Jeyamohan's Blog, page 106
May 20, 2025
Talking about organization
I think if you can deliver a speech on organizational skills and the problem of organization, it will be useful for many. In my judgment, you are one of the excellent organizers of Tamil Nadu.
Talking about organization
நாங்கள் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்பவர்களை மீண்டும் வகுப்புகளில் சேர்ப்பதில்லை. இதனால் எங்களுக்கு கூடுதல் வேலையும், பணப்பரிமாற்ற கட்டண இழப்புதான் ஏற்படுகிறது. இந்த மனநிலை கொண்டவர்கள் இத்தகைய வகுப்புகளுக்கு உகந்தவர்கள் அல்ல.
May 19, 2025
என் அரசியல் என்ன?
திரும்பத் திரும்ப என்னிடம் கேட்கப்படும் கேள்வி என்பது என் அரசியல் என்ன என்பது. சாமானியர்களால் கட்சியரசியல் சார்ந்து மட்டுமே யோசிக்க முடியும் என்பதனால் எப்போதும் ஏதேனும் ஓர் அரசியல் கட்சியின் சார்பை என் மேல் ஏற்றி தங்கள் கருத்தைச் சொல்வார்கள். நான் இந்த தளம் வழியாக அதற்கு தொடர்ந்து பதில் சொல்லியும் வருகிறேன். இந்தத் தளத்தை பார்க்கும் எவருக்குமே அது புரியும், நான் எவரை முன்வைக்கிறேன் என்று, எவரை மட்டுமே முன்வைக்கிறேன் என்று அவர்கள் சாதாரணமாகவே காண முடியும்.
ரா.ராகவையங்கார்
ரா. ராகவையங்கார் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நிகழ்ந்த தொடக்க காலகட்டத்தில் அதை முன்னெடுத்த தமிழறிஞர்களில் ஒருவர். இதழியல், இலக்கிய அமைப்புகள், கல்வித்துறை, பதிப்பு ஆகிய தளங்களில் பங்களிப்பாற்றினார். செந்தமிழ் தமிழாய்வுக்கான இதழ்களின் ஆசிரியப்பொறுப்பில் இருந்தார். நான்காம் தமிழ்ச்சங்கம் தமிழ் அமைப்புகளை பொறுப்பேற்று நடத்தினார். அண்ணமலைப் பல்கலை போன்ற கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். நேமிநாதன், நான்மணிக்கடிகை, பன்னிரு பாட்டியல் உட்பட ஏராளமான நூல்களை உரையெழுதிப் பதிப்பித்தார்.
ரா.ராகவையங்கார்
ரா.ராகவையங்கார் – தமிழ் விக்கி
காவியம் – 29
பாட்னா நகரில் மையத்தெருவில் அமைந்த ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டேயின் பெரிய மாளிகையில் நான் அனுப்பிய மூன்று நிழல்கள் சென்று குடியேறின. அவர்கள் அங்கு பகலிலும் உலவுவதற்கான இடங்கள் நிறையவே இருந்தன. ஃபணீந்திரநாத் அந்த மாளிகையை ஓர் அறைகூவலாகத்தான் கட்டினார். அப்போது அந்நகரின் முதன்மையான செல்வந்தர்களில் ஒருவர் அவரென்று வெளித்தெரிய வேண்டும் என்று நினைத்தார். வெள்ளையர்கள் தன் வீட்டுக்கு விருந்துக்கு வரும்போது அவர்கள் அங்கே எந்த வசதிக்குறைவையும் அறியக்கூடாது என்று நினைப்பதாக அவர் பிறரிடம் சொல்லிக்கொண்டார்.
கத்தாக்கிலிருந்தும் புவனேஷ்வரிலிருந்தும் கட்டிடம் கட்டுபவர்களை வரவழைத்து, அவர்களுக்கு குடிசைகள் கட்டித்தந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தங்க வைத்து, அந்த மாளிகையை அவர் எழுப்பினார். சுதை அரைப்பதற்காக மூன்று செக்குகள் அமைக்கப்பட்டன. அந்த செக்குகளை ஓட்டுவதற்கான காளைமாடுகள் தங்கும் நான்கு கொட்டகைகள் அருகே இருந்தன. கடலிலிருந்து கங்கைக்கு வந்து, கங்கையினூடாக பாட்னா வரை வந்து சேரும் பெரிய படகுகளில் சுண்ணாம்புக்காக கடல் சிப்பிகள் கொண்டுவரப்பட்டன. அவை அங்கேயே உருவாக்கப்பட்ட சூளைகளில் வேகவைக்கப்பட்டு நீரூற்றி நீறாக்கப்பட்டன.
ஒவ்வொரு நாளும் ஃபணீந்திரநாத் தன் மாளிகை கட்டப்படுவதை வந்து பார்த்துவிட்டு சென்றார். அதன் சுவர்கள் கோழி முட்டை போன்ற மேற்பரப்பு கொண்டவையாக உருவாயின. மான்செஸ்டரிலிருந்து தருவிக்கப்பட்ட இரும்புக்கம்பிகளும், பெல்ஜியம் கண்ணாடிகளும் கொண்ட சன்னல்களுடன்; இமையமலை அடிவாரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு அறுத்து இழைத்து உருவாக்கப்பட்ட பெரிய கதவுகளும் உத்தரங்களுமாக அந்த வீடு உருவாகி வந்தபோது அவர் பாட்னாவில் தன்னை முழுமையாக நிகழ்த்திக்கொண்டதாக நினைத்துக்கொண்டார்.
அளவில் பெரியதாக இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே ஒன்றுக்குப் பின் ஒன்றாக நான்கு கட்டுகள் கொண்டதாக அந்த மாளிகை கட்டப்பட்டது. அதன் முகப்பில் ஃபணீந்திரநாத்தின் அலுவலகமும் அவருடைய உதவியாளர்களும் இருந்தனர். அவருடைய படுக்கையறை முதல் மாடியில் அமைந்திருந்தது. இரண்டாம் கட்டில் அவருடைய குழந்தைகளும் மனைவியும் பிறரும் தங்கியிருந்தனர். வெளியே இருந்து வருவதற்கு பின்பக்கச் சந்தில் வழி இருந்த மூன்றாவது கட்டில் வேலைக்காரர்களும் அண்டிப்பிழைக்கும் உறவினர்களும் தங்குவதற்கான அறைகள் இருந்தன.
இல்லம் பெரிதானதும் அங்கே தொலைவிலிருந்தெல்லாம் எவரெவரோ வந்து தங்கத் தொடங்கினார்கள். கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள் புகலிடம் தேடிவந்தனர். வேலைக்காரிகளாகவும் உறவினர்களாகவும் அவர்கள் அங்கே தொடுத்துக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலான பெண்கள் ஃபணீந்திரநாத்தின் படுக்கையறைக்கும் அவர் விரும்பியபோது செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் அங்கேயே குழந்தைகளை பெற்றார்கள். அக்குழந்தைகளும் அங்கே வேலைக்காரர்களாக வளர்ந்தார்கள். அத்தனை பேரும் தங்குவதற்காக அந்த மாளிகை பக்கவாட்டில் மேலும் சிறிய அறைகளும் கொட்டகைகளுமாக வளர்ந்தது.
ஃபணீந்திரநாத்துக்கு பிறகு அவருடைய மகன் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் காலகட்டத்தில் நிறைய பெண்கள் வெளியேற்றப்பட்டார்கள். பலர் எப்படியோ எங்கோ சிறுவாழ்க்கை வாய்ப்புகளைக் கண்டடைந்து கிளம்பிச் சென்றார்கள். அறைகள் தொடர்ந்து பூட்டப்பட்டுக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு அறையிலும் அள்ளி வைத்து பூட்டுவதற்கான பொருட்கள் ஏராளமாக அங்கிருந்தன. பழைய நாற்காலிகள், காலாவதியான பெட்ரோமாக்ஸ் விளக்குகள், வெவ்வேறு வகையான பித்தளைப் பாத்திரங்கள், வெள்ளிப் பொருட்கள், கூரைகளிலிருந்து கழற்றப்பட்ட அலங்கார விளக்குகள். அவற்றை விற்பதற்கு அவரது கௌரவம் இடம் தரவில்லை பயன்படுத்த முடியாதபடி அவை பழையதாகியும் விட்டிருந்தன. ஆகவே இல்லத்தின் பாதிக்கு மேற்பட்ட பகுதிகள் பூட்டப்பட்டு, புழுதி அடைந்து, பழங்கால பொருட்களுடன் பல்லாண்டு கால அமைதியுடன் இருந்தன. நிழல்கள் குடியேறுவதற்கு உகந்த இடம் அது.
நிழல்கள் உரிய இடங்களை முதலில் கண்டடைந்து அங்கே தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. பின்னர் அவை இல்லங்களிலுள்ள ஒவ்வொருவரையும் மதிப்பிட்டன. அவர்களின் பின்னால் ஓசையும் அசைவும் இன்றி உடன் சென்றன. தங்களுக்குப் பின்னால் ஒரு நிழல் வரத்தொடங்கியிருப்பது புலன்களால் அறியப்படவில்லை எனினும் ஒவ்வொரு உயிருக்கும் எப்படியோ தெரிந்துவிடுகிறது. அது அவர்களுக்கு ஒரு நிலைகுலைவை உருவாக்குகிறது. தங்கள் சொற்களை எவரோ கேட்டுக்கொண்டிருப்பதாகவும், தங்களை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதாகவும் உணர்கிறார்கள். குறிப்பாக தனிமையில் அமர்ந்திருக்கையில் மிக அருகே எவரோ இருப்பதாக உணர்ந்து அவ்வப்போது திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்க்கிறார்கள்.
ஃபணீந்திரநாத்தின் இல்லத்தில் அவருடைய மனைவியும் மருமகளும் மட்டுமே அப்போது குடியிருந்தனர். அவருடைய மகன் அஸ்வத் தேஷ்பாண்டே தன் மனைவியை இரண்டாவது பிள்ளைப்பேற்றுக்காக அங்கே கொண்டுவிட்டிருந்தான். அவனுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் வந்திருந்தது. கிருஷ்ணகஞ்ச் மிகக் கிழக்கே, மலைப்பகுதியில் இருந்தது. அங்கே மருத்துவ வசதி குறைவு என்பதனால் பாட்னாவிலேயே தன் மனைவி தங்கியிருக்கலாம் என்றும் அவன் நினைத்தான்.
ஆறுமாத கர்ப்பிணியான அவன் மனைவி ஊர்வசி அந்தப் பெரிய இல்லத்தை வெறுத்தாள். அவன் மணமுடித்த நாளிலிருந்து அந்த வீட்டில் இருக்க விரும்பியதில்லை. அது மிகப்பெரியதாக இருந்தது. ஆகவே எல்லாப் பக்கமும் திறந்து கிடக்கும் உணர்வை அளிப்பதாக இருந்தது. அவளுடைய பிறந்தவீடு வங்காளத்தில் காலிம்போங் மாவட்டத்தில் சுமாங் என்னும் சிற்றூரில் அமைந்திருந்தது. சுமாங் ஒரு காடு, அது பீர்பகதூர் ராய்சௌதுரி என்னும் ஜமீன்தார்களின் உடைமை. அவர்களுக்கு அவள் குடும்பம் சோதிடர்களாகப் பணியாற்றியது.
அவளுடைய பூர்வீக வீடு சுருள் ஓடு வேய்ந்த உயரமற்ற கூரை கொண்ட நீண்ட கட்டிடம். ஒவ்வொரு அறையிலும் பத்து பேர் நின்றால் நெரிசலாகத் தோற்றமளிக்கத் தொடங்கும். வீட்டிலிருந்து நேராகவே தெருவுக்கு இறங்கமுடியும். கொல்லைப்பக்கம் மிகச்சிறியது. அதற்குப்பின்னால் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சிறு வீட்டில் வளர்ந்ததனால் அவள் உள்ளம் திகழும் இடமும் மிகச்சிறிதாக இருந்தது. ஆகவே பெரிய வீட்டில் அவள் திகழும் இடத்திற்கு அப்பால் மிகப்பெரிய இடம் ஒழிந்து கிடந்து அவளை பயமுறுத்தியது.
திருமணமாகி வந்த புதிதில் தங்கள் வீடு எவ்வளவு பெரியது என்பதைப் பற்றி போகிற போக்கில் தன் மாமியார் சொன்ன ஒரு வார்த்தை அவளை எரிச்சலூட்டியபடி நினைவிலேயே நீடித்தது. ஆகவே அந்த வீட்டில் தங்க முடியாதென்றே அவள் எப்போதும் அடம்பிடித்து வந்தாள். அங்கே தங்கியிருக்கும் போதெல்லாம் அவளுக்கு ஹிஸ்டீரியா தாக்குதல் வந்து அழுதுகொண்டே இருந்தாள். மெல்லிய வலிப்பும் அவ்வப்போது வந்தது. பெரும்பாலும் தன் கணவனுக்கு உடனிருந்து பணிவிடை செய்யவேண்டும் என்று கூறி அழுது மன்றாடி அவனுடனேயே அவன் பணியாற்றிய இடங்களுக்குச் சென்று தங்கியிருந்தாள்.
கருவுற்றபோது அவள் தன் வீட்டில் தங்க விரும்பினாள். ஆனால் தேஷ்பாண்டே குடும்பம் அதற்கு அனுமதிக்கவில்லை. அவள் சாதாரணமாக அங்கே செல்வதுகூட அவர்களுக்குப் பிடித்தமானது அல்ல. அம்மா மறைந்ததும் அவள் அங்கு செல்வது முடியாமலாயிற்று. அவளுடைய இரண்டு அண்ணன்களின் மனைவிகளும் அவ்வீட்டில் இருந்தார்கள். அண்ணன்கள் உள்ளூரிலேயே ஆரம்பப்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றினார்கள். அவர்களுக்கு அவள் அங்கு வருவது கூடுதல் செலவு என்பதுடன் அவர்கள் மனைவிகள் அவள் மேல் கடும் ஒவ்வாமையும் கொண்டிருந்தனர்.
முதல் குழந்தையுடன் சென்று மூன்று மாதம் தங்கியிருந்தபோது இனி அங்கே ஒருபோதும் வருவதில்லை என்ற எண்ணத்துடன் தான் அந்த வீட்டிலிருந்து கிளம்பி வந்தாள். அவளுடைய சகோதரர்களுக்கு அவள் கணவன் மேல் பொறாமை இருந்தது. ஆகவே அவர்கள் அவன் பிராமணனின் வாழ்க்கை வாழவில்லை என்று சொன்னார்கள். ”அவன்மேல் சாபம் இருக்கிறது. எத்தனையோ ஏழைகளை அவன் துன்புறுத்தியிருப்பான். எத்தனையோ அநீதிகளை அவனே செய்திருப்பான். க்ஷத்ரியர்கள் அநீதி செய்யாமல் வாழ முடியாது. அவர்கள் அநீதியின் பயனை தங்கள் வாரிசுகளுக்குக் கொடுத்த பின்னரே இறப்பார்கள்” என்று அவளுடைய இளைய தமையன் நாராயண் சர்மா சொன்னான்.
”ஷத்ரியர்கள் ஷத்ரியர்களுக்கான தெய்வத்தையே வணங்கவேண்டும். சாமுண்டி வீரபத்ரர், காலபைரவர், காளி என அவர்களுக்கான தெய்வங்கள் வேறு. அவை குருதிபலி கேட்பவை. அவர்கள் குருதிபலி கொடுத்தாக வேண்டும். குருதிபலி கொடுப்பதென்பது ஷத்ரியர்கள் தாங்கள் பெற்ற குருதிபலியை திரும்ப தெய்வங்களுக்கு திருப்பி அளிப்பது தான். அப்படி அவர்கள் அவற்றை சமனபடுத்திக் கொள்ளவில்லையென்றால் அந்த ரத்தத்தின் பாவம் முழுக்க அவர்களிடமே தங்கிவிடும்” என்று பனையோலை விசிறியால் விசிறிக்கொண்டு திண்ணையில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்த அவளுடைய தமையன் திபங்கர் ஷர்மா சேர்ந்துகொண்டான்.
“உன் கணவரிடம் பிராமண தெய்வங்களை மட்டும் அவன் வழிபட்டால் போதாதென்று சொல். அவனுடைய குழந்தைகள் உடல்குறையோ வளர்ச்சிக்குறையோ இல்லாமல் பிறக்கவேண்டும். அவர்கள் நீண்டநாள் வாழவும் வேண்டும். ஏழைகளின் பழி மிகக்கொடியது” என்றான் நாராயண் “அத்துடன் அவன் போலீஸ் அதிகாரியாக இருப்பதால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது. எங்கோ அவன் மாமிசம் உண்ணத் தொடங்கியிருக்க வேண்டும், உனக்குத் தெரிந்திருக்காது. மாமிசம் உண்ணாமல் அவனை அந்த வேலையில் வைத்திருக்கமாட்டார்கள்.”
அவள் தன் தமையன்களுடன் விவாதிப்பதில்லை. அவர்கள் பேசும்போது கேட்டுக்கொண்டிருந்துதான் அவளுக்குப் பழக்கம். ஆனால் அவள் உள்ளிருந்து சீற்றத்துடன் ஒரு குரல் எதிர்க்கும், வாதங்களை முன் வைத்துக்கொண்டே இருக்கும். ஆனால் நாளடைவில் தன்னுடைய வாதங்கள் எல்லாமே பலவீனமானவை என்றும் அவன் சொல்வதே சரி என்றும் அவளுக்குத் தோன்றத் தொடங்கியது.
ஒருமுறை அவள் கண்ணீருடன் ”அப்படியென்றால் என்னை எதற்கு போலீஸ்காரருக்கு திருமணம் செய்து கொடுத்தீர்கள்?” என்று கேட்டாள்.
திபங்கர் எழுந்து “அந்த முடிவை அன்றே நான் எதிர்த்தேன். அப்பாவுக்குத்தான் அதில் ஒரு பெரிய ஆர்வமிருந்தது. அவர்தான் ’பிராமணர்களை எவரும் மதிப்பதில்லை சாலையில் எவரும் முன்பு போல் வணங்குவதில்லை. ஆனால் ஒவ்வொரு போலீஸ்காரரையும் சாலையில் வணக்கம் தெரிவிக்கிறார்கள் காலம் மாறிவிட்டது’ என்று சொன்னார். ’காலம் மாறாது பிராமணன் என்றைக்குமே பிராமணன் தான்’ என்று நான் சொன்னேன்” என்றான்.
நாராயண் “நீ என்ன இங்கே மாப்பிள்ளை கிடைக்காமலா போனாய்? ஏன் போனாய் என்று உனக்கே தெரியும். இங்கே… என்றபின் தன் மனைவி கண்களைக் காட்டுவதைக் கவனித்து “சரி விடு” என்றான்.அவளும் அதை கவனித்து மேற்கொண்டு பேசாமல் எழுந்து சென்றாள்.
திரும்பத் திரும்ப funny dog என்றே தான் அவர்களுடைய மாமனாரை அவளுடைய அண்ணன்கள் சொன்னார்கள். ”ஃபன்னி டாக் துரைகளுக்கு கால் அமுக்கிவிட்டவர். அவர்கள் தங்கள் மாட்டுத்தோல் செருப்புகளை தங்களுக்குக் கீழே உள்ள பிராமணர்கள் சுமந்தாகவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். மாட்டுமாமிசம் தின்னாமல் விடவே மாட்டார்கள். ஆகவேதான் நம் குடும்பத்தினர் எவரும் வெள்ளையர்களிடம் வேலைக்குச் செல்லவில்லை. இதோ இங்கேயே எஸ்டேட்களில் எத்தனை வெள்ளைக்காரர்கள் நல்ல பிராமணர்கள் கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் பணத்தில் சம்பளமும் தருவதற்குத் தயாராக இருந்தார்கள். நம் முன்னோர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையான பிராமணர்கள் எவரும் அதையெல்லாம் ஏற்கமாட்டார்கள்” என்று நாராயண் சொன்னான்.
அந்த உணர்வுடன் தான் அவள் ஃபணீந்திரநாத் குடும்பத்தில் வாழ்ந்தாள். அவற்றை அவள் அங்கே ஒருபோதும் பேசியதில்லை என்றாலும் எப்படியோ அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அங்கே உணர்த்திக்கொண்டிருந்தாள். ”எனது குடும்பம்…” என்று சொல்லும்போது அவள் குரல் உயரும். ”என் அப்பா ஆசாரமானவர்…” என்பாள். ஆசாரங்களை அவள் அப்பா அணுவளவுகூட மீறாமல் விரதம்போல கடைபிடித்தது, அவருடைய சொல்லுக்கு ஜமீன்தார்கள் தலைவணங்கியது, வணிகர்கள் அவரது காலில் விழுந்து வணங்கி அவரது இடது கை ஆசீர்வாதம் பெற்றுச் சென்றது என சொல்லிக்கொண்டே இருப்பாள். ஒவ்வொரு நாளும் “கிஷன் சர்மாவின் குடும்பம் என்றால் அனைவருக்கும் தெரியும். ராஜகுரு வம்சம் என்பார்கள்…” என்றாள்.
அதை சொல்வதற்கு ஒருமுறையை அவள் கண்டடைந்திருந்தாள். “நாங்கள் ராஜகுருவின் வம்சம்” என்று சொல்லும்போது கூடவே “என்ன சொல்லி என்ன? எங்கள் வீட்டில் நிறைய நாட்கள் வெறும் சப்பாத்தியும் வெங்காயமும் மட்டுமே உணவாக இருந்தது. நெய்யும் வெண்ணையும் பண்டிகை நாட்களில் எப்போதாவது எவராவது கொடையாக தந்தாலொழிய கிடையாது. எங்கள் வீட்டில் பால் உணவு எப்போதுமே கிடையாது” என்று சொல்வாள். உடனெ “முத்ரா ராட்சசம் நாடகத்தில் வருகிறது. சந்திரகுப்த மௌரியரின் பேரரசை உருவாக்கிய ராஜகுருவான சாணக்கியர் தன் குடிலில் வெறுந்தரையில் அமர்ந்து மடியில் பலகை வைத்து எழுதிக்கொண்டிருந்தார். ஓர் ஓரமாக அவருடைய சமையல் அடுப்பு. இன்னொரு ஓரத்தில் அவர் செய்த வேள்வியின் சாம்பலும். இதுதான் அவருடைய நிலைமை… ராஜகுரு என்றால் மதிப்பு மட்டும்தான். பணம் இல்லை” என்று சேர்த்துக்கொள்வாள்.
அவள் சொன்னதை மறுத்தால் அவள் தன் குடும்பத்தின் வறுமையைப்பற்றி சொன்னதை மறுப்பதாக ஆகும். அதை ஏற்றுக்கொண்டால் அவள் ராஜகுரு குடும்பம் என்பதை ஏற்றுக்கொண்டதாகும். அந்த விவாதத்தை அவர்கள் நீட்டிக்க விரும்பாமல் வேறுபக்கம் கொண்டு சென்றார்கள். ஆனால் அந்த வார்த்தைகள் அவள் சொல்லாமலேயே அவர்களிடம் ஒலித்துக்கொண்டுதான் இருந்தன. அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதில் கூட அவளைப்பற்றி சொல்வதில்லை.
தேஷ்பாண்டே குடும்பம் அடுத்த தலைமுறையில் வணிகத்தில் இறங்கியது. வெள்ளைக்காரர்களின் காலத்தில் ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே ஈட்டியது போன்ற ஆண்டுதோறும் இரட்டிப்பாகும் செல்வம் பிறகு உருவாகவில்லை. வணிகத்தில் பிராமணர்களுக்கான இடம் குறைவுதான். அவர்கள் மார்வாடிகளுடனும் ஜைனர்களுடனும் போட்டி போட வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் அவர்களைப் பார்க்கும்போது பணிந்து முகமன் உரைத்து வணங்கிச்செல்லும் மார்வாடிகளும் ஜைனர்களும் வியாபாரத்தில் ஈவிரக்கமற்றவர்களாகவும், முடிந்தபோதெல்லாம் தயக்கமேயின்றி ஏமாற்றிச் செல்பவர்களாகவும் இருந்தார்கள்.
தன்னிடமிருந்த முதலீட்டாலும் முன்னரே தந்தை காலத்திலிருந்து சேர்த்துவைக்கப்பட்ட சொந்தக்கடைகளாலும்தான் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே தாக்குப்பிடிக்க முடிந்தது. தன்னுடைய மகன் காவல் துறை உயரதிகாரியாகச் சென்ற பிறகு அவர் வணிகத்தை வளர்க்கும் யோசனையை கைவிட்டு தன் காலம் வரைக்கும் அவற்றை நடத்திச் சென்றால் போதும் என்ற எண்ணத்தை அடைந்தார். ஃபணீந்திரநாத் கட்டிய இல்லத்தில் வைதிகச் சடங்குகளும் பண்டிகைகளும் குறைவில்லாமல் கொண்டாடப்பட்டன. அவருடைய தந்தைக்கான திதி அளிக்கும் நாட்கள் ஒவ்வொரு மாதமும் முந்நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்களுக்கு அன்னதானத்துடனும் தான தர்மங்களுடனும் தொடர்ந்து நடந்து வந்தன. தீபாவளி அன்று அவர் ஆயிரம் பேருக்கு புத்தாடைகளும் உணவும் அளித்தார். ’தேஷ்பாண்டே குடும்பம் இங்கு தலைநிமிர்ந்து நின்றிருக்கிறது என்பதை சொர்க்கத்திலிருந்து எனது தந்தை பார்க்கவேண்டும்’ என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு.
நிழல்கள் அங்கே செல்லும்போது அந்தக் குடும்பத்தினர் அதன் எண்ணிக்கைக் குறைவாலேயே ஒருவரிலிருந்து ஒருவர் விலகி இருந்தார்கள். ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே காலை ஏழுமணிக்கு எழுவார். வேலைக்காரி அவருக்கு காபி கொண்டு வைப்பாள். அதைக் குடித்தபடி அவர் இந்தியின் மூன்று பத்திரிகைகளைப் படிப்பார் அதன்பிறகு குளியலறையில் வெந்நீர்த்தொட்டியில் மூழ்கிக்குளிப்பார். அவர் ஒருபோதும் வெளியே சென்று பொது படித்துறைகளில் குளித்ததில்லை. தன் தந்தைக்கான திதி அளிக்கும்போது கூட கங்கையில் இறங்கி கைப்பிடி நீரை அள்ளி தலையில் தெளிப்பது போல் பாவனை காட்டிவிட்டு இல்லம் திரும்பி வெந்நீரில் மீண்டும் குளித்துவிடுவார்.
அத்தர் பூசிக்கொள்வது அவருக்குப் பிடிக்கும் ஒவ்வொரு நாளும் மூன்று முறை புதிய வெள்ளை ஆடையை மாற்றிக்கொள்வார். வெண்ணிற செருப்பணிந்து தனது பழைய பென்ஸ் காரில் கடைக்கு கிளம்பிச் செல்வார். ஒன்பது மணிக்கு கடை திறக்கையில் அவர் அங்கிருப்பார். எப்போதுமே கடை திறப்பதற்கு முன்பே கடையில் இருந்தாக வேண்டும் என்பது அவரது தந்தை அவருக்கு கற்பித்தது. ‘கடையை திறப்பவனும் மூடுபவனும் முதலாளியாக இருந்தாலொழிய கடை பொலியாது’ என்று அவர் சொன்னார். கடையில் அமர்ந்து முந்தைய நாள் கணக்குகளை அவர் பார்த்து முடிப்பதற்கு பதினொன்றாகிவிடும். அதன்பிறகு வாடிக்கையாளர்களைச் சந்திப்பது, தொலைபேசி அழைப்புகள்.
மதியம் திரும்பி வந்து சாப்பிட்டுவிட்டு அரைமணி நேரம் ஓய்வு. குளித்து மீண்டும் ஆடைகளை அணிந்து கடைக்குச் செல்வார். மாலை ஆறுமணிக்கு கடையைவிட்டுக் கிளம்பி வீட்டுக்கு வந்து மீண்டும் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கோயிலுக்கு செல்வார். கோயிலில் இருந்து அவர் தன் நண்பர்கள் வந்துகூடும் இடங்களுக்குச் சென்றார். அங்கே அவர்கள் குடித்து, மாமிச உணவு உண்டு பின்னிரவு வரை சீட்டாடினார்கள். அதற்கென்றே ஒரு வீட்டை கங்கைக் கரையோரமாக வாங்கி வைத்திருந்தார்.அவரை டிரைவர் கைத்தாங்கலாகக் கொண்டுவந்து படுக்கவைப்பான். சிலநாட்கள் அவர் வீட்டுக்கு வருவதே இல்லை.
அவருடைய மனைவி ருக்மிணிக்கு உடல் எடை அதிகம். மூட்டுவலி உண்டு. அவள் தன்னுடைய அறையிலேயே பெரும்பாலும் தூங்கினாள். கணவருடன் சென்று அவருடைய அறையில் படுத்துக்கொள்வதென்பது எப்போதாவது அவர் அழைத்தால் மட்டும்தான். அதுவும் அவர் ஏதாவது பேசவேண்டும், ரகசியமாக அவளை திட்டவேண்டும் என்றால் மட்டும்தான். அவர்கள் உடலுறவு கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. அவருக்கு வேறு பெண்களுடன் உறவுகள் உண்டென்று அவளுக்குத் தெரியும் அதைப்பற்றி அவள் கவலைப்படுவதில்லை.
காலையில் ஏழு எட்டு மணிக்கு மேல் தான் அவள் தூங்கி எழுவாள். அவளுக்கு அதில் நேர ஒழுங்கென ஏதுமில்லை. முந்தைய நாள் இரவு எவ்வளவு பிந்தித் தூங்கினாள் என்பதுதான் கணக்கு. எழுந்ததுமே படுக்கையில் அமர்ந்து கண்மூடி பிரார்த்தனை செய்வாள். ஒவ்வொரு பிரார்த்தனையின் போதும் எந்தக் காரணமும் இல்லாமல் அவள் விசும்பி அழுவதுண்டு. அதன்பிறகு பணிப்பெண்களின் துணையுடன் குளித்து அவர்களுடைய வழக்கப்படி வங்காள பாணியில் கரை போடப்பட்ட வெண்ணிற ஆடை அணிந்து அதன் நுனியை தலையில் முக்காடாகப் போட்டுக்கொண்டு சமையலறைக்கு வந்து அங்கே இருக்கும் நாற்காலியில் அமர்ந்துகொள்வாள் அங்கிருந்தபடியே பணிப்பெண்களுக்கு ஆணையிடுவாள். அவளுடைய அணுக்கமான வேலைக்காரியான சம்பா அவளுடனேயே இருந்தாள்.
அவ்வப்போது எழுந்து அந்த மாளிகையின் எட்டு பின்வாசல்களிலும் ஒவ்வொன்றுக்குமாக சென்று எதையேனும் பார்த்துவிட்டு வருவது தவிர ருமிணிக்கு அசைவென்று எதுவுமே கிடையாது. மதியம் உணவுக்குப்பின் அவள் இரண்டு மூன்று மணி நேரம் தூங்கினாள். மாலையில் அவர்களின் கரிய அம்பாசிடர் காரில் கிளம்பி அருகிருக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வருவாள். மாலை வந்தவுடனேயே தொலைக்காட்சி முன் அமர்ந்து தொடர்களைப் பார்க்கத்தொடங்குவாள். எட்டுத் தொடர்களை அவள் தொடர்ந்து பார்த்துவந்தாள். இரவு பதினொன்று மணி வரைக்கும் தொடர்களைப் பார்த்துவிட்டு அதன்பிறகு படுக்கைக்குச் செல்வாள். நீண்ட நேரம் அவளால் தூங்க முடிவதில்லை. புரண்டு புரண்டு படுத்து எழுந்தமர்ந்து தண்ணீர் குடித்தும் தானாகவே மயங்கி எப்போதோ அவள் தூங்கிவிடுவாள்.
அவள் மகன் அஸ்வத் தேஷ்பாண்டே அரிதாகத்தான் அந்த மாளிகையில் தங்கினான். அவன் கல்லூரிக்குச் சென்றுவிட்டபிறகு அந்தப்பகுதியில் அவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இளமையிலேயே அவனுக்கு வியாபாரமும் அதைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களும் முற்றிலும் பிடிக்காமலானார்கள். படித்து மேலே செல்ல வேண்டுமென்பதே அவன் ஒரே நோக்கமாக இருந்தது. கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு அவன் விடுதியில் சென்று தங்கி இந்திய அரசுப்பணிக்கான தேர்வுகளை முயற்சி செய்யத்தொடங்கினான்.
இரண்டு முறை அவன் தேர்வில் தோற்ற பிறகு தயங்கி தன் தந்தையிடம் வந்து தன்னுடைய நோக்கம் இந்திய அரசுப்பணிதான் என்றும் அதில் எப்படியாவது தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அவர் தன்னுடைய அறைக்குள் சாய்வுநாற்காலியில் படுத்து அருகே தரையில் அமர்ந்திருந்த வயதான பண்டிதர் வாசித்துக் கொண்டிருந்த ராம்சரிதமானஸைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் வாசலுக்கு வெளியே நின்று தாழ்ந்த குரலில் சொல்வதைக் கேட்டபின் பண்டிதரிடம் விரலை அசைத்தார். பண்டிதர் ராம்சரிதமானஸைக் கீழே வைத்துவிட்டு சென்று கோளாம்பியை எடுத்து அவர் அருகே வைத்தார். அதில் பீடாவை துப்பிவிட்டு வாயைத் துடைத்தபின் ”அது எப்படி இந்திய ஆட்சிப்பணித் தேர்வை நாம் வாங்க முடியும்?” என்று கேட்டார்.
”அதற்கு வழி இருக்கிறது எனக்குத் தெரிந்த ஒருவர் உதவுவதாகச் சொல்கிறார்.”
தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொள்வதில்லை. அவர் தன் முன் தரையைப் பார்த்தபடி ”தோராயமாக எவ்வளவு கேட்பார்கள்?” என்றார்.
அவன் தொகையைச் சொன்னதும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து ”என்ன?” என்றார். அவன் தரையைப்பார்த்தபடி ”பெரிய தொகைதான் ஆனால் ஒருபோதும் நஷ்டம் அல்ல” என்றான்.
”என்ன சம்பளம் கொடுப்பார்கள்? எத்தனை ஆண்டுகளில் அந்தப்பணம் திருப்பிக்கிடைக்கும்?” என்று அவர் கேட்டார்
”சம்பளம் முக்கியமே அல்ல சம்பளம் என்பது ஒரு டிப்ஸ் போலத்தான். பத்து ஆண்டுகளில் நாம் செலவிடும் பணத்தைப்போல பத்து மடங்கை திரும்ப எடுத்துவிடமுடியும். நாம் நினைத்தால் எதுவும் செய்ய முடியும். இங்கே உண்மையான அதிகாரம் என்பது இந்திய ஆட்சிப்பணியிடம் தான் இருக்கிறது.”
அவர் கண்களைச் சற்று சுருக்கியபின் ”நீ போலீஸ் அதிகாரியாக முடியுமா?” என்று கேட்டார்.
தந்தையின் உள்ளே என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொண்டு மகன் முன்நகர்ந்து ”முடியும்” என்றார்.
“ம்” என்று அவர் தலையசைத்தார்.
மூன்று மாதங்களுக்குள் தொகை இரண்டு நிலங்களாகவும் ஒரு வீடாகவும் மூவருக்கு கைமாற்றப்பட்டது ஓராண்டுக்குள் அவன் தேர்வை வென்று பயிற்சிக்காக டேராடூன் கிளம்பிச் சென்றான். அவனுடைய வாழ்க்கை அத்துடன் வேறொன்றாக மாறியது. பாட்னாவுடனும் அந்த இல்லத்துடனும் அவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லாமலாயிற்று. அதன்பிறகு தொடர்ந்து பத்து நாட்கள் கூட அவன் அங்கு தங்கியதில்லை. பாட்னாவில் அதிக நாட்கள் தங்கவேண்டியிருக்கும்போது கூட அரசு மாளிகைகளிலேயே தங்கினான். அங்கு அவனுக்கு காவலர்களின் பணிவிடைகள் இருந்தன. மூன்று அல்லது நான்கு காவலர்கள் பணிவிடை செய்யாமல் அவனால் இருக்க முடியாது என்ற நிலைமை இருந்தது. இரவுகளில் அவன் மாமிசமும் மதுவுமின்றி தூங்குவதில்லை. அவனுக்கு அவர்கள் பெண்களையும் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அவன் மனைவி அவனுடைய அதிகாரத்தின் சுவையை அறிய வேண்டுமென்று விரும்பினான். ஆகவே எப்போதும் அவர்கள் வீட்டில் மூன்று நான்கு காவலர்கள் வேலை செய்தார்கள். அவர்களில் ஒருவரேனும் சீருடையில் இருக்கவேண்டும் என்பதும் அவனுக்கு கட்டாயமாக இருந்தது. அவர்களுக்கு அவள் உரத்த குரலில் ஆணையிடவேண்டும் என்று அவளை சொல்லி சொல்லி பயிற்றுவித்தான். அவளுக்கு ஆணையிடும் குரல் நீண்ட காலம் அமையவேயில்லை. வேலைக்காரர்களை அவளால் அதட்டவோ கண்டிக்கவோ முடியவில்லை. அவன் அதை வலுவாகக் கண்டித்து திருத்தினான். அதற்கு பதிலாக “நாங்கள் சாத்வீக பிராமணக்குடும்பத்தை சார்ந்தவர்கள். எளிதில் நாகரீங்களை விட முடிவதில்லை” என்று அவள் தன்னுடைய மேட்டிமையைச் சொல்லி பதிலளித்தாள்.
அவள் மிக மென்மையானவளாக, தனித்தவளாக, தனித்திருக்கும் போதெல்லாம் தானாகவே உடைந்து அழுபவளாக இருந்தாள். அவன் எந்த அளவுக்கு பிராமண வாழ்க்கை முறையிலிருந்து வெளியே சென்றானோ அந்த அளவுக்கு அவள் வெறியுடன் பிராமண வாழ்க்கைக்குள் நுழைந்தாள். அவள் கடுமையாக ஆசாரங்களை கடைப்பிடித்தாள். காலையில் இருட்டு விலகுவதற்கு முன்பே எழுந்து பூஜைகளையும் அனுஷ்டானங்களையும் முடித்தாள். சமையலறையிலும் சமையலறையை ஒட்டிய பகுதிகளிலும் பிராமணப் பெண்களன்றி எவரையுமே அவள் அனுமதிக்கவில்லை. பிராமணரன்றி எவரையும் எப்போதுமே அவள் தொட்டதும் இல்லை.
வெளியுலகமே அவளுக்கு இருக்கவில்லை. வெளியே காரில் மட்டுமே சென்றாள். காரில் ஏறும்போது கூட அவள் தானே கொண்டு வரும் ஒரு வெண்ணிற டர்க்கி டவலை விரித்து அதன்மேல் தான் அமர்ந்தாள். ஒவ்வொரு நாளும் இரவில் நீண்ட நேரம் தனியாக அமர்ந்து சைதன்யரின் பஜனைப்பாடலை பாடிவிட்டுத் தூங்கினாள். மாதத்திற்கு நான்கு நோன்புகளுக்கு மேல் எடுத்தாள். இந்த மண்ணில் அறத்தையும் நெறியையும் நிறுவும்பொருட்டு பிறந்தவர்கள் பிராமணர்கள். அந்தப்பொறுப்பு அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு அழகும் அறிவும் அதற்காகத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது என்று வேலைக்காரர்களிடம் அவள் திரும்பத்திரும்ப சொல்லி வந்தாள்.
”அந்த இல்லத்தில் குடியேறிய நிழல்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் பின் தொடரத்தொடங்கின இப்போது இந்தக் கதையை நான் உனக்கு சொல்லிக் கொண்டிருக்கையில் அங்கே அவர்களைப் பின் தொடர்ந்து நிழல்கள் சென்று கொண்டிருக்கின்றன. அவர்கள் தங்கள் விருப்பப்படி தான் செயல்படுவார்கள். தங்களுக்குரிய வழியில் அங்கு பழி கொள்வார்கள். உன் மனைவியின் சாவுக்கான முதற்பொறுப்பை ஏற்கவேண்டியவர் அவர்களில் யார்? யாரை அந்நிழல்கள் பழி கொள்ளும்? இப்போது அதை நீ சொல்ல வேண்டும். சொல்லவில்லை எனில் இந்த ஆட்டம் இங்கு முடிகிறது. கதைகளை நிறுத்திவிட்டு நான் விலகிச்செல்வேன்” என்று கானபூதி சொல்லியது. ”சொல். முதலில் பலியாகவேண்டியவர் யார்?”
நான் என் உடல் முழுக்க ததும்பிய சீற்றத்துடன் கைகளைத் தரையில் அறைந்தபடி எழுந்து முகத்தை கானபூதியை நோக்கி நீட்டி பற்கள் கிட்டித்து முகம் இழுபட ”அவன்… அவனுடைய ஆணைப்படித்தான் அந்த கிரிமினல்கள் என் மனைவியைக் கிழித்தார்கள். அவன் அவளை வேட்டையாடினான். ஓராண்டுகாலம் தொடர்ந்து அவளை அவன் வேட்டையாடியிருந்தான் என்றால் அவனுக்கு எத்தனை வஞ்சமிருந்திருக்கும். ஈவிரக்கமற்ற விலங்கு அவன். அவன் முதற்பலியாக வேண்டும்” என்றேன்.
தன் முன் நிலத்தில் பொத்தி வைத்திருந்த கையை விலக்கி கானபூதி சொன்னது, ”இல்லை நிழல்கள் முதலில் அவன் மனைவியைத்தான் தேர்வு செய்திருக்கின்றன. அவள் தான் முதல் பலி.”
நான் தளர்ந்து அமர்ந்து ”ஏன்?” என்றேன்.
”அவள்தான்” என்று கானபூதி சொன்னது.
நான் கண்ணீருடன் தலைகுனிந்தேன். ”ஏன்?” என்றேன்.
“அவளைத்தான் தேர்வுசெய்துள்ளன. ஏன் என்று அவற்றுக்குத் தெரியும்”
நான் தளர்ந்து பெருமூச்சுவிட்டேன். என்னால் எதையும் யோசிக்கவே முடியவில்லை.
“இந்த ஆட்டத்தில் நீ தோற்றுவிட்டாய் நமது கதைகள் இத்துடன் முடிந்தன”
“கதை முடிகிறது என்றால் என்ன பொருள்.. அவளையாவது அவர்கள் பலி கொள்வார்களா?” என்று நான் கேட்டேன்.
”இல்லை. அவை திரும்பிவிடும். அவளை அவர்கள் பலிகொள்ள வேண்டுமென்றால் நீ மீண்டும் ஒரு போட்டிக்கு என்னுடன் வரவேண்டும் உனக்கு ஒரு வாய்ப்புத்தருகிறேன். மீண்டும் ஒருமுறை நான் சொல்லும் கதையின் முடிவை நீ சரியாகச் சொல்லிவிட்டால் இந்தக் கதையை நான் தொடர்கிறேன்” என்றது கானபூதி. “நண்பனே, கதையில் தான் அவள் பலி வாங்கப்படமுடியும். கதை நிகழ்ந்தபிறகு தான் அது மெய்யாக நிகழும்.”
(மேலும்)
வானமும் பறவைகளும்
இன்று காலை கணவருடன் நடைபயணம். மழைக்குபின் சென்றதால், எங்கும் அழகான பச்சை. Oriental magpie robin எனும் குண்டுகரிச்சான், common iora எனும் மாம்பழ சிட்டு, குயில் முதலியவற்றை இங்கு முதல் தடவையாக கண்டோம். குண்டுகரிச்சான் தன் சின்ன அலகை திறந்து பாடவும் செய்தது.
வானமும் பறவைகளும் I saw your video today about finding my god in you tubeI was mesmerized, I wanted to share my namaskaram with youMy gratitudeThanks & Regards God- A LetterMay 18, 2025
ஒரு பழைய பிறழ்வெழுத்து
அவன் புணரத்தொடங்கியதும் அவள் ‘நிறுத்தாதே, நம்மிடையே ஓரங்குல இடைவெளியும் விடாதே. இன்னும் செய். இறுகப்பிடி. என்னை நிரப்பு’ என்றெல்லாம் அவள் வெளியிட்ட சத்தம் அந்த மாளிகை முழுவதிலும் எதிரொலித்தது. அவன் அழுத்த அவளும் தன் உறுப்பை இறுக்கி எதிர்ச்செயல் புரியத்தொடங்கினாள்
இந்த வரிகள் ஒரு நவீன ‘டிரான்கிரேசிவ்’ எழுத்திலுள்ளவை அல்ல. ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் எழுதப்பட்ட ஒரு தெலுங்கு நூலில் இடம்பெற்றவை. எழுதியவர் ஒரு பெண். முத்துப்பழனி என்று பெயர். நூலின் பெயர் ராதிகா சாந்த்வனமு. மேலே சொன்ன வரிகளைச் சொல்பவள் ராதை. அவளுடன் கூடுபவன் கிருஷ்ணன்.
முத்துப்பழனி தஞ்சையில் 1739- 1790 ல் வாழ்ந்தவர். தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய அரசர் பிரதாபசிம்மரின் ஆதரவில் இருந்தார். இந்நூல் 1887ல் முதல்முதலாக அச்சிடப்பட்டது, இதிலிருந்த காமவெளிப்பாட்டுப் பகுதிகள் வெட்டப்பட்டிருந்தன. 1910ல் பெங்களூர் நாகரத்தினம்மாள் முன்னுரையுடன், முழுமையாக இது வெளியாகியது. பெரும் விவாதம் வெடித்தது.
ஆந்திர இலக்கிய முன்னோடி கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு ‘ஒரு வேசியால் எழுதப்பட்டு இன்னொரு வேசியால் வெளியிடப்பட்ட நூல் என்று’ விமர்சனம் செய்தார். அரசு இந்நூலை 1912ல் தடைசெய்தது. நூலை அச்சிட்ட அச்சகம் சூறையாடப்பட்டது. பின்னர் 1946ல் டி.பிரகாசம் அவர்களால் தடை நீக்கம் செய்யப்பட்டது.
ராதிகா சாந்த்வனம் உட்பட காமத்தைப் பேசும் சிற்றிலக்கியங்கள் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நிறைய உருவாயின. அது இந்திய அளவிலேயே ஒரு நலிவுக்காலகட்டம். இலக்கியம் அறம், வீடுபேறு முதலிய பெரும் பேசுபொருட்களை விட்டு விலகியது. பக்தி அலை அடங்கியது. ஆகவே பேரிலக்கியங்களின் காலம் முடிவுக்கு வந்தது. இலக்கியம் என்பது சிறு ஆட்சியாளர்களின் அவையின் கேளிக்கையாக மாறியது.
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அத்தகைய நூல்கள் பெருகின. கூளப்பநாயக்கன் காதல், விறலிவிடு தூது முதலிய படைப்புகளின் காலம். தெலுங்கில் அந்தக் காலகட்டத்தில் அத்தகைய ஏராளமான நூல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
இந்நூலை வாசிக்கையில் இன்று தோன்றுவது இதுதான். கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுக்குமேல் தொன்மை கொண்ட இந்திய இலக்கியத்தில் மிகப்பெரும்பாலானவை காமம் சார்ந்தவை. அவை அனைத்துமே ஆண்களின் காமவெளிப்பாடுகள்தான். பெண்கள் ஆண்களுக்காக ஏங்குகிறார்கள். ஆண்களுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆண்களுடன் ஊடுகிறார்கள், கூடுகிறார்கள். பெண்களின் உறுப்புகள் ஆண்களின் ரசனைக்குரிய வகையில் வர்ணிக்கப்படுகின்றன.
மொத்தச் சங்க இலக்கியமும் ஆண் இலக்கியம்தான். பெண்களின் சில கவிதைகள் உள்ளன, ஆனால் அவற்றில் காமம் இல்லை. மிகச்சில பாடல்களில் மிகமிக உள்ளடங்கிய தாபம் வெளிப்பட்டுள்ளது. அந்த வகையான மறைமுகத் தாபத்தை பின்னர் வந்த காரைக்காலம்மையார், ஆண்டாள் பாடல்களில் காணலாம். ஆனால் அதுவே பெரும் மீறல், மிக அரிது. அந்த வகையான மென்மையான தாபம் மீரா பாடல்களில் வெளிப்படுகிறது. அதை ஜயதேவ அஷ்டபதியின் காமவிழைவுடன் ஒப்பிட்டால் வேறுபாடு புரியும்.
ஆனால், தமிழிலக்கியப் பரப்பில் இன்னொரு சுவாரசியம் உள்ளது. பெண்கள் தங்கள் உடலை உருக்கி உதறிக்கொண்டு, பெண் என்னும் அடையாளத்தையே துறந்து, கவிஞர் என்னும் விடுதலையை அடையமுடிகிறது. ஔவை கிழவியானாள். காரைக்காலம்மையார் பேயானார். பேய்மகள் இளவெயினிகூட அவ்வாறுதானோ என்னவோ. மணிமேகலையும்கூட பெண் என்னும் அடையாளம் இழந்தே சுதந்திரம் அடைய முடிந்தது.
அப்படிப் பார்த்தால் ராதிகா சாந்த்வனமும் ஒரு விந்தையான நூல். இன்னொன்று அதைப்போல இந்திய இலக்கியத்திலேயே இல்லை. இருந்திருக்கலாம். இது வெள்ளையர் கண்பட்டு, அச்சிடப்பட்டதனால் நீடிக்கின்றது. எஞ்சிய எத்தனையோ நூல்கள் அழிந்திருக்கலாம். தனிப்பட்ட ரசனைக்காக எழுதப்பட்டவை. அவற்றை பேணவேண்டும் என்ற எண்ணமே முற்றிலும் ஆண்களின் உலகமான இந்திய இலக்கியம் என்னும் களத்திற்கு இல்லாமல் இருந்திருக்கலாம். யார் கண்டது, பெண்களே எழுதி, பெண்களே ரசித்து, அப்படியே மறைந்துபோன நூல்களும் இருந்திருக்கலாம்.
ராதிகா சாந்த்வனமு ஆண்களின் காம உலகை ஒட்டி, அவர்களுக்காக எழுதப்பட்டது போன்ற பாவனைகொண்ட தந்திரமான நூல். இது ராதைக்கும் கண்ணனுக்குமான காதல், காமத்தைச் சித்தரிக்கிறது. கண்ணன் ராதை உட்பட பல பெண்களுடன் திளைப்பதுதான் இதன் பேசுபொருள். அது வேறுபல நூல்களில் உள்ளதுதான். ஆனால் இதில் பெண்களின் ரகசியக் காமவிழைவுகள் எல்லாமே வெளிப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களின் பிறர்காமம் நோக்கும் விழைவு (Voyeurism) பிற பெண்ணிடமிருந்து ஆணை பறிக்கும் விழைவு, தன்னைவிட வயது குறைந்த இளைஞர்களுடன் உறவுக்கான விழைவு, ஆணை வலிந்து கைப்பற்றும் விழைவு, ஆணை தன் காலடியில் விழச்செய்யும் விழைவு அனைத்துமே.
இந்நூலின் ராதை மணமானவள், கிருஷ்ணனை வளர்த்தவள். (பல மூலநூல்களிலும் அப்படித்தான்). ஆனால் இதில் அவள் சற்று வயது முதிர்ந்தவள். கிருஷ்ணனுக்கு இளாவை அவளே மணம் புரிந்து வைக்கிறாள். அவர்களின் முதலிரவில் புகுந்து கிருஷ்ணனிடம் உறவு கொள்கிறாள். இப்படியே செல்கிறது இதன் சித்தரிப்பு.
பெண்கள் தங்கள் வேட்கையை எழுதத் தொடங்கியது இந்திய – தமிழ் நவீன இலக்கியத்திலேயே 1990 வாக்கில்தான் தொடங்கியது. ஆனால் ராதிகா சாந்த்வனம் அதில் பலபடிகள் முன்னே நிற்கிறது. அதனாலேயே இதற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு என நினைக்கிறேன்.
அகநி வெளியீடாக வந்துள்ள இந்நூல் விரிவான ஆவணக்குறிப்புகள் இணைக்கப்பட்டது. அ. வெண்ணிலா அந்தக்கால அரசு ஆவணங்கள், இதழ்விவாதங்கள் ஆகியவற்றை தேடி எடுத்து ஆய்வுப்பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்.
காவியம் – 28
சாதவாகனர் நாணயங்கள் பொமு 3ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே பதிமூன்று நாட்கள் நடந்து பாட்னாவை வந்தடைந்தார். அவர் செல்லும் வழியில் அவரை விசாரித்த அனைவரிடமும் தான் காசிக்குச் செல்லும் பிராமணன் என்றும், தன் தந்தையின் எலும்புகள் அந்தப் பொட்டலத்தில் இருப்பதாகவும் சொன்னார். பாட்னாவை வந்தடைந்த அவர் அங்கே ஓர் ஹனுமான் ஆலயத்தின் முன்பு சென்று நின்று சோதிடம் பார்க்கவும், செல்வந்தர்களை பார்த்து புகழ்ந்து செய்யுட்களைச் சொல்லி பணம் பெறவும் முயன்றார். அதில் அவருக்கு பெரிய அளவில் பணம் கிடைக்கவில்லை. புரோகித வேலைகளைச் செய்ய முயன்றார். அவருக்கு அதில் பயிற்சி இருக்கவில்லை.
அங்கே சில பிராமணர்கள் சிறு தொகைகளை வட்டிக்குக் கொடுப்பதைக் கண்டு அவரும் அவ்வாறு பணம் கொடுக்க ஆரம்பித்தார். ஒரு வாரத்திற்குள் திருப்பித் தரவேண்டிய தொகைகள். ஆறணா, எட்டணா அளவுக்குத்தான். ஆனால் வட்டி விகிதம் மிக அதிகம். பிராமணர்களை ஏமாற்றுவது பெரும்பாவம் என பிறர் நம்பியமையால் வட்டியுடன் பணம் எங்கும் அவர் சென்று கேட்காமலேயே திரும்ப வந்தது. அவரிடம் ரகசியமாக நிறைய பணம் இருந்தமையால் விரைவிலேயே பெருந்தொகைகளை சுழற்சிக்கு விடத்தொடங்கினார்.
பாட்னா அன்று பெரும் வேகத்தில் வளர்ந்துகொண்டிருந்தது. ஆகவே அங்கே தொடங்கப்பட்ட எல்லாத் தொழில்களும் வெற்றியடைந்தன. பாட்னாவில் அன்று வட்டிக்கு பணம் பெற்றவர்கள் வணிகர்கள். அவர்கள் அந்த வட்டியைவிட அதிகமாக ஈட்டியதனால் அவர்களுக்கு திருப்பி கொடுக்க சிரமம் இருக்கவில்லை. கங்கை வழியாக சிறு படகுகளில் வந்தடைந்த பொருட்களை வாங்கி கப்பல்களுக்கு போகும் பெரிய படகுகளுக்கு விற்பது லாபகரமான தொழிலாக இருந்தது. வண்டிகளில் சிற்றூரிலிருந்து வந்து சேரும் பொருட்களை வாங்கி பலமடங்கு விலைக்கு கப்பலுக்கு பொருள் சேர்க்கும் பெரும்படகுகளுக்கு விற்பதும் நடந்தது.
விற்பவர்களுக்கு தங்கள் பொருட்களின் உண்மையான மதிப்பு தெரிந்திருக்கவில்லை. பொருட்களுடன் கிளம்பி வந்தபிறகு அதிலிருந்து திரும்பிச் செல்லவும் முடியாது. அதை விற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம். ஒரு வணிகர் ஒரு முறை கூறியது போல விதைப்பையில் துளையிட்டு மரத்துடன் சேர்த்துக்கட்டப்பட்ட கரடியுடன் சண்டை போட்டு ஜெயிப்பது போன்றது அந்த வணிகம். மேய்ச்சல் விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்குகள் போன்றவர்கள் அந்த வணிகர்கள். அந்த மாமிசப்பட்சிணிகளின் ரத்தம் குடிக்கும் ஒட்டுண்ணிகள் போன்றவர்கள் வட்டித்தொழில் செய்பவர்கள்.
மிகவிரைவிலேயே தேஷ்பாண்டே பாட்னாவின் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக ஆனார். நிரந்தரமாக ஒரு கடை போட்டு அங்கே அமர்ந்துகொண்டார். வசதியான பெரிய வீட்டுக்கு இடம்பெயர்ந்தார். பாட்னாவின் முக்கியமான , ஆனால் ஏழைக் பிராமணக் குடும்பத்தில் இருந்து தன்னை விட இருபத்திரண்டு வயது குறைவான அழகிய இளம்பெண்ணை மணந்துகொண்டார். பிரபாவதிக்கு அப்போது பதினெட்டு வயதுதான். தன் திருமணத்தை அவர் பெருஞ்செலவில் ஒரு திருவிழா போல நடத்தினார். அந்த மனைவியில் அவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகள் காய்ச்சலில் இறந்தபின் நான்கு குழந்தைகள் எஞ்சின. மூன்று மகள்களும் ஒரே மகனும்.
ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே திரும்ப ஒருபோதும் வாடியா ராஜுக்கு திரும்பிச் செல்லவில்லை. அவர் அதன்பின் பாட்னா நகரைவிட்டு விலகவே இல்லை. அவர் கைவிட்டு வந்த மனைவியும் குழந்தைகளும் என்ன ஆயினர் என்று அறிந்து கொள்ளவும் முயலவில்லை. எப்போதேனும் அவர்கள் அவர் நினைவுக்கு வந்தால் “கல்லிலும் புல்லிலும் இருக்கும் ஈஸ்வரன் அவர்களுடன் இருப்பார். நான் எளிய மனிதன்” என்று சொல்லிக்கொண்டு அண்ணாந்து வானைப்பார்த்து ஒருமுறை கும்பிட்டுவிட்டு அந்த நினைவை அப்படியே ஒதுக்கினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு வாடியாராஜில் இருந்து வந்த எவரோ அவரது மனைவி உள்ளூர் வணிகர் ஒருவரின் ஆசைநாயகியாக ஆகிவிட்டதாகவும், அவர் மகன் ஓடிப்போய்விட்டதாகவும் சொன்னார். மேலும் சில ஆண்டுகளுக்குப்பின் அவருடைய மகள் கல்கத்தாவில் இருந்து வந்த ஒருவனால் பொய்யாக மணம் செய்துகொண்டு அழைத்துச்செல்லப்பட்டதாகவும், அங்கே சோனாகஞ்ச் பகுதியில் அவள் விபச்சாரியாக இருப்பதாகவும், வணிகனைக் கைவிட்டுவிட்டு அவர் மனைவியும் மகளுடன் சென்றுவிட்டதாகவும் இன்னும் சிலர் சொன்னார்கள். அவையெல்லாமே வெறும் வதந்திகள் என்று மட்டுமே அவர் எடுத்துக் கொண்டார். அதன்பின் அவர் மனைவி கல்கத்தாவில் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. அவர் தன்னுடைய மனைவிக்காக கங்கையில் பணம் செலவு செய்து ஒரு விரிவான நீர்க்கடன் சடங்கை நடத்தினார். அவள் சொர்க்கத்துக்கு சென்றுவிட்டாள் என்று புரோகிதர் சொன்னபோது மனநிறைவுடன் தலையசைத்து ”அவள் அங்கே நிறைவுடன் இருக்கட்டும்” என்றார்.
தன்னுடைய வட்டித்தொழிலுக்கு மிக அவசியமானது வைதிக பிராமணனின் தோற்றம் என்பதனால் ஃபணீந்திரநாத் மிகுந்த ஆசாரமானவராக இருந்தார். பிராமணர் அல்லாத எவரையுமே அவர் தொடுவதில்லை. தீண்டத்தகாத மனிதர்களை நோக்கி விழி தூக்குவதும் இல்லை. தீண்டத்தகாதவர்கள் ஒருபோதும் நுழைய முடியாத தெருவில் தான் அவர் தன் புதிய மாளிகையைக் கட்டிக்கொண்டார். அங்கிருந்து தீண்டத்தகாத மக்களை ஒருபோதும் பார்க்காதபடி நடந்து தன் கடைக்கு வரமுடியாது என்பதனால் ஒரு நவீன குதிரை வண்டியை வாங்கிக்கொண்டார். அதில் பட்டுத்திரைகளை அமைத்து உள்ளே அமர்ந்தபடி கடைக்கு வந்தார்.
கடையில் பட்டுத்திரைகள் மூடிய ஒரு சிற்றறைக்குள் தான் அவர் அமர்ந்திருந்தார். வெளியே இருந்த அவருடைய ஏவலர்கள் வருபவர்களை நன்கு பரிசோதித்து, அவர்களின் சாதி என்ன என்று உறுதிப்படுத்திய பிறகே உள்ளே அனுப்பினார்கள். தன் முன் அந்தணரல்லாத எவரையுமே அவர் அமரச்செய்யவில்லை. வணிகர்கள் வந்தால் மட்டும் அவர்கள் நிற்கும்போது அவரும் எழுந்து நின்றுகொண்டார். பிற சாதியினர் அவர் முன் நின்று, கைகூப்பியபடி பேசவேண்டுமென்று வகுத்திருந்தார். தனது இடது காலை ஒரு வெண்பட்டுத் தலையணைமேல் முன்னால் நீட்டி வைத்திருந்தார். வருபவர்கள் அந்தக் காலைத்தொட்டு தன்னிடம் பேச வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவருடைய ஏவலர்கள் அதை திரும்பத்திரும்ப அறிவுறுத்தித்தான் அவரை நோக்கி அனுப்பினார்கள். இடது கையால் அந்தணர் அல்லாதவர்களுக்கு அவர் ஆசீர்வாதம் செய்தார். ஆசீர்வாதம் செய்கையில் வணிகர்களையும் ஷத்ரியர்களையும் மட்டுமே கண்களைத் தூக்கிப்பார்த்தார். மற்றவர்களை வலது பக்கம் கண்களைத் திருப்பியபடி வாழ்த்தினார்.
காலையில் இருள் விலகும் முன்னரே எழுந்து தன் குதிரை வண்டியில் நீண்டதூரம் சென்று கங்கைக் கரையை அடைந்து நீராடி, விரிவான சந்தியாவந்தனங்களைச் செய்துவிட்டு ஆலயத்தில் வணங்கிவிட்டுத்தான் அவர் வீடு திரும்புவார். மதியம் வீட்டிலேயே பூஜைகள் செய்தபிறகுதான் உணவருந்தச் செல்வார். அந்தியில் கடை மூடிவிட்டு மீண்டும் கங்கைக்குச் சென்று சந்தியாவந்தனம் செய்வார். அவர் சந்தியாவந்தனம் செய்யுமிடம் அனைவரும் பார்க்கும் படித்துறை என்பதனால் அவருக்கான நேரமும் இடமும் வகுக்கப்பட்டு மாறமுடியாததாக மாறிவிட்டது. அவர் கங்கைப் படித்துறையில் தன்னுடைய வழிப்பாட்டுக்கென்று சிறு கோயிலைக் கட்டினார். அதில் அவரே ஒரு பூசகரை நியமித்தார். ஒவ்வொரு நாளும் அவர் வந்தபிறகு அவருக்காக அங்கே பூசைகள் நடைபெற்றன
தன் பெயர் வங்காளிகளிடையே புழக்கமானது என ஃபணீந்திரநாத் எண்ணினார். தன்னை பிறர் வங்காளப் பிராமணன் என எண்ணிவிடக்கூடாது என்பதனால் தன் பெயருடன் தேஷ்பாண்டே என்பதையும், தான் பிகாரிப் பிராமணன் என்பதையும் அழுத்திச் சொல்லிவந்தார். வங்காளிகளில் பிராமணர்களே இல்லை என்று அவர் தன் வேலைக்காரர்களிடம் சொல்வதுண்டு. அவர்கள் மீன் தின்பவர்கள், கரியவர்கள், அல்லது அவர்களின் கண்கள் இடுங்கி இருந்தன. ‘நல்ல பிராமணன் அக்னிவர்ணன் என்று சொல்லப்பட்டிருக்கிறது’ என்று அவர் சொல்வார்.
பிராமணன் வட்டிக்கடைத் தொழில் செய்யலாமா என்ற கேள்வி அவரிடம் எழுந்துகொண்டே இருந்தது. அதற்கு அவர் தான் பேசும் அனைவரிடமும் பேச்சுவாக்கில் பதில் சொனனார். “நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் ஐயமறப் பயின்ற பண்டிதன் நான். என் வாழ்க்கையில் இருபத்தேழு ஆண்டுகளை அதற்காகச் செலவழித்தேன். கூடுதலாக ஜோதிடமும் பயின்றேன். ஆசுகவியாக நினைத்த நேரத்தில் என்னால் கவிதை எழுத முடியும். முக்காலமும் கணிக்க முடியும். ஆனால் ஞானத்திற்கு மதிப்பிருந்த காலம் என் தந்தையுடன் போயிற்று. இப்போது பணத்திற்குத்தான் மதிப்பு. ஆகவே என் வழி இதுவாக ஆகிவிட்டது.”
”கேட்டுக்கொள்ளுங்கள். பிராமணன் பணத்தை மறுத்து ஏழையாக இருப்பவனே ஒழிய பணம் ஈட்டத்தெரியாமல் ஏழையாக இருப்பவன் அல்ல. இங்குள்ள அரசர்கள், வணிகர்கள் அனைவரும் பிராமணனின் வழிகாட்டலின்படி பணம் ஈட்டியவர்கள்தான். இன்று அவர்கள் பிராமணனை அவமதிக்கிறார்கள் எனும்போது அந்தப் பணத்தை ஏன் பிராமணனே ஈட்டக்கூடாது?” அவர் எப்போதுமே கேட்கும் கேள்வி அது. “ஷத்ரியர்களும் வைசியர்களும் இன்று தானதர்மங்கள் செய்வதில்லை. ஆகவே பிராமணனாகிய நானே பொருளீட்டி அதைச் செய்யவேண்டியிருக்கிறது. இதுவும் பிராமண தர்மம்தான்.”
ஆனால் அவர் எவருக்கும் எதுவும் கொடுப்பதில்லை. ஆண்டுதோறும் தன் தந்தையின் திதி நாளுக்கு நூறு பேருக்குக் கங்கைக் கரையில் உணவளிப்பதையே பெரிய கொடையாக ஆண்டு முழுக்கச் சொல்லிக்கொள்வார்.அந்த செலவை ஒவ்வொருமுறை சொல்லும்போதும் கூட்டிக்கொண்டே இருப்பார். எவர் அவரிடம் கொடை கேட்டு வந்தாலும் “பிராமணன் தகுதியானவருக்கே கொடையளிக்கவேண்டும். இல்லையேல் கொடை பெறுபவரின் பாவங்களை ஊக்குவித்த பாவம் அவனுக்கு அமையும். உன் ஜாதகத்தைக் கொண்டுவா. பார்த்துவிட்டுச் சொல்கிறேன்” என்று சொல்லி தவிர்த்துவிடுவார்.
ஆட்சியாளர்களான வெள்ளையர்களால் மதிக்கப்படுபவராகவும், வெள்ளை அதிகாரிகள் நேரில் அழைத்து பேசக்கூடியவராகவும் அவர் மாறினார். கவர்னரையோ கலெக்டரையோ பார்க்க செல்லும்போது அவர் சரிகை வைத்த சட்டையும் சரிகைக்குலாயும் அணிந்துகொண்டார். தங்கப்பூணிட்ட கைத்தடியும் தங்க சங்கிலியில் பிணைக்கப்பட்ட பைக்கடிகாரமும் வைத்துக் கொண்டார். செருப்பும் இடைப்பட்டையும் அணிவதை மட்டும் தவிர்த்தார். அதற்குப் பதிலாக சந்தன மிதியடியும், பட்டுத்துணியால் கச்சையும் அணிந்துகொண்டார். குதிரை வண்டியில் கலெக்டரைப் பார்க்க செல்லும்போது அவர் பட்டுத்திரைகளை விலக்கி தன்னை அனைவரும் பார்க்க செய்தார்.
வெள்ளைத்துரைகளுக்கு முன்னால் நிற்கும்போது பணிந்து ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய முகமன்கள் அனைத்தையும் முறையாகக் கற்று வைத்திருந்தார். சம்ஸ்கிருத மந்திரங்களைச் சொல்லும் அதே ஓசை நயத்துடனும் உரத்த குரலிலும் அவற்றை அவர் சொன்னார். அவர்கள் அதை விரும்பினார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் அவரை அமரச்செய்து அவருக்குத் தெரிந்த இந்துஸ்தானியில் பேசினார்கள். அவர்களின் குழறலான இந்துஸ்தானி அவருக்குப் புரியவில்லை என்றாலும் ஒவ்வொரு சொல்லையும் அவர் உதிர்க்கப்படும் தங்க நாணயங்களைப் பெற்றுக்கொள்வது போல இரண்டு கைகளையும் விரித்து வாங்கிக்கொண்டார்.
ஒவ்வொரு முறை கவர்னர் மாளிகையிலிருந்தும் கலெக்டர் அலுவலகத்திலிருந்தும் திரும்பும்போது முகம் மலர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறை பிறரிடம் பேசும்போதும் அவர் வெள்ளை அதிகாரிகளிடம் எத்தனை அணுக்கமாக அமர்ந்து பேசினார் என்றும் ,அவர்கள் அவரிடம் என்னென்ன சொன்னார் என்றும் விவரித்தார். வேண்டுமென்றே கலெக்டர் அலுவலகச் சிப்பந்திகளை அவர்களின் வண்ணமயமான குறுக்குத் தோள்பட்டையுடன் தன் கடைக்கு வரச்செய்தார். அதை பிறர் பார்க்கிறார்கள் என்று அவர் அறிந்திருந்தார். ஒரு முறை வெள்ளைக்கார சார்ஜண்ட் ஒருவனே அவர் கடைக்கு வந்து கலெக்டருக்கான ஒரு பொருளை வாங்கிச் சென்றான். அவருடைய வைதிகத் தோற்றத்தை போலவே வெள்ளையர்களிடமான அணுக்கமும் தொழிலுக்கு பெரிதும் உதவியது.
வெள்ளையர்களால் அவர் பெயரைச் சொல்ல முடியவில்லை. அவரை அவர்கள் funny Dog என்றார்கள். முதலில் கவர்னர் அதை வேடிக்கையாகச் சொல்ல அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. அதன் பொருள் என்ன என்று அவர் விசாரித்து அறிந்துகொண்டார். அதன்பின் அதுவே தன்னை எளிதில் அவர்கள் நினைவில்கொள்ள காரணமாக அமைவதை புரிந்துகொண்டதும் அவரே அப்பெயரைச் சொல்லி தன்னை அறிமுகம் செய்துகொள்ளலானார். தன்னை கவர்னரும் கலெக்டரும் செல்லமாக அப்படித்தான் அழைப்பார்கள் என்று அவரே அனைவரிடமும் சொன்னார். ’என் குடும்பமே இனி அந்தப் பெயரால் அழைக்கப்படும்’ என்றார்.
ஆங்கில அதிகாரிகள் அவர்கள் வெவ்வேறு வகையில் முறைகேடாக ஈட்டிய பணத்தை அவரிடம் கொடுத்து அதற்கு வட்டி பெற்றுக்கொண்டனர். அந்தப் பணத்தை அவர் வெளியே கூடுதல் வட்டிக்குக் கொடுத்து தனக்குரிய லாபத்தை எடுத்துக்கொண்டார். அது அவரை மேலும்மேலும் செல்வந்தராக்கியது. ஒவ்வொரு ஆங்கில அதிகாரிக்கும் மாதந்தோறும் பெருந்தொகை வட்டியாகக் கொடுப்பவராக மாறினார். பிரிட்டிஷ் மாளிகைகள் அனைத்திலும் அவருக்கு செல்வாக்கு உருவாகியது. அவர் அவர்களுக்குத் தேவையான சிறிய ஏவல் பணிகளையும் செய்யத்தொடங்கினார். ஒரு வெள்ளைக்காரக் காப்டனின் மனைவிக்கு உள்ளூர் மாம்பழங்களை வாங்கி அனுப்புவதில் தொடங்கி கவர்னரின் மாளிகைக்கு வேலைக்காரப் பெண்களை ஏற்பாடு செய்வது வரை அவர் செய்தார். பின்னர் சிறுசட்டவிரோத செயல்களையும் செய்யத்தொடங்கினார். மலையிலிருந்து வரும் கஞ்சாவை அதிகாரிகளின் இல்லங்களுக்கு கொண்டு சென்று கொடுத்தார். அதிகாரிகள் வெளியே தங்குமிடங்களுக்கு பெண்களை வரவழைத்து அனுப்பி வைத்தார்.
ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே மறையும்போது பாட்னாவில் அவருக்கு இருபது மாளிகைகள் இருந்தன. தொலைவில் கிராமங்களில் நூறு ஏக்கருக்கு மேல் நஞ்சை வயல்கள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தன. வெவ்வேறு ஆங்கிலேய வங்கிகளிலாக இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சேமித்து வைத்திருந்தார். கங்கைக்கு சந்தியாவந்தனம் செய்ய சென்றவர் படிகளில் ஏறும்போது கால் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போதே உயிரிழந்தார். அவரது நினைவுச்சடங்கு ஒன்று டவுன்ஹாலில் நடைபெற்றது. அதில் கலெக்டர் அனுப்பிய செய்தியை அவருடைய நேர்முக உதவியாளர் வாசித்தார். அதில் பிரிட்டிஷ் அரசின் விருது ஒன்றுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்படுவதாக இருந்தது என்று சொல்லப்பட்டிருந்தது.
ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டேயின் மகன் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேக்கு தந்தை இறக்கும்போது இருபத்தேழு வயது. இளமையிலேயே படிப்பு ஓடாதவராக இருந்தார். பள்ளி இறுதி வகுப்பை பலமுறை எழுதிப்பார்த்தபின் கைவிட்டார். தந்தையுடன் கடைக்கு வந்து அமரத்தொடங்கினார். வட்டித்தொழிலிலும் அவருக்கு ஆர்வம் உருவாகவில்லை. பிராமணசாபம் என்னும் கருத்து மறைந்துகொண்டிருந்தது. ஆகவே இனிமேல் அத்தொழிலில் பிராமணர்கள் நீடிக்கமுடியாது என்று அவர் ஊகித்துக்கொண்டார். அதில் மார்வாடிகளும் ஜைனர்களும் நுழைந்தனர். உள்ளூர் ஷத்ரியர்களும் யாதவர்களும் புதிய சக்தியாக எழுந்து வந்துகொண்டிருந்தனர். பிரிட்டிஷ் அரசு விரைவிலேயே அகன்றுவிடும் என்ற எண்ணம் உறுதியாகியிருந்தது. ஆனால் ஃபணீந்திரநாத் வெள்ளையரை நம்பினார். இந்திய அரசர்கள் எப்படி வெள்ளையர் முன் வாலைக்குழைத்து காலை நக்கிக்கொண்டிருந்தனர் என அவர் கண்டிருந்தார். “நான் உலகத்தை ஆட்சி செய்யும் ஆங்கிலேயரின் செல்லப்பிள்ளை. அவர்கள் என்னை ஃபன்னி டாக் என்றுதான் அழைப்பார்கள்” என்று சாவதற்கு முன்பு வரை சொல்லிக்கொண்டிருந்தார்.
ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே பணம் கட்டி ஒரு சிமிண்ட் ஏஜென்ஸி எடுத்தார். சுதந்திரத்திற்குப் பின் பாட்னா மிகப்பெரிய நகரமாக வளர்ந்துகொண்டே இருந்தமையால் அது அவருக்கு லாபத்தை தரத்தொடங்கியது. ஆகவே வட்டித்தொழிலை நிறுத்திவிட்டு முழுக்கவே சிமெண்ட் வணிகத்தில் இறங்கினார். பின்னர் இரும்பு மொத்த வியாபாரத்தையும் தொடங்கினார். ஆனால் பிராமணர்கள் வணிகத்தில் குறைவான எண்ணிக்கையில்தான் இருந்தார்கள். ஆகவே பிற சாதியினரைப்போல அவரால் ஒரு குழுவாகச் செயல்பட முடியவில்லை. எனவே அவருடைய வளர்ச்சி ஓர் எல்லையில் நின்றுவிட்டது. பாட்னாவில் மிகப்பெரிய வணிகர்களும் கோடீஸ்வரர்களும் உருவானார்கள். அவர் பார்த்து கடை திறந்தவர்கள் மிகப்பெரிய அடையாளங்களாக ஆனார்கள். ஆகவே அவர் தன் அடையாளமாக பிராமணன் என்பதை இறுகப்பற்றிக் கொண்டார். “நான் பிராமணன். என்னால் அவர்கள் செல்லும் சில விஷயங்களைச் செய்ய முடியாது” என்று சொல்லி அவர் கசப்புடன் சிரிப்பதுண்டு. அவரே அதை காலப்போக்கில் நம்பி சொல்லத் தொடங்கினார்.
ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே ராவ்பகதூர் பட்டத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட போது அவர் உயிர்துறக்க நேரிட்டது என்று ஹரீந்திரநாத் சொல்வார். அவருடைய மிகப்பெரிய ஓவியம் அவருடைய வீட்டிலும் கடையிலும் இருந்தது. பூஜையறையில்கூட சிறிய படம் ஒன்றை வைத்திருந்தார். “வணிகத்தை வேள்வியாகச் செய்தவர்” என்று உள்ளூர் கவிஞரான சுபாஷ் பாண்டே அவரைப்பற்றிச் சொன்ன வரியை ஹரீந்திரநாத் நம்பினார். தன் வணிகத்தில் கிடைத்த லாபத்தில் பெரும்பகுதியை ஃபணீந்திரநாத் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே செலவிட்டார் என்றும், அவர் மட்டும் அந்தப் பணத்தை மீண்டும் தொழிலிலேயே போட்டிருந்தால் பாட்னாவே தன் கையில் இருந்திருக்கும் என்று அவர் சொல்வதுண்டு. ஃபணீந்திரநாத் அமர்ந்திருந்த மரநாற்காலி அவருடைய வீட்டுக் கூடத்தில் போடப்பட்டு அவருடைய சரிகை மேலாடையும் தொப்பியும் அதன்மேல் போடப்பட்டிருந்தது.
உண்மையிலேயே பாட்னாவின் மக்களில் பலர் ஃபணீந்திரநாத் ஒரு பெரும் வள்ளல் என நம்பினார்கள். ‘அன்னதாதா’ என்ற அடைமொழியுடன் அவரை அழைத்தனர். கங்கைக் கரையில் அவர் கட்டிய கோயிலில் அவருடைய சிறிய பளிங்குச் சிலையை ஹரீந்திரநாத் நிறுவினார். பூசாரி அதற்கும் பூசை செய்ய ஆரம்பித்தார். மக்கள் அதையும் வணங்கி வேண்டுதல்களைச் செய்யத் தொடங்கினர். ‘ஃபணி தாதா’ என்று அவரை குறிப்பிட்டனர். குழந்தைகள் funny Dada என்றார்கள். தன் மாபெரும் கொடைத்திறனுக்காகவும், ஏழைமக்கள் மேல் கொண்ட கனிவுக்காகவும் அவர் சர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்று பரவலாக நம்பப்பட்டது.
ஃபணீந்திரநாத் பற்றிய உண்மைத்தகவல் தனக்குத் தெரியும் என நீண்டநாட்கள் அவருடைய கடையில் கணக்குப்பிள்ளையாக இருந்த லால்ஜி மக்கான் என்னும் கிழவர் சாகும் வரை சொல்லிக்கொண்டிருந்தார். பிகாரில் பெரும் பஞ்சம் உருவாகி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்துக்கொண்டிருந்த காலம் அது. ராமகிருஷ்ண அமைப்பினரும் ஆரியசமாஜிகளும் சிறு சிறு அன்னதானக் குழுக்களை அமைத்து மக்களை சாகவிடாமல் பார்த்துக்கொண்டனர். வயதான ஃபணீந்திர நாத்தை ஒருமுறை ராமகிருஷ்ண மடத்தின் அன்னதானக் குழு வந்து சந்தித்து நிதியுதவி கேட்டது. “ஒவ்வொரு உயிருக்கும் அதற்கான உணவை அளிப்பவர் பகவான். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கனிக்குள் இருக்கும் வண்டுக்கும் அவரே உணவை கொண்டுசென்று கொடுக்கிறார். ஒருவருக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது பகவானின் ஆணை. அதில் நாம் தலையிடக்கூடாது” என்று ஃபணீந்திரநாத் சொன்னார். “மேலும் இந்தப் பணத்தை நான் தருவதனால் எனக்கு என்ன நன்மை?”
“நீங்கள் வட்டிக்கு பணம் கொடுப்பவர். உங்களை மக்கள் வெறுப்பார்கள். உங்களைப் பற்றிய கீழான எண்ணம் மக்களிடையே நீடிக்கும். நீங்கள் இறந்தபின் கஞ்சன் என்றும் கொடிய வட்டி வாங்கியவர் என்றும் நினைவுகூரப்படுவீர்கள்” என்றார் குழுத்தலைவராக இருந்த பண்டிட் பிரஜ்மோகன் பட்டாச்சாரியா.
“பண்டிட்ஜீ, வள்ளல் என்ற பெயர் எனக்கு நிலைக்கவேண்டும் இல்லையா? அதற்கு நான் அவ்வளவு பணம் செலவழிக்க வேண்டியிருக்காது” என்று ஃபணீந்திரநாத் சொன்னார்.
அவர் என்ன சொல்கிறார் என அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் அவர் செய்து காட்டினார். உள்ளூரின் சிறு கவிஞர்களை அழைத்து சிறிய தொகை அளித்து தன்னை கொடைவள்ளல் என்று புகழ்ந்து கவிதைகளை எழுதி பாடச்செய்தார். அந்தக் கவிதைகளை பணம் கொடுத்து உள்ளூர் நாளிதழ்களில் வெளிவரச் செய்தார். அவரை கொடைவள்ளல் என வாழ்த்தி அவருடைய நிதி பெற்ற சில அமைப்புகள் அவருடைய பிறந்தநாளில் நகரில் சுவரொட்டிகளை ஒட்டின. அவர் பெயருடன் கொடைவள்ளல் என்னும் சொல் இயல்பாக இணைந்துகொண்டது. அதற்கு அவர் சில ஆயிரங்களை மட்டுமே செலவழிக்க நேர்ந்தது.
அவர் என்ன கொடுத்தார், எவருக்குக் கொடுத்தார் என்று எவருக்கும் தெரியவில்லை, ஆனால் அனைவரும் கொடைவள்ளல் என்றனர். பிறரிடம் நன்கொடை கேட்கும்போது அவரை சுட்டிக்காட்டி அவர் போல புகழ்பெறுவதற்காக பணம் கொடுக்கும்படிக் கோரினர். அவர் இறந்தபோது அவர் மாபெரும் கொடைவள்ளல், இரக்கமே உருவானவர் என்று சொல்லி ஊராரில் பலர் கண்ணீர்விட்டனர். இல்லத்தில் இருந்து கங்கைக்கரை மயானம் வரை அவருடைய இறுதி ஊர்வலத்தில் எளிய மக்கள் திரண்டு அழுதபடியே சென்றனர்.
(மேலும்)
தீன் விளக்கம்
இஸ்லாமியக் காப்பிய நூல். இதனை இயற்றியவர் வண்ணக்களஞ்சியப் புலவர். தீன் எனும் அரபுச் சொல்லுக்கு ‘இஸ்லாமிய நெறி’ என்பது பொருள். மதீனாவில் இருந்து இஸ்லாமிய நெறிகளைப் பரப்புவதற்காகத் தமிழகம் வந்த செய்யிது இப்ராகீம் அவர்களது வரலாற்றைக் கூறும் காப்பிய நூல் இது. ஏர்வாடியில் இந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
தீன் விளக்கம் – தமிழ் விக்கி
Touches of poetry in prose
Jeyamohan’s memoir is an expression of yearning for his father’s affection, a recollection of his matriarchal lineage, an interesting critique of the cultural changes of the land he was born in, and an exploration of the nuances of languages, myths, and romance. It is an engaging, moving, and deeply intriguing view of the life and the mind of “a representative of the hoary literary tradition of South Travancore” and a poet who writes in prose.
குழந்தைகளுக்கு மேலும் பயிற்சிகள்
பெரும்பாலான கோடைகால வகுப்புகள் மோசடிகள் என்று ஒருவர் எழுதியிருந்தார். அது உண்மை. எனக்கும் பல கசப்பான அனுபவங்கள் உண்டு. நீங்கள் மேலும் குழந்தைகளுக்கான வகுப்புகளை ஏற்பாடு செய்யலாமே? இன்றைய அவசியத்தேவை இது.
The speech on how to converse with our children is both sharp and intriguing. The key takeaway is to “Engage in conversation about a subject, rather than constantly offer advice and guidance.”
Parents and children- A LetterJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

