Jeyamohan's Blog, page 97

June 5, 2025

‘Hindutva’

Why do my friends label as ‘Hindutva’ anything about Hindu traditions. Like references in Vishnupuram.  What exactly do these people call as ‘Hindutva’?

‘Hindutva’

கார்ல் பாப்பரின் நவீன அறிவியல் இலக்கணத்தை சிந்தனை செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தர்க்கத்தின் நான்கு படிநிலைகள் நம்முடைய சிந்தனையை சரியா ,தவறா என நிரூபிக்க, மறுக்க உதவும்

புரிதல், கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 11:30

June 4, 2025

விமர்சனங்களில் கடுமை

என்னிடம் எப்போதும் கேட்கப்படும் இன்னொரு கேள்வி, விமர்சனங்களில் இவ்வளவு கடுமை ஏன்? மென்மையாகக் கருத்துக்களைச் சொல்லலாமே? பிறரை ஊக்குவிப்பது அல்லவா முக்கியம்? நம் சூழலில் உள்ள ஒரு பொதுவான மனநிலை இது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 11:36

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

ஹாவ்லக் எல்லிஸ் ஹாவ்லக் எல்லிஸ்

 

சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார்.  ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை வாசித்து  “ஆகா!” போட்டிருக்கலாம். அப்படி ஒருவர் கவனம் பெற்றுவிட்டால் பலர் உருவாகி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் பாலியல்வரட்சி மிகுதி. ஆகவே என்றுமே பாலியலெழுத்துக்கு வாசகர்கள் அதிகம். அத்துடன் பெரும்பாலான வாசகர்கள் பாலுறவு மட்டுமே வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் முதிரா இளமையில் வாசிக்க வருகிறார்கள். அவர்கள் இவ்வகை எழுத்துக்களையே தெரிவுசெய்கிறார்கள். அவர்களில் சிலரே அடுத்தகட்ட வாசிப்புக்கு வருகிறார்கள். ஆகவே உலகமெங்கும் பாலியல் எழுத்தே அதிகம் வாசிக்கப்படுகிறது

பாலியல் தளங்கள் பெருகி, எதுவும் கைச்சொடுக்குத் தொலைவில் என்று ஆனபின்னரும்கூட இங்கே பாலியல் எழுத்து அதிகம் வாசிக்கப்படுகிறது. ஏனென்றால் வாசிப்பு கற்பனையை தூண்டுகிறது. கற்பனை நிஜத்தைவிட வீச்சு கொண்டது. வாசிப்பவர்களுக்கு பாலியல் கதை அளிக்கும் கிளர்ச்சியை பாலியல் காட்சி அளிப்பதில்லை. ஆகவே பாலியல் எழுத்து என்பது உலகமெங்கும் ஒரு பெரிய நுகர்வுப்பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது.

இன்று எழுதுபவர்கள் தாங்கள் துணிச்சலாக எழுதுபவர்களாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லா காலகட்டத்திலும் எழுத்தாளர்கள் அவ்வாறு அந்தக் கால அளவுகோலுக்கு ‘துணிந்து’ எழுதுவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த துணிவான எழுத்து இருபதாண்டுகளுக்குள் சாதாரணமாக ஆகிவிடுகிறது, அடுத்த தலைமுறை வந்து மேலும் துணியவேண்டியிருக்கிறது.

உண்மையில் இதில் துணிவென்று ஏதும் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் சமூகவெளியில் பாலியல் வெளிப்பாட்டுக்கு ஒர் எல்லை ஒருவகையான பொதுப்புரிதலாக உருவாகி நிலைகொள்கிறது.. அந்த எல்லையை எந்த அளவுக்கு மீறவேண்டும் என்பதை அந்தப்படைப்பின் ஆசிரியன் முடிவெடுக்கிறான். அதற்கு அளவீடாக இருப்பது அந்தப் படைப்பு எந்த அளவுக்கு பாதிப்பை உருவாக்கவேண்டும், எப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கவேண்டும் என்ற கணிப்புதான்.

உதாரணமாக, மென்மையான உள்ளமோதல்களைச் சொல்லும் ஒரு காதல்கதையில் அப்பட்டமான உடலுறவுக் காட்சி விரிவாக விவரிக்கப்பட்டிருந்தால் அதன் அழகியல் ஒருமை சிதையும். வாசகனிடம் உருவாக்கும் அதிர்வு அந்த படைப்பை அந்த பாலுறவுக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு யோசிக்க வைக்கும். அவனுக்கு அதிர்ச்சியை அல்லது பரபரப்பை அளித்து, அதிலுள்ள நுண்மையான காட்சிகள் அவனுடன் தொடர்புறுத்தமுடியாமல் செய்யும். மென்மையான வண்ணங்கள் நடுவே அடர்வண்ணங்களைச் சேர்ப்பதுபோலத்தான் அது. எந்த வண்ணத்தையும் ஓவியத்தில் பயன்படுத்தலாம். எவ்வாறு கலக்கிறோம் என்பதே கேள்வி.

இந்த அளவீடு மாறிக்கொண்டே இருக்கும் விதம் வியப்பூட்டுவது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள கவிதைகளில் உடல்வர்ணனைகளும், உடலுறவு வர்ணனைகளும் ஏராளமாக உள்ளன. தமிழிலும் சரி, சம்ஸ்கிருதத்திலும் சரி ,பெண்ணுடலின் வர்ணனைகள் கட்டற்று சென்றிருக்கின்றன. மானின் குளம்புபோல என பெண்குறியை வர்ணிக்கும் இடம்வரை. ஆனால் எங்கும் ஆண்குறி வர்ணனை இல்லை. ஏனென்றால் அது அன்றைய சமூகத்திற்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம். சுவைத்திரிபு உருவாகியிருக்கலாம்.

நவீன இலக்கியம் உருவானபோது பாலியலெழுத்து கடுமையான தணிக்கைக்கு உள்ளானது – வாசகனாலும் எழுத்தாளனாலும். ஆகவே இடக்கரடக்கல்கள் உருவாயின. அன்றைய விக்டோரிய ஒழுக்கவியல் ஒரு காரணம் என்றாலும்; அதைவிட முக்கியமான காரணம் நவீன இலக்கியம் அச்சு வழியாக மேலும் பரவலாகச் சென்றது, இன்னும் பெரிய மேடையை அடைந்தது என்பதுதான். பழங்காலக் கவிதைகள் சிறிய அரங்குகளுக்கும், அவைகளுக்கும் உரியவை. அங்கே கவிச்சுவை நுகரவந்த அறிஞர்களே இருந்தனர். நவீன இலக்கியத்தில் பொதுமக்கள் வாசகர்களாக அமைந்தனர். இலக்கியம் ஒரு பொதுவெளி ஆக மாறியது. ஆகவே ‘தெருவில்நின்று’ பேசக்கூடிய விஷயங்களே இலக்கியத்திலும் அமையவேண்டும் என்ற உளநிலை அமைந்தது.

ஆனால் ஒவ்வொரு படைப்பும் அந்த எல்லையை முட்டி விரிவாக்கிக் கொண்டே இருந்தது. தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் பாலுறவை எப்படி எழுதியிருக்கிறார் [விபரீத ஆசை] தி.ஜானகிராமன் எப்படி எழுதியிருக்கிறார் [அம்மா வந்தாள், தண்டபாணி- அலங்காரம் உறவு] ஜி.நாகராஜன் எப்படி எழுதியிருக்கிறார் [நாளை மற்றுமொருநாளே கந்தன்- வள்ளி உறவு] என்று கூர்ந்து வாசிப்பவர்களால் அந்த எல்லை தள்ளித்தள்ளி வைக்கப்படுவதைக் காணமுடியும்.

ஏன் தள்ளிவைக்கப்படுகிறது என்றால் ஒரு காட்சி சற்று அழுத்தமான பாதிப்பை உருவாக்கவேண்டும் என்று விரும்பும் எழுத்தாளன் முன்பு எழுதப்பட்டு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவை விட சற்றே முன்னகர்ந்து அதைச் சித்தரிப்பான். ஆனால் மிகவும் முன்னகர்ந்துவிட்டால் அது சுவைத்திரிபு ஆகிவிடுமென்றும் அறிந்திருப்பான். நம் சமூகத்தின் அளவுகோல் மேலைநாடுகளை விட இன்னும் இறுக்கமானது. ஆகவே நாம் பாலியலை எழுதும்போது மேலைநாடுகள்போல எழுதுவதில்லை. எழுதினால் அது அதை மட்டுமே பேசும் கதையாக ஆகிவிடும். ஒரு ஓவியத்திரைச்சீலையில் நீலமோ. கருமையோ கையாளப்பட்டால் அந்த ஓவியத்தின் மையநிறமே அதுவாக இருக்கவேண்டும் என்பதுபோல. ஆகவே பாலியல் எழுத்தைத் துணிச்சலாக எழுதுவது என்பதொன்றும் சிறப்பல்ல. எல்லா எழுத்தாளர்களும் தேவையான துணிச்சலுடன்தான் எழுதுகிறார்கள்.

ஆனால் அவ்வாறு எழுதுபவர்களில் எத்தனைபேர் அதை நுட்பமாக, மெய்யாக எழுதுகிறார்கள்? கணிசமான தமிழ் எழுத்தாளர்கள் பாலியல் வரட்சியால் அவதிப்படுபவர்கள். பூஞ்சையான உள்ளமும், அதற்கேற்ற சம்பிரதாயமான வாழ்க்கையும் கொண்டவர்கள். ஆகவே அனுபவத்திலிருந்து எவரும் எழுதுவதில்லை. பெரும்பாலும் அவை பகற்கனவின் சித்தரிப்புகள். தஞ்சைப் பிரகாஷ் எழுதியதைப்போல. ஆகவே பகற்கனவுகளை நாடுபவர்களால் வாசிக்கத்தக்கவை.

உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொருநாளே நாவலில் கந்தன் மீனாவுடன் உறவுகொண்டு முடிந்ததும் மீனா சுருண்டு கிடந்து அழுகிறாள். உளஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு அது. அந்த அழுகைக்குப்பின் அவள் அதற்கான காரணமாக காணாமல்போன தன் மகனைப்பற்றி நினைத்துக் கொள்கிறாள். இது ஆசிரியரின் நுண்ணிய அனுபவ அவதானிப்பின் வெளிப்பாடு. பாலியல் எழுத்தில் தேவையானது இந்த நுட்பமே. இத்தகைய இடங்கள் தமிழிலக்கியத்தில் மிகக்குறைவே.

ஆனால் பாலியல் அறியாமையின் வெளிப்பாடுகள் நிறைய. சமீபத்தில்  கர்நாடகத்தில் அருவிப் பயணத்தின்போது காரில் இதைப்பற்றிப் பேசிக்கொண்டு சென்றோம். நான் ஜெயகாந்தனிடம் பேசிக்கொண்டிருந்தபோது  அவர் சொன்னதைச் சொன்னேன். ‘பெண்களுக்கு காமத்தில் உடலின்பம் கிடையாது, உள்ளத்தால்தான் இன்பம் அனுபவிக்கிறார்கள்’ என்றார் ஜெயகாந்தன். அவரை நேரில் மறுக்கமுடியாது. நான் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்களில் ஓர் இடம் வரும். பெண்களுக்குப் பாலியல் இன்பம் என்பது உடலில் அல்ல ‘அய்யோ இந்த ஆம்புளைக்கு என்னாலே எவ்ளவு சந்தோஷம்’ என்று நினைப்பதில்தான் என்கிறார் ஆசிரியர்.

இது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எண்பதுகள் வரை பரவலாக இருந்த எண்ணம். எழுபதுகளில் டாக்டர் பிரமிளா கபூர் என்ற ஆய்வாளர் தன் மாணவிகளைக்கொண்டு ஒரு பாலியல் கணக்கெடுப்பை நிகழ்த்தினார். இந்தியப் பெண்களில் மிகப்பெரும்பான்மையின பாலுறவுச்சம் குறித்து ஏதும் அறியாதவர்கள் என்றது அந்த ஆய்வு. பலர் வாழ்நாள் முழுக்க ஒருமுறைகூட அதை அடையாதவர்கள். ஆண்களில் அனேகமாக எவருக்கும் அப்படி ஒன்று பெண்களுக்கு உண்டு என்றே தெரியாது.அன்று மிக அதிகமாகப் பேசப்பட்ட ஓர் ஆய்வுமுடிவு அது.

Alfred_Kinsey_1955 கின்ஸி

பெரும்பாலும் எளிமையான பாலியல் புனைகதைகளில் இருந்தே தமிழ் இளைஞன் பாலியலறிவை அடைகிறான். அவை ஆண்களின் பகற்கனவை சீண்டும் பொருட்டு எழுதப்படுபவை.  எழுத்தாளன் என்பவன் சற்றேனும் முறையாக பாலியலைக் கற்றிருக்கவேண்டும். எண்பதுகளில் நான் வாசிக்கவந்தபோது மலையாளத்தில் இ.எம்.கோவூரின் உரைகள் வழியாக பாலுறவியல் [sexology] வாசகர்களிடையே புகழ்பெற்றிருந்தது. அவர் வழியாகவே ஹாவ்லக் எல்லிஸ், ஆல்ஃப்ரட் சார்ல்ஸ் கின்ஸி இருவரைப்பற்றியும் அறிந்தேன். என் உலகப்புரிதலில் மிகப்பெரிய திறப்பை அளித்தன அந்த வாசிப்புகள். அவர்கள் இருவரையும், அறியாதபோதுதான் நமக்கு தஞ்சைப் பிரகாஷ் பரபரப்பை அளிக்கிறார்.

அந்த இருபெயர்களையுமே இளம் தலைமுறையினர் அறிந்திருக்கவில்லை என்று தெரிந்தமையால்தான் இந்தக்குறிப்பு. அவர்களைப்பற்றி எவரும் தமிழில் எழுதியும் நான் வாசித்ததில்லை. எண்பதுகளின் இறுதியில்நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இணையத்திலேயே அவர்களின் நூல்களை தரவிறக்கம் செய்யலாம் என நினைக்கிறேன் 

ஹென்றி ஹாவ்லக் எல்லிஸ் [Henry Havelock Ellis .1859 – 1939] உளவியலுக்கு ஃப்ராய்ட் எப்படியோ அப்படி பாலுறவியலுக்கு முன்னோடியான அறிஞர். லண்டனில் பிறந்தவர். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்தவர். பொதுவாக இடதுசாரி எண்ணங்கள் கொண்டிருந்தார்.கார்ல். மாக்ர்ஸின் மகள் எலியனேர் மார்க்ஸ் எல்லிஸின் அறிவுலகத் தோழமைகளில் ஒருவர். பெர்னாட் ஷாவுடனும் தொடர்பிருந்தது. ஒருபாலுறவைப் பற்றிய தன் முதல் நூலை இன்னொருவருடன் சேர்ந்து ஜெர்மன் மொழியில் எழுதினார். பின்னர் அது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது

பாலுறவு குறித்து அன்றுவரை இருந்த பெரும்பாலான நம்பிக்கைகளும் புரிதல்களும் மதத்தலைவர்களால் உருவாக்கப்பட்டவை. ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்டவை. அது ஓர் உயிரியல் சார்ந்த  செயல்பாடு என்றவகையில், தரவுகளின் அடிப்படையில் புறவயமாக அதை அணுகவேண்டும் என்ற கண்ணோட்டமே எல்லிசை ஒரு மாபெரும் முன்னோடியாக ஆக்கியது. தரவுகளைச் சேர்த்து அறிவியல் முறைமைப்படி ஆராய்ந்தபோது ஏராளமான பழைய நம்பிக்கைகள் சிதைந்தன. குறிப்பாக பெண்களின் பாலுணர்வு, பாலுறவுச்சம் குறித்த புதிய கொள்கைகள் வெளியாயின.

உதாரணமாக கந்து [ clitoris] பெண்களின் பாலுறவுவிருப்பத்தின் மையம் என்ற நம்பிக்கை அன்று இருந்தது. அது ஓர் நரம்பு முடிச்சே ஒழிய மையமல்ல என்று எல்லிஸின் ஆய்வுகள் காட்டின. பெண்களின் பாலுணர்வில் அவர்களின் பெண்ணுறுப்பின் உட்பகுதிகள் எவ்வகையிலும் பங்கெடுக்கவில்லை என்று நிறுவின. ஒருபாலுறவு போன்றவை உளப்பிறழ்வுகளோ தீயபழக்கங்களோ அல்ல, இருபாலுறவுபோலவே இயல்பான மூளைசார்ந்த தனிவிருப்பங்கள்தான் என்றும், புறத்தே தெரிவதைவிட ஒருபாலுறவு நம் சூழலில் அதிகம் என்றும் அவருடைய ஆய்வுகள் காட்டின. அக்காலத்தில் எல்லிஸின் நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆபாச இலக்கியம் படைத்தமைக்காக அவர் சட்டநடவடிக்கைக்கும் உள்ளானார்.

எல்லிஸின் ஆய்வுகளை நிறுவன உதவியுடன் மிகவிரிவான முறையில் ஆய்வுசெய்து அறிக்கைகளை உருவாக்கியவர் ஆல்ஃப்ரட் கின்ஸி. Alfred Charles Kinsey  [ 1894 –  1956] . அமெரிக்க உயிரியலாளர்.  1947 இவர் இண்டியானா பல்கலையில் நிறுவிய பாலுறவியல் ஆய்வு நிறுவனம் மானுடரின் பாலியல்பழக்கவழக்கங்களைப் பற்றி மிக விரிவான ஆய்வுகளை தொடர்ந்து வெளியிட்டது. இது  Kinsey Institute for Research in Sex, Gender, and Reproduction என அழைக்கப்பட்டது. தன் மாணவர்களையும் தொழில்முறை தகவல்சேகரிப்பாளர்களையும் கொண்டு பெருமளவில் தரவுகளைச் சேகரித்து ஒருங்கிணைத்து தன் கொள்கைகளை உருவாக்கி முன்வைத்து  நிறுவினார் கின்ஸி.

Sexual Behavior in the Human Male (1948) மற்றும்  Sexual Behavior in the Human Female (1953) ஆகிய இரு நூல்களும் கின்ஸி அறிக்கைகள் என்றபேரில் பொதுவாக சமூக, மானுடவியல் அறிஞர்கள் நடுவில்கூட பெரிதாக வாசிக்கப்பட்டன. அன்று திருவனந்தபுரம் தெருக்களிலேயே போலிப்பதிப்பாக இவை வாங்கக்கிடைத்தன. உலக அளவில் மானுடப் பாலியல் பழக்கங்களைப் புரிந்துகொள்வதற்கான முன்னோடி வழிகாட்டிகளாக இவை கருதப்படுகின்றன. சட்டம், ஒழுக்கவியல், இலக்கியம், சமூகவியல், மானுடவியல் ஆகியவற்றில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தின.

கின்ஸியின் கணக்கெடுப்புகளைப் பற்றி பலவகையான ஐயங்களும் மறுப்புகளும் பின்னர் உருவாயின. அவர் நோயாளிகளையும் குற்றவாளிகளையும் தனியாகப் பிரித்து கணக்கிடவில்லை. பெரும்பாலும் வித்தியாசமான பாலுணர்வும் பழக்கங்களும் கொண்டவர்களை நேர்காணல் செய்தார். பாலுறவு குறித்த செய்திகளை அளிப்பவர்கள் நேர்மையாக சொல்லவேண்டுமென்பதில்லை, பலசமயம் அவர்கள் மிகையாக்கவோ நியாயப்படுத்தவோதான் பேசுவார்கள் – இவ்வாறெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டாலும் இன்றுவரை மானுடப்பாலுணர்வு குறித்து அறிவியல்நோக்கில் உருவாகியிருக்கும் பெரும்பாலான புரிதல்களுக்கான தொடக்கம் கின்ஸிதான்.

இன்று இவ்வறிதல்கள் வெகுவாக முன்னேறிவிட்டன. உடற்கூறியலில் பல்வேறு நவீன கருவிகள் வந்துவிட்டன. நரம்பியல் மிகப்பெரிய பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. பாலியல்கல்வியின் தேவை உலகளாவ உணரப்பட்டிருக்கிறது. பாலியல் நிபுணர்கள் ஊடகங்களில் தோன்றி விளக்குகிறார்கள். பாலியல் அறிதல் பரவலாகியிருக்கிறது. ஆனால் மறுபக்கம் பாலியல்தளங்கள் பெருகிவிட்டிருக்கின்றன. இவை பாலுறவியலுக்கு நேர் எதிரான பகற்கனவு சார்ந்த புரிதலை உருவாக்குகின்றன. அவற்றைத்தான் இளைஞர்கள் மிகுதியாக பார்க்கிறார்கள். வருத்தமென்னவென்றால் எழுத்தாளர்களும் அவற்றையே பார்த்துக் கற்றுக்கொண்டு எழுதுகிறார்கள்.

இன்றைய பாலியல் எழுத்து என்பது உடலை எழுதுவதாக இருக்கமுடியாது என்று நான் நினைக்கிறேன். எட்டாம் வகுப்புப் பையனின் கையில் செல்போன் வழியாக பாலியல் தளங்கள் கிடைக்கும்போது, உடலின் சாத்தியங்களின் எல்லை வரை காட்சிகள் கொட்டிக்கிடக்கும்போது, ஓர் எழுத்தாளன் உட்கார்ந்து வெறுமே பாலியல் காட்சியைச் சித்தரித்துக்கொண்டிருந்தான் என்றால் அவனுக்கு என்னதான் பொருள்? இன்றைய பாலியல் எழுத்து என்பது பாலியல் சார்ந்து நாம் கொண்டுள்ள பாவனைகளை, வழங்கிக்கொள்ளும் நடிப்புகளை நுட்பமாக திரைவிலக்குவதாகவே இருக்கமுடியும். அது எளிய அளவில் இலக்கியத் தகுதி பெறும். அதை ஓர் அடிப்படை உயிர்விளையாட்டாக எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச உண்மைகளை நோக்கிச் செல்லமுடியும் என்றால் அது அடுத்த கட்டம், அதுவே இலக்கியத்தின் சாதனையாக திகழும்.

முதல்பிரசுரம்  Sep 29, 2008

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 11:35

காவியம் – 45

யட்சி, சாதவாகனர் காலம், சுடுமண் சிலை, பொமு2 யெல்லேஸ்வரம்

கானபூதி சொன்னது. “நான் என் மரத்தில் ஒடுங்கி என் கதைகளில் ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தபோதுதான் அவர் வந்து என் நிழலில் அமர்ந்தார். முற்றிலும் புலன்கள் மூடப்பட்டவர். கால்கள் உணரும் வழி என ஏதும் அந்தக் காட்டில் இல்லை. ஆனால் அகம் உணரும் வழி என ஒன்று உண்டு. உடல் முற்றிலும் மூடப்பட்டால் உள்ளம் அதை அறியத்தொடங்கும். சுத்யும்னனை அவன் புலன்கள் கைவிட்டபோது உயிர் தனக்கான பாதைக்காகத் தவித்து என்னிடம் கொண்டுவந்தது. அது இங்கே நிழல்கள் வந்துசெல்லும் பாதை. இவரும் அவ்வழியே வந்தார்.”

நான் அவரைக் குனிந்து பார்த்தேன். விழிகள் இரண்டு சிவந்த கட்டிகள் போல அசைந்தன. செவிகள் கேட்காதவர்களுக்குரிய வகையில் தலையைச் சரித்துப் பிடித்திருந்தார். உடலெங்கும் புண்கள் பொருக்கோடியும், சீழ்கட்டியும், ரத்தக்கீற்றாகவும் பரவியிருந்தன. நான் மெல்ல “வருக பண்டிதரே, இது நீ வந்துசேர வேண்டிய இடம்” என்றேன்.

அவர் திடுக்கிட்டு எழுந்தார். “யார்?” என்றார். உரக்க “யார் அது?” என்றார்.

அவை உதடசைவாகவும், நெஞ்சுக்குள் முழங்கிய உறுமலாகவும்தான் வெளிப்பட்டன. நான் “அஞ்சவேண்டாம்” என்றேன்.

“அஞ்சுவதா? நானா?” என்று அவர் சிரித்தார். “நான் இன்றுவரை எதற்கும் அஞ்சியதில்லை.”

“ஒரு பைசாசத்தின் முன் நின்றிருக்கையில் கூடவா?”

”நீ என்னை எப்படி பயப்படுத்துவாய்? பேயுருவம் காட்டுவாயா?” என்று அவர் சிரித்தார். “இல்லை ஏதாவது பயங்கரமான ஓசையை எழுப்பப் போகிறாயா?”

நான் சிரித்து “நான் பேசிக்கொண்டிருக்கிறேனே?” என்றேன்.

“நீ எனக்குள் இருந்து பேசுகிறாய், தெரியும்” என்றார். “உனக்கு என்னுடன் தொடர்புகொள்ள வழியே இல்லை. நீ என்னை என்ன செய்ய முடியும்? கொல்லலாம். ஆனால் நான் இன்னும் நாலைந்து நாட்களில் இங்கே சாகப்போகிறேன். நான் உணவுண்டு எட்டுநாட்களாகின்றன… இலைகளில் சொட்டும் நீரை மட்டும் விடியற்காலைகளில் குடித்துக்கொண்டிருக்கிறேன்.”

நான் அவர் தோளைத் தொட்டேன்.  “என் தொடுகையை உணர்கிறாயா?”

“ஆமாம்” என்றார். திகைப்புடன் என் கைமேல் தன் கையை வைத்து “அப்படியென்றால் நீ ஒரு மனிதன். ஆனால் உன் கை குரங்கின் கைபோல் மயிரடர்ந்திருக்கிறது.”

“என்னைப் பார்” என்று நான் அவர் முன் நின்றேன்.

அவர் என்னை பார்த்தார். கண்கள் ரத்தக்குமிழிகள் போல துள்ளித் துள்ளி அசைந்தன. ஆனால் முகத்தில் மகிழ்ச்சிதான் தெரிந்தது. “உன்னை எனக்குத் தெரியும்… என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது… நீ யார்? காவியங்களில் சொல்லப்படும் பைசாசமா?” என்றார்.

என் முன் அஞ்சி ஒடுங்கி நிற்பவர்களையே திரும்பத்திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன். அஞ்சாமல் என் கண்களை நோக்கி என் சொற்களை செவி கொள்பவர்களை தேடிக்கொண்டும் இருந்தேன். அஞ்சாதவரிடம் மட்டும் தான் எனக்கு சொல்வதற்கு சொற்கள் இருந்தன. ஆயினும் ஒவ்வொரு முறையும் அஞ்சாமல் என் கண்களை பார்க்கும் ஒருவர் என்னில் கடும் சீற்றத்தை எழுப்புகிறார். நான் பைசாசிகன் என்பது அத்தருணத்தில் எழுந்து வருகிறது.

நான் அவர் கண்களைப் பார்த்து ”நீ இந்தக் கணம் என் கைகளால் உயிரிழக்கப் போகிறாய்” என்று சொன்னேன்.

”உயிரிழப்பது எனக்கொரு பொருட்டே அல்ல. எப்போதுமே உயிரை ஒருபொருட்டென நான் எண்ணியதில்லை. ” என்று அவர் சொன்னார்.

”உயிரிழந்த பின் ஒருவன் மூதாதையர் உலகத்துக்கு செல்லவேண்டும். அல்லது வானில் தேவர்கள் வாழும் உலகிற்கு செல்லவேண்டும். பிசாசுகளால் கொல்லப்படும் ஒருவன் பிசாசாக மாறிவிடுவான். எங்கும் செல்ல முடியாமல் இங்கெல்லாம் அழிவின்றி அலைந்துகொண்டிருப்பான். சாவென்பது கொடிது. பைசாசத்தின் மையால் சாவு என்பது கொடிதினும் கொடிது” என்று நான் சொன்னேன்.

”கொடிது என்று எவையும் இப்போது எனக்கு இல்லை. பிறிதொன்றை விரும்புபவர்களுக்கே அவை கொடிதானவை. நான் ஒவ்வொரு தருணத்திலும் முன்னால் மட்டுமே பார்க்கப் பழகியவன். அஞ்சுவதேதுமில்லை” என்று அவர் சொன்னார்.

நான் மெல்ல சீற்றம் அடங்கி இயல்பானேன். அவரைப் பார்த்து புன்னகைத்தேன். என் புன்னகையும் கண்களும் அப்போதுதான் அழகு கொள்கின்றன.

அவர் முகம் மலர்ந்து ”உன் புன்னகை சிறு குழந்தைக்குரியது. நெடுநாட்களுக்குப்பின் என் உள்ளம் உன்னைக் கண்டு மலர்கிறது” என்று சொன்னார்.

”என் பெயர் கானபூதி. இந்த விந்தியக்காட்டில் யுகங்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் பைசாசிகன்” என்றேன்.

“கானபூதி என்ற பெயர் எனக்கு நன்கு தெரிந்ததுதான். எங்கள் காவியங்களில் அப்பெயர் உள்ளது” என்று அவர் சொன்னார்.

நான் ”ஆம், என்னைப்பற்றி பல கதைகள் உங்கள் காவியத்தில் உள்ளன” என்றேன். ”சிவனின் அவையில் ஒரு பூதகணமாக இருந்த நான் பார்வதியின் சாபத்தால் மண்ணில் பைசாசிகனாக வந்தேன் என்று நீ அறிந்திருப்பாய்.”

”ஆமாம்” என்றார்.

”அது என்னைப்பற்றிய கதைகளில் ஒன்று மட்டும்தான். இந்த மண்ணில் ஊழி ஊழிக்காலமாக மனிதர்கள் வாழ்கிறார்கள். அரியணை அமர்ந்த அரசர்களும், மாளிகைகளில் பட்டு மஞ்சங்களில் துயிலும் வணிகர்களும் உண்டு. அவர்கள் முன்பு காட்டில் வேட்டையாடி பச்சை இறைச்சியை வெறும் கைகளால் கிழித்துண்பவர்களாக இருந்தார்கள். அதற்கும் முன்பு மொழியின்றி ஒருவருக்கொருவர் ஓசைகளால் பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கும் முன்பு அவர்கள் தங்களை தாங்களே அறியாத விலங்குகளாக இருந்தார்கள். நான் அதற்கும் முன்பு ஏதோ காலத்தில் இங்கே முளைத்தவன். இந்த மலைகளைப்போல இந்த ஆறுகளைப்போல அன்று முதல் இருந்துகொண்டிருக்கிறேன்.”

நான் தொடர்ந்தேன் .“நீ இந்த நிலத்தின் தொன்மையான குகைகளுக்குள் சென்றால் அங்கே எவரோ சிவப்புக்கற்களாலும் வெள்ளைக்கற்களாலும் என் உருவத்தை வரைந்து வைத்திருப்பதை பார்க்கலாம். இதே முகம் இதே சிரிப்பு. நூற்றுக்கணக்கான முறை நூற்றுக்கணக்கான கைகள் என்னை வரைந்திருக்கின்றன. ஆயிரக்க்கணக்கான ஓவியங்கள் அழிந்திருக்கின்றன. எஞ்சியவை இன்னும் எவராலும் பார்க்கப்படாமல் எங்கெங்கோ இருக்கின்றன. பின்னர் அவர்கள் என்னை மண்ணிலும் மரத்திலும் செய்தார்கள். கல்லில் செதுக்கினார்கள். மனிதர்கள் என்னைப்போல் வேடமிட்டு ஆடினார்கள். என்னை தங்களுக்கு உகந்த முறையில் உருமாற்றி தெய்வங்களாக்கிக் கொண்டனர். ஒவ்வொரு உருமாற்றமும் ஒவ்வொரு தெய்வமாகியது.”

“இங்கே காளன் என்றும், கராளனென்றும் ,காளராத்திரி என்றும், பைரவன் என்றும், பத்ரன் என்றும், சண்டன் என்றும், பிசண்டன் என்றும் நூறு நூறு பெயர்களில் தெய்வங்களாக நான் வழிப்படப்படுகிறேன். என்றோ ஒருநாள் இந்த மனித குலம் முற்றழியும். இங்கு விலங்குகள் எஞ்சும். இவர்கள் உருவாக்கிய அனைத்தும் வெறும் பொருட்களாகி, பின்னர் பொருளற்ற வடிவங்களாகி மறையும். அப்போதும் இங்கு நான் இப்படியே இருந்துகொண்டிருப்பேன், முடிவற்ற கதைகளை என்னுள் அடக்கியபடி” என்று நான் சொன்னேன்.

அவர் ”கதைகளின் தெய்வத்திற்கு வணக்கம். என் வாழ்நாள் முழுக்க கதைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். கதைகளே மெய்யென்றும், பிற அனைத்தும் பொய்யென்றும் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். கதைகளின் உலகில் வாழவே விரும்புகிறேன்” என்றார்.

நான் அவர் அருகே சென்று அணுக்கமாக அமர்ந்தேன்.

“உன்னை நான் முன்பு பலமுறை பார்த்தது போலவே இருக்கிறது. உன் கண்களின் கனிவை நான் பலமுறை என் கனவுகளில் கண்டிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். “நான் பிரதிஷ்டானபுரியின் அவைப்புலவனாகிய குணாட்யன்.”

“தெரியும். இந்நிலத்தில் எனக்குத் தெரியாத எவரும் இல்லை” என்று நான் சொன்னேன். “எல்லாமே உடனடியாக கதைகளாகி காற்றில் கரைகின்றன. நான் காற்றிலிருந்து கதைகளை எடுத்துக்கொள்பவன்.”

“இந்தக் காட்டில் நான் உன்னைச் சந்தித்தது அளிக்கும் மகிழ்ச்சியை எப்படிச் சொல்வேன்? முதன்முதலாக சொல் எனக்கு கிடைத்ததுபோல. என் முதல் செய்யுளை நான் எழுதியதைப் போல… ” என்று குணாட்யர் சொன்னார்.

“அமர்ந்து இளைப்பாறு. உனக்கான உணவை நான் கொண்டுவரச் சொல்கிறேன்” என்றேன்.

சற்றுநேரத்திலேயே என் நிழல்களால் வழிநடத்தப்பட்ட வேடன் ஒருவன் அங்கே வந்தான். அவன் கையில் இருந்த கூடை நிறைய பழங்களும் கிழங்குகளும் மூங்கில் குழாயில் தேனும் பூசணிக்குடுவையில் நீரும் இருந்தன. அங்கே வரவும், அந்த விழியிழந்த மனிதரின் முன் அந்தக் கூடையை அப்படியே வைத்து வணங்கவும் தனக்கு எப்படி தோன்றுகிறது, அந்த எண்ணம் எப்படி அழுத்தமாக நிலைகொள்கிறது என்று அவனே திகைத்துக்கொண்டிருந்தான்.

அவன் வணங்கி திரும்பிச் சென்றதும் துழாவும் கைகளால் அந்தக் கூடையை தொட்டு எடுத்த அவர் என்னிடம் “என் அருகே பழங்களும் காய்களும் கனிகளும் உள்ளன. அவை உன்னால் கொண்டுவரப்பட்டவையா? அவை பைசாசிக ஜாலங்களா?” என்று கேட்டார்.

“அவை மெய்யான உணவுகள். கொண்டுவந்தவன் மெய்யான வேடன்” என்றேன்.

“அவன் உழைத்துச் சேர்த்தவை… அவனே விரும்பி அளிக்காவிட்டால் இவை திருட்டு என்றே கொள்ளப்படும்” என்று குணாட்யர் கூடையை தள்ளி வைத்தார்.

“பொறு. நீ இவற்றை விலைகொடுத்து வாங்கப்பட்டவை என்று கொள்ளலாம். அந்த வேடன் இன்று முழுக்க விலங்குகளைத் தேடிச் சலித்து, எதுவும் கிடைக்காமல் சோர்ந்து, இந்த காய்கனிகளுடன் திரும்ப முற்பட்டவன். அவனுக்கு செல்லும் வழியிலேயே சுமக்கமுடியாத அளவு பெரிய பன்றி கிடைக்கும்” என்றேன். “என் நிழல்களில் ஒன்று அவனை அழைத்துச் செல்கிறது”

குணாட்யர் உண்ணத்தொடங்கினார். தேனையும் நீரையும் குடித்து முடித்ததும் நீண்ட பசியின் களைப்பால் தூங்கினார். நான் அவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

குணாட்யர் விழித்துக்கொண்டபோது முகம் மலர்ந்திருந்தார். நான் அவர் அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.

“இப்போது நான் எப்படி உன்னைப் பார்க்கிறேன்? எந்தப் புலன்களால் உன்னை அறிகிறேன்?” என்றார்.

“எல்லாப் புலன்களும் மனம் என்னும் ஆறாவது புலனின் கருவிகள் மட்டுமே என்று சாங்கிய சூத்திரத்தில் கபில முனிவர் சொல்கிறார்” என்று நான் சொன்னேன். “மனம் நினைவையும், கற்பனையையும், அதற்கு அப்பாலுள்ளவற்றையும் கூட தன் கருவிகளாக ஆக்கிக்கொள்ள முடியும்.”

“ஆம், பெருங்காவியங்கள் அவ்வாறுதான் உருவாகின்றன என்பார்கள்” என்று அவர் சொன்னார்.

“பெருங்காவியங்களெல்லாம் கதைகள்தான். கதைகள் எல்லாமே கற்பனையும் மெய்யுணர்வும் அதைக்கடந்த மீயுணர்வும் சேர்ந்து உருவாக்கப்படுபவை. புலன்கள் அறியும் உண்மைகளைக் கடந்து செல்லாத எதுவும் காவியமாவதில்லை” என்று நான் சொன்னேன். “நான் கதைகளைச் சொல்லும் பிசாசு… என் கதைகள் திகழும் முடிவில்லாத வெளியில்தான் நானும் வாழ்கிறேன்.”

“உன் கதைகளை எனக்குச் சொல்” என்று குணாட்யர் கேட்டார். “இனி நானும் அந்த உலகில் மட்டுமே வாழமுடியுமென நினைக்கிறேன்.”

“என் மொழிக்குள் நீ வந்தாகவேண்டும்” என்று நான் சொன்னேன். “அதன் முதற்சொல்லை நீ அறியவேண்டும்.”

“உன் மொழியில் நீ பேசு, எனக்கு அது புரிகிறதா என்று பார்க்கிறேன்.”

நான் பைசாசிகத்தில் பேசத் தொடங்கியதுமே குணாட்யர்  “இந்த மொழியை நான் அறிவேன். என் அம்மா அவளுக்கு வெறியெழுந்து ஆடும்போது இந்த மொழியைப் பேசுவதுண்டு. இதன் சொற்கள் எனக்கு தெரியவில்லை. ஆனால் நீ பேசத்தொடங்கினால் என்னால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்” என்றார்.

நான் பேசத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே அவர் புரிந்துகொள்ளத் தொடங்கினார். நான் நிறுத்திவிட்டு “எப்படிப் புரிகிறது இந்த மொழி?” என்றேன்.

“சொற்கள் என எதையும் நான் மறப்பதில்லை. ஒருமுறை செவியில் விழுந்த சொல்லைக்கூட. ஆகவே எனக்கு பாரதத்தின் எல்லா மொழிகளும் தெரியும்” என்று குணாட்யர் சொன்னார். “பாரதத்தின் மொழிகளிலுள்ள எல்லா நூல்களும் என் நினைவில் உள்ளன. நீ பேசும் ஒரு சொல் நானறிந்த பாரதமொழிகளில் ஏதோ ஒன்றில் இருப்பதை காண்கிறேன். உன் மொழி சிதறிப்பரந்து அத்தனை மொழிகளிலும் ஊடுருவியுள்ளது. நீ பேசும்போது நான் நதிக்கரை மணலை அள்ளி அரித்து தங்கம் சேகரிப்பதுபோல் உன் மொழியை நானறிந்த மொழிகளில் இருந்து திரட்டிக்கொண்டே இருக்கிறேன்.”

நான் வியப்புடன் அவரை அணுகி அவர் கைகளை என் கைகளில் எடுத்துக்கொண்டேன். “புலவரே, என்னால் இந்தக் கதைகளின் பெருஞ்சுழலில் இருந்து விடுபடமுடியும் என்று நம்பிக்கை வந்திருக்கிறது. என் கதைகளை முழுக்கக்கேட்டு நினைவில் கொள்ளும் ஒருவரை நான் முதல்முறையாகச் சந்தித்திருக்கிறேன். என் கதைகளைக் கேட்டு எனக்கு அருளவேண்டும்” என்றேன். “என் கதைகளில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்… கதைகள் என்னிடம் இருந்து விலகினால் நான் அந்த மலையைப்போல முழுமையான அமைதியில் அமைவேன்.”

“உன் கதைகளை என்னிடம் கொடு. நான் அறிந்த மொழிகளெல்லாம் என் அறிவை நிறைத்திருக்கின்றன. அவற்றை வெளியே வீசி இந்தக் கதைகளால் என்னை நிறைத்துக் கொள்கிறேன்” என்று குணாட்யர் சொன்னார். “ஒரு சொல் மிச்சமில்லாமல் பெற்றுக்கொள்வேன் என உனக்கு நான் உறுதி சொல்கிறேன்.”

நான் என் கையை மண்ணில் வைத்தேன். “கதைகளை நான் கூறும்போது அவை கேள்விகளாகத் திரளும். கதையில் கேள்வி மட்டுமே உண்டு. அதன் விடை கேட்பவனிடமே எப்போதும் இருக்கும். கேள்வியில்லாத கதை பயனற்றது. இங்கு திரண்டு வரும் கேள்விகளுக்கு நீ பதில் சொன்னாய் என்றால் என்னுடைய கதைகளின் களஞ்சியத்தை நான் திறப்பேன். பதில் சொல்லவில்லையெனில் நீ உன்னுள்ளிருக்கும் அத்தனை சொற்களும் ஒன்றோடொன்று இணைந்து குழம்பி ஒரு பெரிய ஓலமாக ஆவதை உணர்வாய். புயல்காற்றில் ஊளையிடும் மூங்கில் காடுபோல உனது உள்ளம் உருமாறும். நீ சாகமாட்டாய், இந்தக்காட்டில் ஓலமிடும் தலையுடன் யுகங்கள் தோறும் அலைந்து திரிவாய். கதைகள் அத்தனை அருளையும் சாபத்தையும் கொண்டவை. நான் உனக்குக் கதை சொல்ல உனக்கு சம்மதம் தானா?” என்றேன்.

”அவ்வாறே” என்று குணாட்யர் சொன்னார்.

நான் என் வலக்கையை மண்ணில் புதைத்தேன். பின்னர் ”எனது கதைகள் எல்லாமே ஒன்றை ஒன்று நிரப்பும் இருசரடுகள்” என்று சொல்லி இடதுகையை மண்ணில் புதைத்தேன். “இப்போதுகூட இக்கதையில் இருந்து விலகிக்கொள்ள உனக்கு வாய்ப்பிருக்கிறது.”

”முன்பே சொல்லிவிட்டேன். நான் ஒருபோதும் எதன்பொருட்டும் பின்நகர்வதில்லை .கூறுக கதைகளை” என்று குணாட்யர் சொன்னார்.

நான் வலது கையைப் பார்த்தபடி சொல்லத் தொடங்கினேன்.

இந்தக்கதை நிகழ்வது பாடலிபுத்திரம் என்றும் பின்னர் பாட்னா என்றும் அழைக்கப்பட்ட நகரில். கங்கைக்கரையில் அமைந்துள்ள அந்த நகரம் பெருவணிகர்கள் வாழ்வது. அங்கு கலிகாலத்தில் அந்தணன் ஒருவன் வணிகனாக உருமாறினான். அவன் பெயர் ஃபணீந்திரநாத். அவன் தன் குலத்தொழிலை உதறி, கையில் சிறு செல்வத்துடன் இந்நகருக்கு வந்தான். பாடலிபுத்திரத்தில் அவன் பணத்தை பணத்தால் பெருக்கலானான். பெரும் செல்வந்தனாக மாறினான். செல்வந்தர்கள் செய்யும் அனைத்தையும் செய்தான். உலகியல் என்பது பணத்தால் ஆனது என்று அவர்கள் எண்ணுவார்கள். பணத்தால் உலகை வாங்க நினைப்பார்கள். வாங்கக்கூடுவது மட்டுமே உலகமென்று பின்னர் நிறைவுறுவார்கள். ஃபணீந்திரநாத் அவ்வாறு அங்கு வாழ்ந்து மறைந்தான்.

அவனுடைய மகன் ஹரீந்திரநாத் தன்னை ஒருபோதும் ஒரு அந்தணென்று உணர்ந்ததில்லை. மேலும் மேலும் வணிகனாக மாறினான். வணிக வெற்றியை நோக்கிச் சென்றான். அவன் மகன் அஸ்வத் என்பவன் தன்னை ஷத்ரியனாக உருமாற்றிக் கொண்டான். வணிகனுக்கு இருக்கும் உலகியல் இன்பம் என்பது பணத்தை ஈட்டுவது மட்டுமே. பணம் கொடுத்து பெறும் பொருட்கள் பணத்தின் இன்பத்தை அளிக்கின்றனவே ஒழிய பொருள் மட்டுமே அளிக்கும் இன்பத்தை அளிப்பதில்லை என்று அறிந்தவன் தன்னை ஷத்ரியனாக மாற்றிக்கொள்கிறான். ஏனென்றால் வெல்லப்படும்போதே பொருள் பொருள் கொண்டதாக ஆகிறது. வேட்டையில்லாமல் வெற்றி இல்லை.வேட்டையே ஷத்ரியனின் பேரின்பம். அதில் வெற்றியும் வெல்வதன் பொருட்டு தன்னை ஆற்றல் மிக்கவனாக ஆக்கிக்கொள்ளும் பயணமும் ,வென்றதை முற்றாக ஆட்கொள்ளும் தன்முனைப்பும் உள்ளந. அவன் அவற்றில் திளைத்தான்.

அவன் மனைவி பெயர் ஊர்வசி. அந்தணப்பெண்ணாக வளர்ந்து, வணிகனின் இல்லத்தில் மனைவியாகி, ஷத்ரியனின் துணைவியாக வாழ விதிக்கப்பட்ட அவள் தன்னை அதற்கு அப்பால் எங்காவது அடையாளப்படுதிக் கொள்ள எப்போதும் முயன்றுகொண்டிருந்தாள். ஹரீந்திரநாத்தின் மகள் ராதிகாவும் அத்தகைய பழைய அடையாளங்களிலிருந்து தன்னை விடுவிக்க முயன்றாள். தன்னுடைய அடையாளம் தன் ஞானத்தால் மட்டுமே அமைய வேண்டுமென்று ராதிகா எண்ணினாள். அவள் குடும்பத்தாரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வகுக்கப்பட்ட நால்வர்ணங்களுக்குள் வாழும் எவருக்கும் விடுதலை என்பது அச்சமூட்டுகிறது. அச்சம் வெறுப்பாக மாறுகிறது. வெறுப்பு வன்முறை நோக்கி செலுத்துகிறது.

ஊர்வசி பித்தாகி தன் கணவனின் அன்னையை கொன்றாள். ஒரு தனியறையில் ஒன்பது மாதங்கள் இடைவெளியில்லாது சுற்றிவந்து, சுவர்களை கைகளால் அறைந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் கூச்சல் கேட்காதபோது அவர்கள் கதவைத் திறந்து பார்த்தார்கள். அவள் வெறுந்தரையில் இருகைகளையும் விரித்து இறந்து கிடந்தாள். அவள் உடலில் இருந்து எழுந்த ஆத்மா அங்கிருந்து பாடலிபுத்திரத்தின் தெருக்களினூடாக அலைந்து கங்கையின் வழியாகச் சென்று அவள் பிறந்து வளர்ந்த சிற்றூரின் அருகே ஆற்றங்கரையோரமாக நின்றிருந்த சிறிய மரம் ஒன்றில் குடியேறியது. அந்த மரம் காற்று வீசுகையில் எல்லாம் விம்மி ஊசலிட்டு ஊளையிட்டு அழுதது.

எனது இந்தக் கையில் இருப்பது பிறிதொரு கதை. இவன் ஒரு நிஷாதன். உடல் என அமைந்த சமூகத்திலிருந்து உடைந்தவர்கள் என்றழைக்கப்பட்ட பங்கிகள் என்னும் குலத்தில் பிறந்தவன். அவன் ராதிகா என்னும் பெண்ணை மணப்பதுவரை தன் அறிவினூடாக மலர்ந்து கொண்டிருந்தான். பெரும் காவியம் ஒன்றை இயற்றும் தகுதி கொண்டவனாக தன்னை வளர்த்துக் கொண்டிருந்தான். அவளை மணந்துகொண்டது அக்காவியத்தில் உள்நுழைவதற்கான வழி என்று எண்ணினான். அவன் அவர்களால் வெட்டி வீழ்த்தப்பட்டான். அவனுடைய புலன்கள் நான்கும் இருட்டாக்கப்பட்டன. முற்றிலும் மூடப்பட்ட உடலுக்குள் அவன் தனித்திருந்தான்.

அவன் உடலே அவனுக்கான சிறையாகியது. அவன் அதை உதறிவிட்டு வெளியேற ஒரு வழி இருந்தது. ஆனால் அவன் கொண்ட வஞ்சம் அவனை அந்த உடலுடன் கட்டிப்போட்டிருந்தது. அந்த வஞ்சத்தை கைவிட அவன் சித்தமாக இல்லை. கொடிய நோயை தன் உடைமையாக நினைக்கும் பைத்தியக்காரன் போல அந்த வஞ்சத்தையே அவன் மனம் பற்றிக்கொண்டிருந்தது. அந்த வஞ்சத்தைப் பற்றுகோலாகக் கொண்டு அவன் கதைகளின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான்.

நான் கதையை சொல்லிக்கொண்டிருக்கையில் குணாட்யர் விழிகள்கூட அசையாமல் அமர்ந்திருந்தார். ”இத்தனை நெடுந்தொலைவில் இருந்து அவன் ஆத்மாவின் ஓலத்தை நீ கேட்க முடியும். அவனை நீ மிக அருகே என உணரமுடியும்” என்று நான் அவரிடம் சொன்னேன். ”ஏனென்றால் அத்தனை தொலைவில் இருந்துகொண்டு உன் குரலை அவன் கேட்டுக்கொண்டிருக்கிறான்…”

குணாட்யர் பெருமூச்சு விட்டார். பின்னர் “ஆம், நான் அவன் குரலைக் கேட்கிறேன். நாங்களிருவரும் மட்டுமே அத்தனை நெருக்கமாக ஒருவரை ஒருவர் உணரமுடியும்” என்றார்.

“இந்தக்கதையில் இருந்து எழும் இரண்டு கேள்விகள்” என்று நான் சொன்னேன். “ஏன் நிழல்கள் ஊர்வசியை முதல் இரையாக்கின? பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிக்கும் பெண்களே பொறுப்பா என்ன?” இன்னொரு கையை அசைத்து “இது இரண்டாவது கேள்வி, வஞ்சத்தை ஏன் அவனால் விட இயலவில்லை? அத்தனை துயரத்திற்கு மேல் அந்த வஞ்சத்தின் துயரையும் அதன் பழியையும் எல்லாம் அவன் ஏன் சுமக்கவேண்டும்?”

குணாட்யர் “என்னால் இதற்குச் சொல்லப்படும் பதிலை ஏற்கவிருப்பவர் யார்? அங்கே மறு எல்லையில் இருக்கும் அவனா?” என்றார்.

“ஆம், இவை இரண்டும் அவனுடைய கேள்விகளே” என்று நான் சொன்னேன்.

குணாட்யர் சொன்னார். “இரண்டாவது கேள்விக்கு என் விடை இதுவே. வஞ்சத்திற்கு பதிலாகக் கிடைப்பவை என வாழ்க்கையின் இன்பங்களையும் அவற்றையும் கடந்த விடுதலையையும் முழுக்க அள்ளிஅள்ளி வைத்து காட்டிய பின்னரும்கூட ஒருவனின் உள்ளத்தில் வஞ்சமே எஞ்சுகிறதென்றால் அது அந்த மனிதனுடையது அல்ல. அது அவனை மீறியது, அவன் அதன் எளிய கருவி. எத்தனை சொற்களைப் பெய்தாலும் மறைக்கமுடியாத உண்மை என்பது ஒன்றே, வஞ்சம் இல்லாமல் நீதி என்பது இல்லை. நீதி காலம் கடந்தது என்றால் வஞ்சமும் அவ்வாறுதான்.”

நான் கையை விலக்கி “ஆம்” என்றேன்.

குணாட்யர் “காலத்தைக் கடந்து நின்றிருக்கும் வஞ்சம் என்பது வேட்டை நாய்களைப் போன்றது. மிக ஆழமாகப் புதைக்கப்பட்டவற்றையே அவை தேடித்தேடி முகர்ந்துசென்று கண்டடையும். வெறிகொண்டு தோண்டி எடுக்க முயலும். முதற்கேள்விக்கான என் பதில் இது” என்றார். “ஒரு பெண்ணுக்கான அநீதி எவராலும் இழைக்கப்படலாம். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் அந்த அநீதிக்கு எதிராக நிலைகொள்ள இயற்கையாகவே கடன்பட்டிருக்கிறாள்.”

“ஆம்” என்று நான் என் கையை விரித்தேன். ”இந்தக் கதைவிளையாட்டை அடுத்த கேள்வியின் வழியாகத் தொடரும் உரிமையை நீ அடைந்திருக்கிறாய்”

குணாட்யர் “ஒவ்வொருமுறை ஒரு கதைக்கு பதில் சொல்லும்போதும் நான் ஏமாற்றமும், எரிச்சலும், அறுதியாகக் கசப்புமே அடைகிறேன். சரியான பதிலைச் சொல்லிவிட்டேன் என்னும் நிறைவை அடைவதேயில்லை” என்றார். “ஏனென்றால் சரியான பதில் என்பது கண்டடையப்படுவது அல்ல. புதியது அல்ல. அது எப்போதும் இருந்துகொண்டிருப்பது, அனைவரும் அறிந்தது. நாம் சொற்களாலும் தர்க்கங்களாலும் பொத்தி மறைத்து வைத்திருப்பது. கதைகளுக்குப் பதில்சொல்வதென்பது ஆடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு நின்றிருப்பதுபோலத்தான்.”

“ஆடையில்லாமல் முச்சந்தியில் நிற்பவன் பதற்றமும் அவமதிப்பும் கொள்கிறான். ஏகாந்தமான காட்டுச்சுனையில் ஆடையின்றி நீராடுபவன் விடுதலையையும் நிறைவையும் அடைகிறான்” என்று நான் சொன்னேன். “நீ கேள்வி கேட்கலாம்”

“காவியங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது பெண்ணின் கண்ணீரின் கதையைத்தான். வீழ்த்தப்பட்ட அன்னையின் கதையை…” என்றார் குணாட்யர். “எங்கே அன்னை அறுதியாக வீழ்த்தப்படுகிறாள்? ஏன்?”

“அந்தக் கதையை நான் உனக்குச் சொல்கிறேன்” என்று கானபூதி சொன்னது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 11:33

பி.எம்.சுந்தரம் 

பி.எம்.சுந்தரம் ஆறு களங்களில் இசைப்பணி ஆற்றினார். புதுச்சேரி வானொலியின் இசைத்தயாரிப்பாளராகப் பணியாற்றியபோது சிறந்த இசைநிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். இசைப்பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இசைத்துறையில் ஈடுபட்டார். இசையியல் ஆய்வாளராக முக்கியமான நூல்களை எழுதினார். ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கினார். இசைவரலாற்றாசிரியராகவும் பங்களிப்பாற்றினார். இசைநூல்களை பதிப்பித்தார், இசைநூல்களை மொழியாக்கமும் செய்தார்.

பி.எம்.சுந்தரம் பி.எம்.சுந்தரம் பி.எம்.சுந்தரம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 11:33

The tiger claw

I possess a book provided by Nitya Chaidanya Yati solely for my personal study. It is a handwritten version not accessible in the public domain. While perusing it, a question arose regarding the term vyahrapada. This can be translated as pulipani in Tamil and tiger claw in English.

Tiger Claw

வாசிப்பின் வழிமுறைகள் பற்றிய உரை மிக முக்கியமான ஒன்று. நான் அதைப்பற்றி ஒருவரிடம் பேசினேன். அப்படியெல்லாம் தேவையே இல்லை, சும்மாவே வாசிக்கலாம், வாசிப்பது என்ன பெரிய கம்பசூத்திரமா என்றெல்லாம் பேசினார். அவர் ஒரு கவிஞர். நான் அவரிடம் அவர் அண்மையில் என்னென்ன வாசித்தார் என்று கேட்டேன். ஒவ்வொன்றாக கேட்டல் எதுவுமே வாசிக்கவில்லை. வாசிக்கும் வழக்கமே இல்லை. வாசிப்பதெல்லாமே முகநூலில் 200 வார்த்தை வாசிப்பது மட்டும்தான். அதைத்தான் வாசிப்பு என நினைத்து வைத்திருக்கிறார்

வாசிப்பின் வழிமுறைகள், கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 11:30

June 3, 2025

விடியல்கள்

நீண்டகாலமாக நான் விடியற்காலையில் எழுவதில்லை. அரிதாகப் பயணங்களின் போதுதான் புலரியைப் பார்ப்பது. அதிலும் நாகர்கோயில் ரயில்களில் காலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு வந்திறங்கி, ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போது. அப்போது அரைத்தூக்க நிலையிலும் இருப்பேன்.

விடியற்காலையின் அழகு எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் என் நாளொழுங்கு அதை அனுமதிப்பதில்லை. மதியம் வெயிலிலும் புழுக்கத்திலும் பொழுதை வீணடிக்கவேண்டாம் என சாப்பிட்டதுமே நன்றாகத் தூங்கிவிடுவேன். நான்கு மணிக்குத்தான் எழுவேன். இன்னொரு காலைபோல அது. ஒரு நீண்ட நடை. திரும்பி வந்து அமர்ந்தால் இன்னொரு வேலைநாளின் தொடக்கம்.

இரவு பதினொரு மணி வரைக்கும்கூட எழுதிக்கொண்டிருப்பேன். எழுதிமுடித்து கொஞ்சநேரம் இசை. தூங்க பன்னிரண்டரை மணி ஆகிவிடும். என் இணையதளம் வலையேற்றம் செய்யப்பட்டபின் அதை ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் தூங்குவேன். அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்யவேண்டியிருந்தால் மீண்டும் நேரம் பிந்திவிடும்.

அத்தனை பிந்தி தூங்குவதனால் காலையில் ஆறரை மணிக்குத்தான் எழுவேன். சொந்தமாக ஒரு காபி போட்டுக் குடிப்பேன். உடனே நேராக கணிப்பொறி முன் அமர்வேன். காலைநடை வழக்கமில்லை. களைப்பாக்கி, எழுதும் ஊக்கத்தை இல்லாமலாக்கிவிடும் என்பது என் அனுபவம். பல ஆண்டுகளாக இதுதான் வழககம்.

ஆனால் அண்மையில் என் நாளொழுங்குகளை மாற்றியமைக்க வேண்டிய சூழல் அமைந்தது. முதல்விஷயம் ஆழ்ந்த நல்ல தூக்கம் இருக்கிறதா என்னும் ஐயம். அத்துடன் உடற்பயிற்சியைக் கூட்டவேண்டியிருந்தது. ஆகவே பகல்தூக்கத்தை நிறுத்தினேன். சாப்பிட்டதும் சரியாக இருபது நிமிட ஓய்வு. அதன்பின் எழுந்தமர்ந்து எழுத ஆரம்பிப்பேன். சற்று பழகவேண்டியிருந்தது, அதன்பின் பிரச்சினை இல்லை. வழக்கம்போல் மாலைநடை. வந்ததும் எழுத்து.

ஆனால் இரவு ஒன்பதரைக்கே படுக்கைக்குப் போய்விடுவேன். பத்துமணிக்கெல்லாம் தூக்கம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து காலைநடை. முற்றிலும் புதிய ஓர் அனுபவம் இது. உண்மையில் இரவு படுக்கும்போதே காலையில் எழுந்து நடை செல்லவேண்டும் என்பது அத்தனை தித்திப்பான ஒரு நினைவாக இருக்கிறது. காலையில் எழுந்து நடை செல்லும்போது இருக்கும் அபாரமான மன ஒருமையை, நிறைவை, விடுதலையை இப்போது துளிசிந்தாமல் அனுபவிக்கிறேன்.

காலையில் எழுந்தால் அருண்மொழியை எழுப்பிவிடக்கூடாது, பிரச்சினையாகிவிடும். ஆகவே மெல்ல நடந்து வந்து ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும். அவசரமாக ஆடை மாற்றியமையால் ஒருமுறை டிராக்சூட்டை திருப்பிப் போட்டுக்கொண்டேன். பைகள் வெளியே இருந்தன. பாதிவழியில்தான் கவனித்தேன். ஒன்றும் செய்வதற்கில்லை. ’பொத்தினாப்ல’ நடந்து திரும்பி வந்துவிட்டேன்.

காலையில் தெருக்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகள்தான் அப்படி அழகாகத் தூங்கமுடியும். அத்தனை அமைதி. அத்தனை நிறைவு. நம் காலடிகளின் எதிரொலி நமக்கே கேட்கும் மௌனம். பார்வதிபுரத்தின் சாரதா நகருக்குள் நல்லவேளையாக கோயில்கள் இல்லை. ஆகவே காலையிலேயே பக்திக்கூப்பாடும் இல்லை. பார்வதிபுரம் சாலைக்குச் சென்றால் மூன்று அம்மன்கோயில்களிலும் ஒரு சர்ச்சிலும் ஏககாலத்தில் பிலாக்கணம். அனுராதா ஸ்ரீராம், சீர்காழி சிவசிதம்பரம் மீதெல்லாம் ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டா?

எனக்கு காலையில் கேட்கும் பக்திக்கூப்பாடு போல ஒவ்வாமையை அளிப்பது ஏதுமில்லை. காலை ஒரு பெரும் பரிசு. அதன் அழகும் தூய்மையும்போல இப்பிரபஞ்சமாக நின்றிருப்பதன் முகம் வெளிப்படும் இன்னொரு தருணம் இல்லை. ஆனால் ’அய்யா சாமி, எனக்கு அதைக் கொடுக்க மாட்டியா, இதைக்கொடுக்க மாட்டியா, எத்தனவாட்டி கேக்கிறது, உனக்கென்ன செவி அவிஞ்சா போச்சு, கல்மனசா உனக்கு, நல்லாயிருப்பியா’ என்ற பிச்சைக்காரக் குரல்தான் பக்திப்பாடல்கள் எனப்படுகிறது. இவன்களுக்கு ஏதாவது கொடுக்குமென்றால் அந்த சாமியை நான் எக்காலத்திலும் கும்பிடப்போவதில்லை.

மங்கலான ஒளியில் தெரியும் பொருள் வெள்ளை ஒளியில் தெரியும் பொருள் அல்ல. அதன் முப்பரிமாணம் வேறு. அதன் வண்ணங்கள் வேறு. நாம் எண்ணுவதுபோல இங்கே பொருட்கள் மாறாமல் இல்லை. அவை ஒவ்வொன்றும் வேறு பொருட்கள். நாம் அறியும் நம் அறிதல், அல்லது நம் நினைவின் தொடர்ச்சிதான் அவற்றை மாறாமல் நிலைகொள்வதாகத் தோன்றவைக்கிறது.

காலையில் என் நடை இயல்பாக இருக்கும். பலர் கைகளை வீசிக்கொண்டு, சட்டென்று நின்று குனிந்து நிமிர்ந்து, என்னென்னவோ செய்கிறார்கள். வியர்க்க விறுவிறுக்க ஒருவர் ஓடுகிறார். முகத்தில் அப்படி ஒரு பொறுப்பின் சோகம். நான் என் இனிய எண்ணங்களில் மூழ்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். காலையிளங்காற்றின் மென்மையான வருடல். மேலே தென்னையோலைகளின் அசைவு. தொலைவில் வானம் ஒளிபெற்றபடியே வருகையில் பொருட்கள் துலங்கி வரும் நேர்த்தி.

மலைகளின் மேல் முகில்கள் வெண்ணிறம் கொள்கின்றன. மலைகள் தெளிந்து தெளிந்து முப்பரிமாணம் கொள்கின்றன. முகில்களுக்கும் முப்பரிமாணம். பறவையொலிகள் மாறுபடுகின்றன. அதன்பின் அந்த மகத்தான கருவறையின் வாசல்கள் திறக்கின்றன.

ஏதோ ஒருபுள்ளியில் அதைப் பார்த்தபடி நின்றிருக்கிறேன். ஒரு சொல் இல்லாமல். ஒரு நினைவு எஞ்சாமல். அன்று, அக்கணம், அப்படியே உருவாக்கப்பட்டவனாக திரும்பி வருகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 11:35

விடியல்கள்

நீண்டகாலமாக நான் விடியற்காலையில் எழுவதில்லை. அரிதாகப் பயணங்களின் போதுதான் புலரியைப் பார்ப்பது. அதிலும் நாகர்கோயில் ரயில்களில் காலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு வந்திறங்கி, ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போது. அப்போது அரைத்தூக்க நிலையிலும் இருப்பேன்.

விடியற்காலையின் அழகு எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் என் நாளொழுங்கு அதை அனுமதிப்பதில்லை. மதியம் வெயிலிலும் புழுக்கத்திலும் பொழுதை வீணடிக்கவேண்டாம் என சாப்பிட்டதுமே நன்றாகத் தூங்கிவிடுவேன். நான்கு மணிக்குத்தான் எழுவேன். இன்னொரு காலைபோல அது. ஒரு நீண்ட நடை. திரும்பி வந்து அமர்ந்தால் இன்னொரு வேலைநாளின் தொடக்கம்.

இரவு பதினொரு மணி வரைக்கும்கூட எழுதிக்கொண்டிருப்பேன். எழுதிமுடித்து கொஞ்சநேரம் இசை. தூங்க பன்னிரண்டரை மணி ஆகிவிடும். என் இணையதளம் வலையேற்றம் செய்யப்பட்டபின் அதை ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் தூங்குவேன். அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்யவேண்டியிருந்தால் மீண்டும் நேரம் பிந்திவிடும்.

அத்தனை பிந்தி தூங்குவதனால் காலையில் ஆறரை மணிக்குத்தான் எழுவேன். சொந்தமாக ஒரு காபி போட்டுக் குடிப்பேன். உடனே நேராக கணிப்பொறி முன் அமர்வேன். காலைநடை வழக்கமில்லை. களைப்பாக்கி, எழுதும் ஊக்கத்தை இல்லாமலாக்கிவிடும் என்பது என் அனுபவம். பல ஆண்டுகளாக இதுதான் வழககம்.

ஆனால் அண்மையில் என் நாளொழுங்குகளை மாற்றியமைக்க வேண்டிய சூழல் அமைந்தது. முதல்விஷயம் ஆழ்ந்த நல்ல தூக்கம் இருக்கிறதா என்னும் ஐயம். அத்துடன் உடற்பயிற்சியைக் கூட்டவேண்டியிருந்தது. ஆகவே பகல்தூக்கத்தை நிறுத்தினேன். சாப்பிட்டதும் சரியாக இருபது நிமிட ஓய்வு. அதன்பின் எழுந்தமர்ந்து எழுத ஆரம்பிப்பேன். சற்று பழகவேண்டியிருந்தது, அதன்பின் பிரச்சினை இல்லை. வழக்கம்போல் மாலைநடை. வந்ததும் எழுத்து.

ஆனால் இரவு ஒன்பதரைக்கே படுக்கைக்குப் போய்விடுவேன். பத்துமணிக்கெல்லாம் தூக்கம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து காலைநடை. முற்றிலும் புதிய ஓர் அனுபவம் இது. உண்மையில் இரவு படுக்கும்போதே காலையில் எழுந்து நடை செல்லவேண்டும் என்பது அத்தனை தித்திப்பான ஒரு நினைவாக இருக்கிறது. காலையில் எழுந்து நடை செல்லும்போது இருக்கும் அபாரமான மன ஒருமையை, நிறைவை, விடுதலையை இப்போது துளிசிந்தாமல் அனுபவிக்கிறேன்.

காலையில் எழுந்தால் அருண்மொழியை எழுப்பிவிடக்கூடாது, பிரச்சினையாகிவிடும். ஆகவே மெல்ல நடந்து வந்து ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும். அவசரமாக ஆடை மாற்றியமையால் ஒருமுறை டிராக்சூட்டை திருப்பிப் போட்டுக்கொண்டேன். பைகள் வெளியே இருந்தன. பாதிவழியில்தான் கவனித்தேன். ஒன்றும் செய்வதற்கில்லை. ’பொத்தினாப்ல’ நடந்து திரும்பி வந்துவிட்டேன்.

காலையில் தெருக்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகள்தான் அப்படி அழகாகத் தூங்கமுடியும். அத்தனை அமைதி. அத்தனை நிறைவு. நம் காலடிகளின் எதிரொலி நமக்கே கேட்கும் மௌனம். பார்வதிபுரத்தின் சாரதா நகருக்குள் நல்லவேளையாக கோயில்கள் இல்லை. ஆகவே காலையிலேயே பக்திக்கூப்பாடும் இல்லை. பார்வதிபுரம் சாலைக்குச் சென்றால் மூன்று அம்மன்கோயில்களிலும் ஒரு சர்ச்சிலும் ஏககாலத்தில் பிலாக்கணம். அனுராதா ஸ்ரீராம், சீர்காழி சிவசிதம்பரம் மீதெல்லாம் ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டா?

எனக்கு காலையில் கேட்கும் பக்திக்கூப்பாடு போல ஒவ்வாமையை அளிப்பது ஏதுமில்லை. காலை ஒரு பெரும் பரிசு. அதன் அழகும் தூய்மையும்போல இப்பிரபஞ்சமாக நின்றிருப்பதன் முகம் வெளிப்படும் இன்னொரு தருணம் இல்லை. ஆனால் ’அய்யா சாமி, எனக்கு அதைக் கொடுக்க மாட்டியா, இதைக்கொடுக்க மாட்டியா, எத்தனவாட்டி கேக்கிறது, உனக்கென்ன செவி அவிஞ்சா போச்சு, கல்மனசா உனக்கு, நல்லாயிருப்பியா’ என்ற பிச்சைக்காரக் குரல்தான் பக்திப்பாடல்கள் எனப்படுகிறது. இவன்களுக்கு ஏதாவது கொடுக்குமென்றால் அந்த சாமியை நான் எக்காலத்திலும் கும்பிடப்போவதில்லை.

மங்கலான ஒளியில் தெரியும் பொருள் வெள்ளை ஒளியில் தெரியும் பொருள் அல்ல. அதன் முப்பரிமாணம் வேறு. அதன் வண்ணங்கள் வேறு. நாம் எண்ணுவதுபோல இங்கே பொருட்கள் மாறாமல் இல்லை. அவை ஒவ்வொன்றும் வேறு பொருட்கள். நாம் அறியும் நம் அறிதல், அல்லது நம் நினைவின் தொடர்ச்சிதான் அவற்றை மாறாமல் நிலைகொள்வதாகத் தோன்றவைக்கிறது.

காலையில் என் நடை இயல்பாக இருக்கும். பலர் கைகளை வீசிக்கொண்டு, சட்டென்று நின்று குனிந்து நிமிர்ந்து, என்னென்னவோ செய்கிறார்கள். வியர்க்க விறுவிறுக்க ஒருவர் ஓடுகிறார். முகத்தில் அப்படி ஒரு பொறுப்பின் சோகம். நான் என் இனிய எண்ணங்களில் மூழ்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். காலையிளங்காற்றின் மென்மையான வருடல். மேலே தென்னையோலைகளின் அசைவு. தொலைவில் வானம் ஒளிபெற்றபடியே வருகையில் பொருட்கள் துலங்கி வரும் நேர்த்தி.

மலைகளின் மேல் முகில்கள் வெண்ணிறம் கொள்கின்றன. மலைகள் தெளிந்து தெளிந்து முப்பரிமாணம் கொள்கின்றன. முகில்களுக்கும் முப்பரிமாணம். பறவையொலிகள் மாறுபடுகின்றன. அதன்பின் அந்த மகத்தான கருவறையின் வாசல்கள் திறக்கின்றன.

ஏதோ ஒருபுள்ளியில் அதைப் பார்த்தபடி நின்றிருக்கிறேன். ஒரு சொல் இல்லாமல். ஒரு நினைவு எஞ்சாமல். அன்று, அக்கணம், அப்படியே உருவாக்கப்பட்டவனாக திரும்பி வருகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 11:35

மு. இசக்கிமுத்து வாத்தியார்

நாடக நடிகர், பாடலாசிரியர் மற்றும் நாடகப் பயிற்றுநர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.மு. இசக்கிமுத்து சிறு வயது முதலே நாடக ஆர்வம் கொண்டிருந்தார். தனது பதினொன்றாம் வயதில் சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவனாகச் சேர்ந்து அவரிடம் நாடகமும், இலக்கண, இலக்கியமும் பயின்றார். பல்வேறு நாடகங்களில் நடித்தார்.

மு. இசக்கிமுத்து வாத்தியார் மு. இசக்கிமுத்து வாத்தியார் மு. இசக்கிமுத்து வாத்தியார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 11:33

மு. இசக்கிமுத்து வாத்தியார்

நாடக நடிகர், பாடலாசிரியர் மற்றும் நாடகப் பயிற்றுநர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.மு. இசக்கிமுத்து சிறு வயது முதலே நாடக ஆர்வம் கொண்டிருந்தார். தனது பதினொன்றாம் வயதில் சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவனாகச் சேர்ந்து அவரிடம் நாடகமும், இலக்கண, இலக்கியமும் பயின்றார். பல்வேறு நாடகங்களில் நடித்தார்.

மு. இசக்கிமுத்து வாத்தியார் மு. இசக்கிமுத்து வாத்தியார் மு. இசக்கிமுத்து வாத்தியார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.