்கம் இவை ஏதோ தொன்மையான செதிலடர்ந்த முதலைகள் அல்லது டினோஸர்கள் என எண்ணச் செய்கிறது. மழைக்கு உகந்தவை இந்த கற்சுவர்கள். மழை பெய்து ஓய்ந்ததுமே உலர்ந்துவிடுகின்றன. பூசணம் பூப்பதில்லை. ஆனால் எப்போதுமே ஈரமாக இருப்பவை போலத் தோன்றச் செய்கின்றன.
சிற்றூர்தான். ஆனால் நுகர்பொருட்கள் விற்கும் கடைகள் பல இருந்தன. நல்ல புத்தகக் கடை இருந்தது. அந்த புத்தகக் கடையை வெளியே நின்று பார்த்தேன். வழக்கம்போல பழையபுத்தகங்கள் நிறைய இருந்தன. படித்த புத்தகங்களை திரும்பக் கொடுத்து புதிய புத்தகங்கள் வாங்கிக்கொள்ளும் வசதியும் இருந்தது. முந்தைய தலைமுறையினரும் இளைய தலைமுறையினரும் நிறையவே வாசிக்கிறார்கள். வாசிப்பில்லாதவர்கள் இளைஞர்கள்தான்.
பழமையான ஒவ்வொரு கட்டிடமும் துல்லியமான வரலாற்றுக்குறிப்புடன் இருந்தது. நகர்ச்சதுக்கம் மிகச்சிறியது, ஐநூறுபேர் இருக்க முடியும். அதன் நடுவே பழைய கல்பீடமும் ஒரு நடுகல்லும். மிகச்சிறியவை, சாதாரணமானவை. ஆனால் அவை வரலாற்றுச் சின்னங்களாக முறையான குறிப்புகளுடனும், மறுசீரமைப்புச் செய்திகளுடனும் இருந்தன. செங்கல் தளமிட்ட சாலையோரம் மழையில் நனைந்து ஈரமாக இருந்தது. சாலையோரங்களிலேயே பெரிய பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பூக்கள் செறிந்த செடிகள்.
புட்டிங் மிக நன்றாக இருப்பதாக அருண்மொழியும், டாக்டர் பார்கவியும், அவர் அம்மாவும், முத்துக்கிருஷ்ணனும் ஒருங்கிணைந்து கருத்து சொன்னார்கள். நான் இனிப்பு சாப்பிடுவதை முற்றாக விட்டிருப்பதனால் சுவை பார்க்கவில்லை. அந்தக் கடையை பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளூரில் தேவைப்படும் பொருட்கள் நிறைந்திருந்தன. காய்கறிகள், பழங்கள், ரொட்டிகள், பொம்மைகள் என என்னென்னவோ. ஆனால் மிகப்பெரும்பான்மை இனிப்பு வகைகள்தான். எல்லாமே சீனியால் செய்யப்பட்டவை. அவ்வளவு இனிப்புகளை ஒரே இடத்தில் பார்ப்பதே திகட்டியது.
அமெரிக்கர்களைப் போலவே பிரிட்டிஷ்காரர்களும் இனிப்புகளை தின்றுகொண்டே இருக்கிறார்கள். மது உண்டு என்றாலும் அது அடிமைப்படுத்துவதில்லை. அடிமைப்படுத்தியிருப்பது சீனிதான். இந்த அளவுக்கு இனிப்பு தேவைப்படுவது ஏன்? உள்ளே இருக்கும் கொண்டாட்டமே இனிப்பை நாடச் செய்கிறது. லண்டன் உட்பட்ட சில நகர்களைத் தவிர்த்தால் பிரிட்டன் இன்று பெரும்பாலும் ஓய்வுக்கான ஊர் போல தெரிகிறது. தேவையான பணம் வைத்திருக்கிறார்கள். உலகைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. வாழ்க்கையை ‘அமைதியாக ரசிப்பது’தான் எஞ்சிய நாட்களில் செய்யவேண்டியது என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கொண்டாட்டத்தின் புறவடிவமாக இருக்கிறது சீனி என நினைக்கிறேன்.
காவியம் – 42
(கருங்கல்செதுக்குச் சிற்பம், பெயர் தெரியாதது. சாதவாகனர் காலம் பொயு1, பைத்தான்)கானபூதி சொன்னது. “நான் அவனுக்குச் சொன்ன கதை சாதவாகனர்களின் ஆட்சிக் காலத்தில் நிகழ்கிறது. அக்னிபுத்ர சதகர்ணியின் ஆட்சிக்காலத்தில் அந்த அரசு வடக்கே உஜ்ஜையினி முதல் தெற்கே அமராவதி வரை, கிழக்கே மகாநதிக்கரை முதல் மேற்கே துவாரகை வரை பரவியிருந்தது. நான்குதிசைகளில் இருந்தும் பிரதிஷ்டானபுரிக்கு வந்து சேர்ந்த சாலைகள் வழியாகப் பயணிகளின் வண்டிகளும், செல்வமும் நுழைந்துகொண்டே இருந்தன”.
பிரதிஷ்டானபுரியை நோக்கி வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் புலவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அங்கே சொல்லுக்குப் பொன்னுக்கு நிகரான மதிப்பிருந்தது என்னும் செய்தி நாடோடிகளின் நாக்குகளின் வழியாகவே பரவிக் கொண்டிருந்தது. சாதவாகனர்களின் புலவர் சபையில் சதுர்வித்வத்கோசம் என அழைக்கப்பட்ட நான்குவட்டங்கள் இருந்தன. நவரத்னாவளி என பெயர்கொண்ட முதல் வட்டத்தில் ஒன்பது பெரும்புலவர்கள் திகழ்ந்தனர். கனகமாலா என அழைக்கப்பட்ட இரண்டாவது வட்டத்தில் பதினெட்டு புலவர்களும், ரஜதமாலா என அழைக்கப்பட்ட மூன்றாவது வட்டத்தில் நூற்றியெட்டு புலவர்களும் இருந்தனர். அக்ஷமாலா என அழைக்கப்பட்ட நான்காவது வட்டத்தில் ஆயிரத்தெட்டு புலவர்கள் இருந்தனர். நான்காவது வட்டத்தில் நுழைவதற்கு ஆயிரக்கணக்கான புலவர்கள் போட்டியிட்டனர்.
ஒரு புலவர் அவையில் விவாதத்தில் தோல்வியுற்றாலோ, நோயுற்று சபைக்கு வரமுடியாமலானாலோ, உயிரிழந்தாலோ அடுத்த வட்டத்தில் இருந்த சிறந்த புலவர் அவ்வட்டத்திற்குள் அமர்த்தப்பட்டார். அதற்கென்று அவைகூடி போட்டிகள் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு புலவருக்கும் அவையிலிருந்து அவர்களின் தகுதிக்கேற்ப பொருளும் இடமும் வழங்கப்பட்டது. வைரம் பதித்த கோல்காரன் முன்னால் வர சபைக்குள் நுழைவது நவரத்னாவளியின் புலவர்களுக்கு உரிமையாக இருந்தது. பொற்பூணிட்ட பல்லக்கும், வெள்ளிப்பூணிட்ட பல்லக்கும், மஞ்சள் கொடி பறக்கும் பல்லக்குகளும் அடுத்தடுத்த நிலையைச் சேர்ந்த புலவர்களுக்குரிய உரிமையும் பதவியுமாக வகுக்கப்பட்டிருந்தன.
புலவர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த வாக்பிரதிஷ்டான் என்னும் காவிய சபை ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த நான்கு அரைவட்டங்களால் ஆனது. அதன் நடுவே அரசர் அமரும் அரியணைமேடை அமைந்திருந்தது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புலவர் அவை அங்கே கூடியது. அவர்கள் இலக்கிய ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர். அரசரின் ஊழியர்களால் வரவேற்கப்பட்டு கொண்டு சென்று தங்கள் இருக்கைகளில் அமரச்செய்யப்பட்ட புலவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கைக்கோல்கள் இருந்தன. பேச விரும்புகையில் அந்த கைக்கோலை தலைக்குமேல் தூக்கி மும்முறை அசைத்தனர். சம்ஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் சபையில் பேச அனுமதி இருந்தது.
பிரதிஷ்டானபுரியின் அவையில் ஒரு நூல் அரங்கேறுவது என்பது இமையமலையின் சிகரத்தில் விளக்கேற்றி வைப்பதுபோல என்று கவிஞர்கள் பாடினர். ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் அங்கே ஒரு நூல் அரங்கேறியது. ஆண்டுக்கு ஆறு காவியங்களேனும் அங்கே முன்வைக்கப்பட்டன. மூன்றாண்டுக்கு ஒரு காவியமே அரங்கத்தி புலவர்களிடம் ஏற்பு பெற்றது. அந்நூல்கள் அர்ஜுனனில் வில்லில் இருந்து அம்புகள் கிளம்புவதுபோல எடுக்கையில் ஒன்றும், தொடுக்கையில் நூறும், செல்கையில் ஆயிரமும், அடைகையில் லட்சமும் என பெருகி பாரதவர்ஷமெங்கும் சென்றன. அந்நூல்களின் முகப்பில் ‘பிரதிஷ்டான முத்ரித:’ என்னும் புகழ்மொழி இடம்பெற்றது. அந்தச் சொல் எந்த அவையின இரும்புக் கதவுகளையும் திறக்கும் தாழ்க்கோல் என அறியப்பட்டது.
அங்கே எல்லா மொழிகளில் இருந்தும் நூல்கள் வந்து ஆராய்ச்சி செய்யப்பட்டன. வேதமொழியும் சம்ஸ்கிருதமும் சபைக்கு வந்தன. பிராகிருதமும் பாலியும் வந்தன. தென்நாட்டு மொழியாகிய தமிழும் ஆராயப்பட்டது அம்மொழிகளின் கலப்பால் உருவான நூற்றுக்கணக்கான சங்கரபாஷைகளும் அபப்பிரஹ்ம்சங்களும் வந்துகொண்டே இருந்தன. ஒவ்வொரு மொழிக்கும் உரிய இலக்கண அறிஞர்களும் அவையில் இருந்தனர். ’வாக்யார்த்தாலங்கார நைபுண்ய’ என அழைக்கப்பட்ட அவர்கள் சொல், பொருள் ஆகியவற்றை ஆராய்ந்து நூல்களை மதிப்பிட்டனர்.
பிரதிஷ்டானபுரியில் மூச்சுக்களின் அளவுக்கே சொற்களும் பிறந்தன என்று ஒரு சொல்லாட்சி இருந்தது. சொற்கள் பெருகிப்பெருகி அந்நகரமே மாபெரும் தேனீக்கூடு போல முழங்கிக்கொண்டிருந்தது என்றனர் கவிஞர். எட்டுத்திசையில் இருந்தும் தேன் அங்கே தேடிவந்தது. தேன் ஒலிக்கும் கூடு என்று பிரதிஷ்டானபுரி பெயர்பெற்றது. ஆகவே அதை ’மதுபுர:’ என்றே பலநூல்கள் அதைக் குறிப்பிட்டன.
பலதிசைகளில் இருந்தும் புலவர் அங்கே தங்கள் சொற்களுடன் வந்து சேர்ந்தமையால் சொற்கள் மயங்கி உருமாறின. பொருளின் எடையை உதறி சொற்கள் சிறகுகள் கொண்டன என்று கவிஞர் கூறினர். ஆனால் சொற்கள் எல்லை மீறுந்தோறும் இலக்கணம் வலுப்பெற்றது. ஒவ்வொரு மொழி இலக்கணமும் இன்னொரு மொழியின் இலக்கணத்தை ஏற்றுக்கொண்டு தன்னை பெருக்கிக்கொண்டது. கவிதையை கற்பிக்கமுடியாது, இலக்கணத்தைக் கற்பிக்க முடியும். ஆகவே இலக்கணவாதிகள் பெருகினர், அவர்கள் கவிஞர்கள்மேல் ஆதிக்கம் கொண்டனர்.
பிரதிஷ்டானபுரியின் அவையில் காவியத்துடன் சென்று நிற்பது சிங்கங்களும் புலிகளும் சூழ்ந்த அவையில் புள்ளிமான் தனித்து சென்று நிற்பதுபோல என்று கவிஞர்கள் சொல்ல ஆரம்பித்தனர். வியாஹ்ரசதஸ் என்றே பகடிநூல்களில் பிரதிஷ்டானபுரியின் புலவர் மன்றம் குறிப்பிடப்பட்டது. சிலர் கழுதைப்புலிகளும் ஓநாய்களும்தான் அங்கே உள்ளன என்று சொன்னார்கள். இலக்கணத்தால் வேட்டையாடப்பட்ட கவிஞர்கள் அவைக்கு வெளியே நகரம் முழுக்க நிறைந்திருந்த சிற்றவைகளில் தங்கள் கவிதைகளையும் கதைகளையும் முன்வைத்தனர். ஆலயங்களிலும் சந்தைகளிலும் மட்டுமல்லாது உழவர்கூட்டங்களிலும் கதைகளும் பாடல்களும் நிறைந்தன.
பிரதிஷ்டானபுரியில் கதைகள் நூறுமேனி விளைந்தன என்றனர் நாடோடிப் பாடகர்கள். ‘கதாவிலசித:, காவ்ய சம்புஷ்ட: வித்யா விஃபூஷித: சிரஃபிரதிஷ்டான: பிரதிஷ்ட:’ என அந்நகரை வாழ்த்திய பெருங்கவிஞர் அஷ்டகரின் சொற்களை நாகனிகாவின் மைந்தன் சதகர்ணி தன் கோட்டை முகப்பில் பொன்னால் பொறித்து வைத்தான். அந்நகரின் ஓங்கிய கோட்டைவாசலில் நூல்களுடனும் கனவுகளுடனும் வந்து நின்ற ஒவ்வொருவரும் அண்ணாந்து அச்சொற்களைப் பார்த்து கைகூப்பி மெய்சிலிர்த்துக் கண்ணீர்மல்கினர்.
பிரதிஷ்டானபுரியின் வாக்பிரதிஷ்டான் சபை கூடும் மாளிகைகள் அடங்கிய திரிரத்னகோசம் என்னும் நான்காவது கோட்டையின் வாசலான திரிரத்ன ஶ்ரீமுகம் என்றும் அழைக்கப்பட்ட முகப்பில் ஒருநாள் பதினைந்து வயதான சிறுவன் ஒருவன் வந்து நின்றான். மெலிந்த உடலும், கன்னங்கரிய நிறமும், பெரிய கண்களும் கொண்டிருந்த அவன் அந்தணர்களுக்குரிய சிகையும் பூணூலும் மேலாடையும் மிதியடியும் அணிந்திருந்தான். அங்கே அப்படி பெரும்புலவர்களை நேரில் காண்பதற்காகவும் அவர்களிடம் மாணவர்களாகச் சேரமுயல்வதற்காகவும் இளைஞர்கள் வந்து நிற்பதுண்டு. அவர்களிடமிருக்கும் பணிவும் அச்சமும் அவனிடம் இருக்கவில்லை. அவன் தலைநிமிர்ந்து ஒருவகையான ஏளனத்துடன் அங்கே வரிசையாக மாளிகைக்குள் நுழையும் பண்டிதர்களைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
வாக்பிரதிஷ்டான் சபைக்குச் சென்றுகொண்டிருந்த நவரத்னாவளியில் ஒருவரான பிரபாவல்லபர் என்னும் பெரும்புலவரின் பல்லக்குக்கு முன்னால் கைகளை விரித்துக் கொண்டு சென்று நின்ற அந்த இளைஞன் “பொன்னால் பூண் போடப்பட்ட பல்லக்கு… வெள்ளியாலான மிதியடிகள்… இப்படி ஆடம்பரங்களில் திளைப்பதற்கு வெட்கமே இருக்கக்கூடாது. அறியாமையால் மட்டுமே அது கைவரும்” என்று கூவினான்.
அவனை பிரபாவல்லபரின் மாணவர்கள் பிடித்து விலக்கினர். அவன் அதை மீண்டும் மீண்டும் கூவினான். பிரபாவல்லபர் “என்ன சொல்கிறான்?” என்று கேட்டு பல்லக்கின் திரையை விலக்கினார்.
அவன் அதை மீண்டும் கூவினான். “நீர் ஒரு மூடர்… வேதமோ வியாகரணமோ அறியாதவர். நான் அறைகூவுகிறேன். எனக்குத் தெரிந்த வேதமும் வியாகரணமும் உங்களுக்குத் தெரியாது…” என்றான். “நாந் தரையில் நிற்கும்போது நீர் பல்லக்கில் போவது கீழ்மை!”
அவனை படைவீரர்கள் பிடித்து வெளியே தள்ளினார்கள். அவன் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தான். மேலும் பண்டிதர்கள் வந்தபோது வேறு வழியாக உள்ளே வந்து அதே போல அவர்களை இகழ்ந்தான். அவன் அந்தணன் என்பதனால் அவனை பிரதிஷ்டானபுரியின் வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மறுநாளும் அதன்பிறகு வந்த ஒவ்வொரு நாளும் அவன் அங்கே அப்படி அவர்களை இகழ்ந்து கொண்டிருந்தான். அவன் ஒரு பைத்தியக்காரன் என்று புலவர்களும் பிறரும் முடிவுசெய்தனர். அவனைப்பற்றி ஓரிரு சொற்களில் ஏளனம் செய்ததும் அவனை மறந்தும் விட்டனர்.
பிரதிஷ்டானபுரியின் அவையில் கனகமாலா என்னும் இரண்டாவது வட்டத்தைச் சேர்ந்த ரத்னாகரர் என்னும் கவிஞர் அந்த சபையின் வயதில் இளையவர், ஆனால் அவர் தக்ஷசிலாவில் சென்று பயின்று வந்திருந்தார். ஆகவே அவர் மேல் பிறருக்கு அச்சமும் வெறுப்பும் இருந்தது. ஆனால் அவர் கண்முன் அனைவரும் அவரை புகழ்ந்தும் நயந்தும் பேசினார்கள். பிரபாவல்லபரிடம் பலரும் அவரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தான் நுழையவேண்டும் என்று ரத்னாகரர் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லி உருவேற்றினார்கள். அவர் வெளிப்படையாகவே ரத்னாகரரை வெறுத்தார்.
ரத்னாகரர் அலங்காரங்கார சாஸ்திரம் பற்றி இயற்றிய ‘காவ்யாலங்கார புஷ்பாவலி’ என்னும் இலக்கணநூலை சபையில் முன்வைத்தார். அதற்காகவே காத்திருந்த பிரபாவல்லபர் அந்நூலை கடுமையாக கண்டித்துப் பேசினார். அதன் ஒவ்வொரு வரியிலும் இலக்கணப்பிழை கண்டுபிடித்தார். அவர் தொடங்கிவைக்க மற்ற புலவர்கள் அந்தப் பாதையை பிடித்துக்கொண்டார்கள். அங்கே ஒருவரை வதைப்பதென்றால் ஒரு தொடக்கம் கிடைத்ததுமே அத்தனை பேரும் பாய்ந்து வந்துவிடுவது வழக்கம்.
பிரபாவல்லபர் ரத்னாகரரின் வரிகளில் இருந்த உவமைகளையும் உருவகங்களையும் நேரடியாகப் பொருள் எடுத்துக்கொண்டு தாக்கினார். “நத்தை ஊர்ந்து செல்லும் பாதை ஒளிவிடுவதில்லை. வெளிச்சத்தில் அது அப்படி நமக்கு தோன்றுகிறது. இடம் மாறி நின்றால் அந்த ஒளி மறைந்துவிடும்” என்று அவர் சொல்ல அதன்பின் நீண்டநேரம் நத்தை உண்மையில் ஒளியை உருவாக்குகிறதா என்று கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டார்கள். நத்தைவெளிச்சம் என்று அதை ஒரு கேலிச்சொல்லாக உடனே மாற்றிக்கொண்டனர். சூரியன் ஒரு பெரிய நத்தையா இல்லையா என்று விவாதம் உருமாறியது.
“அலங்கார இலக்கணத்தை அலங்காரங்கள் வழியாகத்தான் சொல்லமுடியும். இது சொல்லிலக்கணம் போலவோ, எழுத்திலக்கணம் போலவோ, பொருள் இலக்கணம் போலவோ திட்டவட்டமாக வகுத்துச் சொல்லத்தக்கது அல்ல. அலங்காரம் என்பது மொழியில் நேரடியாகச் சொல்லப்பட முடியாத ஒன்றை வேறுவகையில் உணர்த்துவதற்கான முயற்சி. ஆகவே அதில் சஹ்ருதயனின் கற்பனைக்கே முதன்மை இடம். ஆகவே அலங்கார சாஸ்திரமும் சஹ்ருதய விஃபாவனத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கமுடியும்” என்று ரத்னாகரர் சபையில் மன்றாடினார்.
ஆனால் அதற்குள் சபையின் மொத்த மனநிலை அந்நூலை அழிக்க முடிவுசெய்துவிட்டிருந்தது. பிரபாவல்லபரின் ஆதரவாளர்கள் அவரை குத்திக்கிழித்தனர். “பதங்கம் சிறகுகளைக் கனவுகாணவில்லை. ஏனென்றால் பூச்சிகள் கனவுகாண்கின்றன என்பதற்கு ஆதாரமே இல்லை” என்று சுகுமார சர்மா சொன்னார். “பதங்கம் எப்படி சிறகைக் கனவுகாண முடியும்? ஒருவருக்கு முன்னரே தெரியாத ஒன்று கனவிலே வருமா என்ன?”
“இது உவமை, உவமைக்கு இந்தவகையான தர்க்கம் கிடையாது” என்றார் ரத்னாகரர், அழும்குரலில்.
”இலக்கணமே இலக்கியத்தை உருவாக்குகிறது” என்று பிரபாவல்லபர் அவருடைய வழக்கமான வரியைச் சொன்னார். அதை தேவர்கள் அருளிய மந்திரத்தை சொல்வதுபோல தன்னம்பிக்கையும் பணிவும் இணையாகக் கலந்த, புன்னகையா துயரமா என்று அடையாளம் காணமுடியாத ஒரு முகபாவனையுடன் சொல்வது அவருடைய வழக்கம். “ஒரு சொல் இன்னொரு சொல்லுடன் பழுதற இணையும்போதே பொருள் பிறக்கிறது. ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய தனிப்பொருட்கள் மனிதர்களுக்குரியவை அல்ல, அவை தெய்வங்களுக்குரியவை. சொற்களைச் சேர்த்து உருவாக்கும் பொருளே மனிதர்களுக்குரியது. அதை உருவாக்குவது இலக்கணம். இலக்கணமே மொழி.” என்று அவர் தொடர்ந்தார்.
“இலக்கணமற்ற மொழி எவருக்கும் பயன்படுவது அல்ல. அது விண்ணிலிருக்கும் தூயநீர் போன்றது. மழையெனப் பொழிந்து ஆறென ஓடினாலன்றி அதற்கும் நமக்கும் எந்த உறவுமில்லை. இலக்கணமே மொழியை மண்ணென்றும், அதன்மேல் நகர்களென்றும், கோட்டைகளென்றும், அதற்குள் மாளிகைகள் என்றும், அறைகள் என்றும், அமர்விடங்கள் என்றும் மாற்றுகிறது”
அவர் சொல்லி இடைவெளி விட்டதும் சபையினர் ”ஆகா!” “ஆகா!” என ஓசையெழுப்பினார்கள்.
“அந்த பீடத்தில் அமர்பவர்களும் இலக்கணத்தால் உருவாக்கப்பட்டவர்களே” என்று பிரபாவல்லபர் தொடர்ந்தார். “இலக்கணமே நம்மைப்போன்ற பண்பட்ட மனிதர்களை உருவாக்குகிறது. நாம் பேசும் மொழியும் நாம் அணியும் உடைகளும், நமது நடத்தையும் அனைத்தும் இலக்கணத்தால் உருவானவை. இலக்கணமற்ற மானுடரை கிராதர் என்றும் நிஷாதர் என்றும் அரக்கர் என்றும் கூறுகிறோம். பண்பட்டது மட்டுமே பயனுள்ளது என்று அறிக. என் பிரியத்திற்குரிய இளைய அறிஞரே, அந்த மரம் வெற்றுச்சொல். அறைக்குள் இருக்கும் இந்த மஞ்சம் இலக்கணத்திற்குட்பட்ட மொழி. இதன்மீதுதான் நாம் துயில முடியும்”.
“ஆனால் கவிதை எப்போதுமே இலக்கணத்தை விட்டு மேலெழுகிறது… கூட்டில்தான் பறவை முட்டையிடமுடியும். அங்கேதான் குஞ்சு பிறக்கவும் சிறகு கொள்ளவும் முடியும். ஆனால் அந்தச் சிறகைக்கொண்டு அது கூட்டை விட்டு வானிலெழாவிட்டால் அது பறவையே அல்ல” என்று ரத்னாகரர் சொன்னார்.
“நாம் பறவைகளின் இலக்கணத்தைப் பற்றிப் பேசவில்லை” என்று பிரபாவல்லபர் சொன்னதும் சபையே சிரித்தது. அவர் தீவிரமாக “இலக்கணம் மொழியின் கணிதம். கணிதம் பருப்பொருளின் இலக்கணம். இவையன்றி மனிதர் அறியத்தக்கதும் கற்பிக்கத்ததுமான அறிவென்று இப்புவியில் பிறிதில்லை” என்றார்.
“ஆமாம்! ஆமாம்!” என்று பிரபாவல்லபரின் மாணவர்களும் நண்பர்களும் ஆராவாரம் செய்தார்கள்.
ரத்னாகரன் இருகைகளையும் விரித்து உரக்க சொன்னார். ”சபையிலிருக்கும் அறிஞர்களே, மனிதக் கைகள் எவ்வண்ணம் இருக்கவேண்டும் என்பது இலக்கணம். கட்டைவிரல் ஒவ்வொரு செயலிலும் இருக்கவேண்டும் என்பதும், சிறுவிரல் பெரும்பாலான செயல்களில் விலகியிருக்கவேண்டும் என்பதும் வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் கைகள் செயலற்றவை ஆகும். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் கைவிரல்களின் ரேகைகள் ஒன்றல்ல. ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொன்றாகவே உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் ஊழை வகுத்த தெய்வம் அதை அவர்களின் கைரேகைகளிலேயே பொறித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை என படைத்த பிரம்மம் இலக்கணத்திற்கு அடங்காத பெருவிரிவென்றே தன்னைக் காட்டுகிறது”
அவன் சீற்றம் கொள்ளும் தோறும் பிரபாவல்லவர் கனிந்து கனிந்து வந்தார். அன்பு நிறைந்த கண்களால் அவனைப் பார்த்து ”இளைஞரே, நெறிகளெனத் தன்னை வெளிக்காட்டுவதே பிரம்மம். நீர் வீழ்வதும் தீ எழுவதும் இலக்கணம் சார்ந்தே நிகழ்கிறது. அவை இலக்கணத்தை மீறுமென்றால் இப்புவி அழியும். இலக்கணம் தெய்வமென்றால் அதன்மேல் ஓயாது மோதும் இலக்கணமீறல் என்பதே மாயை ஆகும்” என்றார்.
ரத்னாகரர் மேலும் சீற்றமடைந்தார். சினத்தில் அவருக்கு அழுகை வந்து குரல் உடைந்தது. ”இலக்கணத்தின் பார்வையில் இங்கே சபையில் இருக்கும் சுபத்திரருக்கும் ,அதற்கப்பால் அமர்ந்திருக்கும் கல்மாஷருக்கும், அப்பால் இருக்கும் ஸ்ரீதரருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றால் ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனிச்சிறப்பு என்ன?” என்றார.
அவரை முழுமையாக வென்றுவிட்டதை உணர்ந்த பிரபாவல்லபர் மேலும் கனிவுகொண்டு ”இன்னமும்கூட புரிந்துகொள்ளாமலிருக்கிறாயே. உன் ஆசிரியர்களை நான் வணங்குகிறேன்” என்றார். சபை சிரித்தது. “மகனே, நாம் அனைவரும் வாயால் உண்டு குதத்தால் கழிகிறோம். கண்ணால் பார்த்து காதால் கேட்டு வாயால் மொழிகிறோம். நமக்கிடையே வேறுபாடென்பது நாம் எண்ணிக்கொள்வதே. பொதுமையை நோக்கிச் செல்பவன் தெய்வத்தை அணுகுகிறான். தனித்துவத்தை நாடுபவன் தன்னைத்தானே பெருக்கிக்கொள்கிறான். தனித்துவமே ஆணவம். ஆணவமே அழிவு” என்றார்.
“தனித்துவம் இல்லாமல் கவிதையா? என்ன இது?” என்று ரத்னாகரர் தன்னை மறந்து வெளிவந்த அழுகையுடன் சொன்னார்.
“குழந்தை, பொதுமை நோக்கிச் செல்வது தேவர்களின் இயல்பு. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரே முகம், ஒரே விழிகள். அவர்களின் பெயர்களும் ஒன்றே. ஆனால் ஒவ்வொரு அசுரரும் தனிப்பெயரும் ,தனிமுகமும் தனக்கென ஆணவமும் கொண்டவர்கள். ஆணவம் நெருப்பு போல. இருத்தலும் பெருகுதலும் அதற்கு ஒன்றுதான். பெருகும்போது எங்கோ அது அழிந்தாகவேண்டும் என்பதும் நெறியென்று உள்ளது. தனித்தன்மையை நாடுபவன் தன்னை தெய்வங்களுக்கு முன் தருக்கி நிறுத்துகிறான். அவனை அது அழிக்கும்” என்றார் பிரபாவல்லபர்.
ரத்னாகரர் தத்தளித்துக் கொண்டிருக்கையில் கீர்த்திதரர் எழுந்து “என்னை பிரம்மம் மறுக்காமலிருப்பதாக. நான் பிரம்மத்தை மறுக்காமலிருப்பேனாக. இருபக்க மறுப்பும் எவ்வகையிலும் நிகழாமலிருப்பதாக. ஓம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
சபை “ஓம்! ஓம்! ஓம்!” என்று குரலெழுப்பியது.
கைகளைக் கூப்பிக்கொண்டு ரத்னாகரர் அமர்ந்துகொண்டார்.
அன்று பல்லக்கில் திரும்பிச் செல்லும்போது பிரபாவல்லபர் தன் மகனும், ,முதன்மைச் சீடனுமாகிய வாக்வல்லபனிடம் சொன்னார் “மகனே, கவிதையை கற்றுக்கொள்ளாதே. அது காலந்தோறும் மாறுவது. கணந்தோறும் புதிதாக நிகழ்வது. அதன் பின்னால் செல்பவர்கள் புகையைப் பற்றிக்கொள்ள விரும்பும் குழந்தைகளைப் போன்றவர்கள். இலக்கணம் என்பது இதோ தெற்கே நிமிர்ந்து நின்றிருக்கும் விந்திய மலைமுடிகளைப் போன்றது. அது என்றும் அங்குதான் இருக்கும் அதிலிருந்து ஒரு கல் கொண்டு வந்து நம் இல்லத்தில் போட்டோமென்றால் இங்கும் அது விந்தியனாகவே இருக்கும். எப்படிப் புரட்டினாலும் எங்கு போட்டாலும் அது கல்தான். எத்தனை தலைமுறைகளானாலும், யுகங்கள் புரண்டு சென்றாலும் அது கல்லாகவே நீடிக்கும். இலக்கணத்தை பற்றிக்கொள். அது கற்பாறையுடன் சேர்த்து வீட்டைக்கட்டிக்கொள்வது போல“
ஆனால் மறுநாள் சபைகூடியபோது ரத்னாகரர் தன் கோலை தூக்கிக் காட்டினார். “சான்றோர்களே, இங்கே ஒரு நூலை முன்வைக்கும் ஆசிரியன் தனக்குத் துணையாக ஓர் அறிஞரை கூட்டிவரலாம் என்று நெறி உள்ளது. நான் என் தோழனாகிய அறிஞனை சபையில் முன்வைக்க எனக்கு அனுமதி வேண்டும்” என்றார்.
பிரபாவல்லபர் அதை எதிர்பார்க்கவில்லை ”யாரவர்? இங்கே இதற்கு முன் இல்லாத ஒருவர் என்றால் அவருடைய தகுதி என்ன?” என்று கேட்டார்.
“இங்கு இதற்கு முன் நுழையாதவர்தான். அவருக்குத் தகுதி என நான் நினைப்பது அவர் என் நண்பர் என்பதுதான். அவருக்கு தகுதி இல்லை என்று இந்த சபையில் நிறுவப்பட்டால் சபை என்னை தண்டிக்கலாம்” என்றார் ரத்னாகரர்.
“இதை அனுமதிக்கக்கூடாது” என்று பிரபாவல்லபர் சொன்னார். ஏதோ சூது உள்ளது என்று அவருக்கு தோன்றிவிட்டது
தலைமை அமைச்சரான விஷ்ணுகுப்தர் “சபை முறைமைகளின்படி அவரை அனுமதித்தே ஆகவேண்டும்” என்றார். அவருக்கு முந்தையநாள் பிரபாலவல்லபர் கொஞ்சம் தலைதூக்கிவிட்டார் என்ற கசப்பு இருந்தது, அவரை தட்டிவைக்க விரும்பினார்.
பிரபாவல்லபர் மேற்கொண்டு பேசமுடியாமல் அதை ஏற்றுக்கொண்டார். சபையில் இருந்த அரசர் அக்னிபுத்ர சதகர்ணி அங்கே ஒரு வேடிக்கை நிகழ்வதைப் பார்க்க விரும்பினார்.
சபையின் கோல்காரன் அழைத்ததும் உள்ளே நுழைந்தவன் அவர்கள் நன்கு அறிந்திருந்த அந்த பைத்தியக்கார இளைஞன். அவன் குளித்து, நல்ல ஆடை அணிந்து, வந்திருந்தான். அவனைக் கண்டதும் சபையில் சிரிப்பு ஓடியது. ஆனால் பிரபாவல்லபர் ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்று சந்தேகப்பட்டார். அவனைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இளைஞன் கரிய நிறத்துடன், உயரமில்லாதவனாகவும் ஒடுங்கிய நெஞ்சு கொண்டவனாகவும் இருந்தான். அரசரை நோக்கி “சதஜனபதநாயக, உபயவிஜய, உதயமார்த்தாண்ட, வியாஹ்ரவீர்ய, சர்வஜனப்ரிய, சகஸ்ரகுலசேகர, நிருபதுங்க, புருஷோத்தம, பத்மஹஸ்த, வஜ்ரஹஸ்த, சத்ருபயங்கர, மித்ரபரிபாலக, உத்துங்கசீர்ஷ, அஜயசரித்ர, அஜாதசத்ரு, அபயவரத, அசலமகாகீர்த்தி ,ஸ்வஸ்திஶ்ரீ ,அக்னிபுத்ர சதகர்ணிக்கு கௌதம கோத்திரத்தில் பிறந்தவனும் சோமசர்மன் என்னும் வைதிக பிராமணணனின் மகனுமாகிய குணபதியின் வாழ்த்துக்கள்” என்றான்.
அதுவும் ஒரு நடிப்பு போலிருக்கவே சபையினர் சிரித்தனர்.
“வணங்குகிறேன் அந்தணரே, நீங்கள் இங்கே ரத்னாகரரின் நூலை ஆதரித்துப் பேச வந்திருக்கிறீர்கள் அல்லவா?” என்று அரசர் கேட்டார்.
“ஆமாம், அவர்தான் என்னை அழைத்துவந்தார்” என்று அவன் சொன்னான்.
“அதற்கு முன் இந்த சபையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கவிரும்புகிறேன். இந்தச் சபையில் நின்றிருக்கும் தகுதி உங்களுக்கு உண்டு என்று எண்ணுகிறீர்களா? அதை நிரூபிக்கமுடியுமா?” என்றார் பிரபாவல்லபர்.
“ஆமாம், நான் முற்றிலும் தகுதிகொண்டவனே. ஆனால் என் தகுதியை மதிப்பிட இந்த சபையில் உள்ளவர்களுக்குத் தகுதி உண்டா?” என்று குணபதி கேட்டான்.
சபையினர் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்தனர். சிலர் சிரித்தனர்.
அரசர் சிரித்தபடி “சபையினரின் தகுதியை முதலில் நீங்கள் சோதிக்கலாம் அந்தணரே” என்றார்.
“சரி. நானே சோதனையை வைக்கிறேன். நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரநூல்கள், நூற்றியெட்டு அடிப்படை வியாகரண நூல்கள், பதினெட்டு புராணங்கள், சபையில் ஏற்பு பெற்ற எழுபத்திரண்டு காவியங்கள் உட்பட இந்தச் சபையிலுள்ளவர்கள் அவர்கள் அறிந்த எந்த நூலில் இருந்தும் என்னிடம் கேள்வி கேட்கலாம். ஒரு பாடலின் முதற் சொல்லையோ இறுதிச்சொல்லையோ சொல்லி அது எந்தப் பாடல் என்று கேட்டால் மூன்று நொடிகளுக்குள் நான் அந்தப்பாடலையும் அதன் பொருளையும் சொல்வேன். அவர்கள் தாங்கள் அறிந்த எந்த சொல்லுக்கும், எந்தப் பாடலுக்கும் பொருள் கேட்கலாம். ஒரு சொல்லைச் சொல்லி அது வேதங்களிலும் பிறநூல்களிலும் எங்கெல்லாம் வருகிறது என்றுகூடக் கேட்கலாம்” என்றான் குணபதி.
“நான் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி இங்கே வருமென்றால் அக்கணமே நான் இந்த எழுத்தாணியால் என் கழுத்தைக் குத்திக்கொண்டு இந்தச் சபையிலேயே செத்துவிழுவேன். ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டால் கேள்வி கேட்டவர் எழுந்து என்னைப் பணிந்து வணங்கவேண்டும்… மூன்றுமுறை அவ்வாறு என்னை பணிந்தவர் அதன்பின் என் சொல்லுக்கு வாழ்நாள் முழுக்க முழுமையாகக் கட்டுப்படவேண்டும்” என்று குணபதி தொடர்ந்தான்.
“இந்த சபையில் எவரேனும் என்னைவிடக் கற்றவர் என்று தன்னைப்பற்றி கருதினால் அவரிடம் நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் அவர் பதில் சொன்னால் போதும். அவ்வாறு அவர் பதில் சொல்லிவிட்டால் அவரை நான் பணிந்து வணங்கி அக்கணமே அவையை விட்டு வெளியேறுவேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால் அவர் என் கால்களை தன் தலையில் அணியவேண்டும்”
சபை திகைத்துவிட்டது. அப்படி ஓர் அறைகூவல் அந்தச் சபையில் எழுந்ததே இல்லை. சிறிதுநேரம் எந்த கேள்வியும் எழவில்லை. பிரபாவல்லபர் தன் மாணவர்களிடம் கண்காட்ட அவர்கள் கேள்வி கேட்கலானார்கள். பின்னர் அவையிலிருந்த அனைவருமே கேள்வி கேட்டனர். எல்லா கேள்விக்கும் அவன் பதில் சொன்னான். பெரும்பாலும் கேள்வி தொடங்கும்போதே பதிலைச் சொல்லி அடுத்தவருக்காக கைகாட்டினான். சற்றுநேரத்தில் மொத்த சபையும் அவனை வணங்கிவிட்டது.
நவரத்னாவளியின் ஒன்பது புலவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அரசரின் கண்களில் சிரிப்பு நிறைந்தது. “பிரபாவல்லபரே, நீங்கள் கேட்கும் கேள்விக்கு இந்தச் சிறுவனால் ஒருபோதும் பதில் சொல்லமுடியாது. அதில் எனக்கு ஐயமே இல்லை” என்றார்.
பிரபாவல்லபர் திகைத்து அரசரைப் பார்க்க சபை சிரித்துக்கொண்டிருந்தது. அவர் தட்டுத்தடுமாறி எதையோ கேட்டு முடிப்பதற்குள் அவன் பதில் சொன்னான். அவர் எழுந்து சென்று அவன் கால்களைத் தொட்டு வணங்கினார்.
அரசர் அடுத்தடுத்து ஒன்பது பேரிடமும் கேள்விகேட்கும்படிச் சொன்னார். ஒவ்வொருவராக அவன் முன் பணிந்தார்கள். அவன் கேள்விகேட்க வேண்டிய தேவையே இருக்கவில்லை.
பிரதிஷ்டானபுரியின் புலவர்சபையான காவ்யப்பிரதிஷ்டானின் தலைமைப் புலவனாக அவன் அமரச்செய்யப்பட்டான். அவனுக்கு வைரம் பதித்த பொற்கோலை அளித்த அரசர் அக்னிபுத்ர சதகர்ணி “இனிமேல் இந்த சபையின் முதன்மைப் புலவர் நீங்கள்தான். அந்தப்பொருளில் இனி உங்கள் பெயர் குணாட்யன் என்றே அழைக்கப்படட்டும்” என்றார்.
(மேலும்)
சசி இனியன்
சசி இனியன் தமிழில் கவிதைகள் எழுதி வருகிறார். 8 ஜூன் 2025 அன்று சென்னையில் நிகழும் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழாவில் விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
சசி இனியன்நெ.து.சுவும் அங்கதமும் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் விழைகிறேன்.
கடந்த மாதம் பெங்களூரில் “Of Men, Women and Witches” புத்தகம் பற்றிய கலந்துரையாடலுக்கு முன் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது
“தமிழ் நாட்டுல கல்வி வளர்ச்சிக்கு முக்கியமானவர் நெ.து.சுந்தரவடிவேலு அவர பத்தி பெரும்பாலான பேர்களுக்கு தெரியாது” என்று நீங்கள் சொல்லும்போது உண்மையில் அவரை நான் அறிந்திருக்கவில்லை பின்னர் இணையத்தில் தேடியப்பொழுது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புகைப்படத்திற்கு கீழே தமிழ் விக்கி பதிவு இருந்தது
நெ.து சுந்தர வடிவேலுவை பற்றிய புகைப்படங்களுடன் விரிவான விளக்கங்கள் இருந்தது. தொடர்ந்து அரசியல் வாதிகளால் முன்வைக்கப்படும் கருத்துகளை மட்டுமே அறிந்திருந்தேன்.இன்று எதேட்சயாக மனதில் “அங்கதம்” என்ற சொல் தோன்றியது இதற்கு முன் அந்த சொல்லை எங்கோ கேட்டிருக்கிறேன்.
ஒரு நூல் விமர்சனத்தில் “அங்கதமாக எழுதியிருக்கிறார்” என்று ஒரு எழுத்தாளர் கூறியது நினைவிற்கு வந்தது. அந்த சொல் இன்று பூத்த ஒரு மலரைப் போல எனக்கு மகிழ்வளித்தது மீண்டும் மீண்டும் அந்த சொல்லை சொல்லிப்பார்த்தேன். அங்கதம்..அங்கதம்…அங்…கதம்
பின்னர் தமிழ் விக்கியில் அந்த சொல்லுக்கான பதிவு இருந்தது .அதில் அதன் வகைகள் அதற்கான எடுத்துக்காட்டுகளுடன் இருந்தது. அங்கதம்
கலைச் சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறுவீர்கள் அதற்கேற்ப அந்தச் சொல் உணர்த்தும் பொருளும் மிக நுணுக்கமானது அதனால் ஒரு பொற்கொல்லரின் கவனத்துடன் அச்சொல்லை அணுக அப்பதிவு உதவியது.
நமது கண்முன்னே மெல்ல மெல்ல தமிழ் விக்கி வளர்ந்து வருகிறது.இதற்கு பின் பல நபர்களின் உழைப்பு உள்ளது என்பதை அறிவேன்.அவர்களது முயற்சிகள் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
தமிழ்குமரன் துரை,
பெங்களூர்
மதத்தை இன்று ஏன் பயிலவேண்டும்?
Religion and Unity- Sohel Mehboobநீங்கள் பல்வேறு மதவகுப்புகளை நடத்துகிறீர்கள். சைவசித்தாந்தம், வைணவம் எல்லாம் நடத்துகிறீர்கள். இந்த வகுப்புகள் ஒரு நவீன இளைஞனுக்கு ஏன் அவசியமென நினைக்கிறீர்கள்? நான் இவற்றில் ஆர்வம் காட்டவேண்டுமா என்ன
மதத்தை இன்று ஏன் பயிலவேண்டும்?I listened to this speech and was practically overwhelmed by its clarity and novelty. You categorically explain what the special features are in Indian philosophy, but you do not dismiss or reduce the importance of Western philosophy. The clarification you give is wonderful.
About Indian PhilosophyMay 31, 2025
வாழ்வின் பற்றுதல் எது?
வாழ்க்கையை பொருளியல் போராட்டம், அன்றாடச்சிக்கல்கள் இல்லாமல் அமைத்துக்கொண்டதுமே உருவாகும் முதல் சிக்கலே வாழ்க்கையை எதன்பொருட்டு அமைத்துக் கொள்வது என்பதுதான். ‘என் குடும்பத்துக்காக நான் வாழ்கிறேன்’ என்பதே பெரும்பாலானவர்கள் வாழ்க்கையின் பற்றுகோல் என்ன என்ற கேள்விக்கு அளிக்கும் பதில். அதற்குமேல் ஒரு பதிலைச் சொல்ல விரும்புபவர்களின் சிக்கல் இது. உண்மையில் வாழ்க்கையின் பற்றுகோல் என்னவாக இருக்கமுடியும்?
அழிவற்ற புல்
ஆஸ்திரேலியா குறித்த பெரும்பாலான பயணப்பதிவுகள் அதை கங்காருவின் தேசம் என்றே குறிப்பிடுகின்றன. இளமையில் ஆஸ்திரேலியா என்றதுமே நினைவுக்கு வரும் விலங்காகவும் அது இருந்தது. அதன் விந்தையான பின்னங்கால் அமைப்பு, குழந்தையை வயிற்றின் பையில் சுமந்து செல்லும் பழக்கம். வேறெங்கும் இல்லாத அவ்விலங்கு இந்தியாவின் எந்த உயிர்க்காட்சியகத்திலும் வளர்க்கப்படவும் இல்லை. என்றோ ஒரு நாள் ஆஸ்திரேலியா சென்று கங்காருவை நேரில் பார்ப்பேன் என்று நான் எண்ணியிருந்ததும் இல்லை.
எனது இளமையில் ஆஸ்திரேலியா பிற இனத்தவருக்கு தடைசெய்யப்பட்ட நாடாகவும் இருந்தது. சுற்றுலாவை அது ஊக்குவிக்கவில்லை. வெள்ளை இனத்தவருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டது. பிற இனத்தவர் சுற்றுலாப் பயணிகளாகவும் பெரிதாக ஊக்குவிக்கப்படவில்லை. தமிழகத்தில் எழுதப்பட்ட பயணக்கட்டுரைகளில் ஆஸ்திரேலிய பயணக்கட்டுரைகள் மிக அரிதானவை. ஆஸ்திரேலியா அன்று சுற்றுலாப் பயணிகளுக்கு ஈர்ப்பை அளிக்கும் நிலமாகச் சித்தரிக்கப்படவும் இல்லை. ஒரு விரிந்த வெறும் நிலம் என்று மட்டுமே அது இங்கே உருவகிக்கப்பட்டது. அதில் இருந்த ஒரே ஆர்வமூட்டும் கூறு கங்காரு மட்டும்தான்.
ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பயணம் என்பதை நான் திட்டமிட்டிருக்கவில்லை. ஆனால் எனது நண்பரும் உதயம் இதழின் ஆசிரியருமான திரு நோயல் நடேசன் அவர்கள் ஒரு நிகழ்வுக்காக என்னை அங்கே அழைத்திருந்தார். நோயல் நடேசனை அதற்குமுன் ஐந்தாண்டுகளாகவே எனக்குத் தெரியும். அவர் நடத்தி வந்த உதயம் இதழில் தொடர்ந்து தமிழக அரசியல், பண்பாடு பற்றிய கட்டுரைகளை நான் எழுதிவந்தேன். அந்த அழைப்பு ஒரு பெரும் உளக்கிளர்ச்சியை அளித்தது.
நானும் அருண்மொழியும் 2009ல் ஆஸ்திரேலியாவுக்கு பயணமானோம். மிக நீண்ட பயணம். நடுவே ஹாங்காங் விமான நிலையத்தில் மிக நீண்ட காத்திருப்பு. ஆஸ்திரேலியாவுக்கான எல்லா விமானங்களும் மிகப்பெரியவை. ஏனெனில் அந்த நீண்ட தொலைவை அத்தகைய பெரிய விமானங்கள் மட்டுமே சுருக்கமான செலவில் எதிர்கொள்ள முடியும். ஆனால் நாங்கள் செல்லும்போது தாய்லாந்தில் ஏதோ அரசியல் கிளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. அரசருக்கெதிரான உணர்வுகள் ஓங்கியிருந்தன. சுற்றுலா தொய்வடைந்திருந்தது. குறிப்பாகப் பாலியல் சுற்றுலா. ஆகவே அந்த விமானம் பெரும்பகுதி காலியாகவே இருந்தது. ஓர் ஒழிந்த திரையரங்கில் அமர்ந்து ஓடாத திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் என்று சொல்லலாம்.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிறங்கி மெல்போர்ன் நகரத்தைப் பார்த்தபோது அது ஒரு அமெரிக்க நீட்சி என்ற எண்ணமே எனக்குப் ஏற்பட்டது. அமெரிக்காவின் தெருக்கள், அமெரிக்காவின் சாலைகள், அமெரிக்காவின் இல்லங்கள். ஆஸ்திரேலிய நிலத்தை நான் விரிவாகப் பார்த்தது மெல்போர்னிலிருந்து கன்பரா வரை காரு நண்பருடன் சென்ற பயணத்தின் போது. அதன்பிறகு அங்கிருந்து விமானத்தில் சிட்னி சென்று சிட்னியிலிருந்து ரயிலில் மெல்போர்ன் திரும்பியபோது.
ஆஸ்திரேலியா என்பது மிகப்பிரம்மாண்டமான ஒரு விரிநிலம் என்பதைக் கண்டேன். நாங்கள் சென்ற நிலம் மாபெரும் புல்வெளியால் ஆனதாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் நடுப்பகுதி செந்நிறப் பாலை நிலம். அது என் விழியில் பதியவில்லை. என் கண்கள் நிறைத்து உள்ளத்தில் பெருகியிருந்தது அலையலையாக விரிந்து கிடந்த முடிவிலி எனத் தோற்றமளித்த மாபெரும் புல்வெளிப் பரப்புதான். அந்தப் புல்வெளிப் பரப்பில் அலைந்து திரிவதற்காகவே அங்கிருந்த மான்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் வலுவான பின் கால்களை உருவாக்கிக்கொண்டு கங்காருகளாக மாறின, உடன் வரமுடியாத குழந்தைகளுக்காக வயிற்றில் பைகளை உருவாக்கிக்கொண்டன. கங்காரு புல்வெளிக்காக வடிவமைக்கப்பட்டது.
இளமையில் மாடுகளை வளர்த்த எனக்கு புல் எப்போதுமே செல்வமென்று தோன்றும். அன்றெல்லாம் ஒவ்வொரு காலையிலும் கிளம்பி பசுக்களுக்கும் எருமைகளுக்குமான புல்லை வெட்டிக்கொண்டுவந்து இல்லம் சேர்த்துவிட்டுத்தான் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். பசும்புல் சற்றேனும் உண்ணாவிட்டால் பசுக்களும் எருமைகளும் தொய்வடைந்துவிடும். புல்லைப் பார்க்கையிலேயே அவற்றின் முகத்தில் எழும் பரவசத்தை, உடலெங்கும் ததும்பும் ஆனந்தத்தை கண்ட எவருக்கும் தாங்களே புல்லை மேய்வது போன்ற கிளர்ச்சி ஏற்படும்.
நான் அன்றெல்லாம் ஒவ்வொரு கணமும் புல்லுக்கான பார்வை கொண்டிருப்பேன். எங்கு புல்லைப் பார்த்தாலும் அதை உள்ளத்தில் குறித்துக்கொள்வேன். பல தருணங்களில் வீட்டிலிருந்து பல கிலோமீட்டர் அகன்று கூட புல்லிருக்கும் இடத்தை அடையாளம் கண்டு அங்கு சென்று புல்லைப் பறித்து வருவதுண்டு. பின்னர் அது ஒரு மனப்பழக்கமாக ஆகியது. எந்த ஊரில் இருந்தாலும் புல் கண்ணில் பட்டால் உடனே கைகளும் மனமும் பரபரக்கும். தரையில் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதைக் காணும்போது ஏற்படும் அதே பரபரப்பு. அந்த விழிகளுக்கு புல் மட்டுமேயான ஒரு பெரும் தேசம் என்ன உணர்வை அளித்திருக்கும் என்பதை எவரும் உணர்ந்துகொள்ள முடியும்.
ஆஸ்திரேலியா எனக்கு புல்வெளியாகவே உள்ளத்தில் பதிந்து இன்றும் அவ்வாறே நீடிக்கிறது. ஒரு கட்டுரையில் இந்தியாவை விட்டு வேறெதேனும் நாட்டில் குடிபுக விரும்புவேனெனில் அது ஆஸ்திரேலியாதான் என்று சொல்லியிருந்தேன். ஆஸ்திரேலியாவின் மிதமான பருவநிலை ஒரு காரணம். அதைவிட முதன்மையான காரணம், ஆஸ்திரேலியாவின் மகத்தான புல்வெளிப்பரப்பு. அது திருவரம்பு மாடுகளுக்கு புல் தேடி அலைந்த ஒரு சிறுவன் தங்க விரும்பும் மண்ணிலெழுந்த விண்ணுலகன்றி வேறென்ன?
புல்லை உயிரின் முதல் துளி என்கின்றன வேதங்கள். வேதத்தில் திருண சூத்திரம் என்றே ஒரு பகுதி உண்டு. இங்குள்ள ஒவ்வொரு உயிரினமும் புல்லையோ புல்லை உண்ணும் விலங்குகளையோ உண்பவைதான். சூரிய ஒளியை உணவென சமைப்பவை புல்லே. புல்லிலிருந்தே அனைத்து உயிர்களும் அனைத்து அறங்களும் தோன்றுகின்றன. தெய்வங்களுக்கான அனைத்து அவிப்பொருட்களும் புல்லிலிருந்து உருவாகின்றவையே. புல்லே அன்னம் .புல்லே பிரம்மத்தின் உயிர் வடிவம் .அது கண்கொளாது விரிந்த ஆஸ்திரேலியா ஒரு தெய்வ சாந்நித்தியம் என்று எனக்குத் தோன்றியது. அவ்வுணர்வையே இந்நூலில் எழுதியிருக்கிறேன்.
ஜெ
21.09.2024
நாகர்கோவில்
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள புல்வெளிதேசம் நூலின் மறுபதிப்புக்கான முன்னுரை)
புல்வெளி தேசம் வாங்கறாம் சந்தோஷ்
கவிஞர் றாம் சந்தோஷ் கவிதை, மொழியாக்கம், இலக்கியக் கோட்ப்பாட்டு ஆய்வுகள் ஆகிய தளங்களில் பங்களிப்பாற்றி வருகிறார். வரும் 8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது விழாவில் நிகழும் இலக்கியக் கருத்தரங்கில் ஓர் அமர்வு றாம் சந்தோஷ் கவிதைகளைப் பற்றியது
றாம் சந்தோஷ்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

