Jeyamohan's Blog, page 67
June 29, 2025
காவியம் – 70
கானபூதி சொன்னது. நான் என் கதையை சொல்லி முடித்தேன். உக்ரசிரவஸ் என் சொற்களை கண்களை மூடிக் கேட்டுக்கொண்டிருந்தார். நான் அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டு அவர் என்ன கேட்கப்போகிறார் என்று காத்திருந்தேன்.
நீண்ட நேரம் கழித்து அவர் கண்களைத் திறந்து ”குணாட்யர் எப்படி மறைந்தார்? என்று கேட்டார்.
நான் “இக்கதையில் இதுவரை உருவானவை இரண்டு கேள்விகள்” என்றேன். “ஒன்று, குணாட்யரின் காவியம் ஏன் அஞ்சப்பட்டது? அதன் பண்படாத மொழியாலா? அது நிஷாதர்களின் கதை என்பதனாலா?”
”அதன் அளவால்தான்” என்றார் உக்ரசிரவஸ். “மனிதர்களும் விலங்குகளும் எல்லாமே பெரியவை அனைத்தையும் அஞ்சுகின்றன. இந்தப் பூமியின் அத்தனை மரங்களும், உயிர்களும் வாழ்வது பூமியின் மிகச்சிறிய மேல்பரப்பில் மட்டும்தான்”
“சரிதான்” என்று நான் சொன்னேன்.
“அவர் அந்தக் கதையின் ஒரே ஒரு சர்க்கத்துடன் மாணவர்களை காவியசபைக்கு அனுப்பியிருக்க வேண்டும். அது அங்கே அரங்கேறியபின் சில ஆண்டுகள் கழித்து அடுத்த சர்க்கம் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஐம்பதாண்டுகளில் அந்த மொத்தக் காவியத்தையும் அவர்கள் ஏற்கசச்செய்ய முடியும்” புன்னகையுடன் “நான் செய்தது அதைத்தான்” என்றார் உக்ரசிரவஸ்.
”ஆம், ஆனால் இரண்டாம் சர்க்கம் முன்வைக்கப்படும்போது முதல் சர்க்கம் உருமாற்றம் அடைந்திருக்கும்” என்று நான் சொன்னேன்.
உக்ரசிரவஸ் சட்டென்று முகம் சுருங்கினார். உடனே வெடித்துச் சிரித்து “உண்மைதான்” என்றார்.
“இரண்டாவது கேள்வி” என்று நான் சொன்னேன். “ரத்னாகரர் சொன்னதைப் போல் மனிதர்கள் நூல்களை அஞ்சுகிறார்களா? அவற்றை வெறுக்கிறார்களா? ஆகவேதான் அக்காவியத்தை கிழித்து வீசிக் கொண்டாடினார்களா?”
“தெய்வங்ளை நம்பியே மானுடர் வாழ்கிறார்கள். நூல்கள் அவர்களை ஆற்றுப்படுத்துகின்றன, கட்டுப்படுத்துகின்றன, தண்டிக்கின்றன. ஆகவே தெய்வங்களை அவர்கள் அஞ்சவும் செய்கிறார்கள். ஏதேனும் ஒரு நல்ல காரணம் கிடைத்தால் மானுடர் தெய்வங்களையே முதலில் உடைத்து வீசி மகிழ்வார்கள்” என்று உக்ரசிரவஸ் சொன்னார்.
“உண்மை” என்று நான் சொன்னேன். ”நீங்கள் கேட்டதற்கான கதையை நான் சொல்கிறேன்.”
அக்னிபுத்ர சதகர்ணி அன்றிரவு தூங்கவில்லை. தன் அரண்மனையின் உப்பரிகையில் நிலையற்று நடந்துகொண்டிருந்தார். தன்னுள் எண்ணங்கள் குழம்பிக் கொந்தளிப்பதை அவர் உணர்ந்தார். அவர் அதற்குள் வாக்பிரதிஷ்டான சபையின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவராக ஏற்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் நூல்பயின்றார், கவிதைகள் எழுதினார். ஒவ்வொரு நூலும், ஒவ்வொரு கவிதையும் மேலும் நிறைவின்மையைத்தான் அளித்தன. தன் அறிதலுக்கு வெளியே ஏதோ ஒன்று தனக்காகக் காத்திருப்பதாக அவர் எண்ணினார். அதை நோக்கி விரைந்துகொண்டிருப்பதாக கற்பனை செய்தார்.
ஆனால் அந்நாளின் நிகழ்வுகள் அவருக்குள் தன் கல்வி பற்றியும் கவித்திறன் பற்றியும் இருந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டன. நாய்போல ஊளையிட்டபடி கூத்தாட்டமிட்ட கூட்டத்தில் ஒருவனாகவே அவரால் தன்னை எண்ணிப்பார்க்க முடிந்தது.
சதகர்ணிகளின் அரண்மனையின் நிலவறையில் கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசுக்கு ஒரு சிறு கோயில் இருந்தது. சதகர்ணி அரசர்கள் ஒவ்வொரு அமாவாசை நாளிலும் அந்த நீல ஆடை அணிந்து அங்கே வழிபடுவார்கள். அக்னிபுத்ர சதகர்ணி ஒருமுறை உத்துங்கரின் ஞானவிலாசம் என்னும் நூலை படித்துக்கொண்டிருந்தபோது தமோ குணம் கொண்ட தெய்வங்கள் எப்படி ஊற்றுநீரில் நஞ்சு கலப்பதுபோல ஆத்மாவை மாசடையச் செய்கின்றன என்று அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு அன்றே அந்த கோயிலை மூடி அச்சிலையைக் கொண்டுசென்று கோதாவரியில் போடும்படி ஆணையிட்டார்.
அது அமைச்சர்களை திகைக்கச் செய்தது. அரண்மனைப் பூசகர் மதங்கர் அது அரசுக்குத் தீமையை விளைவிக்கும் என்றார். “உங்கள் குலமூதாதை சுத்யும்னர் காட்டில் சென்று கான்பூதி என்னும் பைசாசத்தைச் சந்தித்ததாக சதகர்ணவிலாசம் என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது” என்றார். “அந்த பைசாசம்தான் சுப்பிரதிஷ்டானத்தை வெல்லும் வழியை உங்கள் மூதாதைக்குக் கற்றுக்கொடுத்தது என்று அந்நூல் சொல்கிறது”
“அது பின்னர் உருவான கதை” என்று அக்னிபுத்ர சதகர்ணி சொன்னார். ”மிக எளிமையான வரலாறுதான் அது. சுப்ரதிஷ்டானத்தை தாக்கி கொள்ளையிட்டவர்கள் அங்கிருந்த அத்தனை படைவீரர்களையும் கொன்றனர். சமர்கள் அஞ்சிப் பதுங்கிக்கொண்டனர். படையெடுப்பாளர்கள் சமர்களிடம் அந்த உடல்களை எரிக்கச்சொல்லிவிட்டு சென்றனர். சமர்களை ஒருங்கிணைத்து சுத்யும்னர் அந்த பாழடைந்த நகரைக் கைப்பற்றிக்கொண்டார்”
கானபூதி சொன்ன கதையை குணாட்யர் காவியமாக எழுதினார் என்ற செய்தியை சபையில் குணதேவர் சொன்னபோது தன்னுள் ஒரு திடுக்கிடல் உருவானதை அக்னிபுத்ர சதகர்ணி உணர்ந்தார். அதை உடனே தவிர்த்து சபையில் எழுந்த விவாதத்தை நோக்கி உள்ளத்தை திருப்பினார். ஆனால் மாலையில் மீண்டும் கானபூதியின் நினைவு எழுந்து அவரை அலைக்கழித்தது.
அக்னிபுத்ர சதகர்ணியால் அதன்பின் காவியக்கல்விக்கு அமர முடியவில்லை. ஏடு எடுத்து படிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறை அதற்காக அமரும்போதும் நாய்களின் ஊளைதான் அவர் செவிகளில் ஒலித்தது. தன்னை செலுத்திக்கொண்டு அமர்ந்த போது அவர் உள்ளம் கல்போல அசைவற்று நின்றது. ஏடுகளை தூக்கிவீசிவிட்டு எழுந்து சென்றார். அவன் தூக்கமில்லாதவர் ஆனார். உணவும் குறைந்தது. உடல்மெலிந்து வெளிறி, கண்கள் சிவந்து பழுத்தன. மெல்லிய நடுக்கம் எப்போதும் அவர் உடலில் இருந்தது. எதையும் செவிகொடுத்துக் கேட்கவோ முடியவில்லை. எவரையும் நேருக்குநேர் பார்க்க இயலவில்லை.
அந்நாட்களில் நினைவழிய மது குடித்து பின்னிரவில்தான் தூங்குவார். ஒருநாள் அதிகாலையில் விழித்துக்கொண்டார். அரைத்தூக்கத்தில் நினைவுகள் குழம்பி ஓடிக்கொண்டிருந்தன. அப்போது அவர் ஓர் ஒலியைக் கேட்டான். நந்திதேவர் பாடிய பைசாசமொழிக் காவியத்தின் வரிதான் அது. ஆனால் அதை அவர் சம்ஸ்கிருத்தில் புரிந்துகொண்டார். மண்ணே அனைத்துக்கும் சாரம். விழித்தெழுந்தபோது அவர்ன் பதறிக்கொண்டிருந்தார். பித்தன்போல ‘பிருத்வி ஏவ சர்வஸ்ய சார’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தார்.
அன்றே அக்னிபுத்ர சதகர்ணி தன் இரண்டு மெய்க்காவலர்களை மட்டும் அழைத்துக்கொண்டு விந்தியமலைக் காடுகளுக்குள் சென்றார். மிகத்தொலைவில் பறவைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டு அத்திசை நோக்கி புதர்களை ஊடுருவியபடிச் சென்றார். செல்லும் வழியில் ஒன்றைக் கவனித்தார். தொலைவில் நெருப்பு எரிந்தது. ஆனால் அத்தனை பறவைகளும் அந்த திசைநோக்கியே சென்றுகொண்டிருந்தன.
“அக்னிபுத்ர சதகர்ணி அங்கே கண்டதைப் பற்றி அவனே எழுதிய காவியம் வர்ணிக்கிறது” என்று நான் உக்ரசிரவஸிடம் சொன்னேன். “செல்லும் வழியெல்லாம் விலங்குகள் இசையில் மயங்கி அமர்ந்திருந்தன. புலியும், மானும், ஓநாயும், முயல்களும் அருகருகே தங்களை மறந்து விழித்த கண்களுடன் உறைந்திருந்தன. மரங்களில் பாம்புகள் கொடிபோல அசையாமல் கிடந்தன. பறவைகள் மட்டும் ஓசையே இல்லாமல் வானத்தில் சுழன்று பறந்தன. காற்றில் அவை நீர்ச்சுழலில் மலர்கள் போல சுற்றிக்கொண்டிருந்தன”
அங்கே முதலில் சதகர்ணி ஒரு பெரிய தீக்குண்டத்தைத்தான் பார்த்தார். காட்டுவிறகுகளை அடுக்கி செய்யப்பட்ட சிதை அது. அதில் ஆளுயரத்திற்கு நெருப்பு எழுந்து திமிறிக் கொழுந்தாடிக்கொண்டிருந்தது. அதன் இருபுறமும் நந்திதேவனும் குணதேவனும் அமர்ந்து இலைகளில் எழுதப்பட்ட காவியத்தை உரக்க வாசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த மொழியின் ஓசை காட்டின் ஓசையாகவும் இருந்தது, தனித்தும் ஒலித்தது.
காட்டில் இருந்து எடுத்த ஓசைகளாலான மொழி அது.பறவைகளின் குரல்கள், விலங்குகளின் ஓசைகள், காற்றின் ஒலி என மட்டுமே தொட்டு எடுத்துத் தொடுத்து உருவாக்கப்பட்டது. ஒரு மாபெரும் குழந்தை காட்டை கேட்டு அதைப்போல தானும் பேசமுனைவதுபோன்ற மொழி. காடு சட்டென்று நாவு கொண்டு உரையாடத் தொடங்கிவிட்டது போன்ற மொழி.அந்த மொழியைக் கேட்டுத்தான் அத்தனை விலங்குகளும் அவ்வாறு சமைந்திருந்தன. ஒவ்வொரு உயிருக்கும் அவற்றின் மொழியில் அந்தப்பாடல் பொருள் அளித்தது. ஒவ்வொரு செவியிலும் புகுந்து உள்ளத்துடன் உரையாடியது.
ஓர் இலையிலுள்ள பாடலை வாசித்தபின் அதை அவர்கள் நெருப்பில் போடுவதை கவனித்ததும் அக்னிபுத்ர சதகர்ணி ஓடிச்சென்று அவர்களை தடுத்தார். “என்ன செய்கிறீர்கள்? நிறுத்துங்கள்! என்ன செய்கிறீர்கள் நீங்கள்” என்று கூச்சலிட்டார்.
“இது எங்கள் குருவின் ஆணை. நாங்கள் எந்நிலையிலும் மீறக்கூடாதது” என்றபின் கணதேவர் தன் கையில் இருந்த இறுதி இலையை தீயில் போட்டார்.
அது இறுதி இலை என்று தெரிந்ததும் சதகர்ணி பாய்ந்து மறுபக்கம் இருந்த நந்திதேவரின் கையை இறுகப்பிடித்துக்கொண்டார்.
“எங்கள் குருவின் ஆணை இது” என்று கண்ணீருடன் நந்திதேவர் சொன்னார்.
அப்போதுதான் அப்பால் மரக்கிளைகளால் கட்டப்பட்ட ஒரு சிறிய மேடைமேல் குணாட்யர் அமர்ந்திருப்பதை சதகர்ணி கண்டார். “ஆசிரியரே, என்னை மன்னியுங்கள்… என் தலையை உங்கள் கால்களில் வைக்கிறேன்…” என்று கூவினார். அதன்பிறகுதான் அவருக்குச் செவிகள் இல்லை என்று உணர்ந்து ஓடிச்சென்று அவரைத் தொட்டார்.
அவர் தொட்டதும் குணாட்யர் அந்த மேடைமேலிருந்து எம்பி தீயில் பாய்ந்தார். தீயில் அவர் உடல் விழுந்து, இரண்டு முறை எழுந்தடங்கி ,ஊன் பொசுங்கி எரியத் தொடங்கியது.
கையில் ஒற்றை இலையுடன் சதகர்ணி நடுங்கிபடி கண்ணீருடன் நின்றார். கணதேவன் மேலும் விறகுக் கட்டைகளை தீயில் போட்டபின் கூப்பிய கைகளுடன் தீயில் இறங்கினார். அதைத் தொடர்ந்து நந்திதேவரும் கைகூப்பியபடி தீயில் பாய்ந்தார்.
அந்த ஒற்றை இலையுடன் அக்னிபுத்ர சதகர்ணி பிரதிஷ்டானபுரிக்கு வந்தார். அந்த இலையை தங்கப்பலகையில் பதித்து அதை பொன் முகப்பட்டம் அணிந்த யானைமேல் ஏற்றி பிரதிஷ்டானபுரியின் தெருக்களில் வலம்வரச்செய்தார். பின்னர் அதை நகரில் குணாட்யருக்கு அவர் கட்டவிருந்த கோயிலில் அதை நிறுவினார். அது வழிபடு தெய்வமாக ஆகியது.
அந்த ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்யும் விழா ஏழுநாட்கள் கொண்டாடப்பட்டது. சதகர்ணி தன் பிழைக்கு பிராயச்சித்தமாக அந்த ஒரு வாரமும் உண்ணாநோன்பு இருந்தார். குணாட்யருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பதிலாக வாக்பிரதிஷ்டானத்தின் ஒவ்வொரு புலவரும் குணாட்யரின் பாதுகைகளை தங்கத்தில் செய்து தங்கள் தலையில் அணிந்துகொள்ளவேண்டும் என ஆணையிடப்பட்டது.
குணாட்யர் பிரதிஷ்டானபுரியின் குருவாக அறிவிக்கப்பட்டார். அவருடைய கோயில் வித்யாவிலாசம் என அழைக்கப்பட்டது. அவருடைய ஜன்மநட்சத்திரமான ஆஷாடமாதம் அமாவாசை நாள் பிரதிஷ்டானபுரியின் வித்யாரம்ப நாளாக ஆகியது. அன்று பிரதிஷ்டானபுரியின் குழந்தைகள் ஆசிரியர்களிடமிருந்து முதல் எழுத்தை எழுதின.
விந்தியமலையின் காட்டில் இருந்தபோது தன்மேல் விசித்திரமான பார்வையுணர்வு இருந்துகொண்டிருப்பதை அக்னிபுத்ர சதகர்ணி உணர்ந்துகொண்டிருந்தார். மிகக்கூர்மையான வாள் ஒன்று மிகமெல்ல தொட்டுக்கொண்டிருப்பதைப் போல. அரண்மனைக்குத் திரும்பியபோது தன்னுடன் எவரோ இருப்பதை அவர் உணர்ந்தார். மிக அருகே, நீங்கவே நீங்காமல் இருந்தனர். சிலசமயம் இருவர், சிலசமயம் பலர். ஒருமுறை விளக்கருகே நின்று ஒரு சுவடியை எடுத்தபடி திரும்பும்போது கூடுதலாக நிழல்கள் விழுந்திருப்பதைக் கண்டார். அவர் அதைக் கண்டதுமே அவை மறைந்தன
பின்னர் அவர் நிழல்களை கவனிக்கத் தொடங்கினார். அவை இயல்பான நிழல்கள்தான் என்று அவரே சொல்லிக்கொண்டாலும்கூட பார்க்கும்தோறும் அவை வேறு என தெரிந்தன. அவர்மேல் விழும் ஒளிக்கும் அவற்றுக்கும் தொடர்பிருக்கவில்லை. அவருடைய அசைவுகள் அவற்றில் வெளிப்படவில்லை. நிழல்களை அவர் வேவுபார்த்துக்கொண்டே இருந்தார். சட்டென்று திரும்பி ஒருமுறை நிழலை நேருக்குநேர் பார்த்துவிட்டார்.
“நான்தான்” என்றது நிழல். ”உன்னுடன் இருந்துகொண்டிருக்கிறேன்”
“நீ யார்?”
”உன்னை கானபூதி பார்த்துக்கொண்டிருந்தபோது நானும் உன்னைப் பார்த்தேன்… நாங்கள் உன்னுடன் வந்தோம்”
“எதற்காக?”
”நிழல்களை உனக்குக் காட்டுவதற்காக… நிழல்களையும் சேர்த்தே பொருட்களைப் பார்ப்பவன்தான் உண்மையை உணர்கிறான்” என்றது நிழல். “என் பெயர் உத்திஷ்டன்… என்னுடன் இருப்பவன் பிரபாவன்… இன்னும் சிலர் இங்கே இருக்கிறார்கள்”
சதகர்ணி அதை நோக்கிப் புன்னகைத்து “உன் கண்கள் அழகாக இருக்கின்றன, இளம் முயலின் கண்களைப்போல” என்று சொன்னான். நிழல்கள் சிரித்தபடி அவன் மேல் தொற்றிக்கொண்டன.
”மேலும் நாநூறாண்டுகள் குணாட்யரின் ஆலயமும் அந்த இலையும் அங்கே இருந்தன” என்று நான் உக்ரசிரவஸிடம் சொன்னேன். “சாதவாகனர்களின் நாணயங்களில் அந்த இலை இடம்பெற்றது. அக்னிபுத்ரசதகர்ணியும் அவன் வழிவந்தவர்களும் கட்டிய புத்தபீடிகைகளில் எல்லாம் அந்த இலையின் சிலை இருந்தது. காலப்போக்கில் அந்த இலையும் போதிமரத்தின் இலையும் ஒன்றாக ஆயின.”
“குணாட்யரின் கதையை பிரதிஷ்டானபுரியின் கவிஞர்கள் குறுங்காவியங்களாகவும் நாடகங்களாகவும் எழுதினார்கள். தூமகேசரின் ‘பிருஹத்கதாவிலாஸம்’ பஞ்சசூடரின் “கதாசாகரப்பிரபாவம்’ தேவமித்ரரின் ‘காவ்யோதயம்’ தால்ஃப்யரின் ‘குணாட்யதிக்விஜயம்’ ஆகிய நூல்கள் பல நூறாண்டுகளுக்கு பயிலப்பட்டன.” என்று நான் தொடர்ந்தேன்.
“குணாட்யரின் மாபெரும் காவியத்திலுள்ள கதைகள் ஆங்காங்கே எவரெவர் நாவிலிருந்தோ தோன்றின. கரும்பாறையில் இருந்து ஊற்று எழுவதுபோல மறைந்த மகாகவிஞனின் சொற்கள் வந்துகொண்டே இருந்தன. சிலசமயம் அவை நிழல்களால் ஆட்கொள்ளப்பட்ட பெண்களில் பிறந்தன. பாட்டில் பித்தேறிய பாணர்களிடம் அவர்களை மீறி நிகழ்ந்தன. நூலறியாதவர்களின் கனவுகளில்கூட அவை திரண்டு வந்தன. அழகிய குழந்தைக் கண்களும் வெண்ணிறப் பால்பற்களும் கொண்ட ஒரு கரிய பிசாசு அக்கதைகளை தங்களிடம் சொன்னதாகச் சொல்லி குழந்தைகள்கூட புதிய கதைகளைச் சொன்னார்கள்”
“பின்னர் க்ஷேமெந்திரர் பிருஹத்கதா மஞ்சரி என்னும் நூலாக அக்கதைகளைத் தொகுத்தார்.குப்தகர் ‘கதா தரங்கமாலிகா’ என்ற பேரிலும், சோமதேவர் ‘கதாசரிதசாகரம்’ என்ற பேரிலும் அக்கதைகளை தொகுத்தனர். சாதவாகனப் பேரரசு மறைந்தது. புதிய பேரரசுகள் வந்து சென்றன. ஆனால் குணாட்யரின் மறைந்த நூலில் இருந்து கதைகள் வெளிவந்து காவியங்களாகிக்கொண்டே இருந்தன.”
என் சொற்களைக் கேட்டு உக்ரசிரவஸ் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
“இந்தக் கதையில் இருந்தும் இரண்டு கேள்விகள்” என்று நான் சொன்னேன். ”முதல் மூன்று பெருங்காவியங்களில் வால்மீகியும் வியாசரும் இயற்றியவை நிலைகொண்டபோது குணாட்யரின் காவியம் மட்டும் ஏன் அழிந்தது?”
உக்ரசிரவஸ் என்னை நிமிர்ந்து நோக்கினார், சிந்திப்பவர் போல அவருடைய கண்கள் மங்கலடைந்தன.
“குணாட்யர் ஏன் தன் காவியத்தை எரித்தழித்தார்?” என்று நான் சொன்னேன். “இரண்டாவது கேள்வி அதுதான். நினைவிருக்கட்டும், கதை கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாதவர்களை தண்டிப்பது என் வழக்கம்”
உக்ரசிரவஸ் “அது பைசாசிகமொழியில் அமைந்திருந்தமையால் என்று தோன்றுகிறது. ஆனால் அது சரியல்ல, எந்த காவியமும் ஒரே ஒருவர் செவியைச் சென்றடைந்திருந்தால்கூட அது வாழவேண்டும் என்றால் வாழ்ந்திருக்கும்” என்றார். “வால்மீகியும் வியாசரும் க்ஷத்ரியர்களின் வெற்றியைப் பாடினார்கள் என்பதனாலா? இல்லை, அவ்வாறல்ல. அவை தங்கள் முதல்வடிவில் க்ஷத்ரிய வெற்றியைச் சொல்பவை அல்ல. வியாசகாவியம் க்ஷத்ரியர்களின் அழிவைச் சொல்லும் நூல்”
அவர் தன் தலையை வருடியபடி யோசித்தார். “அவையிரண்டும் வேதமரபுக்கு உகந்தவை என்பதனாலா? அப்படித்தான் தோன்றியது. ஆனால் சொல்லத் தொடங்கியதும் அவ்வெண்ணம் பிழை எனத் தோன்றுகிறது. வேதமரபு என்பது அனைத்தும் திரண்டு உருவாகியது, ஆகவே அனைத்தும் அடங்கியது, ஆகவே அனைத்துக்கும் இடமளிப்பது…” பின்னர் தலையை அசைத்து “தெரியவில்லை. ஒருவேளை இதற்கெல்லாம் பதிலே இல்லாமல் இருக்கலாம். வெறும் தற்செயலாக இருக்கலாம்”
“கதையில் எல்லாவற்றுக்கும் பதில் உண்டு. எதுவும் தற்செயல் அல்ல”
“எனக்குத் தெரியவில்லை” என்று உக்ரசிரவஸ் சொன்னார்.
“இரண்டாவது கேள்விக்கு என்ன பதில்?” என்றேன்.
“அவர் உளம்சோர்ந்திருக்கலாம்… அவையில் நிகழ்ந்த நிராகரிப்பிற்கு பழிவாங்க எண்ணியிருக்கலாம்… அல்லது அந்நூல் பயனற்றது என்றே எண்ணியிருக்கலாம்” என்றார் உக்ரசிரவஸ்.
“ஏழு லட்சம் பாடல்களை எழுதியவர் தன் நூலின் மதிப்பு என்ன என்று உணராமலிருப்பாரா?”என்று நான் கேட்டேன். “அவையில் சிறுமை நிகழ்ந்ததுதான் காரணம் என்றால் அவர் ஏன் தன் நூலைப் பழிவாங்கவேண்டும்? தன் மூன்று புலன்களையும் தானே ஒறுத்துக்கொண்டவர் மேலும் அடையும் சோர்வு என ஒன்று உண்டா என்ன?”
உக்ரசிரவஸ் “இதற்கும் எனக்கு பதில் தெரியவில்லை. உண்மையில் ஒன்றுக்குப் பதில் சொன்னால் இன்னொன்றுக்குப் பதில் சொல்லிவிடலாம்” என்றார். “என்னால் சொல்ல முடியவில்லை…நான் தோற்றுவிட்டேன்”
“குணாட்யரின் காவியம் அழிந்தது என்பது பிழை. அதில் எஞ்சியது ஓர் இலை, அது ஒரு விக்ரகம்” என்று நான் சொன்னேன். “எந்தக் காவியமும் ஒரு விக்ரகத்தையே அறுதியாக எஞ்சவிடுகிறது. ராமன் அல்லது கிருஷ்ணன். அந்த விக்ரகத்திற்குப் பொருள் அளிப்பதற்கே சொற்கள் தேவைப்படுகின்றன. கிடைக்கும் சொற்களைவிட கிடைக்காத சொற்கள் மேலும் வலுவாக அந்த விக்ரகத்தை நிறுவும்”
உக்ரசிரவஸ் மெல்லிய நடுக்கம் கொண்ட தலையுடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஆகவேதான் குணாட்யர் தன் காவியத்தை எரித்தார். வரும் தலைமுறைகள் அதை தங்கள் கற்பனைகள் வழியாக வந்தடையட்டும் என்று முடிவுசெய்தார்” என்று நான் சொன்னேன்.
உக்ரசிரவஸ் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தார்.
“என் கதையாட்டத்தில் நீ தோற்றுவிட்டாய். ஆகவே உன்னை நான் தண்டிக்கிறேன்” என்றேன். “நீ இங்கிருந்து கிளம்பியதும் இந்தக் காட்டின் இலைகளெல்லாம் நாக்குகளாகி உன்னைச் சூழ்ந்துகொள்ளும். நீ சொன்னவையும் விட்டவையும் பிறர் திரித்தவையும் மறந்தவையுமான எல்லா கதைகளும் உன்னைச் சுற்றி ஒலிக்கும். கதைகளின் காட்டில் வழிதவறி அலைவாய்”
“எத்தனை காலம்?” என்றார் உக்ரசிரவஸ்.
“கதைகள் முடிவதுவரை” என்றேன். பின்னர் புன்னகைத்து “ஆனால் கதைகள் முடிவிலிவரை நீள்பவை” என்றேன். “நீ இனி சிரஞ்சீவி”
”நன்றி” என்று உக்ரசிரவஸ் எழுந்துகொண்டார். “நான் உணர்ந்த முடிவிலா வெறுமை ஒன்றை உன் பதில்கள் நிரப்பி என் அகத்தை ஒளியூட்டின. மீண்டும் கதைகளை முழுமூச்சாக நம்பவைத்தன. கதைகளின் முடிவிலியில் வாழ்வதுதான் என் நிறைவு…” எழுந்து என்னை வணங்கிவிட்டு தழைத்த பசுங்காட்டினூடாக நடந்து மறைந்தார்.
”என் இந்தக் கதைமரத்தின் கீழ் வந்து அமர்ந்து சென்றவர்கள் பல்லாயிரம்பேர். என்னைப்போலவே அழிவற்றவர்கள் நால்வர்தான். தனிமையால் வால்மீகி, பெருகிக்கொண்டே இருப்பதனால் வியாசர், பகிர்ந்துகொள்ளப்படுவதனால் உக்ரசிரவஸ், தேடப்படுவதனால் குணாட்யர்” என்று கானபூதி என்னிடம் சொன்னது. “நீ அவர்களின் தொடர்ச்சி. ஒவ்வொருவரில் இருந்தும் ஒன்று தொடர்ந்து இன்னொருவராகிறது. வால்மீகியின் பெருகும் விழைவே வியாசர். வியாசரின் பகிரும் துடிப்பே உக்ரசிரவஸ். மறைந்திருப்பதற்கான உக்ரசிரவஸின் விருப்பமே குணாட்யர்.”
கானபூதி என்னிடம் கேட்டது. “இந்தக் கதையின் வினா இது. சொல், குணாட்யரின் எந்த விழைவு நீ எனத் திரண்டு இங்கே வந்தது?”
நான் திகைத்தவனாக அமர்ந்திருந்தேன். அதுவரை நான் கேட்ட குணாட்யரின் கதைகள் அனைத்தும் என்னுள் பெருக்கெடுத்து ஓடின.
“உன் இல்லம் இருந்த இடத்தில்தான் அவருடைய அன்னை அவரைப் பெற்றாள். உன் தாயுடன் நீ நீராடிய அதே இடத்தில்தான் தமி தன் மகனை நீர்ப்பெருக்கில் விட்டுவிட்டு மறைந்தாள். நீ சென்று அமரும் அதே நாககட்டத்தில்தான் அவரை சோமசர்மர் கண்டடைந்தார். நீ உன் கல்விகற்ற பள்ளி இருந்த இடத்தில் இருந்தது பிரதிஷ்டானபுரியின் வாக்பிரதிஷ்டானம் என்னும் சபை. நீ உன் முதற்சொல்லைக் கண்டடைந்த அதே வெற்றித்தூணுக்கு அடியில்தான் அவருடைய முன்னோரின் ரத்தம் விழுந்தது” என்றது கானபூதி. “உன் வழியாக அவர் மீண்டும் தன்னை நிகழ்த்திக்கொண்டார். நீயும் அதை உணர்ந்திருப்பாய்”
“ஆமாம், நான் அனைத்தையுமே இரண்டாம் முறையாகச் செய்வதுபோல உணர்ந்திருந்தேன்” என்று நான் சொன்னேன். “என் மூன்று புலன்களும் அணைந்தபோதுகூட அது எப்படி இருக்கும் என்று நன்றாகவே அறிந்திருந்தேன். அதைப்பற்றி எண்ணி ஆச்சரியமும் கொண்டேன்”
“சொல், அவரிடம் எஞ்சிய எந்த ஆசையின் நீட்சி நீ?”
“தெரியவில்லை… என்னால் அதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை” என்று நான் சொன்னேன். சட்டென்று உடைந்து, “அந்தப் பெரும் பொறுப்பை என்னால் ஏற்க முடியாது. நான் மிக எளியவன்… மிகச்சிறிய குரோதங்களால் அலைக்கழிக்கப்படுபவன். இப்போதுகூட என்னால் விடுபட முடியவில்லை. இப்போதுகூட ராதிகா ராதிகா என்றே என் மனம் அரற்றுகிறது” என்று சொல்லி தலையில் அறைந்துகொண்டு அழுதேன்.
கானபூதி “கதையின் கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் தண்டனை உண்டு” என்றது.
“நீ என்மேல் சாபமிடலாம். உக்ரசிரவஸுக்கு அளித்ததுபோன்ற ஒரு சாபத்தை எனக்குக் கொடு. நான் கோடிகோடி நச்சுமுட்கள் கொண்ட ஒரு காட்டில் அலைகிறேன். அவற்றின் கூர்முனைகள் என்னை குத்திக் கிழிக்கட்டும். அவற்றின் நஞ்சு என்னை வதைக்கட்டும். ஒவ்வொரு முள்ளும் அவள் பெயராக இருக்கவேண்டும். முடிவிலாக் காலம் வரை… அதைநான் என் வரமாக உன்னிடம் கேட்பேன். முடிவிலாக்காலம் வரை ஒவ்வொரு கணமும் நான் குத்திக்கிழிக்கப்பட்டால்தான் அவளுக்கான என் கடன் நிறைவடையும்” என்று நான் அழுதேன்.
கானபூதி என் தோளை மெல்லத் தொட்டது. “நீ என் அன்புக்குரிய குழந்தை” என்று என் மோவாயை தொட்டு தூக்கி என் கண்ணீரைத் துடைத்தது. “நீ என் செல்லம், என் கண்மணி நீ…” என்று என்னை அணைத்து நெஞ்சில் சாய்த்துக்கொண்டு முத்தமிட்டது. அப்போது அது பெண்ணாக இருந்தது.
நான் அதன் மடியில் சாய்ந்துகொண்டு முகம்புதைத்து குமுறி அழுதேன். “அத்தனை சொற்களும் என் அழலை அணைக்கவில்லையே… ஒரு கணம்கூட என் அகம் அமைதி அடையவில்லையே… அவளை கடந்து ஒரு அடிகூட என் அகத்தால் எடுத்து வைக்க முடியவில்லையே” என்று கதறினேன்.
என் தலைமயிரில் அதன் மென்மையான கைகள் அளைந்தன. என் காதருகே குனிந்து கானபூதி சொன்னது. “என் கண்மணிக்கு, என் குழந்தைக்கு நான் இன்னும் ஒரு கதை சொல்கிறேன். இன்னும் ஒரு கதை”
“வேண்டாம், எனக்கு கதைகளால் எந்த பயனும் இல்லை” என்று நான் சொன்னேன்.
“என்னால் கதை மட்டும்தானே சொல்லமுடியும்? நான் உனக்காக அதையாவது செய்யக்கூடாதா?” என்று கானபூதி கேட்டது.
“சொல்” என்றபின் நான் என் முகத்தை அதன் மடியில் மீண்டும் புதைத்துக்கொண்டேன். என் தலைமயிரை வருடியபடி கானபூதி சொல்லத் தொடங்கியது.
(மேலும்)
The roots of depression
மாணவரிடம் சரியான கேள்விகளை கேட்க வைப்பது என்பது மிக முக்கியம் ஆசிரியர்களுக்கு அது பெரிய சவாலும் கூட. அவர்கள் இந்தக் கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். வகுப்பறைகளில் குழந்தைகள் கேள்வி கேட்காமல் இருக்கும் பொழுது அவர்கள் சரியான தகவல்களை அறிய முடியாமல் போகிறது
கேள்வி கேட்கும் கலை.
In your speech about writing fiction, you mentioned a curious thing: that the energy inside us is deposited as unused and the words within us are unexpressed, causing depression. As a psychologist, I want to confirm this is a very practical fact we are witnessing around us.
Unused mental energy and depressionஐரோப்பிய இசை,வாக்னர்- ஓர் அறிமுகப்பயிற்சி
ஐரோப்பியப் பண்பாட்டின் உச்சப்புள்ளி என்பது ஓப்பராதான் என்று டி.எஸ்.எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார் (The decline of music hall). ஏனென்றால் செவ்வியல் இசை, செவ்வியல் நாடகம்,ஓவியம் ஆகியவை செவ்விலக்கியத்துடன் இணையும் புள்ளி அதுவே. ஓப்பரா இன்றும்கூட ஐரோப்பாவில் முதன்மைக்கலையாகவே உள்ளது. The lion king போன்ற நவீன ஓப்பராக்களும் உருவாகின்றன. ஓப்பராவின் இன்னொரு வடிவம் நவீன இசைநாடகம்.
ஓப்பராவிலேயே மேலையிசையின் உச்சகட்ட சாத்தியங்கள் நிகழ்ந்துள்ளன. ஐரோப்பிய இசையின் முதன்மை ஆளுமை ரிச்சர்ட் வாக்னர். அவருடைய ஓப்பராக்கள்தான் இலக்கியவடிவமான காவியம் மாபெரும் இசைக்கோலங்களாக வெளிப்பட்ட கலைப்பெருநிகழ்வுகள். ஓப்பராவை விட எளிமையான வடிவமே சிம்பனி என்பது.
அஜிதன் ஏற்கனவே சிம்பனி இசை மேதையான பீத்தோவனை அறிமுகம் செய்து இரண்டு வகுப்புகளை நடத்தியிருக்கிறார். பல இளைஞர்களும் கோரியதற்கிணங்க வாக்னரின் ஓப்பராக்களைப் பற்றிய அறிமுக வகுப்பு ஒன்றை நடத்தவிருக்கிறார்.
ஓப்பரா போன்ற கலைவடிவை எளிதாக அறிமுகம் செய்துகொள்ள முடியாது. அதன் இலக்கியப்பின்புலம், பண்பாட்டுப்பின்புலம் ஆகியவற்றுடன் அவ்விசையை கேட்டு உணரவேண்டும்.இந்த வகுப்பில் ஓப்பராவின் தத்துவம், இலக்கியம் ஆகியவற்றுடன் இசையமைப்பையும் அறிமுகம் செய்து ஒரு தொடக்கத்தை அஜிதன் அளிக்கிறார்.
நாள் ஜூலை 25, 26 மற்றும் 27
ஜூலை 10 ஆம் தேதி குருபூர்ணிமா (வியாசபூர்ணிமா) நித்யவனத்தில் கொண்டாடப்படுகிறது. வெண்முரசு – மகாபாரத நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. குரு.சௌந்தர் முன்னின்று நடத்துவார். யோகப்பயிற்சிக்கு வருபவர்கள் ஒருநாள் முன்னதாக வந்தால் அந்நிகழ்விலும் கலந்துகொள்ளலாம்.
இலக்கிய விவாதங்கள், கலந்துரையாடல், கலைநிகழ்ச்சிகளுடன் ஒரு நாள் மாலை நிகழ்வாக நடைபெறும்.
குருபூர்ணிமா நிகழ்வில் மட்டும் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தனியாக எழுதலாம்.
தொடர்புக்கு programsvishnupuram@gmail.comநிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய தத்துவம் – சூபி மரபு பற்றிய வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன. ஏற்கனவே நிகழ்ந்த இவ்வகுப்புகள் முற்றிலும் புதிய ஓர் ஆன்மிக உலகைத் திறந்தன என்று பங்கேற்றவர்கள் கூறினார்கள்.
இரண்டு வகைகளில் இந்த வகுப்புகள் முக்கியமானவை. இவை இந்தியப்பண்பாட்டை முழுமையாக உணர்வதற்கு இன்றியமையாதவை. கலை இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் கற்றே ஆகவேண்டிய வரலாற்று- ஞானப் பரப்பு இது. இஸ்லாமின் மெய்யியல், சூஃபிகள் இந்தியாவில் அதை நிலைநிறுத்திய வரலாறு, சூபி மரபின் உள்ளடக்கம் ஆகியவற்றை அறியாமல் ஒருவர் இந்திய இலக்கியம், இந்தியக் கலை, இந்திய இசை ஆகியவற்றை அறிந்தார் என்று சொல்ல முடியாது.
சென்ற ஆயிரமாண்டுகளாக இஸ்லாமின் ஆன்மிகமரபும் சூஃபி மெய்யியலும் இந்தியாவின் எல்லா மெய்ஞான மரபுகளிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் நாராயண குரு வரை பிற மரபுகளைச் சேர்ந்த ஞானிகள் கூட அதன் ஒளியை பெற்றுக்கொண்டவர்கள். இந்திய மெய்ஞான மரபின் சாரத்தை அகத்தே உணரவிரும்புபவர்களுக்கு அவசியமான வகுப்புகள் இவை.
நாள் ஜூலை4,5 மற்றும் 6
யோகப்பயிற்சி.தொடக்கநிலை.பிகார் சத்யானந்த குருமரபின் முதன்மை ஆசிரியர் என றிவிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் குரு. சௌந்தர். இருபதாண்டுகளுக்கும் மேலாக சௌந்தரின் யோகப்பயிற்சிகள் இந்தியாவிலும், இலங்கை மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் நடந்து வருகிறன. ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை என்று கருதும் பயிற்சிகள் அவை.
அன்றாடவாழ்க்கையில் கவனக்குறைவு, பொறுமையின்மை, பதற்றம் போன்ற அகப்பிரச்ச்னைகளுக்கும்; முதுகுவலி, கழுத்துவலி, உடல்சோர்வு போன்ற பலவகையான புறப்பிரச்சினைகளுக்கும் ஒருங்கிணைந்த தீர்வாக அமைவது முறையான யோகப்பயிற்சி. யோக ஆசிரியர் யோகமுறைகளைப் பயிற்றுநர் என்பதுடன் வாழ்க்கை முழுக்க துணைவராக நம்மைக் கண்காணித்து, உடன் வருபவராகவும் அமையவேண்டும். சௌந்தர் அத்தகைய ஆசிரியர்.
நான்காண்டுகளாக நிகழும் இந்த வகுப்புகளில் ஏற்கனவே ஐநூறு பேருக்குமேல் முழுமையறிவு வகுப்புகள் வழியாக சௌந்தரிடம் பயின்றுள்ளனர்.
நாள் ஜூலை 11, 12, 13
ஜெயக்குமார் நடத்திய கர்நாடக இசை அறிமுகப் பயிற்சி வகுப்பு பங்கேற்றவர்களுக்கு ஒரு பெரிய தொடக்கமாக அமைந்தது என்று எதிர்வினைகள் வந்தன. மீண்டும் அவ்வகுப்பு நிகழவிருக்கிறது
நம்மில் பலருக்கும் கர்நாடக இசையை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் உண்டு. ஆனால் நம்மால் அதை அறிந்துகொள்ள முடியுமா என்னும் சந்தேகமும் இருக்கும். அது மிகச்சிக்கலானது என்ற பிரமையும் உண்டு. உண்மையில் மரபிசையை ரசிக்க ஒரு நல்ல தொடக்கம் அமைந்தாலே போதுமானது. அதற்கு மூன்றுநாட்கள் நடக்கும் 16 மணிநேரப் பயிற்சி வகுப்பு மிக உதவியானது.
இந்தப் பயிற்சி வகுப்பில் கர்நாடக இசையின் முதன்மை ராகங்களின் ஒரு அறிமுகம் நிகழும். அதை நினைவில் நிறுத்த உதவும் கீர்த்தனைகளும், சினிமாப்பாடல்களும் கேட்கச்செய்யப்படும். இசை கேட்பதற்கான அந்த தொடக்கம் நிகழ்ந்தால் நம்மையறியாமலேயே நாம் பாடல்களை கவனிக்கத் தொடங்கிவிடுவோம். மரபிசையின் மாபெரும் உலகுக்குள் நுழைவதற்கான வாசல் அது.
நாள் ஜூலை 18 ,19 மற்றும் 20 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
இசைநாட்கள் மாயாமாளவகௌளை எனும் மாயக்கரம்வரவிருக்கும் நிகழ்வுகள்தியானம் – உளக்குவிப்பு பயிற்சி முதல் நிலை
தில்லை செந்தில்பிரபு நடத்திவரும் தியானம் மற்றும் உளக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலைப் பயிற்சி முடித்துள்ளனர். இரண்டாம்நிலைப் பயிற்சி வகுப்பும் நிகழ்ந்துள்ளது.
இன்றைய சூழலில் உள்ளத்தைக் குவித்து செயலை ஆற்றுவதென்பதே மிகப்பெரிய சவால். கல்வியிலானாலும் தொழிலில் ஆனாலும். செயற்கையாக உள்ளத்தை தீவிரமாக்கிக்கொண்டால் அதன் விளைவாக உளச்சோர்வு உருவாவது இன்னொரு சிக்கல்.
இன்றைய வாழ்க்கை நம் அட்ரினல் சுரப்பியை சீண்டிக்கொண்டே இருக்கிறது. ஒரு விலங்கு அபாயத்தில் இருக்கையில் அதன் உடலில் முழு ஆற்றலும் வெளிப்படவேண்டும். அதன் உடலின் உணவு முழுமையாக எரிக்கப்பட்டு, தசைகள் முற்றாகச் செயலாற்றவேண்டும். அட்ரினல் அப்பணியைச் செய்கிறது. ஆனால் நாம் இன்று உருவாக்கிக்கொண்டிருக்கும் பதற்றம், பரபரப்பு கொண்ட வாழ்க்கையில் நாம் நிரந்தரமாகவே சிங்கத்தால் துரத்தப்படும் மான் போல் இருக்கிறோம். நாம் பொழுதுபோக்கு என நினைக்கும் கேளிக்கைகள், சமூகஊடகங்கள் ஆகியவையும் நம் அட்ரினலைத் தூண்டுவனதான். அதுவே நம்மை கவனமின்மை மற்றும் உளச்சோர்வுக்குக் கொண்டுசெல்கிறது. செரிமானமின்மை, தூக்கமின்மை முதல் சோரியாஸிஸ் வரையிலான நோய்களுக்கும் காரணமாகிறது.
யோக முறைகள், தியானங்கள் நாமே நம் உடலின் சுரப்பிகளை அமைதிப்படுத்தும் பயிற்சிகள்தான். நம் உள்ளத்தை நாமே மெல்ல அடங்கச் செய்து உடலை ஆறவைக்கிறோம். அவை மிகப்பயனுள்ளவை என்பதனால்தான் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பரவியுள்ளன. உலகிலேயே மிக அதிகமானபேர் யோக – தியானப்பயிற்சிகளைச் செய்யும் நாடுகள் ஐரோப்பா- அமெரிக்காதான்.
தில்லை செந்தில்பிரபு பயிற்றுவிக்கும் தியானமுறை இன்றைய காலகட்டத்திற்காக வரையறை செய்யப்பட்ட ஒன்று. உலகமெங்கும் செல்வாக்குடன் இருப்பது.
நாள் ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
June 28, 2025
சைதன்யா உரையாடல் இன்று
அன்பு ஜெ
சைதன்யா நிகழ்வு தொழில்நுட்ப காரணங்களால் இன்று மாலை நிகழவில்லை. ஞாயிறு காலை 10a.m முதல் 12pm வரை நிகழ்வு நிகழும்.
நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். எழுபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் நாளை காலை மீண்டும் அழைக்கிறோம்.
நாளைக்கான சகூடுகை சுட்டி:
https://us02web.zoom.us/j/81824287154?pwd=VlVEOEpZNFUrMFUwWlAzMS8yeGdJdz09
Meeting ID: 818 2428 7154
நன்றி
ரம்யா
புத்தகக் குழுமங்கள்- குழந்தைகளுக்கான மீட்பியக்கம்.
எண்பதுகளில் நூல்குழுமம் (Book club) எனும் அமைப்பு சர்வதேச அளவில் மிகப்புகழ் பெற்றிருந்தது. கேரளத்தில் எல்லா நூலகங்களிலும், நூல்விற்பனையகங்களிலும் அவை நடைபெற்றன. ருஷ்ய கலாச்சார மையம் போன்ற அமைப்புகளும் நூல்குழுமங்களை நடத்தின.
ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்களைப் படிக்கும் வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை ஒருவருடன் ஒருவர் பகிர்வதற்காக உருவாக்கிக்கொண்ட சிறிய கூடுகைகள் ‘புக் கிளப்’ எனப்பட்டன. உதாரணமாக மிகத்தொன்மையான நூல்குழுமம் என்பது உலகெங்கும் கிடைத்து வந்துகொண்டிருந்த தொல்லியல் தடயங்களை ஒருவரோடொருவர் விவாதித்து பரிசீலித்து புரிந்துகொள்ளும் பொருட்டு லண்டனில் உருவாக்கப்பட்ட ராயல் ஆர்கியாலஜிகல் கிளப் என்பது. பின்னர் அதுதான் இன்று உலகமெங்கும் கிளைவிரித்து மாபெரும் அறிவியக்கமாக நின்றிருக்கும் ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியாக மாறியது. இவ்வாறு தாவரவியல், சிற்பவியல், மொழியியல் என பல்வேறு துறைகளுக்கு புக் கிளப்கள் உருவாயின.
ஆனால் சென்ற இருபதாண்டுகளாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குழந்தைகளுக்கான நூல்குழுமம் என்பது ஒரு புதிய கருத்துருவமாக மீண்டும் உருவாகி வந்துகொண்டிருக்கிறது. பெற்றோர் குழந்தைகளை அந்த புத்தகக் குழுக்களுக்கு அழைத்துக்கொண்டு சென்று இளமையிலேயே குழந்தைகளை புத்தக உலகுக்குள் அறிமுகம் செய்கிறார்கள். அங்கே குழந்தைகள் எழுந்து பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
குழந்தைகளை புத்தக வாசிப்பிலிருந்து விலக்கி நவீன மின்னணு சூதாட்டங்களுக்கும், சமூக வலைத்தள ஊடாட்டங்களுக்கும் பழக்கப்படுத்தும் ஒரு பெரும் சூழல் நம்மைச்சுற்றி உருவாகி வந்திருக்கிறது. பலகோடி ரூபாய் முதலீடு கொண்ட மாபெரும் வணிகம் அது. குழந்தைகளை உள்ளே இழுத்து வெளியேற முடியாமல் வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்ட செயலிகள் அவை. தொடர்பியல், ஊடகவியல் நிபுணர்களால் அவை உருவாக்கப்படுகின்றன. அவை குழந்தைகளை இழுத்து மாபெரும் சராசரிகளாக ஆக்கிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை வெல்வது எளிதல்ல. சூழலில் இருந்து அவை குழந்தைகளை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன, ஆகவே குழந்தைகளை அவற்றிலிருந்து விலக்குவதும், அவற்றை நோக்கிச் சென்றுவிட்ட குழந்தைகளை தடுப்பதும் இயலவே இயலாதது. அவற்றுக்கு இணையான மாற்று உலகம் ஒன்றை குழந்தைக்கு அளிப்பதே ஒரே வழி. அவ்வாறுதான் நூல்குழுமங்கள் மீண்டும் உருவாகி வந்துள்ளன.
இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலகட்டத்தில் சராசரி வேலைகளை எல்லாம் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்னும்போது ஒரு சராசரி அறிவை அடையும் ஒருவர் தன்னைப் பயனற்றவர் ஆக்கிக்கொள்கிறார் என்றுதான் பொருள். ஒருவருக்கான தனித்திறன் என்ன, அவர் மட்டுமே செய்யும் பணி என்ன என்பதுதான் இன்றைய முதன்மைக்கேள்வியாக இருக்கிறது. அந்த தகுதியை அடையவேண்டும் என்றால் ஒருவ அனைவரும் ஈடுபடும் எதிலும் ஈடுபடாமல் இருப்பதுதான் ஒரே வழி. சமூக வலைத்தளங்கள் வழியாகவோ, நவீன மின்னணு துறை வழியாகவோ ஒருவர் தன் தனித்திறனை அடையவே முடியாது. ஏனெனில் அவை பலகோடி பேருக்காக உருவாக்கப்பட்டவை. பலகோடி ரூபாய் முதலீடு கொண்டவை.
தனித்திறன் என்பது தனக்கான துறையை கண்டடைதல், அதில் தனக்கான சிந்தனைமுறையை உருவாக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் வழியாகத்தான் உருவாகும். தனக்கான ஓர் உலகை புத்தக வாசிப்பின் வழியாகவே ஒரு குழந்தை கண்டடைய முடியும். ஆனால் இன்றைய சூழல் புத்தக வாசிப்புக்கு முற்றிலும் எதிராக இருக்கும்போது அவர்களை புத்தக வாசிப்பில் எப்படி கொண்டு செல்வது, எப்படி அதற்குள் செயல்படவைப்பது என்பது உலகமெங்கும் எழுந்துள்ள வினா. அதற்காகவே அறிவை வழிபடும் நாடுகளில் பெற்றோரும் கல்வியியலாளர்களும் முட்டிமோதுகிறார்கள்.
பெற்றோர் கொடுக்கும் அழுத்தத்தால் எந்தக் குழந்தையும் படிப்பதில்லை. பெற்றோரின் முன்னுதாரணத்தால் மட்டுமே குழந்தை படிக்க முடியும். அப்போது கூட அதன் சூழல் அதை வெளியே இழுத்துக்கொண்டே இருக்கும். குழந்தையின் சராசரி நண்பர் வட்டம் புத்தகத்திலிருந்து விலக்கி அவர்கள் ஈடுபடும் சராசரி செயல்களை நோக்கி அக்குழந்தையை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருக்கும். கேலி, கிண்டல் வழியாகவும் விமர்சனம் வழியாகவும் கூட்டு அழுத்தம் வழியாகவும் நூல்களைப் படிக்கும் குழந்தையை நூல்களைப் படிக்காத குழந்தை சமூகவலைத்தள உலகம், மின்னணுவிளையாட்டு உலகம் நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும்.
அதிலிருந்து வாசிக்கும் குழந்தைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக அக்குழந்தைகளை அதே ரசனை கொண்ட பிற குழந்தைகள் அடங்கிய ஒரு வாசிப்புக் குழுமத்திற்குள் கொண்டு செல்லலாம். அத்தகைய ’புக் கிளப்’ஸ் குழந்தைகளை மிகவும் ஊக்கத்துடன் வாசிப்புக்குக் கொண்டு செல்கிறது என்று கண்டடையப்பட்டுள்ளது. ஏனெனில் அங்கே குழந்தை வெறும் பார்வையாளர் அல்லது பங்கேற்பாளர் மட்டுமல்ல. அக்குழந்தை அங்கே தன் வெளிப்பாட்டை நிகழ்த்துகிறது. ஒரு ஐந்தாம் வகுப்புக் குழந்தை தான் படித்த ஒரு நூலைப் பற்றி பதினைந்து பேர் கொண்ட ஒரு சபையில் எழுந்து பேசுகிறது என்றால் பிறகு ஒருபோதும் அது அந்த சுவையிலிருந்து வெளியே செல்லாது. ஏனெனில் அது அதற்குள் இருக்கும் ஓர் ஆணவத்தை நிறைவு செய்கிறது. மேலும் முன்செல்லவேண்டும் என்கிற துடிப்பை உருவாக்குகிறது. செயலூக்கம் படைப்பூக்கம் அளிக்கும் நிறைவை அக்குழந்தை அறிந்துவிட்டது. அதன்பிறகு தொடர்ந்து அங்கு அது பேசவும் விவாதிக்கவும் தொடங்கிவிடும்.
நூல்களைச் சார்ந்து விவாதிக்கும் ஒரு குழந்தை அறிவுலக விவாதமென்ற அந்த மாபெரும் இயக்கத்துடன் தன்னை தொடர்புறுத்திக் கொண்டதென்றால், அதன்பிறகு அதற்கு சராசரித்தனம் கொண்ட விளையாட்டுகள் எதிலும் ஆர்வம் இருக்காது. இந்த புக் கிளப்ஸ் குழந்தைகளுக்காகவும், வெவ்வேறு அகவையினருக்காக உலகம் முழுக்க இன்று தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. அவை இன்று இணையத்தை பயன்படுத்தியும் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
அத்தகைய புத்தகக் குழுக்களை மிகச் சிறுபான்மையினரே நாடுகிறார்கள் என்பது ஓர் உண்மை. ஏனெனில் அவற்றுக்கு இன்றைய நவீன ஊடகங்களின் பிரச்சார வல்லமை இல்லை. ஒருவகையான தலைமறைவு இயக்கங்களாகவேதான் அவை நடக்க வேண்டியிருக்கிறது. அண்மையில் பெங்களூர் சென்றபோது அங்கே ஒரு புத்தகக்கடையில் ஒரே சமயம் ஐந்து வெவ்வேறு புக்கிளப்ஸ்களின் உரையாடல் அமர்வுகள் நடந்துகொண்டிருப்பதையும், பெரும்பாலானவற்றில் சிறுவர்கள் அமர்ந்திருப்பதையும் பார்த்தேன். சென்னையில் அவ்வாறு எங்காவது நடக்கிறதா என்று விசாரித்தபோது நான் அறிந்தவரை எங்கும் நிகழவில்லை என்றே தெரிந்தது.
அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது மானஸா பதிப்பகம் தொடங்கப்படும்போது அடையாறில் அதற்கு உருவாகியிருக்கும் புதிய அலுவலகத்தில் இவ்வாறு புத்தக விவாதங்களை வாரந்தோறும் நிகழ்த்தினால் என்ன என்று பேசினேன். அவை புத்தக வாசிப்புக்கும் உதவும் ஒரு புத்தகச் சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பவும் உதவும்.
ஆனால் எந்த செயலும் முதலில் தமிழ்ச் சமூகத்திலிருந்து புறக்கணிப்பையும் எதிர்ப்பையுமே உருவாக்கும். ஏனெனில் நம்முடைய சமூகம் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மனநிலைகளால் ஆனது. ‘எல்லாரையும்போல் இருப்பது’ ‘நாலுபேரைப்போல் நடந்துகொள்வது’ என்பதுதான் நம்முடைய வாழ்க்கைக்கொள்கை. அனைவரும் குழந்தைகளிடம் செல்போன் எடுத்துக் கொடுத்தால் நாமும் எடுத்துக்கொடுக்கும் பண்பாடு நம்முடையது. ஆகவே தனியாக எந்த ஒன்றைச் செய்தாலும் அது ஏதோ வகையில் தேவையற்றது என்ற எண்ணமும், அர்த்தமற்ற எதிர்ப்பும்தான், அசட்டுக் கேலியும்தான் நம் சமூகத்திலிருந்து கிளம்பும்.
அதைக்கடந்து இத்தகைய செயல்களை செய்து நிலை நிறுத்துவதற்கு ஒரு பிடிவாதம், எளிதில் தளராமை தேவை. ஒவ்வொன்றும் கணந்தோறும் தாவிச்சென்றுகொண்டே இருக்கும் இன்றைய உலகில் Consistency என்பதுதான் பிற அனைத்தையும் விட முதன்மையான தகுதியாக இருக்கிறது. அது குழந்தைகளிடம் வாசிப்பிலும் இருக்கவேண்டும். இந்த வகையான வாசிப்பு அமைப்புகளை உருவாக்கி நடத்துவதிலும் இருக்கவேண்டும். அவ்வாறு ஒரு தொடர் புத்தக இயக்கம் ஒன்றை மானஸா பதிக்கம் சார்பில் நடத்த முடியுமென்றால் அது வெற்றியாகவே அமையும்.
காவியம் – 69
கானபூதி சொன்னது. குணாட்யரின் அருகே காட்டுசேப்புச் செடிகள் யானைக்காதுகள் போல இலைவிரித்து நின்றிருந்தன. அவர் அதில் ஓர் இலையைப் பறித்து தரையைத் துழாவி எடுத்த சிறிய முள்ளைக்கொண்டு நுணுக்கமாக எழுதத் தொடங்கினார். அவர் எழுதியவற்றை அவரால் படிக்கவோ திருத்தவோ முடியாது. அவர் விரல்கள் இலைமேல் அசைந்தபடியே இருந்தன. எழுதிய இலைகளை தன்னருகே அடுக்கி வைத்தபடி அவர் காட்டு சேப்பு இலைவிரித்து அடர்ந்திருந்த அரைச்சதுப்பில் முன்னகர்ந்து சென்றுகொண்டிருந்தார்.
என் நிழல்கள் பிரதிஷ்டானபுரிக்குச் சென்றன. அங்கே கோதாவரிக்கரையில் குடில் கட்டி வாழ்ந்து கொண்டிருந்த குணாட்யரின் மாணவர்களான குணதேவனையும் நந்திதேவனையும் அணுகி, அவர்களின் செவிகளில் அவர் காவியம் எழுதும் செய்தியைக் கூறின. தங்கள் உள்ளத்தில் தோன்றிக்கொண்டே இருந்த அந்த எண்ணத்தைக் கண்டு வியந்த அவர்கள் இருவரும் காட்டுக்குள் குணாட்யரைத் தேடிவந்து கண்டடைந்தனர். அவர் எழுதிய காவியத்தை அவர்கள் வாசித்தறிந்தார்கள். அவற்றை ஓலைகளில் உடனே எழுதிக்கொண்டனர். காட்டிலேயே அவருக்கு ஒரு குடிசை கட்டி அவருடன் தாங்களும் தங்கினார்கள்.
ஏழு ஆண்டுகள் இரவும் பகலும் குணாட்யர் எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய மாணவர்கள் அவருக்கு தேனும் கனிகளும் கிழங்குகளும் கொண்டு வந்து அளித்தார்கள். அவர் எழுதுபவற்றை உடனுக்குடன் பிரதி எடுத்துக்கொண்டார்கள். நிறைவடைந்தபோது அந்த பெருங்காவியம் ஏழு காண்டங்களில், ஏழாயிரம் உபாக்யானங்களில், எழுபதாயிரம் சர்க்கங்களில், ஏழு லட்சம் பாடல்களில் அமைந்திருந்தது. ஐம்பத்தாறு லட்சம் வரிகள், இரண்டரைக்கோடி சொற்கள் கொண்டிருந்தது. பாரதத்தில் எழுதப்பட்ட அத்தனை காவியங்களையும் அது தன்னுள் அடக்கியிருந்தது. எழுதப்படவிருக்கும் காவியங்கள் அனைத்துக்குமான கதைகளை மேலும் கொண்டிருந்தது.
”மறு எல்லை காண முடியாத பெருங்கடல். அதன் ஒரு துளியே ஒரு கடலென்னும் ஆழம் கொண்டது” என்று அதை முழுக்க ஓலையில் எழுதிக்கொண்ட குணதேவன் சொன்னார்.
“இனி இங்கே சொல்வதற்கேதும் இல்லை. கேட்பதற்கு ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் பிறந்து வந்தாக வேண்டும்” என்று நந்திதேவன் சொன்னார்.
“இதைக் கொண்டுசெல்லுங்கள். பிரதிஷ்டானபுரியின் காவியசபையில் இதை நிறுவுங்கள். இனி இதுவே இங்கு காவியம் என்னும் சொல்லின் பொருள் என நிலைகொள்ளவேண்டும்” என்று குணாட்யர் சொன்னார். “முதல் ஞானி அதர்வனும், ஆதிகவி வால்மீகியும், முதல்வியாசனும், மகாசூதர் உக்ரசிரவஸும் சொன்னவை அனைத்தும் இதிலுள்ளன. அச்சொற்கள் முளைத்துப் பெருகிய கதைகள் ஒவ்வொன்றும் இதில் விரிந்துள்ளன. இங்கே வாழ்ந்தவர்கள் இனி வாழ்பவர்களுக்குச் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இதிலுள்ளது”
அந்தக் காவியத்தை எழுபது பெரிய நார்ப்பெட்டிகளில் அடுக்கி அவற்றை ஊரில் இருந்து அழைத்துவந்த சுமைதூக்கிகளின் தலையில் ஏற்றிக்கொண்டு குணதேவனும் நந்திதேவனும் பிரதிஷ்டானபுரியின் காவியசபையைச் சென்றடைந்தார்கள். அவர்கள் வரும் செய்தி அதற்குள் நகருக்குள் பரவியிருந்தது. நகரின் கோட்டை முகப்பு முதல் அவர்களுக்குப் பின்னால் கூட்டம் சேர்ந்துகொண்டே இருந்தது. அவர்கள் வாக்பிரதிஷ்டான் என்னும் அந்த சபையைச் சென்றடைந்தபோது நகரின் அத்தனை புலவர்களும், கவிஞர்களும், பாடகர்களும், மாணவர்களும் அங்கே திரண்டிருந்தார்கள்.
சபைக்கூடத்தில் வாக்பிரதிஷ்டானத்தின் சதுர்வித்வத்கோசத்தின் நவரத்னாவளியின் ஒன்பது பெரும்புலவர்களான சர்வவர்மனும், ரத்னாகரரும், திரிவிக்ரமரும், குணபூஷணரும், சுபாஷிதரும், பிரபாகரரும், அஸ்வதரரும், சுபகரும் அவைக்கு வந்து அமர்ந்திருந்தனர். கனகமாலாவின் பதினெட்டு புலவர்களும், ரஜதமாலாவின் வட்டத்தின் நூற்றியெட்டு புலவர்களும் இருந்தனர். அக்ஷமாலாவின் அத்தனை புலவர்களும் வந்திருந்தனர். அவர்களின் மாணவர்களும் இணைந்துகொண்டபோது சபை தலைகள் நிறைந்து தென்பட்டது.
வாக்பிரதிஷ்டான சபையின் வாசலில் சென்று நின்று கணதேவன் சொன்னான். “இந்த பாரதவர்ஷம் கண்ட முதற்பெரும் கவிஞர் குணாட்யரின் மாணவனாகிய கணதேவன் நான். இந்த மண் கண்ட மிகப்பெரிய காவியத்தை இந்தச் சபையில் அரங்கேற்றம் செய்ய வந்திருக்கிறேன்”
நந்திதேவன் சொன்னான், “இதுவரை இங்கே இயற்றப்பட்டவையும் பயிலப்பட்டவையுமான எல்லா காவியங்களுக்கும் இதுவே அன்னை. இதுவரை இங்கே தோன்றிய நூல்களெல்லாம் மரங்களும் செடிகளும் என்றால் இதுவே தாய்மண். இனி பிரதிஷ்டானபுரியின் இந்தச் சபை இக்காவியத்தாலேயே அறியப்படுவதாகுக!”
அச்செய்தி அரசர் அக்னிபுத்ர சதகர்ணியைச் சென்றடைந்திருந்தது. அவர் தன் பட்டத்து யானையை அலங்கரித்து அனுப்பி அந்நூலை எதிர்கொண்டு வரவேற்கச் செய்து வாக்பிரதிஷ்டானச் சபைக்குக் கொண்டு சென்றார்.
சபைக்குள் அக்காவியம் அடங்கிய பெட்டிகள் சென்று அமைந்தபோது ஆழ்ந்த அமைதி நிலவியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள்மேல் பெரும் எடை ஒன்றை உணர்பவர்கள் போலிருந்தார்கள். சிறிய ஒலிகள்கூட அவர்களில் அதிர்வை உருவாக்கின.
வழக்கம்போல அத்தனை சபை நிகழ்வுகளும் நடைபெற்றன. ஆனால் எப்போதும் எழும் உரத்த வாழ்த்தொலிகளும், ஏற்பொலிகளும் எழவில்லை. அனைவரும் பிரமை பிடித்து அமர்ந்திருப்பவர்கள் போலிருந்தார்கள்.
முறைப்படி சபை தொடங்கியதும் கோல்காரன் எழுந்து அங்கே அரங்கேற்றத்திற்கு குணாட்யரின் மாபெரும் காவியம் கொண்டு வரப்பட்டுள்ள செய்தியை அறிவித்தான். ஆனால் சபையில் இருந்து ஒரு வாழ்த்தொலியோ வரவேற்புக்குரலோ எழவில்லை.
சபைத்தலைவரான சர்வவர்மன் கைகாட்டியதும் குணதேவன் எழுந்து வணங்கி அந்தக் காவியத்தைப் பற்றிச் சொன்னான். “இந்த வாக்பிரதிஷ்டான சபை பாரதவர்ஷத்தில் முதன்மையானது. இதன் தலைமைக் கவிஞராக இருந்த எங்கள் ஆசிரியர் குணாட்யர் பாரதவர்ஷத்தின் முதன்மைக்கவிஞர் என ஏற்கப்பட்டவர்”
“ஆனால் தோற்கடிக்கப்பட்டு அகற்றப்பட்டவரும்கூட” என்று சர்வவர்மனின் மாணவனாகிய அஸ்வபாலன் சொன்னான். சபையில் ஒரு முழக்கம் ஏற்பட்டது.
குணதேவன் அவனை கவனிக்காதவனாக சொன்னான். “என் ஆசிரியர் நகர்துறந்து காட்டுக்குச் சென்றார். அங்கே அவர் தன் ஏழாண்டுக்காலத் தவத்தால் இந்தப் பெரும் காவியத்தை இயற்றியிருக்கிறார். இதை இந்த சபையில் அரங்கேற்றவேண்டும் என எங்களுக்கு ஆணையிட்டிருக்கிறார். இதுவரை இந்த பாரதநிலத்தில் சொல்லப்பட்டவையும் கேட்கப்பட்டவையுமான எல்லா கதைகளும் இந்தக் காவியத்தில் உள்ளன. இனி இங்கே சொல்லப்படும் எந்த கதையும் இந்நூலில் இருந்தே தொடங்கும். இக்காவியத்தை அரங்கேற்றும் பேறு இச்சபைக்கு அமைந்துள்ளது என்றே சொல்வேன்”
சர்வவர்மன் “சில ஐயங்களை முதலில் களையவேண்டும் குணதேவரே” என்றார். “மகாகவிஞரான குணாட்யர் இங்கே இருக்கும்போது வேதம் முதலான அனைத்து நூல்களையும் கற்றறிந்தவர். அவற்றை இங்கே கற்பித்தவர். அவர் கற்று கற்பித்த கதைகளும் ஞானமும்தன் இந்நூலிலும் உள்ளனவா?”
“இல்லை, இதிலுள்ளவை அவர் தன் காட்டுவாழ்க்கையில் பெற்றவை”
“அங்கே அவர் எப்படி கற்றார்? கண்களும் செவிகளும் நாவும் இல்லாதவருக்கு எவர் கற்பிக்கமுடிந்தது?”
“சபையினரே, விந்தியமலைக் காட்டில் , கோதாவரிக் கரையில் பாரதநிலம் அறிந்த அத்தனை கதைகளையும் அறிந்த கானபூதி என்னும் பைசாசம் வாழ்கிறது. அதைப் பற்றி முன்னரே நம் நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. குபேரனின் சபையில் இருந்து சாபத்தால் மண்ணுக்கு வந்த சுப்ரதீகன் என்னும் யக்ஷனே கானபூதியாகியது. நம் நூல்களில் அகோரபைரவன் என்றும் உக்ரவீரபத்ரன் என்றும் வழிபடப்படும் தெய்வமும் அதுவே. சூலசிரஸ் என்னும் அரக்கனிடமிருந்து சுப்ரதீகன் கேட்டறிந்த கதைகளையும் பின்னர் இங்கு வாழ்ந்து அறிந்தவற்றையும் அந்தக் கதைசொல்லும் பிசாசு என் ஆசிரியருக்குச் சொன்னது. அவற்றையே என் ஆசிரியர் இக்காவியமாக எழுதியுள்ளார்”
“நல்லது, பிசாசின் கதை” என்று புன்னகையுடன் சர்வவர்மன் சொன்னார். “அந்தப் பிசாசின் கதைகள் இந்நகருக்குள் வர முடியும் என்றால் ஏன் அது மட்டும் காட்டில் இருக்கிறது?”
“காடு தெய்வங்கள் உறையும் இடம்” என்று நந்திதேவன் சொன்னான்.
“நகரிலும் தெய்வங்கள் வாழ்கின்றன. அவை மங்கலத்தெய்வங்கள்” என்று சர்வ வர்மன் சொன்னார். “எட்டு திருமகள்கள் இங்கே வாழ்கிறார்கள். அழகுவடிவமான திருமாலும், வெள்ளை எருதில் ஊர்பவனாகிய சிவனும், படைப்பவனாகிய பிரம்மனும் இங்கே திகழ்கிறார்கள். மூன்று தேவியரும் கோயில்கொண்டிருக்கிறார்கள்”
“எந்நகரில் வாழ்ந்தாலும் மனிதர்கள் இறுதியில் காட்டுக்குத்தான் சென்றாகவேண்டும்” என்று குணதேவன் சொன்னான். “அங்கே மெய்யுணர்த்தி நின்றிருக்கின்றன தெய்வங்கள்”
“அவை உணர்த்துவது மெய்தான் என்பதில் எனக்கு மறுப்பில்லை” என்று சர்வ வர்மன் சொன்னார். “ஆனால் மெய்யே இரண்டுவகை. வாழச்செய்யும் மெய் உண்டு. வாழ்வை துறக்கச்சொல்லும் மெய்யும் உண்டு. குலம்வாழச்செய்யும் மெய் உண்டு, எரித்து விபூதியாகச்செய்யும் மெய்யும் உண்டு. இது வாழும் நகர், அமைதியும் வளமும் கல்வியும் நிலைபெற்ற நகரம்”
“இந்நகரம் இதுவரைப் பேசிய அனைத்தும் முழுவடிவில் இந்நூலில் உள்ளன” என்று குணதேவன் சொன்னான். “இங்கு இதுவரை முன்வைக்கப்பட்ட அத்தனை நூல்களும் பிழையானவை என்று இந்நூல் காட்டும். பிழையான நூல்களின்மேல் கட்டப்பட்டவை எல்லாம் சரிந்துவிழும்… நமக்கு அடித்தளமாக அமையும் அழியாத உண்மையை இந்நூல் உரைக்கும்”
“இந்நூல் எந்த மொழியில் இயற்றப்பட்டது? குணாட்யர் தானறிந்த தேசமொழிகள் அனைத்தையும் உதறுவதாக அறிவித்தார் என்பதனால் கேட்கிறேன்” என்றார் ரத்னாகரர்.
“இது பைசாசிக மொழியில் அமைந்துள்ளது” என்று குணதேவன் சொன்னான். “ஆனால் அதை நான் சம்ஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் இன்னும் தேசபாஷைகளிலும் பொருள்சொல்லமுடியும்”
சுபாஷிதர் “அரசே, எனக்கு இந்நூல் இங்கே ஒலிப்பது சரியல்ல என்று படுகிறது. இது நாமறியாத மொழி. நாமறியாத ஏதோ தெய்வத்தின் சொல். அது நமக்கு ஒரு சாபத்தை இந்நூல் வழியாக இங்கே அனுப்பியிருக்கலாம். இந்நகர்மேல் அந்த சாபம் இந்நூல் வழியாகப் பரவலாம்” என்றார்.
சட்டென்று சபையில் இருந்து ஓங்காரமாக ஆமோதிப்பு எழுந்தது. பலர் தங்கள் கோல்களைத் தூக்கியபடி எழுந்து “ஆம்! மெய்!” என்று கூவினார்கள். “உண்மை அது” “நாம் யோசித்துச் செய்யவேண்டும்” என்று கூச்சல்கள் எழுந்தன.
குணதேவன் “நீங்கள் எதற்கு அஞ்சுகிறீர்கள் புலவர்களே? உங்கள் நூல்களெல்லாம் அழிந்துவிடும் என்றா?” என்றான். “அஞ்சவேண்டாம். இந்த முழுமுதல் உண்மை இங்கே நிலைகொள்ளும்போது உங்கள் நூல்கள் பொய்யாக ஆவதில்லை. அழகுள்ள பொய்களெல்லாம் உண்மைக்கு அணிகலன்களே ஆகும்”.
“இந்நூலை இங்கே அரங்கேற்றுவதற்கான காரணம் என்ன?” என்று சுபகர் கேட்டார். “இந்த சபையில் வேதாதிகாரம் கொண்ட அந்தணர்களின் ஞானநூல்களும், காவியங்களும், நெறிநூல்களும் அரங்கேறியுள்ளன. சதகர்ணிகள் நிஷாதர்களின் ரத்தம் கொண்டவர்கள் என்னும் பழிப்பேச்சு பிறநாடுகளில் உண்டு. அவற்றுக்கு நாம் அளிக்கும் பதில் அந்த நூல்கள்தான்… இந்த நிஷாதநூலை நாம் இங்கு அரங்கேற்றி ஒருவேளை அது பிற நூல்கள் அனைத்தையும் பொருளற்றதாக ஆக்கிவிடும் என்றால் அதன் விளைவு என்ன? சதகர்ணிகள் நிஷாதர்கள் என்று நிறுவப்படுவதா?”
“இந்நூல் நிஷாதர்களின் புகழ்பாடுவது என்பதில் சந்தேகமே தேவையில்லை” என்று அஸ்வதரர் சொன்னார். “சூலசிரஸ் சொன்ன அரக்கர்களின் கதைகளில் இருந்துதான் கானபூதி தன் கதைகளைத் தொடங்குகிறது. இதில் அரக்கர், அசுரர், நிஷாதர், பைசாசிகர்களின் கதைகள்தான் இருக்கும். சந்தேகமே வேண்டாம், இந்நூல் க்ஷத்ரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிரானது. அவர்களின் அதிகாரத்தை நிறுவும் வேதங்களுக்கு எதிரானது. அவ்வேதங்களை ஒட்டி எழுந்த ஆதிகவியின் ராமாயணத்திற்கும் மகாவியாசனின் பாரதகாவியத்திற்கும் எதிரானது. இது நாம் எவற்றையெல்லாம் நம்பி இங்கே நிலைகொள்கிறோமோ அனைத்துக்கும் எதிரானது. இது நாம் நம் கூரைமேல் வைத்துக்கொள்ளும் கொள்ளி”
குணதேவன் அரசரை நோக்கி “அரசே, இந்த நூல் இங்கே அரங்கில் முன்வைக்கப்பட்ட பிறகு எழவேண்டிய விவாதங்கள் இவை. முதலில் இந்தச் சபை நூலை கேட்கட்டும். அவர்கள் சொல்லட்டும் இந்நூல் ஏற்கத்தக்கதா இல்லையா என்று” என்றான்.
“இந்நூல் அவையில் வைக்கப்படவே தகுதியற்றது…” என்று திரிவிக்ரமர் சொல்ல ஆரம்பித்தார்.
அரசர் கையமர்த்தி “நூல் சபைக்கு வந்துவிட்டது. அது இங்கே படிக்கப்படட்டும். அதன்பிறகு உங்கள் மறுப்புகளைச் சொல்லலாம். அம்மறுப்புகளைச் சபை ஏற்குமென்றால் இந்நூலை நாம் நிராகரிக்கலாம்… அதுவே இந்த சபையின் முறைமையாக இருந்து வருகிறது” என்றான்.
அதன் பின் ஒன்றும் சொல்வதற்கில்லாமல் வாக்பிரதிஷ்டான சபையின் முதல் வரிசைகள் அடங்கின. ஏற்கனவே வெளிவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்நூலைக் கேட்கும் ஆர்வத்துடன் அமைதி அடைந்திருந்தனர்.
நந்திதேவர் காவியத்தின் செய்யுட்களை வாசிக்க குணதேவர் சம்ஸ்கிருதத்தில் அச்செய்யுளின் பொருளைச் சொல்லவேண்டும் என அவர்கள் வகுத்துக் கொண்டிருந்தனர். அதன்படி நந்திதேவர் தன் உரத்த மணிக்குரலில் காவியத்தின் முதற்செய்யுளை வாசித்தார்.
பைசாசிகமொழியின் விந்தையான ஒலி அந்தச் சபையை திகைக்கவைத்தது. ஓர் மெல்லிய முழக்கம் உருவானது. அதுவே தருணம் என்று சர்வவர்மன் புரிந்துகொண்டார். கையை ஓங்கித்தட்டியபடி உரத்தகுரலில் வெடித்துச் சிரித்தார். அதை புரிந்துகொண்டு பிற புலவர்களும் உரக்கச் சிரிக்கத் தொடங்கினார்கள்.
சிரிப்பு மிகவேகமாக அனைவரிலும் பரவியது. ஒருவர் சிரிப்பதைப் பார்த்து இன்னொருவர் சிரித்தார்கள். ஏன் என்றே தெரியாமல் சிரித்தார்கள். பின்னர் சிரிப்பு அவர்களை ஆட்கொண்டது.
நந்திதேவர் கைகாட்டி சபையினரை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவர் செய்யுளின் அடுத்த வரியை படித்ததும் சற்றே தணிந்த சிரிப்போசை மீண்டும் வெடித்தெழுந்தது. வயிற்றைப் பிடித்துக்கொண்டு, பீடங்களில் சரிந்து அமர்ந்தும் குனிந்து விழுந்தும், ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டும் சிரித்தார்கள்.
அஸ்வதரர் தலையில் அடித்துக்கொண்டு “காதல்கொண்ட நாய்களின் ஒலி” என்றார். அந்தச் செய்யுளின் ஒலியை ஏளனமாக மிகைப்படுத்தி ஊளைபோல ஆக்கினார். “ஊ ஊ…. மகரமாதத்து நாய்கள்…. ஊ ஊ”
அத்தனைபேரும் எழுந்து நின்றுவிட்டார்கள். அனைவரையும் விந்தையான பேய்க்கூட்டம் ஒன்று ஆட்கொண்டதுபோலிருந்தது. கைநீட்டி கூச்சலிட்டுச் சிரித்தனர். வாயில் கைவைத்து ஊளையிட்டார்கள். எக்களிப்புடன் துள்ளித் துள்ளிக் குதித்தனர்.
தன்னைச் சுற்றியிருந்த முகங்களை குணதேவன் பார்த்தான். அவற்றில் வெறும் பித்துதான் நிறைந்திருந்தது. அக்கண்கள் அனைத்தும் ஒன்றுபோலவே வெறித்து இளித்துக்கொண்டிருந்தன.
சிரிப்பு சற்று தழைந்தபோது அஸ்வதரர் “இதோ இறைச்சிக்குச் சண்டைபோடும் நாய்” என்று சொல்லி வவ் வவ் வவ் என்று ஓசையிட்டார். புஷ்பதரர் என்னும் கவிஞர் “இதோ தண்ணீர் குடிக்கும் நாய்” என்று சொல்லி “ளக் ளக் ளக்” என்று ஓசையிட்டார். ஒவ்வொன்றுக்கும் அவர்கள் வெறிகொண்டு சிரித்துக்கூத்தாட்டமிட்டனர்.
அர்த்தமற்ற ஒன்று மட்டுமே அத்தனை தீவிரமாக வெளிப்படும் என்று குணதேவன் எண்ணினான். அதற்கு மட்டுமே மறுபக்கமே இருக்காது. அவன் என்ன செய்வதென்று அறியாமல் அரசனைப் பார்த்தான். அரசனும் சிரித்துக்கொண்டுதான் இருந்தார்.
சர்வவர்மன் “பைசாசத்தின் மாணவர்களே உங்கள் நாய்க்குரல் காவியத்துடன் கிளம்புங்கள். வாக்பிரதிஷ்டானம் இதற்குமேல் தெளிவாக தன் தீர்ப்பைச் சொல்லவேண்டியதில்லை” என்றார்.
திரிவிக்ரமர் “சபை உங்கள் காவியத்தை எள்ளிநகையாடியிருக்கிறது….” என்றார். “கிளம்புங்கள்…கிளம்புங்கள்… காவியம் புளித்துவிடப்போகிறது!”
“போகும்போது வாக்பிரதிஷ்டானத்தின்மேல் ஒற்றைக்கால் தூக்கி சிறுநீர் துளி விட்டுக்கொண்டு போங்கள்” என்றார் ஒருவர்.
மீண்டும் சிரிப்பொலிகள் பொங்கி எழுந்தன. குணதேவர் அரசனைப் பார்க்க அவர் வெளியேறும்படி கைகாட்டினார். நந்திதேவர் முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதபடி அப்படியே கால்மடித்து அமர்ந்தார். அவரை குனிந்து தோள்தொட்டு ஆறுதல் சொல்ல குணதேவர் முயன்றபோது சர்வவர்மன் கண்களைக் காட்ட அவருடைய மாணவர்கள் கூச்சலிட்டபடி ஓடிவந்து காவியம் வைக்கப்பட்ட பெட்டிகளை தூக்கி அப்பால் வீசினர்.
சதகர்ணி அரசர் சீற்றத்துடன் எழுந்து கைநீட்டி கூச்சலிட்டு அதைத் தடுக்க முயல்வதற்குள் சபையில் இருந்தவர்கள் பெருந்திரளாக எழுந்து வந்து அந்தப் பெட்டிகளை தூக்கி வீசினார்கள்.
அரசர் “அவர்களை தடுங்கள்…படைவீரர்களிடம் ஆணையிடுங்கள்” என்று கூவினார்.
“அது நிகழட்டும் அரசே” என்றார் தலைமை அமைச்சர் மாதவர். “அவர்களை தடுக்க முயன்றால் காவியசபையில் ரத்தம் சிந்த நேரிடும்…அது நமக்கு பெருமை அல்ல. அத்துடன் பைசாசிக மொழியில் அமைந்த ஒரு நூலை நம் சபை எள்ளிநகையாடி நிராகரித்தது என்ற பெயர் உங்கள் குலப்பெருமைக்கும் சான்றாக அமையும்…”
கூட்டத்தினர் காவியம் அடங்கிய பெட்டிகளை கொண்டுசென்று தெருவில் வீசினார்கள். குணதேவனையும் நந்திதேவனையும் பிடித்து இழுத்து அவர்களின் ஆடைகளை களைந்து கோவணத்துடன் புழுதியில் போட்டு புரட்டினர். புலவர் சபைக்கு வெளியே இருந்த இளைஞர்களும் பிறரும் நாய்கள் போல கேலியாக ஊளையிட்டபடி அவர்களை காலைப்பிடித்து புழுதியில் இழுத்துச் சென்றார்கள். பெட்டிகளைச் சுமந்துவந்தவர்கள் ஓடி தப்பினார்கள். பெட்டிகள் உடைக்கப்பட்டு சுவடிகள் கிழித்து தெருவெங்கும் வீசப்பட்டன. ஆங்காங்கே போட்டு கொளுத்தப்பட்டன.
அந்த நாள் முழுக்க நகரில் நாய்போல நடிப்பதும் கூச்சலிடுவதும் ஒரு கூட்டுமனநோய் போலப் பரவியது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்த ஏதோ ஒன்று வெளிவந்தது. வயது முதிர்ந்தவர்கள், கல்வி கற்றவர்கள், பல்லக்கில் செல்லும் செல்வம்கொண்டவர்கள் கூட வாயில் கைவைத்து நாய்போல ஊளையிட்டனர். கையை பின்பக்கம் வால்போல வைத்து ஆட்டி உரக்கச் சிரித்து கூச்சலிட்டனர். தெருக்களில் ஒருவர் மேல் ஒருவர் கால்தூக்கி சிறுநீர் கழிப்பதுபோல நடித்து துரத்தினர். குலப்பெண்கள்கூட திண்ணைகளிலும் உப்பரிகைகளிலும் நின்று அந்த கண்மண் தெரியாத கூத்தை ரசித்துக் கூச்சலிட்டனர். மலர்களையும் பொரியையும் தெருக்களில் நெரிசலிட்ட கூட்டத்தினர் மேல் வீசி சிரித்தார்கள்.
நள்ளிரவில் சட்டென்று எல்லாம் அடங்கியது. களைப்படைந்த மக்கள் தங்கள் வீடுகளிலும் சத்திரங்களிலும் அமர்ந்தனர். பலர் களைத்து தூங்கினார்கள். மதுக்கடைகளில் மட்டும் கூச்சல் விடிய விடிய நீடித்தது. அங்கே அமர்ந்திருந்த சிலர் தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயன்றனர்.
“அந்தக் காவியத்தை அவையில் படிக்காமல் இருந்தது நல்ல விஷயம்… அந்தப் பெட்டியை திறந்ததற்கே நகரில் பைத்தியம் பரவிவிட்டது” என்றார் ஒருவர்.
“அது நிஷாதர்களின் சூது. அவர்கள் ஆபிசார மந்திரங்கள் வழியாக இந்நகரை கைப்பற்ற முயன்றார்கள்… நாம் அதில் ஒரு சொல்லைக்கூட செவிகொள்ளவில்லை. ஆகவே தப்பித்தோம்”
அரண்மனையின் உப்பரிகையில் நின்று நகரில் எழுந்த பைத்தியக்கூத்தை பார்த்துக் கொண்டிருந்த அக்னிபுத்ர சதகர்ணி பெருமூச்சுவிட்டார்.
அவர் அருகே நின்ற அமைச்சர் மாதவர் “அவ்வப்போது இவர்களுக்கு இப்படி ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. நாம் அதை அளித்தாகவேண்டும்” என்றார். “ஓர் அரசர் அவ்வப்போது தன் குடிமக்களுக்கு போரையும் அழிவையும்கூட அளிக்கவேண்டும் என்று அர்த்தசாஸ்திரங்கள் சொல்கின்றன”
நகர் முழுக்க குணாட்யரின் மாபெரும் காவியம் ஓலைக்கிழிசல்களாகப் பரவி காற்றில் அலைக்கழிந்தது. பின்னிரவில் வீசிய காற்று அதை அள்ளிக்கொண்டுசென்று சுவர்களின் அருகே சேர்த்தது. சில சுவடிகள் இல்லங்களின் சாளரங்களில் சிக்கி இருந்து புறாபோலச் சிறகடித்தன.
“அவை உள்ளே வர முயல்கின்றன. அவற்றை உள்ளே விடக்கூடாது… அந்த சுவடிகளில் ஆபிசார மந்திரங்கள் இருக்கலாம்” என்றார்கள் கிழவிகள். சுவடிகளை அவர்கள் கைகளால் தொடாமல் கழிகளால் தள்ளி வெளியே விட்டனர்.
தன் இல்லத்தில் சர்வவர்மன் அமைதியிழந்து தாடியை தடவியபடியும் கைகளை சேர்த்து இறுக்கியபடியும் முகப்புக்கும் அறைக்குமாக அலைக்கழிந்தார்.
அவருடன் இருந்த சுபகர் “எல்லாம் நாம் எண்ணியவாறே முடிந்தது. அவர்கள் இருவரும் இந்நேரம் தங்கள் ஆசிரியரைத் தேடி காட்டுக்குச் சென்றிருப்பார்கள்” என்றார். “நகரம் அடங்கிவிட்டது…ஓசைகள் ஓய்ந்துவிட்டன”
“ஆம்” என்று சர்வ வர்மன் சொன்னார். ”ஆனால் மக்கள் நாளைக் காலை தங்களைப் பற்றி நினைக்கவே கூச்சப்படுவார்கள். என்ன நடந்தது என்றே அவர்களுக்குப் புரியாது. அத்தனை எளிதாக இன்னொருவரால் கையாளப்படத்தக்கவர்களா நாம் என்று எண்ணி எண்ணி வெட்கப்படுவார்கள்”
“அது ஒரே ஒரு காலைப்பொழுதுக்குத்தான். அனேகமாக அவர்கள் இந்த நாளைப் பற்றி பேசிக்கொள்ளவே மாட்டார்கள். அப்படியே கடந்துசென்றுவிடுவார்கள்” என்று சுபகர் சொன்னார்.
“ஆமாம், ஆனால் மனிதர்கள் அப்படிக் கடந்துசெல்பவை எல்லாம் அவர்களுக்குள் கல்லிடுக்கில் ஈரம்போல நுழைந்து நிரந்தரமாக தங்கிவிடுகின்றன. எதிர்பாராத முறையில் அவை வெளியாகவும்கூடும்” என்றார் சர்வவர்மர். “சட்டென்று ஏதோ ஒன்று நடந்து அவர்கள் அனைவரும் அப்படியே குணாட்யர் மாபெரும் ஞானி என்று ஏற்றுக்கொள்ளலாம். குற்றவுணர்ச்சி தாளாமல் இந்நகரமே சென்று அவர் காலில் விழவும்கூடும்”
“நாம் அப்படியெல்லாம் எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை” என்று சொன்னபோது சுபகரின் உற்சாகமும் முற்றாக வடிந்துவிட்டிருந்தது. “நான் வருகிறேன்” என்று அவர் கிளம்பினார்.
அதுவரை பேசாமலிருந்த ரத்னாகரர் “நான் வரும் வழியெல்லாம் தெரு முழுக்க அந்த மாபெரும் காவியத்தின் ஓலைகள் சிதறிக்கிடப்பதைக் கண்டேன்” என்றார். “மண்ணில் போட்டு மிதித்தார்கள். கிழிந்த ஓலையை எடுத்து மேலும் கிழித்தார்கள். ஒருவன் ஓலைகளை அள்ளிப்போட்டு அதன்மேல் சிறுநீர் கழிப்பதைக் கண்டேன்.”
சர்வவர்மன் வெறுமே பார்த்தார்.
“அது காவியம் என்பதற்கே எதிரான உணர்வு அல்லவா? கல்விக்கும் ஞானத்திற்கும் எதிராக பாமரர் கொள்ளும் வஞ்சம் அல்லவா?” என்றார் ரத்னாகரர். “சாமானியர் கண்களில் நாம் அனைவருமே அதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்களுக்கு காவியமும் இலக்கியமும் எல்லாம் என்னவென்றே தெரியாது. தெரியாததனால் இதன் மேல் அச்சம். அச்சத்தில் இருந்து காழ்ப்பு. காழ்ப்பினால் அவர்கள் இதை முழுக்க விலக்கிக் கொள்கிறார்கள். இதை அணுகவே முடியாதவர்கள் ஆகிறார்கள்”
ரத்னாகரர் தொடர்ந்தார். “நாம் அவர்களின் தலைக்குமேல் அமர்ந்திருக்கிறோம். அவர்களின் பார்வையில் முற்றிலும் அர்த்தமில்லாத ஒன்றுக்கு பொன்னும் புகழும் மதிப்பும் கிடைக்கின்றன. ஆகவே அவர்கள் நாம் அனைவரையும் வெறுக்கிறார்கள். இந்நகரின் ஆட்சி அவர்களில் ஒருவருக்குக் கிடைத்தால் நாமனைவரும்தான் முதலில் தலைவெட்டி வீசப்படுவோம்… சர்வவர்மரே, நாம் இன்று நகரத்தெருக்களில் கண்டது அந்த உணர்ச்சியை அல்லவா?”
“போதும், நாம் இதை நாளைப் பேசுவோம்”
”ஐயமே தேவையில்லை. அது மகத்தான காவியம்தான்… மானுட இனம் உருவாக்கியவற்றிலேயே அதுதான் மிகப்பெரிய காவியம். இனி அதற்கிணையான ஒன்று உருவாகவும் வாய்ப்பில்லை” என்றார் ரத்னாகரர். “அதை அழித்துவிட்டோம். நாம் எதை நம்பி வாழ்கிறோமோ அதன் அடித்தளத்தையே தயங்காமல் இடித்துவிட்டோம். அந்த துயரம் கொஞ்சமேனும் இல்லை என்றால் நாம் கற்ற கல்விக்கு என்ன மதிப்பு?”
“ஆமாம், நாம் நம் முதற்பெருங்காவியத்தை கொலைசெய்தோம்… ஆனால் அதை நான் செய்யும்போது உங்களில் ஒருவர்கூட ஏன் எதிர்க் குரல் எழுப்பவில்லை?” என்றார் சர்வவர்மர். “ஏனென்றால் உங்களுக்கெல்லாம் தெரியும், அந்தக் காவியம் இருக்குமென்றால் நீங்களும் நானும் எழுதியவை அனைத்தும் பொய்யாக ஆகிவிடும். இங்குள்ள அனைத்துமே அர்த்தமற்றவை ஆகிவிடும். அது இல்லையென்றால்தான் நாம் உண்மை என்று நிலைகொள்ள முடியும். நாம் காவியத்தை தெய்வமாக வழிபடுபவர்கள் அல்ல. அதன் காலடியில் தலையை வெட்டி பலிகொடுப்பவர்களும் அல்ல. நாம் அந்தப் பசுவை கறந்து உண்பவர்கள். அது பால்கறக்காவிட்டால் அதை காட்டுக்கு துரத்திவிடுவோம்”
ரத்னாகரர் “எனக்கும் தெரியும் அது. ஆனால் எனக்கு நெஞ்சம் ஆறவில்லை” என்றார்.
“ஆறும்…நாளை தெருக்களை நன்றாகக் கூட்டிவிடுவார்கள். அத்தனைபேரின் பேச்சில் இருந்தும் இன்றைய நாள் அப்படியே மறைந்துபோகும். கண்ணுக்கு முன் நின்றிருப்பது மட்டுமே நம் நினைவிலும் நீடிக்கும். நாமும் மிக விரைவிலேயே மறந்துவிடுவோம்… இன்றைய ஒரு இரவைக் கடப்பது மட்டும்தான் கடினம்…ஆனால் நாம் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் பொழுது ஓடிப்போகும். இரவு விடியும்” என்றார் சர்வ வர்மர்.
(மேலும்)
மைதீ. அசன்கனி
[image error]மைதீ. அசன்கனி வானொலி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறியப்பட்டவர். மலேசியத் தொலைக்காட்சியில் தமிழ் செய்தி வாசித்த முன்னோடி.
மைதீ. அசன்கனி
கருவிலிருந்து காவியம் வரை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தத்துவ வகுப்பு முடிந்து வந்ததுமே, திங்கட்கிழமை காலையிலேயே மறுபடியும் “கரு” நாவலை எடுத்து வாசித்தேன். அது ஏன் எனக்குள் ஒரு அலைக்கழிப்பை உருவாக்குகிறது என்பது ஒரு புதிராகத்தான் உள்ளது. எத்தனை முறை படித்தாலும் புதிது புதிதாக ஏதோ கிடைக்கிறது. கர்ம வினை எச்சங்களின்றி, அகாலத்தில் இருக்கவே ஆழ்மனம் விழைகிறது. ஆனால் எல்லா மதங்களும் அதற்குள்ளேயே செல்வதில்லை. முக்தா சொல்லுவது போல் புற உலகத்தை நடந்து கடக்கலாம் . ஆனால் அகப்பயணம் சென்றடைவது கடினம் தான். சில நேரங்களில் எதை தேடுகிறோம் என்பதிலேயே குழப்பம் ஏற்படுகிறது.
இந்த நாவலில் குறிப்பிடும் தரவு/reference படித்து தீர முடியாதது. இந்த முறை படித்த போது மிகவும் ரசித்தது yarlow tsangpo canyon பற்றிய வர்ணனைகளை. Grand canyon விட மிகப்பெரியது. பிரம்மபுத்திராவின் திபெத்திய Yarlang Tsangpo காலத்தால் இமாலயத்தை விட மிகப் பழமையானது ( antecedent river) நாவலில் வரும் மனிதர்களின் காலம் 50 அல்லது 60 வருடத்திற்ககுள் என்றால், நதிகள் புரண்டோடும் காலம் கோடானு கோடி வருடங்கள்.
முக்தா சொல்லுவது போல் இப்புவியின் வாழ்க்கை என நாம் அறிவது அறியமுடியாமைகளால் கோத்து நாம் உருவாக்கிக்கொள்வது. இது வினாக்களின் பெருந்தொகை. ஆனால் அறிவால் தொகுத்துக்கொள்வது என்று நாம் நம்புகிறோம். இவற்றை நேரில் உணர்ந்த பின்னரே வேதாந்தத்தில் இவை ஃபாஸம் என்றும் ஃபானம் என்றும் விளக்கப்படுகின்றன.
நீங்கள் தற்போது எழுதும் காவியத்தின் நாவலிலும் இந்த தொடர்ச்சியை காண முடிகிறது. கானபூதி காலத்திற்கு அப்பால் நின்று, வெவ்வேறு கதைகளும் வினாக்களும் வழியே கோர்க்க உதவ முற்படுகிறது. கதைகளில் எப்படியும் அது கோர்க்கப்படலாம், ஆனால் வாழ்க்கையில் தான் ஒன்றோடு ஒன்று தனித்தனியாக இயங்குவது போல் தோற்றமளிக்கிறது.
அன்புடன்,
மீனாட்சி
Reading as meditation
Toward the end, I felt I could easily judge his wit and the form of the story. His style is stale and somewhat artificial. In fact, I felt that he was writing in a manner similar to a serious adult who is pretending to be a mischievous young man.
Reading as meditation.உலகம் மிக நெரிசலாக ஆகியுள்ளது. ஆனால் அனைவரும் தனியாக இருக்கிறார்கள். தனிமையை கையாள்வது எப்படி என்பது மிக முக்கியமான கேள்வி இன்று. அதற்கு எந்தவகையான தனிமை நம்முடையது என்று நாம் அறிந்திருக்கவேண்டும்.
தனிமை, ஏகாந்தம்- கடிதம்ஆசிரியர்- மாணவர் எனும் உறவு
இந்தியச் சூழலில் இன்று இரண்டு வகையில் சிதைவுற்றிருப்பது ஆசிரியர் மாணவர் என்னும் உறவு. ஒருபக்கம் அதை ஒருவகையான மதவழிபாடு போல ஆக்கி அர்த்தமிழக்கச் செய்துள்ளனர். இன்னொரு பக்கம் எவரிடமிருந்தும் எதையும் கற்றுக்கொள்ளாமலிருப்பதே தன்னடையாளம் என்னும் அபத்தத்தை பகுத்தறிவு என நிறுவியிருக்கின்றனர். உலகில் எங்கும் கல்வியும் கலைகளும் ஒரு மனிதரிடமிருந்தே இன்னொரு மனிதருக்குச் செல்லமுடியும் என்பது நிறுவப்பட்டுள்ளது. குறிப்பாக மேலைநாட்டுக் கல்விநிலையங்கள் மிகச்சிறந்த ஆசிரிய மாணவ உறவை உருவாக்கும்பொருட்டு கட்டமைக்கப்பட்டவை. நமக்கு கல்விநிலையங்களில் ஆசிரியர் அமைய வாய்ப்பே இல்லை என்னும் நிலை. ஆசிரியர் யார், எப்படி நம்மை அவர் அடைகிறார்?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
